March 2022

Monthly Archives

  • சிந்திக்க வினாக்கள்-328

    வாழ்க மனித அறிவு!                                                                 வளர்க மனித அறிவு!!

    சிந்திக்க வினாக்கள்-328

    ஆசை பேராசையாக  மாறும் நிலை

    31-03-2022-வியாழன்

                               

    வாழ்க வளமுடன்!

                           பிரதான வினா(Main Question): 328

     

    மெய்யுணர்வோடு இணைந்து இயங்காத எந்த ஆசையும் பேராசையாகத்தான் முடியும் என்று  வேதாத்திரி மகரிஷி அவர்கள் எதன்  அடிப்படையில்  கூறுகிறார்?

    துணைக் கேள்விகள்(Sub questions)

    1. இக்கூற்றினில் ஐயம் உள்ளதா?     

    2. இதில் எச்சரிக்கை உள்ளதா? என்ன எச்சரிக்கை? 

    3. அவ்வளவு துல்லியமாக வாழ்க்கையை நடத்த வேண்டுமா?  அறிவு அந்த துல்லியத்தை எங்கிருந்து பெறுவது?  அல்லது எவ்வாறு பயிற்சி செய்வது? சிரமமாக இருக்குமே?!  அமைப்பு(pattern), துல்லியம்(precision), ஒழுங்கமைப்பு(regularity) ஆகிய முக்கண்களைக் கொண்ட பேரறிவேதான் மனித அறிவாக இருக்கும்போது சிரமம் இருக்குமோ?

    4. ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வரையறை என்ன?

    5. பேராசை கூடாது என்கின்றபோது இக்கூற்றினை எவ்வாறு ஆராய்ந்து எதனை நடைமுறைக்குக் கொண்டு வருவது?

    6. மெய்யுணர்வு என்றால் என்ன?

    7. ‘மெய்யுணர்வோடு இணைந்து இயங்காத’ என்றால் என்ன பொருள்?

    8. ‘விழிப்புணர்வுடன் இணைந்து இயங்காத’ எனக் கொள்ளலாமா?

    9. விழிப்புணர்வு அயராது எப்போதும் அயராவிழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்கிறாரா?

    10. ‘சீரமைக்காத ஆசை பேராசையாக முடியும்’ என்கிறாரா?

    11. விழிப்புணர்வு இல்லாது ஆசைப்படும்போது அது  பேராசையாக முடியும் என்கிறாரா?

    12. அயராவிழிப்புணர்வும் மெய்யுணர்வும் ஒன்றா? வேறு வேறா?

    13.  சிந்தனைப் பயிற்சி என்பதால் ஒரு கூற்றினை(information)  உறுதிப்படுத்தி (confirmation) நடைமுறைக்கு கொண்டுவர (transformation)இவ்வளவு துணைக்கேள்விகளுக்கும் விடை காணவேண்டுமா?

    வாழ்க வளமுடன்!

    வாழ்க அறிவுச்செல்வம்!                                        வளர்க அறிவுச்செல்வம்!!


     

     

     

     

  • நான் யார் என அறிவதால் பயன்களும், அறியாததால் துன்பங்களும் 1 / 2

    நான் யார் என அறிவதால் பயன்களும், அறியாததால் துன்பங்களும் 1 / 2

    அ.வி. 332

     

    30-03-2022 புதன்

    வாழ்க வளமுடன்

    ‘நான் யார்?’, என்கின்ற வினாவிற்கு விடையை கருத்தியலாக ஒவ்வொரு மனிதனுமே அறிவது எப்படி? ஆன்மீகத்தில் ‘நான் யார்?’ (Who am I ?) என்கின்ற வினா மிகச்சிறப்புடையது. ‘மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது !’ என்பார்களே அது போல் ‘நான் யார்?’ என்கின்ற வினா நான்கு எழுத்துக்களே கொண்ட சிறிய வினாவாக இருந்தாலும் இந்த வினாவின் விடைதான், அறிவின் வளா்ச்சியில் உச்ச நிலையை அடைந்து மனிதனின் கீர்த்தியை வெளிப்படுத்துவதாகும்.

         இயற்கையாகிய பேரறிவு / இறை, தன்னுடைய தன்மாற்றப் பயணத்தில், ஏன் உயிரினங்களாக வந்தது என்கின்ற காரணத்தை அறிந்தால், நான் யார் என்கின்ற வினாவிற்கான விடைகிடைக்கும்.

         இயற்கை/இறை உயிரினங்களாக வந்தக் காரணம் என்ன என்று சிந்தித்தால், பஞ்சபூதங்களிலிருந்து வந்து கொண்டிருந்த அழுத்தம், ஒலி, ஒளி, சுவை. மணம் ஆகிய ஐவகை நிகழ்ச்சிகளை உணர்வதற்காக, பேரறிவாகிய இயற்கை, ஓரறிவிலிருந்து ஐந்தறிவு உயிரினங்களாக ஒவ்வொன்றாகப் படிப்படியாக (stage by stage) தன்மாற்றமடைந்து வந்தது. பிரபஞ்சத்தில்,  பஞ்ச பூதங்களிலிருந்து நடந்து கொண்டிருந்த பஞ்சதன்மாற்ற நிகழ்ச்சிகளை (Physical Transformation of Pancha Boothas) உணர்ந்தாகிவிட்ட பிறகு, அத்துடன் இயற்கை தன்னுடைய பயணத்தை நிறுத்திக் கொண்டிருக்கலாமே! உயிரினங்களாக வந்து பின்னர் மனிதனாக ஏன் வந்தது?

         அதனை நாம் யார் கேட்பதற்கு? தாயைப் பார்த்து பிள்ளை “நீ ஏன் என்னைப் பெற்றாய்?” எனக் கேட்க முடியுமா? முடியாது. அது போல் இயற்கை அன்னையையும் நாம் கேட்க முடியாது. ஆனால் அந்தக் காரணத்தை அறிய உரிமையும், தகுதியும் உள்ளது நமக்கு. காரணத்தைக் கேட்போம். விடையை அறிவோம். அறிய விழைந்தால் இயற்கை அன்னையே காரணத்தை உற்சாகத்துடன் கூறி மகிழ்வாள். “நீயே அதுவானால் அதுவே சொல்லும்” என்பதும் இதுதான்.

    ஐந்தறிவிலிருந்து, ஆறாம் அறிவிற்கு, ஏன் தன்மாற்றப் பயணத்தைத் தொடர்ந்து இயற்கை அன்னை மனிதனாகவும் வந்தாள் என வினா எழலாம். ஏன் அவ்வாறு வினா வருகின்றது. காரணம், இன்று மனித குலத்தின் நிலை அவ்வாறு உள்ளது. இன்று சமுதாயத்தில் வறுமை நிலவுகின்றது. சூது, கொள்ளை, கொலை, கற்பழிப்பு போன்ற கொடிய குற்றங்கள் நடக்கின்றன. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு இழைக்கின்ற துன்பங்கள் மலிந்து விட்டன. வாழ்க்கை பெரும் சிக்கலாகிவிட்டது. உத்திரவாதமின்மையான வாழ்க்கை (unsecured life) வாழ வேண்டியுள்ளது. இயற்கை/இறை மனிதனாக வராதிருந்தால், மனித குலம் இவ்வளவு துன்பத்திற்கு ஆளாக வேண்டியதில்லையே என எண்ணத்தோன்றலாம். இப்பிரபஞ்சத்தில் இவ்வளவு குற்றங்களே இருந்திருந்திராதே!

    என்ன செய்வது? இயற்கையின் ஆதிநிலை, பேரறிவையும் கொண்ட அளப்பரிய பேராற்றல் உடையது. ஆற்றல் என்றாலே இயக்கத்திற்கு வந்தால்தானே சிறப்பு. இயக்கத்தில் இருந்தால் தானே அது ஆற்றல் என்கின்ற பெருமையைப் பெறுகின்றது. மின் கலம் (Battery) உள்ளது. மின்கலத்தை இயக்கினால் தான் அதிலுள்ள ஆற்றலைப் பயன்படுத்த முடியும். மின் கலத்தை இயக்காமல் இருந்தால் அது ஒரு பயனற்ற பெட்டியாகத்தான் இருக்கும். அதுபோல் பேராற்றல் தன்னையே இறுக்கிக் கொண்டு நொறுங்கி இயக்கத்திற்கு வந்தது. பேராற்றலுடன் கூடவே, அறிவென்றாலே அறியும் இயல்புடையதாகிய அறிவு பேரறிவாக இருந்ததால், பேரறிவு உயிரினங்களாக மாற்றம் அடைந்தது.

    இங்கே சிந்திக்க வேண்டும் மனிதன். மனிதன் வேறு, இயற்கை வேறா? அல்லவே. இயற்கையின் ஒரு மிகச் சிறிய அங்கம் தானே மனிதன். ஒரு குடும்பத்தில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். குடும்பத்தலைவன் பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் போது, பொறுப்புள்ள மகன், மகள் குடும்பச்சூழலை உணர்ந்து, தந்தையுடன் சேர்ந்து உழைத்து பொருளாதாரத்தை உயா்த்தப் பாடுபடுவதில்லையா? இது நடைமுறையில் நடக்கவில்லையா? தந்தையைக் குறை சொல்கிறார்களா பிள்ளைகள்? அதுபோல்தான் இயற்கை அன்னையுடன் அதன் மகன்கள், மகள்களான நாமும் சேர்ந்து, இந்த சமுதாயத்திற்கு என்ன தேவையோ, அதனைத் திட்டமிட்டு செயலுக்கு கொண்டுவர வேண்டும்.

      செயல் மனிதனுடையதாக இருக்கும் போது இயற்கையின் நியதிப்படி விளைவை இயற்கை தருமல்லவா? இந்தச் சமுதாயம் உய்வதற்கான வழிகளை வேதாத்திரி என்கின்ற திருமகனார் வழியாக சமுதாயச் சிக்கல்களையும் கூறி, அதற்கான தீர்வுகளையும், இயற்கை அன்னை அருளியுள்ளாள். அதனை நாமெல்லோரும் முதலில் எண்ணத்தால், இதயத்தால் ஆமோதிக்க வேண்டும்(endorse). ஆமோதித்தலின் வலிவு அதிகமாக அதிகமாக திணிவு பெறுவதால், இயற்கை தன்னுடைய திட்டத்தை அமுல்படுத்துவது என்பது எளிதாகிவிடும் (Fraction demands. Totality supplies.) இயற்கை அன்னையும் நம் விருப்பமில்லாமல் கட்டாயப்படுத்தி எதனையும் செய்யமாட்டாள்.

     இயற்கை ஐந்தறிவு வரை அதுவே அயரா விடாமுயற்சி செய்து தனது தன்மாற்றத் தொழிற்சாலையில்(Transformation industry) தானே ஒரே முதலாளியாக (sole proprietor) இருந்து நடத்தி வந்தது. ஆதி மனிதனாக வந்த பிறகு, ஆறாம் அறிவு வளர்ந்த போது மனிதனும், இயற்கையின் தன்மாற்ற தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்டான்(share holder). மனிதன் பங்குதாரராகிவிட்டாலும் இயற்கை/இறையேதான் செயல் இயக்குனா் (Ever Managing Director) என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இயற்கையின் மனித –- தன்மாற்றத் தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்ட பிறகு, அந்த தொழிற்சாலையின் இலாபத்திற்கும் (வாழ்க்கையில் மகிழ்ச்சி) நஷ்டத்திற்கும் (துன்பம்) பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனுக்கே உண்டு.

      இயற்கையின் தன்மாற்ற தொழிற்சாலையில், கடைசியான மனித உற்பத்தியில், இன்னமும் ஒழுங்கு படுத்தப்பட்ட உற்பத்தி regular production ஆரம்பிக்கப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டுதான் முன்னாள் ஜனாதிபதியும், தத்துவஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் “பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை – Evolution is still incomplete” என்றார். ஆதிமனிதன் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியும், இன்னமும், இயற்கையின் தன்மாற்ற மனித உற்பத்தியில் மாதிரி முறையில்தான் (prototype) உற்பத்தி (மகான்கள், அறிஞா்கள்) நடை பெற்று வருகின்றது. ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். எண்ணாமல் பரிணாம வளர்ச்சி இல்லை. ஆகவே ஆதங்க எண்ணங்கள் வலுப்பெற்றால்தான் பூரணத்துவமாகிய இயற்கையின் மனிதகுலத் தன்மாற்றம் பூரணத்துவம் பெறும்.

    மனிதன், “கல்லார் கற்றார் செயல்விளைவாய் காணும் இன்பதுன்பமவன்” என்கின்ற பாடல் வரியின் மூலம், அறியாமையிலும், அறிந்தும் மனிதன் செய்கின்ற செயல்களின் விளைவுகளை அனுபவிக்கின்றவனாக இருக்கிறான் இறைவன் என்கிறார் மகரிஷி அவர்கள். ஆனால் இறையை உள்ளத்திலே வைத்துக்கொண்டுள்ள நற்பேறு பெற்ற மனிதன் புலன் இன்பங்களிலேயே மூழ்கி அல்லலுறுகிறான். வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஆதங்கமாகவும், வேடிக்கையாகவும் “ஏன் அசைந்தோமோ? இவ்வாறு மனிதவடிவில் துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளதே என்று இறைவன் நினைப்பான்” என்பார். தன்னையே அறிந்து இன்பமுற ஆறாம் அறிவாக வந்த பேரறிவு, மனிதனின் அறியாமையால் துன்பத்தையே அடைகின்றது.

    இங்கே ஆழ்ந்து சிந்தித்தால் இயற்கை ஏன் மனிதனாக வந்தது என்று தெரியவரும். அதுவேதான் மனிதப் பிறவியின் நோக்கமும், அந்த நோக்கத்திற்கேற்ப வாழ்தலால் அடைகின்ற பயனுமாகும்.

    இயற்கை ஓரறிவிலிருந்து ஐயறிவு வரை சீவ இனங்களாக தன்மாற்றமாகி வரும்போது ஒவ்வொரு புலன் உணர் கருவிகள் கூடிக் கொண்டே வந்தது தெரிய வருகின்றது. ஆனால் ஆறாம் அறிவாக வரும்போது புலன் உணர் கருவி ஏதும் உருவாகவில்லை. புலன் உணர் கருவி ஏதும் உருவாகாத நிலையில் ஆறாம் அறிவிற்கு புலன்கள் வழியாக ஏதும் உணர்வதற்கில்லை என்பதும் தெரிய வருகின்றது. ஆனால் ‘தான் ஆறாம் அறிவுடையவன்’ என்று தன்னைக் கூறிக்கொள்ளும் உயிரினமான மனிதனாக வந்துள்ளது இயற்கை. இதற்கு என்ன காரணம்?

    இயற்கையில் எதற்கும் காரணமில்லாமல் இருக்காது. எல்லா இரகசியங்களையும், காரணங்களையும் ஆறாம் அறிவு அறிய முடியாவிட்டாலும், வாழ்க்கைக்கு அவசியமானதையாவது அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சோ்ந்தது தான் நான் யார் என்கின்ற இயற்கை இரகசியமும்.

      ஆறாம் அறிவிற்கு ஏன் புலன்கள் உருவாகவில்லை, இயற்கையின் நோக்கமும் ‘நானின்’ நோக்கமும் ஒன்று என்பது பற்றியும்,  நான் யார் அறிதலால் வரும் பயன்கள் மற்றும் அறியாதலால் வரும் துன்பங்கள் பற்றியும் அடுத்து வரும் அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில் அறிவோம்.

    வாழ்க வளமுடன்.  

    தொடரும்.


  • சிந்திக்க வினாக்கள்–327

    வாழ்க மனித அறிவு!          வளர்க மனித அறிவு!!

    lotus

    சிந்திக்க வினாக்கள்–327

    28-03-2022 – திங்கள்

     

    gurudevar

    எதிர்பார்த்தலில் எந்த நான்கும் ஒத்து வராது என்கிறார் மகரிஷி அவர்கள்? எவ்வாறு ஒத்து வருவதில்லை?

    வாழ்க அறிவுச் செல்வம்!                                            வளர்க அறிவுச் செல்வம்!!