2017

Yearly Archives

  • FFC – 271- செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 6/?

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

    lotus

    FFC – 271

    அ.வி. 271

    29-11-2017-புதன்

       செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும்- 6/?

    கருமையம்(பாகம்-1)

    nava yuga viyasar

    வாழ்க வளமுடன்!

    இதுவரை ஐந்து சத்சங்கங்களில், ‘செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும்’ என்கின்ற தலைப்பில். தத்துவம் மற்றும் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல், அவற்றின்  விளைவு   ஆகியவற்றைப் பற்றி, அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாளர்களின் ஆசிகளுடன்,  சிந்தனை செய்து, அறிவிற்கு விருந்து  படைத்து அருந்தினோம்.  இன்று கருமையம் என்கின்ற தலைப்பில் சிந்தனை செய்து அறிவிற்கு விருந்து படைத்து அருந்த இருக்கிறோம்.  அதற்கு நவயுக வியாசரான நம் குருநாதரின் ஆசியும், மற்றும் வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபினில் வந்த, வருகின்ற அருளாளர்களின் ஆசிகளும் வேண்டி இச் சத்சங்கத்தை தொடங்குகிறோம்.  வாழ்க வளமுடன்.

     இயற்கையில் பதிதல் அதி அற்புதமான நிகழ்வு:

     இப்பிரபஞ்ச நிகழ்ச்சிகளில் அதி அற்புதமான நிகழ்வுபதிதல்’  ‘பதிதல்’ என்றால் என்ன? ஆங்கிலத்தில் registry, imprint எனலாம்.  இயற்கையின் சிகரமே எண்ணம் என்கிறார் மகரிஷி அவர்கள். பதிதல் என்கின்ற அற்புதமான Phenomenon இயற்கைக்கு இல்லை எனில்(அப்படி நினைத்துப் பார்க்கவே முடியாது.  இருந்தாலும் தெளிவு பெறுவதற்காக அவ்வாறு நினைக்க வேண்டியிருக்கின்றது)  எண்ணத்திற்கு  சிறப்பே இருந்திருக்காது. ஏன் எண்ணுதலே இருந்திருக்காது! எண்ணுதல் இல்லையெனில் உயிரினமே தோன்றியிருக்க முடியாது. முதல் முறை ஒன்றை எண்ணுவது வேண்டுமானால் நடக்கும். முதல் முறை எண்ணியது பதிதல் என்கின்ற Phenomenon இல்லை எனில்  அந்த எண்ணம் பதியாது.  எனவே எண்ணம் மீண்டும் பிரதிபலிக்காது. அந்த ஒரு எண்ணத்தையே மீண்டும் மீண்டும் ஒவ்வொரு முறையாக,  புதிதாக, எண்ண வேண்டியிருக்கும்.  எண்ணம் பதியவில்லை எனில் அது அழுத்தம் பெற வாய்ப்பில்லை. ஒரு முறை எண்ணியது பதிந்தால்தான் அடுத்த முறை எண்ணும்போது அது மீண்டும் பதிந்து அழுத்தம் பெறும்.  எண்ணம் பதியவில்லை எனில் ஒரே எண்ணத்தை பல முறை எண்ணினாலும் அது புதிய எண்ணமாகத்தான் இருக்கும் அறிவிற்கு.  எண்ணம் பதிந்தால்தான் அதற்கு பின்னர் விளைவும் வரமுடியும்.

     ஒருவரையொருவர் ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது!!

    நினைத்தல்’, (நினைத்தலும் எண்ணுதல்தான்) ‘நினைவு கொள்ளுதல்’,  ‘ஞாபகம் வைத்தல்’ போன்ற எதுவுமே இயலாதுபோயிருக்கும்.  அப்படி ஒரு நிலை இருந்திருந்தால், அதனை கற்பனை செய்து பார்ப்போம்.  எப்படியிருக்கும்?  இப்பிரபஞ்சமே உருவாகியிருக்காது.  தாய் தன் குழந்தையை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது.  குழந்தை தாயை நினைவு வைத்துக்கொள்ள முடியாது. படித்ததை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியாது.  உயிரினமே தோன்றியிருக்க முடியாது. ஒருவரையொருவர் ஞாபகம் வைத்துக் கொள்ளவும் முடியாது.

    எண்ணுவது  செயல்.  எது எண்ணுகின்றது?  அறிவு எண்ணுகின்றது.  செயல் ஒன்று இருந்தால் அதற்கான விளைவும் உண்டு என்பதால் எண்ணுகின்ற செயலுக்கான  முதல்–விளைவு பதிதல். எண்ணியது சொல்லாக, விளைவாக வருகின்றது என்று சென்ற விருந்தில் பார்த்தோம். எனினும் எண்ணிய உடனே சொல்லாக வரவேண்டும் என்பதில்லை.  எண்ணியதையே மீண்டும், மீண்டும் எண்ணி எண்ணி பதிந்து, பதிந்து அழுத்தம் பெற்று பிறகு சொல்லாகவும் வரலாம்.  வந்த சொல்லும் ‘என்ன சொன்னோம்’ என்று நினைவில் இருக்கின்றது அப்போது.  எண்ணுகின்ற செயலுக்கான முதல்-விளைவு பதிதல் என்றால்,  எண்ணியது சொல்லாக வருவது இரண்டாவது விளைவு எனக்கொள்ளலாம்.  அல்லது தொடர் விளைவு என்றும் கொள்ளலாம்.

     பதிதல் என்கின்ற அதி அற்புத நிகழ்வு பற்றி மேலும் அறிவோம்:

    பதிதல்’ என்கின்ற இயற்கையின் அதி அற்புத நிகழ்ச்சி(Phenomenon) பற்றி மேலும் தெளிவு பெற இயற்கையின் ஆதிநிலையாகிய வெட்டவெளியிலிருந்து வருவோம்.

     வெட்டவெளி(Eternal Space) நொறுங்கியதற்கான காரணம் எது?

    • வெட்டவெளியின்(Eternal Space) தன்னிறுக்கஆற்றல்(self  compressive force).
    • வெட்டவெளி துகளானது  நிகழ்வு. இந்த நிகழ்வில் செயலும் உள்ளது.  விளைவும் உள்ளது.
    • துகள் உருவானதில் எது செயல்?  இறுக்கியது/நொறுக்கியது செயல் எனக்கொள்ளலாம்.
    • விளைவு துகள்.
    • துகள் தன்னைத்தானே ஏன் சுற்றவேண்டும்? நொறுங்கிய துகள் சும்மா இருந்திருக்கலாமே!
    • ஏன் சுழன்றது?
    • ‘சுழன்ற’ நிகழ்வில் எது செயல்? எது விளைவு என்று சிந்தித்தோமேயானால்
    • சூழ்ந்தழுத்தியது செயல் என்றும்
    • சுழன்றது விளைவு என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

     எனவே ஒவ்வொரு பிரபஞ்ச  நிகழ்விலும் செயலும் உள்ளது, விளைவும் உள்ளது. ஒரு செயலுக்கு விளைவு ஒன்று என்றும், ஒரு முறைதான் அவ்விளைவு வரும் என்றும் சொல்ல முடியாது.

     ஒரு உண்மையினை அறிந்து கொள்ள வேண்டும்.

    நொறுக்கியது. துகளாகியது.

    துகள் சுழன்றது.

    காந்தம் உருவாகியது.

    காந்தம் தன்மாற்றமாகியது.

    எனவே ஒவ்வொரு பிரபஞ்ச நிகழ்விலும் செயல், அதற்கான முதல் விளைவு பதிதல், அதற்குப்பிறகு

    தொடர் விளைவு உள்ளது.

     எந்த ஒரு பிரபஞ்ச நிகழ்ச்சியும்  பதிதல் இல்லாமல் நிகழ்வதில்லை.  

    உயிராற்றல்  என்பது என்ன?

    ணுவும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அண்டமும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இயக்கத்திலே பரமாணு முதல் விண், காற்று, நீர், நெருப்பு, கெட்டிப்பொருள் ஆகிய பஞ்சபூதங்கள்  தோன்றின. பஞ்சபூதங்களிலிருந்து  உலகம் தோன்றிய எல்லா இயக்கங்களும், அலையின் மூலமாக  பரமாணுவில் பதிந்து விடுகின்றது.  இவ்வாறு பரமாணுவில் பதிந்த பதிவுகள், கூட்டாக சேர்ந்து சேர்ந்து அணுவாகின பதிவுகள்,  அதற்கு மேலாக பேரணு என்ற பதிவுகள், உருவமான பதிவுகள், உயிர் என்ற நிலைக்கு வந்த பிறகு ஏற்பட்ட பதிவுகள், அவ்வளவும் சேர்ந்து மனிதனிடம் உள்ளன.  இந்த பிரபஞ்சம் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை நடந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பதிவாகக் கொண்ட ஒரு சிறு நுண் துகள்தான் மனிதனிடம் இயங்கிக் கொண்டுள்ள உயிராற்றல்.  அது அவ்வளவு  காலம் பழமையானது.  அவ்வளவு ஆற்றல் உடையது.

     பிரபஞ்ச தோற்ற நிகழ்வுகளின் அகக்காட்சி எப்போது?

     உயிராற்றல்  அவ்வளவு  காலம் பழமையானது என்பதாலும், அவ்வளவு ஆற்றல் உடையதாலும் மனிதனுக்கு என்ன பயன்? மனிதனுக்கு பயனில்லாமல் ஒன்றின் பெருமையை எடுத்துரைக்க அவனுக்கு அவசியமில்லையே! உயிராற்றல் அவ்வளவு காலம் பழமையானதால், பிரபஞ்ச தோற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் பதிந்துள்ளதால், அனைத்தும் அகக்காட்சியாகும்.  இப்போது பிரபஞ்ச தோற்ற நிகழ்ச்சிகளை மனவளக்கலைஞர்கள் அறிவரே! அது போதுமானதாகாதா? அகக்காட்சி அவசியமில்லையா? இப்போது தெரிந்து வைத்திருப்பது கருத்தியல்தான்.மகரிஷி அவர்கள் கண்டுபிடித்ததை கேட்டுவிட்டு அதனைக் கூறுவது கருத்தியல் ரீதியாக தெரிந்து கொண்டது.  கருத்தியலே பயன்தராது.  கருத்தியலே தெளிவினைத் தராது! கருத்தியலாக அறிந்தது செய்முறையாக உறுதிபடுத்த வேண்டும்.  அதாவது மீ்ண்டும் கருத்தியலாக அறிந்தது நம்முடைய கண்டுபிடிப்பாக வேண்டும்.  பிரபஞ்ச நிகழ்ச்சிகளின் அகக்காட்சி எவ்வாறு சாத்தியமாகின்றது? உயிர் பழமையானதால் பரமாணுவில் துகள் உருவானதிலிருந்து மனிதன் உருவானது வரை நடந்த நிகழ்வுகள் அனைத்தும் பதிவாகி உள்ளன.  மன அலை அந்த அளவிற்கு நுணுகி வந்தால் பிரபஞ்ச தோற்ற நிகழ்ச்சிகள் அத்துனையும் அகத்தே காட்சியாக தோற்றமளிக்கின்றது என்கிறார்இயற்கை இயலை உருவாக்கித்தந்த அருட்தந்தையான  நம்குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    எனவே கருத்தியலாக  அறிவதோடு, செய்முறையாக அறிந்து உறுதிபடுத்தினால்தான் பண்பேற்றம் ஏற்படும்.  தனிமனிதனின் பண்பேற்றம்தான் தனிமனிதனுக்கும் அவன் வாழ்ந்துகொண்டிருக்கும்  சமுதாயத்திற்கும் அவசியமாகின்றது. அப்போதுதான் தீமை தரக்கூடிய பழக்கப்பதிவுகள் தோற்று அருள்வழி விளக்கப்பதிவுகள் வெற்றி பெரும்அதற்கு கருத்தியலாக அறிந்ததை அகத்தே காணவேண்டும்.

    இது எப்போது சாத்தியம்?  

    மனவளக்கலையின் இரண்டு பயிற்சிகளில் முதலாவதான  தவத்தால் மன அலைச்சுழலை குறைத்து வருவதில் (1 cps delta frequency) வெற்றி காணவேண்டும். அதே நேரத்தில் மனவளக்கலையின் இரண்டாவது பயிற்சியான அகத்தாய்வினை செய்து அறுகுணசீரமைப்பில் முழுமையான வெற்றி அடைய வேண்டும்.

     கண்டவர் ஏன் விண்டதில்லை?

         இதற்கானக் காரணத்தை இப்போது ஆராய்வோம். இக்கூற்று ஆன்மீகத்தில் சொல்லப்படுவது ஒன்று.  ஏன் அவ்வாறு சொல்லப்படுகின்றது? கடவுள் நிலையை விளக்க முடியாது என்று கருத்து இருந்து வருகின்றது(Brahmam cannot be comprehended).  அப்படி யாராவது கடவுள் நிலையைக் கூறினால் அவர் கடவுள் நிலையை உள்ளவாறு உணரவில்லை என்று பொருள் கொள்ளப்படுகின்றது.  கடவுள் நிலையை உள்ளதை உள்ளவாறு உணர்ந்திருந்தால் கடவுள் நிலையைக் கூறமுடியாது என்கின்ற கருத்தும் நிலவி வருகின்றது இதுவரை ஆன்மீகத்தில்.  ஆமாம் அது உண்மைதான்.

     நன்றாய் ஞானம்  கடந்துபோய்

    நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து,

    ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும் பாழ்’

     நிலையை எவ்வாறு வாய்மொழியினால் கூறமுடியும்.

     மேலும்,

    தன்னருள் வெளிக்குளே

    அகிலாண்ட கோடியெல்லாம்

    தங்கும்படிக்கிச்சை வைத்து உயிர்க்குயிராய்த்

    தழைத்ததெது மன வாக்கினில்

    தட்டாமல் நின்றதெது சமயகோடிகளெல்லாம்

    தம் தெய்வம் எம்தெய்வம் என்று

    எங்கும் தொடர்ந்து எதிர்வழக்கிடவும் நின்றதனை’

     அறிந்தாலும் வார்த்தைகளால் பிறர்க்கு எவ்வாறு உவமைகாட்டி எடுத்துக் கூறமுடியும்?

     

     ஆனால்  இந்தநாள் விண்ஞானம் ஏற்றம் பெற்றதால் ….

     

     இறைநிலை இவ்வாறிருக்க முந்தையோர்கள் அகத்தவத்தால் உணர்ந்ததை ஏன் அவர்களால் கூறமுடியவில்லை என்பதனை மகரிஷி  அவர்கள் எடுத்துரைக்கிறார்.

     முந்தையோர்கள் அகத்தவத்தால் முற்றுணர்ந்த போதிலும்

    மொழிவதற்கு உவமையின்றி முட்டி மோதி நின்றனர்

    இந்த நாள் விண்ஞானமோ ஏற்றம் பெற்றதாலதை

    இயங்கிடும் மின்சாரம் மூலம் எல்லார்க்கும் உணர்த்தலாம்.’ (ஞா.க:1661)

     என்கிறார் காந்த தத்துவஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     வேதாத்திரி மகரிஷி அவர்கள் கடவுள் நிலையை எவ்வாறு கூறமுடிகின்றது?

     இறையை தெளிவாக அறிந்தவரும், அதனை  தனது மாணாக்கர்களுக்குத் தெளிவாக கருத்தியலாக உணர்த்துகின்றவரும், வெறும் போதனை மட்டுமன்றி சாதிக்கக்கூடிய செய்முறைப்பயிற்சியாகிய தவம் மற்றும் அகத்தாய்வு பயிற்சியினை அருளிய வேதாத்திரி மகரிஷி அவர்கள்  ‘கண்டவர் விண்டதில்லை’ என்கின்ற கூற்றினை உடைத்திருக்கிறார்.   அது எவ்வாறு என்று அவர் வாய்மொழியாகவே அறிவோம்.

     கண்டவர் ஏன் விண்டதில்லை?

    ஆதியென்ற வெளியினிலே அணு எவ்வாறு

    அவதரித்தது என்றறியப் போனார் எல்லாம்

    ஆதியாம் நிலை அடைந்தார் அறிவு அங்கேது?

    அறிவுநிலை அடைந்தபின்னர் அதை யூகிப்பார்

    ஆதியே அணுவான காரணத்தை

    அறிஞரெலாம் விளக்காதது இதனால் என்று

    ஆதிநிலை, அணுநிலை இவ்விரண்டு மாகி

    அறிந்தநிலையில் விளக்கம் பெற்று விட்டேன். (ஞா.க:1374)

     என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். 

    அணுநிலையில் உள்ள பிரபஞ்ச இரகசியப் பதிவுகளை உணர்கின்ற அளவிற்கு அவரது மனஅலைச்சுழல் நுணுகிவந்ததால் துகள்களிலிருந்து மனிதன் வரை உள்ள பிரபஞ்ச இரகசியங்களை யெல்லாம்  வெட்டவெளிச்சம் ஆக்கிவிட்டார் மகரிஷி அவர்கள்.  இத்தகைய அருமை பெருமைகளை உடையது பதிதல் என்பது!

     கருமையம் பற்றி  சிந்திக்க ஆரம்பித்து அச்சிந்தனையில் பதிதலின் அருமை பெருமை பற்றி இது வரை ஆராய்ந்தோம்.  ஏன் பதிதலின் அருமை பெருமைகளை அறிந்து கொள்ள வேண்டியதாயிற்று? பதிதல் கருமையத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. அது பதிதலின் இயல்பு.   ஆகவே பதிதலைப் பற்றி ஆராய வேண்டியிருந்தது.  மனிதன் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் கருமையத்தில் பதிவாகின்றது என்பதனைஅறிவு, தெளிவாக, முழுவதுமாக, பூரணமாக  அறிந்து கொள்ள வேண்டும்.  அப்போதுதான் அறிவு தனது முத்தொழில்களைப் புரிவதில் விழிப்புணர்வோடு செயல்பட முடியும்.

     கருமையத்தில் மனிதனுடைய செயல்கள் பதிகின்றது என்பதில் தெளிவு  ஏற்படுவதற்கு,  இயற்கையின் ‘பதிதல்’ என்கின்ற அதி அற்புத நிகழ்வு பற்றி கருமையம் முதற்பாகத்தில் அறிந்து கொண்டோம்.  அடுத்த அறிவிற்கு விருந்தில் (03-12-2017-ஞாயிறு) கருமையத்தின் இரண்டாம் பாகத்தில்

    பதிதல் மனிதனிடம் எங்கு பதிவாகின்றது/நடக்கின்றது?

    கருமையம் என்பது என்ன?

    மனிதனின் இனிமையாக வாழ்விற்கு வேண்டிய பதிவுகள் எவை?

    கருமையத்தூய்மையைக் கெடுக்கின்ற செயல்கள் யாவை?

    மேலும் கருமையத்தை தூய்மை செய்வது எவ்வாறு?

     ஆகிய வினாக்களுக்கு விடைளைத் தேடுவோம்.  வாழ்க வளமுடன்.

     

    வாழ்க வையகம்!                                   வாழ்கவளமுடன்!!   

    வாழ்க திருவேதாத்திரியம்!                                     வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                         வளர்க அறிவுச் செல்வம்!!



     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-264

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    lotus

    சிந்திக்க வினாக்கள்-264

    27-11-2017 – திங்கள்

    பெற்றோர்களை முதல் ஆசிரியர் என ஒரு அறிஞர் கூறுகிறாரே ஏன்?  பெற்றோர்கள் முதல்  ஆசிரியராக இந்த நூற்றாணடில் என்ன செய்ய வேண்டும்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளர்க அறிவுச் செல்வம்


    Loading

  • FFC – 270 செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 5/?

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

    lotus

    FFC – 270

    அ.வி. 270

    26-11-2017-ஞாயிறு

       செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும். 5/?

    விளைவு

    FFC-270_Fish_bone_cause_and_effect

        

    இதுவரை ‘செயல் விளைவுத் தத்துவமும் கருமையமும்’ என்கின்ற தலைப்பில் நான்கு நாட்களாக சத்சங்கத்தில் சிந்தித்து வருகிறோம்.  தத்துவம் மற்றும் மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றையும் தனித்தனியாகச் சிந்தித்தோம்.  இன்று செயலுக்கான விளைவு பற்றி, அதாவது மனிதனின் முத்தொழில்களின் விளைவு பற்றி  சிந்திக்க குழுமி இருக்கிறோம்.   ஒவ்வொரு மனிதனும் செயல் புரியாமல் இருக்க முடியாது. இருப்பினும்  விழிப்புணர்வோடு இருந்து செயல் புரிவதில் பெரும்பாலோர் தவறிவிடுகின்றனர். அவ்வாறு  சமுதாயத்தில் ‘செயல் புரிவதற்கு  முன்னரே அதற்கான விளைவை அறியாமலும் அல்லது விளைவை சரியாக கணிக்காமலும், அல்லது விளைவறிந்து ஆனால் அலட்சியத்தால் செய்கின்ற  செயல்களால் ஏற்படும் குழப்பங்கள்/துன்பங்கள் சமுதாயத்தில் மல்கிவிட்டன. எனவே ‘செயலுக்கு விளைவு’ பற்றிய ஏராளமான ஐயங்கள்  கீழே குறிப்பிடப்பட்ட வினாக்களாக உருவெடுத்துள்ளன. அவற்றிற்கெல்லாம் இன்றைய சிந்தனையில் விடை காண்போம்.

    இன்றைய சிந்தனையில்

    1. விளைவு என்றால் என்ன?
    2. மனிதனின் செயலுக்கு விளைவு உண்டா இல்லையா?
    3. மனிதனின் செயலுக்கு விளைவு இருப்பின் அந்த விளைவினைத் தருவது யார்?
    4. மனிதனின் செயலுக்கு விளைவு வந்தேதான் தீருமா?
    5. செயலை செய்துவிட்டு விளைவைத் தவிர்க்க முடியாதா மனிதன்?
    6. தீயவினையைத் தவிர்ப்பதற்கு மனிதன் என்ன செய்ய வேண்டும்?
    7. செயல் புரிவதில் மனிதன் விழிப்புணர்வோடு துல்லியமாக இருந்தே ஆக வேண்டுமா?
    8. செயலுக்கு விளைவு உண்டு என்பது எந்த நியதியின் கீழ் வருகின்றது?
    9. இந்த வினாக்களுக்கு விடை காண்கின்ற பொறுப்பு ஆன்மீகப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு  மட்டுமேவா உள்ளது?  மற்றவர்களுக்கு இல்லையா?
    10. மற்றவர்கள் ‘செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற நியதிக்கு உட்பட்டவர்கள்  இல்லையா?
    11. செயலை செய்வதற்கு முன்னர் விளைவை எவ்வாறு அறிவது?
    12. செயலுக்கான விளைவைத் தரும் அறிவியல் என்ன?

    என்பன போன்ற வினாக்களுக்கெல்லாம் இன்று விடை காணவே வேண்டும். அதற்கு நம் குருநாதரும், அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாளர்களின் ஆசிகளும் நமக்குத் துணை நிற்குமாக. FFC-62 -PIC - மகான்களின் படம்

    1. விளைவு என்றால் என்ன?

     முதலில் விளைவு என்றால் என்ன என்று அறிவோம்.   ‘விளைவி’ என்பது வினைச்சொல்.  விளைவு என்பது அதன் பெயர்ச்சொல்.  ‘விளைவி’ என்றால் நன்மை, துயரம், மாற்றம் முதலியவற்றை ஏற்படுத்துதல்; உண்டாக்குதல்(cause, produce, bring about) என்று பொருள். ‘செயல்’ என்கின்ற சொல்லும், ‘விளைவு’ என்கின்ற சொல்லும் பந்தம் உடையன. விளைவை இப்போது காண்கிறோம் என்றால் அதற்கு   பந்தமான செயல் முன்னர் நடந்திருக்கும்.  செயலைக் காண்கிறோம் என்றால் அதற்கான விளைவும் உண்டு; வந்தே தீரும்.  மாணவன் இன்று தேர்வு எழுதுகிறான்.  அது செயல்.  அதற்கான விளைவுதான் இரண்டு மாதத்திற்கு பிறகு ‘தேர்ச்சி பெற்றான்(pass) அல்லது தோல்வி அடைந்தான்(Fail) என்பதனை அறிவிக்கும் தேர்வின் முடிவு.  கடல் இருந்தால் அலையும் இருக்கும்.  எனவே செயலுக்கு விளைவு உண்டு என்பதில்  சிறு ஐயப்பாடும்  இருக்கக் கூடாது. Every action having  its own result is quite logic.  In Physics what does Newton third law of motion say?  For every action there is equal and opposite reaction.

    ‘விளைவு’ என்றால் விளைவது(result of action). செயலின் மூலமாக விளைவது. ஒன்றைச் செய்ததற்கு பலனாகத் திரும்பிக் (consequence, result, effect) கிடைப்பது. செயலிலிருந்து  வெளிப்படுவது  விளைவு. விளைவு இல்லாத செயல் இல்லை. செயல் இல்லாத விளைவு இல்லை. செயல் மனிதனுக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ தருவதில்லை. அதன் விளைவுதான் மனிதனுக்கு இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ தருகின்றது.

    எனவே என்ன விளைவு வேண்டுமோ, அதற்குரிய செயலைச் செய்து விளைவை அனுபவிக்க வேண்டும். மனிதன் விரும்புவது  இன்பமே.  எனவே இன்பம் தரும் செயலையே மனிதன் தேர்வு செய்ய வேண்டும் என்றாகின்றது.

     2. ஆன்ம சாதகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது:

    மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும்  விளைவு இல்லாமல் நடப்பதில்லை.  ‘No action will go waste’ என்பார் மகரிஷி அவர்கள். அதேபோல் ‘Nobody can hurt you unless there is an imprint in you’ என்பார் மகரிஷி அவர்கள்.   இதன் நேரிடையானப்  பொருள் என்ன?  ‘உன்னிடம் தவறு செய்த பதிவு இருந்தாலொழிய யாரும் உன்னைத் துன்புறுத்த முடியாது’ என்பது பொருள்.  அதாவது  ‘இப்போது துன்பமாகவருவது ஒருவர்  முன்னர் செய்த செயலின் விளைவே’ என்பதனை அவ்வாறு கூறுகிறார்.  துன்பம் வரும்போது மற்றவர்களைக் காரணம் காட்டுவதில் பொருள் இல்லை.  குறிப்பாக ஆன்ம சாதகர்கள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘ஒருவர் ஆன்ம சாதகம் பல வருடங்கள்  செய்து வருபவராகக்கூட இருக்கலாம்.   ஆனால் தனக்குத் துன்பம் வரும்போது அதற்குக் காரணம் பிறர் என்று கூறுவாரேயானால்  அவர் இன்னமும் ஆன்மீக பயிற்சியில்  ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை என்பதுதான் பொருள்’ என்கிறார் ஓர் அறிஞர்.   அது எவ்வாறு சரியாக இருக்க முடியும் என்கின்ற ஐயம் எழலாம் ஒரு சிலருக்கு.  சிந்திப்போம்.

     3. ஆன்மக சாதகம் எதற்காக செய்யப்படுகின்றது?

     ஆன்மாவை உணர்வதற்காகத்தான் ஆன்ம சாதகம் செய்யப்படுகின்றது.  ஆன்மாவை உணர்வது என்பது என்ன? இறையேதான் தனது ஆன்மாவாகவும் 760 கோடி ஆன்மாக்களாகவும்(மற்றவர்களது ஆன்மாவாகவும்) உள்ளது என்கின்ற உண்மையை உணர்வதுதான் ஆன்மஉணர்வு.  அதாவது ஆன்மஉணர்வேதான் இறை உணர்வு.  இறைஉணர்விற்காக ஆன்ம சாதகம் செய்து வரும்போது ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற இறைநீதியினை அறியாமல் இருந்தால் ‘இறைவன் இருக்கின்றான்’ என்கின்ற இறைநம்பிக்கை இல்லாததாக அல்லவா பொருளாகின்றது?! நம்பிக்கையில் ஆரம்பிப்பதுதான் இறைஉணர்வு அப்பியாசம்(பயிற்சி).  இறை நம்பிக்கையில்லாமல் இறைஉணர்வு அப்பியாசம் பலன் தராது. இறைநம்பிக்கை இல்லாமல் இறைஉணர்வு அப்பியாசமும் செய்ய முடியாது. ஆர்வமும் இருக்காது. தொய்வு ஏற்படும்.  ஆகவே தனக்கு ஒருவேளை துன்பம் வந்தால், அது, தான் இப்பிறவியில் செய்த  செயலுக்கான விளைவோ, அல்லது பிறக்கும்போது தான் கொண்டு வந்த ‘சஞ்சிதகர்மா’ (சஞ்சி — Sanchi என்றால் மூட்டை என்று பொருள்)  என்னும் வினைமூட்டையிலிருந்து வெளிவந்ததுதான்  என்கின்ற புரிதல் வேண்டும்.  அப்படியொரு  புரிதல் ஏற்படுமாயின், அறிவு,  தனக்கு வந்த துன்பத்தை ஏற்றுக்கொண்டு கவலையுறாமல், துன்பத்திலிருந்து விடுபட ஆவன செய்ய முடியும்.  தீயவினைப்பதிவுகள் சஞ்சிதகர்மா என்கின்ற வினைமூட்டையில் ஒரு வேளை இருப்பின்   அதனை வினைமூட்டையிலிருந்து நீக்குவதிலும்  அக்கறை கொள்ளுதல் வேண்டும்.   மேலும் எதிரியையும் வாழ்த்தக் கூடியவர்கள் தனக்கு வரும் துன்பங்கள் பிறரால்தான் வந்தது என்கின்ற    தவறான புரிதல்   கொண்டிருந்தால் அவர்களால்  எப்படி எதிரியை வாழ்த்த முடியும்?

     4. மனவளக்கலை பிறவிப்பிணியைப் போக்கும் அருமருந்து:

     பெற்றோர்களாவதற்கு  முன்னரே இளைஞர்கள் தங்கள்  சஞ்சிதகர்மா எனும் வினை மூட்டையில் தீயவினைப்பதிவுகள் இருப்பின் அதனை வினைமூட்டையிலிருந்து காலி செய்துவிடவேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு கொடுக்கவிருக்கும்   ‘சஞ்சிதகர்மா’ எனும் வினைமூட்டையில் நல்ல வினைவுப்பதிவுகளையே நிரப்பிக்   கொடுக்க முடியும்.  அதற்கு துணைபுரிவதுதான் மனவளக்கலை எனும் அருமருந்து.  அருமருந்து என்பதால் அது மருந்தல்ல. ஆனால் ஒருவகையில் மருந்தில்லா மருந்து மனவளக்கலை. மருந்து எதற்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது? நோயினால் வரும் துன்பத்தைப் போக்குவதற்கு மருந்து அவசியமாகின்றது.  துன்பமில்லாமல் வாழ்வதற்கும், ஒரு வேளை துன்பம் வந்தால் அதனை எதிர்கொள்வதற்கான பயிற்சியை  உடல், உயிர், மனம் ஆகிய மூன்றிற்கும் அளிப்பதால் மனவளக்கலை  அருமருந்து எனப்படுகின்றது. மேலும் பிறவிப்பிணியினைப் போக்கும் மருந்தாகவும் மனவளக்கலை இருப்பதால் அது அருமருந்து எனப்படுகின்றது, மனவளக்கலை பயிற்சியினை ஆணும், பெண்ணும் 15 வயதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். 

    திருமணத்திற்கு முன்னர்  பத்து வருடத்திலிருந்து பதினைந்து வருடம் செய்த மனவளக்கலை பயிற்சியின் பயன் அவர்களுக்கும் அவர்களது  வம்சாவளிக்கும் போய்ச் சேரும்.

     5. செயலுக்கு விளைவு உண்டு என்பதற்கு  நிரூபணம் அவசியமா?

    செயலுக்கு விளைவு உண்டு என்பதற்கு என்ன நிரூபணம் தேவை?  நிரூபணம் என்றாலே அது அறிவியலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். ஆகவே செயலுக்கு விளைவு உண்டு என்பதற்கு அறிவியல் நிரூபணம் தேவையா?  கைப் புண்ணைப் பார்ப்பதற்கு கண்ணாடி அவசியமா?  அவசியமே இல்லை. அதுபோல்தானே மனிதனின் செயலுக்கு விளைவு நிச்சயமாக உண்டு என்பதற்கு நிரூபணம் அவசியமில்லை. ‘Good is ever good; But bad is never good. நல்லது எப்போதுமே நல்லது; தீயது எப்போதுமே நல்லதல்ல’ என்கின்ற கோட்பாட்டில் ஆறாம் அறிவிற்கு உடன்பாடு இல்லையா? ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற உண்மையினை  கணிதத்திற்கு  உட்படுத்தியோ, அல்லது கருவிகளுக்கு உட்படுத்தியோ, அல்லது சாம்யத்திற்கு உட்படுத்தியோ அறிவியல் பூர்வமாக நிரூபித்தால் தான், ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற    இயற்கைநீதியினை/இறைநீதியினை  அறிவு மதித்து நடக்குமா?  அறிவியலாக  இருந்தால்தான் அறிவு ஏற்றுக்கொள்ளுமா?  அறிவுப்பூர்வமாக இருந்தால் அறிவு ஏற்றுக்கொள்ளாதா? அறிவிற்கே அது தெரியாதா? தெரியவில்லை எனில் அறிவிற்கு யார் தெரிவிப்பது?  அறிவிற்கு அறிவே தெரிவிப்பதுதான் சிறப்பு. அதாவது சுயமாக சிந்திக்க வேண்டும். ‘தவறிழைப்பது மனம்; இனித் தவறு செய்துவிடக்கூடாது என்று தீர்மானிப்பதும் அதே மனம்தான். தவறு செய்யாத வழியைத் தேர்ந்து ஒழுக வேண்டியதும் மனமே.  மனத்தைப் பழைய நிலையிலேயே வைத்துக்கொண்டு புதிய வழியில் செல்ல  எப்படி முடியும்?  முடியாது; தொடர்ந்து செல்ல முடியாது.’ என்கிறார் மகரிஷி அவர்கள்.

     6. செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற உண்மையை ஏற்பதில்  தடுமாற்றம் ஏன் (dilemma)?

     தடுமாற்றம் என்பது என்ன?  செயலுக்கு விளைவு உண்டா அல்லது இல்லையா என்பதில் தெளிவின்மை.   தான் ஆற்றும் செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற உண்மையை ஏற்பதில்  தடுமாற்றம் (dilemma)உள்ளது. ஏன்?  தடுமாற்றம் இல்லை என்றாலும் அலட்சியம் உள்ளது மனிதனிடம். அல்லது அறியாமை உள்ளது.  அல்லது உணர்ச்சி வயம் உள்ளது. செயலுக்கான விளைவு உண்டு என்பதனை  மனிதன் மறந்துவிடுகின்றானா? அல்லது செயலுக்கான விளைவு உண்டு என்பது நினைவில் இருந்தாலும் விளைவைக் கணிக்காமல் ஏன் செயலைச் செய்கின்றான்? விளைவைக் கணிக்கின்ற திறமை இல்லையா மனிதனிடம்? செயலுக்கான விளைவு உண்டு என்பது நினைவில் இருந்தும்,  விளைவைக் கணிக்கின்ற திறமை இருந்தும் விளைவைக்கணிக்காமல்(யோசனை செய்யாமல்) செயல் புரிந்து விட்டு பின்னர் துன்பம் வரும்போது கவலையுறுகின்றான் மனிதன். இதற்கு காரணம் வினைப்பதிவுகளின் அழுத்தமே.

     7. செயலுக்கான விளைவு எப்போது வரும்?    

    விளைவு என்றால் என்ன என்று பார்த்தோம்.  செயலுடனே விளைவும் தொக்கி நிற்பதால், விளைவு செயல் செய்கின்றபோதும்வரலாம். செயலுக்குப்பின் உடனேயும் வரலாம். அல்லது பிறகும் வரலாம். ‘பிறகும்’ என்பது

    செயலின் தன்மை, நோக்கம் பொறுத்து,

    அடுத்த நிமிடமும் வரலாம். அல்லது

    அடுத்த நாள் வரலாம். அல்லது

    அடுத்த வாரமும் வரலாம். அல்லது அடுத்த மாதமும் வரலாம். அல்லது

    வருடமும் வரலாம். அல்லது

    சில ஆண்டுகளோ பல ஆண்டுகள் கழித்தோ,

    ஏன் நூற்றாண்டு கழித்தும் வரலாம். ஏழ் பிறவிக்குள்ளும் வரலாம்.

     8. இயற்கை/இறை எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கின்றதல்லவா?

    சிலருக்கு ஐயம் எழுகின்றது.    என்ன ஐயம் அது?  செயலுக்கான விளைவு  துல்லியமாகவா(precisely) வரும்?! பேரறிவின் தன்மாற்ற பயணத்தில்தான் (Journey of Transformation of Consciousness) மனிதர்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்(வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்)  ஆரம்ப நிலையைில் வெட்டவெளி நொறுங்கி துகள்களாகி பஞ்சபூதங்களானது பேரறிவின் அமைப்பு, துல்லியம், ஒழுங்கு ஆகிய மூன்றின் செயல்பாடுகளினாலும் தான் சாத்தியமாகியது என்பதனை அறிவோம்.  ஆகவே உயிரற்ற சடப்பொருள்கள் உருவானதற்கு காரணமான அறிவின் மூன்று செயல்பாடுகளில்   ஒன்றான ‘துல்லியமும்’   மனிதனிடம் ஆறாம் அறிவாக வந்த போதும் செயல்படவேண்டுமல்லவா? ஆறாம் அறிவுதான் தனது  ‘விரைந்துணர் அறிவாற்றலை’க் கொண்டு (நுண்மாண்நுழைபுலன்-Prespicacity) ‘செயலுக்கு விளைவு என்ன’ என்று அறிந்து துல்லியமாக மனிதன் செயல் புரிய வேண்டும் என்பதில் இயற்கை/இறை எதிர்பார்ப்பதில் நியாயம் இருக்கின்றதல்லவா? செயலுக்கு விளைவு உண்டு என்பதனை நினைவில் கொண்டு, விளைவினை முன்யோசனையுடன் (முன்னரே) கணித்து, நல்விளைவுகளை தரும் செயல்கள் புரிவதில் ஆரம்பத்தில் சிரமம் இருப்பது போல் தெரியலாம்.   ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை.  ஆறாம் அறிவு விரைந்துணர் ஆற்றல் பெற்றது. இதுவரை பழக்கமில்லாது இருந்ததினால் அது சிரமமாக இருப்பதாக தெரிகின்றது.  பழகப்பழக இயல்பாகிவிடும்.

     9. விளைவு வரும்போது செயல் புரிந்தவர் இல்லாதுபோனால். . .  

     எந்த ஒரு செயலும்(மனிதன்) விளைவிலிருந்து தப்பவே முடியாது(No action will go waste).  பல ஆண்டுகள் கழித்து வரும்போதோ, நூற்றாண்டு கழித்து வரும்போதோ, ஏழ் பிறவிக்குள்ளும் வரும்போதோ செயல்புரிந்தவர் இருக்கமாட்டார்.  செயல்புரிந்தவர் இல்லாமல் இருக்கும்போது அந்த விளைவு யாரைத் தாக்கும்?  தன் வழியாக வந்த வம்சாவளியைத் தாக்கும்.  உயிர்த் தொடர்தானே வம்சாவளி. இங்கே அநேகருக்கு ஐயம் எழுகின்றது. ஒருவன் செய்த தவறுக்கு தண்டனை(விளைவு) அவனது மகனோ/மகளோ, அல்லது பேரன்/பேத்தியோ அனுபவிக்க வேண்டிவரும் என்பதில் என்ன நியாயம் உள்ளது என்கின்ற ஐயம்தான் அது.  வம்சாவளி என்பதற்கு உயிர்த் தொடர்பு என்பது  மட்டுமே பொருளாகுமா? சிந்திக்கவும்!

     10. மாதா பிதா செய்தது மக்களுக்கு:

    ஒருவன் உலகியல் வாழ்க்கையில் சேர்த்து வைத்த சொத்து மகனுக்கோ/மகளுக்கோ, தாத்தா சொத்து பேரனுக்கோ உரிமை இருப்பதுபோல், செயலின் விளைவையும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.  பின்னர்   தவறான செயலின் தீய விளைவை செய்தவர் இல்லாதுபோது வேறுயார் அனுபவிப்பது?  இதனைக் கருத்தில் கொண்டுதான் குடும்பங்களில் பெரியவர்கள் ‘மாதா பிதா செய்தது மக்களுக்கு’ என்பர்.  மேலும் தந்தை வீட்டினை அடமானம் வைத்து கடன் வாங்கி திருப்பி செலுத்துவதற்கு முன்னர் இறந்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.  அவருக்கு மகன்கள் இருக்கின்றனர்.  தந்தை வாங்கிய கடனை மகன்கள் திருப்பி செலுத்திய பிறகுதான் மகன்கள் அந்த வீட்டினை விற்க முடியும்.  ‘எங்களது தந்தை வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பு இல்லை’ என்று சொல்ல முடியுமா?  அதுபோல்தான் ஒருவன் செய்த  செயலிற்கான விளைவினை அனுபவிக்க முடியாமல்போனால்  அவன் சந்ததி அனுபவிக்க வேண்டியிருக்கும்.   இங்கே மகரிஷி அவர்கள்,  பாபம் எது புண்ணியம் எது என்று கூறுவதனை அறிந்துகொள்வோம்.

     11. பாபமும் புண்ணியமும்:

     இறை நம்பிக்கையுள்ளவர்களுக்கு பாபம், புண்ணியம் பற்றி தெரிந்திருக்கின்றது.  ஆனால் அவற்றின் வரையறை முழுவதுமாக தெரியவில்லை என்றே சொல்லலாம். அதனால்தான்  அந்த வரையறையை மனதில் இருத்திக்கொண்டு மனிதன் செயல்கள் புரிய வேண்டும் என எண்ணி 1955 ஆம் வருடம் பாபம் புண்ணியம் என்கின்ற தலைப்பில் மகரிஷி அவர்கள் பாடலை அருளியுள்ளார். அப்பாடலை நினைவு கூர்வோம்.

    Scientist of Consciousness

     பாபம் புண்ணியம்(1955)

     எண்ணம் சொல் செயல்என்ற மூன்றினாலும்,

    எவர்க்கெனினும் தனக்கெனினும் இன்றோ பின்னோ,

    மண்ணுலகில் உணர்ச்சிக்கோ கற்பனைக்கோ,

    மாசுஎனும் துன்பம்எழா வகையினோடும்,

    உண்மையிலே இன்பத்தை விளைத்துக் கொண்டே,

    உலக இயல்பொடு ஒட்டிவாழும் செய்கை

    புண்ணியமாம்; இதற்கு முரணான எல்லாம்

    புத்திமிக்கோர் பாபம் என விளங்கிக் கொள்வார்.

    . . . வேதாத்திரி மகரிஷி.

    மிக எளிமையாக பாபம் புண்ணியம் என்பது பற்றி கூறியுள்ளார்.  இதற்கான அறிவியல் வார்த்தை முறையே தீயொழுக்கம், நல்லொழுக்கம் என்பதாகும்.  நல்ல செயல்களெல்லாம் புண்ணியம்– நல்லொழுக்கம் என்று கொள்ள வேண்டும்.  தீய செயல்களெல்லாம் பாபம்–தீயொழுக்கம் என்று கொள்ள வேண்டும்.  பாடலை முடிக்கும் போது ‘புத்திமிக்கோர்’ என கூறியுள்ளார் மகரிஷி அவர்கள். என்ன பொருள் எடுத்துக் கொள்வது?  சமுதாயத்தில் பெரும்பாலோர், அறியாமை, அலட்சியம். உணர்ச்சிவயம் ஆகிய அறிவின் குறைபாடுகளோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  அறிவின் குறைபாடுகளோடு வாழ்ந்தால் அறிவு துன்பத்தைத்தான் அனுபவிக்க முடியும் அல்லவா?  ஆகவே அறிவு முழுமை அடையவேண்டும்(perfection of consciousness) என்பதனை கருத்தில் கொண்டு மனவளக்கலையை வடிவமைத்துக் கொடுத்துள்ளார் மகரிஷி அவர்கள்.  இதுவே தமிழ் கூறும்  அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பதுமாகும்.

     Check list ஐ சரி பார்ப்போமா!

         சிந்தனையின் தொடக்கத்தில் பன்னிரண்டு  ஐய-வினாக்களை எழுப்பியுள்ளோம். அவற்றிற்கான விடைகளை இன்றைய சிந்தனையில் கண்டுபிடித்துவிட்டோமா எனப் பார்ப்போம்.

     FFC-270_table

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில்(check list) வினாக்களுக்கான விடைகள் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் வினாக்கள் இருக்குமானால் அவ்வினாக்களுக்கு விடைகளை தாங்களாகவே சிந்தித்து பயன் பெறவும்.  இத்துடன் ‘விளைவு’ பற்றிய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம்.  இதன் தொடர்ச்சியாக அடுத்த அறிவிற்கு விருந்தில் (29-11-2017 புதன்)  கருமையம் பற்றி சிந்தனை செய்வோம்.  வாழ்க வளமுடன்.

    வாழ்க வையகம்!                                   வாழ்கவளமுடன்!!   

    வாழ்க திருவேதாத்திரியம்!                                                  வளர்க திருவேதாத்திரியம்!!

    வாழ்க அறிவுச் செல்வம்!                                                                              வளர்க அறிவுச் செல்வம்!!


     

    Loading