admin

Author Archives

  • வாழ்வில் தேறிடுவோம் – 2/2

     

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

     FFC –  202

     
    29-06-2016-புதன்

    FFC-135- வள்ளலார் கடைசி செய்தி

    அருட் பிரகாச வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது திருவாய் மலர்ந்தது.
    “இது வரை உங்களுக்கு நேரிற் சொல்லி வந்தோம். கேட்டுத் திருந்தி எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். ……………………….
    ……………………………………………………………………..
    இப்போது இவ்வுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்போம். திருத்தி விடுவோம். அஞ்சவேண்டாம்.” என்றார்.
    வள்ளலார். தன் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவிட்டதை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஊனுடம்பு ஆலயத்தில் பத்து வருடங்கள் தங்கி இருந்து முடித்துக் கொண்டார். 

         இன்றும் அவரது அறிவாற்றலின் வாயிலாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்ற வேதாத்திரி மகரிஷி அவா்கள் என்ன கூறுகிறார் என்றும் பார்ப்போம். உலக மக்களுக்கு 1970 ஆண்டு அழைப்பு விடுத்திருக்கிறார். அழைப்பு விடுத்து நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அந்த அழைப்பைப் பற்றி நமக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் இருந்த நிலையிலே, நம்மெல்லோரையும் அவரிடம் கொண்டு வந்து சீடராக்கியுள்ளது இயற்கை/இறை. இது இறையின் புனித திட்டமும், ஏற்பாடும் ஆகும்.
    1823 ல் அவதரித்த அருளாளர் வள்ளலார் “எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்.” என்றார்.
    1911ல் அவதரித்த அருளாளர் “அறிந் தனுபவிக்க இன்றேனும்.விரைந்து எழுச்சிபெற் றுய்வீர் ! *” என்கிறார்.
    முதலில் அவதரித்த அருளாளர் கூறுவதை சற்று சிந்தித்து பார்ப்போம். ஒருவர் கூட தான் கூறுவதை நம்பி எழுந்து திறத்தில் திகழ்வதற்கு ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று ஆதங்கப்பட்டார்,
    எழுந்து என்றால் ‘விழித்தல்‘ என்று பொருள் கொள்ள வேண்டும்.
    திறம் என்பதற்கு பொருளாக “மனிதனில் உறங்கிக் கொண்டிருக்கின்ற தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்துவது” என்று கொள்ள வேண்டும்.
    ‘திகழ்தல்’ என்றால் பிரகாசித்தல், பொலிவுடன் இருத்தல், சிறப்புடன் இருத்தல், விளங்குதல் என்று பொருள். விளங்குதல் என்றால் புரிதல். தெரிதல் என்று பொருள். ஆகவே “எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்” என்றால்
    மனிதனுள் உறங்கிக் கொண்டிருக்கின்ற தெய்வீக ஆற்றல் விழிப்புற்று சிறப்புடன் தெய்வீகத்தை விளங்கச் செய்பவர் யாரும் இல்லை என்று ஆதங்கப் பட்டார். ஆனால் அத்தோடு இருந்து “அஞ்ச வேண்டாம்” என சமாதானம் கூறி அனைவரையும் திருத்தி விடுவோம் என்கிறார்.

    அவ்வாறே 1911ல் அவதரித்த அருளாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் “அறிந் தனுபவிக்க இன்றேனும்.விரைந்து எழுச்சிபெற்றுய்வீர் ! ” என்கிறார்.
    “இன்றேனும் விரைந்து எழுச்சிபெற் றுய்வீர்” என்றால் “இதுவரை எழுச்சி இல்லாமல் மனிதனுள் உறங்கிக் கொண்டிருக்கும் தெய்வீக ஆற்றல் இன்றாவது விழிப்பு பெற்று உய்வீர் என்கிறார்.

    அழைப்புக் கவி(1970)

    அன்பர்களே ! வாரீர் !
    அறிவின் இருப்பிடம்,
    அறிந்து இன்பமுற,
    இன்பநிலையதை, ஏகநிலையதை,
    அன்பு நிலையதை
    அறிந்திடலாம் இன்று.
    ‘தின்று திரிந்து உறங்கவா பிறந்தோம்?’
    என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்.
    அன்றாட வாழ்க்கையை அறிந் தனுபவிக்க
    இன்றேனும்.விரைந்து எழுச்சிபெற் றுய்வீர் !

    ……. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    1874 ல் வள்ளலார் எண்ணியது, 1953 ல்(1911+42=1953) நிறை வேறியது. இராமலிங்க சுவாமிகள் எண்ணிய, மக்களைத் திருத்தி விடும் படலத்தை, இயற்கை/இறை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, அரியக்கலையாக இருந்து வந்து அகத்தவத்தை பரவலாக்கி, மனிதனை திருத்தும் முகமாகத்தான் அகத்தாய்வு பயிற்சியினையும் உருவாக்கி கல்வி நிலையங்களுக்கும் கொண்டு சென்றுள்ளது.
    இராமலிங்க சுவாமிகள் எண்ணியது, இறை எண்ணியதுதானே!. ஆக மொத்தத்தில் அறிவை அறிந்தவர்கள் ‘இவ்வுலக மக்கள் திருந்தி உய்வதற்கு வழியே இல்லையா’ என எண்ணியதற்கிணங்க, “Fraction demands. Totality supplies” என்கின்ற தன்னுடைய நியதிப்படி, இயற்கை/இறை தன் திரு விளையாடலை வேதாத்திரியத்தின் வழியாக அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. ஆகவே இயற்கையின் எல்லா ஆற்றல்களையும் பயன்படுத்தத் தெரிந்து கொண்ட மனிதகுலம் அறிவாகிய ஒழுங்காற்றலை பயன்படுத்த அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். மனிதன் வாழ்நாளில் அறிய வேண்டியதை அறிந்து இன்பமுற வேண்டும். அதற்காகத்தான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் பிறவியினை அளிக்கின்றது இயற்கை.
    மனிதன் அறிய வேண்டியதை எல்லாம் ‘நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு விடை கிடைக்கும் போது அறியப்பட்டுவிடும். அவையாவன:
    1) இறை அரூபம். அளப்பரிய ஆற்றல்
    2) இறை பேராற்றலாக, தூய அறிவாக(பேரறிவாக), வற்றா இருப்பாக, காலமாகவும்(Time), இருக்கின்றது.
    3) தன்முனைப்பில்லா நான் (Egoless I) அதாவது அறிவுடைமையுள்ள நான் கண்டுபிடிக்கப்படும். மனிதனிடமுள்ள (நானில்) உடல், உயிர், அறிவு ஆகிய மூன்றில் நானாக இருப்பது அறிவே என்றும், அதே அறிவு இறையாகும் என்றும், அறிவை அறிந்த நானே தன்முனைப்பு அற்ற நானாகும்.
    இந்தவிளக்கத்தைப் பெறாத, பெற்று நடைமுறைக்கு கொண்டு வராத நான்கள் தன் முனைப்புள்ள நான்களாகும்.
    4) பிற மனிதர்களிடமும் உள்ள அறிவும், இறையே, 720 கோடி உலகமக்களும் வெவ்வேறு நான்கள் இல்லை. ஒரே, ஆனால், உடலளவில் தனித்தனியாகவுள்ள நான்கள். உலக மக்கள்
    ஒரு மாபெரும் குடும்பம். ஒவ்வொருவரும் சகோதர, சகோதரிகளே.
    5) பிற உயிர்களிடம் உள்ள (தாவரங்கள் முதல் விலங்கினங்கள் வரை) உயிரும் சரி, அறிவும் சரி இறையே. இறையே உயிர்களுக்கெல்லாம் உயிராக திகழ்கிறான்.
    6) சடப் பொருட்களிலும் அணுவாக இருப்பதும், அணுவின் இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பதும் ஒழுங்காற்றலாகிய அறிவாகிய இறையே.
    7) அத்வைதம் தெளிவாக விளங்கிவிடும். ஒன்றே எவ்வாறு பலவாறாக இருக்கின்றது, இருக்க முடியும் என்கின்ற சந்தேகமும் விளங்கிவிடும்.
    8) வாழ்வின் நோக்கம் இறை உணர்வு பெறுவதே என்பது அறியப்படும்.
    9) கோடனு கோடி நட்சத்திரங்கள் அடங்கிய பிரபஞ்சத்திற்கு அப்பால் எல்லையில்லாத அளவிற்கு விரிந்து உள்ள வெளியே (அப்பாலுக்கு அப்பாலாய்) இறையே என அறியப்படும். அது அறிவாக இருப்பதால்அது வெளியாகத் தெரிகின்றது என்கின்ற விளக்கமும் கிடைக்கப் பெறும்.
    10) ‘பிரக்ஞானம் பிரம்மம்’ ‘ அகம் பிரம்மாஸ்மி’ ‘தத்துவமஸி‘ ‘அயம் ஆத்மா பிரம்மம்‘ என்கின்ற மகா வாக்கியங்கள் விளங்கும்.
    பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அறிவாக உள்ள அரூபமான இறையை, மனிதன் அறிவைக் கொண்டுதான் உணர முடியும். அறிவைக் கொண்டு பேரறிவை அறியும் பேற்றினையே தமிழ் இலக்கியங்களில் வீடுபேறு எனப்படுகின்றது.
    வீட்டிற்கெல்லாம் வீடு அது. அந்த வீட்டினை அடைவது பேறாகக் கருதப்படுகின்றது. எனவே வீடு பேறு எனப்படுகின்றது.
    அறம் காத்து, பொருள் ஈட்டி, அளவு முறையோடு இன்பம் துய்த்து, வீடு பேற்றை அடைவதே மனிதப்பிறவியின் நோக்கம் அல்லது பயன் என்கின்றது தமிழ் இலக்கியங்கள்.
    ஆறறிவாக வாழ்கின்ற மனிதர்களெல்லாம், அதற்கு ஏற்ப பொருத்தமாக, ‘உண்மைப் பொருளுணா்தல் பேறு’ என்றும், அதுவே பிறவிப்பயனைப் பெறுவதாகும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
    ஆகவே அருட்பிரகாச வள்ளலார் மற்றும் வேதாத்திரி மகரிஷி, மற்றும் பல மகான்களின் ஆதங்கங்களைப் பூர்த்தி செய்ய, ‘வீடு பேற்றில்’ தேறிடுவோம். தேறிடுவோம். தேறிடுவோம்.
    அந்தப் புனித ஆன்மாவின் ஆதங்கங்களுடன் நம்முடைய ஆதங்கத்தையும் சேர்த்துக் கொள்வோம்.
    . வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

    அடுத்த ஞாயிறன்று (03-07-2016) சந்திப்போம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                 வளா்க அறிவுச் செல்வம்

    முன்அறிவிப்பு

                30-06-2016

    வாழ்க வளமுடன்.

    வருகின்ற ஞாயிறன்று(03-07-2016) அறிவிற்கு விருந்தில் படைக்கப்படவிருகின்ற விருந்து . . .

    இன்றேனும் விரைந்து எழுச்சி பெற்றுய்வீர்!

                                           … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    FFC – 203

                                                                                                                                                                                     29-07-2016புதிய முன்னறிவிப்பு -FFC-203-1-7-16

    அன்புடையீர்  

    வாழ்க வளமுடன். பயன் பெற வாழ்த்துக்கள்.

    தங்களின் மேலான கருத்துக்களை இணைய தளத்திற்கு அனுப்பி வைக்க வேண்டப்படுகின்றது.

    நன்றி.

    www.prosperspiritually.com

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-189

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

     

    27-06-2016 – திங்கள்

    பெரிய புராணத்தில் வரும் “ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்” என்பதற்கு மகரஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • வாழ்வில் தேறிடுவோம்!

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

     FFC/அ.வி.  201

    26-06-2016-ஞாயிறு

    வாழ்நாளில் அறிந்து இன்பமுற வேண்டியவை:

    FFC-135- வள்ளலார் கடைசி செய்தி

     

    பிறப்பு – இறப்பு என்கின்ற இரு நிகழ்சிகளுக்கு இடையில் அனுபவிப்பதுதான் வாழ்க்கை எனப்படுகின்றது. சிறுவனாக இருக்கும்போது பள்ளிப் படிப்பில் தேற்கிறோம். வாலிபனாக இருக்கும்போது கல்லூரிப் படிப்பில் தேற்கிறோம். பணிக்குச் சென்ற பின் அப்பணியிலும் தேற்கிறோம். ஆனால் வாழ்வில் தேறினோமா என்றால் சந்தேகமே. இல்லாவிட்டால் ‘ஒருவரேனும் தேறிலர்’ என்று ஆதங்கப்பட்டிருக்கமாட்டார் அருட்பிரகாச வள்ளலார். எனவே ‘அஞ்சவேண்டாம், திருத்திடுவோம்’ என்று பூதவுடலைவிட்டுச் சென்றபோது கூறிய அருட் செய்திக்கு இணங்க திருந்திடுவோம், தேறிடுவோம். இது காலத்தின் கட்டாயம்.

    வாழ்க்கை தோன்றி மறையும் ஒரு நீர்க்குமிழியைப் போன்றது. எனவே மனிதஅறிவு இக்குறுகிய காலத்தில், தான் அறிய வேண்டியதை அறிந்து கொண்டு இன்புற வேண்டும். இன்று உலக மக்கள் தொகை 740 கோடி. பத்து வருடங்களுக்கு முன்னர் உலக மக்கள் தொகை சுமார் 740 கோடி. பத்து வருடங்களில் மக்கள் தொகை 140 கோடி அதிகரித்துள்ளது. ஆனால் முதல் மனிதனிலிருந்து இன்று வரை பிறந்தவர்கள் எத்தனை போ் என சொல்ல முடியுமா? புள்ளி விவரம் இல்லை. கடலிலுள்ள நீரில் எவ்வளவு நீர்த்துளிகள் இருக்கும் என்று சொல்ல முடியாதோ அதுபோல்தான் முதல் மனிதனிலிருந்து இன்று வரை பிறந்துள்ள மக்கள் தொகை எண்ணிக்கையும்.
    ஒவ்வொரு ஆண்டும், பிறந்த நாள் வரும்போது மனிதனின் ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகின்றது. இன்று இருப்பவர் அடுத்த 100 ஆண்டுகளில் இருக்கப் போவதில்லை. 100 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர் இன்று இல்லை.(மனிதனின் ஆயுட்காலம் 100 என எடுத்துக் கொண்டு இது சொல்லப்படுகின்றது) நின்றால் ஒரு அடி சொந்தம். படுத்தால் ஆறடி சொந்தம். இது வேதாந்தமில்லை. தத்துவமில்லை, ஒதுக்கித் தள்ளுவதற்கு. இதுதான் எதார்த்தம்.

    FFC_46-geetha chaaram-

     இயற்கையாகிய–பேராற்றலிருந்து உருவானவர்கள்தான், இத்தனை கோடானுகோடி உலக மக்களும். அதே இயற்கை ஆற்றலிருந்துதான் மனிதன், நீர்க்குமிழ் போல், மறையக்கூடிய வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா ஆற்றல்களையும் பெறுகிறான். சூரிய ஆற்றல், வெப்ப ஆற்றல், காந்த ஆற்றல், மின் ஆற்றல், எரிசக்தி ஆற்றல், இயந்திர ஆற்றல், இரசாயன ஆற்றல், இவ்வாறாக பல்வேறு ஆற்றல்-வளங்களை வாழ்வின் வளமாக மாற்றி அனுபவித்துவிட்டு ஒரு நாள் மறைகிறான். நீர்க்குமிழியான உலகியல் வாழ்க்கைக்கு வேண்டியவைகளை மட்டுமே இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்கிறான் மனிதன்.

    740 கோடி மக்கள் உலகில் வாழ்கிறார்கள் என்றால் என்ன பொருள்? 740 கோடி மக்களும் 740 கோடி தெய்வீக ஆற்றலின் கருவூலங்கள் (Treasure-House of Divine Energy). இவ்வாறாக 740 கோடி தெய்வீக ஆற்றலின் கருவூலங்களாக இருந்தும், அதனை அறியாது அறியாமையில் வாழ்கின்றது உலக சமுதாயம். இத்தகைய தெய்வீக ஆற்றலை, ஒவ்வொரு மனிதனும் கொண்டிருந்தாலும், “விஞ்ஞானத்தை நோ்வழியில் பயனாய்க் கொள்ளும் நெறி முறைகள் இணைந்த வாழ்வு மலர வேண்டும்”, என்று மகரிஷி அவா்கள் கூறுவது போல் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தெய்வீக ஆற்றலை நேர்வழியில் பயன் படுத்துகின்ற நெறிமுறைகளைக் கற்க வேண்டும். முதல் மனிதன் தோன்றி இன்று வரை எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும்?
    பல்லாயிரம் ஆண்டுகள் கடந்திருக்கும்.
    இன்னமும் மனித குலத்தில், தன்னுடைய பூர்வீக சொத்தான அமைதி எனும் (ஆதியில் இருப்பாக இருந்தது) சொத்தை மட்டும் எல்லோராலும் முழுவதுமாக அனுபவிக்க முடியவதில்லை. பூர்வீக சொத்தான அமைதியை மட்டும் ‘எல்லோராலும் முழுவதுமாக’ அனுபவிக்க முடியவில்லை என்றால் வெகு சிலரே தனது பூர்வீக சொத்தான அமைதியை முழுவதுமாக அனுபவிக்கின்றனர் என்று பொருளாகின்றது. ஆம். அப்படித்தான். முழுவதுமாக அனுபவிக்கின்றனர் என்று ஏன் கூறப்படுகின்றதென்றால் அந்த வெகு சிலரைத் தவிர மற்றவர்களில் ஒரு சிலர் பூர்வீக சொத்தை அனுபவித்தாலும், அவர்களும் குறைவாகவேதான் பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்கின்றனர் என்றாகின்றது. ஆம். மற்றவர்களில் உள்ள அந்த வெகு சிலரும் பூர்விக சொத்தான அமைதியை அனுபவித்தாலும் அவர்களும் அறிந்து அனுபவிப்பதில்லை. அறிந்து அனுபவிக்காததால் முழுவதுமாக அமைதியை அனுபவிக்க முடியவில்லை. குறைவாகவே தான் அனுபவிக்கின்றனர், பெரும்பாலோர் பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்காமலேயே மடிந்து விடுகின்றனர், காரணம் என்ன? வாழ்வில் அறிய வேண்டியதை அறியவில்லை.
    தன் பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்கின்ற அந்தவெகு சிலரின் எண்ணிக்கையை மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அது விரல் விட்டு எண்ணுகின்ற அளவிலேதான் இருக்கும். அவர்களால் மட்டும் எவ்வாறு தங்களது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்க முடிகின்றது? எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள் அவர்கள். அவர்கள் எதார்த்த வாழ்வு வாழ்பவர்கள்.
    எதார்த்தம் என்றால் என்ன?
    எதார்த்தம் என்றால் உள்ளது உள்ளபடி,
    நடைமுறைக்கு முரண்படாதது.
    அப்பட்டமான உண்மை (naked truth) என்று பொருள்.
    உள்ளதை உள்ளபடி புரிந்து கொண்டு நடைமுறைக்கு ஏற்றபடி வாழ்கின்றவர்கள் அந்த முதல் ரக வெகு சிலர். அந்த முதல் ரக வெகு சிலர் உலகநியதியையும், இயற்கையின் தன்மாற்றத்தின் சாராசாம்சத்தையும் விளங்கிக் கொண்டு வாழ்பவர்கள். கீதாசாரம் கூறும் இயற்கையியலாகிய வாழ்வியல் உண்மைகளை நினைவு கூர்வோம். இயற்கையியலாகிய வாழ்வியல் என்பதால் எல்லோருக்குமே பொதுவானதுதானே.
    சமுதாயம் இயற்கையின்/இறையின் மற்ற ஆற்றல்களையும், வளங்களையும் வாழ்வின் ஆற்றலாகவும், வளமாகவும் மாற்றி வாழத் தெரிந்து கொண்டதே தவிர, இயற்கையின்/இறையின் முதன்மையான ஆற்றலான ஒழுங்காற்றலான அறிவாற்றலை பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை. இதுதான் இன்றைய, இதுவரை வந்துள்ள சமுதாயத்தின் குறை.
    காரணம், மனித அறிவு, இதுவரை வாழ்வின் நோக்கத்தை விஞ்ஞானப் பூர்வமாக அறியவில்லை.
    இதனால் அறிவிற்கு மூன்று குறைபாடுகள் வந்துவிட்டன. அவையாவன
    அறியாமை,
    அலட்சியம்,
    உணர்ச்சிவயம்.
    ஒழுங்காற்றலான அறிவாற்றலை பயன்படுத்திக்கொள்ள,
    அறிவின் இருப்பிடம் அறிய வேண்டும். அறிவு மனிதனிடம் இருக்கின்றது. ஆனால் அந்த அறிவின் இருப்பிடம் அறிய வேண்டும். அதாவது
    அறிவின் பூர்வீகம் அறிய வேண்டும். அறிவின் பூர்வீகம் என்பது, மனிதன் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் அறிவு எங்கிருந்து வந்தது என அறிய வேண்டும்.
    “காக்கைக் குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்கின்ற மகான் பாரதியின் கூற்று எவ்வாறு அறிவியல் உண்மையைக் கொண்டதாக உள்ளது என்று அறிய வேண்டும்.
    அதுபோல் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்கின்ற திருமந்திரம் எவ்வாறு அறிவியலைக் கொண்டதாக உள்ளது என்றும் அறிய வேண்டும்.
    அறிவின் இருப்பிடம் அறிந்து கொண்டால், ஒழுங்காற்றலான அறிவாற்றலை ஒழுக்க நெறியோடு முறையாகப் பயன்படுத்தலாம். ஒழுங்காற்றலான அறிவை ஒழுக்க நெறியோடு முறையாகப் பயன்படுத்தினால்தான் அறிவின் இருப்பிடம் அறிய முடியும்,
    அறிவின் இருப்பிடம் அறியும் போது, மனிதஅறிவு வாழ்நாளில், தான் அறிய வேண்டியதை எல்லாம் அறிந்துவிடும். மகாவீரர் கூறுவதனை நினைவு கூர்வோம்.
    “எவனொருவன் ஆன்மாவை அறிகிறானோ, அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாகிறான்.”
    நான் யார் என அறியப்பட்டுவிடும். அறிவு என்றாலே, அதன் இயல்பு அறிதலாகும். அவ்வாறு இருக்கும் போது,
    அறிய வேண்டியதான, தன்னுடைய மூலத்தை, பூர்வீகத்தை அறியாது இருந்தால் அறிவு எவ்வாறு தன் பூர்விக சொத்தை அனுபவிக்க முடியும்? நான் யார் என அறிவதால் எல்லா நன்மைகளும் வந்து சேரும். இப்போது சுவாமி சிவானந்த பரமஹம்சர் அருளியுள்ளதை நினைவு கூர்தல் நலம் பயக்கும்.
    “தன்னை உணராப்படிப்பு எதுவாயினும் பொருளற்றதே. தன்னை உணர, தன்னைத் தான் படிக்க வேண்டும். தன்னைத்தான் படிக்கும் கலையே, தன்னையறிவதே ஞானோதயம் – கைவல்யம்!! ”
    — சுவாமி சிவானந்த பரமஹம்சர்.
    மற்றொரு அறிஞரான டால்ஸ்டாய் கூறுவதையும் நினைவு கூர்வோம்.

    “எல்லாக் கலைகளையும் விட வாழ்க்கை மிக உயா்ந்தது. எந்த மனிதனின் வாழ்க்கை பூரணத்துவம் அடைகின்றதோ, அவன்தான் மிகச்சிறந்த கலைஞன் என்று கூற முடியும்”   — டால்ஸ்டாய்.

    வரும் புதனன்று(29-06-2016) வேதாத்திரி மகரிஷி அவர்களின் மக்களுக்கு விடுத்துள்ள அழைப்புக்கவியையும், அருட்சோதி வள்ளலார் அவா்கள் திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது மொழிந்ததையும், வாழ்வில் அறிய வேண்டியவைகளையும் அறிவோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்

    Loading