இன்றைய விருந்து

  • FFC – 153-வினா விடை – 5

    வாழ்க மனித அறிவு                                      வளர்க மனித அறிவு

                                                                                 வினா விடை – 5

                                                                                                             FFC – 153

    10-01-2016–ஞாயிறு

    சிந்திக்க வினாக்கள்-112
    (01-10-2015 – வியாழன்)

    1) செய்த பாவத்திற்கு தண்டனை வழங்கப்படும்.
    2) செய்த பாவத்திற்கு பாவமே தண்டனை வழங்கும்.

    இவ்விரு கூற்றுக்களில் எது சரியாக இருக்கும், ஏன்?

    விடை:-

    பாவம் என்பது, தீமையைத் தரும் ‘செயல். செயலுக்கு விளைவு உண்டு’ என்பது நியதியாக இருப்பதால் பாவச் செயலுக்கு விளைவாக தண்டனை வருகின்றது. ஆகவே ‘செய்த பாவத்திற்கு தண்டனை வழங்கப்படும்’ என்றால் மனிதன் செய்கின்ற பாவச் செயலுக்கு தண்டனை யாரோ ஒருவர் தனியாக இருந்து கொண்டு வழங்குவதாக பொருள்படுகின்றது.
    அவ்வாறு கூறுவதனைவிட ‘செய்த பாவத்திற்கு பாவமே தண்டனை வழங்கும்’ என்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் செயலுடன் விளைவு தொக்கி நிற்கின்றது. அதனால்தான் ‘செயலிலே விளைவாக வருபவன் இறைவன்’ என்கின்றது திருவேதாத்திரியம்.


     சிந்திக்க வினாக்கள்-113
    (05-10-2015 – திங்கள்)

    (அ) எண்ணம் எவ்வாறு இயற்கையின் சிகரமாகின்றது?
    (ஆ) இயற்கையின் சிகரமாகிய எண்ணத்தைக் கொண்ட மனிதகுலம் எவ்வாறு இருக்க வேண்டும்? ஏன்  அல்லலுறுகின்றது?

    விடை:-

    அ) இயற்கையின் ஆதிநிலை/ஆரம்ப நிலை எது? இயற்கையின் ஆதிநிலை வெட்டவெளி, இறைவெளி. இறை வெளி பேரறிவையுடையது. அந்த பேரறிவுதான் மனிதனிடம் ஆறாம் அறிவாக தன்மாற்றம் அடைந்துள்ளது. எண்ணம் என்பது என்ன? எண்ணம் என்பது ஆறாம் அறிவு தான் எண்ணுகின்றது.
    சிகரம் என்பது என்ன? மலையின் உயர்ந்த பகுதியினை சிகரம் என்போம். இந்தப் பொருளை வைத்துக் கொண்டு ஒன்றின் உயர்ந்த நிலையான சிறப்பையோ, உன்னதத்தையோ குறிப்பதற்கு சிகரம் என்போம்.
    ஆகவே இயற்கையாகிய பேரறிவே ஆறாம் அறிவாக உள்ளதால், ஆறாம் அறிவு எண்ணுகின்ற எண்ணம் என்பது இயற்கையின் சிகரமாகின்றது.
    ஆ) இயற்கையே/இறையே மனிதனாக தன்மாற்றமடைந்து ஆறாம் அறிவாக வந்துள்ள மனிதனின் எண்ணம் என்பது வேறுயாருடையதுமல்ல. எண்ணம் என்பது இயற்கையே/இறையே எண்ணுவதுதான். அவ்வாறிருக்கும்போது இயற்கையோ/இறையோ எதனை எண்ணும்? நல்லதையேதான் எண்ணும். ஆனால் மனிதன் என்னவெல்லாம் எண்ணுகிறான்?! அல்லலுறவேண்டிய தீய எண்ணங்களையும் எண்ணுகிறான். எனவே செயல் விளைவுத் தத்துவப்படி தீய எண்ணங்களுக்கு விளைவாக துன்பம் வருகின்றது. . இறையருள் இழக்கப்படுகின்றது, எனவே மனிதன் அல்லலுறுகிறான்.
    தெய்வமே மனிதனாகியும், அந்த தன்மாற்றத்தில் விலங்கினங்களாகி மனிதனாக வந்துள்ளதால், மனித ஆன்மா அதனை நீக்க பலபிறவிகளாக முயற்சி செய்யப்படாத, அழுத்தம் பெற்றுள்ள விலங்கினப்பண்பு வலிமையாக உள்ளது. ஆகவே மனிதன் முழுமையாக தெய்வீகத்தை வெளிப்படுத்த முடிவதில்லை. இதனையே சுவாமி விவேகானந்தர் மனிதன் என்பவன், விலங்கினப்பண்பு, மனிதப்பண்பு, தெய்வீகப்பண்பு ஆகிய மூன்றினையும் கொண்ட கலவை என்கிறார்.
    ஆகவேதான் மனவளக்கலையில் முதல் தற்சோதனை—செயல்முறை பாடமாக ‘எண்ணம் ஆராய்தல் வைக்கப்பட்டுள்ளது.
    மகான் மகா கவி பாரதியார் ‘எண்ணிய முடிதல் வேண்டும், அதே நேரத்தில் நல்லவை எண்ணுதல் வேண்டும்’ எனவும் இறைவியை வேண்டச் சொல்கிறார்.

    சிந்திக்க அமுத மொழிகள்- 113
    (02-10-2015—வெள்ளி)

    குருவின் பணி, உன்னை உனக்குள் இருக்கும் குருவை நோக்கித் திருப்பிச் செலுத்துவது ஆகும்.
    ….. ஸ்ரீ ரமண மகரிஷி

    பயிற்சி—
    1) “உனக்குள் இருக்கும் குரு என்பவர்” என்பவர் யார்?
    2) இக்கூற்றின் வாயிலாக பகவான் ரமணர் என்ன கூறுகிறார்?

    விடை:-

    1) வேதாத்திரிய இறையியல் என்ன கூறுகின்றது? அந்த இறையியல் அறிவைப்பற்றிய புதிய அறிவியலை Science of Consciousness) உருவாக்கியுள்ளது. வேதாத்திரிய—இறையியல்–அறிவியல், இறை எது என்றும், இறையேதான் உயிராகவும், அறிவாகவும், ஆன்மாவாகவும் உள்ளது என்கின்றது. அறிவு மனமாக இயங்குகின்றது. எவ்வாறு இயங்குகின்றது? உயிரின் படர்க்கை நிலையாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதாவது மனம் காந்த அலையாக உள்ளது.
    பொதுவாக அலை என்றால் அதற்கு இரு முனைகள் உண்டு. எங்கிருந்து அலை புறப்படுகின்றதோ அந்த முனை ஒன்று, மற்றொன்று எங்கு சென்றடைகிறதோ அது ஒரு முனை. உயிரின் படர்க்கை நிலையாகவும், மனம் காந்த அலையாக உள்ளதால், மனஅலைக்கும் இருமுனைகள் உண்டு. மனம் கருமையப் பதிவுகளிலிருந்து புறப்படுவதால் அது ஒரு முனையாகவும், எங்கு சென்று முடிவடைகின்றதோ/எந்த புறப்பொருட்களோடு தொடர்பு கொள்கின்றதோ அது ஒரு முனை.
    இந்த இரண்டு முனைகளில் புறப்படுகின்ற முனையை ‘மறுமுனை’ என்கின்றார் மகரிஷி அவர்கள். அந்த மறுமுனை புறப்படுகின்ற இடம்தான் தெய்வமே வீற்றிருக்கும் அகம். ஆகவே மனதின் மறுமுனை தெய்வம் என்கிறார் மகரிஷி அவர்கள்(The other end of mind is God). எனவே அகத்தே–உள்ளே, மனிதனுக்குள்ளும் இருப்பது தெய்வமேதான். அகத்தே தெய்வம் இருக்க, அகத்தை தூய்மை செய்து வர வர அதுவே உள்ளொளியாகி ஆன்மஒளியை வீசி வழிகாட்ட ஆரம்பிக்கின்றது. திக்குத் தெரிய இருண்ட காட்டில் வழிதெரியாமல் அலைந்து கொண்டிருந்தவருக்கு இருளை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி மெல்ல மெல்ல வழி காட்டுகின்றது. அப்படியானால் வழிகாட்டுபவருக்கு என்ன பெயர்? என்ன பெயர் வைக்கலாம்? குரு என்றுதான் பெயர்.
    அறிவை அறிந்த அருளாரிடம் தீட்சை பெறும்போது, உயிரிலிருந்து புறத்தே ஓடிக்கொண்டிருக்கின்ற மனம் உயிர் மீதே வைக்கப்படுகின்றது அருளாரின் கருணைச்செயலால் மனம் உள்ளே திருப்பி விடப்படுகின்றது. எனவே இதனைத்தான் குருவின் பணி, உன்னை உனக்குள் இருக்கும் குருவை நோக்கித் திருப்பிச் செலுத்துவது ஆகும்.
    2) இக்கூற்றின் வாயிலாக தெய்வம் வீற்றிருக்கும் அகத்தை தூய்மை செய்து வரும்போது அகமாகிய தெய்வமே குருவாக வழிகாட்டிவரும் என்கிறார் பகவான் ஸ்ரீ ரமணர்.

    சிந்திக்க அமுத மொழிகள்- 114
    (03-10-2015—சனி)

    “நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆவீர்கள்”

    …. சுவாமி விவேகானந்தர்.

    பயிற்சி—
    1) .இது எந்த விதியின் கீழ் நடைபெறுகின்றது?
    2) இந்த விதியைச் சுட்டிக்காட்டும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் பாடலை நினைவு கூறவும்.

    விடை:-

    1) இயல்பூக்க நியதியின் கீழ் நடைபெறுகின்றது.
    2)
    குருவின் சேர்க்கை(15-08-1984)
    “எப்பொருளை எச்செயலை எக் குணத்தை
    எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
    அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
    அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும்;
    இப்பெருமை இயல்பூக்க நியதி ஆகும்;
    எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
    தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
    தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்,”
    …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    அவ்வையார் கூறும் ‘அறிவினரை கனவிலும் நனவிலும் காண்பது இனிதினும், இனிது’ என்கின்ற எளிதான ஆன்மீகத் தொழில் நுட்பத்தை(Simple Spiritual Technique) அறிந்து அதனை பயன்படுத்த வேண்டும்.
    ஐயன் திருவள்ளுவர் ‘பெரியாரைத் துணைகோடல்’ என்கின்ற அதிகாரத்தில் பத்து வெவ்வேறு கோணங்களில் கூறியுள்ளதில், எது தனக்கு உகந்ததாக உள்ளதோ அதனைக் கண்டறிந்து அல்லது இயன்றால் எல்லாவற்றின் வழியாகவும், நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வாறு திருவள்ளுவர் அவதரித்து 20 நூற்றாண்டுகள் கழிந்தும், திருவள்ளுவரையும் மானசீக குருவாக்கிக் கொண்டாரோ அதுபோல் அவருடைய சீடர்களாகிய நாமும் திருவள்ளுவரையும் மானசீகக் குருவாக்கிக் கொண்டு, ‘தகவல், உறுதிபடுத்துதல், மாற்றமடைதல்––Inforamation. Confirmation. Transformation’ என்கின்ற தாரக மந்திரப்படி ஆட்சேபமில்லாது உறுதிபடுத்திய பிறகு, பின்வாங்காமல் பூரண முழுமனத்தோடு (in implicit obediience) தன்னை மாற்றிக் கொள்ள செயலில் இறங்க வேண்டும். இந்த ஆண்டு 2016 ஐ இறையுணர் ஆண்டாக மலரச்செய்வோம். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                              வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • FFC – 152-வினா விடை 4

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    வினா விடை 4

    FFC – 152

    06-01-2016–புதன்

    சிந்திக்க வினாக்கள்-127
    (23-11-2015 – திங்கள்)

    ஆன்மீகத்தில் ‘கண்டவர் விண்டதில்லை’ என்றிருக்கும்போது மகரிஷி அவர்கள் தான் அறிந்ததை அறிந்தவாறு எவ்வாறு கூற முடிகின்றது?

    விடை: பொதுவாக, ‘Bhramam cannot be comprehended’ எனப்படுகின்றது. ஆனால் ஆன்மீகத்தில் ‘கண்டவர் விண்டதில்லை’ என்றிருக்கும்போது மகரிஷி அவர்கள் தான் அறிந்ததை அறிந்தவாறு எவ்வாறு கூற முடிந்தது என்கின்ற காரணத்தை அவர் இயற்றியுள்ள கவியினிலே காணலாம்.

    FFC-152-5-NEW-கண்டவர் ஏன் விண்டதில்லை

     

    சிந்திக்க வினாக்கள்-128
    26-11-2015 – வியாழன்

    இறை எவ்வாறாக இருந்தால், ‘தூணிலும் இருக்கின்றான், துரும்பிலும் இருக்கின்றான்’ என்பது சாத்தியமாகின்றது? சற்று விளக்கவும்.

    விடை :-
    இங்கு, அங்கு என்றில்லாமல், இறை எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்கின்றனர் இறையை அறிந்தவர்கள். எங்கும் இறைந்து கிடப்பதால் இறைக்கு இறைவன் என்கின்ற காரணப் பெயர் உள்ளது. அப்படியிருக்கும்போது இறை தூணிலும், துரும்பிலும் இருந்துதானே ஆகவேண்டும். ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்றும் சொல்வதுண்டு. அணுவும் இறைதான், அதனை இயக்குகின்ற ஆற்றலும் இறையேதான். இவ்வாறிருக்கும் போது இறை எவ்வாறு இருந்தால் இது இறைக்கு சாத்தியமாகின்றது? இறை வெளியாக இருந்தால்மட்டுமே இது சாத்தியமாகும், இறையின் ஆதிநிலை வெளியாக உள்ளது. அந்த ஆதிநிலையில் தான் துகள்கள் தோன்றி விண்ணாகி, பஞ்சபூதங்களாகி, இன்று நாம் காணும் பிரபஞ்சம் மிதந்து கொண்டிருக்கின்றது. எனவே வெளிக்குள் தானே அனைத்தும் உள்ளது. ஆகவே இறைவெளியில்லாத இடம் கிடையாது.

    சிந்திக்க அமுத மொழிகள்- 129
    27-11-2015—வெள்ளி

    “நான் யார்?” என்ற கேள்விக்கு விடை கண்டு அந்த விடையின் வெளிச்சத்திலே தூய்மை பெற்று
    பிறருக்கு வழி காட்டும் அளவுக்குத் தன்னை உயர்த்திக் கொண்டு வாழ்தலே யோக வாழ்க்கையாகும்.”

    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    பயிற்சி—
    1) யோக வாழ்க்கை என்பது இதுதானா?
    2) ‘நான் யார்?’ என்கின்ற கேள்விக்கு விடைகிடைப்பது வெளிச்சம் என்றால் அதற்கு முன்னர் அறிவு இருட்டில் இருப்பதாக அல்லவா அா்த்தமாகின்றது?!

    விடை :-
    1) ஆம் யோக வாழ்க்கை என்பது இதுதான். வேறு எது யோக வாழ்க்கையாக இருக்க முடியும்? எதனை யோக வாழ்க்கை எனலாம் என்பதனை முடிவுசெய்தால் இதுதான் யோக வாழ்க்கை என்கின்ற முடிவிற்கு வந்துவிடலாம். ‘யோகம்’ என்றால் இணைதல் என்று பொருள். எதனுடன் இணைதல்? ஆன்மா தன்னுடைய பூர்வீகத்தை மறந்துவிட்ட நிலையில் இறையுடன் இணைதல் என்பதே யோகம். ‘யோகம் என்பதற்கு’ எல்லோரும் அறிந்த ஒரு பொருள் உள்ளது. அது ‘அதிர்ஷ்டம்’ என்பது. ஆன்மாவிலுள்ள மும்மலங்கள் நீங்கினால் தான் இறையுடன் இணைய முடியும். மும்மலங்கள்தான் எல்லாப்பிறவிகளிலும் பாவப்பதிவுகளாகியுள்ளன. பாவப்பதிவுகள் அவ்வப்போது துன்பங்களாக வருகின்றன. துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பதனை காணமுடியாது. அதிர்ஷ்டமில்லா வாழ்க்கை வாழ்பவனை ‘யோக வாழ்க்கை வாழ்கிறான்’ என சொல்ல முடியுமா? முடியாது, ஆகவே ‘நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு செயல்முறை விடை(practical understanding of Who is this I ?), மும்மலங்கள் நீங்கினால்தான் கிடைக்கும். மும்மலங்கள் நீங்கினால் வாழ்க்கை துன்பமிலா இறைவாழ்க்கையாக இருக்கும். அந்த வாழ்க்கையினை யோக வாழ்க்கை என்கிறார் மகரிஷி அவர்கள்.
    2) இரண்டாவது வினாவிற்கு வருவோம். விடை கிடைத்தலை வெளிச்சம் என்கிறார். அந்த வெளிச்சத்திலே தூய்மை செய்து கொண்டு பிறருக்கு வழிகாட்டும் தன்னை உயர்த்திக் கொண்டு வாழ்தலே யோக வாழ்க்கை என்கிறார். ஆம். விடை கிடைத்தல் வெளிச்சம்தான். ஏனெனில் அதற்கு முன்னர் அறிவின் இருப்பிடம் அறியாமல் இருக்கிறான். அதனால் அதற்கு அறிவின் இருப்பிடம் அறிவது என்பது ஆறாம் அறிவின் கடமையாகும், தர்மமாகும். அறிவு தன் கடமையை செய்யாதிருந்தால் அது இருட்டில் இருப்பதாகத்தானே அர்த்தம்? நான் அறிதலில் இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று கருத்தியல் புரிதல்(theoretical knowledge). மற்றொன்று செயல்முறை புரிதல்(practical understanding) கருத்தியல் புரிதலுக்கு பிறகு செயல்முறை புரிதல்தான் மனிதகுலத்திற்கு அவசியம். அப்போது கருத்தியல் புரிதலில் ஏற்பட்டுள்ள வெளிச்சத்தை அறிவு பயன்படுத்தி தன்னை தூய்மை செய்து கொள்ள முடியும். பிறருக்கு வழிகாட்டும் அளவிற்கு தன் அறிவை உயர்த்த வேண்டும். அதாவது ஒவ்வொரு மனவளக்கலைஞரும் இறைத்தூதுவராக வேண்டும் என்பதே இயற்கையின்/இறையின் விருப்பம் என்பதால் அதனை நிறைவேற்ற வேண்டும். எனவே இப்படிப்பட்ட வாழ்க்கையை மனவளக்கலையோகப்பயிற்சியினால் அடைந்து வாழ்வதே யோகவாழ்க்கையாகும் என்கிறார் மகரிஷி அவர்கள். இது தற்செயல் நிகழ்ச்சியன்று. இறை ஆட்சியில் எதுவும் தற்செயல் இல்லை. எல்லாம் ஆன்மாவின் கருமையப்பதிவுகளின்படி திட்டமிட்டதுபோல் நடக்கும். ஆகவே மனவளக்கலைஞர்கள் அனைவரும் குருவை அடைந்த பயனாகிய பிறவிப்பயனை அடைவோம். வாழ்க மனவளக்கலை. வளர்க மனவளக்கலை.

    சிந்திக்க அமுத மொழிகள்- 130
    28-11-2015—சனி

    உழைப்பு மூவகைத் தீமைகளைப் போக்குகிறது. அவையாவன, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை.
    …… அனுபவமொழி
    பயிற்சி—
    1) ‘பொழுது போகாமை’ அவ்வளவு கொடுமையானதா? எப்படி? நன்மை இழக்கப்படுகின்றதா?
    2) பொழுது போகாமைக்கும் கெட்டபழக்கத்திற்கும் என்ன தொடர்பு?
    3) இதனாலன்றோ ‘An idle mind is devil’s paradise’ என்கின்றனர்?

    விடை :-
    ‘பொழுது போகாமை’ என்பது என்ன? பொழுது எவ்வாறு அதுவே போகும். நாம் ஏதாவது பணியில் ஈடுபட்டால் இந்த ‘அலுத்துக் கொள்ளுதலுக்கே’ இடம் இல்லை. நேரம் எதற்காக உள்ளது? மனிதன் தன் அறநெறிகளில் இரண்டாவதான கடமையை ஆற்றுவதற்கே உள்ளது. ஆகவே நேரம் நமக்கு கிடைத்திருக்கின்றது. அதனை நாம் பயன்படுத்தாமல் நேரத்தை வீணாக்குகிறோம். அதாவது அறத்தை கைவிட்டுவிடுகிறோம். என்றுதானே பொருள்?! மேலும் காலம் என்பது என்ன? இறைவெளியின் தன்மைகளில் ஒன்று. அப்படியானால் பொழுது போகவில்லை என்றால் இறையை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதானே பொருள்?! இறையை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் எவ்வாறு இறையின் அருள் கிட்டும்? கடமை என்றால் உடலுழைப்பு மட்டுமல்ல. மன உழைப்பும் சேர்ந்ததே அறநெறி கூறும் கடமையாகும். உடலுழைப்பிற்கு ஏதும் பணிஇல்லாத போது மனஉழைப்பாகிய சிந்தனை செய்யலாமே! ‘சிவகாமி மகனை சிந்தனை செய் மனமே’ என்கின்றனர் பக்திமான்கள். ஆகவே சிவகாமி மகன் யார் என திருவேதாத்திரியத்தால் தெளிவு பெற்ற நிலையில் இறையைப்பற்றியும், அதன் இயங்கங்கள் பற்றியும் சிந்தனை செய்யலாமே. சிந்தனை செய்ய ஆரம்பித்தால் இயற்கையே/இறையே நம்முடன் பேசுமே! சிந்தனை என்பதே இயற்கையுடன்/இறையுடன் சத்சங்கம் நடத்துவதுதானே.

    நேரத்தை உன்னதமாக பயன் படுத்தாமலிருந்தால் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக் கொண்டிருக்கும் சீவனான மனிதன் விளக்க வழி செயல்களை செய்யாமல பழக்க வழி செயல்களில் ஈடுபட்டு விடுவான். பழக்க வழிக்கு விளக்க வழி கிடைக்கின்றது என்றாலே பழக்க வழி சரியில்லை என்றுதான் பொருள். ஆகவே பழக்க வழி நல்வழியில்லாமல் கெட்ட வழியாக இருக்கும். ஆகவே நேரம் போகவில்லை எனில் அறிவு கெட்டவழிகளில் செல்லும். மனித மனம் ஒரு நொடிக்கு ஆயிரமாயிரம் எண்ணங்களை எண்ணும் வலிமை உடையது. ஆகவே ஆயிரமாயிரம் தேவையற்ற எண்ணங்கள் வழியே மனம் ஒடிக் கொண்டிருக்கும். அது அறிவிற்கு தொந்திரவாக இருக்கும்.

    வறுமை என்பது என்ன? மனிதனுக்கு மூன்று இன்றியமையாத் தேவைகள் உள்ளன. உணவு, உடை, உறைவிடம் ஆகியன. இந்த மூன்றும் கிடைக்காத நிலையே வறுமை எனப்படுகின்றது. இந்த மூன்றினையும் பொருள் கொடுத்து தான் பெறமுடியும். உழைத்துதான் பொருள் ஈட்டமுடியும். எனவே உழைப்புதான் வறுமை என்கின்ற தீமையினை போக்க முடியும். மனிதனைத் தவிர விலங்கினங்கள் அதற்கு வேண்டிய உணவை உழைத்துத்தான் தேடுகின்றன. இருந்த இடத்திலேயே அவற்றிற்கு உணவு கிடைப்பதில்லை. உழைப்பே உயர்வைத் தரும்.

    வாழ்க அறிவுச் செல்வம்                          வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • FFC – 151-வினா விடை 3

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    வினா விடை 3

    FFC – 151

    03-01-2016 — ஞாயிறு

     சிந்திக்க வினாக்கள்-119

    (26-10-2015 – திங்கள்)

    (அ) ‘சிறிய நான்’, ‘பெரிய நான்’ என்றால் என்ன பொருள்?
    (ஆ) எந்நிலையில் ‘சிறிய நான்’ அற்றுப்போகும் என்கிறார் மகரிஷி அவர்கள்?
    விடை
    (அ) மனிதன் தன்னை உடலோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் நான் ‘சிறிய நான்’. உலக மக்களில் அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுறுவர்களைத் தவிர பெரும்பாலோர் இந்நிலையில் தான் உள்ளனர்.

    ‘பெரிய நான்’ என்பது யார்? ‘பெரிய நான்’ என்பது எல்லாம்வல்ல பேரறிவேதான். அல்லது இயற்கையின் ஆதிநிலை. அல்லது பேரறிவே எங்கும் நீக்கமற இறைந்து கிடப்பதால் காரணப்பெயராக அழைக்கப்படும் ‘இறை’. ஆகவேதான் நம்முடைய சத்சங்கத்தில் ஆதிநிலையாகிய வெளியை, பேரறிவை இயற்கை/இறை என அழைத்து வருகிறோம். அந்தப் பேரறிவிலிருந்து பின்னப்பட்டவர்கள்தான்(FRACTIONATED) இந்த உலகமக்கள் அனைவரும். எனவே தான் மனிதர்கள் சின்ன நான்கள்.
    எனினும் ‘‘பேரறிவே நானாக’ இருக்கிறேன் என்று அறிந்து அந்த வெளிச்சத்தில் வாழ்க்கை நடத்த முடியும். அப்போது . “அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை அது முக்தி” என்கின்ற மகரிஷி அவர்களின் பொன்மொழி உறுதிபடுத்தப்படும்.
    இஃதன்றி ‘அவனை (பெரிய நானை) மறந்தால் நீ சிறியோன்(சின்ன நான்), அவனை(பெரிய நானை) அறிந்தால் நீ பெரியோன்.’ என்று மகரிஷி அவர்கள் கூறும் நிலைக்கும் மனிதன் உயரமுடியும். இந்த நிலைக்கு உயர்வதற்கு, உலகமக்கள் அனைவரும் அல்லலுராமல் பூர்வீகசொத்தான அமைதியினை அனுபவிக்க இயற்கை அளித்துள்ள அருமருந்தான மனவளக்கலை செய்து வருகின்றது.
    (ஆ) தன்முனைப்பு அற்ற நிலையில் ‘சிறிய நான்’ அற்றுப் போகும்.
    “தன்முனைப்பு கரையும். காணும் தெய்வம்” என்கிறர் ஒரு கவியில்.

    சிந்திக்க வினாக்கள்-120
    (29-10-2015 – வியாழன்)

    கோடிட்ட இடங்களைப் பூர்த்தி செய்து வாசித்து மகிழலாமே!

    ஞாலத்தை அறிவது விஞ்ஞானம் . மூலத்தை உணர்வது மெய்ஞ்ஞானம் .

     …… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    சிந்திக்க அமுத மொழிகள்- 121
    (30-10-2015—வெள்ளி)

    எதன்மீது ஆசை இல்லையோ அவற்றால் துன்பமில்லை.
    … பழமொழி
    பயிற்சி—
    1) இப்பழமொழியில் உள்ள விஞ்ஞானம் என்ன?
    2) திருவள்ளுவர் இக்கருத்தை எந்த அதிகாரத்தில் என்ன குறள் அருளியுள்ளார்?

    விடை

    1) தேவை வேறு ஆசை வேறு. தேவை இருந்தால், வசதி வாய்ப்பு இருந்தால், அதனை அடைவதற்கு முயற்சி செய்யலாம். தேவையில்லாமல் ஆசையிருந்தால் அவற்றால் துன்பம் வரும். தேவையின் அடிப்படையில் ஆசை இருக்க வேண்டும். தேவையில்லாமல் ஆசைப்படும் பொருள் மீது எண்ணம் செல்லும். அதனை அடைய முயற்சி செய்தாக வேண்டும். அதனை அடையலாம். அல்லது அடையமுடியாமலும் போகலாம். எஞ்சி நிற்பது கவலை.
    2) ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.’

    பொருள்:- ஒருவன் எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தப்பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. பொருட்கள் நிலையற்றவை. நிலையற்ற பொருட்களை அடைவதற்காக பிறவி எடுக்கவில்லை. நிலையான பொருளோடு ஆன்மாவை இணைத்துக் கொள்ளவே மனிதப்பிறவி.

    மனவளக்கலை பாகம் 1 என்கின்ற நூலில் ’கவலை ஒழித்தல்’ பாடத்தில் ஆரம்பத்திலேயே இக்குறளை மகரிஷி அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுதந்திரம் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம். அனுபோகப் பொருட்கள் அதிகமாக உடல் நலம் கெடும். சொத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக மனஅமைதி கெடும். பாதுகாக்கப்படவேண்டிய குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்க அதிகரிக்க சுதந்திரம் கெடும்.

    சிந்திக்க அமுத மொழிகள்- 122
    (31-10-2015—சனி)

    கண்பார்வை அற்றவன் குருடன் அல்ல. தன் குற்றங்களை உணராமல் இருப்பவனே சரியான குருடன்.
    ….. ஓர் அறிஞர்.
    பயிற்சி—
    1) தன்குற்றங்களை அறிந்து கொள்வது பற்றி காந்திஜி கூறுவது என்ன?
    2) எதனால் தன்குற்றங்களை உணர முடிவதில்லை?

    விடை

    1) தன்குற்றங்களை அறிவது ஞானம் என்கிறார் காந்திஜி. (Hyper link) ஞானம் என்பது தெளிவு. ஞானத்திற்கு சிறப்பான விளக்கம் அறிவை அறிந்த தெளிவு என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே குற்றம், குறையற்ற அந்த பேரறிவை அறிய வேண்டுமெனில், மனிதன் தன்னிடமுள்ள குற்றம், குறைகளைப் போக்கிக் கொள்ள வேண்டும். அறிவை அறிகின்ற பயிற்சியில் இருப்பவர் தன் குற்றங்களை அறிந்து தற்சோதனையின் வாயிலாகவும், சத்சங்கத்தில் கலந்து கொண்டு சரி செய்து கொண்டு வருவார். தன்னிடமுள்ள குற்றம், குறைகளை நீக்கிக்கொள்ள முயற்சிப்பதே ஞானத்தின் பலபடிகளைக் கடப்பதற்கு முதற்படி(First step). எனவே தான், தன்குற்றங்களை அறிந்து கொள்வது ஞானம் என்கிறார் காந்திஜி. தன் குற்றம் குறைகளை பிறர் கூறி ஒருவர் அதனை எடுத்துக் கொண்டு(அறிவுரையாக) தன்னை திருத்திக் கொள்ள ஒவ்வொருவரின் தன்முனைப்பு தடையாக இருக்கும். ஒருசிலரே இதற்கு விதிவிலக்கு.

    2) தன்முனைப்பால் தன்குற்றங்களை உணர முடிவதில்லை. பெரும்பாலும் ஒருவர் செய்கின்ற குற்றங்களால் பிறருக்கு துன்பம் ஏற்படும். அவ்வாறு இருக்கும் போது, பிறா் உணர்வை தன் உணர்வு போல் மதிக்கத் தெரியும் மனிதம் மறைந்து, விலங்கினப்பண்பு தலைதூக்கிவிடுகின்றது. அல்லது தெரிந்து அலட்சியம் செய்வது தன்முனைப்பின் விளைவாக இருக்கின்றது.
    மனித இன பரிணாமத்தில் மனிதம் ஆரம்பித்த முதல் நாளை, அறம் தோன்றிய முதல் நாள் என அறுதியிட்டு கூறுகின்றார் மகரிஷி அவர்கள். இக்கவியினை ஞானக் களஞ்சியம் – கவி எண் 494 ல் காணலாம். வாசித்து மனனம் செய்து பயன்பெறவும். வாழ்க வளமுடன்.

    FFC-151-பிறஉயிர் உணர்தலாகி

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                            வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • 150-பூர்வீக சொத்து

    World_Peace_Year_31_Greetings

     

    சிறப்பு – அறிவிற்கு விருந்து 150

    பூர்வீக   சொத்து

                                                                01-01-2016 –வெள்ளி

    vv

    வாழ்க வளமுடன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ஒவ்வொரு புத்தாண்டு தினத்தையும் உலக அமைதி தினமாக கொண்டாட இயற்கை/இறை திருவேதாத்திரியத்தின் வாயிலாக ஏற்பாடு செய்துள்ளதை நினைக்கும் போது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.  ஏனெனில் இது இயற்கை/இறையின் விருப்பம்.  இயற்கை/இறை தனது வாரிசுகளான உலகமக்கள் அனைவரும், தனது சொத்தான பூரணஅமைதியை அனுபவிக்க வேண்டும் என விரும்புகின்றது.  எனவே இன்றைய அறிவிற்கு விருந்தாக  ‘பூர்வீக சொத்து’ என்கின்ற தலைப்பை இறையருள், நம் குருவருள், மற்றும் அனைத்து அருளாளர்களின் அருட்துணையுடன் சிந்திப்போம்.

    பூர்வீக சொத்து என்றால் என்ன?  சொத்து என்றால் என்ன என்று தெரியும்.  சொத்து என்றால் உடைமை என்று பொருள்.  உடைமை என்றால் ஒருவருக்குரியது. சொத்து என்பது மனிதனின் தேவைக்கு அனுபவிப்பதற்குரியது.  பூர்வீகம் என்றால்  ஒருவரின் குடும்பத்துக்கு(family) மூலமாகக் கொள்ளும் இடம். உதாரணத்திற்கு அவரின் பூர்வீகம் திருநெல்வேலி என்றால் அவரது முன்னோர்கள் வாழ்ந்த இடம் திருநெல்வேலி என்று பொருள்.  பூர்வீகம் என்றால் காலத்தால் பழமையானது, முன்னோர் மூலம் பெறுவது என்று அர்த்தம்.  பூர்வீக சொத்து என்றால் முன்னோர்களால் சோ்த்து வைக்கப்பட்ட உடைமை  என்று பொருள்.

    ஒரு நாள் இப்புவியை விட்டுச் செல்லும்  ஒவ்வொருவருக்கும் புவியில் பிறந்த இடத்தின் அடிப்படையில், ஒவ்வொரு பூர்வீக இடங்கள் உண்டு.  இப்புவியில் பிறந்த ஒரு சிறிய இடமா  உண்மையான பூர்வீகம்?  ஆனால் எல்லோருக்கும் ஒரே பூர்வீகம்தான்.  எப்படி?  அந்த பூர்வீகம் எது?  அந்த பூர்வீக சொத்தைப்பற்றித்தான் இன்றைய சிந்தனை.  இந்தப் பூா்வீக சொத்து அனைவருக்கும்  பொது என்பதால் அனைத்துலக மக்களுக்கும் அதனை அனுபவிக்க உரிமை உண்டு.

    ஒவ்வொரு மனிதனும் இயற்கையின் அங்கம்தானே. இயற்கை வேறு, மனிதன் வேறா?  அல்லவே! உலக மக்கள் அனைவரும் இயற்கை அன்னையின் குழந்தைகள்.  அப்படியிருக்கும்போது எல்லோருக்கும் பொதுவான பூர்வீகம் இயற்கையே.  இயற்கையின் பூர்வீகம் எது?  அதுதான் இயற்கையின் ஆதிநிலை.  அந்த ஆதிநிலையிலிருந்துதான் பஞ்சபூதங்கள், பிரபஞ்சம், மனிதன் உள்ளபட எல்லா உயிரினங்களும் தோன்றியுள்ளன.  தோன்றியுள்ளன என்பதனைவிட அந்த ஆதிநிலைதான் எல்லாமாகத் தன்மாற்றம் அடைந்துள்ளது.

    இயற்கையின் ஆதிநிலை என்பது என்ன?  அதனைத்தான் வெட்டவெளி, இறைவெளி என்றும் கூறுகிறோம்.  அந்த வெட்டவெளி எத்தன்மையானது?  அது சலனமில்லாதது, அமைதியானது. பேரறிவை உடையது. பேராற்றல் உடையது.  அமைதியானது என்பதனைக் கருத்தில் கொண்டுதான் ஒரு சாரர் அமைதியிலிருந்துதான் இப்பிரபஞ்சம் தோன்றியது என்கின்றனர்.  அந்தப் பேரறிவேதான் மனிதனிடம் அறிவாக, மனமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது.  மனிதமனம் நான்கு நிலைகளில் இயங்குகின்றது. இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் ஆகியன.  மனிதகுலம் பெரும்பாலும் இன்ப-துன்ப சுழலிலேதான் மாறி மாறி சிக்கித் தவிக்கின்றது.  மூன்றாவது நிலையான அமைதிக்கு வரமுடிவதில்லை.  அப்படியே வந்தாலும் நிலைத்து நிற்க முடிவதில்லை.

    மனம் தனது  நான்கு நிலைகளில் ஒன்றான அமைதி நிலையையே தனது பூர்வீகமாக கொண்டிருந்தாலும், மனம் அதனை அனுபவிக்க முடிவதில்லை.  அமைதியிலிருந்து உருவான மனம் அமைதியினை அனுபவிப்பதில்லை அனுபவிக்க முடிவதில்லை என்ன விந்தை இது?  மனதிற்கு பூர்வீகம் அமைதி நிலையாக இருந்தும்  மனிதன் தன்னுடைய பூர்வீக சொத்தான(Hereditary wealth) அமைதியினை அனுபவிக்க முடியாமல் தவிக்கிறான் என்கிறோம்.

    எப்படி முன்னோர்கள் சேர்த்துவைத்துள்ள வீடு போன்ற சொத்தில் ஒவ்வொருவருக்கும் சட்டப்படி உரிமை இருக்கின்றதோ அதுபோல் மனிதகுலம் அனைத்துக்கும் தனது பூர்வீக சொத்தான அமைதியினை அனுபவிக்க உரிமை உள்ளது.  ஆனால் நடைமுறையில் முன்னோர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்தினை அனுபவிப்பதுபோல் மனிதகுலத்தின் பொதுவான பூர்வீக சொத்தான அமைதியினை அனுபவிக்க முடிவதில்லை. இந்நிலையினை மாற்றி உலகமக்கள் அனைவரும் அறிவின் இருப்பிடம் அறிந்து அமைதியினை அனுபவித்து இன்பமுற  வழிகளையும் திட்டங்களையும் எடுத்துரைக்கின்றது திருவேதாத்திரியம்.

    ஆன்மீகத்தில் ஒரு கூற்று  உள்ளது.  அது யாதெனில்

    பகவத்கீதை கடவுள் மனிதனுக்கு சொன்னது,

    திருவாசகம் மனிதன் கடவுளுக்கு சொன்னது,

    திருக்குறள் மனிதன் மனிதனுக்கே சொன்னது.

    வேதாத்திரியம் யாருக்கு,  …………………………  யாரால் சொல்லப்பட்டுள்ளது?

    வேதாத்திரியப் பயனாளிகளாக இருக்கும் நாம்தான் சொல்ல வேண்டும்.

    இருபதாம் நூற்றாண்டில் இயற்கையே/இறையே வேதாத்திரி வடிவில் மனிதனாகி தனது உலக மக்கள் அனைவருக்கும் தன் சரித்திரத்தை அப்பட்டமாக (ஒளிவு மறைவு இல்லாமல்) சொன்னது.

    இத்தருணத்தில் ‘பேரின்ப ஊற்று’ என்கின்ற கவியில் மகரிஷி அவர்கள் அருளிய   நான்கு வரிகளைக் கவனிப்போம்.

    peerinba uurRu

    இதுவரை அவனியில் அவதரித்த, அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாளர்களின் அருட்கூற்றுக்கள் அனைத்தையும் ஒன்று சோ்த்த ஒட்டுமொத்த சாரமே திருவேதாத்திரியம்.   இதற்கு சான்று, வேதாத்திரியம் அறியாத முன்னர், புரியாதிருந்த எந்த அருளாளர்களின் கூற்றுக்களும் இப்போது புரிகின்றன. எல்லா ஆன்மீகக் கருத்துக்களை புரிந்து கொள்ள வேண்டுமெனில், அதற்குத் தேவையாய் இருக்கின்ற  ஒரு ஆன்மீக மொழிதான் திருவேதாத்திரியம்.

     கடந்த நூற்றாண்டிலிருந்து விஞ்ஞானம்–அறிவியல்(Science) அதிவேக வளர்ச்சி அடைந்து வருகின்றது.  ஆனால் அறிவியலில் பலதுறைகள் இருந்தாலும், அதனுடைய முதன்மையானதும், வாயிலாகவும் உள்ள இயற்கையியல்/இறையியல் ஏற்படுத்தப்படவில்லை. எனவே Science – அறிவியல் வளர்ந்துள்ளதே தவிர அது வாழ்வியலைத் தர இயலவில்லை.  இத்தருணத்தில் இயற்கையியலை/இறையியலைத் தந்துள்ளது திருவேதாத்திரியம்.

     இயற்கையின்/இறையின் ஆதிநிலையையும், அதன் தன்மாற்ற சரித்திர உண்மையினை சரியாகத் தெள்ளத் தெளிவாக விளக்கும் இயற்கையியல்/இறையியலை ஏற்படுத்தியுள்ளது திருவேதாத்திரியம். அதன் விளைவாக குடும்பவியலை உள்ளடக்கிய வாழ்வியலை தரமுடிந்துள்ளது திருவேதாத்திரியத்தால்.  அந்த வாழ்வியல் முறைகள்தான் மகரிஷி அவர்கள் வகுத்துள்ள உலக சமாதான திட்டங்கள்.

     இயற்கையின்/இறையின் ஆதிநிலையையும், அதன் தன்மாற்ற சரித்திர உண்மையினை சரியாகத் தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொண்டதன்   விளைவு, மகரிஷி அவர்கள் வகுத்துள்ள உலக சமாதான திட்டங்களை ஏற்பதன்றி வேறு என்ன இருக்க முடியும்?  வேறு எதனை ஏற்கமுடியும்?!  இயற்கை/இறையேதான் தனது ஆதிநிலையிலிருந்து இன்று நாம் காணும் பிரபஞ்சமாகவும் மனிதகுலம் உள்பட எல்லா உயிரினங்களாகவும் தன்மாற்றம் அடைந்துள்ளது என்கின்றபோது, இயற்கைக்கு இசைவாக, ஒத்த முறையில் வாழவேண்டுமெனில் மனிதகுலம் மகரிஷி அவர்களின் உலக சமாதானத் திட்டங்களின்படி வாழ்வதன்றி  வேறு எவ்வாறு வாழ வேண்டும்? வாழமுடியும்?

     இதுவரை அவனியில் அவதரித்த அனைத்து அருளாளர்களும் விரும்பிய ‘மனித இனம் நல்வாழ்வு வாழ வேண்டும்’  என்கின்ற அடிப்படை இலட்சிய நறுமணத்தின்  ஒட்டு மொத்தத்தை பிரதிபலிக்கும் பாரிஜாத மலரே திருவேதாத்திரியம். அந்த திருவேதாத்திரம் தந்ததுதான் உலக சமாதானத் திட்டங்கள்.  எனவே உலக சமாதான திட்டங்கள்

    •  மனித இன வாழ்விற்கும், இயற்கைக்கும் ஒத்த முறையில் இருக்கும்படியாகவும்,
    •  மனித சமுதாயத்திற்குப் பொதுவானதாக இருக்கும்படியாகவும்,
    • சிரமமில்லாமல் கொண்டுவரக் கூடியதாகவும்,
    • தொடர்ந்து பயனைகொடுக்கக் கூடியதாகவும்,

    பிறந்ததுமுதல் பல நாட்களாக உடற் கருவிகளை இயக்கிப் பழகியதால்  கொண்ட பழக்கங்களையும், பற்றுதல்களையும், கொள்கைகளையும் உடனே மாற்றிக் கொள்ளவோ, விடவோ, விட்டுவிடச் செய்யவோ எளிதில் இயலாது,  ஆகவே படிப்படியாக அவசியமான மாற்றங்களை ஏற்படுத்தும் படியாக உலக சமாதான ஆராய்ச்சியுடன் கூடிய திட்டங்கள் 200 கவிகளாக அமைந்துள்ளன.

     இதற்காக மகரிஷி அவர்களே அளித்துள்ள விளக்க உரை முதற் பதிப்பில் (1957) தமிழில் மட்டும் உள்ளது. ஆனால் இரண்டாம் பதிப்பில்(1990) தமிழ் உரையுடன் ஆங்கில உரையும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளன.  விரிவுரை அவரே வழங்குவதற்கான  காரணம் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கும், அவருடைய எந்த நல்நோக்கத்திற்காக அக்கவிகள் உதித்தன என்பதனை அன்பர்கள் விளங்கிக் கொள்வதற்காகவே எனக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

     ஒருமுறை மகரிஷி அவர்களை ‘உங்களுடைய நோக்கம் என்ன’ என்று வினவியபோது ‘உலகசமாதானம்’ என்றார். அவரது ஆங்கில முகவுரையில் ஓரிடத்தில் “the ultimate aim is the achievement of World Peace at any cost என்பதனைக் காணலாம்.

     இன்றுவரையில் ஆறாம் அறிவைக் கொண்ட மனித இனம் அறிவின் இருப்பிடம் அறியாமையால் ஏற்பட்டுள்ள   அறியாமையினாலும், சமய சந்தர்ப்பங்களாலும், ஏற்றுக் கொண்ட வாழ்க்கைச் சிக்கல்களையும், துன்பங்களையும் விளைவிக்கத்தக்க எல்லா  வழக்கப் பழக்கங்களையும், பேத உணர்ச்சிகளையும் திருத்துவதற்காக மாற்றி அமைத்து இதுவரையில் அறிவின் உயர்வினாலும், ஆராய்ச்சியினாலும் கண்டுபிடிக்கப்பட்டு உயர்தரமான வாழ்க்கை முறைகள் எல்லோருக்கும் கிடைக்க வாழ வழிகாட்டுகின்றன  உலகசமாதானத் திட்டங்கள் என்கின்றார் மகரிஷி அவர்கள்.

     இயற்கையின்/இறையின் ஆதிநிலையையும், அதன் தன்மாற்ற சரித்திர உண்மையினை சரியாகத் தெள்ளத் தெளிவாக விளங்கிக் கொண்டதன்   விளைவு, மகரிஷி அவர்கள் வகுத்துள்ள உலக சமாதானத் திட்டங்களை ஏற்பதன்றி வேறு என்ன இருக்க முடியும்?!  இயற்கை/இறையேதான் தனது ஆதிநிலையிலிருந்து இன்று நாம் காணும் பிரபஞ்சமாகவும் மனிதகுலம் உள்பட எல்லா உயிரினங்களாகவும் தன்மாற்றம் அடைந்துள்ளது என்கின்றபோது, இயற்கைக்கு இசைவாக, ஒத்த முறையில் வாழவேண்டுமெனில் மனிதகுலம் மகரிஷி அவர்களின் உலக சமாதானத் திட்டங்களின்படி வாழ்வதன்றி  வேறு எவ்வாறு வாழ வேண்டும்? வாழமுடியும்?

     உலக நியதி—இயற்கையின் எதார்த்தம் என்ன என்று கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அன்று கூறியுள்ளது, திருவேதாத்திரியத்தின் வாயிலாக இயற்கையின் எதார்த்தத்தை புரிந்து கொண்டு எதார்த்தத்தில் வாழ வழிவகைகளைக் காட்டியுள்ளதே திருவேதாத்திரியத்தின் உலக சமாதான திட்டங்கள்.  கீதாசாரம் மொழிவதனையும் நினைவு கூர்வோம்.

    FFC_46-geetha chaaram-

     இச்செய்தி என்ன தெரிவிக்கின்றது?  மனிதனிடம்  தன்முனைப்பு எழுவதற்கு வாய்ப்பே  இல்லை என்பதனைத் தெரிவிக்கின்றது. ‘தான், தனது’  இல்லாத நிலையைத் தெரிவிக்கின்றது.  நிலையாமையை அறிகின்ற ஞானத்தைத் தெரிவிக்கி்ன்றது.

    ‘தான், தனது’  இல்லாத சமுதாயச்சூழல்தான் உலக நியதி என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.  ‘தான், தனது’ என்கின்ற இரு தம்பதிகள் இல்லாத நிலையில் அவலக் குழந்தைகளான பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகியவைகள் பிறப்பதற்கே வழியில்லை, உலக சமாதானத்திட்டங்கள் அமுலில் இருந்தால்.  இச்சூழலில் உண்மையில், ஆண்-பெண் இருவர் சோ்ந்த தம்பதிகளுக்கு  ஞானக்குழந்தைககள் தான் பிறக்கும்.  ஆகவே அன்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறிய உலக நியதிக்கேற்ப இன்று திருவேதாத்திரியம் குடும்பவியலை உள்ளடக்கிய வாழ்வியலை அருளியுள்ளது.

        ஒரு வேளை இயற்கை/இறை இதுவரை அவதரித்துள்ள(கி.மு. மற்றும் கி.பி. இன்று வரை) எல்லா அருளாளர்களை அழைத்து, ஒன்று கூட்டி ஒரு ஆன்மீக மாநாடு நடத்துமேயானால், அருளாளர்கள் அனைவரும், திருவேதாத்திரியத்தையும், அதன் உலக சமாதானத் திட்டங்களையே போற்றி, போற்றி வரவேற்பர், ஆமோதிப்பர்.  அந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லாத நிலையில் அருளாளா்களின் வழித்தோன்றல்களாகிய  நாமே அதனை செய்வோம். அதாவது திருவேதாத்திரிய உலக சமாதான திட்டங்களை சிந்தித்து ஆமோதிப்போம்.

        ஆகவே இன்றைய நன்னாளில் நாம் செய்ய வேண்டியது ஒவ்வொரு கவியினையும் தமிழ் மற்றும் ஆங்கில  விளக்கவுரை இரண்டையுமே சேர்த்து வாசித்து மகரிஷி அவர்களின் விருப்பப்படி அவருடைய உயர்நோக்கத்துடன் இணைந்து இவ்வையகத்தை வாழ்த்துவோம்.  

    வாழ்க உலக சமதானம். விரைவில் வரட்டும் உலக சமாதானம்.  வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

      

    வாழ்க வேதாத்திரியம்                                                         வளர்க வேதாத்திரியம்

    Loading

  • வினா விடை 2              

    வாழ்க மனித அறிவு                                                வளர்க மனித அறிவு

    வினா விடை 2                  

    FFC – 149

     30-12-2015-புதன்

     

    சிந்திக்க வினாக்கள்-134

       (17-12-2015 – வியாழன்)

    dheaivappulavar

     வினா:–

     சான்றோர்க்கு நாணுடைமையை ஏன் அணிகலனாகக் கூறுகிறார் திருவள்ளுவர்? (குறள் எண் 1014)

    விடை:–

    சான்றோர் என்பவர் யார்? அறிவில் பண்பில், நெறியில் சிறந்து விளங்குபவர் சான்றோர் எனப்படுவார்.  நெறியைச் சார்ந்து இருப்பவர் சான்றோர். ஒழுக்க நெறிக்குச் சான்றாகத் திகழ்பவர் சான்றோர் எனப்படுவார்.  உடைமை என்றால் ஒருவருடைய செல்வம் என்று பொருள். திருவள்ளுவர் கூறும் ஒன்பது உடைமைகளில் ‘நாண் உடைமையும்’ ஒன்றாகும்.

       நாணம் என்றால் வெட்கம் என்று பொருள். வெட்கம் என்றால் மதிப்புக் குறைவு, அவமானம் என்று பொருள். தவறு செய்யாமல் இருக்க வேண்டும். தவறு செய்வதற்கு வெட்கப்படவேண்டும்.  மனிதன் மனிதனாக வாழாமல் முந்தைய இனமான விலங்கினமாக வாழ்வது அவமானம். மதிப்பும் குறைவு. ஆகவே மனிதன் மனிதனாக வாழ இயற்கை நியதியை மதித்து தவறு செய்யாமல் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி வாழவேண்டும்.  மனிதனுக்கு நாணம் இருந்தால் தவறு செய்வதற்கு  வெட்கப்பட்டு ஒழுக்க நெறியுடன் வாழ்வான் என்கிறார் திருவள்ளுவர்.எனவே மனிதனிடம் இருக்க  வேண்டிய, அவர் கூறும் ஒன்பது உடைமைகளில் ஒன்றாக, நாணம் இருக்க வேண்டும் என்கிறார்.

        நெறிசார்ந்து வாழும் சான்றோர்களிடம்  நாணம் இருப்பதால்  தவறு செய்யமாட்டார்கள். ஏனெனில் அவர்களிடம் நாணம் உள்ளது.  அது  அணிகலனாக இருந்து கொண்டு, தவறு செய்ய விடாமல் அவர்களை அலங்கரிக்கின்றது.

    ஆகவே நாணம் சான்றோர்களின் அணிகலனாக உள்ளது என்கிறார் திருவள்ளுவர்.  ‘நாணம்’ என்பது இயற்கை அனைவருக்கும் கொடுத்துள்ள அணிகலன் என்பதால்,  மற்றவர்களும் நாணம் என்கின்ற அணிகலனை அணிந்து கொண்டு  தவறு செய்வதற்கு வெட்கப்பட்டு நெறியுடன் வாழவேண்டும் என்பதே திருவள்ளுவருக்கு 2046  ஆண்டுகளுக்கு முன்னா் ஏற்பட்ட அவாவாகும்!

     

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளர்க அறிவுச் செல்வம்


     வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     சிந்திக்க அமுத மொழிகள்- 135             

    (18-12-2015—வெள்ளி)

     

    நாம் நம் செயல்களைத் தீர்மானிக்கிறோம்.  செயல்கள் நம்மைத் தீர்மானிக்கின்றன.         …..  ஜார்ஜ் எலியட்

    பயிற்சி— 

    1)   இந்த அமுத மொழி தெரிவிப்பது என்ன?

    2)   செயல்கள் எப்படி நம்மைத்தீர்மானிக்க முடியும்?

    3)   ‘Tell me who is your friend. I will tell about you – நீ உன் நண்பன் யார் என்று சொல்.  நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பது போல் இருக்கின்றதல்லவா?

    விடை:–

       மனிதனின் முத்தொழில்களாவன எண்ணம், சொல், செயல். 

    மனிதன் விரும்பாமல் செயலைச் செய்ய முடியாது. 

    முதலில் எண்ணமாக வந்துதான், பின்னர் அது செயலாக மாறுகின்றது.

    எனவே செயலைத் தீர்மானிக்கிறான் மனிதன் என்கிறார் அறிஞர் ஜார்ஜ் எலியட். 

    பின்னர் அவன் செய்த செயலே அவனைத் தீர்மானிக்கின்றது என்கிறார். 

        ‘தீர்மானித்தல்’ என்பது என்ன?  ஒன்றை முடிவு செய்தல்.  உதாரணத்திற்கு சாலையைக் கடக்க வேண்டும் என்பவர்,  குறுக்கே வந்துகொண்டிருக்கும்  பேருந்தைப் பார்த்ததும் ஒதுங்கி நிற்கிறார்.  நிற்கவில்லை என்றால் விபத்துக்குள்ளாகி இருக்கலாம். ஆகவே சாலையை கடக்கும் செயலை தீர்மானித்தவர், விழிப்போடு இருந்ததால்  பேருந்து வருகின்றதா எனப் பார்த்துவிட்டு கடக்க எண்ணுகிறார்.

    ஆகவே விபத்து தடுக்கப்படுகின்றது. சாலையைக் கடக்கின்ற செயலை அவர் தீர்மானித்தார்

    கவனத்துடன் கடந்த அந்த செயல் அவரை விபத்தில்லாமல் கடக்க வைப்பதைத் தீர்மானித்தது.  ஆகவே செயல்களை தீர்மானிக்கும் போது நுண்மான் நுழைபுலன் திறமையைப் பயன்படுத்தி அதன் பின்விளைவுகளை அறிந்து  செய்ய வேண்டும்.  ஏனெனில் நம்செயல்கள் நம்மைத் தீர்மானிக்கின்றன.

        எல்லோருக்கும் தன்மீது சுயமதிப்பு இருக்கின்றது. அதே நேரத்தில் அந்த தன்மதிப்பை பிறரும் அறிந்து நம்மைப் போற்ற வேண்டும் என்கின்ற அவாவும் இயல்பாக உள்ளது.  தன்மதிப்பு பிறர்க்கு எப்போது தெரிய வரும்? தான்  செய்கின்ற செயல்களால்தான் அது தெரியவரும்.  அவ்வாறு ஒருவன் செய்கின்ற செயல்கள் நல்விளைவைக் கொடுத்து சமுதாயம் பயன் பெறும் வகையில்   இருந்து, சமுதாயம் இவனை நல்லவன் எனத் தீர்மானம் செய்து போற்றும்போதுதான், தான் கொண்டிருந்த தன்மதிப்பு சமுதாயத்தில் உயரும்,  உயர் புகழ் உண்டாகும்.   நம்முடையச் செயல்கள்  நம்மைத் தீர்மானிக்கின்றன’ என்பது இதுவேயாகும்.  சமுதாயத்தில்தான் வாழ்கின்றான் மனிதன். எனவே மனிதனுடைய செயல்கள் விளைவை ஏற்படுத்தும் என்பதால் அவனுடைய செயல்களின் பயனே, அவனை, சமுதாயத்தால்,  ‘யார்’ எனத் தீர்மானிக்கின்றன.  எனவே செயல் புரியும்போது கவனம் தேவை. நுண்மான் நுழைபுலன் திறனைப் பயன்படுத்த வேண்டும்

    3) ‘Tell me who is your friend. I will tell about you – நீ உன் நண்பன் யார் என்று சொல்.  நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பது  இவன் யாருடன் பழகுகிறானோ அவனுடைய தன்மையை இவன் பெற்றிருப்பான் என்பது இயல்பூக்க நியதியின் விளைவாகும். எவ்வாறு மனிதனுடைய செயல்கள் அவனைத் தீர்மானிக்கின்றனவோ, அதுபோல இவன் யாரை நண்பனாகக் கொண்டிருக்கின்றானோ அந்த நண்பனின் தன்மைகளைக் கொண்டு  இவனைப்பற்றி தீர்மானம் செய்யப்படுகின்றது.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

     


     

      வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

    சிந்திக்க அமுத மொழிகள்- 136             

    (19-12-2015—சனி)

     

    இருட்டாக இருக்கும்போதே விடியலை உணர்ந்து பாடத் துவங்கும் பறவையைப் போன்றது நம்பிக்கை.                    ….. ஓர் அறிஞா்

       பயிற்சி—

    1)   நம்பிக்கை எல்லோருக்கும் அவசியம்தானே?

     2)   இறையுணர் ஆன்ம சாதகா்களுக்கு இந்த அமுத மொழி எவ்வாறு உதவியாக இருக்கும்?

     3)   அறிஞர் நம்பிக்கை பற்றி தெரிவிக்க எடுத்துக் கொண்ட உவமானத்தை ரசிக்கவும். இது போன்று சிந்திக்க சிந்திக்க மகிழ்ச்சியினைக்  கொடுக்கும்.

        விடை:–

          நம்பிக்கையைப் பற்றிக் கூறுகிறார்  அறிஞர்.  யானைக்கு எது பலம்?  அதன் தும்பிக்கை தான் அதற்கு பலத்தைக் கொடுக்கின்றது.  அதுபோல மனிதனுக்கு பலத்தைத் தருவது எது? அவனது நம்பிக்கையே. தன்மீதுள்ள நம்பிக்கை தன்னம்பிக்கை எனப்படுகின்றது. இந்த தன்னம்பிக்கையில்தான் ஒவ்வொருவருக்கும் ஒரு காரியத்தை செய்து வெற்றி பெறுவதில் உள்ள வித்தியாசம் உள்ளது.

        சாலையில் தினந்தோறும் செல்கிறோம்.  சாலையில் வாகனத்தால் விபத்து நடக்கின்றது என்பதால் நம்பிக்கையில்லாமலா ‘அன்று  வேறோருவருக்கு நடந்த விபத்து நமக்கும் நடந்துவிடுமோ’ என்று அஞ்சிக் கொண்டா தினந்தோறும் செல்கிறோம்? இல்லையே! அல்லது தனக்கேகூட, ஒரு நாள் வாகனத்தை ஓட்டிச்செல்லும்போது, சிறு விபத்து நடக்க இருந்து, அருட்பேராற்றல் கருணையினால் தப்பிவிடுகிறார் என்பதால் ஒருவர் அதன் பிறகு வாகனத்தை ஓட்டாமலா இருப்பார்?   மாறாக அந்த விபத்து நடந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து அதுபோல்  தவறு செய்திடாமல் சாலை விதிகளை மதித்து கவனத்துடன் அல்லவா செல்வார்.

        பள்ளியில், கல்லூரியில் நடத்தப்படும் பாடங்களை நன்றாகப் படித்து தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுப்போம் என்கின்ற நம்பிக்கையுடனும், அதற்கான முயற்சியான பாடங்களை நன்கு படித்தலில் மாணவர்கள் ஈடுபடுபட்டு உழைக்கிறார்கள்.

        பயத்தின் காரணமாக தன்மீதே நம்பிக்கை இருப்பதில்லை. 

        தன்னம்பிக்கை இருந்தால்தான்,

        விடாமுயற்சி தொடர்ந்து இருக்கும். 

        முயற்சியைப் பற்றிக் கூறும்போது அறிஞர்கள் முயற்சி விடாமுயற்சியாக இருக்க வேண்டும் என்று கூறிவந்தனர்.

        இப்போது விடாமுயற்சியினை தொடர் விடாமுயற்சி வேண்டும் என்கின்றனர்.  அதாவது செயலில் வெற்றி பெறும் வரை துவண்டு விடாமல் அந்த விடாமுயற்சி வெற்றிபெறும் வரை தொடர்வதே தொடர்விடாமுயற்சி என்பது.  உதாரணத்தை அறிவோம்.

        நால்வர் இருக்கின்றனர்.  ஒரு செயலைச் செய்து அதன் பயனை நால்வரும்  அனுபவிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள் என வைத்துக் கொள்வோம்.  அந்தச் செயலை முடிப்பதற்கு குறைந்தது 30 நாட்கள் தேவையாயிருக்கின்றது என வைத்துக் கொள்வோம்..

       முதலாமவர் அந்த செயலின் பயன் மீது நம்பிக்கையில்லாமல் அந்த செயலைச் செய்வதற்கு முயற்சியேசெய்யவில்லை.  ஆகவே செயல் புரிந்ததால் வரும் பயனை அவர் அனுபவிப்பதற்கு இல்லை.

    இரண்டாமவரை எடுத்துக் கொள்வோம்.   30 நாட்களில் உழைத்துப் பெற வேண்டிய ஒன்றிற்கு இரண்டாமவர் ஒரு வாரம் வரை முயற்சி செய்து உழைக்கிறார். வெற்றிகிடைக்கவில்லை. என விட்டுவிடுகிறார். முயற்சி செய்தார். ஆனால் அது விடாமுயற்சியாக இல்லை.  பலனில்லை அவருக்கு.  மூன்றாமவரை எடுத்துக்  கொள்வோம்.

      மூன்றாமவர் 30 நாட்களில் உழைத்துப் பெற வேண்டிய ஒன்றிற்கு  25 நாட்கள் வரை முயற்சி செய்து உழைக்கிறார். வெற்றிகிடைக்கவில்லை என விட்டுவிடுகிறார். 26-ம் நாள் தன் முயற்சியினை  விட்டு விட்டு ‘நான் விடாமல் முயற்சியுடன்தான் உழைத்தேன்,  ஆனால் பலனில்லை. எனவே அந்த முயற்சியினை விட்டு விட்டேன்’ என்கிறார்,  உண்மைதான் இரண்டாமவரைக் காட்டிலும் மூன்றாமவர் 18 நாட்கள் உழைத்து பிறகு விட்டு விட்டார், எனவே இரண்டாமவரைக் காட்டிலும் மூன்றாமவர்  செய்தது விடாமுயற்சிதான்.  இருந்தாலும் வெற்றிக்கனியை பறிக்கமுடியவில்லையே. விடா முயற்சி இருந்தும், போதிய காலம் அவர் அந்தவிடாமுயற்சியினைத் தொடரவில்லை. நான்காமவர் என்ன செய்தார் என்று பார்ப்போம்.

       நான்காமவர் 25 நாட்களில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் வெற்றிகிடைக்கும் என நம்பிக்கை வைத்து  விடா முயற்சியினைத் தொடர்கிறார். 30 வது நாளில் வெற்றிக் கனியைப் பறிக்கிறார்.  இது எதனுடைய விளைவு?  முதலாமவர் முயற்சியே செய்யவில்லை. இரண்டாமவர் முயற்சி செய்து விட்டுவிட்டார்.  மூன்றாமவர் முதலாமவரைக் காட்டிலும் அதிக நாள் விடாது முயற்சி செய்து  வெற்றிக்கனியைப் பறிப்பதற்குள் விட்டுவிட்டார்.  ஆகவே முதலாமவர், இரண்டாமவர், மூன்றாமவர் ஆகிய மூவரைக் காட்டிலும் நான்காமவர் வெற்றிக்கனி கிடைக்கும் வரை முயற்சி செய்து உழைக்கிறார்.  ஆகவே நான்காமவரின் தொடர்விடாமுயற்சியின் விளைவுதான் வெற்றிக்கனியைப் பறிப்பதற்குக் காரணம்.

       மூவருமே முயற்சி செய்ததாகக் கூறுகின்றனர்.  ஆனால் வெற்றிக்கனியை எல்லோராலும் பறிக்க முடியவில்லையே!  இரண்டாமவர், மூன்றாமவர், நான்காமவர்  செய்த முயற்சியில்  உள்ள வித்தியாசம்தான் (நான்காமவரைவிட குறைவான முயற்சி) வெற்றிக்கனி பறிப்பதை இழக்கச் செய்துவிட்டது..

       ஆனால் நான்காமவர்  விடாமுயற்சியினை 25 நாட்களுக்கு மேலும் தொடர்ந்ததால் வெற்றிக் கனியைப் பறிக்கிறார். எனவே இந்த மூவரின்  விடாமுயற்சியில் உள்ள வித்தியாசத்தைக் கூறவே அறிஞர்கள் இப்போதெல்லாம் விடாமுயற்சி தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதனை அறிவுறுத்த ‘தொடர்விடாமுயற்சி’ என்கின்றனர்.

        அடுத்ததாக ‘இறையுணர் ஆன்ம சாதகா்களுக்கு இந்த அமுத மொழி எவ்வாறு உதவியாக இருக்கும்?’ என்கின்ற வினாவிற்கு வருவோம்.  திருவேதாத்திரியம் இறைஉணர் ஆன்மீகத்தில், ஒவ்வொரு மனவளக்கலைஞர்களும் வெற்றிபெற, அருளை நிதியாகக் கொள்ளும் வழிகளைக் கூறி, அவர்களை அருள்நிதியாக்கி, பின்னர் இறைத்தூதுவர்களாக ஆக்கும் அருட்பணியை செய்து வருகின்றது.

    இம்மனவளக்கலைப் பயிற்சியில் இறையை நிச்சயமாக உணரமுடியும் என்பதால்   இது ‘இறைஉணர் ஆன்மீகம்’ எனப்படுகின்றது. 

     

        எனவே இறைஉணர் ஆன்மீகப்பயிற்சியாளர்களுக்கு நம்பிக்கை அவசியமாகின்றது. 

        நம்பிக்கை ஏற்பட்டு, விளக்கத்தைக் கொண்டு முதலில் முயற்சியை ஆரம்பித்து, 

        விளக்கப்பதிவு பழக்கப்பதிவால் தோற்கடிக்கப்படாமல் இருக்க,  முதலில் ஆரம்பித்த முயற்சி விடாமுயற்சியாகி,

        இறுதியில் விளக்கப்பதிவு பழக்கப்பதிவை வெற்றிகொள்ள விடாமுயற்சியினை தொடர்விடாமுயற்சியாக்கி  வெற்றியடைய வேண்டும். 

        நாம் ஏற்கனவே சத்சங்கத்தில் பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன் என்பது எவ்வாறு என அறிந்திருக்கிறோம்.(Click here ) இறைஉணர் ஆன்மிகம் தந்த நம் அருட்தந்தை அவர்கள் கூறும் நம்பிக்கையினைக் கவனிப்போம்.

    purification

                     அடுத்து மூன்றாவது வினாவான அறிஞர் நம்பிக்கை பற்றி தெரிவிக்க எடுத்துக் கொண்ட  உவமானத்தை ரசிக்கவும். மதிக்கவும்.  இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றம் உங்களிடமே நிரூபணம் பெறச்செய்யுங்கள்.  நாளை நீங்களும் அறிஞராகலாம்.  இது போன்று சிந்திக்க சிந்திக்க மகிழ்ச்சியினைக்  கொடுக்கும்.

     இருட்டாக இருக்கும்போதே விடியலை உணர்ந்து பாடத் துவங்கும் பறவையைப் போன்றது நம்பிக்கை.

        நம்பிக்கையின் அவசியத்தை இளைஞர் முதல் பெரியோர் வரையுள்ள சமுதாயத்திற்கு வலியுறுத்த விரும்பினார் அறிஞர். எனவே ‘நம்பிக்கை மனிதனுக்கு மிக மிக அவசியம்’ என்றுமட்டும் கூறியிருக்கலாம். இருந்தாலும் நம்பிக்கை முழுநம்பிக்கையாக இல்லாதவர்களுக்காக சொல்லப்படுவது  அவரின் அனுபவம் என்பதால், அது கேட்பவர்கள் ஏற்றுக் கொண்டு அதனைத் தொடர்ந்து முயற்சி செய்து அதனை அவர்களின் அனுபவமாக அனுபவிப்பதற்காகவே உவமானத்துடன் கூறி அவர்கருத்தை விளங்க வைக்க கையாண்ட யுக்திதான் அது.

        பொழுது விடிவதற்கு முன்னரே 3-00 மணிக்கெல்லாம் குயில் கூவ ஆரம்பித்து விடும்.  இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் கருத்தில் கொண்டுதான் ‘இருட்டாக இருக்கும்போதே விடியலை உணர்ந்து பாடத் துவங்கும் பறவையைப் போன்றது ‘நம்பிக்கை’ என்கிறார் அறிஞர்.  பறவைகள் இரவில் கூடுகளில் தங்கிவிடுகின்றன.  சூரியன் உதயமாக இருக்கின்ற அதிகாலையில் கூட்டைவிட்டு வெளியே சென்றால்தான் அதற்கு அன்றைய உணவு கிடைக்கும்.  அதனால் அதிகாலை-இருட்டாக இருக்கும்போதே சூரியன் உதயமாகிவிடும் என்கின்ற நம்பிக்கையில்தான், மகிழ்ச்சியில் குரல் எழுப்பி தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றன.  

        எவ்வளவு  தூரம் பறக்கவேண்டுமோ, 

        எவ்வளவு நேரம் ஆகுமோ,  

        எவ்வளவு உணவு கிடைக்குமோ என பறவைகளுக்குத் தெரியாது. இருப்பினும் சூரியன் உதயமாகப்போகின்ற நம்பிக்கையில்தான் தன்னை தயார் செய்து கொள்கின்றன.  ஆகவே மனிதன் ஆரம்பத்தில் முயற்சியில் ஆரம்பித்து அது தொடர்ந்து விடாமுயற்சியாகி, பின்னர் அந்த விடாமுயற்சி தொடா்ந்து வெற்றி பெறும் வரை முதலில் கொண்ட நம்பிக்கைதான் துணையாக இருக்கின்றது.  எனவே மனதிற்கு பலம் அவன் தன்மீது கொண்ட, நல்லவற்றின் மீது கொண்டுள்ள நம்பிக்கைதான்.

       ஐந்தறிவு உயிரினங்களுக்கு நம்பிக்கை என்பது என்ன என்றும் தெரியாது. அவசியமும் இல்லை. நம்பிக்கை இயல்பாகவே உள்ளது. நம்பியபடி நடந்ததா என்பதும் அவற்றிற்கு தெரிய வாய்ப்பில்லை.  ஐந்தறிவு சீவன்களுக்கு commitment என்பதே கிடையாது. அவை நிகழ்காலத்தில் வாழ்கின்றன(They live in the present).  ஆனால் மனிதன் நிகழ்காலத்தில் வாழத் தெரியாமல் இறந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

       ஒழுங்காற்றலை அறிவாகக் கொண்ட  மனிதனோ,

       தான் ஏன் பிறந்தேன் என்று அறிந்து,

       அதன் பொருட்டு தேவையான

       ‘ஒழுங்காற்றலான அறிவை பெயருக்கேற்றவாறு, ஒழுங்குரியதாக உயா்த்தி(ஒழுக்கம்) மனிதன் மனித வடிவில் மனிதனாக ஒழுக்க வாழ்வு வாழ்ந்து,

       பிறகு தெய்வமாகி வாழ வேண்டிய commitment’ ஐ அறவே மறந்துவிட்டு,

       தேவையுள்ள, அதனுடன் சேர்த்து (along with)அதனை உள்ளடக்காத மற்ற, தேவையில்லாத  ஈடுபாடு பற்றிய கடப்பாட்டு நிலைகள்(Necessary commitments –OK. but Unnecessary commitments??) ஏராளமாக உள்ளன. ஆகவே எல்லாவற்றையும் முடிக்க  தேவையாய் இருக்கின்றது மன ஆற்றல்.  மனஆற்றல் எல்லாவற்றிற்கும் ஈடுபாடு கொடுக்க முடியாமல் போகின்றது.  எனவே இங்கேதான் அவன் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படுகின்றது.

       மகான் மகாகவி பாரதியார் நம்பிக்கையைப் பெறுவதற்கு அன்னையை வேண்டுவதைக் கவனிப்போம்.

     “எண்ணிய முடிதல் வேண்டும்.

    ……………………………………………………………………….

    திண்ணிய நெஞ்சம் வேண்டும்

    ……………………………………………………………………………………..” என்கிறார் மகான் மகாகவி பாரதியார்.

    மகரிஷி அவர்கள் எண்ணத்தின் வலிமையை(நம்பிக்கை)ப் பற்றிக் கூறுவதனைக் கவனிப்போம்.

    எண்ணத்தின் வலிமை(13-01-1954)

    “எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும்

    எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அமைந்திடில்”  என்கிறார் மகரிஷி அவர்கள்.  வாழ்க வளமுடன். இத்துடன் இன்றைய சத்சங்கத்தை முடித்துக் கொள்வோம். வாழ்க வேதாத்திரியம்.  வளர்க வேதாத்திரியம்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                  வளா்க அறிவுச் செல்வம்

    Loading