December 2016

Monthly Archives

  • C254-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே!5/?

    இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே!5/?

    FFC-C254-

     

     21-12-2016—புதன்

    சென்ற அறிவிற்கு விருந்துகளில்
    ஏகாந்தம் இனிது,
    ஆதியைத் தொழுதல்,
    அறிவினரைச் சேர்தல் இனிது ஆகியவைகளை ஆராய்ந்து வருகிறோம்.

    அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பது எவ்வாறு இனிதாக இருக்க முடியும் என்றும், அந்த வரிசையில் அவ்வையார் பாடலான ‘அரிது எது?’ என்கின்ற பாடல் வழியாக அவ்வையாரின் ‘இனியது எது’ என்பதனை உறுதி படுத்தினோம்.

    அடுத்ததாக திருமூலரின் ‘குரு அருளே திருவருள்’ என்கின்ற பாடலின் வாயிலாகவும் அவ்வையாரின் ‘அறிவினரைச் சேர்தல் இனிது’ என்கின்ற கூற்று எவ்வாறு சரி எனப்பார்த்தோம்.

    இப்போது அறிவினரைச் சேர்தல் எவ்வாறு சேருபவரின் தரத்தை உயர்த்தி பிறவிப் பயனைத் தரும் என்று விஞ்ஞான ரீதியாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதை அறிய இருக்கிறோம். பிறவிப்பயனை எய்துவது இனிதினினும் இனிதுதானே! அது தானே பேரின்பம்?

    FFC-70-எப்பபொருளை- to post on 28-03-15அவ்வையார், திருமூலர், நம் குருதேவர் ஆகிய மூன்று அறிஞர்களின் கருத்தும் ஒன்றாகத் தானே உள்ளது. மூன்று அறிஞர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். அவா்கள் வற்றாத ஜீவநதிகளான கவிகளை அருளியதால்தான் இன்று நம்முடைய அறிவும், இனிவரும் சமுதாயத்தின் அறிவும் அந்நதியில் குளித்து மனத்தூய்மைப் பெற்று புத்துணர்வு பெற முடிகின்றது.

    முதலில் இயல்பூக்கம் என்கின்ற வார்த்தைக்கு பொதுவான விளக்கம் காண்போம். ‘இயல்பு’, ‘ஊக்கம்’ ஆகிய இரு சொற்கள் சேர்ந்ததுதான் ‘இயல்பூக்கம்’ என்கின்ற சொல். இயல்பு என்றால் என்ன? இயல்பு என்றால் பண்பு, தன்மை என்று பொருள். ஊக்கம் என்றால் என்ன? ஊக்கம் என்றால் உற்சாகமான தூண்டுதல், ஆதரவு, inducement, தன்முயற்சி, motivation என்று பொருள். இயல்பு, ஊக்கம் ஆகிய இரண்டு சொற்களும் சேரும்போது இயல்பூக்கம் என்பது ஏற்கனவே உள்ள பண்பு தூண்டப்பெற்று மாறுதல் அடைவது என்று பொருள்.

    இறைநிலையின் திறங்களில் இயல்பூக்கம் என்பது இரண்டாவதாக உள்ளதால், அக்கோணத்தில் இயல்பூக்கத்திற்கு விளக்கம் காண்போம். ‘தன்மாற்றம்’ என்கின்ற இறைநிலையின் முதல் திறனால், இறைநிலையே வெவ்வெறு தோற்றங்களாக மாற்றங்கள் அடைந்தாலும், அவை உருமாற்றமடைந்து வெவ்வேறாக இருப்பதற்கு காரணம் அவற்றின் குணங்களே. ஒவ்வொன்றும் பெறும் குணங்களுக்கேற்ப இயக்கச் சிறப்பு அமைகின்றது. இதுவே இயல்பூக்கமாகும்.

    இயல்பூக்க நியதியால் உருவங்களின் அமைப்பிலும், குணநலங்களில் மாற்றங்கள் ஏற்படும். காந்த ஆற்றல் இடத்திற்கேற்ப எழுச்சி பெற்று இயக்கங்களாகவும், விளைவுகளாகவும் வருவதுதான் இயல்பூக்கமாகும்.
    இறைவெளியின் இயல்பூக்கமேதான், உயிரினங்கள் ஓரறிவிலிருந்து ஆறறிவு வரை உருவாவதற்கு காரணமாக உள்ளது. முதலில் தோன்றிய தாவர உயிரினம் தன்னுடைய இயல்பூக்கத்தால், பல தாவரப் பிறவிகளை மலரச் செய்தது. இதனால் வித்துக்களை தாவர இனம் பெருக்கிக் கொண்டது. வித்துக்களில் இருந்த இயல்பூக்கம்தான் இரண்டாவது அறிவுடைய சீவனான புழுக்களாக மாறியது.

    புழுவிலிருந்து மேலும் இயல்பூக்கத்தைக் கொண்டு தனது சிறப்பால் வண்டு, ஊர்வன, பறப்பன, நடப்பன என எண்ணிலடங்காப் பிறவிகளை ஏற்படுத்திக் கொண்டது இறைநிலை/இயற்கை. இந்தப் பிரபஞ்சத்தில் ஐந்தறிவிற்குப் பிறகு, இறுதியாக வந்த உயிரினம் தான் மனிதன்.

    இப்போது இக்கவியை ஒட்டி ‘இயல்பூக்கம்’ என்பதற்குப் பொருள் காண்போம்.

    “அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும் – இப்பெருமை இயல்பூக்க நியதி ஆகும்”
    அறிவினிலும், உடலினிலும் ஏற்படும் மாற்றங்கள் எதனால் நடக்கின்றன?

    எந்த ஒரு பொருளையோ, எச்செயலையோ, எக்குணத்தையோ, எவ்வுயிரையோ ஒருவர் அடிக்கடி நினைந்து வந்தால், அப்பொருளின் தன்மையாக நினைப்பவரின் ஆற்றல் உடலினிலும், அறிவினிலும் மாற்றமடையும் என்கிறார். மேலும் இதனை ஒரு பெருமை என்றுக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். இது இறைநிலையின் இயல்பூக்க நியதியாகவும் கூறுகிறார். உண்மைதானே! இயல்பூக்க நியதியால்தான் ஒரறிவிலிருந்து ஆறறிவு வரை உயிரினத் தன்மாற்றம் நடைபெற்றது. ஓரறிவிலிருந்து ஐந்தறிவு தன்மாற்றத்தில் மனிதனுக்குப் பங்கு இல்லை. ஏனெனில் – ஆறாம் அறிவு (மனிதன்) அப்போது தோன்றவில்லை. ஆனால் இறைநிலையின் ஆறாம் அறிவு, மனித உருவினிலே தன்மாற்றம் அடைந்ததே தவிர அவனது குணநலன்களில் முழுவதுமாக மாற்றம் அடையவில்லை. தன்னிலை உணர்ந்தவர்களைத் தவிர, இன்னமும் முந்தைய இனமான விலங்கினப் பண்பு, மனிதனிடம் அவ்வப்போது சூழ்நிலை காரணமாக வெளிப்படுகின்றது. இதனை ஓர் அறிஞர்,

    “பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை Evolution is still incomplete” என்கிறார்.

    ஆகவே மனிதன் பண்பேற்றம் பெறுவதற்கு அவன் தான் செயல்புரிய வேண்டும். அந்த செயலினால் வருகின்ற விளைவு இயல்பூக்க நியதிப்படி நடக்கின்றது.

    இறைவெளியின் இயல்பு, ஊக்கம் பெறுவது இயல்பூக்கம். விலங்கினம், அதற்கடுத்து தற்போதுள்ள நிலை வரை வந்துள்ள மனித இனப்பண்போடு இயல்பூக்க நியதியின் பணி முடிந்துவிட்டதாக ஆகிவிடுமா? இயல்பூக்க நியதி என்ன செய்து கொண்டிருக்கின்றது? அது ஓய்வு எடுத்துக் கொண்டதா? இறைவெளிக்கு ஏது ஓய்வு? அப்படியிருக்கும்போது இறைவெளியின் தன்மையைான இயல்பூக்கத்திற்கும் ஓய்வு இருக்க முடியாது.

    மனிதகுலம் தற்போதுள்ள வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை என்பது பெரும்பாலும் விலங்கினப் பண்பையே வெளிப்படுத்திக் கொண்டிருத்தலாகும். அந்நிலை மாறுவதற்கு மனிதப்பண்பு ஏற்றம் (பண்பேற்றம்) பெற வேண்டும். அந்த பண்பேற்றம் பரிணாமத்தின்/தன்மாற்றத்தின் இறுதி கட்டம் தானே. இறுதி கட்டம் முடியாத வரை பரிணாமம் எவ்வாறு பூர்த்தியானதாகிவிடும்? உயரினப் பரிணாமத்தில் ஒரறிவிலிருந்து ஐயறிவு வரை பரிணாமம் பூா்த்தியாகிவிட்டது என்பது போல் ஆறாம் அறிவின் உயிரினப் பரிணாமம் பூர்த்தியாகிவிட்டது எனச் சொல்ல முடியுமா? ஐயறிவு உயிரினத்திற்கு வேண்டிய, ஐந்து வகை உணா்வுகளை உணா்வதற்கான ஐந்து புலன்கள் உருவாகிவிட்டன. இதற்கு மேல் ஐயறிவு சீவன்கள் அடைய வேண்டிய பரிணாம பூர்த்தி ஏதுமில்லை. ஆனால் மனித குலம் மனிதனுக்கான பண்பில் ஏற்றம் பெற வேண்டுமல்லவா? இதனைக் கருத்தில் கொண்டு தான்

    “பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை Evolution is still incomplete” என்கிறார் அந்த அறிஞர்.

    இதுவரை இறை வெளியின் இயல்பூக்கம் பற்றி ஆராய்ந்தோம். பரிணாமம் ஏன் இன்னமும் பூர்த்தியாகவில்லை என்று அறிஞா் சொல்வது, எவ்வாறு சரி ஆராய்ந்து ஒப்புக் கொண்டோம். மனித குணநலங்களில் ஏற்றம் ஏற்படும் வரை, ஆறாம் அறிவு உயிரினப் பரிணாமத்தில் பூர்த்தியாகவில்லை என்பதால், இயல்பூக்கத்தின் பணி தொடர வேண்டும். ஆகவே மனிதகுலம் பண்பேற்றம் பெற்று வாழ்வதற்கு மகரிஷி அவர்கள் கூறும் வழி என்ன என்பதனை அடுத்த விருந்தில் அறிவோம். தொடரும்.

  • வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-238

    19-12-2016 – திங்கள்

    புதிய ஆத்திச் சூடியில் மகான் மகாகவி பாரதியார்
    ‘ஐம்பொறி ஆட்சிகொள்’
    என்று கூறுவதன் பொருள் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்

  • C253-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 4/?

    இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 4/?

    C253-FFC 

     18-12-2016—புதன்

    சென்ற அறிவிற்கு விருந்தில் திருமூலர் கூறும் முதல் இரண்டு முறைகளில் தெளிவு பற்றி அறிந்தோம். இன்றைய அறிவிற்கு விருந்தில் மற்ற இரண்டு முறைகளில் தெளிவு பற்றி ஆராய்வோம்.

    3) தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்:

    இது எவ்வாறு சாத்தியம் என்று காண்போம். திருவள்ளுவர் கேள்விச் செல்வத்தை அறிவுறுத்துவதற்காகவே ஒரு அதிகாரத்தை ஒதுக்கியுள்ளார். அதில் முதலாவதாக இடம் பெறும் குறளைக் கவனிப்போம்.

    ” செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை” ….குறள் எண் 411

    “ எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும்” … குறள் எண் 416

     

    மனிதனுக்கு பல செல்வங்கள் அவசியமாகின்றது. அவற்றில் செவியால் கேட்டறியும் கேள்விச் செல்வமே தலைமையானது என்கிறார். கேட்டறிவதைச் செல்வமாகக் கருதுகிறார்.

    துன்பத்திற்குக் காரணமாக உள்ளது அறியாமைதான். எதையும் அறிந்து கொள்வதற்கு நம் உள்ளத்திற்கு இரண்டு தேவைகள் அவசியமாகின்றன. அவையான ஒன்று தேடல், மற்றொன்று ஆர்வம். தேடுபவருக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கும். சலிப்பிருக்காது. மாறாக சுவையிருக்கும். தேடுதலில் பலபடிகள் உள்ளதால், அவற்றினை வரிசையாகக் கூறுவதென்றால் இவ்வாறாகக் கூறலாம். –

    1) பார்த்தல்,
    2) படித்தல்,
    3) கேட்டல்,
    4) தெரிந்து கொள்ளுதல்,
    5) புரிந்து கொள்ளுதல்,
    6) அறிந்து கொள்ளுதல்,
    7) தெளிவு பெறுதுல்,
    8) நிறைவு பெறுதல்.

    அறிவை உடைமையாக, அதாவது செல்வமாகக் கருதி, அறிவுடைமை என்கின்ற ஒரு அதிகாரத்தை இயற்றியவர், கேட்டறிவதனையும் செல்வமாகக் கருதுவதில் நியாம்தானே. ஆகவே திருவள்ளுவர் கூறும் அறிவுடைமை அதிகாரத்தில் உள்ள அறிவிற்கான வரையறையின்படி அறிவைத் தெளிவாக்குவதற்கு அறிவை அறிந்த குருவின் வார்த்தையை கேட்பது அவசியமாகின்றது. எனவேதான் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் என்கிறார் திருமூலர்.

    செவிச் செல்வத்தைப் பற்றி திருவள்ளுவர் கூறுவதாவது:

    1) செவிகளுக்கு உணவாகிய கேள்விச்செல்வத்தை உடையவர், பூலோகத்தில் வாழ்ந்தாலும் தேவர்களுக்கு ஒப்பாவார்.
    2) தான் கற்காவிட்டாலும், கற்றவர் கூறுவதைக் கேட்க வேண்டும்.. அது வாழ்க்கையில் தளர்ச்சி(சூழ்நிலை) ஏற்படும்போது துணை இருக்கும்.
    3) சேற்று நிலத்தில் நடந்தால் வழுக்கும். அப்போது ஊன்றுகோல் நடப்பவர்க்கு உதவுவது போல ஒழுக்கமுடையவர் வாய்ச்சொல் உதவும்.
    4) ஒருவன், சிறியதாயினும் நல்லவைகளைக் கேட்டால், அவை அவனுக்கு நிறைந்த பெருமையைத் தரும்.
    5) கேள்வி அறிவினை உடையவர்கள் பிறழ உணர்ந்த வழியும் பேதமை தரும் சொற்களைச்
    சொல்ல மாட்டார்கள்.
    6) கேள்வியால் துளைக்கப்படாத செவிகள் செவிடாம் தன்மை உள்ளன.
    7) கேள்விச்சுவை அறியாத மனிதர் இறந்தாலும், இருந்தாலும் பயன் என்ன?

    அறிவு மேம்படுவதற்கு தெளிவு அவசியமாக உள்ளதால், குருவின் திரு வார்த்தையைச் செவிமடுத்துக் கேட்டுப்பெறும் செவிச் செல்வத்தை வலியுறுத்துகிறார் திருமூலர்.

    4  தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

    குருவின் திருஉருவத்தைச் சிந்தித்தால் அறிவிற்குத் தெளிவு ஏற்படும் என்கிறார் திருமூலர். இது எவ்வாறு நடக்கின்றது? முதலில் கூறிய மூன்றையும் விட அந்த ஞானாசிரியருடைய திருஉருவை மனதில் நிறுத்தி, அவர் அருளுரைகளை எண்ணியபடியே நினைவால் தொழுவதும் அறிவிற்கு விளக்கம் தரும் எனப்படுகின்றது. தியானத்திற்கு ஒரு பொருள் தேவைப்படுகின்றது. தியானத்திற்குரிய பொருள், நமக்கு என்ன வேண்டுமோ, அதனை தன்மையாகக் கொண்டிருக்க வேண்டும். ஒரு சிலர் சிலைகளை வைத்து தியானிப்பது வழக்கம். உதாரணத்திற்கு புத்தர் சிலையை வைத்து தியானம் செய்யும் பழக்கமும் உண்டு. மனம் ஒருமைப்படும். புத்தா் கூறிய அறிவுரைகளின் தன்மையாய் தியானிப்பவர் ஆவார். அதுபோல் குருவின் திருஉருவத்தை சிந்தித்து வந்தால் குரு கூறும் தன்மைகள் சீடனுக்கு வந்து சேரும் இறை அருளைப் பெறுவதற்கு குருவருள் துணை செய்யும் என்பதால் குருவருளின் பெருமை பற்றி திருமூலர் கூறுகின்றார், அவ்வையார் மற்றும் அறிஞர் திருமூலர் ஆகிய இருவரும் கூறியது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். இவ்விரு அருளார்களின் அறிவுரைகள் எந்த அளவிற்கு கவனிக்கப்பட்டு, நம்பப்பட்டு பயன் படுத்தப்பட்டதோ தெரியாது. ஆனால் வேதாத்திரி மகரிஷி அவர்களால் பயன்படுத்தப்பட்டது என்பது, மகரிஷி அவர்கள் இயற்றிய குருவணக்கப் பாடலில் வாயிலாகத் தெரிய வருகின்றது.

    மேலும் பஞ்சபூத தத்துவத்தைப்பற்றி கூறும் போது, வெளி மற்றும் விண்ணின் விகிதாசாரத்தை விளக்க வந்த மகரிஷி அவா்கள் அவ்வையார் கூறும் பாடலை சான்றாக எடுத்துக் கொண்டுள்ளார், ஞானக்குறளில் உள்ள சில வரிகளைக் கவனிப்போம்.

    ” பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம்
    தரம் மாறித் தோன்றும் பிறப்பு.”

    ”நிலம் ஐந்து, நீர் நான்கு, நீடங்கி மூன்று,
    உலவை இரண்டு, ஒன்று விண்”

    இதிலிருந்து என்ன தெரிகின்றது? அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்த காட்டியவர்களை நினைவுகூர்ந்ததால், அவர்களின் அறிவாற்றல் எவ்வாறு உதவியாக இருக்கின்றது என்பதனை அறிய முடிகின்றது.

    இத்தருணத்தில், கூடுதலாக விநாயகர் அகவலிருந்து அவ்வையார் கூறும் சிலவரிகளைக் கவனிப்போம்.
    ”மூலாதாரத்தின் மூண்டெழுகனலைக்
    காலாலெழுப்புங் கருத்தறிவித்தே” என்கின்ற வரிகள் மகரிஷி அவர்கள் இன்று எளிமையாக்கிக் கொடுத்துள்ள குண்டலினி யோகத்தைக் குறிப்பிடுகின்றன. காலால் என்பது மூச்சுக் காற்றினால் குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து உயரே கொண்டுவருவதைக் குறிப்பிடுகிறார் அவ்வையார்.

    மேலும் மகரிஷி அவர்கள் கூறும் இறைவெளியையும், அதன் தன்மாற்றத்ததைப் பற்றிக் கூறும் வரிகளைக் கவனிப்போம்.

    ” சத்தத்தினுள்ளே சதாசிவங்கக்காட்டிச்
    சித்தத்தினுள்ளே சிவலிங்கக் காட்டி
    அணுவிற்கணுவா யப்பாலுக்கப்பாலாய்ச்
    கணுமுற்றிநின்ற கரும்புள்ளேகாட்டி”

    “அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்” என்கின்ற வரி இறைவெளி அணுவிற்குள்ளும் இருக்கின்றது அதற்கு அப்பாலும், பிரபஞ்சத்தைத் தாண்டி எல்லையில்லாததாக(அப்பாலுக்கு அப்பாலாய்) உள்ளது என்கின்ற இறைவெளித்தத்துவத்தைக் கூறுகிறார், அந்த வெளியைப் பற்றி கூறவந்த அவ்வையார்,

    ” சத்தத்தினுள்ளே சதாசிவங்கக்காட்டிச்
    சித்தத்தினுள்ளே சிவலிங்கக்காட்டி” என்கிறார் அவ்வையார்.

    ஒலி எவ்வாறு வருகின்றது? காற்றிலிருந்து வருகின்றது. காற்று பஞ்சபூதங்களில் ஒன்று. பஞ்சபூதங்கள் வெளியிலிருந்து உண்டாகின. வெளி அமைதியானதால், அதனை அமைதியைக் குறிக்கின்ற ‘சிவம்’ என்கின்ற சொல்லால் குறிப்பிடுகிறார். ஒலி வருவதற்குக் காரணம் காற்று, காற்றிற்கு மூலம் வெளி. வெளி எப்போதும் சதா(எப்போதும், தொடர்ந்து), அதாவது எப்போதும் மௌனமாக உள்ளதால். சப்பதத்திற்கு மூலம் காற்று, காற்றிற்கு மூலம் பெருவெளியாகிய சதாசிவம் என்கிறார்,

    சித்தம் என்றால் மனம், அறிவு என்று பொருள். இறைவெளியே எல்லா உயிர்களிலும் அறிவாக இருக்கின்றதை ”சித்தத்தினுள்ளே சிவலிங்கக் காட்டி” என்கிறார். அவ்வையார் ஒரு ஞானப்புலவர் ஆகவேதான் ஞானக்குறள் என்கின்ற தலைப்பில் 310 குறட்பாக்களை அருளியுள்ளார்,

    அறிவினரைச் சோ்தல் இனிது, அதனினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பது என அவ்வையார் கூறியுள்ளதையே, அறிஞர் திருமூலரும் குருவின் பெருமைகளாகக் கூறியுள்ளார். அருளாளர்களின் கூற்றுக்கள் கவனிக்கப்படாமலும், நம்பப்படாமலும் இருக்கின்ற நிலையை மாற்றி, அறிவுபூர்வமாகவும், விஞ்ஞான அடிப்படையில் உள்ளது என எடுத்துக் கூறும் பட்சத்தில் அவை சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளும் நிலை விரைவில் ஏற்படும். ஆகவே அறிவினரைச் சேர்தல் எவ்வாறு சேருபவரின் தரத்தை உயர்த்தி பிறவிப் பயனைத் தரும் என்று விஞ்ஞான ரீதியாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதை அடுத்த அறிவிற்கு விருந்தில் அறிவோம்.   வாழ்க வளமுடன்.