சிந்திக்க வினாக்கள்-330

வாழ்க மனித அறிவு!                             வளர்க மனித அறிவு!!

சிந்திக்க வினாக்கள்-330

                                                                                06-05-2022-வெள்ளி

இயற்கை/இறை மனவளக்கலைஞர்களை தடுத்தாட்கொள்ளல்

     

பிரதானவினா(Main Question)

ஒவ்வொரு மனிதனின் அடித்தளத்தில் இருப்பது அன்பும் கருணையும் என்கிறார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். 

அடைத்திருக்கும் அழுக்குகள் நீங்கி எப்போது அந்த அன்பும், கருணையும் பீறிட்டு மேலோங்குகின்றன என்கிறார் மகரிஷி அவர்கள்?

துணைக் கேள்விகள்(Sub questions)

  1. என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள்?
  2. ஒவ்வொரு மனிதனும் சமுதாயப் பிராணியாகத்தான்(social being) வாழவேண்டியிருப்பதால் துன்பமில்லாமல் இன்பமாக வாழ்வதற்கு பிணக்கில்லா இணைக்கத்தை ஏற்படுத்தும் ஒவ்வொருவரிடமுள்ள அன்பும் கருணையும் மேலோங்கித்தானே ஆக வேண்டும்?!
  3. ஒவ்வொரு மனிதனுமே மற்றவரிடம் அன்பையும் கருணையையும் தானே எதிர்பார்க்கின்றான்.  அப்படியிருக்கும்போது தான்   எதனை மற்றவரிடம் எதிர்பார்க்கின்றானோ  அதனைத் தானே இவனும் மற்றவருக்குத் தரவேண்டுமல்லவா? இது இயற்கை நியதிதானே?
  4. அடித்தளம் என்றால் என்ன?
  5. ஒவ்வொருவரிடமும் அடித்தளத்தில் அன்பும், கருணையும் உள்ளது என்பது எந்த அடிப்படையில் அமைந்துள்ளது?
  6. பீறிட்டு’ என்றால் என்ன?
  7. மேலோங்குதல்’ என்றால் என்ன?
  8. சஞ்சித அழுக்கு மூட்டையில் விலங்கினப்பண்பையும் இருப்பாகக் கொண்டு பிறந்த மனிதனிடம் அன்பும் கருணையும் எப்போது பீறிட்டு மேலோங்கும் என்கிறார்?
  9. ‘அறிந்தது சிவம்; மலர்ந்தது அன்பு’  என்கின்ற ஆன்றோர் மொழியைப்  பிரதிபலிக்கும் புனித நிகழ்வல்லவா அன்பும் கருணையும் பீறிட்டு மேலோங்குவது?
  10. இந்நிலை மேலோங்குவதற்கு, தவம், தற்சோதனை பயிற்சிகள் தவிர வேறு ஏதேனும் பிரத்யேகப் பயிற்சி/பாடம் உள்ளனவா? அந்த பயிற்சிக்கு/பாடத்திற்கு  என்ன பெயர் வைத்துள்ளார்?
  11. தனக்கு வாழ்வில் ஏற்பட்ட எந்த இரண்டு வாழ்க்கை நிகழ்ச்சிகள் அந்தப் பாடத்தை  மனவளக்கலையில் அமைக்கவைத்தது?
  12. அந்த   வாழ்க்கை நிகழ்ச்சிகளால்   கண்டுபிடிக்கப்பட்ட  ‘உணர்ச்சி அறிவை வெல்வது இயல்பு’ எனும் மானுட இயல்பை  ‘அறிவால் உணர்ச்சியை   வெல்வது உயர்வு’ என்கின்ற முழுமனிதப்பண்பாக மாற்றியமைக்க, முயன்று பயிற்சி செய்து வெற்றியடைந்து  நற்பேறு பெற்றதன்  விளைவாகப் பெற்ற அந்த அனுபவமே மனவளக்கலையில்  பாடமாகியதன் பெயர் என்ன?
  13. அழுக்குச்சாமி, பாரதியாரிடம் வந்து தான் சுமந்துவந்த அழுக்கு மூட்டையை இறக்கி வைத்துவிட்டு  “நான் என் அழுக்கு மூட்டையை இறக்கிவிட்டேன்.  நீ எப்போது உன் அழுக்கு மூட்டையை இறக்கிவைக்கப்போகிறாய்?” என்று வினவிய  நிகழ்ச்சியின் வாயிலாக இறையருள் பாரதியாரை தடுத்தாட்கொண்டதுபோல் அல்லவா உள்ளது இறைநிலை வேதாத்திரி மகரிஷி அவர்களை தூதுவராக்கி மனவளக்கலைஞர்களை ஒட்டுமொத்தமாக(enmass)  தடுத்தாட்கொள்வது உள்ளது மகரிஷிஅவர்களின் இக்கூற்று?
வாழ்க  அறிவுச்செல்வம்!                                              வளர்க அறிவுச் செல்வம்!!