August 2016

Monthly Archives

  • 220-பிறவிப் பயனை நல்கும்! 4/?

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     
    பிறவிப் பயனை நல்கும்! 4/?

    அறிவிற்கு விருந்து—220

    24-08-2016—புதன்

    கடந்த மூன்று அறிவிற்கு விருந்துகளில் ‘பிறவிப் பயனை நல்கும்’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம். ‘உண்மைப் பொருள் உணர்தலை’ பிறவிப்பயன் என்றும், உள்ளம் தூய்மை அடைதலை பேறு என்றும் அறிந்தோம். இன்று இந்த இரண்டையும் உள்ளடக்கிய தனது அனுபவமாக பாடல் ஒன்றை இயற்றியுள்ளார். அவற்றை உற்று நோக்குங்கால் நமது சிந்தனையை ஆட்கொண்ட சில –சொற்றொடர்களை(PHRASES) களை ஆய்வு செய்வோம்.

    உண்மைப் பொருளை உணர்தல்,
    பிறவிப்பயனை அடைதல்,
    இறைஉணர்வு பெறுதல்,
    அறஉணர்வில் சிறந்து விளங்குதல்,
    வீடு பேற்றினை அடைதல்,
    ‘இன்னும் வேறென்ன வேண்டும்–இப்பேறு பெற்ற பின்னர்?’ என்று இயம்புவது,
    மனிதப்பிறப்பு முழுமை அடைதல்

    ஆகிய பல சொற்றொடர்கள் உள்ளன. இவையெல்லாம் ஒரே பொருளைக்(அர்த்தத்தை-meaning) குறிக்கின்றனவா? அல்லது வெவ்வெறு பொருளைக் குறிக்கின்றனவா என்கின்ற ஐயம் எழலாம்.

    இவற்றிற்கெல்லாம் விடை கூறும் வகையில் ‘இன்பம், இன்பம், இன்பம், இன்பம்’ என்கின்ற பாடலை இயற்றியுள்ளார். இப்பாடல் இயற்றிய நாள் தெரியவில்லை. ஆனால் முதன்முதலில் இப்பாடல் 1998 ஜனவரி மாத அன்பொளி இதழில் வெளிவந்துள்ளது. மகரிஷி அவர்கள் ஐம்பதாவது வயதில்(1961) இல் மனவளக்கலையை வடிவமைத்து அன்பர்களை, வாழ்வியலையும், இறையியலையும் இணைத்து, இன்றைய சமுதாயத்தையும், இனி வரப்போகின்ற சமுதாயத்தையும் சுயமாகவேச், சிந்திக்க வைக்கும் அறிவுத் தொண்டு புரிய தன்னை அர்பணித்துக் கொண்டார். அதன்பிறகும் பல அருட்பாக்களை இயற்றியுள்ளார். அவற்றில் 37 வருடங்கள் சென்று இயற்றப்பட்ட இப்பாடல் முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. எப்படி?

       மனவளக்கலை என்பது இறை-உணர்-ஆன்மீகப் பயிற்சி. இறையை உணர்வதற்காகவே ஆன்மீகப்பயிற்சியினை மேற்கொள்பவர்கள் உண்டு. இறை மீது நம்பிக்கை கொண்டு துவைதநிலையில் பக்திவழிபாடு மேற்கொள்பவர்கள் உண்டு. ஆனால் பக்தியில் சிறந்து விளங்கிய அருளாளர்களைப் போன்று ஆழ்ந்து இறைமீது பக்தி கொள்வதில்லை. காரணம் ஆழ்ந்து பக்தியில் செல்வதற்கு பயம். என்ன பயம்? என்ன காரணம்? புலன் இன்பத்தைத் துறந்து துறவியாகிவிட வேண்டுமோ என்கின்ற அறியாமை. புலன் வழி இன்பத்திற்கும்(SENSUAL PLEASURE) புலன்கடந்த இன்பத்திற்கும்(பேரின்பம்) இடையே ஏற்படுகின்ற போராட்டம், நம்பிக்கையின்மை, புலன்கடந்த இன்பத்தைப்பற்றிய(பேரின்பத்தைப்பற்றிய) தெளிவின்மை, ஆகியவைகளே காரணமாக உள்ளன. A STUDY OF PLEASURE THROUGH SENSES VERSUS PLEASURE BEYOND SENSES MUST BE EVOLVED. இந்நிலை இல்லாத காரணத்தால் ஆன்மீகத்தில் ஆழ்ந்து செல்வதற்கு தேவையற்ற அச்சம் இருந்துவருகின்றது. உலகியல் வாழ்க்கையும், ஆன்மீக வாழ்க்கையும் பிரித்து வைக்கப்பட்டு, ஆன்மீக வாழ்க்கையை தனிப்பட்டவரின் விருப்பத்தைச் சார்ந்தது என்றாக்கப்பட்டுவிட்டது.(IT IS SAD AND PAINFUL TO NOTE THAT SPIRITUALISM HAS BEEN MADE OPTIONAL IN MAN’S LIFE).   ஆன்மீக வாழ்வு என்பது என்ன? எல்லோருக்கும் பொதுவான/இயற்கையின் அம்சமான எல்லோரும் இயற்கையை அறிந்து, இயற்கையை அறிவதால் எவ்வாறு வாழவேண்டுமோ, அதனை அறிந்து அப்படி  வாழ்வது என்பது எவ்வாறு அவரவர்கள் விருப்பத்தைப் பொருத்ததாக இருக்க முடியும்.?   

        ஆன்மா உள்ள மனித இனம் ஆன்மீக வாழ்க்கை வாழவில்லை எனில் வேறு யார் ஆன்மீக வாழ்க்கை வாழ்வது? அல்லது வாழ முடியும்?

         இயற்கையே/இறையே மனிதனின் ஆன்மாவாக உள்ளபோது, மனிதன் ஆன்மாவை அறிந்து இயற்கைநீதி/இறைநீதியினை மதித்து வாழவில்லையானால்; இருப்பினும், ஆன்மாவைக் கொண்டே வாழ்கின்ற மனிதன், ஆன்மாவை அறியாத உலகியல் வாழ்க்கையில் எவ்வாறு துன்பமிலா ஆனந்த வாழ்வு வாழ்ந்து சிறக்க முடியும்? உலகியல் வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை என்று தனித்தனியாக இல்லை.

     ஒரு முறை மகரிஷி அவர்களை  பெரியவர் ருவர்  ‘பிரம்ம ஞானத்தில் என்ன கற்றுத்தருகிறீர்கள்’ எனக் கேட்டதற்கு, மகரிஷி அவர்கள், ‘மனிதன் பிறக்கிறான். ஒருநாள் இறக்கப்போகிறான், இதற்கிடையில் எவ்வாறு வாழவேண்டும் என்று கற்றுத்தரப்படுகின்றது’ என்றாராம்.

    என்ன பிரம்ம ஞானிகளே! உண்மைதானே! வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.

    எனவே ஆன்மீகத்தின் மீதுள்ள அறியாமையால் கொண்டுள்ள அச்சம் நிலவுகின்றச் சூழலில் மகரிஷி அவர்கள், அந்த அச்சத்தை நீக்கித் தெளிவினை ஏற்படுத்தவே இறை-உணர்-ஆன்மீகத்திற்கான பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்தாலும் சாதனையாளர் அறிவு தெளிவினும் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக தன்னுடைய இறை-உணர்-ஆன்ம சாதனையையே பாடலாக அருளியுள்ளார்.

    Perinbappadigal_Spiritual_ladder_reduced size

    பாடல் விளக்கம்:

    பாடலின் தலைப்பில் ‘இன்பம்’ என்று மட்டும் ஒரு முறை கூறாமல், நான்கு முறைகள் கூறியுள்ளார். எனவே பிறவியின் நோக்கத்தை அடைவது நான்கு நிலைகளில் நடைபெறுகின்றது எனத் தெரிகின்றது. ஒவ்வொரு நிலையைக் கடக்கும்போதும் இன்பத்தை தந்ததாகக் கூறுகிறார். கடைசி நிலையில் பேரின்பத்தைத் துய்த்ததாகக் கூறுகிறார். அந்த நான்கு நிலைகளும் என்னென்ன?

    1) பிறவியின் நோக்கத்தை அறிந்தபோதும்
    2) மனம் செயல் தூய்மை ஆனபோதும்
    3) உறவுகளில் உண்மை நிலை அறிந்தபோதும்
    4) முடிவாகத் துறவு நிலை எய்தியபோதும்.

    ஒவ்வொரு நிலைகளைப்பற்றியும் சிந்திப்போம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிலைகள் நம் குருதேவருக்கு ஏற்பட்டது.  எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும், தப்பாது குருஉயர்வு தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்’ என்கின்ற உத்திரவாத உண்மையினை எடுத்துக் கொண்டு சிந்தித்து வருவதால் நம்குருதேவர் அவர்களுக்கு ஏற்பட்ட ஆன்ம அனுபவத்தை சிந்தித்தே ஆகவேண்டுமல்லவா?

    பிறவியின் நோக்கத்தை அறிந்தபோதும்:

    பிறவியின் நோக்கத்தை அறிந்த போது பேரின்பம் அனுபவித்ததாகக் கூறுகிறார். இக்கூற்றினை ஆராயும்போது தெரியவருவது:

    1) ஏற்கனவே மகரிஷி அவர்களின் சிந்தனாப்பள்ளியில், பிறவியின் நோக்கம் இறைநிலை உணர்வது என்கின்ற உண்மை உள்ளங்கை நெல்லிக்கனியாதலால் அதனை மீண்டும் இங்கே கூறவில்லை.

    2) பிறவியின் நோக்கத்தை எவ்வாறு அறிந்தார் என்றும் கூறவில்லை. ஏற்கனவே பிறவியின் நோக்கத்தை அடைய பயிற்சிகள் அவரது சிந்தானப்பள்ளியில் உள்ளதால், பயிற்சிகள் அவரது மாணவர்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதால் அதனையும் கூறவில்லை.

    3) மற்றொன்றை இங்கே கவனிக்க வேண்டியது ஒன்றுள்ளது. இறை-உணர்-ஆன்மீகப் பயிற்சிகளை வகுத்துக் கொடுக்கும்போதே, அதனுடன் இப்பாடலை சேர்த்து வழங்குவதற்கு இப்பாடல் இயற்றப்படவில்லை. 37 வருடங்கள் சென்ற பிறகுதான் இப்பாடலை இயற்றியுள்ளார். இதிலிருந்து என்ன தெரிய வருகின்றது? அன்று இப்பாடலின் தேவை அறியப்படவில்லை அல்லது வேறு சில அடிப்படை கருத்துக்களை நமக்கு தெரிவிப்பதில் அவர்தம் அறிவைச் செலுத்தியிருக்கலாம். ஆனால் மனவளக்கலையை அன்பர்களுக்கு கற்றுக் கொடுத்த பிறகு, இடைப்பட்ட காலத்தில்(37 வருடங்கள்) இப்பாடலின் தேவை உணரப்பட்டதால் இப்பாடலை அருளியுள்ளார். அதற்கு தான் எவ்வாறு முறையாகப்பயின்று இறைஉணர் வெற்றிக்கனியைப் பறித்தாரோ அந்த அனுபவத்தையே பாடலாக அருளியுள்ளார். அப்படி ஒரு பாடலை அன்று (1998-ஜனவரி) அருளியிருந்ததால்தான் நாம் இன்று அதனைப்பற்றி, எந்த நோக்கத்திற்காக அருட்கவிஞரான நம் குருதேவரால் அருளப்பட்டதோ, அவரின் கருணைமலர்ந்த அந்த நோக்கத்தை நாம் நிறைவேற்றுவதற்காக அப்பாடலைத் துருவித் துருவி ஆராய்கிறோம்.

    4) பொதுவாக ஒரு சிறந்த நோக்கத்தை அடைய அதனை ஒட்டியச் செயல்கள் அமைந்து, அச்செயல்களை செவ்வனே ஆற்றி, அதன் பயனை அடைகின்றபோதுதான் இன்பம் வரும். ஆனால் ஒன்றின் பயனை அடைவதற்கு முன்னரே பேரின்பம் கிட்டியதாகக் கூறுகிறார் இப்பாடலில்.

    இது எவ்வாறு சாத்தியம்? இது எதனை அவரது மாணவர்களுக்குத் தெரிவிக்கின்றது?

    (அ) அந்த காரியம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது,
    (ஆ) அந்த சிறப்பின் மீதுள்ள பற்று,
    (இ) அதன் முக்கியம்,
    (ஈ) அதனை அடைவதில் உள்ள பிரகாசமான உறுதி.

    ஆகிய நான்குமே அந்தக்காரியம் முடியும் முன்னரே அவருக்கு பேரின்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்றே கூறலாம்.
    ஒரு மனிதன் பேரின்பத்தை விரும்புவானேயாகில் அவன் பேரின்ப ஏணிப்படிகளில் ஏறித்தான் அந்த உயர்நிலைக்கு வரமுடியும். பேரின்ப படிகளில் எத்தனைப்படிகளில் ஏறி வரவேண்டும் என்கின்ற மலைப்பு இருக்கக் கூடாது என்பதற்காக இயற்கையே/இறையே தெளிவுபடுத்துவதற்காக இப்பாடலை வேதாத்திரி மகரிஷி அவர்களை காகிதத்தையும், எழுதுகோலையும் கொடுத்து எழுத வைத்துள்ளது என்று நினைக்கும்போது இயற்கையின்/இறையின் தன்மாற்றத்தில் இறை-உணர்-படலம் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது என்பது தெள்ளத்தெளிவாகின்றது. உயரே சென்று ஒரு அரிய காட்சியினைப்பார்த்து மகிழ ஏணி தேவைப்படுகின்றது. ஏணி கிடைத்தபிறகு உயரே சென்று அக்காட்சியினை கண்டு களிப்பது உறுதியாகிவிடுவதால் முதல் படியில் காலை வைக்கும்போதே உயரே செல்ல இருப்பவருக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்புதானே. எனவேதான் பிறவியின் நோக்கத்தைஅறிந்தபோதே அவருக்கு பேரின்பம் ஏற்பட்டிருக்கின்றது.

    ஒரு நடைமுறை உதாரணத்தை வைத்து இந்த பேரின்ப நிலையினை உணர்ந்து கொள்வோம். சில உயர் கல்வி படிப்பிற்கு(உம்- மருத்துவம்), அதற்குரிய அடிப்படைக்கல்வித்தகுதியில்(ESSENTIAL QUALIFICATION) தேர்ச்சியும் பிறகு நுழைவுத்தேர்வு (QUALIFYING EXAMINATION) எழுதுவது (தமிழகத்தில் தற்போது இளநிலை உயர்கல்விக்கு நுழைவுத்தேர்வு கிடையாது). உயர் கல்வி படிப்பிற்கு மனுசெய்யும் மாணவன் அடிப்படைக் கல்வியிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றும், அதற்குரிய நுழைவுத்தேர்வு எழுதி அதிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அம்மாணவனின் மனம் எவ்வளவு மகிழ்ச்சியினை அடையுமோ, அந்த மனநிலைதான் இறை-உணர்வு-ஆன்மீகப்பயிற்சியில் முதல்படியான வாழ்வின் நோக்கம் அறிதலில் ஏற்படும். இறை உணர் ஆன்மீகத்தில், சாதகர் பேரருளார்களின் வழிகாட்டுதலைக்கொண்டு, சுயமாகச் சிந்தித்து பிறவியின் நோக்கத்தை கண்டுபிடித்தலில் வெற்றி அடைவது முதல் அம்சமாகும். இதனையே வேறுவிதமாக சொல்வதென்றால் அறிவிற்கு தெளிவை ஏற்படுத்துதல் அவசியமாகின்றது என்பதனை மகரிஷி அவர்களின் அனுபவத்தால் அறியலாகின்றது.

    எதனை வைத்து அம்மாணவனுக்கு அந்த உயர் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு முன்பே மகிழ்ச்சியினைத் தருகின்றது? காரணம் அம்மாணவர் அவ்வுயர் படிப்பின் சிறப்பைப் பற்றியும், அதனை முடித்துவிட்டு சமுதாயத்திற்கு அவர் புரிய விருகின்ற சேவையைப்பற்றியும் அவர் முன்னரே மனவுருவாகத் தெரிந்திருக்கிறார். எனவே அவ்வுயர் படிப்பிற்கான காலம் நான்கு/ஐந்து வருடங்கள் முடியும் முன்னரே அம்மாணவர் மகிழ்ச்சியினை ஆரம்ப கட்டத்திலேயே அடைந்திருக்கிறார். அந்த உயர் படிப்போ உலகியல் வாழ்க்கையையோடு தொடர்புடையதாக இருக்கும். ஆனால் மகரிஷி அவர்களின் விஷயத்தில் இந்த படிப்பு மனிதனாகப்பிறந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உள்ளதால் பேரின்பம் அடைந்ததாக இருந்திருக்கின்றது. எப்போதுமே பேரின்பம் என்பது உலகியல் சார்ந்த விஷயங்களில் ஏற்படாது. பேரின்பம் என்பது ஆன்மா உய்வதற்கான காரியங்களுடன் தொடர்புடைய விஷயங்களில்தான் ஏற்படும்.
    இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்து(28-08-2016-ஞாயிறு) வரை இச்சிந்தனையையே அசை போட்டுக் கொண்டிருப்போம். அடுத்த விருந்தில் இறை-உணர்-பேரின்பம்-ஏணியின் இரண்டாவது படியினைப்பற்றி சிந்திக்க இருக்கிறோம். இரண்டாவது படியில் ‘இறைஉணர்வு என்பது’ என்ன என்பதனைப்(WHAT ACTUALLY IS GOD- REALISATION AND WHAT DOES IT MEAN ACTUALLY) பற்றிய தெளிவினை அடைய இருக்கிறோம். எனவே அதற்கான சிந்தனையையும் அசைபோடுவோம்(LET US ASSIMILATE). வாழ்க வளமுடன்.

    இன்றைய சிந்தனையின் சாராம்சம் யாதெனில், பிறவியின் நோக்கத்தை ஆய்ந்து சரியாகக் கண்டுபிடித்தால், அதுவே பிறவியின் நோக்கத்தை அடைவதற்கு மேலும் ஒரு சில படிகள் இருந்தாலும், அதாவது முதல் படியிலேயே, ஆரம்பத்திலேயே, பிறவியின் நோக்கத்தை முடிவாக அடையும்போது என்ன பேரானந்தம் கிட்டுமோ அதனை இப்போதே அடையலாம் எனத் தெளிவாக இயம்புவதை மகரிஷி அவர்களின் தன் ஆன்மீகவெற்றி அனுபவப் பாடலிருந்து அறிய முடிகின்றது. இறை உணர் பாதையில் பயணிக்கும் ஆன்மசாதகர்களுக்கு வெற்றி அடையும் உறுதிப்பாடும் கிட்டிவிடுகின்றது.

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்


     

    என்ன பிரம்ம ஞானிகளே! உண்மைதானே! வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.

  • சிந்திக்க வினாக்கள்-204

    வாழ்க மனித அறிவு           வளர்க மனித அறிவு

     

    22-08-2016 – திங்கள்

    வாழ்வின் நோக்கத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது? எல்லோராலும் கண்டுபிடிக்க முடியுமா?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம

  • 219-பிறவிப் பயனை நல்கும்! 3/?

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    பிறவிப் பயனை நல்கும்! 3/?

    அறிவிற்கு விருந்து—219

    21-08-2016—ஞாயிறு

     peeRu_uNmaipporuLuNarthal

    பிறவிப்பயன் என்ன என்பதனை அருளாளர்களின் துணையுடன் உறுதி செய்துவருகிறோம். இன்றைய விருந்தில் மகரிஷி அவர்கள் அருளிய ‘மலரே மலரே’ எனத்துவங்கும் பாடலின் கடைசி இரண்டு வரிகளான

    ‘பேறு உண்மைப் பொருளுணர்தல்
    பிறவிப்பயனைப் பெற்றுவிட்டேன்.’

    என்ன அறிவுறுத்துகின்றது என்பதனைப் பற்றி சிந்திக்க இருக்கிறோம். ஆறறிவுடைய மனிதன் அதற்கு ஏற்ப பொருத்தமாக வாழ்வது என்பது உண்மைப் பொருள் உணர்ந்து வாழ்தலேயாகும் என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் உண்மைப்பொருள் உணர்ந்து வாழ்தல் என்பதனை பேறாகக் கருதுகிறார். இந்தப் பேற்றினைப் பெற்றுவிட்டால் அதுவே மனிதப் பிறவி எடுத்ததன் பயனாகவும் கூறுகிறார்,

    உண்மைப் பொருள் என்றால் என்ன?

    உண்மைப் பொருள் என்கின்றபோதே பொய்ப் பொருள் உள்ளதென தெரிகின்றது. ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்கிறாரே திருவள்ளுவர். காண்கின்ற பொருட்களெல்லாம் உண்மைப் பொருட்களல்ல. அவையெல்லாம் மாறக்கூடியவை. இன்றிருக்கும், நாளை இல்லாமல் போகும். ஆனால் இவற்றிற்கெல்லாம் மூலமான என்றும் அழியாத பொருள்தான் மெய்ப்பொருள் எனப்படுகின்றது. அந்த மூலப்பொருள் எவ்வாறு இருக்கும்? பிரபஞ்சத்தில் உள்ள எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும், அது அணுக்களால் ஆனது. அணுக்கள் புரோட்டான், நியுட்ரான், எலக்ட்ரான் ஆகிய தற்சுழற்சி உடைய துகள்களால் ஆனது. ஒருவேளை இப்பிரபஞ்சமே இயக்கமற்று விடுகின்றது என வைத்துக்கொண்டால். என்னவாகும்? தற்சுழற்சி உடையவைகள் நின்று விடும். நின்று விட்டால் எஞ்சியிருப்பது வெளியே. அந்த வெளி என்றும் இருப்பது. அந்த வெளியிலிருந்துதான் துகள்கள் தோன்றின. பின்னர் பஞ்சபூதங்கள் தோன்றின. என்றும் அழியாத அந்த வெளியே உண்மைப்பொருள் எனப்படுகின்றது அறிவை அறிந்த அறிஞர்களால். அந்த உண்மைப்பொருளை(Truth) ஆறாம் அறிவு அறிவதுதான் பேறு எனக்கூறுகிறார் மகரிஷி அவர்கள். உண்மைப் பொருளை அறிதலை வேறு எவ்வாறு சொல்லலாம்?

    அறிவு தன்னையே அறிதல் எனலாம்:

    உண்மைப் பொருளை அறிதலை அறிவு தன்னையே அறிதல் எனலாம். அறிவும் அந்த மூலப்பொருளும் ஒன்றுதான். எனவே அறிவு மெய்ப்பொருளை அறியும்போது தன்னையே அறிந்துகொள்கின்றது. எனவே இதற்கான மறு பெயர்தான் ‘அறிவு தன்னை அறிதல்(Self Realisation)’ எனப்படுகின்றது. இன்னமும் சற்று கூடுதலாக/விரிவாக விளங்கிக் கொள்ளலாம். அறிவு ஐந்தறிவு வரை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தை மட்டுமேதான் உணர்ந்து கொண்டிருந்தது. அதற்காக ஒரறிவு சீவனிலிருந்து ஐந்தறிவு சீவன்கள் வரை ஒவ்வொரு உணர் கருவிகளாக(five senses) படிப்படியாக உருவாகி வந்தன. மனிதனாக வந்தபோது கூடுதலாக உணர்கருவிகள் ஏதும் உருவாக வில்லை. ஆனால் மனிதன் தன்னை விலங்கினத்திலிருந்து வித்தியாசப்படுத்தி ஆறாம் அறிவுடையவன் எனக் கூறிக்கொள்கிறான். கருவிகள் ஏதும் உருவாக வில்லை. ஆனால் ஒரறிவை(உணர்தலை) கூடுதலாகப் பெற்றிருக்கிறான் மனிதன் எனில் அந்த கூடுதலான அறிவிற்கான உணர்தல் என்பது என்ன? ஆறாம் அறிவின் சிறப்பு சிந்திக்க முடியும். ஐந்தறிவு வரை விலங்கினங்கள் தன்னைச் சுற்றியுள்ள பிரபஞ்ச நிகழ்ச்சிகளான, காந்த தன்மாற்றங்களான, அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவற்றை உள்ளதை உள்ளவாறே உணர்ந்து வந்தன. அந்த பிரபஞ்ச நிகழ்ச்சிகள் என்பது என்ன, ஏன் நடக்கின்றன, எவ்வாறு நடக்கின்றன என்கின்ற வினாக்களை எழுப்ப ஐந்தறிவால் இயலாது. ஆனால் சிந்திக்கும் திறனுள்ள ஆறாம் அறிவு ஐந்தறிவு வரை ஐவகை நிகழ்ச்சிகளை உணர்ந்ததோடு, மனிதனிடம் வரும்போது ஏன், எதற்கு, எவ்வாறு என வினாக்களின் வழியாக சிந்தனை மலர ஆரம்பித்ததன் விளைவே, ‘ஐவகை நிகழ்ச்சிகளை உணர்கின்ற நான் யார்’ என்கின்ற வினா எழுந்து விடைகண்டதே தன்னிலை உணர்தலானது. இவ்வாறான விளக்கமும், அதற்காக பயன்படுத்தப்படுகின்ற வார்த்தைகளும் வாக்கியங்களுமே இருபதாம் நூற்றாண்டில் பெருமளவிற்கு வெளிவருவதற்கானக் காரணம் இருபதாம் நூற்றாண்டில் உதயமான திருவேதாத்திரியமேயாகும்.

    தன்னை அறிதல் என்பது பேறா? எப்படி?

    இதனை விளங்கிக்கொள்ள, ‘பேறு’ என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும், பேறு என்பது கிடைத்தற்கரிய ஒன்றைப் பெறுவதற்காக பாக்கியம்-புண்ணியம்(good fortune) என்று பொருள். அவ்வையார் மொழிந்துள்ளது போல், மானிடராய் பிறத்தல் அரிது. மனிதராகப் பிறந்தாலும் ஞானம் அடைய விரும்புவது அரிது என்கிறாள். அவ்வையார் என்றோ சொன்னது இது. ஆனாலும் 1911 வரை இந்நிலை தொடர்ந்து வந்துகொண்டேதான் இருந்தது. ஆனால் இப்போது ஞானம் என்பது என்ன என்று தெளிவாக விளக்கப்பட்டு வருகின்றது. ‘பொதுவாக ஞானம் என்றால் தெளிவு என்று பொருள். சிறப்பான விளக்கம் அறிவை அறிந்த தெளிவு என்பதாகும்.’ என்கின்றது திருவேதாத்திரியம். அறிவை அறிந்த தெளிவு என்பது அறிவு தன்னை அறிதல் தானே!? ஆகவே ஞானம் அடைய-அறிவு தன்னை அறிதல் என்பது அரிதாக உள்ள குடும்பத்தில், சமுதாயத்தில் தன்னை அறிதல்- உண்மைப் பொருள் உணர்தல் என்பது கிடைத்தற்கரிய ஒன்றாகத்தானே கருதமுடியும்?!

    உண்மைப் பொருளை உணர்தலே-தன்னை அறிதலே பிறவிப்பயனா?

    பயன் என்பது என்ன? ஒரு செயலின் விளைவு பயன் எனப்படும். அந்த விளைவு நன்மையாக இருந்தால் மகிழ்ச்சி. ஒரு செயலின் நன்மை விளைவை மனிதன் பயன் எனக் கொள்ளலாம். பிறவிப்பயன் என்கின்ற சொல்லை இரண்டாகப் பிரித்து விளக்கம் காணவேண்டும். அப்படியானால் ‘பிறவி’ மற்றும் ‘பயன்’ என்று பிரித்தால் பிறவி என்கின்ற செயலால் பயன் ஏற்படுகின்றது என்பது விளங்கும். மனிதப்பிறவி என்பது இயற்கையின் நிகழ்வுகளில்(செயல்கள்) ஒன்று. இயற்கையின் நிகழ்வுகளில் ஒன்றான பிறவிக்கு ஏற்படும் நல்விளைவுகளே பயன் எனப்படுகின்றது.

    மனிதர்கள் வாழ்க்கையில் எல்லோருக்கும் எப்போதுமே இன்பம் உள்ளதா? துன்பமும் கலந்துதானே உள்ளது. மனிதனுக்கு மனிதன் வாழ்க்கையில் நடக்கும் இன்பம்-துன்பம் விகிதாசாரத்தில் வெவ்வேறு அளவில் உள்ளது. சிலருக்கு இன்பம் அதிகமாகவும், துன்பம் குறைவாகவும் இருக்கும். சிலருக்கு பெரும்பாலும் துன்பம் அதிகமாக இருந்து, இன்பம் குறைவாக இருக்கும். சிலருக்கு துன்பமேதான் வாழ்க்கையாக அமைகின்றது. பயன் என்றால் செயலின் விளைவு என்று சற்று முன்னர்தான் வரையறுத்துள்ளோம். விளைவாகிய இன்பத்திற்கும், துன்பத்திற்கும் மூலம் செயல்தான். பிறவிப்பயன் என்பதில் பிறவி என்பது இயற்கையின் நிகழ்ச்சி(செயல்) என்று பார்த்தோம். இயற்கையின் நிகழ்ச்சியாகிய மனிதப்பிறவியில் விளைவாகிய இன்பம்/துன்பம் வருவதற்கு யார் காரணம்? மனிதப்பிறவி என்பது இயற்கையின் நிகழ்ச்சி என்பதால் இன்ப-துன்பம் வருவதற்கு பிறவியாகிய இயற்கையின் செயல்தான் காரணம் என்று சொல்ல முடியுமா? இயற்கை வேறு மனிதன் வேறா? அல்லவே! இயற்கையேதான் மனிதனாக வந்துள்ளது. இப்போது நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோமே, இந்த திறன் எங்கிருந்து வந்தது? இயற்கை ஆறாம் அறிவாக மனிதனிடம் இயங்கிக் கொண்டிருப்பதால்தானே சிந்திக்க முடிகின்றது.!

    மனிதப்பிறவி என்பது இயற்கையின் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்தாலும், மனிதனாகப் பிறந்தவன் ஆறாம் அறிவைக் கொண்டு/ஆறாம் அறிவை இயக்கி வாழவேண்டும். அவ்வாறு மனிதன் செயல்புரிந்தால்(வாழ்ந்தால்) மனிதப்பிறவிக்கான பயன் நல்விளைவுகளாக இருக்கும். நல்விளைவுகளே இன்பம் எனப்படுகின்றது. மனிதனின் செயலுக்கேற்ற விளைவுகள் உண்டு என்பது இயற்கை நீதி என்பதனை மனிதன் எப்போதும் நினைவில் கொண்டு அயராவிழிப்போடு வாழவேண்டும். எனவே ஆறாம் அறிவு தன்னை உணர்தல் என்பது எப்போது சாத்தியம்?

    அறிவு தன்னை உணர்தல் என்பது எப்போது சாத்தியம்?

    அறிவு தன்னை உணர்தல் என்பது மனிதனிடம் உள்ள மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை இம்மூன்றும் நீங்கினால் அனைவருக்குமே சாத்தியம். மும்முலங்கள் நீங்கினால் விளைவு என்னவாக இருக்கும்? விளைவு இன்பமாக இருக்கும். சாதாரண மனிதனின் வாழ்வில் மும்மலங்கள் நீங்காமல் இருந்தே இன்பத்தையும் அனுபவிக்கிறான் அவனுடைய அவ்வப்போது புரிகின்ற நற்செயலைப் பொறுத்து, மும்மலங்கள் நீங்கிய நிலையில் அறிவு தன்னை உணர்ந்து கொள்ளும்போது அவ்வப்போது நற்செயலைப் புரிவது என்பது மாறி எப்போதுமே நற்செயல்கள் புரிகின்ற விழிப்பு நிலை வந்துவிடுவதால் எப்போதுமே இன்பமே. சலிப்பில்லாத இன்பம். புலன்வழி இன்பத்தில்தான் இன்பம் மிக மிக அதுவே துன்பமாக மாறிவிடும். எனவே மனிதனின் வாழ்வில் ஆறாம் அறிவிற்கேற்ப வாழ்ந்து உண்மைப்பொருளை-தன்னை அறிந்துகொள்கின்ற பேறு கிட்டும்போது அது பிறவியின் பயனாகக் கருதப்படுகின்றது. இதுவரை அவ்வையார் அரிதான மனிதப்பிறவிக்கான பயன் என்ன என்றும், மற்றும் மகரிஷி அவர்கள் மலர் வழியே மறைபொருள் விளக்கப்பாடலில் மனிதப்பிறவிக்கான பயன் தன்னை உணர்தலே என்று கூறுவதனை அறிந்து கொண்டோம்.

    மகரிஷி அவர்கள் தனது 35 வது வயதில் இறை உணர்வில் தெளிவாகிவிட்டார், அதன் பிறகு ஐம்பதாவது வயதில் உலக சமுதாயத்திற்கு தன்னை உலகநலத் தொண்டனாக அர்பணித்துக் கொண்டு, சுமார் 46 வருடங்கள் அன்பர்களை சிந்திக்க வைக்கும் அருட்பணியாகிய அறிவுத் தொண்டாற்றினார். மகரிஷி அவர்கள் ஒரு முறை அன்பர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர் கூறியதாவது—‘இறை உணர்வு பெறுபவர்களில் பெரும்பாலோருக்கு இறை-உணர்வு என்கின்ற அரிய நிகழ்ச்சி எதிர்பாராத வகையில் தற்செயலாக நடந்துவிடுகின்றது. எனவே அவர்களால் இறை உணர்வு பெற்ற அந்த பாதையை படிப்படியாக(stage by stage) பிறருக்கு உணர்த்த முடியவில்லை. ஆனால் தனக்கு முறையாக (through Process) இயற்கை/இறை அதனை உணர்த்தியது. அதனால்தான் தன்னால் பிறருக்கு இறைஉணர்வு பெறும் வழியை முறையாக தெரிவிக்க முடிந்தது’ என்றார். அப்படி உருவாகியதுதான் ‘மனவளக்கலை’ எனும் அரிய வாழ்வியல் கலை என்று நாம் அறிகிறோம்.

    மகரிஷி அவர்கள் தான் பிறவிப்பயனை அடைந்ததை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வார்த்தைகளால் கூறுகின்றார். எடுத்துக்காட்டாக ஒன்றினைக் கவனிப்போம். பேரின்ப ஊற்று என்கின்ற தலைப்பில் அருளியுள்ள பாடலின் கடைசி சரணத்தைக் கவனிப்போம்.

    உன்னிலே நானடங்க, என்னுளே நீ விளங்க,
    உனது தன்மை ஒளிர, எனதுள்ளம் தூய்மை பெற்றேன்,
    இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்?
    எடுத்த மனிதப் பிறப் பெய்தியதே முழுமை.’

                                                                 . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இப்பாடலில் அவரது தெய்வீக அனுபவத்தை இயம்புகிறார். எனவே இச்சரணத்தின் உட்பொருளை ஒவ்வொன்றாக(list out) அறிவோம்.

    1) எடுத்த மனிதப்பிறப்பு முழுமை அடைந்ததை பேறாகக் கருதுகிறார்.

    2) தூய்மை அடைந்ததால் மனிதப்பிறப்பு முழுமை அடைந்தது என அறியப்படுகின்றது.

    3) தூய்மை பெறுவது என்பது மனிதனின் முயற்சியால்தான் என்றிருந்தாலும் அதாவது மனிதனது செயல்களால்தான் என்றிருந்தாலும் விளைவு இறைவனது கருணையினால் அன்றோ! இறைவனது தன்மை ஒளிர்ந்ததால்தான் தூய்மை பெற்றதாகக் கூறுகிறார். இறைவனது தன்மை ஒளிர்ந்ததால்தான் தூய்மை பெற முடிந்தது அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்று ஒர் அருளாளா் தன் அனுபவத்தைக் கூறுகின்றார்.

    4) மகரிஷி அவர்கள் பேரறிவுடன் தன் அறிவை முழுமையாக இணைத்ததால், இறையே அவருள் விளங்கியதாகக் கூறுகிறார். ‘விளங்க’ என்றால் சிறப்பாக அமைதல் என்று பொருள். ஆகவே பேரறிவு மகரிஷி அவர்களை ஆட்கொண்டு விட்டது என்று சொல்வதற்குமேல் வேறு என்ன பொருள் கொள்ள முடியும் ‘என்னுளே நீ விளங்க’ என்பதற்கு?

    மலரே நீ யார்? என்கின்ற பாடலில் உண்மைப் பொருளை உணர்தல் பேறாகக்கருதியும், அதுவே பிறவிப்பயனாகவும் கூறுகிறார். இப்பாடலில் மனிதப்பிறப்பு முழுமை அடைந்ததனை பேறாகக் கருதுகிறார். இரண்டு பாடல்களிலும் பேறு என்பதனைக் குறிப்பிடுகிறார். இதனை சமன்பாடுகளை (Equations) ஏற்படுத்தி ஆராய்வோம்.

    உண்மைப்பொருள் உணர்தல்=பேறு   ….. சமன்பாடு-1

    உள்ளம் தூய்மை பெறுதல்      =பேறு   …..சமன்பாடு -2

    உண்மைப்பொருள் உணர்கின்ற பேறும், உள்ளம் தூய்மை அடைகின்ற பேறும், பேற்றை அனுபவிக்கக்கூடிய மனதை பொருத்த வரை ஒன்றாகத்தான் இருக்க முடியும். எப்போதும் நிறைவில்லாத மனிதமனம் மனநிறைவிற்கு வந்துவிட்டது, மனம் நிறைவிற்கு வந்துவிட்டதால்தான் ‘இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்?’ என்கின்றது அவரது மனசாட்சி.

    சமன்பாடுகளிலிருந்து அறிய வேண்டிய உண்மை ஒன்றுள்ளது. இரண்டு பேறுகளும் ஒன்று என்பதால் உண்மைப்பொருள் உணர்தலும், உள்ளம் தூய்மை அடைதலும் வேறு வேறல்ல. ஒன்றேதான்.

    ஆகவே இரண்டு சமன்பாடுகளை சேர்த்துப் பார்த்தால், கீழ்கண்ட புதிய முடிவு கிடைக்கிறது.

    உண்மைப்பொருள் உணர்தல் =  உள்ளம் தூய்மை பெறுதல்  = பேறு  

    இதுதான் வேதாத்திரிய சுத்த அத்வைத ஆன்மீகமான மனவளக்கலையின் நான்கு அங்கங்களான தவம், தற்சோதனை, குணநலப்பேறு, முழுமைப்பேறு என்பதன் முடிவான முடிவு(end result).

    உள்ளம் தூய்மை அடைதலும். இன்னும் வேறென்ன வேண்டும், இப்பேறு பெற்ற பின்னர்?’ என்கின்ற மனநிறைவை இப்பாடலிலும், வேறோரு பாடலில் ‘concept of Realisation’  ஐக் கூறுகிறார். (இறைஉணர்வின் பொதுக்கொள்கை, மனவுரு, மனத்தோற்றம்). அப்பாடலை அடுத்த அறிவிற்கு விருந்தில் நினைவு கூர்வோம். அது என்ன பாடல் என்பதனை அன்பர்களும் யோசித்து மௌன ஊடகமான எண்ணத்தைப் பயன்படுத்தலாமே அடுத்து அறிவிற்கு விருந்து(24-08-2016-புதன்) சிறப்பாக அமைய. வாழ்க வளமுடன்

    இன்றைய சிந்தனையின் சுருக்கம்:
    ‘பேறு உண்மைப் பொருளுணர்தல்
    பிறவிப்பயனைப் பெற்றுவிட்டேன்.’

    என்கின்ற பாடல் வரிகளை எடுத்து ஆராய்ந்தோம். அதன் பயனாக உணர்ந்து கொண்டதை சுருக்கமாக பார்ப்போம்.

    1) உண்மைப் பொருள் என்பது அறிவு தன்னையே அறிதல் என்றும்,
    2) உண்மைப் பொருளை உணர்தலே பேறு என்றும்,
    3) அப்படியானால் தன்னையே அறிதலும் பேறு என்றும்,
    4) தன்னை அறியும் பேறு எப்போது சாத்தியம் என்றும்
    அறிந்து கொண்டோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                               வளர்க அறிவுச்செல்வம்.