பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 2/?

வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

FFC – 169

06-03-2016—ஞாயிறு

FFC-169-6-3-16-பகுத்துணர்வில்

சென்ற அறிவிற்கு விருந்தில் திருவேதாத்திரியத்தின் இறை இயலின் சாராம்சமான ‘பகுத்துணர்வு’, ‘தொகுத்துணர்வு’ ஆகிய இரு சொற்களுக்கான பொருளை வார்த்தை அளவில் அறிந்தோம். இன்று ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்பதன் உள்ளார்ந்த பொருளையும், இறை இயலின் சாராம்சம் என்று ஏன் சொல்கிறோம் என அறிய இருக்கிறோம். மேலும்
இயற்கைக்கு/இறைக்கு உகந்த மனிதபண்பாடு எது என்பதனையும்,

அறம் எப்போது மனிதஇன பரிணாமத்தில் தோன்றியது என்றும்,

எவ்வாறு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ இயற்கைக்கு/இறைக்கு உகந்த மனிதபண்பாட்டினை உயர்த்தும் என்றும்,

அறவாழ்வினை நாடுவதே நம் கடமையின் சிறப்பாக அமைவது பற்றியும் அறிய இருக்கிறோம்.

இயற்கைக்கும்/இறைக்கும் உகந்த பண்பாடு என்றால் என்ன?

இயற்கைதான்/மனிதனாக வந்துள்ளதனை அறிவோம். அப்படியானால் அதற்கு இணக்கமாக, ஒத்த முறையில் ஒழுக்கப்பழக்க வழக்கங்களையும், குணத்தையும் பெற்றிருத்தலே மனிதப்பண்பாடு எனப்படுகின்றது.

இயற்கை/இறைநீதி தவறாது மதித்து நடத்தலே அதற்கு ஒத்த முறையில் வாழ்வதாகும். இயற்கை/இறைநீதி தவறாது மதித்து நடத்தல் என்பது இயலாதது அல்ல. நீதி என்றால் அதனை மதித்து நடக்கத்தானே வேண்டும்?! நீதியினை மதித்து நடக்கும்போது, விளைவு, தனக்கும், தன்னால் பிறர்க்கும் துன்பம் எப்போதும் வராது. நன்மையே வரும். இவ்வாறாக ஒவ்வொருவரும் நடந்து கொண்டால் உலகில் அமைதியே நிலவும் அன்றோ! இயற்கை/இறைநீதி தவறாது மதித்து செயல்கள் ஆற்றினால், வருகின்ற விளைவு இன்பமே என்கின்றபோது, அவ்விளைவுக்குரிய அச்செயலை என்னவென்று சொல்வது? ஒழுக்கம் என்றேதான் சொல்ல முடியும். வேறு எந்த சொல்லால் அச்செயலை அழைப்பது? ஆகவே இயற்கை/இறை நீதி மதித்து நடத்தல் என்பது ஒழுக்கம் கடைபிடித்தலேதான். இந்த ஒழுக்கப்பழக்கமாகிய பண்பாடுதான் உயரவேண்டும் மனிதகுலத்தில் என்று வாழ்த்தச் சொல்கிறார் மகரிஷி அவர்கள்.

பண்பாடு உயரட்டும் என வாழ்த்தச் சொல்கிறார் என்பதால் பண்பாடு மனித குலத்தில் இப்போது குறைந்த நிலையில்தான் உள்ளது என்றுதானே பொருளாகின்றது? பண்பு என்றால் குணம் என்று பொருள். பண்பாடு உயர வேண்டும் என்றால் மனித குலம் குணத்தில் உயர வேண்டும் என்பதாகின்றது. ஆதி மனிதன் தோன்றி பலலட்சம் ஆண்டுகள் ஆகியும், நாகரீகம் வளர்ந்த பிறகும், மனித குலம் குணத்திலும், பண்பிலும் இன்னமும் உயர வேண்டும் என்கின்ற நிலை இருப்பதற்குக் காரணம் என்ன?

எதற்காக இயற்கை/இறை ஆறாம் அறிவுடைய மனித இனமாக தன்மாற்றம் அடைந்தது? இன்றுள்ள நிலையில் மனிதகுலம் அவதியுறுவதற்காகவா இயற்கை/இறை மனிதனாக வந்துள்ளது? இயற்கையின்/இறையின் திறமை இவ்வளவுதானா?

இன்று மனிதகுல நிலை என்ன என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம். ஒழுங்கிற்கு ஈனத்தை விளைவிக்கின்ற ஒழுங்கீனம், சண்டை, சச்சரவு, பிணக்கு, போர், ஒருவன் மற்றொருவனுக்கு தீங்கிழைத்தல், பொய், சூது, வஞ்சம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற மனிதப்பண்பிற்கு ஒவ்வாத செயல்கள்தான் நடந்து கொண்டு வருகின்றன. இந்நிலைக்குக் காரணம் இயற்கை எதற்காக ஆறாம் அறிவுடைய மனிதனாக தன்மாற்றம் அடைந்து வந்ததோ, அதனை அறியாமல், அதற்கு முரணாக வாழ்ந்து வருவதேயாகும்.

எதற்காக இயற்கை/இறை மனிதனாக தன்மாற்றம் அடைந்து வந்தது என்று விஞ்ஞானம் எடுத்துச் சொல்லவில்லை. இருப்பினும் மெய்ஞ்ஞானம் சொன்னாலும் அதற்கு மனித குலம் ஆா்வத்தோடு முழுவதுமாக கேட்டுக்கொள்ளவில்லை. அப்படியே கேட்டுக்கொண்டாலும் அதனை வாழ்க்கையில் முழுவதுமாக சாதனை செய்வதில்லை.

அறநூல்கள் கூறுவதெல்லாம் ஏட்டினிலே இருப்பதற்காகவும், அதனை தேர்விற்காக பாடல்களை மனனம் செய்து மதிப்பெண் வாங்குவதற்காகவும் தானே உள்ளன! அந்த அருளாளர்/அறிஞர் அதனைக் கூறினார், இந்த அருளாளர்/அறிஞர் இதனைக் கூறினார் என்று அருளாளர்களை/அறிஞர்களை மறக்காமல் இருப்பதற்காகவே மட்டும் தான் உள்ளது. அருளாளர்களை/அறிஞர்களை மறக்காமல் இருப்பது நல்லதுதான். அது வரவேற்கத்தக்கது.. ஆனால் அருளாளர்களின்/அறிஞர்களின் அருட்குணத்தையும், அருட்செயலையும் நினைந்து, நினைந்து, மதித்து, மதித்து, போற்றி, நாமும் அவர்கள் கூறும் பண்பாட்டு நிலைக்கு உயர்வதற்கு முயற்சி செய்வதில்லை.

திருவள்ளுர் ஏன் 133 அதிகாரங்களை இயற்ற வேண்டும்? மனித குலத்திற்கு வேண்டிய அறிவுரைகளைக் கூறுவதற்கு அத்தனை அதிகாரங்கள் தேவைப்பட்டன. ஒன்றல்ல, , பத்தல்ல, நூறல்ல—- 133 அதிகாரங்கள் தேவைப்பட்டிருக்கின்றன திருவள்ளுவருக்கு. மனிதகுலத்திற்கு வேண்டிய அறிவுரைகளை சொல்வதற்கு. இதற்கு மேலும் ஏதாவது சொல்ல வேண்டியுள்ளதா எனில் அது திருவள்ளுவரைத்தான் கேட்க வேண்டும். இப்போது அதே திருவள்ளுவர் மீண்டும் புவிக்கு வந்தால் என்ன நினைப்பாரோ தெரியவில்லை. 2047 ஆண்டுகள் சென்றும் ஒழுக்கமுடைமை, அறிவுடைமை, பண்புடைமை, நாணுடைமை போன்று பத்து உடைமைகளை உங்களுடைய செல்வமாக்கிக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தியும், அச்செல்வங்களை புறக்கணித்துவிட்டு அறிவின் ஏழ்மையில் அல்லவா வாழ்கின்ற நிலை நிலவுகின்றது.

திருவள்ளுவர் கூறிய ஒழுக்கமும், பண்பும், அறிவும் உயர்ந்துள்ளதா எனில் இல்லை என்றேதான் சொல்ல வேண்டும்.

திருவள்ளுவருக்குப்பிறகு எத்தனையோ அருளாளர்கள் தோன்றி அறநெறிகளைப் போதித்திருந்தாலும் பண்பு உயர்ந்துள்ளதா எனில் இல்லை என்றுதானே சொல்ல வேண்டியுள்ளது, பண்பாட்டை உயர்த்தட்டும் என்கின்ற வாழ்த்துக்கள் இந்த மனிதகுலத்திற்கு தேவைப்படுகின்றது என்பதால்தான் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மந்திரமே உருவாகியுள்ளது. ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ எவ்வாறு பண்பாட்டினை உயர்த்த முடியும் என்பதனை அறிந்து கொள்வதால், அம்மந்திர உச்சாடனத்தின் திணிவு அதிகமாகி, வெற்றியினை விரைவில் பெறமுடியும்.

யார் ஒருவரும் தனக்குத் தானே துன்பங்களை இழைத்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். இருந்தாலும் அறியாமையாலும், அலட்சியத்தாலும், உணர்ச்சிவயத்தாலும் தனக்குத் தானே துன்பங்கள் இழைத்துக் கொள்வதும் நடைமுறையில் பெரும்பாலும் காணப்படுகின்றது. இது ஒருபக்கம் இருப்பினும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு இழைக்கும் தீமைகளும் பெருகிக் கொண்டு வருகின்றன. அவை மனிதனின் செயல்பாடுகளான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் வழியாகவும் நடந்தேறி வருகின்றன. இது குடும்பத்திலேகூட காணமுடிகின்றது.

எனவே குடும்பத்தை எவ்வாறு நடத்தி குடும்பஅமைதி காண்பதனைக் கற்றுக்கொள்ளவதற்காக குடும்ப அமைதி என்கின்ற பாடத்தை வைத்துள்ளார் மகரிஷி அவர்கள். அப்பாடத்தில் எதிர்பார்த்தல் இன்மை, ஒருவர் உள்ளம் புரிந்து மற்றவர் நடந்து கொள்ளுதல் ஆகிய தெய்வீகப் பண்புகளான ஒத்துப்போதல், பொறுமை, தியாகம்(adjustment, tolerance, sacrifice) ஆகியவற்றைப்பற்றிய விளக்கங்களை எடுத்துக்கூறி அவற்றை வளர்த்துக் கொண்டு கர்மயோகிகளாக வாழ்ந்து குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாகவே திகழும்படி வாழ்த்துகிறார்.

அவர் அருளியுள்ள திருமண வாழ்த்துப்பாவில்
அகமகிழ் அரிய காட்சி,
ஒத்த உயர்வு,
அன்பளிப்பு,
பண்புப் பயிற்சி,
நல்லுரை,
வாழ்த்து ஆகிய ஆறு தலைப்புகளில் கவிகள் அருளியுள்ளார்.

அவற்றைக் கூர்ந்து நோக்கினால் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என அறியலாம். திருமண வாழ்த்துப்பாடலை வாசித்துப் பாருங்கள். குறிப்பாக திருமணம் ஆக இருப்பவர்கள் கவனியுங்கள். அந்தப் பாடலை எந்த அளவிற்கு ஆழ்ந்து விரிந்து வாசிக்கிறீர்களோ, ஆராய்ச்சி செய்து, மகரிஷி அவர்களின் புனித எண்ணத்துடன் உடன்பாடு ஏற்படுகின்றபோது, மகரிஷி அவர்களிடமிருந்து அது வாழ்த்தாக அமைந்து நீங்கள் எல்லாவளங்களையும் பெற்று ஞானக்குழந்தைக்கு காரணமான பொறுப்புடைய அருட்பெற்ளோர்களாவீர்கள். மகரிஷி எண்ணங்களை ஆராய்ந்து அவற்றை உங்களுடையதாக ஆக்கிக் கொள்ளும் போது அது உங்களுடைய விருப்பமாகின்றது. அதுபோல் உங்கள் திருமணவாழ்க்கை அமையும், ஏனெனில் ‘எதனை நீங்கள் விரும்புகிறீர்களோ நீங்கள் அதுவாக ஆவீர்கள்’ என சுவாமி விவேகானந்தர் அருளுரை உபநிடத விளக்கவுரை கூறியிருக்கிறார்கள். அருளுரை விஞ்ஞான அடிப்படியைில் உள்ளது. இயல்பூக்க நியதியின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது என்ன ஆன்மீகக் கருத்தா? இல்லையே!! இயல்பூக்க நியதி என்பது விஞ்ஞானம்தானே!?

ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு இழைக்கும் தீமைகளும் பெருகிக் கொண்டு வருவதற்கான காரணமாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதாவது:–

1) மனிதன் மனிதனின் மதிப்பை உணராததேதான் என்கிறார்.
அவரின் இந்த கண்டுபிடிப்பினை ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.

2) ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மாற்றானாகக் கருதும்போதுதான்,
அவனுக்கு துன்பம் இழைக்க மனம் வருகின்றது.

3) அடுத்ததாக மனிதனுக்கே இருக்க வேண்டிய மற்ற உயிர் படும் துக்கத்தை தன் உயிர் அனுபவிப்பதுபோல் உணராமை ஏற்படுகின்றது. விலங்கினத்திற்கு மற்ற உயிர் படும் துக்கம் தன் உயிர் அனுபவிப்பது போல் உணரமுடியாது. எவ்வாறு எனில் மானைத் துரத்தும் புலிக்கு எவ்வாறு மானின் துக்கம் தெரிய முடியும்? தெரிய வந்தால் புலி பசித்திருந்து இறக்க நேரிடும்.

4) ஆனால் மனிதன் மற்ற உயிர் படும் துன்பத்தை தன் உயிர் அனுபவிப்பதுபோல் உணரமுடியாமை. உணரமுடியாது எனில் மனித குலம் ‘அன்பு-‘கருணை –Love–Compassion’ ஆகிய சொற்களை ஏன் கண்டு பிடித்திருக்க வேண்டும்?

5) இங்கேதான் மகரிஷி அவர்களின் கண்டுபிடிப்பான ‘விலங்கினப்பண்பு’ என்பதனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். விலங்கினத்திலிருந்து கருத்தொடராக மனிதஇனம் வந்துள்ளதால் மனிதனின் கருமையத்திலும் விலங்கினப் பண்பு தொடர்ந்து இன்று வரை வந்துகொண்டே இருக்கின்றது.

இயற்கையின் மனித இனப்பரிணாமம் ஆதிமனிதனிலிருந்து ஆரம்பித்து இன்று வரை அது தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றது. ஆதிமனிதன் தோன்றியதிலிருந்தே அறவுணர்வு தோன்ற ஆரம்பிக்கவில்லை. தோன்றியிருக்கவும் முடியாது. ஏனெனில் ஆதிமனிதன் விலங்கினத்திலிருந்து தோன்றியவன்.

எப்படி பிறஉயிரைக் கொன்று உணவாகக் கொள்ளும் விலங்கினத்தில் அறஉணர்வை எதிர்பார்க்க முடியாதோ அது போல் விலங்கினத்திலிருந்து தோன்றிய உடனே ஆதிமனிதர்களிடமும் எவ்வாறு அறஉணர்வை எதிர்பார்க்க முடியும்?

மனிதனுக்குத்தான் அறஉணர்வு அவசியம். நாகரீகமும் அவசியம். மனிதப்பண்பு(மனித குணம்) என்பதே ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அங்கங்களைக் கொண்ட அறம்தானே? அதனால்தான் உலக நல வாழ்த்துப்பாடலில் கடைசி வாழ்த்து மனிதகுலம் அறவாழ்வு வாழ்வதற்காக அமைந்துள்ளது. மேலும் அவ்வாழ்த்தைக் கவனிக்கவும்.

FFC-168-பகுத்துணர்வில் உல நல வாழ்

மூன்றாவது மனிதனாக இருந்து கொண்டு உலகை வாழ்த்துகின்றவாறு அந்த சொற்றொடர் அமையவில்லை. அதாவது உலகை வாழ்த்துபவர்கள் தங்களையும் சேர்த்துக் கொண்டுதான் எண்ண அலைகளை பரப்புவதாக அமைந்துள்ளது அவ்வாழ்த்து – ‘நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்.’ என்றிருக்கிறது.

இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம் அடுத்த அறிவிற்கு விருந்தில்(09-03-2016 – புதன்) நம் அருட்தந்தை அவர்கள் மனித இன பரிணாமத்தில் அறம் தோன்றியதை கண்டுபிடித்து நமக்கு தெரிவித்துள்ளதை அறிவோம். அடுத்த அறிவிற்கு விருந்தில் உங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள். வாழ்க வளமுடன்.

வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்.