இன்றைய விருந்து
-
-
அதுவே அதுவானால் அதுவே சொல்லும்
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
அறிவிற்கு விருந்து-FFC- 338
இணையதள பதிவேற்றம்- 1013
நாள்: 21-04-2025
உ.ச.ஆண்டு: 21-04- 40
அதுவே அதுவானால் அதுவே சொல்லும்
‘அதுவே அதுவானால் அதுவே சொல்லும்’ என்பது தன்னிலை அறிந்த ஆன்றோர்களின் வாக்கு. அதுவே சொல்லும் என்றால் யாருக்குச் சொல்லும்? ஒரு சிலருக்கு மட்டுமே சொல்லுமா? இதில் அறிவியல் உள்ளதா? அறிவியல் என்றால் எல்லாருக்குமே சொல்ல வேண்டுமே?அதைப் பற்றிச் சிந்திப்போம் அன்பர்களே!
அதுவே என்றால் எது? இறையே(இறைவனே) என்பதாகும்.
அதுவானால் என்றால்…? இறையே இறையானால் என்று பொருளாகின்றது.
அப்படியெனில் இறையே இறையானால் எனும்போது இறை இப்போது இறையாக இல்லையா? இது எவ்வாறு சரியாக இருக்கமுடியும்?
இரும்பு உலோகத்தைப் பார்க்கிறோம்; அதனை இரும்பு என்கிறோம். இரும்பைப் பற்றிக் கூறும்போது இரும்பே இரும்பானால் அதனைக் கருவிகள் செய்யப் பயன்படுத்தலாம் என்று சொல்ல முடியமா? இரும்பே இரும்பானால் என்கின்ற பேச்சிற்கே அங்கே இடமில்லை. இரும்பே இரும்பானல் என்கின்ற நிபந்தனைக்கே இடமில்லையே! இரும்பாக இருப்பதால்தான் அது இரும்பு எனப்படுகின்றது.
ஆனால், ‘இறையின்மனித தன்மாற்றத்தில் மட்டும் இறையே இறையானால்’ என்கின்ற நிபந்தனைத் தேவைப்படுகின்றது. காரணம், இறையே(இறைவனே)மனிதனாகத் தன்மாற்றம் அடைந்திருந்தாலும், அது இறையாக இல்லை. இறை நேரிடையாக மனிதனாக வந்திருந்தால் ’இறையே இறையானால்’ என்கின்ற நிபந்தனைக்கே அவசியமில்லை/அவசியமிருந்திருக்காது. .
இறை நேரிடையாக மனிதனாக தன்மாற்றம் அடையவில்லை. விலங்கினமாக தன்மாற்றம் அடைந்தபிறகுதான் மனிதனாக வந்துள்ளது. ஆகவே பிறர் வளம் பறிக்கும் பரிணாமக் கசடான(evolutionary effluent) விலங்கினப் பண்பைக்கொண்டு வந்துள்ளதால் இறையே இறையானால் என்கின்ற நிபந்தனை அவசியமாகின்றது.
இறை, தன்னுடைய மாற்றத்தைத் தொடங்குவதற்கு முன்னர் எப்படி இருந்தது? இறையாகத்தான் இருந்தது. ஆனால், இறை மனிதனாக மாற்றம் அடைந்தபோது ’இறையே இறையானால்’ என்கின்ற நிபந்தனை வந்துவிட்டது.
இறையின் தன்மாற்ற சரித்திரத்தை இறையே மனிதனுக்கு கூறும்போது தான் சரியான விளக்கமாக இருக்கும். இறை எப்போது மனிதனுக்கு தன்னுடைய தன்மாற்றச் சரித்திரத்தை சொல்வது சாத்தியமாகும்? இறை எல்லோருக்கும் தன் தன்மாற்றச் சரித்திரத்தைச் சொல்லத் தயாராகவே உள்ளது. ஆனால் காது கொடுத்துக் கேட்பதற்கு கோடியில் ஒருவர்தான் உள்ளனர் என்பது ஆன்மீக வரலாற்றை ஆராயும்போது நிதர்சனமாகத் தெரிகின்றது. இறை சொல்ல, அதனைக் காது கொடுத்து கேட்கின்ற பாக்கியத்தைப் பெற்றவர்களைக் காண்பது ’அத்திப்பூ பூத்தாற்போல்’ அரிதாகவும், அதிசயமாகவும் உள்ளது. ஒரு சிலர்தான் விலங்கினப்பண்பை செயலிழக்கச்செய்து மனிதப்பண்பை வளர்த்துக்கொண்ட மாண்புடையாளர்கள்.
“இறைவன் பணித்தான், இறைவனோடு உரையாடினேன்” போன்ற இறையனுபவத்தை அருட்பெருஞ்சோதி இராமலிங்க வள்ளல் பெருமான் பெற்றதை நமக்கு வேதாத்திரி மகரிஷி அவர்கள், தான் அருளிய ‘அருட்பேராற்றலின் அன்புக் குரல்’ எனும் நூலின் முன்னுரையில் மூன்றாவது பக்கத்தில் எடுத்துரைக்கிறார். மேலும் தனக்கு ஏற்படும் இறையனுபவமான “ஓசையே இல்லாத சொற்கள் மூலம்” தத்துவ உண்மைகள் தனக்குக் கிடைத்ததாகவும் கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். அன்பர்கள் அந்தப் பக்கத்தில் உள்ள அருட்செய்தினை முழுவதுமாக படித்து இன்புற வேண்டப்படுகின்றது. வாழ்க வளமுடன்!
’இறையே இறையானால் இறையே சொல்லும்’ என்பது என்னவெனில், மாண்பு நிலையை அடைந்தவர்கள் ஒரு பொருள் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும்போது, மனதில் கேள்வியாக எழுவதும் அவனே, பதிலாக வருவதும் அவனே. சுருங்கச்சொல்வதெனில் அந்த ’பேரின்ப நிலையே (கேள்வியாகவும். பதிலாக வருகின்ற நிலை) ஆழ்ந்த சீரான தொடர் சிந்தனையாகும்(consistent and persistent pondering).’
மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்கும் இந்த நல்வாய்ப்பு கிடைப்பது அரிதாக உள்ளது. தங்கக் கட்டியாக இருந்தால் என்ன பயன்? ஆபரணமாகும்போதுதான் அது பெருமை பெறுகின்றது. இறையே- இயற்கையே – இறைவனே மனிதனாகியும் அதன் தன்மை வெளிப்படவில்லையே. அதாவது இறையைப் பயன்படுத்தவில்லையே மனிதனால்.
‘எது எதுவாக இருந்தாலும், அது அதுவாகவில்லையோ, அதுதான் மனம் என்கின்றனர்’ இறையை உணர்ந்தவர்கள்.
இது என்ன புதிராக உள்ளதே! இதனை வேறு எவ்வாறு கூறமுடியும்?
தத்துவஞானியும், முன்னாள் இந்திய ஜனாதிபதியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் “Evolution is still incomplete – பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை” என்கின்றார்.
அவருக்கு இளையவரானவரும், முதல் மனவளக்கலைஞருமான வேதாத்திரி மகரிஷி அவர்கள் இயற்கை அருளிய மனவளக்கலையை, தானே பயின்று, வெற்றி கண்டு, வாழ்வாங்கு வாழ்ந்த அனுபவத்தால் அதனை மனிதகுல முழுவதற்குமே இறையின் சார்பாக வழங்கியுள்ளார். உலகநலத் தொண்டரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருள் கூர்ந்து மனவளக்கலையை மனிதகுலத்திற்கு வழங்கியதால் நல்ல காலம் பிறந்துவிட்டது மனிதகுலத்திற்கு. மனவளக்கலை, தத்துவஞானி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் ‘பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை’ என்கின்ற ஆதங்கத்தை’ பூர்த்தி செய்யும் வகையிலும் மனவளக்கலை அமைந்துள்ளது. இத்தருணத்தில் நல்ல எதிர்காலம் பற்றிய மகரிஷி அவர்களின் கவியினை உற்று நோக்குவோம்.
அன்று, அதாவது 1955 ல் ”நல்ல எதிர்காலம் வெகு தூரத்தில் இல்லை” எனக் கணித்துள்ளார்(predicted). அப்போது அவருக்கு வயது 44. தனது 50 வயதில் உலகிற்கு தொண்டு செய்ய வேண்டும் என எண்னி சுமாா் 1960 ல் மனவளக்கலை பயிற்சியினை உலக மக்களுக்கு அளிக்க ஆரம்பித்தார். அன்று (1955)எதிர்காலம் என்று கூறியது நடைமுறையில் நிதர்சனமாகி இன்று நல்ல காலம் பிறந்து விட்டது. இன்னும் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் சொல்ல வேண்டுமெனில் வெகு குறுகிய காலமான ஐந்து வருடத்திலேயே நல்ல காலம் தொடங்கிவிட்டது என்பதுதான் உண்மை.
எவ்வாறு அவரால் துல்லியமாகக் கணிக்க முடிந்தது என்பதைப் பற்றியும் அறிந்து ஆனந்தமடைவோம். கற்பனைக்கே இடமில்லாமல் அறிவியல் பூர்வமாக அறிவின் இருப்பிடத்தையும், இயக்கத்தையும், நிர்வாகத்தையும் அறிவிக்க முடிந்ததால் ஆணித்தரமாக கணிக்க முடிந்த வேதாத்திரி மகரிஷி அவர்கள்,
அன்பர்களே வாரீர் அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற” என உலக மக்களை அழைக்கிறார்.
அவர் எண்ணஓட்டத்தில் கலந்து அவரது எண்ணத்திற்கு வலிமை சேர்த்து நாம் இன்புறுவோம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
குறிப்பு- இக்கூற்றிலில் உள்ள அறிவியலை பிறிதோரு சமயத்தில் பார்ப்போம். வாழ்க வளமுடன்!
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!

-
மேலும் உண்மை விளங்க …………? 2/? -FFC-337
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
மேலும் உண்மை விளங்க …………?–2/?
சிறப்பு அறிவிற்கு விருந்து – 337
FFC – 337
இணையதள பதிவேற்றம் – 1012
நாள்: 15-08-2024
உ.ச.ஆண்டு: 15-08-39
வாழ்க வளமுடன்!
நேற்றைய(14-08-2024) தொடர்ச்சி…..
-
தலைப்பிற்குள் மூழ்குவோம்:
தலைப்பிலுள்ள நேரிடையான வார்த்தைகளுக்கும், மறைமுக வார்த்தைகளுக்கும் விளக்கம் காண்போம். தலைப்பு
‘மேலும் உண்மை விளங்க ……?’ என்றுள்ளது. அன்பர்களே ஆழ்ந்து சிந்திப்போம் இந்த தலைப்பை ஒட்டி எழும் வினாக்கள் என்னென்ன?
- மேலும் என்றால்….?
- முன்னர் ………..?
- முன்னர் விளங்கிய உண்மை எது?
- இப்போது விளங்கும் உண்மை எது?
- உண்மை விளங்கியதால் யாருக்கு என்ன நிகழ்ந்தது?
- தனி ஒருவருக்கு நன்மையா?
- மனித குலத்திற்கும் சேர்ந்தே நன்மையா?
-
சிந்தனை-கருவி:
தனி ஒருவரான நம் சிந்தனையின் கதாநாயகரான நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பெற்ற உண்மை விளக்கம் அவருக்கு மட்டுமே சொந்தமாகவில்லை. அவருக்கு மட்டுமே நன்மையாகவுமில்லை. இயற்கை /இறைநிலை தெரிவிக்கும் உண்மைகளை சமுதாயத்திற்கு தெரிவிக்கும் சிந்தனை-கருவியாக வாழ்நாள் முழுவதும் அவர் செயல்பட்டு வாழ்ந்ததால் (as mouth-piece of Nature/Almighty) தனி ஒருவரான அவருக்கும் சமுதாயத்திற்கும் இணைந்தே அவ்வுண்மை பயனாகியது. உலகை உய்விக்க வெளியாகிய உண்மை என்பதால், இப்பவும், எப்பவும், எப்போதும் திருக்குறள் இவ்வுலகம் உள்ள வரை பயனாகிக் கொண்டேதான் இருப்பதுபோல் திருவள்ளுவரை மானசீகக் குருவாக கொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக இயற்கை/இறை விரும்பி சமுதாயத்திற்குத் தெரிவித்த உண்மைகள் உலகம் உள்ள வரை பயனாகவே இருக்கும் என்பது திண்ணம்.
-
அறிந்ததை சமுதாயத்திற்கு தெரிவிப்பது இயற்கை நீதி
மகரிஷி அவர்கள் இயற்கையின்/இறைநிலையின் சமுதாயத்திற்கும் தெரிவிக்கும் சிந்தனை-கருவியாக செயல்பட்டதால், இயற்கை முதலில் தனக்கு தெரிவிப்பதை, முறைப்படி (in turn) சமுதாயத்திற்கு தெரிவிக்கும், இயற்கை நீதியின் அடிப்படையில்(மகரிஷி அவர்களின் மகா சமாதிக்கு முன்னர் ஒரு மாதத்திற்கு முன்னர் கடைசியாக அருளிய, இறைநிலையின் தன்மாற்ற சரித்திரம் எனும் நூலில் இரண்டாவது பக்கத்தில் – பத்தி 2 ல் காணலாம்) கடமையும், பொறுப்பும், கருணையும் இணைந்த பண்புள்ளவராகத் திகழ்ந்ததால் அவருக்கும், சமுதாயத்திற்கும் சேர்ந்தே நன்மையாகியது.
-
விளக்கி விளங்கியது:
விளங்கிய உண்மை அறிவைப் பற்றியது. உண்மையை, அவரே விளங்கிக்கொண்டாரா? அல்லது இயற்கை/இறை அவருக்கு விளக்கியதா? இயற்தை/இறை விளக்கி அவர் விளங்கிக்கொண்டார். இவ்வாறு கூறுவது அடக்கத்தின்பால் அல்ல. தன்முனைப்பு கரைந்த விழிப்பு நிலையில் கூறுவது ‘விளக்கி விளங்கியது’ என்பது. இயற்கை தனக்கு விளக்க, அதனை மக்களுக்கு விளக்குவதாக மகரிஷி அவர்களே கூறுவார்.
அறநெறிப்பண்பில் ஈகையும் ஒன்றாக இருப்பதற்கேற்பவும்,
‘யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்ற திருமூலரின் அறிவுரைக்கேற்பவும்,
தனி ஒருவருக்கு கிடைக்கின்ற விளக்க-அறிவொளி சமுதாயத்திற்கும் போய்ச்சேர வேண்டும் என்கின்ற இயற்கை நீதியின்படியும்,
தான் பெற்ற விளக்க-அறிவொளியை சமுதாயத்திற்கும் பாய்ச்சிவிடும் உயரிய பண்பாளர் மகரிஷி அவர்கள்.
-
இறைக்கின்ற கிணறுதான் ஊறும்:
‘இறைக்கின்ற கிணறுதான் ஊறும்’ என்பதுபோல் தனக்கு இயற்கையால்/இறையால் அவ்வப்போது தெரிவிக்கப்படுகின்ற உண்மைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் சமுதாயத்திற்கு தெரிவிக்கும் பொறுப்பு இருந்ததால், உலகமக்கள் அனைவரும் உய்வதற்கான உண்மைகளை இயற்கை அன்னை அவருக்குத் தன் இரகசியங்களை மேலும், மேலும் அம்பலமாக்கிவிட்டாள் என்பதே நிதசர்ன உண்மை. அதனால் உலகம் மேலும் மேலும் உய்ந்து கொண்டேதான் வருகின்றது என்பதனை நடைமுறையில் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. உலகம் விரைவில் உய்ந்து முழுவதுமாக ஏற்றம் பெற்றுவிடும் என்பது திண்ணம். தொடர்வோம் நம் சிந்தனையை ஊக்கத்துடனும், ஆழமாகவும். மேலும் ’உண்மை விளங்கியதால் என்ன நிகழ்ந்தது?
-
அறிவின் அறிவியல் தோற்றமாயிற்று:
விஞ்ஞானத்தில் எத்தனையோ துறைகள் (different branches of Science) எற்பட்டு வரும் நிலையிலும், மனிதகுல நன்மையைக் கருதி, எல்லா விஞ்ஞானத் துறைகளுக்கும் முதன்மை விஞ்ஞானமான அறிவிற்கென தனி அறிவியல் ஒன்று (Exclusive Science of Consciousness) தேவை என விஞ்ஞானம் நினைக்காத நிலையிலும், தனி ஒருவரான வேதாத்திரி மகரிஷி அவர்களால், அந்த தேவை அறியப்பட்டு, உருவாக்கப்பட்டு, முழுமை பெற்று சமுதாயத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது அறிவிற்கான தனி அறிவியல்.
-
நல்ல எதிர்காலம் உலகிற்கு:
அறிவின் அறிவியல் தோற்றத்தின் விளைவு நல்ல எதிர்காலம் உலகிற்கு வந்துவிட்டது. வருங்காலம் உணரும் ஞானத்தால் ‘நல்ல எதிர்காலம் உலகிற்கு வந்து விட்டது’ என மகரிஷி அவர்கள் கூறுவதனை, அவர் எண்ண ஓட்டத்துடன் இணைந்துவிட்ட நாமும், நல்ல எதிர்காலம் உலகிற்கு காத்துக் கொண்டிருக்கின்றது என உறுதிபடுத்திய பிறகு, பயனாளியராக இருக்கும் நாம் மனப்பூர்வமாக, இதயப்பூர்வமாக மகிழ்ச்சியோடு அவர் கூறும் உண்மையை ‘ஆம்!’ என ஆமோதிக்கிறோம்.
உலகிற்கு நல்ல காலம் வந்துவிட்டது என எப்போது கூறியுள்ளார்? 1955 ல் அருளிய கவியின் வாயிலாகக் கூறியிருக்கிறார். அதனை நாம் 70 ஆண்டுகள் சென்றுதான் இந்த நன்னாளில் அக்கவியினை நினைவுபடுத்தி மகிழ்கிறோம்.
-
இன்றுள்ள சூழலில் உலகம் எப்படி உய்வடைய முடியும்?
உலகம் உய்வடையும் என்பது திண்ணம் என்கிறார் மகரிஷி அவர்கள். எப்படி அவர் திட்ட வட்டமாகக் கூறகிறார்? அறிவிற்கான தனி அறிவியல் அவரால் உருவாக்கப்பட்டதால் உலகம் உய்வடையும் எனத் திட்ட வட்டமாகக் கூறுகிறார். காரணம் அறிவின் அறிவியலால்,
அறிவின் இருப்பிடம்,
கடவுள் என்பவர் யார்?
கடவுளிலிருந்து மனிதன் வரையிலான அதன் தன்மாற்ற
சரித்திரம்,
எப்படி அறிவேதான் தெய்வம்,
உயிர் என்பது என்ன,
பிறவியின் நோக்கம்,
நான் யார் என்கின்ற கண்டுபிடிப்பை அவரவர்களே
கண்டுபிடிக்கும் நிலை,
இன்ப துன்பம் ஏன் வருகின்றது?
வறுமைக்கான காரணங்கள்,
மனிதனின் சிறப்பு,
உலக சகோதரத்துவம்
சமுதாயச் சிக்களுக்கான காரணங்களும் அதற்கானத் தீர்வுகள்
உலக அமைதியின் அறிவியல்
அறிவின் வறுமைகளான அறியாமை, அலட்சியம்,
உணர்ச்சிவயம் போக்குவதற்கான ஒழுக்கவியல் கல்வி
ஆகியவைப் பற்றிய அறிவு (Knowledge) ஏற்பட்டுவிட்டதால் இனி மனித குலத்திற்கு ஏற்றம் ஆரம்பித்துவிட்டது என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.
-
மகரிஷி அழைப்பில் நாமும் இணைவோம்:
ஏற்ற ஏணியில் முதல் படியில் ஏறிய நாமெல்லாரும் நமது உலக – சகோதரர்களையும் ஏணியில் ஏறி அற்புதமாம் அறிவின் இருப்பிடம் அறிய மகரிஷியுடன் இணைந்து அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற உலக மக்களை அன்போடு அழைக்கின்றோம். 1970 ஆம் ஆண்டு அவர் விடுத்துள்ள அழைப்புக் கவியினை நினைவு கூர்வோம்.
வாழ்க வளமுடன்! தொடரும்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

-
-
மேலும் உண்மை விளங்க …………? FFC-336
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!

மேலும் உண்மை விளங்க …………?
சிறப்பு அறிவிற்கு விருந்து – 336
FFC – 336
இணையதள பதிவேற்றம் – 1011
நாள்: 14-08-2024
உ.ச.ஆண்டு: 14-08-39
மூவரையும் வணங்குவோம்:
கிடைத்தற்கரியவும், இரண்டாம் ஜகத் குருவுமாகிய வேதாத்திரி மகரிஷி அவர்களின் 114வது ஜெயந்தி விழாவும், உலக அமைதி விழாவும் கொண்டாடுவதற்கு நல்வாய்ப்பு கிடைத்தமைக்கு நம் பெற்றோர்களையும், குருவையும், இறையையும் வணங்குகிறோம். வணங்குதலும், நன்றி தெரிவித்தலும் மட்டுமே பிறந்தநாள் கொண்டாதுவதன் நோக்கமன்று.
1. சான்றோர்கள் யார்?
பொதுவாக சமுதாயத்தில் எதற்காக சான்றோர் பெருமக்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகின்றது? தங்கள் பிறந்த நாளை அன்றிருந்த அல்லது வருங்கால சமுதாயம் கொண்டாட வேண்டும் என்று சான்றோர்கள் விரும்பினார்களா/விரும்புகிறார்களா? இயற்கைநெறியையே/இறைநெறியையே (ஒழுக்க நெறியை) சார்ந்து இருந்து விழிப்புணர்வில் தவறாமல் வாழ்வாங்கு வாழ்ந்ததால் அவர்கள் சான்றோர்கள் என, அவர்கள் வாழ்ந்த அதே சமுதாய மக்களால்தான் போற்றப்படுகின்றனா். பிறந்தநாள் கொண்டாடுவதன் நோக்கம் என்ன?
2.பிறந்தநாள் விழாவின் நோக்கம்:
சான்றோர்களின் பிறந்த நாள் கொண்டாடுவது வெறும் சம்பிரதாய சடங்கல்ல. சான்றோர்கள் யாரும் தங்களைப் போற்ற வேண்டும் என அவர்கள் விரும்பவில்லை என்றாலும் நாம் அவர்களைப் போற்றியே ஆகவேண்டும். நம் மூலத்தின் இயல்பூக்க நியதியைப் பயன் படுத்தி அவர்கள் உயர்ந்ததுபோன்றே நாமும் உயர்வதற்கு(ஞா.க. எண்.10–15-08-1984) போற்றத்தான் வேண்டும். ‘தான் உயராது மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது; இரசிக்கவும் முடியாது’ என்பது இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றமாக(corollary) இருப்பதால் நாம் குருவின் மேன்மையையும், உயர்வையும் போற்ற வேண்டும்.
‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கேற்ப சான்றோர்கள் விரும்புவது அவர்கள் வாழ்ந்த இன்பவாழ்வினை பிறரும் வாழ வேண்டும் என்று தான் விரும்பினர்/விரும்புகின்றனர். எனவே சான்றோர் பெருமக்களுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவதன் பொருள் அறிந்து, அவர்களை நினைவு கூர்ந்து அவர்கள் கூறும் நல்லுரைகளை மதித்து போற்றி ஏற்று நல்வாழ்வு வாழ வேண்டும். அவர்களை மதிப்பதும் நன்றி சொல்ல விரும்புவதும் என்பது அவர்களின் நல்லுரைகளை ஏற்று அவர்களைப் போன்று இயற்கைநெறியை/இறைநெறியை(ஒழுக்க நெறியை) சார்ந்து சான்றோர்களாக வாழ்வதேயாகும்.
இயல்பூக்க நியதியின் பெருமையை அறிந்து, நம் மூலமான வெட்டவெளியின் இயல்பூக்க நியதியினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதனை மகரிஷி அவர்களின் கவியின் வாயிலாகவே அறிவோம்.
3. பிறந்தநாள் விழா – உலக அமைதி விழா:
இன்று நாம் அருட்தந்தையின் 114வது பிறந்த நாள் விழா கொண்டாடுகிறோம். அதே வேளையில் உலகநலத் தொண்டரும் உலக அமைதிக்காக இயல் ஏற்படுத்தியவருமான வேதாத்திரி மகரிஷி அவர்களின் நோக்கம் உலக அமைதி என்பதால் அவரின் பிறந்த நாளை உலக அமைதி தினமாகக் கொண்டாடுமாறு அவரே சீடர்களான நம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுவாக வழக்கம்போல் பிறந்தநாள் விழா வெறும் சம்பிரதாயமாக அமைவதுபோல் அமைந்துவிடக்கூடாது என எண்ணி அவரது நோக்கமான உலக அமைதி ஏற்படவேண்டும் என்பதால் அவரே தன் பிறந்த நாளை உலக அமைதி விழாவாக கொண்டாடுமாறு வேண்டுகோளையும் அவரது சீடர்களிடம் அன்புடன் வைத்துள்ளார். எனவே அவர் பிறந்த நாளை உலக அமைதி விழாவாகவும் மிகுந்த சிரத்தையுடன் கொண்டாடி வருகின்றோம் என்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என்றால் மிகையன்று.
4. புனர்ஜென்மம் – இரண்டாவது பிறந்த நாள்:
நாம் பூதவுடலுடன் இப்புவிக்கு வந்த நாளை பிறந்த நாள் என்கிறோம். தாய், தந்தையர் கொடுத்தது இந்த பூதவுடல். ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் பிறந்த நாளாக இருக்கும். ஆனால் இறையறிந்த குருவினிடம் சீடனாகிவிட்டால் அவனுக்கு இரண்டு பிறந்த நாள் வந்துவிடுகின்றது. ஆகவே வேதாத்திரி மகரிஷியின் சீடர்கள் ஒவ்வொருக்கும் மற்றொரு நாள் பிறந்த நாளாக அமைந்துள்ளது. அதுவே புனர்ஜென்ம நாள். என்றைக்கு வேதாத்திரி மகிரிஷியை குருவாக ஏற்றுக்கொண்டோமோ அந்த புனித நாளே நாம் புனர்ஜென்மம் எடுத்த இரண்டாவது பிறந்த நாளாகும்.
5. ஆன்மாவின் பூர்வீக சொத்தே பிறவியாச்சு:
நம்முடைய தாய் தந்தை, அவர்களின் முன்னோர்கள் ஆகியவர்களின் கருமையப் பதிவுகளில் உள்ள அறமோ அல்லது மற்றவையோ சொத்தாகக் கொண்ட அப்பதிவுகளின் விளைவுகளை இன்ப-துன்பமாக அனுபவிக்கவேதான் நம் ஆன்மா இந்த பூதஉடலை எடுத்து இப்புவிக்கு வந்துள்ளது. நாம் கொண்டு வந்த சொத்தில் இருந்த அறத்தின் (புண்ணியத்தின்) பயனாகவேதான் நாம் கிடைத்தற்கரிய குருவைப் பெற்றதும். நாம் பூதவுடல் எடுத்த நாளை பிறந்த நாள் என்கிறோம். ஆனால் நம் குருநாதருக்கு சீடராக அமைந்த நாளை எவ்வாறு அழைப்பது? வாழ்நாளில் முக்கிய நாளாயிற்றே அந்நன்னாள். அது மற்றொரு பிறந்த நாள். அப்படி சொன்னால் போதுமா? இதே உடலில் அந்த நன்னாளில் மறு ஜென்மம் எடுத்துள்ளோம் என்பதுதான் சரியாக இருக்கும். ஏனெனில் அன்றைய தினத்திலிருந்து, நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ அன்று முதல் புதுவாழ்வு(fresh lease of life) மலர ஆரம்பிக்கும் நாளாக அமைந்துள்ளது. அந்நாளை புனர்ஜென்ம நாள் என அழைக்கிறோம்.
6.குருவின் பிறந்த நாளும் சீடனின் புனர்ஜென்ம நாளும்:
பிறந்த நாளை நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடிகின்றது. குருவின் சீடர்களின் மற்றொரு பிறந்த நாளை சிலர் நினைவில் கொண்டிருப்பர். அந்த புனர்ஜென்ம நாளை சீடர்கள் கொண்டாட வேண்டாமா? ஒவ்வொருவருக்கும் வெவ்வெறு நாட்கள் புனர்ஜென்ம நாளாக இருக்கும். ஆகவே மகரிஷியின் சீடர்களாகிய நாம் அனைவருமே நம் குருநாதரின் பிறந்த நாளை கொண்டாடும் நாளன்றே நம் புனர்ஜென்மா நாளாகக் கொண்டாடுவோமே! வருடத்திற்கு ஒரு முறை வருகின்றது புனர்ஜென்ம நாள். அந்தநாளில் கடந்த வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் நமது பண்பேற்றத்தில் எவ்வளவு உயர்ந்திருக்கிறோம் என்பதனை சுயசோதனை(self-assessment for the year and taking a fresh resolution in the coming year) செய்து பார்க்க வேண்டும்.
7. குரு எவ்வாறு உதவுகிறார்? உதவி இருக்கின்றார்?
இத்தருணத்தில் புனர்ஜென்மம் எடுத்த பிறகு குரு எவ்வாறு உதவுகிறார் என்பதனை மகரிஷி அவர்களின் வாய்மொழியின் வாயிலாகவே இச்சிந்தனையின் தொடக்கத்தில் பாடிய அவரது கவியின் வாயிலாகவே அறிந்து கொண்டோம். இதுவரை பிறந்த நாள் கொண்டாடுவதன் நோக்கத்தை நினைவு படுத்திக்கொண்டோம். அந்நோக்கத்திற்கு பொருத்தமாக இச்சத்சங்கத்தில் சிந்திக்க அவர் மொழிந்துள்ள வார்த்தையையே எடுத்துக் கொள்வோம்.
குருவின் ஆசியுடன் தலைப்பிற்குள் செல்வோம்.
மேலும் உண்மை விளங்க …………?
…. தொடரும்
வாழ்க வளமுடன்! 15-08-2024 அன்று கூடுவோம்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

-
குருபூர்ணிமா-அறிவிற்கு விருந்து-FFC – 295
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!
அறிவிற்கு விருந்து
FFC – C29505.07.2020 – ஞாயிறு
குருபூர்ணிமா
வாழ்கவளமுடன்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டியவர்கள் அனைவரையும் குருபூர்ணிமா கொண்டாடும் இந்த தினத்தில் நினைவு கூர்வோம்.
வருடத்தில் ஒரு நாள் குருபூர்ணிமா விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழா வியாசமுனிவரை நினைவுகூர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட விழாவாகும். வியாச முனிவர் நான்கு வேதங்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். பதினெட்டு புராணங்களை வழங்கியுள்ளார். மகாபாரதம் மற்றும் ஸ்ரீமத்பாகவதம் அருளியுள்ளார். வியாசமுனிவரை நினைவு கூறும் இவ்வேளையில் ஆன்மீக சாதகர்கள் அவரவர்களுடைய நேரிடை குருவினையும் நினைவு கூர்தல் நலம் பயக்கும்.

எனவே இத்தருணத்தில் நமது குருவாகிய அருட்தந்தை அவர்களை நினைவு கூர்வோம். அப்படியென்றால் மற்ற நாட்களில் நமது குருவை மறந்து விட்டிருக்கிறோம் என்று பொருளல்ல. என்றைக்கு அவருடைய உயிராற்றல் நம்முடன் கலப்புற்றதோ அன்றைய தினத்திலிருந்து அவருடன் நாம் இணைந்தேதான் உள்ளோம்.எப்படியெனில் அருட்தந்தை அவர்கள் நமக்கு சிந்திக்கக் கற்றுக் கொடுத்து, அதற்கான பொருளையும், நமக்கு அறிமுகப்படுத்தி விட்டார். மூச்சு விடுவதுபோல் சிந்திப்பதும் நமக்கு சகஜமாகிவிட்டதால் சிந்திக்கும் போதெல்லாம் நம்முடைய குருவின் அறிவாற்றலுடன் தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாது, சிந்திப்பதற்கு அவர் அறிமுகப்படுத்திக் கொடுத்த பொருளுடனும்(மெய்ப்பொருளுடனும்) தொடர்பு கொண்டு இணைந்து கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் மூச்சு விடுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பது போல், சகஜ நிஷ்டை போல் எப்போதுமே சிந்தனையோடு இருப்பதால் எப்போதுமே குருவின் நினைவோடும் அதே நேரத்தில் அவர் அறிமுகப்படுத்திக் கொடுத்த சிந்தனைக்குரிய பொருளுடனே(மெய்ப்பொருள்) இணைந்தேதான் வாழ்கிறோம்.
குருவோடு தொடர்பு கொள்வதோடு மட்டுமல்லாது அவரையும்(எப்பொருளை), அவரது செயலையும்(எச்செயலை), அவரது குணத்தையும்(எக்குணத்தை) அவரது உயிரையும்(எவ்வுயிரை) எப்போதும் (அடிக்கடி) நினைந்து கொண்டேதான் இருக்கிறோம். விளைவு இயல்பூக்க நியதிப்படி நம்முடைய அறிவினிலும் உடலினும் மாற்றங்கள் ஏற்பட்டு நம்முடைய மனிதப் பண்பேற்றம் நடை பெற்றுக் கொண்டு வருவதை நாம் உணர்ந்து கொண்டு வருவதில் ஆனந்தம் அடைகிறோம்.பிறவிப்பயனாகிய லட்சியம் நிறை வேற அந்த லட்சிய நாளுக்கு ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
அவரது செயலாலும் குணத்தாலும் அடைந்த உயர் புகழையும் நாம் மேலும் மேலும் நினைக்கிறோம். அறிந்து மகிழ்கிறோம். அவருடைய சூக்கும உடலுக்கு உளம் கனிந்த நன்றியினையும் அவரது அறிவாற்றலை சிரம் தாழ்த்தி வணங்கி போற்றுகிறோம். பாராட்டுகிறோம்.அருட்தந்தை அவர்கள் அருளுவதாவது:
வினைப்பயனைப் போக்காமல் வீட்டையடைய விரும்புவதோ பொருந்திடாது
தட்டுங்கள் திறக்குமென்றார் தனக்குள்ளேயே பேராற்றல் புதையல் கண்டோர்
தக்கவழி அருட்குருவின் தாள் பணிந்து தவம் பயின்று தனை உணர்தல்”என்றும்
எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்”என்றும் அருள்கூர்ந்து தெரிவிக்கிறார் நமக்கு.
அருள் துறையில் நுழைவதற்கே ஆர்வமில்லாமலும் வாய்ப்பில்லாமலும் இருக்கும் இச்சமுதாயத்தில், நாம் விரும்பி வாய்ப்புக் கிடைத்து, அருட்தந்தையின் சீடர்களாக வந்துள்ள நமக்கு, பயிற்சியின் வெற்றி தள்ளிப்போகும் போது நம்பிக்கை இழந்து பயிற்சியில் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நம்பிக்கை ஊட்டும் வகையில் அருட்தந்தை அவர்கள் மேலும் அருளுவதாவது
“பலஆயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப் பதிவுகளை ஒரு பிறவி காலத்திலே மாற்றலாம்”என்கிறார்.
இந்த தெய்வீக வரிகள் வாயிலாக நமக்கு உற்சாகத்தையும் உறுதியையும் அளிக்கின்றார். அதற்கு வழி கருமையத்தூய்மையாகும் என்கிறார். அதற்கு தவமும் அறமும் தேவை என்கிறார். மேலும் இறையுணர் பாதையிலே என்றும் விழிப்புடனே வாழ்வதுதான் அவ்வழி என்கிறார்.
மேலும் “உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது”என்கின்ற அவரது கருணை மொழி ‘பயணம் முடியாமல் தள்ளிப்போய்க் கொண்டிருக்கின்றதே, எப்போது வரும் அந்தநாள்’ என்கின்ற தீரா ஆன்மீக தாகத்திற்கு தெய்வீக நீரை அளிப்பது போல் உள்ளது.மேலும் நமக்கு நம்பிக்கை அளிக்கின்றது.
மேலும் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. தரம் உயர்த்துவது என்பது:– விலங்கினத்திலிருந்து சடுதிமாற்றமாக வந்த ஆதிமனிதனின் கருத்தொடர்தான் இன்றுள்ள நாமும்.
எனவே
நம்மிடம் உள்ள விலங்கினப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்து,
பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் ஆகிய நான்கிலும் புகுந்து அழுந்தி மனதை புண்ணாக்கிக் கொள்ளாமல் .
எப்போதும் அயராவிழிப்பிலே(Awareness is God) இருந்து கொண்டு,
மனிதப் பண்பான அன்பிற்கும், கருணைக்கும் பாத்திரமாக திகழ்ந்து அறிவுத் தொண்டினை செய்து வருதலே, கோடான கோடி மக்கள் வாழ்கின்ற இச்சமுதாயத்தில் நமக்கு மட்டும் குரு-சீடர் உறவு கிடைத்திருப்பதை நாள்தே்ாறும் நினைவு கொண்டு சுயதிருத்தம் பெற்று வருவதே நாம் நம் குருவிற்கும், அவர் வழியாக இறைக்கும் செலுத்தும் நன்றியாகும்.
“தந்தை சொல் மிக்க மந்திரமில்லை”என்று அருளிய தெய்வத்தாய் அவ்வையை மதித்து தந்தைகளுக்கெல்லாம் தந்தையாக விளங்கும் நம்முடைய அறிவுக் கண்களையெல்லாம், திறந்து அறிவொளி வீசச் செய்துள்ள அருட்தந்தை அவர்களின் சொற்களையெல்லாம் மந்திரங்களாகக் கொண்டு எப்போதும் நினைந்து மதித்து நடந்து இப்பிறவியிலேயே பிறவிப்பயனை எய்துவோம். நம்முடன் வாழும் சக மனிதர்களையும் உய்விக்க அறிவுத் தொண்டாற்றி மகிழ்ந்து குருவின் சூக்கும சரீரத்திற்கு நன்றியினை செலுத்திப் பூரிப்படைவோம். அவரது கனவான ஓர் உலக ஆட்சியும், உலக அமைதியும் விரைவில் நிஜமாக, உறுதியான எண்ண அலைகளை அழுத்தமாக பரப்புவோம். இதுவல்லவோ பிறவிப்பயன். மனிதப்பிறவியின் பயனில் இரண்டு அங்கங்கள் உள்ளன.
ஒன்று, மனிதப் பிறவி எடுத்த நோக்கத்தையும் நிறை வேற்றிக் கொள்ள வேண்டும்.
மற்றொன்று மனிதப் பிறவியின் நோக்கம் நிறைவேறிய பிறகு,
நோக்கம் நிறைவேறிய பிறவி சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் அறிவுத்தொண்டாற்றுவது.
இங்குதான் பிறவியின் நோக்கமும் நிறைவேறுகின்றது.
நோக்கம் அறிந்த பிறவியும் சமுதாயத்திற்கும் பயனாகின்றது.
வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!




















Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.