October 2014

Monthly Archives

  • இப்பயிற்சியின் நோக்கம்

    குறிப்பு: முகப்பிலுள்ள இப்பயிற்சியின் நோக்கத்தை வாசிக்காதவர்களின் வசதிக்காக, இப்பயிற்சிக்குள் செல்லும் முன் இப்பயிற்சியின் நோக்கத்தை அறிந்து விட்டு பயிற்சிக்குள் செல்வதற்காக மீண்டும் இப்பயிற்சியின் நோக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் நோக்கத்தை முகப்பில் வாசித்தவர்கள் நேரிடையாக பயிற்சிக்குள் செல்லலாம். வாழ்க வளமுடன்.

    இப்பயிற்சியின் நோக்கம்

    அறிஞர்கள் மொழிந்தது அமுத மொழிகள். அதனை ஏன் அமுத மொழிகள் என நாம் கூறுகிறோம்?
    அமுதம் என்கின்ற சொல்லுக்ககு என்ன பொருள்? அமுதம்(அமிர்தம்) என்றால் இனிமை, நிரந்தரமானது என்று பொருள். புராணத்தில் சாகாமையைத் தரக்கூடிய தேவர் உணவு(ambrosia) என்கின்ற பொருளும் உண்டு, ஆங்கிலத்திலே ‘delicious’ என்று பொருள்.

    வெயில் நேரத்தில் மோர் அமிர்தமாய் இருந்தது என்கிறோம். வெயில் நேரத்தில் தாகம் அதிகமாக இருக்கும். அப்போது தாகம் தீர்வதற்கு நீர் கிடைத்தாலே போதுமானது. ஆனால் மோர் கிடைத்ததால் இரண்டு இன்பங்கள் கிடைக்கின்றது. ஒன்று தாகம் தீர்கின்றது. மற்றொன்று நாவிற்கு சுவை உணர்வு கிட்டுகின்றது. உணவாகவும் அமைந்தது. நீரை அருந்தியிருந்தால், நீரை அமிர்தமாக இருந்தது என்று சொல்வதில்லை. தாகம் தனிய நீருக்குப் பதிலாக மோரை அருந்தியதால் கூடுதலாக இன்னொரு சுவை இன்பம் கிடைத்ததால் மோரை அமிர்தமாக இருந்தது என்கின்றது அறிவு.

    இதிலிருந்து அமுதம் என்கின்ற சொல்லின் பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி உணர்ந்து கொண்டால் அறிஞர்களின் மொழிகள் எவ்வாறு அமுதமாக இருந்து பயன் அளிக்கும் என்பது தெளிவாகும். தெளிவானால் அறிவு அறிஞர்களின் மொழிகளைக் கேட்பதற்கு விழையும். விழைந்தால் அதுபோல் அறிவு தன்னைத் திருத்திக் கொண்டு தரத்தில் உயரும். இருட்டில் இருந்த அறிவு ஒளியை வீசும். அறிவொளியாகத் திகழும்.

    வயிற்றுப் பசிக்கு உணவு உட்கொள்கிறோம். உணவு சுவையாக இருந்தால் அதனை அமிர்தமாக (food is delicious) இருந்தது என்கிறோம். அறிவுப்பசிக்கு எது உணவு? அறிவு தன்னை உணர்ந்து கொள்ள ஆவலாக உள்ளது. அந்த ஆவலை நிறைவேற்றுவதுதான் அதற்கான உணவு. ஆகவே அறிஞர்களின் சிந்தனைகள் அறிவிற்கு அமுதமாக இருக்கும்.

    வயிற்றிற்கான உணவு அமிர்தமாக இருந்தாலும் உண்ட பிறகு அது அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்தில் அது மலமாகி வெளியேறிவிடும். ஆனால் அறிஞர்களின் அமுத மொழிகள் அறிவிற்கு என்றென்றும் அமுதமாக கருமையத்தில் பதிந்து தங்கிவிடும். ஞானிகளின் சிந்தனைகள் கருமையத்தில் பதிந்து தரமாற்றத்தை ஏற்படுத்தும். கருத்தொடராக வம்சாவளிக்கும் உதவும். இன்றைய இளைஞர்களுக்கு ஒழுக்க நெறிகளை கற்பிக்கும். மன தைரியத்தை ஊட்டும். நம்பிக்கையை வளர்க்கும்.
    எப்படி புராணத்தில் அமுதம் தேவர்களுக்கு சாகாமையை தருமோ, அதுபோல் ஞானிகளின் அமுத மொழிகள் (எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும் தப்பாது குரு உயர்வு தரத்தில் உயர்த்தி பிறவிப்பனை நல்கும் என்று வேதாத்திரி மகாரிஷி அவா்கள் மொழிவது போல் ) சாகாமையைத் தரும் அறிஞர்களின் மொழிகள், அறிஞர்களின் மொழிகளின் பயன்களைப் பட்டியலிட்டுப் பார்ப்போம்.

    • அறிவிற்கு இனிமையாக இருக்கும்.
    • வாழ்வியலைப்பற்றிய உண்மைகளைக் கூறும்.
    • பல பிரச்சனைகளுக்கு ஆறுதல்களைத் தருவதாக இருக்கும்.
    • அறிவுப் பசியைத் தீர்ப்பதாக இருக்கும்.
    • ஆறாவது அறிவிற்கு செறிவூட்டுவதாக இருக்கும்.
    • ஞானிகளின் சிந்தனைகள் அஞ்ஞானிகளையும் சிந்திக்கச் செய்யும்.
    • ஞானிகளின் சிந்தனைகள் கருமையத்தில் பதிந்து தரமாற்றத்தை ஏற்படுத்தும்.
    • கருத்தொடராக வம்சாவளிக்கும் உதவும்.
    • இன்றைய இளைஞர்களுக்கு ஒழுக்க நெறிகளை கற்பிக்கும்.
    • மன தைரியத்தை ஊட்டும்.
    • நம்பிக்கையை வளர்க்கும்.

    பத்திற்கு மேற்பட்ட இவ்வளவு பயன்களையும் அறிஞர்களின் மொழிகள் தருவதால் ஏன் அவற்றை அமுதம் என அழைக்கக் கூடாதா? அமுத மொழிகள் என்று பெயரளவில் சொல்கிறோமே தவிர அறிஞர்களின் மொழிகளை அமுதமாக உண்பதில்லை. பாராமுக .இருக்கிறோம். காரணம் அவற்றின் பயனை அறியவில்லை.

    இப்போது பட்டியலிட்டுள்ளோம். எனவே இந்தப் பட்டியலை நினைவில் கொண்டு இனிமேலாவது அறிஞர்களின் மொழிகளை அமுதமாக அருந்துவோம். அறிஞர்களின் மொழிகளை அப்படியே விழுங்காமல் அது அமுதமாக இருப்பதால் அதனை அசை போடுங்கள். சுவையாக இருக்கும். இந்த வாழ்வியல் உண்மை நமக்கு இதுவரை தொரிந்திராமல் இருந்ததே என நினைத்துப் பாருங்கள். அறிஞர்களின் மொழிகள் அமுதமாகவே இருக்கும். சலிப்பே இராது, நாளடைவில் நீங்களும் உங்கள் பங்கிற்கு அமுத மொழிகளை இந்த சமுதாயத்திற்கு தர வல்லவா்களாவீர்கள். வாழ்க வளமுடன்.

    பயிற்சிக்குள் செல்வோம்

    சிந்திக்க அமுத மொழிகள்

    1) ஒரு மனிதன் நற்பண்போடு வாழ்வில் சிறந்து விளங்கினால் உலகிற்கு ஆயிரமாயிரம் மக்களுக்கு நலம் விளைவிக்கும் பெரு நிதியாகத் திகழ்சிறான்.

    ….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    2) எல்லா மனிதர்களிடத்தும் இறைவன் இருக்கிறான். ஆனால் கடவுளிடத்தில் எல்லா மனிதர்களும் இல்லை. இதுதான் அவர்கள் துன்பப்படுவதற்குக் காரணம்.

    ….. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

    3) ஆன்மீகம் நமக்கு சோறு போன்றது. மற்றவை எல்லாம் கறி> கூட்டுப் போலத்தான்.

    ….. சுவாமி விவேகானந்தர்

    4) ஆன்மா தன்னுடன் பேசிக் கொள்வதுதான் சிந்தனை.

    ….. பிளேட்டோ

    5) ஒழுக்கமாக வாழ்வதே இன்பத்திற்கான வழிமுறை. ஒழுக்கமே எல்லா நல்ல வழிகளையும் நமக்காக திறந்து விடும் சக்தி கொண்டது.

    ….. அரவிந்தர்.

  • அறிவுத் திருக்கோயில்(நேற்றையத் தொடர்ச்சி)

    29-10-2014

    (Temple of Consciousness)

    ஆலயத்தில் ஆன்மா லயமாக வேண்டும் என்று காலை விருந்தில் பார்த்தோம். அப்டியானால் ஆன்மா எதனுடன் லயமாக வேண்டும் என்று இப்போது தெரிந்து கொள்ள இருக்கிறோம்.. அதற்கு உயிர், ஆன்மா, மனம், அறிவைப்பற்றியும் சிறிதளவிலாவது புரிதல் அவசியமாகின்றது மனவளக்கலைஞர்கள் அல்லாத பிற அன்பர்களுக்கு. அப்போதுதான் இன்றையச் சிந்தனையான அறிவுத் திருக்கோயில் பற்றி தெரிந்து கொள்வது எளிதாக இருக்கும். உயிர் என்பது ஆற்றல். எனவே உயிர் கண்களுக்குப் புலப்படாது. ஆனால் அகத்தவப் பயிற்சியாளர்கள் தங்களது அறிவால் உயிரை உணர்ந்துள்ளனர். உயிரை உணரமுடியுமே தவிர அதனை கண்களால் பார்க்க முடியாது.

    அதனை ஆன்மா என்றும் சொல்வதும் உண்டு. உயிரினம் என்பதற்கு சாட்சி உணர்வு. உணர்வதற்கு வேண்டியது அறிவு. அறிவு இல்லாமல் உணரமுடியாது. ஆகவே அறிவு என்பது உணர்வதற்குக் காரணமானது. அறிவு எங்கிருக்கின்றது? உயிர் இருக்கும் வரைதான் உணர்வு உண்டு. உயிர் உடலைவிட்டு வெளியேறிவிட்;டால் உணர்வு இல்லை. ஆகவே உயிர் வெளியேறும்;;;;;;;போது அறிவும் வெளியேறிவிடுகின்றது. இந்த நிகழ்விலிருந்து அறிவு உயிரிலேயே இருக்கின்றது என்கின்ற முடிவுக்கு வரலாம்.

    அறிவுதான் உணர்கின்றது என்றாலும் அது நேரிடையாக உணர்வதில்லை. இயற்கையாகிய அறிவு, மனம் என்கின்ற self made mechanism – ஐ ஏற்படுத்திக் கொண்டு அதன் வாயிலாக அறிவு உணர்கின்ற செயலை நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆகவே உயிர் உடலுக்குள் இருந்து கொண்டு தனது காந்த அலை ஆற்றலை புலன்கள் வழியாக வெளியே புறப்பொருட்கள் மீது செலுத்தி(படர்க்கை எய்தி— extended activity) உணர்கின்ற நிகழ்வுதான் மனம் எனப்படுகின்றது. அதாவது உயிரின் படர்க்கை நிலைதான் மனம்.

     உயிர் இயக்கமில்லாது உயிராகவும் இருக்க முடியும். அல்லது உயிர் படர்க்கை எய்தி மனமாகவும் இயங்கலாம். அப்போதுதான் எண்ணங்கள் வருகின்றன மனதிற்கு. மனதில் பல எண்ணங்கள் தொடர்ந்கது வரும் போது மனம் அலைகின்றது என்று பொருள். ஆகவே ஆன்மா லயமாக வேண்டுமென்றால், ஒன்றுபட வேண்டுமென்றால், அலைகின்ற மனம் அது பிறக்கும் இடமாகிய உயிரில் ஒன்றுபடவேண்டும்.
    ஆகவே ஆலயத்தில் ஆன்மா லயம் ஆகவேண்டுமென்றால் என்றால் வெளியே செல்லும் மனதை உள்முகமாகத் திருப்பி செலுத்துதல் வேண்டும். அதற்குத்தான் ஆலயத்தில் சில பக்தர்கள் கடவுள் சிலையைப் பார்த்து வணங்கிவிட்டு சிறிது நேரம் கண்களை மூடி மனதை உள்ளே செலுத்தி அந்த சிலையை மனதில் இருத்தி தியானம் செய்வதை வழக்கமான கொண்டுள்ளனர். சில ஆலயங்களில் தியான அறைகளும் இப்பொழுது உள்ளன.

    ஆலயத்தில் சிலைவணக்கம் செய்தாலும் அவர்களும் அறிவைத்தான் வணங்குகின்றனர். இதனைக் கூறும் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் கவியைினை உற்று நோக்குவோம்.

    கருத்தும் கடவுளும்(16.12.1953)
    கடவுனை வணங்கும் போது,
    கருத்தினை உற்றுப்பார் நீ.
    கடவுளாய்க் கருத்து நிற்கும்
    காட்சியைக் காண்பாய் ஆங்கே! ….. வேதாத்திரி மகரிஷி.

    சிலை வடிவத்தில் கடவுளை வணங்கினாலும் அறிவைத் தான் வணங்குகின்றனர் என்கின்றார் மகரிஷி அவர்கள். சிலையைக் கண்கள் பார்க்கும் போது அறிவு தான் சிலையின் வடிவம் எடுக்கின்றது. சிலை வடிவத்தை வணங்குகிறோம் என்றால் சிலை வடிவம் எடுத்த அறிவைத்தான் வணங்குகிறோம் என்கிறார். யார் எந்த வடிவில் தெய்வத்தை வணங்கினாலும் அவர்கள் வணங்குவது அவர்களுடைய அறிவே தவிர வேறு ஒன்றுமில்லை என்கிறார் மகரிஷி அவர்கள்.அறிவே தெய்வமாக உள்ளதால் எல்லோரும் ஒரு தெய்வத்தையே வணங்குகிறார்கள் என்கிறார், ”ஒன்றே குலம். ஒருவனே தெய்வம்“ என்கின்ற திருமூலர் வாக்கு எப்படி சரி என அறிந்து கொள்ள முடிகின்றது.

    சிலை வணக்கம் பக்தி மார்க்கம் எனப்படுகின்றது. அகவழிபாடு ஞானமார்க்கம் எனப்படுகின்றது. எந்த மார்க்கமாக இருந்தாலும் அறம் தழைக்க வேண்டும் சமுதாயத்தில்.

    அதற்கு

    1) பிறர்க்கு துன்பம் இழைக்காதிருத்தல்,
    2) துன்பத்திலிருந்து நலம் பெற முடிந்த வரை உதவி செய்தல் ஆகிய இரண்டு ஒழுக்க நெறிகள் அவசியம்.

    இந்த இரண்டு நெறிகளும் வளரவும், நிலைக்கவும் ஒவ்வொருவரின் முயற்சியாக இருக்க வேண்டும்.

     

    ************

  • அறிவுத் திருக்கோயில்

    Temple of Consciousness

    28-10-2014

    அறிவுத் திருக்கோயிலைப் பற்றி மனவளக்கலைஞர்கள் நன்கு அறிவா். மற்றவர்களுக்கு அறிவுத்திருக்கோயில் என்பது வியப்பாகக்கூட இருக்கலாம். சிவன், விஷ்ணு, முருகன், விநாயகா், அம்மன் ஆகிய தெய்வங்களுக்குக் கோயில் உள்ளதை அறிவோம். முருகன் கோயில் முருகனுக்கான கோயில் என்பதுபோல் அறிவுத் திருக்கோயில் என்பது அறிவிற்கானக் கோயில். அறிவிற்கு கோயில் இருக்கின்றது என்றால் அறிவு தெய்வமா என்கின்ற ஐயம் எழலாம். மகாகவி பாரதியார் தெய்வத்தின் மீது பக்திப் பாடல்களும் இயற்றியுள்ளார். அவற்றில் விநாயகர், முருகன், காளி ஆகிய உருவகக் கடவுளர்கள் மீதான பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவ்வாறு பக்திப்பாடல்களை இயற்றிவரும்போது, மகாகவி பாரதியார்   “தவமே புரியும் வகையறியேன்” என்று ஒரு கவியில் ஆதங்கப்படுகிறார். பிறகு ஞானப்பாடல்களும் இயற்றியுள்ளார். அவற்றில் அறிவையே தெய்வம் என்கிறார்.

    அறிவே தெய்வம்
    ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
    அலையும் அறிவிலிகாள் – பல்
    லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
    டாமெனில் கேளீரோ?
    ………………………………………..
    ………………………………………..
    சுத்த அறிவே சிவமென்னு கூறுஞ்
    சுருதிகள் கேளீரோ? …..
    ………………………………………………………………………… என்று கூறுகிறார் மகாகவி பாரதியார்.

    429_Subramanya_Bharati

    அவருக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷியும் “துணிந்துரைப்போம் அறிவே தெய்வம்” என்கிறார். அறிவைத் தெய்வம் என்று கூறுவதோடு மட்டுமல்லாது எவ்வாறு அறிவே தெய்வமாகின்றது என்று கருத்தியலாகவும்(theory), பயிற்சியாகவும்(practical) விளக்குகிறார். இப்பயிற்சிக்கு மனவளக்கலை என பெயரிடப்பட்டுள்ளது. மனவளக்கலை என்கின்ற அகவழிபாட்டுத் தெய்வீகப் பயிற்சியினை நடத்துவதற்கான புனித இடம் தேவைப்பட்டது.அப்போது, இயற்கை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, உலகிலேயே முதல் அறிவுத் திருக்கோயிலை ஆழியாரில் ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து இப்போது தழிழ் நாட்டில் ஊரெங்கும், மற்ற இடங்களிலும் அறிவுத் திருக்கோயில்கள். உருவாகி வருகின்றன. அரிதாக இருந்து வந்த  “தவம் இயற்றுதலை” எல்லோருக்கும் கிடைக்குமாறு கருணை புரிந்துள்ளது இயற்கை. நாம் இப்போது எவ்வாறு அறிவு தெய்வம் எனப்படுகின்ற விளக்கத்திற்குள் செல்லவில்லை. அதற்கான விளக்கத்தை வேறொரு தலைப்பில் பிறிதொரு சமயத்தில் பார்ப்போம். தற்போதைக்கு அறிவை தெய்வம் என அறிவை அறிந்த அறிஞர்கள் சொல்வதனை ஏற்றுக் கொண்டு அறிவுத் திருக்கோயில் பற்றிய இன்றையச் சிந்தனையைத் தொடா்வோம்.


    1282131249_315467b

    முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, அறிவுத் திருக்கோயிலில் சிலை கிடையாது. காரணம் அரூபமான அறிவுதான் தெய்வம் என்பதால், அறிவுத் திருக்கோயிலில் சிலை கிடையாது. பின்னர் எதனை வணங்குவர் அறிவுத்திருக்கோயிலில்? அறிவை வணங்குவர். இறை வழிபாடு இரண்டு வகைகளில் மேற்கொள்ளப்படலாம். ஒன்று புற வழிபாடு. மற்றொன்று அகவழிபாடு. புறம் என்றால் வெளியே என்று பொருள். அகம் என்றால் உள்ளே என்று பொருள். புறவழிபாட்டில் சிலையை வெளியே வைத்து வணக்கம் செய்யப்படுகின்றது. எனவே இதர கோயில்களில் சிலைகள் உள்ளன. மேலும் புறவழிபாட்டில் இறைவழிபாடு புலன்கள் வழியாக நடத்தப்படுகின்றது.

    அகவழிபாட்டில் சிலைகள் கிடையாது. உள்ளம் தான் அகம் எனப்படுகின்றது. உள்ளத்திற்குள் எவ்வாறு சிலைகளை வைக்க முடியும்? “உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம்” என்கின்ற திருமூலா் வாக்குப்படி, மேலும் உள்ளத்திலேயே இறைவன் இருப்பதை அறிந்துள்ள மனவளக்கலைஞர்கள், உள்ளத்திலுள்ள இறை மீதே மனம் வைத்து அகத்தவ இறைவழிபாடு (meditation)செய்கின்றனர்.  புலன்களைக் கடந்து உள்ளே சென்றால் கடவுளைக் (கட+உள்=கடவுள்) காணலாம்.

    இறைவனே உயிராக மனமாக அறிவாக இருக்கின்ற தெளிவினை உடையவர்கள் அகவழிப்பாட்டினை மேற்கொள்கின்றனர், அதாவது உயிரிலிருந்து மனம் பிறப்பதால் புறத்தே புலன்கள் வழியாகச் செல்கின்ற மனதை திருப்பி உள்ளே செலுத்தி உயிர் மீது மனம் வைத்து தவம் செய்வதுதான் அகவழிபாடு. எனவே அறிவுத் திருக்கோயில்களில் சிலைகள் அவசியமில்லாமல் இருக்கின்றது. ஏனெனில் உள்முகமாக மனதைத் திருப்பி (Inner Travel) தெய்வமாகிய உயிர் மீது மனதை வைத்து தவம் செய்கின்றனா். ஆகவே அறிவுத் திருக் கோயில்களில் சிலை வழிபாடு இல்லை.

    கோயில் என்பது இறைவனைத் தொழுவதற்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு புனிதக் கட்டிடம். கோயிலுக்கு ஆலயம் என்றும் பெயா். காரணம், கோயிலுக்குச் செல்லும் பக்தன் கடவுளை வணங்கும் முறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டுதான் கோயிலுக்கு ஆலயம் என்கின்ற பெயரையும் வைத்துள்ளனா். “ஆலயம்” என்கின்ற சொல்லில் ஆன்மா என்கின்ற சொல்லின் முதல் எழுத்தான “ஆ” வையும் “லயம்” என்கின்ற சொல்லையும் இணைத்து ஆலயம் என்கின்ற சொல் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படியானால் ஆன்மா லயமாவதற்கான புனித இடம்தான் ஆலயம், கோயில்.

    அடுத்ததாக ஆன்மா, லயம் என்கின்ற சொற்களின் பொருளைத் தெரிந்து கொண்டால் ஆலயம் ஏற்படுத்தப்பட்டுள்ள நோக்கம் தெரிய வரும். ஆன்மா என்பது உடலிலிருந்தும், மனத்திலிருந்தும் வேறானதாகக் கருதப்படும் பொருள்(soul). ஆன்மாவை உயிர் என்றும் கொள்ளலாம் தற்போதைக்கு.  “லயம்” என்றால் ஒன்றுபடுதல் என்பதாகும். ஆன்மா லயமாக வேண்டுமென்றால், ஆன்மா எதனுடன் ஒன்று பட வேண்டும் என்பதனையும் தெரிந்து கொண்டு அதுபோல் வழிபாடு செய்தால் ஆலயம் உருவாக்கப்பட்ட நோக்கம் முழுமையாக நிறைவேறும்.

    வாழ்க வளமுடன். இதன் தொடர்ச்சியாக மீண்டும் நாளை சந்திப்போம்.

    ………………… தொடரும் நாளை