October 2016

Monthly Archives

  • பழக்கமும் விளக்கமும்-6/?

     

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

     
    பழக்கமும் விளக்கமும்-6/?

    அறிவிற்கு விருந்து—236

    19-10-2016—புதன்

    வாழ்க வளமுடன்.

                சென்ற விருந்திலிருந்து விளக்கப்பதிவுகளுக்கு வலிவு/அழுத்தம் சேர்ப்பது பற்றி சிந்தித்து வருகிறோம். மேலும் அதற்கு வலிவு/அழுத்தம் சேர்ப்பது பற்றி இன்றும் சிந்திப்போம். விளக்கப்பதிவுகளே இல்லாமையாலும் அல்லது விளக்கப்பதிவுகள் இருந்தாலும் அதற்குபோதிய வலிவு/அழுத்தம் இல்லாமையாலும் பழக்கப்பதிவுகள் மனிதனை மனக்கவலையில் தள்ளிவிடுகின்றது. அதாவது மனக்கவலை எதனால் வந்தது/வருகின்றது என்று ஆராயும்போது, மனமேதான் காரணமாகத் தெரிகின்றது.  மனம் தடம் மாறி செய்த/செய்கின்ற செயல்களால் மனக்கவலை வந்தது/வருகின்றது. எனவே மனஓட்டத்தை நேர்மையான இயக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்..

    தடம் மாறிய மன ஒட்டம் நேர்மையான இயக்கத்திற்கு வர. . .

    வெவ்வேறு சூழல்களில் மனிதர்கள் வாழ்ந்து வந்தாலும், எல்லோருக்கும் பொதுவாக, இருபதாம் நூற்றாண்டில் வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்பதற்கான வழிகளை இயலாக்கியுள்ளார் மகரிஷி அவர்கள்.

    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது”

    என்று திருவள்ளுவர் இருபதுநூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறியுள்ளவாறு, இருபதாம் நூற்றாண்டில்  மனக்கவலையை மாற்ற அருமருந்தாக, மனவளக்கலையை இயற்கை கருணையோடு அருளியுள்ளது.

    மனக்கவலை அகற்ற புனருத்தாரணம் செய்யப்பட்ட ஆன்மீகம் அவசியம்:

         புனருத்தாரணம்(revive) செய்யப்பட்ட ஆன்மீகம் இனிமேல்தான் வரவேண்டுமா? இல்லை. ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டாகிவிட்டது. மனவளக்கலைதான் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஆன்மீகம். எட்டிக்காயாக இருந்து வந்த ஆன்மீகத்தை, ஆழ்ந்த-ஆன்மீகத்தில் உள்ள பயத்தையும் நீக்கி, மிகுந்த விருப்பத்தை ஏற்படுத்தி, இறைஉணர் ஆன்மீகமாக புனருத்தாரணம் செய்யப்பட்டுவிட்டது.

           இங்கே ஒன்றை கவனிக்க வேண்டியது மிக மிக அவசியமானதாக உள்ளது. ‘தாள்சேர்வது’ என்பதற்கு பொதுவான விளக்கம் ‘இறைவனது அடிகளைப்பற்றுவது’ எனப்படுகின்றது. ஆனால் மகரிஷி அவர்களின் உட்பொருள் விளக்கத்தை அவர் இயற்றியுள்ள நூலில் பக்கம் 20-21 இல் காணவும். மெய்யுணர்வு அடைந்த குருவழியாக ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று கண்களை உடைய அறத்தைப் பயின்று இறைநிலை விளக்கமும் பெறும்போதுதான் தடம் மாறிய மன ஒட்டம் நேர்மையான இயக்கத்திற்கு வரும், துன்பத்திலிருந்து விடுதலை கிடைக்கும்; வேறு எந்த வழியுமே இல்லை விமோசனம் பெறுவதற்கு என்பதனை ஆணித்தரமாக கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

          இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனக்கவலையை மாற்றுவதற்கான வழி எடுத்துரைக்கப்பட்டிருந்தாலும், அதனை சமுதாயம் பின்பற்றத் தவறிவிட்டது. அல்லது மெய்யுணர்வு அடைந்த குருவழியாக கல்வி கற்கும் நிலை தடைபட்டுபோய்விட்டது எனலாம். ஆனால் இருபது நூற்றாண்டுகள் கழித்து அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு குரு-குலக் கல்வி என்பது தற்போது சாத்தியமில்லாவிட்டாலும், நவீன-விஞ்ஞான காலத்திற்கேற்ப குருவும், மாணவனும் தொலைவில் இருந்தாலும் குரு-சீடர் உறவு என்கின்ற முறையில் ஆன்மீகம் மனவளக்கலை எனும் வாழ்வியல் கலையாக அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும்படியாக புனருத்தாரணம்(revive) செய்யப்பட்டுள்ளது. இதுவரை விளக்கப்பதிவிற்கு வலிவு சேர்ப்பது பற்றி சிந்தித்தோம். வாழ்க்கையில், விளக்கங்கள் எப்போதிலிருந்து பெறப்பட்டு அதனை பயிற்சி செய்து பழக்கமாக கொண்டுவருவது பற்றி இனி சிந்திப்போம். பழக்கத்தைப் பற்றிய பழமொழிகளை நினைவு கூர்வோம்.

    பழக்கத்தைப் பற்றி பழமொழிகள் கூறுவதென்ன?

          தமிழ் மொழியில் ஆயிரமாயிரம் பழமொழிகள் உள்ளன? பழமொழிகள் என்பது என்ன? மக்களிடையே நீண்ட காலமாக வழங்கி வருவது பழமொழி. பேசும்போது, தான் கூறும் கருத்திற்கு ஆதாரமாகவும், உதாரணமாகவும் காட்டப்படுவதுமான கருத்துத்தொடர்தான் பழமொழி.

          நாம் இப்போது விளக்கப்பதிவு பழக்கப்பதிவிடம் ஏன் தோற்றுப்போகின்றது என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அச்சிந்தனையில் உண்மையை அறிகிறோம். உண்மையை அறிந்தாலும், உண்மை செயலுக்கு வரும்வரை ஆதாரம் தேடும் அறிவு. அந்த ஆதாரத்தைத் தரும் பழமொழி ஏதேனும் உள்ளதா என்றால் உடனே நமக்குத் தெரியவருவது இரண்டு பழமொழிகள். அவை:

    ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

    தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும்.”

    எனவே இவ்விரண்டும் என்ன கூறுகின்றன என்பதனை எல்லோருமே அறிவோம்.

    மனிதனுக்கு அறஉணர்வு அவசியம். ‘வித்தை என்றால் பிரம்ம வித்தை, வேதாந்தம் பேசுவதால் மட்டும் கிட்டிடாது’ என்று மகரிஷி அவர்கள் அறிவுறுத்துகிறார். அப்பாடலை நினைவு படுத்திக் கொள்வோம்.

    பிரம்ம வித்தை

    வித்தை என்றால் பிரம்ம வித்தை உயர்வதாகும்
    வேதாந்தம் பேசுவதால் கிட்டிடாது
    அத்து விதமாகி அவன் எங்கு மாகி
    அணு முதலாய் அண்டங்களாகித் தாங்கும்
    சுத்த வெளி சூனியமாய், நிறைந்த தன்மை
    சூட்சுமமாய் அனுபவமாய், அறிந்து நிற்கும்
    தத்துவத்தின் முடிவான, தானேயான
    தனையறிந்த வித்தை அது. தர்க்கம் வேண்டாம்.”

                                     . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

          எனவே பேசுவதால் மட்டுமே, அற உணர்வு கிட்டிடாது. அற உணர்விற்கு பிரம்ம வித்தையான இறை உணர்வு அவசியம். இதனை ஆன்மீகம் என்று கருதாமல் வாழ்வியல் கல்வியாகக் கருதுகிறார் மகரிஷி அவர்கள்.

          எனவே அரிச்சுவடி பள்ளியில் ஆரம்பத்திலேயே ஆரம்பிப்பதுபோல், ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றினைக் கொண்ட அறம் மனிதர்களிடையே மலர்ந்திட ஒழுக்கவியல் பாடம் கல்வியில் இணைக்கப்பட வேண்டும் என்கிறார். ‘இளமையில் கல்’ என்று அவ்வைத்தாய் இயம்பியுள்ளதுபோல் கல்வி ஐந்து வயதிலிருந்து ஆரம்பிப்பதால் ஒழுக்கவியல் என்னும் புதிய பாடத்தை ஏற்படுத்தி அதனை மாற்ற பாடங்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை போன்று, கட்டயாயப்பாடமாக்கி பள்ளிக் கல்வியில் முதல் வகுப்பிலிருந்தே ஆரம்பித்து பன்னிரண்டாம் வகுப்புவரை நடத்தப்பட வேண்டும்.

    நீதி வெண்பா கூறுவது என்ன?

    ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்கின்ற பழமொழியை விளக்கும் வகையில் நீதி வெண்பாவில் உள்ள ஒரு பாடலை நினைவு கூர்வோம்.

    கல்விக்கு இளமையே காலம்

    வருத்த வளைவே அரசர் மாமுடியின் மேலாம்
    வருத்த வளையாத மூங்கில்—தரித்திரமாய்
    வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து
    தாழும் அவர்தம் அடிக்கீழ்தான்”

                                                                                  . . .  நீதி வெண்பா – 7

    பாடலின் பொருள்:

         கோவிலிலிருந்து சுவாமியை தூக்கிவரும் வளைந்த பல்லக்குத் தண்டு எங்கே விளைகிறது? எங்கேயும் பல்லக்குத் தண்டு வளைந்திருப்பதுபோல் மூங்கில் வளர்வதில்லை. மூங்கில் வளர்கின்ற காலத்திலேயே அதைப் பல்லக்குக்குத் தேவைப்படும் மாதிரியில் வளைத்து வளரவிடப்படும். அது முற்றிய பின்னர் அதைப் பல்லக்குக்குப் பயன்படுத்துவர். இதைத்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று கூறுகிறோம். இக்கருத்தை வலியுறுத்துகின்றது நீதிவெண்பாவில் உள்ள பாடல்.

    ffc-236-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81

                                               நன்றி: http://sathyasenthil77.blogspot.in/2014_01_01_archive.html

           மூங்கில் வளரும்போதே, அதாவது இளமையாக இருக்கும்போதே, பல்லக்குத் தண்டு போல் வளைத்துவிடப்பட்ட மூங்கில் பின்னர் கோவிலில் சுவாமியைத் தூக்கும் பல்லக்குத் தண்டாக உயர்கின்றது. அவ்வாறு வளைத்து விடாத மூங்கிலின் கதியை பரிதாபமானது என்கின்றது பாடல்.  ஏன்? அவ்வாறு இளமையில் வளைத்துவிடப்படாத மூங்கில் கழைக் கூத்தாடிகளின் கையில் அகப்பட்டு ஊர் ஊராகத்திரியும் என்கின்றது. இதுபோல், அவ்வையார் இயம்பியுள்ளதுபோல் இளமையில் கற்கின்றவர்கள் மேல்நிலையையும்(இன்பத்தையும்), அவ்வாறு கல்லாதவர்கள் கீழ் நிலையையும்(துன்பத்தையும்) அடைகின்றனர் என்று எச்சரிக்கின்றது பாடல்.  எனவே இளமையில் கல் என்பதற்கேற்ப இனிவரும் சமுதாயத்திற்கு, இளமையிலேயே கல்வியோடு வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வியல்-ஆன்மீகக் கல்வியினை அமுல் படுத்துவோம்.

          அவ்வாறு இளமையில் கல்வியோடு ஆன்மீகக் கல்வி இல்லாத காலத்தில் பிறந்து இளமைப்பருவத்தை தாண்டியவர்களுக்கும் இறைஉணர் ஆன்மீகக்கல்வி பயின்று இப்பிறவியிலேயே வெற்றிபெற வழி இருக்கின்றது என்பதனை உறுதியோடு கூறுகிறார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள், தான் எய்திய நிலையை, நாமும் அடையமுடியும் என்பதற்கு “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என்று உத்திரவாதத்தை அளிக்கிறார். பிறவிக் கடல் நீந்தலாம் என்கிறார். அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில் அறிவோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-220

    வாழ்க மனித அறிவு                           வளர்க மனித அறிவு

     

    17-10-2016 – திங்கள்

    இயற்கையின் சிறப்பே எண்ணம் என்று எவ்வாறு கூறுகிறார்கள் மகரிஷி அவர்கள்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • 235-பழக்கமும் விளக்கமும்-5/?

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     அறிவிற்கு விருந்து—235

    16-10-2016—ஞாயிறு

    வாழ்க வளமுடன்!

         இன்றைய விருந்தில் எப்போது விளக்கப்பதிவுகள் பழக்கப்பதிவுகளை வெற்றிகொள்ளும் அளவிற்கு வலிமை பெறும் என்பதனை அறிய இருக்கிறோம்.

    எப்போது விளக்கப்பதிவுகள் வலிவு பெறும்?

    விளக்கப்பதிவுகளும் செயல்பதிவுகளைப் போன்றே மூளைச் செல்களிலும், கருமையத்திலும் ஏற்படுகின்றன. அவ்வாறு விளக்கப்பதிவுகள் ஏற்பட்டாலும், அது தொடர்ந்து செயல்படுவதற்கும், நிலைக்கவும், மன அலை நுண்ணியதாக அமைய வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். இடைவிடாத ஆராய்ச்சியாலும்(மிகவும் கவனிக்கத்தக்கது) ஆதிநிலையான அறிவை அறிந்து விரிந்த மன நிலையில் பழக்கப்பதிவுகளின் விளைவையும், வலுவையும் உணரவேண்டும். பழக்கப்பதிவுகளை வேறு நல்ல உரிய பதிவுகளைக் கொண்டு மாற்றியமைக்கும் திட்டமிட்டு செயல்புரிந்துதான் விளக்கப்பதிவுகளுக்கு வலிவினைச் சேர்த்துக் கொண்டே வர வேண்டும். இப்படி உடல் செல்களின் இயக்கத்திற்கு(பழக்கப்பதிவுகள்) மூளைச் செல்களின் ஆற்றல் அதிகரிக்கும்போதுதான் உடல், புலன்கள் செல்களுடைய இயக்கங்களை கட்டுக்குள் கொண்டுவரமுடியும். இப்படி மாற்றியமைக்கும் திட்டமிட்ட பயிற்சிதான் தவம் எனப்படுகின்றது என்கிறார் மகரிஷி அவர்கள். தவத்தின் மூலம் இறை உணர்வும், அற உணர்வும் செயலாகும்போது விளக்கத்தின் வழியே பழக்கத்தை கொண்டுவந்து உய்வு பெறலாம் என்கிறார் மகரிஷி அவர்கள்.
    எனவே தவம், அகத்தாய்வு, குணநலப்பேறு, உடற்பயிற்சி மூலம் தவமும், அறமும் சித்தியாகும் என்கிறார். விழிப்பும், சிந்தனையும் முயற்சியும், திட்டமும் இவற்றிற்கு ஒப்ப செயலும் பின்பற்றி பழக்கத்தை வென்று விளக்கத்தில் வாழ்வோம் என்கிறார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    victory-for-prudence

    இதற்கு மேலும் விளக்கப்பதிவை வெற்றிப் பெறச்செய்ய என்ன செய்யலாம்?

        இதற்கு மேலும் என்பது தவம், அகத்தாய்வு செய்வதுடன் வேறு என்ன செய்து ‘விளக்கப்பதிவு பழக்கப்பதிவை வெற்றி அடையச் செய்யமுடியும்’ என்றால் சிந்தித்தே செயல்படவேண்டும். அறிவினரோடு சேர்ந்திருக்கச் சொல்கிறாள் அவ்வைத்தாய். சேர்ந்திருப்பது என்பதோடு, அறிவினரின் பிணைப்பை வலிமையாக்க அறிவினரை கனவிலும், நனவிலும் நினைக்கச் சொல்கிறாள். அவ்வைத்தாய் கூறுவதனை நினைவில் கொள்வோம்.

    FFC-127-அவ்வையார்- இனிது

    அறிவை அறிந்த அறிவினரைச் சேர்ந்திருப்பதும், அவரை கனவிலும் நனவிலும் காண்பது அவரது குணங்களைப்பற்றி அடிக்கடி நினைக்கச் செய்யுமாதலால், அது இயல்பூக்க நியதியின்படி நினைப்பவரின் ஆற்றல் அறிவினிலும் உடலினிலும் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றம் குணநலன்களில் மேம்படச் செய்யும்(METAMORPHOSIS OF CHARACTER). எனவே இவ்வாறாகத்தான் பழக்கப்பதிவுகளை செயலிழக்கச் செய்து விளக்கப்பதிவுகளுக்கு வலிமை சேர்த்து, பழக்கப்பதிவுகளிடம் விளக்கப்பதிவுகளை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    இந்த நல்லுரையில் கூறப்படுவது நடைமுறையில் இல்லாமல் இருப்பது வருத்தத்திற்குரியதாக உள்ளது. எனவே பழக்கப்பதிவிடம் விளக்கப்பதிவு தோற்றுப்போவதனால் மனம் சோர்ந்து விளக்கப்பதிவை விட்டுவிட்டு பழைய பழக்கப் பதிவின் வழியே சென்று மனிதன் மேலும் மேலும் துன்பமடைகிறான்.

    வறுமை ஒரு சமுதாய நோய்:

    வறுமையைப்பற்றி அவ்வைத்தாய் கூறுவதனை கவனிப்போம்.

    கொடிது! கொடிது! வறுமை கொடிது
    அதனினும் கொடிது இளமையில் வறுமை”     . . . அவ்வையார்.

    முதலில் வறுமையை ஒழிக்க வேண்டும். இன்றியமையாத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் ஒருவர் விடாமல் எல்லோருக்கும் போதிய அளவிற்கு பூர்த்தியாக வேண்டும். வறுமை கொடுமையிலும் கொடியது. இவர்களின் துன்பத்தை அளக்கவே முடியாது. இது ஒரு சமுதாய நோய். சமுதாயம்தான் தீர்வு காணவேண்டும். ஆனால் தனிப்பட்ட ‘மனிதன் வறுமை ஒழிய வேண்டும்’ என்கின்ற நல்லெண்ணத்தை வலுவாக மௌனமாக பரப்பலாம்.

    வியப்பைத்தரும் வினா:

    என்ன வினா அது? வறுமையில் இருப்பவர்களையும் தாண்டி, மூன்று தேவைகளும்(உணவு, உடை, உறைவிடம்) பூர்த்தியானவர்கள் ஏன் துன்பத்திற்குள்ளாகின்றனர் என்பது வியப்பைத்தரும் வினாவாக உள்ளது. வியப்பில்லை! நடைமுறையில் அவ்வாறுதான் உள்ளது. இத்தகைய துன்பத்தில் இருப்பவர்கள் பலவிதமாகக் காணப்படுகின்றனர். சிலர் வாழ்க்கை எனும் ஐம்புலன்-வணிகத்தில் பெரும்பாலும் நஷ்டமாகிய துன்பத்தையே (உடலில் நோய், அமைதியின்மை) மனக்கவலை வடிவில் அனுபவிக்கின்றனர். காரணம் சிந்திக்கத் தெரியவில்லை. எனவே சிந்தித்து செயல்படுவதில்லை.

    என்ன சிந்திக்க வேண்டும்?

    ஏன் நமக்கு மட்டும் துன்பம் வருகின்றது என சிந்திக்க வேண்டும்?

    துன்பம் அதுவாக வருகின்றதா? அல்லது நாமாக வரவழைத்துக் கொள்கின்றோமா?

    பிறவித்தொடராக வந்த நமக்கு யார் வழியாக வந்தது இந்த துன்பம் என சிந்திக்க வேண்டும்?

    வாழ்க்கை எனும் ஐம்புலன்-வியாபாரத்தை/வணிகத்தை சரிவர நடத்தத் தெரியாமல் நஷ்டமாகிய துன்பத்தில்
    இருக்கின்றோமா என்பதை சிந்திக்காமல் அறியாமையில் உள்ளனர்.
    வாழ்வே துன்பமாக இருந்து விடுகின்றது அத்தகையவர்களுக்கு.

    வாழ்க்கை என்பது எவ்வாறு வியாபாரம்/வணிகமாக உள்ளது?

                     வாழ்க்கை என்பது ஒரு வியாபாரத்தோடு ஒப்பிட்டு வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துகொள்ளலாம். அதுவும் ஐம்புலன்-வியாபாரம் எனப்படுகின்றது, ஏன்? வணிகம் என்பது என்ன என்று அனைவரும் அறிவர். வணிகம் எதற்காக செய்யப்படுகின்றது? வியாரம்/வணிகம் என்பது பொருட்களை வாங்கி விற்று பணம் சம்பாதிப்பது. அவ்வாறு பொருட்களை வாங்கி விற்பதில் வாங்கிய விலையைவிட விற்கும் விலை அதிகமாக இருந்தால்தான் லாபம் ஈட்ட முடியும். வாழ்க்கை என்பது ஐம்புலன்- வியாபாரம்/வணிகம் என்று சொல்வதற்குக் காரணம் என்ன?

    மனிதனின் முத்தொழில்கள் என்னென்ன?

            எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்று முத்தொழில்கள். முதலில் எண்ணமாக வருகின்றது. எண்ணமாக வருவது, தான் எண்ணியதாகவும் இருக்கலாம். அல்லது பிறருடைய எண்ணமும் நம்மிடம் வரலாம். எப்படி இருந்தாலும் அந்த எண்ணம் நல்ல எண்ணமாக இருந்து விளைவை எப்போதும் நன்மையையே அளிப்பதாக இருந்தால் அதனை நம்முள்ளே விடலாம். இல்லை எனில் அவ்வெண்ணத்தை உள்ளேவிடக்கூடாது. ‘ஒருமுறைதானே என்று தீய எண்ணத்தை உள்ளே விட்டுவிட்டால் மீண்டும் அத்தீய எண்ணத்தை வராமல் தடுப்பது அவ்வளவு எளிதன்று’ என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே ஐம்புலன்-வியாபாரத்தில்/வணிகத்தில் எண்ணம் என்பது வணிகத்தில் பொருளை வாங்குவதற்கு ஒப்பாக எடுத்துக் கொள்ளலாம்

    எண்ணம் வந்த பிறகு அது வலிவு பெறுமானால் அது சொல்லாகவும், இன்னும் அதிகமாக வலிவு பெறுமானால் செயலாகவும் மாறும். இதனை வணிகத்தில் பொருட்களை விற்பதற்கு ஒப்பாக எடுத்துக் கொள்ளலாம். வணிகத்தில் பொருளை விற்கும் விலை வாங்கிய விலையை விட அதிகமாக இருந்தால் லாபமும், விற்கும் விலை வாங்கிய விலையை விட குறைவாக இருந்தால் நட்டமும் ஏற்படும். இதனை வாழ்கை எனும் ஐம்புலன்-வணிகத்தில் இன்பமாகவும், துன்பமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

    இன்பம்-லாபம்; துன்பம்-நட்டம்:

          மனிதன் செய்கின்ற செயல்களுக்கு ஏற்ப விளைவுகளை இன்பத்தையும்(லாபம்) துன்பத்தையும்(நஷ்டம்) அனுபவிக்கிறான். விளைவுகள் இன்பமாக இருந்தால் அது லாபம் எனவும், துன்பமாக இருந்தால் அது நட்டம் எனவும் கொள்ளப்படுகின்றது. மனிதன் ஐம்புலன்களின் வாயிலாகத்தான் செயல்களைச் செய்கிறான். எனவே வாழ்க்கையில் ஐம்புலன்கள் வழியாக செயல்கள் புரிந்து இன்பதுன்ப அனுபவங்களைப் பெறுவதால் மனிதனின் வாழ்க்கை ஐம்புலன்-வணிகம் எனக்கொள்ளப்படுகின்றது. வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமல் இருக்கும் நிலையில் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்வதற்காக கூறுவதே ‘வாழ்க்கை என்பது ஐம்புலன்-வியாபாரம்/வணிகம்’ என்பது. வியாபாரத்தில்/வணிகத்தில் பொருள் வாங்கி விற்று(பொருள்-பணம் பரிமாற்றம்) லாபம் சம்பாதிப்பதுபோல் மனிதன் வினைகளை செய்து(பொருட்களை வாங்குவது) அதன் விளைவாக வரும் விளைவு(பொருட்களை விற்பது) இன்பத்தையும்(லாபத்தையும்) துன்பத்தையும்(நஷ்டத்தையும்) வினை-விளைவு பரிமாற்றம் நடப்பது வணிகத்திற்கு ஒப்பாக இருப்பதால் வாழ்க்கையை புரிந்து தெளிவுடன் வாழவேண்டும் என்பதற்காக வாழ்க்கை ஐம்புலன்-வணிகம் எனப்படுகின்றது.

    வணிகவியல்(Commerce)போல் வாழ்வியல்(Science of Living):

         வணிகத்திற்கு ஒரு இயலை ஏற்படுத்தியுள்ளது போல், ஐம்புலன்-வணிகமான வாழ்க்கைக்கும் இயல் அவசியமாகின்றது. அது ஏற்கனவே ஏற்படுத்தியாகிவிட்டது இயற்கையால்/இறையால். வணிகம் முறையாக நடத்தி லாபம் சம்பாதிப்பதற்கு தனியாக இயல் ஏற்படுத்தப்பட்டு அதற்கு வணிகஇயல் (Commerce) என பெயரிடப்பட்டுள்ளது. பொருட்களின் பரிமாற்றத்திற்கு இடையூறாக இருப்பவனற்றை நீக்குவதற்கான வழிகளைப்பற்றியும் நிர்வாக வரவு-செலவு பற்றியும் மேற்கொள்ளும் படிப்பே வணிகவியல். அதுபோல் வாழ்க்கை என்கின்ற ஐம்புலன்-வணிகத்தில் இடையூறுகளை நீக்கி, எவ்வாறு நஷ்டத்தை தவிர்த்து லாபத்தை மட்டுமே ஈட்டுவதற்கான ஒரு படிப்பு அவசியம். அதனை இயலாக்கி வாழ்வியல்(Science of Living) எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதுவே இருபதாம் நூற்றாண்டில் இயற்கை அளித்துள்ள மனவளக்கலையாகும்.

    மூன்று தேவைகள் பூர்த்தியாகியும் துன்பத்திலுள்ளவர்களின் பல நிலைகள்;

    1) மூன்று இன்றியமையாத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் கிடைத்து சிறிதளவு  சிந்திப்பவர்கள் துன்பத்திலிருந்து/மனக்கவலையிலிருந்து விடுபட செய்வதறியாது தவிக்கின்றனர்.

    2) சிறிதளவைவிட சற்று அதிகமாக சிந்திப்பவர்களுக்கு, துன்பத்திலிருந்து/மனக்கவலையிலிருந்து  விடுபட அவ்வையாரின் நல்லுரை எட்டி, அறிவினரைச் சேர்ந்திருந்தாலும் அறிவினரைக் கனவிலும், நனவிலும் தொடர்ந்து நினைக்க முடிவதில்லை.

    3) சிறிதளவைவிட சற்று அதிகமாக சிந்திப்பவர்களைவிட மேலும் அதிகமாக சிந்திப்பவர்களுக்கு, துன்பத்திலிருந்து/மனக்கவலையிலிருந்து விடுபட அவ்வையாரின் நல்லுரை எட்டி, அதனை பின்பற்றி  வாழ்ந்தாலும் பழக்கப்பதிவு அவர்கள் மேற்கொண்டுவரும் விளக்கப்பதிவை சாய்த்து  விடுகின்றது.

    துன்பம் இல்லாதவர்கள் யார் உளர் இவ்வுலகில்?

         துன்பமே இல்லாதவர்கள் யாரும் இல்லை இவ்வுலகில்? ஞானிக்கும் துன்பம் உள்ளது முன்வினையின் காரணமாக. ஆனால் அத்துன்பத்தை எதிர்கொள்ளத் தெரிகின்றது அவருக்கு அறிவின் நிலை ஞானத்திற்கு உயர்ந்ததால். இதுவரை பெரும்பாலும் துன்பத்தை அனுபவிப்பதைப்பற்றியே வகைப்படுத்தி அவர்களின் நிலையை ஆராய்ந்தோம்.

    அடுத்ததாக துன்பம் குறைவாகவும், இன்பமே அதிகமாகவும் அனுபவிப்பவர்கள் பற்றிய நிலையை சற்று அறிந்துகொள்வோம்.

    இன்பமே உள்ளது வாழ்க்கையில், எனினும் அவ்வப்போது சிறிதளவு துன்பம் தலையைக்காட்டிவிட்டு போகின்ற ஒரு நிலையும் சமுதாயத்தில் காணப்படுகின்றது ஒருசிலருக்கு. எனவே அதனை அவர்கள் துன்பத்தில் இருப்பதாகக் கொள்வதில்லை. அதாவது வாழ்க்கையாகிய ஐம்புலன்-வணிகத்தில் அவர்களுக்கு நிகர லாபம்(Net gain) இன்பம் என வைத்துக் கொள்ளலாம்.
    எனவே துன்பம் அதிகம் இல்லாதவர்களைப் பொருத்த வரையில் வாழ்க்கையைப்பற்றி சிந்திக்க அவசியமில்லாமல் போகின்றது.

    சிந்திக்க அவசியமில்லை என்பதால் அது சரியாகிவிடுமா?

         ‘அவசியம்’, ‘அவசியமில்லை’ என்பதே சிந்திப்பதற்குக் கிடையாது. வாழ்வதற்கு மூச்சு அவசியமா அல்லது அவசியமில்லையா எனக் கேட்க முடியுமா? முடியாது. எனவே உயிர் இருக்கும் வரை மூச்சு அவசியமாக இருக்கின்றதோ அதுபோல் உயிர் உள்ள வரை சிந்தனையும் அவசியம். சிந்தித்தால்தான் மனிதன். இயற்கையைப் பொருத்த வரையில் யாவருமே சிந்திக்க வேண்டும். இறப்பு எப்போது வரும் என யாருக்கும் தெரியாதது போல் வினைப்பயனை அனுபவிக்க ஆன்மா பிறவி எடுத்துள்ளதால் கருமையப் பதிவுகளுக்கேற்ப துன்பமும் வரலாம்.

       உலகியல் வாழ்க்கைக்கு பொருளைச் சேர்த்து வைப்பதுபோல், அருள் துறை வாழ்க்கைக்கு ஒழுக்கமாகிய புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். “வினைப்பதிவே பிறவியாகத் தொடர்வதால் அதனைப் போக்க ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் புண்ணியம் செய்தே வாழ வேண்டும்” என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே வாழ்நாள் முழுவதும் புண்ணியம் செய்தே வாழ வேண்டும். அதற்கு சிந்தித்துச் செயல்படவேண்டும். சிந்தித்து செயல்படும் செயல்கள் புண்ணியமானதாகவே இருக்கும். இத்துடன் இன்றைய அறிவிற்கு விருந்தை நிறைவு செய்துகொள்வோம். அடுத்த விருந்தில்(19-10-2016-புதன்) மனக்கவலையை அகற்ற புனருத்தாரணம் செய்யப்பட்ட எளிய அணுகுமுறை ஆன்மீகமே அவசியம்; அது மனவளக்கலையே என்பதனை அறிந்து கொள்வோம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்

    Loading