வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
பிறவிப் பயனை நல்கும்! 1/?
அறிவிற்கு விருந்து—217
14-08-2016—ஞாயிறு
வாழ்க வளமுடன்.
அமைதி வேள்வி
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம்சாந்தி!!!
இன்று வேதாத்திரி மகரிஷி அவர்களின் 106 வது ஜெயந்தி தினம். குருபூர்ணிமா தினத்திலிருந்து (19-07-2016) ஒன்பது அறிவிற்கு விருந்துகளில் ‘அருளாளர்கள் உலகம்’ பற்றி சிந்தித்து வந்தோம். அவ்வையார், மற்றும் திருவள்ளுவர் போன்ற அறிஞர்கள் பெரியோரை/சான்றோரை துணைகொள்ளச் சொல்கின்றனர். எதற்காக துணைக் கொள்ளச் சொல்கின்றனர் என்பதனையும் அறிந்து கொண்டோம்.
சான்றோர்கள் என்பவர் யார்?
ஒழுக்க நெறியினைக் கடைபிடித்து சான்றாக வாழ்ந்தவர்கள்/வாழ்கின்றவர்கள் சான்றோர்கள்.
எதற்காக அவர்களைத் துணை கொள்ளச் சொல்கின்றனர் ஆன்றோர் பெருமக்கள்?
சான்றோர்கள், நல்வாழ்வு வாழ்வதற்கு நமக்கு நல்வழிகாட்டுவதற்காக, அவர்களை துணை
கொள்ளச் சொல்கின்றனர்.
‘அருளாளர்கள் உலகம்’ என்கின்ற தலைப்பில் சிந்தனை முடிவுபெற்றதைத் தொடர்ந்து இன்று நேரிடை அருளாளர்-குருவான வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினமாக இருப்பதால் அவரை வணங்கி நினைவு கூர்வோம்.
அவர் சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி எனும் கிராமத்தில் 1911 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 14-ம் நாள் அவதரித்தார். இன்று நாம் அவரது பிறந்த நாளைக் கொண்டாடினாலும், என்று நாம் மனவளக்கலையை ஏற்றுக்கொண்டோமோ அன்றிலிருந்தே அவருடன் கலந்து விட்டோம். அவரை நினையாத நாளில்லை, நொடி இல்லை என்றே சொல்லலாம். ‘பிறவிப்பயனை நல்கும்’ என்று மகரிஷி அவர்கள் அருளியுள்ள உறுதி, இறை-உணர் சாதனைக்கு காப்பாகவும், துணையாகவும் அமைகின்றது. மகரிஷி அவர்கள் ‘பிறவிப்பயனை நல்கும்’ என்கின்ற உறுதியினை எந்த இடத்தில்/எப்பாடலில் அளித்திருக்கிறார்? 15-08-1984 அன்று, குருவின் சேர்க்கை என்கின்ற தலைப்பில் அருளியுள்ள பாடலில் இந்த உறுதியினை அளித்துள்ளார்.
மாதா பிதா குரு தெய்வம்:
மாதா பிதா குரு தெய்வம் என்பது ஆன்றோர் மொழி. இது எதனைத் தெரிவிக்கின்றது? மாதா, பிதா, குரு ஆகிய மூவரும் தெய்வமாக மதிக்கப்பட வேண்டும்.
குழந்தை தாயை அதுவாகவே அறிந்து கொள்கின்றது.
தாய், தந்தையைக் காண்பித்து, தந்தையை அறிந்து கொள்கின்றது.
தாயையும், தந்தையையும் குழந்தை அறிந்துவிட்டது.
அடுத்ததாக அறிய வேண்டியது யாரை? குருவை அறிய வேண்டும். அதற்கு தந்தை குருவைக் காட்டிட குழந்தை குருவை அறியவேண்டும்.
பண்டைக்காலத்தில், மக்கள் தொகை குறைவாக இருந்தபோது, குருகுலக்கல்வி முறையில் இந்நிகழ்வு நடந்து வந்துள்ளது. குருகுலத்தில் அரசன் மகனும், சாதாரண பிரஜையின் மகனும் சமமாகத்தான் கருதப்படுவர். மக்கள் தொகை பெருகிவிட்ட இந்த விஞ்ஞான யுகத்தில், இம்முறை தானாகவே மாறிவிட்டது. குருகுலத்தில் மாணவன் உடல், பொருள், ஆவி இம்மூன்றையும் அற்பணித்து கல்வி பயின்றான். குருவானவர் தெய்வநிலையை உணர்ந்தவராக இருப்பார். குருகுலக் கல்வியில் மாணவனுக்கு எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுடன், அறியாமையை நீக்கி பண்பேற்றக்கல்வியையும் சேர்த்து கல்வி கற்பிப்பார் குரு.
மாதா, பிதா, குரு தெய்வம் என்கின்ற ஆன்றோர் மொழிப்படி குருவை தந்தை காண்பித்து வைக்கும் நிகழ்வு நடைமுறையில் இல்லாத நிலையில், கல்விக் கூடங்களில் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தாலும், பண்பேற்றத்தையும் சேர்த்துக் கற்க சிறந்த வாய்ப்பினை இயற்கை/இறை வேதாத்திரியத்தின் வாயிலாக இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கியுள்ளது. அதுதான் கலைகளிலேயே அரிய கலையாகிய மனவளக்கலை எனும் ஒழுக்கவியல் கல்வியாகும். அந்த அரிய வாய்ப்பினைப் பெற்ற நாமெல்லோரும் பாக்கியசாலிகள். இறை-உணர்வு-கல்வியினை கற்கும் பாக்கியசாலிகள் என்பதோடு மட்டுமல்லாது, இக்கல்வியில் தேர்ச்சி பெற்று மற்றவர்களுக்கும் கற்பிக்க நம்மை எல்லாம் இறைத்தூதுவர் என்று சொல்கின்ற அளவிற்கு இயற்கையியல்/இறையியல் கல்வியினையும் ஐயமற விளங்கிக் கொள்ளும் வகையில் வழங்கி வருகின்றது மனவளக்கலை. இது சாதாரண நிகழ்ச்சி அல்ல. இயற்கையின்/இறையின்/பேரறிவின் தன்மாற்ற பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இறையின் இயல்பூக்கத்தால் இது நிறைவேறிக் கொண்டிருக்கின்றது.
ஒழுக்கவியல் கல்வி கட்டயாப்பாடமாக்க வேண்டும்:
சுவாமி விவேகானந்தர் மற்றும் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறிய படி, பள்ளிக்கல்வியில், மற்ற பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்துவருவதுபோல், முழுமையான ஒழுக்கவியல் கல்வியினைஏற்படுத்தி அதனைக் கட்டாயப் பாடமாக இணைக்கப்படாத நிலையில், தற்போதுள்ள சமுதாயத்திற்கு ஒழுக்கவியல் கல்வியினைக் கற்பிக்க, பண்டைக்கால முறைப்படி அறிவை அறிந்த குரு தேவைப்படுகிறார். இந்த தேவையினை இருபதாம் நூற்றாண்டில் இயற்கை/இறை கருணையோடு,பிரம்ம ரிஷி வரிசையில் நவயுகத்தில் அவதரித்த வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக மனிதகுலத்திற்குத் தந்துள்ளது. மனவளக்கலை எனும் பண்பேற்றக்கல்வியில் கருத்தியல், அதனோடு கருத்தியலில் அறிந்ததை சரிபார்க்கும் செய்முறைக் கல்வியியும் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது மனவளக்கலை என்பது ஆன்மா உய்வு பெறத்கக்க ஆன்மீகப்பயிற்சியாகும். இது போதனையும், சாதனையும் இணைந்த கல்வியாகும்.
இத்தகைய கல்வியில் தேர்ச்சி பெற கருத்தியல் பாடமும், செய்முறைப்பாடமும் இருந்தாலும், விலங்கினத்திலிருந்து வந்துள்ள மனிதகுலம், விலங்கினப்பண்பிலிருந்து மனிதப்பண்பிற்கு முழுவதுமாக ஏற்றம் பெறுவதற்கான கல்வி பல்லாயிரம் பிறவிகளாக முறைப்படி கற்காததால், அந்தப் பழக்கப்பதிவிலிருந்து புதிய விளக்கப்பதிவிற்கு தன்னை மாற்றிக் கொள்ள, பயிற்சிகளோடு இயற்கையின்/இறையின் இயல்பூக்க நியதியினை பயன்படுத்திக் கொள்வது அவசியம் எனக் கண்டுபிடித்துள்ளார் மகரிஷி அவர்கள். இதனை மனதில் வைத்து 15-08-1984 அன்று, குருவின் சேர்க்கை பற்றி இந்த மனிதகுலத்திற்கு பாடலின் வாயிலாக அறிவிக்கிறார். அப்பாடலை அருளி சரியாக முப்பத்திரண்டு ஆண்டுகள் முடிந்து முப்பத்திரண்டாவது ஆண்டு ஆரம்பிக்கும் இன்நன்நாளில் நினைவு கூர்கிறோம்.
பண்பேற்றம் பெறுவதற்கு குருவின் சேர்க்கை:
இப்பாடலில் முதல் ஐந்து வரிகளுக்கான விளக்கத்தை ‘அருளாளர்கள் உலகம்’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து அறிந்து கொண்டோம். இன்றைய தலைப்பு ‘பிறவிப்பயனை நல்கும்’ என்று உள்ளதால் இப்பாடலின் கடைசி மூன்று வரிகளான
“எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்.” என்பதற்கு விளக்கம் காண்போம்,
இம்மூன்று வரிகளில் ஒர் உண்மை சொல்லப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. அதுதான் ‘பிறவிப்பயனை நல்கும்’ என்பது. இது மனிதவாழ்வில் நடைபெறவேண்டிய நிகழ்வு(விளைவு) ஆகும். ஆனால் எந்த ஒரு விளைவும் செயலின்றி நடக்காது என்பது இயற்கையின்/இறையின் நீதியாக இருப்பதால் அதற்கான செயலையும் இப்பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன. அதே நேரத்தில் அச்செயலை ஆன்மதாகத்துடன் நாம் இப்போது இப்பாடலின் கடைசி மூன்று வரிகளுக்கான பொருளை ஆழ்ந்து சென்று சிந்திக்க வேணடும். என்னென்ன சிந்திக்க வேண்டும் என பட்டியலிட்டுக்கொள்வோம்(list out).
ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பாடலின் வரிகள்:
1) பிறவிப்பயன் என்பது என்ன?
2) குருவை மதித்து ஒழுகுதல்
3) குரு உயர்வு
4) தப்பாது மதிப்பவரின் தரத்தை உயர்த்துதல்.
பிறவிப்பயன் என்பது என்ன?
பிறவிப்பயன் என்பது செயலைச் செய்து முடிவாக விளைவைப் பெறவேண்டும். (எனவே மனிதனாகப் பிறந்துவிட்டதாலேயே பிறவிப்பயனை அடைய இயலாது என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.). எனவே இது சிந்திக்க வேண்டிய பட்டியலில் நான்காவது இடத்தைப் பெற்றிருக்க வேண்டும். இருப்பினும், இதனை சிந்திக்க வேண்டி பட்டியலில் முதலில் எடுத்துக் கொண்டோம். காரணம் மனித மனம் எப்போதும் ஆதாயம் தேடும் இயல்புடையதாதலால்(Human mind is so calculative) மனிதப்பிறவியினால் என்ன பயன் என்று அறிந்து கொள்ள மனம் விழையும். பிறவிப்பயன் என்பது மனிதப்பிறவியின் நோக்கத்தை வாழ்நாளில்நிறைவேற்றிக் கொள்ளுதலே ஆகும்.
மனிதப் பிறவிக்கான பயன் என்ன? இவ்வாறு கேட்பதை விடுத்து, ‘இயற்கை/இறை மனிதப்பிறவிக்கென்று என்ன பயனை வைத்துள்ளது?’ என்று கேட்பது பொருத்தமாக இருக்கும். எப்படி? முதல் கேள்விக்கு கண்டுபிடிக்கும் விடை மனிதப்பிறவிக்கான பயனை நாம் முடிவுசெய்ததாக அமையும். அது தவறாக இருக்கலாம். அல்லது சரியாகவும் இருக்கலாம் அன்றோ?!காரணம் மனிதப் பிறவிக்கான பயன் என்ன என்கின்ற கேள்விக்கு விடை உடனே சொல்லி விடமுடியாது. மனிதன் சுவாசிக்க என்ன தேவை என்கின்ற கேள்விக்கு, விடை ‘ஆக்ஸிஜன் தேவை’ என்று சட்டென்று விடை சொல்வது போல் மனிதப்பிறவிக்கென்று என்ன பயன் உள்ளது என்கின்ற கேள்விக்கு சட்டென விடை சொல்லி விட முடியாது. சிந்தித்துதான் விடையைச் சொல்ல முடிகின்ற நிலையில்தான் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
எனவே அப்படிப்பட்ட நிலையில், கூறும் அந்த விடை
பூரணமாக(முழுமையாக) சிந்திக்காமையாலோ
அல்லது ஓரளவிற்குமேல் சிந்திக்க முடியாமல் போவதாலோ(stagnated pondering)அல்லது உறுதிப்படுத்தப்படாத சிந்தனையாலோ,
அறியாமையாலோ,
அல்லது அறிந்து அலட்சியப்படுத்துவதாலோ,
அல்லது அவரவர்கள் சூழ்நிலைக்கு ஏற்பவும், வசதிக்கு ஏற்பவும்,
தன்னையே ஏமாற்றிக் கொள்வதாக அல்லது கொண்டிருக்கின்ற சரியில்லாத விடையாக இருக்குமன்றோ! அப்படியிருக்கும்போது விடை சரியாக இல்லாமலும் இருக்கலாம், அல்லது சரியாகவும் இருக்கலாம். எனவே ‘இயற்கை/இறை மனிதப்பிறவிக்கென்று என்ன பயனை வைத்துள்ளது?’ என்கின்ற கோணத்தில் ஆராயும்போது விடை சரியாக இருக்கும். அப்போதும், இரண்டு நிலைகளிலும் ஆறாம் அறிவுதான் விடையை முடிவு செய்யவிருக்கின்றது. எனினும் இரண்டாம் நிலையில் ஆறாம் அறிவு தன்முனைப்பை விலக்கிவிட்டு இயற்கையோடு/இறையோடு இணைந்து விடைதேடும். முதல் நிலையில் ஆறாம் அறிவு உலகியல்அனுபவத்தைக் கொண்டு தன்முனைப்போடுதான் விடையைக் கூறும்.
மனிதப்பிறவி என்பது இயற்கையின் அரிய நிகழ்வாகும். ஆகவே, ‘இயற்கை/இறை மனிதப்பிறவிக்கென்று என்ன பயனை வைத்துள்ளது?’ என்கின்ற கேள்விக்கு இயற்கை/இறை வைத்துள்ளதை விடையாக ஆறாம் அறிவு அறிகின்றது. இதில் தவறு ஏற்பட வழியே கிடையாது. மேலும் இந்த விடை மனிதகுலத்திற்கே பொதுவானது. ஒருவர் கண்டுபிடித்ததை மற்றவர் அவ்வழியாகச் சிந்தித்து உறுதிபடுத்த வேண்டியதுதான். மனிதப்பிறவியின் பயன் என்ன என்று ஒவ்வொருவரும் அவரவர்களாகவே தெரிந்து கொள்ள முன்வரவேண்டும். பயனை உணர்ந்தால் பயனை அனுபவிக்கலாமன்றோ! மனிதப் பிறவிக்கென்று என்ன பயன் உள்ளது என்று எவ்வாறு கண்டுபிடிப்பது? மனிதப்பிறவிக்கான பயனை சிறுவர்களைக் கண்டுபிடிக்கச் சொல்லவில்லை. ஆனால் மனிதப்பிறவிக்கான பயனை அறியும் வகையில் குழந்தைகளை வளர்க்கலாமன்றோ! சிந்திக்கும் திறன் வளர்ந்து வருகின்ற நிலையிலுள்ள இளைஞர்கள் மனிதப்பிறவியின் பயனைக் கண்டுபிடிக்க வேண்டும்.
சிந்திக்கும்போது, என்னென்ன உண்மைகளை/எதார்த்தத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்?
இதுவரை வாழ்ந்துள்ள நம் முன்னோர்கள் என்ன பயனை அடைந்தார்கள் மனிதப்பிறவியினால் என்பதனை கவனத்தில் கொள்ளலாம்.
அது சரியாக இருந்தால் மீண்டும் நாம் அதனை சரிபார்த்துவிட்டு அந்த பயனை நிறைவெற்றிக் கொள்ள ஆயத்தமாகலாம்.
இல்லை வெற்றிவாழ்க்கை வாழ்ந்த சான்றோர்கள் பிறவிப்பயன் பற்றி என்ன கூறுகின்றனர் என்பதனை கவனத்தில் கொண்டு வேதாத்திரி மகரிஷி அவர்களின் பண்பேற்றத்திற்கான மூன்று தாரக மந்திரங்களான – தகவல், உறுதிபடுத்துதல், மாற்றமடைதல்–Information, Confirmation, Transformation ஐ பிரயோகப்படுத்தலாம்.
இதுவரை வெற்றி வாழ்க்கை வாழ்ந்துள்ள சான்றோர்களின் அறிவுரையை கவனத்தில் கொள்ளலாம் என்கின்ற வரிசையில் அவ்வைத்தாய் மனிதப்பிறவியின் பயன் என்று என்ன கூறுகிறாள் என்பதனை ஆய்வு செய்யலாம். அவ்வைத்தாய் என்ன கூறுகிறாள் மனிதப்பிறவியின் பயனாக என்பதனை நினைவு கூர்வோம்.
அரியது எது?
அரிதரிது மானிடர் ஆதல் அரிது!
மானிட ராயினும் கூன், குருடு, செவிடு,
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது!
பேடு நீங்கிப் பிறந்த காலையும்,
ஞானமும், கல்வியும், நயத்தல் அரிது!
ஞானமும், கல்வியும் நயத்த காலையும்,
தானமும், தவமும் தான்செய்தல் அரிது!
தானமும், தவமும் தான்செய்வர் ஆயின்
வானவர் நாடு வழிதிறந்திடுமே!
. . . அவ்வையார்.
பாடல் வரிகள் பொருளை எளிமையாகத் தெரிவிப்பதாக இருந்தாலும், வேதாத்திரிய வழியில் சற்று சிந்திப்போம். உயிர் மனிதனாகப் பிறத்தல் அரிது என்கிறார்? ஏன்? நம் உயிரோ, அல்லது பெற்றோர்களின் உயிரோ, அல்லது அவர்களின் பெற்றோர்களின் உயிரோ அவர்கள் எடுத்துள்ள இந்தபிறவியில் நேரிடையாக முதன் முறையாக மனிதஉடல் எடுக்கவில்லை. உயிர் தோன்றி பலலட்சம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான், ஒரறிவிலிருந்து ஐந்தறிவு உயிரினங்களாகி, பின்னர் ஆதிமனிதனாகி, பல்லாயிரம் ஆண்டுகளாகி, அவன் வம்சாவளியாகத்தான் நாம் அனைவரும் மனிதப்பிறவி எடுத்துள்ளோம். எனவே உயிருக்கு மனிதப்பிறவி என்பதனை அரிதாகக் கருதுகிறாள் அவ்வைத்தாய். உண்மைதானே! அப்படியே மனிதனாகப்பிறந்தாலும் ஊனங்கள்-குறைபாடுகள் இல்லாமல் பிறத்தல் அரிது என்கிறாள். ஊனங்கள், மற்றும் மூன்று இன்றியமையாத தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, உறைவதற்கு உறைவிடம் ஆகியவை பூர்த்தியானாலும் ஞானக்கல்வியினை விரும்புவதில்லை மனிதன். அப்படியே ஞானக்கல்வியினை அறிந்தாலும், அதாவது வாழ்வின் நோக்கம் அறிந்தாலும் – பிறவியின் பயனை அறிந்தாலும், அதனை அடைவதற்கான வழிமுறைகள் தெரிந்தாலும் அதனை மேற்கொள்வதில்லை என்கிறாள் அவ்வைத்தாய். பிறவிப்பயனை அடைவதற்கான வழிமுறைகளான தவமும்(இறைவழிபாடு), தானமும்(அறம்), செய்வாராயின் அவர்களுக்கு வீடுபேறு கிட்டும் என்கிறாள் அவ்வைத்தாய்.இன்றைய சிந்தனையை இத்துடன் நிறைவு செய்துகொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(17-08-2016-புதன்) நம் குருதேவர் பிறவிப்பயன் என்ன என்று கூறுகிறார் என்பதனை அறிய இருக்கிறோம். வாழ்க வளமுடன்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்.