admin

Author Archives

  • தன்குறைகளை அறிவதே ஞானமா? ஆம்.

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு
     
    FFC – 200

     22-06-2016-புதன்

    தன்னிடம் உள்ள குறைகளை அறிந்து கொள்வதே ஞானம் என்கிறார் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள். குறைகளை அறிந்து கொள்வதே ஞானமா? தன் குறைகளைத் தானே அறிபவன் அத்துடன் இருந்து விடுவதில்லை. ஏனெனில், வள்ளுவர் கூறுவதுபோல் சான்றோர்களின் அணிகலான நாணம் அவனிடமும் உள்ளதால் தன்னைத் திருத்திக் கொள்ள முயல்வான். தன்குறைகளை அறிந்து கொண்டு தன்னை திருத்திக் கொள்ளும் போதுதான் அவன் தன் குறைகளை அறிந்தவன் ஆகிறான். அவனே தான் பின்னர் சான்றோனாகிறார். ஞானியாகிறார்.
    தன்குறைகளை அறிந்து கொள்பவன், எந்த அளவிற்கு ஆழ்ந்து தீவிரமாகத் தன்னை திருத்திக் கொள்ள முயல்கின்றானோ அதற்கேற்ப திருந்துகின்ற சூழலும் வாய்ப்பும் ஏற்படும். அறிவினர்ச் சேர்க்கையும் உண்டாகும். தன்குறைகள் தனக்கே தெரிய ஆரம்பிப்பதும், தன்னைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதுமே அறிவிற்கு ஏற்படுகின்ற தெளிவினால்தான் சாத்தியமாகின்றது. இயற்கையே ஆதிநிலையில் பேரறிவாக உள்ளது. மனித அறிவாக தன்னையே உணர்ந்து கொண்டு மகிழ்வதற்காக மலர்ந்துள்ளது.
    ஆனால் தனது பயணத்தில் பரிணாமக் கசடுகளைச்(பரிணாமக் கசடுகள் பற்றித் தனித்தலைப்பில் வேறோரு நாள் அறிவிற்கு விருந்து படைப்போம்.) சுமந்து கொண்டு வந்துவிட்டது மனித அறிவு. அந்த பரிணாமக் கசடுகள்தான் மனிதனிடம் குற்றங்குறைகளாக உள்ளன. “எதுவாக இருந்தாலும் அது அதுவாக இல்லையோ அதுதான் மனம் என்கின்ற ஆதங்கப் புதிரை இன்னமும் கொண்டதாகவே உள்ளது மனித மனம்.
    ஆகவே மனிதனுக்கு தன் குறையை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொள்ளும் ஆர்வம் வந்து விட்டால் எல்லாம் வல்ல இயற்கையே திருந்துகின்ற சூழலையும், நிகழ்ச்சிகளையும் ஏற்படுத்துகின்றது. அந்த இயற்கையின் ஏற்பாடுதான் — அவ்வையார் கூறும் அறிவினரின் அல்லது தன்னை உணர்ந்த குருவின் சேர்க்கையும், பிறகு அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதில் இன்பம் கண்டு பிறவிப் பயனை இப்பிறவியிலேயே அடைதலும்.
    பொதுவாக ஞானம் தேடுவதை யாரும் விரும்புவதில்லை. ஏனெனில் ஞானம் தேடி ஞானியாகிவிட்டால் குடும்பத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும் என்கின்ற தவறானக் கருத்து நிலவி வருகின்றது. ஞானம், தேடிப் பெறுவதன்று. அறிவு தனக்கு ஏற்படுத்திக் கொள்கின்ற முழுமையானத் தெளிவே ஞானம். அறிவு மேலும் மேலும் தெளிவு அடையும்போது, அறிவின் குறைகள் படிப்படியாக நீங்குதல் ஏற்படும். எனவே ஞானம் என்பது குறைகள் நீங்கிய அறிவின் நிலை என்றுதானே பொருளாகின்றது. ஞானம் என்பது அறிவின் ஒளியாகும். எப்படி? இருட்டில் இருக்கும் அறிவிற்கு ஞானம் ஒளியைத் தருகின்றது. அறிவொளியே ஞானம்.
    ஞானம் என்கின்ற சொல்லின் பொருளென்ன?
    o ஞானம் என்பது அனைத்தும் அறிந்த நிலை,
    o முழுமையான அறிவு என்பதனைக் குறிக்கின்றது.
    அனைத்தும் அறிந்த நிலை என்றால் அறிவிற்கு குழப்பம், சந்தேகம் முதலியவை நீங்கி ஏற்படும் துலக்கம் என்று பொருள். அதாவது ஞானம் எனில் தெளிவு என்று பொருள்.
    முழுமையான அறிவு என்றால் அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயம் ஆகிய குறைகள் நீங்கிய நிலை. மனித அறிவு ஞானம் ஏற்படுவதற்கு முன்னர் குறைவுடைய அறிவாக இருக்கின்றது. ஆதலால்தான் மனவளக்கலையின் இறுதிப்பயன் அறிவின் முழுமைப் பேறு என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். ஞானம் என்பது பற்றி மகா கவி பாரதியார், மற்றும் அவருக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷி அவா்கள் ஞானம் பற்றிக் கூறுவதையும் பார்ப்போம்.
    மகா கவி பாரதியார் தெளிந்த நல்லறிவை ஞானம் என்கிறார். தெய்வப்பாடல்கள் வரிசையில், ஒருபாடலில் “தெளிந்த நல்லறிவு வேண்டும்“ என தெய்வத்தை வேண்டச் சொல்கிறார். அப்பாடலை நினைவுபடுத்திக் கொள்வோம்.

    அன்னையை வேண்டுதல்

    ”எண்ணிய முடிதல் வேண்டும்
    நல்லவை எண்ணல் வேண்டும்;
    திண்ணிய நெஞ்சம் வேண்டும்;
    தெளிந்தநல் லறிவு வேண்டும்;
    பண்ணிய பாவ மெல்லாம்
    பரிதிமுன் பனிபோல,
    நண்ணிய நின்முன் இங்கு
    நசித்திடல் வேண்டும் அன்னாய்.”    . . .  மகா கவி பாரதியார்.

    எதற்காகத் தெளிந்த நல்லறிவை கேட்கச் சொல்கிறார் மகா கவி? பாவங்களை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே ”என்னுடைய பாவங்களைப் போக்கிட வேண்டும்” என இறையை மீண்டும் மீண்டும் வேண்டுவது என்பது அறிவின் மடமையன்றோ. செய்த பாவத்திற்கான பாதிப்புகள் தனக்கும் சமுதாயத்திற்கும் வந்து கொண்டே இருக்குமல்லவா? பாவங்கள் செய்யாத தெளிந்த நிலைக்கு அறிவு உயர்ந்து விட்டால், பாவத்தின் விளைவுகளான தீமைகள் தனக்கும் சமுதாயத்திற்கும் நிகழாமல் இருக்கு மல்லவா? பாவங்கள் செய்யாத நிலைக்கு உயர்ந்த அறிவு நல்லறிவுதானே. நல்லறிவில் தெளிவும் சேர்ந்து விட்டால் எவ்வளவு நலன் பயப்பதாக இருக்கும். எனவே தெளிந்த நல்லறிவை வேண்டச் சொல்கிறார் மகா கவி.
    நல்லவை எண்ணாததற்கு முன், தீயவைகளை எண்ணியபோது தான், பாவங்கள் வந்து சேர்ந்துள்ளன என்று அறிந்து கொள்வதற்கும், இனிமேல் நல்லவைகளையே எண்ண வேண்டும் என்று விரும்புவதற்கும், ஏற்கனவே செய்துள்ளப் பாவங்கள் நீங்க வேண்டும் என இறைவியை வேண்டுவது என்பது அறிவு தெளிந்தால்தான் சாத்தியமாகும். அந்த அறிவுத் தெளிதல் ஏற்பட்டு விட்டால் கெட்ட அறிவு நல்லறிவாக மாறிவிடும். தெளிதல் ஏற்பட்ட நல்லறிவுதான் தெளிந்த நல்லறிவு எனப்படும். அதாவது தன்னிடமுள்ள குறைகளை அறிந்து கொள்வதற்கு தெளிந்த நல்லறிவு வேண்டும். அதனால்தான் தெளிந்த நல்லறிவை இறைவியிடம் வேண்டச் சொல்கிறார் பாரதியார். அடுத்ததாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஞானம் பற்றிக் கூறுவதனைச் சிந்திப்போம்.
    வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஞானம் என்பதற்கு, பொதுவான மற்றும் சிறப்பான விளக்கம் தருகிறார்.
    ஞானத்திற்கான பொதுவான வார்த்தை விளக்கம் தெளிவு என்கிறார் மகரிஷி அவர்கள்.
    சிறப்பான விளக்கம் அறிவையறிந்த தெளிவு என்கிறார்.
    அறிவின் இருப்பிடத்தை அறிந்து இன்புற்ற மகரிஷி அவர்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கிணங்க, அவ்வின்பத்தை அனுபவிக்க அன்பர்களையெல்லாம் அழைப்பதைக் கவனிப்போம்.
    அழைப்புக் கவி
    அன்பர்களே, வாரீர்!
    அறிவின் இருப்பிடம்
    அறிந்து இன்பமுற
    அன்பர்களே வாரீர் …….. என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    ஞானம் என்கின்ற சொல்லிற்குத் பொதுவான அர்த்தம் ‘தெளிவு . தெளிவு என்பது யாருக்கு? எந்த ஒன்றைப் பற்றியும் அறிந்து கொள்வதில், குழப்பம், சந்தேகம் இன்றி அந்த ஒன்றைப் பற்றி அனைத்தையும் அறிந்த அறிவின் நிலை தான் தெளிவு. உதாரணத்திற்கு சிறந்த வழக்குரைஞரை சட்ட ஞானமுடையவர் என்கிறோம். சிறந்த பாடகரை இசை ஞானம் உள்ளவர் என்கிறோம். எந்தத் துறையில் சிறந்து விளங்குகிறாரோ அந்தத்துறையில் ஞானமுடையவர் என்கிறோம். பணியின் நிமித்தமாக மனிதர்கள் வெவ்வேறுத்துறையில் இருந்தாலும் எல்லோருமே வாழப் பிறந்தவர்கள். ஆகவே சிறப்பாக வாழ்வதற்கு ஞானம் வேண்டும். அதனை வாழ்க்கை ஞானம் எனலாம். வாழ்வது ஒரு கலை.
    எதற்காகப் பிறந்தோம்?
    கடைசியாக எங்கே செல்ல இருக்கிறோம்?
    ஏன் துன்பம் வருகின்றது?
    வந்த துன்பத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?
    துன்பமில்லாமல் வாழ முடியாதா?
    ஆகிய வினாக்களுக்குத் தெளிவான விடைகள் தேவை.
    பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்டக் காலத்தில் துன்பமில்லாமல் இன்பமாக வாழ்ந்து பூர்வீகச்சொத்தான அமைதியை அனுபவிக்க அறிவிற்கு வேண்டியத் தெளிவுதான் வாழ்க்கை ஞானம் எனலாம்.
    அதற்கு, “நான் நான்” எனக்கூறிக்கொண்டிருக்கும் அறிவு தனது இருப்பிடத்தை, அதாவது தனது மூலத்தை அறிந்து கொள்ள வேண்டும். மீண்டும் தன் மூலத்தோடு இணைத்துக் கொண்டால் இன்புறலாம், பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்கலாம். அறிவு தன்னை அறிந்து கொள்ளும்போது தெளிவு கிடைக்கின்றது. அந்தத் தெளிவினை ஞானம் என்கிறார் மகரிஷி அவர்கள். அந்நிலை எய்திய அறிவு முழுமை பெற்ற அறிவாகின்றது.
    அறிவு தன்னை அறிந்து கொள்ளும் தெளிவினால் வாழ்க்கையின் எதார்த்தத்தை அறிந்து வாழ முற்படுவான் மனிதன். நிலையாமையை அறிந்து கொள்வதும் ஞானம் தான். மனிதன் இப்போது தன்னிடம் உள்ள குற்றங்குறைகளை அப்படியே வைத்துக் கொண்டு ஞானம் பெற முடியாது. தெளிவாகிய ஞானம் பெறுவதற்குப் பல பிறவிகளாகத் தன்னிடம் பழக்கத்தால் ஏற்பட்டுள்ள குறைகளை அறிய வேண்டும். அந்த குறைகளை அறியும் நிலைக்கு வந்த மனிதன் தன்னை திருத்திக் கொண்டு வாழ முற்படுவான்.
    மனிதனிடம் உள்ள குறைகள் என்னென்ன?
    1. தீய எண்ணங்கள்,
    2. தேவையில்லாத ஆசைகள்,
    3. சினங் கொள்வது,
    4. கவலையுறுதல் மற்றும்
    5. தான் யார் என உணராமை ஆகியவைகளாகும்.
    பொதுவாக, ஞானவானைத் தவிர, தன்முனைப்பு இல்லாத மனிதர்கள் கிடையாது. ஆகவே தன் குறையை அக்கறையோடு எடுத்துப் பிறர் சொன்னாலும் அதனை தன்முனைப்பு கொண்ட மனம் ஏற்க மறுக்கும். சரி தானாகவாவது குறைகளைக் கண்டுபிடிக்குமா அறிவு என்றால்
    அங்கே இரண்டு காரணிகள் குறுக்கிடுகின்றன .
    ஒன்று பரிணாமக் கசடுகளால் வந்த அறிவின் குறைபாடு. அந்த ஒன்றும் மீண்டும் மூன்றாக பரிணமிக்கின்றது. அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயம் ஆகியன.
    அறியாமை இருந்தால் தன் குறையை எப்போதுமே கண்டுபிடிக்க இயலாது. குறைகள் இருந்தால் அங்கே அதன் விளைவுகள் துன்பங்கள்தான். அறியாமலோ அல்லது அறிந்தோ செய்தாலும் இரண்டிற்கு அதற்குரிய விளைவுகள் உண்டு. சூடான பாத்திரத்தை, அறியாது குழந்தை தொட்டாலும் சரி அல்லது தாய் தொட்டாலும் விளைவு சுடும். விளைவைத் தெரிந்தோ அல்லது தெரியாது செய்தாலும் செயலுக்கேற்ற விளைவு நிச்சயம் உண்டு. அங்கே தாய் சூடானப் பாத்திரத்தைக் குழந்தை தொடாதவாறு எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும். தாயின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் தான் குழந்தை சூடான பாத்திரத்தை தொட்டு சூட்டினால் வந்த புண்ணை அனுபவிக்கின்றது. குழந்தையும் அனுபவிக்கின்றது. தாய் அதைவிட அதிகமான துன்பம் அனுபவிக்கிறாள். விளைவை அறிந்து செயல் செய்தாலும்(கற்றார்) அல்லது விளைவை அறியாது(கல்லார்) செயல் செய்தாலும் விளைவு உண்டு என்பதனை ஒரு கவியில் மகரிஷி அவர்கள் கூறும் வரிகளை நினைவில் கொள்வோம்.

    “கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
    காணும் இன்ப துன்பமவன்” . . . . . என்கிறார் மகரிஷி அவர்கள்.

    மற்றொரு காரணி தனக்குத் தானே தன்முனைப்பு. அதாவது தன்னுடைய குறைகள் தனக்குத் தெரிய வந்தாலும் அதனைத் தானே ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனம். இது அநேகருடைய வாழ்க்கையில் அன்றாட நிகழ்வாகவே இருக்கலாம். மனமே குற்றவாளி. மனமே வழக்குரைஞர், மனமே நீதிபதி. மூன்று வேடங்கள் எடுக்க வேண்டியுள்ளது மனம். ஆகவே மனம் உறுதியாக இருந்து மனம் போன போக்கெல்லாம் போகமலிருக்க வேண்டும். எனவேதான் பாரதியார் திண்ணிய(உறுதியான) நெஞ்சம் வேண்டும் என இறைவியைக் கேட்கச் சொல்கிறார். இந்நிலையில் மனிதன் தன் குறைகளை அறிவது என்பது ஞான வாயில் எனலாம். அதனால் தான் மனவளக்கலையில், ஞானக்கோயிலுக்கான முதல் படியாகத் தன்குறைகளைத் தானே அறிந்து கொண்டு திருத்திக் கொள்ளும் தற்சோதனை எனும் பயிற்சி அகத்தவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    தன்னிடமுள்ளக் குறைகளை அறிவது ஞானபீடத்திற்கு செல்லும் வாசல். ஆகவேதான் மகாத்மா காந்தி குறைகளை அறிவதே ஞானம் என்கிறார். தன்னுடைய குறைகளை அறிபவன் தன்னைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுத்துள்ளான். அவ்வாறு முடிவு எடுத்தவன் தன்னை தினந்தோறும் பல்வகைகளிலும் திருத்திக் கொள்வதற்கு, அறிவினரைச் சேர்ந்தும், அவர்களை கனவிலும், நனவிலும் கண்டும், அறிவின் மேம்பாட்டிற்கு அறிவினரின் அறநூல்களைச் சிரத்தையுடன் படிப்பதும், சத்சங்கத்தில் கலந்து கொள்வதில் இன்பம் இருப்பதை அறிந்து சத்சங்கத்தில் கலந்து கொண்டும் ஞானத்தைப் பெறுக்கி ஞானபீடத்தை அடைவான்.
    மனிதனின் செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை தருவது இயற்கையின் நியதியாக உள்ளதால், இதனைக் கவனத்தில் கொண்டு நல்ல விளைவுகளையே விரும்பும் மனிதன் தன் குறைகளை அறிந்து கொண்டு தன்னைத் திருத்திக் கொண்டு ஞானஒளியில் தானும் பிரகாசித்து, தான் வாழும் சமுதாயத்தையும் பிரகாசிக்க வைப்பதற்கு எல்லாம் வல்ல இறையருளும், அறிவில் அறிவாய் நிலைத்து அறத்தை வகுத்து அவ்வாறே வாழ்ந்து காட்டியவர்களின் அறிவாற்றலும் துணை நிற்குமாக. முற்றும்.
    அடுத்த அறிவிற்கு விருந்தில் (26-06-2016-ஞாயிறு) சந்திப்போம்.

    வாழ்க வளமுடன்.
     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-187

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    20-06-2016 – திங்கள்

    இயற்கையின்/இறையின் அருள் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும் 5/5

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

    FFC-199

                                          19-06-2015- ஞாயிறு

    FFC-199-SUB TITLE-

    இரண்டு வாரங்களாக, இறை, நீதி, இறைநீதி, கூர்தல், அறம், கூர்தலறம் என்றால் என்ன, ஏன் அவ்வாறு பெயரிடப்பட்டது என்றும், பரிபாலனம், கருமையம், அதன் பாலங்கள் பற்றியும் சிந்தித்து வருகிறோம். நான்காவதாகிய தனிமனிதனுக்கும் தெய்வத்திற்கும் இடையே உள்ள பாலத்தைப் பற்றியும் சிந்தித்து வருகிறோம். கருமையப் பதிவுகளுக்கு ஏற்ப குரு கிடைப்பார் என்பதனை அறிந்து கொண்டோம். பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறியுள்ளது போல், ஆயிரத்தில் ஒருவர் இறையைத் தேடுகிறார்கள், அவ்வாறு தேடியவர்களில் யாரோ ஒருவா்தான் இறை உணர்வு பெறுகின்றனா் என்று கூறுவதனையும் அறிந்து கொண்டோம். அதற்கானக் காரணம், அவரவர்களின் கருமையப் பதிவுகளே என்று அறிந்தோம். இன்றைய விருந்தில், முன்வினையை வென்று, முக்தி அடையமுடியும் என்று அவ்வையார் கூறுவதையும், குருகிடைத்தாலும் சீடர்களின் ஆன்மீக முன்னேற்றம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மூன்று வகையில் உள்ளது என்பது பற்றியும் அறிய இருக்கிறோம்.

    அவ்வையாரும் ஞானத்தை பெறுதல் மிக அரிது என்று கூறுகின்றார்.

    “அரிதரிது! மானிடர் ஆதல் அரிது!
    ……………………………………………………………………………………
    …………………………………………………………………………………
    ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது”. என்கிறார்.

    மனிதராகப் பிறப்பது அரிது என்றும், அப்படியே கூன், குருடு, செவிடு நீங்கி மனிதராகப் பிறந்தாலும் ஞானத்தை விரும்புதல் அரிது என்று மனிதவாழ்க்கையின் எதார்த்தத்தை எடுத்து இயம்புகிறார். மனித வாழ்வின் எதார்த்தம் அவ்வாறாக இருந்தாலும், அதனை எடுத்துக் கூறி ‘அப்படியே இருந்து விடுங்கள்’ என்று கூறவில்லை. ‘நல்வழியில்’ அவ்வையாரே கூறும் உறுதியினைக் கவனிப்போம்.

    “வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
    அனைத்தாய் நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக்
    கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
    விண்ணுறுவார்க்[கு] இல்லை விதி.”

    பொருள்: முந்தைய பிறவிகளில் செய்த தீயசெயல்களின் விளைவை(பயனை) வெல்வதற்கு, வேதம், மற்றும் அதுபோன்ற நூல்களையும் கற்பதனால் பயனில்லை. “எனினும் கவலை கொள்ளாதே!” என்கிறாள் அவ்வைப்பாட்டி. மெய்யாகிய முக்தி நெறி நிற்பவருக்கு அவர் நினைப்பதுபோல் நடக்குமேயன்றி கவலை தரக்கூடியது ஒன்றும் இல்லை. பிறவிப் பயனை அடைய விதி என்று இல்லை என்கிறார் அவ்வையார். ஆர்வமும் முயற்சியும்தான் வேண்டும் என்கிறார் அவ்வையார். நெறியில்லாமல் முக்தி அடைய முடியாது. முக்தி நெறி அவசியம். முக்தி என்பது என்ன? “அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்; அறிவு முழுமை அது முக்தி” என்கின்ற திருவேதாத்திரிய மந்திரம் 2 ன்படி அவன் நாம் ஒன்றாய் அறிந்த போது அறிவுமுழுமை அடைவதே முக்தி.

    அறிவுமுழுமை அடைய, முந்தைய வினையும் நீங்க வேண்டும். இப்பிறவியின் வினைகள் யாவும் நல்ல வினைகளாகவே இருக்க வேண்டும். அதற்கு நெறி நின்று வாழ வேண்டும். ஒழுக்க நெறி, அறநெறி என்கிறோம். நெறி என்பது என்ன? மனித ஒழுக்கத்துக்காக மேற்கொள்ளவேண்டிய முறைகள். நெறி நின்று வாழாமையால் வந்துள்ள முந்தைய தலைமுறையின் வினையான முன்வினையை வெல்ல வேண்டுமென்றால் இப்பிறவியில் நெறியுடன் வாழ்ந்தே ஆக வேண்டும். கூடுதல் கவனத்துடன் நெறியுடன் வாழ்ந்தால் முன்வினை தீர்ந்து முக்திக்கு வழிவகுக்கும். அந்நிலையில்தான் ‘நினைப்பதுபோல் நடக்கும். கவலைத் தரக்கூடியது ஏதுமில்லை. முன்வினை விதி என்பதும் ஒன்றுமில்லாது போய் விடும்’ என்கிறார் அவ்வையார்.

    திருவேதாத்திரியம் கூறுகின்ற information, confirmation, transformation ஆகிய மூன்று நிலைகளில் வேதங்கள் ஆகிய அறநூல்களைப் படிப்பது முதல் இரண்டு நிலைகளின் பயனைமட்டுமே தரும். மூன்றாவது நிலைக்கு வரவேண்டும். பெற்ற தகவலை உறுதிப்படுத்துவதே முடிவாகாது. தான் அதுவாக மாறுவதுதான் முடிவு. வீடுகட்ட உரிய அனுமதியை பெற்று விட்டாலே வீடு கட்டியதாகிவிடுமா? வீடு கட்ட அனுமதி பெற்றபின் வீடுகட்டி முடித்தால்தான் அதனுள் குடி புகுந்து வசிக்க முடியும். ஆகவே இப்பிறவியில், முக்திஅடைய, முந்தைய பிறவிகளில் செய்த செயல்களின் விளைவினை வெல்லவேண்டும். அதனை வேதங்களைப் படிப்பதால் மட்டுமே வெல்ல முடியாது. முக்தி அடையவேண்டும் என்கின்ற வாழ்வின் நோக்கத்தை முடிவு செய்து அதற்கான நெறியுடன் வாழ்ந்தால் மட்டுமே நினைப்பது நடக்கும். எனவே கவலை தரக்கூடியது ஒன்றுமில்லை. கவலைப்பட வேண்டாம் என்கிறார் அவ்வையார்.
    புலன்களாகிய பொறியின்(trap) வாயில் அகப்பட்டுக் கொண்டு இன்பதுன்ப சம்சாரக்கடலில் மூழ்கியிருப்பதால் புலன்களிருந்து விடுதலை அடைந்து ஞானம் பெறுவது என்பது அரிதாக உள்ளது சமுதாயத்தில். கருமைய தீயப்பதிவுகளே ஞானம் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றன. நெறி நின்று வாழ்தல் கருமையப்பதிவுகள் தூய்மையடைந்து முக்திக்கு வழிவகுக்கும்.

    அறியாமையை நீக்கக்கூடிய குரு கிடைத்தவர்களில் மூன்று தரப்பினர்கள் இருப்பர்.

    1) பலர் குரு கிடைத்தும், பிறகு குருவையே மறந்துவிடுபவர்கள். இவர்கள் தற்செயலாகக் குரு கிடைக்கப்பெற்றவர்களாவார்கள். குருவைப்பற்றி பிறர் சொல்லியதாலே குருவிடம் வந்தவர்கள் இவர்கள். அவர்கள் ‘தெரிந்தோ அல்லது மறைமுகமாகவோ தேடல் என்கின்ற விழைவுப் பதிவு’ கருமையத்தில் பெற்றில்லாதவர்கள். அதனால் தக்க குரு கிடைத்தும் குருகூறும் வழிப்படி நடக்க முடியாமல் போய் விடுகின்றனர். தெரிந்தோ அல்லது மறைமுகமாகவோ ‘தேடல்’ என்கின்ற விழைவுப் பதிவு கருமையத்தில் இருப்பவர்களுக்கு பிறர் சொல்லி குருவிடம் வந்தாலும், அவர்களிலும் பலர் சில நாட்கள் கழித்து குருகூறும் வழியில் நடக்க முடியாமல் போய் விடுகின்றனர். இதுவும் கருமையப்பதிவின் பிரதிபலிப்பேயாகும்.

    2) மற்றவர்களில் சிலர் குருவை வாழ்நாள் முழுவதும் மறக்காமல், தொடர்ந்தாலும் அறியாமையை நீக்குவதில் வெற்றி பெற முடிவதில்லை. காரணம் அவா்களின் கருமையப்பதிவுகளின் அழுத்தத்தால், தளராவிடாமுயற்சி செய்ய முடிவதில்லை.

    3) ஒரு சிலரே அறியாமையை நீக்குவதில் மிகுந்த உள்ளார்வம் (மனதின் மறுமுனையான உள்ளமே-இறையே ஆர்வம் கொண்டு) கொண்டு வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்தி அறியாமையை நீக்கி அறிவில் மாற்றம் காண்பவர்கள். அவர்களே குருவை நம்பி, மதித்து ஒழுகுபவர்கள். ஆதலால் அவர்களை, தப்பாமல் குருவின் உயர்வு தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை எய்தச்செய்கின்றது.

    குருவருள் இன்றேல் திருவருள் இல்லை என்பதால் தக்க குரு கிடைப்பதை நிர்ணயம் செய்வது கருமையப்பதிவுகளே.

    அதுமட்டுமல்லாமல் தன்னிலை உணர்ந்து இறையால் குருவாக்கப்பட்டவரின் குடும்பத்திலேயேகூட அவருடன் பிறந்த உடன் பிறப்புகள் அனைவருக்குமே தன்னிலை உணர்கின்ற பாக்கியமும், புண்ணியமும் கிட்டுவதில்லை. இதெல்லாம் எதனைக் குறிக்கின்றது?

    ஆன்மீக நாட்டம் கொள்வது,
    இறைத் தேடல்,
    ஆன்மீகத்தில் தெளிவு பெற்று உச்ச நிலை அடைந்து, இறையே அவா்களை இறைத்தூதுவரான குருவாக்குவது என்பதெல்லாம்
    அவரவர் கருமையப் பதிவுகளைப் பொருத்துள்ளது.

    ஆக, கருமைய பதிவுகளுக்கு ஏற்ப இன்ப விளைவுகளல்லாது துன்ப விளைவுகளையும் தருவதற்கு மேல்கூறிய நான்கு வழிகள் (channels) காரணமாக அமைவதால், அந்நான்கு வழிகள் வாயிலாக இன்ப விளைவுகளையோ பேரின்ப விளைவுகளையோ தருவதற்கு அந்த வழிகளில் இனிமை காக்கப்படல் வேண்டும்.

    இன்பம் வந்தால் அதனை தக்கவைத்துக் கொண்டு பேரின்பமாக வளர்த்துக் கொள்ளவும், துன்பம் வந்தால் அதனை போக்கி இன்பமாக்கி, மேலும் பேரின்பமாக்கவும் ஆறாம் அறிவுடைய ஒவ்வொரு மனிதனும் அறிந்திருக்க வேண்டும்.

    எனவே நான்கு கருமையப்பாலங்கள் வழியாகவும் இன்பத்தையே பெற்று யோக வாழ்வு வாழத் தகுதியினைப் பெறுவதற்கு யோகம் பயில வேண்டும். யோகம் என்பது என்ன? ‘யோகம்’ என்கின்ற சொல்லை பயன்படுத்தாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஏனெனில் ஒருமனிதர் வசதியாகவும், அனைத்துச் செல்வச் செழிப்புடனும் இருந்தால் அவரை யோகக்காரகர் என்கிறோம்.
    யோகம் என்பதற்கு இரண்டுவிதமான பொருள் இருக்கின்றது. இரு பொருள் போல் தெரிந்தாலும் அது ஒருபொருளே. காரணம் என்னவென்றால், இரு பொருட்களிலும், இறுதி விளைவாக குறிப்பிடப்படுவது துன்பமற்ற நிலை ஒன்றையே. நல்லசெயல்களின் நல்விளைவுகளே யோகம் எனப்படுகின்றது. இருப்பினும் அந்த யோகம் என்பதற்கான இருபொருட்கள் என்ன?
    1) அதிர்ஷ்டம், good luck. உதாரணம்:–படிப்பை முடித்து வேலைக்காகக் காத்திருப்பவர்கள் பலர் உள்ள நிலையில், படித்தவுடன் நல்ல வேலை கிடைத்தால், அதனை யோகத்துடன் இணைத்து அவனுடைய யோகம் அவனுக்கு படிப்பை முடித்தவுடனே நல்ல வேலை கிடைத்தது என்பார்கள்.

    2) யோகத்திற்கான மற்றொரு பொருள் — மனத்தை ஒரு நிலைப்படுத்திச் செய்யும் ஆழ்ந்த தியானம், மற்றும் யோகப்பயிற்சிகள் (yoga).
    ஜோதிடர்கள் பலன் சொல்லும்போது ஒரு சில ஜாதகங்களைப் பார்த்த உடன் முதலில் சொல்வது ‘இந்த ஜாதகம் யோக ஜாதகம், இந்த ஜாதகருக்கு எல்லா யோகங்களும் உள்ளது’ என்பர். ஜோதிடம் என்பதே கருமையப்பதிவுகளை ஓரளவிற்குக் காட்டும் அட்டவணை தானே? (Chart). அப்படியிருக்கும் போது ‘யோக ஜாதகம்’ என்றாலே நல்லதைக் கொடுக்கும் என்பதால், அந்த நல்லதைக் கொடுக்கும் பதிவுகள் அவரது கருமையத்தில் உள்ளது என்றுதானே அர்த்தம்?!
    யோகம் என்பது உலகியல் மற்றும் ஆன்மீக வாழ்க்கைக்கு நல்லதையே கொடுக்கும். எனவே யோகம் பயில வேண்டும். யோகத்தின் வழியாக உடல்நலம், மனவளம் பெற்று பிறவிப்பயனை எய்துதல் வேண்டும். வேலை கிடைப்பது, செல்வம் சேர்ப்பது என்பதெல்லாம் யோகமாக இருந்தாலும், இவைகளெல்லாம் தற்காலிகமானதே. நிரந்தர யோகம் என்பது பிறந்த நோக்கத்தை அறிதலும், முடிவாக அதனைத் தள்ளிப்போடாமல், அறிந்த பிறவியிலேயே அதனை அடைவதேயாகும். யோகத்தினால் கருமையப் பதிவுகள் தூய்மை அடையும். யோகத்தைப் பற்றி திருவேதாத்திரியம் கூறுவதென்ன? ‘யோகம்’ என்பதற்கு ‘இனிமை காத்தல்’ என்று பொருள். யோகம் நான்கு நெறிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
    1) உடலுக்கும் உயிருக்கும், உயிருக்கும் மனதிற்கும் இனிமை காக்க வேண்டும்.
    2) தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இனிமை காக்க வேண்டும்.
    3) தனக்கும் கோள்களிலிருந்து வரும் காந்த அலைகளை ஒன்று படுத்துவதில் இனிமைக் காக்க வேண்டும்.
    4) தனக்கும் இயற்கைக்கும்/இறைக்கும் இடையே இனிமை காத்திடல் வேண்டும்.
    கருமையப் பதிவுகளின் நான்கு பாலங்கள் வழியாக இன்ப துன்ப விளைவுகள் வருவதால் துன்ப விளைவுகளைத்தாங்கவும், போக்கவும், இன்ப விளைவுகளை தக்க வைத்துக்கொண்டு பேரின்பவிளைவினை அடையவும் நான்கு முறைகளில் இனிமை காக்க யோகம் பயில வேண்டும். ஒருகாலத்தில் யோகம் பலருக்கு எட்டாக்கனியாக இருந்தது. இப்போது சாதாரண மனிதனும் யோகம் பயிலுகின்றவகையில் யோகக்கலையானது, ‘மனவளக்கலை’ (SKY) என்கின்ற பெயரில் விரைவாக வளர்ந்து வருகின்றது.
    குருவை பூதவுடலில் பார்க்க முடியவில்லையே என்கின்ற ஏக்கம் தேவையில்லை. திருவள்ளுவரை, திருமூலரை, தாயுமானவரை மானசீகமாகவல்லவா குருவாக ஏற்றுக்கொண்டார் நம் குருதேவர் வேதாத்திரி மஹரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள் அருளியுள்ள அறநூல்கள் எல்லாம் நம்மிடையே பேசிக் கொண்டிருக்கின்றன. மகரிஷி அவர்கள் அருளியுள்ள அவரது வாழ்க்கை விளக்கம் என்கின்ற நூலை பலமுறை வாசித்துப் பயன் பெறவும். பிறவிக்கடலை எவ்வாறு நீந்தமுடியும் என்று மகரிஷி அவர்கள் உறுதி அளித்துள்ளதை நினைவில் கொண்டு செயலாற்றுவதற்கு, மெய்விளக்கம், பிறவிக்கடல் நீந்தலாம் என்கின்ற தலைப்பில் அருளியுள்ள பாடல்களை மீண்டும் ஒரு முறை நினைவுகூர்வோம்.

    மெய்விளக்கம்(02-07-1980)

    நானெனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே;
         நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்;
    ஊனுருவில் இன்பதுன்ப உணர்வுகளில், எல்லை
            உண்டாக்கி, வரையறுத்து வேறுபடுகின்றோம்;                                                                                  

    ஏனெங்கே? எப்போது? எவ்வளவு? எவ்வாறு?
          என்னும் வினாக்கள் ஊடே இழைந்து ஆழ்ந்து செல்ல,                           வானறிவோம்; உயிர் விளங்கும் வரைகடந்து நிற்கும்
          வழிதெரியும்; வளம் பெருவோம்; வாழ்வுநிறை வாகும்.”

    ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    மற்றுமொரு திருவேதாத்திரியத்தின் பாடலையும் நினைவு கூர்ந்து மகிழ்வோம்.

    பிறவிக்கடல் நீந்தலாம்(26-10-1994)

    பல ஆயிரம் பிறவி எடுத்தேற்றப் பாவப்
       பதிவுகளை, ஒருபிறவிக் காலத்துள் மாற்றி,                                                              நலமடைந்து மனிதனாகித் தெய்வமாகி உய்ய,
        நல்வாய்ப்பு ஆற்றல்இவை நமக்களித்து, இயற்கை                                               நிலஉலகில் மனிதரிடம் அமைந்துளன, உண்மை;
        நேர்முகமாய் கருமையத் தூய்மைஉணர்ந் தாற்றிப்
     பலனடைய அகத்தவத்தால் பரமுணர்ந்து, அறத்தின்
         பாதையிலே ஒத்துதவி வாழும்முறை போதும்.

    ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வாழ்வியலில் யோகமும் முதன்மைப் பங்கு வகிக்க வேண்டும்.  வாழ்க மனவளக்கலை யோகா. வளர்க மனவளக்கலை யோகா. இத்துடன் இச்சிந்தனை முடிவுற்றது. அடுத்த விருந்தில் வேறொரு தலைப்பை எடுத்துக் கொள்வோம். தொடரும்  22-06-2016-புதன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                           வளர்க அறிவுச் செல்வம்.

     

    Loading