இன்றைய விருந்து

  • 231-பழக்கமும் விளக்கமும்-1/?

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    அறிவிற்கு விருந்து—231

    02-10-2016—ஞாயிறு.

    வாழ்க வளமுடன்.

    இன்றைய அறிவிற்கு விருந்து ‘பழக்கமும் விளக்கமும்’ என்கின்ற தலைப்பு. தலைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது. ஏன் இந்த தலைப்பை எடுத்துக் கொள்கிறோம்?

    பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் என்ன தொடர்பு?

    அதனை அறிந்து கொள்வதற்கே இந்த தலைப்பு. இந்த தலைப்பை எடுத்துக் கொண்டதற்கான காரணத்தை ஒரு சிலர் அறிந்திருக்கலாம்; அனுபவத்தால், சிந்தனையால். வேறு சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம்.

    பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் உள்ள தொடர்பை ஆன்மீகப்பயிற்சியினை மேற்கொள்பவர்கள் மட்டுமே அறிந்திருக்க வேண்டும் என்பதில்லை. ஆன்மீகப்பயிற்சியினை மேற்கொள்ளாத ஏனையோரும் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள வேண்டும். யாரிடம் இல்லை தேவையில்லாத பழக்கங்கள்? உதாரணத்திற்கு சினப்படும்-பழக்கம். மனிதன் என்றால் சினப்படாமல் இருக்க முடியாது என்று நினைக்கலாம். சினம் என்பது ஒரு சேர்ந்தாரைக் கொல்லி. சினம் உடல் நலத்திற்கு கேடானது. மருத்துவர் ஒரு சில நோய்களுக்கு ‘சினம் கொள்வதனை தவிர்த்திடுங்கள்’ என அறிவுறுத்துகிறார். சினப்படுவது ஒரு பழக்கமாகவே ஆகிவிடுகின்றது ஒரு சிலருக்கு. காரணமில்லாமலேயும் பழக்கத்தால் சினம் வருகின்றது.

    ஆகவே எல்லோருமே தங்களிடம் உள்ள தீய பழக்கங்களை நீக்கிக் கொண்டு அதற்கு மாற்றாக நற்பழக்கங்களை மேற்கொள்வதற்கு மனிதர்கள் அனைவருக்குமே தேவைதான் ‘பழக்கமும் விளக்கமும்’. பற்றிய சிந்தனை. அறிவிற்கு விருந்திற்காக, பிரத்யேகமாக, ‘பழக்கமும் விளக்கமும்’ என்கின்ற தலைப்பை எடுத்துக் கொண்டு சிந்திக்கும்போது, அறிவு நல்லவைப்பற்றிய விளக்கம் பெற்று அதனைப் பழகுவதற்குத் தெளிவினைப் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். என்ன தெளிவு அது? அறிவோம் இச்சிந்தனையில்.

    பழக்கம், விளக்கம் ஆகியவற்றின் அறிவியல்:

    பழக்கம், விளக்கம் என்கின்ற சொல்லை சொல்லளவில்தான் தெரிந்திருக்கிறோம். அவை பற்றி அறிவியல் கண்ணோட்டத்தில்(science of habit and wisdom) இன்று அறிந்துகொள்வோம். மனிதவாழ்வின் நோக்கமே, பண்பில் ஏற்றம் பெற்று மனிதஅறிவின் தரத்தை முழுமையாக்குவதுதான்.
    எனவே மனிதன் வாழ்வில் நன்மாற்றங்கைளை, சீர்திருத்தங்களை (சீரமைக்கும் திருத்தங்களை) மேற்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும்போது மனிதனுக்கு சிக்கல் ஏற்படாமலும், ஒருவேளை சிக்கல் ஏற்பட்டால், சிக்கலின் அறிவியல் அடிப்படையைத் தெரிந்து கொண்டு, எவ்வாறு பொறுமையாக இருந்து சிக்கல்களை எதிர்கொண்டு பண்பேற்றத்தில் தொடர் விடாமுயற்சியுடன் முன்னேற்றமடைந்து அறிவின் முழுமைப் பேற்றினை விரைவில் அடைந்துவிட வேண்டும்.
    தலைப்பில் பழக்கம், விளக்கம் என இரண்டு சொற்களே இருந்தாலும், பதிவு-பதிதல் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

    பதி-பதிவு-பதிதல்(imprint) என்றால் என்ன?

    பதிதல் என்றால் அடையாளத்தை, தடயத்தை ஏற்படுத்துதல் என்று பொருள். ஒரு நாள் புதிதாக ஒரு செயலைச் செய்கிறான். அச்செயல் செய்ததற்கான அடையாளம்/தடயம் ஏற்படும். மீண்டும் மற்றொருநாள் அதே செயலைச் செய்கிறான். முதல் நாள் அச்செயல் புதியது. மற்றொரு நாள் அச்செயல் புதியதல்ல. அதே செயலை இரண்டாவது முறையாகச் செய்கிறான். இதற்கிடையில் முதல் நாள் செய்த செயல் செய்ததோடு மறைந்துவிடுவதில்லை. அதன் நினைவு உள்ளது. எப்படி? அதாவது அச்செயல் செய்தது அதன் சுவட்டை(Trace) ஏற்படுத்திவிட்டது. செய்த செயல் கருமையத்தில், உடல் உறுப்புகளில், மூளைச் செல்களில் பதிவை(சுவடு) ஏற்படுத்துகின்றது. அச்செயல் செய்யாதபோதும் செயல் செய்ததால் ஏற்பட்ட பதிவு நினைவாக, எண்ணமாக வருகின்றது. அச்செயல் தேவை என்றாலும் அல்லது தேவையில்லை என்றாலும் அச்செயலை மீண்டும் செய்யத்தூண்டுகின்றது மனம்.

    எந்த ஒரு நிகழ்ச்சியும் பதிதல் இல்லாமல் நடப்பதில்லை:

    இப்பிரபஞ்சத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியானாலும்/செயலானாலும் பதிதல் இல்லாமல் நடப்பதில்லை. பதிதல்(imprint) நடைபெறாமல் இருந்திருந்தால் மனிதனுக்கு ஞாபக சக்தி என்பதே இருந்திருக்காது. மனிதன் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடிவதற்கு பதிதலேதான் காரணம். முன்னர் செய்தது பதிந்துள்ளது. அவன் விருப்பத்தினாலோ அல்லது அந்த மனஅலைச்சுழல் வரும்போதோ அந்த பதிதல் எண்ணமாக எடுத்துக் காட்டப்படுகின்றது. மனிதன் எண்ணும்போது, அந்த எண்ணம், உடல் செல்களில், மூளையில், கருமையத்தில், வான்காந்தத்தில் பதிகின்றது. ஒவ்வொரு முறை எண்ணும்போதும் பதிவை ஏற்படுத்துகின்றது. எத்தனை பதிவுகள் ஏற்படுகின்றதோ அதற்கேற்றால்போல் பதிவு அழுத்தம் பெறுகின்றது.

    பரமாணுவிலும் பதிதல் நடைபெறுகின்றது:

    பரமாணு என்ன செயல் செய்தது பதிவதற்கு? இங்கே ஒரு முக்கியமான உண்மையையும் அறிந்து கொள்வோம். பரமாணுவிலும் பதிதல் நடைபெறுகின்றது. மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம். பரமாணு தோன்றியதே ஒரு நிகழ்வுதானே(செயல்தானே!)! அதனைத் தொடர்ந்து பஞ்சபூதங்கள் தோன்றியதும் நிகழ்வுகள்தானே! அதிலிருந்து உலகம் தோன்றி உயிர்கள் தோன்றி அதிலேயிருந்து உலகம் தோன்றி வந்த எல்லா இயக்கங்களும், அலையின் மூலமாக பரமாணுவில் பதிந்துவிடுகின்றது என்கிறார் மகரிஷி அவர்கள். எனவேதான் மனஅலைச்சுழல் மிகவும் நுணுகிவரும்போது பரமாணுவில் பதிந்த எல்லா நிகழ்ச்சிகளும் எடுத்துக்காட்டப்படுகின்றது என்கிறார் மகரிஷி அவர்கள்.(மேலும் விரிவாக அறிந்து கொள்ள மனவளக்கலை தொகுதி மூன்றில் உள்ள அலை இயக்கத்தைப் படிக்கவும்.) இந்த உண்மைக்கு மகரிஷி அவர்களே ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார். எப்படி?

    மகரிஷி அவர்கள் விதிவிலக்கு:

    எதற்கு விதிவிலக்காகத் திகழ்கிறார் மகரிஷி அவர்கள்? பொதுவாக ஆன்மீகத்தில் ‘கண்டவர் விண்டதில்லை’ எனப்படுகின்றது. அதாவது இறைவனைக் கண்டவரால் அதுபற்றி சொல்ல முடிவதில்லை என்பதாகும். இதற்கு விதிவிலக்காக, அத்வைதத்தை சுத்த அத்வைத விஞ்ஞானமாக விரிவாக்கியவர் மகரிஷி அவர்கள். பஞ்சபூதங்களைப் பற்றி தான் சிந்தித்த விதத்தை நமக்குத் தெரிவிக்க மகரிஷி அவர்கள் “பஞ்சபூத பூங்காவிலே உலாவினேன்” என்று அனுபவித்து, அழகாகக் கூறுகிறார். அவர் எந்த அளவிற்கு சிந்தனையை ரசித்திருக்கிறார் என்பதனை அறிய முடிகின்றது. எனவே அவர்போல் நாமும் சிந்திக்கவும் இதுபோன்ற மகரிஷி அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை அறிந்து ரசித்து, மகிழ்ந்து உயர்வினைப் போற்றிப் போற்றி இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்தி பண்பேற்றத்தில் . உயரவும் முடியும்.

    அவ்வாறு பஞ்சபூத சிந்தனைப் பூங்காவிலே உலவி வந்ததால்தான் அவர் அணுதோன்றியதை அறிய முடிந்தது. அணுதோன்றியவிதத்தை தான் அறிந்ததை அறிந்தவாறே நமக்கும் சொல்கிறார். அது எவ்வாறு தனக்கு சாத்தியமாகியது என்கின்ற உண்மையையும் கூறுவதனைக் கவனிப்போம்.

    கண்டவர் ஏன் விண்டதில்லை?(1955)

    ஆதியென்ற வெளியினிலே அணு எவ்வாறு
    அவதரித்தது என்றறியப் போனார் எல்லாம்,
    ஆதியாம் நிலையடைந்தார். அறிவு அங்கேது?
    அறிவுநிலை அடைந்தபின்னர் அதை யூகிப்பார் யார்?
    ஆதியே அணுவான காரணத்தை
    அறிஞரெல்லாம் விளக்காதது இதனால் என்று,
    ஆதிநிலை, அணுநிலை இவ்விரண்டு மாகி,
    அறிந்த நிலையில் விளக்கம் பெற்றுவிட்டேன்.

                                                               . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பதிதல்தான் பழக்கமாகின்றது என்பதால், பதிதல் பற்றி சுருக்கமாக அறிந்து கொண்டோம். இப்போது பழக்கம் என்றால் என்ன என்று அறிவோம்.

    பழக்கம் என்றால் என்ன?

    பழக்கம் என்றால் பலமுறை செய்து ஏற்கனவே படிந்துவிடுகின்ற செயல்(habit, practice). ஒரு செயலை மீண்டும், மீண்டும் செய்யும்போதும் அது உடல் உறுப்புகளில், மூளையில், கருமையத்தில், வான் காந்தத்தில் ஏற்கனவே உள்ள அச்செயல்-பதிவுகளின் மேல் பதிவுகளை ஒவ்வொரு முறையும் ஏற்படுத்துவதால் அச்செயல்-பழக்கம் வலிமை பெறுகின்றது என்பதனை ஒவ்வொரு மனிதனும் கவனிக்க வேண்டியது அவசியம். அதனால்தான் பலநாள்(இப் பிறவியில் மட்டுமல்லாது, நமக்கு முன்பிறவிகளிலும் ஆன்மா செய்த) செய்து வருகின்ற செயல்களின் பழக்கம் வலிமை அடைந்து, மேலும் அது தீயபழக்கமாக இருக்கும் பட்சத்தில் அதனை விடுவதற்கு மனிதன் போராட வேண்டியிருக்கிறது. அப்போராட்டத்தில் ஒருசிலரே வெற்றி பெறுகின்றனர். இதுவரை பழக்கம் என்பது பற்றி சிந்தித்தோம். இப்போது விளக்கம் என்பது பற்றி சிந்திப்போம்.

    விளக்கம் என்றால் என்ன?

    ‘விளக்கம்’ என்கின்ற சொல் ‘விளக்கு’ என்கின்ற சொல்லிருந்து வந்துள்ளதால் முதலில் விளக்கு என்றால் என்ன என்று அறிவோம்.

    விளக்கு= 1) ஒளி தரும் சாதனம்(lamp,light)
    2) பாத்திரம், பல் முதலியவற்றைத் துலக்குதல்(clean the vessel, brush the teeth)
    3) தெளிவு படுத்தும் வகையில் விரிவாக எடுத்துரைத்தல், விவரித்தல்(explain, elucidate)
    விளக்கம் என்பது, மற்றவர் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றைப் பற்றியத் தெளிவு ஏற்படுத்துவதற்காக அனுபவம் உள்ளவர் எடுத்துரைக்கும் தகவல் விளக்கம் ஆகும்.
    ஆறாம் அறிவின் சிறப்பே சிந்திப்பது என்பதால் விளக்கம் என்பது தனக்குத்தானே ஏற்படுவதும் உண்டு. இது ஒரு சிலருக்கே சாத்தியமாகின்றது. ஏனெனில் பெரும்பாலோர் சிந்திப்பதில்லை. அப்படி சிந்தித்தாலும் எப்போதுமே சிந்திப்பது இல்லை. அறிவு சிந்திக்காமல் செயல் புரிந்தால் விளைவு எப்போதுமே இன்பமாக இருக்கும் என்கின்ற உத்திரவாதம் இல்லை. எனவே பெரும்பாலும் செய்ய இருக்கின்ற செயலுக்கு என்ன விளைவு வரும் என்று முன்னரே சிந்திக்காமல் உணர்ச்சிவயத்தில் பொறுமையில்லாமல் செய்யப்படும் செயல்களுக்கு விளைவு துன்பமாகத்தான் வருகின்றது.
    எப்படி விளக்கு(lamp) இருட்டினை நீக்கி தனது ஒளியினால் வெளிச்சத்தைத் தருகின்றதோ, அதுபோல் அறிவு விளக்கப்படும்போது ஏற்படுகின்ற விளக்கம், அறியாமை என்கின்ற இருட்டினை நீக்கி அறிவு அறிவொளி வீசுவதற்குத் தெளிவைத் தருவதால்,
    அறிவு ஏற்கனவே ஒன்றைப்பற்றி தெரிந்திருந்து ஆனால் தெளிவில்லாமல் இருப்பவர்களுக்கும் அல்லது
    அந்த ஒன்றைப்பற்றித் தெரியாமலே இருப்பவர்களுக்கும்
    தெளிவு தேவையாக உள்ளது.
    இதுபோன்று தெரிந்திருந்து தெளிவில்லாமல் இருப்பது அல்லது தெரியாமலே இருப்பது ஒன்று மட்டும் அல்ல. பல உள்ளன மனிதனிடம்.
    எனவே இரு தரப்பினருக்குமே பிறரின் அனுபவம் தேவையாக உள்ளது. பிறரின் அனுபவம் நேரிடையாக அவரிடமிருந்தோ அல்லது அவர் எழுதியுள்ள நூல்களின் வாயிலாகவோ அறிந்து கொள்வது விளக்கம் எனக் கொள்ள வேண்டும். எதற்காக இந்த விளக்கம் பெறப்படவேண்டும்? தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றைப் பற்றிய தெளிவில்லாமல் செய்யப்படும் செயல்களின் முழுப்பயனை செயல்புரிபவர் அடைய முடியாது. தெளிவில்லாமல், செய்யப்படும் செயல்களின் முழுப்பயனை செயல்புரிந்து அடையாத நிலை என்றால் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றைப்பற்றித் தெரிந்துகொள்ளாமல், அதனால் செயலும் புரியாமல் இருப்பவருக்கு இழப்புதான் பெரிதாக இருக்குமல்லவா?! எனவே பிறர் வாழ்க்கை-அனுபவங்களிலிருந்து வரும் விளக்கம் இக்குறையை நிவர்த்தி செய்யும் வல்லமை உடையது. எனவே வாழ்க்கையைப்பற்றிய விளக்கம் என்பது இன்றுள்ள சூழ்நிலையில் அனைவருக்குமே அவசியம்.

    எல்லோருக்கும் பொதுவானது வாழ்க்கைத் துறை:

    பணியின் நிமித்தமாகப் பல்வேறு துறைகளில் இருக்கின்றனர் மனிதர்கள். ஆனால் எல்லோருக்கும் பொதுவான ஒரு துறை உள்ளது. அதாவது பணியின் காரணமாக வெவ்வேறு துறைகளில் இருந்தாலும் எல்லோரும் வாழப்பிறந்தவர்களே. எனவே எல்லோருக்கும் பொதுவான துறை வாழ்க்கைத்துறை. இன்னமும் எவ்வாறு வாழ வேண்டும் என அறிந்து வாழ்வதில்லை மனிதகுலம். இப்படிச் சொல்வது மிகவும் வியப்பாகவே இருக்கலாம். உண்மையா என்பதனை சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். ஒரு செயலோ/நிகழ்வோ சரியாக நடக்கின்றது என்றால் அதனால் நன்மையேதான் இருக்கவேண்டும், வாழ்க்கை என்கின்ற நிகழ்வில். நன்மை குறைந்துள்ளது. அதாவது துன்பம் மிகுந்துள்ளது. அப்படி என்றால் பொருள்? வாழ்வது மனிதன்? எவ்வாறு வாழ வேண்டும் என்கின்ற விளக்கம் மனித குலம் இன்னமும் முழுவதுமாகப் பெறவில்லை. எனவே வாழ்க்கை என்பது என்ன, அதனை எவ்வாறு சிரமமின்றி, துன்பமில்லாமல் வாழ்வது. துன்பம் வந்தாலும் அதனை எவ்வாறு எதிர்கொண்டு வாழ்வது போன்றவற்றைப்பற்றிய அறிவியல் உண்மைகள் 1911 முன்னர் வரை கண்டுபிடிக்கபடவில்லை. இப்போது மனவளக்கலையால் வாழ்க்கைக்கு என பிரத்யேகமாக இயல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுவே வாழ்வியல்(Science of Living).

    எனவே வாழ்வதற்கு விளக்கம் அவசியமாகின்றது. பொதுவாக விளக்கம் என்றால் என்ன என்று முன்னர் அறிந்தோம். ‘விளக்கம்’ பற்றி மேலும் விளங்கிக் கொள்வோம்.

    சிந்தினையும் விளக்கமும்:

    சிந்திப்பதற்கும் விளக்கத்திற்கும் தொடர்பு உள்ளது. ஒருவரின் அறிவின் தன்மையை – சிறப்பைக் குறிப்பிடும்போது அவர் அறிவுக்கூர்மை உடையவர் என்கிறோம். கூர்ந்த அறிவுடையவர் என்கிறோம். அறிவு அரூபமானது(உருவமில்லாதது) என்றாலும் அறிவை கூர்மையுடையது என்கிறோம். உருவமில்லாத ஒன்றை கூர்மையாகவுள்ளது என்று சொல்வது எப்படி பொருத்தமாக உள்ளது? கத்தி கூர்மையாக உள்ளது என்கிறோம். இது சரி, கத்தி பருப்பொருளாக(உருவமுள்ளது) உள்ளது. எனவே கத்தி கூர்மையாக உள்ளது என்பது கண்களுக்கே தெரிகின்றது.

    கத்தி கூர்மையாக இருக்க வேண்டும்:

    கத்தி என்று ஒன்று இருந்தால் அது கூர்மையாக இருந்தால்தான் அது கத்தி. எதற்காக கத்தி கூர்மையாக இருப்பதை எதிர்பார்க்கிறோம்? கத்தி கூர்மையாக இருந்தால்தான் பொருட்களை வெட்டுவது சிரமமின்றி எளிதாக இருக்கும். கத்தி எவ்வாறு கூர்மையாக்கப்படுகின்றது? கத்தியைக் கூர்மையாக்க சாணைக்கல்லில் தீட்டி(தேய்த்து) கத்தி முனையில் உள்ள கூர்மைக்கு தேவையில்லாத/இடையூறாக உள்ள உலோகத்தை நீக்க வேண்டும். எனவே கத்தி கூர்மையாக இருக்கின்றது என்றால் கூர்மைக்குத் தேவையில்லாத/இடையூறாக உள்ள உலோகம் நீக்கப்பட்டிருக்கின்றது என்று பொருள்.

    அதுபோல் அறிவு உருவமில்லாமல் இருந்தாலும் ஒரு சிலருக்கு அது பிறவியிலேயே கூர்மையாகவே இருக்கும். இல்லை என்றாலும் அறிவை மனிதன் கூர்மையாக்கவும் முடியும்? கத்தியின் உபயோகம் பொருட்களை சிரமமின்றி எளிதாக வெட்டுவது. அதுபோல் அறிவின் உபயோகம், அறிய வேண்டியவைகள் இயற்கையில் ஆயிரமாயிரம் இருந்தாலும், வாழ்க்கையை செம்மையாக வாழ்வதற்கு தேவையான அறியவேண்டியவைகளை அறியவேண்டியதே. அதுவும் சட்டென அறிய வேண்டும். ஆகவே அறிவு கூர்மையாக இருந்தால்தான் அது சிந்தனை வளத்தில் சிறந்து விளங்க முடியும். எனவே அறிவுக் கூர்மை என்பது சிந்தனையே ஆகும்.

    அறிவை தனது செல்வமாக்கிக் கொள்ள வேண்டும்:

    சிந்தனையில்லாமல் அறிவு செயல்படக் கூடாது. சிந்தனையில்லாமல் செயல்பட்டால் ஆறாம் அறிவின் பயனை அடைய முடியாமல் போகும். ஆறாம் அறிவின் பயனை அடைய முடியாவிட்டால் விளைவாக தனது வாழ்க்கையில் துன்பமே மிகுந்திருக்கும். தனது வாழ்க்கை துன்பப்படுவதோடு மட்டுமல்லாமல் மனிதன் சமுதாயத்துடன் சேர்ந்தே வாழ்வதால், மற்றவர்களின் வாழ்க்கையையும் துன்பத்திற்கு உள்ளாக்கும். திருவள்ளுவர் மொழிந்துள்ளதுபோல் ‘அறிவை’ நமது உடைமையாக்கிக் கொள்ள வேண்டும். (உடைமை=செல்வம்)

    அறிவுக் கூர்மைக்கு …..

    அறிவு கூர்மையாக இருக்கவேண்டும் என்றால் அறிவு அறியவேண்டியதைத் தவிர மற்றவற்றை நீக்க வேண்டும். மழுங்கியுள்ள கத்தியைக் கூர்மையாக்க கத்தியின் மழுங்கிய இடத்தில் உள்ள, கூர்மைக்குத் தேவையில்லாத/இடையூறாக உள்ள உலோகத்தை நீக்குவதுபோல். அறிவு அறியவேண்டியதற்கு இடையூறாக உள்ளவற்றை நீக்க வேண்டும். சுருங்கச் சொல்ல வேண்டுமெனில், அறியவேண்டியதை அறியாமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கும் அறியாமையை நீக்க வேண்டும். அறியாமையை நீக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு விளக்கம் வேண்டும். விளக்கம் எங்கிருந்து பெறுவது? அனுபவமுள்ளவர்களிடமிருந்து பெறவேண்டும். யார் அந்த அனுபமுள்ளவர்கள்.? நெறியைச் சார்ந்து வாழ்கின்ற சான்றோர்கள்; அறிவை அறிந்த அறிஞர்கள்.
    இதுவரை பதிதல், பழக்கம், விளக்கம் பற்றிய வாழ்வியல் சிந்தனை செய்தோம். இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்துகொள்வோம். அடுத்த விருந்தில் (05-10-2016-புதன்)விளக்கம் யாரிடமிருந்து பெறுவது, எவ்வாறு பெறுவது, விளக்கத்தை எவ்வாறு வாழ்க்கையில் கடைபிடிப்பது, கடைபிடிப்பதில் ஏதாவது ஐயங்கள் வந்தால், அதற்கானத் தீர்வுகள் பற்றி அறிய இருக்கிறோம்.
    வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்               வளர்க அறிவுச் செல்வம்.


    Loading

  • 230-ஒழுங்கும் ஒழுக்கமும்

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     
    ஒழுங்கும் ஒழுக்கமும்

    அறிவிற்கு விருந்து—230

     28-09-2016—புதன்.

     வாழ்க வளமுடன்.

          சென்ற மூன்று விருந்துகளில் அறிவின் மூன்று வறுமைகளான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகியவைகளைப் பற்றிச் சிந்தித்தோம். இன்று அறிவைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள ‘ஒழுங்கும் ஒழுக்கமும்’ என்கின்ற தலைப்பை இன்றைய விருந்தாக எடுத்துக் கொண்டுள்ளோம். ‘ஒழுங்கும் ஒழுக்கமும்’ என்கின்ற சொற்றொடர் சற்று வித்தியாசமாக உள்ளது. இச்சொற்றொடர் உருவானதற்குக் காரணம் ‘வேதாத்திரிய அறிவிற்கு அறிவியல்’ காரணமாக உள்ளது. வேதாத்திரியத்தில் அறிவிற்கு என தனி அறிவியலே உள்ளது. வேதாத்திரியம் பல இயல்களை உள்ளடக்கியது. இயற்கையியல்/இறையியல், மானுடவியல், உளவியல், ஒழுக்கவியல், இன்ப-துன்ப இயல், இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்த வாழ்வியல், உலக சமாதான இயல் ஆகிய இயல்களைக் கொண்டது வேதாத்திரிய மகா இயல்(Greater Science of Sciences).

          ‘அறிவே தெய்வம்’ என்று அருளாளர்களால் கூறப்பட்டாலும் எப்படி அறிவு தெய்வமாகின்றது என இதுவரைக் கூறப்படவில்லை. ஆனால் வேதாத்திரியத்தில் அறிவைப்பற்றிய விளக்கங்கள், அதாவது,
    அறிவின் இருப்பிடத்திலிருந்து ஆரம்பித்து,
    அதன் தன்மாற்றப்பயணத்தின் நோக்கம்; அந்த நோக்கமே மனிதப்பிறவியின் நோக்கம் எனவும்,
    மற்றும் தன்மாற்றப்பயணம் எவ்வாறு நடைபெற்றது, நடந்து கொண்டிருக்கின்றது என்பதனை படிப்படியாக விளக்கி, தெளியவைத்து,
    முடிவாக அதன் தன்மாற்ற பயணம் மனிதனில் எவ்வாறு நிறைவுறுகின்றது என்பதனை தெளிந்த நீரோடையில் உள்ள பொருள் தெளிவாகத் தெரிவதுபோல் தெளிவாக்கப்பட்டுள்ளது.
    தலைப்பிற்குள் செல்வோம்.
    தலைப்பு சொற்றொடராக உள்ளது; ‘ஒழுங்கும் ஒழுக்கமும்’ என்று உள்ளது. காரணம் ஒழுங்கிற்கும் ஒழுக்கத்திற்கும் தொடர்புள்ளது. உதாரணத்திற்கு ‘இன்பமும் துன்பமும்’ என்கின்ற சொற்றொடரில் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் தொடர்புள்ளதுபோல் ‘ஒழுங்கும் ஒழுக்கமும்’ என்கின்ற சொற்றொடரில் ஒழுங்கிற்கும் ஒழுக்கத்திற்கும் தொடர்புள்ளது. வழக்கம்போல் முதலில் வார்த்தை விளக்கம் காண்போம்.

    ஒழுங்கு என்றால் என்ன?

    ஒழுங்கு = 1) ஒவ்வொரு செயலையும் சரியாக செய்வதற்காக ஏற்பட்டிருக்கும் நியதி அல்லது பொருத்தமான முறை(regularity).
    2) சீர்(orderly way or manner)
    3) ஒற்றுமைக்காக அல்லது அமைதிக்காக வேண்டிய பொறுப்பான நடத்தை(Law and order)
    ஒழுங்கு என்பது நியதி. இயற்கையில்/இப்பிரபஞ்சத்தில் நியதி இல்லாமல் எந்த ஒரு இயக்கமும் நடைபெறுவதே இல்லை. எந்த ஒரு சடப்பொருளும் ஒழுங்கிற்கு உட்பட்டுத்தான் சடப்பொருளாக இருக்க முடியும். உதாரணத்திற்கு நீரை எடுத்துக் கொள்வோம். நீர் என்பது ஒரு சடப்பொருள் இயக்கம். அதாவது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் என்கின்ற இரு மூலகங்கள் சேர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்ற ஒரு கொத்தியக்கம்(bunch of atoms). இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்து இயங்குகின்ற இயக்கம் நீர்(H2O). இந்த ஒழுங்கு இப்பிரபஞ்சத்தில் அல்லது இப்புவியின் எந்த கண்டத்திலும் (continent) எங்கு நீர் காணப்பட்டாலும் இந்த ஒழுங்கிற்கு உட்பட்டேதான் இருக்கும்.
    மனித உடல் உறுப்புகளின் அனிச்சை இயக்கமும் ஒழுங்கிற்கு உட்டுபட்டுத்தான் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால், அறியாமையால் அல்லது அலட்சியத்தால் அல்லது உணர்ச்சி வயத்தால் அல்லது மூன்றின் சேர்க்கையாலோ அல்லது மனிதனின் இச்சையாலோ மனிதனால் செய்யப்படுகின்ற செயல்களால் உடல் உறுப்புகளின் அனிச்சை இயக்கம் பாதிப்படையலாம். பாதிப்படையலாம் என்பதில்லை; பாதிப்படைகின்றது. அதுவே நோயாகவும் மனதில் களங்கமாகவும் வெளிப்படுகின்றது. இயற்கையின் அமைப்பை பற்றிச் சிறப்பாகக் கூறுவதானால் அது ஒழுங்கமைப்புடன்(ஒழுங்கு+அமைப்பு) இயங்கிக்கொண்டிருக்கின்றது என்கிறோம். இயற்கை ஒழுக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்று கூறுவதில்லை. ஒழுங்கு என்கின்ற சொல்லுக்கு விளக்கம் அறிவதில் சடப்பொருட்களைப்பற்றியே ஆய்ந்து கொண்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

    ‘ஒழுங்கும் ஒழுக்கமும்’ என்கின்ற சொற்றொடரில் ஒழுக்கம் என்கின்ற சொல்லிற்கு வார்த்தை விளக்கம் காண்போம்.

    ஒழுக்கம் என்றால் என்ன?

    ஒழுகுதல் ஒழுக்கம். ‘ஒழுகு’ என்றால் என்ன? பின்பற்றி நடத்தல், ஒத்து வாழ்தல் என்று பொருள்.(conduct- adhering to principles).
    மனிதன் ஒரு சமூகப்பிராணி(Social animal). மனிதன் தனித்து வாழமுடியாது. சேர்ந்துதான் வாழ முடியும். அவ்வாறு இருக்கும்போது பிறர்க்கு துன்பம் அளிக்காமல் வாழவேண்டும். இது கட்டாயமா என்று கூட ஐயம் எழலாம். அல்லது பிறர்க்கு துன்பம் அளிக்காமல் வாழ்வது என்பது எப்போதும் சாத்தியமா என்றும் ஐயம் எழலாம். ஏனெனில் நடைமுறையில் பிறர்க்குத் துன்பம் அளிக்காமல் வாழ்வது என்பது இல்லாமையால் இந்த ஐயம் எழலாம்.

    மனிதன், பிறர் தனக்கு துன்பம் அளிப்பதை விரும்புவானா? விரும்பமாட்டான். அதேபோன்றுதானே இவனும் யார் ஒருவருக்கும் துன்பம் அளிக்காமல் வாழவேண்டும். அவ்வாறு வாழ்வதில் உறுதியாகவும் இருக்க வேண்டுமல்லவா? இது தர்க்க ரீதிதானேLogical reason)?! எனவே இங்கே தேவைப்படுவதுதான் ஒழுக்கம் என்பது. இங்கே தான் ஒழுக்கம் பிரவேசிக்கின்றது. ஒழுக்கம் என்பது எங்கோ தனியாக இருந்து கொண்டு இப்போது உள்ளே பிரவேசிக்கின்றது என்று பொருளல்ல. எந்த ஒன்றிலிருந்து இப்பிரபஞ்சம் மற்றும் மனிதன் உள்பட எல்லா சீவராசிகளும் உருவாகியுள்ளதோ அந்த ஒன்று ஒழுங்காற்றலாய்(பேரறிவு) உள்ளது.

    பிறர்க்கு துன்பம் அளிக்காமல் வாழும் நெறியை ஒழுகி நடப்பதைத்தான் மனிதன் ‘ஒழுக்கம்’ என்கின்ற புனிதச் சொல்லால் அழைக்க ஆரம்பித்தான்.

    அப்படிப்பட்ட ஒழுக்கத்திற்கு என்ன பொருள்? மனிதன் ஒழுங்கமைப்புடன் நெறி தவறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்ற இயற்கையின் ஒரு சிறு அங்கம். ஒரு பொருள் எந்தப்பொருளிலிருந்து(மூலப்பொருள்) உருவாகியதோ, அந்த மூலப்பொருளின் தன்மையை அது கொண்டதாக இருக்கும் என்பது இயற்கை நியதி. அதேபோல் ஒழுங்கமைப்புடன் நெறியுடன் இயங்கிக் கொண்டிருக்கின்ற இயற்கையின் அங்கமான மனிதனும் நெறியுடன் வாழ்வது என்பதுதான் ஒழுக்கம் எனப்படுகின்றது.

         ஆகவே ஒழுக்கம் என்பது உரிய முறையில் நடந்துகொள்வது. தன்னுடைய அல்லது தான் சார்ந்து வாழும் குழுவினருடைய பொதுநலன் மற்றும் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு தனிமனிதன் கடைபிடிக்கும் நெறியே ஒழுக்கம் என்பது.

        எனவேதான் 2041 ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் ஒழுக்கத்தை செல்வமாக்கிக்கொள்ள(உடைமை) வேண்டும் மனிதன் என்று கருதி ஒழுக்கம் உடைமை எனும் அதிகாரத்தை ஒதுக்கியுள்ளார், ஒழுக்கம் சிறப்பைத்தருவதால் ஒழுக்கம் உயிரைவிட மேலானதாகக் கருத வேண்டும் என்கிறார். ஒழுக்கம் உடைமை அதிகாரத்தில் உள்ள முதல் குறளை நினைவுகூர்வோம்.

    ஒழுக்கம் உடைமை

    ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப்படும்.”                     . . .    குறள் எண் 131

    ஒரு அதிகாரத்தில் பத்து குறட்பாக்கள் உள்ளதால், ஒழக்கத்தைப்பற்றி மேலும் கூறுவதற்கு ஒன்பது குறட்பாக்களை இயற்றியுள்ளார் திருவள்ளுவர். திருவள்ளுவருக்குப் பிறகு இருபது நூற்றாண்டுகள் கழித்து அவரை மானசீகக் குருவாக ஏற்றுக்கொண்ட அவரது அருமைச் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒழுக்கத்தைப் பற்றி கூறுவதனையும் நினைவு கூறலாம். மனித வாழ்வில் ஒழுக்கம் மிக மிக அவசியம் என்பதால் ஒழுக்கத்தைப்பற்றிய புரிதலை சமுதாயத்திற்கு தெளிவாக்குவதற்கு பல்வேறு விதங்களில் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.  அவைகள் பின்வருமாறு:-

    1) பிறருக்குத் துன்பம் இல்லாமில்லாமல் செயலாற்றுவதே ஒழுக்கம்.

    2) துன்பம் விளைவிக்காமல் காக்கின்ற வாழ்க்கைத்திறனே, செயல் திறமையே ஒழுக்கம் எனப்படும்.

    3) எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றில் எழும் விளைவறிந்து, உண்மையில் இன்பமே உண்டெனில் ஒழுக்கம்.

    4) துன்பம் தவிர்க்க வேண்டும் என்ற அளவுக்கு விழிப்போடு ஆராய்ச்சியோடு செய்யும் பண்பே ஒழுக்கம். இந்த சூத்திரத்தை முறைப்படுத்தி வைத்துக் கொண்டால், எந்த இடத்திலும், எந்தக் காலத்திற்கும் ஒருவரின் ஆயுள் முழுவதும் இது உதவியாக இருக்கும். ஒழுக்கத்தைப் பற்றி மகரிஷி அவர்கள் கூறியவற்றில் ஒருசில மட்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

    5) இவ்வாறு பல்வகைகளில் ஒழுக்கத்தைப் பற்றி மகரிஷி அவர்கள் கூறியிருந்தாலும். எல்லாவற்றையும் உள்ளடக்கியதாகக் கொண்டு ஒழுக்கத்திற்கு கூறும் வரையறையாவது—

     தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கோ, உயிர் உணர்ச்சிக்கோ துன்பம் விளைவிக்காத எண்ணம்தான் ஒழுக்கம்” என்கிறார்.

    மகரிஷி அவர்கள் ஒழுக்கத்தைப்பற்றி 1982 இல் அருளியுள்ள கவியினை நினைவு கூர்வோம்.

    ஒழுக்கம்(மார்ச் 1982)

    உயிர்கட்குத் துன்பமிலா வகையி லாற்றும்
    உயர்ந்தசெயல் ஒழுக்கமாம்; உலகில் வாழும்
    உயிர்கட்கு அதுகாப்பாம்; அமைதி வித்து;
    உயர்வினால் உயிரைவிட ஒழுக்கம் மேலாம்;
    உயர்அறிவில் தெறிவுபெற்று, முழுமை எய்த
    ஒழுக்கமே பெருந்துணையாம்; அறிவறிந் தோர்
    உயிர்காக்கும் கருணையால் ஒழுக்கம் காட்டி,
    உய்யும்வகை அறிவித்தார். உண்மை காண்போம்.

                                                  . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    ஒழுக்கம் உயிர்கட்கு(தன்னையும் சேர்த்து) காப்பாக உள்ளதையும், அதுவே அமைதிக்கு வித்தாக உள்ளதையும் எடுத்துரைக்கிறார் மகரிஷி அவர்கள். தெளிவு பெறவும், முழுமையடையவும் ஒழுக்கமே பெருந்துணையாக உள்ளது என்கிறார். ‘எல்லாம் வல்லது தெய்வம், அது எங்கும் நீக்கமற உள்ளது’ என்று கடவுள் நிலையை கூறிவிட்டு “சுயமாயச் சிந்தித்தே தெளிவாய்” என்று ஆலோசனையையும் கூறி கடவுள் நிலையை உறுதிபடுத்தி பயனடையும் பொறுப்பை நம்மிடம் விட்டுவிட்டது போல், இங்கேயும் ஒழுக்கம் என்பது எது என்று கூறினாலும், கடைசியில், அதன் “உண்மை காண்போம்“ என்பதனைக் கவனிக்க வேண்டும். ‘வேறு எது ஒழுக்கமாக இருக்க முடியும்’ என்பதனை நாம் சிந்தித்து முடிவுசெய்து அதனை ஒருபோதும் தவறாமல் பின்பற்றி ஒழுக்கச்சீலர்களாகத் திகழவேண்டும்.

         ஒழுங்கு என்றால் என்ன என்றும், ஒழுக்கம் என்றால் என்ன என்றும் தனித்தனியாக விளக்கம் கண்டோம். இப்போது ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் இணைத்துள்ள ‘ஒழுங்கும் ஒழுக்கமும்’ என்கின்ற சொற்றொடருக்கான பொருள் என்ன? அல்லது அச்சொற்றொடரை ஏற்படுத்தி சிந்தனை விருந்தாக எடுத்துக் கொண்டதன் நோக்கம் என்ன என்று பார்ப்போம்.

         ஒழுக்கத்தைப் பற்றி இந்த அளவு துருவித் துருவி சிந்திப்பது யார்? மனிதன். மனிதன் என்பவன் யார்? அறிவேதான் அவன். இந்த அறிவு எங்கிருந்து வந்தது? இயற்கையின்ஆதிநிலை/இறைநிலையேதான்  தன்னுடைய தன்மாற்றப் பயணத்தில் மனிதனின் ஆறாம் அறிவாக வந்துள்ளது. உயிர்களாக தன்மாற்றம் ஆகும் முன்னர் சடப்பொருட்கள் உணர்வற்றதாக இருந்தாலும் சடப்பொருட்கள்-பஞ்சபூதங்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்தது. சடப்பொருட்களுக்கு உணர்வு இல்லாதபோது, உணர்கின்ற தன்மை உடைய அறிவு எவ்வாறு உணர்வற்ற சடப்பொருட்கள் உருவாவதற்குக் காரணமாக இருந்திருக்க முடியும் என்கின்ற நியாயமான ஐயம் எழுவது நியாயமே!

         இந்த நியாயமான ஐயம், அறிவிற்கு இயலை உருவாக்கிக் கொண்டிருந்த வேளையில் அறிவின் அறிவியலாளரான மகரிஷி அவர்களுக்கும் எழுந்தது. பின்னர் அதற்கானக் காரணத்தை கண்டுபிடித்துவிட்டார். அந்தக்காரணத்தைக் கண்டுபிடிக்காதிருந்தால் வேதாத்திரிய அறிவின் அறிவியல் இன்னமும் முற்றுப் பெறாமலே இருந்திருக்கும். என்ன கண்டுபிடித்தார் மகரிஷி அவர்கள்? அவர் வாய்மொழியாகவே அறிவோம்.

    பேரின்ப ஊற்று

    இன்ப ஊற்றாய் நிறைந்த இறைவா! – எங்கும்
    இன்ப ஊற்றாய் பெருகும் இறைவா!
    அன்பு ஊற்றாய் தோற்றங்கள் அனைத்துக் குள்ளும்அறிவாய்,
    இன்ப ஊற்றாய்ப் பெருகும் இறைவா!

    இன்ப ஊற்றாய் நிறைந்த இறைவா!

    உணர்ச்சியாய் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று,
    உணர்ந்திருந்தேன் பலநாள்; மேலும் உண்மை விளங்க உணர்ச்சிக்கு  முன்னம்  விண்ணில்  ஒழுங்காற்றலாய்  விளங்கும்,
    உனது திருநிலையும் அறிவே என உணர்ந்தேன்.

    இன்ப ஊற்றாய் நிறைந்த இறைவா!
    ……………………………………………………………………………………………………….
    ………………………………………………………………………………………………………..

                                         . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

         பொதுவாக மனித அறிவிற்கு ஒன்றுமில்லாததுபோல் இருக்கின்றவெளியே இன்றுகாணப்படும் அனைத்துமாகவும் வந்துள்ளது என்பது எவ்வாறு அதற்கு சாத்தியமாகியது? எந்தப்பொருளும் அணுக்களால் ஆனது என்று விஞ்ஞானம் கூறுவது வெட்டவெளிக்கு(Space) எவ்வாறு சாத்தியமாகியுள்ளது? எந்தப்பொருளும் அணுக்களால் ஆனாதாக இருந்தாலும், அந்த அணுக்களையெல்லாம் முறைப்படுத்தி ஒரு அமைப்பாகவும், துல்லியமாகவும் ஒழுங்குடனும் வைத்துள்ளதால்தான் அந்தப் பொருள் பொருளாகக் காட்சியளிக்கின்றது. ஒரு பொருள்(ஒரு மூலகம்) மட்டும் அல்ல இதுபோல் இன்னும் 118 வெவ்வேறு பொருட்களாகவும்(இதுவரை விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்ட மூலகங்கள் 119) காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன. யார் அந்த அமைப்புகளில் எல்லாம் அணுக்களை அடுக்கியது? கைகள் இல்லாத பேரறிவுதான் அணுக்களையெல்லாம் அடுக்கியுள்ளது. அணுக்களையெல்லாம் முறைமைப்படுத்தியுள்ளதை வேறு எந்த சொல்லால் அழைக்க முடியும்? ஒழுங்கு என்கின்ற சொல்லால் சொல்லலாமே! பேரறிவு ஆற்றலையும் கொண்டது. அதே நேரத்தில் அதனிடம் ஒழுங்கும் உள்ளது. எனவே பேரறிவு தன் தன்மாற்றப் பயணத்தில் உயிர்களாக மாற்றம் அடைவதற்கு முன்னர்(உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில்) சடப்பொருட்களில் ஒழுங்காற்றலாய் திகழ்ந்து கொண்டிருந்தது.

         அதே ஒழுங்காற்றலாய் திகழ்ந்து கொண்டிருந்த அறிவே உயிர்களாக தன்மாற்றம் அடையும்போது உணர்கின்ற அறிவாகவும் செயல்படுகின்றது. ஐந்தறிவு சீவன்களில் உணர்ந்து கொண்டிருக்கின்ற அறிவே மனிதனாக தன்மாற்றம் அடையும்போது ஆறாம் அறிவாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. அதாவது பேரறிவு தன்மாற்றப்பயணத்தில் ஆரம்பத்தில் சடப்பொருட்களில் ஒழுங்காற்றலாய் பணியாற்றிக் கொண்டிருந்தது. பின்னர் ஐந்தறிவு சீவன்களாக வந்தபோது உணர்ச்சியை அறியும் பணியையும் செய்து கொண்டிருக்கின்றது. பின்னர் மனிதனாக வரும்போது சிந்தனையாகவும் செயல்படுகின்றது. ஒழுங்காற்றலாகிய பேரறிவே மனிதனிடம் ஆறாம் அறிவாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. அவ்வாறு ஒழுங்காற்றலே மனிதனிடம் அறிவாக செயல்படும்போது மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் மட்டும் ஒழுங்குடன் செயல்படுவதுதானே நியாயம்?! Is it not a simple logic?சடப்பொருட்களில் பேரறிவின் தன்மை ஒழுங்காகவும், மனிதனின் ஆறாம் அறிவில் ஒழுக்கமாகவும் செயல்பட வேண்டியுள்ளது. இவ்வாறு கூறுவதனால் மனிதன் ஒழுக்கமுடன் வாழ்வதற்கு பேரறிவேதான் பேரறிவேதான் பொறுப்பு எனக் கருதிக்கொண்டு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது.

          பேரறிவு தன்மாற்றப்பயணத்தில் பரிணாம வாகனத்தை ஐந்தறிவு சீவன்கள் வரையில் தானே ஓட்டி வந்துள்ளது. ஆறாம் அறிவாக வந்தபோது எவ்வாறு மகிழுந்தை ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம்(driving License) வழங்கப்பட்டதும், பயிற்சியின்போது கூடவே இருந்து வந்த பயிற்சியளிப்பவர்(Driving Instructor) மகிழுந்தின் சாவியைக் கொடுத்துவிட்டு உரிமம் பெற்றவரையே ஓட்டச் சொல்கின்றாரோ அதுபோல் பேரறிவு பரிணாமவாகனத்தை மனிதனையே தனது மறைமுகப்பார்வையில் ஓட்டச்சொல்லிவிட்டது. இப்போது மனிதன் விபத்தில்லாமல் மகிழுந்தை எவ்வளவு நிதானமாகவும், கவனத்துடனும், விழிப்புடனும் ஒட்டுவானோ அதேபோன்று, இறைவன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பரிணாம வாகனத்தை ஒழுக்கம் என்கின்ற நிதானத்திலும், கவனத்திலும், விழிப்பிலும் ஓட்டி வாழ்க்கையை செம்மையாக நடத்தி வாழவேண்டும்.

    சடப்பொருட்களில் ஒழுங்கிற்குக் காரணமாக இருந்ததே ஆறாம் அறிவின் செயல்பாட்டில் சரியாக செயல்படுவது ஒழுக்கமாகக் கொள்ளப்படுகின்றது. ஒழுங்கே ஒழுக்கம். இந்த ஒழுங்கிற்கும் ஒழுக்கத்திற்கும் உள்ள இணைப்பை அறியும்போது ஒழுக்கவாழ்வு வாழ்வது எவ்வளவு முக்கியம் என்பதில் தெளிவு ஏற்படும்.  இதுவரை இருந்து வந்த ஒழுக்கமிலாப் பழக்கப்பதிவுகளை வெல்வதற்கு, இப்போது பெறுகின்ற ஒழுக்கத்திற்கான விளக்கப்பதிவு போதிய வலிமை பெறுவதற்காகவே ‘ஒழுங்கும் ஒழுக்கமும்’ என்கின்ற சொற்றொடர் அமைத்து அதனை சிந்தித்தோம்.  

          இது போன்று அன்பர்களும் ஓய்வு நேரங்களில் மனதை அலையவிடாமல் இருக்க இதுபோன்று  பல தலைப்புகளை அடிக்கடி உருவாக்கிக் கொண்டு சிந்திக்கப் பயிற்சி செய்து பழக்கமாக்கிக் கொள்ளலாம்.  சிந்தித்தவற்றை எழுதிப் பார்க்கலாம். வாய்ப்பிருந்தால் பிற அன்பர்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழலாம்.   இதுவும் சத்சங்கத்தைச் சார்ந்ததுதான். இவ்வாறு சிந்திக்கும்  பழக்கத்தை வழக்கமாகக் கொள்ளும்போது எண்ணுகின்ற எண்ணங்கள் மௌனமாக இருந்தாலும், அது வலிமையுடையதாக இருக்கும்.  மனிதர்கள் உடலால் வேறுபட்டிருந்தாலும், அறிவு எனும் அரூப ஆற்றலால் ஒன்று பட்டிருப்பதால்  நலம் சார்ந்த எண்ணங்கள் மற்றவர்களின் மனதிலும் உதிக்கச் செய்யும் வல்லமை உடையது.   வாழ்க வளமுடன். வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம்.
    .

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • 229-உணர்ச்சிவயம் தவிர்த்தல்

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

    உணர்ச்சிவயம் தவிர்த்தல் 

    அறிவிற்கு விருந்து—229

     25-09-2016—ஞாயிறு.

    %e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d

     வாழ்க வளமுடன்.

    சென்ற இரு விருந்துகளில் அறிவின் மூன்று வறுமைகளில் அறியாமை, அலட்சியம் ஆகிய இரு வறுமைகளைப்பற்றி சிந்தித்தோம். இன்று உணர்ச்சிவயம் என்கின்ற அறிவின் வறுமையைப் பற்றி சிந்திப்போம்.

    உணர்ச்சிவயம் என்றால் என்ன? அறிவு தன்னிலை மறந்து உணர்ச்சிக்கு வசப்படுவது. எல்லோரும் அறிந்த உதாரணம் சினம் கொள்ளல். ஞானியைத்தவிர (ஞானியாகும் வரை) மற்றவர்கள் அனைவரும் அவ்வப்போது, அடிக்கடி உணர்ச்சிவயத்திற்கு உள்ளாவது இயல்பாகவே உள்ளது. இயல்பாக உள்ளது என்பதால் அதனை சரியென ஏற்றுக் கொள்ள முடியாது. உணர்ச்சிவயப்படுவதால் நன்மை வருகின்றது என்றால் அதனை சரி என ஏற்றுக் கொள்ளலாம். உணர்ச்சிவயப்படுவது தீமை அளிப்பதால், அது இயல்பாக இருந்தாலுமே அதனை சரி என எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்?

    எந்த மூலத்திலிருந்து மனிதகுலம் வந்துள்ளதோ அந்த மூலம் உணர்ச்சிவயப்படுவதில்லை. எனவே மனிதன் உணர்ச்சிவயத்தைத் தவிர்க்க வேண்டும். பொறுமை காக்க வேண்டும். நிதானம் வேண்டும். விலங்கினப்பண்பு என்கின்ற பரிணாமக் கசடால்(evolutionary effluent) மனிதன் உணர்ச்சிவயப்படுகிறான். விலங்கினத்திலிருந்து மனிதஇனம் வந்துள்ளதால் மனிதனின் மூளையில் ஒரு பகுதி ‘emotional area’ உள்ளதாக சொல்லப்படுகின்றது. உணர்ச்சி வயத்தால்தான் அன்றாடம் சிக்கல்கள், துன்பங்கள் அதிமாகிக் கொண்டே போகின்றன. மகரிஷி அவர்கள் அறிவின் ஏழ்மையே வாழ்க்கைச் சிக்கல்கள் என்று கூறும் பாடலை நினைவு கூர்வோம்.

     அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம்

    (02-04-1988)

    தேவையொடு அளவு, முறை, காலம் நான்கைத்
       தேர்ந்தாற்ற அறிவு நுட்பம் அனுபவங்கள்
    தேவையாம் வாழ்வோர்கள் எல்லாருக்கும்;
       சிறுவயதால் அறியாமை, நல்விழிப்பு,
    தேவையால் அலட்சியம், பின்பாசம் பற்றால்
       தெளிவில்லா உணர்ச்சிவயம், இந்த மூன்றால்
    தேவை முதல் நான்கினையும் கணித்து ஆற்றத்
       திறனில்லா அறிவேழ்மை வாழ்க்கைச் சிக்கல்!”

                                               . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    ஒழுக்கம் என்கின்ற புண்ணியகாரியமாகிய அன்பையும் கருணையையும் வெளிப்படுத்தி, சீவனில் சிவனைக்காண வேண்டிய மனிதன் காலங்காலமாக உணர்ச்சிவயப்படுவது இயல்பாக இருந்து வந்தாலும் உணர்ச்சிவயப்படுவதை எவ்வாறு சரி என்பது? உணர்ச்சி வயப்படுவதை தவிர்க்க வேண்டும். அதற்கான உளப்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உணர்ச்சிவயப்படுவது புண்ணிய செயல் அல்லாததால், அதன் விளைவு துன்பமே. அந்த துன்பத்தைத் தவிர்க்கவாவது உணர்ச்சிவயத்தைத் தவிர்க்கப் பழகவேண்டும்.
    மனிதவாழ்வில் உணர்ச்சி வயப்படுவது இயல்பாக இருந்தாலும், உணர்ச்சிவயத்தை தவிர்த்து உயரவும் முடியும்; அது அவசியமும் என்கின்றார் வாழ்வியல் கலையை வகுத்துக் கொடுத்துள்ள வாழ்வியலாளர் மகரிஷி அவர்கள்.
    மகரிஷி அவர்கள் என்ன கூறுகின்றார் என்பதனை நினைவு கூர்வோம். சுமார் 25 ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் மகரிஷி அவர்களின் துணைவியார் அன்னை லோகாம்பாள் கோலமிடும்போது அதைச் சுற்றிலும் ஏதேனும் ஒரு அருளுரையை மகரிஷி அவர்கள் எழுதச்சொல்வது வழக்கம். அவ்வாறாக எழுதப்பெற்ற கவிகளில் உணர்ந்த உண்மையினை ரசித்து, மதித்து, நன்றியுணர்வாகவும் வருங்கால சந்ததி பயன் பெறட்டும் என்கின்ற நன்நோக்கத்தில் சில அன்பர்கள், அவற்றைத் தொகுத்து ‘மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்து’ என்கின்ற நூலாக வெளியிட்டனர். இன்று அறுபத்து இரண்டு ஆண்டுகள் கழித்து 22-12-1953 அன்று மாக்கோலமாய் விளைந்த மதிவிருந்தினை நினைவு கூர்வோம்.

    makkaolamai-vandha-madhivirundhu

    இயல்பும் – உயர்வும்(22-12-53)

    அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு,
    அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு.

                                                  . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    அரிதான மனிதப்பிறவி என்பது விலங்கினத்தைவிட உயர்வாழ்வு வாழ்வதற்காகவே என்பதால் எல்லோருமே உணர்ச்சியை வெல்லும் உயர்வு பெற்றே ஆக வேண்டும்.

    அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு என்று கூறிய மகரிஷி அவர்கள், ஐந்து வருடங்கள் கழித்து 03-01-1959 அன்று மனிதருள் உயர்ந்தோர் யார் என்பதனை அறிவால் உணர்ச்சியை வெல்ல வேண்டும் என்பதனை மேலும் வலியுறுத்துவதற்காக மற்றுமொரு கவியினை மார்கழி மாத கோலத்தில் அருளுரையாக எழுதியுள்ளார். அதனையும் நினைவு கூர்வோம்.

    மனிதருள் உயர்ந்தோர் (03-01-1959)

    மனிதனென்ற உருவினிலே மாக்களுண்டு, மக்களுண்டு
    மனமறிந்த தேவருண்டு, மதிநிலைத்த மனிதருண்டு
    மனமறிந்து மனஇதமாய் மாக்களுக்கும் மக்களுக்கும்
    மனமுவந்து தொண்டாற்றும், மாமுனிவோன் முழுமனிதன்.
                                                             . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இப்பாடலில் மதி நிலைத்தவரைத்தான் மனிதர் என்கிறார். அதாவது மதிநிலைத்தால் உணர்ச்சிவயம் தவிர்க்கப்படும். உணர்ச்சிவயப்படுபவர் மதிநிலைத்தவராகார். அவரை மனிதர் எனக் கொள்ள முடியாது என்று பொருளாகின்றது. எனவேதான் பாடலின் முதல் வரியிலேயே மனிதன் என்கின்ற உருவினிலே மாக்களும் உண்டு மக்களும் உண்டு என்கிறார்.

    மனிதகுலம் உணர்ச்சியை வெல்லும் உயர்வு பெற்றே ஆக வேண்டும். இது தனிமனித முயற்சி மட்டுமல்ல. தனிமனிதன் ஒருவன் மட்டும் உணர்ச்சியை வென்றால் போதுமானதல்ல. அவ்வாறு உணர்ச்சியை வென்ற ஒரு தனி மனிதனுக்கு, உணர்ச்சியை வெல்லாத பிறரிடமிருந்து துன்பங்கள் எவ்வளவோ வந்துகொண்டிருக்கின்றன. உணர்ச்சியை வெல்லாதவர்களே இந்த சமுதாயத்தில் அதிகமாக உள்ளதால் இன்னமும் மனிதகுலம் அமைதிக்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது. அமைதி மனிதகுலத்தின் பூர்வீக சொத்தாக இருந்தும் அதனை அனுபவிக்க முடியாமல் மனிதகுலம் தவித்துக் கொண்டிருக்கின்றது. இதற்குத் தீர்வாகத்தான்
    உலக நலத்தையே தனது நோக்கமாகக் கொண்ட,
    உலக நல அக்கறையாளரான,
    உலக நலத்தொண்டரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்
    உலக சமாதானத் திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளார்கள். அந்த திட்டம் மலரும்போது எந்த மனிதனும் உணர்ச்சிவயத்திற்கு ஆளாகும் அவசியமே இராது. உணர்ச்சிவயப்பட வேண்டும் என ஒருவன் விரும்பினாலும் அதற்கான சூழ்நிலையே சமுதாயத்தில் இராது. குற்றங்கள் ஏற்படாத சூழ்நிலை அன்றோ அன்று நிலவும்! இது கேட்பதற்கு இப்போது ஆச்சரியமாகவும், பிரமிப்பாகவும் இருக்கலாம் பலருக்கு. இதற்கு விடையாக மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவு கூர்வோம்.

    அறிஞனே மருத்துவர்(17-12-1953)

    அறிஞர் வாழ்வுமுறை வகுக்கும் அறநெறி, அன்புசொற்கள்
    அறியார்க்கு புதிர்ஒவ்வாது ஆகையினால் மிரட்சிகொண்டு
    அறிஞரைப் பித்தன், வாழஅறியாதோன் என்பர்ஆய்ந்தால்
    அறிஞனே உலகப்பித்தர், அனைவருக்கும் மருத்துவனாம்.”

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    எனவே சீவனிலே சிவனைக்காண்கின்ற பிரம்மஞானிகளாகிய மனவளக்கலைஞர்களாகிய நாம் மகரிஷி அவர்களின் உலகசமாதானத்திட்டங்களை மனதில் வாதியாகவும் பிரதிவாதியாகவும் இருந்து சிந்தித்து ஆதரித்தால், ‘வாழ்க ‘வையகம் வாழ்கவளமுடன்’ என்கின்ற தாரக மந்திரத்திற்கு வலுசேர்ந்து கொண்டே இருக்கும்.
    மனஅலை 14 லிருந்து 40 cps வரை இருக்கும்போது அறிவு உணர்ச்சிவயத்திற்கு வசப்பட தயாராக இருக்கும். எனவே மன அலையைக் குறைக்கின்ற உளப்பயிற்சியாகிய அகத்தவத்தை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே பலபிறவிகளில் அமைதி நிலையில் இல்லாதபோது(உணர்ச்சி நிலையில்) செய்துள்ள தீயச் செயல்களின் பதிவுகளை செயலிழக்கச்செய்ய அகத்தாய்வு பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். மூன்றாவதாக கிடைத்தற்கரிய பேறாக உள்ள குணநலத்தைப் பெறவேண்டும். நான்காவதாக, முடிவாக அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகிய வறுமைகளைக் கொண்டுள்ள குறைவுடைய மனிதஅறிவின் வறுமையை நீக்கி அறிவு முழுமையாக்கப் படவேண்டும்.

    அறிவின் வறுமையால் துன்பக்கடலில் நீந்த முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற மனித சமுதாயத்தினை மீட்க இயற்கை/இறை தன்மாற்றப்பயணத்தில் அருளியதுதான் மனவளக்கலை எனும் அரு மருந்தாகும்.

    அறிவின் உணர்ச்சி நிலைக்கும் முழுமை நிலைக்கும் உள்ள வித்தியாசங்களை காண்போம்.

    ffc-229-%e0%ae%85%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81

    அறிவின் உணர்ச்சிவயத்தால் விளைகின்ற ஆறு தீய குணங்கள் அறிவின் முழுமை நிலையால் சீவனில் சிவனைக்காணக்கூடிய பேற்றினை உடைய மனிதனிடம் நற்குணங்களாக மாற்றம் பெறுவதனை அறியும்போது மனதிற்கு இதமாக உள்ளது.
    உணர்வது அறிவு என்றாலும் அறிவு உணர்தலாகிய உணர்ச்சியின் வசமாகிவிடக்கூடாது. எப்போதும் அறிவு விழிப்போடு இருக்க வேண்டும் விழிப்புணர்வே கடவுள்.(Awareness itself is God). வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்.

     

    Loading

  • 228-அறியாமை நீக்குதல்

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

     
    அறியாமை நீக்குதல்

    அறிவிற்கு விருந்து—228

    21-09-2016—புதன்.

     

    ariyaamai

    வாழ்க வளமுடன்.

    சென்ற அறிவிற்கு விருந்தில் அலட்சியம் என்கின்ற அறிவின் வறுமையைப் பற்றி சிந்தித்தோம். இன்றைய விருந்தில் ‘அறியாமை’ என்கின்ற மற்றொரு வறுமையைப் பற்றி அறிந்துகொள்வோம்.

    ‘அறியாமை’ என்றால் என்ன? அறிவின் தன்மையினை அறியாமை என்கிறோம். அறிவின் தன்மை என்னவாக இருக்க வேண்டும்? எது அறிவு? அறிகின்றது எதுவோ அது அறிவு. அறிவதால் அது அறிவு எனப்படுகின்றது. அப்படியிருக்கும்போது அறியாமை அறிவின் தன்மை என்றால் என்ன பொருள்? அறிவு அறியாதிருக்கின்றது என்று பொருளாகின்றது. அறியாதிருத்தல் அறியாமை எனப்படுகின்றது.

    பொதுவாக அறியாமை என்றால் என்ன? குழந்தையாக இருக்கும்போது அறியாமை இருக்கும். வயது ஆக ஆக அறியாமை நீங்கி வரும். அப்படியிருக்கும்போது குழந்தையாக இருந்தபோது இருந்த அறியாமை வயது ஆக ஆக நீங்காமல் இருந்தால் அதனை என்னென்போம்? அறிவு வளர்ச்சி இல்லை என்போம். ‘ஆளும் வளரனும். அறிவும் வளரனும்’ என்று திரைப்பட பழம் பாடல் ஒன்று கூறுகின்றது, அறிவு வளர்ச்சி அடையாதது விரும்பத்தக்கதல்ல. இதனால் தனக்கும் மற்றவர்களுக்கும் துன்பமே ஏற்படும். அப்படியானால் அறியாமை என்பது என்ன?

    தவறு செய்தால் இன்றோ அல்லது நாளையோ அறிவிற்கோ உடலுக்கோ விளைவு துன்பமாக வரும் என்பது தெரியாதிருப்பது அறியாமையாகும். எனவே இத்தகைய அறியாமையால் செய்த தவறுகளின் காரணமாகப் பெருக்கிக் கொள்கின்ற துன்பங்களே நோய்களாகவும், வாழ்க்கைச் சிக்கல்களாகவும் மனிதனிடம் எழுந்து நிற்கின்றன என்கிறார் மகரிஷி அவர்கள். அதாவது இயற்கை/இறை நீதியை அறியாமல் இருப்பது அறியாமையாகும்.

    அறியாமை என்பது இயற்கை ஒழுங்கமைப்பை உணராமல், ஒரு மனோ வேகத்திலே விளைவை அறியாது செயல்படுதலாகும். சிறு வயதில் இந்த வேகம் அதிகமாக இருக்கும். விவேகம் அடங்கி இருக்கும், பிறகு வயதாக விவேகம் உயர்ந்து வேகம் கட்டுப்படவேண்டும். அப்படியில்லை என்றால் அது கவலை அளிக்கக் கூடிய ஒன்று.
    இயற்கை/இறை நீதியினை அறியாதிருத்தல் அறியாமை என்று பொருள். இயற்கை/இறை நீதியினை அறிந்து நடந்தால் என்ன பொருள்? இயற்கை/இறை நீதியினை அறிந்து மதித்து நடந்தால் அதுவே

    அறிவுடமை;
    அறிவு முழுமை;
    இறைஉணர்வு.”

    ஆகவே இறைஉணர்வு பெறாதிருத்தல் ஆறாம் அறிவுடைய ஒவ்வொரு மனிதனுக்கும் அறியாமை இருக்கின்றது என்று பொருளாகின்றது. அறியாமை இருக்கின்ற வரை மனிதன் துன்பத்திற்கு ஆளாகிக் கொண்டேதான் இருக்க வேணடும். அறியாமையில் இருக்கும் மனிதன் சிக்கல்களில் சிக்கிக் கொள்வான்; சிக்கல்களை பெருக்கிக் கொண்டே இருப்பான். ஏனெனில் அறியாமையில் இருக்கும் மனிதன் சிந்திப்பதில்லை. சிந்திக்காமல் செய்யப்படும் செயல் பெரும்பாலும் துன்பத்தையே விளைவிக்குமல்லவா?

    அறியாமையை ஏன் வறுமையோடு ஒப்பிடுகிறார் மகரிஷி அவர்கள்? செல்வங்களிலேயே தலையாயது அறிவுச் செல்வம். செல்வம் எதற்கு? வாழ்க்கைக்கு வேண்டியத் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இன்பமாக வாழ்வதற்கு. . போதுமான செல்வம் வேண்டும். செல்வத்தில் குறைவு இருந்தால் விளைவு துன்பம். அதேபோன்று அறிவுச் செல்வத்தில் அறியாமை என்கின்ற குறைவு இருந்தால் அறிவுச் செல்வம் முழுமையானதாக இராது. விளைவு துன்பமே. செல்வத்தில் குறைவு இருந்தால் அதனை வறுமை என்பதுபோல் அறிவுச் செல்வத்தில் குறைவு இருந்தால் அது அறிவின் வறுமையாகின்றது.

    அறிவின் பணி உணர்தலாகும். அதற்கு புலன்கள் ஐந்தும் கருவிகளாக இருக்கின்றன. ஐந்து புலன்களால் அறிவதால் மட்டும் அறிவு அறிவாகிவிடாது.
    தன்மாற்றத்தில்(பரிணாமம்) பேரறிவேதான் ஐந்தறிவு சீவனாகி பிறகு ஆறாம் அறிவு சீவனாகியுள்ளது. அறியாமை என்பதனை ஆறாம் அறிவின் வறுமையாகக் கருதுகிறோம். ஏன்? ஐந்தறிவிற்கு அறியாமை உண்டா? இல்லை. ஐந்து புலன்களால் எதை எதை உணரவேண்டுமோ அவற்றை ஐந்தறிவு சீவன் உணர்ந்து கொள்கின்றது. எங்கே வறுமை உள்ளது? ஆகவே ஐந்தறிவு சீவன் அதற்கு மேலும் உணரவேண்டியது வேறொன்றுமில்லை. எனவே ஐந்தறிவு சீவனுக்கு அறியாமை என்பது கிடையாது. அப்படியிருக்கும்போது,

    அறியாமை இல்லாத ஐந்தறிவிலிருந்து ஆறாம் அறிவாக வரும்போது ஆறாம் அறிவிற்கு மட்டும் அறியாமை

    எவ்வாறு வந்தது?

     எங்கிருந்து வந்தது?

    ஐந்தறிவிற்கு அடுத்ததாக ஆறாம் அறிவாக புலன்கள் ஏதுமின்றி உயிரினம் தோன்றக் காரணம் என்ன?
    ஆறாம் அறிவு பிரத்யேகமாக உணர வேண்டியது உள்ளது. அதுவே தன்னை உணர்வது. அதற்கு புலன்கருவிகள் ஏதும் அவசியமில்லை.
    ஐந்தறிவால் உணரப்பட்ட அழுத்தம், ஒளி, ஒலி, சுவை, மணம் ஆகிய ஐந்து பிரபஞ்ச நிகழ்ச்சிகளை உணர்ந்து கொண்டிருந்த அறிவு, இந்த நிகழ்ச்சிகள் ஏன் நடக்கின்றன, எவ்வாறு நடக்கின்றன, இவற்றிற்கு மூலம் என்ன என்று அறிவதற்காகவே ஆறாம் அறிவாக தன்மாற்றம் அடைந்தது. ஆகவே ஆறாம் அறிவாக வந்தபோது பிரபஞ்ச நிகழ்ச்சிகளுக்குக் காரணம் அறியாதிருத்தலால் அது அறியாமை என்கின்ற குறைபாடாகக் கருதப்படுகின்றது வேதாத்திரிய அறிவிற்கான அறிவியலில். திருவள்ளுவர் இது தொடர்பாக என்ன கூறுகின்றார் என்பதனை அறிவோம். அதற்கு அவர் அருளியுள்ள 27 வது குறட்பாவை அறிந்து கொள்ள வேண்டும்.

    நீத்தார் பெருமை

    சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்று ஐந்தின்
    வகைதெரிவான் கட்டே உலகு. ”                          . . . குறள் எண் 27

    பொருள்:
    ஐம்பூதங்களுக்கு மூலமாகிய அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தும் தோன்று விதத்தை அறிந்தவன் உலகம் தோன்றியதை அறிந்தவனாகிறான்.

    (அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தைப்பற்றியும் அறிய வல்லவனே உலகத்தில் உண்மை இயல்பை உணர்ந்தவனாவான் என்பது பொருள். உலகம் ஐம்பூதத்தின் கூட்டால் அமைந்துள்ளதாலும், ஐம்பூதங்களின் மூலங்களையும், அவற்றின் ஆதி நிலையையும் அறிந்தவர் உலக அமைப்பின் உண்மை உணர்ந்தவராவார், மற்றையோர்க்கு உலகத்தின் மெய்யியல்பு விளங்காது.)

    மேலும் அறிவு என்பது எது, அது எவ்வாறு இருக்க வேண்டும் என திருவள்ளுவர் கூறுவதனையும் நினைவு கூர்வோம்.

             மெய் உணர்தல்

    பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
    மருளான்ஆம் மாணாப் பிறப்பு.                      . . . குறள் எண் 351

    எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.”                 . . . குறள் எண் 355

              அறிவு உடைமை

    எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.”                  . . . குறள் எண் 423 

    மெய்ப்பொருளை அறிந்த அறிவே அறிவு என்கிறார். அப்படியானால் மெய்ப்பொருளை அறியாத அறிவு அறியாமையில் இருக்கின்றது என்கிறார். மெய்ப்பொருளை அறியாத அறியாமையில் உள்ள அறிவால் சிறப்பில்லாத துன்பப் பிறவிதான் உண்டாகும் என்கிறார் திருவள்ளுவர்.

    ஆகவே மெய்ப்பொருளை அறியாத அறியாமையே மற்ற அறியாமைகளுக்குக் காரணமாக உள்ளது.

    ஆறறிவாகப் பிறந்த மனிதன் அதற்கு பொருத்தமாகிய பேறாகிய உண்மைப்பொருளை உணரவேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    எனவே மனக்கவலையைத் தரும் அறியாமையை நீக்கி வாழவேண்டும் மனிதன். அதற்கு என்ன செய்ய வேண்டும்? திருவள்ளுவரின் குறளையும் அதற்கு மகரிஷி கூறும் உட்பொருளையும் அறிந்து கொள்வோம்.

                 கடவுள் வாழ்த்து

    தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

    மனக்கவலை மாற்றல் அரிது.”                     குறள் எண் 7

    உட்பொருள் விளக்கம்:

    தனக்கு உவமையில்லாத மெய்ப்பொருளை உணர்ந்த குருவழியால் அறம் பயின்று இறைநிலை விளக்கமும் பெறும்போதுதான் அறியாமையால் தடம் மாறிய மன ஓட்டம் நேர்மையான இயக்கத்திற்கு வரும். துன்பத் தொடரிலிருந்து விடுதலை கிடைக்கும்; இஃதன்றி வேறு எந்த வழியும் மனக்கவலையை மாற்றுவதற்கு இல்லை. இந்தக் கருத்தைத்தான் திருவள்ளுவர் இறைநிலை அறிந்து அறியாமையைப் போக்கி அதன் வழிவாழ்ந்தால் அன்றி வேறு எந்த வகையிலும் மனக்கவலை மாறாது எனக் கருணையோடு எடுத்துரைக்கின்றார் என மகரிஷி அவர்கள் உட்பொருளாகக் கூறுகின்றார், எனவே மனக்கவலையை மாற்ற மனவளக்கலையை அருளியுள்ளார் மகரிஷி அவர்கள். அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற அழைப்பு விடுத்திருக்கிறார் மகரிஷி அவர்கள். ஆகவே மனவளக்கலையால் அறிவின் அறியாமையை நீக்கி அறிவை முழுமை பெறச்செய்து இன்புற்று வாழ்வோம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
    வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்

    வாழ்க அறிவுச் செல்வம்               வளர்க அறிவுச் செல்வம்


    Loading

  • 227-அலட்சியம் தவிர்த்தல்

    வாழ்க மனித அறிவு                                                        வளர்க மனித அறிவு

    அலட்சியம் தவிர்த்தல்

    அறிவிற்கு விருந்து—227

     18-09-2016—ஞாயிறு.

    stop_indifference

         ‘அலட்சியம்’ என்கின்ற சொல் அனைவராலும்  அறியப்பட்டதுதான்.  ஆனால் அச்சொல்லின் ஆழ்ந்த பொருளை ஒரு சிலரே அறிந்திருப்பர். துன்பத்தை யாரும் விரும்புவது இல்லை.  எப்போதுமே இன்பமே விரும்பப்படுகின்றது.  துன்பத்தை விரும்பாத மனிதன் துன்பம் அளிக்கின்ற அலட்சியத்தைப் பற்றி  அறிந்து அலட்சியமில்லாமல் விழிப்போடு இருக்க வேண்டுமல்லவா?!

    அலட்சியம் என்பது என்ன?  அலட்சியம் என்பது மனிதனின்  தன்மைகளில் ஒன்று.  ஆனால் அலட்சியம் என்பது எதிர்மறைத் தன்மை (negativity). அது விரும்பத்தகாதது (undesirable one).

    ‘அலட்சியம்’ என்பதன் ஆழ்ந்த பொருளை உணர்ந்தவர்களில் ஒரு சாரர் ‘அலட்சியம்’ விரும்பத்தகாதது என்று விழிப்போடு அலட்சியம் செய்யாமல் இருப்பர்.

    வேறு சிலரோ அலட்சியம் என்பதன் பொருளை அறிந்திருந்தாலும் அலட்சியத்துடனே செயல்கள் புரிவர்.

    ‘அலட்சியம்’ என்பதன் ஆழ்ந்த பொருளை உணராதவர்களோ, அது பற்றி ஏதும் அறியாதிருப்பர்.

    அலட்சியம் பற்றி அறிந்தவர்  அலட்சியம் காட்டுபவராகக்கூட இருக்காலம்.

    ‘அலட்சியம்’ என்கின்ற சொல்லின் பல பொருட்களைக் காண்போம்.

    அலட்சியம்:

    1) அக்கறையின்மை

    2) பொருட்படுத்தாத தன்மை

    3) உதாசீனம்(lacking interest, showing no interest)

    4) முகத்தில் கர்வம், கண்களில் கர்வம்.(through body languages)

    5) மதியாமை, அவமரியாதை

    இவ்வாறாக பல பொருட்களில் அலட்சியம் என்கின்ற வார்த்தை கையாளப்படுகின்றது.  ஐந்து பொருளுமே விரும்பத்தகாததையே(undesirables) தெரிவிக்கின்றன.

    அலட்சியம் என்பது மனிதனின் தன்மைகளில் ஒன்று என்றால் உடலின் எந்த உறுப்பின் தன்மையாக உள்ளது?  உடல் உறுப்புகளின்  தன்மை அல்ல ‘அலட்சியம்’ என்பது. உடல் உறுப்புகளை அனிச்சையாகவும், மனிதன் விரும்பியும் இயக்குவதற்கு காரணமான அறிவின் தன்மையை அலட்சியம் குறிக்கின்றது.

    திருவேதாத்திரியம் அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் ஆகிய அறிவின் மூன்று வறுமைகளில் அலட்சியத்தை ஒன்றாக கருதுகின்றது.  திருவேதாத்திரியத்தின் தோற்றத்திற்கு முன்னர்  அறிவிற்கு வறுமை உள்ளதாக இந்த அளவிற்கு வலியுறுத்தப்பட்டு கூறப்படவில்லை.  ஆனால் அறிவிற்கு இயலை ஏற்படுத்திக் கொடுத்த அறிவின் அறிவியலாளரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவிற்கு அலட்சியம் என்ற வறுமை இருப்பதை கூறுகிறார்.  இதனை குறையாகவும் கருதுகிறார்.

    Scientist of Consciousness

     அலட்சியம் என்பது அறிவின் குறைபாடே என்று கூறும் மகரிஷி அவர்கள்,  இதனை அறியாமை என்கின்ற பொருள் கொள்வது தவறு என்கிறார்.  இது அறியாமை அன்று என்கிறார்.  விளைவு தெரிந்தும் அறியாமை போல் நடந்துகொள்வது. ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பது அலட்சியம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

     விளைவை அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் செயலுக்கேற்ற விளைவு வந்தே தீரும் என்றிருக்கும்போது, விளைவு துன்பம் வரும் எனத் தெரிந்தும் ஒரே தவறை மீண்டும், மீண்டும் மனிதன் செய்து கொண்டே இருப்பது ஏன்?  அதனால் துன்பம் தனக்கோ பிறர்க்கோ வரலாம்.  காரணம் என்ன?

    1)   பழக்கம்

    2)   செயல் செய்வதற்கு முன் சிந்திப்பது இல்லை.  நுண்மாண்நுழைபுலன் திறன் இல்லாமையே.

    3)   துன்பம் வந்தாலும் அதை அனுபவித்துக் கொண்டே வாழ்வது. தனக்கும் துன்பம் இல்லாமல், பிறர்க்கும் துன்பம் தராமல் வாழவேண்டும் என்கின்ற குறிக்கோள் இல்லாமை.

    4)   செயலுக்கான விளைவு உடனே வரும் என்று சொல்வதற்கில்லை.  ‘அரசன் அன்றே கொல்வான்,  தெய்வம் நின்று கொல்லும். என்பார்கள் பெரியவர்கள்.  தெய்வம் அவ்வப்போது விளைவைக் கொடுப்பதாக இருந்தால் தவறு செய்கின்ற மனிதஇனம் பூல்பூண்டே இல்லாமல் ஆகி இருக்கும்.  மீண்டும் இயற்கை/இறை மனிதஇனத் தன்மாற்றத்தை (பரிணாமத்தை) ஆதிமனிதனிலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருந்திருக்கும்.

    5)   மனிதருள் வேறுபாடுகள் இருப்பதற்கு உள்ள 16 காரணங்களில் சில அலட்சியத்திற்குக் காரணங்களாக உள்ளன.

     பிறவியின் நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு வாழவேண்டிய வாழ்க்கையில் அலட்சியம் இருந்தால் எவ்வாறு சரியாக இருக்கும்?  லட்சியத்தை அடையவிடாததல்லவா?”

     லட்சியத்தை அறிவின் மூன்று வறுமைகளில் ஒன்றாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?   வறுமை என்பது பொருளாதார வசதி இல்லாத நிலை (poverty).  பொருளாதார வசதி இல்லாத நிலையைக் குறிக்கும் சொல்லாகிய ‘வறுமை’ என்கின்ற சொல்லால் அலட்சியத்தை குறிப்பிடுகின்றார். காரணம் என்ன? வறுமைக்கு எதிர்ச்சொல் என்ன?  செல்வம்.  செல்வம் என்பதனை உடைமை என்று சொல்லலாம். ஒருவருக்குரியது உடைமை. ஒருவருக்குரியது செல்வம்.

    அறிவு பற்றி கூற வந்த திருவள்ளுவர் அறிவை ஒருவருக்கு இருக்க வேண்டிய உடைமை எனக்கூறி அறிவுடைமை என்கின்ற அதிகாரத்தை வகுத்துள்ளார். எனவே அறிவு என்பது ஒருவருடைய தலையாய செல்வமாகின்றது.  உலகியல் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வத்தை ஈட்ட  வேண்டுமென்றாலும் அறிவு திறம்பட செயல்பட்டால்தான் சாத்தியமாகும்.  திறம்பட இருக்க வேண்டிய அறிவு அலட்சியத்தோடு செயல்பட்டால் விளைவு என்னவாக இருக்கும்?  துன்பங்கள்தான் மிகும். எனவே அறிவுச் செல்வத்தில் உள்ள அலட்சியம் என்கின்ற குறையை வறுமையாகக் கருதுகிறார் மகரிஷி அவர்கள்.

     இறை அருளை வேண்டும் மனிதன், இறையாகிய அறிவில் அலட்சியம் இருந்தால் எவ்வாறு இறை அருளைப் பெறமுடியும்? திருவள்ளுவர் அறிவுடையவர் எல்லாம் உடையவர் என்று கூறுவதனை நினைவு கூர்வோம்.

    FFC-166-dheaivappulavar

     அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்

    என்னுடைய ரேனும் இலர்”.                   குறள் எண் 430

     பொருள்:  அறிவுடையவர் வேறொன்றும் இல்லாதிருப்பினும் எல்லாம் உடையவரே ஆவர்.  அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

     அறிவில்லாதவர் என திருவள்ளுவர் குறிப்பிடுவது குறைவுடைய அறிவை. ஆகவே  அறிவில் அலட்சியம் என்கின்ற குறை இருப்பது அறிவில்லாமைதானே. எனவே எல்லாம் உடையவராக இருக்க அலட்சியத்தை நீக்குவதில் அலட்சியமாக இருந்துவிடாமல் அலட்சியத்தை நீக்கி அறிவை திருவள்ளுவர் கூறும் எல்லாம் உடையவராக்கும் அறிவுடையதாக்கி பிறவிப்பயன் என்கின்ற லட்சியத்தை அடைவோம்

    வாழ்க வளமுடன்.

     வாழ்க அறிவுச்செல்வம்.                                                     வளர்க அறிவுச் செல்வம்.

    Loading