இன்றைய விருந்து

  • FFC – 167-வினா விடை – 16

    வாழ்க மனித அறிவு                                வளர்க மனித அறிவு

    வினா விடை – 16

     FFC – 167

    28-02-2016—ஞாயிறு

    சிந்திக்க வினாக்கள்-114
    (08-10-2015 – வியாழன்)

    (அ) தன்மாற்றத்தில்(பரிணாமத்தில்) ஏன் ஆறாம் அறிவிற்கென்று புலன் ஏதும் உருவாகவில்லை?
    (ஆ) இதனால் அறியப்படுவது என்ன?

    விடை:

    அறிவியலில் ‘பரிணாமம்-Evolution) என்பது, திருவேதாத்திரியத்தில் தன்மாற்றம்(self transformation) எனப்படுகின்றது. ஏன்? உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்களின், ‘விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இணையவேண்டும்’ என்ற எண்ணத்தை அவருக்கு பின்னர் அவதரித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார். மெய்ஞ்ஞானம் தன்னை, மனித குலத்தில் எளிதாக பரவவிட விஞ்ஞானம் உதவிடவேண்டும் என்றுதான் நினைக்கின்றது.

    திருவேதாத்திரியத்தின் பலதுறைகளில் ஒன்றான இயற்கையியல்/இறையியல், இப்பிரபஞ்ச தோற்றத்திற்கான மூலத்தை உறுதி படுத்திவிட்டது. பிரபஞ்சத்தின் மூலத்தை ஏற்றுக் கொண்டது, ஆகவே அதனைத் துணிந்தும் அறிவித்தும்விட்டது. இப்பிரபஞ்ச மூலத்தை ஏற்று அந்த மூலமே இயற்கையின் ஆதிநிலை/இறைவெளி/இறைநிலை/வெட்டவெளி என்கின்றது. அந்த மூலப்பொருளேதான் எல்லாமாகவும் மாற்றம்(transform) அடைந்துள்ளதால், பரிணாமம் என்று சுற்றி வளைத்து சொல்லாமல் நேரிடையாகவே, சுத்தவெளியே, தானாகவே, மாற்றம் அடைந்துள்ளதால் அந்த மாற்றத்தை (தன்னுடையமாற்றம்) தன்மாற்றம் (self transformation) என்கின்றது.

    மகரிஷி அவர்கள் கூறும் ‘பரிணாமம் என்பது இயற்கையினுடைய தன்மாற்றமே’ என்பதற்கு சான்றாக வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்டமரபில் வந்து உதிக்கின்ற மகான்கள் வரிசையில் ஒருமகானான மகா கவி பாரதியார் ஏற்கனவே கூறியுள்ளதனை எடுத்துக்கொள்ளலாம்.

    எதனூடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வம் உண்டாமெனில் கேளீரோ?’ எனக் கேட்கின்றார் மகான் மகா கவி பாரதியார். இதற்கும், பரிணாமம் என்பது இயற்கையின் தன்மாற்றமே என்பதற்கும் என்ன தொடர்பு என ஐயம் எழலாம். ‘எதனூடும்(எதன் ஊடும்)’ என்றால் ‘எந்தப் பொருட்களில் உள்ளும்’ என்று பொருள். எந்தப்பொருளும்-எல்லாப்பொருளும் இந்த பிரபஞ்சத்திற்குள் அடங்கியதுதானே! எந்தப் பொருட்களுக்குள்ளும்/எல்லாப் பொருட்களுக்குள்ளும் அறிவேதான் பொதுவாக உள்ளது, அதுவே தெய்வம் என்கிறார், மகான் மகா கவி பாரதியார்.

    FFC_167-பாரதியார் படம்

    அரூபமாக உள்ள அறிவே எல்லாப்பொருட்களிலும் பொதுவாக இருப்பதால், அரூபத்தில் பல இருக்க முடியாது. என்பதாலும் அறிவு-இயற்கை-இறை ஒன்றே பலவாக மாற்றமாகியது என்றுதானே பொருள். ஆகவே மகரிஷி அவர்கள் இப்போது கூறும் இயற்கையின் ஆதிநிலையே தன்மாற்றமாகியுள்ளது என்பதனை மகான் மகா கவி பாரதியாரின் அப்போது கூறிய கூற்றிலிருந்து உறுதியாகின்றது. தன்மாற்றம் என்பது என்ன என்பதனை உறுதிபடுத்திவிட்டோம்.

    இப்போது ‘சிந்தனைப்பயிற்சிக்கு எடுத்துக்கொண்ட வினாவிற்குள்’ செல்வோம்.
    வினா ஆறாம் அறிவு பற்றியது. எனவே இப்பிரபஞ்சத்தில் ஏன் உயிரினங்கள் தோன்றின என்கின்ற வினாவை எழுப்பி அதற்கு விடை காண வேண்டும். உயிரினங்கள் என்பது என்ன? சடப்பொருட்களுக்கு உணர்வு கிடையாது. உயிரினங்களுக்கு உணர்வு உண்டு. உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்னர் சடப்பொருட்களாகிய பஞ்சபூதங்கள் மட்டுமே இருந்தன. அவற்றிலிருந்து காந்தம் உருவாகிக்கொண்டிருந்தது. அந்த காந்தம், அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐவகை நிகழ்ச்சிகளாக தன்மாற்றம் அடைந்து கொண்டிருந்தன.

    எனவே ஆதிநிலையிலிருந்த அறிவு இவற்றை உணா்வதற்கான உந்துதலின் (urge) விளைவே உயிரினங்களாகின. அவையே ஒரறிவு முதல் ஐயறிவு சீவராசிகள். மகான் மகா கவி பாரதியார் அவர்களின் கண்டுபிடிப்பான ‘எங்கும், எதிலும் அறிவு இருக்கின்றது’ என்பதால், பஞ்சபூதங்களிலிருந்த அறிவு, தனக்கே உரிய (அதாவது அறிவிற்கே உரிய) இயல்பாகிய உணருதல்-அறிதல் என்கின்ற உந்துதலால் ஐவகை பிரபஞ்ச நிகழ்ச்சிகளை உணர்வதற்கு கருவி தேவை. அந்த தேவைக்காக உருவானதே புலன்கள்(five senses) ஐந்தும்.

    புலப்படுத்துதல் என்றால் தெரியாமல் இருக்கின்ற ஒன்றை தெரியப்படுத்துதல். அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்து புறநிகழ்ச்சிகள் வெளியே (உடலுக்கு வெளியே நடந்து கொண்டிருக்கின்றன. ஆகவே அதனை உடலுக்குள் இருக்கின்ற கருமையத்தில் இருக்கும் அறிவு தானாகவே உணரவோ/அறியவோ முடியாது. ஆகவே எல்லை கட்டிய உடலுக்கு வெளியே நடக்கும் புறநிகழ்ச்சிகளை அறிவு (Nature-இறை) தெரிந்து கொள்வதற்காக சர்வ வல்லமையுடைய இயற்கையின் நிறைநிலையும் மற்றும் பொருண்மையும்-‘Entelechy’ ( kindly try to understand here, this ability of Nature in the light of the meaning of English word ‘Entelechy’ found in the dictionary. Already we have discussed ‘Entelechy’ in our Satsang) அமைத்துக் கொண்டதுதான் ஐந்து புலன்களும்.

    கண் என்கின்ற புலன் இல்லையானால் ஒளி இருப்பதை உணர முடியாது. கண் என்கின்ற புலன் இருந்தால் ஒளியை உணரமுடியும். ஒளி இருப்பதை கண் என்கின்ற கருவி அறிவிற்கு தெரியப்படுத்துவதால், அதாவது புலப்படுத்துவதால் ‘கண்’ புலன் என்று பெயர் பெறுகின்றது. காது என்கின்ற கருவி அறிவிற்கு தெரியப்படுத்துவதால், அதாவது புலப்படுத்துவதால் ‘காது’ புலன் என்று பெயர் பெறுகின்றது. ஆகவே ஐந்து புலன்களுமே உடலுக்குப் வெளியே-புறத்தே நடக்கின்ற நிகழ்ச்சிகளை, உடலுக்கு உள்ளே உள்ள கருமையத்தில் உள்ள அறிவு உணர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட உணர் கருவிகள்.

    இயற்கையின் ஆதிநிலையே ஐம்பூதங்களாகி தன்மாற்றம் அடைந்தது. ஒவ்வொரு பூதம் உருவாகி வரும்போதும் அததற்குரிய காந்த தன்மாற்றமும் ஏற்பட்டு வந்தன. அவையே விண்ணில் அழுத்தம், காற்றில் ஒலி, நெருப்பில் ஒளி, நீரில் சுவை, மண்ணில் வாசனை. ஆகவே பஞ்சபூதங்களாகிய பிறகு இயற்கையின் ஆதிநிலையாகிய அறிவு பிரபஞ்ச நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக உணர்வதற்காக ஒவ்வொரு புலன்களைக் கொண்ட உயிரினங்களாகியது. அவையே முதலில் ஒர் அறிவு சீவனான தாவரம்(ஒர் அறிவு – தொடுஉணர்வு), அடுத்ததாக இரண்டு அறிவு சீவனான புழு, அடுத்ததாக மூன்றாவது அறிவு சீவனான எறும்பு, அதற்கடுத்ததாக நான்காவது அறிவு சீவனான பாம்பு, ஐந்தாவதாக ஐயறிவு சீவன்களான பசு, புலி ஆகிய தோன்றின.

    அதன் பிறகு மனித இனம் தோன்றியுள்ளது. மனிதன் தன்னை ஆறாம் அறிவுடையவன் என வகைப்படுத்திக் கொண்டான். ஆனால் மனிதஇன தன்மாற்றத்தின்போது மனிதனுக்கு ஏற்கனவே உள்ள ஐந்து புலன்களைத் தவிர, ஆறாம் அறிவிற்காக கூடுதலாக புலன் ஏதும் உருவாகவில்லை. ஏன் என்று அறிவதே இன்றறைய அறிவிற்கு விருந்து.

    பொதுவாக உணர்தல்/அறிதல் என்பது அறிவின் இயல்பு என்பதால், பிரபஞ்சத்தின் ஐவகை நிகழ்ச்சிகளை உணர்ந்துவிட்டான பிறகு இயற்கை எதனை உணர்வதற்காக ஆறாம் அறிவுடைய சீவனான மனிதவடிவில் தன்மாற்றம் அடைந்தது? இதற்கானக் காரணம் என்ன?

    காரணத்தை அறிய விலங்கினங்களுக்கும் மனிதஇனத்திற்கும் உள்ள வித்தியாசங்களைக் கொண்டு அறியலாம். அந்த வித்தியாசங்கள் என்னென்ன? மனிதன் கல்வி கற்கிறான். அதனால் எழுதப் படிக்கத் தெரியும், இதற்கு கண்களும், காதுகளும், நாவும், கைவிரல்களுமே போதும். மேலும் பேசுகிறான் எண்ணங்களை சொல்லாக வெளிப்படுத்துகிறான். தொழிலறிவு கற்கிறான். சிரிக்கிறான். நாணமுடையவனாக இருக்கிறான். நாகரீகமாக வாழ்கிறான். பண்புடையவனாக இருக்கிறான். இதற்காக ஆறாம் அறிவிற்கு என பிரத்யேகப் புலன் ஏதும் அவசியமில்லை மனிதனுக்கு.

    எழுதவும், படிக்கவும், பேசவும் என்பதற்காகமட்டுமேவா இயற்கை ஐந்தறிவு சீவனிலிருந்து ஆறறிவுசீவனான மனிதனாக தன்மாற்றம் அடைந்திருக்கும்!?
    கல்வி கற்க முடிகின்றது மனிதனால் என்கின்றபோதே ஆறாம்அறிவின் முதன்மையான பயன் சிந்திக்க முடியும் என்பதாகின்றது. சிந்தித்தலின் பயன் என்ன? சிந்தித்தலின் பயனாகத்தான் ஆதிமனிதனிலிருந்து, இன்றுள்ள நாகரீக மனிதன் வரை தன்மாற்றம் முன்னேற்றம் அடைந்து வந்துள்ளது.

    சிந்திப்பது என்பது என்ன, ஏன், எதற்கு என்கின்ற மூன்று வினாக்களை எழுப்பி விடைகாண்பதேயாகும். அப்படிப்பார்க்கும்போது ஆறாம் அறிவின் பயன் ஐயுணர்வுகளை அறிவதோடு, கூடவே ஐயுணா்வை உணர்கின்ற நான் யார், நான் ஏன் பிறந்தேன், முடிவில் எங்கு செல்லப்போகிறேன், நான் உணா்கின்ற ஐவகைநிகழ்ச்சிகளுக்கும் மூலம் எது, இந்நிகழ்ச்சிகள் ஏன், எவ்வாறு நடக்கின்றன என சிந்தித்து தன்னையே அறிந்துகொள்ளும் பயனை ஆறாவது அறிவு அடைய வேண்டும் என்பதே இயற்கையின் உள்ளார்ந்திருக்கையாக(inherence) உள்ளது.

    ஆகவே சிந்தனையால் இக்கேள்விகளைக் கேட்டு விடையை பெறுவதற்கு ஆறாவது அறிவிற்கு புலன்கள் ஏதும் தேவையில்லை. ஆகவே இயற்கை ஆறு அறிவுடைய மனிதஇனத்திற்கென பிரத்தியேகமாக புலன் எதனையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஏற்கனவே உள்ள ஐந்து புலன்களே போதுமானது. உடல் முழுவதும் தோல் என்கின்ற புலன் தொடுஉணர்வை அறிந்து கொள்கின்றது. மற்ற நான்கு புலன்களான கண்கள், காதுகள், மூக்கு. நாக்கு தலையின் முன்பக்கமான முகத்தில் இடம் பெறுமாறு வடிவமைத்துக் கொண்டது இயற்கை. இந்த நான்கு புலன்களைக் கொண்டே மனிதனின் முகம் அழகுடன் உள்ளது. வேறு புலன்களுக்கு முகத்தில் இடமில்லை. இவ்வாறு கூறுவதனால் முகத்தில் இடமில்லை என்பதற்காக ஆறாம் அறிவிற்காக புலன் ஏதும் ஏற்படுத்திக் கொள்வில்லை என்று பொருளாகா!

    ஆறாம் அறிவின் சிறப்பான சிந்தனையின் விளைவு, அறிவு முடிவில் தன்னையே உணர்ந்து கொள்ளுதலாகும். தன்னையே உணர்ந்து கொள்ளும் உணர்வு அகஉணர்வு. ஐம்புலன்கள் வழியாக உணர்ந்து கொள்ளும் உணர்வு புறஉணர்வு. புறஉணர்விற்குத்தான் அறிவிற்கு புலன்கள் என்கின்ற கருவிகள் தேவை.
    ஆனால் அகமாக இருக்கின்ற அறிவை/இறையை நானே என உணர்வது அக உணர்வு. எனவே தன்னையே யார் என்கின்ற உணர்வதற்கு தனியாக புலன் ஏதும் தேவையில்லை. வேண்டியதெல்லாம் அருளாளர்கள் வழிநடந்து சிந்திப்பதே ஆகும். அந்த வழியில் வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபில் வந்துள்ள வேதாத்திரி மகரிஷி அவர்களின் வழிநடந்து, மகரிஷி அவர்கள், நம்மிடம் இதுவரை ஏற்றப்படாமல் இருந்துவந்த சிந்தனை விளக்கை ஏற்றி வைத்துள்ளார்.
    சாதாரணமாக விளக்கு சுடர் விட்டு தொடர்ந்து பிரகாசமாக எரிவதற்கு அதற்கு வேண்டிய எண்ணெய் ஊற்றியும், திரியின் முனையை நிமிண்டியும், அவ்வப்போது புது திரியை மாற்றிக் கொண்டும் இருப்பதுபோல் மகரிஷி அவர்கள் ஏற்றி வைத்துள்ள சிந்தனை விளக்கை தொடர்ந்து சுடர்விட, அருளாளர்கள் அருளியுள்ள நூல்களை படிப்பது (அவற்றில் மகரிஷி அவர்களின் நூல்களும் இடம் பெறவேண்டும்) சத்சங்கங்களில் கலந்து கொள்வது. நமக்குள்ளே சிந்தனையின் மூலம் சத்சங்கம் நடத்துவதும் பேருதவியாக இருக்கும். சிந்தனை விளக்கு சுடர்விட, ,ஆன்மபேரொளி அருளொளியை வீசச்செய்கின்ற வாழ்வை கடமையாக ஆற்ற வேண்டும்.

    துணைக்கேள்விக்கான பதில் என்ன? ஆறாம் அறிவின் நோக்கம்/பயன் இயற்கையின் ஆதிநிலையை/இறையை/தன்னை அறிதலாகும். இது அகஉணர்வு என்பதால் ஆறாம் அறிவிற்கு இதற்காக வழக்கத்தில் உள்ளது போன்ற உருவமுள்ள புலன்(conventional sense with physical appearance) ஏதும் தேவையில்லை என அறிந்து கொண்டோம். ஆனால் உருவமில்லாததை உணர, உருவமில்லா கருவியான சிறந்த–சிந்தனை ஒன்றே போதும். இயற்கையின் ஆதிநிலை/இறை அரூபமாக உள்ளதால் பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல், அதனை உணா்வதற்கு அரூபமாக உள்ள அறிவால்தான் முடியும். ஆகவே இம்முறையான அகவழிபாட்டிற்கு புலன்கள் ஏதும் தேவையில்லை.

    அறிவாகிய இறையை உணர்வதற்கு அகத்தவத்தால் தான் சாத்தியம் என்றும் உறுதிபடுத்தியபிறகுதான் நாம் அறிவை அறியும் மனவளக்கலையை பயின்று வருகிறோம். வாழ்க மனவளக்கலை. வளர்க மனவளக்கலை. வாழ்க சிந்தனைச் செல்வம். வளர்க சிந்தனைச் செல்வம். வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு. வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                         வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • FFC – 166-வினா விடை – 15

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

    வினா விடை – 15

    FFC – 166

    24-02-2016—புதன்

    சிந்திக்க வினாக்கள்-143
    (18-01-2016 – திங்கள்)

    மகரிஷி அவர்கள் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று எதனைக் குறிப்பிடுகிறார்? ஏன் அதனை அவ்வாறு கூறுகிறார்?

    விடை:

    FFC-166-dheaivappulavar

     

    ‘சிந்திக்க வினாக்கள் பயிற்சியில்’ வேதாத்திரி மகரிஷி அவர்கள், தன்னைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூலாகக் கூறுவது எது எனக் கேட்கப்பட்டிருந்தது. மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்த நூல் எதுவாக இருக்கும் என அறிந்து கொள்வது மகரிஷி அவர்களின் சிந்தனாப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கடமை ஆகும். கடமை என்று கூறுவது நமது நன்மைக்காகத்தான்.

    எதற்காக இயற்கை/இறை நமக்கு இந்த நூற்றாண்டிலே கிடைத்தற்கரிய   குருவான வேதாத்திரி மகரிஷியிடம் புனித உறவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது?

    •   பல்லாயிரம் பிறவிகள் எடுத்து,
    •  ஆனால் பிறவியின் நோக்கமும் ஆறாம் அறிவின் ஒரே பயனுமான, அறிவாகிய தெய்வத்தை அறிந்து கொள்ளாமல்,
    • அனைத்துப் பிறவிகளையும் பிறப்பது–இறப்பது என்பதனையேதான் சாதனை வாழ்க்கையாகக் கொண்டு, சாதாரணப் பிறவிகளாகவே வீணாக்கிவிட்ட நிலையில்,
    •   இப்பிறவியில், நம்முடைய மாதாவும், பிதாவும் செய்த புண்ணியத்தால், நம்முடைய குடும்பத்திலேயே மற்றவர்களுக்கு (ஒரு வேளை உடன்பிறப்புகளுக்கு குரு-சீடா் உறவு கிடைக்காத) கிடைக்காத நிலையில்,
    •  நம்முடைய தற்போதையப்பிறவி பரிபக்குவ நிலையினை அடைந்துள்ளமையால்தான்,
    •   நெடுங்காலமாக பல்லாயிரம் பிறவிகளாகத் தொடர்புகொண்டுள்ள கருமையம் ஏற்ற பழிச்சுமைப் பதிவுகளை இந்த ஒரு பிறவிகாலத்திலேயே மாற்றி அமைத்துப், பயனடைய அகத்தாய்வும், அகத்தவமும் இறையுணர்பாதையிலே விழிப்புடன் வாழ்ந்து,
    •   நம்முடனே வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களுக்கும் இறைத்தூதுவர்களாக இறைத் தொண்டு-அறிவுத்தொண்டு செய்து வாழ்வாங்கு வாழ்வதற்கேயாம்.

                வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம்.

     நம்முடைய சத்சங்கத்தில் வேதாத்தரி மகரிஷி அவர்கள் உள்பட எல்லா அருளாளர்களும் எப்போதும் சூக்குமமாக எழுந்தருளி நமக்கெல்லாம் உற்ற வழிகாட்டிட வேண்டும்.

     ஆகவே இன்றைய சிந்தனை, மனிதனின் சொத்தாகிய முழுப்பண்பேற்றத்தையும் விரைவில் இப்பிறவியிலேயே அடைவதற்காக இயல்பூக்க நியதியினை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நமது குருபிரான் வேதாத்திரி மகரிஷியின் அரிய பெருமைகளை அறிந்து கொள்வதற்காக அமையட்டும்.

     குரு-சீடா் உறவு  நிரந்தரமில்லா இவ்வுலகில், இழந்த நிரந்தர மற்றும் மூல உறவை மீட்டெடுத்து சீடருக்குத் தரும் தெய்வீக இணைப்பை இயற்கை ஏற்படுத்தித் தரும் புனித உறவு ஆகும் குரு-சீடா் உறவு.

    மகரிஷி அவர்கள் எல்லா அருளாளர்களையும் வணங்கி ஆசி பெற்றுக் கொண்டவர். இதனை அவர், தன்னுடைய சீடர்கள் எவ்வாறு குருவணக்கம் செய்ய வேண்டும் என இயற்றிய பாடலிலுள்ள கடைசி இரண்டு வரிகளான,

    ‘அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்,
    அதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.’

    என்பதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது.

    அப்படியிருக்கும்போது எந்த அருளாரின் நூல் அவரைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று எதனைக் குறிப்பிடுவார்? அதற்கான விடையை குருவணக்கப்பாடலில் உள்ள முதல் ஆறுவரிகளிருந்து யூகிக்க முடிகின்றது. அப்பாடலின் முதல் ஆறு வரிகளில் நான்கு குருமார்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அந்த அருளாளர்கள் தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்கா் ஆகியவர்களே ஆவார்கள்.

    இவர்களில் எந்த அருளாளர் அருளிய நூல் மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்ததாக இருக்க முடியும்? மகரிஷி அவர்கள் சிறுவனாக இருந்தபோது பக்தி சிரத்தையோடு கலந்து கொண்ட பஜனையில் பாடப்பட்ட பாடல்களில் ஒன்றான ‘அங்கிங்கெனாதபடி’ எனத் தொடங்கும் பாடலால் தனது உள்ளம் லயித்துவிடும் என்று தனது வாழ்க்கை விளக்கம் எனும் நூலில் குறிப்பிடுகிறார். அதன் மூலம் உணர்ந்த முடிவே, கடவுள் அரூபம் என்கின்ற தெளிவு என்கிறார். இந்தப்பாடலே அவரது உள்ளுணர்வைத் தூண்டி தத்துவத்திலே தெளிவை அளித்து. இறைநிலையை உணர உதவியதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். எனவே அப்பாடல் அருளிய அருளாளர் தாயுமானவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார்.

    அடுத்ததாக அகத்துதான் மெய்பொருள் என்று எடுத்துக்காட்டி அறிவதனை அறிவித்தார் என்று கூறி திருவள்ளுவரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார்,
    மூன்றாவதாக திருவள்ளுவர் அறிவித்த அறிவை அறிவதற்கு வழிகள் சொன்ன அறிஞா் திருமூலர் அவர்களையும் மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார்.
    நான்காவதாக, தன்னுள் வள்ளாரின் ஆன்மா பத்துவருடங்கள் தங்கி வழிகாட்டியதால், அவரை குருவாக வணங்குகிறார் மகரிஷி அவர்கள்.

    இந்த நான்கு அருளாளர்கள் இயற்றியுள்ள நூல்களில் ஒன்றைத்தானே மகரிஷி அவர்களைக் கவர்ந்த ஒரு பெருநூலாக மகரிஷி அவர்கள் கூறியிருக்க முடியும்?

    அறிவைக் கவர்ந்த என்று சொல்வதானால் அது எந்த நூலாக இருக்க முடியும்?

    தாயுமானவர் ‘அறிவே தெய்வம்’ என்பது அவரைக் கவர்ந்திருக்கின்றது.

    அடுத்ததாக அகமாக உள்ளதுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி அதுவே அறிவு என்று திருவள்ளுவர் தனக்கு உணர்த்தியதாகக் மகரிஷி அவர்கள் கூறுகிறார்.

    அறிஞா் திருமூலர் அவ்வறிவை அறிவதற்கு வழிகள் சொல்லியதாகக் கூறுகிறார்.

    நான்காவதாக  அருளார்கள் எது தெய்வம் என்று கூறிய அறிவில் ஆழ்ந்து ஆனந்தக்கவியாத்தார் வள்ளார் என்பதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள் .

    இந்த நான்கு அருளார்களின் ஒருவரான திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்தான் தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் என்று குறிப்பிடுகிறார். காரணம் என்ன?

    திருக்குறளை அறிவுக் கடல் என்கிறார்.

     நாம் மகரிஷி அவர்களை அருட்தந்தை என்று அழைப்பதுபோல். மகிரிஷி அவர்கள் திருவள்ளுவரை தெய்வத்தந்தை என்று அழைக்கிறார்.
    எளிதில் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத ஐம்பது பாக்களுக்கு மட்டும் உரிய பொருளை திருக்குறள் உட்பொருள் விளக்கம் என்னும் நூலில் விளக்கியுள்ளார் மகரிஷி அவர்கள்.
    மகரிஷி அவர்களின் அறிவைக் கவர்ந்திருக்கக் கூடிய ஒரு சில பாக்களை நாம் யூகத்தால் அறிந்து கொண்டதை நினைவு கூர்வோம் இத்தருணத்தில்.

    அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி, அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர் என குருவணக்கப்பாடலில் மொழிந்துள்ளதால் குறள் எண் 702 ஐ நினைவு கூர்வோம்.

    “ஐயப்படாஅது அகத்து உணர்வானைத்
    தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.”

    இக்குறளுக்கு சாதாரணமாகக் கூறப்படும் பொருள் யாதெனில், சந்தேகமின்றி மனதில் உள்ளதை உணரவல்லவனை, அவன் மனிதனே ஆனாலும் தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும் என்பது.

    ஆனால் நம்குருதேவர் கூறும் உட்பொருள் விளக்கத்தினை அறிந்து மகிழ்வோம். எவர் ஒருவா் ஆன்மாவை உணர்கின்றாரோ அவர் ஆன்மாவில் இயங்கும் அறிவை தெய்வமாகவே உணர்ந்தவராவார். ஆகவே ஆன்மாவை அதன் இயல்பு, இயக்கம், விளைவு இவைகளை சிறிதுகூட ஐயமின்றி உணர்ந்து கொள்ள வல்லவர் இறைவனாகவே மதிக்கப்படத்தக்கவர் என்று திருவள்ளுவர் கூறுவதாக நம்முடைய மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் அறிவினுடைய மதிப்பையும் அதனை அறிய வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார் அக்குறளின் வாயிலாக என்கிறார் மகரிஷி அவர்கள்.

    மேலும் மூன்று குறட்பாக்களை அறிந்து விட்டு இன்றைய சிந்தனையை முடித்துக் கொள்வோம்.

    “பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு.” . குறள் எண் 351

    “எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.“ குறள் எண் 355

    “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள் எண் 423

    மேற்குறிப்பிட்டுள்ள குறட்பாக்கள் பொருள்நிலை, மற்றும் நிகழ்ச்சி நிலை இரண்டையும் இறைஉணர் ஆன்மீகப்பயிற்சியில்  வெற்றி பெற அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியத் தெளிவை, இன்று நமக்கெல்லாம் எளிமையாக எடுத்துக்கூறுவதற்கு மகரிஷி அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கலாம்.

    மேற்குறிப்பிட்டுள்ள குறட்பாக்கள் பொருள்நிலை, மற்றும் நிகழ்ச்சி நிலை இரண்டையும் இன்று நமக்கெல்லாம் தெளிவாக கூறுவதற்கு உதவியாக இருந்திருக்கலாம்.

    மேலும் இது பற்றி விரிவாக அறிய இந்த இணையதள ஆசிரியர் இயற்றிய “நான் யார்?” எனும் நூலில், இறைவன் ஏன் மெய்ப்பொருள் என அழைக்கப்படுகிறான்? என்கின்ற பத்தாவது அத்தியாயத்தில், மெய்ப்பொருள் பற்றி வள்ளுவமும், வேதாத்திரியமும் என்ன கூறுகின்றன என்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளதனை வாசித்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

    இப்போது தெய்வப்புலவர் திருவள்ளுவரை வணங்குவோம். திருவள்ளுவரை உலகமே போற்றுவதாலும், திருக்குறள் உலகப் பொதுமறை நூல் எனப்போற்றப்படுவதாலும், திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதிலிருந்தும் திருவள்ளுவரின் அரிய பெருமைகள் தெரிய வந்தாலும், திருவள்ளுவரின் அறிவாற்றலை நினைத்துப்போற்றுவதாலும், இயல்பூக்க நியதியின் பயனை அடைய முடியும் என்பதற்காக, நம் குருதேவர் வழியாக திருவள்ளுவர் பற்றி அறிவது சிறப்புடையதாகும்.

     

    திருக்குறளை அறிவுக்கடல் என்கிறார் நம் மகரிஷி அவர்கள். அதனை நாம் ஆராய்ச்சி செய்து அதனை ஏற்றுக்கொள்ளலாமே.

     

    இறைஉணர் பயிற்சியாளர்கள் பயிற்சியில் எவ்வாறு வெற்றி பெறுவது?

     

    முதல் படி:

    ஆராய்ச்சியாகும்.

    1)   முதலில் இறை என்பது எது,

    2)   இறை எவ்வாறு இப்பிரபஞ்சமாகியது,

    3)   இறை எவ்வாறு நாமாக ஆகியுள்ளது அல்லது இறைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன,

    4)   கண்களால் காணமுடியாத ஒன்று எவ்வாறு இறையாக இருக்கமுடியும்,

    5)   அப்படியானால் இறையைக் கண்டதாக அருளாளர்கள் கூறுவது என்ன

     

    போன்ற வினாக்களின் மூலமாக ஆராய்ச்சியினைத் தொடங்க வேண்டும்.

     

    இரண்டாவது படி: தெளிவு பெறுதலாகும்.

     

    இவ்வளவு ஆராய்ச்சி செய்ததன் முடிவு என்னவாக இருக்க வேண்டும்? தெளிவு பெறவேண்டும் என்பதேயாகும். என்ன தெளிவு அது?

    1)   இறை என்பது எது,

    2) அதற்கும் நமக்கும் உள்ள உறவு என்ன,

     3) பிறந்து இறக்கப்போகின்ற இவ்வாழ்க்கையின் பொருள் என்ன,

       4) புலன்இன்பங்களில் அளவு மீறி, முறையையும் மாற்றி, மயக்கமுற்று புலன்களுக்கு அடிமையாகிய அறிவை மீட்டு விடுதலை செய்து (Liberation) தன்னையே உணர்வது ஒன்றேதான் என்கின்ற தெளிவுதான் முதற்படியான ஆராய்ச்சியின் முடிவு அது.

     

       5) இதனைத் தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை என்பதனை உறுதியாக கருத்தில் கொண்டு கடமை ஆற்றுவதே மனித வாழ்க்கையின் பொருள், அர்த்தம், நோக்கம், பயன், பேரின்பம். மரணமிலா பெறுவாழ்வு வாழ்தல் என்கின்ற தெளிவு.

     

    மூன்றாவது படி: பயிற்சியாகும்.

     

    ஆராய்ச்சி செய்து, தெளிவு பெற்ற பிறகு செய்யவேண்டியது பயிற்சியாகும். ‘கற்க கசடறக் கற்பவை; கற்ற பின் நிற்க அதற்குத் தக’ என்பதற்கேற்ப, முறையான பயிற்சியாகிய மனவளக்கலையை மேற்கொள்ள வேண்டும்.

     

    நான்காவது படி: வெற்றி பெறுவதாகும்.

     

       வெற்றி பெறுவது. இது கர்மயோக வாழ்வு வாழ்ந்து மரணமிலா பெறுவாழ்வு வாழ்வதாகும்.

       மனித வாழ்வில் முழுப்பயனளிக்கக்கூடிய, எக்காலத்திற்கும், எவ்விடத்திற்கும், பொருத்தமானவையாக இருக்கும் நூல்கள் எது எனக்கூறுகிறார் மகரிஷி அவர்கள். அவை, ஆய்வு, தெளிவு, பயிற்சி, வெற்றி என்கின்ற நான்கு படிகளின் வழியாக திறமை அடைந்த அறிஞர்கள் எழுதும் நூல்களே என்கிறார் மகரிஷி அவர்கள். அத்தகைய நூல்களில் மிகச் சிலவே உள்ளதாகவும் கூறுகிறார். அவற்றில் ஓர் சிறந்த உயர்வைப் பெற்று மிளிர்வதுதான் திருக்குறள் என்கிறார்.

     

       அத்தகைய நூலாசிரியரின் திறமை எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

     

    1)   மெய்ப்பொருள் விளக்க நிலை பெற்று முழுமை பெற்றிருக்க வேண்டும் அந்த நூலாசிரியர் என்கிறார்.

    2)   மேலும் கூறுகிறார் மகரிஷி அவர்கள்:– விரிந்த அறிவோடு வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

    3)   சிறப்புற்று வாழ்வதற்கான நெறிகளை வகுத்திருக்கப்பட வேண்டும் அந்த நூலில் என்கிறார் மகரிஷி அவர்கள்.

     

    அத்தகைய சிறப்புக்களுடைய ஒரு நூல் திருக்குறள் என்கிறார் மகரிஷி அவர்கள். இனிமேல் திருவள்ளுவர் அல்லது திருக்குறள் என்கின்ற பெயரைச் உச்சரிக்கும்போதே இத்தனை சிறப்புக்களும் காதுகளில் வந்து ஒலிக்க வேண்டும். மகரிஷி அவர்கள் தான் அடைந்த பயனின் நன்றி உணர்வாக தன்னுடைய மானசீகக்குருவாகிய திருவள்ளுரை போற்றுகிறார்.

     

    நம் நம்குருவிடம் பெற்று வருகின்ற கிடைத்தற்கரிய பயனை அடைந்து வருவதால், நாம் போற்ற வேண்டியது, மேற்கண்ட சிறப்புகள் அத்தனையும் பெற்ற ஒரு நூலாசிரியரும், நூலும் முறையே வேதாத்திரி மகரிஷி அவர்களும், அவர் அருளியுள்ள நூலான திருவேதாத்திரியமும் ஆகும் என நினைந்து நினைந்து பணிவுகலந்த பெருமையினால் மனம் குளிர்ந்து, குளிர்ந்து, குருவின் காணிக்கையாக அறுகுணங்களிலிருந்து விடுதலை பெற்று, நாம் பிறவிப்பயனை இப்பிறவியிலேயே பெற்று விடுவதேயாகும். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

    ஆகவே ஆன்மீகப் பயிற்சியில் விரைவில் பண்பேற்றம் பெறுவதற்கு மகரிஷி அவர்கள் கூறியபடி இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழியான ‘எப்பொருளை, எச்செயலை, எவ்வுயிரை, எக்குணத்தை அடிக்கடி நினைந்து வந்தால் நினைப்பவரின் ஆற்றல் அப்பொருளினுடைய தன்மையினை அறிவிலும் உடலிலும் மாற்றம் பெறக்காணலாம்’ என்கின்ற சூட்சுமத்தை பயன்படுத்திய வகையில் இன்றைய அறிவிற்கு விருந்து, தெய்வப்புலவர் திருவள்ளுவர் மற்றும் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மாக்கள், செயல்கள், குணங்களைப்பற்றியும் ஆழ்ந்து சிந்திப்பதற்கான தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்தது குருவருளும், திருவருளும் என்பதனை நினைக்கும்போது உள்ளம் பூரிக்கின்றது.

    வாழ்க திரு பொருந்திய திருவேதாத்திரியம், வளர்க திரு பொருந்திய திருவேதாத்திரியம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                      வளர்க அறிவுச் செல்வம்..

    Loading

  • FFC – 165-வினா விடை – 14

     வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

                                                                                               VFY-வினா விடை – 14

    FFC – 165

                                           21-02-2016—ஞாயிறு

    சென்ற அறிவிற்கு விருந்தின் தொடர்ச்சி…

     சிந்திக்க வினாக்கள்-131

    (07-12-2015 – திங்கள்)

     குரு சீடர் உறவில் அலை இயக்கத்தின் பங்கு என்ன?

     விடை:–  தொடர்ச்சி…

         சென்ற விருந்தில் பொதுவாக உறவுகள் பற்றி அறிந்தோம்.  இப்போது உறவுகளில் நிரந்தரமான உறவு பற்றியும், அந்த உறவினை மீட்டெடுக்க குருவின் உறவு ஒன்றே எவ்வாறு உதவுகின்றது என்று அறிய இருக்கிறோம்.  குருவருள் இன்றேல் திருவருள் இல்லை என்கின்ற உண்மையினை நினைவில் கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன்.  ஆகவே குருவிடம் வைத்துக்கொள்ள வேண்டிய  உறவு பற்றி  ஆராய்வோம்.

                        குருவிடம்,

                        எத்தகைய  உறவு,

                        ஏன்  அவசியமாகின்றது? 

                        குரு சீடரின் உறவு என்ன பயனை அளிக்கின்றது? 

                       எதற்காக சீடன் குருவைத் தேடுகிறான்? 

       ஒருபுறம் இவ்வாறெல்லாம் வினவிக்கொண்டிருந்தாலும் உண்மையில்  இயற்கையே/இறையே பரிபக்குவ நிலையிலுள்ள சீடனுக்கு ஒரு குருவிடம் உறவை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

       அத்தகைய குரு சீடர் உறவால் ஏற்படும் பயன்கள் என்ன?  பயன்கள் என்று பன்மையில் சொல்வதைவிட ஒருமையில் சொல்வதுதான் சரியாக இருக்கும். அந்த ஒன்றுதான்  பண்பேற்றமாகிய ஒரே பயன். எப்படி கல்வி நிலையங்களில் பாடம் கற்றுத்தரும் ஆசிரியரின் கல்வித்தகுதி நிலைக்கு மாணவனும்(ஆசிரியர்  நிலைக்கு), ஒரு நாளில்  உயர முடிகிறதோ அதுபோல், குரு–சீடர் உறவால், குருவிற்கு நிகராக   சீடன் பண்பேற்றம் பெற வேண்டும்.

    • ‘நானெனினும் நீ எனினும் பேரறிவு நிலையில் ஒன்று’,
    •  ‘வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்’,
    •  ‘உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது’
    • ‘நீங்களும் இதுபோல் ஆகலாம்’

    என்கின்ற மகரிஷியின் ஆசீர்வாதங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதனை நினைவிற்கொள்ள வேண்டும். எதுபோல் நாம் ஆக முடியும் என்பதனை மகரிஷி அவர்களின் வாய்மொழியாகவே அறிவோம்.

    neengalum_idhupolaagalaam 

    மேலும் குரு–சீடர் உறவு ஏற்படுவது பற்றி மூன்று வரிசைக் கிரமத்தில் மகரிஷி அவர்கள் உலக மக்களுக்காக கூறுவதனைக் கவனிக்க வேண்டும்.

    1)   குருவின் தொடர்பு  (1955)  இதனை தனது 44 வது வயதில், (இறையுணர்வு பெற்ற பிறகு 9 வருடத்திற்குப் பிறகு இயற்றியுள்ளார்)  உய்வதற்கு வழியைத் தேடிக்கொண்டிருந்தபோது குருவின் தொடர்பு கிடைத்தது என்கிறார்.  அதனால் அடைந்த மாற்றங்களைக் கூறுகிறார். கடைசி வரியில் சிந்தனையில் ஆழ்ந்து பல விளக்கங்கள் கண்டதாகக் கூறுகிறார் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

     2)   குருவின் சேர்க்கை (15-08-1984)  இதனை தனது 73 வயதில் இயற்றியுள்ளார்.  குருவின் சேர்க்கையால் என்ன நிகழும் என்று கூறுகிறார்.   தப்பாமல் குருவினுடைய உயர்வு  மதிக்கின்ற சீடனைத் தரத்தில் உயர்த்திப் பிறவிப் பயனை நல்கும் என்கிறார்.  ‘தப்பாமல்’ என்பதால்  பிறவிப்பயனை அடைவதில் உறுதியினைக் கூறுகிறார். அதற்கு அவர் கூறும் நிபந்தனை என்ன?  குருவுடன் சேர்ந்தாலே பிறவிப்பயன் கிட்டிவிடாது.  இதுவரை  எத்தனையோ அருளாளர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்திலும் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அருளாளர்கள் தம் அருட்செய்தியினை கவிகளாகவும், உரைநடைகளாகவும் எழுதிவிட்டுச் சென்று விட்டனர். ஆனால் அந்த அருளாளர்கள் கூறும் அறநெறியில் வாழ்கின்றதா இந்த சமுதாயம் என்றால் ஐயமே. எனவே குருவுடன் சேர்ந்துவிட்டால் மட்டுமே பிறவிப்பயன் கிட்டிவிடாது என்பதனை கருத்தில் கொண்டுதான், குருவினுடன் சேர்ந்தமைக்கான காரணமாகிய பண்பேற்றத்தை பெறுவதற்கு எளிய முறையாக, இயல்பூக்க நியதியைப் பயன்படுத்தச் சொல்கிறார். குருவை மதித்து ஒழுகினால்தான் தப்பாது குரு உயர்வு சீடனைத் தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும் என்றும் அறிவுறுத்துகிறார்,

        இயல்பூக்க நியதியினை பயன்படுத்துதல் என்பது என்ன?  இயற்கையின் ஆதிநிலை/இறைவெளி முன்று திறங்களில் ஒன்று இயல்பூக்கம் என்பதனை அறிவோம்.  அப்படியானால் என்ன?  இயல்பாகவும் இருப்பது, ஊக்கத்துடனும்  செயல்படுவது அத்திறன். அத்திறன் ஊக்கத்துடன் இருந்து பேரறிவின் தன்மாற்ற நிலையில் தகுந்த மாற்றங்களைக் கொடுத்து ஏற்றத்தை கொடுத்திருக்கின்றது. இன்று நாம் காணும் எல்லாத் தோற்றங்களும் எதில் இருந்து தோன்றியுள்ளன?  வேகமும்(Force) விவேகமும்(Consciousness) உள்ள இயற்கையின் ஆதிநிலையாகிய வெட்ட வெளியிலிருந்துதான் தோன்றியுள்ளன. எல்லாத் தோற்றங்களும் விண்களின் கூட்டால் அமைந்தாலும்,  அவை ஒரே மாதிரியாக இருப்பதில்லை.  காரணம் அவற்றில் உற்பத்தியாகும் காந்தம், அதனுடைய தன்மாற்றங்களான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம், மனம் ஆகிய ஆறினால் அந்த வடிவம்  வெளிப்படுத்தும்  குணங்களும், அததற்கு உரிய இயக்கச் சிறப்புகளுமேயாகும். இதனையே இயல்பூக்கம் என்கிறார் மகரிஷி அவர்கள்.

         ஆதிநிலையிலிருந்த இயல்பூக்கம்தான்

         தன்னுடைய மாற்றத்தில் விண்ணிலிருந்து ஆரம்பித்து ஆதிமனிதன் தோன்றி  மனிதன் சிந்திக்க ஆரம்பிக்கும் வரை உதவியாக இருந்து வந்துள்ளது.

         இனி தன்மாற்ற சுழற்சி பூர்த்தியாக, அதாவது

         அறிவில் முழுமை அடைந்து, ஆதியில் இருந்த விவேகத்தைப் பெற,  

         மனிதன்தான், பேரறிவிற்கே,  தன்மாற்றம்  அடைய உதவிய   அந்த இயல்பூக்க நியதியை இப்போது தன்னுடைய செயல்களால்  ஆறாம் அறிவு பண்பேற்றம் பெறுவதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

         ‘இன்னும் பரிணாமம் பூர்த்தியாக வில்லை’ என்கிறார் ஓர் அறிஞர்.  அந்த அறிஞரின் ஆதங்கத்தை போக்குவதற்கு குரு சீடா் உறவின் மூலம், விலங்கினப்பண்பிலிருந்து தெய்வீகப்பண்பேற்றம் ஏற்பட இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  எனவேதான் அந்த  இயல்பூக்க நியதியினை மனிதன், குரு சீடர் உறவிலும் பயன்படுத்திக் கொள்ளச் சொல்கிறார் மகரிஷி அவர்கள்.

    Amazing_Guru


        எவர் ஒருவர் குருவை மதித்து ஒழுகினாலும் தப்பாது குரு உயர்வு மதிப்போரை தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை அளிக்கும் என்கின்றார் மகரிஷி அவர்கள். 


    ஒருவரிடம் இருந்த உயர்வுதான் மற்றொருவரிடம்  உயர்வை அளிக்க முடிகின்றது. இங்கேதான் இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்தச் சொல்கிறார்.  இயல்பூக்க நியதியினை மட்டுமல்லாது இயல்பூக்க தேற்றத்தின்(நியதியின்) கிளைத்தேற்றத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  எந்த ஒரு பொருளையும், எந்த ஒரு செயலையும், எந்த ஒரு குணத்தையும் அடிக்கடி நினைத்து வந்தால், நினைப்பவரின் ஆற்றல் அறிவிலும், உடலிலும் மாற்றம் காணும் என்கிறார். இது இயல்பூக்க நியதியின் அடிப்படையில் நடக்கின்றது என்கிறார். 

      மேலும் ‘அடிக்கடி நினைத்து வந்தால்’ என்பதற்கான வரையறை என்ன?  அங்கேதான் இயல்பூக்க தேற்றத்தின்(நியதியின்) கிளைத்தேற்றத்தை(corollary) ஆன்ம சாதகன் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.  அதாவது ‘தான் உயராது மற்றவரின் உயர்வை ரசிக்கவும், மதிக்கவும் முடியாது’ எனவும்  மற்றொரு இடத்தில் கூறுகிறார்  மகரிஷி அவர்கள். இதனை நாம் இயல்பூக்க நியதியின் கிறைத்தேற்றமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே ‘அடிக்கடி நினைத்து வருவதற்கு’ வேறு யாரும் சான்று தருவதற்கில்லை.  தன்னுடைய ஆன்மாவின் அடித்தளமான இறையே தருவதுதான்.  ஆகவே குருவின் ஆன்மாவையும், செயல்களையும், குணங்களையும் உணர்ந்து நெஞ்சாரப் போற்றி, போற்றி ஏற்றி வரவேண்டும்.  குருவின் அரிய பெருமைகளை தானும் நினைத்துப்பார்த்து நெஞ்சம் மகிழ வேண்டும். பிறர்க்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். ஒரு வேளை அவர்களுக்கு(பிறர்க்கும்) குருவின் அரிய பெருமைகள் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கலாம்.  உலகியல் வாழ்க்கையில் ஒருவரின் அரிய பெருமைகளை எடுத்துச் சொல்வது போன்றல்லாமல், குருவை மட்டுமே போற்றிக் கொண்டிருக்காமல், அவரது அரிய கண்டுபிடிப்புகளையும்(தத்துவம் என வழக்கத்தில் கூறப்படுவது) போதனைகளையும் எடுத்து நெஞ்சாரக் கூறவேண்டும்.

        இவ்வழியில்தான் குருவருளால் திருவருள் கிடைக்கும் என்பது இயல்பூக்க நியதியின் அடிப்படையில் அமைந்துள்ளது.  ‘குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ என்று ஆன்மீகத்தில் குருவின் மகிமைக்கு, முக்கியத்தும் கூறப்படுகின்றது.  இயல்பூக்க நியதியின் படிதான் குருவருளால் திருவருள் கிடைக்கின்றது. மாற்றாக, குரு, தன்கையில் வைத்துக் கொண்டு வேண்டியவர்களுக்கு திருவருளைத் தருவது இல்லை. நம் குருதேவரின் மானசீக குருவான அறிஞர் திருமூலர் கூறுவதுபோல் குருவிடமிருந்து நான்கு வழிகளில் தெளிவைப் பெறவேண்டும்.

     thelivu_guruvin

        இறை அரூபம் என்று தெளிந்தாகிவிட்டது. அப்போது இறைஉரு சிந்தித்தல்(literally) சாத்தியமில்லையாயினும், துரியாதீத தவத்தில் நம் அறிவை பேரறிவோடு இணைக்கிறோம்.  அதே நேரத்தில் 24 மணிநேரமும் இது சாத்தியமில்லை.  இறையைக் காட்டிக் கொடுத்த குருஉரு சிந்திப்பது என்பது திருமூலர் கூறுவதுபோல் சாத்தியம் தானே.

     3)   குருவின் உதவி(15-08-1984)  இதனை அதே நாளில் இயற்றியுள்ளார்.

          குரு சீடர் உறவில் அலைஇயக்கத்தின் பங்கு என்ன என்று பார்ப்போம்.  அலை என்பது என்ன? பேரியக்க மண்டலம் தோற்றம், இயக்கம், நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் காரணம் அலை இயக்கம்.  ஒன்றிலிருந்து அலை புறப்பட்டுச் செல்கின்றது என்றால், அது அப்பொருளின் தன்மையினை (modulated) எடுத்துச் செல்லும்.  அந்த அலை சென்று அடையும் பொருள் மீது அத்தன்மையினை கொடுக்கும்.  அலை மோதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுருவுதல், ஒன்றோடு ஒன்று கூடி ஒன்று பட்டு இயங்குதல் என்கின்ற ஐந்து வகைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

       அறிவை அறிந்த தூய்மை பெற்ற குருவிடமிருந்து வரும் காந்த அலைகள் மேற்கூறிய ஐந்து வகைகளில் சீடர் மீது தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.  இதனால்தான்  குருவின் திருமேனி காண்பதிலும், அவரது திருஉருவை சிந்தித்தலும் தெளிவை அளிக்க வல்லது என்கிறார் அறிஞர் திருமூலர்.  ஏனெனில் அறிவை அறிந்த குரு தெளிவைப் பெற்றவர்.  எனவே அவரிடமிருந்து வரும் காந்த அலை தெளிவினை ஏற்படுத்துகின்றது.

     அதேபோல் குருவினுடைய திருவார்த்தை கேட்பதும், அவருடைய திருநாமம் கேட்பதும் குருவினுடைய பண்புகளை சீடரின் கருமையத்தில் மெல்ல மெல்ல பதியச்செய்கின்றது. இவ்வாறு அலைஇயக்கத்தின் பண்புகள் தன் பதிதல் பணியைச் செய்தாலும், சீடரும் எந்த அளவிற்கு ஆர்வம் கொண்டு பரிபக்குவ நிலையில்(receptivity)உள்ளார் என்பதனைப் பொருத்து  ‘மெல்ல மெல்ல பதியச்செய்வது’ என்பது வெகு விரைவிலேயேயும் நடத்தி வைக்கும்.

         குரு அருளியுள்ள அறநூல்களிலிருந்து வரும் காந்த அலைகள்  சீடரின் மீது மோதி பிரதிபலிக்கின்றது, சிதறுகின்றது, ஊடுருவுகின்றது.  குருவினிடமிருந்து வரும் அந்தகாந்த அலை சிடரின் காந்த அலையோடு கூடி ஒன்றுபட்டு இயங்கும் போது சீடரின் பண்பேற்றமும் சிறிது சிறிதாக வளர்ந்து வரும்.(ஒன்று கூடி ஒன்று பட்டு இயங்குதல்).  இதனைத்தான் ‘எவரொருவர் குருவை மதித்து ஒழுகிவந்தால், தப்பாது குருவின் உயர்வு சீடரின் தரத்தை உயர்த்தி பிறவிப் பயனைத் தரும்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                வளர்க அறிவுச் செல்வம்

     

     

     

     

    Loading

  • FFC – 164-வினா விடை – 13

    வினா விடை – 13

    FFC – 164

    17-02-2016—புதன்


    சிந்திக்க வினாக்கள்-130

    (03-12-2015 – வியாழன்)

     அலை இயக்கப் பண்புகளாக மகரிஷி அவர்கள் கூறுவதென்ன?

    விடை:–

        மோதல்(clash), பிரதிபலித்தல் (Reflection), சிதறுதல் (Refraction) ஊடுருவுதல்(penetration), ஒன்றோடு ஒன்று கூடி ஒன்று பட்டு இயங்குதல் (Inter-action) என்கின்ற ஐந்து வகைகளான  அலை இயக்கப் பண்புகள் அலைகளுக்கு உள்ளதாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.


    சிந்திக்க வினாக்கள்-131

    (07-12-2015 – திங்கள்)

    குரு சீடர் உறவில் அலை இயக்கத்தின் பங்கு என்ன?

    விடை:–

        உறவு என்பது என்ன?  எந்த ஒரு மனிதனும் சமுதாயத்தில் தனித்து வாழ முடியாது.  சமுதாயத்தில் பிறருடைய உதவியால்தான் வாழ முடியும்.  அங்கேதான் உறவு வருகின்றது. முதல் உறவு தாய்,  இரண்டாவது உறவு தந்தை.  மூன்றாவது உறவுகள் பாட்டி தாத்தா. நான்காவது உறவுகள் சகோதர-சகோதரிகள்., பிறகு சுற்றம்.  இவ்வாறு உறவுகள் இன்றி யாரும் பிறப்பதில்லை.  அடுத்தது நண்பர்கள்.  நண்பர்களும் உறவுகள் வரிசையில்தான் வருகின்றனர். சமுதாயமும் உறவைத் தருகின்றது. வாழ்க்கைவள உயர்வுப் படிகளான ஐந்தில்  நட்பு  நலத்தையும் ஒன்றாக வைத்துள்ளார் மகரிஷி அவர்கள். எனவே எல்லோரிடமும் நட்புநலம் பேணுதல் வேண்டும்.

        ‘மாதா, பிதா, குரு தெய்வம்’  என்று தமிழ் மொழி கூறியிருந்தாலும், தாய் மகன் உறவு, தந்தை மகன் உறவு போல் பெரும்பாலோர்க்கு குரு சீடர் உறவு ஏற்படுவதில்லை.  தாய், தந்தை உறவு பிறப்பால் இயல்பாகவே ஏற்படுகின்றது.   பாட்டி, தாத்தா உறவு இரத்தத் தொடர்பால் இயல்பாகவே  ஏற்படுகின்றது. குருவின் உறவு இரத்தத் தொடர்பால் ஏற்படுவதில்லை. வருங்காலத்தில் குருவின் தொடர்பு இரத்தத் தொடர்பால் ஏற்படும். அதாவது தாய், தந்தையே தன் மகன், மகள் ஆகியவர்களுக்கு குருவாக அமைவர் மனவளக்கலை குடும்பத்தில்.   மாதா பிதா உறவிற்கு பிறகு குருவினுடைய உறவை தேடிப்பிடித்து ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே எளிதில் குரு-உறவை கண்டுபிடிக்க முடிவதில்லை. குரு எங்கோ ஒரு இடத்தில் இருப்பார். சீடன் எங்கோ ஒரு இடத்தில் இருப்பார். அவ்வாறு இருக்கும்போது இவ்வுலகில் எங்கெங்கு போய் குருவைத்  தேடுவது?

         பெரும்பாலும் சீடனுக்கு குருவை தேடிக் கண்டுபிடிக்கும் சிரமத்தை  இயற்கை/இறை கொடுப்பதில்லை.  சீடனுக்கு எந்த பிறவியில் பரிபக்குவ நிலை வருகின்றதோ, அந்தப்பிறவியிலும்,  எந்த  வயதில் பரிபக்குவ நேரம் வருகின்றதோ அப்போது குருசீடர் உறவை ஏற்படுத்தி வைக்கின்றது இயற்கை/இறை.   தகுதி வந்த பிறகுதான் குருவினுடைய தரிசனம் கிட்டுகின்றது. இவ்வாறாக மிகுந்த சிரமத்திற்குப் பிறகுதான், அதாவது தீயவினைப்பதிவுகள் ஒரளவிற்கு தீர்ந்த பிறகு, மீதமுள்ள தீய வினைப்பதிவுகளை போக்கிக் கொண்டு இப்பிறவியிலேயே இயற்கையின் ஆதிநிலையை/இறையை உணர்வதற்காகவே தெய்வத்தின் உறவை ஏற்படுத்தி வைக்க குருவின் உறவு கிடைக்கின்றது.

        எதற்காக குருவினுடைய உறவினை ஏற்படுத்திக் கொள்ளச் சொல்கின்றனர் ஆன்றோர்கள்? பல கோடி ஆண்டுகளாக (இறைவெளியிலிருந்து பின்னப்பட்ட நாளிலிருந்து  அறிவு), பலலட்சம் பிறவிகளாக (ஆதிமனிதனிலிருந்து) மறந்துவிட்ட தன்மூல உறவாகிய தெய்வத்தின் உறவை மீட்டுத் தருவதற்காக  குருவினுடைய உறவை ஏற்படுத்திக் கொள்ளச் சொல்கின்றனர். மாதா, பிதா, குரு தெய்வம் என்பதில் மாதாவையும், பிதாவையும் அறிந்து கொள்கின்ற மனிதனுக்கு மூன்றாமவராகிய குருவை அறிந்து கொள்வது, அநேகமாக/பெரும்பாலும், பெரும்பாலோருக்கு முடிவதில்லை. அந்நிலை இருக்கும்போது, வேதாத்திரி மகரிஷியின் தரிசனம் கிடைத்து அந்த மகாபுருஷரை குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் பெரும் பாக்கியம் செய்தவர்களே என்பதனை இத்தருணத்தில் நாம் அனைவரும் பதிவு செய்ய விரும்புகிறோம். கருமையப்பதிவுகளுக்கேற்ப, இயற்கையின் கருணையால்/இறைஅருளால் அப்படி கிடைத்தால், குரு கிடைத்ததும் குருவிற்கும் சீடருக்கும் இடையே கெட்டியான உறவு/பிணைப்பு (thick Bonding) ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஏன்? இதனை அறிஞர் திருமூலரின் அனுபவத்திலிருந்து அறியலாம். திருமூலர் அனுபவித்ததை அறிந்து கொண்டு அந்த யுக்தியினை இறையுணர்வு பெறுவதற்குப் பயன்படுத்தி வெற்றி பெறுவோம்.

    thelivu_guruvin

    மனிதனுக்கு ஏன் உறவுகள் அவசியமாகின்றது?  தாயின் உறவு இயல்பாகவே ஏற்பட்டுவிடுகின்றது.  பெற்றவளாயிற்றே அவள்.   தாய், குழந்தைக்கு பால் கொடுத்து, அன்னம் ஊட்டி சீராட்டி வளர்க்கிறாள்.  தந்தையின் உறவும் இயல்பாகவே அமைந்துவிடுகின்றது.  தந்தையும் குழந்தையின் வளர்ப்பில் பங்கு கொள்கிறார். பொருள் ஈட்டி அந்த பொருளைக் கொண்டு மனைவியையும் குழந்தையையும் வளர்க்கின்றார்.  இதனையும் தாண்டி மற்ற உறவுகளும் அவசியமாகின்றது.  மனிதன் தனக்கு தேவையானவற்றைத் தானே செய்து கொள்ள முடியாது. சமுதாயத்திலிருந்துதான் பெற வேண்டியுள்ளது.

       விலங்குகளிடம் உறவு என்பது கிடையாது.  விலங்கினங்களில்,  குட்டிகளுக்கு(offsprings) சில நாட்கள் தாயின்  அரவணைப்பு அவசியமாகின்றது.  உதாரணத்திற்கு பறவையை எடுத்துக் கொண்டால் இறக்கை முளைத்து குஞ்சு பறக்கும் வரைதான் அதற்கு தாயின் அரவணைப்பாகிய உறவு அவசியமாகின்றது,  பிறகு தாயின் அரவணைப்பு தேவையில்லை, எனவே அங்கே உறவு ஏற்படுவதில்லை. பெட்டைக்கோழி சில நாட்கள் வரை தன் குஞ்சுகளை தன்னுடன் வைத்துக் கொள்கின்றது.  குஞ்சுகளுக்கு  உணவை தனது அலகால் எடுத்துக் கொடுத்து அது சாப்பிட இது வேடிக்கைப் பார்த்து மகிழ்கின்றது. இவ்வாறாக குஞ்சுகளுக்கு  பலம் கிடைக்கும் வரை தாய்க்கோழி பராமரிக்கின்றது. பிறகு தானே உணவு தேட ஆரம்பித்ததும், கோழி அவற்றை விரட்டி  விடுகின்றது. சில நேரங்களில் தாய்க்கோழி உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தன்னுடைய  வளர்ந்த பிள்ளைகள்(குஞ்சுகள்) உணவை உண்ண வந்தால் முன்பு உணவை எடுத்து தனது பிள்ளைகளுக்கு  காட்டிய அதே பெட்டைக் கோழி இப்போது கொத்தி விரட்டியடிக்கும்.  ஆகவே விலங்கினங்களுக்கு தன்னுடைய offsprings வளா்கின்ற வரைதான் தாய் உறவு தேவையிருக்கின்றது,

        ஆனால் மனிதனுக்கு மட்டும், சுற்றம், நட்பு மற்றும் சமுதாயம் என்கின்ற மூன்று நிலைகளிலும், உறவு, பிறந்ததிலிருந்து கடைசிவரை எப்போதும் அவசியமாகின்றது. இறந்த பிறகும் அவன் உடல் அடக்கம் செய்யும் வரை உறவு தேவைப்படுகின்றது. அந்த உடலைதூக்கிச் செல்வதற்கு நான்கு பேராகிலும் தேவை.  இதனை யாரும் மறுப்பதிற்கில்லைஇந்த உறவு என்ன செய்கின்றது. துக்கத்தில் பங்கு கொள்கின்றது. ஆறுதல் கூறுகின்றது. உடலால், பொருளால், சில சமயங்களில் அறிவாலும் உதவி செய்கின்றது.  மொத்தத்தில் உறவினால் மனிதன் பயன் பெறுகிறான். ஆனால் இந்த உறவுகளெல்லாம் நிரந்தரமானது அல்ல. நிரந்தரமான உறவோடு உறவு வைத்துக்கொள்ளவே இப்பிறவி கிடைத்துள்ளது.  தொடரும். 

     அடுத்த அறிவிற்கு விருந்தில் (21-02-2016 ஞாயிறு) உறவுகளில் நிரந்தரமான உறவு பற்றியும், அந்த உறவினை மீட்டெடுக்க வழி என்ன என்றும் அறிய இருக்கிறோம்.  வாழ்க வளமுடன். 

    Loading

  • FFC – 163-வினா விடை – 12-2/2

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    வினா விடை – 12-2/2 

    FFC – 163

    14-02-2016—ஞாயிறு

     

    சிந்திக்க அமுத மொழிகள்- 132

     (05-12-2015—சனி)

    சென்ற அறிவிற்கு விருந்தின் தொடர்ச்சி:

    “நான் கற்றுக் கொடுக்க எண்ணுவது அறிவை அறியும் அறிவையே.”

                                                                                          …. அர்னால்டு
    பயிற்சி—
    1) வேதாத்திரியம் எதனைக் கற்றுக் கொடுக்கின்றது?
    2) ஏன் அறிஞர் அர்னால்டு அறிவை அறியும் அறிவைக் கற்றுக் கொடுக்க எண்ணுகிறார்?
    3) அறிவின் அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறி “அன்பர்களே வாரீர்”
    என அழைக்கிறார்?
    4) ஒரு அறிஞர் கூறியதை அதே பொருளில் மற்ற அறிஞர்கள் யாராவது கூறியிருந்தால் அதனுடன் இணைத்துப் பார்த்து சிந்திக்க வேண்டாமா? இதன் பயன் என்ன?

    விடை:– தொடர்ச்சி–

    சென்ற அறிவிற்கு விருந்தில் அமுதமொழியின் பயிற்சிக்கான முதல் மூன்று கேள்விகளான
    1) வேதாத்திரியம் எதனைக் கற்றுக் கொடுக்கின்றது?
    2) ஏன் அறிஞர் அர்னால்டு அறிவை அறியும் அறிவைக் கற்றுக் கொடுக்க எண்ணுகிறார்?
    3) அறிவின் அறிவியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறி “அன்பர்களே வாரீர்” என அழைக்கிறார் என்பதற்கு விடைகளை அறிந்து கொண்டோம்.
    இன்றைய விருந்தில் நான்காவது கேள்வியான ஒரு அறிஞர் கூறியதை அதே பொருளில் மற்ற அறிஞர்கள் யாராவது கூறியிருந்தால் அதனுடன் இணைத்துப் பார்த்து சிந்திக்க வேண்டாமா? இதன் பயன் என்ன? என்பதற்கான விடையினை அறிவோம்.
    3) ஒரு அறிஞர் கூறியதை அதே பொருளில் மற்ற அறிஞர்கள் யாராவது கூறியிருந்தால் அதனுடன் இணைத்துப் பார்த்து சிந்திக்க வேண்டாமா என்கின்ற கேள்விக்கு ‘ஆம்’ என்பதுதான் பதில். இதன் பயன் என்ன என்று கேட்கப்பட்டுள்ளது.

    வாழ்வியல் உண்மையைப் பற்றி ஒரு அறிஞர் கூறுவதனை ஒரு சிலர் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக் கொண்டு அதன் படி வாழ்வை நடத்த ஆரம்பிப்பர்.
    ஆனால் வேறு சிலருக்கு அறிஞர் கூறுவது சரி என்று சில நேரங்களில் மனம் நினைத்தாலும், பிறகு கடைபிடிக்க முயலும்போது மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும்.
    ஆகவே ஒரு உண்மையை ஒர் அறிஞர் கூறியிருந்தாலும் வேறு பலர் அறிஞர்கள் அவ்வுண்மையையே வேறு கோணத்தில் கூறியிருந்தாலும், இணைத்துப்பார்த்து சிந்திக்க வேண்டும். அப்போது அவ்வுண்மைக்கு நிரூபணம் கிடைக்கும். அவ்வுண்மை நம்மால் உறுதிபடுத்தப்படும். அதன் பிறகு அது தன்னுடைய கண்டுபிடிப்பாகும். பிறகு கடைபிடிப்பது எளிதாகவும் இருக்கும்.* எந்த ஒன்றும் நம்முடையதாக இருக்கும்போது அதனை பயன்படுத்துகின்ற உரிமை தானாக வந்துவிடும். ஆனால் அதுவே பிறருடையதாக இருக்கும் பட்சத்தில் அதனை பயன்படுத்தும் உரிமை இல்லாமல் போய்விடும். அதுபோல்) அறிஞர்கள் கண்டுபிடிப்புகளான வாழ்வியல் உண்மைகளை நிரூபணத்திற்கு உட்படுத்தப்பட்டு, அது நம்முடைய கண்டுபிடிப்பாகிவிடும்போது அதனை வாழ்வில் பயன்படுத்துவது என்பது இயல்பாகிவிடும். இந்த இயல்பை இயல்பாக்கிவிடுவதற்காகத்தான் மகரிஷி அவர்கள் ‘நான் சொல்வதனை அப்படியே எடுத்துக் கொள்ளாதே. சந்தேகம் கொள்— Don’t accept what I say. Doubt what I say’ தகவல், உறுதிபடுத்துதல். மாற்றமடைதல்—Information, Confirmation. Transformation என்கின்ற தாரகமந்திரத்தை தந்துள்ளார்.
    அறிஞர்கள் கூறிய அமுதமொழிகள் என்பது ஏதோ பொழுதுபோக்கிற்காக கற்பனைக்கதைகள் படிப்பது போன்றதல்ல. அல்லது பத்திரிகைகளில் வரும் துணுக்குகள் போன்றதோ அல்ல.

    வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் வாசிப்பதற்காக மட்டுமின்றி வாழ்க்கையில் கடைபிடிப்பதற்காகவே அமிழ்தமொழிகள் உதிர்க்கப்பட்டுள்ளன/உதிர்க்கப்படுகின்றன.

    சமுதாயம் அவற்றை கடைபிடித்து இன்ப வாழ்வு வாழும்போதுதான், சமுதாயத்தின் மீது ஆதங்கமும் அக்கறையும் கொண்ட அவ்வறிஞர்களின் ஆன்மா குளிரும், மகிழுறும்..
    .

    இங்கே ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். முகம் தெரியாத நம்மீது அவர்களுக்குத்தான் ஏன் இந்த அக்கரை; அதனால் அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் ஏதேனும் ஆதாயம்தான் உள்ளதா? அல்லவே!

    நாம் அவ்வாழ்வியல் உண்மைகளை கடைபிடித்து அறிஞர்கள் கூறியுள்ளதுபோல் இன்ப வாழ்வு வாழ்வதேற்கே அறிஞர்களின் வழியாக இயற்கேயே/இறையே ஏற்படுத்திய புனித ஏற்பாடுதான் அது. அறிஞர்கள் சாதாரண மனிதர்களைப்போல் அல்லாமல்

    புலன் வாழ்க்கை மட்டுமே வாழ்வின் நோக்கம் எனக் கருதாமல்,
    மிகுந்த சிரமப்பட்டு, புலன்களை வென்று அதாவது புலன்களை துன்பவலைகளாக(suffering traps/traps for suffering) மாற்றிவிடாமல் உணர்கருவிகளாக மட்டுமே(sensing tools) பயன்படுத்தி,
    அதற்காக சாதாரண மனிதர்களைப் போலல்லாமல் தங்கள் வாழ்நாளையே தியாகம் செய்திருக்கிறார்கள்.
    தியாகம் என்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. இறையின் அனுக்கிரகம் இல்லாமல் முடியாது.
    அவ்வாறாக இறையே அறிஞர்களின் வாயிலாக அருளிய அமிழ்தத்தை பருகாமல் இருப்பது அறிவுக்கண்ணிருந்தும், அறிவொளி இருந்தும், அறிவொளியில் வாழாமல்,
    திக்குத் தெரியாத இருண்ட காட்டில் தவித்துக் கொண்டிருப்பது போலல்லவா இருக்கின்றது சாதாரண மனிதர்களின் வாழ்வு!
    இருட்டில் குருட்டுவாழ்க்கை வாழ்வதுபோல்தானே உள்ளது?! அப்படி இருக்கலாமா? இறைநம்பிக்கை உள்ளவர்கள் அனைவருமே. இறை அருள் பெற விரும்புகின்றவர்கள்தானே?! அப்படியிருக்கும்போது, இறை அளித்திருக்கும் அறிஞர்கள் வாயிலாக உதிர்த்த மொழிகளின் அமிழ்தத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டாமா?
    உரிய செயலை செய்துதான் வேண்டிய பயனைப் பெற முடியும் என்பது இயற்கைநீதி என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டுமல்லவா?
    அமுத மொழிகளை மனிதன் பின்பற்றுவது என்பது இறைஉணர்வு பெற துணைநிற்கும், அறநெறியின் இரண்டாவது அங்கமான ‘கடமை’ என்பதனையும் மறந்து விடக்கூடாது.
    ‘ஆண்டவனுக்கு தரும் மரியாதைக்கு அடுத்தது கடமைதான்’ என்று கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் கூறுவதனை இப்போது நினைவிற்கொள்வோம்.
    நல்லவற்றை பின்பற்றாமல் இறை அருள் கிடைத்திடுமா? அறிஞர்கள் உதிர்த்துள்ள அமுதமொழிகளை எல்லாம் ஆழ்ந்து–விரிந்து சிந்தித்து நாம் மதிக்க வேண்டாமா?!

    * அறிஞர்களின் அமுதமொழிகளை தன்னுடைய கண்டுபிடிப்பாக்கிக்கொள்ள வேண்டும் என்று சற்றுமுன் கூறியிருக்கிறோம்.

    ‘தன்னுடைய கண்டுபிடிப்பாக்கிக் கொள்ளவேண்டும்’ என்றால் என்ன பொருள்? ஒருவர் அமுதமொழிகளுக்கு நிரூபணத்தைக் கண்டுபிடிக்கும் போது அது அவருடையதாகிவிடும்(அவர் கண்டுபிடித்ததாகிவிடும்). அதாவது நிரூபணம் கிடைக்கும் போது அந்த உண்மையினை மீண்டும் நாமும் கண்டுபிடித்தது போலாகும். (அப்படி கண்டுபிடித்து கடைபிடிப்பதில் முந்திக்கொள்பவர்களே சரித்திரத்திலும் இடம் பிடிக்கின்றனர்) அப்படியென்றால் அவ்வுண்மையினை வாழ்க்கையில் கடைபிடிப்பது சிரமில்லாமல் இருக்கும். எவ்வாறெனில் நமக்கு முன்னர் அவ்வுண்மையைக் கண்டறிந்த அறிஞர்கள் தங்களது ஆழ்ந்து விரிந்த சிந்தனையால்தான், அவ்வுண்மையினை தங்களின் வாழ்க்கையில் கடைபிடித்துக் கொண்டதை/ கடைபிடித்து வருவதனை நமக்குத் தெரிவித்திருப்பதால் நாமும் அதனை வாழ்க்கையில் கடைபிடிப்பதென்பது மிக மிகச் சுலபமாக இருக்கும்.

    மேலும் மனிதனாக வாழும் கலையில்,
    மனிதனாகப் பிறந்தவர்களில் ‘ஒருவருக்கு முடிந்தது, மற்றொருவருக்கு முடியாமல் போவது’ என்பது எவ்வாறு ஏற்கமுடியும்? ‘உத்தம நண்பர்காள் உங்கட்க்கும் உரியது’ உரியது என்று நவயுக வியாசர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியிருப்பதை எப்போதும் நினைவிற் கொண்டு செயல்படுவோம்.

    அறிஞர்கள் கண்டுபிடித்துக் கூறும் வாழ்வியல் உண்மைகளை வாழ்க்கையில் கடைபிடித்து பயன் அடைவதோடு மட்டுமல்லாமல், சிந்திக்கும் திறனும் நாளுக்கு நாள் அதிகரிக்கும். பிறகு நமது பங்கிற்கு நாமே மனித வாழ்விலிருந்து உண்மைகளைக் கண்டுபிடித்து நம்முடன் வாழ்கின்ற சக மனிதர்களுக்கும் சொல்லலாமன்றோ? அறிஞர்களாகத் திகழ்வோம். வாழ்க வளமுடன்.

    நம் குருநாதரும், உலகநலத் தொண்டரும், உலகத்தையே உய்விக்கக் கூடிய “வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்” என்கின்ற மந்திரத்தை அருளியவருமான வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனிதகுலத்தின் மீது கொண்ட அக்கறையையும், ஆதங்கத்தையும், 55 வருடங்களுக்கு முன்னர்
    அவர் அருளிய பாடலின் வாயிலாக அறிவோமாக!

    சாதனையே அறநெறி(21-12-1961)
    அறநெறியைப் போதிக்க புதிய நூல்கள்
    அவசியமே இல்லைஇனி; மேலும் மேலும்
    அறநூல்கள் எத்தனையோ இந்நாள் மட்டும்
    அறிஞர்பலர் அளித்துள்ளார்; அவையே போதும்!
    அறம்பிறழா நெறிநின்று, மக்கள் வாழ
    அவசியமாம் பொருட்களோடு கல்வி கிட்ட,
    அறவோரே திட்டமிட்டு அமுல் செய்வீரே!
    அதன் மூலம் அறம்வளரும்; உலகம் உய்யும்,
    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    “நான் கற்றுக் கொடுக்க எண்ணுவது அறிவை அறியும் அறிவையே.” என்கின்ற அர்னால்டு அறிஞரின் அமுதமொழி நம்மை எல்லாம் ஆழ்ந்து விரிந்து சிந்திக்க வைத்து, அறிவை அறியும் கலையான மனவளக்கலை மேலும் மேலும் விரைவில் உலக மக்கள் அனைவருக்கும் எளிமையாக பரவ நம்முடைய எண்ண அலைகளை பரப்பச்செய்துள்ளது. எண்ணமே இயற்கையின் சிகரமாக உள்ளதால் இயற்கை தான் விரும்புகின்ற மனிதகுலத் தேவைக்கான மாற்றங்களைக் கொண்டுவர மனித எண்ணங்களின் வாயிலாகவே நடத்தி வைக்கின்றது என்கின்ற உண்மையையும் அறிந்து கொள்கிறோம். எந்த ஒரு நெடும் பயணத்திற்கும் வாகனம் தேவையிருப்பதுபோல், பேரறிவின் நெடும்–தொடர்–தன்மாற்ற பயணத்திற்கு தேவையான வாகனம் மனித எண்ணமே என்பதால்( In other words when fraction demands Totality supplies– Vethathri Maharishi) ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்கின்ற உண்மையினை இப்போது பதிவு செய்ய விரும்புகிறோம்.

    ஆகவே எண்ணமே தன்மாற்றத்தின்(பரிணாமத்தின்) வாகனம் என்றிருக்கும் போது ஒட்டு மொத்த மனிதகுலமும் தன்னுடைய எண்ண ஆற்றலை பயன்படுத்த வேண்டும் என நாம் அழுத்தமாக எண்ணுகிறோம்.

    வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

    வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு.

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளா்க அறிவுச் செல்வம்

    Loading