வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
ஏன் ‘அறிவே’ தெய்வம் எனப்படுகின்றது?
அ.வி.எண்.56 — (1/?)
11-02-2015 – புதன்
வாழ்க வளமுடன்.
சுமார் பதினேழு வருடங்களுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை நினைவுபடுத்திக் கொண்டு ‘ஏன் அறிவே தெய்வம் எனப்படுகின்றது?’ என்கின்ற சிந்தனையைத்தொடங்கலாம். அந்த சம்பவம்தான் இன்றைய சிந்தனைக்கான தலைப்பிற்கு காரணமாக உள்ளதால் அந்த சம்பவம் என்ன என்று அறிந்து கொள்ளலாம்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உடற் பயிற்சி கற்றுக் கொள்வதற்காக தனது தாயாருடன் மன்றத்திற்கு வந்தாள். வரும்போது வாசற்கதவில் ஒட்டப்பட்ட இருந்த ‘அறிவே தெய்வம்’ என்கின்ற ‘Sticker’ அவளுடைய கண்களில் பட்டது. எத்தனையோ அன்பர்கள் அந்த வாசகத்தை பார்த்துவிட்டுத்தான் உள்ளே வருகின்றனர். மற்றவர்களுக்கு எழாத ஒரு வினா இந்த பெண்ணிற்கு மட்டும் மன்றத்திற்கு வந்த முதல் நாளன்றே . எழுந்துவிட்டது? ‘அறிவே தெய்வம்‘ என்கின்ற வாசகம் அந்தப் பெண்ணை ஈா்த்தது. அவளது அறிவை சிந்திக்க வைத்தது.
அந்த பெண்ணிற்கு அப்போது பதினேழே வயதுதான் என்றாலும், அவள் ஏற்கனவே சுவாமி விவேகானந்தர் மீது பக்தியும், மரியாதையும் கொண்டிருந்தாள். சிறுமியாக இருக்கும்போதே யாருடைய தூண்டுதல் இன்றி, தானாகவே சுவாமி விவேகானந்தரின் நூல்களை வாங்கிப் படித்திருக்கிறாள். ஆகவே அவள் “எல்லாமே தெய்வம்” என்கின்ற அளவிலே அத்வைதம் பற்றி அறிந்திருந்தாள். இப்போது அவள் வினவிய வினாவிற்கு வருவோம்.
‘எல்லாமே தெய்வம்’ என்று அத்வைதம் கூறும் போது அறிவும் தெய்வம் என்றுதானே கூறவேண்டும், ஏன் அறிவே தெய்வம் எனப்படுகின்றது” என்பதே அவள் தொலைபேசியில் கேட்ட வினா. தெய்வமே எல்லாமாகவும் இருக்கும்போது, அறிவும் அந்த எல்லாமாக இருப்பதில் ஒன்றுதானே. அப்படியிருக்கும் போது அறி-வும்தெய்வம் என்று கூறாமல் அறி-வே தெய்வம் என அறிவை மட்டும் தனிமைப் (single out) படுத்தி ஏன் கூறப்படுகின்றது என்பது அவளுடைய வினாவின் அர்த்தம். இது நியாமான வினாதானே?
இந்த வினாவிற்கான விடையை புரிந்து கொள்ள வேண்டுமெனில், வேதாத்திரிய சுத்தவெளி விஞ்ஞானம் முன்னரே தெரிந்திருக்க வேண்டும். அப்பெண்ணிற்கு அதெல்லாம் தெரியாது. இருப்பினும் வினா கேட்கப்பட்டுவிட்டது. பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அதுவும் தொலைபேசியிலே விடை சொல்ல வேண்டும்.
எது தெய்வமாக இருக்க முடியும் என்கின்ற காரண முடிவிற்கு (logical conclusion) வருவது எப்படி என்று சொல்லி,
அவள் பள்ளியில் படித்த அறிவியலைக் கொண்டு அணுவின் (chemical atom) அமைப்பை நினைவு படுத்தி,
அந்த அணு எவ்வாறு தோன்றியிருக்கக்கூடும் என்று சொல்லி,
அணுவிற்கு மூலம் வெளி என்று ஒருவாறு சொல்லி,
அந்த வெளியின் தன்மைகளில் அறிவு ஒன்றாகவும்,
அந்த ஒன்றே எல்லாவற்றிலும், அதாவது உயிரற்ற சடப்பொருட்களிலும் மற்றும் உயிருள்ள சீவன்களிலும் பிரதானமாகவும் இருப்பதால் அறிவே தெய்வம் எனப்படுகின்றது என விளக்கம் முப்பது நிமிடங்களில் கொடுக்கப்பட்டது.
இருப்பினும் அந்த பெண்ணிற்கு ‘எல்லாமே தெய்வம்’ என்பது தெரிந்து ஏற்புடையதாக இருந்தாலும், ‘எவ்வாறு எல்லாமே தெய்வம்’ எனப்படுகின்ற வேதாத்திரிய சுத்தவெளி விஞ்ஞானம் (தத்துவம்) அவளுக்குத் தெரியாத நிலையில் எந்த அளவில் அந்த விடை அவளுக்கு ஏற்புடையதாக இருந்ததோ தெரியவில்லை. ஆனால் அப்போது அவளுக்கு விளங்காவிட்டாலும் அது பின்னர் ஒரு நாள் விளங்கிவிடும் என்று வாழ்த்து கூறப்பட்டது. இன்றைய அறிவிற்கு விருந்தில் அந்த வினாவிற்கான பதிலை அறிவதிலும், அப்படியொரு வினா எழுப்பிய அந்த அறிவின் சிறப்பையும் நினைந்து மகிழ்வோம்.
வேதாத்திரிய இறைநிலை விஞ்ஞானம் ‘வெளியே’ (Eternal Space) தெய்வம் எனக்கூறுகின்றது. அந்த வெளி ஒன்றுமில்லாதது அல்ல. அந்த வெளியே இறை என்றும், அது நான்கு வளங்களைக் கொண்டது என்கின்றது வேதாத்திரியம்.
“வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும்
வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம்” என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
இந்த நான்கு வளங்களைக் கொண்ட வெளிதான் தன்னிறுக்கத்தால் நொறுங்கி துகள்களாகி, பின்னர் துகள்கள் ஒன்று சேர்ந்து விண்ணாகி, காற்றாகி, நீராகி, நெருப்பாகி, மண்ணாகியது. பிறகு ஓரறிவிலிருந்து ஆறு அறிவு உயிரினங்களாகியுள்ளது. இவ்வாறிருக்கும்போது எதனைத் தெய்வம் என்று சொல்வது? எல்லாமே தெய்வம். தெய்வமேதான் எல்லாமாகவும் உள்ளது. இப்பிரபஞ்ச மூல ஆற்றலே தெய்வம் எனலாமா? அல்லது பிரபஞ்ச மூல ஆற்றலின் நான்கு வளங்களான வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் ஆகியவை தெய்வம் என அழைப்பதா? அல்லது வெளியின் வளங்களைத் தனித்தனியாக பிரித்து தெய்வமென்பதா?
அதாவது,
வற்றாயிருப்பே தெய்வம் என்பதா?
அல்லது
பேராற்றலே தெய்வம் என்பதா?
அல்லது
அறிவே (பேரறிவே) தெய்வம் என்பதா?
அல்லது
காலமே தெய்வம் என்பதா?
இவற்றில் எது பொருத்துமாக உள்ளது? அறிவே தெய்வம் என்பது பொருத்தமாக இல்லையா? பொருத்தமாக இருப்பதால் தான் அறிவே தெய்வம் எனப்படுகின்றது. மற்ற வளங்களை நினைந்து, இறையை போற்றாமல் இல்லை. எல்லாம் வல்ல தெய்வமது என்கிறோமே! எல்லாம் வல்லது என்றால், அது வற்றாயிருப்பையும் பேராற்றலையும் தான் குறிக்கின்றது. ஆதிநிலையின் வளமாக, வற்றாயிருப்பாக பேராற்றல் மட்டுமே இருந்து, அறிவு இல்லாதிருந்தால்
1) இந்த பிரபஞ்சமும் உருவாகியிருக்க முடியாது.
2) அறிவைக் கொண்டு உணர்கின்ற உயரினங்களும் உருவாகியிருக்க முடியாது,
எப்படி?
உயிர்களுக்குச் சான்று உணர்வு. அந்த உணர்வை உணர்வது அறிவு. அப்படியிருக்கும் போது, உணா்கின்ற அறிவு, உயிர்களுக்கு எங்கிருந்து வந்திருக்க முடியும்? உயிர்களுக்கு மூலமும் அந்த ஆதிநிலைதான். ஆகவே ஆதிநிலையில் அறிவு இருந்ததால்தான் அதுதான் உயிர்களிடம் அறிவாக வந்துள்ளது. எனவே ஆதிநிலையில் அறிவு இல்லாதிருந்தால் உயிர்களே உருவாகியிருக்க முடியாது என்று மேலே கூறிய இரண்டாவது கூற்று சரி.
முதல் கூற்றான ஆதிநிலையில் அறிவு இல்லாதிருந்தால் இந்த உணா்வில்லாத இப்பிரபஞ்சம் உருவாகியிருக்க முடியாது என்பது எவ்வாறு சரியாக உள்ளது என ஐயம் இருக்கும். பிரபஞ்சத்திற்கு அறிவு இல்லையே! இந்த பிரபஞ்சத்திலுள்ள கோடானுகோடி நட்சத்திரங்கள் உயிரற்ற சடப்பொருட்கள் தானே (non-living beings). அவைகளின் மூலப் பொருளுக்கு அறிவு தேவையில்லையே. (ஆனால் அவைகளின் உற்பத்திக்கு அறிவு தேவையாக உள்ளது.) உயிரற்ற சடப்பொருட்களுக்கு உணர்வு இல்லையே! எனவே ஆதிநிலையில் அறிவு இல்லாமல் வற்றாயிருப்பாக பேராற்றல்மட்டும் இருந்திருந்தால்கூட உயிரற்ற சடப்பொருளான இப்பிரபஞ்சம் உருவாகியிருக்க முடியுமல்லவா? எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள முதற்கூற்று எவ்வாறு சரி என ஐயம் வருவது நியாயம்தானே! அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில் 15-02-2015 அன்று அறிவோம். தொடரும்