admin

Author Archives

  • சிந்திக்க வினாக்கள்-326-எண்ணமும் பரிணாமமும்

     

    வாழ்க மனித அறிவு!                                                                 வளர்க மனித அறிவு!!

     

    lotus

    சிந்திக்க வினாக்கள்-326

    எண்ணமும் பரிணாமமும்

                                                                                           24-03-2022-வியாழன்                            

    வாழ்க வளமுடன்!

    பிரதான வினா(Main Question): 326 

    எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்பது எப்படி?

    துணை வினாக்கள் (Sub questions):

    1) பரிணாமம் அதாவது தன்மாற்றம் என்பது என்ன?

    2) எண்ணம் என்பது என்ன?

    3) எண்ணத்திற்கும்  பரிணாமத்திற்கும் தொடர்பு இருக்க முடியுமா?

    4) எதற்காக இயற்கை இரண்டிற்கும்  தொடர்பு வைத்துள்ளது?  இயற்கை எண்ணத்திற்கும் பரிணாமத்திற்கும் தொடர்பு வைத்துள்ளது என்று சொல்வதைவிட ,  எண்ணத்திற்கும் பரிணாமத்திற்கும் தொடர்பு இயற்கையிலேயே  உள்ளது. அவ்வாறெனில்   அது  எதற்காக என்று மனித அறிவு கேட்கின்றது?

    5) பரிணாமத்திற்கு  வாகனம்    என்றால் என்ன பொருள்?

    6) பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை என்கிறார்களே, அது சரியா?

    7) பரிணாமத்திற்கு பூர்த்தியாதல் என்பது உண்டா?

    8) பரிணாமத் தோட்டத்தில் கடைசியாக பூத்த மலர் மனிதன் என்கின்றபோது பரிணாமம் பூர்த்தியாகி விட்டதுதானே?!

    9) இயற்கையில் பரிணாமம் பூர்த்தியாக வேண்டுமெனில் எந்த எத்திசையில்(direction) பூர்த்தியாகும்?

    10)  அதனால் மனிதகுலத்திற்கு என்ன நன்மை ஏற்பட  உள்ளது?

    11) பரிணாமத்திற்கு நம் எண்ணம் அவசியமா?

    12) அவசியமெனில் நாம் எவ்வாறு  பரிணாமத்திற்கு உதவலாம்? 

    13) பரிணாமத்திற்கு உதவி புரிவது என்பது இயற்கைக்கே/இறைக்கே துணைபுரிவதாகுமன்றோ?! 

    14) இயற்கையின்/இறையின்  மனிதஇன பரிணாமத்தொழிற்சாலையில்  மனிதனும் பங்குதாரர்தானே(partner)!? இயற்கை, இறை,  மனிதன் வேறா என்ன? சொல்லுங்களேன்!

    15) பரிணாமத்திற்கும் இயல்பூக்கத்திற்கும் தொடர்பு உள்ளதா?  உள்ளது எனில் எவ்வாறு தொடர்பு உள்ளது?

    16) இயல்பூக்கம் தொடர்ந்து நடைபெற்று இயல்பு முழுவதுமாக வெளிப்பட   மனித   எண்ணம் எவ்வாறு துணையாக இருக்கலாம்? 

    17)  “Fraction demands Totality supplies” என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை இப்போது இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்குமன்றோ?!  வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்!!

    18) மேலும் ஏதாவது வினாக்கள் உங்களுள் இருந்தால் அவ்வினாக்களையும் எழுப்பி ‌நீங்களே சிந்திக்கலாமே!

     

    வாழ்க அறிவுச் செல்வம்!                                    வளர்க அறிவுச்   செல்வம்!!


     

     

    Loading

  • FFC-310- வேதாத்திரியார் – ஓர் அகராதி- 4/5

    வாழ்க மனித அறிவு!                      வளர்க மனித அறிவு!!

    lotus

    வேதாத்திரியார் – ஓர் அகராதி– 4/5

                                FFC-310           

    23-03-2018-புதன்

    உ.ச.ஆ. 23-03-37

    gurudevar

    வாழ்க வளமுடன்!

                சென்ற மூன்று  சத்சங்கங்களில் வேதாத்திரியார் ஓர் அகராதி என்பது பற்றி சிந்தித்து வருகிறோம்.  இன்றைய சத்சங்கத்திலும்  அச்சிந்தனையைத் தொடர்கிறோம்.  இதுவரை சிந்தித்ததை நினைவு படுத்திக் கொள்வோம்.

     முதல் சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்,

    1. அகராதி என்றால் என்ன,
    2. வேதாத்திரியார் ஓர் அகராதி என்பதில் மனவளக்கலைஞர்களுக்கு ஏற்படும் ஆனந்தம்,
    3. ஏன் சான்றோர்களைத் துணை கொள்ள வேண்டும்,
    4. சான்றோரின் துணை பண்பேற்றத்திற்கு அவசியமாக உள்ளது,
    5. அவ்வாறு அவசியமாக  இருப்பதிலும்  இயல்பூக்கம் செயல்படுவது,
    6. சான்றோரின் துணை இன்பத்திலும் இன்பம் அளிப்பது,
    7. சான்றோரின் துணை சாலச்சிறந்த வழிபாடு,
    8. வாழ்வாங்கு வாழவேண்டும் என்கின்ற சங்கல்பத்திற்கு  உறுதியும் அளித்துள்ளது பற்றியும்,

      இரண்டாவது சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்,   

    1. வாழ வேண்டிய முறை,
    2. அறத்தின் தோற்றம்,
    3. அறத்தின் மூன்று கண்கள்,
    4. ‘வாழ்வாங்கு’ என்றால் என்ன?
    5. தன்னை அறியாத அறியாமை,
    6. நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்,
    7. வாழும் நிலை அறிந்து தொண்டாற்றி இன்பம் காண்பது,
    8. திருமணப்பந்தம் எதற்காக,
    9. இருபதாம் நூற்றாண்டில் விளக்கப்பட்ட பிறப்பின் விதி,
    10. இந்த புரிதலெல்லாம் வேதாத்திரி வாழ்வியல் அகராதியிலிருந்து கிடைப்பது பற்றியும்சிந்தித்து வந்துள்ளோம் .

     மூன்றாவது சத்சங்க அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில், 

    1. ஏன் விரும்பி யாரும் பிறப்பதில்லை,
    2. ஆன்மாஞானம் பெறுவது,
    3. வாழ்வதில் இரண்டு வகை,
    4. மயக்க வாழ்வு பற்றி,
    5. சுய சிந்தனையில் ஓங்குவது,
    6. திருவள்ளுவரின் எச்சரிக்கை,  
    7. அறிவு-வழி வாழ்க்கை,
    8. புகழொடு தோன்றுதல்,
    9. அகம் பூரிப்படைதல்,
    10. அன்று வேதாத்திரி வாழ்வியல்  அகராதி இல்லை,
    11. வாழ்வாங்கு வாழ்வதனை வேதாத்திரிய அகராதி தெரிவிப்பது,
    12. பண்பேற்றம் பெறுவதில் சுயநலமில்லை,
    13. அகராதியின் வரையறைக்கேற்ப வேதாத்திரியம் பொருந்துதல்,
    14. வேதாத்திரியம் என்பது என்ன, 
    15. அறிய வேண்டியதெல்லாம் இருக்கின்றது திருவேதாத்திரியத்தில்,
    16. முயற்சியின் அளவே ஞான விளைவு,
    17. ஒருவர் வாழ்வதைப் பொருத்து வையகம் பயன் பெறுவது அமைவது,
    18. இருபத்தாறு  நூற்றாண்களுக்குப் பின்னர் புத்தர் எண்ணியவாறு வாழ்ந்த ஆன்மா,

     சிந்தனை வளம் பெருகும்; அகம் மகிழுங்களேன்!

    வ்வொரு துணைத் தலைப்புமே விரிவாக அறிய வேண்டிய  செய்தியை சுருக்கமாகத் தெரிவிக்கின்றன. வேதாத்திரி ஓர் அகராதி என்கின்ற தலைப்பில், இதுவரை மொத்தம் 36(8+10+18) துணைத்தலைப்புகளில்(subheadings) விருந்து(rich feasts) படைத்து அருந்தியிருக்கிறோம்.  அவற்றை நினைவு படுத்திக்கொள்கிறோம். ஒவ்வொரு துணைத்தலைப்புகளுமே ஒரு செய்தியினை தெரிவிக்கின்றதாக அமைந்துள்ளதல்லவா?   சிந்தனைக்கு எடுத்துக் கொண்டுள்ள ஒவ்வொரு தலைப்பும் எவ்வாறு ‘வேதாத்திரியார் ஓர் அகராதி’ என்கின்ற முதன்மை தலைப்போடு(Main Heading) தொடர்பு கொண்டுள்ளது என அறியலாம்.  (விரும்பினால்  ஏதேனும் ஒன்றிரண்டு துணைத்தலைப்புகளை எடுத்துக் கொண்டு சிறு சிறு கட்டுரைகள் எழுதி அகம் மகிழுங்களேன். சிந்தனை வளம் பெருகும்)

          36 துணைத்தலைப்புகளையும்  நினைவில் இருத்திக்கொண்டு இன்றைய சத்சங்கத்தில் விருந்து படைத்து அருந்துவோம்.  நம் குருபிரான் துணையும், வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபினில் அவதரித்த  அனைத்து அருளாளர்களின் பார்வையுடன் இன்றைய சத்சங்கத்தினை தொடங்குவோம்.    அந்த ஒரே பேரறிவுதானே பல அருளார்களாக வெவ்வேறு பரிணாம/தன்மாற்ற காலகட்டத்தில் மலர்ந்துள்ளது என்பதனை நாம் அறிவோம்.

    வேதாத்திரிய அறிவியல் அகராதியினைப் புரட்டுவோம்:

    கௌதமபுத்தர் அறியாமை, அறிவுடன் வாழ்தல் பற்றி கூறுவதனை ஆழ்ந்து சென்று புரிந்து  கொள்ள இருப்பதால்,  வேதாத்திரிய அகராதிகளுள்  பிரதானமானது அறிவைப்பற்றிக் கூறும்  அறிவியல்(அறிவு+இயல்).   மூளையில் பதிந்துவைத்துள்ள அலமாரியிலிருந்து அகராதியை  எடுத்துக் கொள்வோம். புத்தரின், அபயம் தரும் இந்த அமுதமொழியினை ஏற்கனவே 12-01-2018 அன்று நமது சத்சங்க நிகழ்ச்சியான சிந்திக்க அமுத மொழிகள் பயிற்சிக்காக எடுத்துக் கொண்டோம். (Click here)  அதனை நினைவுபடுத்திக்கொள்வோம்.

    amudhamozhi_38

    “அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.” . . .  புத்தர்.

       பயிற்சிக்கான வினாக்கள் பல இருந்தாலும் அவற்றை  சுருக்கி ஒன்பதாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இத்தருணத்தில் அதற்கும் விடைகாண்போம்.

    கௌதமபுத்தரின் பொன்மொழிகளில் சிந்திக்க வைப்பது என்னென்ன?

    அறியாமை,

    அறிவுடன்,

    வாழ்க்கை,

    நூறு ஆண்டுகள் வாழ்வது,

    ஒரு நாள் வாழ்வது

    ஆகியவை நம்மை சிந்திக்க வைக்கின்றன.

        முதல் மூன்று சொற்களுக்கு பொருள் தெரிந்து விட்டால் ஏன் கௌதமபுத்தர் அறியாமையுடன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேலானது என்று கூறுகின்றார் என்பது விளங்கிவிடும். அறியாமை, அறிவுடன் என்கின்ற வார்த்தைகளுக்கு வேதாத்திரிய அறிவியல் (அறிவு+இயல்) அகராதியிலிருந்தும், வாழ்க்கையைப் பற்றி பொருள் தெரிந்து கொள்வதற்கு வேதாத்திரிய வாழ்வியல் அகராதியிலிருந்தும் பொருள் தெரிந்துகொள்ள வேண்டும்.  புத்தர் காலம் இருபத்தேழு நூற்றாண்டுகள் முந்தையது.  ‘Fraction(அகம்) demands; Totality(முழுமை-இயற்கை-இறை) supplies’ என்கின்ற அடிப்படையைக்கொண்டு இயற்கையின் பரிணாமம் இயங்குவதால்,   பரிணாமம்/தன்மாற்றம் அடைந்துவரும் வளர்ச்சிக்கேற்ப/மலர்ச்சிக்கேற்ப, அதாவது தனது குழந்தைகளிள் அகம் விரும்புவதற்கேற்ப, இயற்கை அன்னை   தனது மறைந்திருக்கும் அருமை, பெருமைகளைக்கொண்ட ஆற்றலை வெளிப்படுத்தி  வருகிறாள்.  அப்படி 1911 இல் மலர்ந்து ஆல்போல் வளர்ந்து வருவதுதான் திருவேதாத்திரியம்.

    புத்தரின் கூற்று சிந்திக்க வைக்கின்றது:  

     புத்தர் அருளியுள்ள அபயம் தருகின்ற அமுதமொழிக்குள் செல்வோம்.  நூறு ஆண்டுகள் அறியாமையுடன் வாழும் வாழ்க்கையை அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையோடு ஒப்பிடுகிறார்.  இந்த ஒப்பீடே  நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கின்றது.  என்ன சிந்திக்க வைக்கின்றது?  எவ்வளவு ஆண்டுகள்  வாழ்ந்தாலும், அறியாமையுடன்   வாழ்வது  வீணே என்பது விளங்குகிறதல்லவா? புத்தரின் இளவலான திருவள்ளுவர் கூறுவதுபோன்று  வாழ்வாங்கு வாழ வேண்டும் என்கின்றது இந்த அமுதமொழி. இச்சிந்தனை அறிவுடன் வாழவேண்டும் என்கின்ற உந்துதலை ஏற்படுத்துகின்றது.   ஆகவே இந்த உந்துதலை பயன்படுத்திக் கொள்ள ‘அறியாமை’, ‘அறிவுடன்’ என்று எவற்றைக் கூறுகிறார் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். கௌதபுத்தரின் அறிவுநிலையில் நின்று அறிந்துகொள்வோம்.  ‘அறியாமை’, ‘அறிவுடன்’ என்பது பற்றி அறிந்து கொள்ளவேண்டுமென்றால், அதற்கு    வேதாத்திரிய அறிவியல் அகராதியின் ஏடுகளைப் புரட்டுவோம்.  அறிவிற்கென பிரத்யேகமாக அமைந்துள்ள அறிவியலை  (Exclusive Science of Consciousness) நாம் வேதாத்திரிய அறிவியல் என்று கூறி மகிழ்கிறோம்.

    அகராதியின்  ஏடுகளிலிருந்து  என்னென்ன அறிந்துகொள்ள வேண்டியிருக்கின்றது?

    1)   அறிவு என்பது என்ன?

    2)   பொதுவாக வறுமை என்றால் என்ன?

    3)   அறிவின் வறுமை என்றால் என்ன?

    4)   ‘வறுமை’ என்கின்ற சொல்லின்  பொதுவான பொருளை வைத்துக்கொண்டு, வறுமை அறிவுடன் சேறும்போது அறிவின் நிலை என்ன என்று ஆராய்ந்து,  ‘அறிவின் வறுமை’ என்ன என்று வேதாத்திரிய அறிவியல் அகராதி தெரிவிப்பதோடு ஒப்பீடு செய்து நாம் அறிவின் வறுமையைப்பற்றி சிந்தித்தது  சரியாக உள்ளதா என அறிந்துகொள்வோம்.

    1) அறிவு என்பது என்ன?

    இப்போது அறிவு என்பது என்ன என்று அறிந்துகொள்வோம்.

    கண்களால் காணமுடியாதது அறிவு.

    தன்னையே காணமுடியாதது அறிவு.

    காரணம் அறிவு அரூபமானது.  அதற்கு உருவம் இல்லை. உருவமில்லாததால் அறிவு என்கின்ற ஒன்று இல்லை என்றும் கூறவும் முடியாது.

    பின்னர் எதுதான் அறிவு?  அரூபம் என்பதால் ‘அறிவு என்று ஒன்று இல்லை’ என்று சொல்லிவிடத்தான் முடியுமா?

    உணர்கின்ற ஒன்றினை உயிர் என்கிறோம். உணர்வது என்றால் என்ன?

    உணர்வதன் மூலம் உயிர் புறத்தே உள்ளதனை  அறிந்து கொள்கின்றது.

    உணர்வதன் மூலம் எது அறிந்து கொள்கின்றது? 

    உணர்தலின் மூலம் எது அறிந்துகொள்கின்றது எதுவோ அது அறிவு ஆகும். இதனை முடிவு செய்வதே அறிவுதான்!

    அறிகின்ற காரணத்தால் அது அறிவு என்கின்ற காரணப்பெயரைப் பெறுகின்றது.

    இதுவரை அறிவைப்பற்றி அறிவு இவ்வாறு சிந்தித்திருக்காது?  இப்போது எது  இவ்வாறு சிந்திக்க வைக்கின்றது? வேதாத்திரிய அறிவியல்(அறிவு+இயல்) அகராதி சிந்திக்க வைக்கின்றது.

    ‘உருவமில்லாமலும் இருக்கின்றது’ என்கின்ற கோட்பாடு:

        உருவமில்லாத ஒன்றினை இல்லை என சொல்லிவிடவும் முடியாது என்கின்ற கோட்பாட்டினையும் அறிந்து கொள்ளவேண்டும்.  அறிவைப்பற்றி சிந்திக்கும்போது ‘உருவமிருப்பதுதான் இருப்பது, உருவமில்லாததை  இல்லாதது என்று எப்போதுமே கருதமுடியாது.’ என்று அறிந்துகொண்டோம்.  எப்போதுமே என்றால் ..?? மெய்ப்பொருள் விஷயத்தில் அது பொருந்தாது என்பதுதான் ‘எப்போதுமே’ என்பது.  ஆனால் பொருட்களால் ஆன  உலகில், (உலகியல் வாழ்க்கையில்) ‘உருவமில்லாததை இல்லாதது’ என்றுதான் உலக வழக்கில் சொல்ல முடியும். ஆனால் எவ்வாறு உருவமில்லாமல் இருந்தும் அறிவு, தான் இருப்பதனை ஏற்றுக்கொள்கின்றதோ, அதே ஒப்புவமையில்(analogy),  மெய்ப்பொருளை- ஆதிநிலையை- இறையைத்  தீர்மானம் செய்யும் விஷயத்திலும் ஒன்று மில்லாதது போல் வெட்டவெளி தோன்றினாலும் வெட்வெளியை ‘சாதாரணப் பொருளில் அது  வெளி தான்(empty) என்றுகொள்ளாமல், உறுதிப்பாட்டோடு அந்தவெளி எல்லாம் வல்ல ஆற்றல் மிக்கதுதான் என அறிந்து கொள்ள வேண்டும்.  இதில் இரண்டாவது புரிதலுக்கே இடமில்லை(Second thought).  வெளி ஆற்றல் மிக்கது எனக் கருத்தியலாக புரிந்துகொள்வதில் எள்ளளவும் ஐயம் இருக்க அவசியமில்லை.

       இயற்கையின் ஆதிநிலையான(திருவள்ளுவர் கூறும்) வெட்டவெளியிலிருந்துதானே அறிவு தன் பயணத்தைத் தொடர்ந்திருக்கின்றது.  உயிர்களிடத்தில் உள்ள அறிவு ‘உருவமில்லாது இருந்தாலும் அது இருக்கின்றது’ என ஏற்றுக் கொண்ட அறிவு, வெட்டவெளியைப்பற்றி சிந்திக்கும்போதும் இதே நிலைப்பாட்டைத் தானே எடுக்க வேண்டும். ஆதிநிலையிலேயே அறிவு  இருக்கின்றது. ஆக, ‘உருவமில்லாத, ஆனால் இருக்கின்ற தனிச்சிறப்பினை’ பெற்ற பேரறிவே ஆதிநிலை – வெட்ட வெளி. ஆகவே தான்  ஆதிநிலையான வெட்டவெளிக்கு உருவமில்லாததால், ஒன்றுமில்லாததுபோல் காணப்படுகின்றது.  ஆய்வு செய்ததில் இன்று அறிவைப்பற்றிய சிறப்பான விளக்கத்தினைப் பெற்றுள்ளோம்.

     2) பொதுவாக வறுமை என்றால் என்ன?

       வறுமை  என்கின்ற சொல்லிற்கான பொருள் தெரியும்.  ஆனால் வார்த்தைகளால் எவ்வாறு சொல்வது?  எனவே வறுமை என்கின்ற சொல்லிற்கான பொருள் என்ன என்று பார்ப்போம்.  வறுமை என்பது அடிப்படைப் பொருளாதார வசதி  இல்லாத  நிலை(poverty) என்று பொருள்.  அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, உறைவதற்கு உறைவிடம் ஆகியவற்றை பெறுவதற்குக்கூடப்  பொருள் வசதி இல்லாமை என்று பொருள். வறுமையால் வரும் துன்பங்கள் எண்ணிலடங்கா?  தனிமனிதன் மட்டும் துன்பமடைவதில்லை. அதன் காரணமாக, பிறரும், சமுதாயமும் துன்பங்களைச் சந்திக்க நேரிடுகின்றது.

     3) அறிவின் வறுமை என்றால் என்ன?

        அறிவு, வறுமை(பொதுவான பொருளில்)  என்றால் என்ன என்றும் அறிந்து கொண்டோம்.  அறிவுடன் வறுமை சேர்ந்துவிட்டால் அறிவின் நிலை என்ன என்று அறிந்து கொள்ளவேண்டும். ‘அறிவின் வறுமை’  என்பது இரண்டு சொற்களைக் கொண்ட சொற்றொடர்.  நமக்குத் தெரிந்தவரையில் 1911 வரை இப்படியொரு சொற்றொடர் இதுவரை  அறியப்பட்டதாக தெரியவில்லை. 1911  க்கு பிறகு வேதாத்திரிய அறிவைப்பற்றிய அறிவியல் (அறிவு+ இயல்) அகராதிதான் இச்சொற்றொடரை வெளியிட்டுள்ளது.  இது மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. எனவே நாம் கவனிப்போம்.  அறிவின் வறுமை என்றால் என்ன? வறுமை என்கின்ற சொல்லிற்கான பொருளை  சற்று முன்னர்  நினைவிற்கு கொண்டு வந்துள்ளோம். அதனை நினைவில் கொண்டு அறிவின் வறுமை என்ன  என்பதனை அறிந்து கொள்வோம்.

         வறுமை என்பது அடிப்படைத் தேவைக்குக்கூட, அதாவது வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குகின்ற  பொருளாதாரம் இல்லாத நிலை. அறிவு+வறுமை  அறிவின் வறுமை ஆகின்றது. ஆகவே அறிவோடு வறுமை சேர்வதால் ஏற்படுகின்ற நிலை என்ன? அறிவின் அடிப்படைத் தேவைக்கே வறுமை ஏற்பட்டுவிட்டது என்றாகின்றது. அப்படியானால் அறிவின் அடிப்படைத் தேவை என்பதனை ஆராய வேண்டும்.

     அறிவின் அடிப்படைத் தேவை என்பது என்ன?

         இப்போது அறிவின் அடிப்படைத் தேவை என்றால் என்ன என்று அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.  உயிரினங்களிலே மனித உயிரினம் மிகச்சிறப்புடையது.  எதனால் சிறப்புடையதாகின்றது?  இதனை இயற்கை சொல்லவில்லை.  மனிதன்தான்  கூறுகின்றான். ஆறாம் அறிவு இருப்பதனால் தன்னை சிறப்புடையவன் என்கிறான் மனிதன். உண்மைதான். அத்தகைய சிறப்புடைய ஆறாம் அறிவு வறுமையில் இருந்தால் விளைவு என்ன?  இழப்புதானே! தனக்கும். பிறர்க்கும், அவன் வாழும் சமுதாயத்திற்கும்.!!  ஆறாம் அறிவின் அடிப்படைத் தேவை என்றால் என்ன பொருள்?  ஆறாம் அறிவின் அடிப்படைத் தேவை என்றால் அதனை எவ்வாறு பொருள்கொள்வது?

        ஆறாம் அறிவு எவ்வாறு திகழவேண்டுமோ அவ்வாறு திகழ்வதுதான்  ஆறாம் அறிவின் அடிப்படைத் தேவையாகின்றது.

     எப்போது அறிவு வறுமையில் உள்ளதாகிவிடும்?

                      அறிவு திகழவேண்டிய நிலை உருவாகவில்லை என்றால் அப்போது அறிவு வறுமையில் இருப்பதாகத்தானே கொள்ள முடியும்?!  ஆறாம் அறிவு எவ்வாறு திகழவேண்டும்   எனச் சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இரண்டொழுக்கப் பண்பாடான அன்பும் கருணையும் வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.  அவ்வாறில்லை எனில்  அறிவு வறுமையில் உள்ளதாகத்தானே கொள்ள முடியும்?!  அறிவைப்பற்றி ஆராய்ச்சி செய்துள்ள  அறிவின் அறிவியலாரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவிற்கு வறுமை இருப்பதனைக் கண்டுபிடித்துள்ளார்.  இதற்கு ஏதும் விஞ்ஞான நிரூபணம் தேவையா?  தேவையில்லை.  ஆழ்ந்த பல நாள் தொடர் ஆராய்ச்சியின் முடிவில் அறிவு,  அறிவுபூர்வமாக அறிந்துகொண்டாலே அது அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புதான். அப்படிப் பார்க்கும்போது அறிவின் இரண்டொழுக்கப் பண்பாடான அடிப்படைத்தேவை வெளிப்படவில்லை எனில் அறிவு வறுமையில் உள்ளது என்று அறிவே ஏற்றுக்கொள்கின்றது.

      அறிவின் இரண்டொழுக்கப் பண்பாடான அடிப்படைத்தேவை வெளிப்படாமல் இருப்பதற்குக் காரணத்தை என்ன பெயரிட்டு அழைக்க முடியும்? அதனை அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் என்றுதானே மகரிஷி அவர்களால் சொல்ல முடியும். ஆகவேதான் அறியாமை, அலட்சியம். உணர்ச்சிவயம் ஆகிய மூன்று வகையிலும்  அறிவு வறுமை நிலவுகின்றது என்று கூறுகிறார்  மகரிஷி அவர்கள்.  ‘இந்த மூன்றும் நீங்கிய  நிலையே’ புத்தர் கூறும் ‘அறிவுடன்’ என்பது. இப்போது கௌதமபுத்தர் கூறும் அபயம் தரும் அமுதமொழி விளங்கிவிட்டதல்லவா?  அறியாமையால் தனக்கும், பிறர்க்கும், தான் வாழும் சமுதாயத்திற்கும் சொல்லொனாத்(ஒன்றா, இரண்டா) தீமைகள் வருவதால் அறியாமையுடன் வாழ்பவன் தானும் அவதியுற்று, பிறரையும் அவதியுறச்செய்வதே நடக்கின்றது.  இரு தரப்பினரும் அவதியுறுவது முதலாமவரின் அறியாமைச் செயல்களால் நடக்கின்றது. எப்படி இருந்தாலும், ‘விளைவை அறிந்து தவறு செய்தாலும், விளைவை அறியாது தவறு செய்தாலும்’ விளைவு ஒன்றுதான்.  அறியாமையில் தவறு செய்தாலும் விளைவு உண்டு. இதனைத்தான் ‘கல்லார் கற்றார் செயல்விளைவாய் காணும் இன்பதுன்பமவன்’ என்று இறைவனே துன்பப்படுகிறான் என எடுத்துக் காட்டியுள்ளாரே இறைவணக்கத்தில் முதல் பாடலிலேயே மகரிஷி அவர்கள்.  எனவேதான் நூறு ஆண்டுகள் அறியாமையில் வாழ்வதைவிட அறிவுடன் ஒரு நாள் வாழ்வது மேலானது என்கிறார் கௌதமபுத்தர்.  மற்றொரு சத்சங்கத்தில் அறிவின் வறுமைபற்றி தனியாக ஆராய்வோம். இப்போது ‘வேதாத்திரியம் ஓர் அகராதி’ என்பது  அகராதி  என்பதற்கேற்ப எவ்வாறு பொருந்தி வருகின்றது என்பதற்குள்  செல்வோம்.  அதனை அடுத்த சத்சங்கத்தில்  (27-03-2022 ஞாயிறு)ஆராய்வோம்.  வாழ்க வளமுடன்.

      

    வாழ்க அறிவுச் செல்வம்!           வளர்க அறிவுச்செல்வம்!!


    Loading

  • வேதாத்திரியார் – ஓர் அகராதி-2/? (FFC-308)

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

    lotus

    வேதாத்திரியார் – ஓர் அகராதி -2/5

                                FFC-308           

    18-03-2022-வெள்ளி

    உ.ச.ஆ: 18-03-37

    வாழ்க வளமுடன்!

          சென்ற அறிவிற்கு விருந்தில்,

             அகராதி என்றால் என்ன,

     வேதாத்திரியார் ஓர் அகராதி என்பதில்                   மனவளக்கலைஞர்களுக்கு ஏற்படும் ஆனந்தம்,

       ஏன் சான்றோர்களைத் துணை கொள்ள வேண்டும்,

     சான்றோரின் துணை பண்பேற்றத்திற்கு அவசியமாக உள்ளது,

     அவ்வாறு அவசியமாக  இருப்பதிலும்  இயல்பூக்கம் செயல்படுவது,

        சாலச்சிறந்த வழிபாடு எது என்பனவற்றை எல்லாம்  

         அறிவை விரித்து சிந்தனை ஆற்றி,

    திருவேதாத்திரியத்தால் ஆறாமறிவின் திறனையும் திறமையும் வளர்த்துக் கொண்டு,

      வாழ்வாங்கு வாழவேண்டும் என்கின்ற சங்கல்பத்திற்கு  உறுதியும் அளித்துள்ளோம்.

         இன்று அதன் தொடர்ச்சியாக வாழவேண்டிய முறை என்ன என்பது பற்றி சிந்திக்க ஆரம்பித்து மேலும் என்னவெல்லாம் அறியவேண்டும் என இயற்கையின்/இறையின் சித்தமோ அவற்றை எல்லாம் சிந்திப்போம்.

       வாழ வேண்டிய முறை என்பது என்ன? 

        மீண்டும் இப்போது இல்லறவியலில் இல்வாழ்க்கை எனும் அதிகாரத்தில் உள்ள கடைசிக் குறளை நினைவு படுத்திக்கொள்வோம்.

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்

    தெய்வத்துள் வைக்கப் படும்.        . . . குறள் எண்:50

     பொருள்:

           இவ்வுலகத்திலே வாழவேண்டிய முறைப்படி வாழ்பவன் விண்ணிலுள்ள தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவான் என்கிறார் திருவள்ளுவர்.

        ‘வாழவேண்டிய முறை’ப்படி என்றால் என்ன என்று ஐயம் எழலாம்.  அறநெறிப்படி வாழ்தல் என்பதே வாழ வேண்டிய முறை ஆகும். அடுத்த ஐயம்,‘அறநெறி என்றால் என்ன’,என்பது.  மனிதஇனப் பரிணாமத்தை ஆராய்ச்சி செய்து வரும்போது, அறம் தோன்றிய முதல் நாளைக் கண்டுபிடித்துள்ளார்  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  அந்நிகழ்ச்சியினை அவர் வாய் மொழியாகவே அறிந்துகொள்வோம். 

    gurudevar

         அறத்தின் தோற்றம்(20-12-1959)

    பிறஉயிர் உணர்தலாய் பெற்றிடும் சுகதுக்க அளவினை

        உறவு கொண்டுள்ளத்தால் யூகித்து உணர்ந்திரங்கி     உதவும்

           சிறந்த திருப்பம் அறிவில் சிந்தனையில் முதல் உலகில்     பெற்ற நாள்

     அறம் தோன்றிற்றது மதமாம்; அதை வளர்த்தோர் பெயர்களினால் பல ஆயிற்று.

                           . . . மாக்கோலம்–(21-12-1959-அறத்தின் தோற்றம் என்கின்ற தலைப்பில்)

                                         … ஞா.க. எண் 494-அறமே மதம் என்கின்ற தலைப்பில்

     அறத்தின் மூன்று கண்கள்:

          ++ம் என்கின்ற மூன்று சொற்களைக் கொண்ட அறத்தைக் கண்டுபிடித்த மகரிஷி அவர்கள் அதற்கு மூன்று கண்கள் இருப்பதனையும் கண்டுபிடித்துள்ளார்,  அவையே ஒழுக்கம், கடமை, ஈகை என்கிறார். இரண்டு கண்கள்(physical eyes) ஏற்கனவே மனிதனுக்கு உள்ளதே! புதிதாக  மூன்று கண்கள் தேவையா?  மற்ற உயிரினங்களுக்கும் கூட இரண்டு கண்கள் உள்ளன? புலிக்கு உள்ள இரண்டு கண்கள் மானைப் பார்த்தால் அதனைக் கொன்று உணவாக்கிக் கொள்ள உதவுகின்றது. விலங்கினத்திலிருந்து வந்த ஆறாம் அறிவுடைய மனிதனுக்கு இருக்கின்ற  இரண்டு கண்கள் சிறப்புடையதாக இருக்க வேண்டுமல்லவா?

         சாதாரண  இரண்டு கண்கள்  புலன்களாக மட்டுமே செயல்படுகின்றன. நல்லவற்றையும் பார்க்கும். தீயவற்றையும் பார்க்கும்.  எனவே ஆறாம் அறிவு மேலோங்கிய நிலையில் அதே கண்கள் புலன் உணர் கருவியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல்  பார்க்கின்ற பொருட்கள் புனிதமாகக்கூடிய, மக்களெல்லாம் தூய்மை அடையக்கூடிய உள்ளொளியை பாய்ச்சுவதாகவும் அமைதல் வேண்டும்(துரிய தவத்தில் ஞானாசிரியரின்(வேதாத்திரி மகரிஷியின்) அருளப்பட்டுள்ள ஆசியினை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்).

        புலன் உணர் கருவியான கண்கள் வழியாக, உள்ளொளியைப் பாய்ச்சுவதற்கு  தேவைப்படுவதுதான் அறமென்னும் மூன்று அகக்கண்கள்.   சாதாரண கண்கள்(ordinary physical eyes), கண்களுக்குத் தெரிவது போல் கண்களுக்குத் தெரியாத கண்கள்(not physical eyes).  ஆனால் மனிதனின் செயலில் புலப்படுவது  அறக்கண்கள். மறைபொருளான மெய்(இறை), உயிர், மனம் ஆகிய மூன்று மறைபொருட்களை அறிந்து கொள்ள அறக்கண்களாகிய ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் திறக்க வேண்டும்.  சிற்பி சிலையை வடிவமைக்கும்போது கண்களை கடைசியில் வடிவமைப்பார்.  அதுவரை கல்லாகவே தோன்றிய அந்த சிற்பம் கண்கள் திறக்கப்பட்ட பிறகு உயிரோட்டம் பெற்றதாக மாறும்.  அதே போன்று ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று அறக்கண்கள் வாழ்வில் திறந்த பிறகுதான் மனித-உயிர் உயிரோட்டம் பெறுகின்றது. 

     வாழ்வாங்கு என்றால் என்ன?

          ‘வாழ்வாங்கு’ என்று திருவள்ளுவர் கூறியதை, பரிமேலழகர் வாழ்வு, ஆங்கு(வாழ்வு+ஆங்கு) என்று பிரித்து அதற்கு ‘இல்லறத்தோடுகூட’ என்று பொருள் கொள்கிறார்.  அதாவது ‘வாழ்வாங்கு வாழ்பவன்’ என்பதற்கு இல்லறத்தில் வாழ்பவன் என்கிறார். மக்களெல்லாம் இல்லறத்தில்தான் வாழ்கின்றனர். எனினும்  இல்லறத்தில் வாழ்கின்ற அனைவரையும் குறிப்பிடவில்லை பரிமேலழகர். ‘ஆங்கு’ என்பது ‘அங்கே=இல்லறத்தில்’ என்று பொருளாகின்றது.  ஆங்கு (இல்லறத்தில்), வாழ்பவர்களை  மட்டுமே இல்லறத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் என்று பொருள் கொள்கிறார். அப்படியானால் மற்றவர்கள் இல்லறத்தில் வாழ்ந்தும் வாழாதவர்கள் என்று பொருளாகின்றது. எப்படி மெய்ஞ்ஞானத்தில் பொருள், மெய்ப்பொருள் என இரண்டாகப்பிரித்து பேசப்படுகின்றதோ, அதுபோல் இல்லறத்தில் இருப்பவர்கள்,  வாழ்பவர்கள்,  வாழாதவர்கள் என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றனர்.

     ஆங்கு(அங்கு) வாழ்பவர்கள் யார்?

         அப்படியானால் இல்லறத்தில் வாழ்பவர்கள் என்பவர்கள் யார் யார்?  ‘வாழ்தல்’ என்கின்ற இலக்கணத்திற்கேற்ப(இல்லற தருமத்திற்கேற்ப) வாழ்பவர்களைத்தான் வாழ்பவர்கள் எனக் கருதுகிறார் பரிமேலழகர்.  அப்படி வாழும்போதுதான், ஆங்கே (இல்லறத்தில்) வாழ்வு நடைபெறுவதாகக் கருதுகிறார். ஐந்தாவது அதிகாரத்தில் உள்ள இக்குறளுக்கு பொருள் கூறுகின்றபோது இருபத்து நான்காவதானபுகழ்’ என்னும் அதிகாரத்தில் கடைசியில் உள்ள  குறளை நினைவு படுத்துகிறார் பரிமேலழகர். அக்குறள் என்ன என்பதனையும் அறிந்து கொள்வோம்.

    dheaivappulavar

                புகழ்(அதிகாரம் 24)

    வசையொழிய வாழ்வாரே வாழ்வா ரிசையொழிய

     வாழ்வாரே வாழா தவர்                 . . . . குறள் எண் 240

     கருத்துரை:  தமக்குக் கெட்ட பெயர் உண்டாகாமல் வாழ்பவரே வாழ்பவர்; புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவர் இறந்தவர் ஆவார். 

    ஆகவே அறக்கண்கள் திறந்து வாழும் வாழ்க்கையிலேதான்   ‘மனித-உயிர் உயிரோட்டம் பெறுகின்றது’ என வேதாத்திரிய அகராதியினை நம்முள்ளே வைத்துள்ள மனவளக்கலைஞைர்களாகிய நாம் கூறுகின்றோம்.

     தன்னை அறியாத அறியாமை:

           மெய், உயிர், மனம் ஆகிய மூன்றையும் கருத்தியலாக தெரிந்து கொள்வதோடு, செய்முறைப்படுத்துவதுதான் இறை உணர்வு.  அந்த இறைஉணர்வு, அறவுணர்வில்லாமல் சாத்தியமாகாது. இறைஉணர்வும் அறஉணர்வும் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது.  எவ்வாறு ரயில் வண்டி தடம்பிறழாமல் ஓடுவதற்கு இரண்டு தண்டவாளங்கள் அவசியமாகின்றதோ அதுபோல் வாழ்வாங்கு வாழ இறைஉணர்வும், அறஉணர்வும் அவசியமாகின்றன.    எப்படி எல்லா பாவங்களுக்கும் தன்முனைப்பு ஆணிவேராக உள்ளதோ அதுபோல் எல்லா அறியாமைகளுக்கும்  ‘தன்னை அறியாத அறியாமை’ முதன்மையானதாக உள்ளது(Out of all ignorances ‘not knowing the self’ is the prime ignorance and it is the root cause for all ignorances resulting to all sins). மனிதப்பிறவியின் நோக்கம் அறியாதஅறியாமை அதாவது தன்னை அறியாத அறியாமை திருவேதாத்திரிய வாழ்வியல்-அகராதியால் நீக்கப்படுகின்றது.

     நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்:

         வாழ வேண்டிய முறையைப் பற்றிப் பார்த்தோம்.  குடும்பத்திலும், சமுதாயத்திலும் நன்முறையில் நடந்து கொள்வதே வாழவேண்டிய முறையாகும். அதனால்தான் ‘நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்’ என்கின்றனர் ஆன்றோர் பெருமக்கள்.  குடும்பம் என்று சொல்லாமல் ‘நல்ல’ என்கின்ற பெயரெச்சத்தைச்(adjective)  சேர்த்து நல்ல குடும்பம் என்கின்றனர்.  எதார்த்த நிலையைக் கருத்தில் கொண்டு குடும்பம் என்று சொல்லாமல் குடும்பத்திற்கு பெயரெச்சத்தைச் சேர்த்து ‘நல்ல குடும்பம்’ என்று கூறுகின்றனர்.          

       குடும்பத்தில் கணவன் மனைவி, தாத்தா, பாட்டி, மகன், மகள் ஆகியவர் இருப்பர். ஆறுபேர் இருக்கின்ற குடும்பம்  பல்கலைக்கழகமா? எப்படி? பல்கலைக்கழகம் என்பது பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தி தேர்வு நடத்துவது மற்றும்  ஆராய்ச்சிகள்  நடத்தும் ஓர் உயர்கல்வி நிறுவனம். அவ்வாறிருக்க  குடும்பம் எதற்காக  பல்கலைக்கழகத்தோடு ஒப்பிட்டு உயர்த்திச் சொல்லப்படுகின்றது?  பல்கலைக்கழகத்திற்கான பொருளில் பார்த்தால் குடும்பத்தையும் பல்கலைக்கழகம் என்பது கூட சரியே!  அதாவது குடும்பம் என்பது என்ன? ஆணும் பெண்ணும் சேர்ந்து இல்லறம் நடத்துகின்ற அமைப்பே குடும்பம் ஆகின்றது. சமுதாயத்தின் ஒரு சிறிய அலகே(unit) குடும்பம்.    ஆணும்,பெண்ணும் குடும்பத்தலைவன், குடும்பத்தலைவி ஆவதற்கு முன்பு ஒருவேளை,  வாழ்வியல் பாடத்தைக்  கற்காதிருந்தால், குடும்பமான பிறகாவது இருவரும்  பொறுப்புடன் குடும்பத்தை வாழ்வியல் விஞ்ஞானத்தை கற்கும் களமாக பயன்படுத்திக் கொண்டும் (to use family as a field of  learning Science of living), அதே நேரத்தில், அவர்களது  குழந்தைகளுக்கும் கற்றுத்தரும் நிறுவனமாக செயல்பட வேண்டியிருப்பதால்  அக்குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் எனப்படுகின்றது.  

    வாழும் நிலை அறிந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்!

        ‘மக்கள் எல்லாம் வாழ்வாங்கு வாழவேண்டும்’ என்று  மகரிஷி அவர்களின் மானசீகக் குருவான திருவள்ளுவர் விரும்பியது,  திருவள்ளுவரின் இருபதாம் நூற்றாண்டின் சீடரான மகரிஷியிடம் நிறைவேறியுள்ளது என்றால் அது மிகையாகாது. மேலும் மகரிஷி அவர்கள் தான் வாழ்வாங்கு வாழ்ந்ததோடு தன்னுடைய மாணவர்களையும் மனவளக்கலையின் வாயிலாக வாழ்வாங்கு வாழ்வதற்கு வழிகாட்டும் அகராதியாகத் திகழ்கிறார் என்பதில் மனவளக்கலைஞர்களுக்கு அலாதியான ஆனந்தம் ஏற்படுகின்றது.   மகரிஷி அவர்கள் எவ்வாறு வாழ்வாங்கு வாழ்வது என்பதனை இறைவணக்கப்பாடலில் கூறியுள்ளதனை இங்கே நினைவு கூர்வோம்.

    இறைவணக்கம்

    ஆதியெனும் பரம்பொருள் மெய் எழுச்சிபெற்று,

      அணுவென்ற  உயிராகி, அணுக்கள் கூடி,

    மோதியிணைந்து இயங்குகின்ற நிலைமைக்கு ஏற்ப,

      மூலகங்கள் பலவாகி, அவை இணைந்து,

    பேதித்த அண்ட கோடிகளாய் மற்றும்

      பிறப்பு இறப்பிடை உணர்தல் இயக்கமாகி,

    நீதிநெறி உணர் மாந்தராகி,  வாழும்

      நிலையுணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்.

                      . . . .. வேதாத்திரி மகரிஷி.  –  ஞா.க. கவி எண் 1

     திருமணப்பந்தம் எதற்காக?

             ஆணும் பெண்ணும் உயிரினப் பரிணாம அபிவிருத்திக்காக இயற்கையிலேயே அமைந்த  பாலுணர்வுத் தேவைக்காக மட்டுமே திருமண பந்தத்தில் இயற்கையால்/இறையால் இணைக்கப் படுவதில்லை.

          ‘‘*வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கிற பட்டினத்து சுவாமிகள் கண்டுபிடித்த பிறப்பு-விதியின்படி(Law of birth),

           முன் பிறவியில் ஆற்றிய வினைப்பயனை அனுபவிக்கவே  ஆன்மாவிற்கு பிறவியினை  ஏற்படுத்தி,  

                    அவ்வாறு பிறவி எடுத்துள்ள ஆணும். பெண்ணும் திருமணபந்தத்தால் இணைக்கப்பட்டு,

                    தான் கொண்டு வந்த சஞ்சித கர்மா மூட்டையைக் காலி செய்தும், நல்ல பிராரப்த, ஆகாம்ய

                    கர்மாக்களை நிரப்பியும்,  

                   இப்பிறவியிலேயே பிறவியின் பயனை அடைந்தும்,

                  ஒரு வேளை பழக்கப்பதிவுகள் விளக்கப்பதிவுகளை வெற்றி கொள்வதாக இருக்கும்

                  பட்சத்தில்,  பிறப்பு-விதிக்கு ஏற்ப பிறப்பு ஏற்படுவதால்,

               அடுத்த பிறவியிலாவது பிறவிப்பயனை எய்துவதற்கேற்ப இப்பிறவியின் முடிவில் தன்னை                   கருவில் திருஉடையவராக்கிக் கொள்ளும்,

            அதேநேரத்திலும் தனது  வம்சாவளிக்கு நல்வினைப்பதிவுகளை நிரப்பிய சஞ்சித மூட்டையைக் கொடுத்தனுப்பி, கருவிலேயே  திருவுடைய  வம்சாவளியினை உருவாக்கவுமே திருமண பந்தம் ஏற்படுத்தப்படுகின்றது இயற்கையால்/இறையால்.  இந்த அறிவினை/தெளிவினைத் தெரிய வைப்பது திருவேதாத்திரிய வாழ்வியல் அகராதியே!

           மற்ற உயிரினத்திற்கு கடைசி வரை குடும்ப அமைப்பு அவசியமில்லாதபோது,  மனிதஉயிரினத்திற்கு மட்டும் இயற்கையால்/இறையால் குடும்ப அமைப்பு ஏற்படுத்திய நோக்கம் நிறைவேறுவதற்காக,   அயரா விழிப்புணர்வு(constamt awareness), இணக்கம், சகிப்பு, தியாகம், (Adjustment, tolerance, sacrifice), கற்பனையான எதிர்பார்ப்பில் ஏமாற்றத்தை  தவிர்த்தல் ஆகியவற்றையெல்லாம்  கற்பதற்கான களமே  குடும்பம்.  எனவேதான் குடும்ப அமைப்பின் நோக்கத்திற்கேற்ப அமைகின்ற குடும்பத்தை  நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் எனப்படுகின்றது.

          விலங்கினத்திற்கு  குடும்பம் கிடையாது. ஆனால் விலங்கினத்திலிருந்து தன்மாற்றம் அடைந்து வந்த மனிதஇனத்திற்கு குடும்பம் அவசியமாக இருப்பதால் அக்குடும்பம் குடும்பக்கலையை பயின்ற/பயில்கின்ற பல்கலைக்கழகமாக இருக்கவேண்டும்  என்பது   ஆன்றோர்களின் விருப்பமும், எண்ணமும் ஆகும். 

     இருபதாம் நூற்றாண்டில் விளக்கப்பட்ட பிறப்பின் விதி:

        வினைப்போகமே தேகம் கண்டாய்’ என்று பிறப்பின் விதி அன்று பட்டினத்து சுவாமிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. அது இருபதாம் நூற்றாண்டில், இயற்கையால்/இறையால்  பட்டினத்து சுவாமிகளின் இளவலான வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக   மேலும் பிறப்பின்-விதி எளிதாக விளக்கம் ஆக்கப்பட்டுள்ளது. அது என்ன என்று அறிந்துகொள்வோம்.  பேரின்ப ஊற்று  என்கின்ற தலைப்பில்  அருளப்பட்டுள்ள கவியின் கடைசி நான்கு வரிகளை மட்டும் நினைவுகூர்வோம்.

    Analysis_of_Thought

     பேரின்ப ஊற்று(07-03-1986)

    வினைப்பதிவாம் சுமையை விடுத்துத் தூய்மை பெறவே,

    நினைவாய் உடலெடுத்தேன், நிலம் மீது விழுந்தபின்னே,

    எனை மறந்தேன்! என்றன்வினை மறந்தேன்! இறைவா!

    உனை மறந்தேன்! ஆனால் நீ, உள்நிறைந்து எனை மீட்டு,

     இன்ப ஊற்றாய்  நிறைந்த இறைவா! –  எங்கும்

    இன்ப ஊற்றாய், அறிவாய், இயங்கும் இறைவா!

         . . . . வேதாத்திரி மகரிஷி.

     இந்த புரிதலெல்லாம் எங்கிருந்து கிடைக்கின்றது?

         இந்த புரிதல் எல்லாம் எவ்வாறு மனவளக்கலைஞர்களுக்கு ஏற்படுகின்றது?  ஆன்மீக வாழ்க்கை மற்றும் உலகியல் வாழ்க்கை என பிரிந்து இருந்த  நிலையினை, இணைத்த வேதாத்திரிய மனிதவாழ்க்கை எனும் அகராதியினை தங்களுக்குள்ளே இறக்கியிருப்பதால்தான் அனைத்து அருளாளர்களின் அனுபவங்களை புரிந்து கொண்டு பயன்பெற முடிகின்றது.    வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபினில் அவதரிக்கின்ற அனைத்து அருளாளர்களையும் மானசீகமாக குருவாக எற்றுக் கொண்டு ஆசி பெற முடிகின்றது.

        இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம்.  மேலும் சிந்திப்போம் 20-03-2022 ஞாயிறு சத்சங்கத்தில் அறிவிற்கு விருந்து நிகழ்ச்சியில்.    மேலும் மேலும் என்னவெல்லாம் அறியவேண்டும் என இயற்கையின்/இறையின் சித்தமோ அவற்றை எல்லாம் சிந்திப்போம்.  நாளை 19-03-2022 சனிக்கிழமை சத்சங்க சிந்திக்க வினாக்கள் நிகழ்ச்சியில் சந்திப்போம்.  வாழ்க வளமுடன்.

    * வினைப்போகமே ஒரு தேகம் கண்டாய்வினை தான்ஒழிந்தால்

    தினைப்போது அளவுநில் லாதுகண்டாய்சிவன் பாதம்நினை

    நினைப்போரை மேவு நினையாரை நீங்கிஇந் நெறியில்நின்றால்

    உனைப்போல் ஒருவர்உண் டோமன மேஎனக்கு உற்றவரே. 

                                                                      . . .  பட்டினத்தார்

    வாழ்க வளமுடன்!                               வாழ்க வையகம்!!

     வாழ்க அறிவுச் செல்வம்          வளர்க அறிவுச் செல்வம்


    Loading