August 2016

Monthly Archives

  • 215-அருளாளர்கள் உலகம் 8/9

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    அருளாளர்கள் உலகம் 8/9

    அறிவிற்கு விருந்து—215

    10.08.2016—புதன்

    Swamiji

    ‘Entelechy’ என்பதற்கு அகராதியில் உள்ள பொருள் என்ன?

    புலனறிவிற்கு ஒன்றுமில்லாததுபோல் கருதப்படுகின்ற வெளி இன்று நாம் காணும் பிரபஞ்சம் மற்றும் மனிதன் மட்டும் எல்லா உயிரினங்களுமாகவும் ஆகி ஆட்சியின்றி ஆளுமை புரிவது எவ்வாறு வெளிக்கு சாத்தியமாகியது என்பது ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கலாம். உண்மை நிகழ்ச்சி ஒன்று ஆறாம் அறிவிற்கு புரிகின்ற வரை ஆச்சரியமாகவும், பிரமிப்பாகவும் இருக்கலாம். ஆனால் அது ஆரம்ப காலத்தில் இருக்கும் கடைசி வரை அந்த ஆச்சரியமும் பிரமிப்பும் தொடராது. அப்படி தொடர்ந்தால் அறிவு புரிந்து கொண்டிருக்கின்ற நிலையிலேதான் இருக்கின்றது என்று பொருள். புரிந்துவிட்டதாகாது. ஐயமின்றி புரிந்த கொள்ளவில்லை என்பது பொருள். அதற்கு என்ன செய்ய வேண்டும் இப்போது? தெளிந்த புரிதலை, மகரிஷி அவர்களின் வாயிலாக நமக்கு ஏற்படுத்துவதற்காகத்தான் இயற்கை/இறை ‘Entelechy’ என்கின்ற வார்த்தை ஆங்கிலத்தில் உள்ளதனை மகரிஷி அவர்களுக்கு தெரிவித்துள்ளது.

    Entelechy’ என்கின்ற வார்த்தையின் பொருளை English – Tamil அகராதியில் இருந்து அறிவோம். ‘Entelechy’ என்பதற்கு
    பொருளின் நிறைநிலை என்றும்
    பொருண்மை என்றும் பொருள் கூறப்படுகின்றது.

    பொருண்மை என்றால் பொருளின் உண்மையான நிலை என்றும் பொருளின் தன்மை என்றும் பொருள். ‘Entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தைக்கு ‘பொருளின் நிறைநிலை’ என்கின்ற பொருள் இருப்பது, இறைவெளியின் தன்மையினைப் பற்றிக்கூறுவதற்கு பொருத்தமானதுதானே!

    இப்போது ‘Entelechy’ என்பதற்கு ஆங்கில அகராதியில் பொருள் காண்போம்:
    ‘Entelechy’= 1) Realisation
    2) the becoming or being actual of what was potential
    3) developed perfection
    4) what gives perfection

    ‘Entelechy’ என்கின்ற வார்த்தையின் பொருளை வைத்துக் கொண்டு வெளியைப் பற்றி சிந்தித்து ஒரிரு வார்த்தைகளை வெளிக் கொணர்வோம். பொருள் தெரியாத மற்ற ஆங்கில வார்த்தைகளுக்கு அகராதியில் பொருள் தேடுவது போன்று அல்ல ‘Entelechy’ என்கின்ற வார்த்தைக்கு அகராதியில் பொருள் தேடுவது. ‘Entelechy’ என்கின்ற வார்த்தை ஆன்மீகத்தோடு தொடர்புடைய வார்த்தையாக உள்ளது. இந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் இவ்வார்த்தையை பயன்படுத்த முடியாதது போன்று உள்ளது.

    வெளியில் என்ன இருப்பாக இருந்ததோ/இருக்கின்றதோ அதுதான் வந்துள்ளது/வருகின்றது.

    வெளியின் ஒவ்வொரு தன்மாற்றத்திலும் முன்னேற்றமடைந்த முழுமை காணப்படுகின்றது.
    முழுமையைக் கொடுக்கக் கூடிய தன்மை/ஆற்றல் வெளியில் இருக்கின்றது.

    மேலும் ‘Entelechy’ என்கின்ற வார்த்தைக்கான பொருளை ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க இறைவெளி எவ்வாறு ஐந்து பௌதீகப் பொருட்களாகவும், மற்றும் ஓரறிவிலிருந்து ஆறறிவு உயிரினமாகவும் வந்துள்ள தன்மாற்றச் சரித்திரத்தை ஒவ்வொரு நிலையாக ஐயமின்றி விளங்கிக் கொள்ள முடியும். முடிவில் ஆரம்பத்தில் இறைவெளியின் தன்மாற்ற சரித்திரத்தில் அறியும்போது இருந்த பிரமிப்பும் நீங்கும். பின்னர் இயற்கை/இறை எதற்காக உயிரினப்பரிணாமத்தைப் பற்றி விளக்கிக் கொண்டு வரும்போது மகரிஷி அவர்கள் ‘Entelechy’ என்கின்ற வார்த்தை ஆங்கிலத்தில் உள்ளது பற்றி தெரிவிக்க வைத்தது?

    ‘அருளாளர்கள் உலகம்’ என்கின்ற தலைப்பில் குருபூர்ணிமா தினத்திலிருந்து(19-07-2016) ஏழு அறிவிற்கு விருந்துகளில் சிந்தித்து வருகிறோம். பண்பேற்றத்தை அடிப்படையாகக் கொண்டே இறை-உணர்-ஆன்மீகம் அமைந்துள்ளதால், பண்பேற்றம் பெறுவது என்பது இயல்பூக்கத்தினால் சாத்தியம் என்று அறிந்து கொண்டோம்.
    இயக்கமாக வருகின்றபோது, இறைவெளியின்
    ‘தன்மாற்றத்தில் ஏற்படும் உருவமாற்றத்திற்குரிய குணச்சிறப்பினை சேர்க்கும் இரண்டாவது திறனான இயல்பூக்கம்’ என்பது
    ஆதிமனிதன் தோன்றுவதற்கு முன்னர் இறைவெளியில் இயல்பாகவே இருந்த ஊக்கம்(வெளியிலிருந்து வராது) ஒவ்வொரு தன்மாற்றத்திலும் செயல்பட்டு வந்தது.
    ஆனால் மனிதனாக தன்மாற்றம் பெற்று மனிதகுலம் வளர்ச்சி பெற்று வருகின்றநிலையில், குறிப்பாக தற்போதுள்ள சூழலில், பண்பேற்றம் பெற (இந்த) ஊக்கத்தை அக்கறையோடு மனிதன் எடுத்துக் கொள்ள, இறை அதற்கான விளைவைக் கொடுக்கத் தயாராக உள்ளது என்பதனை மனிதன் அறிந்து கொள்ள வேண்டும்.

    அருளாளர்களின் அறிவாற்றலுடன் இணைந்திருத்தல் அவசியம்:

    பண்பேற்றம் பெற அவ்வைத்தாய் கூறுவதுபோல் அருளாளர்களோடு(நல்லார்) இணைந்திருத்தல் அவசியமாகின்றது. அவ்வைத்தாய் தனது மூதூரையில் கூறுவதனை நினைவு கூர்வோம்.

    moodhurai-ovvaiyar

    பாடலின் பொருளை இன்று அறிவதுபோல் அன்று, இளமையில் அறிந்திருக்கமாட்டோம்:

    மூதுரை என்கின்ற தலைப்பில் அவ்வைத்தாய் அருளியுள்ளதைக் கவனிப்போம். மூதுரை என்று ஏன் தலைப்பைக் கொடுத்துள்ளாள் அவ்வைத்தாய்? மூதுரை என்பது உயர்வழக்குச் சொல். காலம் காலமாக வழங்கி வருவதும். எடுத்துக்காட்டாக கூறப்படுகின்ற பெரியோர்கள் வாக்கு என்று பொருள். இப்பாடலை பள்ளியில் படித்திருக்கலாம். ஆனால் இப்போது இந்த வயதில் அறிகின்ற அளவிற்கு இப்பாடல் கூறும் பொருளை அறிந்திருக்கமாட்டோம் அன்று. அதற்கு சிறுவயதினைக் காரணம் கூறஇயலாது. ஆனால் இப்போது இந்த வயதில் அறிவதை அன்றே ஒழுக்கவியல் பாடமாக அறிந்திருக்க வேண்டும். என்றோ பள்ளிப்படிப்பை முடித்துவிட்ட நிலையில், இன்று இப்பாடல் தெரிவிக்கும் பொருளின் மகத்துவத்தை அறிய வேண்டிய அவசியம் வந்துள்ளது. பண்பேற்றத்தின் அவசியத்தை என்றோ அவ்வைத்தாய் கூறியும் சமுதாயம் அதனை செயல்படுத்தவில்லை. இப்போது இயற்கையின் இறையின் மனிதஇன தன்மாற்றத்தில் பண்பேற்றப் படலம் வேதாத்திரியத்தின் வாயிலாக நடந்து கொண்டிருக்கின்றது என்பதனை அறிந்து மகிழவேண்டும்.

    திருவாழ்க்கை அமைய:

    பொதுவாக நன்று என்பது நன்மையை அளிப்பது. ‘நன்று’ என பாடலில் நான்கு முறை கூறப்பட்டிருக்கின்றது. அந்த நன்று என்பது மனிதனுக்கு என்ன நன்மையை அளிக்கவிருக்கின்றன? முதலில் நான்கு வகையில் தீயதை தடுக்கின்றன என அவ்வைத்தாய் கூறுகின்றாள். அது என்ன என்று அறிவோம்.

    மூதுரை

    “தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
    தீயார்சொற் கேட்பதுவுந் தீதே – தீயார்
    குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ
    டிணங்கி யிருப்பதுவுந் தீதே.”

    . . . அவ்வையார்.

    தீயவரை திருவற்றவர் எனக் கூறுவதனைக் கவனிக்க வேண்டும். திரு என்றால் மேன்மைக்கான சிறப்பு என்று பொருள். ஆகவே மனிதவாழ்க்கை திருவாழ்வாக அமைய திருவுடைய நல்லோர்களின் இணைப்பு மிக மிக அவசியமாகின்றது.

    நல்லோர் இணைப்பு வேறு என்ன நன்மைகளைத் தரும்?

    ‘நல்லோருடன் இணைப்பு பெறுவது தீயவைகளை தடுக்கின்றது என்பது பொதுவான நன்மையாக இருந்தாலும், இதற்கு மேலாக குறிப்பாக வேறு என்ன நன்மைகளைத் தரும் நல்லோருடன் இணங்கி இருப்பது’ என்கின்ற மனிதனின் வினாவிற்கு பதிலளிக்கிறார் அவ்வைத்தாய். தீயவை நீங்கிவிட்டாலோ அல்லது தீயவை நெருங்கவிடாமல் விழிப்புணர்வுடன் இருந்தாலோ விளைவாக வருவது இனிதாகத்தானே இருக்க வேண்டும். துன்பம் நீங்கினால் இன்பம் தானே! இனிது என்பது அறிவினரோடு சேர்ந்திருத்தலும், அவர்களை கனவிலும் நனவிலும் காண்பதுதான் என்கிறார் அவ்வையார்.

    அவ்வை கூறும் அந்த அறிவினர் யார்?

    இங்கே அவ்வை கூறும் அந்த அறிவினர் யாராக இருக்க முடியும்? அறிவின் இருப்பிடம் அறிந்து இன்புற்று இருப்பவர்கள்தான் அறிவை அறிந்த அந்த அறிவினர். அவர்களே அருளாளர்களாவார்கள். யார் அருளாளர்? அருளாளர் என்பவர் அருளைப் பெற்று, அருளை வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். ‘குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ என்கின்றனர் ஆன்றோர்கள். எனவே அருளாளர்களைத் துணைகொள்ளாமல், திருவருள் பெறுவது எளிதல்ல. உதாரணமாக வெளியே(Eternal Space) தெய்வம் என்றும் அறிவே தெய்வம் என்றும் துணிந்துரைக்கிறார் மகரிஷி அவர்கள். இதனை தகவலாக(information) ஏற்றுக் கொண்டு சுயமாக சிந்தித்து உறுதிப்படுத்துகிறோம். இதற்கு முன்னர் ‘நாம் வணங்கும் தெய்வம் ஏன் புலன்களுக்குத் தெரியாமல் இருக்கின்றது? தெய்வம் எவ்வாறு இருக்கின்றது? ‘எது தெய்வம்?’ ‘யார் தெய்வம்?’ என்கின்ற வினாக்கள் நம்மிடம் எழவில்லையே! அருளாளர் அவ்வையார் அன்று கூறிய அறிவினரைச் சேர்தல் இனியதாகவும்,  அவரைக் கனவிலும், நனவிலும் காண்பது அதனைவிட இனிதாகவும் இருக்கும் என்பது இப்போது இருபதாம் நூற்றாண்டிலிருந்து மனவளக்கலைஞர்களிடம் நடந்து வருகின்றதல்லவா? காரணம் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கும் அவரது மாணவர்களுக்கும் இடையே ஆறாம் அறிவின் மேம்பாடு சம்பந்தமான பரிமாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருவதே ஆகும்.

    எண்ணெய், திரி இருந்தும் விளக்கு எரியாமல் இருந்ததே!

    எண்ணெய் மற்றும் திரி இருந்தால் மட்டுமே விளக்கு எரியாது. விளக்கு எரிவதற்கு தீ வெண்டும். அந்த தீ எங்கிருந்து வரவேண்டும்? அருளாளர்-குருவிடமிருந்துதான் வரவேண்டும். மகரிஷி அவர்களின் தரிசனம் கிடைத்த பிறகுதானே எரியாமல் இருந்த நமது சிந்தனை விளக்கு ஏற்றப்பட்டு. அது சுடர்விட்டு எரிய. அவர் கூறியுள்ள இயற்கையியல்/இறையியல் நமக்கு துணை செய்ய ஆரம்பித்துள்ளது. பல வினாக்கள் எழுந்து, விடைகளும் தெரிவிக்கப்பட்டு தெளிவாகி வருகின்றது. இதற்கு முன்னர் இந்த சிந்தனை விளக்கு நம்மிடையே எரியாமல்தானே இருந்து வந்துள்ளது. இதனைத்தான் ‘குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ என்கின்ற ஆன்றோரின் அனுபவமொழி தெரிவிக்கின்றது.

    மகரிஷி அவர்களின் மூன்று தாரக மந்திரங்கள்:

    சுத்த அத்வைத உண்மையின்படி அருளாளர்கள் என்பவர்கள் திருவள்ளுவர் கூறுவதுபோன்று தெய்வநிலையை ஐயமற உணர்ந்து தெய்வத்திற்கு சமமாக வணங்கப்படுபவர்கள். எனவே தெய்வம் அரூப நிலையில் தான் நேரிடையாக அறிவுறுத்த வேண்டியதை, அருளாளர்கள்-குருமார்கள் வழியாக கூறுவதைவிட வேறு எந்த வழியில் கூறமுடியும்? அருளாளர்களாக இருந்தாலும், குருமார்களாக இருந்தாலும் அவர்கள் கூறுவது அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி உறுதிபடுத்திய பிறகு, அவ்வாறே நடந்து மாற்றம் பெறலாமே! அந்த மாற்றம் தான் நிலைத்திருக்குமன்றோ! இல்லை எனில் சிந்திக்காமல் சொல்வதனை அப்படியே ஏற்றுக் கொண்டால் அந்த மாற்றம் நிலைப்பது என்பது தொடரும் என்பது ஐயமே. புரிந்ததுபோல் இருந்து புரியாததுபோல் ஆகிவிடும். சிந்தித்து ஆன்றோர்கள் கூறும் உண்மையினை தானே கண்டுபிடிக்கும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு என்பதனை நம் குருதேவர் கூறும் மூன்று தாரக மந்திரங்களான ‘தகவல், உறுதிபடுத்துதல், மாற்றமடைதல்’ (Information, Confirmation, Transformation) உறுதி படுத்துகின்றன.

    தாரகமந்திரம் என்றால் என்ன? மந்திரம் என்றிருக்கும்போது தாராக மந்திரம் என்று சொல்வதன் நோக்கம் என்ன? மந்திரம் என்றால் ஒன்றை அடைவதற்காக பயன்படுத்துவது. தாரகமந்திரம் என்கின்றபோது, அது மிக மிக ஆதாரமானதாகவும், உள்ளத்தில் என்றும் நீங்காமல் நிற்கும்படியாகவும் ஏற்றுக்கொள்ளும்படியாகவும் இருக்கும். நம் குருதேவர் அவர்கள் வழக்கமாக சொல்வது–  “You doubt what I say. Don’t accept as it is.” மேலும் மகரிஷி அவர்கள் ‘எனக்கு கேள்விகள் கேட்டால் பிடிக்கும்’ என்பார். மகரிஷி அவர்கள் ‘There won’t be any foolish questions. There may be foolish answers’ என்பார். ஏன் இவ்வாறு கூறுகிறார் மகரிஷி அவர்கள்? அதாவது ஒவ்வொரு ஆன்மாவையும் சுயமாகச் சிந்திக்க வைக்கவே இவ்வாறு கூறுகிறார். இப்படிக் கூறுவது உண்மையும் கூட. கேள்வி எழுகின்றது எனில் அறிவு அதனை அறிய ஆர்வம் கொள்கின்றது என்று பொருள். அந்த ஆர்வத்தின் காரணமாக விளங்கிக் கொள்ள கேள்வி எழுகின்றது. அதாவது சிந்திக்கின்றது அறிவு என்று பொருள். ஏன், எதற்கு, எவ்வாறு எனக் கேள்விகள் எழவேண்டும்.

    மகரிஷி அவர்களின் சீடர்களும் அவர்களின் வம்சாவளியும் . . . .

    ‘தின்று திரிந்து உறங்கவா பிறந்தோம்?’ என நினைந்ததால்(வினவியாதால்) ‘ஏன் என உணர்ந்தோம்’ என பன்மையில் நம்மையெல்லாம் அவருடன் சேர்த்தே பாடலில் இயம்புகிறார். நமது சார்பாக மகரிஷி அவர்கள் கேட்டுவிட்டார். எனவே மகரிஷி அவர்களை தரிசனம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களும் அவர்களது வம்சாவளியும் தன்னை அறிந்தே தீர்வார்கள் என்பது திண்ணம்.

     ‘தன்னை அறியும்’ படலம் நடந்துகொண்டிருக்கின்றது:

    ‘தின்று திரிந்து உறங்கவா பிறந்தோம்?’ என நினைந்ததால்(வினவியாதால்) ‘ஏன் என உணர்ந்தோம்’ என பன்மையில் நம்மையெல்லாம் அவருடன் சேர்த்தே பாடலில் இயம்புவது இயற்கையின்/இறையின் நிகழ்ச்சிகளில் எதனைத் தெரிவிக்கின்றது? இயற்கையின்/இறையின் தன்மாற்ற சரித்திரத்தில் முக்கியமானதான ‘அறிவு தன்னையறிதல் – ஸ்ரீ ரமணமகரிஷி அன்பர்களை நீ யார் எனக் கண்டுபிடி’ என்று ஆசீர்வதித்தது செயலுக்கு வந்து கொண்டிருக்கின்ற படலம் நடந்து கொண்டிருக்கின்றது என அறிய மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகின்றது. நம் பரிபக்குவ நிலையை இவ்வாறாக வாய்மொழியாகத் தெரிவித்தால்தானே இயற்கை/இறை அடுத்தது என்னென்ன தெரிவிக்க வேண்டுமோ அதனை தெரிவித்துக் கொண்டே இருக்கும். ‘Fraction demands Totality supplies’ என்பதற்கு இதுவன்றோ பொருள். ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பதால் மனிதஇன தன்மாற்றம்/பரிணாமம், இன்னமும் ‘பண்பில் முழுவதுமாக ஏற்றம் பெறாமல் இருப்பது’ முடிவுக்கு வரும். அகம் எண்ண வேண்டும். இறைவனேதான் அகமாக உள்ளான். எனவே இதுபோன்று நல்லவற்றை எண்ணினால் அகம் எண்ணினால் குறைவுடைய மனித மனமும் ஏற்றம் பெற்று இறைமனத்துடனும் நெருங்கி வந்து இணைந்து ஒன்றாகிவிடும்.

    அருளாளர்கள்-குருமார்கள், சாட்சாத் பரப்பிரம்மமே என்று அறிந்திருந்தாலும்….

    நமக்கு சுத்த அத்வைத உண்மை தெரிந்திருக்கின்றது. என்றாலும், அதனை அவ்வப்போது அறிவு மறந்து விடுகின்றது, எனவே சுத்த அத்வைத உண்மையின்படி அருளாளர்கள்-குருமார்கள், சாட்சாத் பரப்பிரம்மமே என்று அறிந்திருந்தாலும்,

    அன்றாட வாழ்வில் துவைத நிலையில் இருந்து செயல்கள் புரிவதால்,
    ‘அருளாளர்கள்-குருமார்கள், சாட்சாத் பரப்பிரம்மமே’ என்கின்ற உண்மை நினைவில் இல்லாமல்
    போவது என்பது,
    சுத்த அத்வைத உண்மை தனக்குப் புரிந்துவிட்டது என அறிவு நினைத்துக் கொண்டிருப்பது சரியல்ல
    என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது.
    எனவே அருளாளர்கள்-குருமார்கள் மனித வடிவில் இருப்பதால் சாதாரண மனிதர்களாகவே
    கொள்ளப்படுகின்றனர்.
    ஆகவே அவர்கள் கூறும் அறிவுரையில் ஐயங்கள் ஏற்படுகின்றன.
    ஐயங்கள் தீர்வதற்கு முயற்சி செய்வதில்லை அறிவு.
    அவர்களின் அறநெறி தாங்கிய அறிவுரைகளை சமுதாயம் ரசிப்பதும் இல்லை, மதிப்பதும் இல்லை.
    அப்படியானால் எவ்வாறு பண்பில் உயரமுடியும்?
    அருளாளர்கள்-குருமார்கள் மனிதவடிவில் இருந்தாலும் அவர்கள் சாட்சாத் பரப்பிரம்மமே தான்.

    அருளாளர்களை எவ்வாறு நினைவு கூர்வது?

    இந்த வினாவிற்கு விடை தேடும் முன்னர் அருளாளர்களை எதற்காக நினைவுகூர்தல் வேண்டும் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். உலகில் எத்தனையோ துறைகள் உள்ளன. அவரவர்கள் விருப்பம் போல் அத்துறையில் ஈடுபடுவர். ஆனால் மனிதகுலத்திற்கே பொதுவானத் துறை ஒன்று உள்ளதென்றால் அது அருள்துறை. தங்களுக்கு பிடித்தமான துறையில் யார் இருந்தாலும் மனிதனாகப் பிறந்த அவர்களுக்கும் பொதுவான துறை அருள் துறையாகும்.

    இதனை அறிந்தேதான், நாம் அருள்துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எனவே நமக்கு முன்னதாக பிறந்த அருளாளர்-ஆசான்களிடம் இருந்து
    அருளையும், வழிகாட்டுதலையும்,
    அருள்துறையின் புனிதத்தை புரிந்துகொள்ளும் தெளிவினையும் பெற்று,
    அருளாளர்-ஆசான்கள் கூறும் நெறியான வழிகளை பின்பற்றி வாழ்க்கையை நடத்த வேண்டும்.

    உத்தமனாய் இரு:

    இவ்வாறு விரும்பி அன்போடு உரைப்பது யார்? அவ்வைத்தாய் ஆத்திச்சூடியில் உத்தமனாய் இரு (102) என்று அன்போடு அறிவுறுத்துகிறார். அதற்கான வழியாக “சான்றோர் இனத்திரு(ஆ.சூ.எண்.44)” என்றும் “பெரியாரைத் துணைக்கொள்(ஆ.சூ.எண்.82)” என்றும் கூறியுள்ளாள். திருவள்ளுவரும் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ மற்றும் ‘சிற்றினம் சேராமை’ என்கின்ற அதிகாரத்தையும் வைத்துள்ளார். அருட்தாய் மற்றும் திருவள்ளுவரின் அறிவுறுத்தலுக்கிணங்க அருளாளர்களைத் துணை கொள்ள வேண்டும். அருளாளர்களைத் துணை கொள்ளுதல் என்றால், அவர்கள் கூறும் அறிவுரைகளுக்கு இணக்கமாக வாழ்தலே ஆகும். இவ்விதத்திலே அருளாளர்களின் ஆசிகள் இயல்பாகவே நமக்கு வந்து சேர்வதுடன், காப்பாகவும் அமையும். ஆத்திச் சூடி யார் சொன்னது என்றால் அவ்வையார் என்போம். சரிதான். அவ்வையார் வடிவில் இறையே சொன்னது என்று சொன்னால் என்ன? அதுதானே சுத்த அத்வைதம். ஒருவேளை அவ்வையார் சொன்னது இறை(வன்) சொன்னதாகவில்லையைா? அவ்வையார் என்கின்ற மனிதரா சொன்னது? யார் சொன்னால் என்ன? நம்மிடம் சுயமாய்ச் சிந்திக்கின்ற அறிவிருக்கும்போது சிந்தித்துப் பார்த்து எடுத்துக் கொண்டு அவற்றைப் பயிலலாமே!. இந்த நிலை இல்லாமையால்தான், இயற்கை/இறை சாதனையே அறநெறி என்றும், இதுவரை வந்துள்ள அறநூல்களே போதும் என்றும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக தனது ஆதங்கத்தை தெரிவித்து சாதனையே அறநெறி(21-12-1961) என்கின்ற பாடலை இயற்றியுள்ளது.

    அருளாளர்களை எவ்வாறு நினைவு கூர்வது பற்றி சிந்தித்து வருகிறோம். அருள் துறையில் நம்மை எல்லாம் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளச் செய்த நேரிடையான அருளாளரும், நம்முடைய குருதேவருமான வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு அருளாளர்களைத் துணை கொண்டார் என்பதனை அறிவோம். அதற்கு அவர் நமக்காக அருளிய குருவணக்கம் பாடலையே எடுத்துக் கொண்டு அடுத்த அறிவிற்கு விருந்தில்(11-08-2016—வியாழன்)ஆராய்வோம்.

    வாழ்கஅறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்.


     அறிவிப்பு

    10-08-2016-புதன்

    வணக்கம். வாழ்க வளமுடன்.

    காலம் கருதி இன்றையை அறிவிற்கு விருந்து இத்துடன் முடித்துக் கொள்ளப்படுகின்றது. இதன் நிறைவுப்பகுதி வழக்கம்போல் அடுத்த ஞாயிறன்று இடம் பெறவேண்டும். ஆனால் அன்று 14-08-2016—(ஞாயிறு) மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினம் வருவதால், ‘பிறவிப்பயன் என்கின்ற தலைப்பில் சிறப்பு அறிவிற்கு விருந்து படைக்கப்பட இருப்பதால், வியாழக்கிழமை(11-08-2016) அன்று வழக்கமாக இடம் பெறும் சிந்திக்க வினாக்கள் நிகழ்ச்சிக்குப் பதிலாக ‘அருளாளர் உலகம்’ நிறைவுப்பகுதி நாளையே இடம் பெறும் என அன்புடன் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது. நாளை சத்சங்கத்தில் சந்திப்போம்.

    வாழ்க வளமுடன்
    www.prosperspiritually.com


  • சிந்திக்க வினாக்கள்–201

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     

    08-08-2016 – திங்கள்

    ‘ஆராய்ச்சி’ என்கின்ற சொல் எவ்வாறு உருவானதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                   வளர்க அறிவுச் செல்வம்

  • 214-அருளாளர்கள் உலகம் 7/?

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

     
    அருளாளர்கள் உலகம் 7/?

    அறிவிற்கு விருந்து—214

    07.08.2016—ஞாயிறு

    gurudevar

    பண்பு மாற்றத்தினை ஏன் இறைவெளியின் திறனான இயல்பூக்க நியதி என்கிறார்?

    மனிதன் என்பவன் யார்? இறையின் தன்மாற்றங்களில் கடைசி நிலைதானே! அந்த மனிதனிடம் பண்பு உருவாகுதலும் இறையின் திறன்களில் ஒன்றுதானே! எனவேதான் மனிதனின் பண்பு மாற்றத்தினை இறைவெளியின் திறனான இயல்பூக்கநியதி என்கிறார் மகரிஷி அவர்கள். இருப்பினும் சற்று விரிவாக சிந்திப்போம். ‘பண்பு மாற்றத்தினை ஏன் இறைவெளியின் திறனான இயல்பூக்க நியதி என்கிறார்?’ அதற்கான விடையைக் காண்பதற்கு முன்னர் இயல்பூக்க நியதி என்றால் எதனைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள் என்பதனை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    இயல்பூக்கம் என்பது என்ன?

    இறைவெளி இருப்பு நிலையில் வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் ஆகிய நான்கு தன்மைகளாக உள்ளன.
    இறைவெளி இயக்கமாக வந்தபோது/வருகின்றபோது தன்மாற்றம், இயல்பூக்கம், கூர்தலறம் ஆகிய திறன்கள் வந்துள்ளன/வருகின்றன. புலன் அறிவால் வெற்றிடமாக கருதப்படுகின்ற இறைவெளி(க்குள்) தன்னுடைய திறனால், இப்போது நாம் காணும் பிரபஞ்சமாகவும், மனிதன் உள்பட எல்லா உயிரினங்களாகவும் தன்மாற்றம் அடைந்துள்ளது.

    இதனை இடைவிடாத ஆழ்ந்த சிந்தனையால் ஆராய்ந்த மகரிஷி அவர்கள் இறைவெளியின் இத்திறனை மூன்றாகப் பிரித்து தன்மாற்றம், இயல்பூக்கம், கூர்தலறம் என்கிறார்.

    அப்படியானால் இயல்பூக்கம் என்பது என்ன? எல்லாத் தோற்றங்களும் விண்களின் கூட்டுதான். இருந்தாலும் அவற்றில் காந்தம் உற்பத்தியாகி, அது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தாகவும், உயிரினங்களிலே மனமாகவும் மாற்றமடைகின்றது. வடிவம் பெறும் குணங்களுக்கு ஏற்ப அததற்குரிய இயக்கச் சிறப்பு பொருத்தமாக அமைவதே இயல்பூக்க நியதியாகும்.

    தன்மாற்றம் மட்டும் ஆகிவிட்டால் போதுமா?

    இறைவெளிதான் துகள்களாகவும், பஞ்சபூதங்களாகவும், பிரபஞ்சமாகவும், மனிதகுலம் உட்பட எல்லா உயிரினங்களாகவும் தன்மாற்றமாகியுள்ளது. தன்மாற்றம் மட்டும் ஆகிவிட்டால் போதுமா? தன்மாற்றம் என்பது என்ன? ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு தானாகவே/தானே மாறுவது. எதற்காக அந்த தன்மாற்றம் நிகழ்ந்ததோ அது முழுவதுமாக அந்த தன்மாற்றத்தில் வெளிப்பட வேண்டுமல்லவா? இல்லையெனில் அந்த தன்மாற்றம் பொருளற்றதாகிவிடுமே! அதாவது ஒவ்வொரு தன்மாற்றமும் அததற்குரிய உருவ அமைப்பிற்கு ஒப்ப சிறப்புற வேண்டுமல்லவா? இச்சிறப்பு இறையின் ஒவ்வொரு தன்மாற்றத்திலும், அதாவது, முதல் தன்மாற்றமான துகள் நிலையிலிருந்து ஆரம்பித்து எண்ணிலடங்கா தன்மாற்றங்களான மனிதன் வரை காணப்படுகின்றது. இத்தகைய ‘இயல்பாகவே, இறையிடம் உள்ள ஊக்கச்சிறப்பினை’ இயல்பூக்கம் என்கின்ற புனிதச் சொல்லால் அழைக்கிறார் மகரிஷி அவர்கள்.

    இறைவெளியின் தன்மாற்றத்தின்போது ஏற்படும் உருவங்களின் அமைப்பு மாற்றங்களும், குணநல மாற்றங்கள் உண்டாவதனை இயல்பூக்கம் என்கிறார் மகரிஷி அவர்கள். அதாவது இறைவெளியில் இயல்பாகவே அந்த ஊக்கம் உள்ளது. பொதுவாக ஊக்கம்(inducement) என்பது என்ன என்று மனிதன் தோன்றிய பிறகு, இப்போது கேட்டால், ‘ஒருசெயலைச் செய்வதற்குப் பிறர் தரும் உற்சாகமான தூண்டுதல், ஆதரவு’ என்போம். ஆனால் இறைவெளி மனிதனாக ஆவதற்கு முன் அதற்கு எங்கிருந்து வந்தது ஊக்கம்? இறைவெளிக்கு வேறு யார் ஊக்கம் அளிக்க முடியும்? இறைவெளிக்கு அதுவேதான் ஊக்கம் அளித்துக் கொள்ள முடியும், இவ்வாறாகக் கூறுவதைவிட, ‘இயல்பாகவே ஊக்கம் உள்ளது இறைவெளியிடம்’ என்பதே சரி. இறைவெளி எல்லாம் வல்லது, எல்லாம் உடையது. இயல்பாக இருந்த ஊக்கத்தை இயல்பூக்கம் (இயல்பு+ஊக்கம்) என்கிறார் மகரிஷி அவர்கள்.
    மேலும் இயல்பூக்க நியதியால் உருவங்களின் அமைப்பு மாற்றங்களும், குணநல மாற்றங்களும் உண்டாகும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    இறைவெளிதானே மனிதனாக தன்மாற்றமாகியுள்ளது. எனவே ‘ஒவ்வொரு தன்மாற்றமும் அததற்குரிய உருவ அமைப்பிற்கு ஒப்ப சிறப்புற வேண்டும்’ என்று முன்னர் கூறியபடி/முடிவு செய்தபடி, மனித தன்மாற்றத்திலும் அச்சிறப்பு அவசியமில்லையா? விலங்கினத்திலிருந்து தன்மாற்றமாகிய மனிதகுலம் உருவத்தில் மாற்றம் அடைந்துள்ளது. இதனை மகரிஷி அவர்கள் ‘விலங்கினத்திற்கும் மனிதஇனத்திற்கும் என்ன வித்தியாசம்?’ எனக் கேட்டுவிட்டு அவரே ‘அதற்கு(விலங்கிற்கு) முதுகெலும்பு படுக்கையாக இருந்தது, மனிதனுக்கு நிமிர்ந்திருக்கின்றது. அவ்வளவுதான்’ என்று விடையளிப்பார். இதிலிருந்து என்ன தெரிகின்றது? மனிதன், அவனுக்குரிய மனிதப் பண்பில் இன்னமும் ஏற்றம் பெறவேண்டியுள்ளது என்கின்ற ஆதங்கத்தை அல்லவா வெளிப்படுத்துகிறார்.

    எனவே மனிதப்பண்பு மனிதனிடம் ஏற்றம் பெறவேண்டுமானால், எந்த பண்பில் ஏற்றம் பெறவேண்டுமோ அந்தப்பண்பின் மதிப்பை அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த பண்பை தானும் அடையவேண்டும் என்கின்ற உள்ளக்கிடக்கை வேண்டும். அதனை நினைந்து, நினைந்து போற்ற வேண்டும். தான் உயராது மற்றவரின் உயர்வை மதிக்கவும், ரசிக்கவும் முடியாது என்று மகரிஷி அவர்கள் கூறியதன் உட்பொருளை விளங்கிக் கொள்ள வேண்டும். பண்பில் ஏற்றம் பெறுவதற்கு அவ்வையார் கூறுவது போல் அந்த பண்பு மிக்க நல்லோரிடம் இணக்கம் கொள்ள வேண்டும். நல்லோருக்கு மரியாதை செலுத்த வேண்டும். அந்த பண்பின்மீது காதல் கொள்ள வேண்டும். அதற்கு வழி என்ன? அதனை மகரிஷி அவர்களின் வாயிலாகவே அறிந்து கொள்வோம்.

    ‘எந்த ஒரு செயலையோ, குணத்தையோ, உயிரையோ, ஒருவர் அடிக்கடி நினைத்து வந்தால் அப்பொருளின் தன்மையாக, நினைப்பவருடைய ஆற்றல் அவரது அறிவிலும், உடலிலும் மாற்றம் ஏற்படும்’ என்கின்ற இயற்கையின் தன்மையைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். இதனை பெருமையாகவும் கருதுகிறார். இதனையும் இறைக்குள்ள திறமைகளில் ஒன்றான இயல்பூக்க நியதியுமாகும் என்கிறார்.

    எனவேதான் எந்த ஒரு பொருளையோ, செயலையோ, குணத்தையோ, உயிரையோ அடிக்கடி நினைந்து வந்தால் அப்பொருளின் தன்மையாக நினைப்பவரின் ஆற்றல் மாறும் என்று கூறும்போது ‘அறிவினிலும், உடலினிலும் மாற்றம் ஏற்படும்’. இயற்கையின் தன்மையினை/திறனை இயல்பூக்க நியதி என்கிறார். அறிவை முதலில் கூறிவிட்டு பிறகு உடலைக் குறிப்பிடுகிறார். அறிவில் மாற்றம் ஏற்படுவதுதான் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அறிவில் மாற்றம் ஏற்படும்போது கூடவே உருவத்திலும் மாற்றம் ஏற்படுகின்றது.
    ஏன் உருவத்திலும் மாற்றம் ஏற்படுகின்றது?

    உருவ மாற்றம் என்பது என்ன? அதுவும் ஒரு இயக்கம்தானே!? இயக்கமாற்றம் ஏற்படும்போது, அதாவது உருவ மாற்றம் ஏற்படும்போது, குணமும் மாறுகின்றது. எனவே குணமாற்றமும், உருவமாற்றமும் ஒன்றொடு ஒன்று பிணைந்தது என்றே சொல்லலாம். எனவேதான் இயல்பூக்க நியதிப்படி, அறிவினிலும் உருவினிலும் மாற்றம் ஏற்படும் என்கிறார். இயல்பூக்கம் எனும்போதே உருவமாற்றத்திற்கு(தன்மாற்றம்) ஏற்ப குணங்களும் மாற்றம் பெறவேண்டும். இயற்கையின்/இறையின் தன்மாற்ற சிறப்பினைக் குறிக்கும் வார்த்தை ஏதேனும் உள்ளதா? இருந்தால் அவ்வார்த்தையினை வைத்து இயற்கையின்/இறையின் தன்மாற்ற சிறப்பினை அறிந்து மகிழலாமே.

    அப்படி ஒரு வார்த்தை உள்ளது ஆங்கிலத்தில். . . . .

    என்ன வார்த்தை அது? அந்த வார்த்தை தெரிந்து கொள்வதற்கு முன் வார்த்தை பொதுவாக உருவாக்கத்தின் அவசியத்தை அறிந்து கொள்வோம். எந்த ஒரு வார்த்தையும் மனிதனால் உருவாக்கப்பட்டதுதானே! எதற்காக வார்த்தை உருவாக்கப்படுகின்றது? ஒன்றைப் பற்றி தான் அறிந்ததை மற்றவருக்கு அதனை தெரிவிப்பதற்காக வார்த்தை உருவாக்கப்படுகின்றது மொழியில். ஒரு வார்த்தையை மொழியியல் வல்லுனர் ஒருவர் உருவாக்குகின்றார் எனில் அந்த வார்த்தை தெரிவிக்கக் கூடிய பொருளை அவர் நிகழ்வாகவோ அல்லது யூகத்தாலோ அவர் அறிந்திருக்கிறார் என்றுதானே பொருள். எனவே அவர் அறிந்திருக்கும்போது அவர் அறிவும், நம் அறிவும் ஒரே பேரறிவின் அம்சமாக இருக்கும்போது அவர் அறிந்ததை அவர் கூறும் வார்த்தையால் நாம் அறிய முடியாதா? முடியும். என்ன வித்தியாசம் இருவருக்கும்? அவர் முன்னர் அறிந்துவிட்டார். நாம் பின்னர் அறிகிறோம். நமக்குப் பின்னரும் அது அறியப்படவிருக்கின்றது சமுதாயத்தில்.
    இயற்கையின்/இறையின் தன் தன்மாற்றத்தை/பரிணாமத்தை அதுவே கூறி நாம் கேட்டதுபோல் விளக்கிக் கொள்ள வேண்டும். அதுவேதான் நம் அறிவாக உள்ளது. தந்தை குழந்தைக்கு சொல்லித் தருவதில்லையா? அதுபோல் பேரறிவு தன்குழந்தைகளுக்கு சொல்கின்றது. இயற்கைக்கு/இறைக்கு அறிவு இருக்கின்றது. ஏனெனில் அது அறிவாகவே இருக்கின்றது. ஆனால் வாய் இல்லை(அப்படி கூட சொல்ல முடியாது. அதுவேதான் வாயாகவும் உள்ளது. இருப்பினும் வாய் இல்லாததாகவே வைத்துக்கொள்வோம்). வாய் இருந்தால் சொல்லிவிடும். வாய் இல்லாவிட்டாலும் கைகளாவது இருந்திருந்திருந்தால் எழுதிக் காண்பித்திருக்கும். இயற்கை/இறைதான் அரூபி ஆயிற்றே. எப்படி முடியும்?
    நேரிடையாக பார்த்ததுபோல் இயற்கையின்/இறையின் தன்மாற்றத்தை/பரிணாமத்தை ஐயமின்றி தெளிவாக அறிந்து கொள்ளமுடியும் ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்தால்.
    இந்த இயற்கையின்/இறையின் தன்மாற்றத் தன்மையினைக் குறிக்கும் வகையில் ஏதாவது வார்த்தை மொழியில் இருந்தால் அந்த வார்த்தையினை வைத்துக் கொண்டு இயற்கையின்/இறையின் ஒவ்வொரு தன்மாற்றத்திலும் அதன் சிறப்பினையும், வெற்றியினையும் அறிந்து, தெளிந்து மகிழ முடியுமன்றோ!. என்ன அந்த ஆங்கில வார்த்தை? ‘Entelechy’ என்பதே அந்த வார்த்தை. இந்த வார்த்தை மனவளக்கலைஞர்களுக்கு தெரிய வந்த பின்புலத்தை அறிந்து கொள்வோம் நமக்குத் தெரிந்த வரையில், ‘Entelechy’ என்கின்ற வார்த்தையினை மகரிஷி அவர்கள் எழுத்து மூலமாக ஓரிடத்தில் அறிவித்துள்ளார். ‘Logical solutions for the problems of Humanity’ என்கின்ற ஆங்கில நூலில் பக்கம் 35 இல் இவ்வாறு கூறுகிறார்.
    ‘The reality of the universe is that everything is the result of Nature’s evolution. All things evolve in orderly fashion, directed by entelechy (omniscient consciousness with inner purpose) of Nature. All manifestation and movements in the universe are subject to the unfailing laws of cause and effect. These three—evolution, entelechy, and cause and effect are the inhernt character and capability of Gravity—Unified force—the radical first principle of the Universe.”Shri Vethathri Maharishi.

    Entelechy’ என்பதனை ‘omniscient consciousness with inner purpose’ என்கிறார். ‘Omniscient’ என்றால் knowing all-எல்லாம் அறிந்த, சர்வக்ஞனான என்று பொருள். அனைத்துப் பொருட்களும் ஒழுங்குடன் தன்மாற்றம்(பரிணமித்துள்ளது) ஆகியது, எல்லாம் அறியத்தக்க பேரறிவாக உள்ள இயற்கை இயக்குவதால் சாத்தியமாகியுள்ளது. இயற்கையின் அந்த இயக்குகின்ற தன்மையை ‘Entelechy’ என்கிறார். மீண்டும் ‘Entelechy’ யைப்பற்றி மேலும் கூறுவதனைக் கவனிக்க வேண்டும். These three: evolution, entelechy  and cause and effect……. Here the word mutation–இயல்பூக்கம் is replaced with the word ‘entelechy’. இயல்பூக்கத்தினை ‘entelechy’ என்று கூறுகிறார்.

    இதற்கு முன்னா் ‘Entelechy’ என்கின்ற வார்த்தையினை எங்காவது கூறியிருக்கிறாரா மகரிஷி அவர்கள்? ஆம் இவ்வார்த்தையினை அறிவித்திருக்கிறார் CUFA (Committee on Unified Force and Animation) அமைப்பின் கூட்டத்தில்(meeting of CUFA). இவ்வார்த்தையை தனது அருளுரையில் தெரிவித்துள்ளார். பரிணாமத்தை பற்றி விளக்கிக்கொண்டு வருகிறார் அன்று. அவர் கூறியதை இப்போது நினைவு கூர்வோம். “பத்து பல்லிகள் தண்ணீரில் விழுந்திருக்கும் ஏழு பல்லி இறந்திருக்கும். மூன்று பல்லிகள் பிழைத்திருக்கும். அந்த மூன்றும்தான் முதலைகளானதாக இருக்கும்.” எனக் கூறிவிட்டு ஆங்கில அகராதியினை எடுத்துவரச் சொல்லி, அதனை திறந்து கொண்டே “இப்படி ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் உள்ளது பார்த்தீர்களா? – Entelechy” என்று கூறினார். இடைவேளை (brake) வந்துவிட்டதால் மகரிஷி, அவர்களது அறைக்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு 1998 இல் ஆங்கில நூலில் அவ்வார்த்தையினைக் குறிப்பிட்டுள்ளார். ‘Entelechy’ என்பதற்கு அகராதியில் உள்ள பொருள் என்ன? அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில்(10-08-2016 புதன்) அறிவோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                வளர்க அறிவுச் செல்வம்.


    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். அதற்கான வழிமுறையினை அறிய: click here.
    அல்லது
    நேரிடையாக உங்கள் கருத்துக்கள் பகுதிக்கு செல்ல click here
    http://www.prosperspiritually.com/contact-us/
    நன்றி.