இன்றைய விருந்து

  • நான் யார் என அறிவதால் பயன்களும், அறியாததால் துன்பங்களும் 2 / 2

    வாழ்க வையகம்!                                                                                     வாழ்க வளமுடன்!!

    நான் யார் என அறிவதால் பயன்களும், அறியாததால் துன்பங்களும் 2 / 2

    அ.வி. 333

    03-04-2022-ஞாயிறு

           வேதாத்திரி மகரிஷி அவர்கள் அமெரிக்காவில்  பயிற்சியில் பங்கு கொண்ட மாணவர்களுக்கு மனதைப்   பற்றிய பாடம் நடத்துகிறார்.

    ஐந்தறிவு சீவன்கள் வரை உருவாகிய புலன் உணர்க்கருவிகள் புற நிகழ்ச்சிகளாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தை  மட்டுமே உணர்வதற்காக உருவாகின. ஆனால் ஆறாம் அறிவிற்கு என்று தனியாக புலன் உணர்க்கருவி ஏதும்  உருவாகாவிட்டாலும், புலன்களின் உதவியின்றி, ஆறாம் அறிவு உணர வேண்டியது ஒன்று இருக்கின்றது.

    பேரறிவு ஒரறிவிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து, ஆறு அறிவு வரை தன்மாற்றம் அடைந்துள்ளதால், ஒரறிவிலிருந்து ஐயறிவு வரை உணர்வதற்கென்று தனித்தனியாக, தொடுஉணர்வு, சுவை உணர்வு, ஒலி உணர்வு, ஒளி உணர்வு, நுகர் உணர்வு என்று ஐவகை உணர்வுகள் இருந்தது போல் ஆறாம் அறிவிற்கு உணர்வதற்கென்று ஓர் உணா்வு இருக்கின்றது. அதனை உணர்ந்தே ஆக வேண்டும் ஆறாம் அறிவு. அந்த பிரத்யேக உணர்வைப் பெற்றால்தான் மனிதன், வள்ளுவர் கூறும் பிறப்பாகிய பெருங்கடலில் நீந்தி கரை சேர முடியும். மனக் கவலையையும் மாற்ற முடியும்.

    “பிறவிப் பெருங்கடல் நீந்துவா் நீந்தார்
    இறைவன் அடி சேராதார்”.

    “தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது”.

    இந்த இரண்டு குறளிலும் “இறைவன் அடி சோ்தல்” என்றும், “தாள்சோ்ந்தார்க்கு அல்லால்” என்றிருக்கின்றது. அதன் பொருள், அரூபமாகிய இறையினுடைய “பாதங்களைச் (அடி,தாள்) சோ்தல்” என்பதன் பொருள், பின்னப்பட்ட (Fractioned) அரூபமாகிய சிற்றறிவு, அகண்ட அரூபமாகிய பேரறிவுடன் ஒன்றிணைதலாகும். இது தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் “அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் – அறிவு முழுமை அது முக்தி” என்பதாகும்.

    அந்த பிரத்யேக உணர்வு என்பது, புறத்தை உணர்வதோடு மட்டுமல்லாது அகத்தையும் உணர்வதாகும். அகத்தை உணர்வதற்கு புலன்கள் தேவையில்லை. ஏன்? புறத்தே காணப்படுபவைகள் எல்லாம், பரிமாணங்களைக் (DIMENSIONS) கொண்ட (shape and image) பருப்பொருட்களும், அதிலிருந்து வரும் நிகழ்ச்சிகளாகும். எனவே புற உணர்விற்கு புலன்கள் தேவையிருக்கின்றன. ஆனால் ஆறாம் அறிவு அகத்தை உணர்வதற்காகத் தன்மாற்றம் அடைந்து வந்துள்ளது.

    அகமாகிய உள்ளத்தில் எந்த பருப்பொருளும் இல்லை.

    மாறாக அரூபம் ஆனால், பருப்பொருள் உருவாகக் காரணமாக இருந்த மெய்ப்பொருளாகிய பேரறிவே மனதின் மறுமுனையான உள்ளமாக உள்ளது.

    எனவே அரூபமாகிய ஆறாம் அறிவு அகத்தை உணர்வதற்காக வந்துள்ளதால், அதற்கெனப் பிரத்யேகப் புலன் ஏதும் உருவாகவில்லை.

    ஆகவே விலங்கினங்கள் வரையில் புற நிகழ்ச்சிகளை உணர்ந்த பேரறிவு மனித வடிவில், புற நிகழ்ச்சிகளுக்கான காரணம் என்ன, அவற்றின் மூலமும், முடிவும் என்ன, அவை எவ்வாறு உண்டாகின்றன என அறிந்து வாழ்வதுதான், திருவள்ளுவர் கூறும் இயற்கையின் ஆதிநிலை/இறை  ஆறாம் அறிவாக மலர்ந்ததன் நோக்கம். இயற்கையே/இறையே, அறிவாக வந்துள்ளதால் நான் என்பது அறிவே, ‘நான் பார்க்கிறேன்’ என்கின்ற செயலில் யார் பார்க்கின்றது? அறிவுதானே பார்க்கின்றது. அப்டியானால் நான்=அறிவு என்கின்ற சமன்பாடுதானே வருகின்றது. ஆகவே நான் என்பது அறிவு. அறிவு இயற்கையின்/இறையின் ஆதிநிலையைிலிருந்து வந்துள்ளது. அப்படியானால் இயற்கையேதான்/இறையே தான் நானாக உள்ளது. இயற்கை/இறை நானாக (oneself) இருப்பதோடு மட்டுமல்லாது உலக மக்களாகிய 790 கோடி நான்களும் இயற்கையே/இறையேயாகும். இயற்கையே ‘நானாக’ இருப்பதால், ‘நானின்’ (aim of Self)நோக்கமும் இயற்கையின் நோக்கமும் ஒன்றேயாகும். இவ்வாறாக நான் யார் என்கின்ற வினாவிற்கு விடை கருத்தியலாக அறியவேண்டும். அவ்வாறு நான் யார் எனக் கருத்தியலாக அறிந்ததோடு மட்டுமல்லாது, தொழிற் கல்வியில் கருத்தியல் பாடத்துடன் செய்முறையும் உள்ளது போல், இறை உணர் ஆன்மீகத்திலேயும் உள்ள செய்முறைப் பயிற்சியில் (அகத்தவம், தற்சோதனை) வெற்றி பெற வேண்டும். அதாவது கருத்தியலாக அறிந்ததை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் முழுப்பயனை அடைய முடியும். அப்பயன்  துன்பமில்லா பேரின்பவாழ்க்கை வாழ்வதற்கு அவசியமானவை ஆகும்.

    செய்முறைப் பயிற்சியில் உறுதியுடன் அறிவதற்கு சில காலம் தேவையிருக்கின்றது. அந்தக் காலத்தின் அளவு

    அவரவா்களின் ஆர்வம்,

    கைமேல் பலனை எதிர்பார்க்காத தளரா விடாமுயற்சியினைப் பொருத்திருக்கும்.

    புலன்வழி வினைப்பதிவுகளின் அழுத்தம் ஆகியவைகளைப் பொருத்திருக்கும்.

    இருப்பினும் ‘நான் யார்’ என்பதனை கருத்தியலாகச் சந்தேகமின்றித் தெளிவுடன் அறிவதால், செய்முறை பயிற்சியில் ஆர்வமும், முயற்சியில் அயரா விடாமுயற்சியும் கைக்கூடும். அதன் விளைவாக புலன் வழி வினைப்பதிவுகளின் வேகமும், அழுத்தமும் சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வர, செய்முறைப் பயிற்சியில் நான் யார் என உறுதியுடன் அறிவதற்கு தேவைப்படும் காலம் சுருங்கி வரும். அதாவது அகத்தவத்தின் முடிவு விரைவில் கைகூடிவிடும்.

    ஒரு மனிதன் வாழ்க்கையை நான் யார் என அறிவதற்காக பயன்படுத்தாத போது, இயற்கையின் நோக்கத்தை அறியாது, அறியாமையில் வாழும்போது இயற்கைக்கு முரணான வாழ்க்கைதான் வாழமுடியும். இயற்கைக்கு முரணாக வாழும் போது இயற்கையின் இனிமை கெடும். இயற்கையின் இனிமையைக் கெடச்செய்தால் விளைவுகளும் துன்பங்களாகத்தானே (miserable life) வரும். பிறவிப்பிணிக்கு ஆளாகி மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து இதே miserable life ஐத்தான் வாழ வேண்டி வரும். அல்லது வம்சாவளியின் வழியாக துன்பம் தரக்கூடிய விளைவுகள் வரநேரிடும்.

    எந்த ஒரு பயனையும் அனுபவிக்க வேண்டுமென்றாலும் அதற்கான செயல் புரிந்தேயாக வேண்டும். நான் யார் என அறிந்து அதன் பயனை அடைவதற்கு மனவளக்கலையாகிய அகத்தவமும், தற்சோதனைப் பயிற்சியும் அவசியம். ‘நான் யார்?’ என அறிதலின் பயனை விரிவாகத் தெரிந்து கொள்வதால், பயிற்சி செய்வதற்கான ஊக்கமும், ஆக்கமும் வரும். ஏனெனில் மனித மனம் ஆதாயமில்லாமல் எதனையும் விரும்பாது (human mind is so calculative) என்பதால், நான் யார் அறிதலின் பயனை அறிந்து கொள்வது பயனளிக்கும். ஆகவே நான் யார் என அறிதலின் பயன்களையும், அறியாதலால் துன்பங்களையும் அறிய வேண்டும்.   நான்யார் என  அறிதலின் லாபமும்,  அறியாததன் நஷ்டமும்  “லாபமும், நஷ்டமும்” என்கின்ற தலைப்பில் அட்டவணைப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

    naan yaar-page-146-2

    naan yaar-page-147-3

    naan yaar-page-148-4

    இறைவனை அறிவதை விட வேறு என்ன லாபம் உள்ளது? மற்ற லாபங்களெல்லாம் இதற்கு துணை இலாபங்களே.

    இங்கே ஆதிசங்கரரின் கூற்றை நினைவு கூறுவோம்.

    எது லாபம் என சொல்லத் தக்கது?

    ஆன்மாவை அறிதல் என்கிறார் ஆதிசங்கர்.

    அறிவு இருந்தும், அறிய வேண்டியதை அறியாமல் இருப்பதால் மயக்க நிலைதான் சாதாரண மனிதனிடம் காணப்படுகின்றது. இதனால் தனக்கும் இழப்பு.  அவ்விழப்பால், பிறருக்கும் (சமுதாயத்திற்கும்) நஷ்டம் தானே.

    இழப்பால் துன்பம் தானே!?  தனி மனிதனுக்குத் துன்பம் இருக்கும் போது சமுதாயக் கூட்டுறவில் வாழும் அம்மனிதனால் பிறருக்கும் துன்பம் போய்ச்சேரும் .

    இங்கே ‘ஒன்றே பலவானதை’ எடுத்துச் சொல்லும் அத்வைத தத்துவத்தை உலகுக்கு வெளிக்கொண்டுவந்த ஜகத்குரு ஆதிசங்கரர் என்ன அருளுகிறார் என்பதனை கவனிக்க  வேண்டும்.

    “நான் பிரம்மம் அல்ல என்பது அறியாமை.  அந்த அறியாமையே எல்லா துன்பங்களுக்கும் ஆணிவேர்”

    . . . ஆதிசங்கரர்.

    இறைவனை அறியாமலேயே வாழ்க்கை முடிந்து விடுகின்றது.

    அறியவேண்டியது அறியாமலே வாழ்க்கை முடிந்து விடுகின்றது.

    அறிய வேண்டியதை அறியாமல் வாழ்க்கை முடிந்து விடுவது என்பதா வாழ்ந்ததன்  லாபம்!?

         அறியாமையிலேயே பிறந்து,

         அறியாமையிலேயே வாழ்ந்து,

         அறியாமையிலேயே இறந்துவிடுவதுதானா மனிதப் பிறவி எடுத்ததன் பயன்?

         அடைய வேண்டியதை அடையவில்லை அல்லது அடைய முயற்சி செய்யவில்லை என்றால் அது இழப்பு தானே? நஷ்டம் தானே?

         நஷ்டம் ஏற்பட்டால் அறிவிற்கு கவலை தானே?

         கவலை என்பது துன்பத்தின் விளைவு தானே?

         ஆகவே ஜகத்குரு ஆதிசங்கரர் அறியாமை எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேர் என்று     எவ்வளவு உண்மை என்பது விளங்குகின்றது.

         வருங்காலத்தில் விஞ்ஞானம் வேகமாக வளர்ந்துவரும் இக்காலத்தில் மனிதர்கள் அனைவருமே    விஞ்ஞானத்தின் துணைகொண்டு எளிதாக தான் யார் என மிகத்தெளிவாக அறியும் நிலை உருவாகி வந்து கொண்டுதான் உள்ளது மனவளக்கலையால் என்றால் அது மிகையாகாது.

    எனவே நீதிநெறி உணர்மாந்தராகி வாழும் நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.

       வாழ்க திருவேதாத்திரியம்!                வளர்க திருவேதாத்திரியம்!!

     

     

     

  • நான் யார் என அறிவதால் பயன்களும், அறியாததால் துன்பங்களும் 1 / 2

    நான் யார் என அறிவதால் பயன்களும், அறியாததால் துன்பங்களும் 1 / 2

    அ.வி. 332

     

    30-03-2022 புதன்

    வாழ்க வளமுடன்

    ‘நான் யார்?’, என்கின்ற வினாவிற்கு விடையை கருத்தியலாக ஒவ்வொரு மனிதனுமே அறிவது எப்படி? ஆன்மீகத்தில் ‘நான் யார்?’ (Who am I ?) என்கின்ற வினா மிகச்சிறப்புடையது. ‘மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது !’ என்பார்களே அது போல் ‘நான் யார்?’ என்கின்ற வினா நான்கு எழுத்துக்களே கொண்ட சிறிய வினாவாக இருந்தாலும் இந்த வினாவின் விடைதான், அறிவின் வளா்ச்சியில் உச்ச நிலையை அடைந்து மனிதனின் கீர்த்தியை வெளிப்படுத்துவதாகும்.

         இயற்கையாகிய பேரறிவு / இறை, தன்னுடைய தன்மாற்றப் பயணத்தில், ஏன் உயிரினங்களாக வந்தது என்கின்ற காரணத்தை அறிந்தால், நான் யார் என்கின்ற வினாவிற்கான விடைகிடைக்கும்.

         இயற்கை/இறை உயிரினங்களாக வந்தக் காரணம் என்ன என்று சிந்தித்தால், பஞ்சபூதங்களிலிருந்து வந்து கொண்டிருந்த அழுத்தம், ஒலி, ஒளி, சுவை. மணம் ஆகிய ஐவகை நிகழ்ச்சிகளை உணர்வதற்காக, பேரறிவாகிய இயற்கை, ஓரறிவிலிருந்து ஐந்தறிவு உயிரினங்களாக ஒவ்வொன்றாகப் படிப்படியாக (stage by stage) தன்மாற்றமடைந்து வந்தது. பிரபஞ்சத்தில்,  பஞ்ச பூதங்களிலிருந்து நடந்து கொண்டிருந்த பஞ்சதன்மாற்ற நிகழ்ச்சிகளை (Physical Transformation of Pancha Boothas) உணர்ந்தாகிவிட்ட பிறகு, அத்துடன் இயற்கை தன்னுடைய பயணத்தை நிறுத்திக் கொண்டிருக்கலாமே! உயிரினங்களாக வந்து பின்னர் மனிதனாக ஏன் வந்தது?

         அதனை நாம் யார் கேட்பதற்கு? தாயைப் பார்த்து பிள்ளை “நீ ஏன் என்னைப் பெற்றாய்?” எனக் கேட்க முடியுமா? முடியாது. அது போல் இயற்கை அன்னையையும் நாம் கேட்க முடியாது. ஆனால் அந்தக் காரணத்தை அறிய உரிமையும், தகுதியும் உள்ளது நமக்கு. காரணத்தைக் கேட்போம். விடையை அறிவோம். அறிய விழைந்தால் இயற்கை அன்னையே காரணத்தை உற்சாகத்துடன் கூறி மகிழ்வாள். “நீயே அதுவானால் அதுவே சொல்லும்” என்பதும் இதுதான்.

    ஐந்தறிவிலிருந்து, ஆறாம் அறிவிற்கு, ஏன் தன்மாற்றப் பயணத்தைத் தொடர்ந்து இயற்கை அன்னை மனிதனாகவும் வந்தாள் என வினா எழலாம். ஏன் அவ்வாறு வினா வருகின்றது. காரணம், இன்று மனித குலத்தின் நிலை அவ்வாறு உள்ளது. இன்று சமுதாயத்தில் வறுமை நிலவுகின்றது. சூது, கொள்ளை, கொலை, கற்பழிப்பு போன்ற கொடிய குற்றங்கள் நடக்கின்றன. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு இழைக்கின்ற துன்பங்கள் மலிந்து விட்டன. வாழ்க்கை பெரும் சிக்கலாகிவிட்டது. உத்திரவாதமின்மையான வாழ்க்கை (unsecured life) வாழ வேண்டியுள்ளது. இயற்கை/இறை மனிதனாக வராதிருந்தால், மனித குலம் இவ்வளவு துன்பத்திற்கு ஆளாக வேண்டியதில்லையே என எண்ணத்தோன்றலாம். இப்பிரபஞ்சத்தில் இவ்வளவு குற்றங்களே இருந்திருந்திராதே!

    என்ன செய்வது? இயற்கையின் ஆதிநிலை, பேரறிவையும் கொண்ட அளப்பரிய பேராற்றல் உடையது. ஆற்றல் என்றாலே இயக்கத்திற்கு வந்தால்தானே சிறப்பு. இயக்கத்தில் இருந்தால் தானே அது ஆற்றல் என்கின்ற பெருமையைப் பெறுகின்றது. மின் கலம் (Battery) உள்ளது. மின்கலத்தை இயக்கினால் தான் அதிலுள்ள ஆற்றலைப் பயன்படுத்த முடியும். மின் கலத்தை இயக்காமல் இருந்தால் அது ஒரு பயனற்ற பெட்டியாகத்தான் இருக்கும். அதுபோல் பேராற்றல் தன்னையே இறுக்கிக் கொண்டு நொறுங்கி இயக்கத்திற்கு வந்தது. பேராற்றலுடன் கூடவே, அறிவென்றாலே அறியும் இயல்புடையதாகிய அறிவு பேரறிவாக இருந்ததால், பேரறிவு உயிரினங்களாக மாற்றம் அடைந்தது.

    இங்கே சிந்திக்க வேண்டும் மனிதன். மனிதன் வேறு, இயற்கை வேறா? அல்லவே. இயற்கையின் ஒரு மிகச் சிறிய அங்கம் தானே மனிதன். ஒரு குடும்பத்தில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். குடும்பத்தலைவன் பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் போது, பொறுப்புள்ள மகன், மகள் குடும்பச்சூழலை உணர்ந்து, தந்தையுடன் சேர்ந்து உழைத்து பொருளாதாரத்தை உயா்த்தப் பாடுபடுவதில்லையா? இது நடைமுறையில் நடக்கவில்லையா? தந்தையைக் குறை சொல்கிறார்களா பிள்ளைகள்? அதுபோல்தான் இயற்கை அன்னையுடன் அதன் மகன்கள், மகள்களான நாமும் சேர்ந்து, இந்த சமுதாயத்திற்கு என்ன தேவையோ, அதனைத் திட்டமிட்டு செயலுக்கு கொண்டுவர வேண்டும்.

      செயல் மனிதனுடையதாக இருக்கும் போது இயற்கையின் நியதிப்படி விளைவை இயற்கை தருமல்லவா? இந்தச் சமுதாயம் உய்வதற்கான வழிகளை வேதாத்திரி என்கின்ற திருமகனார் வழியாக சமுதாயச் சிக்கல்களையும் கூறி, அதற்கான தீர்வுகளையும், இயற்கை அன்னை அருளியுள்ளாள். அதனை நாமெல்லோரும் முதலில் எண்ணத்தால், இதயத்தால் ஆமோதிக்க வேண்டும்(endorse). ஆமோதித்தலின் வலிவு அதிகமாக அதிகமாக திணிவு பெறுவதால், இயற்கை தன்னுடைய திட்டத்தை அமுல்படுத்துவது என்பது எளிதாகிவிடும் (Fraction demands. Totality supplies.) இயற்கை அன்னையும் நம் விருப்பமில்லாமல் கட்டாயப்படுத்தி எதனையும் செய்யமாட்டாள்.

     இயற்கை ஐந்தறிவு வரை அதுவே அயரா விடாமுயற்சி செய்து தனது தன்மாற்றத் தொழிற்சாலையில்(Transformation industry) தானே ஒரே முதலாளியாக (sole proprietor) இருந்து நடத்தி வந்தது. ஆதி மனிதனாக வந்த பிறகு, ஆறாம் அறிவு வளர்ந்த போது மனிதனும், இயற்கையின் தன்மாற்ற தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்டான்(share holder). மனிதன் பங்குதாரராகிவிட்டாலும் இயற்கை/இறையேதான் செயல் இயக்குனா் (Ever Managing Director) என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். இயற்கையின் மனித –- தன்மாற்றத் தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்ட பிறகு, அந்த தொழிற்சாலையின் இலாபத்திற்கும் (வாழ்க்கையில் மகிழ்ச்சி) நஷ்டத்திற்கும் (துன்பம்) பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனுக்கே உண்டு.

      இயற்கையின் தன்மாற்ற தொழிற்சாலையில், கடைசியான மனித உற்பத்தியில், இன்னமும் ஒழுங்கு படுத்தப்பட்ட உற்பத்தி regular production ஆரம்பிக்கப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டுதான் முன்னாள் ஜனாதிபதியும், தத்துவஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் “பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை – Evolution is still incomplete” என்றார். ஆதிமனிதன் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியும், இன்னமும், இயற்கையின் தன்மாற்ற மனித உற்பத்தியில் மாதிரி முறையில்தான் (prototype) உற்பத்தி (மகான்கள், அறிஞா்கள்) நடை பெற்று வருகின்றது. ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். எண்ணாமல் பரிணாம வளர்ச்சி இல்லை. ஆகவே ஆதங்க எண்ணங்கள் வலுப்பெற்றால்தான் பூரணத்துவமாகிய இயற்கையின் மனிதகுலத் தன்மாற்றம் பூரணத்துவம் பெறும்.

    மனிதன், “கல்லார் கற்றார் செயல்விளைவாய் காணும் இன்பதுன்பமவன்” என்கின்ற பாடல் வரியின் மூலம், அறியாமையிலும், அறிந்தும் மனிதன் செய்கின்ற செயல்களின் விளைவுகளை அனுபவிக்கின்றவனாக இருக்கிறான் இறைவன் என்கிறார் மகரிஷி அவர்கள். ஆனால் இறையை உள்ளத்திலே வைத்துக்கொண்டுள்ள நற்பேறு பெற்ற மனிதன் புலன் இன்பங்களிலேயே மூழ்கி அல்லலுறுகிறான். வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஆதங்கமாகவும், வேடிக்கையாகவும் “ஏன் அசைந்தோமோ? இவ்வாறு மனிதவடிவில் துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளதே என்று இறைவன் நினைப்பான்” என்பார். தன்னையே அறிந்து இன்பமுற ஆறாம் அறிவாக வந்த பேரறிவு, மனிதனின் அறியாமையால் துன்பத்தையே அடைகின்றது.

    இங்கே ஆழ்ந்து சிந்தித்தால் இயற்கை ஏன் மனிதனாக வந்தது என்று தெரியவரும். அதுவேதான் மனிதப் பிறவியின் நோக்கமும், அந்த நோக்கத்திற்கேற்ப வாழ்தலால் அடைகின்ற பயனுமாகும்.

    இயற்கை ஓரறிவிலிருந்து ஐயறிவு வரை சீவ இனங்களாக தன்மாற்றமாகி வரும்போது ஒவ்வொரு புலன் உணர் கருவிகள் கூடிக் கொண்டே வந்தது தெரிய வருகின்றது. ஆனால் ஆறாம் அறிவாக வரும்போது புலன் உணர் கருவி ஏதும் உருவாகவில்லை. புலன் உணர் கருவி ஏதும் உருவாகாத நிலையில் ஆறாம் அறிவிற்கு புலன்கள் வழியாக ஏதும் உணர்வதற்கில்லை என்பதும் தெரிய வருகின்றது. ஆனால் ‘தான் ஆறாம் அறிவுடையவன்’ என்று தன்னைக் கூறிக்கொள்ளும் உயிரினமான மனிதனாக வந்துள்ளது இயற்கை. இதற்கு என்ன காரணம்?

    இயற்கையில் எதற்கும் காரணமில்லாமல் இருக்காது. எல்லா இரகசியங்களையும், காரணங்களையும் ஆறாம் அறிவு அறிய முடியாவிட்டாலும், வாழ்க்கைக்கு அவசியமானதையாவது அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சோ்ந்தது தான் நான் யார் என்கின்ற இயற்கை இரகசியமும்.

      ஆறாம் அறிவிற்கு ஏன் புலன்கள் உருவாகவில்லை, இயற்கையின் நோக்கமும் ‘நானின்’ நோக்கமும் ஒன்று என்பது பற்றியும்,  நான் யார் அறிதலால் வரும் பயன்கள் மற்றும் அறியாதலால் வரும் துன்பங்கள் பற்றியும் அடுத்து வரும் அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில் அறிவோம்.

    வாழ்க வளமுடன்.  

    தொடரும்.


  • FFC-331-வேதாத்திரியார் – ஓர் அகராதி- 5/5

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    lotus

    வேதாத்திரியார் – ஓர் அகராதி– 5/5

    FFC-311

    27-03-2022-ஞாயிறு
    உ.ச.ஆ. 27-03-37

    Vethathiri_a_Living_Dictionary (2)

    VETHATHIRI MAHARISHI – A  LIVING DICTIONARY

    வாழ்க வளமுடன்!

         சென்ற நான்கு சத்சங்கங்களில் வேதாத்திரியார்-ஓர் அகராதி என்பது பற்றி சிந்தித்து வருகிறோம். இன்றைய சத்சங்கத்திலும் அச்சிந்தனையைத் தொடர்கிறோம். இதுவரை 45 துணைத் தலைப்புகளில் சிந்தித்துள்ளோம். நான்காவது(சென்ற) சத்சங்கத்தில் சிந்தித்த துணைத்தலைப்புகளை நினைவு படுத்திக் கொள்வோம்.

    நான்காவது(சென்ற) சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்:

    1) சிந்தனை வளம் பெருகும்; அகம் மகிழுங்களேன்!
    2) வேதாத்திரிய அறிவியல் அகராதியினைப் புரட்டுவோம்.
    3) கௌதமபுத்தரின் பொன்மொழியில் சிந்திக்க வைப்பது என்னென்ன?
    4) புத்தரின் கூற்று சிந்திக்க வைக்கின்றது.
    5) உருவமில்லாமலும் ஒன்று இருக்கின்றது என்கின்ற கோட்பாடு.
    6) வறுமை என்றால் என்ன?
    7) அறிவின் வறுமை என்றால் என்ன?
    8) அறிவின் அடிப்படைத் தேவை என்பது என்ன?
    9) எப்போது அறிவு வறுமையில் உள்ளதாகிவிடும்?

    ‘வேதாத்திரியம் எவ்வாறு அகராதியாகத் திகழ்கின்றது என்பதனை இன்று மேலும் அறிந்து கொள்வோம். இதுவரை சிந்தித்ததில் எவ்வாறு வேதாத்திரியம் அகராதியாகத் திகழ்கின்றது என்பதனை ஆங்காங்கே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
    ஏன்,
    வேதாத்திரியத்தை திருவேதாத்திரியம் என்றும்,
    வேதாத்திரியார் ஓர் அகராதி அதாவது திருவேதாத்திரியம் ஓர் அகராதி என்றும்,
    வேதாத்திரி மகரிஷி அவர்களை, நவயுகவியாசர் என்றும்,
    வேதாத்திரி மகரிஷி அவர்களை முதல் அறிவின் அறிவியலாளர்(The first Scientist of Consciousness) என்றும் போற்றுகிறோம்?

    வள்ளுவரைப் போற்றுவதுபோல் போற்றுகிறோம்.

         வள்ளுவரை ஏன் திருவள்ளுவர் என்கிறோம்? வள்ளுவரை ஏன் தெய்வப்புலவர், செந்நாப்போதார், நாயனார், நான்முகனார், பெருநாவலர் என்றும் பல சிறப்புப் பெயர்களால் அழைக்கிறோம்? திருமூலர் அருளிய மந்திரம் என்று சொல்லாமல் திருமந்திரம் என்று சிறப்புடன் அழைக்கிறோம். அவர்கள் சிறப்புடையவர்கள் ஆகவே சிறப்புப் பெயர்களால் அழைக்கிறோம். அவர்கள் வாழ்ந்த காலத்தில் மற்றவர்கள் ஆற்றாத சேவையினை, அருளாளர்கள் ஆற்றியுள்ள அருட்சேவை சிறப்பிற்கும். போற்றுதற்கும் உரியது. அவர்களின் அருட்சேவையால் பயன் பெற்ற மக்கள் நன்றியுணர்வாக பல சிறப்புப் பெயர்களால் அழைக்கின்றனர்.

    அறிவில் தெளிவு பெறவே ஆன்மீகப் பயிற்சி:

       அறிவில் தெளிவு பெறவே பல ஆன்மீகப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு வழிகாட்டியாக குருமார்கள் தேடப்படுகின்றனர். அவ்வாறு குருவைத் தேடுபவர்கள் மிகச் சிலரே. குருவைத் தேடாமலேயே சிலருக்கு சஞ்சித கர்மாவின் பயனாகவே குரு தானாகவே வருவார்.

    எது எப்படி இருந்தாலும்,

    குருவைக் காட்டிக்கொடுக்கும் வைபவம் சமுதாயத்தில் மறைந்துவிட்ட சூழ்நிலையில், மனவளக்கலைஞர்களுக்கு அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த நம் குருவை மதித்து ஒழுகி நன்முறையில் பயன்படுத்தி பிறவிப்பயனை அடைந்து வாழ்க்கையை வாழ்வாங்கு வாழவேண்டும்.

         அவரவர்கள் கருமையத்தில் உள்ள ஆன்மீகத் தாகத்தின் அழுத்தத்திற்கு ஏற்றாற்போல் குருமார்களை அமைத்துக்கொடுக்கின்றது இயற்கை/இறை. அல்லது அவர்களே குருமார்களை தேடிக்கொள்கின்றனர். விளைவறிந்து அல்லது நோக்கத்தோடு எந்த செயலையும் செய்வதுதான் சாலச் சிறந்தது. ஆகவே ஆன்மீகப் பயிற்சியில் முடிவான பயனை(End result) அடைய வேண்டும் என்பதே பயிற்சியின் நோக்கம். அதற்கு பயிற்சியுடன் அறிவிற்கு தெளிவும் அவசியம்.

    தெளிவு என்பது என்ன?

         சுருங்கச் சொல்வதென்றால் அறிவிற்கு விளக்கம் வேண்டும். பல்லாயிரம் பிறவிகளாக அறிவிற்கு விளக்கமில்லாமல் வாழ்ந்துவிட்டது ஆன்மா.

    என்ன விளக்கம் அறிய வேண்டும்?

    மனிதப்பிறவியின் நோக்கம் என்ன? பிறந்துவிட்டோம், அதனால் வாழ்கிறோம். ஒரு நாள் மடியப்போகிறோம். இது நிச்சயம்.

    ஏன் பிறந்தோம்? தெரியுமா? தெரியாது.

    எங்கிருந்து வந்தோம்? தெரியாது! (எங்கிருந்து வந்தோம் என்றால் தாய், தந்தையிடமிருந்து வந்தோம் என்பது விடை அல்ல.)

    எங்கு செல்ல இருக்கிறோம்? தெரியாது.

    எப்போது செல்ல இருக்கிறோம்? தெரியாது!

    இதற்கிடையில் துன்பத்தையும், இன்பத்தையும் கலந்துதான் அனுபவிக்க வேண்டியிருக்கின்றது.
    ஏன் துன்பம் வருகின்றது? தெரியாது!

    ஒருசிலருக்கு துன்பம் அதிகமாக இருக்கும். வேறு சிலருக்கு துன்பம் குறைவாக இருக்கும். ஏன் இந்த வேறுபாடு? தெரியாது!

    எந்த கேள்விக்கும் விடைதெரியாது? இத்தனை ‘தெரியாதுகள்’ அறிவிற்கு இருந்தால் எப்படி? என்ன நியாயம் உள்ளது?!  அறிவு அறிவொளியாகத் திகழவேண்டாமா?! ஆறாம் அறிவிற்கு இந்த வினாக்களுக்கெல்லாம் விடை தெரிவதுதான் ஆறாம் அறிவின் சிறப்பு.

        இவற்றிற்கெல்லாம் விடை தெரிந்திருந்தால் அறிவிற்கு தெளிவு உள்ளது என்று பொருள். விடை தெரிந்துகொள்வது மட்டுமல்ல தெளிந்த வழியில் வாழ்வதே தெளிவு பெற்றதற்கானப் பயன். கருத்தியலாக மட்டும் தெரிந்து கொண்டிருப்பது மட்டுமே தெளிவாகாது, செயல்முறையில் தெளிவடைய வேண்டும்.  அப்போதுதான் நல்லோர்களாகத் திகழமுடியும். நல்லோர்களின் இயல்பு பற்றி நம் ஆசான் கூறுவதனை நினைவு கூர்வது நலம் பயக்கும்.

    நல்லோர்களின் இயல்பு:

    தெளிவு சிந்தனையால் பெறுவது. சிந்தனை செயலுடன் பந்தித்து நிற்கவேண்டும், அது நல்லோர்களின் இயல்பு என்கிறார் நம் குருநாதர். நல்லோர்களாக ஆவதற்காகத்தானே ஆன்மீகப்பயிற்சி.

    பண்பு(02-01-1955)

    சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும்,
    பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு. . . . ஞா.க. எண். 632

    தெளிவினை எவ்வாறு பெறுவது?

    அறிவிற்குத் தெளிவினை எவ்வாறு பெறமுடியும்?

    குருவின் வழியாகவும்,
    சத்சங்கத்தாலும்,
    மூச்சு போன்று இடைவிடாது தொடர் சிந்தனையாலும்,
    விழிப்புணர்வோடு இருத்தலாலும்,
    இவற்றிற்கெல்லாம் மேலாக அகமே விரும்பி விரும்புவதாலும்(inner quest) தெளிவு பெறலாம்.

         இடைவிடாது தொடர் சிந்தனை என்பதால், மற்ற கடமைகளை தவிர்த்துவிடவேண்டும் என்பது பொருளல்ல. ‘ஒன்றால் மற்றொன்று கெடக்கூடாது’ என்று மகரிஷி அவர்கள் கூறியுள்ளதனை நினைவிற்கொண்டே ‘இடைவிடாத தொடர் சிந்தனை அவசியம்’ என வலியுறுத்தப்படுகின்றது. பரம்பொருள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதாலும், எல்லா நிகழ்ச்சிகளும் இறையால் நடைபெறுவதாலும் யார் எங்கு, எந்த பணியில் ஈடுபட்டிருந்தாலும், செய்யும் பணிக்கு குந்தகம் ஏற்படாமல், எவ்வாறு சுவாசித்தல் அனிச்சையாக நடைபெறுகின்றதோ, அதுபோல், சிந்தனையும் அனிச்சையாக செயல்படுவதற்குப் பழகவேண்டும்.

    பயிற்சி வேறு, தெளிவு வேறு:

       பயில்வது பயிற்சி. விளங்கிக்கொள்வது தெளிவு. எவ்வளவு காலம் பயிற்சி செய்தாலும் தெளிவில்லாமல் இருப்பது, பயிற்சியின் இறுதிப்பயனை அடைவதனை காலதாமதம் ஆக்கிக்கொண்டே இருக்கும். பல்லாயிரம் பிறவிகளாக அறிவு இருட்டில்(அறியாமையில்) உள்ளதால், அறிவு வெளிச்சத்திற்கு வரவேண்டும் (அறியாமை நீங்கி அறிவுடைமையாக வேண்டும்). அறிவு ஒளி பெறவேண்டும். அறிவொளியாகத் திகழ்தல் வேண்டும். அதற்கு அறிவிற்கு தெளிவு அவசியம். தெளிவை நோக்கித்தான் பயிற்சி. பயிற்சியும், தெளிவுமே ஆன்மீகப்பயிற்சியின் இலக்கை(End result) அடையச்செய்ய முடியும். தெளிவு பற்றி அறிந்துகொள்ள ‘பட்டினத்தார் அவர்களின் சீடரான, அரசராக இருந்து ஞானியான பத்திரகிரியாரை’ வணங்கி நமது சத்சங்கத்தில் எழுந்தருளுமாறு வேண்டுவோம்.

    எவ்வாறு அழைப்பது?

         அருளாளர் பத்திரகிரியார் இப்போது இல்லையே! அருளாளர்கள் என்றோ பூதவுடலை உதிர்த்தாலும் அவர்கள் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். எப்படி அவ்வாறு கூறமுடியும் என்கின்ற ஐயம் எழலாம்! பூதஉடல்தான் இல்லை. அவர்களின் ஆன்மா இருக்கின்றதே! அருளாளர்கள் எண்ணிய எண்ணங்கள் உள்ளனவே! எண்ணங்களுக்கு மரணம் என்பதில்லை. எண்ணுவதற்கு காரணமாக இருந்த உடல் மறைந்துவிடலாம். ஆனால் எண்ணங்கள் மறைந்துவிடுவதில்லை. சுருங்கச் சொல்வதென்றால் அருளாளர்கள் தாங்கள் எண்ணிய எண்ணங்கள் அறநூல்களாக மலர்ந்துள்ளன. அவற்றின் வாயிலாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். திருவள்ளுவர் சுமார் இரண்டாயிரத்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பூதவுடலோடு வாழ்ந்தவர். திருவள்ளுவர் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? 1330 திருக்குறட்பாக்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவர் எண்ணிய எண்ணங்கள்தானே குறட்பாக்களாக மலர்ந்துள்ளன இன்று. உலகம் உள்ளவரை அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

    இதேபோன்றுதான் நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலகம் உள்ளவரை 1854 கவிகள் வழியாக வாழ்ந்து கொண்டிருப்பார்.

    gurudevar

     மறைந்த பிறகும் எவ்வாறு மானசீகக் குருவானார்?

              பூதவுடல் தான் மறைந்தது. திருவள்ளுவர் மறையவில்லை.   திருவள்ளுவர் எப்போதும் 1330 திருக்குறட்பாக்களில் வாழ்ந்து கொண்டிருப்பதால் தான் அவருக்குப் பின்னர் கி.பி. 1911 இல் அவதரித்த அருளாரான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு மானசீகக் குருவாக அமைந்தார். அமைந்ததோடு மட்டுமல்லாமல் ‘அகத்ததுதான் மெய்ப்பொருள்’ என்று எடுத்துக்காட்டி வேதாத்திரியை வேதாத்திரி மகரிஷி ஆக்கினார். இதேபோன்றுதான் அருளாளர்களான தாயுமானவரும், திருமூலரும் வேதாத்திரி மகரிஷிக்கு மானசீக குருவாக இயற்கை/இறை அமைத்துக் கொடுத்தது. மேலும் வள்ளலார் ஆன்மாவையும் மகரிஷி அவர்களுடன் இணைத்து, வள்ளலாரின் இறுதி சங்கல்பாமான(எண்ணமான) அகவினத்தார்க்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும் அளிப்போம். என்பதனைப் பூர்த்தி செய்து தெய்வீக நாடகம் நடத்தியது இயற்கை/இறை. அத்துடன் இல்லாமல் தனது சாதுரியத்தால் அனைத்து அருளாளர்களையும் நினைந்து அவர்களின் நல்லாசிகளையும் பெற்றுக் கொண்டார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். நல் வாய்ப்புகளையெல்லாம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்ந்து, வாழையடி வாழையாக வரும் திருக்கூட்ட மரபினில் உதிக்கின்ற அருளாளர்கள் வரிசையில் இடம் பெற்று, உலக மக்களையே நெறிபடுத்திக் கொண்டிருக்கின்றார்.

    அருள்துறையில் யுக்தியினைக் கடைபிடிக்கும் குருவணக்கம்:

         மகரிஷி அவர்களைப்போன்றே அருள்துறையில் அனைவரின் துணையை நாடும் யுக்தியினைக் கடைபிடிக்க ஏதுவாக குருவணக்கம் பாடலை அருளியுள்ளார்.

    guruvanakkam_prosperspiritually

                                                                                       . . . ஞா.க. பாடல் எண். 7

     அருளாளர் பத்திரகிரியார் பருகிய சிவானந்தத்தேன்:

         தெளிவு பற்றி அருளார்கள் அனுபவித்த ஆனந்த அனுபவத்தை அறிந்துகொள்வோம். அரசராக இருந்து பின்னாளில் அருளாளரான பத்திரகிரியார் நமது சத்சங்கத்தில் எழுந்தருளி தெளிவைத் தெளிவு படுத்தட்டும். பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல் பகுதியில் 65 வது செய்யுளில் கூறுவதனைக் காண்போம்.

    65. தெளியத் தெளியத் தெளிந்தசிவா னந்தத்தேன்
    பொழியப் பொழியமனம் பூண்டுஇருப்பது எக்காலம்.

    பொருள்:

        ‘தெளிய’ என்றால் என்ன? அறிவு தெளிவு பெறுவது. விளக்கம் பெறுவது. ஒரே நாளில் அறிவு தெளிவு பெற்றுவிடமுடியாது. கருவில் திருஉடையவர்களுக்கு வேண்டுமென்றால் அது சாத்தியமாகும்.

        ஆனால் கருவில் திரு அல்லாதவர்களுக்கு மெல்ல மெல்ல தான் தெளிவு ஏற்படும். அது பற்றி கவலைப்படத் தேவையில்லை. அகமே விரும்பினால் போதும்.

        தெளிவு பெறுவது அவரவர்களின் அகம் கொண்டுள்ள ஆர்வத்தைப் பொறுத்தது. அவ்வாறு அறிவிற்கு தெளிவு பிறக்கப் பிறக்கத் தெளிந்த சிவானந்தத் தேனானது பொழியும் என்கிறார் அருளாளர் பத்திரகிரியார்.

       அரசராக இருந்தபோது கிடைக்காத அந்தத் தேன், ஞானப்பாதையில் அடி எடுத்து நடந்து வரும்போது கிடைப்பதனை அறிந்து கொண்டார் அருளாளர் பத்திரகிரியார்.

        தேனானது பொழியப் பொழிய, அதனை ஏற்கும் மனத்தைப் பெறுவது எப்பொழுது என்று நம்மையெல்லாம் தூண்டுகிறார் அருளாளர் பத்திரகிரியார்.

        சிவானந்தத்தேன்(அறிந்தது சிவம். மலர்ந்தது அன்பு. துரியாதீதம் கைவல்யமான நிலை) என்பது பேரின்பநிலை. தெளிவு இருந்தால்தான் பேரின்ப நிலையை அனுபவிக்க முடியும்.

       சிவானந்தத்தேனை அருந்த ‘செயலிலே இறைவனைக் காணலாம்’ என்கின்ற நிதர்சன உண்மையின் படி இரண்டொழுக்கப்பண்பாட்டின் நெறியில் செய்யப்படும் நல்ல செயல்களின் மூலம் அந்தத் தேனை அருந்தலாம்.

    அறிஞர் திருமூலரை எழுந்தருள வேண்டுவோம்:

         அறிஞர் திருமூலர் வாழ்ந்த காலத்தில் மகரிஷி அவர்கள் அவதரிக்கவில்லை. இருப்பினும் அறிஞர் திருமூலரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார் மகரிஷி அவர்கள். அவ்வாறே நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக குருவணக்கம் பாடலை அருளியுள்ளார் மகரிஷி அவர்கள். அறிஞர் திருமூலர் எழுந்தருளி, அவர் தெளிவில் தெளிவடைந்தவாறு (தெளிவு பற்றி மிகத்தெளிவாக அறிந்ததுபோல்) நமக்கும் தெளிவுபடுத்தட்டும்.   தெளிவினை அறிஞர் திருமூலர் வாய்மொழியாகவே அறிந்துகொள்வோம்.

    thelivu_guruvin

    போற்றுவதால் யாருக்கு என்ன பயன்?

         போற்றுபவருக்கே பயன்!! இறைவா போற்றி! என்கின்றனர் பக்திமான்கள். போற்று என்றால் என்ன பொருள்? போற்று என்றால் பாராட்டுதல், புகழ்தல் என்று பெயர். புகழ் மேலும் பரவ வேண்டும் என்ற நோக்கத்தில் பாதுகாத்தல்(preserve with adoration). கடவுள், மகான் போன்றவர்களை புகழ்ந்து துதித்தல், வணங்குதல். இஃதெல்லாம் எதற்காக? சுயநலம்தான்!! பண்பேற்றத்தில் ஏற்றம் பெற்று துன்பமில்லாத இன்பவாழ்வு வாழ ஆரம்பித்து பேரின்ப வாழ்வில் திளைப்பதற்காகும். இதில் சுயநலம் மட்டுமில்லை. பிறர் நலமும் இருக்கின்றது பேரின்ப வாழ்வில். பேரின்ப நிலை இரண்டொழுக்கப் பண்பாட்டினால் கிட்டும். இரண்டொழுக்கப் பண்பாடு எதனை வெளிப்படுத்துகின்றது? அன்பையும் கருணையையும். அன்பும் கருணையும் வெளிப்படுமானால் யார் பயனாளி? முதலில் தானும் பிறகு பிறரும், சமுதாயமும். அன்பினாலும், கருணையினாலும் பிறர் பயன்பெறுவது சரி. தான் பயன் பெறுவது என்பது எவ்வாறு?

    பாவங்கள் அகன்று புண்ணியங்கள் சேரும்:

         ஒழுக்கத்தின் வெளிப்பாடே அன்பும், கருணையும். திருவள்ளுவர் கூறும் ஆதிநிலையில் ஒழுங்காற்றலாக இருந்த அறிவு நம்மிடம் ஒழுக்க நெறியாக நடப்பது பேரின்பம்தானே! பாவங்கள் அகலுகின்றன. புண்ணியங்கள் சேர்கின்றன.

        ஆகவே திருவேதாத்திரியத்தைப் போற்றி மகிழ்கிறோம். மனிதர்கள் முகஸ்துதிக்காக மற்றவர்களை போற்றுவது வழக்கம். அதுபோன்று அல்ல, திருவேதாத்திரியத்தைப் போற்றுவது. போற்றுவதால் இயல்பூக்க நியதிப்படி போற்றப்படுகின்ற பொருளின் தன்மையில் ஏற்றம் பெறுவார் போற்றுகின்றவர். பேரின்பநிலையில் திளைக்க பண்பேற்றம் பெறவேண்டும். பண்பேற்றம் பெற இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்த வேண்டும். இயல்பூக்கம் என்ன என்பதனை அறிவோம். உயர்வு பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.

    இயல்பூக்க நியதி என்பது என்ன?

        இயல்பூக்க நியதி என்ன கூறுகின்றது? எந்த ஒரு பொருளையோ, செயலையோ, குணத்தையோ, எவ்வுயிரையோ அடிக்கடி நினைத்து வந்தால், அப்பொருளின் தன்மையாக நினைப்பவரின் ஆற்றல் அறிவிலும், உடலிலும் மாற்றம் காணும் என்பது இயல்பூக்க நியதி.

    அடிக்கடி நினைப்பது எப்போது நடக்கும்? அகம் பயன் பெறும்போது அடிக்கடி நினைப்பது நடக்கும்.
    அகம் பயன்பெற்று வருவதைப் பொருத்து அடிக்கடி நினைப்பது இயல்பாகும்.
    ஒரு பொருளின் தன்மையையோ அல்லது ஒருவரைப் பற்றியோ அடிக்கடி நினைப்பது எப்போது சாத்தியமாகும்? அதில் ஈர்ப்பு இருக்கும்போது சாத்தியமாகும்.
    அத்தன்மையை மதிக்கும்போதும் அதனை அடிக்கடி நினைக்க வேண்டியிருக்கும்.
    அப்பொருளின் தன்மை எவ்வாறு இருக்கும்?
    உயர்வாக இருக்கும்? உயர்விற்கு ஏதேனும் ஒப்பீடு இருக்குமா? இருக்கும்.
    யாருடைய உயர்வுடன் ஒப்பீ்டு இருக்கும்? தன்னுடைய நிலையுடன் ஒப்பீடு இருக்கும்.
    விளைவு அந்த பொருளின் அல்லது அந்த ஒருவரின் தன்மையாக அடிக்கடி நினைப்பவரின் ஆற்றல் உடலிலும், அறிவிலும் மாற்றம் காணும்.

    மேலும் மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம்.

    தான் உயராது, மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது.”

    என்கிறார் மகரிஷி அவர்கள். இதற்கு என்ன பொருள்? மற்றவரது உயர்வை மதிப்பதும் ரசிப்பதும் எப்போது சாத்தியம்? மற்றவரது உயர்வைக் கவனிப்பவரின் அகம் அதனைப் போற்றுகின்றது. புறமும் அகமும் போற்றினால் போற்றுபவரும் உயர்ந்து வருகிறார் என்றுதான் பொருள். புறம் மட்டும் போற்றி அகம் போற்றவில்லை எனில் அதனால் பயன் பெறுவது கடினம்.

    தெளிவே வினைப்பதிவில் தூய்மை பெறச் செய்யும்:

         மனவளக்கலைஞர்கள் பூர்வ புண்ணியத்தால், அதாவது பெற்றொர்கள் செய்த புண்ணியத்தால் அரிதினும் அரிதான நவயுக வியாசரான, நவயுக ராஜரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்களை குருநாதராகப் பெற்றுள்ளோம்.

       “உத்தம நண்பர்காள்! எனக்கு கிடைத்த பேறு உங்கட்கும் உரியது” என்கின்ற உண்மையினை நமக்கெல்லாம் ஆசிர்வாதமாகத் தந்துள்ளார் என்பதனை எப்போதும் நினைவில் கொள்வோம்.

         “நீ எனினும் நான் எனினும் நிறை அறிவில் ஒன்று. வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்” என்கின்ற உண்மையினை வெளிப்படுத்தி அவர் நிலைக்கு உயர்ந்துவரத் தூண்டி அழைக்கிறார் நம் குருநாதர் அவர்கள். ஆகவே ‘வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளதை’ அவர்நிலைக்கு வினைப்பதிவில் தூய்மை பெறுவதற்கு பயிற்சியோடு, தெளிவு இருந்தால்தான், பண்பில் ஏற்றம் பெறமுடியும். அதற்கு இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்துவோம்.

    குருவின் சேர்க்கை சீடரிடத்தில் என்ன செய்ய வேண்டும்?

          குருவணக்கம் பகுதியில் குருவின் சேர்க்கை சீடரிடத்தில் என்ன செய்ய வேண்டும் என குருவணக்கம் பாடலில் கூறியுள்ளார். பண்பேற்றம் பெறுவதற்கு சீடர் என்ன செய்ய வேண்டும் என்பதனைக் கூறுகிறார்.           

    குருவின் சேர்க்கை (15.08.1984)     

    எப்பொருளை எச்செயலை எக்குணத்தை
    எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
    அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
    அறிவினிலும் உடலினினும் மாற்றங்காணும்;
    இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்
    எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
    தப்பாது குருயுர்வு மதிப்போர் தம்மைத்
    தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்.

                                                                                   . . .(ஞா.க. பா.எண். 10)                                    

          ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்கின்ற தலைப்பின் சிந்தனை நிறைவு செய்துகொள்ளும் தருவாயில் இருக்கிறோம். வேதாத்திரியார் ஓர் அகராதியாகத்(lived as Dictionary/Encyclopedia and continued to be a living Dictionary/Encyclopedia) திகழ்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக மாதிரிக்காக ஒரு பட்டியலைத் தயாரிப்போம்.

      13  இயல்களைப் பட்டியலிட்டுள்ளோம். இவ்வளவு இயல்களா உள்ளன திருவேதாத்திரியத்தில் என  ஐயம் எழலாம்.   இன்னும் உள்ளன. சுருக்கி பதிமூன்றாக பட்டியலிட்டுள்ளோம்.  இயல் என்பது பெரிய புத்தகமாக இருக்க வேண்டும் என்பதல்ல.  எனவே இயல் என்பது பற்றி சற்று விளங்கிக்கொள்வோம்.

    இயல் என்றால் என்ன?  ஆங்கிலத்தில் ‘Science’   எனப்படுகின்றது. ‘இயல்’  என்கின்ற சொல் ‘ஒன்று நடந்துவரும் முறை அல்லது ஒன்றன் இயல்பு’ என்பதனைக் குறிக்கும் விகுதி. உதாரணங்கள், உலகியல். இல்லறவியல் போன்றவையாகும்.  இயல் பற்றி கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் கூறுவதனைக் கவனிப்போம்.  இயல் வழியாக அறிவை புகட்டுவதால் அது அறிவியல் எனப்படுகின்றது. ஏன், எதற்கு, எப்படி எனக் கூறுவது இயல் என்கிறார் அறிஞர் சாக்ரடீஸ்.  ஆகவே  நல்வாழ்விற்கு  அறிய வேண்டிய பல்வேறு துறைகளைப் பற்றிக் கூறுவதால் திருவேதாத்திரியம் பல இயல்களை உள்ளடக்கியது என்கிறோம்.    

    அறிவின் மலர்ச்சியில் எழுச்சி!  

    அன்று(என்றோ! காலம் சொல்ல முடியுமா?!)ஆதியெனும் பரம்பொருள் மெய் எழுச்சி பெற்று அணு என்ற உயிராகி, பிரபஞ்சமாகி உயிரினங்களாகி, நீதிநெறி உணர்கின்ற மாந்தராகியது. அந்த எழுச்சியின் பயன் முழுவதுமாக மாந்தரிடம் வெளிப்பட பலகோடி ஆண்டுகள் தேவையிருந்ததால், எழுச்சி அடங்கி இருந்ததுபோல் இருந்தது. இருந்தாலும் அந்த எழுச்சியின் நோக்கம்/பயன் முழுவதுமாக இருபதாம் நூற்றாண்டில்( 1911 ற்கு பிறகு) வெளிப்பட ஆரம்பித்துள்ளது. அந்த மெய் எழுச்சியின் பயன் பரவலாக மாந்தரிடம் ஆறாம் அறிவில் இப்போது திருவேதாத்திரியத்தின் வாயிலாக மலர ஆரம்பித்துள்ளது.

           வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

        ஆகவே வேதாத்திரியார் ஓர் அகராதி என்று கூறி அகம் மகிழ்வது வேதாத்திரியத்தால் நாம் பெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவுவொளியையே எடுத்துக் காட்டுகின்றது.

         எவ்வாறு ஒரு மொழியிலுள்ள புதிய, புதிய வார்த்தைகளுக்கு பொருள் தெரிந்து கொள்ள அகராதியை பயன்படுத்துகிறோமோ, அதுபோல் வாழ்வாங்கு வாழ அறிவிற்கு வேண்டிய தெளிவினைப் பெற திருவேதாத்திரியம் அகராதியாக விளங்குகின்றது. எனவே வேதாத்திரியார் ஓர் அகராதி என்பது சாலப் பொருந்தும். Vethathiri Maharishi was a Living Dictionary/Encylopedia and continues to be so.

    வேதாத்திரிய ஆன்மீக பொது மொழி:

           அன்னிய நாட்டிற்கு செல்லும்போது அந்நாட்டின் மொழி தெரிந்திருந்தால், அங்குள்ள மக்களிடம் அந்த மொழியில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாம். அந்நாட்டின் மொழி தெரியாதிருந்தால், உலகப்பொது மொழியான ஆங்கிலத்தில் பேசி கருத்துக்கனைப் பரிமாறிக்கொள்ளலாம். அதே போன்று ஆன்மீக வளர்ச்சி என்பது நேற்று, இன்றிலிருந்து ஆரம்பிக்கவில்லை. அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப வெவ்வேறு அருளாளர்களால் ஆன்மீகம் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. வெவ்வேறு சிந்தனாப்பள்ளிகள் ஏற்பட்டுள்ளன(various schools of thought). ஒருநாட்டின் மொழி தெரியாதிருந்தால் உலகப்பொது மொழியான ஆங்கிலம் உதவுவதுபோல் பொதுவான ஆன்மீக மொழி இல்லாமையால் எல்லா சிந்தனாப்பள்ளியின் கருத்துக்களையும் மிகத் தெளிவாக அறிந்து கொள்ளாத நிலை இருந்து வந்தது, அந்த நிலையினை மாற்றி அமைத்துள்ளது வேதாத்திரிய ஆன்மீக மொழி. ‘வேதத்தை யான் படித்ததில்லை, ஆனால் வேதத்தின் உட்பொருளாய் என்னைக் கண்டேன்’ என்கிறார். அவரைப்போன்றே, வேதங்களை நாம் படிக்காவிட்டாலும் வேதத்தின் மகா வாக்கியங்களான

    • பிரக்ஞானம் பிரம்மம்” —– அறிகின்ற அறிவு எதுவோ அது பிரம்மம்.
    • அஹம் பிரஹ்மாஸ்மி” —- நான் பிரம்மமாய் இருக்கிறேன்.
    • தத்துவமஸி” —- அது நீயாக இருக்கிறாய்
    • அயம் ஆத்மா பிரம்மம்” —- இந்த ஆத்மா பிரம்மம்.

    ஆகியவற்றின் உட்பொருளை நமக்கும் விளங்கச் செய்திருக்கின்றது வேதாத்திரியம் என்று கூறுவது அகம் மகிழ்ந்து உரைக்கும் வார்த்தை..

         வேதங்கள் பற்றி வேதாத்திரியக் கவிகள் பல இருந்தாலும் அவற்றில் ஒன்றினை மட்டும் இப்போது நினைவுகூர்வோம்.

    வேதத்தின் நோக்கம்.

    அறிவொடுஐம்புலன்கள் தமைப்பண் படுத்தி
    அனைவருக்கும் நலம்விளைக்கும் வேத நூல்கள்
    சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள்
    செல்வந்தர், ஏழைஎனும் எல்லோர்க் கும்நந்
    நெறியுணர்த்தும் போதனைகள் என்று கண்டோம்;
    நிலஉலகில் இன்றுஉள்ள வேதங்கள் எல்லாம்
    குறியொன்றே கொண்டுளது; கூர்ந்தா ராய்ந்தால்
    கொள்கைஎலாம் மனித இனப் பண்பா டாகும்!

                                                                                                                 . . . ஞா.க. ப. எண். 515

     நம் குருநாதருக்கு இயற்கை/இறை என்னென்ன விளக்கியதோ, அவற்றை எல்லாமல் ஒன்று விடாமல் திருவேதாத்திரியம் நமக்கு விளக்கித் தெளிய  வைக்கின்றது.  ஆகவே நாமும், இவ்வுலகமும் உய்வதற்காக மலர்ந்துள்ள  திருவேதாத்திரியத்தை போற்றி, போற்றி, உளமாற  வாழ்த்துவோம்.

    வாழ்க திருவேதாத்தரியம்!    வளர்க திருவேதாத்திரியம். 

    அதே நேரத்தில் மனித அறிவையும் வாழ்த்துவோம்.

    வாழ்க மனித அறிவு!    வளர்க மனித அறிவு!!
    வாழ்க அறிவுச்செல்வம்!   வளர்க அறிவுச் செல்வம்!!

    வாழ்க வையகம்!   வாழ்க வளமுடன்!!

    வேதாத்திரியார் ஓர் அகராதி என்கின்ற தலைப்பில் இதுவரை 63 துணைத்தலைப்புகளில் சிந்தித்து இருக்கிறோம் என்பதனை நினைவிற்கொள்வோம். 

    காலங்கருதி வேதாத்திரியார் ஓர் அகராதி என்கின்ற சிந்தனையை இத்துடன் நிறைவு செய்துகொள்வோம். இயற்கையின்/இறையின், நம் குருநாதரின் திருவுளப்படி வேறொரு தலைப்பில் அறிவிற்கு விருந்து படைத்து அருந்துவோம். காத்திருப்போம். வாழ்க வளமுடன்.

    பயிற்சியால் பெற்றுக்கொண்டிருக்கின்ற பயன் அறிந்திருத்தல் நலம்:

         மகரிஷி அவர்கள் கூறும் பல அறிவுரைகளில் ஒன்றினை இப்போது நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.  மகரிஷி அவர்கள் கூறுவதனை உற்று நோக்குவோம்.  ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் அன்பர்கள். அவர்களுக்கு மகரிஷி அவர்கள் கூறுவதாவது:-

     ‘சில அன்பர்களுக்கு நாம் எந்த அளவில் பயிற்சியால் நன்மை அடைந்து வருகிறோம் என ஐயம் எழலாம்.  சிலர் நம்மிடமே  கூட  எந்த அளவில் பயன் பெற்றிருக்கீறிர்கள் ஆன்மீகப்பயிற்சியால்’ என்று கூடக்கேட்கலாம்.  ஆகவே நாம் முதலில் ஆன்மீகப் பயிற்சியால் என்ன பயன் அடைந்து வருகிறோம் எனத்தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  அப்போதுதான் பிறர் கேட்கும் கேள்விகளுக்குத் தெளிவான பதிலைத் தந்து மனநிறைவு பெறமுடியம்.’ என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் மகரிஷி அவர்கள் கூறுவதனை மிகவும் கவனிக்கத் தக்கது.  அவர் கூறுவதாவது:-

      ‘திருப்தியான பதிலை அறிவுபூர்வமாக, அறிவின் தெளிவோடு அளிக்க முடியவில்லை எனில் நமக்கே சோர்வு உண்டாகிவிடும்.  இதனால்  நட்டமும், குழப்பமும் வந்துவிடாமல் இருக்கவும் கேள்விக் கேட்போருக்குத் தெளிவோடும், உறுதியோடும் பதிலளிக்க வேண்டும்.  ஆகவே ஆன்மீகப்யிற்சியின் பயன்களை அறிந்திருக்க வேண்டும் பயிற்சியாளர்கள்.’ என்று வலியுறுத்துகிறார் அருட்தந்தை அவர்கள்.

       ஆகவே அவர் அறிவுரையை நிறைவேற்றும் வகையில் திருவேதாத்தரியம் ஓர் அகராதி என்கின்ற தலைப்பில் சிந்தித்தது நிறைவளிக்கின்றது.  வாழ்க திருவேதாத்திரியம்!  வளர்க திருவேதாத்திரியம்!!

    உன் பாதாரவிந்தங்களில் சரணடைகிறோம்!

    குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு

    குரு தேவோ மஹேஸ்வரஹ

    குரு சாட்சாத் பரப்ரம்மா

    தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.

          குருஸ்லோகத்தில் முதல் இரண்டு வரிகள் குருவேபிரம்மா, குருவேவிஷ்ணு, குருவேதேவன், குருவே மகேஸ்வரன் என கடவுளின் பல பெயர்களைச் சொல்லி, குருயார் என உணர்த்துகின்றது. மேலும் அழுத்தமாக சொல்வதற்கு, மூன்றாவது வரியில் ‘குருசாட்சாத் பரப்ரம்மா’ என ஐயமின்றி உறுதிபடுத்தப்படுகின்றது.

          எனவே நிச்சயமாக குருவாகிய நீங்களே இறைவன் என அறிந்துகொண்டோம். மேலும் தங்கள் மானசீகக் குருவாகிய அறிஞர் திருவள்ளுவர் கூறியதையும் இவ்விடத்தில் நினைவு கூர்கிறோம்.

    “ஐயப்படாஅது அகத்து உணர்வானைத்

      தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.“                குறள் 702

    திருவள்ளுவரின் வாக்குப்படி, ஐயமின்றி அகத்தை உணர்ந்தவராகிய நீங்களும் தெய்வமும் ஒருவரே.

     

    guru_paadham

    குருவே!  உங்களின் பாதாரவிந்தங்களில் சரண்புகுந்துவிட்டோம். நீங்கள் அறிவொளியாகத் திகழ்வது போன்று எங்களையும்  அறிவொளியாகத் திகழ அருள் புரிவீர்களாக! 

               குருவே சரணம்! குருவே சரணம்!!  குருவே சரணம்!!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                          வளர்க அறிவுச் செல்வம்!!


  • FFC-310- வேதாத்திரியார் – ஓர் அகராதி- 4/5

    வாழ்க மனித அறிவு!                      வளர்க மனித அறிவு!!

    lotus

    வேதாத்திரியார் – ஓர் அகராதி– 4/5

                                FFC-310           

    23-03-2018-புதன்

    உ.ச.ஆ. 23-03-37

    gurudevar

    வாழ்க வளமுடன்!

                சென்ற மூன்று  சத்சங்கங்களில் வேதாத்திரியார் ஓர் அகராதி என்பது பற்றி சிந்தித்து வருகிறோம்.  இன்றைய சத்சங்கத்திலும்  அச்சிந்தனையைத் தொடர்கிறோம்.  இதுவரை சிந்தித்ததை நினைவு படுத்திக் கொள்வோம்.

     முதல் சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்,

    1. அகராதி என்றால் என்ன,
    2. வேதாத்திரியார் ஓர் அகராதி என்பதில் மனவளக்கலைஞர்களுக்கு ஏற்படும் ஆனந்தம்,
    3. ஏன் சான்றோர்களைத் துணை கொள்ள வேண்டும்,
    4. சான்றோரின் துணை பண்பேற்றத்திற்கு அவசியமாக உள்ளது,
    5. அவ்வாறு அவசியமாக  இருப்பதிலும்  இயல்பூக்கம் செயல்படுவது,
    6. சான்றோரின் துணை இன்பத்திலும் இன்பம் அளிப்பது,
    7. சான்றோரின் துணை சாலச்சிறந்த வழிபாடு,
    8. வாழ்வாங்கு வாழவேண்டும் என்கின்ற சங்கல்பத்திற்கு  உறுதியும் அளித்துள்ளது பற்றியும்,

      இரண்டாவது சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்,   

    1. வாழ வேண்டிய முறை,
    2. அறத்தின் தோற்றம்,
    3. அறத்தின் மூன்று கண்கள்,
    4. ‘வாழ்வாங்கு’ என்றால் என்ன?
    5. தன்னை அறியாத அறியாமை,
    6. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்,
    7. வாழும் நிலை அறிந்து தொண்டாற்றி இன்பம் காண்பது,
    8. திருமணப்பந்தம் எதற்காக,
    9. இருபதாம் நூற்றாண்டில் விளக்கப்பட்ட பிறப்பின் விதி,
    10. இந்த புரிதலெல்லாம் வேதாத்திரி வாழ்வியல் அகராதியிலிருந்து கிடைப்பது பற்றியும்சிந்தித்து வந்துள்ளோம் .

     மூன்றாவது சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில், 

    1. ஏன் விரும்பி யாரும் பிறப்பதில்லை,
    2. ஆன்மாஞானம் பெறுவது,
    3. வாழ்வதில் இரண்டு வகை,
    4. மயக்க வாழ்வு பற்றி,
    5. சுய சிந்தனையில் ஓங்குவது,
    6. திருவள்ளுவரின் எச்சரிக்கை,  
    7. அறிவு-வழி வாழ்க்கை,
    8. புகழொடு தோன்றுதல்,
    9. அகம் பூரிப்படைதல்,
    10. அன்று வேதாத்திரி வாழ்வியல்  அகராதி இல்லை,
    11. வாழ்வாங்கு வாழ்வதனை வேதாத்திரிய அகராதி தெரிவிப்பது,
    12. பண்பேற்றம் பெறுவதில் சுயநலமில்லை,
    13. அகராதியின் வரையறைக்கேற்ப வேதாத்திரியம் பொருந்துதல்,
    14. வேதாத்திரியம் என்பது என்ன, 
    15. அறிய வேண்டியதெல்லாம் இருக்கின்றது திருவேதாத்திரியத்தில்,
    16. முயற்சியின் அளவே ஞான விளைவு,
    17. ஒருவர் வாழ்வதைப் பொருத்து வையகம் பயன் பெறுவது அமைவது,
    18. இருபத்தாறு  நூற்றாண்களுக்குப் பின்னர் புத்தர் எண்ணியவாறு வாழ்ந்த ஆன்மா,

     சிந்தனை வளம் பெருகும்; அகம் மகிழுங்களேன்!

    வ்வொரு துணைத் தலைப்புமே விரிவாக அறிய வேண்டிய  செய்தியை சுருக்கமாகத் தெரிவிக்கின்றன. வேதாத்திரி ஓர் அகராதி என்கின்ற தலைப்பில், இதுவரை மொத்தம் 36(8+10+18) துணைத்தலைப்புகளில்(subheadings) விருந்து(rich feasts) படைத்து அருந்தியிருக்கிறோம்.  அவற்றை நினைவு படுத்திக்கொள்கிறோம். ஒவ்வொரு துணைத்தலைப்புகளுமே ஒரு செய்தியினை தெரிவிக்கின்றதாக அமைந்துள்ளதல்லவா?   சிந்தனைக்கு எடுத்துக் கொண்டுள்ள ஒவ்வொரு தலைப்பும் எவ்வாறு ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்கின்ற முதன்மை தலைப்போடு(Main Heading) தொடர்பு கொண்டுள்ளது என அறியலாம்.  (விரும்பினால்  ஏதேனும் ஒன்றிரண்டு துணைத்தலைப்புகளை எடுத்துக் கொண்டு சிறு சிறு கட்டுரைகள் எழுதி அகம் மகிழுங்களேன். சிந்தனை வளம் பெருகும்)

          36 துணைத்தலைப்புகளையும்  நினைவில் இருத்திக்கொண்டு இன்றைய சத்சங்கத்தில் விருந்து படைத்து அருந்துவோம்.  நம் குருபிரான் துணையும், வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபினில் அவதரித்த  அனைத்து அருளாளர்களின் பார்வையுடன் இன்றைய சத்சங்கத்தினை தொடங்குவோம்.    அந்த ஒரே பேரறிவுதானே பல அருளார்களாக வெவ்வேறு பரிணாம/தன்மாற்ற காலகட்டத்தில் மலர்ந்துள்ளது என்பதனை நாம் அறிவோம்.

    வேதாத்திரிய அறிவியல் அகராதியினைப் புரட்டுவோம்:

    கௌதமபுத்தர் அறியாமை, அறிவுடன் வாழ்தல் பற்றி கூறுவதனை ஆழ்ந்து சென்று புரிந்து  கொள்ள இருப்பதால்,  வேதாத்திரிய அகராதிகளுள்  பிரதானமானது அறிவைப்பற்றிக் கூறும்  அறிவியல்(அறிவு+இயல்).   மூளையில் பதிந்துவைத்துள்ள அலமாரியிலிருந்து அகராதியை  எடுத்துக் கொள்வோம். புத்தரின், அபயம் தரும் இந்த அமுதமொழியினை ஏற்கனவே 12-01-2018 அன்று நமது சத்சங்க நிகழ்ச்சியான சிந்திக்க அமுத மொழிகள் பயிற்சிக்காக எடுத்துக் கொண்டோம். (Click here)  அதனை நினைவுபடுத்திக்கொள்வோம்.

    amudhamozhi_38

    “அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.” . . .  புத்தர்.

       பயிற்சிக்கான வினாக்கள் பல இருந்தாலும் அவற்றை  சுருக்கி ஒன்பதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இத்தருணத்தில் அதற்கும் விடைகாண்போம்.

    கௌதமபுத்தரின் பொன்மொழிகளில் சிந்திக்க வைப்பது என்னென்ன?

    அறியாமை,

    அறிவுடன்,

    வாழ்க்கை,

    நூறு ஆண்டுகள் வாழ்வது,

    ஒரு நாள் வாழ்வது

    ஆகியவை நம்மை சிந்திக்க வைக்கின்றன.

        முதல் மூன்று சொற்களுக்கு பொருள் தெரிந்து விட்டால் ஏன் கௌதமபுத்தர் அறியாமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேலானது என்று கூறுகின்றார் என்பது விளங்கிவிடும். அறியாமை, அறிவுடன் என்கின்ற வார்த்தைகளுக்கு வேதாத்திரிய அறிவியல் (அறிவு+இயல்) அகராதியிலிருந்தும், வாழ்க்கையைப் பற்றி பொருள் தெரிந்து கொள்வதற்கு வேதாத்திரிய வாழ்வியல் அகராதியிலிருந்தும் பொருள் தெரிந்துகொள்ள வேண்டும்.  புத்தர் காலம் இருபத்தேழு நூற்றாண்டுகள் முந்தையது.  ‘Fraction(அகம்) demands; Totality(முழுமை-இயற்கை-இறை) supplies’ என்கின்ற அடிப்படையைக்கொண்டு இயற்கையின் பரிணாமம் இயங்குவதால்,   பரிணாமம்/தன்மாற்றம் அடைந்துவரும் வளர்ச்சிக்கேற்ப/மலர்ச்சிக்கேற்ப, அதாவது தனது குழந்தைகளிள் அகம் விரும்புவதற்கேற்ப, இயற்கை அன்னை   தனது மறைந்திருக்கும் அருமை, பெருமைகளைக்கொண்ட ஆற்றலை வெளிப்படுத்தி  வருகிறாள்.  அப்படி 1911 இல் மலர்ந்து ஆல்போல் வளர்ந்து வருவதுதான் திருவேதாத்திரியம்.

    புத்தரின் கூற்று சிந்திக்க வைக்கின்றது:  

     புத்தர் அருளியுள்ள அபயம் தருகின்ற அமுதமொழிக்குள் செல்வோம்.  நூறு ஆண்டுகள் அறியாமையுடன் வாழும் வாழ்க்கையை அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையோடு ஒப்பிடுகிறார்.  இந்த ஒப்பீடே  நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கின்றது.  என்ன சிந்திக்க வைக்கின்றது?  எவ்வளவு ஆண்டுகள்  வாழ்ந்தாலும், அறியாமையுடன்   வாழ்வது  வீணே என்பது விளங்குகிறதல்லவா? புத்தரின் இளவலான திருவள்ளுவர் கூறுவதுபோன்று  வாழ்வாங்கு வாழ வேண்டும் என்கின்றது இந்த அமுதமொழி. இச்சிந்தனை அறிவுடன் வாழவேண்டும் என்கின்ற உந்துதலை ஏற்படுத்துகின்றது.   ஆகவே இந்த உந்துதலை பயன்படுத்திக் கொள்ள ‘அறியாமை’, ‘அறிவுடன்’ என்று எவற்றைக் கூறுகிறார் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். கௌதபுத்தரின் அறிவுநிலையில் நின்று அறிந்துகொள்வோம்.  ‘அறியாமை’, ‘அறிவுடன்’ என்பது பற்றி அறிந்து கொள்ளவேண்டுமென்றால், அதற்கு    வேதாத்திரிய அறிவியல் அகராதியின் ஏடுகளைப் புரட்டுவோம்.  அறிவிற்கென பிரத்யேகமாக அமைந்துள்ள அறிவியலை  (Exclusive Science of Consciousness) நாம் வேதாத்திரிய அறிவியல் என்று கூறி மகிழ்கிறோம்.

    அகராதியின்  ஏடுகளிலிருந்து  என்னென்ன அறிந்துகொள்ள வேண்டியிருக்கின்றது?

    1)   அறிவு என்பது என்ன?

    2)   பொதுவாக வறுமை என்றால் என்ன?

    3)   அறிவின் வறுமை என்றால் என்ன?

    4)   ‘வறுமை’ என்கின்ற சொல்லின்  பொதுவான பொருளை வைத்துக்கொண்டு, வறுமை அறிவுடன் சேறும்போது அறிவின் நிலை என்ன என்று ஆராய்ந்து,  ‘அறிவின் வறுமை’ என்ன என்று வேதாத்திரிய அறிவியல் அகராதி தெரிவிப்பதோடு ஒப்பீடு செய்து நாம் அறிவின் வறுமையைப்பற்றி சிந்தித்தது  சரியாக உள்ளதா என அறிந்துகொள்வோம்.

    1) அறிவு என்பது என்ன?

    இப்போது அறிவு என்பது என்ன என்று அறிந்துகொள்வோம்.

    கண்களால் காணமுடியாதது அறிவு.

    தன்னையே காணமுடியாதது அறிவு.

    காரணம் அறிவு அரூபமானது.  அதற்கு உருவம் இல்லை. உருவமில்லாததால் அறிவு என்கின்ற ஒன்று இல்லை என்றும் கூறவும் முடியாது.

    பின்னர் எதுதான் அறிவு?  அரூபம் என்பதால் ‘அறிவு என்று ஒன்று இல்லை’ என்று சொல்லிவிடத்தான் முடியுமா?

    உணர்கின்ற ஒன்றினை உயிர் என்கிறோம். உணர்வது என்றால் என்ன?

    உணர்வதன் மூலம் உயிர் புறத்தே உள்ளதனை  அறிந்து கொள்கின்றது.

    உணர்வதன் மூலம் எது அறிந்து கொள்கின்றது? 

    உணர்தலின் மூலம் எது அறிந்துகொள்கின்றது எதுவோ அது அறிவு ஆகும். இதனை முடிவு செய்வதே அறிவுதான்!

    அறிகின்ற காரணத்தால் அது அறிவு என்கின்ற காரணப்பெயரைப் பெறுகின்றது.

    இதுவரை அறிவைப்பற்றி அறிவு இவ்வாறு சிந்தித்திருக்காது?  இப்போது எது  இவ்வாறு சிந்திக்க வைக்கின்றது? வேதாத்திரிய அறிவியல்(அறிவு+இயல்) அகராதி சிந்திக்க வைக்கின்றது.

    ‘உருவமில்லாமலும் இருக்கின்றது’ என்கின்ற கோட்பாடு:

        உருவமில்லாத ஒன்றினை இல்லை என சொல்லிவிடவும் முடியாது என்கின்ற கோட்பாட்டினையும் அறிந்து கொள்ளவேண்டும்.  அறிவைப்பற்றி சிந்திக்கும்போது ‘உருவமிருப்பதுதான் இருப்பது, உருவமில்லாததை  இல்லாதது என்று எப்போதுமே கருதமுடியாது.’ என்று அறிந்துகொண்டோம்.  எப்போதுமே என்றால் ..?? மெய்ப்பொருள் விஷயத்தில் அது பொருந்தாது என்பதுதான் ‘எப்போதுமே’ என்பது.  ஆனால் பொருட்களால் ஆன  உலகில், (உலகியல் வாழ்க்கையில்) ‘உருவமில்லாததை இல்லாதது’ என்றுதான் உலக வழக்கில் சொல்ல முடியும். ஆனால் எவ்வாறு உருவமில்லாமல் இருந்தும் அறிவு, தான் இருப்பதனை ஏற்றுக்கொள்கின்றதோ, அதே ஒப்புவமையில்(analogy),  மெய்ப்பொருளை- ஆதிநிலையை- இறையைத்  தீர்மானம் செய்யும் விஷயத்திலும் ஒன்று மில்லாதது போல் வெட்டவெளி தோன்றினாலும் வெட்வெளியை ‘சாதாரணப் பொருளில் அது  வெளி தான்(empty) என்றுகொள்ளாமல், உறுதிப்பாட்டோடு அந்தவெளி எல்லாம் வல்ல ஆற்றல் மிக்கதுதான் என அறிந்து கொள்ள வேண்டும்.  இதில் இரண்டாவது புரிதலுக்கே இடமில்லை(Second thought).  வெளி ஆற்றல் மிக்கது எனக் கருத்தியலாக புரிந்துகொள்வதில் எள்ளளவும் ஐயம் இருக்க அவசியமில்லை.

       இயற்கையின் ஆதிநிலையான(திருவள்ளுவர் கூறும்) வெட்டவெளியிலிருந்துதானே அறிவு தன் பயணத்தைத் தொடர்ந்திருக்கின்றது.  உயிர்களிடத்தில் உள்ள அறிவு ‘உருவமில்லாது இருந்தாலும் அது இருக்கின்றது’ என ஏற்றுக் கொண்ட அறிவு, வெட்டவெளியைப்பற்றி சிந்திக்கும்போதும் இதே நிலைப்பாட்டைத் தானே எடுக்க வேண்டும். ஆதிநிலையிலேயே அறிவு  இருக்கின்றது. ஆக, ‘உருவமில்லாத, ஆனால் இருக்கின்ற தனிச்சிறப்பினை’ பெற்ற பேரறிவே ஆதிநிலை – வெட்ட வெளி. ஆகவே தான்  ஆதிநிலையான வெட்டவெளிக்கு உருவமில்லாததால், ஒன்றுமில்லாததுபோல் காணப்படுகின்றது.  ஆய்வு செய்ததில் இன்று அறிவைப்பற்றிய சிறப்பான விளக்கத்தினைப் பெற்றுள்ளோம்.

     2) பொதுவாக வறுமை என்றால் என்ன?

       வறுமை  என்கின்ற சொல்லிற்கான பொருள் தெரியும்.  ஆனால் வார்த்தைகளால் எவ்வாறு சொல்வது?  எனவே வறுமை என்கின்ற சொல்லிற்கான பொருள் என்ன என்று பார்ப்போம்.  வறுமை என்பது அடிப்படைப் பொருளாதார வசதி  இல்லாத  நிலை(poverty) என்று பொருள்.  அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, உறைவதற்கு உறைவிடம் ஆகியவற்றை பெறுவதற்குக்கூடப்  பொருள் வசதி இல்லாமை என்று பொருள். வறுமையால் வரும் துன்பங்கள் எண்ணிலடங்கா?  தனிமனிதன் மட்டும் துன்பமடைவதில்லை. அதன் காரணமாக, பிறரும், சமுதாயமும் துன்பங்களைச் சந்திக்க நேரிடுகின்றது.

     3) அறிவின் வறுமை என்றால் என்ன?

        அறிவு, வறுமை(பொதுவான பொருளில்)  என்றால் என்ன என்றும் அறிந்து கொண்டோம்.  அறிவுடன் வறுமை சேர்ந்துவிட்டால் அறிவின் நிலை என்ன என்று அறிந்து கொள்ளவேண்டும். ‘அறிவின் வறுமை’  என்பது இரண்டு சொற்களைக் கொண்ட சொற்றொடர்.  நமக்குத் தெரிந்தவரையில் 1911 வரை இப்படியொரு சொற்றொடர் இதுவரை  அறியப்பட்டதாக தெரியவில்லை. 1911  க்கு பிறகு வேதாத்திரிய அறிவைப்பற்றிய அறிவியல் (அறிவு+ இயல்) அகராதிதான் இச்சொற்றொடரை வெளியிட்டுள்ளது.  இது மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. எனவே நாம் கவனிப்போம்.  அறிவின் வறுமை என்றால் என்ன? வறுமை என்கின்ற சொல்லிற்கான பொருளை  சற்று முன்னர்  நினைவிற்கு கொண்டு வந்துள்ளோம். அதனை நினைவில் கொண்டு அறிவின் வறுமை என்ன  என்பதனை அறிந்து கொள்வோம்.

         வறுமை என்பது அடிப்படைத் தேவைக்குக்கூட, அதாவது வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குகின்ற  பொருளாதாரம் இல்லாத நிலை. அறிவு+வறுமை  அறிவின் வறுமை ஆகின்றது. ஆகவே அறிவோடு வறுமை சேர்வதால் ஏற்படுகின்ற நிலை என்ன? அறிவின் அடிப்படைத் தேவைக்கே வறுமை ஏற்பட்டுவிட்டது என்றாகின்றது. அப்படியானால் அறிவின் அடிப்படைத் தேவை என்பதனை ஆராய வேண்டும்.

     அறிவின் அடிப்படைத் தேவை என்பது என்ன?

         இப்போது அறிவின் அடிப்படைத் தேவை என்றால் என்ன என்று அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.  உயிரினங்களிலே மனித உயிரினம் மிகச்சிறப்புடையது.  எதனால் சிறப்புடையதாகின்றது?  இதனை இயற்கை சொல்லவில்லை.  மனிதன்தான்  கூறுகின்றான். ஆறாம் அறிவு இருப்பதனால் தன்னை சிறப்புடையவன் என்கிறான் மனிதன். உண்மைதான். அத்தகைய சிறப்புடைய ஆறாம் அறிவு வறுமையில் இருந்தால் விளைவு என்ன?  இழப்புதானே! தனக்கும். பிறர்க்கும், அவன் வாழும் சமுதாயத்திற்கும்.!!  ஆறாம் அறிவின் அடிப்படைத் தேவை என்றால் என்ன பொருள்?  ஆறாம் அறிவின் அடிப்படைத் தேவை என்றால் அதனை எவ்வாறு பொருள்கொள்வது?

        ஆறாம் அறிவு எவ்வாறு திகழவேண்டுமோ அவ்வாறு திகழ்வதுதான்  ஆறாம் அறிவின் அடிப்படைத் தேவையாகின்றது.

     எப்போது அறிவு வறுமையில் உள்ளதாகிவிடும்?

                      அறிவு திகழவேண்டிய நிலை உருவாகவில்லை என்றால் அப்போது அறிவு வறுமையில் இருப்பதாகத்தானே கொள்ள முடியும்?!  ஆறாம் அறிவு எவ்வாறு திகழவேண்டும்   எனச் சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இரண்டொழுக்கப் பண்பாடான அன்பும் கருணையும் வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.  அவ்வாறில்லை எனில்  அறிவு வறுமையில் உள்ளதாகத்தானே கொள்ள முடியும்?!  அறிவைப்பற்றி ஆராய்ச்சி செய்துள்ள  அறிவின் அறிவியலாரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவிற்கு வறுமை இருப்பதனைக் கண்டுபிடித்துள்ளார்.  இதற்கு ஏதும் விஞ்ஞான நிரூபணம் தேவையா?  தேவையில்லை.  ஆழ்ந்த பல நாள் தொடர் ஆராய்ச்சியின் முடிவில் அறிவு,  அறிவுபூர்வமாக அறிந்துகொண்டாலே அது அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புதான். அப்படிப் பார்க்கும்போது அறிவின் இரண்டொழுக்கப் பண்பாடான அடிப்படைத்தேவை வெளிப்படவில்லை எனில் அறிவு வறுமையில் உள்ளது என்று அறிவே ஏற்றுக்கொள்கின்றது.

      அறிவின் இரண்டொழுக்கப் பண்பாடான அடிப்படைத்தேவை வெளிப்படாமல் இருப்பதற்குக் காரணத்தை என்ன பெயரிட்டு அழைக்க முடியும்? அதனை அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் என்றுதானே மகரிஷி அவர்களால் சொல்ல முடியும். ஆகவேதான் அறியாமை, அலட்சியம். உணர்ச்சிவயம் ஆகிய மூன்று வகையிலும்  அறிவு வறுமை நிலவுகின்றது என்று கூறுகிறார்  மகரிஷி அவர்கள்.  ‘இந்த மூன்றும் நீங்கிய  நிலையே’ புத்தர் கூறும் ‘அறிவுடன்’ என்பது. இப்போது கௌதமபுத்தர் கூறும் அபயம் தரும் அமுதமொழி விளங்கிவிட்டதல்லவா?  அறியாமையால் தனக்கும், பிறர்க்கும், தான் வாழும் சமுதாயத்திற்கும் சொல்லொனாத்(ஒன்றா, இரண்டா) தீமைகள் வருவதால் அறியாமையுடன் வாழ்பவன் தானும் அவதியுற்று, பிறரையும் அவதியுறச்செய்வதே நடக்கின்றது.  இரு தரப்பினரும் அவதியுறுவது முதலாமவரின் அறியாமைச் செயல்களால் நடக்கின்றது. எப்படி இருந்தாலும், ‘விளைவை அறிந்து தவறு செய்தாலும், விளைவை அறியாது தவறு செய்தாலும்’ விளைவு ஒன்றுதான்.  அறியாமையில் தவறு செய்தாலும் விளைவு உண்டு. இதனைத்தான் ‘கல்லார் கற்றார் செயல்விளைவாய் காணும் இன்பதுன்பமவன்’ என்று இறைவனே துன்பப்படுகிறான் என எடுத்துக் காட்டியுள்ளாரே இறைவணக்கத்தில் முதல் பாடலிலேயே மகரிஷி அவர்கள்.  எனவேதான் நூறு ஆண்டுகள் அறியாமையில் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேலானது என்கிறார் கௌதமபுத்தர்.  மற்றொரு சத்சங்கத்தில் அறிவின் வறுமைபற்றி தனியாக ஆராய்வோம். இப்போது ‘வேதாத்திரியம் ஓர் அகராதி’ என்பது  அகராதி  என்பதற்கேற்ப எவ்வாறு பொருந்தி வருகின்றது என்பதற்குள்  செல்வோம்.  அதனை அடுத்த சத்சங்கத்தில்  (27-03-2022 ஞாயிறு)ஆராய்வோம்.  வாழ்க வளமுடன்.

      

    வாழ்க அறிவுச் செல்வம்!           வளர்க அறிவுச்செல்வம்!!


  • FFC-309-வேதாத்திரியார் – ஓர் அகராதி- 3/?

    வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

    lotus

    வேதாத்திரியார் – ஓர் அகராதி- 3/5

    FFC- 309

     

                                                                                  20-03-2022-   ஞாயிறு.

    உ.ச.ஆ. 20.03.37

    Scientist of Consciousness

    வாழ்க வளமுடன்!

    சென்ற இரண்டு சத்சங்கங்களில் வேதாத்திரியார்-ஓர் அகராதி என்பது பற்றி சிந்தித்து வருகிறோம். இன்றைய சத்சங்கத்திலும் அச்சிந்தனையைத் தொடர்கிறோம். இதுவரை சிந்தித்ததை நினைவு படுத்திக் கொள்வோம்.

    முதல் சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்,
    அகராதி என்றால் என்ன,
    வேதாத்திரியார் ஓர் அகராதி என்பதில் மனவளக்கலைஞர்களுக்கு ஏற்படும் ஆனந்தம்,
    ஏன் சான்றோர்களைத் துணை கொள்ள வேண்டும்,
    சான்றோரின் துணை பண்பேற்றத்திற்கு அவசியமாக உள்ளது,
    அவ்வாறு அவசியமாக இருப்பதிலும் இயல்பூக்கம் செயல்படுவது,
    சான்றோரின் துணை இன்பத்திலும் இன்பம் அளிப்பது,
    சாலச்சிறந்த வழிபாடு செய்வது,
    வாழ்வாங்கு வாழவேண்டும் என்கின்ற சங்கல்பத்திற்கு உறுதியும் அளித்துள்ளது பற்றியும்,

    இரண்டாவது சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்,

    வாழ வேண்டிய முறை,
    அறத்தின் தோற்றம்,
    அறத்தின் மூன்று கண்கள்,
    ‘வாழ்வாங்கு’ என்றால் என்ன?
    தன்னை அறியாத அறியாமை,
    நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்,
    வாழும் நிலை அறிந்து தொண்டாற்றி இன்பம் காண்பது,
    திருமணப்பந்தம் எதற்காக,
    இருபதாம் நூற்றாண்டில் விளக்கப்பட்ட பிறப்பின் விதி,
    இந்த புரிதலெல்லாம் வேதாத்திரி வாழ்வியல் அகராதியிலிருந்து கிடைப்பது பற்றியும்
    சிந்தித்து வந்துள்ளோம்.

    இவற்றையெல்லாம் மனதில் இருத்திக் கொண்டு இன்றைய சிந்தனையைத் தொடர்வோம்.

    விரும்பி யாரும் பிறப்பதில்லை:

    அப்படி என்றால் என்ன பொருள்? சற்று சிந்திப்போம். ‘நாம்’ என்று தனியாக இருந்து கொண்டு இன்னாருக்குப் பிறக்கவேண்டும் என்று விரும்பிப் பிறப்பதில்லை என்பதைத்தான் ‘விரும்பி யாரும் பிறப்பதில்லை’ என்கிறோம். பிறப்பு இயற்கையின் நிகழ்வு. நாமும் இயற்கையின் ஒரு சிறு அங்கம்தானே! நாம் யார்? ஆன்மாதானே நாம்! ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கின்ற பிறப்பின்-விதிக்கேற்ப, வினைப்பதிவின் சுமையை இறக்கிவிட்டுத் தூய்மை பெறுவதற்கு(ஞா.க.1646-17,18 அடிகள்) ஆன்மாவிற்கு பிறவி(உடல்) தேவையாகின்றது. எனவேதான் வினைப்பதிவுகளின் சுமை தாங்கிய ஆன்மாவாக உள்ள நாம் பிறவி எடுக்கின்றோம். இல்லை. ‘நாம் பிறவி எடுக்கின்றோம்’ என்று சொல்வதைவிட ‘ஆன்மா பிறவி எடுத்துள்ளது’ என்று சொல்வதே சரியாக இருக்கும்.

    ஆன்மாஞானம் பெற . . .

    வேதாத்திரிய வாழ்வியல் அகராதி நம்முள் இறக்கி வைத்திருப்பதால், நாம் ‘மனிதன் வாழ்கிறான் என்று சொல்வதைவிட வினை வாழ்கின்றது’ என்கிறோம் நாம். ஏன்? இதில் பொருள் உள்ளதுதானே? எவ்வாறு, இவ்வாறு கூறமுடிகின்றது? ‘மனிதன் வாழ்கிறான்’ என்பதற்கான பொருள் ‘வினை வாழ்கின்றது’ என்பதாகும். ஆன்மாதான் மனிதனாக உள்ளது. இந்த புரிதல் அவசியமா? இல்லையா? அவசியம்தான்! ஏனெனில் ஆன்மாவே மனிதனாக உள்ளது என்கின்ற ஆன்மஞானம் பெறுவதற்கு இந்த புரிதல் அவசியமே! இந்த புரிதல் வேதாத்திரியத்தால் கிடைப்பதால், வேதாத்திரியத்தை அகராதி; வாழ்வியல் அகராதி என்று அகம் மகிழ்ந்து கூறுகிறோம் நாம்.

    வாழ்வதில் இரண்டு வகை:

    பிறந்துவிட்டோம். வாழ்ந்தே ஆக வேண்டும். எப்படியாவது வாழ்வது மனிதவாழ்க்கை அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், திருவள்ளுவர் எண்ணியதுபோல் வாழ்வாங்கு வாழ வேண்டும். இதுவரை எப்படி வாழ்வது என்று தெரியாமல் வாழ்ந்து விட்டது சமுதாயம். வாழ்வதில் இரண்டு வகை இருப்பதாக தெரிந்து கொள்கிறோம்.

    அவையாவன:

    1. புலன் வழி வாழ்க்கை
    2. அறிவு வழி வாழ்க்கை

    புலன் வழி வாழ்க்கை:

    ‘மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்’ என்று ஆன்றோர்கள் அறிவுறுத்தியும், அதனை செவிமடுக்காமல், மனம் போன போக்கினில் வாழ்வது ஒன்று. இது புலன் வழி வாழ்க்கை.

      அதாவது அளவு மீறியும்(Exceeding the Limit), முறையும் மாறியும் (changing the Method),

       புலன்களை கருவியாகப் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு, அதுவரை இயற்கையில் கருவிகளாக இருந்த புலன்களை, மனிதன் தனது அறியாமையால் இயற்கைக்கு முரணாகப் பொறிகளாக்கி(திருவள்ளுவர் புலன்களை ஐம்பொறிகள்–five traps என்று கூறுவதுபோல்)

        அறிவை புலன்- பொறிகளில் சிக்கவைத்து, அடிமையாக்கி வாழ்வது மயக்க வாழ்வு.

        ஐந்தில் அளவு, முறை காத்தல் என்பதனை விளக்கியுள்ளது வேதாத்திரிய வாழ்வியல் அகராதி.

    மயக்க வாழ்வு என்பது என்ன?

    உணர்வு நிலையிலேயே மயக்கத்துடன் இருப்பது. They are not conscious of themselves (not in coma). So to say they are not aware of their existence resulting in not being conscious of their deeds in their life. அதாவது மயக்க வாழ்வு வாழ்பவர்கள் ஐயுணர்வில் மயங்கியவர்கள். இவர்களை வேரறுந்த மரத்தோடு ஒப்பிடுகிறார் மகரிஷி அவர்கள். அருட் கவிஞர் எதனோடு ஒப்பிடுகிறார் பாருங்களேன்! வேரறுந்த மரத்தோடு ஒப்பிடுகிறார்.  அப்பாடலை நினைவு கூர்வோம்.

     பேரியக்க மண்டலத்தை அளந்து நிற்கும்

    பேரறிவால் தோற்றம், இயக்கம், விளைவு

    சீரறிந்த தெளிவினிலே சிக்கல் இன்றித்

    திருவினை ஆற்றும் பெரியோர் வழிபின்பற்ற,

    நேரறிவு, செயல்திருத்தம், நினைவுத் தூய்மை

    நிச்சயமாய்; ஐயுணர்வில் மயங்கி ஆற்றல்

       வேரறுந்த மரமொக்கும் விழித்து உணர்வீர்!

    விளைவும் முதலும் உணர்ந்து ஆற்ற இன்பம். 

    …  வேதாத்திரி மகரிஷி(ஞா.க.1399)

        சமுதாயத்தின் மீது அவர் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகின்றது இக்கவி.   

    சுய சிந்தனையில் ஓங்க . . :

          சுயமாக சிந்தித்தால்தான் உணர்வு நிலையிலேயே இருக்கும் மயக்கத்தில் இருந்து விழித்துக்கொள்வது சாத்தியமாகும். அந்த சுய சிந்தனையை ஊக்குவிக்கும் முகமாகத்தான் நம் அருட் கவிஞரான நம் குருநாதர் ஐயுணர்வில் மயங்கியவர்களை, சாய்ந்து கீழே விழ இருக்கின்ற வேரறுந்த மரத்தோடு ஒப்பிடுகிறார். இவ்வாறாக அருளாளர்கள் அனைவருமே ஐயுணர்வில் மயங்குவது பற்றி கூறி எச்சரித்து இருக்கின்றனர். காரணம் உண்மையைக் கூறுவது அச்சுறுத்துவதற்காக அல்ல. அப்படியாவது சிலராவது உணர்ந்து கடைத்தேறட்டுமே என்றுதான் அவ்வாறு ஒப்பிடுகிறார்கள். சிலராவது என்று கூறுவதுகூட discouraging ஆக இருப்பதுபோன்றோ அல்லது மிகைப்படுத்திக் கூறுவதுபோன்றோ தோன்றலாம்! உண்மையில் அப்படியல்ல. எதார்த்த நிலையே அதுதான்! நாம் ஒவ்வொருவருமே இதனை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அருட்கவிகளை வாசிப்பவர்கள் அனைவருமே சுயசிந்தனை ஓங்கி பயன் பெற்றார்களானால் நன்மைதான். 1911 பிறகு தான் சமுதாயத்தில் சுயசிந்தனையில் ஓங்கி வருபவர்களைக் காண முடிகின்றது.

            ஆனால் அதே நேரத்தில்,

           சிந்தனையுடன் பந்தித்து நிற்றல்தான் உண்மையில் நலம் பயக்கும் என்பதனையும், சுயசிந்தனையில் ஓங்கி வருபவர்கள் கவனிக்க வேண்டியது அவசியமாகின்றது.       

       ஐயுணர்வில் மயங்காமலோ

                   அல்லது

     புலன்மயக்கத்தில் இருந்து விடுபடவோ

                அல்லது

    உணர்வு நிலையிலேயே மயக்கமுற்றிருப்பதிலிருந்து விழித்தெழவோ,

          இன்பதுன்ப இயலின் தாரக மந்திரமான அளவும், முறையும் காக்கின்ற நினைவில் உறுதியாக இருக்கக் கற்றுக்கொள்ளுதல் அவசியமாகின்றது.

    ‘ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து திருந்துவது எந்நாளோ’ என அறிந்த உலக நல ஆர்வலரும், உலக நலத் தொண்டரும், நாம் பெருமிதம் கொள்ளத்தக்கவருமான நம் குருநாதர் வகுத்துக் கொடுத்த உலக சமாதானத் திட்டங்கள் தான் ஒட்டு மொத்த சமுதாயத்தையே(en masse) புலன் மயக்கத்திலிருந்து விழித்தெழச்செய்யும் என்பதில் ஐயமே இல்லை. இதனைக் கருதிதான் ஆங்கிலப்புத்தாண்டு தினத்தையும், மகரிஷி அவர்களின் பிறந்தநாள் விழாவினையும் உலக அமைதி வேள்வி தினமாகக் கொண்டாட அன்புடன் நம்மைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள் மகரிஷி அவர்கள்.

    திருவள்ளுவரின் எச்சரிக்கை:

       திருவள்ளுவர் ஐயுணர்வில் எச்சரிக்கையாக இருக்க ஐம்பொறிகளை கருவி(instrument) என்கின்ற பொருளில் பயன்படுத்தவில்லை. ‘பொறி’ என்பதற்கு கருவி என்றொரு பொருள் இருந்தாலும், அதற்கு மற்றுமொரு பொருளும் இருப்பதனை மறந்துவிடக்கூடாது. அதாவது ‘பொறி’* என்பதற்கு வசப்படுத்தும் கருவி (உதாரணம்: எலிப்பொறி. ஆங்கிலத்தில் trap) என்கின்ற பொருளில்தான் அறிஞர் திருவள்ளுவர் கூறியிருக்கிறார். சமுதாயத்தில் துன்பம் நிலவுவதற்கு உள்ள பல காரணங்களில் முதன்மை வகிப்பது, ஐயுணர்வில் மயங்குவது. (நமது சத்சங்க அறிவிற்கு விருந்தில் 22.07.2015 அன்று சிந்தித்த ஐவகை மயக்கம் சிந்தனையைக் காண Click here) புலன்களை கருவிகளாக மட்டுமே பயன்படுத்தத் தெரியாமல் அதனை வசப்படுத்தும் கருவியாக நாம் ஆக்கி, அதனுள் அகப்பட்டுக் கொள்வது. ஞானம் என்பதற்கு விளக்கம் கொடுக்க வந்த மகரிஷி அவர்கள், ‘தெளிவு என்பது பொதுவான விளக்கம், எனினும் அறிவை அறிந்த தெளிவு என்பதே சிறப்பான விளக்கம்’ என்கிறார். அவர்தான் அறிவை அறிந்து அதனை சமுதாயத்திற்கு வெளிப்படுத்தி, அறிவிற்கே இயல் ஏற்படுத்திய குருநாதர் ஆயிற்றே! ஆகவே அவர் ஞானம் அடைந்த ஞானிக்கு இலட்சணம் கூறுகையில் இன்பதுன்ப இயல் அறிந்து ‘அளவும், முறையும்’ காப்பதே ஆகும் என்பார்.

    இன்பத்தின் அளவு முறை மாறும்போது
    ஏற்படும் ஓர் பொருத்தமிலா உணர்ச்சியேதான்,
    இன்பத்தின் மறுபெயராம் துன்ப மாயும்
    இரண்டும் அறிவின் அலைகளாயும் கண்டேன்.’

    என்கிறார். எதார்த்தத்தில் இன்பம்தானே துன்பமாகின்றது?! உதாரணத்திற்கு உணவு ருசியாக இருக்கின்றது என்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அஜீரணமாகின்றதல்லவா? அஜீரணம் துன்பம்தானே! எனவே எல்லாப் புலன்களையும் பயன்படுத்துகையில் எச்சரிக்கையாக இருந்து அளவும், முறையும் காக்க வேண்டும். அதற்கு அறிவு-வழி வாழ்க்கை வாழவேண்டும். இனி அறிவு வழி வாழ்க்கை வாழ்வது எப்படி எனப்பார்ப்போம்.

    * பொறிவாயில்(trap) ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்.                                                      . . . குறள் எண். 6

    தத்துவச் சிந்தனையாளர்கள் காலம் காலமாக இந்த பொறியில் (trap) சிக்கிக் கொள்வதை ‘விட்டில் பூச்சி’ உதாரணம்  மற்றும்  காய்ந்துபோன சுவையற்ற எலும்பினைக் கடிக்கும் நாய், தன் வாயில் இருந்து வரும் தனது ரத்தத்தை,  எலும்பிலிருந்துதான்  வருகின்றது என்று தெரியாமல், சுவைத்து இன்புற்று மேலும்  வேகமாய் கடிக்கும் உதாரணத்தையும் கூறி  நம்மை எச்சரித்துள்ளனர்.

    அறிவு-வழி வாழ்க்கை:

    சான்றோரைச் சார்ந்திருக்க வேண்டும். மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்பதனை உணர்ந்து நினைவில் கொள்ள வேண்டும். சான்றோரைச் சார்ந்திருந்து, அவர்களின் துணைகொண்டு சிந்தனையில் உயர்வதால், அளவும், முறையும் காத்து, புலன்பொறிகளில் சிக்காமல் வாழ்வாங்கு வாழ்வது அறிவு-வழி(ஆறாம்) வாழும் வாழ்க்கை. இவ்வாறு வாழ்வது அரிதினும் அரிதாக இருந்தது 1911 வரை. ஆனால் 1911 லிருந்து ஆன்மீக வரலாற்றில் திருப்புமுனை ஏற்பட்டு இன்ப-துன்ப இயல் உருவாகியிருப்பதால் அளவு மாறாமலும், முறை மீறாமலும் அறிவு புலன்களுக்கு அடிமையாகாமல் வாழ்வாங்கு வாழும் நிலை மனவளக்கலைஞர்களால் அதிகரித்து வருகின்றது என்றால் அது மிகையாகாது. அறிவு வழி வாழ்வது அயரா-விழிப்புணர்-வாழ்வு(life in constant awareness). ஏனெனில் அறிவு வழி வாழ்வு எப்போதுமே விழிப்புணர்வில்(constant awareness) இருக்கச் செய்கின்றது.

    புகழொடு தோன்றுக!

    மனம்போன போக்கில் வாழும் வாழ்க்கையை பல்லாயிரம் பிறவிகளாக வாழ்ந்து விட்டது சமுதாயம். அவ்வாறு வாழ்ந்ததன் விளைவுகளை சமுதாயத்தில், அதன் அங்கமான நாம் இப்போதுதான் அறிந்து கொள்கிறோம். மனிதனாகப் பிறப்பவர் புகழுக்குக் காரணமான குணத்தோடு பிறக்க வேண்டும். அக்குணம் இல்லாதவர் பிறக்காமல் இருப்பதே நல்லது என்கிறார் திருவள்ளுவர். அதனை அவர் வாய்மொழியாகவே கேட்போம்.

    dheaivappulavar

    தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று’         . . .   குறள் 236.

    மனிதனாகப் பிறப்பவர் புகழுக்குக் காரண குணத்தோடு பிறக்க வேண்டுமெனில் யார் அதற்குப் பொறுப்பு? பிறந்தவனா பொறுப்பு? பெற்றோர்களே பொறுப்பு. வித்து நன்றாக இருந்தால்தான் முளைக்கும் பயிரும் நன்றாக இருக்கும். வித்து சரியில்லை என்றால் பயிரைக் குறை கூறி என்ன பயன்? அதாவது பெற்றோர்கள் தங்களது வம்சாவளியை கருவில் திருவுடையவர்களாகப் பிறப்பிக்கச் செய்ய வேண்டும். அதற்கு பெற்றோர்கள் வாழ்வு ஆங்கு(இல்லறத்தில்) இருக்கும்படி வாழவேண்டும். பெற்றோர்களின் கருமையங்களில் புகழுக்கு எதிரான கலங்கங்கள் இருப்பின் அவர்களின் வம்சாவளி எப்படி புகழுக்குக்காரண-குணத்தோடு பிறக்க முடியும்?

    ஆகவே திருமணத்திற்கு முன்பே ஆணும், பெண்ணும் ஒழுக்கச்சீலர்களாக திகழ்வதற்கான மனவளக்கலை போன்ற அரிய பயிற்சிகளை மேற்கொண்டு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகின்றது.

    அகம் பூரிப்படைகின்றது:

    எதனால் அகம் பூரிப்படைகின்றது? எப்படி வாழ்வது என்று அறியுங்கால், இதுவரை ஒரு பயனும் இல்லாமல் வாழ்ந்து விட்டோமே என எண்ணத் தோன்றுகிறது இப்போது! பிறவி தொடர்ந்து கொண்டே போகின்றதே என்கின்ற வருத்தம் வந்துவிட்டது. இந்நேரத்தில் இருபத்தோறு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இப்போதாவது, இந்த நூற்றாண்டிலாவது ‘வாழ்வாங்கு வாழ்வது’ பற்றி அறிந்துகொள்கிறோம் என்பதனை நினைத்து அகம் பூரிப்படைகின்றது. ‘பூரிப்பு’ என்றால் என்ன என்று தெரியும். ‘பூரி’ என்பது வினைச்சொல். பூரிப்பு என்பது பெயர்ச்சொல். ‘பூரி’ என்றால் பெருமித உணர்வு ஏற்படுதல்(BE ELATED). ‘பூரிப்பு’ என்றால் பெருமித உணர்வு; மிகுந்த மகிழ்ச்சி(ELATED FEELING; EXULTATION) என்று பொருள்.

    பல்லாயிரம் பிறவிகளாக எப்படியாவது வாழ்வது என்கின்ற நிலை ஏன் ஏற்பட்டது? அதற்கானக் காரணம் இப்போது புரிகின்றது. என்ன புரிதல்?

    அன்று வேதாத்திரி வாழ்வியல் அகராதி இல்லை:

    எவ்வாறு வாழவேண்டும் என்பதனை தெரிந்து கொள்ள வேதாத்திரிய வாழ்வியல் அகராதி 1911 வரை உருவாகவில்லை. ஆகவே இதுவரை ஆன்மா பல்லாயிரம் பிறவிகளை வீணாக்கிவிட்டது என்று புரிய ஆரம்பித்து விட்டது.

    இருப்பினும், பல்லாயிரம் பிறவிகள் வீணாகிப்போனாலும், இப்போதாவது, வாழ்வாங்கு வாழ்வது பற்றி தெரிந்து கொள்ள வேதாத்திரிய வாழ்வியல் அகராதி உருவாகியுள்ளதால், அறிவு சிந்திக்க ஆரம்பித்துள்ளது. வாழ்வாங்கு வாழ்ந்து பிறவியின் பயனை இப்பிறவியிலாவது அடைவோம் எனத் தீர்மானிக்கின்றது. ஆனால் எவ்வாறு ‘வாழ்வாங்கு வாழ்வது’ என்பது ஆறாம் அறிவிற்குத் தெரியவில்லை.

    வாழ்வாங்கு வாழ்வதனைத் தெரிவிக்கின்றது வேதாத்திரிய அகராதி:

    இதுவரை ‘வாழ்வாங்கு வாழ்வது’ பற்றித் தெரியாமல் இருந்ததை இப்போது தெரிந்து கொள்வதற்கு, எப்படி மொழியில் தெரியாத சொற்களுக்கு பொருள் தெரிந்து கொண்டு பயன் பெறுவதற்கு அகராதி இருகின்றதோ அதுபோன்று, வாழ்வாங்கு வாழ்தலுக்கானப் பொருளைத் தெரிந்து கொண்டு மனித சமுதாயம் பயன் பெறுவதற்கு வேதாத்திரியம் அகராதியாகத் திகழ்கின்றது. எனவே வேதாத்திரியம் ஓர் அகராதி என்று கூறி அகம் மகிழ்கிறோம். வாழ்வாங்கு வாழ்வதற்கு என்னவெல்லாம் திருவேதாத்திரியம் ஆறாம் அறிவிற்குத் தெரிய வைத்துள்ளது என்கின்ற கோணத்தில் இன்றைய சிந்தனை மேற்கொள்ளப்படுகின்றது.

    அகராதி என்பது என்ன, அதன் பயன் என்ன என்று அறிவோம். அதனை நினைவில் கொண்டே, திருவேதாத்திரியம் ஆறாம் அறிவிற்கு என்னவெல்லாம் தெரிய வைக்கின்றது என்பதனை ஆராய்கிறோம். முடிவில் வேதாத்திரியம் ஓர் அகராதி என்பது சாலப் பொருந்துகின்றது என்று உறுதியாக ஒப்புக்கொள்ள இருக்கிறோம். எதற்கெல்லாம் வேதாத்திரியம் அகராதியாகத் திகழ்கின்றது என்பதனையும் முடிவு செய்ய இருக்கிறோம். இஃதெல்லாம் எதற்காக? நம் சுயநலத்திற்காக! இங்கு சுய நலம் என்பதால் தவறில்லை. எப்படி?

    பண்பேற்றம் பெறுவதில் சுயநலமில்லை:

    ஒருவர் பண்பேற்றம் பெறுவதில் சுயநலம் மட்டும் இல்லை. அதில் பிறர் நலமும் இருக்கின்றது.  எனவே ஒருவரின் பண்பேற்ற-சுயநலத்தின் பயன், சமுதாயத்திற்கும் அல்லவா போய்ச் சேர்கின்றது! ஒரு மனிதனின் பண்பேற்றம் அவன் பயன்பெறுவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. ஒருவரின் பண்பேற்றம் சமுதாயத்திற்கு துன்பம் அளிக்காமல், நன்மையே செய்து கொண்டிருக்கும் கடமையையும் வளர்க்கின்றதல்லவா? இரண்டொழுக்கப் பண்பாடு அல்லவா வளர்கின்றது! ஒருவரின் பண்பேற்றம் வான்காந்தக் களத்தை அல்லவா தூய்மை செய்கின்றது! இப்படியெல்லாம் நினைந்து பண்பேற்றம் பெறுவதற்கு இயல்பூக்கத்தை பயன்படுத்திக் கொள்கிறோம்.

    அகராதியின் வரையறைக்கேற்ப வேதாத்திரியம் பொருந்துதல்:

    இப்போது அகராதி என்பது என்ன என்று நினைவில் கொள்வதற்கு எளிதாக, ஒரு சில வரிகளில் அதனை வரையறை(Define) செய்து கொள்வோம். அகராதியின் வரையறைக்கேற்ப(Definition) வேதாத்திரியம் ஓர் அகராதி என்பது எவ்வாறு பொருந்தி வருகின்றது என அறிந்துகொள்வோம்.

    அகராதி என்பது ஒரு மொழியில் நமக்குத் தெரியாமல் உள்ள புதிய புதிய சொற்களுக்குப் பொருளும் அச்சொற்களுக்கான இலக்கணமும், அவற்றை எவ்வாறு உபயோகிப்பது பற்றியும் தெரிந்து கொள்வதன் மூலமாக அம்மொழியில் வளம் பெற்று, அம்மொழியில் ஆளுமை பெறுவதற்கு பயன் படும் ஒரு நூல். சுருக்கமாக அறியாமை நீங்கி, அறிவு வளம் பெற்று அறிவை உடைமையாக்கிக் கொள்ள உதவுகின்ற ஒர் அரிய நூல் அகராதி.

    அகராதியின் இந்த வரையறை வேதாத்திரியத்திற்கு பொருந்தி வருமானால் ‘வேதாத்திரியம் ஓர் அகராதி’ என்பது சரியாக இருக்கும் அல்லவா? மொழியின் மீது ஆளுமை பெறும் கலைக்கு அகராதி உதவுவதுபோல், மனித அறிவு, மனம் போன போக்கினில் போகாமல், புலன்களின் மீது ஆளுமை புரிந்து அறிவு ஆட்சி செய்யும் கலையை கைவல்யம் செய்துகொள்வதற்கு (அறிவாட்சித்தரம் உயர்வதற்கு) வேதாத்திரியம் உதவுவதால் வேதாத்திரியத்தை அகராதி(வாழ்வியல்) என்கிறோம்.

    அகராதியை வரையறை செய்து கொண்டோம். அந்த வரையறையை வைத்து வேதாத்திரியம் எவ்வாறு அகராதி வரையறையில் பொருந்தி வருகின்றது என மேலும் அறிந்து கொள்வோம்.

    வேதாத்திரியம் என்பது என்ன?

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் வாயிலாக இயற்கை/இறை ஏற்படுத்திய எல்லா இயல்களையும் உள்ளடக்கிய (all Sciences needed for successful and peaceful living) வாழ்வியல் முறையே வேதாத்திரியமாகும். ஆன்மா உடலெடுக்கின்றது. ஒரு நாள் உடலை உதிர்த்துவிடுகின்றது. இதற்கிடையில் நடப்பதுதான் வாழ்க்கை. துன்பமில்லாமல் வாழவேண்டும். அதற்கான வழிமுறைகளையும், அதே நேரத்தில் எல்லா உயிரினங்களையும் விட மனிதஇனம் சிறப்புடையதால் பெரு வாழ்வு வாழவேண்டும். அதற்கு வழிகாட்டுதல் வேண்டும். அந்த வழியைத் தெரிந்து கொள்வதற்கு உதவுவதுதான் வேதாத்திரிய அகராதி. எப்படி?

    ஒரு மொழியில், தெரியாத புதிய வார்த்தைகளுக்கு பொருள் அறிந்து கொண்டு வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்கு அகராதி உதவுவதுபோல், இதுவரை தெரியாதிருக்கின்ற, நன் முறையில் வாழ்வதற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொண்டு,

    • வாழ்வு ஆங்கு (இல்லறத்தில்) நடைபெறும் வண்ணம்,
    • திருவள்ளுவர் எண்ணியதுபோல் வாழ்வாங்கு வாழ்வதற்கு உதவுகின்றது  இருபதாம் நூற்றாண்டின் திருவள்ளுவரின் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள வாழ்வியல் அகராதி.

    இப்போது வேதாத்திரிய வாழ்வியல் அகராதியில் என்னென்ன அறிந்து கொள்ளமுடிகின்றது என்பதனை தெரிந்துகொள்ள மாதிரிக்காக(sample) சுருக்கமாக சிறு அளவிலே ஒரு பட்டியல் வரைவோம். அதற்கு முன்னர் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்வோம்.

    அறிய வேண்டியதெல்லாம் இருக்கின்றது திருவேதாத்திரியத்தில்:

    அறிய வேண்டியவை எல்லாம் இருப்பதால் திருவேதாத்திரியத்தை ஏற்கனவே சத்சங்கத்தில் ‘வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலர்’  (click here) எனப் போற்றியிருக்கிறோம். மனவளக்கலைஞரல்லாத யாராவது ஒருவர் “நீங்கள் வேதாத்திரிய தாசனாக உள்ளீர்களே, அப்படி என்னதான் உள்ளது வேதாத்திரியத்தில்?” என்று நம்மை வினவினால் என்ன கூறுவோம்? வேதாத்திரியத்தில் என்னென்ன உள்ளன என பட்டியலிட்டுக் கூறுவதற்கு பதிலாக, “கேளுங்கள்! சொல்லப்படும்” என்போம். உங்கள் அறிவு எதனை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கின்றதோ அதனைக் கேளுங்கள். அது வேதாத்திரியத்தில் இருக்கின்றது எனக் கூறுகிறேன்” என்போம். ஏனெனில் அவர்கள் ஒருவர் அறிய வேண்டியது/விரும்புவதெல்லாம் இருக்கின்றது திருவேதாத்திரியத்தில். திருவேதாத்திரியத்தில் அறியவேண்டியவைகள் ஏராளம்! ஏராளம்!! எவ்வாறு அப்படிக் கூறமுடிகின்றது? எல்லையில்லாததைக்(Infinite) காண்பித்துவிட்டது; உணர்த்திக்கொண்டே இருக்கின்றது திருவேதாத்திரியம். எல்லையில்லாதனை உணர்த்துகின்ற திருவேதாத்திரியத்தில் உள்ளதனை பட்டியலிட்டு கூறமுடியுமா? பட்டியலில்தான் அடங்குமா திருவேதாத்திரியக் கண்டுபிடிப்புகள்? எனவேதான் நாம் அவ்வாறு கூறவேண்டியுள்ளது. சிந்தனை வளம் பெறுவதற்கு என்ன வளம் இல்லை இந்த திருவேதாத்திரியத்தில்? ஒழுங்காய் பாடுபட்டால் வாழ்வாங்கு வாழலாம். முயற்சியின் அளவே ஞானம் என்கிறார் நம் குருநாதர். அதனை அவரே மொழிய நாம் அதனைக் கேட்டு இன்புறுவோம்.

    முயற்சியின் அளவே ஞான விளைவு(1955)

    வித்து, நிலம், உரம்,  தண்ணீர் காவற்கேற்ப

            விளைவுதரும்; அதுபோல உனக்கு ஆசான்
        அத்துவித தத்துவ வித்தறிவி லிட்டால்
            அதற்கொழுக்கம் என்றஉரம், அறிவை ஒன்றும்
       நித்த தவம், ஆராய்ச்சி என்ற தண்ணீர்
            நீ சலனமுற்று அறு குணங்களாஆகா
       வித்தை எனும் காவல், இவையனைத்தும் வேண்டும்.
          விளைவாக நீயடையும் கனியே ஞானம்.
                                                                                 . . . ஞா.க. 1483.

    குறிப்பு: காவற்கேற்ப, அத்துவித தத்துவ, வித்தறிவி லிட்டால், வித்தைஎனும் காவல்ஆகிய அருஞ்சொற்களைக் கவனிக்கவும் அன்பர்களே!

    ஒருவர் வாழ்வதைப் பொருத்து வையகம் பயன் பெறுவது அமையும்:

    இங்கே புத்தர் வாழ்வைப்பற்றிக் கூறுவதனை நினைவிற்கொள்வோம். என்ன கூறுகிறார்? நூறு ஆண்டுகள் வாழ்வதைக் காட்டிலும் ஒரு நாள் வாழ்வது மேலானது என்கிறார். என்ன கூறுகிறார் புத்தர்? எப்படி வாழவேண்டும் என்பதற்கு நிபந்தனை ஏதும் வைத்துள்ளாரா புத்தர்? ஆம்! அந்த நிபந்தனை என்ன? கடினமானதல்ல அந்நிபந்தனை! ஒருவர் அறிவாளியாக வாழவேண்டும் என்கிறார் புத்தர். அவ்வளவுதான். ஒருவர் நூறு ஆண்டுகள்கூட வாழலாம். நூறு ஆண்டுகள் வாழ்வதால் மட்டுமே அவர்தான் என்ன பயன் பெற்றிருக்கப்போகிறார்?! இவ்வையகம் தான் என்ன பயன் பெற்றுவிடமுடியும்? ஆகவே ஒருவர் எவ்வாறு வாழ்கின்றார் என்பதனை அறிய ஆவல் கொள்கின்றது இவ்வையகம். அவர் வாழ்வதைப் பொருத்து இவ்வையகம் பயன் பெறும்.

    இருபத்தாறு நூற்றாண்களுக்குப் பின்னர் புத்தர் எண்ணியவாறு வாழ்ந்த ஆன்மா:

    அறியாமையில், அளவு மீறியும், முறை மாறியும் புலன்வழி வாழ்க்கை மட்டுமே நூறு ஆண்டுகள் வாழ்வதால் பயன் அடைவது யார்? புலன் மயக்கத்தில் மயங்கிய அறிவு ஐம்புலன்கள் தான் (தான்-நான்) பயன் அடைகின்றன என ஒருவேளை சொல்லலாம். இங்கே ஆழ்ந்து சிந்திக்கலாமே வேதாத்திரிய இன்பதுன்ப அகராதியின் துணையுடன். அறிவு புலன் உணர்விற்கு அடிமையாகி புலன்கள் மறைமுகமாக விரித்திருக்கும் வலையில்(trap) சிக்கிக் கொண்டு தவிப்பதுதான் எஞ்சுகின்றது என்பதனை அறியமுடியும்.

    உதாரணத்திற்கு நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களையே எடுத்துக் கொள்ளலாம். புத்தருக்குப் பின்னர் அவர்(புத்தர்) விரும்பியபடி, வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபினில் அவதரித்த ஆன்மாக்கள் பலர். இருபதாம் நூற்றாண்டில் உடலெடுத்த ஆன்மாக்களில் நமக்குத் தெரிந்த அளவில்,

    உலகம் உள்ளவரை நினைவு கொள்ளக் கூடிய வகையில்
    *புத்தரின் ஆதங்கத்தை தீர்ப்பதற்காக 90 ஆண்டுகளுக்கும் மேலாக (96-5=91) அறிவுடன் வாழ்ந்த ஆன்மாவாக,
    உலகமக்களுக்கெல்லாம் ஆன்ம ஞானத்தை எளிமையாக அருளியிருக்கின்ற ஒர் ஆன்மா வாழ்ந்திருக்கின்றது என்றால் அது ‘வேதாத்திரி’ என்கின்ற ஆன்மா. அத்தகைய ஆன்மாவை, நமக்கு குருநாதராக அமைத்துக் கொடுத்தமைக்கு, நமது பெற்றோர்களுக்கும், குருநாதருக்கும், இயற்கைக்கும்/இறைக்கும், நன்றி கூறும் வகையிலே, இப்பிறவியிலேயே பிறவிப்பயனை பெற்றிடுவோம் என்கின்ற உறுதிமொழியினை அளிக்க மனம் விழைகின்றதல்லவா?

    இப்போது, புத்தர், ‘வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும்’ என்று கூறியதை நேரிடையாகவே அவர் வாய்மொழியாகவே அறிந்துகொள்வோம்.

    amudhamozhi_38

    * “அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.” என்கிறார் கௌதம புத்தர்.
    இதற்கான விளக்கத்தை அடுத்த சத்சங்கத்தில் ஆராய்வோம். இத்துடன் இன்றைய சத்சங்கத்தை நிறைவு செய்துகொள்வோம்.  அடுத்த சத்சங்கத்தில், அதாவது (23-03-2022) சிந்தனையைத் தொடர்வோம். வாழ்க வளமுடன்! இவ்வையகம் வாழட்டும்!!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!          வளர்க அறிவுச் செல்வம்!!