இன்றைய விருந்து

  • மகானாக்கும் மகோன்னத வினாக்கள்

    வாழ்க மனித அறிவு                       வளர்க மனித அறிவு

    FFC – 112

    23-08-2015—ஞாயிறு

     

    2-அறிவுத்தேனீக்கள் வேதாத்திரிய பாரிஜாதமலரை மொய்த்த வண்ணம் இருக்கின்றன.

    அறிவுத்தேனீக்கள்

     

     “மகானாக்கும் மகோன்னத வினாக்கள்” என்கின்ற தலைப்பிலே அறிவிற்கான விருந்தை அருந்தி வருகிறோம். ஆறாம் அறிவின் சிறப்பே சிந்திப்பது. எதனையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் ஏன், எதற்கு, எவ்வாறு என வினாக்கள் எழுப்பி அறிவுப் பூர்வமான விடைகளைப் பெற்று வாழ்க்கையை அவ்வாறு வாழ்ந்திட வேண்டும் எனப் பார்த்தோம். ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்கிறோம், ஒரு நாள் இறக்கப் போகிறோம் என்றில்லாமல் மனித அறிவு, வாழ்க்கையை பொருளுடையதாக்கும் வண்ணம் வாழவேண்டும். வாழ்ந்ததற்கு அர்த்தம் இருக்க வேண்டும். எண்ணிலடங்காமுறை இப் புவியில் வந்து போயிருந்தாலும் இந்த முறையாவது, வந்ததற்கான அடையாளம் பதிக்க வேண்டும்.

    குறைந்த பட்சம் முக்கிய நான்கு வினாக்களையாவதுக் கேட்டு விடைகளை அறிவுபூர்வமாகப் பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்று பார்த்தோம். இன்று அந்த நான்கு வினாக்களும் மகானாக்கும் வினாக்கள்தானா, அவைகளுக்கான விடைகள் என்ன, அவ்வாறு அவ்வினாக்களைக் கேட்டு அறிவுபூர்வமாக விடைகளைப் பெற்று வாழ்ந்து யாராவது மகானாக ஆகியிருக்கிறார்களா என அறிய இருக்கிறோம்.

    இந்த நான்கு வினாக்கள்தான் வேதாத்திரி என்கின்ற சிறுவரை பின்னர் வேதாத்திரி மகானாக்கியது. இந்த நான்கு வினாக்களை பன்னிரண்டு வயதிற்குள் உள்ளம் எழுப்பிக் கொண்டேயிருக்கத் தொடங்கியது வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு.

    அவ்வினாக்களுக்கு மகரிஷி அவர்கள் கண்ட விடைகள்தான் வேதாத்திரியம் என்கின்ற பெயரில் ஆன்மீகத்தில் பாரிஜாத மரமாகியுள்ளது. தேவலோகத்தில் விரும்பியதைத் தரும் பாரிஜாத மலர்களைப்(கற்பனை), போன்று  வேதாத்திரிய பாரிஜாத மலர், மனிதன் இப்பிறவியிலேயே பிறவிப்பயனை அடைவதற்கு என்னென்ன அறிந்து தெளிய வேண்டுமோ அவற்றை அளித்துக் கொண்டிருக்கின்றது. வேதாத்திரிய பாரிஜாத மலரில் சுரக்கும் அறிவுத்தேனை அருந்த உலகெங்கிலும் உள்ள அறிவுத்தேனீக்களை ஈர்த்துக் கொண்டிருக்கின்றது.  அறிவுத் தேனீக்கள் வேதாத்திரிய பாரிஜாத மலரை மொய்த்த வண்ணம் இருக்கின்றன.

    மகரிஷி அவர்களின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்பு வரைதான் என்றாலும், அவர் பிரபஞ்ச பல்கலைக் கழகத்தில் படித்த படிப்பு ஏராளம், ஏராளம், ஏராளம். Though he did not study in any University in the world, He studied in the city of Universe in which the world is located. After his third standard study in school, His further study took place in the Universe, the Kingdom of Mother Nature. அவர் பிரபஞ்சக் கல்வியில் அடைந்த உன்னதத் தேர்ச்சியினை வைத்து உலக மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில், பள்ளியில் ஆரம்பித்து பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டப்படிப்பு வரை, யோகமும் மனித மாண்பும் என்கின்ற பாடமாக எடுத்துச் சென்றுள்ளது இயற்கை.
    சுருங்கச் சொல்வதென்றால் சிந்தனையாளர்களுக்கு ஆசான் யார் என்றால், இயற்கையே!. எனவே இயற்கை–ஆசான் முற்றிலும் கீழ்படிதல் உள்ள மாணவருக்கு (implicit obedient student) தன்னுடைய, இதுவரைத் தெளிவாக அறியாதிருந்த இரகசியங்களையெல்லாம் தெளிவாக்கிவிட்டது, அவ்வாறு கருணையோடு மனித சமுதாயத்திற்கு வேதாத்திரி மகரிஷி வழியாகக் கொடுத்தது தான் வேதாத்திரியம்.

    இயற்கை எல்லோருக்கும் இவ்வாறாக ஆசானாக இருக்கத் தயாராக இருக்கின்றது. மனிதன் தான் தயாராக இல்லை. புலன்வழி வாழ்க்கையையே மேலானதாகவும், அதுவே வாழ்க்கையாகவும் நினைத்துக் கொண்டு மாயையில் வாழ்கிறான். உயிர் வாழ்வதற்கு, புலன் வழி வாழ்க்கை தேவை என்பதால், அதனை அளவுடனும், முறையுடனும் வாழ்ந்து கொண்டு, அறவோனாக வாழ்வதற்கு,  ‘அறிவுவழி வாழ்க்கை’ வாழ வேண்டும். அறவோனாக வாழும் போதுதான் துன்பம் இராது. இருப்பினும் துன்பம் வந்தாலும், வந்த துன்பத்தைப் போக்கவும், எதிர்கொள்ளவும் துணிச்சலும் இருக்கும். மனதின் உணர்வுகளான நான்கு படிகளில் இறுதிப் படியான பேரின்பத்தை அடைய முடியும்.

    எவ்வாறு வாழ வேண்டும் எனத் தெரியாமல் இருந்த மனித குலத்திற்கு வாழ்வியல் கல்வியைத் தந்து அறவொளி வீசச் செய்துள்ள இந்த நான்கு வினாக்களை மகோன்னதக் கேள்விகள் என அழைக்கக் கூடாதா? மொழி மனிதனுடையக் கருத்துக்களைத் தெரிவிக்கின்ற ஊடகம். ஆன்மீகத்தில் மறை பொருட்களான இறை, உயிர், மனம், அறிவு ஆகியவைகளைப் பற்றித் தெரிவிப்பது என்பது அவரவா்கள் உணா்ந்த அனுபவங்களின் மூலமாகத்தான் வாழ்க்கையோடு இணைத்துப் பொதுப்படையாக்கித் (generalisation) தெரிவிக்க வேண்டியுள்ளது. உணர்ந்தது உணர்ந்தவருக்குத் தெளிவாக இருந்தாலும், அதனை எளிமையாக்கி பிறர்க்கு விளங்குமாறு தெரிவிப்பதற்கு மொழிவளம் அவசியம். ஆகவே ஆன்மீகக் கல்விக்கெனத் தனிமொழித் தேவை. அந்த மொழித் தேவையைப் பூர்த்தி செய்கின்றது வேதாத்திரிய ஆன்மீக மொழி. ஆன்மீக வரலாற்றில் வேதாத்திரியத்தின் தோற்றம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவுச் சிறப்புகளை ஏற்படுத்தியது அந்த நான்கு வினாக்கள் தானே ! வேதாத்திரிய எண்ணப் பள்ளியில்(Vethathiri’s school of thoughts) ஆர்வமுள்ள மாணவனாக ஆறு மாதம் இருந்து வந்தாலே அம்மாணவர் இயற்கை அன்னையின் வரலாற்றையும், அதன் குழந்தைகளின் மனித சமுதாயம் உய்வதற்கான வழிகளையும் அறிந்து பிறர்க்கும் எடுத்துச் சொல்லும் அளவிற்கு அறிவு வளர்ச்சி பெறும் என்பது உறுதி.
    எனவே இந்நான்கு வினாக்களையும் மகோன்னத வினாக்கள் எனக் கூறி அறிவு மகிழக் கூடாதா? மகோன்னதம் என்கின்ற சொல் உருவாக்கப்பட்டச் சொல்(coined word). உன்னதம் என்றாலே தன்மையில், பண்பில், இயல்பில் மிக உயர்வானது என்று பொருள். மேன்மையானது என்று பொருள். பயன்பாட்டில் மிகச்சிறந்தது என்றும் பொருள். மகா என்கின்ற சொல் சிறப்பு அல்லது கீர்த்திவாய்ந்த என்று பொருள். ஒன்றின் தன்மையை மிகுவித்துக் காட்டும் அடைமொழியான மகா என்னும் சொல்லை உன்னதமான என்கின்ற சொல்லுக்கு முன்னர் சோ்த்து  “மகோன்னதமான” எனப்படுகின்றது.
    மகரிஷி அவர்களுக்கு பன்னிரண்டு வயதிற்கு முன்னரே உள்ளத்தில் எழத் தொடங்கியது அந்நான்கு வினாக்கள். அந்த நான்கு வினாக்கள்தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த வேதாத்திரியக் குழந்தையை பின்னர் மகானாக்கியதால் அந்த நான்கு வினாக்களையும் மகானாக்கிய மகோன்னத வினாக்கள் என்று போற்றிப் பேரானந்தம் அடைகிறோம். வாழ்க வேதாத்திரியம். வளர்க வேதாத்திரியம். இதுவரை எந்த வினாக்கள் மகானாக்கிய மகோன்னத வினாக்கள் என்று பார்த்தோம். 

    மகரிஷி அவா்களின் உள்ளத்தில் எழுந்த மகோன்னத வினாக்களுக்கு இயற்கை அளித்த விடைகளைப்பற்றி ஆராய்வோம். அவரது உள்ளம் பன்னிரண்டு வயதிற்குள் எப்போதும் எழுப்பிக்கொண்டேயிருக்கத் தொடங்கிய வினாக்களை மீண்டும் நினைவுப் படுத்திக் கொள்வோம்.

    1. இன்பம் துன்பம் என்பது என்ன? இவற்றின் ஆரம்பமும் இறுதியும் என்ன?
    2. உயிர் என்பது என்ன? அதனுடைய இயக்கம் உடலில் எவ்வாறு நடக்கின்றது?புத்தருக்கு வினாக்கள் எழுந்தது போல், நோயும், முதுமையும் ஏன் வருகின்றன என்கின்ற வினாக்கள் எழுந்தன?
    3. தெய்வம் என்பது யார்? அவர் ஏன் இப்பிரபஞ்சத்தைப் படைத்தார்?
    4. வறுமை ஏன் வருகின்றது? அதைப் போக்குவதற்கு வழி என்ன?

    அவரது முதல் வினாவிற்கு, இயற்கை அளித்த விடையினை இன்றைய விருந்திற்கு எடுத்துக் கொள்வோம்.

    1. இன்பம் துன்பம் என்பது என்ன?

    எல்லோருமே இன்பத்தைத்தான் விரும்புவர். வாழ்க்கை அனுபவிப்பதற்கே என்போம் (life is to enjoy). காரணம், இன்பம் மனதிற்கு இனிமை அளிக்கும் உணர்வு. மகிழ்ச்சியைத் தரும். ஆனால் துன்பம் என்பது இன்பம் என்கின்ற சொல்லின் எதிர்ச்சொல். எனவே துன்பம் என்பது மனதுக்கு மகிழ்வைத் தராத உணர்வு. மனதை வருந்தச் செய்யும் உணர்வு. இன்மை என்றால் இல்லாதிருக்கும் என்று பொருள். ஆகவே துன்பம் இன்மையை இன்பம் என்கிறோம்.

    எல்லோரும் இன்பத்தையே விரும்பினாலும் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து மூன்று வரை (1911+12=1923) எவருமே இன்ப-துன்பம் ஏன், எவ்வாறு வருகின்றன என்கின்ற வினாவை எழுப்பியதில்லை. ஆனால் மகரிஷி அவர்களுக்கு பன்னிரண்டு வயதிற்குள் இன்பம் துன்பம் என்பது என்ன என்கின்ற வினா எழுந்துவிட்டது.
    இன்பம் துன்பம் என்பது என்பது பற்றி இப்போது சிந்தித்துப்போம். இன்பம், துன்பம் என்பது விளைவுகள். அதாவது இன்பம் துன்பம் என்பது செயல்கள் அல்ல. செயல் என்று ஒன்று இருந்தால் அதற்கு விளைவு நிச்சயம் உண்டு. அந்த விளைவின் தன்மை, செயலைப் பொருத்து இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ இருக்கும். செயல் மனிதனுடையது. விளைவைத் தருவது இயற்கை அல்லது இறை. இது இயற்கை நீதி. விளைவு இல்லாது செயல் இல்லை. இது ஒரு விளக்கம் இன்ப துன்பத்தைப் பற்றி. இன்னொரு விளக்கம் இன்ப துன்பத்தின் விஞ்ஞானத்தைக் கூறுகின்றது.

    வேதங்களில் இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்கின்றன. இதனை விளக்குவதற்காகக் கூறப்படும் உதாரணத்தைப் பார்ப்போம். நாய் தெருவில் உள்ள காய்ந்த எலும்பைக் கடிக்கும் போது, எலும்பு நாயின் ஈறை(gum of the teeth) ரணப்படுத்துவதால், ஈறிலிருந்து வரும் இரத்தத்தை காய்ந்த எலும்பிலிருந்து வருவதாக நினைத்துச் சுவைக்கும். அது போல், மனிதன், இன்பம் புறப் பொருட்களில் உள்ளதாக நினைத்துக் கொண்டு புறப் பொருட்களை நோக்கி அலைகிறான், தேடுகிறான், சொந்தமாக்கிக் கொள்கிறான்; அனுபவிக்க நாட்டம் கொள்கிறான்.
    ஆனால் ஆரம்பத்தில் இன்பமாக இருந்தது இறுதியில் துன்பமாகிவிடுவதனை அனுபவத்தில் பார்க்கிறோம். காரணம் என்ன என்று வினவவில்லை. வினவியிருந்தால், அச்செயல் அளவுமீறியும், முறைமாறியும் இருந்ததால் துன்பத்தைத் தந்தது என்கின்ற விடை கிடைத்திருக்கும். இதில் சில மறைந்திருந்த உண்மைகள் வெளியாகின்றன. இயற்கையில் என்றும் எப்போதும் இருப்பது இன்பம் தான். இயற்கையில் துன்பம் இருக்குமேயானால் அது இயற்கையின் எதிர்மறைத்தன்மையாகிவிடுமே (negative aspect). இயற்கையில் குற்றம் இருக்க முடியுமா? இருக்கவே முடியாது. இயற்கையில் குற்றம் இருக்குமானால் அதனை மனிதன் எவ்வாறு சரி செய்யமுடியும்? முடியாது. இது ஏதோ இயற்கைக்காக வாதாடுவதில்லை.

    இன்பம் துய்ப்பதில் அளவும், முறையும் காக்கப்படவேண்டும். மற்றொன்று புறப்பொருட்களைத் துய்க்கும் போது, தன் உடலில் உள்ள சீவகாந்த ஆற்றலே எழுச்சி பெற்று செலவாகும்போது, புலன் செல்கள் தாங்கும் வரை இருந்தால், அத்துய்த்தலில் இன்பம் இருக்கும். சீவகாந்தம் எழுச்சி பெற்று செலவாகுதல் புலன் செல்கள் தாங்கும் அளவினைக் கடப்பதால் ஏற்படும் பொருந்தா உணர்வு தான் துன்பம். முதலில் இன்பமாக இருந்தது பிறகு துன்பமாகிவிடுகின்றது. எனவே இன்பம் என்பது தனது சீவகாந்தமே செலவேதான்தான் என்பதால், வேதங்கள் கூறும் இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்பது நிரூபணம் ஆகின்றது.

    இன்பம் துன்பம் என்பது என்ன என்கின்ற வினாவிற்குக் கிடைத்த உண்மைகள்:
    1) செயலுக்கேற்ற விளைவு உண்டு என்றும், நல்ல செயலுக்கான விளைவு இன்பமாக இருக்கும் என்றும் தீய செயலுக்கான விளைவு துன்பமாக இருக்கும் என்கின்ற உண்மை இது வரை தெரிந்திருந்து அலட்சியப்படுத்தப்பட்டு வந்தது. இவ்வினாவிற்கு கிடைத்த விடையால் செயல்விளைவுத் தத்துவமாக உறுதி படுத்தப்பட்டது.
    2) புலன் வழி இன்பம் என்பது தன்சொந்த சீவகாந்தமே எழுச்சி பெற்று அந்த புலனின் செல்கள் தாங்கும் அளவு இருக்கும் வரை அது இன்பமாக உணரப்படும். தாங்கும் அளவை மீறும்போது செல்களின் பொருந்தா உணர்வு துன்பமாக உணரப்படும். இதுவரை மறைந்திருந்த உண்மை வெளியாகியது.

    3) இன்பம் அனுபவிக்க ஒரு சாம்யம் உருவாகியுள்ளது. அது, அளவு மீறவும் கூடாது, முறை மாறவும் கூடாது.

    4) இன்பம் துன்பம் என்கின்ற அருட்கவி உருவாகிற்று அவ்வினாவிற்கு கிடைத்த விடையால்.

    FFC-112-இன்பம் துன்பம்

    இத்துடன் இன்பம் துன்பம் பற்றியச் சிந்தனையை முடித்துக் கொள்வோம். அடுத்த விருந்தில் (26-08-2015) உயிர் என்பது என்ன என்கின்ற வினாவிற்கு இயற்கை அளித்த விடையை சிந்திப்போம்.

    வாழ்க அறிவுச் செல்வம்.  வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • மகானாக்கும் மகோன்னத வினாக்கள்

    வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

    FFC — 111

     19-08-2015—புதன்

     

    anbargale vaareer-THAI

     

    உற்ற வயதில் கேட்க வேண்டிய கேள்விகள்

    உயிரினங்களிலேயே மிகச் சிறந்தது மனித இனம். காரணம் ஆறாம் அறிவுடையவன் மனிதன்.
    இயற்கையே/இறையேதான் ஆறாம் அறிவாக மலர்ந்துள்ளதாலும்,
    இயற்கை, ஆறாம் அறிவோடு தானே மாறும் தன்மாற்றத்தை நிறுத்திக் கொண்டதாலும்,
    ஆறாம் அறிவைத்தவிர அதற்கு மேலும் அறிவு ஏதும் தேவை இல்லை என்பதாலும்
    ஆறாம் அறிவுடைய மனிதன் மட்டுமேதான் இயற்கையின் இரகசியங்களை அறிந்து மகிழ முடியும்
    ஆறாம் அறிவுதான் இயற்கையில் மறைந்துள்ள ஆற்றல்களைக் கண்டுபிடித்து வாழ்க்கை வளமாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. அதற்கு விஞ்ஞானம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
    எல்லையில்லாதது இயற்கை. முடிவற்றது இயற்கை. ஆகவே இயற்கையில் ஆயிரமாயிரம் இரகசியங்கள் உள்ளன. எல்லாவற்றையும் எல்லையுடைய ஆறாம் அறிவு கண்டுபிடிப்பது என்பது முடியாததுதான், என்றாலும், விஞ்ஞானம் இயற்கையின் இரகசியங்களை ஏராளமாகக் கண்டு பிடித்து வருகின்றது. ஆனால் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்வதற்கான இரகசியங்கள்  இன்னமும் இரகசியமாகவே இருந்து வருகின்றன.

    மனித குலம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று உலகமக்கள் தொகை எழுநூற்று இருபது கோடி. ஆதிமனிதனிலிருந்து இன்றுவரைத் தோன்றி மறைந்த மக்கள் தொகை கணக்கு இல்லை. கடலிலுள்ள நீர்த்துளிகள் எத்தனை என்று சொல்ல முடியாதோ அதுபோல் இதுவரைத் தோன்றி மறைந்துள்ள மக்கள் தொகையையும் சொல்ல முடியாது.
    விஞ்ஞானம் அதிவேக வளர்ச்சியினை அடைந்து, மனித வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளைப் பெருக்கி வந்தாலும், அந்த விஞ்ஞானத்தினால் மனிதனின் பூர்வீகச் சொத்தான அமைதியைக் கொண்டுவர முடியவில்லை. விஞ்ஞானத்தை நேர் வழியில் பயனாய்க் கொள்ளும் அறிவு நிலை மலரவில்லை.
    வாழ்க்கையை இயற்கைக்கு ஒத்த முறையில் சரியாக வாழும் முறை இன்னும் இரகசியமாகவே இருந்து வருகின்றது. ஆறாம் அறிவின் திறன் அதன் சிந்தனையில்தான் வெளிப்படும். அதற்கு அறிவு என்ன, ஏன், எவ்வாறு ஆகிய வினாக்களைக் கேட்டால்தான், அறிவின் சிந்தனைத்திறன் வளர்ச்சி பெறும்.
    மனிதப் பிறவியை எடுத்தப் பயனை இந்தப் பிறவியிலேயே பூர்த்தி செய்து கொள்வதற்கான திறன் படைத்தது ஆறாம் அறிவு. ஆகவே ஆறாம் அறிவு என்ன, ஏன், எதற்கு, எவ்வாறு எனக் கேள்விகளைக்கேட்டு, அவைகளுக்கான விடைகளையும் அறிவுபூர்வமாகப் பெற்று அவ்வாறு வாழ வேண்டும். வாழ்க்கையில் அறிவு எவ்வளவோ வினாக்களைக் கேட்கின்றது. ஆனால் அறிவினால் கேட்கப்பட வேண்டிய சாதாரணக் கேள்விகள் உள்ளன. ஆனால் அந்த சாதாரணக் கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும்போது மனிதன் மகானாகிறான். அப்போது அந்த சாதாரணக் கேள்விகள் மகோன்னத கேள்விகளாகின்றன. ஆனால் எல்லோரும் அந்த சாதாரணக் கேள்விகளைக் கேட்பதில்லை. அந்த வினாவினைக் கேட்டு, விடைகளைப் பெற்று, அதற்கேற்றவாறு வாழும்போது அந்த ஆன்மா மகானாகின்றது. சரித்திரம் படைக்கின்றது.
    உற்ற வயதில் கேட்க வேண்டிய வினாக்கள் என்னென்ன, அந்த வினாக்கள் எவ்வாறு மகோன்னத வினாக்கள் என்றும், இதுவரை யாராவது அந்த வினாக்களைக் கேட்டு விடைகளைப் பெற்று மகானாகி இருக்கிறார்களா?
    ஆறாம் அறிவுடைய மனிதன் வாழ்க்கையில் உற்ற வயதில் கேட்க வேண்டிய வினாக்கள் உள்ளன. அவ்வினாக்களை உற்ற வயதில் கேட்டால்தான் அவன் வாழும் காலம் முழுமைக்கும் மகிழ்ச்சியாக வாழலாம். அவன் வாழ்கின்ற சமுதாயத்தையும் வாழ வைத்து மகிழலாம். வாழ்நாளில் இறுதிக்கட்டத்தில்(உதாரணத்திற்கு ஐம்பது வயதில்) அவ்வினாக்கள் எழுந்து எப்போது விடைகள் கிடைக்கும்? பிறகு அதற்கேற்ப வாழ்ந்து மகிழ்ச்சியை அனுபவிக்க எஞ்சியுள்ள வாழ்நாள்தான் போதுமானதாகத்தான்  இருக்குமா?

    • அவ்வினாக்கள் என்ன,
    • அவற்றிற்கு என்ன விடைகள், எவ்வாறு விடைகள் கிடைக்கும்,
    • அவைகள் எவ்வாறு மகானாக்கும் என்று பார்க்க இருக்கிறோம்.

    எல்லோருமே இன்பத்தைத்தான் விரும்புவர். இதில் தவறில்லை. ஆனால் துன்பமும் வந்துவிடுகின்றது. அதனை அவ்வாறே ஏற்று இன்ப-துன்ப பிறவிப்பிணியிலேயே வாழ் நான் முழுவதும் வாழ்வது என்பது பழக்கமாகிவிட்டது. அதாவது சிந்திப்பது இல்லை. சிந்தித்தால் வரும் முதல் வினாதான்.
    1) இன்பம் துன்பம் என்பது என்ன? அவைகள் எவ்வாறு வருகின்றன? எனக்கு மட்டும் ஏன் வருகின்றன? ஒரு சிலருக்கு மட்டும் ஏன் வருகின்றன?

    அடுத்த வினாவினைப் பார்ப்போம். இன்ப துன்பத்தை அனுபவிப்பது உயிர்தான். மனிதனுக்கு ஏராளமான ஆசைகள் உள்ளன. மனிதன் ஆசைப்படுகிறான் என்றால் அவனது உயிர்தானே ஆசைப்படுகின்றது. உயிர் போன சவத்திற்கு ஏது ஆசை? ஆகவே உயிருக்குள்ள முதல் ஆசை தன்மீது தான். உயிர் மதிப்பற்றது என்கிறோம். உயிரை யாரும் துறப்பதற்கு விரும்புவதில்லை. எவ்வாறு கறந்த பால் மீண்டும் முலை புகாவோ அதுபோல் உடலைவிட்டு வெளியேறிய உயிர் மீண்டும் உடலுக்குள் நுழையாது.

    உற்றார் உறவினரின் உயிர் இழப்பு பெரும் பாதிப்பையும் கவலையையும் ஏற்படுத்துகின்றது. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. உயிர் போய்விட்டால் உடலுக்கேது மதிப்பு? உடல் அழுகிவிடும். துர்நாற்றம் வீசும். அத்தகைய சிறப்புடைய உயிரை யாராவது இதுவரை பார்த்திருக்கிறார்களா. ஏன் உயிரைப் பார்க்க முடியவில்லை என்கின்ற சிந்தனை பரவலாக மனிதர்களிடம் வந்திருக்க வேண்டும். ஆகவே எழ வேண்டிய இரண்டாவது வினா

    2) உயிர் என்பது என்ன?

    அடுத்ததாக எழ வேண்டிய வினாவினைப் பார்ப்போம். இறைமீது நம்பிக்கை உள்ளவர்கள்தான் அதிகம். இறைமீது நம்பிக்கை இல்லாதவர்கள் இறை மறுப்புக் கொள்கை உடையவர்கள். அவர்கள் வெகு சிலரே. அவர்கள் மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள். எனவே கண்களால் காணமுடியாத இறையை அவர்கள் இல்லை என்கின்றனர். இல்லாத ஒன்றை இருப்பதாகக் கருதுவது மூடநம்பிக்கை என்கின்றனர். அது அவர்களின் சிந்தனைச் சுதந்திரம்.

    மனிதனின் செயலுக்கு ஏற்ற விளைவினைத் தரவல்லது இயற்கை என்பதனை இருதரப்பினருமே அறிந்து அறவாழ்வு வாழ்வதுதான் மனிதம் என்று அறிந்து விழிப்போடு வாழ வேண்டும். இருதரப்பினருக்குமே வாழ்வதற்கு காற்றை,ஒளியை, நீரை, உணவைத் தருவது ஒரே இயற்கைதான்.

    இறை மீது நம்பிக்கைக் கொண்டு இறைவழிபாடு செய்து வருபவர்கள் யாரும் அவா்கள் வாழ்நாளில், இறையைக் காணாமலேயே வாழ்நாள் முடிந்து விடுகின்றது. இச்சூழலில் எழ வேண்டிய அடுத்த வினா:

    3) இறைவன் என்பவர் யார்? அவர் ஏன் இந்த பிரபஞ்சத்தை(universe) படைத்தார்?

    அடுத்ததாக எழ வேண்டிய வினாவினைப் பார்ப்போம். யாரும் விரும்பிப் பிறப்பதில்லை. ஒருநாள் பிறந்தவர் இறந்தே தீர வேண்டும். ஆகவே இறக்கவேப் பிறக்கிறான் மனிதன். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்டக் காலம் அவனது வாழ்நாள் எனப்படுகின்றது. மனிதர்கள் வாழ்நாளில் எல்லோருக்கும் எல்லாம் சமமாகக் கிடைப்பதில்லை. குறைந்த பட்சம் இன்றியமையாத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, உறங்க உறைவிடமாவது எல்லோருக்கும் கிடைக்க வேண்டாமா? இம்முன்றும் கிடைக்காமல் போனால் அதனை என்ன என்று அழைக்கிறான் மனிதன்? ஏழ்மை என்கிறான். வறுமை என்கிறான். இதுபற்றிய கேள்வி எழவேண்டாமா மனிதனுக்கு! ஆகவே இந்த கேள்விதான் நான்காவதாகும். ஆகவே நான்காவது வினா.

    4) வறுமை ஏன் வருகின்றது?
    இந்த நான்கு வினாக்களைத் தான் மகோன்னத வினாக்கள் என்கிறோம் நாம்.
    இன்றைய விருந்தில் மகோன்னத வினாக்கள் நான்கு என்று பார்த்தோம். இவ்வினாக்கள் எவ்வாறு மகானாக்கும் மகோன்னத வினாக்கள் என அடுத்த விருந்தில் 23-08-2015 அறிவோம்.

    வாழ்க மனித அறிவு!            வளர்க மனித அறிவு!!

    Loading

  • தவறான அடையாளமும், அதனால் துன்பங்களும்.

    Mistaken Identity and sufferings

    FFC – 110

    16-08-2015—ஞாயிறு

         மனிதனுக்குத் தன்னுடைய அடையாளம் தெரியாதா? தெரியாமல், மனிதன் தன்னை தவறாக அடையாளம் காண்பதாலா துன்பங்களை அனுபவிக்கிறான்? ஆம். தவறான அடையாளத்தால்தான் துன்பங்களை அனுபவிக்கிறான். காரணம் தவறான அடையாளத்தால் அவனுடைய சரியான உண்மை அடையாளம் தெரிவதில்லை. அதாவது உண்மையான நான் (Real I) அவனுக்குத் தெரிவதில்லை. இப்போது மகரிஷி அவர்களின் பாடல் ஒன்றை நினைவுகூர்வோம்.

    meyviLakkam1

    உண்மை இவ்வாறிருக்க மனிதன் தன்னை தவறாக அடையாளம் காண்கிறான். எனவே அவன் பல துன்பங்களுக்குள்ளாகிறான். வாழ்வில் வளம் இல்லை; நிறைவில்லை.

    ஏனெனில், தன்னைத் தவறாக அடையாளம் கொண்டு வாழ்வதற்கும் சரியாக அடையாளம் கொண்டு வாழ்வதற்கும் வாழ்க்கை முறையில் வித்தியாசங்கள் பல உள்ளன. எனவேதான் தவறாக அடையாளம் கொண்டு வாழும் முறையில் துன்பங்கள் வருகின்றன. சரியாக அடையாளம் கொண்டு வாழும் போது இயற்கை விதித்துள்ளபடி எப்படி வாழ வேண்டுமோ, அவ்வாறு வாழும் போது இயற்கையே துணையாக இருக்கின்றது. அங்கே துன்பங்களைத் தவிர்க்கிறான். இன்பமே எஞ்சி நிற்கின்றது.

    தன்னைச் சரியாக அடையாளம் கொண்டு வாழ்ந்தால் இயற்கையோடு இணைந்து, இயற்கையின் இனிமையைக் கெடுக்காமல் வாழமுடியும். இயற்கையின் இனிமையைக் கெடுக்காமல் வாழ்ந்தால் இன்பம்தான். தன்னைத் தவறாக அடையாளம் கொண்டு வாழும்போது இயற்கைக்கு முரணாக வாழ்கின்றது மனித சமுதாயம். ஆகவே வறுமை, பசி, பட்டினி, சண்டை, சச்சரவு, போர், பிணி, அச்சம், திருடு, கொலை, கற்பழிப்பு, சினம், கவலை, பயம், அறிவின் குறைபாடுகளான அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம், சமுதாய அக்கறையின்மை ஆகிய பல்வேறு வகையான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது மனித சமுதாயம்.

    அவனுடைய உண்மையான ‘நான்’ தெரிந்திருந்தால் அதற்கேற்ப அவன் வாழ்வான். வாழ்க்கையில் இன்பமிருக்கும். தவறான அடையாளத்தால் தவறாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். எனவே பல்வகையான துன்பங்களை அனுபவிக்கிறான். மனிதன் என்றால் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மனிதர்கள்தான் தங்களைத் தவறாக அடையாளம் காண்கிறார்கள் என்பதில்லை. அறிவை அறிந்த அறிஞர்களைத் தவிர மனித சமுதாயமே தன்னைத் தவறாக அடையாளம் காண்கின்றது. ஆகவே தான் இன்று உலகத்தி்ல் அமைதியின்மைக் காணப்படுகின்றது.

    வாழ்க்கையில் என்ன வேண்டும்?

    எதில் வெற்றி பெற வேண்டும்.

    வாழ்க்கையில் துன்பமில்லா–இன்பம் வேண்டும்.

    பேரின்பமே வேண்டும்.

    துன்பம் வந்தாலும் அதனை துணிச்சலோடு எதிர் கொள்ள வேண்டும்.

    ஆகவே வாழ்வில் துன்பமில்லா–இன்பம் பெறுவதில் வெற்றி பெற வேண்டும்.

    துன்பம் தேவையில்லை.

    பிறவியின் நோக்கமே தன்னை(self realization)அறிய வேண்டும். அதற்கான வினாதான் “நான் யார்?” என்பது. அதாவது நான் யார் என அறிய வேண்டும் என்கின்றபோதே தான் யார் எனச் சரியாக அடையாளம் காணப்படவில்லை என்றாகின்றது.

    தன்னை அறிவதுதான் வாழ்வின் நோக்கம் எனில், தன்னைத் தவறாக அடையாளம் காண்பது என்பது பிறவியின் நோக்கத்திற்கு எதிரானது தானே. தன்னை அறிவது என்பது இயற்கையின் நோக்கம். ஏனெனில் இயற்கை/இறைதான் மனிதாக வந்துள்ளது. தன்னுடைய சரியான, உண்மை நிலையை அறியாமல் தவறாகத் தன்னை அடையாளம் காண்பதென்பது இயற்கைக்கு முரணானததுதானே? ஆகவே, இயற்கை எதற்காக மனிதனாக வந்ததோ, அதற்கு எதிர் மறையாக வாழ்ந்து இயற்கையின் இனிமைகெடச் செய்கிறான். இயற்கையின் இனிமையைக் கெடுத்தால் விளைவு துன்பமே.

    மனிதன் கொண்டிருக்கின்ற தவறான அடையாளம் எது?

    தவறான அடையாளம் என்பது தன் பரு உடலுடன் (physical body) தன்னை அடையாளம் காண்பதுதான். உடல் உண்மையான நானல்ல (Body is unreal I).

    உடலே உண்மையான நானாக இருந்திருந்தால்,

    மரணத்திற்கும் பிறகும், அதாவது உயிர் பிரிந்த பிறகும்,

    உயிருடன் இருந்த போது சொன்னது போல் உடல், “நான்” என்று சொல்லலாமே! அப்படிச் சொல்வதில்லையே! எனவே உடல் நானல்ல. இறந்த பின் உடல் இருந்தும் முன்பு போல், அது “நான்” எனக் கூறுவது இல்லை. ஏன் என்பது அனைவரும் அறிவர். மரணத்தின் போது உயிர் உடலை விட்டு பிரிந்து விட்டது. எனவே உடலுக்கு உணா்வு இல்லை. உயிர் உள்ள போது நான் எனக் கூறியது எது? அதுதான் அறிவு. எனவே அறிவுதான் “உண்மையான நான்”(Real I).

    உடலை “நான்” என்கின்ற போது அது தன்முனைப்புள்ள நானாக (Egoful I) உள்ளது. உடலளவிலே அறிவு குறுகி நிற்கின்றது. இறைக்கும் தனக்கும் தொடர்பு இல்லாதது போல் ஆகி விடுகின்றது. இறையை மறந்து விடுகின்றது. விழிப்புணர்வில் இடறி விடுகின்றது. உடலை நான் எனக் கருதுவது சரீர உணர்வாகும்(body consciousness).

    தளையில் (bondage) அகப்பட்டுக் கொள்கின்றது. விடுதலை (liberation), இல்லாமல் தவிக்கின்றது. அறிவுதான் உண்மையான நானாக இருக்கும் போது உடலை நான் எனக் கருதுவது தவறான அடையாளம். உடல் சரியான அடையாளமில்லை. எங்கும் நிறைந்துள்ள சர்வ வியாபியான இறை நம்முள்ளும் இருக்கின்றது. அப்படி இருக்கும்போது இறையை அடையாளம் காட்ட வேண்டுமல்லவா? உடலை தன்னுடைய அடையாளமாகக் காட்டுவது சரியல்ல.

    இறை நம்முள் இருக்கின்றது என்று அறிகின்ற ஆன்மீகப் பயிற்சியில், உடலுடன் தன்னைத் தவறாக அடையாளம் கொண்டால் அது பயன் அற்று போய்விடும்.

     “அவனில் தான் நீ, உன்னில் அவன்
    அவன் யார்? நீ யார்? பிரிவேது?
    அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்
    அறிவு முழுமை அது முக்தி”    

    எனக் கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். இறையும் நாமும் ஒன்று என உணர்ந்து கொள்ளும்போது மனித அறிவு முழுமை பெறுகின்றது. அதுவே முக்தி என்கிறார். அதுவரை அறிவு குறைவுள்ளதாக இருக்கின்றது. குறைவுள்ளதில் எவ்வாறு நிறைவு இருக்கும். அதனால்தான் வாழ்க்கையில் எல்லா வளங்களும் உள்ளவனும் நிறைவு இல்லாமல் ‘இன்னும் வேண்டும். இன்னும் வேண்டும்’ என அலைந்து கொண்டிருக்கிறான். அலைகிறவனுக்கு எப்படி நிம்மதி இருக்கும்? இப்போது “நான் யார்?“ என்கிற வினாவிற்கு விடை அறிவுதானே.

    எனவே இறை உணர் ஆன்மீகப் பயிற்சியில் தன்னை அறிவுடன் (ஆன்மா) சரியாக அடையாளம் கொள்ள வேண்டும். “பிரக்ஞானம் பிரம்மம்” என்று அறிவே தெய்வம் என்கின்றது வேதம்.

    அகநோக்குப் பயிற்சித் தோ்வின் முடிவு (end result of inner travel — meditation) என்னவாக இருக்க வேண்டும்? ஒன்றேயான இறை எங்கும், எல்லாமாகவும், தானுமாகவும், அறிவாகவும் உள்ளது என தானே அறிவதாகும்(understanding practically). எனவே தேர்விற்கு முன்பே வினாத்தாள் வெளியாகிவிட்டதுபோல் அக நோக்குப் பயிற்சித் தேர்வின் முடிவில் என்ன அறியவிருக்கிறோம் என்பதனை முன் கூட்டியே அறிந்த கருத்தியல் செய்தி (theoretical understanding – no it is only theoretical information) தான் “அறிவே (ஆன்மா) நான்” என்பது.

    அக நோக்குப் பயிற்சியினை மேற்கொண்டு வரும்போது முடிவில்தான் இறையே எவ்வாறு எல்லாமாகவும், தானுமாகவும் இருக்கின்றது என அறிந்து மகிழ்கின்ற பழைய நிலை இப்போது மாறிவிட்டது.

    இப்போது பயிற்சியின் முடிவில் அறியவிருப்பது முன்னரேத் தெளிவாகி, பயிற்சியின் முடிவில் அதனை உறுதி செய்கின்ற காலமாகிவிட்டது. இந்த ஆன்மீக முன்னேற்றத்திற்கும், ஆன்மீக அறிவு வளர்ந்து வருவதற்கும் காரணம் வேதாத்திரியத்தின் தோற்றமே.

    அறிவேதான் (ஆன்மா) நான் என சரியென நினைத்துக் கொண்டு வரும்போது, அக நோக்குப் பயிற்சியில் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும். தான் உணரவிருப்பதை எளிதாக உறுதி செய்ய முடியும்.

    மனிதனின் சரியான அடையாளம் அவனது அறிவு அல்லது ஆன்மா அல்லது தெய்வத்தின் ஒரு சிறு பொறி. இந்த சரியான அடையாளம்தான், 

    • உலக சகோதரத்துவம் என்பது வெறும் வார்த்தையல்ல, உண்மையென உறுதி படுத்துகின்றது.
    • வேற்றுமையில் ஒற்றுமை (unity in Diversity)என்பதும் சரி என்கின்ற முடிவுக்கு வரவைக்கின்றது.
    • ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது எவ்வாறு சரி என நிரூபிக்கின்றது.
    • போரில்லா நல்லுலகம் விரைவில் மலர வேண்டும் என அவா கொள்ள முடிகின்றது.

    இன்று உலகமக்கள் தொகை எழுநூற்று முப்பது கோடி. இந்த எழுநூற்று முப்பது கோடி மக்களுக்கும் அடையாளம் ஒன்றுதான். அதுதான் தெய்வத்தின் சிறு பொறி ஒவ்வொரு மனிதனும். தெய்வம் ஒன்று என்கின்ற போது அந்த தெய்வத்தின் பொறிகளான ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரே அடையாளம்தான். பார்த்தசாரதி சதகத்தில் வரும், “உற்றுப் பார்த்தால் எல்லா உயிர்களும் ஒன்றாமே” என்கின்ற வரி கூறுவது எவ்வளவு உண்மை எனத்தெரிகின்றது. மனிதனின் உயிர் விலங்கினத்திலிருந்து வந்துள்ளதால் எல்லா உயிர்களும் ஒன்றுதான் என்பது விஞ்ஞான ரீதியாகவும் சரி என அறிந்தாலும் அதன் பயனை இதுவரை அனுபவிக்க முடியாமல் உள்ளது.

    அதுபோல் மகாகவி பாரதியார் கூறுவதனைக் கவனிப்போம்.

    FFC-110-FIN- காக்கைக்

    என்ன கூறுகிறார் நம்முடைய பாரதி?

    ‘களியாட்டம்’ என்கிறார். எந்த அளவிற்கு ஆனந்தம் அனுபவித்திருந்தால் இவ்வார்த்தையினைக் கூறியிருக்க முடியும்? இந்த பாடலின் பொருளை அவரிடம் நேரில் கேட்டு அறிந்திருப்பார்களா? எவ்வாறு விளக்கியிருப்பார்?! இப்போது நாம் கேட்டுப் பார்க்கலாமா? அவர் இல்லையே இப்போது அவர் காதுகள் கேட்பதற்கு! அவருடைய காதுகள் மண்ணுக்கு இரையாகிவிட்டதே! இயற்கை பாரதியாரை நடுத்தர வயதிலேயே அழைத்துக் கொண்டது, ஏன்? என்ன காரணம்? நம் மகரிஷிபோல் அவா் ஆயிரம் பிறைகளை கடந்திருக்கலாமே! இயற்கையில் எதுவும் காரணமின்றி நடவாது என்பது நமக்குத் தெரியும். என்ன காரணம்?
    பாரதி இன்னும் இருந்திருந்தால் மனிதகுலம் சீராகிவிடுமே என்பதற்காகவா இயற்கை அவரை வெகு விரைவில் அழைத்துக் கொண்டுபோய்விட்டது?! மக்களிடம் ஏற்புத்திறன்(receptivity) இல்லை. ஏற்புத்திறன் வேண்டும். Had fraction demanded, the totality would have supplied it.

    இருப்பினும், அந்தக் களியாட்டத்தை அனுபவிக்க அருளாளர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக இயற்கை நிறைவேற்றி விட்டது. இது காலத்தின் கட்டாயம் இயற்கைக்கு/இறைக்கு.
    ‘களி’ என்றால் என்ன? கேட்பது, பார்ப்பது முதலியவற்றால் இன்பம் அடைவது ‘களி’ எனப்படுகிறது. ‘இன்பம்’ அடைவது என்பது சரியில்லை. ஏனெனில் இன்பம் என்பது புலன்களின் வாயிலாக அனுபவிப்பது. இந்த ‘Holistic View – புனிதப்பார்வை என்பது புலன்களைக் கடந்த ஆனந்த நிலை. ஆன்மாவின் ஐந்து நிலைகளில், உச்ச நிலையான ஆனந்தமய கோசநிலை. ஆகவே  “நோக்க நோக்க களியாட்டம்” என்பதால் ‘எல்லாம் ஒன்றே’ எனக் கேட்டு அறிவதிலும், அவ்வாறே பார்ப்பதிலும், வாழ்வதிலும் ஆனந்தம் என்கிறார் மகாகவி பாரதியார்.

    நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை என்கிறார். இதுதான் மகரிஷி அவர்கள் கூறும் ‘நான் என்கின்ற தத்துவம்’ எல்லாவற்றிலும் இருப்பதும் நானும் ஒன்றே, ‘நானே’ எல்லாமாகவும் உள்ளது என்பதாகும். நான் யாரோ அதுவே எல்லாமாகவும் உள்ளது. இதுதான் நான் என்கின்ற தத்துவம்.

    Holistic View’ என்பதனை தமிழில் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையானப் பார்வை என்று மொழி பெயர்ப்பர். உண்மைதான். அதுவும் சரிதான், எவ்வாறு? ‘HOLY’ என்றால் புனிதம் என்று பொருள் தமிழில். எனவே word to word மொழி பெயர்த்து புனிதப்பார்வை எனக் கூறவில்லை. இப்பிரபஞ்சத்தில் முழுமையானது பூரணமானது ஒன்றே ஒன்றுதான். அதுதான் மெய்ப்பொருள். அந்தப் புனிதமான, முழுமையான, மெய்பொருளை உணர்ந்த நிலையில் மனித அறிவு ‘எல்லாம் ஒன்றே’ எனப்பார்க்கும் நிலை முழுமையான பார்வை எனவும் கூறப்படலாம்.

    இந்த நிலையில்தான் துரிய தீட்சையின் போது “பார்க்கும் பொருட்களெல்லாம் புனிதமடையட்டும், மக்களெல்லாம் நல்லோராகட்டும்”, என்று ஞானாசிரியரிடம் ஆன்மீக சாதகன் பெற்ற ஆசீர்வாதம் முழுமையாக நிறைவேறுகின்றது.

    பொதுவாக மனிதனின் அடையாளம் அவனுடைய பெற்றோர்களின் மகன் என்றாலும், அது இந்த உடலைப் பொருத்த வரை சரியாக இருந்தாலும், அதுவே அவனது உண்மையான அடையாளம் அல்ல. அவனது சரியான உண்மையான அடையாளம் அவன் தெய்வமகன் என்பது தான் சரி. பரம பிதாவின் குழந்தைகளே இந்த உலக மக்கள் அனைவரும். மக்கள் அனைவரும் அறிவு நிலையைில் ஒன்று. வினைப்பதிவில்தான் வேறு வேறாக இருக்கின்றனர் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    மகரிஷி அவர்கள் “நானே நாம்” என்று கூறும் பாடலோடு இன்றைய சிந்தனையை நிறைவு செய்வோம். அவ்வாறு நினைவு கூர்வதுவே அவ்வையார் கூறும் நான்கு இனியவைகளில் கடைசியும் அளவில் அதிகமானதுமான “அறிவினரை கனவிலும் நனவிலும் காண்பது இனிது” என்பதாகும்.

     NAnE_NAM_Vethathiri_maharishi

    ஆச்சரியக் குறியுடன் பாடலை நிறைவு செய்துள்ளதைக் கவனிக்க வேண்டும். ஏன்? அவர்கூறுவது உண்மை. ஆனால், அது முதன் முதலாகக் கேட்பவருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் சிந்திக்க, சிந்திக்க, அது விளங்க விளங்க ஆச்சரியம் இருக்காது. உண்மையை அறிந்து கொள்வதில் ஏன் ஆச்சரியம் அவசியம்?

    ஆகவே தன்னை இறையுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? அல்லது அழிகின்ற உடலுடன் அடையாளம் காட்டிக் கொள்வது சிறப்பா? எது சிறப்பு? நீங்களே சிந்தித்துப் பாருங்களேன்! ஆகவே சரியான அடையாளத்தில், நமது பாரதி கூறும் களியாட்டத்தில் வாழ்வோம். இதுதான் ஆன்ம உணர்வு. உயிரறிவு. பேரின்ப நிலை.

    வாழ்க உலக அமைதி. வருக உலக அமைதி விரைவில். வாழ்க வையகம். ,

    வாழ்க வேதாத்திரியம், வளர்க வேதாத்திரியம். .

    *****

    Loading

  • பண்பேற்றமும் பிறவிப்பயனும்

     

    பண்பேற்றமும் பிறவிப்பயனும்

    FFC – 109

     

                                                   14-08-2015—வெள்ளி

      Perinbappadigal_Spiritual_ladder_reduced size   “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது”, ”நான் எனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே; நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்;”   என்று மொழிந்துள்ள

    வாழ்வியல் விஞ்ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்களின் 105 வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகின்றது.   மகரிஷி அவர்கள் 14-08-1911 இல் அவதரித்தார். அவருடைய அவதாரம் ஆன்மீகத்தில் ஒரு திருப்புமுனை, ஆன்மீகம் தன்வரலாற்றில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. அந்த அவதார புருஷருக்கு ஜெயந்தி விழா இன்று கொண்டாடுவதில் மனம் மகிழ்ச்சியுறுகின்றது.

     பொதுவாக பிறந்த தினம் என்றால் என்ன? வருடந்தோறும் ஒரு முறை பிறந்த தினம் வரும். அது கொண்டாடப்படுவது வழக்கம். விழாவாகவும் கொண்டாடப்படலாம். பிறந்த தினத்தை ‘ஜெயந்தி’ தினம் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் எல்லோர் பிறந்ததையும் ‘ஜெயந்தி’ என்று கூறுவதில்லை. எல்லோரும் வாழ்க்கையில் ஜெயம்(வெற்றி) அடைவதில்லையே! எனவே எவ்வாறு எல்லோர் பிறந்ததையும் ‘ஜெயந்தி’ என்பது?

    வாழ்வில் ஜெயம் அடைந்தவர்கள்(வெற்றியடைந்தவர்கள்) பிறந்த தினம் ‘ஜெயந்தி’ என்று மரியாதையுடனும், மகிழ்ச்சியுடனும்,

     நன்றியுடனும் கூறப்படுகின்றது. வாழ்வில் ஜெயம் அடைந்தவர்கள் பிறந்த தினத்தை ஜெயந்தி விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. உதாரணத்திற்கு மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் இரண்டாம் நாளை ‘காந்தி ஜெயந்தி’ விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. அவதாரங்கள் பிறந்த தினத்தையும் ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகின்றது. உதாரணத்திற்கு கிருஷ்ண ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி.

       விழா என்றால் என்ன? எதற்காக விழா கொண்டாடப்படுகின்றது? விழா என்பது ஒரு நிகழ்ச்சி. நிகழ்ச்சி எதற்காக? ஒருவரையோ அல்லது ஒன்றைச் சிறப்பித்து பலரும் கூடி, கலந்து மகிழும் வகையில் பெரிய அளவில் நடத்தப்படும் நிகழ்ச்சி விழா எனப்படுகின்றது. ஏன் சிறப்பிக்க வேண்டும்? ஒருவர் அதிநல்லவராக இருந்ததாலும்/இருப்பதாலும், நல்லவற்றை செய்ததற்காகவும்/செய்வதற்காகவும் சிறப்பிக்க வேண்டும். அவரை சிறப்பிப்பதோடு நின்று விடாமல் வருங்கால சமுதாயத்தில் யாராவது அவரைப் போன்று உருவாவதற்கு வித்திடுவதற்காகவுமே சிறப்பிக்கப்பட வேண்டும்.

       உதாரணத்திற்கு சுதந்திர தின விழா, இசை விழா, பாராட்டு விழா ஆகியன. விழா என்றால் மகிழ்வதற்காகவும், பாராட்டுவதற்காகவும் நடத்தப்படும் நிகழ்ச்சியாகின்றது. ஒருவருக்காக விழா என்றால் அவரை பாராட்டி, அதில் உண்டாகும் மகிழ்ச்சியினை அனுபவிப்பதற்காகவும் விழா நடத்தப்படுகின்றது. முதலில் தான் அடைந்த/அடைந்து வருகின்ற பயன்களுக்கு நன்றி கூறவும், இரண்டாவதாக, ‘யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்பதற்கிணங்க சக மனிதர்களுக்கும் இப்பயனை எடுத்துக் கூறி அவர்களை பயன் பெறச்செய்யவும், மகான்களின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகின்றது. ‘ஒருவருக்கு விழா’ என்றால் அவரை பாராட்ட வேண்டும் என்றிருப்பதால் ஏன் அவரை பாராட்ட வேண்டும்? அவர் மிக மிக நல்லவர் என்பதாலும், அவருடைய பிறப்பு இச்சமுதாயத்திற்கு மிகப் பேறாக அமைந்ததாலும், அவர் செய்துள்ள நற்காரியங்களுக்காகவும்,

         அவருடைய வாழ்வால் பயனடைந்த சக மனிதர்கள் ஒன்று கூடி பாராட்டுகின்றனர். பாராட்டுவதோடு மட்டும் நின்றுவிடுவது விழாவின் நோக்கமும் அல்ல; அந்த பாராட்டுக்குரியவரின் நோக்கமும் அதுவல்ல. பின்னர் எதற்காக நல்லவர் ஒருவருக்கு விழா நடத்தப்படுகின்றது? தலைவர்களுக்கு விழா நடத்தப்படும் போது விழாவில் பேசுகின்ற சான்றோர் பெருமக்கள் கூறுவதென்ன? ‘அந்த தலைவரின் கொள்கைளைப் பின்பற்றி நடப்பதே அந்த தலைவருக்குச் செய்யும் மரியாதையும், நன்றியும் ஆகும்’ என்பர்.

       இது ‘உண்மைதானே’. தலைவர்கள் எதிர்பார்ப்பது அவர்களை பாராட்ட வேண்டும் என்பதல்ல.   தாம் கூறும் அறிவுரைகளை செவி சாய்த்துக் கேட்டு நடந்து தம்மைப் போன்றே வருங்கால சமுதாயத்திற்கு தலைவர்களாக, வழிகாட்டிகளாகத் திகழ வேண்டும் என்பதே அந்த தலைவர்களின் பெரும் ஆசை. அதனை நிறைவேற்றித் தருவதுதானே தலைவர்களுக்கு செலுத்தும் நன்றி. அப்போதுதானே அந்தப் பாராட்டு விழாவிற்கு ஒரு பொருளும் உண்டாகும்.

       ‘உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது’     என்று     உறுதியளித்திருக்கின்ற மகரிஷி அவர்கள் ‘மீண்டும் பிறவாமையை அளிக்கவல்ல மனவளக்கலை’ பயிற்சியினை அளித்திருக்கிறார். அப்பயிற்சியில் மனதிற்கான பயிற்சியும், தன்னிடம் உள்ள குற்றங் குறைகளை அறிந்து அதனை நீக்கிக் கொள்வதற்கு அகத்தாய்வு பயிற்சியும் உள்ளன. மனதிற்கான பயிற்சிக்கு தவம் உள்ளது. தவப்பயிற்சி என்பது மன அலைச் சுழலை மெல்ல மெல்ல குறைத்து வந்து அமைதி நிலையை அனுபவிப்பதற்கு உதவியாக இருக்கும். முடிவில் அறிவு முழுமை பெற்று இறையுணர்வு பெறச் செய்யும். நற்குணங்கள் இல்லாமல் தவம் பூரணத்துவம் அடையாது. நற்குணங்களும் தவமில்லாது உச்சத்தை அடையாது. மன அலைச்சுழல் குறையாது மனம் உணர்ச்சி நிலையை வெற்றி கொள்ளாது. உணர்ச்சி நிலை நீங்காது மனம் தூய்மை அடையாது.

       மனிதனின் இயல்பு, பலபிறவிகளாக பழகி வந்த பழக்கத்திற்கும், இப்போது கிடைக்கும் விளக்கத்திற்கும் இடையே போராடுவதாக உள்ளதால், தவம் மட்டுமே போதாது என்பதால் அகத்தாய்வு பயிற்சியினையும் அளித்துள்ளார். காரணம் சுவாமி விவேகானந்ததர் கூறியுள்ளது போல் மனிதன் விலங்கினத்தன்மை, மனிதத்தன்மை, தெய்வீகத்தன்மை ஆகிய மூன்றையும் கொண்டவனாக உள்ளான். ஆகவே விலங்கினத்தன்மை நீங்கி மனிதத்தன்மைக்கு வருவதற்கு மனிதன் பண்பில் ஏற்றம் பெறவேண்டும். இதனை மனிதத் தரம் என்றும் கூறலாம். மனிதன் தரத்தில் உயரவேண்டும். அப்போதுதான் பிறவிப்பயனாகிய அறிவின் முழுமைப் பேறு கிட்டும்.

       எனவே மனவளக்கலைப் பயிற்சியின் விளைவுகளை துரிதப்படுத்தும் வகையில் இயல்பூக்க நியதியைப் பயன்படுத்தச் சொல்கிறார். பிறவிப்பயனை அடைவதற்கு ஆன்மீகப்பயிற்சியாளர் பண்பில் ஏற்றம் பெறவேண்டும். பண்பேற்றமே பிறவிப்பயனை நல்கும் என்கிறார் மகரிஷி அவர்கள். பண்பேற்றத்திற்கு இறைவெளியின் இயல்பூக்க நியதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறுகின்றார். அப்பாடலை நினைவுகூர்வோம்.

    FFC-70-எப்பபொருளை- to post on 28-03-15

        

    குருவின் சேர்க்கையால் என்ன நிகழ வேண்டும்? இப்பாடல் தெரிவிக்கும் செய்தி என்ன? குருவின் சோ்க்கையால் என்ன நடக்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்.  குருவின் சேர்க்கையால் பிறவிப்பயனை அடைய வேண்டும்.  பிறவிப்பயன் எப்போது அடைய முடியும்?

    பிறவிப்பயன் என்பது என்பது என்ன?

    அறிவு முழுமை பெற வேண்டும். அதனை மீண்டும் பிறாவாமை என்றும் கொள்ளலாம்.  

    மீண்டும் பிறவாமை’ என்பது என்ன? மரணம் என்கின்ற நிகழ்ச்சியின் போது இந்த உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா மீண்டும் பிறவி எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்க வேண்டும்.

    பிறவி எடுக்க வேண்டிய அவசியம் என்பது என்ன?  

    ஆன்மா பிறவி எடுப்பதற்கான காரணம் ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கிறார் ஒரு மகான்.

    எப்போது ஆன்மாவிற்கு மற்றொரு முறை தேகம் தேவைப்படுகின்றது?  

    புலன்மயக்கத்தால், வாழ்வின் நோக்கத்திற்கு முரணான, நிறைவேறாத, முடிவு பெறாத, ஆசைகள் தேங்கி இருக்கும் போதும்,  பல பிறவிகளில் செய்துள்ள தீய வினையின் விளைவுகளை துன்பமாக அனுபவிக்காமல், அதற்குள் ஆன்மா உடலை விட்டு மரணம் என்கின்ற நிகழ்வின் மூலம் வெயியேறிவிட்டால் அவற்றினை அனுபவிக்கவும் தேகம் தேவைப்படுகின்றது.  

    அத்தகைய ஆன்மா தரத்தில் குறைந்ததாகத்தான் இருக்கும். ஆகவே தக்க குருவோடு சேர்ந்து, குருவின் தரஉயர்வால் தன்னுடைய தரத்தை உயர்த்திக் கொள்ளவே குருசேர்க்கை எனும் புனித நிகழ்ச்சி இயற்கையால்/இறையால் நிகழ்த்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வினை தற்செயலாகக் கொள்ளாமல் அதனை பயன்படுத்திக்கொள்ள வழியினைக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.  

    இதே போன்றேதான் திருமூலரும் கூறுகிறார். திருமூலர் கூறும் குருவின் மூலம் சீடனுக்கும் ஏற்படும் நான்கு தெளிவினை திருமந்திரத்தின் வாயிலாக அறிவோம்.

     குரு அருளே திருவருள்

      தெளிவு குருவின் திருமேனி காண்டல்

    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

    தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே,”   …. திருமந்திரம் – 139.  

    ஆகவே குருவை சீடன் சந்திப்பதால் அறிவிற்குத் தெளிவு ஏற்படவேண்டும்.   அந்த தெளிவு எவ்வாறு ஏற்படுகின்றது என்பதனை திருமூலர் கூறுகின்றார்.

    இரண்டு கவிகளின் பொருளையும் ஒப்பிட்டுப்பார்த்து, குருவை மதித்து ஒழுகி பிறவிப்பெருங்கடலில் தத்தளிக்காமல் இருக்க பிறவிப்பயனாகிய இறைஉணர்வு பெற்று வாழ்வோம். அதற்கும் திருவருளும், குருவருளும் துணை நிற்குமாக. வாழ்க வேதாத்திரியம், வளர்க வேதாத்திரியம். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.  

    Loading

  • அறிவிப்பு

    அறிவிப்பு

    வாழ்க வளமுடன்!

    12-08-2015–புதன்கிழமை

    வழக்கம்போல் இன்று நடைபெறவிருக்கும் ‘அறிவிற்கு விருந்து’ நிகழ்வு

    வருகின்ற வெள்ளிக்கிழமை (14-08-2015) மகரிஷி அவர்களின் ஜெயந்தி

    தினத்தன்று நடைபெறும். அன்று நடைபெற வேண்டிய ‘சிந்திக்க

    அமுதமொழிகள்’ இன்று நடை பெறுகின்றது.

    வாழ்க வளமுடன்

    Loading