April 2016

Monthly Archives

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 11/?

     

    வாழ்க மனித அறிவு                 வளர்க மனித அறிவு

    FFC – 184

    27-04-2016—புதன்

    FFC-SUB_title

    FFC-166-dheaivappulavar

    வாழ்க வளமுடன்.

    கடந்த அறிவிற்கு விருந்தில், செம்பொருளாகிய மெய்ப்பொருளை அறிந்து, அறிவை முழுமை அடையச் செய்து கொண்டிருக்கின்ற மனவளக்கலைஞர்களாகிய நாம், எது அறிவு என்று திருவள்ளுவர் கூறுவதனை அறிந்து கொண்டோம். இன்றும் ‘எது அறிவு’ என்று கூறுகின்ற மற்றுமொரு குறளையும் அறிந்து கொள்வோம்.
    மெய் உணர்தல்
    “பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
    செம்பொருள் காண்பது அறிவு”                            குறள் எண் 358

    பொருள்: ‘பிறவித்துன்பத்திற்குக் காரணமான அறியாமை நீங்குமாறு, முக்தி என்னும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு’ என அறிஞர்கள் இக்குறளுக்குப் பொருள் கூறுகின்றனர்.

    இங்கு ஆய்வு செய்ய வேண்டியவைகள் மூன்று உள்ளன. அவையாவன:

    1) பிறவியே துன்பமாவது,
    2) அதற்குக்காரணமான பேதைமை—அறியாமை,
    3) முக்தி.

    இக்குறளில் ‘பிறப்பு என்னும் பேதைமை’ என்றுதான் உள்ளது. ‘துன்பம்’ என்கின்ற வார்த்தையே காணப்படவில்லை. இருப்பினும் இக்குறளுக்குப் பொருள் கூறும்போது பிறவியைத் துன்பமாகக் கருதி ‘பிறவித்துன்பத்திற்குக் காரணமான அறியாமை’ என்கின்றனர் பொருள் கூறும் அறிஞர்கள். எனவே பிறவி எவ்வாறு துன்பமாகும் என ஐயம் நமக்கு எழலாம்.
    ‘பிறவியைத் துன்பமாகக் கருதுவது’ உலகியல் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் கூறுகின்ற கூற்றாகவல்லவா இருக்கின்றது என்று மற்றுமொரு ஐயமும் எழலாம்.

    விரக்தி என்பது என்ன?

    விரக்தி என்பது, வாழ்க்கையில் துக்கம், இழப்பு, கவலை, ஆகியவைகள் ஏற்படும்போது, அம்மூன்றிற்கும்
    என்ன காரணம் என்று அறியாமலே இருக்கும்போதும்,
    மேலும் காரணம் என்ன என்று எளிதில் அறிய முடியாமல் இருக்கும்போதும்,
    காரணம் அறிந்து கொள்ளும் திறன் இல்லாமல் இருக்கும்போதும்,
    தன்மேலேயே, ஒருவகை கற்பனையான மனோநிலையில் ஏற்படும் வெறுப்பு.

    முன்வினை மற்றும் இப்பிறவியில் அறிந்தோ, அறியாமலோ செய்துள்ள பாவச்செயல்களின் விளைவால், துன்பங்கள் அதிகமாகி, அதற்கானக் காரணம் முன்வினையும், தான் இதுவரையில் செய்துள்ள தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவச் செயல்களே என்று அறியமாமல் தவிக்கும்போது வருவது ஒருவகை விரக்தி.

    ஆனால் ‘பிறவியே துன்பம்’ என்று திருவள்ளுவர் கூறுவது விரக்தியால் அல்ல. மாறாக பேரறிவின் தன்மையான விவேகத்தால் கூறப்படும் கூற்றாகும். ‘விவேகத்தால் கூறப்படும் கூற்று என்பது எவ்வாறு’ என்கின்ற மூன்றாவது ஐயம் எழலாம்.

         விவேகம்(Wisdom) என்பது ஒன்றின் நிலையைத் தெளிவாக அறிந்து செயல்படும் அறிவு. இயற்கையின் ஆதிநிலையாகிய/இறைநிலையாகிய மெய்ப்பொருள் வேகத்தையும்(Force), விவேகத்தையும்(Consciousness)தானே கொண்டுள்ளது.

    எனவே, மெய்ப்பொருளை அறியும் நோக்கத்தில், பயணித்துக் கொண்டிருக்கும் அறிவிற்கு, இறுதி  பிறவியில் ஏற்படுகின்ற, எதார்த்த நிலையை புரிந்து கொள்கின்ற தெளிவே விவேகத்தின் வெளிப்பாடாகும்.

    பிறவி என்பது துன்பமாகத்தானே உள்ளது!? எதற்கு துன்பமாக உள்ளது? துன்பம் என்பது உணர்வு என்பதால், உணர்வை அறிந்துகொள்ளும் அறிவிற்கு பிறவி துன்பமாக இருக்கின்றது. அதாவது ஆன்மாவில் இருக்கும் அறிவுதான் பிறவியைத் துன்பமாக உணர்கின்றது. ஏனெனில்,
    பேரறிவே தன்னையே அறிந்து கொண்டு(சுத்த அத்வைதம்) இன்புற எடுத்துக் கொண்ட
    மனிதஉரு தன்மாற்ற பயணத்தில்,
    அறிவு தன்னை அறியாமலேயே இருப்பதும்,
    தன்னை அறிய முயலும்போதும் ஏற்படுகின்ற தடைகளும் துன்பங்களாகவேத்தானே இருக்க முடியும்?

    மாற்றாக இவ்வாறாகவும் புரிந்து கொள்ளலாம். எப்படி? மனித அறிவு மெய்ப்பொருளை, பேரறிவை அறிந்து கொள்வது என்பது எப்போது சாத்தியமாகும்? ஆன்மா தன்னை முழுவதுமாகத் தூய்மை செய்து கொள்ளும்போதுதான் சாத்தியமாகும். தூய்மை செய்வது என்பது,

    ஏற்கனவே உள்ள அழுக்கை நீக்கினால்தானே சாத்தியாமாகும்!
    ஏற்கனவே பல பிறவிகளில், அறிவு, அறியாமையால்
    ஆணவம்(தன்முனைப்பு), கன்மம்(பாவப்பதிவுகள்), மாயை(எதார்த்தத்தை விளங்கிக் கொள்ளாமல் இருத்தல், அறிய வேண்டியதை அறியாதிருத்தல், பொருளல்லவற்றை பொருள் எனக் கொள்ளுதல்) ஆகிய மும்மலங்களால் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற
    தீய வினைகளின் பதிவுகளே ஆன்மாவில் உள்ள அழுக்குகளாகும்.
    ஆகவே தீய வினைகளின் பதிவுகள் செயலிழக்கச் செய்வது என்பது ‘செயலுக்குரிய விளைவு உண்டு’ என்கின்ற இயற்கை/இறை நீதியின்படி தீயச்செயல் பதிவுகளுக்கு, விளைவுகள் வரும்போது அது துன்பங்களாகவே வந்துதானே தீர வேண்டும்.

    FFC-184- எனவே ஆன்மாவிற்கு-

    எனவே ஆன்மாவிற்கு பிறவி என்பது, இயற்கையின் நியதியின்படி, தன்னிடம் பதிந்துள்ள செயல் பதிவுகளுக்கேற்ப விளைவுகளைத் தருகின்ற ஒரு சாதனம்(Medium). மேலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நாம், வாழ்க்கை என்பது என்ன என்று எப்போதாவது சிந்தித்து பார்த்திருக்கிறோமா?! சற்குருவின் அருளால் அறிவுக்கண்–சிந்தனைக்கண் திறந்தபிறகுதானே இப்போது சிந்தித்துப் பார்க்கிறோம்.

    வாழ்க்கை என்பது என்ன?

    வாழ்க்கை என்பது இன்ப—துன்ப அனுபவங்களே அன்றி வேறு ஏதும் அல்ல! யாருக்குமே துன்பமில்லாமல் வாழ்நாள் முடிந்து விடுவதில்லை.
    சிலருக்கு இன்பம் அதிகமாகவும், துன்பம் குறைவாகவும் இருக்கலாம்.
    அல்லது
    இன்பம் குறைவாகவும், துன்பம் மிகுதியாகவும் இருக்கலாம்.

    துன்பம் வரும்போது, இன்பம் வந்தபோது அனுபவித்த நினைவுகளைக் கொண்டு துன்பத்தை சரிசெய்து கொள்ள முடிகின்றதா மனிதனால்?! இல்லையே! துன்பம் வரும்போது மனிதன் துவண்டு விடுகின்றானே!

    ஒரு வேளை உதாரணத்திற்கு, ஒருவருக்குப் பிறந்ததிலிருந்து துன்பம் என்று சொல்லும் அளவிற்குத் துன்பமே வந்ததில்லை என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் முற்பிறவிக் கருமையப் பதிவுகளை யார் அறிவார்?! ஆகவே துன்பம் இல்லாமல் இருக்கும் ஒருவர், இனிமேலும் தமக்குத் துன்பம் வராது என நினைக்கவோ/சொல்லவோ முடியுமா? முடியாது. இதனை மற்றவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்தும்கூட அறிந்து கொள்ளலாம்.

    FFC-184- ஆகவே பிறவி என்பது-

    பிறவி எடுப்பதே புலன்களின் வழியாக இன்பம் அனுபவிப்பது மட்டுமே அல்ல. இது சாதாரண இன்பம். சற்றேறக்குறைய மூன்று லட்சத்து இருத்தைந்தாயிரம் (65,00000÷ 20=3,25,000) பிறவிகளில், ‘தின்றுத் திரிந்து உறங்கி அனுபவித்ததுதானே இந்த சாதாரண இன்பம்! மகரிஷி அவர்கள் அழைப்புக்கவியில் ‘தின்றுத் திரிந்து உறங்கவா பிறந்தோம்’ என அன்புடன் வினவி அறிவுறுத்துவதனை நினைவில் கொள்ள வேண்டும்.

    FFC-184- சலிப்பை ஏற்படுத்துகின்ற-

    புலன்களின் உதவியின்றி அனுபவிக்கின்ற இன்பம் ஒன்று உள்ளது மனிதப்பிறவிக்கு. அந்த இன்பத்தை ஏற்கனவே முற்பிறவியில் அனுபவித்திருந்தால் இப்போது இந்தப் பிறவி எடுத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அது என்ன இன்பம்? அதற்கு என்ன பெயர். பொருள், மெய்ப்பொருள் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது போன்றாதா அது? ஆம்! மனம் நான்கு நிலைகளை அனுபவிக்கக்கூடியது என்றும், இதுவரை மனதைப் பற்றிய தெளிவான கருத்துக்கள் வெளியாகாத நிலையில் ‘மனம் உயிரின் படர்க்கை நிலை‘ என்றும் கூறுகிறார், மனதை வளப்படுத்தும் கலையை வகுத்துள்ள வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    புலன்களின் துணையில்லாமல் அனுபவிக்கும் இன்பம் பேரின்பம்(ecstasy) என்பது அமைதியும் திருப்தியும் கலந்த இன்பம் என்கிறார் மகரிஷி அவர்கள். பேரின்பத்தில் அமைதியும் இருக்கும். திருப்தியும் இருக்கும். ஆனால் புலனின்பத்தில், அறிவின் அறியாமையால், திருப்தி வாராமல், இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என அவா நீடித்துக் கொண்டே, ‘அளவு கடைப்பிடித்தலும், முறையை மாற்றாமையும்’ என்கின்ற இன்பத்தின் சாம்யத்திற்கு (formuala for pleasure—to follow implicitly limit and method)உட்படாமல்போய், புலன்களின் செல்களுக்குப் பொருந்தா உணர்வு ஏற்பட்டு, விளைவு, இன்பமே துன்பமாகிவிடுகின்றது. ஆனால் பேரின்பம் என்பது அறிவின் அறியாமை நீங்கிய நிலையில் அனுபவிக்கப்படுவதால், புலன் இன்பங்களை அளவு, முறையோடு அனுபவித்தும், பேரின்ப நிலையை அனுபவிப்பதால் அங்கே புலன்களுக்கு பொருந்தா நிலை ஏற்படுவதில்லை. மாறாக பேரின்ப போதையில் திளைக்கலாம்.

    ஆகவே பிறவி ஆன்மாவிற்கு துன்பமே என்கின்றனர்

    ஆன்றோர்கள்.  அதனால்தான் ‘மீண்டும் பிறவா வரம்

    வேண்டும்’ என்கின்றனர் பக்தியில் திளைத்தவர்கள்.

    எவ்வாறு கடல் நீர் ஆவியாகி மேகமாகி, ஆறவாரமிட்டுக் கொண்டு, ஆறாகவும், நதியாகவும் ஓடி மீண்டும் கடலை சென்றடைந்ததும் அமைதியடைகின்றதோ, அதேபோன்று ஆன்மா எங்கிருந்து புறப்பட்டதோ, மீண்டும் அங்கேயே சேர்வதற்காகத்தான் மனிதப்பிறவி எடுக்கின்றது. இஃதன்றி, ஆன்மா மாறான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால்(புலன்மயக்கம் கொண்டு, பிறவியின் நோக்கம் அறியாமல்), ‘பிறவியே துன்பம்’ என மனிதனுக்குத் தெரியாமல் போனாலும், .இயற்கையின்படி மனிதனுக்கு பிறவி துன்பமே. துன்பம் வருகின்றபோது ஏன் துன்பம் வந்தது/வருகின்றது என்று சிந்திக்க வேண்டாமா மனிதன்? துன்பம் என்பது என்ன, ஏன் வருகின்றது என்கின்ற கேள்வி எழுந்துவிட்டால் அது மனிதனை இறை உணர்விற்கு அழைத்துச் செல்லும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    இளைஞர் ஸ்ரீ வேதாத்திரியை பின்னர் மகானாக்கிய,  அவருள் இளமையிலேயே எழுந்த உன்னத வினாக்களில் ஒன்றுதான் ‘துன்பம் என்பது என்ன, ஏன் வருகின்றது’ என்பது. இதே போன்றுதான் இளவரசராக இருந்த புத்தருக்கும் துன்பம் பற்றிய வினா எழுந்ததால்தான் பின்னர் போதிமரத்தடியில் ஞானம் பெற்றார்.

    அதாவது ‘துன்பம் என்பது என்ன, ஏன் வருகின்றது’ என்பதற்கு ‘இறை உணர்விற்கும்’ தொடர்பு உள்ளதே இதற்கானக் காரணம். ‘மனிதப் பிறவியில் இறை உணர்வு பெற்றிட வேண்டும்’ என்பது இயற்கையின் நோக்கமாக உள்ளதால், அதனை அறியாமலோ அல்லது மறந்தோ அல்லது அலட்சியப்படுத்தியோ வாழ்வது இயற்கைக்கு முரணான வாழ்க்கையாகத்தானே அமையும். இயற்கைக்கு முரண்பட்டு வாழ்ந்தால், விளைவு துன்பம் தானே!?

        எனவே துன்பத்திற்கான காரணத்தை அறிந்து அதனைப் போக்கிக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் ஆழ்மனதிலிருந்து(மனதின் மறுமுனையிலிருந்து) வந்துவிட்டால், அதற்கான ஒரே தீர்வான ‘இறை உணர்வு பெறுவதே’ என்பதனை அறிவு கண்பிடிக்கின்றது. மேலும், இதற்கு இயற்கையே/இறையே துணையாகவும், காப்பாகவும் அமைகின்றது. எனவேதான் மகரிஷி அவர்கள் ‘துன்பம் ஏன் வருகின்றது’ என்கின்ற வினா வந்துவிட்டால் அது இறை உணர்விற்கு கொண்டு செல்லும் என்கிறார்.

    அறிவு தன்னை அறியாத அறியாமையின் காரணமாக துன்பம் தரக்கூடிய மீண்டும் மீண்டும் பிறப்பு—இறப்பு என்கின்ற, ஓயாத சுழற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ளும் அறியாமை நீங்கிய அறிவால்தான் முடியும் என்கிறார் அறிஞர் திருவள்ளுவர். அந்த அறிவுதான் ‘அறிவு’ என அறிவிற்கு வரையறையை கூறுகிறார் அறிஞர் திருவள்ளுவர்.

    மேலும் முக்தி என்பதும் வள்ளுவர் கூறும் அறிவின் நிலையே அது. இதனையே நம் குருதேவர் அவர்கள் ‘அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை, அது முக்தி என்கிறார். ‘அவன் நீ ஒன்றாய் அறிவது’ என்பது எப்போது சாத்தியமாகின்றது? ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற திறனை அறிவு பெறும் நிலையில்தான் சாத்தியமாகின்றது.

    மனிதன் பண்பாட்டில் உயர்வதற்கு பண்பேற்றம் பெறவேண்டும். அதற்கு மனிதப்பிறவியின் நோக்கமான இறை உணர்வு பெறவேண்டும். அதாவது ஆறறிவுடன் வாழ்கின்ற மனிதன், அதற்கு பொருத்தமாக, இறை உணர்வு பெற்று பிறவிப்பயனை பெற்றிடல் வேண்டும் என்று ‘மலர் வழியே விளங்கும் மறைபொருள்’ என்கின்ற தலைப்பில், சுத்த அத்வைத வி்ஞ்ஞானத்தை எளிமையாக விளக்க விரும்பிய மகரிஷி அவர்கள் அக்கவியின் கடைசி வரிகளில் கூறுகிறார்.

    இந்த நிலை என்பது மனிதகுலத்தில் இயற்கையின் ஆதிநிலையின்/இறைவெளியின் இயல்பூக்க நியதியின்படி நடந்தே ஆக வேண்டியதே! இருப்பினும், ‘Fraction demands Totality Supplies’ என்பதனையும் கண்டுபிடித்த மகரிஷி அவர்கள், இறை உணர்வால் மலர வேண்டிய ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய நெறிகளைக் கொண்ட அற உணர்வு மலர்ந்திட அறிவு ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்கின்ற திறனைப் பெற்றிட வேண்டும் என்கின்ற சங்கல்பத்தை வாழ்த்தாக அமைத்துள்ளார் உலகநல வாழ்த்துப்பாவில். வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம். வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

    இத்துடன் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற உலகை வாழ்த்தும் மகா மந்திரத்தின் உட்பொருளை விரிவாக பதினோறு விருந்துகளில் அருந்தினோம். இதனை மீண்டும், மீண்டும் நினைவிற்கு கொண்டுவந்து, கொண்டு வந்து,  ஆழ்ந்து விரிந்து சிந்தித்து உலகை வாழ்த்தும் புனித எண்ணமான மகா மந்திரத்திற்கு ஆற்றலையும், திணிவையும் அளிப்போம்.

    வாழ்க உலக சமாதானம். மலரட்டும் விரைவில் உலக சமாதானம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்.

  • சிந்திக்க வினாக்கள்-171

    வாழ்க மனித அறிவு                    வளர்க மனித அறிவு

    25-04-2016 – திங்கள்

     சத் சித் அனந்தம் என்பதற்கு மகரிஷி அவர்கள் கூறும் பொருள் என்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்             வளர்க அறிவுச் செல்வம்

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 10/?

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

    FFC – 183

    24-04-2016—ஞாயிறு

    FFC-183-sub titlle-Untitled

      FFC-166-dheaivappulavar

    வாழ்க வளமுடன்.

         ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மகா மந்திர வாழ்த்து பற்றி பல துணைத்தலைப்புகளில் சிந்தித்து வருகிறோம். மகரிஷி அவர்கள்  ‘தன்னைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் திருக்குறள் ஆகும்’ என்கிறார்.  ஒரு மனிதன் அறிவின் முழுமையை அடைய அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கு வாழ்க்கைத்துறைகள் பற்றிய தெளிவுடன் இருக்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். அறிவின் முழுமையில்தான் மனிதன் தனது தீயவினைப்பதிவுகளை முழுமையாகப் போக்கிக் கொள்ள முடியும்.  மீண்டும் பிறவா நிலை எய்த முடியும்.  அறிவின் முழுமைப்பேற்றில்தான் ஆன்மா பிறவி எடுத்ததற்கான காரணம் நிறைவேறிவிடுகின்றது. அதாவது, அறிவு வாழ்நாளில், உணர்கின்ற எல்லாவற்றிலும் சிறப்பானதும், முதன்மையானதுமாகிய ‘தன்னையே உணர்ந்து கொள்ள முடிகின்றது.  இந்தப்பேறு தான் வீடுபேறு. பிரபஞ்சத்திற்கே வீடுமாகவும், அதே நேரத்தில் இப்பிரபஞ்சத்தில் மனிதன் எழுப்பியுள்ள வீடுகளுக்கெல்லாம் வீடாகவும் உள்ள இயற்கையின் ஆதிநிலையை/இறைவெளியை உணர்ந்துகொள்வதனைப் பேறாகக் கருதி, அது வீடுபேறு என அழைக்கலாகின்றது.

         ஞானநெறியைக் காட்டிய சான்றோர்களில் ஒரு சிறந்த பேரறிஞர் திருவள்ளுவர் என்கிறார் மகரிஷி அவர்கள். மேலும் கூறுகிறார்: திருவள்ளுவர் ‘படைப்பு’ எனும் கற்பனையிலிருந்து விடுபட்டு, ‘தன்மாற்றம்’(பரிணாமம்) என்கின்ற உண்மை வழியிலே முழுமை பெற்ற மெய்ஞ்ஞானி ஆகிறார் என்கிறார் மகரிஷி அவர்கள்.  இதுவரை திருவள்ளுவரை இவ்வாறு அறிந்து வெளிப்படுத்தியவர் வேறு யார் உள்ளனர் எனத் தெரியவில்லை. எனவேதான் திருவள்ளுவர் அவதரித்த பிறகு, பத்தொன்பது நூற்றாண்டுகள் சென்ற பிறகு அவதரித்த மகரிஷி அவர்கள், திருவள்ளுவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஆன்மீக–இயல்பூக்க நியதியின்படி தானும் பண்பேற்றத்தில் ஏற்றம் பெற்று, நம் எல்லோரையும் உள்ளடக்கிய உலக சமுதாயத்தையும்  பண்பில் ஏற்றம் பெறச்செய்யவல்ல மனவளக்கலையை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

    sudhtha advaitham

            எனவே இன்று திருவள்ளுவர் வழியில் ‘மெய்பொருள் காண்பது அறிவு’ என்கின்ற துணை தலைப்பில் சிந்திக்க இருக்கிறோம்.  இன்று மகரிஷி அவர்களின் கண்டுபிடிப்பான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மகா வாழ்த்து மந்திரம் திருவள்ளுவரின் எந்த கண்டுபிடிப்புடன் இணைகின்றது என்பதனை அறிவோம்.

        மகரிஷி அவர்களின் மானசீகக் குருவான தெய்வப் புலவர் திருவள்ளுவர் அறிவாற்றல் பற்றி   ஏதாவது  கூறியிருக்கின்றாரா என சிந்தித்தால், ‘கூறுகின்றார்’ என்கின்ற பதிலே வருகின்றது.

        ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்பதனை ஒன்றுபடுத்திப் பார்ப்பதற்கு,  தெய்வப்புலவர் கூறும் குறட்பாக்கள் என்னென்ன?  மெய்உணர்தல் என்கின்ற அதிகாரத்திலும், அறிவுடைமை எனும் அதிகாரத்திலும் அக்குறட்பாக்கள் இடம் பெற்றுள்ளன.

     அதிகாரம் – 36 – மெய் உணர்தல்

     எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்பது அறிவு.               குறள் எண். 355.

          இக்குறள் மெய் உணர்தல் அதிகாரத்தில் இடம் பெற்று, அறிவு பற்றி கூறுகின்றது. எது அறிவு என்கிறார் அறிஞர் திருவள்ளுவர். ஆறாம் அறிவிற்கான வரையறையைக்  கூறுகின்றார். ஆகவே மெய்யை/மெய்ப்பொருளை/இறையை உணரவிருக்கின்ற ஒவ்வொருடைய அறிவும் எந்த பரிபக்குவ நிலைக்கு தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.  மெய்உணர்வு/இறைஉணர்வு பெறுதலுக்கான வரையறையையும் இக்குறளில் காணமுடிகின்றது.  மெய்ப்பொருள் என்பது என்ன?  பெயரிலிருந்தே தெரிகின்றது அதுதான் மெய்யான பொருள் என்று.  ஆகவே மற்றப் பொருட்கள் பொய்யானவை; பொருட்களல்ல என்றாகின்றது.  இருப்பது எவ்வாறு பொய்யாக அல்லது இல்லாததாக முடியும் என்கின்ற நியாயமான ஐயமும் எழுகின்றது.  நியாயமான ஐயம் நீங்க இன்றைய சிந்தனை துணைபுரியட்டும்.

    eadhu meypporul

     ‘மெய்உணர்வு’ என்றால் என்ன பொருள்? 

    மெய்ப் பொருளை உணர்வது மெய் உணர்வு.  

    மெய்ப்பொருளின் தன்மையை உணர்வது மெய் உணர்வு. 

    மெய்ப்பொருள் தன்மை என்பது என்ன? 

    மெய்ப்பொருள் ஒன்றே எல்லாமாகவும் ஆகியுள்ளது என்பதுதான் மெய்ப்பொருளின் தன்மையாகும்.

     எனவே பேரறிவே பின்னப்பட்டு தனது தன்மாற்ற பயணத்தில் மனிதனிடம் வந்து, தன்னையே/தனது மூலநிலையாகிய மெய்ப்பொருளையே அறியும்போதுதான் ஆறாம் அறிவாகின்றது.  அதாவது மனித அறிவு முழுமையாகி மெய்ப்பொருளாகிவிடுகின்றது.  

      அடுத்ததாக அறிவுடைமை அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள குறளைக் கவனிப்போம்.

     அதிகாரம்-43- அறிவு உடைமை

     எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்பது அறிவு.                  …. குறள் எண் 423

     ‘மெய் உணர்தல்’  அதிகாரத்தில் எது அறிவு என்று கூறிய அறிஞர் திருவள்ளுவர், மீண்டும் அறிவுடைமை எனும் அதிகாரத்திலும் எது அறிவு என்று கூறுவதனைக் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆறாம் அறிவின் கடமையும், பொறுப்புமாக உள்ளது.

            ஒருமனிதனுக்கு இருக்க வேண்டிய பத்து உடைமைகளில் ஒன்றாக அறிவைக் கருதி அறிவு உடைமை எனும் அதிகாரத்தை வகுத்துள்ளார் திருவள்ளுவர். மனிதர்கள் என்றால் எல்லோருக்குமேதான் அறிவு இருப்பதால்   எல்லோருமே அறிவை உடைமையாக, அதாவது தனது செல்வமாகக் கொண்டிருப்பதில்லை என்கின்ற எதார்த்த நிலையைக் கருதி  ‘அறிவை’, தனது உடைமையாக–செல்வமாக ஆக்கிக்கொள்வதற்காக அறிவுடைமை என்கின்ற அதிகாரத்தை வைத்துள்ளார்.  வாழ்க அறிவுச் செல்வம்.  வளர்க அறிவுச் செல்வம்.

         அறிவு என்றாலே அறிந்து கொள்ளும் இயல்புடையது அறிவு.  அறிந்து கொள்வது தானாகவும் அறிந்து கொள்ளலாம்.  அல்லது யாராவது சொல்லக் கேட்டும் அறிந்து கொள்ளலாம்  எவ்வாறாக இருந்தாலும் ஒன்றைப் பற்றி அறியும்போது அதன் உண்மைப் பொருளை அறிந்து கொள்ளும் அறிவே அறிவு என வரையறுக்கிறார்(Defines what is Consciousness) திருவள்ளுவர்.

         திருவள்ளுவர் அறிவைப்பற்றி கூறும் அடிப்படையிலிருந்துதான்,  ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மகா மந்திர வாழ்த்தை உருவாக்கிய  மகரிஷி அவர்களிள் அறிவுகூர்மையை நாம் அறிந்து மகிழ முடிகின்றது/வேண்டியுள்ளது.  எனவேதான் ‘தன் அறிவைக் கவர்ந்த ஒரே ஒரு பெருநூல் திருக்குறள்’ என மகரிஷி அவர்கள் கூறுவதற்கானக் காரணத்தையும் அறிய முடிகின்றது.  மெய்ப்பொருளை அறிந்த அறிவுதான் அறிவு (ஆறாம்) என்கிறார் திருவள்ளுவர். 

        மெய்ப்பொருளை அறிந்த அறிவுதான் மனிதஇனம் பண்பாட்டில் உயர்ந்திருக்க முடியுமன்றோ!  மெய்ப்பொருள் அறிந்த அறிவுதான் முழுமை அடைகின்றது.  சமுதாயத்தில் இன்னும் பண்பாடு உயரவேண்டும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.  பண்பாடு உயர்வதற்குத் தேவையானது, உலகமக்கள் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ பெறும் திறமையைப் பெறவேண்டும்.  எனவே ‘பகுத்துணர்வில் பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற மகா வாழ்த்தினை எண்ண அலைகளாக பரப்ப ஏற்படுத்தியதுதான் உலகநல வாழ்த்துப்பா.

          ஏன் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற சொற்றொடரை புனிதச் சொற்றொடர் என்கிறோம்?  அச்சொற்றொடர் கூறும்  நிலையினை மனிதன் அடைவானாகில் அவன் புனிதம் அடைகிறான்.  அதாவது மெய்ப்பொருள் உணர்ந்த நிலை அது.  மேலும் கூறுவதென்றால், ஐயப்படாது அகத்தை உணர்ந்த நிலை அது.  அந்த நிலையை அடைந்த மனிதனை தெய்வத்தோடு ஒப்புக் கொள்ளலாம். அறிவாகிய தெய்வத்தையே-தெய்வீகம் தன்னுள் இருந்து பூரித்து மலர்வதை உடைமையாக்கிக் கொண்ட நிலை அது.

         ஆகவே புனிதச் சொற்றொடரான ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்பது என்ன என்கின்ற விளக்கத்தை மகரிஷி அவர்களின் வழியாக நேரிடையாகவும் அதற்கு மேலும் சான்றளிக்கும் வகையில் செந்நாப்புலவர் திருவள்ளுவரையும் நமது சத்சங்கத்தில் இப்போது எழுந்தருளச் செய்து கொண்டோம். இந்த பிரபஞ்சமே இயற்கையின்/இறையின் உடலாக நினைக்க வேண்டியது இப்போது எளிதாகிவிட்டது.

         மெய் உணர்வு பெறுதல்-இறை உணர்வு பெறுதல்-தன்னிலை உணர்தல்-நான் யார் என்கின்ற  வினாவிற்கான புனித விடையை பெறுவதற்கான செய்முறைத் தேர்வில் வெற்றி பெற்றமை ஆகியன என்பது என்ன?  இயற்கையின் ஆதிநிலையே/இறையே/தெய்வமே நானாகவும், நானே மற்றவர்களாகவும், மற்ற உயிரினங்களாகவும், எல்லாப்பொருட்களாகவும் உள்ளேன் என்று அறிதலே ஆகும். 

        மேலும் ஏதாவது குறள் நம்முடைய இன்றையச் சிந்தனைக்கு உதவுகின்றதா என்றால், ஆம் மற்றுமொரு குறளை எடுத்துக் கொண்டு  அடுத்த அறிவிற்கு விருந்தில் (27-04-2016-புதன்) ஆராய்வோம்.

     வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவுச் செல்வம்.