இன்றைய விருந்து

  • FFC – 271- செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 6/?

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

    lotus

    FFC – 271

    அ.வி. 271

    29-11-2017-புதன்

       செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும்- 6/?

    கருமையம்(பாகம்-1)

    nava yuga viyasar

    வாழ்க வளமுடன்!

    இதுவரை ஐந்து சத்சங்கங்களில், ‘செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும்’ என்கின்ற தலைப்பில். தத்துவம் மற்றும் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல், அவற்றின்  விளைவு   ஆகியவற்றைப் பற்றி, அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாளர்களின் ஆசிகளுடன்,  சிந்தனை செய்து, அறிவிற்கு விருந்து  படைத்து அருந்தினோம்.  இன்று கருமையம் என்கின்ற தலைப்பில் சிந்தனை செய்து அறிவிற்கு விருந்து படைத்து அருந்த இருக்கிறோம்.  அதற்கு நவயுக வியாசரான நம் குருநாதரின் ஆசியும், மற்றும் வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபினில் வந்த, வருகின்ற அருளாளர்களின் ஆசிகளும் வேண்டி இச் சத்சங்கத்தை தொடங்குகிறோம்.  வாழ்க வளமுடன்.

     இயற்கையில் பதிதல் அதி அற்புதமான நிகழ்வு:

     இப்பிரபஞ்ச நிகழ்ச்சிகளில் அதி அற்புதமான நிகழ்வுபதிதல்’  ‘பதிதல்’ என்றால் என்ன? ஆங்கிலத்தில் registry, imprint எனலாம்.  இயற்கையின் சிகரமே எண்ணம் என்கிறார் மகரிஷி அவர்கள். பதிதல் என்கின்ற அற்புதமான Phenomenon இயற்கைக்கு இல்லை எனில்(அப்படி நினைத்துப் பார்க்கவே முடியாது.  இருந்தாலும் தெளிவு பெறுவதற்காக அவ்வாறு நினைக்க வேண்டியிருக்கின்றது)  எண்ணத்திற்கு  சிறப்பே இருந்திருக்காது. ஏன் எண்ணுதலே இருந்திருக்காது! எண்ணுதல் இல்லையெனில் உயிரினமே தோன்றியிருக்க முடியாது. முதல் முறை ஒன்றை எண்ணுவது வேண்டுமானால் நடக்கும். முதல் முறை எண்ணியது பதிதல் என்கின்ற Phenomenon இல்லை எனில்  அந்த எண்ணம் பதியாது.  எனவே எண்ணம் மீண்டும் பிரதிபலிக்காது. அந்த ஒரு எண்ணத்தையே மீண்டும் மீண்டும் ஒவ்வொரு முறையாக,  புதிதாக, எண்ண வேண்டியிருக்கும்.  எண்ணம் பதியவில்லை எனில் அது அழுத்தம் பெற வாய்ப்பில்லை. ஒரு முறை எண்ணியது பதிந்தால்தான் அடுத்த முறை எண்ணும்போது அது மீண்டும் பதிந்து அழுத்தம் பெறும்.  எண்ணம் பதியவில்லை எனில் ஒரே எண்ணத்தை பல முறை எண்ணினாலும் அது புதிய எண்ணமாகத்தான் இருக்கும் அறிவிற்கு.  எண்ணம் பதிந்தால்தான் அதற்கு பின்னர் விளைவும் வரமுடியும்.

     ஒருவரையொருவர் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது!!

    நினைத்தல்’, (நினைத்தலும் எண்ணுதல்தான்) ‘நினைவு கொள்ளுதல்’,  ‘ஞாபகம் வைத்தல்’ போன்ற எதுவுமே இயலாதுபோயிருக்கும்.  அப்படி ஒரு நிலை இருந்திருந்தால், அதனை கற்பனை செய்து பார்ப்போம்.  எப்படியிருக்கும்?  இப்பிரபஞ்சமே உருவாகியிருக்காது.  தாய் தன் குழந்தையை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது.  குழந்தை தாயை நினைவு வைத்துக்கொள்ள முடியாது. படித்ததை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது.  உயிரினமே தோன்றியிருக்க முடியாது. ஒருவரையொருவர் ஞாபகம் வைத்துக் கொள்ளவும் முடியாது.

    எண்ணுவது  செயல்.  எது எண்ணுகின்றது?  அறிவு எண்ணுகின்றது.  செயல் ஒன்று இருந்தால் அதற்கான விளைவும் உண்டு என்பதால் எண்ணுகின்ற செயலுக்கான  முதல்–விளைவு பதிதல். எண்ணியது சொல்லாக, விளைவாக வருகின்றது என்று சென்ற விருந்தில் பார்த்தோம். எனினும் எண்ணிய உடனே சொல்லாக வரவேண்டும் என்பதில்லை.  எண்ணியதையே மீண்டும், மீண்டும் எண்ணி எண்ணி பதிந்து, பதிந்து அழுத்தம் பெற்று பிறகு சொல்லாகவும் வரலாம்.  வந்த சொல்லும் ‘என்ன சொன்னோம்’ என்று நினைவில் இருக்கின்றது அப்போது.  எண்ணுகின்ற செயலுக்கான முதல்-விளைவு பதிதல் என்றால்,  எண்ணியது சொல்லாக வருவது இரண்டாவது விளைவு எனக்கொள்ளலாம்.  அல்லது தொடர் விளைவு என்றும் கொள்ளலாம்.

     பதிதல் என்கின்ற அதி அற்புத நிகழ்வு பற்றி மேலும் அறிவோம்:

    பதிதல்’ என்கின்ற இயற்கையின் அதி அற்புத நிகழ்ச்சி(Phenomenon) பற்றி மேலும் தெளிவு பெற இயற்கையின் ஆதிநிலையாகிய வெட்டவெளியிலிருந்து வருவோம்.

     வெட்டவெளி(Eternal Space) நொறுங்கியதற்கான காரணம் எது?

    • வெட்டவெளியின்(Eternal Space) தன்னிறுக்கஆற்றல்(self  compressive force).
    • வெட்டவெளி துகளானது  நிகழ்வு. இந்த நிகழ்வில் செயலும் உள்ளது.  விளைவும் உள்ளது.
    • துகள் உருவானதில் எது செயல்?  இறுக்கியது/நொறுக்கியது செயல் எனக்கொள்ளலாம்.
    • விளைவு துகள்.
    • துகள் தன்னைத்தானே ஏன் சுற்றவேண்டும்? நொறுங்கிய துகள் சும்மா இருந்திருக்கலாமே!
    • ஏன் சுழன்றது?
    • ‘சுழன்ற’ நிகழ்வில் எது செயல்? எது விளைவு என்று சிந்தித்தோமேயானால்
    • சூழ்ந்தழுத்தியது செயல் என்றும்
    • சுழன்றது விளைவு என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

     எனவே ஒவ்வொரு பிரபஞ்ச  நிகழ்விலும் செயலும் உள்ளது, விளைவும் உள்ளது. ஒரு செயலுக்கு விளைவு ஒன்று என்றும், ஒரு முறைதான் அவ்விளைவு வரும் என்றும் சொல்ல முடியாது.

     ஒரு உண்மையினை அறிந்து கொள்ள வேண்டும்.

    நொறுக்கியது. துகளாகியது.

    துகள் சுழன்றது.

    காந்தம் உருவாகியது.

    காந்தம் தன்மாற்றமாகியது.

    எனவே ஒவ்வொரு பிரபஞ்ச நிகழ்விலும் செயல், அதற்கான முதல் விளைவு பதிதல், அதற்குப்பிறகு

    தொடர் விளைவு உள்ளது.

     எந்த ஒரு பிரபஞ்ச நிகழ்ச்சியும்  பதிதல் இல்லாமல் நிகழ்வதில்லை.  

    உயிராற்றல்  என்பது என்ன?

    ணுவும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அண்டமும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இயக்கத்திலே பரமாணு முதல் விண், காற்று, நீர், நெருப்பு, கெட்டிப்பொருள் ஆகிய பஞ்சபூதங்கள்  தோன்றின. பஞ்சபூதங்களிலிருந்து  உலகம் தோன்றிய எல்லா இயக்கங்களும், அலையின் மூலமாக  பரமாணுவில் பதிந்து விடுகின்றது.  இவ்வாறு பரமாணுவில் பதிந்த பதிவுகள், கூட்டாக சேர்ந்து சேர்ந்து அணுவாகின பதிவுகள்,  அதற்கு மேலாக பேரணு என்ற பதிவுகள், உருவமான பதிவுகள், உயிர் என்ற நிலைக்கு வந்த பிறகு ஏற்பட்ட பதிவுகள், அவ்வளவும் சேர்ந்து மனிதனிடம் உள்ளன.  இந்த பிரபஞ்சம் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை நடந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பதிவாகக் கொண்ட ஒரு சிறு நுண் துகள்தான் மனிதனிடம் இயங்கிக் கொண்டுள்ள உயிராற்றல்.  அது அவ்வளவு  காலம் பழமையானது.  அவ்வளவு ஆற்றல் உடையது.

     பிரபஞ்ச தோற்ற நிகழ்வுகளின் அகக்காட்சி எப்போது?

     உயிராற்றல்  அவ்வளவு  காலம் பழமையானது என்பதாலும், அவ்வளவு ஆற்றல் உடையதாலும் மனிதனுக்கு என்ன பயன்? மனிதனுக்கு பயனில்லாமல் ஒன்றின் பெருமையை எடுத்துரைக்க அவனுக்கு அவசியமில்லையே! உயிராற்றல் அவ்வளவு காலம் பழமையானதால், பிரபஞ்ச தோற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் பதிந்துள்ளதால், அனைத்தும் அகக்காட்சியாகும்.  இப்போது பிரபஞ்ச தோற்ற நிகழ்ச்சிகளை மனவளக்கலைஞர்கள் அறிவரே! அது போதுமானதாகாதா? அகக்காட்சி அவசியமில்லையா? இப்போது தெரிந்து வைத்திருப்பது கருத்தியல்தான்.மகரிஷி அவர்கள் கண்டுபிடித்ததை கேட்டுவிட்டு அதனைக் கூறுவது கருத்தியல் ரீதியாக தெரிந்து கொண்டது.  கருத்தியலே பயன்தராது.  கருத்தியலே தெளிவினைத் தராது! கருத்தியலாக அறிந்தது செய்முறையாக உறுதிபடுத்த வேண்டும்.  அதாவது மீ்ண்டும் கருத்தியலாக அறிந்தது நம்முடைய கண்டுபிடிப்பாக வேண்டும்.  பிரபஞ்ச நிகழ்ச்சிகளின் அகக்காட்சி எவ்வாறு சாத்தியமாகின்றது? உயிர் பழமையானதால் பரமாணுவில் துகள் உருவானதிலிருந்து மனிதன் உருவானது வரை நடந்த நிகழ்வுகள் அனைத்தும் பதிவாகி உள்ளன.  மன அலை அந்த அளவிற்கு நுணுகி வந்தால் பிரபஞ்ச தோற்ற நிகழ்ச்சிகள் அத்துனையும் அகத்தே காட்சியாக தோற்றமளிக்கின்றது என்கிறார்இயற்கை இயலை உருவாக்கித்தந்த அருட்தந்தையான  நம்குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    எனவே கருத்தியலாக  அறிவதோடு, செய்முறையாக அறிந்து உறுதிபடுத்தினால்தான் பண்பேற்றம் ஏற்படும்.  தனிமனிதனின் பண்பேற்றம்தான் தனிமனிதனுக்கும் அவன் வாழ்ந்துகொண்டிருக்கும்  சமுதாயத்திற்கும் அவசியமாகின்றது. அப்போதுதான் தீமை தரக்கூடிய பழக்கப்பதிவுகள் தோற்று அருள்வழி விளக்கப்பதிவுகள் வெற்றி பெரும்அதற்கு கருத்தியலாக அறிந்ததை அகத்தே காணவேண்டும்.

    இது எப்போது சாத்தியம்?  

    மனவளக்கலையின் இரண்டு பயிற்சிகளில் முதலாவதான  தவத்தால் மன அலைச்சுழலை குறைத்து வருவதில் (1 cps delta frequency) வெற்றி காணவேண்டும். அதே நேரத்தில் மனவளக்கலையின் இரண்டாவது பயிற்சியான அகத்தாய்வினை செய்து அறுகுணசீரமைப்பில் முழுமையான வெற்றி அடைய வேண்டும்.

     கண்டவர் ஏன் விண்டதில்லை?

         இதற்கானக் காரணத்தை இப்போது ஆராய்வோம். இக்கூற்று ஆன்மீகத்தில் சொல்லப்படுவது ஒன்று.  ஏன் அவ்வாறு சொல்லப்படுகின்றது? கடவுள் நிலையை விளக்க முடியாது என்று கருத்து இருந்து வருகின்றது(Brahmam cannot be comprehended).  அப்படி யாராவது கடவுள் நிலையைக் கூறினால் அவர் கடவுள் நிலையை உள்ளவாறு உணரவில்லை என்று பொருள் கொள்ளப்படுகின்றது.  கடவுள் நிலையை உள்ளதை உள்ளவாறு உணர்ந்திருந்தால் கடவுள் நிலையைக் கூறமுடியாது என்கின்ற கருத்தும் நிலவி வருகின்றது இதுவரை ஆன்மீகத்தில்.  ஆமாம் அது உண்மைதான்.

     நன்றாய் ஞானம்  கடந்துபோய்

    நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து,

    ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும் பாழ்’

     நிலையை எவ்வாறு வாய்மொழியினால் கூறமுடியும்.

     மேலும்,

    தன்னருள் வெளிக்குளே

    அகிலாண்ட கோடியெல்லாம்

    தங்கும்படிக்கிச்சை வைத்து உயிர்க்குயிராய்த்

    தழைத்ததெது மன வாக்கினில்

    தட்டாமல் நின்றதெது சமயகோடிகளெல்லாம்

    தம் தெய்வம் எம்தெய்வம் என்று

    எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றதனை’

     அறிந்தாலும் வார்த்தைகளால் பிறர்க்கு எவ்வாறு உவமைகாட்டி எடுத்துக் கூறமுடியும்?

     

     ஆனால்  இந்தநாள் விண்ஞானம் ஏற்றம் பெற்றதால் ….

     

     இறைநிலை இவ்வாறிருக்க முந்தையோர்கள் அகத்தவத்தால் உணர்ந்ததை ஏன் அவர்களால் கூறமுடியவில்லை என்பதனை மகரிஷி  அவர்கள் எடுத்துரைக்கிறார்.

     முந்தையோர்கள் அகத்தவத்தால் முற்றுணர்ந்த போதிலும்

    மொழிவதற்கு உவமையின்றி முட்டி மோதி நின்றனர்

    இந்த நாள் விண்ஞானமோ ஏற்றம் பெற்றதாலதை

    இயங்கிடும் மின்சாரம் மூலம் எல்லார்க்கும் உணர்த்தலாம்.’ (ஞா.க:1661)

     என்கிறார் காந்த தத்துவஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     வேதாத்திரி மகரிஷி அவர்கள் கடவுள் நிலையை எவ்வாறு கூறமுடிகின்றது?

     இறையை தெளிவாக அறிந்தவரும், அதனை  தனது மாணாக்கர்களுக்குத் தெளிவாக கருத்தியலாக உணர்த்துகின்றவரும், வெறும் போதனை மட்டுமன்றி சாதிக்கக்கூடிய செய்முறைப்பயிற்சியாகிய தவம் மற்றும் அகத்தாய்வு பயிற்சியினை அருளிய வேதாத்திரி மகரிஷி அவர்கள்  ‘கண்டவர் விண்டதில்லை’ என்கின்ற கூற்றினை உடைத்திருக்கிறார்.   அது எவ்வாறு என்று அவர் வாய்மொழியாகவே அறிவோம்.

     கண்டவர் ஏன் விண்டதில்லை?

    ஆதியென்ற வெளியினிலே அணு எவ்வாறு

    அவதரித்தது என்றறியப் போனார் எல்லாம்

    ஆதியாம் நிலை அடைந்தார் அறிவு அங்கேது?

    அறிவுநிலை அடைந்தபின்னர் அதை யூகிப்பார்

    ஆதியே அணுவான காரணத்தை

    அறிஞரெலாம் விளக்காதது இதனால் என்று

    ஆதிநிலை, அணுநிலை இவ்விரண்டு மாகி

    அறிந்தநிலையில் விளக்கம் பெற்று விட்டேன். (ஞா.க:1374)

     என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். 

    அணுநிலையில் உள்ள பிரபஞ்ச இரகசியப் பதிவுகளை உணர்கின்ற அளவிற்கு அவரது மனஅலைச்சுழல் நுணுகிவந்ததால் துகள்களிலிருந்து மனிதன் வரை உள்ள பிரபஞ்ச இரகசியங்களை யெல்லாம்  வெட்டவெளிச்சம் ஆக்கிவிட்டார் மகரிஷி அவர்கள்.  இத்தகைய அருமை பெருமைகளை உடையது பதிதல் என்பது!

     கருமையம் பற்றி  சிந்திக்க ஆரம்பித்து அச்சிந்தனையில் பதிதலின் அருமை பெருமை பற்றி இது வரை ஆராய்ந்தோம்.  ஏன் பதிதலின் அருமை பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டியதாயிற்று? பதிதல் கருமையத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. அது பதிதலின் இயல்பு.   ஆகவே பதிதலைப் பற்றி ஆராய வேண்டியிருந்தது.  மனிதன் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் கருமையத்தில் பதிவாகின்றது என்பதனைஅறிவு, தெளிவாக, முழுவதுமாக, பூரணமாக  அறிந்து கொள்ள வேண்டும்.  அப்போதுதான் அறிவு தனது முத்தொழில்களைப் புரிவதில் விழிப்புணர்வோடு செயல்பட முடியும்.

     கருமையத்தில் மனிதனுடைய செயல்கள் பதிகின்றது என்பதில் தெளிவு  ஏற்படுவதற்கு,  இயற்கையின் ‘பதிதல்’ என்கின்ற அதி அற்புத நிகழ்வு பற்றி கருமையம் முதற்பாகத்தில் அறிந்து கொண்டோம்.  அடுத்த அறிவிற்கு விருந்தில் (03-12-2017-ஞாயிறு) கருமையத்தின் இரண்டாம் பாகத்தில்

    பதிதல் மனிதனிடம் எங்கு பதிவாகின்றது/நடக்கின்றது?

    கருமையம் என்பது என்ன?

    மனிதனின் இனிமையாக வாழ்விற்கு வேண்டிய பதிவுகள் எவை?

    கருமையத்தூய்மையைக் கெடுக்கின்ற செயல்கள் யாவை?

    மேலும் கருமையத்தை தூய்மை செய்வது எவ்வாறு?

     ஆகிய வினாக்களுக்கு விடைளைத் தேடுவோம்.  வாழ்க வளமுடன்.

     

    வாழ்க வையகம்!                                   வாழ்கவளமுடன்!!   

    வாழ்க திருவேதாத்திரியம்!                                     வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                         வளர்க அறிவுச் செல்வம்!!



     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

  • FFC – 270 செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 5/?

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

    lotus

    FFC – 270

    அ.வி. 270

    26-11-2017-ஞாயிறு

       செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 5/?

    விளைவு

    FFC-270_Fish_bone_cause_and_effect

        

    இதுவரை ‘செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும்’ என்கின்ற தலைப்பில் நான்கு நாட்களாக சத்சங்கத்தில் சிந்தித்து வருகிறோம்.  தத்துவம் மற்றும் மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் தனித்தனியாகச் சிந்தித்தோம்.  இன்று செயலுக்கான விளைவு பற்றி, அதாவது மனிதனின் முத்தொழில்களின் விளைவு பற்றி  சிந்திக்க குழுமி இருக்கிறோம்.   ஒவ்வொரு மனிதனும் செயல் புரியாமல் இருக்க முடியாது. இருப்பினும்  விழிப்புணர்வோடு இருந்து செயல் புரிவதில் பெரும்பாலோர் தவறிவிடுகின்றனர். அவ்வாறு  சமுதாயத்தில் ‘செயல் புரிவதற்கு  முன்னரே அதற்கான விளைவை அறியாமலும் அல்லது விளைவை சரியாக கணிக்காமலும், அல்லது விளைவறிந்து ஆனால் அலட்சியத்தால் செய்கின்ற  செயல்களால் ஏற்படும் குழப்பங்கள்/துன்பங்கள் சமுதாயத்தில் மல்கிவிட்டன. எனவே ‘செயலுக்கு விளைவு’ பற்றிய ஏராளமான ஐயங்கள்  கீழே குறிப்பிடப்பட்ட வினாக்களாக உருவெடுத்துள்ளன. அவற்றிற்கெல்லாம் இன்றைய சிந்தனையில் விடை காண்போம்.

    இன்றைய சிந்தனையில்

    1. விளைவு என்றால் என்ன?
    2. மனிதனின் செயலுக்கு விளைவு உண்டா இல்லையா?
    3. மனிதனின் செயலுக்கு விளைவு இருப்பின் அந்த விளைவினைத் தருவது யார்?
    4. மனிதனின் செயலுக்கு விளைவு வந்தேதான் தீருமா?
    5. செயலை செய்துவிட்டு விளைவைத் தவிர்க்க முடியாதா மனிதன்?
    6. தீயவினையைத் தவிர்ப்பதற்கு மனிதன் என்ன செய்ய வேண்டும்?
    7. செயல் புரிவதில் மனிதன் விழிப்புணர்வோடு துல்லியமாக இருந்தே ஆக வேண்டுமா?
    8. செயலுக்கு விளைவு உண்டு என்பது எந்த நியதியின் கீழ் வருகின்றது?
    9. இந்த வினாக்களுக்கு விடை காண்கின்ற பொறுப்பு ஆன்மீகப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு  மட்டுமேவா உள்ளது?  மற்றவர்களுக்கு இல்லையா?
    10. மற்றவர்கள் ‘செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற நியதிக்கு உட்பட்டவர்கள்  இல்லையா?
    11. செயலை செய்வதற்கு முன்னர் விளைவை எவ்வாறு அறிவது?
    12. செயலுக்கான விளைவைத் தரும் அறிவியல் என்ன?

    என்பன போன்ற வினாக்களுக்கெல்லாம் இன்று விடை காணவே வேண்டும். அதற்கு நம் குருநாதரும், அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாளர்களின் ஆசிகளும் நமக்குத் துணை நிற்குமாக. FFC-62 -PIC - மகான்களின் படம்

    1. விளைவு என்றால் என்ன?

     முதலில் விளைவு என்றால் என்ன என்று அறிவோம்.   ‘விளைவி’ என்பது வினைச்சொல்.  விளைவு என்பது அதன் பெயர்ச்சொல்.  ‘விளைவி’ என்றால் நன்மை, துயரம், மாற்றம் முதலியவற்றை ஏற்படுத்துதல்; உண்டாக்குதல்(cause, produce, bring about) என்று பொருள். ‘செயல்’ என்கின்ற சொல்லும், ‘விளைவு’ என்கின்ற சொல்லும் பந்தம் உடையன. விளைவை இப்போது காண்கிறோம் என்றால் அதற்கு   பந்தமான செயல் முன்னர் நடந்திருக்கும்.  செயலைக் காண்கிறோம் என்றால் அதற்கான விளைவும் உண்டு; வந்தே தீரும்.  மாணவன் இன்று தேர்வு எழுதுகிறான்.  அது செயல்.  அதற்கான விளைவுதான் இரண்டு மாதத்திற்கு பிறகு ‘தேர்ச்சி பெற்றான்(pass) அல்லது தோல்வி அடைந்தான்(Fail) என்பதனை அறிவிக்கும் தேர்வின் முடிவு.  கடல் இருந்தால் அலையும் இருக்கும்.  எனவே செயலுக்கு விளைவு உண்டு என்பதில்  சிறு ஐயப்பாடும்  இருக்கக் கூடாது. Every action having  its own result is quite logic.  In Physics what does Newton third law of motion say?  For every action there is equal and opposite reaction.

    ‘விளைவு’ என்றால் விளைவது(result of action). செயலின் மூலமாக விளைவது. ஒன்றைச் செய்ததற்கு பலனாகத் திரும்பிக் (consequence, result, effect) கிடைப்பது. செயலிலிருந்து  வெளிப்படுவது  விளைவு. விளைவு இல்லாத செயல் இல்லை. செயல் இல்லாத விளைவு இல்லை. செயல் மனிதனுக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ தருவதில்லை. அதன் விளைவுதான் மனிதனுக்கு இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ தருகின்றது.

    எனவே என்ன விளைவு வேண்டுமோ, அதற்குரிய செயலைச் செய்து விளைவை அனுபவிக்க வேண்டும். மனிதன் விரும்புவது  இன்பமே.  எனவே இன்பம் தரும் செயலையே மனிதன் தேர்வு செய்ய வேண்டும் என்றாகின்றது.

     2. ஆன்ம சாதகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது:

    மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும்  விளைவு இல்லாமல் நடப்பதில்லை.  ‘No action will go waste’ என்பார் மகரிஷி அவர்கள். அதேபோல் ‘Nobody can hurt you unless there is an imprint in you’ என்பார் மகரிஷி அவர்கள்.   இதன் நேரிடையானப்  பொருள் என்ன?  ‘உன்னிடம் தவறு செய்த பதிவு இருந்தாலொழிய யாரும் உன்னைத் துன்புறுத்த முடியாது’ என்பது பொருள்.  அதாவது  ‘இப்போது துன்பமாகவருவது ஒருவர்  முன்னர் செய்த செயலின் விளைவே’ என்பதனை அவ்வாறு கூறுகிறார்.  துன்பம் வரும்போது மற்றவர்களைக் காரணம் காட்டுவதில் பொருள் இல்லை.  குறிப்பாக ஆன்ம சாதகர்கள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘ஒருவர் ஆன்ம சாதகம் பல வருடங்கள்  செய்து வருபவராகக்கூட இருக்கலாம்.   ஆனால் தனக்குத் துன்பம் வரும்போது அதற்குக் காரணம் பிறர் என்று கூறுவாரேயானால்  அவர் இன்னமும் ஆன்மீக பயிற்சியில்  ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை என்பதுதான் பொருள்’ என்கிறார் ஓர் அறிஞர்.   அது எவ்வாறு சரியாக இருக்க முடியும் என்கின்ற ஐயம் எழலாம் ஒரு சிலருக்கு.  சிந்திப்போம்.

     3. ஆன்மக சாதகம் எதற்காக செய்யப்படுகின்றது?

     ஆன்மாவை உணர்வதற்காகத்தான் ஆன்ம சாதகம் செய்யப்படுகின்றது.  ஆன்மாவை உணர்வது என்பது என்ன? இறையேதான் தனது ஆன்மாவாகவும் 760 கோடி ஆன்மாக்களாகவும்(மற்றவர்களது ஆன்மாவாகவும்) உள்ளது என்கின்ற உண்மையை உணர்வதுதான் ஆன்மஉணர்வு.  அதாவது ஆன்மஉணர்வேதான் இறை உணர்வு.  இறைஉணர்விற்காக ஆன்ம சாதகம் செய்து வரும்போது ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற இறைநீதியினை அறியாமல் இருந்தால் ‘இறைவன் இருக்கின்றான்’ என்கின்ற இறைநம்பிக்கை இல்லாததாக அல்லவா பொருளாகின்றது?! நம்பிக்கையில் ஆரம்பிப்பதுதான் இறைஉணர்வு அப்பியாசம்(பயிற்சி).  இறை நம்பிக்கையில்லாமல் இறைஉணர்வு அப்பியாசம் பலன் தராது. இறைநம்பிக்கை இல்லாமல் இறைஉணர்வு அப்பியாசமும் செய்ய முடியாது. ஆர்வமும் இருக்காது. தொய்வு ஏற்படும்.  ஆகவே தனக்கு ஒருவேளை துன்பம் வந்தால், அது, தான் இப்பிறவியில் செய்த  செயலுக்கான விளைவோ, அல்லது பிறக்கும்போது தான் கொண்டு வந்த ‘சஞ்சிதகர்மா’ (சஞ்சி — Sanchi என்றால் மூட்டை என்று பொருள்)  என்னும் வினைமூட்டையிலிருந்து வெளிவந்ததுதான்  என்கின்ற புரிதல் வேண்டும்.  அப்படியொரு  புரிதல் ஏற்படுமாயின், அறிவு,  தனக்கு வந்த துன்பத்தை ஏற்றுக்கொண்டு கவலையுறாமல், துன்பத்திலிருந்து விடுபட ஆவன செய்ய முடியும்.  தீயவினைப்பதிவுகள் சஞ்சிதகர்மா என்கின்ற வினைமூட்டையில் ஒரு வேளை இருப்பின்   அதனை வினைமூட்டையிலிருந்து நீக்குவதிலும்  அக்கறை கொள்ளுதல் வேண்டும்.   மேலும் எதிரியையும் வாழ்த்தக் கூடியவர்கள் தனக்கு வரும் துன்பங்கள் பிறரால்தான் வந்தது என்கின்ற    தவறான புரிதல்   கொண்டிருந்தால் அவர்களால்  எப்படி எதிரியை வாழ்த்த முடியும்?

     4. மனவளக்கலை பிறவிப்பிணியைப் போக்கும் அருமருந்து:

     பெற்றோர்களாவதற்கு  முன்னரே இளைஞர்கள் தங்கள்  சஞ்சிதகர்மா எனும் வினை மூட்டையில் தீயவினைப்பதிவுகள் இருப்பின் அதனை வினைமூட்டையிலிருந்து காலி செய்துவிடவேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு கொடுக்கவிருக்கும்   ‘சஞ்சிதகர்மா’ எனும் வினைமூட்டையில் நல்ல வினைவுப்பதிவுகளையே நிரப்பிக்   கொடுக்க முடியும்.  அதற்கு துணைபுரிவதுதான் மனவளக்கலை எனும் அருமருந்து.  அருமருந்து என்பதால் அது மருந்தல்ல. ஆனால் ஒருவகையில் மருந்தில்லா மருந்து மனவளக்கலை. மருந்து எதற்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது? நோயினால் வரும் துன்பத்தைப் போக்குவதற்கு மருந்து அவசியமாகின்றது.  துன்பமில்லாமல் வாழ்வதற்கும், ஒரு வேளை துன்பம் வந்தால் அதனை எதிர்கொள்வதற்கான பயிற்சியை  உடல், உயிர், மனம் ஆகிய மூன்றிற்கும் அளிப்பதால் மனவளக்கலை  அருமருந்து எனப்படுகின்றது. மேலும் பிறவிப்பிணியினைப் போக்கும் மருந்தாகவும் மனவளக்கலை இருப்பதால் அது அருமருந்து எனப்படுகின்றது, மனவளக்கலை பயிற்சியினை ஆணும், பெண்ணும் 15 வயதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். 

    திருமணத்திற்கு முன்னர்  பத்து வருடத்திலிருந்து பதினைந்து வருடம் செய்த மனவளக்கலை பயிற்சியின் பயன் அவர்களுக்கும் அவர்களது  வம்சாவளிக்கும் போய்ச் சேரும்.

     5. செயலுக்கு விளைவு உண்டு என்பதற்கு  நிரூபணம் அவசியமா?

    செயலுக்கு விளைவு உண்டு என்பதற்கு என்ன நிரூபணம் தேவை?  நிரூபணம் என்றாலே அது அறிவியலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆகவே செயலுக்கு விளைவு உண்டு என்பதற்கு அறிவியல் நிரூபணம் தேவையா?  கைப் புண்ணைப் பார்ப்பதற்கு கண்ணாடி அவசியமா?  அவசியமே இல்லை. அதுபோல்தானே மனிதனின் செயலுக்கு விளைவு நிச்சயமாக உண்டு என்பதற்கு நிரூபணம் அவசியமில்லை. ‘Good is ever good; But bad is never good. நல்லது எப்போதுமே நல்லது; தீயது எப்போதுமே நல்லதல்ல’ என்கின்ற கோட்பாட்டில் ஆறாம் அறிவிற்கு உடன்பாடு இல்லையா? ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற உண்மையினை  கணிதத்திற்கு  உட்படுத்தியோ, அல்லது கருவிகளுக்கு உட்படுத்தியோ, அல்லது சாம்யத்திற்கு உட்படுத்தியோ அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் தான், ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற    இயற்கைநீதியினை/இறைநீதியினை  அறிவு மதித்து நடக்குமா?  அறிவியலாக  இருந்தால்தான் அறிவு ஏற்றுக்கொள்ளுமா?  அறிவுப்பூர்வமாக இருந்தால் அறிவு ஏற்றுக்கொள்ளாதா? அறிவிற்கே அது தெரியாதா? தெரியவில்லை எனில் அறிவிற்கு யார் தெரிவிப்பது?  அறிவிற்கு அறிவே தெரிவிப்பதுதான் சிறப்பு. அதாவது சுயமாக சிந்திக்க வேண்டும். ‘தவறிழைப்பது மனம்; இனித் தவறு செய்துவிடக்கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம்தான். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே.  மனத்தைப் பழைய நிலையிலேயே வைத்துக்கொண்டு புதிய வழியில் செல்ல  எப்படி முடியும்?  முடியாது; தொடர்ந்து செல்ல முடியாது.’ என்கிறார் மகரிஷி அவர்கள்.

     6. செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற உண்மையை ஏற்பதில்  தடுமாற்றம் ஏன் (dilemma)?

     தடுமாற்றம் என்பது என்ன?  செயலுக்கு விளைவு உண்டா அல்லது இல்லையா என்பதில் தெளிவின்மை.   தான் ஆற்றும் செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற உண்மையை ஏற்பதில்  தடுமாற்றம் (dilemma)உள்ளது. ஏன்?  தடுமாற்றம் இல்லை என்றாலும் அலட்சியம் உள்ளது மனிதனிடம். அல்லது அறியாமை உள்ளது.  அல்லது உணர்ச்சி வயம் உள்ளது. செயலுக்கான விளைவு உண்டு என்பதனை  மனிதன் மறந்துவிடுகின்றானா? அல்லது செயலுக்கான விளைவு உண்டு என்பது நினைவில் இருந்தாலும் விளைவைக் கணிக்காமல் ஏன் செயலைச் செய்கின்றான்? விளைவைக் கணிக்கின்ற திறமை இல்லையா மனிதனிடம்? செயலுக்கான விளைவு உண்டு என்பது நினைவில் இருந்தும்,  விளைவைக் கணிக்கின்ற திறமை இருந்தும் விளைவைக்கணிக்காமல்(யோசனை செய்யாமல்) செயல் புரிந்து விட்டு பின்னர் துன்பம் வரும்போது கவலையுறுகின்றான் மனிதன். இதற்கு காரணம் வினைப்பதிவுகளின் அழுத்தமே.

     7. செயலுக்கான விளைவு எப்போது வரும்?    

    விளைவு என்றால் என்ன என்று பார்த்தோம்.  செயலுடனே விளைவும் தொக்கி நிற்பதால், விளைவு செயல் செய்கின்றபோதும்வரலாம். செயலுக்குப்பின் உடனேயும் வரலாம். அல்லது பிறகும் வரலாம். ‘பிறகும்’ என்பது

    செயலின் தன்மை, நோக்கம் பொறுத்து,

    அடுத்த நிமிடமும் வரலாம். அல்லது

    அடுத்த நாள் வரலாம். அல்லது

    அடுத்த வாரமும் வரலாம். அல்லது அடுத்த மாதமும் வரலாம். அல்லது

    வருடமும் வரலாம். அல்லது

    சில ஆண்டுகளோ பல ஆண்டுகள் கழித்தோ,

    ஏன் நூற்றாண்டு கழித்தும் வரலாம். ஏழ் பிறவிக்குள்ளும் வரலாம்.

     8. இயற்கை/இறை எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கின்றதல்லவா?

    சிலருக்கு ஐயம் எழுகின்றது.    என்ன ஐயம் அது?  செயலுக்கான விளைவு  துல்லியமாகவா(precisely) வரும்?! பேரறிவின் தன்மாற்ற பயணத்தில்தான் (Journey of Transformation of Consciousness) மனிதர்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்(வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்)  ஆரம்ப நிலையைில் வெட்டவெளி நொறுங்கி துகள்களாகி பஞ்சபூதங்களானது பேரறிவின் அமைப்பு, துல்லியம், ஒழுங்கு ஆகிய மூன்றின் செயல்பாடுகளினாலும் தான் சாத்தியமாகியது என்பதனை அறிவோம்.  ஆகவே உயிரற்ற சடப்பொருள்கள் உருவானதற்கு காரணமான அறிவின் மூன்று செயல்பாடுகளில்   ஒன்றான ‘துல்லியமும்’   மனிதனிடம் ஆறாம் அறிவாக வந்த போதும் செயல்படவேண்டுமல்லவா? ஆறாம் அறிவுதான் தனது  ‘விரைந்துணர் அறிவாற்றலை’க் கொண்டு (நுண்மாண்நுழைபுலன்-Prespicacity) ‘செயலுக்கு விளைவு என்ன’ என்று அறிந்து துல்லியமாக மனிதன் செயல் புரிய வேண்டும் என்பதில் இயற்கை/இறை எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கின்றதல்லவா? செயலுக்கு விளைவு உண்டு என்பதனை நினைவில் கொண்டு, விளைவினை முன்யோசனையுடன் (முன்னரே) கணித்து, நல்விளைவுகளை தரும் செயல்கள் புரிவதில் ஆரம்பத்தில் சிரமம் இருப்பது போல் தெரியலாம்.   ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை.  ஆறாம் அறிவு விரைந்துணர் ஆற்றல் பெற்றது. இதுவரை பழக்கமில்லாது இருந்ததினால் அது சிரமமாக இருப்பதாக தெரிகின்றது.  பழகப்பழக இயல்பாகிவிடும்.

     9. விளைவு வரும்போது செயல் புரிந்தவர் இல்லாதுபோனால். . .  

     எந்த ஒரு செயலும்(மனிதன்) விளைவிலிருந்து தப்பவே முடியாது(No action will go waste).  பல ஆண்டுகள் கழித்து வரும்போதோ, நூற்றாண்டு கழித்து வரும்போதோ, ஏழ் பிறவிக்குள்ளும் வரும்போதோ செயல்புரிந்தவர் இருக்கமாட்டார்.  செயல்புரிந்தவர் இல்லாமல் இருக்கும்போது அந்த விளைவு யாரைத் தாக்கும்?  தன் வழியாக வந்த வம்சாவளியைத் தாக்கும்.  உயிர்த் தொடர்தானே வம்சாவளி. இங்கே அநேகருக்கு ஐயம் எழுகின்றது. ஒருவன் செய்த தவறுக்கு தண்டனை(விளைவு) அவனது மகனோ/மகளோ, அல்லது பேரன்/பேத்தியோ அனுபவிக்க வேண்டிவரும் என்பதில் என்ன நியாயம் உள்ளது என்கின்ற ஐயம்தான் அது.  வம்சாவளி என்பதற்கு உயிர்த் தொடர்பு என்பது  மட்டுமே பொருளாகுமா? சிந்திக்கவும்!

     10. மாதா பிதா செய்தது மக்களுக்கு:

    ஒருவன் உலகியல் வாழ்க்கையில் சேர்த்து வைத்த சொத்து மகனுக்கோ/மகளுக்கோ, தாத்தா சொத்து பேரனுக்கோ உரிமை இருப்பதுபோல், செயலின் விளைவையும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.  பின்னர்   தவறான செயலின் தீய விளைவை செய்தவர் இல்லாதுபோது வேறுயார் அனுபவிப்பது?  இதனைக் கருத்தில் கொண்டுதான் குடும்பங்களில் பெரியவர்கள் ‘மாதா பிதா செய்தது மக்களுக்கு’ என்பர்.  மேலும் தந்தை வீட்டினை அடமானம் வைத்து கடன் வாங்கி திருப்பி செலுத்துவதற்கு முன்னர் இறந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.  அவருக்கு மகன்கள் இருக்கின்றனர்.  தந்தை வாங்கிய கடனை மகன்கள் திருப்பி செலுத்திய பிறகுதான் மகன்கள் அந்த வீட்டினை விற்க முடியும்.  ‘எங்களது தந்தை வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை’ என்று சொல்ல முடியுமா?  அதுபோல்தான் ஒருவன் செய்த  செயலிற்கான விளைவினை அனுபவிக்க முடியாமல்போனால்  அவன் சந்ததி அனுபவிக்க வேண்டியிருக்கும்.   இங்கே மகரிஷி அவர்கள்,  பாபம் எது புண்ணியம் எது என்று கூறுவதனை அறிந்துகொள்வோம்.

     11. பாபமும் புண்ணியமும்:

     இறை நம்பிக்கையுள்ளவர்களுக்கு பாபம், புண்ணியம் பற்றி தெரிந்திருக்கின்றது.  ஆனால் அவற்றின் வரையறை முழுவதுமாக தெரியவில்லை என்றே சொல்லலாம். அதனால்தான்  அந்த வரையறையை மனதில் இருத்திக்கொண்டு மனிதன் செயல்கள் புரிய வேண்டும் என எண்ணி 1955 ஆம் வருடம் பாபம் புண்ணியம் என்கின்ற தலைப்பில் மகரிஷி அவர்கள் பாடலை அருளியுள்ளார். அப்பாடலை நினைவு கூர்வோம்.

    Scientist of Consciousness

     பாபம் புண்ணியம்(1955)

     எண்ணம் சொல் செயல்என்ற மூன்றினாலும்,

    எவர்க்கெனினும் தனக்கெனினும் இன்றோ பின்னோ,

    மண்ணுலகில் உணர்ச்சிக்கோ கற்பனைக்கோ,

    மாசுஎனும் துன்பம்எழா வகையினோடும்,

    உண்மையிலே இன்பத்தை விளைத்துக் கொண்டே,

    உலக இயல்பொடு ஒட்டிவாழும் செய்கை

    புண்ணியமாம்; இதற்கு முரணான எல்லாம்

    புத்திமிக்கோர் பாபம் என விளங்கிக் கொள்வார்.

    . . . வேதாத்திரி மகரிஷி.

    மிக எளிமையாக பாபம் புண்ணியம் என்பது பற்றி கூறியுள்ளார்.  இதற்கான அறிவியல் வார்த்தை முறையே தீயொழுக்கம், நல்லொழுக்கம் என்பதாகும்.  நல்ல செயல்களெல்லாம் புண்ணியம்– நல்லொழுக்கம் என்று கொள்ள வேண்டும்.  தீய செயல்களெல்லாம் பாபம்–தீயொழுக்கம் என்று கொள்ள வேண்டும்.  பாடலை முடிக்கும் போது ‘புத்திமிக்கோர்’ என கூறியுள்ளார் மகரிஷி அவர்கள். என்ன பொருள் எடுத்துக் கொள்வது?  சமுதாயத்தில் பெரும்பாலோர், அறியாமை, அலட்சியம். உணர்ச்சிவயம் ஆகிய அறிவின் குறைபாடுகளோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  அறிவின் குறைபாடுகளோடு வாழ்ந்தால் அறிவு துன்பத்தைத்தான் அனுபவிக்க முடியும் அல்லவா?  ஆகவே அறிவு முழுமை அடையவேண்டும்(perfection of consciousness) என்பதனை கருத்தில் கொண்டு மனவளக்கலையை வடிவமைத்துக் கொடுத்துள்ளார் மகரிஷி அவர்கள்.  இதுவே தமிழ் கூறும்  அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பதுமாகும்.

     Check list ஐ சரி பார்ப்போமா!

         சிந்தனையின் தொடக்கத்தில் பன்னிரண்டு  ஐய-வினாக்களை எழுப்பியுள்ளோம். அவற்றிற்கான விடைகளை இன்றைய சிந்தனையில் கண்டுபிடித்துவிட்டோமா எனப் பார்ப்போம்.

     FFC-270_table

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில்(check list) வினாக்களுக்கான விடைகள் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் வினாக்கள் இருக்குமானால் அவ்வினாக்களுக்கு விடைகளை தாங்களாகவே சிந்தித்து பயன் பெறவும்.  இத்துடன் ‘விளைவு’ பற்றிய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம்.  இதன் தொடர்ச்சியாக அடுத்த அறிவிற்கு விருந்தில் (29-11-2017 புதன்)  கருமையம் பற்றி சிந்தனை செய்வோம்.  வாழ்க வளமுடன்.

    வாழ்க வையகம்!                                   வாழ்கவளமுடன்!!   

    வாழ்க திருவேதாத்திரியம்!                                                  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                                              வளர்க அறிவுச் செல்வம்!!


     

  • FFC – 269 செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 4/?

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

    lotus

    FFC – 269
    அ.வி. 269

    22-11-2017-புதன்

    gurudevar

       செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 4/?

    செயல்

        இதுவரை எண்ணம், சொல் ஆகிய இரண்டைப்பற்றி சிந்தித்தோம்.  இன்று ‘நேரிடைச் செயல்’(எண்ணம், சொல் ஆகிய இரண்டையும் கடந்து, பிறர் அறிய நேரிடையாகச் செயல்புரிவது அல்லது மறைமுகமாகச் செய்வதும்) பற்றி அறிந்து கொள்வோம்.

         மனிதன் என்ன சடப்பொருளா, செயல் புரியாமல் இருப்பதற்கு? செயல் புரியாது மனிதன் வாழ முடியாது.  ஆனால் அச்செயல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில்தான் விழிப்போடு  கவனம் செலுத்த  வேண்டும்.  இதில் தான் குறைபாடு உள்ளது மனிதனிடம்.  மேலும் அறிவு விரைந்துணர் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு செயலின் விளைவை முன்னரே அறிந்து செயல்படவேண்டும். விரைந்துணர் அறிவாற்றலை நுண்மாண்நுழைபுலன்(perspicacity) என்றும் சொல்லலாம். மனிதன் தனித்து வாழமுடியாது.  மனிதன் ஒரு சமூகப்பிராணி என்பார்கள். மனிதன் சமுதாயத்தில்தான் வாழவேண்டும்.  அப்போது வாழ்க்கை வளம் உயரவேண்டுமெனில் மகரிஷி அவர்கள் கூறும் வாழ்க்கை வள  உயர்வுப் படிகளில் மூன்றாவதான நட்பு நலம் அவசியமாகின்றது.  நற்செயல்களின் மூலம் தான் வாழ்க்கை வள உயர்வுப்படியான நட்புநலத்தைப்  பெறமுடியும்.  இவற்றிற்கெல்லாம் காரணமாக உள்ளது செயல். அதுவும் அச்செயல் நற்செயலாக இருக்கவேண்டும்.

     செயலின் வித்து எண்ணம்:

         செயல் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை அறிந்து கொள்வோம்.  மனிதனின் முத்தொழில்களில் மூன்றாவது, ‘செயல்’. எண்ணம் சொல்லாக வருவதற்கு  சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனில், ஆனால் எண்ணம் மீண்டும் மீண்டும் எண்ணி அழுத்தம் பெற்றுக் கொண்டே இருந்தால் எண்ணத்தின் தன்மையைப் பொருத்து முன்றாவதான  செயலாகவே வந்துவிடும். ஆகவே எண்ணமில்லாது சொல்லும்  இல்லை, செயலும் இல்லை. செயலுக்கு முன்னே எண்ணமாக இருந்து, எண்ணி, எண்ணி அழுத்தம் பெறும்போது எண்ணம் சொல்லையும் தாண்டி செயலுக்கு வரும்.  செயலின் வித்து எண்ணம்.  விதைக்கின்ற  விதைக்கேற்ற செடியே முளைக்கும். அதுபோல் எண்ணமாகிய வித்திற்கேற்பச்  செடியாகிய செயல் முளைக்கும்.  அதாவது எண்ணம் நல்லதாக இருந்தால், செயலும் நல்லதாக இருந்து செயலின் விளைவும் நன்மையாகவே இருக்கும்.  எண்ணம் தீயதாக இருந்தால், செயலும் தீயதாகி விளைவும் தீமையையே அளிக்கும்.  அத்தீமை பிறர்க்குமட்டுமல்லாது எண்ணுகின்றவருக்கே தீமையை அளிக்கும்.  

     செயலுக்கான வரையறை:

         செய்வது செயல் எனப்படுகின்றது. அவ்வளவுதானே! இதற்குக்கூடவா   வரையறை தேவையாக உள்ளது என  ஆச்சரியமாக இருக்கலாம்!  ஒன்றைப் பற்றி தெளிவாகவும், துல்லியமாகவும் அறிந்து கொள்ள வேண்டுமெனில் அதனைப்பற்றிய வரையறை(definition) தேவைதான். அதனால்தான் திருவேதாத்திரியம் மனிதனின் முத்தொழில்களில் மூன்றாவதான செயல் பற்றிய வரையறையைக் கூறுகின்றது.  ‘ஒன்றேதான் பலவாகியது’ என்பது உண்மையாக இருந்தாலும்,   எவ்வாறு பொருள், மெய்ப்பொருள் என்று இரண்டாக வழங்கப்படுகின்றனவோ, அதுபோல், செயலை,  ‘செயல்’   ‘சிறந்த செயல்’ என்று இரண்டாகப் பிரிக்கிறார் மகரிஷி அவர்கள். காரணம், நற்செயல்கள் சமுதாயத்தில் பலரிடம் ஏதோ ஒருவகையில் அருகி வருவதால், செயலை இரண்டாகப் பிரித்து ‘செயல்’,  ‘சிறந்த செயல்’ என்கிறார். செயலை இரண்டாகப் பிரித்ததோடு இல்லாமல் சிறந்த செயலுக்கான வரையறையையும்(definition for deed to be good) கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  அதனை நினைவு கூர்வோம்.

     சிறந்த செயல்(06.01.1957)

    வாழ்வுக்கு ஆதரவும்,

              வளமும் தரும்செயலை

    தாழ்வெனக் கொள்ளுவது

              தருக்காகும் – ஆழ்ந்தறிந்து

    பிறருடைய நலம் காத்துத்

              தான் நலத்தைப்பெறுகின்ற

    திறமைதான் அறம் என்னும்

              சிறந்த செயல்.

                                                  . . . வேதாத்திரி மகரிஷி.

         தனது துணைவியார் அன்னை லோகாம்பாள் அம்மையார் மார்கழி மாதத்தில் கோலமிடும்போது, அதைச்சுற்றிலும்  ஏதேனும் ஒரு அருளுரையை மகரிஷி அவர்கள் எழுதுவது வழக்கம்.   அவ்வாறு 1957ஆம் வருடம் சனவரி மாதம், ஆறாம் நாளன்று ‘சிறந்த செயல்’ என்கின்ற தலைப்பில் இப்பாடலை அருளியிருக்கிறார்.  

     இயல்பூக்க நியதியினை பயன்படுத்திக்கொள்ளும் யுக்தி:

    [rev_slider home-slider-1]

          மேலும் மற்றும் ஒரு உண்மையினை தெரிந்து கொள்வோம். அருட்பிரகாச வள்ளார் அவர்களின் சூட்சும சரீரம் மகரிஷி அவர்களின் உடலில் பத்து வருடகாலம் தங்கியிருந்தபோது  எழுதிய பாடல்கள் எல்லாம் ஞானப்பாடல்கள் என்பதனை மகரிஷி அவர்களே கூறியது நினைவிற் கொள்ளத்தக்கது.  அத்தகைய பாடல்களில் ஒன்றுதான் இப்போது நாம் சிந்தனைக்குத் துணை செய்ய எடுத்துக் கொண்டது. இங்கே வள்ளலாரையும் வணங்கி மானசீகக் குருவாக ஏற்றுக்கொள்வோம்.  மேலும் ஒரு இயல்பூக்க நியதியினைப் பயன்கொள்ளும் யுக்தியினையும் அறிந்து கொள்வோம். 06-01-1957 முன்னர்  நம்மில் பலர் பிறந்திருக்கமாட்டோம்.   அதற்கு முன்னரே பிறந்திருந்தாலும் சிலருக்கு இச்செய்யுள் இது வரை அறியப்படாமல்  இருந்து இறையருளால்  இன்று  அறியும்  வாய்ப்பு  கிட்டியிருக்கலாம்.   எனவே  பின்னோக்கி 06—01-1957 நாளிற்கு சென்று,  அன்று மகரிஷி அவர்கள் அருளிய அருளுரைக் காட்சியினை மனக்கண்களில்  கொண்டு வந்து(Visualise the event) மகிழ்ந்து இப்பாடலை அவர் என்ன ஞானோதயத்தில் அருளினாரோ அந்த ஞானோதயம் நமக்கும் உதிக்குமாறு விரும்பி எண்ணி இப்பாடலின் பொருளை விளங்கிக் கொள்வோம். இப்பாடல் வரிகள் சரித்திரம் படைத்துவிட்டன. இப்பாடலின் பொருளை விளங்கிக் கொண்டு அவ்வாறே நடந்துகொள்ள   இறையருளும், குருவருளும் நமக்கு துணை நிற்குமாக.

     செயல்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?

     இந்தவினாவிற்கு விடை ஏற்கனவே அறிந்திருந்தாலும், ‘வசிஷ்டர் வாயால் வந்தால் அது  வேதவாக்கு     என்பதற்கிணங்க இருபதாம் நூற்றாண்டின் வசிஷ்டரான வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாய் மொழியாகவே அறிவோம்.  அதற்கு பாடலின் பொருளுக்குள் செல்வோம்.  பாடலின் முதல் இரண்டு வரிகள் என்ன தெரிவிக்கின்றன? மனிதனின் வாழ்விற்கு ஆதரவாகவும், வளமாகவும் அமைவது அவனுடைய செயல்களே அன்றி வேறு எதுவுமில்லை. அப்படியானால் ஆதரவும் வளமும் அளிக்கின்ற மனிதனின் செயல்கள் எவ்வாறு இருக்க வேண்டும்? இந்த கோணத்தில் இதுவரை சமுதாயம் சிந்தித்துள்ளதா? என்ன சொல்ல வருகிறார் மகரிஷி அவர்கள்?  ‘மனம்போல் வாழ்வு’ என்கின்ற ஆன்றோர் மொழியினையே இவ்வாறாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.  எப்படி? ‘மனம்போல் வாழ்வு’ என்றால் மனதில் எழும் எண்ணங்களுக்கேற்ப வாழ்வு அமையும் என்று  பொருள். மனதில் எழும் எண்ணங்களே செயல்களாகவும் மலர்கின்றன.  ஆகவே ‘மனம்போல் வாழ்வு’ என்றால் மனதில் எழும் எண்ணங்களே செயல்களாக மலர்வதால், செயல்களுக்கேற்ப வாழ்வு இன்பமாகவோ, துன்பமாகவோ அமையும் என்கின்ற பொருளை  உணர்ந்து கொள்ள வேண்டும்.

    ஆதரவு என்பது என்ன?

           பாடலின் முதல் வரியில்  மனித வாழ்விற்கு ஆதரவு வேண்டும், வளமும் வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்.  ஆதரவு என்பது என்ன? ஏன் அது வாழ்க்கைக்கு அவசியமாகின்றது?  ‘ஆதரவு’ என்பது

    •          ‘துணை நிற்கும் ஒத்துழைப்பு’,
    •          அன்பான துணை,
    •          பக்க பலம்

    என்றெல்லாம் பொருள்.  ‘ஆதரவு’ என்பது என்ன என்று அறிந்துகொண்டோம்.  ஆகவே மனிதவாழ்விற்கு ஆதரவு என்பது அவசியமா, இல்லையா என்பதனை நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. ஆதரவு எங்கிருந்து வரும்/வருகின்றது?  நம்முள்ளே கோயில்கொண்டிருக்கும் உத்தமனிடமிருந்தும், சமுதாயத்திடமிருந்தும் வரும்/வருகின்றது. ஆகவே

             நம்முள்ளே வீற்றிருக்கும் உத்தமனும், சமுதாயமும்  நமக்கு துணையாக இருந்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமல்லவா?

             நம்முள்ளே வீற்றிருக்கும் உத்தமன் மற்றும் சமுதாயத்தின்  துணை, அதுவும் அன்பான துணை வேண்டுமல்லவா?       

            நம்முள்ளே வீற்றிருக்கும் உத்தமன் மற்றும் சமுதாயத்தின்  பக்கபலம் நமக்கு அவசியமில்லையா? 

              இவற்றில் ஏதேனும் ஒன்றையோ, அல்லது முழுவதும் தேவையில்லை என்று யாராவது கூறமுடியுமா?  உடலில் உள்ள உறுப்புகள் போன்று வாழவைக்கின்ற சமுதாயத்தின் உறுப்புதானே தனிமனிதனும்.  எனவே  சமுதாயம் நலமுடன் வாழ்வதற்கு சமுதாயத்தின் உறுப்பான மனிதனின் ஒத்துழைப்பும், செயல்களும் அமைய வேண்டாம்?

     ஆதரவு எங்கிருந்து வரவேண்டும்?

         மீன் நீரில் வாழ்கின்றது. அதற்கு வேண்டிய ஆக்ஸிஜன் எங்கிருந்து கிடைக்கின்றது? தான் வாழும் நீரிலிருந்துதான் கிடைக்கின்றது. அதுபோல் தான் வாழும் சமுதாயத்திலிருந்துதான் மனிதனுக்கு ஆதரவு தேவையாக இருக்கின்றது.  ஆதரவு இல்லாமல் போனால் என்னவாகும்? ஆதரவு இல்லாமல் போனால், நம்முள் வீற்றிருக்கும் உத்தமனிடமிருந்தும் அருளையும், சமுதாயத்திலிருந்து அன்பையும் இழக்க வேண்டியிருக்கும்.

     பரிணாம வாகனத்தை யாரிடம் ஒப்படைத்துள்ளாள் இயற்கை அன்னை?

        இயற்கை/இறை வைத்திருந்த பரிணாம வாகனம் தற்போது யாரிடம் உள்ளது என வினா எழுகின்றது.  ஐந்தாம் அறிவு சீவன்கள் வரை தானாகவே ஓட்டி வந்த பரிணாம வாகனத்தை யாரிடம் ஒப்படைத்துள்ளாள் என்பது கேள்வி. யாரிடம் ஒப்படைக்க முடியும்?  ஆறாம் அறிவு சீவஇனத்திடம்தான் ஒப்படைக்க முடியும். ஆகவே இயற்கை அன்னை பரிணாம வாகனத்தை ஓட்டும் பொறுப்பை ஆறாமறிவு சீவனான மனிதனிடம்தான்  ஒப்படைத்துவிட்டாள். எனவே பரிணாம வாகனத்தை நிதானமாக, விபத்து இல்லாமல் ஓட்டி, சேருமிடம் சேரவேண்டும் மனிதன்.  அதனை இருபதாம் நூற்றாண்டிலிருந்து  செய்து கொண்டிருப்பதுதான் திருவேதாத்திரியம். மேலும் ஆழ்ந்து சிந்திப்போம்.

         உயிரினங்கள் வாழ்வதற்கு இப்புவியில் ஏற்ற சூழல் இருந்ததால் தான் இயற்கை அன்னை இப்புவியைத் தேர்ந்தெடுத்தாள். தேர்ந்தெடுத்து, பல்வேறு உயிரினங்களாகும் வரை பரிணாம வாகனத்தை தானே ஓட்டி வந்தவள்,  அறிவின் உச்ச நிலையான ஆறாம் அறிவுடைய மனிதகுல மாந்தர்களை ஈன்றெடுத்த பிறகு (மாந்தர்களாக தன்மாற்றம் அடைந்த பிறகு), பரிணாம வாகனத்தை ஓட்டும் பொறுப்பை மனிதர்களிடமே ஒப்படைத்துவிட்டாள்.   ஆகவே மனிதகுலம் இப்புவியில் அமைதியாக வாழ்வதற்கேற்ற சூழலை மனிதர்கள்தான் ஆறாம் அறிவைக் கொண்டு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மனிதன் உயிர் வாழ்வதற்கான சூழலுக்கு  ஆக்ஸிஜன் உள்ள காற்று மண்டலம் அவசியமாவதுபோல், மனிதன்  அமைதியாக உயிர் வாழ்வதற்கு அன்பும், கருணையுமாகிய சூழல் அவசியம்.  மனிதன் வாழ்வதற்கு அன்பை அளிக்கக் கூடிய ஆதரவு அவசியம்.  அதாவது இரண்டொழுக்கப் பண்பாடு மலர்வது அவசியம்.

     வளம் என்பது என்ன?

         பொருட் செல்வம் மட்டுமேவா வளம் எனக் கூறமுடியும்? வளம் என்பது நிறைவு என்று பொருள்.  பொருள் இருந்தாலும் நிறைவு வேண்டாமா? மேலும் வளர்ச்சிக்குரிய அம்சங்களைத் தன்னுள் கொண்டிருக்கும் அல்லது சிறந்த பயனைத் தரும் வகையிலான தன்மை என்றும் பொருள். ஆங்கிலத்தில் ‘prosperity’ என்று பொருள்.  எல்லாச் சிறப்புகளும், வசதிகளும் பெற்றுள்ள மேம்பட்ட நிலை வளம் என்பது.

        இத்தகைய ஆதரவும், வளமும் தருவது எது?  மனிதனுடைய செயல்கள்தான்.  அத்தகைய நன்மையைத் தரும் ‘செயலை’ உயர்வாகக் கருதி அயரா விழிப்பு   நிலையோடு செயல் புரியவேண்டும் மனிதன். செயலின் உன்னதத்தைக் கவனத்தில் கொள்ளாமல், அதனை தாழ்வாகக் கருதுவது தருக்காகும் என்கிறார் மகரிஷி அவர்கள். 

     தருக்கு’ என்றால் என்ன?

         தருக்கு என்பது உயர்வழக்குச்சொல்.  அதற்கான பொருள் அகங்காரம், கர்வம் என்று பொருள்.  ஆங்கிலத்தில் ‘arrogance’, ‘haughtiness’ என்று பொருள். தன்முனைப்பு (EGO) என்று கூட பொருள்.  எல்லா பாவங்களுக்கும் தலையாயது தன்முனைப்பு(EGOEdging God Out).  இறைவனைக் கண்டு கொள்வது எப்போது சாத்தியம்?  தன்முனைப்பு என்னும் திரையை விலக்கினால்தான் இறைவனை அறிவால் உணரமுடியும். அதுவரை கருத்தியலாக இறைவனை உணர்ந்ததாகக் கொண்டிருக்கலாம்.  ஆனால் செய்முறையாக இறைவனை அறிவால் உணரவேண்டுமெனில் தன்முனைப்பு என்கின்ற திரை விலக வேண்டும்.  ‘தன்முனைப்பு கரைந்துபோம்! காணும் தெய்வம்’ என்னும் மகரிஷி அவர்களின் பாடல் வரிகளை எப்போதும் நினைவில் கொள்வது ‘அயராவிழிப்புணர்வு பயிற்சியில்’ விரைவில் வெற்றி கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும்.

     ஆழ்ந்தறிந்து …….

        ஆழ்ந்தறிந்து என்றால் என்ன?  ஆழ்ந்து+அறிந்து=ஆழ்ந்தறிந்து.  எதனையும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எடுத்துக் கொள்ளாமல் சுயமாக சிந்தித்து  தெளிவு பெறவேண்டும். ‘To advise not to survive at the expense of others’ என்கின்ற அறிவுரையை வலியுறுத்தவே ‘பிறர்க்கு நலம் அளித்து தனக்கு நலம் அளிக்கின்ற செயல்புரியும் திறமைதான் அறம்’ என்கிறார்.  எனவே அறம் என்பது மனிதனின் மனிதத்தின் திறமையாகின்றது.  அறம் காக்கும் அறத்திறமை  இல்லாதுபோனால் மனிதன் மிருகமாகி விடுவான் என்று எச்சரிக்கிறார்.  மனிதர்கள் நான்கு வகையினராக உள்ளனர்  என்று கூறி அந்நிலையைப்  போக்கி உயர்நிலையான மாமனிதனை உருவாக்க மனவளக்கலையை அருளியுள்ளார் அருட்தந்தை அவர்கள்.   மனிதருள் யார் உயர்ந்தோர் என அவர் வாய்மொழியாகவே அறிந்து கொண்டு பயன் பெறுவோம்.

     மனிதருள் உயர்ந்தோர்(03-01-1959)

     மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு

    மனமறிந்த தேவருண்டு, மதிநிலைத்த மனிதருண்டு

    மனமறிந்து மனஇதமாய், மாக்களுக்கும் மக்களுக்கும்

    மனமுவந்து தொண்டாற்றும், மாமுனிவோன் முழுமனிதன். 

                                                                    . . . மாக்கோலம்.

    makkaolamai vandha madhivirundhu

       எல்லோருமேதான் செயல்கள் புரிகின்றனர். ஆனால்  செயல்கள் சிறப்பானதாக இருக்க வேண்டும்.

       மனிதனுடைய செயல்(வினை) பதிவுகளை மூன்றாகப் பிரித்துள்ளனர் ஆன்றோர் பெருமக்கள். சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என்பனவே அவை.  அவை என்னென்ன என்று மகரிஷி அவர்களின் வாய்மொழியாகவே அறிந்து கொள்வோம்.

     வினைகளில் மூன்று வகை(18-12-69)

    கருவமைப்பின் வழிவந்த வினைப்பதிவு சஞ்சிதமாம்

    உருவெடுத்த பின்கொண்ட வினைப்பதிவு பிராரப்தம்

    இருவகையும் கூடிஎழும் புகுவினையே ஆகாம்யம்

     ஒருவினையும் வீண்போகா உள்ளடங்கிப்பின் விளைவாம்.

                                                                  . . .  வேதாத்திரி மகரிஷி.

    ஒருவினையும் வீண்போகா உள்ளடங்கிப்பின் விளைவாம்.’ என்பதனை எப்போதும் நினைவிற் கொண்டு செயல்கள் ஆற்றுவோம். அயராவிழிப்புணர்வில் இருப்போம். பிரம்ஞானியின் லட்சணமே அயராவிழிப்புணர்வே.  விழிப்புணர்வே கடவுள், தெய்வம், இறை(Awareness is God).  தீயவினைகளை செய்வதற்கு அஞ்சவேண்டும் என்பதனை அறிவுறுத்த அறிஞர் திருவள்ளுவர் தீவினை அச்சம் என்கின்ற அதிகாரத்தை பயனில சொல்லாமைக்குப்பின் வைத்துள்ளார்.  ‘அச்சம் தவிர்’ என்பது ஏற்புடையதுதான் என்றாலும் தீயவினைகளுக்கு அஞ்ச வேண்டும் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். ‘தீவினைகளுக்கு அஞ்சுதல்’ என்பது  ‘செயலுக்கேற்ற விளைவு உண்டு’ என்னும் இயற்கை நீதியை மதித்தலேயாகும்(It is respecting the Law of Nature.  It is not to be taken as fear). பண்பின் உன்னதத்தைப் பற்றிய ஆங்கிலத்திலுள்ள பழமொழியினை நினைவு படுத்திக் கொள்வோம்.

     1)  Virtue is its own reward. –  நற்பண்பு தனக்குத்தானே பரிசாகும்.

     2)  Virtue is one and only nobility. நற்பண்பு ஒன்று மட்டுமே மேன்மக்களின் குணம். 

     அயரா விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ள ஒர் யுக்தியைக் கடைபிடிப்போம். வாய்ப்பிருந்தால், யார் எங்கிருந்தாலும், எந்த பணியைச் செய்து கொண்டிருந்தாலும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை முப்பது வினாடிகள் செலவு செய்தால் போதுமானது இப்பயிற்சிக்கு. இது அகத்தாய்வின் உயர்ந்த நிலை என்றே சொல்லாம்.  ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ‘யான் இந்த ஒரு மணிநேரத்தில் இறையருளுக்கு பாத்திரமாக நடந்து கொண்டேனா?’ என நம்மை நாமே கேட்டுக் கொள்வது.  அப்படி ஒரு வேளை இறையருளுக்கு பாத்திரமாகாத  செயல் புரிந்திருப்பின் அதனை மனதில் இருத்திக் கொண்டு, செய்யும் பணிக்கு குந்தகம் ஏற்படாமல், பணியைத் தொடரலாம். அடுத்த ஒரு மணிநேரம் வரும்போது அந்த ஒரு மணிநேரத்தில் இது போன்ற சோதனையைச் செய்யலாம். அடுத்த ஒரு மணிநேரத்தில் இறையருளுக்கு பாத்திரமாக நடந்து கொண்டிருக்கலாம்.  இது அயரா விழிப்புணைர்வை வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்கும். ஆயுள் முழுவதும் இதனை செய்ய வேண்டிய நிலை ஏற்படாது.  பழகப்பழக அயராவிழிப்புநிலை தானாகவே வந்துவிடும்.  ஒரு வேளை அடிக்கடி இறையருளுக்கு பாத்திரமாகாத நிலை ஏற்படாதாயின், அதற்கான வருத்தத்தையும் மன்னிப்பையும் இரவில் உறங்கும் முன் இறையிடமே ஒப்படைக்கலாம்.

    நற்செயல்களை தொய்வில்லாமல் செய்வதற்கு தினந்தோறும்  நாம் மேற்கொள்ளும் சத்சங்கம்  மேலும் உறுதுணையாக திகழும். வாழ்க வளமுடன்.

        செயல் விளைவுத் தத்துவமும், கருமையமும் என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம்.  முதல் நாளன்று தத்துவம் என்பது என்ன என்று அறிந்து கொண்டோம். அடுத்த  மூன்று சத்சங்கங்களில்,  மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றினையும் தனித்தனியாக எடுத்துக்கொண்டு சிந்தித்து அறிவிற்கு விருந்து படைத்து உண்டோம்.  அடுத்த அறிவிற்கு விருந்தில்(26-11-2017 ஞாயிறு) முத்தொழில்களுக்கும் விளைவு உண்டா, இல்லையா, விளைவு நிச்சயம் உண்டு எனில் விளைவு எவ்வாறு வருகின்றது என்பது பற்றியும் அறிவோம்.  

    வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!   

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!     வளர்க அறிவுச் செல்வம்!!


     

  • TP-801-FFC – 268செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 3/?

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

    lotus

    FFC – 268
    அ.வி. 268

    19-11-2017-ஞாயிறு

    அறிவுத்தேனீக்கள்

     

    செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 3/?

    சொல்

    நன்முத்துக்கள்:

    நற்சொற்கள் நன்முத்துக்கள் போன்றவை. மனிதனின் முத்தொழில்களில் இரண்டாவதான ‘சொல்’ என்பது பற்றி ஆராய்வோம். சொல் வருவதற்கு முன்னர் அது எண்ணமாக உருவெடுத்த பிறகுதான் வரும். எனவே எண்ணம் வரும்போதே ஆராய்ந்து அவ்வெண்ணம் நல்லதாக இருந்தால் அதனை மனதில் வளர விடலாம். இல்லை எனில் துன்பம் விளைவிக்கும் என்று கருதினால், வேண்டாத செடியினை முளையிலேயே கிள்ளி எறிவதுபோல் தீய எண்ணங்களை முதன் முறையாகக்கூட உள்ளே விடக்கூடாது. ஒரு முறை விட்டுவிட்டாலே அந்த எண்ணம், அந்த மனஅலைச்சுழல் வரும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் பிரதிபலித்து சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால், அடுத்த கட்டமான (next stage) சொல்லாக வெளியே வந்துவிடும். அல்லது எண்ணம் அழுத்தம் அழுத்தமாகவும். தீவிரத்துடன் இருந்தால் சொல்லாக வராமல், மனிதனின் முத்தொழில்களில் மூன்றாவதான நேரிடை செயலாகவே வந்துவிடும்.

    எது இறைவழிபாடு?

    ‘சொல்லாகிய’ செயலுக்கும்  விளைவு நிச்சயம் உண்டு. நல்ல சொற்கள் இனியவையாக இருக்கும். நல்ல சொற்கள் அன்பையும் கருணையையும் வெளிப்படுத்துபவையாக இருக்கும். ‘மனிதன்’ என்கின்ற சொல்லிற்கு இலக்கணமாக (மனம்+இதம்=மனிதன்) நல்ல சொற்கள் இதமாக இருக்கும். நல்ல சொற்களைப் பேசுபவருக்கும் இதமாக இருக்கும். யாரிடம் நல்ல சொற்கள் பேசப்படுகின்றனவோ அவருக்கும் இதமாக இருந்து இன்பத்தை அளிக்கும். எண்ணம் தீயதாக இருந்தால் அதனால் வரும் சொல்லும் தீயதாக இருக்கும்.

    மனிதனுக்கும் விலங்கினத்திற்கும் உள்ள முக்கிய வித்தியாசம் யாதெனில், பிறர் உணர்வை தன்னுணர்வு போல் உணர்ந்து மதித்து இரங்கி உதவி செய்வதாகும். பாம்பிற்கு எலியின் உணர்வு தெரியாது. புலிக்கு மானின் உணர்வு தெரியாது. தெரிந்தால் பாம்பிற்கும், புலிக்கும் உணவு இல்லை. பட்டினியால்  இறக்க வேண்டியதுதான். ஆனால் மனிதன் அப்படியல்லவே! இனியவை கூறாமல் துன்பம் தரும் சொற்களைக் கூறினால் பிறரை துன்பத்தில் ஆழ்த்தும் இல்லையா? அதனால் நட்பு நலம் கெடும் இல்லையா? பிறர் உணர்வை தன்னுணர்வு போல் உணர்ந்து இரக்கம் கொண்டு உதவி செய்வதில்தான் அறவுணர்வு மலர்கின்றது. ‘இறைவழி வாழும் அறவாழ்க்கையே இறைவழிபாடு’ என்றிருக்கும்போது இனிய (அன்பான) சொற்களைப் பேசுவதுதானே இறைவழி வாழும் இறைவழிபாடு.

    இறை உணர்வின் பிரதிபலிப்பே அறவுணர்வு:

    அறவுணர்வு என்பது இறைவுணர்வின் பிரதிபலிப்பே ஆகும் இல்லையா? இந்த உண்மையைக் கண்டுபிடித்த திருவள்ளுவர் 2048 வருடங்களுக்கு முன்னரே ‘இனியவை கூறல்’ என்கின்ற அதிகாரத்தை(எண் 10) வைத்து அதில் பத்து கோணங்களில் ‘இனியவை கூறலின்’ பயன்களை எடுத்துரைக்கிறார். மேலும் ‘புறங்கூறாமை’ பற்றி எடுத்துரைக்க ஒரு அதிகாரத்தையே(எண் 19) வைத்து அதில் வழக்கம் போல் பத்து குறட்பாக்களை அருளியுள்ளார் அறிவை அறிந்த அறிஞர் திருவள்ளுவர்.

    மேலும் இறையின் பிரதிநிதியான மனிதன் எப்போதும் தனக்கும் சமுதாயத்திற்கும் அவனது முத்தொழில்களில் அதிகமாக பயன்படுத்தும் சொற்கள் பயனுள்ளனவாகவே அமைய வேண்டும் என்பதனை அறிவுறுத்த ‘பயனில சொல்லாமை’ (அதிகாரம் எண் 20) என்கின்ற அதிகாரத்தையும் இயற்றியுள்ளார்.

    திருவள்ளுவரை நம்முடைய மானசீகக் குருவாக வணங்குவோம்:

    dheaivappulavar

    ‘இனியவை கூறல்’ மட்டுமே ‘சொல்’ வகையில் சேர்ந்ததல்ல, ‘புறங்கூறாமையும்’, ‘பயனில சொல்லாமையும்’ ‘சொல்’ வகையைச் சேர்ந்ததே என்பதனை அறிந்து ‘பேசும் சொல்லிலும், சொல்லை பயன் படுத்துவதிலும்’ விழிப்போடு இருக்க வேண்டும்.

      அறிவின் முழுமைப்பேற்றினை (முக்தி) அடைய அகத்தை ஆய்வு செய்து கொண்டுவரும் அகத்தாய்வாளர்களாகிய நாம், குருநாதரின் மானசீகக் குருவான அறிஞர் திருவள்ளுவரை நாமும் மானசீகக் குருவாக்கிக் கொண்டு திருவள்ளுவரின் அருளையும் பெறுவோம்.

        திருவள்ளுவர் அருளியுள்ள அந்த அந்த முப்பது குறட்பாக்களையும் ஒரு முறை வாசித்து பயன் பெறலாமே! மனனம் செய்து கூட பயன் பெறலாமே! பெறுவோமா? வாழ்க வளமுடன்.

         நேரம் கிடைக்கும்போது புனித நூலான திருக்குறள் நூலைத் திறந்து பார்த்து, அன்றைக்கு என்ன இயற்கை/இறை ஆன்மசாதகனுக்கு அறிவுறுத்த நினைக்கின்றதோ அதனை வாசித்து அப்போதே இன்புற்று, அந்த இன்புறுதல் தொடர, ‘இன்புறுதலாகவே’ மாற அதனை நடைமுறைக்கு கொண்டுவராலாமே!

    அந்த முப்பது குறட்பாக்களில் ஒரு சில குறட்பாக்களை இப்போது நினைவுபடுத்திக் கொள்வோம்.

    இனியவை கூறல் – அதிகாரம் 10

    அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
    நாடி இனிய சொலின்.”                                             . . .  குறள் எண் 96

    பொருள்: ஒருவன் இன்சொற் சொல்லுவானாகில் பாவம் தேய்ந்து புண்ணியம் வளரும்.

    ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்று பட்டிணத்தடிகள் கூறியதுபோல் வினைப்பயனைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆன்மா உடலெடுத்துள்ளது. எனவே ஆன்ம-தூய்மை சாதகர்கள் சொல்லைப் பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். சொல்தானே என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது.

    புறங்கூறாமை அதிகாரம் – 19

    அறம்கூறான் அல்ல செயினும், ஒருவன்
    ‘புறம்கூறான்’ என்றல் இனிது                                         . . .  குறள் எண் 181

    பொருள்: அறநெறிகளைப் போற்றாதவனாகவும். அறச்செயல்களைச் செய்யாதவனாகவும் இருந்தாலும் புறங்கூறாதிருத்தல் நன்று என்கிறார் அறிஞர் திருவள்ளுவர். இவ்வாறு கூறுவதால்  பாவங்களைச் செய்வது பரவாயில்லை என்று பொருள் அல்ல. மனிதன் வாழ்க்கையில் புறங்கூறாமையை பாவமாகக் கருதுவதில்லை என்பதனை மனிதன் உணரவேண்டும் என்பதனை திருவள்ளுவர் வலியுறுத்த விரும்புகிறார். பாவமாக கருதுவதையே பழக்க தோஷத்தால்(பழக்கப்பதிவின் அழுத்தத்தால்) மறந்து பாவங்களைச் தொடர்ந்து செய்து வருகிறான் மனிதன். அப்படியிருக்கும்போது இதுவரை பாவம் என்று கருதாத ‘புறங்கூறுதலை’ இனிமேலும் செய்து விடக்கூடாது எனக் கருதி புறங்கூறாமை அதிகாரத்தில் இக்குறளை முதலாவதாக வைத்துள்ளார். புறங்கூறுவதால் என்ன பாவம் நடக்கின்றது?

        ஒருவரின் image கெடுகின்றது.

        புறங்கூறப்படுவதால் இருவருக்கும் பகைமை ஏற்படலாம்.

       பகைமை ஏற்படின் துன்பங்கள் வரலாம்.

      இவ்வளவு துல்லியமாகவா மனிதன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூட நினைக்கலாம். உயிரற்ற சடப்பொருட்களில் மிக மிக துல்லியமாக இயங்குகின்ற ஒழுங்காற்றலே மனிதனிடம் ஆறாம் அறிவாகத் திகழ்கின்றது என்பதனை நினைவிற் கொள்க.

     இவ்விடத்தில் மகரிஷியின் கண்டுபிடிப்பு அனுபவத்தை வெளிப்படுத்துவதை அவர் வாய் மொழியாகவே அறிவோம்.

    உணர்ச்சியாய் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று,
    உணர்ந்திருந்தேன் பலநாள்; மேலும் உண்மை விளங்க
    உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும்,
    உனது திருநிலையும் அறிவே என உணர்ந்தேன்.’

    சடப்பொருட்கள் அணுக்களாக கலைந்துவிடும்:

    சடப்பொருட்களில் துல்லியமாக ஒழுங்காற்றல் செயல்படவில்லையானால் அந்த சடப்பொருட்கள் சடப்பொருட்களாக காட்சியளிக்க முடியாது. அணுக்களாக கலைந்துவிடும்.

        சாலையில் மகிழுந்து ஓட்டுனர் மற்றொரு வாகனத்தின் மோதாது விபத்து நடக்காமல் இருக்க துல்லியமாகத்தான் ஓட்டிச் செல்ல வேண்டும். விபத்து நடந்தபோது ‘மயிர் இழையில்’ உயிர் தப்பினார் என்கிறோமே! அது என்ன? அவ்வாறிருக்கையில் மனிதனும் துல்லியமாகத்தான் வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டும். அயராவிழிப்போடு வாழக்கற்றுக் கொண்டால் துல்லியமாக நடந்து கொள்வதில் சிரமம் ஏதும் இருக்காது. இறையேதான் மனிதனாக தன்மாற்றம் அடைந்தபோது, இறையிடம் உள்ள தன்மையைத்தானே மனிதனிடம் எதிர்பார்க்கப்படுகின்றது. இறையிடம் இல்லாத தன்மையையா எதிர்பார்க்கப்படுகின்றது? இறையிடம் இல்லாத தன்மை என்றே சொல்ல முடியாது. சொல்லால் நன்மையே விளைய வேண்டும் என்று சிந்தித்து வந்தோம். எப்போதும் இனியவை கூறுதலாலும், எப்போதும் புறங்கூறாதிருத்தலாலும் புண்ணியக்கணக்கில் அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாம் என்றும் அதனால் இறை அருள் பெருகிவரும் எனவும் சிந்தித்தோம். சொல்லின் மூன்றாவது வகையான ‘பயன் இல சொல்லாமை’யைப்பற்றி திருவள்ளுவர் கூறுவதனை அறிவோம்.

    பயன் இல சொல்லாமை:

    பயன்இல்சொல் பாராட்டு வானை மகன்எனல்
    மக்கள் பதடி எனல்.                                                             . . . குறள் எண் 196

    பொருள்: பயனில்லாத சொற்களைத் திரும்பத் திரும்ப பல முறை சொல்பவனை மனிதன் என்று சொல்லற்க. மனிதர்களுக்குள்ளே பதர் என்று சொல்க.

    திருவள்ளுவர் ‘பதர்’(பதடி) என்று சொல்கிறாரே என்ன அர்த்தம்? ஏன் பதருடன் ஒப்பிட்டு சொல்கிறார் என்பதனை கவனிப்போம். பதர் என்றால் உள்ளீடற்ற நெல்(empty ears of grain, chaff) மற்றும் உபயோகமற்ற நபர் (worthless person)என்று பொருள். சொல் எப்படி உருவாகிறது? சொல்லை வெளிப்படுத்துவதற்கு நாக்குதான் கருவி. இருப்பினும் அதற்கான ஆற்றல் சீவகாந்தம். சீவகாந்தம் என்பது என்ன? இறையின் ஆற்றல்தானே சீவகாந்தமாக செயலாற்றுகின்றது. சீவகாந்தத்தைப் பயன்படுத்தி பயனில்லாத சொற்களைப் பேசுவதால் இறை ஆற்றலான சீவகாந்தம் தான் வீணாகின்றது. எனவே யாருக்கும் பயனில்லாத சொல் பேசுதலை நெல்மணிகளுடன் பயன்படாது இருக்கும் பதருடன் ஒப்பிடுகிறார். பயன் படாது போனாலும் பரவாயில்லை. பேசுவரின் சீவ காந்தமும் விரயம் ஆகின்றது. கேட்பவரின் சீவகாந்தமும், நேரமும்(இறை ஆற்றல்) விரயமாகின்றது.

    மேலும் சொல் வகையைச் சார்ந்தவை எவை எவை?

    மேலும் அறிய வேண்டியது யாதெனில் நன்றியுணர்வும், பாராட்டுதலும் கூட ‘சொல் வகையை’ச் சார்ந்ததே. எப்படி? ஒருவர் செய்த உதவிக்கு பயன் பெற்றவர் நன்றி கூறுதல் அவசியம். ‘நன்றி’ என்று கூறுவது நாவினால் சொல்கின்ற சொல்தானே! இனியவை கூறல் அதிகாரத்திற்கு பின்னர் செய்நன்றி அறிதல் அதிகாரத்தை வைத்துள்ள காரணத்தை அறிய வேண்டும். ‘நன்றி’ என்று கூறுவது இனியவை கூறல்தானே! நன்றி கூறுதலோடு நின்றுவிடக்கூடாது. அதனை நினைவில் கொண்டு அவருக்கு ஏதாவது தேவை ஏற்படுகின்ற சூழல் வந்தால் திருப்பி உதவி செய்ய(reciprocation) வேண்டும்.

    செய்ந்நன்றி அறிதல்:

    எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
    விழுமம் துடைத்தவர் நட்பு”                                  . . . குறள் எண்-107

    பொருள்: துன்பத்தைப் போக்கினவரின் நட்பை ஏழுபிறப்பிலும் நினைப்பர் பெரியோர்.

    (எழுமை வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினைக் குறிக்கின்றது)

    பாராட்டு:

    பாராட்டு என்பதும் ‘சொல்’ வகையைச் சேர்ந்ததே. பாராட்டு என்பது உயர்வாகக் கூறுதல், மெச்சிப் புகழ்தல் என பொருளாகின்றது. ஒருவர் செய்த செயலால் பயன் வருகின்றபோது அச்செயலை பாராட்ட வேண்டும்.  ‘மிகைபடச் சொல்லேல்’ என அவ்வைத்தாய் ஆத்திச் சூடியில்(89) அறிவுரை கூறுவதனை நினைவில் கொள்ள வேண்டும்.

       பாராட்டு என்கின்ற சொல்லிற்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கத்தினை நினைவு படுத்திக் கொள்வோம்.  பாராட்டு என்பது இரண்டு சொற்களைக் கொண்டது, பார்+ஆடு=பாராட்டு. ஒருவர் செய்த செயலால் உலகமே(பார்) பயனடைந்து அதனால் மகிழ்ச்சி பொங்கி ஆடுதலால் வரும் சொற்களே பாராட்டு எனப்படுகின்றது என்பார் மகரிஷி அவர்கள்.

    அவ்வைத்தாய் எவ்வாறு சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆத்திச்சூடியில் அமுதமொழிகளால் அறிவுரைகளை கூறுவதனை நினைவு கூர்வோம்.

     

    அவ்வையின் ‘சொல்வகை’யைச் சார்ந்த அமுதமொழிகள்:

    FFC-268-ஆத்திச்சூடி-image.jpg-3

     

    இவ்வாறாக ஆத்திச்சூடியில் 108 ஒரு வரி அறிவுரைகளில் சொல்லை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்று, திருவள்ளுவர் ஒரு அறிவுரையை ஒரு அதிகாரத்தில் பத்து கோணங்களில் அறிவுறுத்துவதுபோல் அவரது சகோதரியும் நம்முடைய அருட் தாயுமான அவ்வை ‘பேசுவது எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி பத்திற்கும் மேலான கோணங்களில் அறிவுறுத்துகிறார். அல்லது கற்றுத்தருகிறார் என்பதனை அறிந்து மகிழ்வோம். ஆத்திச்சூடி குழந்தைகளுக்கு மட்டுமல்ல. ஆன்மீகத்தில் வெற்றி பெரும் வரை அனைவருமே ஒரு வகையில் குழந்தைகள்தான். எனவே ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் ஆகியவற்றை படித்து அவ்வைத்தாய் கூறியுள்ளதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

    விரும்பும் இனியவை ஈடேற …. ?

    avvai-ffc-261

    எல்லோரும் இனியவையே விரும்புவர். ‘அறிவினர் சேர்தல், இனிது என்றும், அதனினும் இனிது, அவரை கனவிலும் நனவிலும் காண்பது தானே’ என்கின்ற அவ்வைத்தாய் ஆத்திச்சூடியில் ‘சான்றோர் இனத்திரு’ என்று ஒரு வரியில் கூறுகிறார். அதாவது சான்றோர்களிடம் சேர்ந்து இரு என்கிறார். இனியதை அனுபவிக்க சான்றோர்களிடம் சேர்ந்திருப்பவர் எவ்வாறு இருக்க வேண்டும்?

    சான்றோர்களிடம் சேர்ந்திருக்க …..?

    சான்றோர்களிடம் சேர்ந்திருப்பதற்கு என்ன சான்று? சான்றோர்களிடம் சார்ந்திருப்பவர் நல்ல சொற்களையே பேசாமல் இருந்தால் சான்றோரைச் சேர்ந்திருப்பதற்கு சான்றாகுமா? சான்றோர்களிடம் சேர்ந்திருத்தலின் பயனை அனுபவிக்க முடியுமா?

    எனவே சொற்களைப் பயன்படுத்துவதில் ‘மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்’ என்கின்ற அறிவுரையை நமக்கு நாமே கூறிக்கொள்ள வேண்டும் என்பதே இதுவரை ‘சொல்’ பற்றி சிந்தித்ததின் பயன் என அறிந்து கொள்வோம்.

    நல்லதையே எண்ணுவோம். நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம். .

    எப்போதும் விழிப்புணர்வோடு இருப்போம்.

     இது வரை மனிதனின் முத்தொழில்களான சொல் பற்றி அறிந்து கொண்டோம். அடுத்ததாக ‘நேரிடை செயல்’(Direct action) பற்றி அடுத்த அறிவிற்கு விருந்தில்(22-11-2017-புதன்)

    வாழ்க அறிவுச் செல்வம்                           வளர்க அறிவுச் செல்வம்


     

  • FFC-267-செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 2/?

     

    வாழ்க மனித அறிவு                                  வளர்க மனித அறிவு

    lotus

    FFC – 267

                  அ.வி. 267     

              

                                                      15-11-2017-புதன்

    vethavyasar and navayugavyasar  

     செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 2/?

             ‘செயல்’

    சென்ற அறிவிற்கு விருந்தில் தத்துவம்(philosophy) என்கின்ற சொல்லிற்கு பொருள் ‘அறிவை நேசி, ஞானத்தை நேசி, (Love wisdom)’ என்று  அறிந்து கொண்டோம். தத்துவத்தின் பொருள் அவ்வாறிருக்க இனிமேலும் ‘செயலுக்கு விளைவு வருவதனை’ தத்துவம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாகிறது. அப்படியானால் ‘செயல், விளைவு, கருமையம்’ என்றே தலைப்பாக வைத்துக்கொண்டு சிந்தனையைத் தொடங்குவோம்.

      ‘செயல்’ என்றால் என்ன?

     தலைப்பின் முதல் சொல்லான ‘செயலுக்கு’ வருவோம்.

     செயல் புரியாமல் வாழ்க்கை இல்லை:

          உடல் உறுப்புகளை இயக்குவதன் மூலம் ஒன்றை செய்வது செயல். பொதுவாக செயல் எனப்படுவது பிறர் அறிய செய்வது எனப் பொருள் கொள்ளப்படுகின்றது.  உடலால் செய்வது செயல் என பொருள் கொள்ளப்படுகின்றது.   புற உறுப்புகளான  கைகள், கால்கள் ஆகியவற்றைக் கொண்டு செய்வது செயல் என பொருள் கொள்ளப்படுகின்றது. ஆனால் பிறரால் அறிய முடியாத எண்ணமும் எண்ணுகின்றவரின் செயல்தான்.  மேலும் ஒருவர் பேசுவதும் செயல்தான்.  எனவே செயல் என்பது மூன்று வழிகளில் நடக்கின்றது.  அதாவது எண்ணம், சொல். செயல்(thought, word, deed) ஆகிய மூன்றின் வழியாக வாழ்க்கை நடக்கின்றது.  எனவே செயல் புரியாமல்  வாழ்க்கை இல்லை.  இதில் யாருக்கும் நம்பிக்கை இல்லாமல் இருக்காது. 

       ஆனால்  ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற நியதியினை(உண்மையினை) மறந்துவிட்டு செயல் செய்வதற்கு முன்னரே, அச்செயல் செய்வதானால் உடனோ அல்லது பின்னரோ வரவிருக்கின்ற விளைவு நல்லதாக இருக்குமா, அல்லது தீமையாக இருக்குமா என்று யோசனை செய்யாமல் செயல் புரிந்துவிட்டு பின்னர் ஒருவேளை விளைவு தீமையாக வந்தால் அப்போது வருந்துவர்.  செயல் செய்து விட்ட பிறகு விளைவைத் தடுத்து நிறுத்த முடியாது.   இதனை என்னவென்று சொல்வது?

        அறியாமை என்று சொல்வதா? 

        அலட்சியம் என்று சொல்வதா?

        உணர்ச்சிவயம் என்று சொல்வதா?

     சிந்தனையின் உச்சம் அறிவின் தெளிவு!

        சிந்தனையின் உச்சம் அறிவு   தெளிவு அடைதலே! அறிவு  விரைவாகத் தெளிவடையக் கூடிய தன்மையுடையது.  தெளிவும், விரைவும்  ஆகிய இரண்டும் சேர்ந்திருப்பதைத்தான், அறிவை ‘விரைந்துணர் அறிவாற்றல் உடையது’ என்று போற்றி மகிழ்கிறோம்.  இதனையேத்தான்  அறிவின் சிறப்புத் திறனாக  நுண்மாண்நுழைபுலன் (perspicacity) என்கிறார் நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    செயல் வகையைச் சேர்ந்ததுதான் எண்ணமும்:

             எண்ணம் மனிதனின் முத்தொழில்களில் முதலிடம் வகிக்கின்றது. இதனை சற்று நேரத்திற்கு முன்னர்தான்  அறிந்தோம்.  இருப்பினும் எண்ணமே இயற்கையின் சிகரமாக இருப்பதால் மீண்டும் எண்ணத்தைப் பற்றி தனியாக சற்று ஆராய்வோம்.  ‘எண்ணம்தானே, நான் எண்ணியதை பிறர் யாரும் அறியமுடியாது’ என நினைக்க முடியாது. பிறர் நம் எண்ணத்தை அறிய முடியாவிட்டாலும் நம்  உடம்பினுள்ளே கோவில் கொண்டிருக்கின்ற  உத்தமன் அறிவான்.  இது பற்றி கருமையம் தலைப்பில் விரிவாக பார்க்க இருக்கிறோம்.  ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’  என்பது ஆன்றோர் மொழி.  அகத்தில் இருப்பதனை முகம் காட்டிக்  கொடுத்து விடும் என்கின்றனர் ஆன்றோர் பெருமக்கள்.

     எண்ணம் போல் வாழ்வு. 

    எண்ணமே வாழ்க்கையின் சிற்பி.  

     நல்  வாழ்வு வாழ வேண்டுமெனில் நல்ல எண்ணங்களையே எண்ண வேண்டும். 

    எண்ணமே இயற்கையின் சிகரமாகும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    எண்ணத்திற்கேற்ப உடலில் இரசாயன மாற்றங்கள் ஏற்படுவதால் தீய எண்ணங்களினால் ஏற்படும் இரசாயன மாற்றம் உடல் நலத்தைகெடுக்கும்  என்கிறார்கள். 

    எண்ணம் உயர்ந்த பதவி வகிப்பதால், உயர்ந்த பதிவிற்கேற்ப அதிகாரமும் பொறுப்பும்(duties and responsibilty) எண்ணத்திற்கு வந்துவிடுகின்றது.  என்ன அந்த உயர்ந்த பதவி?

         எண்ணமே இயற்கையின் சிகரமாக உள்ளது. ஏன் எண்ணத்தை இயற்கையின் சிகரம் என்கிறார் மகரிஷி அவர்கள்?  இயற்கையின் ஆதிநிலையே   பேரறிவு. அது மனிதனிடம அறிவாக உள்ளது. எண்ணுவது யார்? அறிவுதான் எண்ணுகின்றது. எனவே அறிவும் எண்ணமும் ஒன்றே.  ஆகவே  இயற்கையின் சிகரம் எண்ணம் என்கிறார்.  இயற்கையின் ஆதிநிலையில் அறிவு இல்லாவிட்டால் என்னவாகும்? கற்பனை செய்து பார்ப்போமே! ஆதிநிலை வெளியும், அறிவும் நிறைந்தது. இரண்டையும் பிரித்துப்பார்க்க முடியாது.

     எண்ணங்கள் பற்றி நம் குருநாதர் கூறுகின்ற அமுத மொழிகளை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்திக் கொள்வோம்.

    உணவும் எண்ணமும்(18-12-1956)

     உண்ணும் உணவு  உடல் மட்டும் பாயும்

    எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்”  . . . மாக்கோலம் 

     மேற்கண்ட பாடலை 1956 ல்(18-12-1956) அருளியவர் ஒருவருடம் கழித்து மேலும் எண்ணத்தைப் பற்றி உணவும் எண்ணமும் என்கின்ற தலைப்பிலேயே மேலும் இரண்டு அடிகளைச் சேர்த்து அருளிய பாடலையும் நினைவு படுத்திக் கொள்வோம்.

     உணவும் எண்ணமும்(21-12-1957)

    உண்ணும் உணவு  உடல் மட்டும் பாயும்

    எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்

    எண்ணமோ உணவில் எழுச்சி பெறும் இயக்கமே

    உண்பதோ எண்ணத்தால் உற்றுப்பாரீர் உறவையறி.”     … மாக்கோலம்

         முதல் பாடலில் எண்ணத்தின் தன்மையை எடுத்துக் கூறுகிறார்.  இரண்டாம் பாடலில் உணவின் தன்மைக்கேற்ப எண்ணம் எழும் என்று கூறி உணவிற்கும் எண்ணத்திற்கும் உறவை அறிந்து நல்ல எண்ணங்களை உருவாக்கும் நல் உணவை உண்ணச் சொல்கிறார்.

         எண்ணம் என்கின்ற தலைப்பில் மகரிஷி அவர்கள் அருளியுள்ள அமுத மொழிகளை(பாடல்கள்) 28 ஐயும் ஞானக் களஞ்சியம்  (பாகம் 2) 6.23 இல் காணவும்.

          எண்ணத்திற்கு விளைவு உண்டு என்றால் எவ்வாறு விளைவு வரும்?  எண்ணத்திற்கு விளைவு நேரிடையாக வராததுபோல் தோன்றும்.  அப்படியானால் எண்ணத்திற்கு அடுத்த நிலையான  சொல்லாக வரும்.  சொல்லாக வரும்போது, சொல்லைப் பொறுத்து விளைவுகள் இருக்கும். அந்த சொல் தனக்கும், பிறர்க்கும், சமுதாயத்திற்கும் நன்மை பயக்குமானால் அது நற்சொல்.  அப்போது பேசியவரின்  ‘புண்ணியம் என்கின்ற அருட்கணக்கில்’(Divine Grace Account) ஒரு மதிப்பெண்(positive mark) வந்து சேரும்.  ஒரு வேளை ஒருவரது சொல் நன்மை பயக்காமல். தீமையை தரும் பட்சத்தில் அவரது பாவக் கணக்கில்(Sin Account) ஒரு மதிப்பெண்(minus mark) வந்து சேரும். பாவக்கணக்கு அதிகமானால் துன்பம் வந்து சேரும்.  புண்ணியக் கணக்கு அதிகமானால் இறையிடமிருந்து அருள் வந்து சேரும்.

       எண்ணத்தை பற்றி மேலும் நன்கு தெளிவடைய மகான் மகா கவி பாரதியார்  அருளியுள்ள பாடலின் வழியாக நினைவு கூர்வோம்.

     

    FFC-127-அறிவிற்கு விருந்து - தெனிந்த நல்லறிவு வேண்டும்

    அன்னையை வேண்டுதல்

     

    எண்ணிய முடிதல் வேண்டும்

    நல்லவே எண்ணல் வேண்டும்;

    திண்ணிய நெஞ்சம் வேண்டும்;

    தெளிந்த நல்லறிவு வேண்டும்;

                                  எதற்கு?

    பண்ணிய பாவ மெல்லாம்

    பரிதிமுன் பனிபோல,

    நண்ணிய நின்முன் இங்கு

    நசித்திடல் வேண்டும் அன்னாய்.      . . .  மகா கவி பாரதியார்.

     

        பக்திமார்க்கத்தில் இறைவழிபாடு செய்பவர்களுக்காக இறைவியிடம்  எவ்வாறு வேண்ட வேண்டும் என எடுத்துக்காட்டுவதற்கு இப்பாடல் இயற்றியுள்ளார்.  பக்தி மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இந்த அருளுரை என்பது கிடையாது.  ஞான மார்க்கத்தில் உள்ளவர்களுக்கும் இந்த அருளுரை பொருந்தும்.  எப்படி? ஞானமார்க்கத்தில் உள்ளவர் எண்ணம் ஆராய்தலை அக்கறையாகச்  செய்ய உதவும்.  மனதின் மறுமுனை தெய்வமாக இருப்பதால் உள்ளத்திற்கு அந்த உறுதிமொழியினை சங்கல்பமாக செய்ய வேண்டும். இப்போது பாடலின் பொருளுக்குள் செல்வோம்.

         பக்தியில் ‘வேண்டிப் பெறவேண்டும்’ என்கின்ற கோட்பாடு உள்ளதால், முதலில் தன் தேவைக்காக வேண்டச் சொல்கிறார். அதாவது ‘எண்ணியது முடிய வேண்டும்’ என வேண்டச் சொல்கிறார்.  தனக்கு ஒன்று வேண்டும் என்றால் அது நல்லவையாகத்தானே இருக்க யாவரும் விரும்புவர்.   எனவே தான் எண்ணிய நல்லது நடக்க வேண்டுமென்றால் (விளைவு),  அந்த நல்ல விளைவிற்கேற்ற செயல் புரிதல் வேண்டும்.  இங்கே எண்ணுவதுதான் அச்செயல்.  செயலுக்கேற்ற விளைவுதான் வரும் என்பதால் நல்ல விளைவு கிடைக்க அடுத்ததாக ‘நல்லவையே எண்ணல் வேண்டும்’ என வேண்டச்சொல்கிறார்.  ஒரு வகையிலே பார்த்தால் வேண்டுதலையும் கேட்கச்சொல்லி, ‘அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்வேன்’ என்கின்ற உறுதிமொழியினை இறைவியிடம் அளிக்கச் சொல்கிறார். இறைவியிடம் அளித்த உறுதியினை மீறமுடியாது ( Devotee has committed and a binding  to think good) அல்லவா?  ஆனால் எதார்தத்தில் நடப்பது வேறாக உள்ளது. ‘எண்ணம்போல் வாழ்வு’ ‘மனம்போல் வாழ்வு’ என்கின்றனர் ஆன்றோர் பெருமக்கள். எண்ணத்திற்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை எடுத்துக் கூறுகின்றனர்.

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் அற-எண்ணத்தைப் பற்றிக் கூறுவது: 

        ஆழியாரில் இருக்கும்போது மகரிஷி அவர்கள் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் முப்பது நாள் மௌன நோன்பது இருப்பது வழக்கம்.  அப்போது அவருடன் சேர்ந்தே அன்பர்களும் மௌன நோன்பு இருப்பர்.  அப்போது ஒவ்வொருநாளும் அன்பர்கள் சிந்திப்பதற்காக  காலையில் சிந்தனை விருந்தினை அவர் எழுதி அன்பர்களுக்கு தரப்படும். அவ்வாறு 1988 ஆம் வருடம் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஆற்றிய மௌன நோன்பின் கடைசி நாளான 23-12-1986 (உ.ச.ஆ 23-12-03) அன்று மகரிஷி அவர்கள் ‘சிந்தனைத் தொகுப்பு’ என்கின்ற தலைப்பில் அருளிய சிந்தனை விருந்தில் எண்ணத்தைப்பற்றி அருளுவதை அவர் வாய்மொழியாகவே அறிந்து மகிழ்வோம்.

    நல்ல பயனுள்ள அறச்செயல்களும் அதற்கேற்ற எண்ணங்களும் எவரிடம்  இயங்குகின்றனவோ அவரைச் சுற்றிலும் நுண்ணலையாகிய அருட்பேராற்றலும், சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும்; அனுபவத்தைக் கண்டு இன்புறுவீர்களாக!.”

         அற-எண்ணத்திற்கேற்ற(தூய),  செயல்களை  யார் செய்கின்றனரோ அதற்கேற்ப அவருக்கு ஏற்படும் தெய்வீக நல் விளைவைப்பற்றிக்(அருள்) கூறுகிறார்,  இந்த அனுபவம் அவருக்குமட்டும்தான் கிடைக்கும்  என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக, ‘உத்தம நண்பர்காள்! உங்கட்கும் உரியது’ என்று உறுதியளிக்கின்றவர் இங்கே நல்ல எண்ணங்களின் விளைவுகளை கூறுவதோடு நின்றுவிடாமல் அதனை நம் ‘அனுபவத்தில் கண்டு இன்புறுவீர்களாக’ என வாழ்த்துகிறார் மகரிஷி அவர்கள்.

        மேலும் அவரது 80 வயதில் ஒரு நாள்,

    இப்பவும் ஏதாவது எண்ணம் எனக்கு வருமானால், அது ஏன் வந்தது, எதற்காக வந்தது  என்று  ஆராயாமல் (gate keeper போல் இருந்து கொண்டு) உள்ளே விடுவதில்லை” என்றார்.

    இதிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்ள வேண்டியது?  அவரைப் பொறுத்த வரை ஆயிரம் பிறை கண்ட ஞானி அவர். அப்போது வருகின்ற எண்ணங்கள் சாதாரண மனிதனுக்கு வருவதுபோன்ற எண்ணங்கள் வருவதற்கே வாய்ப்பில்லை. அப்படியிருக்கும் போது நல்ல எண்ணங்கள் தான் வரும்.  இருந்தாலும் அந்த எண்ணங்களைக் கூட ஆராய்ந்த பிறகுதான் உள்ளே விடுவார் என்று அறியமுடிகின்றது.  பிறருடைய எண்ணங்கள் நம்முள்ளே வந்துவிடக்கூடாது என்பதில் விழிப்போடு இருக்கச் சொல்கிறார் மகரிஷி அவர்கள். நல்லவைகளாக இருந்தால் சரி, அவ்வாறில்லாமல் பிறருடைய எண்ணமாக தீயதாக இருந்து அவரால் செயல்படுத்த முடியாததாகிய நிலையில், அது நம்மை கருவியாக்கிவிடக்கூடாது என்பதனை எச்சரிக்கவே  தன்னுடைய ‘எண்ண ஆராயும் விதத்தை’ க் கூறி நமக்கு எண்ணத்தின் இயல்பை  எடுத்துரைக்கிறார் மகரிஷி அவர்கள்.

         மேலும் நம் குருபிரான் அவர்கள் பிறர் எண்ணங்கள் நம்மைத் தாக்கக் கூடாது என்பதற்காக அவர் வாழ்க்யைில் நடந்த நிகழ்ச்சியினை அறிவோம்.  அந்நிகழ்ச்சி  மதமும் மனிதனும் என்கின்ற நூல் எழுதும்போது நடந்தது.   அந்நூலில் முகவுரை எழுதிவிட்டார்(பக்கம் 3-5).  பிறகு அந்நூலை ஆரம்பிப்பதற்கு முன் குருவணக்கம் செலுத்துகிறார் பக்கம்11 ல், அப்போது அவர் கூறுவதனை நாம் அப்படியே அறிவோம்.

    மதமும் மனிதனும் என்ற தலைப்பில் எனது சிந்தனையில் உதித்த கருத்துக்களை எழுதி அன்பர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டியாக உதவ வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக எனது உள்ளத்தில் அழுத்தம் பெற்று வந்தது.  இத்தகைய உயர்ந்த சிந்தனைக்குரிய கருத்துக்களைத் தொகுப்பதற்கோ ஓய்வு வேண்டியுள்ளது.   இந்தக் கருத்துக்களைத் தொகுக்கும்போது வேறு சில அன்பர்களின் உரையாடலோ, செயல்களின் தாக்கமோ ஏற்படாது இருக்கத் தக்க நேரம் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. நேற்றிலிருந்து(17-11-2001) இந்த ஆண்டு மௌன நோன்பு தொடங்கியிருக்கிறேன்.  இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு இந்த உயர்ந்த நன்நோக்கக் கருத்துக்களைத் தொகுக்கத் தொடங்கியுள்ளேன்.”  என்கிறார் எண்ணமே இயற்கையின் சிகரம் என்று கண்டுபிடித்த  மகரிஷி அவர்கள்.

    மனிதனும் மதமும் படம்

     

    இதுவரை செயலின் முதல் நிலையான எண்ணத்தைப் பற்றி முடிந்த வரை விரிவாகப் பார்த்தோம்.  இனி முத்தொழில்களில் இரண்டாவதான ‘சொல்’ பற்றி ஆராயலாம்.  அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில்    (19-11-2017-ஞாயிறு) சிந்திப்போம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                  வளர்க அறிவுச் செல்வம்