admin

Author Archives

  • சிந்திக்க அமுத மொழிகள் – 341-இணையதள பதிவேற்றம் – 1015

    வாழ்க வையகம்!                                                                               வாழ்க வளமுடன்!

     

    சிந்திக்க அமுத மொழிகள் – 341

    இணையதள பதிவேற்றம் – 1015

                                                                                                                                                     நாள்:  23-04-2025                                                                                                                               உ.ச.ஆண்டு:  23-04-0040

                                வள்ளலாரின் கடைசிச் செய்தி — உலக சமுதாயத்திற்கு

                                   நேற்றைய (22-04-2025) சிந்தனையின் தொடர்ச்சி…

     

    வாழ்க வளமுடன்!   

    சிந்தனையைத் தொடர்வோம்.  வள்ளலார் அவர்கள் தனது பூதல உடலின்   மறைவிற்குப்(1874  ஆம் வருடம்) பிறகு நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு, அவர் சுமாா் 42 வயது இருக்கும் போது அருள்பாலித்தார். அதாவது 1953(1911+42=1953) ஆண்டில் அருள்பாலித்துள்ளார் என அறியமுடிகின்றது. அருள்பாலித்ததிலிருந்து பத்து ஆண்டு காலத்துக்குள் தான் எழுதியக் கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவமயம் என்கிறார் மகரிஷி அவர்கள்.  வள்ளலார் தம் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவைத்த செயல்களையெல்லாம், தனது உடலைக் கொண்டு வள்ளலார் முடித்துக் கொண்டார் என மகரிஷி அவர்கள் ‘எனது வாழ்க்கை விளக்கம்’  எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.   வள்ளலார் பல சந்தர்ப்பங்களில் தன்னோடு  இருந்து வழிகாட்டி, செயலாற்றியிருக்கிறார் என்று மகரிஷி அவர்கள் கூறுகிறார்.  

                     மகரிஷி அவர்கள் 05-12-1986 அன்று அருளியுள்ள கவியினை இங்கே நினைவு கூர்வோம்.

       வள்ளலார் அருள்(05-12-1986)

                                 “என்று என்னை இராமலிங்க வள்ளற்பெரு மானார்

                                      எதிர் நின்று காட்சிதந்து அருளைப் பொழிந்தாரோ

                                  அன்றுமுதல், உடல் உயிரோடறிவை அருட்பணிக்கே

                                      அர்ப்பணித்து விட்டேன்என் வினைத் தூய்மை யாச்சு

                                  இன்றுஎந்தன் மனநிலையோ, வள்ளற் பெருமானார்

                                      எந்தச்செயல் செய்யென்று உணர்த்து வாரோ, அதுவே

                                 நன்றுஎனக் கொண்டவற்றை, நான்முடிக்கும் பேற்றால்

                                    நல்லறிஞர் பலர் எனக்கு நட்பை அளிக்கின்றார்.”  (ஞா.க.க.எண் 711)

                                                                                                                 …   வேதாத்திரி மகரிஷி.

               அதாவது   வள்ளல் பெருமகனார் தனது பூதஉடலின் மறைவிற்குப் பிறகு சுமார் 80 வருடங்களுக்குப் பிறகு  (1953-1874=79)    தனது கடைசிச் செய்தியின்படி   மகரிஷி அவர்களுக்கு  அருள்பாலித்துள்ளார்.   

                இதிலிருந்து அறியவேண்டியது யாதெனில் மரணத்திற்குப் பின் உயிரின் நிலை பற்றி அறிய முடிகின்றது.     மகரிஷி அவர்களின் மற்றோர் கவியினையும்  நினைவு கூர்வோம்.

                                               பேரறிஞர் வழி செல்வோம்(10.08.1981)   

                                      “அருவுருவாம் அகத்ததனை விளக்கி வாழ்வில்

                                           அல்லல் கலைந்து அமைதிபெற்று  மக்கள்உய்யக்

                                        கருவிளக்கி மனவளத்தைப் பெருக்கிக் காக்கும்

                                           கலையதனைக் கவி மூலம் விரித்துரைத்த

                                       திருமூலர், வள்ளுவனார், இராம லிங்கர்

                                          திருவருளார், மணிமொழியார், தாயு மானார்,

                                       பெருநோக்கப் பயன்விளக்கி உலகம் உய்யப்

                             பேரறமாம் அருட்தொண்டில் பங்கு கொள்வோம்.”…(ஞா.க.க.எண் 13)

                                                                                                                 … வேதாத்திரி மகரிஷி.

             அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய  பேரறிஞர்கள் வழி சென்று அருட்தொண்டில் பங்கு கொள்வோம் என்கிறார் மகரிஷி அவர்கள். நாமும் அவ்வகையில் வள்ளல் பெருமகனார் கூறிய கடைசிச் செய்தியை நினைவில் கொள்வோம்.  ‘ தானே தனது செயல்களைச் சோதனை செய்து விளைவைக் கணித்து  திருத்தம் பெறும் வெற்றியே  அகத்தாய்வு’ என்கிறார் மகரிஷி அவர்கள். அதுபோன்று நம்மையும் திருத்திக் கொண்டு, அதே  வேளையில்  உலக சகோதர – மக்களையும் திருத்துவதற்கு அறிவுத்தொண்டு செய்து வாழ்வோம்.

             இதுமட்டுமின்றி மேலும்  சிந்தித்து  செயல்பட வேண்டியதை அவரவர் நிலைக்கேற்ப அவரவர் சிந்தித்துப் பயன்பெறுவோமாக!

                          வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

                                            வாழ்க மனித அறிவு!  வளர்க மனித அறிவு!!

                                        வாழ்க அறிவுச் செல்வம்!                          வளா்க அறிவுச் செல்வம்!!

     

     

     

    Loading

  • சிந்திக்க அமுத மொழிகள் – 340-இணையதள பதிவேற்றம் – 1014

    வாழ்க வையகம்!                                                                                                  வாழ்க வளமுடன்!

    வள்ளல் பெருமகனாரின் கடைசி அமுதமொழிகள்

    சிந்திக்க அமுத மொழிகள் – 340

          இணையதள பதிவேற்றம் – 1014 

                                                                                                                                                                                                                                                                                                                நாள்:  22-04-2025                                                                                                        உ.ச.ஆண்டு:  22-04-0040

                                  வள்ளலாரின் கடைசிச் செய்தி — உலக சமுதாயத்திற்கு

        வாழ்க வளமுடன்!

           இன்று, ‘சிந்திக்க’ அமுத மொழி’ பயிற்சியில் வள்ளல் பெருமகனார் உலக சமுதாயத்திற்கு விடுத்துள்ள கடைசிச்செய்தியை –  அமுத மொழியை எடுத்துக்கொள்வோம்.  நம் இணையதள சத்சங்கம் வழக்கப்படி கேள்விகளுடன் பயிற்சியியைத்  தொடங்குவோம். வாழ்க வளமுடன்!

    வள்ளலாரின் கடைசி அமுதமொழியில் உள்ள    ஒவ்வொரு வார்த்தையையுமே தனித்தனியாக எடுத்துக்கொண்டு சிந்திப்போம்.

    பயிற்சி:

    1) என்ன கூறிவிட்டுச் சென்றுள்ளாா்  அருட்பிரகாச வள்ளலார். இதில் உள்ள   முக்கியத்துவம் என்ன?

    2)  “இது வரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தோம்”இந்த வாக்கியத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்ன?

    3) “கேட்டு, திருந்தி, எழுச்சி பெற்று  திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்” என்கிறாா்.  அப்படியா?

    a) ‘திருந்தி’ என்பதன் பொருள் என்ன?

    b) ‘எழுச்சி பெற்று’ என்பதன் பொருள் என்ன? இங்கு வள்ளலார் கூறும் ‘எழுச்சி பெற்று’ என்பதனை அவரின் அணுக்கச் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ள ‘இன்றேனும், விரைந்து  எழுச்சி பெற்று’ உய்வீர் என்பதோடு இணைத்து பொருள் காண முடிகின்றதா?

    c) ‘திறத்தில்’ என்பதன் பொருள் என்ன(நம்மிடம் திறன் உள்ளது என்று அடிக்கோட்டிட்டுக் காட்டுகிறாா்)

    d) ‘ஒருவரேனும் தேறிலர்(என்னே அக்கறை மனிதகுலத்தின்மீது!)’

    4) “இப்போது இவ்வுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்துகொள்வோம்”.  இக்கூற்றிலிருந்து நமக்குத்தெரிவிக்கும் கருத்து என்ன? 

    a) ‘புகுந்துகொள்வோம்’ என்றால் …. எப்படி?

    5) “இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்கிருப்போம்.”? என்ன கூறுகிறார் வள்ளலார்?

    6) திருத்திவிடுவோம் அஞ்சவேண்டாம்” என்று பன்மையில் கூறியிருக்கிறார்.

    a) திருத்திவிடுவோம்’ என்றால் என்ன பொருள் ?

    b) ‘அஞ்சவேண்டாம்’ என்றால்…???

    c) பன்மையில் கூறுகிறாரே! யார் யாரையெல்லாம் சேர்த்து பன்மையில் கூறுகிறார்?

    d) ஏன் அஞ்ச வேண்டாம் என்கிறார்?

    7) ‘அகவினத்தார்க்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும்’ அளிப்போம் என்கிறார்.

    a) அகவினத்தார் என்றால் யார் அவர்?

    b) சாகா வரம் தருவோம் என்றால்…? யாருக்கெல்லாம் இது வரை சாகா வரம் கொடுத்துள்ளார்?

    c) ‘ஏனையோர்க்கு’ என்றால் யார் அந்த  ஏனையோர்கள்?

    d) ‘பரிபாக நிலை’ என்றால் என்ன பொருள்?

    e) வள்ளலார் கூறியதுபோல் பரிபாக நிலை சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? ஏற்படுத்தப்பட்டு வருகின்றதா?

    8) ‘அளிப்போம்’ என்கிறார்.

    a) அந்த நிலை அளித்துப் பெறுவதா?

    b) அல்லது தானாகப் பெருவதா?

    c) தானாகப் பெறுவதென்றால் எப்படி?

    d) ‘நிலையாமை – உணர்வதையும்’  ‘பரிபாக நிலையையும்’ தொடர்பு படுத்துகிறாரா வள்ளலார்?

    9) இக்கேள்விகளை வள்ளலாரின் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் கேட்டிருந்தால்  என்ன பதில் கூறியிருப்பார் மகரிஷி அவர்கள்?

     மேலேகுறிப்பிட்டுள்ள எட்டு கேள்விகளுக்குமான நம்முடைய பதில்களை மகரிஷி அவர்களின் பதில்களோடு ஒப்பிட்டுப் பாா்த்தால் நம்முடைய எல்லா பதில்களும் ஒத்துப் போகின்றதா?  அல்லது ஒரு சில பதில்கள் மட்டும்  ஒத்துப்போகின்றது என்றால் அவை எவை எவை?  சிந்திப்போம் அன்பர்களே!

    வள்ளலார் இந்த இறுதி செய்தியினை அருளிய அன்று(30-01-1874) 150 ஆண்டுகளுக்குப் பின்னர்,  தன்  இறுதி செய்தி இவ்வாறெல்லாம் சிந்திக்கச் செய்யும்  என எதிர்பாா்த்திருப்பாரா? அப்படிக் கேட்பதைவிட இவ்வாறெல்லாம் சிந்திக்க வேண்டியே இந்தச் செய்தியினை அருளியுள்ளாரா? தங்களின் பதில் என்ன?  வாழ்க வளமுடன்!

                            நாளையும்(23-04-2025) இப்பயிற்சியினைத் தொடர்வோம்.

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க மனித அறிவு!  வளர்க மனித அறிவு!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                          வளா்க அறிவுச் செல்வம்!!

     

     

     

    Loading

  • அதுவே அதுவானால் அதுவே சொல்லும்

    வாழ்க வையகம்!                                                          வாழ்க வளமுடன்!

                                        அறிவிற்கு விருந்து-FFC- 338

                                     இணையதள பதிவேற்றம்- 1013

     நாள்: 21-04-2025 

    உ.ச.ஆண்டு: 21-04- 40

                                                                                                                                        

    அதுவே அதுவானால் அதுவே சொல்லும்

      வாழ்க வளமுடன்!

         ‘அதுவே அதுவானால் அதுவே சொல்லும்’ என்பது தன்னிலை அறிந்த ஆன்றோர்களின் வாக்கு.    அதுவே சொல்லும் என்றால் யாருக்குச் சொல்லும்? ஒரு சிலருக்கு மட்டுமே சொல்லுமா? இதில் அறிவியல் உள்ளதா?  அறிவியல் என்றால் எல்லாருக்குமே சொல்ல வேண்டுமே?அதைப் பற்றிச் சிந்திப்போம் அன்பர்களே!

    அதுவே என்றால் எது?  இறையே(இறைவனே)  என்பதாகும்.

    அதுவானால் என்றால்…?  இறையே இறையானால் என்று பொருளாகின்றது.

    அப்படியெனில் இறையே இறையானால்  எனும்போது இறை இப்போது இறையாக இல்லையா? இது எவ்வாறு  சரியாக இருக்கமுடியும்?

    இரும்பு உலோகத்தைப் பார்க்கிறோம்; அதனை இரும்பு என்கிறோம். இரும்பைப் பற்றிக் கூறும்போது இரும்பே இரும்பானால் அதனைக் கருவிகள் செய்யப் பயன்படுத்தலாம் என்று சொல்ல முடியமா? இரும்பே இரும்பானால் என்கின்ற பேச்சிற்கே அங்கே இடமில்லை.  இரும்பே இரும்பானல் என்கின்ற நிபந்தனைக்கே இடமில்லையே!  இரும்பாக இருப்பதால்தான் அது இரும்பு எனப்படுகின்றது.

    ஆனால்,  ‘இறையின்மனித தன்மாற்றத்தில் மட்டும்  இறையே இறையானால்’ என்கின்ற நிபந்தனைத் தேவைப்படுகின்றது.  காரணம், இறையே(இறைவனே)மனிதனாகத் தன்மாற்றம் அடைந்திருந்தாலும், அது இறையாக  இல்லை.   இறை நேரிடையாக மனிதனாக வந்திருந்தால் ’இறையே இறையானால்’ என்கின்ற  நிபந்தனைக்கே அவசியமில்லை/அவசியமிருந்திருக்காது. .

    இறை நேரிடையாக மனிதனாக தன்மாற்றம் அடையவில்லை.  விலங்கினமாக தன்மாற்றம் அடைந்தபிறகுதான் மனிதனாக வந்துள்ளது. ஆகவே பிறர் வளம் பறிக்கும் பரிணாமக் கசடான(evolutionary effluent) விலங்கினப் பண்பைக்கொண்டு வந்துள்ளதால் இறையே இறையானால் என்கின்ற நிபந்தனை அவசியமாகின்றது.

    இறை, தன்னுடைய மாற்றத்தைத் தொடங்குவதற்கு முன்னர் எப்படி இருந்தது? இறையாகத்தான் இருந்தது.  ஆனால், இறை மனிதனாக மாற்றம் அடைந்தபோது ’இறையே இறையானால்’ என்கின்ற நிபந்தனை வந்துவிட்டது.

    இறையின் தன்மாற்ற சரித்திரத்தை இறையே மனிதனுக்கு கூறும்போது தான் சரியான விளக்கமாக இருக்கும்.  இறை எப்போது மனிதனுக்கு தன்னுடைய தன்மாற்றச் சரித்திரத்தை சொல்வது சாத்தியமாகும்?  இறை எல்லோருக்கும் தன் தன்மாற்றச் சரித்திரத்தைச் சொல்லத் தயாராகவே உள்ளது.  ஆனால் காது கொடுத்துக் கேட்பதற்கு கோடியில் ஒருவர்தான் உள்ளனர் என்பது ஆன்மீக வரலாற்றை ஆராயும்போது நிதர்சனமாகத் தெரிகின்றது. இறை சொல்ல, அதனைக் காது கொடுத்து கேட்கின்ற பாக்கியத்தைப் பெற்றவர்களைக் காண்பது ’அத்திப்பூ பூத்தாற்போல்’ அரிதாகவும், அதிசயமாகவும் உள்ளது.   ஒரு சிலர்தான் விலங்கினப்பண்பை செயலிழக்கச்செய்து மனிதப்பண்பை வளர்த்துக்கொண்ட  மாண்புடையாளர்கள்.

    “இறைவன் பணித்தான், இறைவனோடு உரையாடினேன்” போன்ற இறையனுபவத்தை அருட்பெருஞ்சோதி இராமலிங்க வள்ளல் பெருமான் பெற்றதை நமக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள், தான் அருளிய ‘அருட்பேராற்றலின் அன்புக் குரல்’ எனும் நூலின் முன்னுரையில் மூன்றாவது பக்கத்தில் எடுத்துரைக்கிறார்.  மேலும் தனக்கு ஏற்படும் இறையனுபவமான “ஓசையே இல்லாத சொற்கள் மூலம்” தத்துவ உண்மைகள் தனக்குக் கிடைத்ததாகவும் கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  அன்பர்கள் அந்தப் பக்கத்தில் உள்ள அருட்செய்தினை முழுவதுமாக படித்து இன்புற வேண்டப்படுகின்றது. வாழ்க வளமுடன்!

    ’இறையே இறையானால் இறையே சொல்லும்’ என்பது  என்னவெனில், மாண்பு நிலையை அடைந்தவர்கள்  ஒரு பொருள் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும்போது, மனதில் கேள்வியாக எழுவதும்  அவனே, பதிலாக வருவதும் அவனே.  சுருங்கச்சொல்வதெனில் அந்த ’பேரின்ப நிலையே  (கேள்வியாகவும். பதிலாக வருகின்ற நிலை) ஆழ்ந்த சீரான தொடர்  சிந்தனையாகும்(consistent and persistent pondering).’

    மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்கும் இந்த நல்வாய்ப்பு கிடைப்பது அரிதாக உள்ளது. தங்கக் கட்டியாக இருந்தால் என்ன பயன்?   ஆபரணமாகும்போதுதான் அது பெருமை பெறுகின்றது. இறையே- இயற்கையே – இறைவனே மனிதனாகியும் அதன் தன்மை வெளிப்படவில்லையே.  அதாவது இறையைப் பயன்படுத்தவில்லையே மனிதனால்.

    ‘எது எதுவாக இருந்தாலும், அது அதுவாகவில்லையோ, அதுதான் மனம் என்கின்றனர்’  இறையை உணர்ந்தவர்கள்.

    இது  என்ன புதிராக உள்ளதே!   இதனை  வேறு எவ்வாறு கூறமுடியும்?

    தத்துவஞானியும், முன்னாள் இந்திய ஜனாதிபதியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன்  “Evolution is still incomplete – பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை” என்கின்றார்.

    அவருக்கு இளையவரானவரும், முதல் மனவளக்கலைஞருமான  வேதாத்திரி மகரிஷி அவர்கள் இயற்கை அருளிய மனவளக்கலையை, தானே பயின்று, வெற்றி கண்டு, வாழ்வாங்கு வாழ்ந்த அனுபவத்தால் அதனை மனிதகுல முழுவதற்குமே இறையின் சார்பாக  வழங்கியுள்ளார். உலகநலத் தொண்டரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருள் கூர்ந்து மனவளக்கலையை  மனிதகுலத்திற்கு வழங்கியதால் நல்ல  காலம் பிறந்துவிட்டது மனிதகுலத்திற்கு.  மனவளக்கலை, தத்துவஞானி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் ‘பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை’ என்கின்ற ஆதங்கத்தை’ பூர்த்தி செய்யும் வகையிலும் மனவளக்கலை அமைந்துள்ளது. இத்தருணத்தில் நல்ல எதிர்காலம் பற்றிய மகரிஷி அவர்களின் கவியினை உற்று நோக்குவோம்.

    அன்று, அதாவது 1955 ல் ”நல்ல  எதிர்காலம் வெகு தூரத்தில் இல்லை” எனக் கணித்துள்ளார்(predicted).  அப்போது அவருக்கு வயது 44.  தனது 50 வயதில் உலகிற்கு தொண்டு செய்ய வேண்டும் என எண்னி சுமாா் 1960 ல் மனவளக்கலை பயிற்சியினை உலக மக்களுக்கு  அளிக்க ஆரம்பித்தார்.  அன்று (1955)எதிர்காலம் என்று கூறியது நடைமுறையில் நிதர்சனமாகி இன்று நல்ல காலம் பிறந்து விட்டது.  இன்னும் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் சொல்ல வேண்டுமெனில் வெகு குறுகிய காலமான ஐந்து வருடத்திலேயே  நல்ல காலம் தொடங்கிவிட்டது என்பதுதான்  உண்மை.

    எவ்வாறு அவரால் துல்லியமாகக் கணிக்க முடிந்தது என்பதைப் பற்றியும் அறிந்து ஆனந்தமடைவோம்.  கற்பனைக்கே இடமில்லாமல் அறிவியல் பூர்வமாக அறிவின் இருப்பிடத்தையும், இயக்கத்தையும், நிர்வாகத்தையும் அறிவிக்க முடிந்ததால் ஆணித்தரமாக கணிக்க முடிந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள்,

     அன்பர்களே வாரீர் அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற” என உலக மக்களை அழைக்கிறார். 

    அவர் எண்ணஓட்டத்தில் கலந்து அவரது எண்ணத்திற்கு வலிமை சேர்த்து நாம் இன்புறுவோம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

    குறிப்பு- இக்கூற்றிலில் உள்ள அறிவியலை பிறிதோரு சமயத்தில் பார்ப்போம். வாழ்க வளமுடன்!

    வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!

    Loading