இன்றைய விருந்து

  • இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும் 5/5

    வாழ்க மனித அறிவு                      வளர்க மனித அறிவு

    இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்       5/5

    FFC 85

    24-05-2015 — ஞாயிறு

    இரண்டு வாரங்களாக, இறை, நீதி, இறைநீதி, கூர்தல், அறம், கூர்தலறம் என்றால் என்ன, ஏன் அவ்வாறு பெயரிடப்பட்டது என்றும், பரிபாலனம், கருமையம், அதன் பாலங்கள் பற்றியும் சிந்தித்து வருகிறோம். நான்காவதாகிய தனிமனிதனுக்கும் தெய்வத்திற்கும் இடையே உள்ள பாலத்தைப் பற்றியும் சிந்தித்து வருகிறோம். கருமையப் பதிவுகளுக்கு ஏற்ப குரு கிடைப்பார் என்பதனை அறிந்து கொண்டோம். பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறியுள்ளது போல், ஆயிரத்தில் ஒருவர் இறையைத் தேடுகிறார்கள், அவ்வாறு தேடியவர்களில் யாரோ ஒருவா்தான் இறை உணர்வு பெறுகின்றனா் என்று கூறுவதனையும் அறிந்து கொண்டோம். அதற்கானக் காரணம், அவரவர்களின் கருமையப் பதிவுகளே என்று அறிந்தோம். இன்றைய விருந்தில், முன்வினையை வென்று, முக்தி அடையமுடியும் என்று அவ்வையார் கூறுவதையும், குருகிடைத்தாலும் சீடர்களின் ஆன்மீக முன்னேற்றம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மூன்று வகையில் உள்ளது என்பது பற்றியும் அறிய இருக்கிறோம்.

    அவ்வையாரும் ஞானத்தை பெறுதல் மிக அரிது என்று கூறுகின்றார்.

    “அரிதரிது! மானிடர் ஆதல் அரிது!
    ……………………………………………………………………………………
    …………………………………………………………………………………
    ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது”. என்கிறார்.

    மனிதராகப் பிறப்பது அரிது என்றும், அப்படியே கூன், குருடு, செவிடு நீங்கி மனிதராகப் பிறந்தாலும் ஞானத்தை விரும்புதல் அரிது என்று மனிதவாழ்க்கையின் எதார்த்தத்தை எடுத்து இயம்புகிறார். மனித வாழ்வின் எதார்த்தம் அவ்வாறாக இருந்தாலும், அதனை எடுத்துக் கூறி ‘அப்படியே இருந்து விடுங்கள்’ என்று கூறவில்லை. ‘நல்வழியில்’ அவ்வையாரே கூறும் உறுதியினைக் கவனிப்போம்.

    “வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்

    அனைத்தாய் நூலகத்தும் இல்லை – நினைப்பதெனக்
    கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
    விண்ணுறுவார்க்[கு] இல்லை விதி.”

     

    பொருள்: முந்தைய பிறவிகளில் செய்த தீயசெயல்களின் விளைவை(பயனை) வெல்வதற்கு, வேதம், மற்றும் அதுபோன்ற நூல்களையும் கற்பதனால் பயனில்லை. “எனினும் கவலை கொள்ளாதே!” என்கிறாள் அவ்வைப்பாட்டி. மெய்யாகிய முக்தி நெறி நிற்பவருக்கு அவர் நினைப்பதுபோல் நடக்குமேயன்றி கவலை தரக்கூடியது ஒன்றும் இல்லை. பிறவிப் பயனை அடைய விதி என்று இல்லை என்கிறார் அவ்வையார். ஆர்வமும் முயற்சியும்தான் வேண்டும் என்கிறார் அவ்வையார்.

    முக்தி வழி நிற்பவருக்கு என்று கூறவில்லை அவ்வையார். முக்தி நெறி நிற்பவருக்கு என்கிறார். அதாவது நெறியில்லாமல் முக்தி அடைய முடியாது. முக்தி நெறி அவசியம். முக்தி என்பது என்ன?

    “அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்

    அறிவு முழுமை அது முக்தி”              என்கின்ற திருவேதாத்திரிய மந்திரம் 2 ன்படி அவன் நாம் ஒன்றாய் அறிந்த போது அறிவுமுழுமை அடைவதே முக்தி.

    அறிவுமுழுமை அடைய, முந்தைய வினையும் நீங்க வேண்டும். இப்பிறவியின் வினைகள் யாவும் நல்ல வினைகளாகவே இருக்க வேண்டும். அதற்கு நெறி நின்று வாழ வேண்டும். ஒழுக்க நெறி, அறநெறி என்கிறோம். நெறி என்பது என்ன? மனித ஒழுக்கத்துக்காக மேற்கொள்ளவேண்டிய முறைகள். நெறி நின்று வாழாமையால் வந்துள்ள முந்தைய தலைமுறையின் வினையான முன்வினையை வெல்ல வேண்டுமென்றால் இப்பிறவியில் நெறியுடன் வாழ்ந்தே ஆக வேண்டும். கூடுதல் கவனத்துடன் நெறியுடன் வாழ்ந்தால் முன்வினை தீர்ந்து முக்திக்கு வழிவகுக்கும். அந்நிலையில்தான் ‘நினைப்பதுபோல் நடக்கும். கவலைத் தரக்கூடியது ஏதுமில்லை. முன்வினை விதி என்பதும் ஒன்றுமில்லாது போய் விடும்’ என்கிறார் அவ்வையார்.

    திருவேதாத்திரியம் கூறுகின்ற information, confirmation, transformation ஆகிய மூன்று நிலைகளில் வேதங்கள் ஆகிய அறநூல்களைப் படிப்பது முதல் இரண்டு நிலைகளின் பயனைமட்டுமே தரும். மூன்றாவது நிலைக்கு வரவேண்டும். பெற்ற தகவலை உறுதிப்படுத்துவதே முடிவாகாது. தான் அதுவாக மாறுவதுதான் முடிவு. வீடுகட்ட உரிய அனுமதியை பெற்று விட்டாலே வீடு கட்டியதாகிவிடுமா? வீடு கட்ட அனுமதி பெற்றபின் வீடுகட்டி முடித்தால்தான் அதனுள் குடி புகுந்து வசிக்க முடியும். ஆகவே இப்பிறவியில், முக்திஅடைய, முந்தைய பிறவிகளில் செய்த செயல்களின் விளைவினை வெல்லவேண்டும். அதனை வேதங்களைப் படிப்பதால் மட்டுமே வெல்ல முடியாது. முக்தி அடையவேண்டும் என்கின்ற வாழ்வின் நோக்கத்தை முடிவு செய்து அதற்கான நெறியுடன் வாழ்ந்தால் மட்டுமே நினைப்பது நடக்கும். எனவே கவலை தரக்கூடியது ஒன்றுமில்லை. கவலைப்பட வேண்டாம் என்கிறார் அவ்வையார்.
    புலன்களாகிய பொறியின்(trap) வாயில் அகப்பட்டுக் கொண்டு இன்பதுன்ப சம்சாரக்கடலில் மூழ்கியிருப்பதால் புலன்களிருந்து விடுதலை அடைந்து ஞானம் பெறுவது என்பது அரிதாக உள்ளது சமுதாயத்தில். கருமைய தீயப்பதிவுகளே ஞானம் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றன. நெறி நின்று வாழ்தல் கருமையப்பதிவுகள் தூய்மையடைந்து முக்திக்கு வழிவகுக்கும்.

    அறியாமையை நீக்கக்கூடிய குரு கிடைத்தவர்களில் மூன்று தரப்பினர்கள் இருப்பர்.

    1) பலர் குரு கிடைத்தும், பிறகு குருவையே மறந்துவிடுபவர்கள். இவர்கள் தற்செயலாகக் குரு கிடைக்கப்பெற்றவர்களாவார்கள். குருவைப்பற்றி பிறர் சொல்லியதாலே குருவிடம் வந்தவர்கள் இவர்கள். அவர்கள் ‘தெரிந்தோ அல்லது மறைமுகமாகவோ தேடல் என்கின்ற விழைவுப் பதிவு’ கருமையத்தில் பெற்றில்லாதவர்கள். அதனால் தக்க குரு கிடைத்தும் குருகூறும் வழிப்படி நடக்க முடியாமல் போய் விடுகின்றனர். தெரிந்தோ அல்லது மறைமுகமாகவோ ‘தேடல்’ என்கின்ற விழைவுப் பதிவு கருமையத்தில் இருப்பவர்களுக்கு பிறர் சொல்லி குருவிடம் வந்தாலும், அவர்களிலும் பலர் சில நாட்கள் கழித்து குருகூறும் வழியில் நடக்க முடியாமல் போய் விடுகின்றனர். இதுவும் கருமையப்பதிவின் பிரதிபலிப்பேயாகும்.

    2) மற்றவர்களில் சிலர் குருவை வாழ்நாள் முழுவதும் மறக்காமல், தொடர்ந்தாலும் அறியாமையை நீக்குவதில் வெற்றி பெற முடிவதில்லை. காரணம் அவா்களின் கருமையப்பதிவுகளின் அழுத்தத்தால், தளராவிடாமுயற்சி செய்ய முடிவதில்லை.

    3) ஒரு சிலரே அறியாமையை நீக்குவதில் மிகுந்த உள்ளார்வம் (மனதின் மறுமுனையான உள்ளமே-இறையே ஆர்வம் கொண்டு) கொண்டு வெற்றி பெறுகிறார்கள். அவர்கள் இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்தி அறியாமையை நீக்கி அறிவில் மாற்றம் காண்பவர்கள். அவர்களே குருவை நம்பி, மதித்து ஒழுகுபவர்கள். ஆதலால் அவர்களை, தப்பாமல் குருவின் உயர்வு தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை எய்தச்செய்கின்றது.

    குருவருள் இன்றேல் திருவருள் இல்லை என்பதால் தக்க குரு கிடைப்பதை நிர்ணயம் செய்வது கருமையப்பதிவுகளே.

    அதுமட்டுமல்லாமல் தன்னிலை உணர்ந்து இறையால் குருவாக்கப்பட்டவரின் குடும்பத்திலேயேகூட அவருடன் பிறந்த உடன் பிறப்புகள் அனைவருக்குமே தன்னிலை உணர்கின்ற பாக்கியமும், புண்ணியமும் கிட்டுவதில்லை. இதெல்லாம் எதனைக் குறிக்கின்றது?

    ஆன்மீக நாட்டம் கொள்வது,
    இறைத் தேடல்,
    ஆன்மீகத்தில் தெளிவு பெற்று உச்ச நிலை அடைந்து, இறையே அவா்களை இறைத்தூதுவரான குருவாக்குவது என்பதெல்லாம்
    அவரவர் கருமையப் பதிவுகளைப் பொருத்துள்ளது.

    ஆக, கருமைய பதிவுகளுக்கு ஏற்ப இன்ப விளைவுகளல்லாது துன்ப விளைவுகளையும் தருவதற்கு மேல்கூறிய நான்கு வழிகள் (channels) காரணமாக அமைவதால், அந்நான்கு வழிகள் வாயிலாக இன்ப விளைவுகளையோ பேரின்ப விளைவுகளையோ தருவதற்கு அந்த வழிகளில் இனிமை காக்கப்படல் வேண்டும்.

    இன்பம் வந்தால் அதனை தக்கவைத்துக் கொண்டு பேரின்பமாக வளர்த்துக் கொள்ளவும், துன்பம் வந்தால் அதனை போக்கி இன்பமாக்கி, மேலும் பேரின்பமாக்கவும் ஆறாம் அறிவுடைய ஒவ்வொரு மனிதனும் அறிந்திருக்க வேண்டும்.

    எனவே நான்கு கருமையப்பாலங்கள் வழியாகவும் இன்பத்தையே பெற்று யோக வாழ்வு வாழத் தகுதியினைப் பெறுவதற்கு யோகம் பயில வேண்டும். யோகம் என்பது என்ன? ‘யோகம்’ என்கின்ற சொல்லை பயன்படுத்தாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஏனெனில் ஒருமனிதர் வசதியாகவும், அனைத்துச் செல்வச் செழிப்புடனும் இருந்தால் அவரை யோகக்காரகர் என்கிறோம்.

    யோகம் என்பதற்கு இரண்டுவிதமான பொருள் இருக்கின்றது. இரு பொருள் போல் தெரிந்தாலும் அது ஒருபொருளே. காரணம் என்னவென்றால், இரு பொருட்களிலும், இறுதி விளைவாக குறிப்பிடப்படுவது துன்பமற்ற நிலை ஒன்றையே. நல்லசெயல்களின் நல்விளைவுகளே யோகம் எனப்படுகின்றது. இருப்பினும் அந்த யோகம் என்பதற்கான இருபொருட்கள் என்ன?

    1) அதிர்ஷ்டம், good luck. உதாரணம்:–படிப்பை முடித்து வேலைக்காகக் காத்திருப்பவர்கள் பலர் உள்ள நிலையில், படித்தவுடன் நல்ல வேலை கிடைத்தால், அதனை யோகத்துடன் இணைத்து அவனுடைய யோகம் அவனுக்கு படிப்பை முடித்தவுடனே நல்ல வேலை கிடைத்தது என்பார்கள்.

    2) யோகத்திற்கான மற்றொரு பொருள் — மனத்தை ஒரு நிலைப்படுத்திச் செய்யும் ஆழ்ந்த தியானம், மற்றும் யோகப்பயிற்சிகள் (yoga).
    ஜோதிடர்கள் பலன் சொல்லும்போது ஒரு சில ஜாதகங்களைப் பார்த்த உடன் முதலில் சொல்வது ‘இந்த ஜாதகம் யோக ஜாதகம், இந்த ஜாதகருக்கு எல்லா யோகங்களும் உள்ளது’ என்பர். ஜோதிடம் என்பதே கருமையப்பதிவுகளை ஓரளவிற்குக் காட்டும் அட்டவணை தானே? (Chart). அப்படியிருக்கும் போது ‘யோக ஜாதகம்’ என்றாலே நல்லதைக் கொடுக்கும் என்பதால், அந்த நல்லதைக் கொடுக்கும் பதிவுகள் அவரது கருமையத்தில் உள்ளது என்றுதானே அர்த்தம்?!
    யோகம் என்பது உலகியல் மற்றும் ஆன்மீக வாழ்க்கைக்கு நல்லதையே கொடுக்கும். எனவே யோகம் பயில வேண்டும். யோகத்தின் வழியாக உடல்நலம், மனவளம் பெற்று பிறவிப்பயனை எய்துதல் வேண்டும். வேலை கிடைப்பது, செல்வம் சேர்ப்பது என்பதெல்லாம் யோகமாக இருந்தாலும், இவைகளெல்லாம் தற்காலிகமானதே. நிரந்தர யோகம் என்பது பிறந்த நோக்கத்தை அறிதலும், முடிவாக அதனைத் தள்ளிப்போடாமல், அறிந்த பிறவியிலேயே அதனை அடைவதேயாகும். யோகத்தினால் கருமையப் பதிவுகள் தூய்மை அடையும். யோகத்தைப் பற்றி திருவேதாத்திரியம் கூறுவதென்ன? ‘யோகம்’ என்பதற்கு ‘இனிமை காத்தல்’ என்று பொருள். யோகம் நான்கு நெறிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

    1) உடலுக்கும் உயிருக்கும், உயிருக்கும் மனதிற்கும் இனிமை காக்க வேண்டும்.
    2) தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இனிமை காக்க வேண்டும்.
    3) தனக்கும் கோள்களிலிருந்து வரும் காந்த அலைகளை ஒன்று படுத்துவதில் இனிமைக் காக்க வேண்டும்.
    4) தனக்கும் இயற்கைக்கும்/இறைக்கும் இடையே இனிமை காத்திடல் வேண்டும்.
    கருமையப் பதிவுகளின் நான்கு பாலங்கள் வழியாக இன்ப துன்ப விளைவுகள் வருவதால் துன்ப விளைவுகளைத்தாங்கவும், போக்கவும், இன்ப விளைவுகளை தக்க வைத்துக்கொண்டு பேரின்பவிளைவினை அடையவும் நான்கு முறைகளில் இனிமை காக்க யோகம் பயில வேண்டும். ஒருகாலத்தில் யோகம் பலருக்கு எட்டாக்கனியாக இருந்தது. இப்போது சாதாரண மனிதனும் யோகம் பயிலுகின்றவகையில் யோகக்கலையானது, ‘மனவளக்கலை’ (SKY) என்கின்ற பெயரில் விரைவாக வளர்ந்து வருகின்றது.

    குருவை பூதவுடலில் பார்க்க முடியவில்லையே என்கின்ற ஏக்கம் தேவையில்லை. திருவள்ளுவரை, திருமூலரை, தாயுமானவரை மானசீகமாகவல்லவா குருவாக ஏற்றுக்கொண்டார் நம் குருதேவர் வேதாத்திரி மஹரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள் அருளியுள்ள அறநூல்கள் எல்லாம் நம்மிடையே பேசிக் கொண்டிருக்கின்றன. மகரிஷி அவர்கள் அருளியுள்ள அவரது வாழ்க்கை விளக்கம் என்கின்ற நூலை பலமுறை வாசித்துப் பயன் பெறவும். பிறவிக்கடலை எவ்வாறு நீந்தமுடியும் என்று மகரிஷி அவர்கள் உறுதி அளித்துள்ளதை நினைவில் கொண்டு செயலாற்றுவதற்கு, மெய்விளக்கம், பிறவிக்கடல் நீந்தலாம் என்கின்ற தலைப்பில் அருளியுள்ள பாடல்களை மீண்டும் ஒரு முறை நினைவுகூர்வோம்.

    meyviLakkam

     

    வாழ்வியலில் யோகமும் முதன்மைப் பங்கு வகிக்க வேண்டும். இந்த அவசியத்தை அறிந்தே வருகின்ற ஜுன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. வாழ்க மனவளக்கலை யோகா. வளர்க மனவளக்கலை யோகா. இத்துடன் இச்சிந்தனை முடிவுற்றது. அடுத்த விருந்தில் வேறொரு தலைப்பை எடுத்துக் கொள்வோம். தொடரும் 27-05-2015

    Loading

  • இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும் 4/?

    வாழ்க மனித அறிவு                            வளர்க மனித அறிவு

    இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும் 4/?

    FFC 84

    20-05-2015—புதன்

    கருமையப்பதிவே குருவுடன் இணைத்து வைக்கின்றது.

    சென்ற அறிவிற்கு விருந்தில் அறத்தை நிலைநாட்டுவதில், இம்மிகூட பிசகாமல், கூர்ந்து கவனித்து உரிய விளைவுகளைத் தருவதால், அத்தகைய இறைத் தன்மையை ‘கூர்தலறம்’ என்கிறார் மகரிஷி அவர்கள் என்று அறிந்தோம். கூர்தலறம், துகள்கள் உருவானதிலிருந்தே பரிபாலனம் செய்ய ஆரம்பித்து, கருமையப் பாலங்கள் வழியாக மனிதனுடைய செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை தந்துகொண்டிருக்கின்றது என்றும் அறிந்தோம். இன்று கருமையத்தின் நான்காவது பாலம் வழியாக தன்னிடம் பதிந்துள்ள பதிவுகளுக்கேற்ப, தனிமனிதனுக்கும் இறையருளுக்கும் இணைப்பைக் கொடுப்பதை விரிவாக அறிய இருக்கிறோம்.

    “மாதா, பிதா, குரு தெய்வம்” என்கின்ற ஆன்றோர் மொழியின்படி குருவை அறிமுகப்படுத்தும் வைபவமே மறக்கபட்டுவிட்ட நிலையில், இறை/இயற்கை மீண்டும் அதனை, இரண்டாம் உலகப் பொது மறைநூல் — திருவேதாத்திரியத்தை அருளிய வேதாத்திரி மகரிஷி அவர்களின் வழியாக புனருத்தாரணம் (revive) செய்துள்ளது. ஒன்றே பலவாகியது என்கின்ற அத்வைதத்தை வேதங்களிலிருந்து தெளிவாக்கிய ஆதிசங்கரா், குருதரிசனத்தின் பயன் பற்றிக் கூறுவதனை நினைவு கூர்ந்து சிந்தனையைத் தொடங்குவோம்.

    “க்ஷணமிஹ ஸஜ்ஜன ஸங்கதி ரேகா I வதி வார்ணவ தரணே நௌகா II”

                                                                                     —–மோஹமுத்கரம் –ஆதிசங்கரர்.

    பொருள்:— “கணநேரமானாலும்கூட தூயவர்களுடன் கொள்ளும் தொடர்பு வாழ்க்கைப் பெருங்கடலை கடக்க உதவுகிறது.”

    ஒரே குடும்பத்தில் பிறந்தவர்களில் எல்லோருமே குருவை அடையும் பாக்கியம் பெறுவதில்லை. அப்படியே குரு கிடைத்தாலும், திருமூலர் கூறும் அறியாமையை நீக்கும் பக்குவர் குருவாக கிடைக்க வேண்டும். இதுவும் அவரவா் கருமையப்பதிவுகளைப் பொருத்திருக்கின்றது.

    கிடைக்கும் குரு பரிபக்குவராக இருக்க வேண்டுமென்று, ‘அபக்குவன்’ என்கின்ற தலைப்பில் திருமூலர் கூறுவதனை இப்போது அறிவோம். ஏன் ‘அபக்குவன்’ என்று அப்பாடலின் தலைப்பிற்கு பெயரிட்டுள்ளார் என்பதனை அறிவோம். ‘பக்குவன்’ என்கின்ற சொல்லின் எதிர்ச்சொல். ‘அபக்குவன்’ பக்குவன் என்கின்ற சொல்லிற்கான பொருளைத் தெரிந்து கொண்டால் அபக்குவன் என்பதற்கான பொருள் தெரிந்துவிடும். பக்குவம் அடைந்தவன் பக்குவன். பக்குவம் என்றால் தகுதி, முதிர்ச்சி, ஆத்மபரிபாகம். ஆத்மாவை அறிந்தவன் என்று பொருள். பக்குவன் என்றால் ஆத்மாவை அறிந்த பக்குவன். ஆத்மாவை அறிந்து ஞானக்கண் திறந்தவன். ஆத்மாவை அறிந்து ஞானக்கண் திறந்தவன்தான் மற்றொருவரின் ஞானக்கண்ணைத் திறக்க முடியும் என்பதால், குருவினால் எவ்வாறு நான்கு வழிகளில் தெளிவை அடைய முடியும் என்று தனது திருமந்திரம் 139 ல் கூறியுள்ள திருமூலர், அத்தகையத் தெளிவினை உண்டாக்கக் கூடிய குருவைத் தேர்ந்தெடுப்பதில் எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும் என்பதனையும் திருமந்திரம் 1680 ல், பக்குவமில்லாத குரு கிடைத்தால் என்னவாகும் என்றுகூறி ஆன்ம சாதகனை எச்சரிக்கிறார்.

    அபக்குவன்
    குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
    குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
    குருடும் குருடும் குழி விழுமாறே.                           திருமூலர் திருமந்திரம் 1680

    பொருள்:– ‘குருட்டினை’ என்று திருமூலர் குறிப்பிடுவது ‘அறியாமை’. குரு என்பவா் அறியாமையைப் போக்கக் கூடியவராக இருக்க வேண்டும். அறியாமையைப் போக்கும் நல்லாசிரியரைத் தேடிப் போகமாட்டார்கள் சிலர். அறியாமையை நீக்க முடியாத ஒருவரை குருவாகக் கொண்டு அவரிடம் செல்வர். இவ்வாறாக அறியாமையில் உள்ளவரும், அறியாமையை நீக்க முடியாதவரும் ஒன்று சேர்வது குருடுக்கு குருடு வழி காட்டுவது போன்றது. விளைவு இருவரும் துன்பக்குழியில் விழுந்து துயருறுவதைப் போன்றதேயாகும். ஆகவே துன்பக்குழியில் வீழ்வதால், குருட்டினை நீக்கா குரு கிடைப்பதுகூட பாவப்பதிவுகளால் தானே?

    ஆகவே எத்தகைய குரு கிடைப்பார் என்பது கூட அவரவா் எண்ணிய எண்ணங்கள் மற்றும் செய்துள்ள செயல்களின் கருமையப் பதிவுகளைப் பொருத்தது. எண்ணியுள்ள எண்ணங்கள் என்பது ஒருவா்

    • இப்பிறவியிலோ அல்லது தனக்கு முந்தைய பாட்டன்-பூட்டன்(பாட்டனின் தந்தை- கொள்ளுத்தாத்தா) வம்சாவளியிலோ யாராவது எண்ணியதாகக்கூட இருக்கலாம்.
    • எண்ணியது என்ன?
    • இறை உணர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு, அந்நாட்டத்தால் இறை என்பது என்ன, இறைவனை நம்மாலும் பார்க்க முடியாதா,
    • அதற்கென பிரத்யேகப் பிறவி எடுத்து, பிறந்து வரவேண்டுமா, என்கின்ற வினாக்கள் உள்ளத்தை அரித்திருக்க வேண்டும். அல்லது
    • ஒரு முறையாவது அக்கேள்வி உள்ளத்தில் எழுந்திருக்க வேண்டும்.
    • ஒரு வேளை அவ்வாறு எண்ண நாட்டம் இருந்து, அந்நாட்டம் முந்தைய தலைமுறைகளில் நிறைவேறாமல் தேக்கமுற்று,
    • கருமையத் தொடர்பினால், இப்போது நம்கருமையத்திற்கு கொண்டு வரப்பட்டு (carried forward to this birth),
    • நிறைவேற்றி வைக்கப்பட்டதே, நம்முள் இறைஉணர்வையும் அறவுணர்வையும் ஏற்படுத்தியுள்ள மகரிஷி அவர்களின் தரிசனம்.

    ஆகவே, தீருமூலரை மானசீகக் குருவாகக் கொண்டு, தனது ஞானக்கண் திறக்கப் பெற்ற ஞானியான வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு சீடராகியவர்கள் எத்தகைய புண்ணியவான்கள், பாக்கியசாலிகள், அதிர்ஷ்ட சாலிகள் என்பதனை

    • நினைந்து, நினைந்து,
    • மகிழ்ந்து, மகிழ்ந்து,
    • பரவசம் அடைந்து,
    • இறையிடம் சரண் அடைந்து, நன்றி செலுத்தி,
    • நம்குருமகராஜ் அவர்களைப் போற்றிப் போற்றி,
    • அவரையும், அவரது உயா்வையும் எண்ணி எண்ணி மதித்து,
    • அவர் கூறும் அறம் செறிந்த அறவுரை—அறிவுரைகளை,
    •  பூரண மனதோடு ஏற்று (with implicit obedience)நடந்து,
    •  “உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது” என்று கனிவோடு உறுதி அளித்துள்ளதை,
    • செயலாக்கி, பிறவியின் நோக்கமான ‘அவன் நாம் ஒன்றாக, அறிந்த அறிவின் முழுமையான முக்தி’ யினை அடைவோம்.

    திருமூலர் கூறியுள்ளபடி, அப்படியே அறியாமையை நீக்கக்கூடிய குரு கிடைத்தாலும், கிடைக்கப் பெற்றவர் அனைவரும் அறியாமை நீங்கப் பெறுகிறார்களா என்பது ஐயமே! இங்கே பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் ஏழாவது அத்தியாயமான ‘ஞானவிக்ஞான யோகம்’ மூன்றாவது ஸ்லோகத்தில் கூறுவதனைக் கவனிப்போம்.

    மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித்யததி ஸித்தயே I

    யததாமபி ஸித்தானாம் கஸ்சின்மாம் வேத்தி தத்வத: II    பகவத் கீதை 7. 3

    “ஆயிரக்கணக்கான மனிதர்களுள் யாரோ ஒருவன் மனநிறைவின் பொருட்டு முயலுகிறான். முயலுகின்ற பெருவாய்ப்புள்ளோர்களுள்ளும் யாரோ ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்.”

    மரத்தில் உருவாகும் ஆயிரக்கணக்கான விதைகளில் பெரும்பகுதியை உயிர்கள் உண்கின்றன. விதைக்கப்பட்டவை, அத்தனையும் முளைப்பதில்லை. தரிசு நிலத்திலோ, பாறையிலோ, விழுந்தவைகள் சரியாக முளைப்பதில்லை. எனவே வளர்வதில்லை. நல்ல விருட்சமாவது ஒன்றிரண்டேதான். அவ்வையார் கூறும் இந்த மானுடப்பிறவி இறைஉணர்வு பெறுவதற்காக அமைந்ததுதான் என்றாலும், அதுதான் வாழ்வின் நோக்கம் என்று அறிந்து கொள்பவர் வெகு சிலரே. பிறகு அதற்கு ஏற்ற சூழ்நிலை முறையான பயிற்சி, தளரா விடாமுயற்சி ஆகியவைகளின் வாயிலாகக் கடைத்தேறுவது என்பது அரிதிலும் அரிதாக உள்ளது. பிறவியின் நோக்கம் இறைஉணர்வு பெறுவது என்பது எவ்வளவுக்கெவ்வளவு உயா்ந்ததோ அதை அடைதலும் அவ்வளவுக்கவ்வளவு துர்லபமாக இருக்கின்றது என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

    இத்தருணத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவதை நினைவுபடுத்திக் கொள்வோம். காசியில் ஸ்ரீஅன்னபூரணியின் கோயிலுக்குள் நுழைந்தவர்கள் எல்லோருக்கும் பிரசாதம் கிடைக்கும். பிரசாதம் கிடைக்காமல் வெளியில் வரமுடியாது. என்ன வித்தியாசம் என்றால் சிலருக்கு பிரசாதம் உடனே கிடைத்துவிடும். சிலர் காத்திருந்து பெற வேண்டும். நெடு நேரம் காத்திருந்தும் பெறவேண்டியதாகவும் இருக்கும். கோயிலினுள் நுழைந்தவர்கள் யாருக்காவது பிரசாதம் இல்லை என்பதே கிடையாது. அதுபோல் மனிதப் பிறப்பெடுக்கும் அனைவருக்கும் மனிதப்பிறப்பிற்கான பிரசாதமான முக்தி என்பது உண்டு என்கிறார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர். சிலர் இப்பிறவியிலேயே முக்தியை அடைகிறார்கள். சிலர் இன்னும் இரண்டு, மூன்று பிறவிகளில் முக்தியடைகின்றனர். வேறு சிலர் கணக்கற்ற பிறவிகள் எடுத்து, பிறகு முக்தியடைபவர்களாக உள்ளனர். ஆனாலும் எல்லோருக்கும் முக்தி என்பது முன்னது, பின்னதாக இருக்கலாம் என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

    ஸ்ரீராமகிருஷ்ணருக்கு இளையவரான நம் குருதேவர் கூறுவதனைக் கவனிப்போம்.

    meyviLakkam

    விளக்கம்: பல ஆயிரம் பிறவிகளில் சேர்த்து வைத்துள்ளப் பாவப்பதிவுகளை எப்படி ஒரு பிறவி காலத்தில் மாற்ற முடியும் என்கின்ற ஐயம் எழலாம். நம் குருதேவரின் வாக்கில் முதலில் நம்பிக்கை வைத்தாலே போதும். இறையுணர்வு பெற வேண்டும் என்று முடிவெடுத்த அடுத்த க்ஷணமே ஒருவன் புனர்ஜென்மம் எடுக்கிறான். மனிதனாகித் தெய்வமாகி உய்ய, நிலஉலகில் மனிதரிடம் நல்வாய்ப்பு மற்றும் ஆற்றலை இயற்கை நமக்களித்துள்ளது என்கின்ற வரிகள் சத்தியம் என்பதனை அனுபவத்தில் உணர்ந்து விடுகிறான். சிந்தனை மலர்கின்றது. எண்ணம் ஆராய்ச்சியிலேயே இருக்கிறது, தனக்கோ பிறருக்கோ நன்மையே தரும் எண்ணம் மட்டுமே மேலோங்குகிறது. வைராக்கியம் நிலைக்கிறது. அறத்தின் பாதையிலே ஒத்துதவி வாழும்முறையில் வாழ்வாங்கு வாழ்கிறான்.

    இத்துடன் இன்றைய சிந்தனையை முடித்துக் கொள்வோம். இதன் தொடர்சியாக, அடுத்த விருந்தில், முக்தி அடையமுடியும் என்று அவ்வையார் கூறுவதையும், குருகிடைத்தும் சீடர்களின் முன்னேற்றம் மூன்று வகையில் உள்ளது என்பது பற்றியும் அறிவோம். தொடரும்.—–24-05-2015

    Loading

  • இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும். 3/?

    வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

    இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும். 3/?

    FFC 83

    17-05-2015 – ஞாயிறு

    ‘இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்’ என்கின்ற தலைப்பில் கடந்த இரண்டு அறிவிற்கு விருந்துகளில் சிந்தித்து வருகிறோம். இன்று செயலுக்கு விளைவு உண்டு என்கின்ற தத்துவத்தை ‘கூர்தலறம்’ என்று பெயரிட்டு, அதனை இறைநிலையின் திறன்களில் மூன்றாவதாக ஏன் அழைக்கிறார் மகரிஷி அவர்கள் என்றும், கூர்தலற நெடிய – தொடர் பயணத்தின் மூன்றாவது பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு, மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவு எவ்வாறு இறையால்/இயற்கையால் கருமையப் பாலங்கள் வழியாக வழங்கப்படுகின்றது என்பதனை அறிய இருக்கிறோம்.

    செயலுக்கு ஏற்ற விளைவைத் தருவது என்பதால், கூர்தலறம் என்பது பெரும்பாலும் மனிதனுடைய செயலுக்கு விளைவினைத் தருவது என்கின்ற கண்ணோட்டத்தில் மட்டுமே விளங்கிக் கொள்ளப்பட்டுவருகின்றது.
    இறையின் மூன்று திறன்களில்(capabilities) ஒன்றாக இருக்கும் கூர்தலறம்,

    தன்னுடைய பரிபாலனத்தை,
    மனிதன் தோன்றிய பிறகுதானா,
    அவனுடைய செயலுக்கு ஏற்ற விளைவினைத் தருவதில் மட்டுமா,
    ஆரம்பித்திருக்கும்? அப்படி இருக்க முடியுமா?!

    இறைமுழுவதுமாக வெளியாக இருந்தபோது, அதாவது முதல் துகள்கூட உருவாவதற்கு முன்னர், அதற்கு ஆட்சியோ, ஆளுகையோ தேவையில்லை. ஆனால் எப்போது முதல் துகள் உருவாக ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே கூர்தலறம் செயலுக்கு வந்து விட்டது. ஏனெனில், இறைவெளியின் முதல் துகள் என்பது இறைவெளியின் முதல் செயலுக்கான விளைவு. இறைவெளியின் தன்னிறுக்கச் செயலால் உருவாகிய துகள்களை விளைவாகத்தானே கருதமுடியும்?
    நொறுங்கியது மட்டுமல்ல நொறுங்கியவுடன் சுழலவும் ஆரம்பித்துவிட்டது. சுழல்வதும் விளைவுதான். சுழற்சி என்கின்ற விளைவிற்கு தொடர் விளைவும் ஏற்பட்டுள்ளது. அது எது?

    தன்னுடைய செயலாகிய நொறுங்குதலால் துகளாகி, துகள் சுழன்றதன் விளைவாக விரிவலை தோன்றியது; அதன் தொடர் விளைவு தான் காந்தம். மேலும் பஞ்சபூதங்களாகி, காந்தத்தின் திணிவால், அழுத்தமாக, ஒலி, ஒளியாக, சுவையாக, மணமாக தன்மாற்ற தொடர் விளைவுகளாகியது. இந்த காந்த தன்மாற்ற விளைவுகளை உணா்வதற்காக ஓரறிவு உயிரினங்களிலிருந்து ஐயறிவு வரை சீவஇனங்களாகத் தன்மாற்றங்களாகியது. இப்போது நாம் சிந்திப்பதுபோல் தானே தன்னையே ரசிக்க, சிந்திக்க, ஆறாம் அறிவுடைய மனிதனாக வந்துள்ளது. இந்த தன்மாற்ற நிகழ்ச்சியில், சடப்பொருட்களாகியதும், உயிரினங்களாகியதும், இறையின் இயக்கம் தானே. எனவே, எவ்வாறு மனிதன், இப்போது தான் தயாரிக்கும் இயந்திரத்தில் அதன் இயக்கம் அதற்கான ஒழுங்கின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றானோ, அதுபோல்தான் ஒவ்வொரு இறையின் தன்மாற்ற நிலையிலும் ஒழுங்கு அவசியமாக இருக்கின்றது. அது இயல்பாக பேரறிவாகிய இறையில் இல்லை என்றால் தன்மாற்றமே வெற்றி அடைந்திருக்க முடியாது.

    இயக்கம் என்றாலே அதில் ஒழுங்கு இருக்க வேண்டும். இயக்கத்தில் ஒழுங்கு இருந்தால்தான் அந்தந்த இயக்கத்திற்குரிய விளைவு வரமுடியும். ஆகவே இயக்க ஒழுங்கே அறமாகும். ஒவ்வொரு இயக்கத்திலும் ஒழுங்கை உறுதிப்படுத்தும் அறத்தில், கூர்ந்து கவனித்து நுட்பமாகவும், நிச்சயமாகவும், இம்மிகூட பிசகாமல் உரிய விளைவுகளைத் தரக்கூடிய இறைத் தன்மையை ‘கூர்தலறம்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.
    தொடர் விளைவாகிய காந்தத்தை மலரச் செய்யக்கூடியத் திறமையைத்தான் மகரிஷி அவர்கள் இறைநிலையின் கூர்தலறம் என்கின்ற புனிதச்சொல்லால் அழைக்கிறார். தானே நொறுங்கியது. அது அதனுடைய செயல். நொறுங்கிய விளைவிக்குத் தொடர் விளைவாக காந்தமாக மலர்ந்ததும் இறையேதான். ஒன்றேதான் பலவாகியது என்பதால் செயல் புரிந்ததும், விளைவாக வருபவனும் அவனே என்றாகத்தானே இருக்க முடியும்! ஆகவே இறையின் கூர்தலறம் என்பது முதல் துகள் ஆனதிலிருந்தே ஆரம்பித்து விடுகின்றது. அது இன்றும் மனிதனுடைய 720 கோடி உலக மக்கள் வாழ்விலும் இடைவிடாது நொடிக்கு நொடி ஆளுகை புரிந்து கொண்டிருக்கின்றது. எப்போதும் மனிதர்களின் வாழ்வில் செயல்புரிந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது. அதாவது மனிதனுடைய ஒவ்வொரு செயலுக்கும் ஏற்ற விளைவினைத் தந்து கொண்டிருக்கின்றது.

    ஆகவே கூர்தலறம் முதல் துகள் உருவானதிலிருந்து விளைவைக் கொடுக்க ஆரம்பித்து, இந்த நொடி வரை செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றது. இனிமேலும், எப்போதும் தவறாது செயல்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இத்தகைய இறைவெளிக்கே உள்ள திறமையை ‘கூர்தலறம்’ என்கின்ற சொல்லை அறிமுகப்படுத்தி அழைக்கிறார் நம் மகரிஷி அவர்கள். முதல் துகள் நொறுங்கியதிலிருந்து கூர்தலறத்தின் நெடிய பயணத்தை மூன்றாகப் பிரிக்கலாம்.
    1) முதலாவது, முதல் துகள் உருவானதிலிருந்து பஞ்சபூதங்கள் உருவாகியது வரை.
    2) இரண்டாவது, ஓரறிவு சீவனிலிருந்து ஐயறிவு சீவன்கள் தோன்றியது வரை.
    3) மூன்றாவது, ஆறறிவு சீவனாகிய ஆதிமனிதனிலிருந்து இப்போது வரை.

    இப்போது நாம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்வது முன்றாவது பகுதியாகும். ஏனெனில் மற்ற பகுதிகளைவிட மூன்றாவது பகுதி மனிதனோடு சம்பந்தப்பட்டு இருப்பதால் தன்னைப்பற்றி அறிய மனிதனுக்கு ஆவல் அதிகம் இருக்கும் என்பதாலும், மேலும் மனிதகுலத்தில் மட்டும்தான், மனிதனால் ஏற்படுத்தப்படும் சிக்கல்கள் பெருகி தனிமனிதன் முதல் சமுதாயம் வரை துன்பக்கடலில் மூழ்கி அல்லறுவதால், அதற்கு தீர்வு காண்பதற்கு வழிவகுக்கும் இந்த மூன்றாம் பகுதியைச் சிந்தித்தல். மற்ற இரண்டு பகுதிகளையும் மனிதன் அறிய வேண்டியதுதான். அதனை வேறொரு சமயத்தில் எடுத்துக் கொண்டு சிந்திப்போம். இறைநீதிதான் கூர்தலறம், செயல்விளைவுத்தத்துவம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த இறைநீதி எவ்வாறு பரிபாலனம் செய்கின்றது என்பதனை அறிந்து கொள்வோம். அதற்கு பரிபாலனம் என்றால் என்ன என்று அறிய வேண்டும்.

    பரிபாலனம் என்றால் என்ன? பரிபாலனம் என்றால் ‘நிர்வாகம்’, ‘ஆட்சி’ ‘ஆளுகை’ ‘காவல்’ ‘பாதுகாப்பு’(protect)என்று பொருள். உதாரணத்திற்கு: — அரசர் ராஜ்யத்தை நீதி தவறாமல் பரிபாலனம் செய்தார். ஆட்சி பரிபாலனம் என்றால் பாதுகாப்புடன் செய்தல் என்று பொருள். நீதிபரிபாலனம் என்றால் நீதிதவறாமல் ஆட்சிசெய்தல் என்று பொருள். நீதிதவறாமல் ஆட்சி செய்தாலே அது பாதுகாப்பான ஆட்சியாகத்தானே இருக்கும். ‘ராஜ்யபரிபாலனம்’ என்றால் ‘to reign well’ என்று பொருள். ‘இறையின் நீதிபரிபாலனம்’ என்றால் ‘செயலுக்குரிய விளைவை’த் தரக்கூடிய நீதி, நோ்மை உடைய செங்கோலாட்சி இறையால் நடத்தப்படுகின்றது என்று பொருள்.

    இதுவரை தலைப்பிலுள்ள சொற்களான, இறை, நீதி – கூர்தலறம், பரிபாலனம் ஆகியவற்றிற்கான பொருட்களை அறிந்து கொண்டோம். கருமையம் என்பதனை ஏற்கனவே அறிவோம். கருமையம் என்பது மனிதனின் பெருநிதி. மனிதனின் செயலுக்கேற்ற விளைவைத் தரும் தெய்வீக நீதி மன்றம். வங்கியில்(bank) பணம் செலுத்தும் போதும், எடுக்கும் போதும் குறிக்கப்படும் Pass Book ஐப் போன்றது கருமையம். வங்கியில் ஒருவர் செலுத்தும் பணத்தை செலுத்துபவரின் கணக்குப்புத்தகத்தில்(Pass Book) குறிப்பதோடு மட்டுமல்லாது வங்கியின் பதிவேட்டிலும் (ledger) குறிக்கப்படுவதுபோல் வான்காந்தத்திலும் ஒரு தனிமனிதனின் செயல்பதிவுகள் கருமையத்தில் பதிவாவது போல்  பதிவாகின்றது.  கருமையப்பதிவு பற்றியும், வான்காந்தப் பதிவுபற்றியும் எளிதில் புரிந்து கொள்வதற்காக இந்த உதாரணம் எடுத்துக் கொள்ளப்பட்டது,  இதற்கு மேலும் சிந்தனையில் ஆழ்ந்து சென்று, இவ்விரண்டு மறைபொருட்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

    இப்போது ‘பாலங்கள்’ என்கின்ற சொல்லிற்கு வருவோம். பாலம் என்றால் என்ன? இரு பகுதிகளை இணைப்பதற்கானப் பாதை(bridge). செயலுக்குரிய விளைவைத் தருவது இறைநீதி – செயல் விளைவு நீதி. மனிதன் செய்யும் செயல்களுக்குரிய விளைவு இன்பமாகவும் இருக்கலாம், துன்பமாகவும் இருக்கலாம். அது செயலின் தன்மையைப் பொருத்திருக்கும். செயலுக்கான விளைவு கருமையப்பாலங்களின் வழியாகத்தான் வருகின்றன. எவ்வாறெல்லாம் இறை நீதி பரிபாலனம் செய்கின்றதை அறிய கருமையப் பாலங்கள் பற்றிய சிந்தனை உதவியாக இருக்கும். மனிதனின் செயலுக்குரிய விளைவுகள் ஒன்று இன்பமாக இருக்க வேண்டும். அல்லது துன்பமாக இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் கருமையப் பாலங்கள் வழியாகத்தான் (channels) மனிதனை வந்தடைய வேண்டும். கருமையம் நான்கு வகையிலே மனிதனை இணைக்கின்றது. அந்த கருமையப் பாலங்கள் என்னென்ன?

    1) உடலுக்கும் – மனதிற்கும் இடையே உறவாக ( ஒத்த உறவு – co-ordination)
    2) தனிமனிதனுக்கும் – சமுதாயத்திற்கும் இடையே நட்பாக (நட்புநலம்)
    3) மனிதனுக்கும் – பூமி முதலான நவகோள்களுக்கும் இடையே இனிமையாக(இனிமை காத்தல்)
    4) மனிதனுக்கும் – அருட்பேராற்றலுக்கும் இடையே அருட்பாலமாக ( அருளைப் பெறுதல்)

    இவ்வாறாக இணைப்புகளாக, பாலங்களாக அமைந்து மூன்று மறைபொருட்களான, இறை, உயிர், மனம் ஆகியவற்றின் இருப்பிடமாக (Store House) அமைந்ததுதான் கருமையம். இருந்தாலும் மனிதனுள் மற்ற உறுப்புகள் போல் அல்லாமல் கருமையம் மறைந்தே இருப்பதால், இதனை மறைபொருள் என்றும், அதுவும் மகாமறைபொருள் என்றும் கூறலாம். ஏனென்றால் அது ஒரு தெய்வீக நீதிமன்றமல்லவா?

    இந்த நான்கு பாலங்கள் வழியாகத்தான் மனிதனுடைய செயல்களுக்குரிய விளைவுகளான இன்பமோ, துன்பமோ, அமைதியோ, பேரின்பமோ வருகின்றது.

    செயலின் விளைவு துன்பமாக இருந்தால் அச்செயல் பாவம் என்றும், இன்பமாக இருந்தால் அச்செயல் புண்ணியம் என்றும் கூறுகிறோம். பாவப்பதிவுகளின் சின்னம் உடலில் நோய், உள்ளத்தில் களங்கம். உடலைப் பேணிக்காக்காமல் அலட்சியத்தாலோ, அறியாமையாலோ உடலை இயக்கினால் வருவது துன்பமாகிய நோய். உதாரணம் — அதிக உணவு துன்பமாகிய அஜீரணத்தை ஏற்படுத்தும். உள்ளத்தில் களங்கம். களங்கம் என்றால் அவப்பெயர்; ஒழுக்க நடத்தையில் கெட்டப் பெயர். உடலுக்கும் மனதிற்கும் இடையே ஒத்தஉறவு இருக்க வேண்டும். நல்வாழ்விற்கு உடலுக்கும் மனதிற்கும் இணக்கம் வேண்டும்.

    தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே இனிமை காக்க வேண்டும். மனிதன் தனித்து வாழ்வதில்லை. சமுதாயத்தில் இருந்துகொண்டு, சோ்ந்துதான் வாழ்கிறான். அப்போது தனிமனிதனுக்கும் சமுதாயத்திற்கும் சுமுக உறவு இருக்க வேண்டும். வாழ்க்கை வள உயர்வுப் படிகளில் ஒன்றான நட்பு நலம் அவசியம். நட்புநலம் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுகின்றது. காரணம், அவரவர்களின் கருமையப் பதிவுகளே. நட்புநலம் இல்லை எனில் பகை, வெறுப்பு, பிணக்கு ஆகிய துன்பங்கள் உண்டாகும். கருமையப் பதிவுகளுக்கு ஏற்பதான் நட்புநலமிருக்கும்.

    மனிதனுக்கும் கோள்களுக்கும் தொடர்பு உள்ளது. ஒவ்வொரு கோள்களிலிருந்தும் வரும் காந்த அலைகள் மனிதனை வந்தடையும் போது சில மாற்றங்களை உடலிலும், உள்ளத்திலும் ஏற்படுத்துகின்றது. நல்ல கருமையப்பதிவுகள் இருப்பின் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இன்பத்தையும், தீய கருமையப்பதிவுகள் இருப்பின் துன்பங்களையும் ஏற்படுத்தும். இவ்வாறாக மூன்றாவது வழியாக கருமையப்பதிவுகளுக்கு ஏற்ப துன்பமோ அல்லது இன்பமோ வருகின்றன.

    மேற்கூறிய மூன்றின் வழியாக துன்பத்தையோ அல்லது இன்பத்தையோ விளைவுகளாக தருவதோடு மட்டுமல்லாது மனித வாழ்வு சிறப்புற்று வாழ்வாங்கு வாழ்வதற்கு அவசியமான இறையருளைத் தருவதற்கும் நான்காவது இணைப்பை பயன்படுத்திக் கொள்கின்றது கருமையம். கருமையப் பதிவுகளுக்கு ஏற்ப இறையருளுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு தகுந்த குருவை தரிசிக்க வைப்பதுகூட கருமையப்பதிவுகளே. அதனால்தான் குருவை தரிசிப்பதுகூட பூர்வபுண்ணியத்தால்தான் என்பர் பெரியவர்கள். அடுத்த விருந்தில் குருதரிசனத்தையும், அதன் பின்னர் சீடனிடம் ஏற்படும் மாற்ற விளைவுகளையும், முன்னேற்றங்களையும், கருமையம் தன்னிடம் பதிந்துள்ள பதிவுகளுக்கேற்ப, தனது நான்காவது பாலத்தின் வழியாக நிறைவேற்றுவது பற்றி அறிவோம்.  …..தொடரும் 20-05-15.

    Loading

  • இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்’ 2/?

    வாழ்க மனித அறிவு                             வளர்க மனித அறிவு

    இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்’ 2/?

    FFC 82

    13-05-2015—புதன்

     

    சென்ற விருந்தில் கருமையம் ஒரு surveillance camera என்றும் அது மனிதனின் முத்தொழில்களையும் தப்பாது பதிவு செய்து, அதற்குரிய விளைவை அவ்வப்போது தந்து கொண்டிருக்கும் தெய்வீக நீதிமன்றம், என்றும் இறையைப்பற்றி சுருக்கமான விளக்கத்தையும் அறிந்து கொண்டோம்.

    இப்போது ‘நீதி’ என்பது என்ன என்று அறிவோம். நீதி என்பது,
    1) காரணங்களைக் கூறி நடுநிலையோடு வழங்கும் முடிவு,
    2) எது சரி, எது தவறு என்கின்ற ஒழுங்கைக் கூறுவது.
    3) ஒன்றை நெறிப்படுத்துதலையும் குறிக்கும். அதாவது நெறிபடுத்துதல் என்பது மனித ஒழுக்கத்திற்காக மேற்கொள்கின்ற முறை.

    நீதி என்பது என்ன என்று இப்போது அறிந்து கொண்டோம். இறை என்பது என்ன என்று நமக்குத் தெரியும். பேரறிவே இறை; ஒழுங்காற்றலே இறை. ‘இவ்விரண்டு சொற்களின் பொருளைக் கொண்டு இறைநீதி என்பதனை மனிதன் எவ்வாறு சுருக்கமாக ஒரே வாக்கியத்தில் விளங்கிக் கொள்ளலாம் என்றால்: …

    இறைநீதி என்பது, காரணங்களோடு, நடுநிலையோடு இருந்து, எது சரி, எது தவறு என்று ஒழுங்குடன் முடிவெடுக்கின்ற, ஒழுங்கை நெறிப்படுத்தும் திறனாகும்.

    இறை, தன்னுடைய பூரணத்தால்,

    பஞ்சபூதங்களாகி, ஓரறிவிலிருந்து ஐயறிவு உயிரினங்களாகி, கடைசியாக ஆறாம் அறிவுடைய மனிதனாகியுள்ளது. இம்மூன்றையும் இறை எவ்வாறு ஆளுகை செய்ய முடியும்?

    ஒரு உதாரணத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். அலுவலகங்களில் ஒரு புதிய பதவி ஏற்படுத்தப்படும் போது அப்பதவிக்கான கடமையும், பொறுப்பும் (duties and responsibilities) என்ன என்று வரையறுக்கப்படும். அதாவது, அந்தப் பதவியில் அமர்த்தப்படுபவர், தான் செய்ய வேண்டிய கடமையைச் சீராகச் செய்வதற்கு, அவருக்கு அதிகாரமும் இருந்தால்தான், அந்த அதிகாரி திறம்பட, பொறுப்புடன் பணியாற்ற முடியும் என்பதால் அதிகாரமும் வழங்கப்படும்.

    மனித சமுதாயத்தை ஆட்சி செய்ய முறையான ஆட்சியை (conventional Governance) சமுதாயம் அமைத்துக் கொள்வதுபோல், இறைக்கு, அம்மாதிரியான ஆட்சி ஏதும் இல்லை. காரணம் இறைவன் அரூபி. உருவமற்றவன். இருந்தாலும் இறை ஆட்சியை நடத்த வேண்டுமல்லவா?. இப்போது, மகரிஷி அவர்கள் பேரின்பக் களிப்பில் இயற்றிய பாடலின் 48 வரிகளில் இறைவனை ‘ஆட்சியின்றி ஆளுகின்ற ஐயன்’ என்று குறிப்பிடும் வரியினை மட்டும் நினைவு கூர்வோம். (மீதமுள்ள வரிகளை அன்பர்களே வாசித்து இன்புறவும்.)

    post-on13-5-15-FFC-82-பேரின்பக்-களிப்பு

    இறை தானாகவே தன்மாற்றமாகியுள்ள

    அண்ட சராசரங்களையும் நெறி தவறாது இயக்கிக் கொண்டும்,
    உயிரினங்களில் உயிராக, அறிவாக இருந்து இயக்கியும், ஆளவும் செய்கின்றது.

    இதற்குத் தேவையான அதிகாரத்தை யார் அளிப்பது? யாரும் அளிக்க முடியாது? எல்லாவல்ல அதனிடமுள்ள இயல்பானத் தன்மையேதான் அந்த அதிகாரம். இறைநீதி என்பதே அது, எந்த ஒரு செயலுக்கும் (action) ஏற்ற (appropriate) விளைவினைத் (result) தரும் வல்லமை உடையது.

    இதனை இயற்கை நீதி (Law of Nature) என்றும் சொல்கிறோம்.

    செயலுக்கு ஏற்ற விளைவினைத் தருகின்ற செயல் விளைவுத் தத்துவம் என்றும் கூறுகிறோம்.

    ஆதிநிலைப் பொருளான மெய்ப்பொருளுக்கு வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் என்கின்ற நான்கு தன்மைகளையும், தன்மாற்றம், இயல்பூக்கம், கூர்தலறம் என்கின்ற மூன்று திறன்களையும் கூறுகின்றது திருவேதாத்திரியம். இந்த ஏழு சொற்களில் ‘கூர்தலறம்’ என்கின்ற சொல் இறைநீதியை/இயற்கை நீதியை/செயல்விளைவுத் தத்துவத்தை குறிக்கின்றது. ‘கூர்தலறம்’ என்கின்ற இச்சொல் தமிழ் மொழியில் ஏற்கனவே வழக்கில் உள்ள சொல்போல் தெரியவில்லை. புதிதாக, திருவேதாத்திரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்ச்சொல். ‘கூர்தலறம்’ என்பதனை ஆங்கிலத்தில் ‘cause and effect’ என்கின்றது திருவேதாத்திரியம். அதாவது விளைவிற்குக்(effect) காரணம்(cause) இருக்கின்றது என்று கூறும் நியதியை ‘cause and effect’ எனக் கூறாமல் வேறு எவ்வாறு கூறமுடியும்?

    கூர்தலறம் என்றால் என்ன? இறைநீதியை திருவேதாத்திரியம் ‘கூர்தலறம்’ என்பதால் அதற்கான விளக்கத்தையும் அறிந்து கொள்வோம். ‘கூர்தலறம்’ என்கின்ற சொல் தனித்த ஒரே சொல் அல்ல. அதில் ‘கூர்தல்’ மற்றும் ‘அறம்’ என்கின்ற இரு சொற்கள் உள்ளன. ஆகவே ‘கூர்தலறம்’ என்றால் என்ன என்று அறிந்து கொள்ள ‘கூர்தலறம்’ என்கின்ற சொல்லில் உள்ள இருசொற்களான கூர்தல் மற்றும் அறம் என்கின்ற இரு சொற்களின் பொருளையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

    ‘கூர்தல்’ என்கின்ற சொல்லை நம் ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம். ‘கூர்’ என்றால் — ஊசி, கத்தி போன்ற கருவியில் குத்தும் அல்லது வெட்டும் முனையாகும். கூர் என்கின்ற சொல்லுக்கு மேலும் சில பொருளைக் காண்போம். அதுதான் நம் சிந்தனைக்கு உதவ இருக்கின்ற பொருளாக இருக்கும்.  கூர் என்றால், வைத்தல், செலுத்துதல், கொள்ளுதல் என்பது பொருள்.

    உதாரணங்கள்:– அன்பு கூர்ந்து– இறைவன் நம்மீது கருணை கூர்ந்தார்.

    கூர்தல் என்றால் ‘கூர்’–‘கூர்ந்து’ என்கின்ற சொல்லின் பெயர்ச் சொல் வடிவம் கூர்தல்(noun form). கூர்ந்து என்றால் முழுக்கவனத்தையும் செலுத்துவது மற்றும் ‘உற்று’ ‘keenly’, ‘intently’, என்று பொருள். கூர்ந்து என்கின்ற சொல் ‘கவனி’, ‘பார்’, ‘நோக்கு’, ‘கேள்’ ஆகிய வினைச் சொல்லுடன் சோ்த்துச் சொல்லப்படுவது.
    கூர்ந்து கவனி, கூர்ந்துப் பார், கூர்ந்து நோக்கு. கூர்ந்து கேள்.

    ஆகவே கூர்தல் என்றால் என்ன என்று அறிந்து கொள்வோம். ‘நினைவு கொள்வோம்’ என்பதனை சில இடங்களில் ’நினைவு கூர்தல்’ என்கிறோம். ஏன்? ‘நினைவு கொள்வோம்’, ‘நினைவு கூர்தல்’ என்கின்ற இரண்டுமே ‘நினைப்பது’ என்கின்ற வினையைக் குறித்தாலும், இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. நினைவு கொள்வோம் என்பது ஏதோ நினைவிற்கு கொண்டு வருதல் (Just to remember) என்றாகின்றது. ஆனால் ‘நினைவு கூர்தல்’ என்பதில் கூர்தல் என்கின்ற சொல் சேர்ந்துள்ளதால் அச்சொல்லிற்கானப் பொருள் ‘நினைவு’ என்கின்ற வினைக்குச் சிறப்பைக் கூட்டுகின்றது.

    திருவேதாத்திரியத்தின் ஏழாவது மந்திரத்தின் இறுதியில்
    “அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,
    அதனை வாழ்ந்துகாட்டினோர், நினைவு கூா்வாம்”

    என்று முடிக்கிறார் மகரிஷி அவர்கள். நினைவு கொள்வோம் என்று முடித்திருக்கலாம். ஆனால் நினைவு கூர்வோம்(கூர்வாம்) என்று முடித்துள்ளார். இவ்வாறு அவர் முடித்துள்ளது, கூர்தல் என்கின்ற சொல்லின் சிறப்பைக்கருதியே. அவரின் அருட்கவித்துவத்தில் அந்த சொல் எழுத்துவடிவில் மலா்ந்து சிறப்பு பெறுகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். அருளாளர்களை நினைப்பது என்பது ‘Just to remember’ என ஆகி விடக்கூடாது என்று கருதிதான், அருளாளர்களை மரியாதையுடனும், மிகச்சிறப்புடனும் கூர்ந்து நினைவு கொள்ள வேண்டும் என்பதால்தான், ‘கூர்தல்’ என்கின்ற சொல் எழுதப்பட்டு, அந்த மந்திரத்தின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும், பயனையும் எடுத்துக் கூறுகின்றது.

    அறம் என்பது என்ன? ‘கூர்தல்’ என்றால் முழுக்கவனத்தையும், உன்னிப்பாக செலுத்துவது என்று பொருளாகின்றது. கூர்தலறத்தில் உள்ள கூர்தல் என்கின்ற சொல்லிற்கான சிறப்பான பொருளை அறிந்து கொண்டோம். கூர்தலறம் என்கின்ற சொல்லின் மறுபாதியான அறம் என்கின்ற சொல்லின் பொருளையும் அறிந்து கொண்டு கூர்தலறம் என்கின்ற புதிய தமிழ்ச்சொல்லிற்கான புனித அர்த்தத்தை அறிந்து கொள்வோம். இறைவனை அறிய வேண்டுமெனில் அவன் புனிதத்தையெல்லாம் முதலில் அறிய வேண்டுமல்லவா? அப்போதுதான் இறைவன் மீது முழுக்கவனமும், நாட்டமும், ஆர்வமும், இணைப்பும்-பிணைப்பும், அன்பும் ஏற்படும்.

    அறம் என்பது என்ன? அறம் என்பதற்கு பொதுவான பொருள் என்ன? குடும்ப வாழ்வும், பொது வாழ்வும் சீராக இயங்க வேண்டுமானால் ஒருவா் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கக் கண்ணோட்டத்துடன் கூடிய நெறிமுறைகள் அல்லது கடமைகளே(ethical codes). இறையின் மூன்றுத் திறன்களைக் குறிக்கும் சொற்களில் தன்மாற்றம், இயல்பூக்கம், கூா்தலறம் ஆகியவற்றில் மூன்றாவதாக கூர்தலறத்தைக் குறிப்பிடுகின்றார் மகரிஷி அவர்கள்.

    1) ஆதிநிலையாகிய மெய்ப்பொருளே – வெட்ட வெளியே – இறைவெளியே, தன்னிறுக்கத்தால் நொறுங்கி, தானே மாற்றம் அடைந்ததால் அதனைத் ‘தன்மாற்றம்’ என்றும்,
    2) ஒரறிவிலிருந்து ஆறறிவு வரை உயரினங்களாக பரிணமிக்க வைத்த தனது ஊக்கஇயல்பை ‘இயல்பூக்கம்’ என்றும், குறிப்பிடுகின்றார் மகரிஷி அவர்கள்.

    ஆதிநிலையின் முதலிரண்டு திறன்களான தன்மாற்றம் மற்றும் இயல்பூக்கம் மட்டுமே இருந்து, கூர்தலறம் என்பது இல்லாது இருந்து, துகள்களாகி, பஞ்சபூதங்களாகி, பிரபஞ்சமாகி, ஒரறிவிலிருந்து ஆறறிவு வரை உயிரினங்களாகியிருந்தால், இறை எவ்வாறு ஆட்சி நடத்த முடியும்? மூன்றாவது திறனான/தன்மையான கூர்தலறம் இல்லாதிருந்தால் ஆட்சியின்றி ஆளுகின்ற இறையின் ஆட்சி-without conventional Governance (பேரின்பக்களிப்பு – 1984 கவி எண் 1647 வரி எண் 11) எவ்வாறு இருந்திருக்கும் எனக் கற்பனை செய்து பார்ப்போம். இறை ஆட்சியே நடந்திருக்குமா? நீதியில்லாமல் எவ்வாறு ஆட்சி செய்ய முடியும்?

    அடுத்த விருந்தில் கூர்தலறம் என்கின்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டக் காரணத்தையும், கூர்தலறத்தின் நெடிய பயணத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள அப்பயணத்தை மூன்றாகப் பிரித்தும், தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

    தொடரும் 17-05-2015.

    Loading

  • இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்- 1/?

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

    இறையின் நீதிபரிபாலனமும் கருமையப் பாலங்களும்- 1/?

    FFC 81

    10-05-2015—ஞாயிறு

    வாழ்க வளமுடன்!

    இன்றைய அறிவிற்கு விருந்தாக ‘இறையின் நீதிபரிபாலனமும்* கருமையப் பாலங்களும்’ என்கின்ற தலைப்பினை எடுத்துக் கொண்டுள்ளோம். இவ்வரியச் சிந்தனைக்கு நம் குருதேவர் மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அனைத்து அருளாள—அறிவாளிகளும் துணைபுரிவதற்கு, நாம் அவா்களை வணங்கி நினைவு கூர்வோம். * பரிபாலனம் என்பதற்கு ‘ஆளுகை’ (rule, governance), ‘அருளுதல்’ என்பது பொருள். மேலும் இச்சொல்லிற்கான விரிவான பொருளை  அடுத்த விருந்தில் அறிந்து கொள்வோம்.

    முதலில் ஏன் இந்த தலைப்பினை எடுத்துக் கொண்டுள்ளோம் என்பதனை ஆராய்ந்துவிட்டு தலைப்பிற்குள் செல்வோம். மனித மனம் எப்போதுமே ஆதாயத்தை தேடும் இயல்புடையது(Human mind is so calculative). ஆகவே இந்த தலைப்பின் சிந்தனையால் நாம் பெறப்போகும் ஆதாயம் என்ன என்று தெரிந்து கொண்டால் இச்சிந்தனையின் மீது ஆர்வமும், பொறுப்பும் மிகும்.

    என்றும் அழியாத ஆன்மா எடுக்கின்ற பிறவிகளை எண்ணிக்கையைால் குறிப்பிட முடியாது என்பதால், எடுத்தபிறவிகளை, பெருங்கடலோடு ஒப்பிடுகிறார் திருவள்ளுவர். அந்த பெருங்கடலை நீந்துவதற்கு இறைவனடியைச் சேரவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். அதாவது மீண்டும் மீண்டும் பிறப்பதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்கிறார். ஏன்? பிறவியில் இன்பம் மட்டுமே அனுபவிப்பதாக இருந்தால், பிறவி எடுத்துக் கொண்டே இருக்கலாமே என எண்ணலாம். அவ்வாறுதான் இல்லையே!

    இன்பம் மட்டுமே இருக்கும் பட்சத்திலும், அந்த நிலை எப்போதுமே நீடிக்குமா என்றால் அதற்கு என்ன உத்திரவாதம்? யார் உத்திரவாதம் அளிப்பது? உத்திரவாதம் என்பது கருமையப் பதிவுகளைப் பொருத்துத்தான் இருக்கும். இப்போது, கருமையப் பதிவும், தற்போதைய நேரமும்(அதற்கேற்றார்போல் வானில் கோள்களின் சஞ்சரிக்கும் நிலை கருமையப்பதிவுகளுக்கு உகந்ததாக) நன்றாக உள்ளது என்பதால் இன்பமாக இருக்கலாம். கருமையத் தீயப்பதிவு ஆதிக்கத்திற்கு வரும் காலத்தில், அதாவது பொதுவாகச் சொல்லப்படும் மனிதனின் கெட்டநேரத்தில் தீய விளைவுகளே வரும்.

    ஆகையால் எவ்வாறு பணம் எதிர்காலத்தில் தேவையிருக்கின்றதோ தேவையில்லையோ, தேவை வந்தால் செலவழிப்பதற்குச் சேமிக்கின்றோமோ, அதுபோல் புண்ணியத்தையும்(நற்செயல்கள் புரிவதனை) எப்போதும் செயலில் சேர்த்துக் கொண்டே வரவேண்டும். அதாவது ஒரு வேளை எதிர்காலத்தில் தீயப்பதிவுகள் வருவதாக இருந்தால், இது வரை செய்து வந்த புண்ணியப்பதிவுகளால், வருகின்ற தீயப்பதிவுகளின் வினைவிளைவை எதிர்கொள்வதில் சிரமம் இருக்காது. அதாவது இப்போது நம்நேரம் நல்லதாக உள்ளது என்பதற்காக, நல்ல நேரத்திற்கு காரணமாக இருந்த ஒழுக்கத்தை மறந்து விடாமல் தொடர்ந்து ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.

    பிறவி என்பது ஆன்மாவிற்கு பிணியாகும். எனவே பிறவிப் பெருங்கடலை நீந்தியவர்கள், பிறவி என்பது ஆன்மாவிற்கான பிணியாகக் கருதி, அதனை பிறவிப்பிணி என்கின்றனர். மீண்டும் பிறவா வரத்தினை இறைவனிடம் வேண்டுகின்றனர் பக்தியில் சிறந்து விளங்கியவர்கள். பிறக்கும்போது பிணியோடு பிறப்பது என்பது பிறவிப்பிணியிலிருந்து வேறுபட்டது. பிறக்கும்போதே சில குறைபாடுகளுடன் பிறப்பது. கருமையத் தூய்மையின்மையால்தான் ஆன்மாவிற்கு பிறப்பே உண்டாகின்றது. ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கிறார் செல்வந்தராக இருந்து, தெளிவு பெற்று, தன்னிலை அறிந்து “காதருந்த ஊசியும் கடைவழிக்கே வாராது காண்” என்ற எதார்த்தத்தை எடுத்துச்சொன்ன பட்டினத்தார் அவர்கள். ஒருவர் பிறக்கும் போதே பிணியுடன் பிறப்பதும் கருமையத் தூய்மையின்மையால்தான்.

    பிறவியை பெருங்கடல் என்று கூறி அதனை நீந்திக் கடப்பதற்கு இறைவனடியைச் சேரவேண்டும் என்று கூறிய அன்றும், 2046 ஆண்டுகளுக்கு பின்னர், இன்றும் எல்லோராலும் வாழ்க்கையை சிரமின்றியும், துன்பமின்றியும் வாழ முடியவில்லையே!

    இன்று, இந்த 2046 ஆண்டுகளில் வாழ்க்கை நிலை மிகவும் மோசமாகிக் கொண்டுதான் வருகின்றது. அன்று வாழ்ந்த திருவள்ளுவர் இன்று உயிர்த்தெழுந்து வந்தால். ‘133 values வேண்டும் என்று கருதி ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களை எழுதி இரண்டாயிரம் ஆண்டுகள் சென்ற பிறகும், செவிடன் காதில் சங்கு ஊதியதுபோல் அல்லவா மக்கள் எல்லோரும் இருக்கின்றனா்’ எனக்கண்ணீர் விடுவார். ஞானிகள் தோன்றுவது என்பது முடிவில்லாத் தெய்வீகத் தொடர் ஓட்டம் என்பதாலும், திருவள்ளுவரின் அறிவாற்றல் கண்ணீர் விட்டதால்தானோ, வேதாத்திரி என்கின்ற தன்னுடைய சீடரைக் கொண்டு எழுதியதுதான் திருவேதாத்திரியத்தி்ன் 1851 பாடல்களோ?! விஞ்ஞானம் வளர்ந்து வருகின்றது என்றாலும், அதனை நோ்வழியில் பயன்படுத்தும் பண்பாடு வளராமையால், இரண்டு உலகப் போரினைச் சந்தித்துவிட்டது உலகம். இன்னும் பல தொடர் சிக்கல்களையும், துன்பங்களையும் சந்தித்துக் கொண்டுதான் வருகின்றது. மனிதகுலம் தனது பூர்வீகச்சொத்தான இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாகப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டதுபோல், அதே பூர்வீகச்சொத்தின் முதன்மையானதான அமைதியை அனுபவிக்கத் தெரியாமல், இழந்து, தவித்துக் கொண்டு வருகின்றது. இங்கே தனிமனிதனும் துன்பப்படுகிறான்; அதன் ஒட்டு மொத்த விளைவாக சமுதாயத்திலும் துன்பமே நிலவிவருகின்றது. சமுதாயச் சிக்கல்களுக்கும், துன்பங்களுக்கும் காரணம் இயற்கை/இறை நீதியை மதிக்காமையும், விளைவாக, நீதியை மீறினால் தண்டனை உண்டு என்கின்ற பயம் இல்லாமலும் போய்விட்டது சமுதாயத்திற்கு. இது எப்படி இருக்கின்றது என்பதனை இப்போது கவனிப்போம்.

    வேடிக்கைப் பார்த்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்கும் குழந்தை, ஊட்டுகின்ற உணவைச் சாப்பிட அடம் பிடிக்கும். அக்குழந்தைகளை உண்ணவைப்பதற்கு பல யுக்திகளைக் கையாள்வர் அன்னையர்கள். அதில் ஒன்று குழந்தையைப் போலியாக அச்சமூட்டி உணவை உண்ணவைப்பது. அச்சமூட்டுவது அன்னையர்களின் நோக்கமன்று. ‘இரண்டு கண்ணன் வருகிறான். சாப்பிடவில்லை என்றால் உன்னைப் பிடித்துக் கொண்டு போய்விடுவான்’ என்று கூறி அச்சமூட்டி உணவைச் சாப்பிடச் செய்வர். உண்மையில் எல்லோருமே இரண்டு கண்ணன்கள்தான். தந்தையே இரண்டு கண்ணன்தான். அச்சமூட்டும் தாயும் இரண்டு கண்கள் உடையவளே.

    குழந்தை ஏன் இரண்டு கண்ணனுக்கு பயப்படவேண்டும்? குழந்தை இதனை அறியாதது என்பதால், இரண்டு கண்ணன் என்று ஏதோ ஒன்றைக் கூறி அச்சமூட்டி உணவை உண்ண வைக்கின்றனர். (பின்னாளில் உண்மை தெரிந்த பிறகு அக்குழந்தை இரண்டு கண்ணனுக்குப் பயப்படுவதில்லை). ‘இரண்டு கண்ணன் வந்து பிடித்துக் கொண்டு போய்விடுவான்’ என்று குழந்தையை போலியாக அச்சமூட்டுவது போலன்று ‘மனிதனின் நல்வாழ்விற்கு மனத்தூய்மையும், ஆன்ம தூய்மையும்(கருமையத்தூய்மை) அவசியம்’ என்று ஆன்மீக நூல்கள் அறிவுறுத்துவது. ஆன்மீகப் பெரியவர்கள் நம்மை ஏன் அச்சுறுத்த வேண்டும்? இருக்கின்ற உண்மையைக் கூறுகின்றனர். அது பொய்யாக அச்சமூட்டுவது போல் தெரியும். அதனால்தான் எவ்வளவோ அருளாளர்கள் அறிவுரைகள் கூறியும், அறநூல்கள் எழுதியும்கூட மனிதன் மனத்தூய்மையிலும் கருமையத்தூய்மையிலும் அக்கறை செலுத்துவது இல்லை. ஆகவே இரண்டு கண்ணன் இருப்பது உண்மைபோல் கருமையம் இருப்பதும் உண்மை. கருமையம் பொது இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை படம்பிடிக்கும் ஒரு கண்காணிப்பு கேமரா(surveillance camera) போன்றது. அது மனிதனுடைய எல்லாச்செயல்களையும் நொடிநேரம் கூட தவறாமல் பதிவு செய்து கொண்டே வந்து, தக்க தருணம் வரும்போது விளைவுகளை இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ தந்து கொண்டிருக்கின்றது என்பது உண்மையிலும் உண்மை.

    ஆகவே

    தனி மனித துன்பத்திற்கான காரணத்தை அறிந்து,
    துன்பங்களாக வருகின்ற பாதையை (உண்மையை) அறிந்தால்
    இனிமேலாவது துன்பங்கள் வாராதவாறு செயல்கள் புரியவும்,
    ஏற்கனவே குறைந்த பட்சம் ஏழ் பிறவிகளில் – தலைமுறைகளில் செய்த செயல்களின் விளைவாக வரும் துன்பங்களை எதிர்கொள்ளும் பக்குவத்தைப் பெறவும்,
    புனர்ஜென்ம வாழ்க்கையை (புதியமாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்) வாழ்வதற்கு,
    மன தைரியத்தையும், திண்மையையும் பெற சங்கல்பம் செய்து கொள்வோம்.

    முதலில் தலைப்பிலுள்ள வார்த்தை விளக்கம் காண்போம். தலைப்பில் நான்கு வார்த்தைகள் உள்ளன.

    1) இறை
    2) நீதிபரிபாலனம்
    3) கருமையம்
    4) பாலங்கள்

    இறை என்பது என்ன? முதலில் இறை என்பது என்ன என்று அறிந்து கொள்வோம். ஏற்கனவே இறையைப்பற்றி விரிவாக அறிந்திருந்தாலும் இப்போது மீண்டும், இறைக்கான சுருக்கமான விளக்கத்தை அறிந்து கொள்வோம்.
    பஞ்சபூதங்களுக்கு மூலமான துகள்கள் தோன்றா முன்னர் இருந்த ஆதிநிலை ஆற்றல்(வெளி) எங்கும் எதிலும் இறைந்து கிடப்பதால் இறை என்கின்ற காரணப் பெயரால் அழைக்கப்படுகின்றது. ஆகவேதான் இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் எனப்படுகின்றான்.

    இந்த ஆற்றல் அறிவாகவும் உள்ளது. அறிவு இல்லாத எந்தப் பொருளும் இல்லை. அதாவது உயிரற்ற சடப்பொருட்களிலும் அறிவு உள்ளது. கேட்பதற்கே நம்ப முடியாமல் இருக்கலாம். இந்த ஐயம் நம் மகரிஷி அவர்களுக்கும் ஆரம்பத்தில் இருந்திருக்கின்றது. பிறகு இறை, ஐயத்தைத் தெளிவாக்கியதை, நமக்காக உள்ளம் கசிந்து கூறும் பாடல் வரிகளை இங்கே நினைவு கூர்வோம். அறிவு என்றால் அது உயிரினங்களில் தானே இருக்கும் என நினைக்கலாம். ஆம் அறிவு உயிரினங்களில் இருக்கின்றது என்பது உண்மைதான். எனினும்

    ” உணர்ச்சியாய்ச் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று,
    உணர்ந்திருந்தேன் பலநாள்; மேலும் உண்மை விளங்க
    உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும்
    உனது திருநிலையும் அறிவே என உணர்ந்தேன்”

    என்று நம்குருதேவர் உள்ளம் கசிந்து கூறுவதனை இங்கே நினைவு கூர்வோம். அறிவு என்றிருந்தால் அதற்கு உணர்ச்சி உண்டு. அதற்கு மேலும் மனிதனிடம் சிந்திக்கின்றது. அவ்வாறு அறிவிற்கு இலக்கணம் வகுத்துள்ள மனிதனுக்கு, உயிரற்ற சடப்போருட்களிலும் அறிவு இருக்கின்றது என்பது ஐயத்தையும், ஆச்சரியத்தையும் கொடுக்கும்தானே!

    அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற மனிதகுலத்தை அன்பு கூர்ந்து அழைக்கும் நம்குருதேவருக்கும் இது ஆரம்பத்தில் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கின்றது. மகரிஷி அவர்கள் சிந்தனை மூச்சுடையவர் — இடைவிடாத் தொடர் சிந்தனையாளர் என்பதால், பேரறிவே ஒரு புண்ணிய நாளில் “தூணிலும், துரும்பிலும் இருப்பதாக உங்களால் பறைசாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற பேரறிவாகிய நான், உயிரினங்களாவதற்கு (உணர்ச்சிக்கும்) முன்னர், உயிரற்ற சடப்பொருட்களிலும் நான் இருந்தால்தானே உங்களின் பறைசாற்றுதல் உண்மையாக இருக்க முடியும் என்று விளக்கி, உணர்ச்சிக்கு முன்னர் விண்ணில் நான் ஒழுங்காற்றலாய் இருந்து கொண்டு முறைபடுத்திக் கொண்டிருக்கின்றேனே” என்று பிரகடனப்படுத்தியுள்ளது. In the Year 1984 AD(கி.பி) i.e. 73 AV(வே.பி)(1984-1911=73AV), Almighty Himself have declared to whole humanity through Shri Vethathri Maharishi that — “ I am present and working as order of Function in non-living beings also”

    உயிரினம் என்பது என்ன? முதல் உயிரினம் உயிரற்ற சடப்பொருட்களான பஞ்சபூதங்களின் கூட்டுக்கலவையினால் உருவாகியது. பஞ்சபூதக்கூட்டுக் கலவையால் உருவாகிய உயிரையும், அறிவையும் கொண்ட உயிரினத்திற்கு உயிரும், அறிவும் எங்கிருந்து வந்தன? உயிரினத்திற்கு உடலும், உயிரும் உண்டு. உடல் பஞ்சபூதக்கூட்டுக்கலவையினால் வந்தது என்றால் புலன்களுக்குப் புலப்படாத உயிர் எங்கிருந்து வந்தது? பஞ்சபூதங்களைத் தவிர உயிர் என்று தனியாக உள்ளதா? அப்படியில்லையே! உயிரற்ற சடப்பொருளான பஞ்சபூதங்களில் இருந்துதான் வந்துள்ளது உயிர். பஞ்சபூதங்களில் முதலில் உருவாகிய, புலன்களுக்குப் புலப்படாத விண் அந்த பஞ்சபூதக் கூட்டுக்கலவையில் தனித்து ஓடுவதே உயிர். அதனால் தான் உயிர் புலன்களுக்குத் தெரிவதில்லை.

    உணரக்கூடிய உயிர் வந்து விட்டாலே அறிவும் அங்கு இருக்கும். ஆகவே உயிரும் அறிவும் சடப்பொருளாக இருந்த விண்ணிலிருந்துதான் வந்துள்ளன. ஆகவே சடப்பொருட்களில் அறிவு இருக்கின்றது. விண்ணில் மட்டுமே இல்லை அறிவு; மற்ற நான்கு பூதங்களிலும் உள்ளது அறிவு. பஞ்சபூதக்கூட்டுச் சேர்க்கையாலானது சடப்பொருள். தன் கூட்டுச்சேர்க்கையான நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கும் இயக்குனராக (the Great Director of all directors) அறிவு, ஒழுங்காற்றல் பணியை நடத்திக் கொண்டிருக்கின்றது. அடுத்த விருந்தில் இறைநீதி என்பது என்ன, இறைஆற்றலின் மூன்றாவது திறனான ஒன்றிற்கு ஏன் கூர்தலறம் எனப் பெயரிட்டுள்ளார் நம் குருதேவர் என்பதனையும் அறிவோம்.

    தொடரும் 13-05-2015 புதன்  

    Loading