November 2014

Monthly Archives

  • ஆன்ம அலங்காரம் 3/3

    ஆன்ம அலங்காரம் 3/3

    வாழ்க மனித அறிவு                                                                  வளர்க மனித அறிவு

    நாள் – 10-11-2014

    ஆன்ம அலங்காரத்தை செயலுக்கு கொண்டு வரும் போது அலங்காரத்தின் நோக்கமான மகிழ்ச்சி வாழ்வில் நிறைவேறும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஆன்றோர் மொழி. அகத்தின் அழகு என்பது எதனைக் குறிக்கின்றது. அகம் என்றோலோ உள்ளே இருப்பது என்று பொருள். உள்ளே இருப்பதை எதனைக் குறிக்கின்றது? ஆன்மாவைத்தான் குறிக்கின்றது. ஆன்ம தூய்மைக்கு ஏற்பத்தான் உள்ளமும் இருக்கும் அந்த உள்ளத்தின் அழகு எப்படியோ அதுபோல்தான் முகமும். அதனால்தான், யாருடைய குழந்தையாக இருந்தாலும் எல்லோருக்கும் பிடிக்கின்றது. குழந்தையின் உள்ளம் களங்கமில்லாதது. எனவே அந்த அழகு முகத்தில் தெரிகின்றது.

    ஆன்ம அலங்காரம் என்பது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துவதாகும். கோயிலில் கடவுள் சிலைக்குக்குச் செய்யும் அலங்காரம்கூட மறுநாள் கலைக்கப்பட்டுவிடும். ஆனால் ஆன்மா அலங்காரத்தில் ஒவ்வொரு நாளும் செய்யப்படும் அலங்காரம் கலையாமல் மேலும் மேலும் ஆன்மாவிற்கு அழகைக் கூட்டிக் கொண்டே இருக்கும். ஆன்மா தூய்மை அடைந்து கொண்டே இருக்கும்.

    ஆன்ம அலங்காரம் என்பது ஏற்கனவே பதிந்துள்ள பாவப்பதிவுகள் செயலற்றுப் போக, பாவப்பதிவுகளைப் போக்கும் வழிகளான பிராயச்சித்தம், மேல்பதிவு செய்தல், பாவப்பதிவுகளை முறிவு அல்லது சமன் செய்தல் ஆகியவற்றின் மூலம் ஆன்மாவைத் தூய்மைப் படுத்தி அலங்கரிக்க முடியும். ஆன்ம அலங்காரமே தான் ஆன்மதூய்மை, மனத்தூய்மை என்பது. அப்படி இருக்க ஏன் புதிதாக ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரைச் சேர்க்க வேண்டும்.

    மெய்ஞானமும் விஞ்ஞானமும் இன்னும் முழுமையாக இணைக்கப்படவில்லை. விஞ்ஞானத்தில் மறை பொருள் இல்லை. ஆதலால் ஒன்றைப் பற்றித் தெரிவிக்க போதிய மொழி வளம் இருக்கின்றது. ஆனால் மெய்ஞானத்தில் ஒன்றைப் பற்றித் தெரிவிப்பது என்பது அவரது சொந்த அனுபவத்தைக் கொண்டுதான் சொல்ல வேண்டியுள்ளது. அப்போது தன் அனுபவத்தை பிறருக்குத் தெரிவிக்க உவமையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளது. சரியான சொற்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கின்றது. அப்போது மொழிவளம் தேவைப் படுகின்றது.

    ஒரு மொழிக்கு புதிய புதிய சொற்களையோ அல்லது சொற்றொடர்களையோ உருவாக்கித் தரும் போது அந்த மொழியின் வளம் அதிகமாகும். அந்த வகையில் தமிழ் மொழிக்கு, குறிப்பாக ஆன்மீகத் தமிழில் மறை பொருட்களைப் பற்றியப் புரிதலை தெளிவாக ஏற்படுத்துவதற்கு, கருமையம், உயிரறிவு, காந்தத் தன்மாற்றம் தன்னிருக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல், சீவகாந்தம், தெய்வீக நீதி மன்றம், உயிரின் படர்க்கை நிலை போன்ற சொற்களையும், சொற்றொடா்களையும் வேதாத்திரியம் தந்துள்ளது.

    இறை உணர் ஆன்மீகத்தில் மறைபொருள் கருத்துக்களைத் தெளிவாகத் தெரிவிக்க புதிய புதிய சொற்கள் தேவைப்படுகின்றன. (That is to say, more vocabulary is needed in spiritual language ) அந்த வகையிலே ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரைச் சேர்த்துக் கொள்வோம்.

    இச்சமுதாயத்தில் வறண்டு போன அறனை வலியுறுத்த வந்த, பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதரித்த வேதாத்திரி மகரிஷியின் மனாசீக குருவான முதல் நூற்றாண்டில் அவதரித்த திருவள்ளுவர் கூறும்

    ”மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்து அறன்;
    ஆகுல நீர பிற.”
    என்கின்ற மனத்தூய்மையைப் பெற ஆன்மாவை அலங்காரம் செய்து அழகு பார்ப்போம்.    இத்துடன் ஆன்ம அலங்காரம் முற்றும்.

    வாழ்க மனித அறிவு,  வளர்க மனித அறிவு.
    வாழ்க அறிவுச் செல்வம். வளா்க அறிவுச் செல்வம்.

    * * * *

    வாழ்க அறிவுச் செல்வம்                                                      வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • ஆன்ம அலங்காரம் 2/3

    ஆன்ம அலங்காரம் 2/3

    வாழ்க மனித அறிவு                                                                          வளர்க மனித அறிவு

                          நாள் – 09-11-2014                              

         ஆன்மாவைப் பற்றி அறிந்து கொள்வோம். ஒருவரைப் பற்றி எடுத்துரைக்கும்போது ’அவர் நல்ல மனிதர்’ என்று சொல்வோம். இன்னும் அவரது நற்குணங்களை உண்மையாகப் போற்றிச் சொல்வதற்கு ’அவர் ஒரு நல்ல ஆத்மா/ஆன்மா’ என்பது வழக்கம். இக்கூற்றில் முதலாவதாக ”அவர் ஆன்மா” என்கின்ற ஒன்று உறுதி படுத்தப்படுகின்றது. அவரை நல்ல மனிதர் என்பதனை எதை வைத்துச் சொல்கிறோம்? அவரது நற்குணங்கள் மற்றும் பண்புகளை வைத்து அவரை நல்ல மனிதர் என்கிறோம். அவரது நற்குணங்கள் அவரது ஆன்மாவில் பதிந்து அவரது ஆன்மாவை அலங்கரித்திருக்கின்றது. அந்த ஆன்ம அலங்காரத்தால்தான், அழகின் இலக்கணமான, மனிதனுக்கேற்ற குணங்கள், மனிதனுக்குத் தகுதியானத் தன்மை, மற்றும் ஒழுக்க முறை ஆகியவைகள் அவரிடமிருந்து வெளிப்படுவதால் அவருடைய ஆன்மா அழகுருகின்றது. எனவேதான் அந்த நல்லவரை நல்ல ஆத்மா/ஆன்மா என்கிறோம்.

        ஆத்மா/ஆன்மா என்பது என்ன? இதற்கு முதலில் உயிர் என்பது என்ன என்று அறிந்து கெள்ள வேண்டும். உயிரை இதுவரை யாரும் பார்த்ததில்லை. ஆனால் உயிரை உணர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இறைஉணர் அல்லது ஆன்ம உணர் ஆன்மீகத்தில், உயிர் மேல் மனம் வைத்து அகத்தவ வழிபாட்டை மேற்கொள்பவா்கள் உயிரை உணர்ந்திருக்கிறார்கள். ஆன்மாவை அறியமுடியாத ஆன்மிகம் ஆன்மிகமாகுமா? வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மிகத்தின் நோக்கம், மனிதன் உயிரறிவைப் பெறுதலேயாகும். அதாவது ஆன்மாவைத் தெரிந்து கொள்ளுதலாகும். உயிரின் மூலம், அதன்நிலை, உயிரின் முடிவு, அதன் முக்கியத்துவம் ஆகியவைகளைத் தெரிந்து கொள்வது உயிரறிவாகும். ஆன்மாவிற்கும் உயிருக்கும் தொடர்பு ஏதேனும் உள்ளதா என்றால் உள்ளது என்பதுதான் பதில்.

        உயிர் என்றாலே கண்களுக்குத் தெரியாத ஒன்று. கண்களால் பார்க்க முடியாத நுண்ணிய பொருள்தான் உயிர். உயிர் அணுதரிசினியாலும்(microscope) பார்க்க முடியாது, உயிரை எவ்வாறு ஆற்றல் என்று சொல்ல முடியும்? உடல் ஒர் இயந்திரம். பொதுவாக எந்த இயந்திரமும் இயங்குவதற்கு ஆற்றல் தேவையிருப்பது போல் உடலாகிய இயந்திரம் இயங்குவதற்கும் ஆற்றல் தேவை. அந்த காந்த ஆற்றலைக் கொடுப்பது உயிர்தான்.

        எவ்வாறு உயிர் காந்த ஆற்றலைத் தருகின்றது. எவ்வாறு என்பதனை பிரிதொரு சமயத்தில் பார்ப்போம். அந்த காந்த ஆற்றல் சீவனுடைய  உடலில் இருப்பதால் சீவகாந்தம் எனப்படுகின்றது. சீவ காந்த ஆற்றல் தான் உடலியக்கத்திற்கு ஆற்றலாகச் செலவழிக்கப்படுகின்றது.  இரத்தம் உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தாலும் அதற்கு இதயம் மையமாக இருப்பது போன்று, சீவகாந்தம் உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தாலும் அது ஒரு மையத்தைக் கொண்டிருக்கும். அங்கு சீவ காந்தம் அடர்த்தியாக இருக்கும். அந்த அடர்த்தி பெற்ற சீவகாந்தம் தான் ஆன்மா என்பது.   இதன் சிறப்பபைப் பார்ப்போம்.

         இப்பிரபஞ்சத்தில் அலை இயக்கம் நடந்து கொண்டே இருக்கின்றது. இயற்கையின் திறன்களில் பதிதல்(recording) என்னும் நிகழ்வு மிகவும் சிறப்பானது. இந்த பதிதல் திறன் மட்டும் இல்லாதிருந்தால் உயரினப் பரிணாமமே ஏற்பட்டிருக்காது. ஒன்றிலிருந்து தரம் மாற்றம் ஏற்படுவதே இந்த பதிதல் நிகழ்ச்சியால்தான். இதனைப்பற்றி வேறொரு சமயத்தில் சிந்திப்போம். பதிதலுக்கு ஒர் ஊடகம்(medium) தேவை. அந்த ஊடகம் தான் காந்தம். இயற்கையாக நடக்கும் பதிதல் நிகழ்ச்சிக்கும் சரி அல்லது மனிதனால் செயற்கையாக நடக்கின்ற பதிதல் நிகழ்ச்சிக்கும் சரி காந்தம் தான் ஊடகமாக இருக்கின்றது. உதாரணத்திற்கு, ஒலி-ஒளி நாடாவில்(video tape) பிளாஸ்டிக் நாடாவில் காந்தப் பூச்சு (magnetic coating) தான் உள்ளது. இப்பிரபஞ்சத்தில் எது நடந்தாலும் பதிதல் இல்லாமல் இல்லை.

       ஆகவே இயற்கை மனிதனில் நடக்கும் எண்ணம், சொல். செயல் ஆகிய முத்தொழிலையும் பதிவு செய்யும் ஒரு மறை காந்த குறுந்தகடுதான் இந்த ஆன்மா. அது என்ன மறை காந்த குறுந்ததகடு? அது கண்களுக்குப் புலப்படாது மறைந்துள்ளதால் அதற்கு மறை என்கின்ற அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது. மனிதன் பதிவு செய்யும் குறுந்தகட்டில் உள்ளதை அவன் விரும்பும் போது அதனை அதற்குரிய சாதனத்தின்(deck) வழியாக பதிவு செய்ததை பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.

       ஆன்மாவாகிய மறை குறுந்தகட்டில் உள்ள பதிவுகள் அவ்வப்போது எண்ணங்களாகவும் வருகின்றன. அதே சமயத்தில் செயல்விளைவு விஞ்ஞானத்தின் படி ஆன்ம — குறுந்தகட்டில் உள்ள பதிவுகளின் படி, எங்கும் பேரறிவு இருப்பதால் அவ்வப்போது விளைவுகளையும் கொடுக்கும். பதிவுகளின் தன்மை மற்றும் தரத்தைப் பொருத்து விளைவுகள் நல்லதாகவும் இருக்கலாம். அல்லது தீயதாகவும் இருக்கலாம். இந்த ஆன்ம – குறுந்தகட்டில் உள்ள பதிவுகள் தான் தன்னுடைய வம்சாவளி ஆன்ம – குறுந்தகட்டிலும் பதிகின்றது. ஆகவே நல்வாழ்வு வாழ்வதற்கு ஆன்மதூய்மை அவசியமாகின்றது. ஆகவேதான் வம்சாவளியின் ஆன்மா பெற்றோர்களின் செராக்ஸ் நகல் எனப்படுகின்றது. அதாவது குழந்தைகள், பெற்றோர்களின் செராக்ஸ் நகல் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

        இந்த ஆன்மாவின் விளக்கத்தை வைத்து ஓரளவிற்கு ஆன்மா அலங்காரம் என்பது என்ன என்று யூகிக்க முடிகின்றதல்லவா? ஆன்ம அலங்காரம் என்பது ஆன்ம தூய்மை என்கின்ற சொற்றொடராலும் அழைக்கப்படுகின்றது என்பது தெரிய வருகின்றது. அப்படி இருக்கும் போது ஆன்ம தூய்மையை ஏன் ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரால் அழைக்க வேண்டும். தூய்மை என்பது சாதாரணமாக எல்லோருக்கும்              தெரிந்த ஒன்று. . ஆனால் அலங்காரம் என்கின்ற சொல் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் தெரிவிக்கின்றது. இது ஒரு catchy phrase.   இந்த சொற்றொடர் ஆரம்பத்திலேயே, அதாவது கேட்பதற்கே இதமாக உள்ளது. அதாவது அச் சொற்றொடரே அலங்காரச் சொற்றொடராக உள்ளது.

                                                                        சிந்தனையை நாளைத் தொடர்வோம்   . . . . .

     

     

                                                                                                                

     

    Loading

  • ஆன்ம அலங்காரம்1/3

                                                                                ஆன்ம அலங்காரம்1/3  -08-11-2014                               

     

                                                                                                                                         நாள் – 08-11-2014

                 இன்றைய சிந்தனைக்கு எடுத்துக் கொண்ட பொருள் ஆன்ம ‘அலங்காரம்’. தலைப்பில் ஆன்மா மற்றும் அலங்காரம் ஆகிய இரண்டு சொற்கள் உள்ளன. ஆன்மா எது என்பது பற்றி அறியாதவர்கள் அநேகா் இருக்கலாம். ஆனால் மனவளக்கலைஞர்கள் ஆன்மாவைப் பற்றி அறிந்தவர்கள்.  அலங்காரம் என்கின்ற சொல்லின் பொருள் பற்றி எல்லோருமே அறிவர். இருப்பினும் அலங்காரம் என்பதனை ஆன்மாவுடன் இணைத்துச் சிந்தித்துப் பார்ப்போம். அலங்காரம் என்றால் என்ன? அலங்காரம் எதற்காக?

         அலங்கரி என்றால் அழகுபடுத்து என்று பொருள். அலங்காரம் என்பது ஒப்பனையால் அலங்கரிக்கப்பட்ட நிலை. அழகு படுத்துவது அலங்காரம். எது அழகு? எதற்காக அழகுபடுத்துதல் அவசியமாகின்றது? அழகு என்பது கண்களாலோ, காதுகளாலோ, மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி. அழகிற்கு,

     ü  பொருத்தமான குணம்,

    ü  தகுதியான தன்மை.

    ü  ஒழுங்கு முறை ஆகிய பொருட்களும் (meanings) உண்டு.

          அலங்காரத்தில் முடி அலங்காரம் ஆடை அலங்காரம், நகை அலங்கராம் இவ்வாறாக பல்வகைகள் உள்ளன. வாசனைப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன.

    • இயற்கையாக, இயல்பாக இருக்கும் அழகைவிட செயற்கையால். மிகைப்படுத்திக் காண்பிக்கவும், பார்க்கவும்,
    • தன்னை அழகுபடுத்தி தானே மகிழ்ந்து கொள்ளவும்,
    • பிறருக்கு தன்னை எடுத்துக்காட்டி, பிறர் புகழ தான் மகிழ்ச்சி அடைவதற்காகவும்,,
    • முதுமையை மறைத்து இளமையாகக் காட்டிக் கொள்வதற்கும்,
    • தற்காலிக போலி இன்பம் காண்பதற்காகவும்,. தற்காலிகமாக போலியாக மகிழ்ச்சி அடைவதற்காகவும்,.

     அலங்காரம் செய்து கொள்ளப் படுகின்றது.

          அசலில் அழகில்லை(originally) என்றுதானே செயற்கையாக அழகூட்டப்படுகின்றது. அலங்காரம் ஒரு போலிச்செயல். அலங்காரம் நிலையானது அல்ல. அலங்காரம் கலையக்கூடியது. ஆதலால் அலங்காரம் கலைந்தால், அழகில்லை எனக்கருதப்பட்ட முந்தைய அசல்தான் மிஞ்சும்.

     சுருங்கச் சொல்வதென்றால்,

    • மிகைப்படுத்திய அலங்காரம் தன்முனைப்பின் மறைமுக வெளிப்பாடு.
    • தன்னை உடலுடன் தவறாக அடையாளம் காண்பது.
    • தன்னுடைய சரியான அடையாளத்தை மறந்துவிடுவதாகின்றது,
    • தான் ஆன்மா என்பதனை மறந்துவிடுதல். இவைகளெல்லாம் தன்முனைப்பின் வெளிப்பாடுதானே?
    • இதனால் தானே பிறவிதோறும், மீண்டும், மீண்டும் பிறவி எடுக்கின்ற வினைகள் ஆன்மாவில் அழுத்தமாகப் பதிந்து கொள்கின்றது.
    • மண்ணிற்கோ அல்லது நெருப்பிற்கோ இரையாகவிருக்கின்ற உடலை அலங்காரம் செய்துகொள்வதில் இருக்கின்ற ஆர்வம் அழியாத ஆன்மாவை அலங்காரம் செய்து கொள்வதில் ஆர்வம் இல்லாதது அறியாமைதானே!

                       இதற்கெல்லாம் காரணம்

    • ஆன்மா கண்களுக்குத் தெரியாதது.
    • அல்லது ஆன்மா என்றும் அழியாதது, மற்றும் செயல்களை பதிவு செய்து (recording) அதற்கேற்ற விளைவுகளைத் தரும்(playing) தெய்வீக நீதிமன்ற, காந்த குறுந்தகடு (மறைந்துள்ள – invisible but existing magnetic compact disc) என்கின்ற விஞ்ஞானத்தை அறியாதிருத்தல்.

          ஆன்மா(கருமையம்) தெய்வீக நீதி மன்றம் என்கின்ற விஞ்ஞானத்தை மறந்து அறியாமையில் இருக்கின்றான் மனிதன். ஆகவே ஆன்மாவை (கருமையத்தை) அலங்காரம் செய்து கொள்ளவதில்லை.

       அப்படியே ஆன்மாதான் தெய்வீக நீதி மன்றம் என்று கருத்தியலாக (theoretically) தெரிந்திருந்தாலும், அதனை செயல்முறையில் (practically) உறுதி படுத்தாததும் காரணம்.

        அரூபமாகிய தெய்வத்தை ஆலயத்தில் சிலை வடிவத்தில் அலங்காரப்படுத்திப் பார்த்து இன்பம் அடைகிறான் மனிதன். ஆனால் அதே தெய்வம், தன்னுடைய ஊனுடம்பு ஆலயத்தில் நீதி மன்றமாக இருக்கும் ஆன்மாவைச் சுத்தமாகவும் நீதி வழுவா நிலையில் வைத்திருக்க அலங்காரம் செய்து பார்த்து பேரின்பமடைய அவனுக்குத் தெரியவில்லை.

         கண்களுக்குத் தெரியாமல் அகத்தே அரூபமாக இருக்கும் ஆன்மாவை எப்படி அலங்காரம் செய்வது என்கின்ற ஐயம் எழலாம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் எனப்படுவது எதனைத் தெரிவிக்கின்றது?  மனத்தூய்மை என்கின்றச் சொற்றொடர் எதனைக் குறிக்கின்றது? ஆன்மாவைப் போல் மனதிற்கும்தான் உருவமில்லை. மனம் அரூபா–ரூபம். உருவமில்லாத மனதை எவ்வாறு தூய்மை செய்ய முடியும் என்கின்ற ஐயம் அங்கே எழவில்லையே! அகத்தின் அழகு எனப்படுவது எதனைக் குறிக்கின்றது,? அகம் என்றால் உள்ளே என்று பொருள். ஆகவே உள்ளம் என்பது உள்ளே இருக்கின்ற மனதின் மறுமுனையான உள்ளத்தைக்குறிக்கின்றது. உள்ளத்திற்கு உருவம் இருக்கின்றதா? அகத்தின் அழகு என்பது எதனைக்குறிக்கின்றது? உள்ளே இருக்கும் மனதின் மறுமுனையான உள்ளமாகிய தெய்வத்தைத் தான் குறிக்கின்றது.

    அதனால்தான் திருவள்ளுவர்

                                         ” ஐயப் படா அது அகத்து உணர்வானைத்

                                        தெய்வத்தோடு ஒப்பக்கொளல்”           . . . . .என்கிறார்

         பொதுவாக தூய்மை என்பது என்ன? சுத்தமாக இருப்பது தூய்மை. மனம் சுத்தமாக இருந்தால் அது தூய்மையாக இருக்கின்றது எனப் பொருள். மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல். செயல் ஆகிய மூன்றும் எப்போதும் தனக்கும் பிறர்க்கும் சமுதாயத்திற்கும் நலம் பயப்பதாக இருக்க வேண்டும்.   இதற்கு மனதில் எப்போதுமே நல்ல எண்ணங்களே நிறைந்திருக்க வேண்டும். இதுதான் மனத்தூய்மை எனப்படும். நற் சொற்களுக்கும், நற்செயல்களுக்கும் விதை நல்லெண்ணம், நிலம் மனம். ஆகவே மனதை நல்லெண்ணங்களால் அலங்கரிக்க வேண்டும். மனதில் தோன்ற வேண்டிய நல்லெண்ணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன? ஆன்மாவில் உள்ள பதிவுகளுக்கேற்பவே மனதில் நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் தோன்றுகின்றன. அலங்காரத்தில் தூய்மை இடம் பெற்றிருப்பதால் ஆன்மாவைத் தூய்மைப் படுத்துவதைத்தான் அலங்காரம் என்கிறோம்.

        ஆன்மா கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் அதனை அரூபம் என்று சொல்ல முடியாது. ஆன்மா கண்களுக்குத் தெரியவில்லை என்றாலும் அது இருக்கின்றது. ஆகவே ஆன்மாவை அரூபா—ரூபம் எனக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு காற்று கண்களுக்குத் தெரியவில்லை.   காற்று கண்களுக்குத் தெரியவில்லை என்பதால் காற்றை இல்லை எனக் கூறமுடியாது. காற்று அரூபா-ரூப நிலையில் உள்ளது காற்று இருக்கின்றது என்பதனை தோலின் மூலம் உணரமுடிகின்றது.

          அந்த தெய்வீகக் கருமையத்தில்தான் மனிதன் செய்கின்ற முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் கணக்கில் வைக்கப்பட்டுள்ளன. அந்தத் தெய்வீக நீதி மன்றத்தில் பதிவான பதிவுகளின் (registered cases) அடிப்படையில் வழங்கப்படும் தெய்வீகத் தீர்ப்பின்படிதான்(divine judgement) வாழ்க்கையில் இன்பம் துன்பம் அனுபவிக்க வேண்டியுள்ளது.

     

    சிந்தனையை நாளைத் தொடர்வோம்   . . . . .

     

                                                                                                                

     

    Loading