ஆசிரியர் பற்றி

இணைய தளத்தின் ஆசிரியர் பற்றி

சுமார் பத்து வருடங்கள் கழித்து அன்பர்களைச் சந்தித்து உரையாட வருகின்றார் இந்த இணைய தளத்தின் ஆசிரியர். பத்து வருடங்களுக்கு முன்னர் வாழ்வியல் வரிசையில்(Science of Living Series) முதல் நூலாக அவர் எழுதிய ‘நான் யார்?’ என்கின்ற நூலின் வாயிலாக அன்பர்களைச் சந்தித்து உரையாடி இருக்கின்றார். இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்.

இவர் சிறு வயதிலிருந்தே கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர். அப்போதே இறைவணக்கத்தின் இலக்கணத்தை தானாகவே ஏற்படுத்திக் கொண்டவர். “படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்” என்பது போல் அல்லாமல், “கடவுளை வணங்குகிறவன் நல்லவனாக நடந்து கொள்ள வேண்டும்’ என்கின்ற இறைக்கோட்பாடு தான் அந்த இலக்கணம்.

வேதாத்திரி மகரிஷியை குருவாக அடைந்தபோது, “இணக்கத்துடன் (இறைக்கு) கூடிய இறைவழிபாடு வேண்டும்” மற்றும் “மனிதனின் செயலிலே விளைவாக வருபவன் இறைவன்” என்று மகரிஷி அவர்கள் வகுத்திருந்த இறைவழிபாட்டின் இலக்கணத்தால் ஆசிரியர் தானாகவே ஏற்படுத்திக் கொண்டிருந்த இறைவணக்கக் கோட்பாடு உறுதி படுத்தப்பட்டது. மேலும், கடவுளை வணங்குகிறவன் நல்லவனாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான முழுமையான வரையறையை தன்னுடைய குருநாதரிடமிருந்து தெரிந்து கொண்டார்.

ஆசிரியர், தன்னுடைய முதல் குரு ஆதிசங்கரர் என்று கூறுவதற்கானக் காரணம், இணைய தள ஆசிரியர் ஏழாம் வகுப்பு படிக்கும் போது வகுப்பில் நடந்த ஒரு சம்பவமாகும். ஒரு நாள் பிற்பகல் சரித்திரப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் சரித்திர ஆசிரியர். அப்போது சரித்திர ஆசிரியர் “ஆதிசங்கரர், மத்வர். இராமானுஜர் போன்ற பெரியோர்கள் தோன்றினர். ஆதிசங்கரர் அத்வைதத்தைப் போதித்தார்” என்று கூறினார். அப்போது, ஆதிசங்கரர் தன்னுடைய சீடர்களுடன் செல்வது போன்றக் காட்சியை, மனதில் கண்டார் இணையதளத்தின் ஆசிரியர்.

அப்போது இணையதள ஆசிரியர் சிறுவனாக இருந்ததால், அந்நிகழ்ச்சி அவருக்கு முக்கியமானதாகத் தெரியவில்லை. பின்னர் ‘ஒன்றே பலவாகியது’ என்கின்ற அத்வைதத்தை ஆதிசங்கரர் போதித்தது போல், அதே அத்வைத தத்துவத்தைப் போதிக்கின்ற வேதாத்திரி மகரிஷி அவர்களுக்குச் சீடராகிய பிறகும் இந்நிகழ்ச்சி நினைவிற்கு வரவில்லை. சில நாட்கள் கழித்துதான் இந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வந்தது. பிறகு அந்நிகழ்ச்சியினை மனதில் கொண்டுவரும் போதெல்லாம் ரம்மியமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.

அவர் இருபத்திரண்டு வயதிலிருந்தே ‘The Hindu’ ஆங்கில நாளேட்டில்‘Religion’ என்கின்ற தலைப்பில், முந்தைய நாள் சென்னை நகரத்தில் நடந்த ஆன்மிகச் சொற்பொழிவின் (discourse) சுருக்கம்(gist) வெளிவருவதைத் தவறாமல் அருட்தாகத்துடன் படிக்கும் பழக்கம் உள்ளவர். அது அவருள் மறைந்திருந்த ஆன்ம தாகத்திற்கு ஆன்மநீர் வார்ப்பதாக இருந்தது. இத்தருணத்தில் ‘The Hindu’ நாளேட்டிற்கு உள்ளத்திலிருந்து பூரித்து வருகின்ற நன்றி தெரிவிக்கப் படுகின்றது. இப்படியாக அவருடைய ஆன்மீகப் பயணம் ஆரம்பித்தது. இவ்வாறாகக் குரு கிடைப்பதற்கு முன்னரே. இயற்கை, ஆன்ம தாகத்தை அவருக்கு ‘The Hindu’ நாளேட்டின் வாயிலாக ஏற்படுத்தியது.

மேலும்…