தவறான அடையாளமும், அதன் துன்பங்களும். 1/2

  1. Vedhathri Maharishi - Prosper Spiritually

தவறான அடையாளமும், அதன் துன்பங்களும். 1/2

வாழ்க மனித அறிவு!                                                                   வளா்க மனித அறிவு!

FFC – 18

14-11-2014

(Mistaken Identiy and its sufferings)

மனிதன் தன்னை தவறாக அடையாளம் காண்கிறான். எனவே அவன் பல துன்பங்களுக்குள்ளாகிறான். மனிதனுக்குத் தன்னுடைய அடையாளம் தெரியாதா? தெரியாமல், மனிதன் தன்னை தவறாக அடையாளம் காண்பதாலா துன்பங்களை அனுபவிக்கிறான்?. ஆம் .தவறான அடையாளத்தால்தான் துன்பங்களை அனுபவிக்கிறான். காரணம் தவறான அடையாளத்தால் அவனுடைய சரியான உண்மை அடையாளம் தெரிவதில்லை. அதாவது உண்மையான நான் (Real I) அவனுக்குத் தெரிவதில்லை.

தன்னைத் தவறாக அடையாளம் கொண்டு வாழ்வதற்கும் சரியாக அடையாளம் கொண்டு வாழ்வதற்கும் வாழ்க்கை முறையில் வித்தியாசங்கள் பல உள்ளன. எனவேதான் தவறாக அடையாளம் கொண்டு வாழும் முறையில் துன்பங்கள் வருகின்றன. சரியாக அடையாளம் கொண்டு வாழும் போது இயற்கை விதித்துள்ளபடி எப்படி வாழ வேண்டுமோ, அவ்வாறு வாழும் போது இயற்கையேத் துணையாக இருக்கின்றது. அங்கே துன்பங்களைத் தவிர்க்கிறான். இன்பமே எஞ்சி நிற்கின்றது.

தன்னைச் சரியாக அடையாளம் கொண்டு வாழ்ந்தால் இயற்கையோடு இணைந்து, இயற்கையின் இனிமையைக் கெடுக்காமல் வாழமுடியும். இயற்கையின் இனிமையைக் கெடுக்காமல் வாழ்ந்தால் இன்பம்தான். தன்னைத் தவறாக அடையாளம் கொண்டு வாழும்போது இயற்கைக்கு முறணாக வாழ்கின்றது மனித சமுதாயம். ஆகவே வறுமை, பசி, பட்டினி, சண்டை, சச்சரவு, போர், பிணி. அச்சம், திருடு. கொலை, கற்பழிப்பு. சினம், கவலை, பயம் அறிவின் குறைபாடுகளான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம், சமுதாய அக்கறையின்மை ஆகிய பல்வேறு வகையானத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது மனித சமுதாயம்.

அவனுடைய உண்மையான நான் தெரிந்திருந்தால் அதற்கேற்ப அவன் வாழ்வான். வாழ்க்கையில் இன்பமிருக்கும். தவறான அடையாளத்தால் தவறாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். எனவே பல்வகையானத் துன்பங்களை அனுபவிக்கிறான். மனிதன் என்றால் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மனிதர்கள்தான் தங்களைத் தவறாக அடையாளம் காண்கிறார்கள் என்பதில்லை. அறிவை அறிந்த அறிஞர்களைத் தவிர மனித சமுதாயமே தன்னைத் தவறாக அடையாளம் காண்கின்றது. ஆகவே தான் இன்று உலகத்தி்ல் அமைதியின்மைக் காணப்படுகின்றது.

வாழ்க்கையில் என்ன வேண்டும்? எதில் வெற்றி பெற வேண்டும். வாழ்க்கையில் துன்பமில்லா–இன்பம் வேண்டும். பேரின்பமே வேண்டும். துன்பம் வந்தாலும் அதனை துணிச்சலோடு எதிர் கொள்ள வேண்டும். ஆகவே வாழ்வில் துன்பமில்லா–இன்பம் பெறுவதில் வெற்றி பெற வேண்டும். துன்பம் தேவையில்லை. பிறவியின் நோக்கமே தன்னை(self realization)அறிய வேண்டும். அதற்கான வினாதான் “நான் யார்?” என்பது. அதாவது நான் யார் என அறிய வேண்டும் என்கின்றபோதே தான் யார் எனச் சரியாக அடையளாம் காணப்படவி்ல்லை என்றாகின்றது.

தன்னை அறிவதுதான் வாழ்வின் நோக்கம் எனில், தன்னைத் தவறாக அடையாளம் காண்பது என்பது பிறவியின் நோக்கத்திற்கு எதிரானது தானே. தன்னை அறிவது என்பது இயற்கையின் நோக்கம். தன்னுடைய சரியான, உண்மை நிலையை அறியாமல் தவறாகத் தன்னை அயைாளம் காண்பதென்பது இயற்கைக்கு முரணாததுதானே? ஆகவே, இயற்கை எதற்காக மனிதனாக வந்ததோ, அதற்கு எதிர் மறையாக வாழ்ந்து இயற்கையின் இனிமைகெடச் செய்கிறான். இயற்கையின் இனிமையைக் கெடுத்தால் விளைவு துன்பமே. மனிதன் கொண்டிருக்கின்ற தவறான அடையாளம் எது?

தவறான அடையாளம் என்பது தன் பரு உடலுடன் (physical body) தன்னை அடையாளம் காண்கிறான். உடல் உண்மையான நானல்ல (It is unreal I).
உடலே உண்மையான நானாக இருந்திருந்தால்,

மரணத்திற்கும் பிறகும், அதாவது உயிர் பிறிந்த பிறகும்,

உயிருடன் இருந்த போது சொன்னது போல் உடல், “நான்” என்று சொல்லலாமே! அப்படிச் சொல்வதில்லையே!. எனவே உடல் நானல்ல. இறந்த பின் உடல் இருந்தும் முன்பு போல், அது “நான்” எனக் கூறுவது இல்லை. ஏன் என்பது அனைவரும் அறிவர். மரணத்தின் போது உயிர் உடலை விட்டு பிரிந்து விட்டது. எனவே உடலுக்கு உணா்வு இல்லை. உயிர் உள்ள போது நான் எனக் கூறியது எது? அதுதான் அறிவு் எனவே அறிவுதான் “உண்மையான நான்”(Real I).

உடலை “நான்” என்கின்ற போது அது தன் முனைப்புள்ள நானாக (Egoful I) உள்ளது. உடலளவிலே அறிவு குறுகி நிற்கின்றது. இறைக்கும் தனக்கும் தொடர்பு இல்லாதது போல் ஆகி விடுகின்றது. இறையை மறந்து வுிடுகின்றது. விழிப்புணர்வில் இடறி விடுகின்றது. உடலை நான் எனக் கருதுவது சரீர உணர்வாகும்(body consciousness).

தளையில் (bondage) அகப்பட்டுக் கொள்கின்றது. விடுதலை (liberation) ,இல்லாமல் தவிக்கின்றது. அறிவுதான் உண்மையான நானாக இருக்கும் போது உடலை நான் எனக் கருதுவது தவறான அடையாளம். உடல் சரியான அடையாளமில்லை. எங்கும் நிறைந்துள்ள சர்வ வியாபியான இறை நம்முள்ளும் இருக்கின்றது. அப்படி இருக்கும்போது இறையை அடையாளம் காட்ட வேண்டுமல்லவா? உடலை தன்னுடைய அடையாளமாகக் காட்டுவது சரியல்ல.

இறை நம்முள் இருக்கின்றது என்று அறிகின்ற ஆன்மீகப் பயிற்சியில், உடலுடன் தன்னைத் தவறாக அடையாளம் கொண்டால் அது பயன் அற்று போய்விடும்.

“அவனில் தான் நீ, உன்னில் அவன்
அவன் யார்? நீ யார்? பிரிவேது?
அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்
அறிவு முழுமை அது முக்தி”

எனக் கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். இறையும் நாமும் ஒன்று என அறிந்து கொள்ளும்போது மனித அறிவு முழுமை பெறுகின்றது. அதுவே முக்தி என்கிறார். அதுவரை அறிவு குறைவுள்ளதாக இருக்கின்றது. குறைவுள்ளதில் எவ்வாறு நிறைவு இருக்கும். அதனால்தான் வாழ்க்கையில் எல்லா வளங்களும் உள்ளவனும் நிறைவு இல்லாமல் இன்னும் வேண்டும். இன்னும் வேண்டும் என அலைகிறான். அலைகிறவனுக்கு எப்படி நிம்மதி இருக்கும், இப்போது “நான் யார்?“ என்கிற வினாவிற்கு விடை அறிவுதானே.

. . . . நாளைச் சந்திப்போம். வாழ்க வளமுடன்