FFC — 100
அ.வி .—100
அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியின் 100 வது நிகழ்வு
*அறிவுப்பசிக்கு விருந்து(சென்ற விருந்தின் தொடர்ச்சி)
15-07-2015—புதன்
1990 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ரிஷிகேசத்தில் நடந்த அறிவுப்பசிக்கு அருள் விருந்தளித்த ஐந்து நாள் சிறப்பு நிகழ்ச்சியின் முடிவு நாளன்று கங்கை நதிக்கரையோரத்தில் சீடர்களுடன் மகரிஷி அவர்கள் அமர்ந்திருக்கும் காட்சி.
வாழ்க வளமுடன். இன்று நம் ‘ஆன்ம செழிப்புறு இணையதள சத்சங்கத்தின்’ நிகழ்வுகளில் ஒன்றான ‘இன்றைய விருந்து’ பகுதியின் 100 வது (FFC—100—அ.வி 100) நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது. இப்போது நாம் சிந்தித்து வரும் வயிற்றுப்பசியும் அறிவுப்பசியும் –4/5 என்கின்ற தலைப்பின் துணைத்தலைப்பு ‘*அறிவுப்பசிக்கு விருந்து’. 100 வது நிகழ்ச்சியாகின்றது.
எனவே அறிவிற்கு விருந்துப்பகுதி 100 வது நிகழ்ச்சியை எட்டியதைக் கருத்தில் கொண்டு இன்றைய துணைத் தலைப்பான ‘*அறிவுப்பசிக்கு விருந்து’ அமையட்டும் என இறையருளையும், மகரிஷி அவர்கள் உள்பட எல்லா மகான்களின் அருளையும் வேண்டி இன்றைய சிந்தனையைத் தொடங்குகிறோம். அறிவிற்கு விருந்து என்கின்ற பகுதியின் நூறாவது நிகழ்ச்சியில், ஏன் சிந்திக்க வேண்டும், அறிவுப்பசி ஏன் அவசியம், அறிவிற்கு ஏன் விருந்து வேண்டும் என மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய தருணத்தில் இன்றையத் துணைதலைப்பு ‘*அறிவுப்பசிக்கு விருந்து’ என்று அமைந்தது மிகவும் பொருத்தமாக உள்ளது,
சென்ற விருந்தில் அறிவுப்பசியின்மைக்கு அருமருந்து மனவளக்கலை என்று அறிந்து கொண்டோம். மந்தமாக இருந்த அறிவின் பசியினைத் தூண்டிய பிறகு அதற்கு யார் உணவளிப்பது? இந்த பொறுப்பு யாருடையது? யார் அல்லது எது அறிவுப்பசியைத் தூண்டுவதற்குக் காரணமாக இருக்கின்றதோ அவரோ அல்லது அதுதான் அறிவுப்பசிக்கு உணவை அளிக்க வேண்டும். ஆகவே மந்தமாக இருந்த அறிவின் பசியினைத் தூண்டிய மனவளக்கலைதான் தூண்டப்பட்ட அறிவிற்கு உணவை அளிக்க வேண்டும். ஆனால் மனவளக்கலை வடிவமைத்துக் கொடுத்தது யார்? மகரிஷி அவர்களின் அறிவாற்றல்.
எனவே மந்தமாக இருந்த ஆனால் இப்போது தூண்டப்பட்டுள்ள அறிவிற்கு உணவினை அளிப்பது மகரிஷி அவர்களுடைய அறிவாற்றலின் கடமையாகும். அவா் பூதஉடல் இப்போது இல்லையாயினும் அவரது அறிவாற்றல் என்றென்றும் ஒளிவிளக்காக அறிவொளி வீசிக்கொண்டிருக்கின்றதே!!! மந்தமாக இருந்த அறிவின் பசியைத்தூண்டியதோடு மட்டுமல்லாமல், பசிக்கு உணவு அளித்தாலே போதும் என்றாலும், தன் கடமையில், அன்புடனும், கருணையோடும். சாதாரண உணவிற்குப்பதிலாக நல்ல, மிகச்சத்துள்ள, ஆரோக்கியமான, சலிப்பில்லாமல், மேலும் மேலும் பசியைத்தூண்டும் விருந்தையே அளிக்கின்றது மனவளக்கலையின் வாயிலாக மகரிஷி அவர்களின் அறிவாற்றல். மகரிஷி அவர்களின் அறிவாற்றல் அட்சயம் பாத்திரம்போல் அறிவிற்கு அளிக்கும் விருந்து பற்றி அறியவே இன்றைய சிந்தனை.
ஆன்மீகத்தில் சிகரத்தை எட்டுவதற்கு திருவேதாத்திரியம் ஆன்மீக ஏணியாக அமைந்துள்ளது. சுத்த அத்வைதத்தின் படி இறையே எல்லாமாகவும் உள்ளதால், இறையேதான் இரையாகவும் உள்ளது. வயிற்றுப்பசிக்கு இறையே தான் உணவுவடிவில் இரையாக உள்ளது. அறிவுப்பசிக்கு இறையே இரையாக உள்ளது எனலாம். அதாவது ஆறாம் அறிவு இறை உணர்வு பெறுவதற்காக வந்துள்ளது. ஆகவே அறிவு இறைஉணர்வு பெறவேண்டுமெனில் முதலில் அதற்கு அறிவுப்பசி இருக்க வேண்டும். அறிவுப்பசிதான், தேடுதல், இறைவேட்கை என்றும் கூறப்படுகின்றது.
ஆகவே வயிற்றுப்பசியைப் போக்கும் அன்னமயகோசத்திலேயேயும், அதனை ஒட்டிய மனோமய கோசத்திலேயும் நின்றுவிடாமல், பிராணமய கோசத்திற்கும், விஞ்ஞானமயகோசத்திற்கும், ஆனந்தமயகோசத்திற்கும் படிப்படியாக உயர்ந்து வரவேண்டும். வயிற்றுப்பசி அதிகமாக இருந்தாலும் அதுவும் கோளாறுதான். அதிக உணவு தீங்கை விளைவிக்கும். ஐம்புலன்களில் வெற்றி பெறுவதற்கு(அளவும், முறையும்) சுவையை அறியும் நாவை முதலில் வெற்றி கொள்ள வேண்டும் என்பார் மகாத்மா காந்தி அவர்கள்
ஆகவே அதிகவயிற்றுப்பசியாகிய கோளாறுதான் அன்னமயகோசத்திலும். மனோமய கோசத்திலும் மட்டுமே இயங்கச்செய்து ஆன்மீக ஏணியில் ஏறி ஆன்மீகத்தின் வெற்றிக்கனியைப் பறிப்பதை தடை செய்கின்றது. அறிவுப்பசிதான் பிராணமய கோசத்திற்கும், விஞ்ஞானமய கோசத்திற்கும், ஆனந்தமய கோசத்திற்கும் படிப்படியாகக் ஏற்றிச் சென்று ஆன்மீகத்தின் சிகரத்தை அடையச் செய்யும். எதற்காக ஆன்மீகத்தின் சிகரத்தை அடைய வேண்டும்? ஆன்மீகத்தின் சிகரத்தை அடைந்தால்தான் வாழ்வின் வெற்றிக்கனியைப் பறிக்க முடியும். அதுதானே பிறவியின் நோக்கம்!! அறிவுப்பசியை ஆன்மதாகம் என்றும் சொல்லலாம்.
அறிவுப்பசியை தீர்த்துக்கொள்வதற்குத்தான் அருட்தந்தை அவர்கள் அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுறுவதற்கு அழைக்கிறார். அழைப்பதோடு இல்லாமல் வாழ்வின் நோக்கம் என்ன என்றும், தான் அதனை எவ்வாறு படிப்படியாக அடைந்தார் என்றும் திருவேதாத்திரியத்தின் 1849 மந்திரத்தில் விவரிக்கிறார்.
இப்பாடலில் உள்ள மகரிஷி அவர்கள் படிப்படியாக உயர்ந்த பேரின்பப்படிகளே அறிவுப்பசியைத் தூண்டும் மருந்தாகும். இறை உணா் ஆன்மீகத்தில் இப்பிறவியிலேயே வெற்றி பெறுவதற்கு முதலில் வாழ்வின் நோக்கம் அவரவர்களே கண்டுபிடிக்க வேண்டும். ‘பிறவியின் நோக்கம் இறையுணர்வு பெறுதலே’ என்று நாவால் மட்டும் சொல்லிக் கொண்டிருத்தல் போதாது. அது வெறும் ஒப்புவித்தலாகும். ஒப்புவித்தல் எவ்வாறு ஆழ் மனதிற்கு மகிழ்ச்சியைத் தர இயலும்?
‘வெல்லத்தை சுவைத்திராமலே வெல்லம் இனிக்கும்’ என்று கூறுவது எப்படி இருக்குமோ, அதுபோல் வெறும் ஒப்புவித்தல் இருக்கும். ‘வெறும் ஒப்புவித்தல்’ ‘பிறவிப்பயன் இறை உணர்வு பெறுவது’ என்கின்ற அந்த உண்மை நிஜமாவதற்கு இந்தப் பிறவி ஒன்றே போதாமல் போய்விடும்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், “பஞ்சாங்கத்தில் இன்று மழை பெய்யும் என இருந்தால், அந்தப் பஞ்சாங்கத்தை பிழிந்தால் நீர் வருமா?” என அன்புடனும், ஆதங்கத்துடனும் கேட்பதனை நினைவு கூர்வது நலம் பயக்கும்.
வாழ்வின் நோக்கம் உறுதிபடுத்துவதில் வெற்றி பெற்றுவிட்டால், பிறகு நம்முள்ளே இருக்கும் இறைக்கும் நமக்கும் இணக்கம் ஏற்படும். அங்கே துவைதம் இருக்காது. மாறாக அத்வைதம் மலர ஆரம்பித்துவிடும். அதாவது பரிபக்குவம் அடைந்துவிட்டால், இறையே நம் விருப்பத்தை அறிந்து, குருவாக இருந்து அவ்வப்போது நமக்குத் தேவையான வழிகாட்டுதல்களையும், சூழ்நிலைகளையும், தெளிவு பெறுவதற்கு மேலும் மேலும் விளக்கங்களை அளித்து வரும். அவ்விளக்கங்களே அறிவிற்கு விருந்தாக அமைந்து முடிவில் தெய்வீகப் போதையில் கொண்டு சேர்க்கும் இறை. அடுத்த விருந்தில் (19-07-2015 ஞாயிறு) மனவளக்கலை எவ்வாறெல்லாம் அறிவுப்பசிக்கு விருந்தாக அமைந்துள்ளது என அறிவோம்.