FFC-283-மனவளம் என்றால் என்ன?

வாழ்க மனித அறிவு                        வளர்க மனித அறிவு

lotus

மனவளம் என்றால் என்ன?

FFC-283

14-03-2018-புதன்.

உ.ச.ஆ.14-03-33.

வாழ்க வளமுடன்!

வளம் என்பது என்ன என்று தெரியும். இருப்பினும் வளம் என்பதன் பொருளை நினைவுபடுத்திக் கொள்வோம்.

வளம் என்றால்

  • நிறைவு,
  • செழுமை,
  • மேம்பட்ட நிலை,
  • வளர்ச்சி அல்லது சிறந்த பயனைத் தரக்கூடிய அம்சங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ள தன்மை என்பதாகும்.

வளம் என்கின்ற சொல்லுக்கு மேற்கண்ட நான்கு அர்த்தங்களைக்கொள்ளமுடியும். இத்தகைய ‘வளம்’ என்கின்ற சொல் வேறு சொல்லுடன் சேரும் போது என்ன பொருள் வருகின்றது என அறிவோம். உதாரணத்திற்கு ‘வளம்’ என்கின்ற சொல் ‘மண்’ என்கின்ற சொல்லுடன் சேரும்போது என்ன பொருள் வரும்?

அதாவது ‘மண்வளம்’ என்கின்ற சொல்லிற்கு என்ன பொருள்? பயிரிடப்படுகின்ற பயிருக்கு மண் உகந்ததாக இருந்து நல்ல விளைச்சலைக் கொடுத்தால், அம்மண் வளமாக இருக்கின்றது என்போம்.

மண்வளமாக இருந்தால் அதில் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும். பயிருக்கு ஏற்றதாக உள்ளதா என விவசாயத்தில் மண் பரிசோதனை செய்யப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட பயிருக்கு மண் ஏற்றதாக இல்லை என்றால், விஞ்ஞானத்தின் துணைகொண்டு என்ன குறைபாடு உள்ளது என்று எடுத்துரைத்து பயிருக்கு ஏற்றவாறு மண்வளத்தை அதிகரிக்க என்ன உரம் இட வேண்டும் என்று அறிவுரை வழங்குகின்றது விவசாயத்துறை. இல்லையெனில் பயிர் விளைச்சல் குறைவாகலாம். அல்லது பயிர் விளைச்சலில் குறைகள் இருக்கலாம். விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அக்காலத்தில் இது சாத்தியமில்லை.

வளம் என்றால் என்ன என்று பார்த்தோம். தலைப்பில் ‘மனவளம்’ என்றிருக்கின்றது. மனதைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும். மனம் உருவமற்றது. ஆனால் இல்லை என்று கூறமுடியாது. மனம் என்பது என்ன என்று தெரிந்தால் தான்,

  • மனம் வளமாக உள்ளதா, இல்லையா,
  • மனம் வளமில்லாமல் இருந்தால் என்ன தீமை மனிதனுக்கு,
  • மனம் வளமில்லாமல் இருந்தால் மனதை எவ்வாறு வளப்படுத்துவது,
  • மனதை வளப்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்,
  • மனதை வளப்படுத்தியே ஆக வேண்டுமா,
  • மண்ணை பரிசோதித்து வளமில்லாது இருந்தால், அதற்கு ஏற்ற பரிந்துரைகள் விவசாயத்துறை வல்லுனர்கள் அளிப்பதுபோன்று
  • மனவளம் இல்லாமல் இருந்தால் அதனை யார் பரிசோதித்து பரிந்துரைகள் வழங்குவது போன்ற ஐயங்களுக்குத் தீர்வு காணமுடியும்.

FFC-264-5-11-17-Maharishi takin claass

மனம் என்பது பற்றி அறிவுப்பூர்வமாக திருவேதாத்திரியம் தெரிவிக்கின்றது. வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனதை பற்றி தமிழிலும், ஆங்கிலத்திலும் நூல் அருளியுள்ளார். ஒரு முறை ஆங்கிலத்தில் திருவான்மீயூரில் சிறப்பு பயிற்சி நடத்தும் போது மகரிஷி அவர்கள் கூறியதை நினைவிற்கொள்வோம். தன்முனைப்பின் அறிவியலை (Science of Ego) ஏற்படுத்தியுள்ள மகரிஷி அவர்கள்,

I am not telling out of Ego. Nobody else except myself has given explanation about mind” என்றார்.

நம் குருநாதர் சொல்வது உண்மைதானே! அத்தகைய பெருமைக்குரியவரை நாம் குருநாதராக அடைந்தது நாம் செய்த பாக்கியமன்றோ?!. காரணம், துன்பங்களுக்கு ஆணிவேரான தன்முனைப்பிற்கான(Ego) அறிவியலைத் தந்து நம்மை துன்பங்களிலிருந்து விடுவிக்க தன்முனைப்பைக்களைய தக்க அறிவுரைகளும் பயிற்சிகளும் தந்துள்ளாரே மகரிஷி அவர்கள்.

மனம் என்பது என்ன என்று மகரிஷி அவர்கள் என்ன கூறுகிறார்?

  • உயிரின் படர்க்கை நிலையே மனம்.
  • மனதின் மறுமுனை தெய்வம். (The other end of mind is God.)
  • மனம் என்பது காந்த அலை.

மேலே கூறியுள்ளவை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

மற்றொரு அறிஞர் கூறுவதனைக் கவனிப்போம்.

Untitled

இக்கூற்றில் அறிஞரின்  ஆதங்கம் தெரிகின்றது. மனதைப் பற்றி புதிராக உள்ளது. இக்கூற்றிலிருந்து எது மனமாக உள்ளது என அறிய முடிகின்றதா? மனவளக்கலைஞர்களால் அறிய முடிகின்றது. அறிவதுமட்டுமல்லாமல் புதிரும் விடுவிக்ப்படுகின்றது. என்ன அறிய முடிகின்றது? மனவளக்கலைஞர்கள் மனதை பற்றி அறிந்தவர்கள் என்பதால் எது மனமாக இருக்கின்றது என்பதனை அறிய முடிகின்றது. ஆகவே புதிரும் விடுவிக்கப்படுகின்றது.

‘I am not telling out of Ego. Nobody else except myself has given explanation about mind’ என்று நம்முடைய குருநாதர் கூறியதிலிருந்து அவரின் திறமையை, சிறப்பை அறிந்து மகிழ முடிகின்றது. அவரது மாணவர்களுக்கும் அது பொருந்துவதாக அமைகின்றதல்லவா?

எவ்வாறு?

‘பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்’ என்பதுபோல் நாம் அவருடைய பூரண, முழுமனது கொண்ட மாணவர்களாக (implicit obedient students) இருப்பதால் நாமும் அவரைப்போன்றே மனதைப் பற்றி அறிந்துகொண்டது முதலில் பெருமையும், அதனோடு இணைந்துள்ள பயனையும் தருகின்றதல்லவா? புதிர் எவ்வாறு விடுவிக்கப்படுகின்றது என்று பார்ப்போம்.

புதிர் விடுவிக்கப்படுகின்றது:

‘இறையே மனமாக இருந்தாலும், மனம் இறைவனாக இல்லையே!’ என்பதுதான் புதிர் அவிழ்ந்த பிறகு வெளிப்படையாகவே தெரிகின்றது மனதிற்கான வரையறை. இந்நிலைக்கான காரணத்தையும் மனவளக்கலைஞர்கள் அறிவரே! என்ன காரணம்? மனிதனாக தன்மாற்றம் அடைந்தபோது ஏற்பட்ட பரிணாமக் கசடான(Evolutionary Effluent) விலங்கினப்பண்பே, இறையே மனமாக இருந்தும் மனம் இறையாக இல்லாமல் செயல்படுவதற்குக் காரணம். இதற்கு வழியே இல்லையா? ஏன் இல்லை? வழி இருந்ததால்தான் இன்று நம் சத்சங்கத்தில் இது பற்றி சிந்திக்கிறோம். 1911 க்குப் பிறகு வழி பிறந்துவிட்டது. இதற்கு வழி மனதை வளப்படுத்தும் கலையாகிய மனவளக்கலையேயாகும்.

வேறொரு அறிஞர் கூறுவது:-

Untitled-2

வளம் என்கின்ற சொல்லின் பொருளுக்கேற்ப வளமுடைய மனம் எவ்வாறிருக்க வேண்டும்? மனதில் குற்றம் இல்லாதவனாக இருத்தலே அறமாகும் என்கிறார் திருவள்ளுவர்.

ஆகவே மனம்,

நிறைவுடையதாகவும், 

மேம்பட்ட நிலையிலும், 

வளர்ச்சி அல்லது சிறந்த பயனைத் தரக்கூடிய அம்சங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

மனம்போல் வாழ்வு எனப்படுகின்றது, மண் வளமாக இருந்தால் எப்படி பயிர் நன்கு வளர்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்குமோ, அது போன்று மனம் வளமாக இருந்தால் வாழ்வும் வளமுடையதாகவும் இருக்கும். மனவளத்திற்கு என்ன இலக்கணம்? மனம் தூய்மை உடையதாக இருக்க வேண்டும். தூய்மையான மனம் எவ்வாறிருக்க வேண்டும்?

  • எண்ணமே வாழ்க்கையின் சிற்பி என்பதால் நல்ல எண்ணங்களையே எண்ணுவதாக இருத்தல் வேண்டும்.
  • பேராசை பெரும் நஷ்டம் என்பதால் ஆசையை சீரமைக்க வேண்டும்.
  • கோபமே பாவங்களுக்கெல்லாம் தலையாயது என்பதால் வளமுடைய மனம் சினத்தைத் தவிர்க்க
  • வேண்டும்.
  • வளமுடைய மனதில் கவலை இருக்கக் கூடாது.
  • ஆறாம் அறிவுடைய மனமாக இருப்பதால் தான் யார் என்கின்ற அறிவு இருக்க வேண்டும்.

இந்த ஐந்தும் இல்லாத மனம் வளமுடையது என்று சொல்ல முடியுமா? முடியாது. இதனை ஆராய்ந்த மகரிஷி அவர்கள் மனதை வளப்படுத்த உளப்பயிற்சியினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

அப்பயிற்சியே தவமும், தற்சோதனையும் ஆகும்.

கூடா ஒழுக்கம் என்கின்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் அருளியுள்ள

மழித்தலும், நீட்டலும் வேண்டா உலகம்,
பழித்தது ஒழித்து விடின்.”

என்கின்ற கடைசிக் குறளையும்,
அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் உள்ள

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல்;அனைத்துஅறன்
ஆகுல நீல பிற.”

என்கின்ற குறளையும் மனதில் கொண்டு மனவளக்கலை பயில்வோம். மனதை வளமாக்கி, இதமாக வைத்துக்கொண்டு வாழ்வாங்கு வாழ்வோம்.

வாழ்க மனவளக்கலை!   வளர்க மனவளக்கலை!!

வாழ்க அறிவுச் செல்வம்!                                       வளர்க அறிவுச் செல்வம்!!

வாழ்க மனித அறிவு!                           வளர்க மனித அறிவு!!


அறிவிப்பு

                                      14-03-2018-புதன்

அன்பர்களே!

     வாழ்க வளமுடன்!

இனி வாரந்தோறும் 20-03-2018 முதல் செவ்வாய்க்கிழமைகளில் சிந்திக்கக் கவிகள் பயிற்சி பதிவேற்றம் செய்யப்படும்.

சிந்திக்கக் கவிகள் பயிற்சி பகுதியினை பயன் படுத்தி மகிழ்வுற்று, தங்களின் சிந்தனை ஆற்றலை வளர்த்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றது.

தங்களின் மேலான கருத்துக்களைத் இணைய தளத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

வாழ்க வளமுடன்!

www.posperspiritually.com

 வாழ்க அறிவுச் செல்வம்!                                                          வளர்க அறிவுச் செல்வம்!!