வாழ்நாளில் அறிந்து இன்பமுற வேண்டியது- 2 / 2

வாழ்நாளில் அறிந்து இன்பமுற வேண்டியது- 2 / 2

அ.வி. 47

14-01-2015 புதன்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதரித்த, நம்மிடையே அருட்தந்தையாக இருந்து உறவாடிய, இன்றும் அறிவாற்றலின் வாயிலாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ‘வேதாத்திரி மகரிஷி’ அவா்கள் என்ன கூறுகிறார் என்றும் பார்ப்போம். உலக மக்களுக்கு 1970 ஆண்டு அழைப்பு விடுத்திருக்கிறார். அழைப்பு விடுத்து நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அந்த அழைப்பைப் பற்றி நமக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் இருந்த நிலையிலே, நாமெல்லோரையும் அவரிடம் கொண்டு வந்து சீடராக்கியுள்ளது இயற்கை/இறை. இது இறையின் புனித திட்டமும், ஏற்பாடும் ஆகும்.

anbargale vaareer-Explo

அழைப்புக் கவி

வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஊனுடம்பு ஆலயத்தில் பத்து வருடங்கள் தங்கி, அவா் (வள்ளலார்) சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவிட்டதை முடித்துக் கொண்ட அருட்சோதி இராமலிங்க வள்ளலார் கூறியதையும் நினைவு கூர்வோம்.

அருட் பிரகாச வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது திருவாய் மலர்ந்தது.

“இது வரை உங்களுக்கு நேரிற் சொல்லி வந்தோம். கேட்டுத் திருந்தி எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். ……………………… இவ்வுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்போம். திருத்தி விடுவோம். அஞ்சவேண்டாம்.” என்றார்.
1823 ல் அவதரித்த அருளாளர் “எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர் *.” என்றார்.
1911ல் அவதரித்த அருளாளர் “அறிந் தனுபவிக்க இன்றேனும்.விரைந்து எழுச்சிபெற் றுய்வீர்!*” என்கிறார்.
முதலில் அவதரித்த அருளாளர் கூறுவதை சற்று சிந்தித்து பார்ப்போம். ஒருவர் கூட தான் கூறுவதை நம்பி எழுந்து திறத்தில் திகழ்வதற்கு ஒருவர் கூட தேர்சி பெறவில்லை என்று ஆதங்கப்பட்டார்.
எழுந்து என்றால் ‘விழித்தல்‘ என்று பொருள் கொள்ள வேண்டும்.

திறம் என்பதற்கு பொருளாக, “மனிதனில் உறங்கிக் கொண்டிருக்கின்ற தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்துவது” என்று கொள்ள வேண்டும்.

‘திகழ்தல்’ என்றால் பிரகாசித்தல், பொலிவுடன் இருத்தல், சிறப்புடன் இருத்தல், விளங்குதல் என்று பொருள். விளங்குதல் என்றால் புரிதல், தெரிதல் என்று பொருள். ஆகவே “எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்” என்றால், மனிதனுள் உறங்கிக் கொண்டிருக்கின்ற தெய்வீக ஆற்றல் விழிப்புற்று, சிறப்புடன் அந்த தெய்வீகத்தை விளங்கச் செய்பவர் யாரும் இல்லை என்று ஆதங்கப்பட்டார். ஆனால் அத்துடன் இருந்து விடாமல், “அஞ்ச வேண்டாம்” என ஆறுதலுடனும், “அனைவரையும் திருத்தி விடுவோம்” என நம்பிக்கைடனும் சொல்கின்றார்.
பின்னர், 1911ல் அவதரித்த அருளாளரும், “அறிந் தனுபவிக்க இன்றேனும் விரைந்து எழுச்சிபெற்றுய்வீர் !” என்று அது போன்றே கூறுகிறார்.

“இன்றேனும் விரைந்து எழுச்சிபெற்றுய்வீர்” என்றால், ‘அறியாமையில் இது வரை மனிதனுள் உறங்கிக் கொண்டிருந்த தெய்வீக ஆற்றல் எழுச்சி பெறாமல் இருந்தது. நான் அன்புடன் அழைக்கிறேன்-இப்போதாவது விழிப்பு பெற்று உய்வீர்’ என்று கூறுவதாக பொருள்.

1874-ல் வள்ளலார் எண்ணியது, 1953ல் (1911+42=1953) நிறைவேறியது. இராமலிங்க சுவாமிகள் எண்ணிய, மக்களைத் திருத்தி விடும் படலத்தை, இயற்கை/இறை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, அரிய கலையாக இருந்து வந்த அகத்தவத்தை பரவலாக்கியும், மனிதனை திருத்தி, தனக்கும், தன்னால் சமுதாயத்திற்கும், நன்மையே தரத்தக்க, ஒழுக்க வாழ்வு வாழ்வதற்கு, அகத்தாய்வு பயிற்சியினையும் உருவாக்கி கல்வி நிலையங்களுக்கும் கொண்டு சென்றுள்ளது.

“ஐயப்படாது அகத்தை உணர்ந்தவரை தெய்வத்திற்கு சமம்” என திருவள்ளுவர் மொழிந்துள்ளபடி, அகத்தை உணர்ந்த இராமலிங்க சுவாமிகள் எண்ணியது, இறையே எண்ணியதுதானே! ஆக மொத்தத்தில் அறிவை அறிந்தவர்கள் ‘இவ்வுலக மக்கள் திருந்தி உய்வதற்கு வழியே இல்லையா’ என எண்ணியதற்கிணங்க, “Fraction demands. Totality supplies” என்கின்ற தன்னுடைய நியதிப்படி, இயற்கை/இறை தன் திரு விளையாடலை வேதாத்திரியத்தின் வழியாக அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. ஆகவே இயற்கையின் எல்லா ஆற்றல்களையும் பயன்படுத்த தெரிந்து கொண்ட மனிதகுலம் அறிவாற்றலான ஒழுங்காற்றலை பயன்படுத்த அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். மனிதன் வாழ்நாளில் அறிய வேண்டியதை அறிந்து இன்பமுற வேண்டும். அதற்காகத்தான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் பிறவியினை அளி்க்கின்றது இயற்கை. இதனை ஓர் அறிஞர் “வினைப்பயனே தேகம் கண்டாய்” என்கிறார்.
மனிதன் அறிய வேண்டியதை எல்லாம் ‘நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு விடை கிடைக்கும் போது அறியப்பட்டுவிடும்.

அவையாவன:

1) இறை அரூபம். அளப்பரிய ஆற்றல்
2) இறை பேராற்றலாக, தூய அறிவாக(பேரறிவாக), வற்றா இருப்பாக, காலமாகவும்(Time), இருக்கின்றது.
3) தன்முனைப்பில்லா நான் (Egoless I ) அதாவது அறிவுடைமையுள்ள நான் கண்டுபிடிக்கப்படும். மனிதனிடமுள்ள (நானில்) உடல், உயிர், அறிவு ஆகிய மூன்றில் நானாக இருப்பது அறிவே என்றும், அதே அறிவு இறையாகும் என்றும், அறிவை அறிந்த ‘நானே’, ‘தன்முனைப்பு அற்ற நானாகும்’.
இந்தவிளக்கத்தைப் பெறாத, பெற்று நடைமுறைக்கு கொண்டு வராத நான்கள் தன் முனைப்புள்ள நான்களாகும்.
4) பிற மனிதர்களிடமும் உள்ள அறிவும், இறையே. 720 கோடி உலகமக்களும் வெவ்வேறு நான்கள் இல்லை. ஒரே, ஆனால், உடலளவில் தனித்தனியாகவுள்ள நான்கள். உலக மக்கள் ஒரு மாபெரும் குடும்பம். ஒவ்வொருவரும் சகோதர, சகோதரிகளே.
5) பிற உயிர்களிடம் உள்ள (தாவரங்கள் முதல் விலங்கினங்கள் வரை) உயிரும் சரி, அறிவும் சரி இறையே. இறையே உயிர்களுக்கெல்லாம் உயிராக திகழ்கிறான்.
6) சடப் பொருட்களிலும் அணுவாக இருப்பதும், அணுவின் இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பதும் ஒழுங்காற்றலாகிய அறிவாகிய இறையே.
7) அத்வைதம் தெளிவாக விளங்கிவிடும். ஒன்றே எவ்வாறு பலவாறாக இருக்கின்றது, இருக்க முடியும் என்கின்ற சந்தேகமும் விளங்கிவிடும்.
8) வாழ்வின் நோக்கம் இறை உணர்வு பெறுவதே என்பது அறியப்படும்.
9) கோடனு கோடி நட்சத்திரங்கள் அடங்கிய பிரபஞ்சத்திற்கு அப்பால் எல்லையில்லாத அளவிற்கு விரிந்து உள்ள வெளியே (அப்பாலுக்கு அப்பாலாய்) இறையே என அறியப்படும். அது அறிவாக இருப்பதால்அது வெளியாகத் தெரிகின்றது என்கின்ற விளக்கமும் கிடைக்கப் பெறும்.
10) ‘பிரக்ஞானம் பிரம்மம்’ ‘ அகம் பிரம்மாஸ்மி’, ‘தத்துவமஸி‘ ‘அயம் ஆத்மா பிரம்மம்‘ என்கின்ற மகா வாக்கியங்கள் விளங்கும்.
பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அறிவாக உள்ள அரூபமான இறையை, மனிதன் அறிவைக் கொண்டுதான் உணர முடியும். அறிவைக் கொண்டு பேரறிவை அறியும் பேற்றினையே தமிழ் இலக்கியங்களில் வீடுபேறு எனப்படுகின்றது.
வீட்டிற்கெல்லாம் வீடு அது. அந்த வீட்டினை அடைவது பேறாகக் கருதப்படுகின்றது. எனவே வீடு பேறு எனப்படுகின்றது.
அறம் காத்து, பொருள் ஈட்டி, அளவு முறையோடு இன்பம் துய்த்து, வீடு பேற்றை அடைவதே மனிப்பிறவியின் நோக்கம் அல்லது பயன் என்கின்றது தமிழ் இலக்கியங்கள்.
ஆறறிவாக வாழ்கின்ற மனிதர்களெல்லாம், அதற்கு ஏற்ப பொருத்தமாக, உண்மைப் பொருளுணா்தல் பேறு என்றும், அதுவே பிறவிப்பயனைப் பெறுவதாகும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

அடுத்த ஞாயிறு (18-01-2015) அன்று ‘புகழ்’, ‘உயா் புகழ்‘ பற்றி சிந்திப்போம்.