இன்றைய விருந்து

  • FFC -123-அயரா விழிப்புணர்வு

    வாழ்க மனித அறிவு                         வளர்க மனித அறிவு

    ( Constant Awareness )

     அயரா விழிப்புணர்வு

    FFC -123

    30-09-2015–புதன்

    FFC-123-விழிப்பு நிலை சீவன்முக்தி-பாடல்1

     

    அறிவின் மூன்றாம் வளர்நிலை

    3) எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் விழிப்புடன் இருத்தல்.

    அயரா விழிப்புணர்வு என்கின்ற தலைப்பை எடுத்துக் கொண்டு சிந்தித்து வருகிறோம். இன்று அறிவின் வளர் நிலைகளில் மூன்றாவது நிலையான ‘எண்ணம், சொல், செயல் ஆகியவைகளில் விழிப்புடன் இருத்தல்’ பற்றி சிந்திக்க இருக்கிறோம். மனிதனின் கர்மா. எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றின் வழியாகத்தான் நடைபெறுகிறது. மனிதனின் கர்மாவிற்கு ஏற்ப விளைவுகள் வருவதால், அதற்கேற்ப இன்ப-துன்பம் வருவதால், துன்பத்தை தவிர்க்க எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் விழிப்பு நிலை வேண்டும்.

    மேலே உள்ள கவியின் வாயிலாக எண்ணம்-செயல், விளக்க வழியே இல்லாமல், பழக்க வழியே இருக்குமானால் இறைஉணர்வை எய்த முடியாது என்பதனை அறிய வேண்டும். விழிப்பு வந்தால் சீவனில் இறைத்தன்மைளைக் காணலாம் என்கிறார் மகரிஷி அவர்கள். இதனைக் கருத்தில் கொண்டுதான் மகரிஷி அவர்கள் அறிவின் வளர்நிலைகளில் ‘எண்ணம், சொல், செயல், ஆகியவற்றில் விழிப்பு’ இருத்தலை மூன்றாவதும் கடைசியுமாக சோ்த்துள்ளார்,

    இருபத்து நான்கு மணிநேரத்தில் எட்டு மணிநேரம் உறக்கத்திற்காக செலவழிந்து விடுகின்றது. மீதமுள்ள பதினாறு மணி நேரம் விழித்துக் கொண்டுதான் இருக்கிறான் மனிதன். அப்போதுதான் அவனுக்கு தவறுகள் செய்யும் சிக்கல்கள் வருகின்றன. தூங்காமல் இருக்கும் போது விழித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அவனுக்கு உணர்வும் உள்ளது. அப்படியிருக்கும் போது, அறிவிற்கு அது உணர்வு நிலைதான் என்றாலும் அப்போதும் அதற்குப் பிரத்தியேகமான விழிப்பு உணர்வு வேண்டும் என்கிறார்.

    அதனை அயரா விழிப்பு நிலை என்கிறார். அதனை அறிவிற்கான வெளிச்சம் என்கிறார். அந்த வெளிச்சத்தில் வாழ்க்கையை நடத்தச் சொல்கிறார். பேரறிவின் தன்மாற்றத்தில், மனித அறிவு ஞானத்தைப் (அறிவையறிந்த தெளிவு) பெறுவற்கான பயணத்தில், அறிவு அறிந்த அனுபவங்களில் (knowledge) அயரா விழிப்புணர்வு என்பது உச்ச நிலை என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். “Awareness is a higher stage of knowledge in its evolutionary progress towards Wisdom” என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    மனிதன் உறங்கும் போது தவறுகள் செய்ய முடியாது. விழித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவன் தவறுகள் செய்கிறான். எனவேதான் கண் விழித்துக்கொண்டு, உணர்வுகள் உள்ள நிலையில் அயரா விழிப்பு நிலை வேண்டும் என்கிறார். இந்த அயரா விழிப்பு நிலையை மேன்மையாகக் கூறுகிறார். இந்த நிலையை ஞானம் என்கிறார் மகரிஷி அவர்கள். இந்த அயரா விழிப்பு நிலையைத்தான் மெய்ஞானம் என்கிறார். அறிவிற்குள்ள விழிப்புணர்வு பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் (School of thoughts) இருக்கின்றன.

    ஒன்று Materialistic awareness. மற்றொன்று Esoteric Awareness. Materialistic awarenss என்பது உலகியல் சம்பந்தப்பட்டது. சமையல் அறையில் சமைப்பதிலிருந்து ஆய்வுக் கூடத்தில் செய்யும் ஆராய்ச்சி வரையுள்ள விழிப்புணா்வாகும். ஆனால் “Esoteric Awareness“ என்பது இயற்கையின் இரகசியங்களை அறிவதிலும், அறிந்து அதுபோல் வாழ்க்கை வாழ்வதிலும் வேண்டிய விழிப்புணர்வாகும். மனிதனுக்கு “ஆன்ம விழிப்புணர்வு–Spiritual awakening” வேண்டும். . வேதாந்த நூல்கள் கூறுதாவது:- “ In Awakened Consciousness, Awareness is at its Zenith(உன்னத நிலை).” “Awareness Is God” என்கின்றது வேதாந்தம்.

    இந்த உயர்ந்த விழிப்பு நிலை வந்து விட்டால் மனிதன் பிறர் தவறுகளைக் குறையாக எண்ணமாட்டான். அதில் விழிப்புணர்வோடு இருப்பான். அப்படிக் குறைகளாக இருந்தாலும் அதனைச் சுட்டிக்காட்டாமல், “அவர்களுடைய அறிவு நிலை அவ்வளவுதான். அதற்கேற்ப அவர்கள் செயல்களைச் செய்து வருகிறார்கள். அதற்கு நாம் எந்த விதத்தில் அவர்களுக்கு உதவ முடியும்” என்கின்ற உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவான். தன்னுடைய செயல்களில் குற்றம் இருக்காது. மாறாக தன்னுடைய குற்றம் கண்டு தன்னைத் திருத்தி எப்போதும் நன்மையே செய்யும் தகைமை அவனுக்கு வந்துவிடும் என்கிறார் வாழ்வியல் விஞ்ஞானியும் மற்றும் அறிவியல்(அறிவு+இயல்=அறிவியல்) விஞ்ஞானியுமான, *அறிவியலாளர் (Scientist Science of Consciousness) வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    விஞ்ஞானத்தில் இன்றுவரை, அறிவு பற்றிய விளங்கங்கள் இல்லாமலே விடுபட்டுள்ளது. “அறிவே தெய்வம்”, இறை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது, “எல்லாவற்றையும் அறியக்கூடியது இறை” என்று ஆன்மீக நூல்கள் கூறியிருந்தாலும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் அளித்துள்ள அறிவைப் பற்றிய விளக்கம்தான் மெய்ஞானத்தை தெளிவாக்குகிறது. மெய்ஞானத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. வேதாத்திரியத்தின் தோற்றம் மெய்ஞான உலகில் ஒரு மைல்கல். பிரபஞ்ச உருவாக்கம் பற்றி விஞ்ஞானத்தில் இல்லாத தெளிவான விளக்கம் வேதாத்திரியத்தில் உள்ள அறிவைப்பற்றிய விளக்கத்தால் கிடைத்துள்ளது.

    ஆகவே அறிவைப்பற்றிய தெளிவான அறிவுபூர்வமான விளக்கங்களை அளித்து, அறிவிற்கான இயலை (அறிவு+இயல்=அறிவியல்) (Science of Consciousness) ஏற்படுத்தியுள்ள மகரிஷி அவர்களை *அறிவியலாளர், அறிவியல் விஞ்ஞானி என்கிறோம். சுவாமி விவேகானந்தர் மற்றும் உலகப் புகழ் விஞ்ஞானி வாயிலாக “விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைய வேண்டும்” என்று ஏற்கனவே இயற்கை விருப்பம் தெரிவித்திருந்ததை, அவா்களுக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, நடத்தி பூர்த்தி செய்து விட்டது. விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணைக்கப்பட்டு விட்டது. அத்வைத விஞ்ஞானத்தை (Advaidic Science) உருவாக்கிவிட்டது இயற்கை.

    விழிப்புணா்வின் மேன்மையைப் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கும் போது, “தன்குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்போம்” என்று மகரிஷி அவர்கள் கூறுவதனை அடுத்த ஞாயிறன்று(04-10-2015) நினைவு கூர்வோம். வாழ்க வளமுடன்.

    Loading

  • FFC- 122-அயரா விழிப்புணர்வு

    வாழ்க மனித அறிவு                          வளர்க மனித அறிவு

    Constant Awareness

    அயரா விழிப்புணர்வு

    அ வி (FFC) – 122

    27-09-2015–ஞாயிறு

    அறிவின் முதல் வளர் நிலை—மனம் விரிவு பெறுதல்

     

    FFC-122-NAG-மனித_மாண்பு

     

    ‘அறிவின் வளர் நிலை’ என்கின்றபோதே ஆறாம் அறிவு தன்மாற்றத்தில், அதாவது பரிணாமத்தில் இன்னும் தன்னுடைய தரத்தை எட்டவில்லை என்றாகின்றது.

    விலங்கினத் தன்மையை உட்பதிவாகக் கொண்ட(பரிணாமக்கசடுகள்) மனிதனை உயா் மனிதனாக வாழச் செய்யும் கலையே மனவளக்கலை என்கிறார் மகரிஷி அவர்கள். அதாவது அறிவை மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான பயிற்சியே மனவளக்கலையாகும். ‘நான் யார்?’ என்கின்ற ஆன்மீகத் தேடல்—வினாவிற்கு நிறைவானப் பதிலைப் பெறுவதற்கான பயிற்சியினை கருத்தியலாகவும், செய்முறையாகவும் கொடுத்து வருகின்றது மனவளக்கலை.
    அறிவிற்கு வேண்டிய மூன்று வளர் நிலைகளை ஏற்படுத்தும்படியாக மனவளக்கலையை வடிவமைத்திருக்கிறார் வாழ்வியல் விஞ்ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள். அவையாவன:

    1) மனம் விரிவு பெறுதல்:

    மனம் விரிவு பெற வேண்டும். அப்படியென்றால் என்ன? மனம் என்பது விரிவடையக்கூடிய Elastic பொருளா? தற்போது மனம் குறுகியுள்ளது. தான், தன் குடும்பம் என்கின்ற அளவிலேதான் உள்ளது மனதின் நிலை. ஆனால் வாழவைத்துக் கொண்டிருக்கின்ற சமுதாயத்தின் மீது அக்கறை கொள்ளும் அளவிற்கு மனம் இன்னும் விரியவில்லை இது வரை. ஆனால் மனவளக்கலையின் வாயிலாக, மனதை, அதனுடைய மூலம் (origin) வரை விரியச் செய்து அந்த மூலமே மாற்றமாகி இருக்கும் சமுதாயத்தின் மீதும் அக்கறை கொள்ளும் அளவிற்கு இயற்கை இப்போது செய்து வருகின்றது.

    மனம் குறுகியுள்ளது என்றால், தன்முனைப்பால், “தான்”. “தனது” என்கின்ற இரு எண்ணக் கோடுகளைக் உருவாக்கிக் கொண்டது என்கிறார் மகரிஷி அவர்கள். “தான்” “தனது” என்பது வெறும் எண்ணக் கோடுகள் தானே தவிர, உண்மையில் இயற்கையில் அவ்வாறு இல்லை. மனிதனைத்தவிர மற்றவைகள் பிறர்க்காகத்தான் வாழ்கின்றன. மரம் கனிகள் கொடுக்கின்றது. இது தனக்காகவா கொடுக்கின்றது? இல்லை. மனிதனுக்காகக் கொடுக்கின்றன. மரம் தனக்கென கனிகளை வைத்துக் கொள்ளவில்லை. வைத்துக்கொண்டால் பழம் அழுகிவிடும். பசு தனக்காக பால் தருவதில்லை. மனிதனுக்காக பால் தருகின்றது.

    இயற்கையில் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களுக்கும் “தான்”, “தனது” என்கின்ற எண்ணக்கோடுகள் இல்லாமையால் அவற்றிற்குத் துன்பங்கள் இல்லை. இப்படி இயற்கை அமைப்பு இருக்கும் போது, மனிதன் மட்டும் இயற்கையை அறியாத தன்முனைப்புடன், “தான்” “தனது” என்கின்ற இரு எண்ணக் கோடுகளுடன் இருப்பதால் அந்த இரண்டு தம்பதிகளுக்குப் பிறக்கும் ஆறு அவலக்குழந்தைகள் தான்

    பேராசை,
    சினம்,
    • கடும்பற்று,
    உயர்வுதாழ்வு மனப்பான்மை,
    • வஞ்சம் ஆகியவையாகும்
    என்கிறார் இயற்கையியல் மற்றும் வாழ்வியல் விஞ்ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    வேதாத்திரியம் ௬றும் ‘தான்’ ‘தனது’ என்கின்ற தன்முனைப்பு விஞ்ஞானத்தில் (Science of Ego) இயற்கையைப் பற்றியும் உள்ளது. மனித வாழ்க்கையைப் பற்றியும் உள்ளது. இயற்கையின் ஆதிநிலையாகிய பேரறிவின் தன்மாற்ற நிகழ்ச்சியைப்பற்றிய விஞ்ஞான உண்மையும் உள்ளது.

    அதே நேரத்தில் மனிதனின் வாழ்க்கைச் சிக்கலுக்குக்கான அறிவு பூர்வமானக் காரணத்தையும் குறிப்பிடுகிறார். ஆகவே மகரிஷி அவர்களை இயற்கையியல் மற்றும் வாழ்வியல் விஞ்ஞானி என அழைத்து மகிழ்வதோடு மட்டமல்லாது, அதே நேரத்தில், அந்த மகிழ்ச்சி இந்த வாழ்வியல் கல்வி, உலக மக்களிடையே பரவிட ஊக்கத்தையும் அக்கறையையும் நமக்கு அளிக்குமாக. உலக மக்கள் அனைவரும் தனது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவித்து வளமுடன் வாழட்டும். கீதா சாரம் கூறும் உலக நியதியினைக் கவனிப்போம்

    FFC_46-geetha chaaram-

    சிந்திக்கவும் கீதாசாரம் கூறுவதனை.

    ”எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றவருடையதாகின்றது.

    மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்”

    இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமாகும்” என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

    விளக்கம்:-

    தந்தைக் கட்டிய வீடு

    தந்தைக்குப் பிறகு மகனுக்கு சென்று விடுகின்றது.

    மகனுக்குப்பிறகு பேரனுக்குச் சென்று விடுகின்றது.

    தந்தை தான் கட்டிய வீட்டினை, இப்பூவுலகத்தைவிட்டுப் போகும் போது எடுத்துச் செல்ல முடிவதில்லை. ஆனால் தந்தை முயற்சி செய்தால் வீட்டிற்கெல்லாம் வீடாகிய வீடு பேற்றினை மனவளக்கலையால் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றினையும் அனுபவித்து பெறுதற்கெல்லாம் அரிய பேறான வீடு பேற்றினை அடையாலாம். வாழ்க மனவளக்கலை. வளா்க மனவளக்கலை. வாழ்க மனவளக் கலைஞர்கள். வளர்க மனவளக் கலைஞர்கள்.

    இந்த கீதாசாரத்தின் உலகியல் எதார்த்தத்தை அறிவு அறியாததால் மனம் குறுகி நிற்கின்றது. பாவம் அறிவு என்ன செய்யும்? பரிணாமக் கசட்டினை அகற்றுவதற்கே அதற்குப் பல்லாயிரம் பிறவிகள் தேவையிருக்கின்றது.

    பரிணாமக் கசடு அகன்றால்தான் புலன்மயக்கம் தீரும். அந்த நிலையில்தான் கீதாசாரம் விளங்க ஆரம்பிக்கின்றது.

    தின்றுத் திரிந்து உறங்கிக் கொண்டிருந்த நிலையில் அறிவை விழித்தெழச் செய்திருக்கின்றது வேதாத்திரி மகரிஷியின் வாயிலாக இயற்கை.

    பரிணாமக் கசடாலும், புலன்மயக்கத்தாலும் மனதிற்கு, அறவே வேண்டா குணங்களான பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய அறுகுணங்கள் ஏற்பட்டுவிட்டன.

    இதன் விளைவு செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு என்கின்ற இயற்கை நீதிப்படி விளைவு தனக்கே துன்பங்கள் வரும். பிறர்க்கும் துன்பம் வரும். ஆகவே மனதை விரிவு பெறச் செய்ய வேண்டும். இதற்கான பயிற்சியாக உயிர் மீது தவம் இயற்றும் தவமுறை வகுத்துக் கொடுத்து, உடலளவிலே குறுகியிருக்கும் மனதை இப்பிரபஞ்சம் வரையும், அதற்கும் மேலாக எங்கிருந்து மனம் உருவாகியதோ அந்த எல்லையில்லாப் பெருவெளி வரை மனதை விரித்து பழுகுவதற்கானப் பயிற்சியினை அளித்துள்ளார் மகரிஷி அவர்கள்.

    2) இயற்கை விதி அறிதல்:

    மேலும் மனிதன் பெரும்பாலும் தவறுகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறான். அவன் செய்யும் தவறுகள் சொல் மற்றும் செயல் வடிவில் இல்லையாயினும் அது எண்ண வடிவில் இருந்து கொண்டுதான் உள்ளது. தவறுகள் எண்ண வடிவில் இருந்தாலும் அதற்கும் விளைவுகள் உண்டு.

    செயலுக்கேற்ற விளைவு நிச்சயமாக உண்டு என்பதையும், அவ்விளைவைக் கொடுப்பது இயற்கையே என்பதனையும் அறிய வேண்டும். செயலிலே விளைவாக வருவது வேறு எதுவும் இல்லை. இறைவனே என்பதனை உணர்த்துகின்றது.

    அதனால்தான் மனதை சரி செய்யக்கூடிய, செம்மைப்படுத்தக் கூடிய கலையை உருவாக்கி அதற்கு மன+வளக்கலை எனப் பெயரிட்டுள்ளார். இத்துடன் இல்லாமல் அதனை ஒரு அளவு கோலால் சரிபார்த்துக் கொள்ளச் செய்துள்ளார். அதுதான் அறிவிற்கான மூன்றாவது வளர் நிலை. அதனை சத்சங்க நிகழ்வுப்படி புதனன்று (30-09-2015) சத்சங்கத்தில் சிந்திப்போம். வாழ்க வளமுடன்.

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    Loading

  • அயரா விழிப்புணர்வு

    Constant Awareness

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    அயரா விழிப்புணர்வு

    அ.வி. (FFC) – 121

    23-09-2015-புதன்

    poRi Vayilஇப்போது திருவள்ளுவர், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஆறாவது குறளாக மொழிந்துள்ளதை கவனத்திற்குக் கொண்டு வருவோம். இக்குறள் அனைவருக்குமே தெரிந்ததுதான். பள்ளியில் படித்திருப்போம். ஆனால் இன்று இக்குறளின் உட்பொருளை உணர்வோம்.

    “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
             நெறிநின்றார் நீடுவாழ்வார்.”

    புலன்களைப் பொறி – வாயில் என்கிறார். திருவள்ளுவர் புலன்களைக் கருவிகள் என்று கூறவில்லை. பொறிகளை, அகப்படுத்தும் (trap) கருவியாகத்தான் கூறுகிறார். பொறி என்று மட்டும் கூறவில்லை. பொறி+வாயில்= பொறிவாயில் என்கிறார். எலிப்பொறி வைத்து எலி பிடிக்கப்படுகின்றது. சிறிய மசால் வடைத் துண்டிற்கு ஆசைப்பட்டு எலி உயிரையே இழக்கின்றது. ஐம்பொறியினுடைய வாயில் சிக்காமல் ஒழுக்க நெறி நின்றவர் நீடு வாழ்வார் என்கிறார்.

    இக்குறளை கடவுள் வாழ்த்து என்கின்ற அதிகாரத்தில் வைத்துள்ளதன் பொருளை அறிய வேண்டும். இறையுணர்விற்கும் புலன்வழி வாழ்க்கைக்கும் தொடர்பு உள்ளது. புலன்கள் மனிதனின் ஆசைகளை அனுபவிக்கும் கருவிகள்தான். ஆனால் மனித சமுதாயம், இன்பம் அனுப்பவிப்பது புலன்கள் வழியாக மட்டுமேதான் முடியும் எனக் கருதுகின்றது. தனது புலன் வழி ஆசையிலேயே மனிதன் மூழ்கி இருந்தால் அவனுக்கு புலன் இல்லாமல் அனுபவிக்கக் கூடிய இறைமீது எவ்வாறு ஆசை தோன்றும்? ஆகவேதான் இறைக்கும் நமக்கும் உள்ள தூரம் நாம் கொண்டிருக்கும் ஆசைகளே எனப்படுகின்றது.

    எனவே அயராவிழிப்புணர்வில் அறிவு இருக்க வேண்டும் எனில் உணர்வதற்கு கருவிகளாக உள்ள புலன்களை, எலியைப்பிடிக்கும் எலிப்பொறிபோல்(trap), ஆக்கிவிடக்கூடாது. புலன்கள் ‘உணர்கின்ற கருவிகளாக’ இல்லாமல் ‘மனிதனை அகப்படுத்தும்(trap) கருவிகளாகி’ விட்டால் அங்கே விழிப்புணர்வு இல்லை என்றாகின்றது.

    அயரா விழிப்புணர்வு என்றால் என்ன பொருள்? விழித்தல் என்றால் என்ன பொருள்? உறக்கம் கலைந்து எழுந்திருத்தல் விழித்தல் எனப்படுகின்றது. அப்போது உறக்கத்தில் இல்லாதிருந்த உணர்வுகள் அறிவிற்கு வந்துவிடுகின்றது. இந்த விழித்தலை அயரா விழிப்புணர்வு என்று நாம் கூறவில்லை. ‘விழிப்பில் விழிப்பு நிலையை அயரா விழிப்புணர்வு’ என்கிறோம். அதாவது உறக்கம் கலைந்து விழித்துக் கொண்டிருக்கும்போதுதான் மனிதனின் முத்தொழில்களான எண்ணம், சொல், செயல் நடைபெறுகின்றன. அப்போது

    • எதனை எண்ணலாம்–எதனை எண்ணக்கூடாது,
    • எதனைப் பேசலாம்–எதனைப் பேசக்கூடாது,
    • எதனைச் செய்யலாம்–எதனைச் செய்யக்கூடாது’,

    என்பதில் கவனம் தேவை.

    ‘தான் யார்?’, ‘வாழ்வின் நோக்கம் என்ன?’, என்பது ஞாபகத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அறிவின் நுண்மாண் நுழைபுலன் திறன் வேலை செய்யும். இந்த நுண்மாண் நுழைபுலன் திறனுடன் இருக்கின்ற அறிவின் நிலையை அயராவிழிப்புணர்வு நிலை என்கிறோம்.
    மனிதனுக்கு எப்போதும் இன்பம் வேண்டுமென்றால் அவன் செயல்கள் எப்போதுமே நல்லவையாக இருக்க வேண்டும். எனவே எண்ணம், சொல், செயல் ஆகிய முத்தொழில்களைச் செய்யும் போது கவனம் வேண்டும். எதில் கவனம் வேண்டும்? செய்யும் செயல்களுக்கான விளைவு அறிந்து செயல் புரிவதில் கவனம் வேண்டும். இந்த கவனமே விழிப்புடன் இருத்தலாகும். இதனையே விளைவறிந்த விழிப்பு நிலை என்பார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    அயரா விழிப்புணர்வு தேவை என்கின்ற அறவுரையான அறிவுரை ஏன் தோன்றியது? காரணம் என்ன? இதுவரை மனிதன் அயரா விழிப்புணா்வில் வாழவில்லை எனத் தெரிகின்றது.

    குருவை அடைவதற்கு முன்னர் “அயரா விழிப்புணர்வு” என்கின்றச் சொற்றொடர் கேள்விப்படவில்லை. இப்போது இச்சொற்றொடர் அறியப்படுகின்றது. இச்சொற்றொடரில் உள்ள அறமான அறிவுரையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    பேரறிவே பின்னப்பட்டு (fractionated consciousness) ஒரறிவு உயரினங்களிலிருந்து ஐயறிவு வரை பயணித்துவிட்டு, கடைசியாக மனித அறிவாக வந்துள்ளது. பேரறிவிற்கு ஆதிநிலையில் உணர்வு இல்லை. ஆதிநிலையில், அதாவது இயங்காநிலையில் பேரறிவிற்கு உணர்வதற்கு அங்கு ஏதும் நிகழ்ச்சி இல்லை. ஆனால் பின்னப்பட்டு பஞ்சபூதங்களாகி, உயிரினங்களாகியபோது அதற்கு உணர்வு வந்து விட்டது. ஐயறிவு வரை பிரபஞ்ச நிகழ்ச்சிகளான அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியவைகளை படிப்படியாக உணர்ந்து வந்தது. அதாவது இருந்ததை உணர்ந்தது. அதுதான் ஐந்தறிவு வரையுள்ள திறன்.

    தன்மாற்றத்தில், பின்னப்பட்ட பேரறிவு, ஆறாம் அறிவாக வந்தபோது அது ஏற்கனவே உணர்ந்த ஐந்து உணர்வுகளைத் தவிர வேறு பிரபஞ்ச நிகழ்ச்சிகள் உணர்வதற்கென்று இல்லை. ஆகவேதான் பேரறிவு ஆறாம் அறிவாக மலரும்போது ஆறாம் அறிவிற்கெனத் தனியாக புலனை ஏதும் உருவாக்கிக் கொள்ளவில்லை. ஆறாம் அறிவாக வந்த போது புலன்கள் ஏதும் உருவாகாத நிலையில் ஆறாம் அறிவின் பணி சிந்திக்க வேண்டும். சிந்தித்திருக்க வேண்டும். அதில் தவறிவிட்டது. இயற்கையில் தவறு ஏற்பட்டது என்று நாம் யார் சொல்வதற்கு? தவறில்லை. தாய் தன்குழந்தையை ஒரு வயதில் விளையாட்டுப் பள்ளிக்கு(play school) அனுப்ப முடியுமா? ஒன்றாம் வகுப்பில் சோ்வதற்கு ஐந்து வயது ஆகியிருக்க வேண்டுமல்லவா? அதுபோல்தான் இயற்கையும் நினைத்த மாத்திரத்தில் ஏதும் செய்துவிட முடியாது. மனிதன் யார்? இயற்கை யார்? இருவருமே வேறு வேறுகிடையாது. இயற்கையின் குழந்தைதான் மனிதன்.

    அதனால்தான் ஆதங்கப்பட்டு இப்போது அந்த பின்னப்பட்ட பேரறிவு சொல்கின்றது” சிந்திக்க வேண்டும். சிந்தித்திருக்க வேண்டும்” என்று. இவ்வாறாக ஆதங்கப்பட்டு மனிதன் எண்ணினால்தான் “எண்ணமே பரிணாமத்தின் வாகனம்” ஆக உள்ளதால் பரிணாமம் முழுமை அடைய முடியும். அவ்வாறு இருக்கும் போது அறிவு, “நிகழ்ச்சிகளை உணரும் நான் யார்?” என விழா எழுந்துத் தன்னை அறிவதைத் தவிர வேறு பிரபஞ்ச நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை என்று முடிவுக்கு வரும். நிகழ்ச்சிகளையெல்லாம் உணரும் “நான் யார்?’” என உணர்வதற்கு விரும்பும் நிலைக்கு இந்நேரம் வந்திருக்க வேண்டும். இயற்கை பரிணாமத்தில் அந்நிலையை மனவளக்கலை வாயிலாக உருவாக்கி வருகின்றது.

    இங்கே ஓர் உண்மையினை அறிந்து கொள்ள வேண்டும். தன்னை உணர்வதற்குப் புலன்கள் தேவையில்லை. தன்னை உணர்ந்தால் கடவுளை உணரலாம். ஆகவே கடவுளை உணர்வதற்குப் புலன்கள் அவசியமில்லை. ஆகவே கடந்து உள்ளே சென்றால் கடவுளை உணரமுடியும் என்பதால்தான் உணரப்படுகின்ற அந்த ஒன்றிற்கு கட+உள்= கடவுள் எனப்பெயரிட்டான் மனிதன். மேலும் சிந்தனையை ஞாயிறன்று (27-09-2015) தொடா்வோம்.

    வாழ்க வளமுடன். வாழ்க மனித அறிவு. வளா்க மனித அறிவு.
    வாழ்க அறிவுச் செல்வம். வளா்க அறிவுச் செல்வம்.

    Loading

  • அயரா விழிப்புணர்வு

    Constant Awareness

    வாழ்க மனித அறிவு                             வளர்க மனித அறிவு

    அயரா விழிப்புணர்வு

    FFC -120

    20-09-2015—ஞாயிறு

    FFC-120-அயரா விழிப்புணர்வு

     

    மேலே நினைவுகூர்ந்த இரண்டு பாடல்களில் விழிப்புநிலையின் மேன்மையைப் பற்றி அருட்தந்தை அவர்கள் கூறியுள்ளார்கள். விழிப்பு நிலை பண்பை வளர்க்கும். ‘மீண்டும் பிறவா’ வரத்தை நல்கும் என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே இன்றைய சிந்தனையாக ‘அயரா விழிப்புணர்வு’ என்கின்ற தலைப்பினை எடுத்துக் கொண்டுள்ளோம். ‘விழிப்புணர்வு’ என்று மட்டும் தலைப்பாக எடுத்துக் கொள்ளாமல், அதனுடன் ‘அயரா’ என்கின்ற சொல்லையும் சேர்த்துக் கொண்டு ‘அயரா விழிப்புணர்வு’ என்று எடுத்துக் கொண்டுள்ளோம். காரணம் விழிப்புநிலை அயர்ந்து விடக்கூடாது என்பதற்காக.

    விழிப்பு நிலையில் விழித்துக் கொண்டிருத்தலே அயரா விழிப்புணர்வு என்கிறோம் நாம் இங்கு.

    அதாவது விழிப்பில் விழிப்பாக இருத்தலே விழிப்புணர்வு என்கிறோம் நாம்.

    அயரா விழிப்புணர்வு ஆங்கிலத்தில் “Constant awareness” எனப்படும். அயரா விழிப்புணர்வு என்றால் என்ன? அயரா, விழிப்பு, உணர்வு ஆகிய மூன்று சொற்களைக் கொண்டிருக்கின்றது “அயரா விழிப்புணர்வு” என்கின்ற சொற்றொடா்.

    யாருக்கு அயரா விழிப்புணர்வு தேவை?  அறிவிற்கு அயரா விழிப்புணர்வு தேவை.
    ஏன் தேவை?   மனித அறிவு இன்பத்தையே எப்போதும் விரும்புகின்றது. இதில் தவறில்லை. ஏன் அறிவு துன்பப்படவேண்டும்? அறிவு எப்போதும் இன்பத்தையே விரும்புவதால், அறிவிற்கு எப்போதும் விழிப்புணர்வு தேவை. எப்போதும் தேவையாக இருக்கின்ற விழிப்புணர்வைத்தான் “அயரா விழிப்புணர்வு” என்கிறோம். அயரா விழிப்புணர்வு எவ்வாறு எப்போதும் இன்பத்தைத் தரும் என்று இன்று சிந்திக்க உள்ளோம்.

    முதலில் ஒரு சிறு உதாரணத்தின் மூலம் அயரா விழிப்புணர்வின் பயனை இப்போதே புரிந்து கொண்டுவிட்டு விரிவாக சிந்திப்பதற்கு நம் சிந்தனையைத் தொடர்வோம். ஐநூறு கிலோ மீட்டர் கடப்பதற்காகும் பத்து மணிநேரமும் தூங்காமல் விழித்துக்கொண்டுதான் மகிழுந்தை (Car) ஒட்ட வேண்டும். சேர வேண்டிய இடத்தை நெருங்கும் கடைசி இரண்டு நிமிடங்களில், ஒரு சில நொடிகள் அயர்ந்து விட்டால் கூட விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒரு சிலர் விபத்தைச் சந்திக்கின்றனர்.

    ஆகவே ஒன்பது மணி, ஐம்பத்தெட்டு நிமிடங்கள் விழிப்புடன் இருந்து விட்டு கடைசி இரண்டு நிமிடங்களில் ஒரு சில வினாடி விழிப்புநிலைத் தவறியதால் அதற்குரிய விளைவு வருகின்றது. ஆகவேதான் பத்து மணிநேரமும் விழிப்புடன் உறங்காமல் மகிழுந்தை ஓட்டியிருக்க வேண்டும் ஓட்டுனா். இதுதான் அந்தப் பணியில் ஒட்டுனருக்கு இருக்க வேண்டிய அயரா விழிப்புணர்வாகும்.(அதோடு மட்டுமில்லை வாழ்விலும் அயரா விழிப்புணர்வு தேவை அவருக்கு) விழிப்புணர்வு அயர்ந்ததால் விபத்து நேரிட்டது. இதுபோல் உயிர் உடலில் இருக்கின்ற வரை, வாழ்க்கை என்கின்ற பேரின்ப உந்தை இங்கே ஒட்ட வேண்டியிருப்பதால் வாழ்க்கையில், யாராக இருந்தாலும், உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் அயரா விழிப்புணர்வு அவசியமாகின்றது.

    விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவ்வாறு அயா்ந்து விட்ட எல்லா ஓட்டுனர்களும் விபத்தைச் சந்திப்பதில்லை. ஒரு சில சமயங்களில் ஒரு சிலருக்கு விபத்து நடக்கின்றது. இங்கே தான் தீயவினைப்பதிவுகளின் விளைவுகளை வெளிக் கொண்டு வர உகந்த நேரமாக செயல்விளைவு நீதி முடிவு செய்துவிட்டது என்றும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஒட்டுனரின் செயலான அயர்ந்து விட்டமையின் விளைவு உடனே வந்து விட்டதாகவும் கருதலாம். இதில் எது சரி என ஆராயப்போனால் இன்றைய சிந்தனைக்கான தலைப்பை விட்டு வெளியே செல்வதாகிவிடும். ஆகவே இதே உதாரணத்தை வேறொரு சமயத்தில் வேறொரு தலைப்பில் சிந்திக்கலாம். தலைப்பிற்குள் செல்வோம்.

    “அயர்ந்து” என்றால் “தன்னை மறந்து” என்று பொருள். பிரயாணக் களைப்பால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார் என்கிறோம். என்ன அர்த்தம்? தன்னை மறந்து ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். “அயரா” என்றால் “தன்னை மறவாத நிலை” என்று பொருளாகின்றது. அறிவிற்கு வேண்டிய “தன்னை மறவாத நிலையை” அயரா விழிப்புணர்வு என்கிறோம்.

    “விழி” என்றால் “சுய உணர்வுடன் இருத்தல்” என்று பொருள். அறிவு விழித்திருத்தல் என்றால் அது தன்னுடைய சுய உணர்வுடன் இருத்தலாகும். “சுய உணர்வு” என்றால் தன்னுடைய நிலை, செயல், சூழல் முதலியவற்றை அறியும் கட்டுப்பாட்டு உணர்வு என்று பொருள். “விழிப்பு” என்றால் மயக்கம் நீங்கிய நிலை என்று பொருள். அதாவது விழிப்பு நிலை என்றால் மயக்கம் நீங்கி சுய உணர்வுடன் இருத்தல் என்பதாகின்றது.
    ‘உணர்வு’ என்றால் ஒன்றை அனுமதிக்கிற, விரும்புகிற, வேண்டுகிற மனநிலை என்று பொருள்.

    ‘அயரா விழிப்புணர்வு’ என்றால் மயக்கம் நீங்கி தன்னுடைய நிலையை மறவாது விரும்புகிற நிலை என்று பொருளாகின்றது. இந்நிலை மனிதஅறிவிற்கு அவசியமாகின்றது. ஏன் அவசியமாகின்றது? எப்போது மனிதனுக்கு ஒன்று அவசியமாக இருக்கும்? எந்த ஒன்று, மனிதன் சிக்கலற்று, துன்பமில்லாமல் இன்பமாக வாழ்வதற்கு தேவையாக இருக்கின்றதோ அந்த ஒன்று மனிதனுக்கு அவசியமாகின்றது.
    மயக்கம் நீங்கி தன்னுடைய நிலையை மறவாது விரும்புகிற நிலை அவசியமாகின்றது என்றால், மனிதஅறிவு தன்னுடைய மூலநிலையை (source, origin), மறந்து மயக்கத்தில் உள்ளது என்று பொருள். ஐயறிவு சீவனுக்கு இந்த நிலை அறிய வேண்டியதில்லை. ஏனெனில் ஐயறிவு சீவன்கள் ஒவ்வொரு புலனும் உணர வேண்டிய உணர்வை உணர்ந்து கொண்டு நிறைவு பெற்றுக் கொண்டுதான் உள்ளன.

    ஆறாம் அறிவுள்ள மனிதன் ஐயறிவு சீவன்கள் உணா்ந்து வந்த அதே அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகியன மட்டும் உணர்வதைத் தவிர ஆறாம் அறிவிற்கான பிரத்யேக உணர்வினை பெறாமல் இருக்கிறான்.

    ஆகவே மனிதனுக்கு நிறைவு ஏற்படாமல் புலன் வழி வாழ்க்கையிலேயே மூழ்கி அதனையே பிரதானமாக நினைக்கிறான். மனம் நிறைவு பெறாத போது, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று, என்றும் அழியாப் பொருளின் மீது மனம் திரும்பாமல், அழியும் பொருட்களின் மீது மோகம் கொள்கிறான். விளைவு, அளவும் மீறியும், முறை மாறியும் அனுபவித்து இயற்கை நீதியான இன்பமே துன்பமாக மாறும் என்பதனை அறியாமல் மயக்கத்தில் வாழ்கிறான்.

    இதனையே மெய்ஞானிகள் புலன்மயக்கம் என்கின்றனா். புலன்கள் உணரும் கருவிகளாகவே(பொறிகளாக) மட்டும், இருக்க வேண்டுமே ஒழிய புலன்களைச்  சிறைப்படுத்தும் பொறிகளாக(trap) ஆக்கி விடக்கூடாது மனிதன்.

    அப்படி ஆகிவிட்டால் அந்தப் புலனுக்கு அடிமை ஆகிவிடுகின்றது அறிவு. இதுதான் பழக்கம் எனப்படுகின்றது.

    இறைக்கு அடியராக இருப்பதைத்தவிர, பெரும்பாலும் புலன்களுக்கு அடிமையாகின்ற பழக்கம் தீய பழக்கங்களாகவே இருக்கும். ராஜ வாழ்க்கை வாழ வேண்டிய அறிவு அடிமை வாழ்க்கை வாழ்கின்றது.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்(23-09-2015–புதன்) திருவள்ளுவரின் துணைகொண்டு சிந்திப்போம்..

    Loading

  • FFC – 119-இறை அருள் பெற…….

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

    இறை அருள் பெற…….

    FFC – 119

    16-09-2015–புதன்

    அற உணர்வே இறை உணர்வு:

    எண்ணமே இயற்கையின் சிகரம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    எவ்வாறு எண்ணம் இயற்கையின் சிகரமாகும்?

    இயற்கை வேறு, இறை வேறு அல்ல. இறையின் மறு விஞ்ஞானப் பெயர்தான் இயற்கை. எண்ணமே இயற்கையின் சிகரம் என்கின்ற போது எண்ணமே இறை என்றுதானே பொருள்.

    எண்ணம் எவ்வாறு இயற்கையின் சிகரமாகும் என்கின்ற வினாவிற்கான பதிலைப் பார்ப்போம்.

    இயற்கையின் ஆரம்ப நிலை எது?

    இயற்கையின் ஆரம்ப நிலை வெளி.

    அந்த வெளியைத்தான் இறைவெளி என்கின்றனர் மெய்ஞானிகள். இறைவெளியின் நான்கு தரங்களாவன: வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம். நான்கு தரங்களில் மூன்றாவதாக பேரறிவு இருந்தாலும் சுத்த அத்வைதிகள் அறிவே தெய்வம் என்கின்றனர். ஏன்? மீண்டும் வினா எழுந்துள்ளது.

    இறைவெளி வற்றாயிருப்பாகவும், பேராற்றலாகவும் இருந்தாலும் பேரறிவு மட்டும் அதற்கு இல்லையானால் அது ஒன்றுமில்லாததாகத்தான் இருந்திருக்க வேண்டும். இறை வெளி தன்னிறுக்கத்தால், துகள்களாகி பஞ்ச பூதங்களாகி பின்னர் கோடானகோடி நட்சத்திரங்களாகி அதில் நாம் வாழும் பூமியைக் கொண்ட ஒரு சூரியக் குடும்பமும் ஆகியிருக்க முடியாது. உயிரினங்களே தோன்றியிருக்க முடியாது? ஆயிரம் போ்கள் வேலை செய்யும் தொழிற்சாலையில் அவர்களைக் கண்காணிக்க எத்தனை மேற்பார்வையாளர்கள் தேவையிருக்கின்றனர். மேற்பார்வையாளர்கள் தேவைப்படுகின்றனர் என்றால், அவா்களுடைய அறிவுதானே கண்காணிக்கின்றது. அதுபோல் இத்துனைப் பெரிய பிரபஞ்சமாகி, கோடான கோடி உயிரினங்களாகி, இறுதியில் மனித அறிவாக பரிணமிக்கின்றது என்றால் அதற்கு யார் காரணம்? இது மூன்றாவது வினாவாகிவிட்டது. பேரறிவு தான் காரணம்.

    அந்த பேரறிவுதான் இப்போது நீங்களுமாகி அடியேனுமாகி, எல்லோருமாகி  சிந்திக்கின்றது. ஆகவே அறிவே இயற்கையின் ஆதிநிலையில், இறைவெளியில் அறிவாக இருந்துள்ளது. எண்ணம் என்பது என்ன? எது எண்ணுகின்றது? அறிவின் பணிகள் என்னென்ன? எண்ணுவது, உணர்வது, ஒழுங்கு படுத்துவது ஆகியவைகளாகும். ஆகவே எண்ணக்கூடிய அறிவை, இயற்கைக் கொண்டுள்ளதால் எண்ணம் என்பது இயற்கையின் சிகரமாகின்றது. மலையின் உச்சியைச் சிகரம் என்போம். சிகரம் என்கின்ற சொல்லிற்கு சிறப்பு, உன்னதம் என்றும் பொருளுண்டு. ஆகவே எண்ணமே இயற்கையின் சிகரம் என்பது சரியே என்கின்ற முடிவிற்கு வருகிறோம். இறை என்பதும் இயற்கை என்பதும் ஒன்றே என்பதால் எண்ணம் என்பது வேறு அல்ல, மனிதனிடம் உள்ள அறிவாகிய இறையேதான் எண்ணுகின்றது என்று பொருளாகின்றது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த மனிதன் ஏன் இறை அருள் பெறமுடியாமல் துன்பப்பட வேண்டியுள்ளது?

    மனிதன் எண்ணுகிறான் என்றால் அவனுள் இருக்கின்ற பின்னப்பட்ட இறையே தான் எண்ணுகின்றது. பின்னர் என்ன குறைவு மனிதனுக்கு? சில அத்வைதத்தில் எப்படி பொருள். மெய்ப்பொருள் ஊள்ளதோ. அதுபோல் அறிவாகிய இறைக்கும் மனித அறிவிற்கும் வித்தியாசப்படுத்துவதற்காக கலங்கமிலாப் பேரறிவை சுத்த அறிவு என்கின்றனர். அப்படியானால் மனித அறிவுடன் கலங்கங்கள் சேர்ந்து விட்டன என்றாகின்றது. பேரறிவு கலங்கமில்லாதது. அது மனித அறிவாக வரும்போது அதனுடன் பரிணாமக் கசடுகளும் சோ்ந்து வந்துவிட்டன, இங்கே இறை அருளைப் பற்றி அருளியுள்ள வாசகம் இந்த இணைய தளத்தின் வாயில் பக்கத்தில்(Home page)https://www.prosperspiritually.com/ இருந்தாலும் அதனை மீண்டும் இங்கே நினைவு படுத்திக் கொள்வோம்.

    FFC-119-நல்ல பயனுள்ள

     என்று இறைஅருள் பெறுவது பற்றி அருளியுள்ளார் ரிஷிகளில் பிரம்ம ரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்கள். வெட்டவெளியாகியப் பிரம்மத்தை வெளிச்சமாக்கி விட்டார் பிரம்ம ரிஷி வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இக்காலப் பிரம்ம ரிஷியின் அருட் கூற்றைக் கூர்ந்து நோக்குவோம். யாருக்கு இறையருள் கிடைக்கும் என்கின்ற வினாவை எழுப்பிச் சிந்திப்போம்.

    அறச்செயல்கள் இருக்க வேண்டும். அறச் செயல்கள் நல்ல பயனுள்ளதாக இருக்க வேண்டும் என மிகக் கவனமாகக் கூறுகிறார் இக்காலப் பிரம்ம ரிஷி. அறம் என்றாலே ஒழுக்கம். கடமை, ஈகை ஆகிய மூன்றையும் கொண்டதுதான் அறம் என்பது இக்கால பிரம்ம ரிஷியின் அறத்திற்கான வரையறை. அப்படி இருக்கும்போது அறம் என்பது நல்ல பயனுள்ளதைத்தானே கொடுக்கும்! இருப்பினும், நல்ல பயனுள்ள அறச்செயல்கள் இருக்க வேண்டும் என்கிறார் இக்காலப் பிரம்ம ரிஷி அவர்கள்.

    இரண்டாவதாக அதற்கேற்ற எண்ணங்கள் இருக்க வேண்டும் என்கிறார். எண்ணம்தான் எல்லா செயல்களுக்கும் வித்து. எனவே நல்லபயனுள்ள அறச்செயல்களும் அதற்கேற்ற எண்ணங்களும் இருப்பவைரைச்சுற்றிலும் நுண்ணலையாகிய அருட்பேராற்றலும் சூழ்ந்து கொண்டு காப்பளிக்கும், வெற்றியளிக்கும், மகிழ்ச்சியும், நிறைவும் அளிக்கும் என்கிறார். அருட் பேராற்றல் என்றும் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் “லும்” என்று சேர்த்து  ‘அருட்பேராற்றலும்’ என்று கூறுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். இது இறை அருளில்லையா? இத்தகைய தன்மையுடைய அருளைத் தவிர வேறு என்ன இறைஅருள் வேண்டும் மனிதனுக்கு? என்னவெல்லாம் தருகின்றது இக்கால பிரம்ம ரிஷி கூறும் இறையருள்.

    FFC-119-முதலில் காப்பளிக்கின்றது

     

    வேறு என்ன வேண்டும் இந்த இறை அருளினால்? மனிதப் பிறவியின் பயன் இறையுணர்வாயிற்றே, அதனை இந்த இறை அருள் தரவில்லையே என ஐயம் உள்ளதா? ஏன் இறையுணர்வைத் தரவில்லை இந்த இறை அருள்? இறையுணர்வு என்பது என்ன? இக்கால பிரம்ம ரிஷி அவர்கள் கூறும் இறையுணர்விற்கான வரையறையை நினைவில் கொண்டு வந்தால் இந்த ஐயம் தீர்ந்துவிடும்.

    “அறத்தின் மாண்புணர்ந்து அறம் ஊக்கி, அறம் காக்கும் தகமையே இறையுணர்வு” என்கிறாரே நம் இக்கால பிரம்ம ரிஷி அவர்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறையருளில் அவர் கூறும் இறையுணர்வு கிடைக்கவில்லையா? நல்ல பயனுள்ள அறச்செயல்கள் என்றுதான் ஆரம்பித்திருக்கிறார்.

    சரி. உலகியல் வாழ்க்கைக்கு என்ன தரும் இந்த இறையருள் என ஐயம் உள்ளதா? இந்த ஐந்தையும் வைத்து உலகியல் வாழ்க்கை நடத்த முடியாதா? செல்வம் அளிக்கவில்லையே இவர் கூறும் இறை அருள் என்று நினைக்கீறீர்களா?! உலகியல் வாழ்க்கைக்கு வேண்டியதை இந்த இறை அருள் தரவில்லையே என நினைக்க வேண்டாம். காப்பு, வெற்றி, மகிழ்ச்சி, நிறைவு ஆகியவைகளெல்லாம் உலகியல் வாழ்க்கைக்குத் தேவையில்லையா? செல்வம் வேண்டுமானால் உழைக்க வேண்டும். அங்கே இக்காலப் பிரம்ம ரிஷி கூறும் இறையருள் வெற்றியைத்தந்தால் நிறைசெல்வம் வந்துவிடுகின்றது. உலகியல் வாழ்க்கையில் கடைசிவரை இன்னும் இன்னும் வேண்டும் என அலைகின்ற மனதிற்கு நிறைவைக் கொடுக்குமே அது இறை அருள் இல்லையா? நிறைமனமும் இறைமனமும் ஒன்றுதானே! அடுத்த அறிவிற்கு விருந்திற்கு 20.09.2015 ஞாயிறன்று சந்திப்போம்.  வாழ்க வளமுடன்.

    Loading