April 2016

Monthly Archives

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 9/?

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    FFC – 182

    20-04-2016—புதன்

    FFC_167-பாரதியார் படம்

    ffc-182-sub-heading

    வாழ்க வளமுடன்.

    ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற, ‘உலகத்தை உய்விக்க வல்ல மகாமந்திரத்தைப்’ பற்றி சிந்தித்து வருகிறோம். ஒன்பதாவது நாளாக இன்று சிந்திக்க சத்சங்கத்தில் குழுமியிருக்கிறோம். இன்று சிந்திக்க வேண்டிய துணைத்தலைப்பு ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை!’ என்கின்ற ஆச்சரியத்துடன் கூடிய உண்மையாக உள்ளது. ஏன் இந்த தலைப்பைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்று அறிந்துவிட்டு தலைப்பிற்குள் செல்வோம்.

    பிரதான தலைப்பு(main title) ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பது. இதனை வாழ்த்தாக உலகநலவாழ்த்துப்பாவில் அமைத்துள்ளார் மகரிஷி அவர்கள். 

    ஒன்றேயான அருவமே எல்லாமாகியுள்ள உண்மையினை விளங்க வைப்பது ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ காண்பதுதான்.

    மனிதகுலம் உருவத்தில் பேதங்களைக் கொண்டிருந்தாலும் ‘ஒன்றே குலம். ஒருவனே தேவன்’ என்கின்ற உண்மையினை விளங்கவைத்து,   மனிதகுலத்தை உய்விக்க முடியும் என்பதனைக் கண்டுபிடித்துள்ளார் மகரிஷி அவர்கள்.

    அதாவது தெய்வத்திடமிருந்து வந்த மனிதன் மீண்டும் தெய்வநிலைக்கு உயர்ந்து வரும் போதுதான் மெல்ல மெல்ல பண்பேற்றம் பெற்று வர, வர, முடிவாக தெய்வநிலை உணரும்போது, முற்றிலுமாக பண்பேற்றம் அடைய முடியும்.

    பண்பேற்றமும் தெய்வநிலையை உணர்வதும் வேறு வேறல்லவே! .இரண்டும் ஒன்றுதானே!?.

    ஆறாம் அறிவிற்குரிய பேறு ‘இறைஉணர்வு’ என்பதால் மட்டும் மனிதன் இறை உணர்வு பெறவேண்டும் என்பதில்லை. பண்பேற்றம் பெறவே மனிதனுக்கு இறைஉணர்வு முதன்மை அவசியமாகின்றது.

    பண்பேற்றம் பெற்று வரும்போது, தெளிவின் உச்ச கட்டத்தில் இறைவன் தடுத்தாட்கொள்ளும்போது நடப்பதுதான் இறை உணர்வு எனும் ஞான ஒளி.

    இறைவனை பற்றி, அறிவை அறிந்த அறிஞர்கள் கூறுவது என்ன? அவற்றினை ஆராய்வோம்.

    இறைவனுக்கு உருவம் ஏதுமில்லை. இறைவன் அரூபமானவன்.
    எனவே அவன் எங்கும் எதிலும் நிறைந்திருக்கின்றான். அவன் இல்லாத இடமில்லை.
    இறைவன் எங்கும் நீக்கமற (நீக்கம்+அற) நிறைந்துள்ளான்.
    நீக்கமற (நீக்கம்+அற) என்றால் ஒரு இடம் கூடவிடாமல், எங்கும்(everywhere; omnipresent) என்று பொருள்.
    எனவே சர்வ வியாபியாகிய இறைவன் நம்மிடத்தும் இருப்பான் அன்றோ?!
    அதேபோன்று மற்றவர்களிடமும் இருப்பானன்றோ?!
    காணுகின்ற உருவங்களில் எல்லாம் இருப்பானன்றோ?!

    நம்மைச் சுற்றியும் (360°) இருப்பானன்றோ? அதனைத்தான் மகான் மகா கவி பாரதியார் ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை!’ என அழுத்தமாக, உறுதியுடன் கூறுகிறார்.

    சற்றுமுன்னர் அறிந்த இறைக்கான அறிஞர்களின் கூற்றுக்களின்படி, ’நோக்கும் திசையெல்லாம் இறையன்றி வேறில்லை’ என்று மகான் மகா கவி பாரதியார் கூறியிருந்தால் சரி. மாறாக, நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை’ என்று கூறுகிறாரே என ஐயம் எழலாம்.
    அதாவது, ‘நாமன்றி’ என்கின்ற வார்த்தைக்குப் பதிலாக ‘இறை’ என்கின்ற வார்த்தையைச் சொல்லியிருக்கலாமே என்கின்ற ஐயம். அப்படியானால் ‘நாமும்’ ‘இறையும்’ ஒன்று என்றுதானே பொருளாகின்றது. ஆம். ஒன்றுதான். இதுதானே ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைவதற்கான, பகவான் ஸ்ரீரமணர் எழுப்பிய மிகச்சிறந்த கேள்வியான ‘நான் யார்?’ என்பதற்கான பதில். இருப்பினும் நாம் மட்டும் இறை அல்ல, எல்லாமே இறை தானே? எல்லாம் இறைமயம். ‘நோக்கும் திசையெல்லாம் ஒன்றேதான் உள்ளது, ஒன்றைத்தவிர அன்னியம் என்பது கிடையாது’ என்பதனை வலியுறுத்தவே ‘நாமன்றி வேறில்லை’ என்கிறார் மகான் மகா கவி பாரதியார்.

    இறையே நானாக உள்ளது. இறையேதான் நாமாக உள்ளது. இறையேதான் எல்லாமாகவும் உள்ளது. எனவே இங்கே ஒரு சமன்பாடு வருவதனைக் காணமுடிகின்றது. அது என்ன?

    இறை=நான்=நாம்=எல்லாம்.

    இப்போது மகரிஷி அவர்களின் பொருத்தமான கவி ஒன்றினை நினைவிற்கொள்வோம்.

     

     

     57. “நான்” என்ற தத்துவமே நாம்

    நான் என்ற தத்துவமே நாமாய் உள்ளோம்
    நாடுகள் பலவற்றில் வாழுகின்றோம்
    ஊன் உருவம் வரை அறிவை எல்லையாக்கி
    ஒருவருக்கொருவர் இன, தேச, ஜாதி,
    தான் – தனது எனும் பேதம் கொண்டு வாழ்வில்
    தனித்தியங்கித் துன்புற்று ஆழ்ந்தாராய்ந்தோம்.
    ஆன்ம நிலையறிந்து ஆராய்ந்து கண்ட
    ஆட்சி முறை உலக சமாதானத் திட்டம்.”
                                                     . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    FFC-182- இப்பாடல்- BOX MessageUntitled

     

    ‘நானேதான் நாமாக உள்ளோம்’, ‘நானேதான் மற்றவர்களாக உள்ளேன்’, ‘நானேதான் எல்லாமாகவும் உள்ளது’ ‘எல்லாமாக உள்ளது நானே!’ என்கின்ற, இந்த தெளிவுதானே பிரம்ம ஞானத்தின் சாரம். இந்தத் தெளிவு பேரின்பமாக இருக்கும் என்கிறார் மகான் மகா கவி பாரதியார். எனவே அதனைக் கூறும் அவருடைய பாடல் ஒன்றினை ஆய்வோம்.

    மகான் மகா கவி பாரதியார் கூறும் பாப்பா பாட்டு ஒன்றை நினைவு கூர்வோம்.

    cat_song_bharathiyar

    இந்தக் கவியினைச் சற்று உற்று நோக்கினால், முரசு என்கின்ற தலைப்பில் 31 பாடல்களை இயற்றியுள்ளார் மகான் மகா கவி பாரதியார். ஆரம்ப வரியே ‘வெற்றி’ என்றுதான் உள்ளது. அதாவது தான் கண்டுபிடித்த உண்மை இவ்வுலகம் உய்வதற்கானத் தீர்வாக இருப்பதால் அதனை வெற்றியாகக்(கண்டுபிடிப்பு வெற்றிதானே) கருதி, ஆனந்தத்தில் முரசு கொட்டி அறிவிக்கச் சொல்கிறார்.

    எனவே அந்த உண்மையினை எடுத்துச் சொல்ல விரும்பிய மகா கவி இவ்வையகத்திற்கு நல்லதாகிய உண்மையை சொல்வேன் என ஆரம்பித்து இயற்கையிலுள்ள எடுத்துக்காட்டினையே கொண்டு, பூனையை வைத்தே வேற்றுமையில் ஒற்றுமை இருக்கின்றது என்கின்ற உண்மையைக்கூறி முடிவில் அந்த உண்மையால் அன்பு ஓங்குவது தான் இந்த வையகத்திற்கு நல்லது எனக் கூறுவதனை அறிந்து மகான் மகா கவி பாரதியாரின் ஆழ்ந்து விரிந்த சிந்தனையை வியந்தும் போற்றியும், மதித்தும், ரசித்தும் மகிழ்கின்றோம். இது எதன் அடிப்படையில் அமைந்துள்ளது? இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்ற அடிப்படையில் அமைந்துள்ளது. கிளைத்தேற்றம் என்ன கூறுகின்றது? தான் உயராது மற்றவர்களின் உயர்வை மதிக்கவும் ரசிக்கவும் முடியாது என்பதே கிளைத்தேற்றம்.

    ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை’ எனத் தெளிவு பெறுவதால் என்ன நன்மை? அதுதானே ஆறாம் அறிவின் பயன்! என்ன நன்மை என்பதனை விளங்கிக் கொள்வோம்.

    மெய் உணர்வு பெறுதல்-இறை உணர்வு பெறுதல்-தன்னிலை உணர்தல் ஆகியவற்றிற்கு மூலமான ‘நான் யார்?’ என்கின்ற புனித வினாவிற்கான விடையை செய்முறைத் தேர்வில்(தெளிவுடன் கூடிய தியானம்— Meditation and clarity) வெற்றி பெறும் போதுதான் உறுதிப்படுத்தி, முழுமையானப் பயனை பெற முடியும்.

    இயற்கையின் ஆதிநிலையே/இறையே/தெய்வமே நானாகவும், நானே மற்றவர்களாகவும், மற்ற உயிரினங்களாகவும், எல்லாப்பொருட்களாகவும் உள்ளேன் என்று அறிதலே ஆகும்.

    இப்போது நமது சத்சங்கத்தில் எழுந்தருளி வாழ்த்தச் செய்வதற்கு, மகான் மகா கவி பாரதியாரையும் இறைஞ்சுவோம். எப்படி? அவரது பாடல்களின் வரிகளை நினைகூர்வதன் வாயிலாக மகா கவி பாரதியாரை சூக்குமாக நமது சத்சங்கத்தில் இப்போது எழுந்தருளுமாறு வேண்டுவோம்.

    ஜயபேரிகை_பாரதியார்

    பேரிகை என்றால் முரசு என்று பொருள். முரசு என்றால் முற்காலத்தில் அரசர் தனது ஆணையை மக்களுக்கு அறிவிக்கப் பயன் படுத்திய கருவி. ஆகவே தெய்வத்தின் உண்மைநிலையினை கண்டுபிடித்துவிட்டதால், அதனை தெய்வத்தின் ஆணையாகக் கருதி முரசைக் கொட்டி மக்களுக்கு அறிவிக்குமாறு உள்ளப் பூரிப்பில், ஆனந்தத்தில் குலுங்கி அவ்வாறு பாட்டினை அருளியுள்ளார் மகான் மகா கவி பாரதியார்.

    ‘பேரிகை கொட்டடா!’ என்று மட்டும் சொல்லவில்லை. ‘ஜய’ என்கின்ற சொல்லை சேர்த்து ‘ஜய பேரிகை கொட்டடா’ என்கிறார். ஏன்? ‘ஜயம்’ என்றால் வெற்றி என்று பொருள். அவரது உள்ள பூரிப்பால் தன் சக அன்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்கின்ற விரிந்த மனம் ஒரு காரணம், மற்றும் அவரது அக்கண்டுபிடிப்பு மெய்ஞ்ஞானத்திற்கு கிடைத்த வெற்றி என்பதால் வெற்றிச் செய்தியினை முரசு கொட்டி சொல்லச் சொல்கிறார். என்னே அருளாளர்களின் உள்ளம்! இதுவன்றோ இறையும் மனிதனும் ஒன்றான நிறைவு. அவ்வாறு இந்த ஆன்மீக சரித்திரத்தில் இது வரை தோன்றியுள்ள எல்லா அருளாளா்களையும் நாம் அழைத்து பயன்படுத்திக் கொள்ளும் யுக்தியினை அறிந்திருக்கிறோம் மனவளக்கலைஞர்களாகிய நாம்.

    அடுத்ததாக ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்.’ என்கின்ற வரிகளை கவனிக்கவும். மகான் மகா கவி பாரதியார் தன் அடைந்த பேரின்ப அனுபவத்தை வெளியிட்டு மற்றவர்களும் அந்நிலையினை அனுபவிக்க, அதனை உலகுக்கு ஜய பேரிகை கொட்டி அழைக்குமாறு அறிவிக்கிறார் மகான் மகா கவி பாரதியார். இது எவ்வாறு இருக்கின்றது என்றால் நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அழைப்புக் கவியில்,அழைப்பது போல் உள்ளது.

    anbargale vaareer-THAI

    மகான் மகா கவி பாரதியாரின் புனித வரிகளான ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம். – நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்.’ என்பதனை மீண்டும் மீண்டும் மனதிற்குள் உச்சரித்துப் பாருங்கள். அந்நிலையினை அடைய முடியும். இதுதானே பிரம்மஞானியின் நிலையாக இருக்கும், இருக்க வேண்டும். பிரம்ம ஞானம் என்பது என்ன? ஞானம் என்பது என்ன? ‘ஞானம் என்பது அறிவை அறிந்த தெளிவு’ என்பது சிறப்பான விளக்கம்’ என்கிறார் நம் குருதேவர் அவர்கள். அறிவை அறிந்த தெளிவில் தான் ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்.’ என்கின்ற மகா கவி பாரதியாரின் பேரின்ப மந்திரம் செயலுக்கு வரமுடியும்.

    மகான் மகா கவி பாரதியாரின் பேரின்பத்தின் மந்திரமான ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம். என்பதில் இரண்டு நிலைகளைக் குறிப்பிடுகிறார் மகான் மகா கவி.

    ஒன்று – நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை,
    மற்றொன்று – நோக்க நோக்கக் களியாட்டம்.

    ‘நோக்க நோக்க களியாட்டம்’ என்பது மனதின் எந்த நிலையைக் காட்டுகின்றது? மனம் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் ஆகிய நான்கு நிலைகளில் இயங்க வல்லது எனத் தெரியும். அவற்றில் மகான் மகா கவி பாரதியார் கூறுகின்ற

    ‘நோக்க நோக்கக் களியாட்டம்’ என்பது ஐயமின்றி மனதின் நான்காவது நிலையான பேரின்ப நிலையைக் குறி்க்கின்றது.

    எப்போது ‘நோக்க நோக்கக் களியாட்டம்’ ஏற்படுகின்றது மனதிற்கு என்கிறார் மகான் மகா கவி பாரதியார்? அதனையும் கவனிக்க வேண்டும் நாம். ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை’ என்கின்ற தெளிவு அறிவிற்கு கிடைக்கும்போது ‘நோக்க நோக்கக் களியாட்டம்’ ஏற்படுகின்றது என்கிறார். அதாவது பார்க்க பார்க்க களியாட்டம் என்கிறார்.
    அப்படியானால் களியாட்டம் என்பது என்ன? களியாட்டம் என்றால் களிநடம், ஆனந்தக்கூத்து என்று பொருள். தில்லையில் களிநடனம் புரிகிறான் இறைவன் என்கிறோம். களி என்றால் பார்ப்பது. கேட்பது முதலியவற்றால் மகிழ்தல்(rejoice) என்று பொருள்.

    FFC-182-box message- களியாட்டத்திற்கு காரணம்Untitled

     

    இங்கே நாம் நம் குருநாதரை அழைத்துக் கொள்வோம். எப்படி? அதற்கான அவர் அருளியுள்ள பாடலை நினைவு கூர்வோம்.

    FFC-168-பகுத்து-மறைவாய்

     

    .

    ‘இறைவெளி காட்சியாக, எல்லோரும் பார்த்துக் கொண்டே, மறைவாய் உள்ளாய் நீயென்று, மாற்றுரை பகர்கின்றார்!’ என்று கூறுவதன் மூலம் மகான் மகா கவி பாரதியாரின் பேரின்ப கண்டுபிடிப்பான ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை, நோக்க நோக்கக் களியாட்டம்.’ என்பதோடு பாரதியாரின் இளவளான மகரிஷி அவர்கள் இணைகிறார் அன்றோ!

    ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை’ என்று மகான் மகா கவி பாரதியார் கூறுவதனை, மகரிஷி அவர்கள், ‘இறைவெளி காட்சியாக’ உள்ளான் என்கிறார். இரண்டும் பிரம்மநிலையை உணர்ந்த வார்த்தைகள்தான். கண்கள் பார்க்கின்ற காட்சிகளெல்லாம் இறையேதான் என்றிருந்தாலும் மக்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டே இறைவன் மறைவாய் உள்ளான் என்று மாற்றிச் சொல்கின்றனர் என்று ஆதங்கப்படுகின்றார். மனிதனுக்குள்ள குறையறிவை விரித்தால் இறையை தனதுள் கொள்ள முடியும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
    இன்றைய சிந்தனையை நிறைவு செய்ய இருக்கின்றோம். பகுத்துணர்வில் பண்பாட்டை உயர்த்தட்டும் என்று ‘உலகை வாழ்த்தும் மகா மந்திரத்தைப்’ பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

    ஆகவே பகுத்துணர்வு, தொகுத்துணர்வு என்கின்ற சொற்களுக்கானத் தனித்தனி பொருளென்ன, ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்பதற்கான பொருளென்ன, பகுத்துணர்வில் தொகுத்துணர்வு எவ்வாறு மனிதகுலப் பண்பாட்டினை உயர்த்த முடிகின்றது என்பனவற்றை எல்லாம் இந்த சத்சங்கத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சத்சங்கத்திற்கு மகான் மகா கவி பாரதியாரையும் எழுந்தருளி ஆசீர்வதிக்க நாம் எண்ணியதால்தான் பாரதியார் அருளிய பாடல்களில் இரண்டு பாடல்களை நினைவிற் கொண்டு மகான் மகா கவி பாரதியாரின் பேரின்ப அனுபவங்களை அவரே நேரிடையாகவே வந்து கூறுவதுபோல் பொருள் விளங்கிக் கொண்டோம்.

    “நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை” என மகான் மகா கவி பாரதியார் கூறுவது, மகரிஷி அவர்கள் “பகுத்துணர்வில் தொகுத்துணர்வு” என்பதும் ஒன்றே. பகுத்துணர்வில் தொகுத்துணர்வு வந்துவிட்டால் நோக்கும் திசையெல்லாம்/நாம் காண்பதெல்லாம் அன்னியமே அல்ல. பிறகு என்ன அது என்றால் நாமன்றி வேறில்லை. வேற்றுமையில் ஒற்றுமை காணுகின்ற தெளிவு பிறக்கும். மேலும் அவ்வாறு காண்பது இயல்பாகிவிட்டால் அதுதானே பேரின்பம். இந்த நிலைக்கு அறிவு வருவதற்கு, விருப்பு, வெறுப்பு இன்றி எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கும் பண்பாட்டில் உயர வேண்டும்.

    எனவே ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வுதான்’, நானேதான் நாமாக இருந்தும், உருவம் என்கின்ற வரையில் எல்லைக்கட்டிக்கொண்டு, பேதங்களைக் கற்பித்துக் கொண்டு, தனித்து இயங்கி துன்புற்று வாழ்கின்ற நிலையில் இருக்கும் உலகை வாழ்த்துவதற்கான ஏற்ற மகா மந்திரமாக உள்ளது என்பதனை அறிந்து மகிழ்கிறோம். எனவே பிரம்மஞானத்தின் பயனான நோக்க நோக்கக் களியாட்டம் என்கின்ற பேரின்ப நிலையினை அனுபவிப்போமாக. வாழ்க உலக சமாதானம். வரட்டும் விரைவில் உலக சமாதானம்.

    மேலும் அன்றாட வாழ்வில் எப்போதும் பேரின்ப நிலையை அனுபவிக்கும் முகந்தான் பேரின்பம் என்பது எதார்த்தத்தில் என்ன என்று மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம். Logical Solutions for the Problems of Humanity என்கின்ற நூலில் பக்கம் 30 இல் 19-22 வரிகளை(lines) வாசித்து பேரின்பம் என்ன அறிந்து கொண்டு சிந்தித்து சிந்தித்து பேரின்பத்தை பருகவும். இதே போன்று சமுதாயச் சிக்கல்களுக்கான ஆய்வுத் தீர்வுகள் என்கின்ற நூலில் பக்கம் 23 இல் வருகின்ற 7-12 வரிகளை வாசித்து அறிந்து மகிழவும். சிந்திப்பதே நம்முள் உறைகின்ற இறையுடன் நடத்தும் சத்சங்கமாகும். அந்த இறையுடன் நடத்தும் சத்சங்கம் பேரின்பமாக இராதா என்ன?! சிந்திப்பதும் விடை கண்டு தெளிவு பெறுவதும் பேரின்பமாகும். வாழ்க சத்சங்கங்கள். வளர்க சத்சங்கங்கள்.

    FFC-182- அருட்தந்தை-சங்கல்பம்

    இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(24-04-2016-ஞாயிறு)  ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற சிந்தனையை, திருவள்ளுவர் அணுகுமுறையில் தொடர்வோம். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளர்க அறிவுச் செல்வம்.

  • சிந்திக்க வினாக்கள்-169

    வாழ்க மனித அறிவு                வளர்க மனித அறிவு

    18-04-2016 – திங்கள்

    இன்பமும் துன்பமும் வேறு வேறல்ல. அவை ஒரே உணர்ச்சியின் ஏற்றத்தாழ்வான இருநிலைகளே என்கிறார் மகரிஷி அவர்கள். எவ்வாறு?

    வாழ்க அறிவுச் செல்வம்             வளர்க அறிவுச் செல்வம்

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 8/?

    வாழ்க மனித அறிவு                                                         வளர்க மனித அறிவு

     FFC – 181

                                                   17-04-2016—ஞாயிறு

    வாழ்க வளமுடன்.

                      02-03-2016 லிருந்து 23-03-2016 வரை ஏழு விருந்துகளில் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் என்பது பற்றி சிந்தித்து வந்தோம்.  இன்று அதனுடைய தொடர்ச்சியினை எட்டாவது நாளாக சிந்திக்க இருக்கிறோம்.  எனவே இதுவரை சிந்தித்ததை கீழே உள்ள அட்டவணையைக் கொண்டு, சுருக்கமாக நினைவு படுத்திக் கொள்வோம்.

    gist of ffcs 168-174

           ஆறாம் அறிவின் ஏழாம் செயல்பாடான ‘தன்னிலை உணர்தல்’ என்பதனை மனித அறிவு அடைந்தேயாக வேண்டும். மனிதஇன பரிணாம – இயற்கையின் நிகழ்ச்சியில் முடிவானதாக இருப்பது ‘தன்னிலை உணர்தல்’ என்பது. எனவே இது பற்றி இன்று அறிந்து கொள்வோம்.

    அறிவின் 4, 5, 6 ஆம் நிலைகள் ஐயுணர்வைக் குறிக்கின்றன.  இந்த நிலை விலங்கினத்திற்கும் மனித இனத்திற்கும் பொது. ஆனால் விலங்கினத்திலிருந்து வந்துள்ள மனித இனத்திற்கான ஆறாம்  அறிவிற்கு என்ன பணி என ஆழ்ந்து விரிந்து சிந்தித்தால் மனிதன் ‘தன்னிலை உணரவேண்டும்’ என்பதும், அது இயற்கையின் நிகழ்வேயாதலால், அது விஞ்ஞானம் என்பதும் தெளிவாகும். ஐயுணர்வு என்பது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தை மட்டுமே உணர்வதாகும்.

         ஐயுணர்விலிருந்து, வந்த ஆறாம் அறிவுடைய மனிதனாக வந்த அறிவிற்கான பிரத்யேக உணர்வு என்னவாக இருக்கும்?

         ஐயுணர்வில் அறிவு காரணத்தை அறிய முடியாது.  உள்ளதை அப்படியே உணர வேண்டும்.

         ஆறாம் அறிவாக மலர்ச்சி பெற்ற அறிவு என்ன, ஏன், எதற்காக என்கின்ற வினா எழுப்புவதற்கான திறமையைக் கொண்ட காரணஅறிவாகின்றது(Consciousness with Logical Reasoning).

         எனவே அறிவு ஆறாம் அறிவாக மலரும்போது, தான் உணர்கின்ற அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்து நிகழ்ச்சிகளும் என்ன, ஏன் நடக்கின்றன, எவ்வாறு நடக்கின்றன, இவற்றை எல்லாம் உணர்கின்ற நான் யார்  என்கின்ற வினாவிற்கான விடையை அறிய வேண்டியது அவசியமாகின்றது.

        விடை அறியும் போது அறிவு முழுமை அடைவதே ‘தன்னிலை உணர்தல்’ ஆகின்றது.  இதனை விஞ்ஞானம் சொல்லித்தான்அறிவு  தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதாவது பிறவியின் நோக்கம் தன்னிலை உணர்தல், அறிவை அறிய வேண்டும் என்பது விஞ்ஞான நிரூபணமில்லாமலேயே காரண அறிவைக் கொண்டே உறுதியாகின்றது.  தன்னிலை உணர்தலில்  அறிவின் பயணம் முடிவுபெறுகின்றது. இயற்கையாகிய அறிவின் பயணம்(Journey of Consciousness) என்பதும் இயற்கையின் நிகழ்வுதானே!அறிவின் பயணத்தின் முடிவு தன்னிலை உணர்தல் என்கிறபோது தன்னிலை உணர்தல் என்பதும் இயற்கையின் நிகழ்ச்சியேதான்

        ஆனால் ஆங்காங்கே விரல் விட்டு எண்ணும் அளவில் ஒரு சிலரைத் தவிர, மனிதகுலம் இந்த இயற்கையின் நிகழ்வினை தடைசெய்து கொண்டல்லவா வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கின்றது!

          அப்படியானால் இயற்கைக்கு முரணாகவல்லவா வாழ்கின்றது மனித சமுதாயம்.

        அறிவின் வளர்ச்சி கடைசி கட்டத்தில் தடைபட்டு நிற்கின்றது.  

        இயற்கையில் உள்ள பல வளங்களில் சிகரமானது ‘தன்னை அறிதல்’ என்பது.

       மற்ற இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக மாற்றிக் கொண்டு, புலன்களின் திறமையை அதிகரித்துக் கொள்ளத் தெரிந்த மனித இனத்திற்கு,

      ‘தன்னை அறிதல்’ வளத்தை மட்டும் வாழ்வின் வளமாக மாற்றிக் கொண்டு வாழ்வாங்கு வாழத் தெரியவில்லை.

        இந்தநிலையினை அடைவதற்காக வாழ்த்துவதுதான் உலக நல வாழ்த்தின் நான்காவது வாழ்த்தான ‘பகுத்துணர்வில், தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பது.

    இந்த வாழ்த்துதான் உலக நல வாழ்த்திலும், உலக நல வேட்பு, உலக நல நாட்டம் ஆகியவற்றில் உள்ள  மற்றவைகளையும் நிறைவேற்றி வைக்கும்.

        ஆறாம் அறிவாகி மலர்ந்த பிறகு விலங்கினத்தில்  இருக்கின்ற பண்பான பிறர்வளம் பறித்தல் என்பது பாவமில்லாமல் இருந்தது, மனிதனாக வந்தபிறகு ‘பிறர்வளம் பறித்தல்’ பாவச்செயலாகி விடுகின்றது. ஐந்தறிவுள்ள புலி மானைக் கொன்று உணவாக உட்கொள்வதில் பிறர்வளம்  பறித்தல் அடங்கி இருந்தாலும் அது புலிக்கு பாவமில்லை. சிந்தனைத்திறன் கொண்ட ஆறாம் அறிவுடைய மனிதனுக்குத்தான் அவன் செயலின் விளைவைப் பொருத்து பாவம்(தீயொழுக்கம்). புண்ணியம்(ஒழுக்கம்) என அமைகின்றது.

        ஆதிமனிதனிலிருந்து தொடங்கிய மனித இனப்பரிணாமத்தில், ஆரம்பத்தில் விலங்கினங்களாகத் தான் வாழ்ந்திருக்கிறான்.  ஆகவே அப்போது அன்பு, கருணை என்கின்ற மனிதம் மலர்ச்சி அடையவில்லை.  இருப்பினும் ஒரு நாள் ஒரு மனிதன் பட்ட துன்பத்தை மற்றொரு மனிதன் கண்டு தன்னுணர்வுபோல் கருதி, இரக்கம் கொண்டு உதவி செய்திருப்பான்.  அன்றுதான் அறம் தோன்றிற்று என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  ஆனால் அன்று ஆரம்பித்த ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய அறத்தின் வளர்ச்சி தொடர்ந்து  முழுமை அடையவில்லை. அதுதான் இன்று மனிதகுலத்தில் காணப்படுகின்ற அமைதியின்மைக்குக் காரணமாகின்றது.   எனவே இந்த அறவுணர்வு குன்றிய பண்பாட்டினை உயர்த்துவதற்காகவே ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை’ உயர்த்தட்டும் என்கின்ற வாழ்த்து மந்திரத்தை உலக நல வாழ்த்துப்பாவில் நான்காவது வாழ்த்தாக அமைத்துள்ளார் மகரிஷி அவர்கள்.

        எனவே ஐயுணர்விலிருந்து, ஆறாம் அறிவு, தன்னிலை உணராது பயணித்தால் பாவ வினைகள் அதிகமாகிக் கொண்டே துன்பங்கள் மல்கி வாழ்க்கை துன்பமாகிவிடுகின்றது.

         தான் துன்பப்படுவது மட்டுமன்றி, தன் வம்சாவளியையும் துன்பத்திற்கு ஆளாக்க நேரிடுகின்றது.  தன்  வம்சாவளிக்கு  அளித்துள்ள பாவங்களை(சஞ்சித கர்மா) போக்குவதோடு மட்டுமல்லாது  சஞ்சித கர்மாவால் வம்சாவளி சேர்த்துக் கொள்கின்ற பிராரப்த கர்மாவும் சேர்ந்து விடுகின்றன.  எனவே வம்சாவளிக்கு பாவங்களை போக்க வேண்டிய பளு அதிகமாகி விடுமன்றோ!?

        அறிவு ஐயுணர்வோடு நின்று விட்டால், தனது 7 ஆம் செயல்பாடான தன்னிலை உணர்தல் என்பதற்கு முயலாமல் போனால் விலங்கினப்பண்பின் வாசனையால் ஒழுக்கமின்மையும், அதன் விளைவாக பாவங்களும் சேர்ந்து கொண்டே போவதால், வாழ்க்கையில், துன்பம், இன்பம் என்கின்ற சுழற்சியிலேயே துன்பமே மிகுவதைத் தான் அனுபவிக்க நேரிடுகின்றது.   மனதின் மூன்றாம் நிலையான அமைதியினையும் நான்காம் நிலையான பேரின்பத்தையும் அனுபவிப்பது எப்போது என்பது கேள்விக்குறியாகிவிடும்.

       மேலும் ஆறாம் அறிவு தன்னிலை உணர்வதற்கு ஆசைப்படுவது என்பது ‘முடவன் கொம்புத் தேனிற்கு ஆசைப்படுவது போன்றதா என்ன? அல்லவே அல்ல.

        தன்னிலை உணர்தல் என்பது மனிதன் உடலுக்கு ஆடை அணிவது எப்படி கட்டாயமோ, அதுபோல் அறிவு தன்னிலை உணர்வது என்பது இயற்கை/இறை வைத்துள்ள கட்டாயம்.

        வளர்ச்சி அடைந்த மனிதன் ஆடை அணியாமல் போனால் அது சட்டப்படி குற்றம் ஆகின்றது.

       ஆனால் ஆறாம் அறிவு ‘தன்னிலை உணர்தலை’ முயற்சிக்காமல் போனால் மனிதனால் இயற்றப்பட்டுள்ள சட்டப்படி குற்றமாகாமல் போனாலும் இயற்கையின் நீதியின் படி குற்றம்.

         இயற்கைக்கு ‘செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு’ என்கின்ற ஒரு நீதி இருக்கும்போது ‘தன்னிலைஅறியாமல் போனால் என்பது’ இயற்கை நீதியின்படி குற்றம் என்பது, இது இயற்கையின் இரண்டாவது நீதியா? இல்லை!இயற்கைக்கு ‘செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு’ என்கின்ற ஒரே நீதிதான் உண்டு. ஆனால் அது எல்லாவித மனிதகுற்றங்களையும் தன்  ஒரே நீதியின் கீழ் அலசிப் பார்த்து தீர்ப்பளித்துவிடும்.

        பிறவியின் நோக்கம் தன்னிலை உணரவேண்டும் என்பது இதுவரை ஆன்மீகத்தில் விருப்பமாக (optional-choice of preference) ஆக இருந்து வந்தது  ஆனால் வேதாத்திரிய ஆன்மீகம், பயிற்சியாளர் ஒவ்வொருவருமே சுயமாகவே சிந்தித்து, தன்னிலை உணர்வதற்கான விளக்கங்களை வழங்கி வருகின்றது. இது இயற்கையின் நிகழ்வுஎனவே  கட்டாயமாக, தன்னிலை உணர்ந்தேதான் ஆக வேண்டும் என்கின்ற அவசியம் மனிதனுக்கு உண்டு  என்பதனை கூர்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

         தோற்றங்களைப் பார்க்கும் போது வடிவம்-குணம் – shape and image எடுத்துப்பார்ப்பது இயல்புதான் மனிதனுக்கு.   இருப்பினும் இயல்பு என்பதால் அதனை சரி என்று எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அறியாமை இயல்பாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா? அறியாமை இயல்பாகலாமா? இயல்பாக இருந்தாலும் அதனை மாற்றி அமைக்க வேண்டுமல்லவா?

           நாகரீகமான பண்பட்ட மனிதகுலத்தில் வேற்றுமை இருக்கலாமா? வடிவம்-குணம் – shape and image வந்துவிட்டால் அங்கே வேற்றுமை வந்துவிடுமல்லவா?! ‘ஒற்றுமை’ என்கின்ற வார்த்தையையும் மனிதகுலம்தான் கண்டுபிடித்து வைத்துள்ளது.  அந்த கண்டுபிடிப்பு எதற்கு?  வேற்றுமைக்கு எதிர்ச் சொல்தான் ஒற்றுமை.  வேற்றுமை இருக்கும்போது பயம் இருக்கும். துன்பம் அளிக்கும் எண்ணம் வரும். எனவே வேற்றுமையில் ஒற்றுமை(Unity in Diversity) காணவேண்டுமெனில் பகுத்துணர்வில் தொகுத்துணர்வும் இருக்க வேண்டும்.  எனவே வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டியது அவசியம்தானே?!

    வேற்றுமை மற்றும் ஒற்றுமை என்பதற்கான பொருள் என்ன?

       வேற்றுமை என்றால் மாறுபடும் தன்மை. வித்தியாசம் என்கின்ற பொருட்கள் உண்டு. வேற்றுமையில்  தொடர்பு இருக்காது. இணக்கம் இருக்காது.  ஒற்றுமை என்றால் கூட்டுறவு, முழுமை என்று பொருள். ஒற்றுமை என்பது கூட்டுறவு என்பதால் மனித குலத்தில் சேர்ந்திருக்கும் உறவு தானே அவசியம்.  நிறத்தால் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் மனிதர்களே என்கிற மேன்மை உணர்வு நம்மிடம் உள்ளது.  அது எங்கிருந்து வந்தது?   நிறத்தை வைத்து, பகுத்துணர்வு கருமை நிற மனிதன், வெண்மை நிற மனிதன் என வேறுபடுத்தும்.  ஆனால் தொகுத்துணர்வு யாராக இருந்தாலும் இருவருமே மனிதர்கள் என்று ஒன்றுபடுத்தும்.

        ஆகவே பகுத்துணர்வில், தொகுத்துணர்வு என்பது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாகும்வேற்றுமையில் ஒற்றுமை காண்பது அவசியம் தானே.  வேற்றுமையில் ஒற்றுமை காண்பது மனிதகுலத்தின் உயர்ந்த பண்புதானே?

       எனவே உலகசகோதரத்துவப் (Universal Brotherhood) பண்பாடு உறுதிப்படுத்தப்படவேண்டுமெனில்  அதனை பகுத்துணர்வில் தொகுத்துணர்வு தான் ஏற்படுத்த முடியும். 

        ஒரு தாய்க்கு நான்கு குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் கருமை நிறமாகவும், இரண்டு குழந்தைகள் வெண்மை நிறமாகவும் இருப்பதால் அவள் வேற்றுமை பார்ப்பாளா?  இல்லையே.  உண்மையிலே அந்த நான்கு குழந்தைகளுக்கும் மூலம்(தாய்) ஒன்றே தான்.  அது தான் அந்தத் தாய்.  வேற்றுமையில் அன்பு ஓங்காது.  ஒற்றுமையில்தான் அன்பு ஓங்கும்.

       தன்னிலை உணர்தல் என்பது தொகுத்துணர்வாகும்.   தன்னிலை உணர்ந்தவரின்  அறிவு

       ஐயுணர்வான பகுத்துணர்வோடு, அதே நேரத்தில் எல்லாவற்றையும் தொகுத்துணர்வின் பார்வையிலேயே பார்க்கும்.

      அதாவது விழிப்புணர்வோடு செயல்படும்.

      அது மட்டுமல்ல தொகுத்துணர்வு, மனிதனை எப்போதும் குற்றமற்ற செயல்களையே செய்ய வைப்பதால்   அவனை அயரா விழிப்புணர்வோடு இருக்கச் செய்து அதன் விளைவாக பேரின்பத்தையே அனுபவிக்கச் செய்துவிடும்.

     தன்னிலை அறிதலின் நிலை அல்லது பயன்கள் என்ன?

    1)    பிரம்மத்தை உணர்ந்த நிலை.

    2)   பிரம்மத்தை உணர்ந்த நிலையில்தான்  பிரம்மமே நானாகவும், மற்றவர்களாகவும், எல்லா உயிர்களாகவும், எல்லாமாகவும் இருக்கின்றது என செய்முறையாக உணரப்பட்ட நிலை(Practical understanding). இந்த பிரம்ம ஞானியின்  அயராத நினைப்பே(அயராவிழிப்புணர்வு) ‘பகுத்துணர்வில் பகுத்துணர்வு’ என்பது.

    3)   ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்கின்ற அருள் வாக்கில் உள்ள உண்மை உறுதிப்படுத்தப்படுவதும் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வினால்’ தான்.

    4)    சுவாமி விவேகானந்தர் அன்று சிகாகோவில், ஆன்மீக உரை நடத்தும்போது, எல்லோரும் கரவொலி எழுப்பி மகிழ்ந்த புனித சொற்களான “Sisters and Brothers”  என்பது இந்த பகுத்துணர்வில் தொகுத்துணர்வினால் தான்.

    5)   சுருங்கச் சொல்லின்,  அறிவது அறிவு, அறிவு தன்னையே அறியும்போதுதான் அறிவு முழுமை அடைகின்றது.  அதுவரை அறிவு குறைவுடையதாகவே உள்ளது.

    6)   ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’தான் இயற்கையின்/இறையின் உண்மை நிலையை பிரகடனப்படுத்துகின்றது.

    7)   ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’தான் மனித அறிவு ஐயுணர்விலே மட்டுமே வாழ்ந்து வருகின்ற நிலையில் தொகுத்துணர்வைச் சேர்த்து  மனிதன் மனிதனாக வாழச் செய்கின்றது.

    8)   மேலும் உண்மை நிலை என்ன? இயற்கையே/இறையே தான் எல்லாமாகவும் தன்மாற்றம் அடைந்துள்ளது.  அதாவது எங்கும், எதுவும், எல்லாமும் இறைமயம்.  (Everything is to be visualised  in terms of Almightyஇதனை மூன்றாம் வகுப்பிற்கான  கணிதத்தின் மூலம்  விளங்கிக் கொள்ளலாம். வாருங்கள்.

    9)   Question:    Express  the sum of the following units in terms of millimetre.

                       கீழ்கண்ட அளவுகளை மில்லிமீட்டர் அளவில் மாற்றவும்.

                         14 km, 80 m, 181 cm, 101 mm.

    unity in diversity_mathematics

    Expressing 14 km, 80 m, 181 cm, 101 mm as 14081911 mm is correct and they are  one and the same. 14 km, 80 m, 181 cm, 101 mm  is none other than 14081911 mm.  இது  தான் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு என்பது. 

    இன்றைய மனிதகுலம் துன்பச்சூழலில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.  பகுத்துணர்விலேயே  மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பதால் துன்பங்கள் மல்கிவிடுகின்றன.  இந்நிலையில் உலகநல  வாழ்த்து மந்திரம் எப்படி இருக்க வேண்டும்?  மனித பண்பாடு குறைந்திருக்கும் காரணத்தாலேயே  துன்பக்கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் உலகை நலம் பெற வாழ்த்துவது என்பது ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதாகத்தானே இருக்க வேண்டும்?!!!  பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற சிந்தனையை வரும் அறிவிற்கு விருந்திலும் மகாகவி பாரதியார் மற்றும் திருவள்ளுவர் அணுகுமுறையில் (20-04-2016-புதன்) தொடர்வோம்.

    வாழ்க வளமுடன்.

                வாழ்க அறிவுச் செல்வம்                                                 வளர்க அறிவுச் செல்வம்.