April 2016

Monthly Archives

  • FFC – 178-தெளிவு—4/?

    வாழ்க மனித அறிவு                                                              வளர்க மனித அறிவு

                     தெளிவு—4/?                     

                                                                       FFC – 178                                                    

     06-04-2016—புதன்.

    ffc-178- title

    வாழ்க வளமுடன்.

                     தெளிவு’ பற்றி கடந்த மூன்று அறிவிற்கு விருந்துகளில் தெளிவு அடைந்து வருகிறோம்.  இன்று அறிஞர் திருமூலர் கூறும் மூன்றாவது வழியான ‘தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்’ என்பது பற்றி சிந்திக்க இருக்கிறோம்.  மீண்டும் அப்பாடலை நினைவு படுத்திக் கொள்வோம்.

     குருவருளே திருவருள்

     தெளிவு குருவின் திருமேனி காண்டல்

    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

    தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

                                                  . . . அறிஞர் திருமூலர்.

     ‘தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்’: 

                குருவினுடைய திருமேனியும், திருநாமமும் எவ்வாறு அறிவிற்குத் தெளிவினைத் தருகின்றது என்பதனை ஐயமின்றி அறிவுப்பூர்வமாக சென்ற அறிவிற்கு விருந்துகளில் சிந்தித்தோம். இப்போது மூன்றாவது வழியான   ‘குருவினுடைய திருவார்த்தை கேட்டலும்’ தெளிவினைத் தருகின்றது என்று  அறிஞர் திருமூலர் கூறுவதனை சிந்திப்போம்.

          கேட்டல் தெளிவினைத் தருகின்றது என்றால் ‘தெளிவு’ என்பது என்ன? தெளிவு என்பது அறிவிற்கு ஏற்படுவது.  அறிவிற்கு ஏற்படுவது என்றால், அது உணர்வா? ஆம் உணர்வுதான்.  ஆனால் அது  வழக்கம்போல் புலன்கள் வழியாக ஏற்படும் உணர்வு அன்று? பின்னர் என்ன உணர்வு அது?  புலன்களின் உதவியின்றி, அறிவிற்கு ஏற்படும், முடிவான பேரானந்த நிலைக்கு இட்டுச் செல்லும் ஆனந்த உணர்வு அது.

        அப்படியானால் என்ன?!

        உணர்வதும், அறிவதும் எதுவோ அதுவே அறிவு.  அப்படியிருக்கும் போது, புலன்கள் உதவியின்றி அறிவிற்கு ஏற்படும் அந்த ஆனந்த உணர்விற்கு வேறு பெயர் ஏதேனும் உள்ளதா? உள்ளது. அதுதான் தெளிவு.

         இருப்பினும், இப்போது நேரிடையாகத் ‘தெளிவு’ என்பது என்ன என்கின்ற முடிவிற்கு வருவோம். உணர்வதும், அறிவதுமாகிய அறிவிற்கு ஏற்படும் தெளிவு என்பது, அறிவிற்கு ஏற்படும் சரியான மிகமிகத் துல்லியமான புரிதலாகும் (correct and the Most precise understanding). இதுவரை சூரிய வெளிச்சம் இருந்தும், அறியாமை என்கின்ற இருளில்வாழ்ந்து வந்ததால் , இருட்டில் இருந்த அறிவிற்கு ஏற்படும் அந்த சரியான, மிகமிகத் துல்லியமான புரிதல்  அறிவொளியை வீசுவதால், அது ஆனந்தத்தை  ஏற்படுத்தும் அறிவிற்கு.  இந்த ஆனந்தமே முடிவாக மனதின் நான்காவது நிலையான பேரானந்தத்திற்கு  இட்டுச்செல்லும்

         ‘கேட்டல்’ தெளிவினைத் தருகின்றது என்கிறார் அறிஞர் திருமூலர். கேட்டல் பற்றி வேறு அறிஞர்கள் கூறுவதென்ன என்பதனையும் அறிந்து கொள்வோம். ‘கேட்டல்’ என்பது செல்வத்தைத் தருகின்றது என்கிறார் அறிஞர் திருவள்ளுவர் .

     “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம்

    செல்வத்துள் எல்லாம் தலை“   குறள் எண். 411

         இக்குறளின் பொருள் யாவரும் அறிந்ததே.  ஒருவர் தான் பெற்றிருக்கும் செல்வங்களுள், செவியால் கேட்டு அறிந்து கொள்ளுதலே தலையாயச் செல்வமாகும். கேட்பது என்பது, செவி வழியாக நடப்பதால், கேட்டறியும் செல்வத்தை செவிச் செல்வம் என்கிறார். அறிஞர் திருமூலா்  ‘கேட்டு அறிவதனை தெளிவு’ என்கிறார்.  தெய்வப்புலவரோ ‘கேட்டு அறிவதனைச் செவிச் செல்வம்’ என்கிறார். இவ்விரு அறிஞர்களின் கூற்றுக்களை உற்று நோக்கினால், ‘கேட்பது’ என்பது பொதுக்காரணியாக உள்ளதால், ஒரு சமன்பாடு (Equation) வருகின்றது.

     அது,

    தெளிவு = செவிச்செல்வம் என்பது.

         தெளிவும், செவிச் செல்வமும் ஒன்றே என்று, சமன்பாடு (Equation) தெரிவித்தாலும், அறிவு, இன்னும் இதற்கு மேலும் தெளிவினை விரும்புகின்றது.  தெளிவாகிவிட்டால் இனிமேலும்,  மீண்டும்  ஐயம் எழாது  அறிவிற்கு.

         எனவே ‘கேட்டு அறிவதனை’, செல்வம் என்று தெய்வப்புலவர் கூறுவது எப்படி என ஐயம் எழுகின்றது அறிவிற்கு.  செல்வம் என்பது என்ன? செல்வம் என்பது பொதுவாக பொன், பொருளைக் குறிக்கும்.  செல்வம் என்பது ஒருவருக்குச் சொந்தமான மதிப்புள்ள உடைமைகளின் தொகுப்பு, சொத்து ஆகும்.

        தெய்வப்புலவர் கேட்டு அறிவதனை, சாதாரணமாக ‘செல்வம்’ என்பது என்ன என்று கூறும் அர்த்தத்தில் கூறவில்லை.  கேட்டு அறிவது என்பது செவிச்செல்வம் என்பதால் அது சாதாரணமான பருப்பொருள் செல்வமாக இருக்க முடியாது.  செவிச் செல்வம் என்பது அரூபா–ரூபச் செல்வம்.  அது அறிவிற்கு ஏற்படும் பூரணச்செல்வம்.  மற்ற செல்வங்கள்  உடல் வாழ்வதற்குத்  தேவையான உணவு, உடை, உறைவிடம் பெறுவதற்குத் தேவையானது.  ஆனால் அறிவு பேரின்பமாக வாழ்வதற்கு செல்வம் தேவையிருக்கின்றது.  அது தான் அறிவிற்கு ஏற்படவேண்டிய மிகமிகத் துல்லியமான புரிதல். எனவே அந்த மிகமிகத் துல்லியமான புரிதல் என்பதனை ‘தெளிவு’ என்கிறார் அறிஞர் திருமூலர்.

    அதனையே தெய்வப்புலவர், குருவிடம், அறிவில் சிறந்தவர்களிடம், கேட்டு அறிவதனை செல்வம் என்கிறார். அதுவும் ஒருவர் பெற்றிருக்கும் செல்வங்களில் தலையாயச் செல்வம் என்கிறார்.

     குருவிடம் கேட்டறிவது என்பது, அறிவு மேலும், மேலும் தெளிவு பெற்று கடைத்தேறுவதற்கு பேருதவியாக இருக்கும். மேலும், கடைத்தேறுவதற்கு ‘நாள் கடந்து போகின்றதே’ என்கின்ற கவலையை(anxiety), நீக்குவதால், அறிவு தனது பூர்வீகச் சொத்தான, அமைதியினை அனுபவித்து வர முடிவதால், அதனை செல்வம் என்கிறார், அதே வேளையில் ‘புதிது, புதிதாக தெரிந்து கொண்டு தெளிவு அடைந்து வருகிறோம்’ என்கின்ற மகிழ்ச்சியான மகிழ்ச்சி. மகிழ்ச்சியான மகிழ்ச்சி செல்வம்தானே?!

     கல்வியின் சிறப்பையும், பயனையும் கூறுவதற்கு

        1) ‘கல்வி’ எனும் அதிகாரத்தை வைத்துவிட்டு,

        2) அக்கல்வியினை கற்காமல் போனால் அதனால் ஏற்படும் இழப்பைக் கூறுவதற்கு ‘கல்லாமை’ என்கின்ற அதிகாரத்தை வைத்துவிட்டு

        3)  அதற்குஅடுத்ததாக ‘கேள்வி’ என்கின்ற அதிகாரத்தை வைத்துள்ளதன் நோக்கத்தை அறிவதனால்

    திருவள்ளுவர் இல்லாத காலத்திலும், திருவள்ளுவரின் அறிவாற்றலுடன் தொடர்பு கொள்கிறோம்.

          கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்று, அவ்வாறே கற்றதற்கு ஏற்ப வாழ வேண்டும் என்று (குறள் எண். 391) கூறிவிட்டு,

        அதே அதிகாரத்தில்(குறள் எண். 398)  ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்கிறார்.

        முடிவில் கல்வி பற்றிக் கூறுவதனைக் கவனிப்போம்.  ஒருவனுக்கு அழிவு இல்லாத செல்வம் கல்வியே என்கிறார்.  மற்ற செல்வங்கள் செல்வங்கள் அல்ல என்கிறார்.(குறள் எண் 400)

         இவ்வளவு  முக்கியம் வாய்ந்த கல்வியினை கற்காமல் போனால் அதன் விளைவுகளை ‘கல்லாமை’ என்கின்ற அதிகாரத்தை கல்வி எனும் அதிகாரத்திற்கு அடுத்ததாக வைத்துக் கூறுகிறார்.

       கல்லாதவரை விளைவில்லாத களர் நிலத்தோடு ஒப்பிடுகிறார்(குறள் எண்.406). 

        மேலும் கற்றவரை மக்கள் என்றும்,  கல்லாதவரை விலங்கோடு ஒப்பிடுகிறார் (குறள் எண்.410).  அதோடு தன் சிந்தனையை நிறுத்திக் கொள்ள வில்லை திருவள்ளுவர்!  அவர் அறிவை அறிந்த அறிஞராயிற்றே!

          கல்வியின் பயன்பற்றிக் கூறியும், அக்கல்வியினை கல்லாமல் போனால் அதன் இழப்பையும் கூறியிருந்தாலும், இதற்கும் தீர்வினை, ‘கல்வி’, ‘கல்லாமை’ என்னும் அதிகாரங்களுக்கு அடுத்ததாக ‘கேள்வி’ என்கின்ற அதிகாரத்தை வைத்துள்ளதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதால், அறிஞர் திருமூலர் கூறும் தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல் என்பது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதனை அறிந்து இன்பமுறமுடிகின்றது.

     ‘கேள்வி’ என்கின்ற அதிகாரத்தில் முதல் குறட்பாவாகிய

     “செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்; அச்செல்வம்

    செல்வத்துள் எல்லாம் தலை”   குறள் எண். 411

     என்பதில் ஒருவருக்குச் செல்வங்கள் எல்லாவற்றிலும் செவியால், கேட்டறியும், கேள்விச் செல்வமே தலையானது என்கிறார்.  ஏன் கேள்விச் செல்வத்தை தலையான செல்வமாகக்  கருதுகிறார் என்பதற்கானகாரணத்தை அறிந்து கொள்ளவும்.

     (குறள் எண். 391, 399, 400, 410, 411, ஆகிய குறட்பாக்களை இணைத்துப்பார்த்து, ஆழ்ந்து விரிந்து சிந்தித்து, ‘தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல்’ என்பதற்கான தெளிவினைப் பெறவும்.  ‘கற்றலிற் கேட்டலே நன்று’ என்றுரைப்பதுபோல் குருவின் திருவார்த்தைக் கேட்பதில் ஆனந்தம் ஏற்படும். தொய்வில்லாமல் கேட்க விரும்பும் அறிவு.  ஆனந்தம் ஏற்படுகிறது என்றால் அது அறிவிற்குத் தெளிவினை ஏற்படுத்துகின்றது என்றுதானே பொருள்?!

    FFC-166-dheaivappulavar

    கல்வி-கேள்வி

    கற்றல் என்பது பார்ப்பது, வாசிப்பது, கேட்பது ஆகியவற்றால் சாத்தியமாகின்றது. ஒன்றைப் பார்த்து அதனைப்பற்றி  தெரிந்து கொள்ளலாம். பார்த்து முழுமையாகத் தெரிந்து கொள்வது   சாத்தியமில்லை. ஏனெனில் ஐயம் எழுந்தால் அதனைக் கேட்டுத்தான் போக்கிக் கொள்ள வேண்டும்.  அதே போல் வாசித்து கற்றலில் முழுமையாக தெரிந்து கொள்வதும் சாத்தியமில்லை.  ஐயம் எழுந்தால் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.  கேட்டு கற்றலில் ஐயங்கள் எழுந்தால் உடனே கேட்டுத்  தெரிந்து கொள்ளலாம்.  ஐயங்கள் நீங்கினால் அறிவு அதில் தெளிவு பெறுகின்றது.

    குருவானவர் அறியாமையை நீக்குபவர்.  எனவே அவருடைய உபதேசங்கள், வார்த்தைகள் அந்த அலைகளைத் தாங்கிவரும்.  எனவே அவை காதின் வழியாக சென்று கருமையத்தில் பதியும்.  குருவின் திருவார்த்தைக் கேட்கக் கேட்க தெளிவினை ஏற்படுத்தும். கற்க வேண்டியதைக் கற்று, அதற்கு ஏற்றாற்போல் வாழ்வது, ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறப்பிற்கு உதவியாக இருக்கும்.  கல்வியைவிட சிறந்த செல்வம் வேறு இல்லை என்கிறார் அறிஞர் திருவள்ளுவர்.  கற்றவரை மனிதராகவும், கல்லாதவர்களை விலங்கோடு ஒப்பிடுகிறார்.  இப்படிப்பட்ட கல்வியினை கேட்டறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    கல்வி எதற்காகத் தேவை அறிவிற்கு?

    அறிவு என்பது எது?  உணர்வது எதுவோ அதுவே அறிவு. அறியக் கூடியது எதுவோ அதுவே அறிவு.  எனவே உணர்வதும், அறிவதும் எதுவோ அது அறிவு. அறிவதற்காகவே உள்ளது அறிவு.  உணரும்போது அறிவிற்கு இன்பமோ, துன்பமோ ஏற்படுகின்றது.  அறியும்போது அறிவிற்கு என்ன ஏற்படும்? அறியும்போது அறிவிற்கு அதேபோன்று இன்பமோ, துன்பமோ ஏற்படும். 

         இன்பம், துன்பம் எப்போது ஏற்படுகின்றன?  

    புலன்கள் வழியாக, அளவு, முறையோடு அனுபவித்தால் அது இன்பமாக இருக்கும்.  இதற்கு எதிர்மறையில் அனுபவித்தால் இன்பமே துன்பமாக மாறிவிடும் என்பதனை வேதாத்திரிய இன்ப-துன்பவியல் அறிவிக்கின்றது. புலன் வழியாக அனுபவிக்கும் இன்பம் புலன்இன்பம்.

     கல்வி என்பது அறிவிற்கு செல்வமாகும்.  அச்செல்வமாகியக் கல்வி பார்த்தல், வாசித்தல், கேட்டல் ஆகியவற்றின் வழியாகக் கற்கலாம்.   பார்த்து கற்பதில் அறிவு தானாகவே அறிந்து கொள்கின்றது. வாசித்து கற்பதில், பிறர் எழுதியுள்ளதிலிருந்து கற்கின்றது. இந்த இரண்டிலுமே ஐயங்கள் எழலாம். ஐயத்தைப் போக்கிக் கொள்வதுஎப்படி?  பிறரைக் கேட்டுத்தான் அறிந்து கொள்ள முடியும். பிறரைக்கேட்டுப் பெறுவது தான்  கேள்விச்செல்வம்.

     திருமூலர், திருவள்ளுவர் வரிசையில் மற்றொரு தமிழ்ப்புலவர் கேட்டறிவதுபற்றி என்ன  கூறுகிறார் என்பதனையும் அறிந்துகொள்வோம். அத்தமிழ்ப்புலவர் பாடியுள்ள கவியினை நினைவு கூர்வோம்.

    “உணற்(கு)இனியஇன்னீர்பிறி(து)உழிஇல்என்னும்
    கிணற்(று) அகத்துத்தேரைபோல்ஆகார் – கணக்கினை
    முற்றப்பகலும்முனியா(து) இனிதோதிக்
    கற்றலிற்கேட்டலேநன்று.”                                —  மூன்றுரையரையனார்

     முதல் இரண்டு அறிஞர்களான அறிஞர் திருமூலர் மற்றும் தெய்வப்புலவர் ஆகிய இருவர்,  கூறும் முறையே தெளிவு, செல்வம் இரண்டும் ஒன்றே என்று, சமன்பாட்டின் மூலம் உறுதி படுத்திவிட்டோம்.   இப்போது மூன்றாவது அறிஞரான தமிழ்ப்புலவர் ‘கேட்பது’ பற்றியே கூறுவதனால் இவரும் அந்த இரண்டு அறிஞர்களுடன் எவ்வாறு இணைந்து கொள்கிறார் என்பதனை அறிந்துகொண்டால், அறிஞர் திருமூலர் உறுதிகூறும் ‘தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல்’ என்பது எவ்வாறு என்று தெளிவாகிவிடும்.

     பழமொழியின் பொருள்: தமிழ்ப்புலவர் மூன்றுரையரையனார்  ‘கற்றலிற்கேட்டலேநன்று’ என்று கூறுகிறார். அதாவது அறிஞர்களிடம் விருப்பத்துடன் கேட்டு அறிந்து கொள்வது கற்றலைவிட நல்லது என்கிறார்.  அதற்கு பாடலாசிரியர் எடுத்துக் கொண்ட உதாரணம் கிணற்றுக்குள் இருக்கும் தேரை.   ஆறு மீட்டர் ஆழமுள்ள  கிணற்றினுள் இருக்கும் வெளி உலகைக் காணமுடியாத தேரை தான் வசிக்கும் கிணற்றிலுள்ள உவர்ப்பில்லாத நல்ல நீர் வேறு எந்த இடங்களிலும் இல்லை என நினைக்கின்றது. 

     நூல்களை நாள் முழுவதும் வெறுப்பின்றி இனிதாகப்படித்த ஒருவர், தான் படித்ததுதான் எல்லாமே என ஒருவேளை அத்தேரையைப்போல் நினைத்துக் கொள்ளலாம் இல்லையா? இருந்தாலும், மற்றவர்கள் நம்மைவிட வேறு நல்ல கருத்தைக்களைத் தெரிந்து வைத்திருந்தால், அதனைக் கேட்பதால் நம் அறிவின் தெளிவிற்கு மேலும் தெளிவினைச் சேர்க்குமன்றோ!

    எனவே நூல்களை நாள் முழுவதும் வெறுப்பின்றி இனிதாகப்படித்து தெரிந்து கொண்டிருந்தாலும், அறிஞர்களிடம் விரும்பிக் கேட்டலே நல்லது என்பதுதான் ‘கற்றலிற் கேட்டலே இனிது’என்பதற்கான பொருள்.

       கற்றல் என்பது பார்ப்பது, நல்ல நூல்களை தானே வாசிப்பது ஆகியவற்றால் நடைபெறுவதைவிட, குருவானவர் கற்பிப்பதைக் கேட்டு அறிந்து கொள்வது சிறப்பு என்கிறார். தானே கற்பதில் தான் புரிந்து கொண்டதே எல்லாம் என்பதான முடிவுக்கு வந்துவிடலாம். இதற்கப்பால் ஒன்றுமில்லை என நினைக்கத்தோன்றும். அதற்குப்பதிலாக ஒரு ஆசிரியரிடமோ அல்லது குருவிடமோ கேட்டிருந்தால் நாம் வியக்குமளவிற்கு புரியும்படி விளக்கி இருப்பார். இதற்கானக் காரணம், ஆசிரியரோ, குருவோ, ஒரு கருத்தை வலியுறுத்தும் பல நூல்களைப் படித்திருப்பார். மேலும், இறை உணர் வாழ்வியல் அனுபவங்களைப் பெற்றிருப்பார். ஆகவே ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுத் தெளிவு கண்டவர் என்பதால், கேட்பவரையும் தெளிவடையச் செய்வதும் எளிது.

      மேலும், மேலும்  ‘Don’t delay enlightenment’ என்ற அறிவுறுத்தலின் பயனை விரைவில்அடைய, கற்றலினும் கேட்டல்தானே நன்று?

        இதுவரை மூன்று அறிஞர் பெருமக்கள் வாய்மொழியாக ‘கேட்டலின்’ பெருமையை உணர்ந்தோம். கேட்டலினால் தெளிவு எவ்வாறு பிறக்கின்றது என்பதனையும் அறிந்தோம். வரும் அறிவிற்கு விருந்தில் (10.04.2016) மகரிஷி அவர்கள் கூறும் தெளிவை அறிந்து கொண்டு இயல்பூக்க நியதியின் துணையுடன் ‘தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே’ என்கிற உறுதியான சிந்தனைக்குள் செல்வோம்.

    வாழ்க வளமுடன்.

    வாழ்க மனித அறிவு!                            வளர்க மனித அறிவு!

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-165

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    04-04-2016 – திங்கள்

     

    “உயிரின் படர்க்கை நிலை மனம்” என்கிறார்” என்கிறார் மகரிஷி அவர்கள். எப்படி?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • FFC – 177-தெளிவு—3/?

    வாழ்க மனித அறிவு                                                              வளர்க மனித அறிவு

    தெளிவு—3/?                                        

    FFC – 177                                                    

     03-04-2016—ஞாயிறு

    FFC-177-NEW SUB HEADING-குருவின் திரு நாமம் செப்பல்

     வாழ்க வளமுடன்.

                      சென்ற அறிவிற்கு விருந்தில் திருமந்திரத்தில், திருமூலர்  குருவின் திருமேனியைக் காண்பது எவ்வாறு சீடருக்கு இறை உணர் ஆன்மீகத்தில்  மிகவும் அவசியமான(the first and prime most) தெளிவினை ஆறாம் அறிவு பெறுகின்றது என்பதனை விஞ்ஞானப் பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் கூறியுள்ளதை அறிந்து கொண்டோம்.  இன்று மற்ற மூன்று வழிகளில் எவ்வாறு தெளிவிற்கு தெளிவினைச் சேர்ப்பது என்பது பற்றி அறிந்து கொள்வோம்.  மீண்டும் அப்பாடலை நினைவு கூர்வோம்.

     

    thelivu_guruvin

    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்:  இது குருவின் வழியாக தெளிவு பெறுவதில் இரண்டாவதாகும்.  இதனை இப்போது எடுத்துக் கொண்டு சிந்திப்போம். குருவின் திருநாமத்தை சொல்வதால் ஆறாம் அறிவிற்குத் தெளிவு ஏற்படும் என்கிறார். இதனை அறியும்போது குருவானவர்,  அதீத  மரியாதை, மதிப்பு, சிறப்பு  உடையவர் என்றும், சாட்சாத் பரப்பிரம்மமே குருவாக வந்துள்ளதால், தெய்வத்திற்கு நிகராக வணங்கப்பட வேண்டியவர் குரு, என மிக மிகத் தெளிவாகின்றது. 

          இறை அருவமானது என உறுதியாகிவிட்டபிறகு,

         இறை தன் வம்சாவளியான மனிதகுலத்திற்கு, தன் நிலையினை எடுத்துச் சொல்வதற்கு வேறு யார் வழியாக எடுத்துச் சொல்ல முடியும்?

    அருவமாகிய இறை, மனித வடிவில், அனந்த  கோடிகளாகியதில், எந்த மனித வடிவில் தன்னையே  உணர்ந்து கொண்டு வருகின்றதோ,     அந்த மனித வடிவம் தான் குருவாகின்றது, மற்ற மனித வடிவங்களின் அறியாமையைப் போக்குவதற்கு? .  இதுதான் அத்வைதத்தில் சுத்த அத்வைதம்.

         திருவள்ளுவர் பத்தாவது குறட்பாவில் ‘இறைவன் அடி’ என்று கூறியுள்ளதற்கு, மகரிஷி அவர்கள், ‘இறைவன் அடி’ என்பதற்கு மெய்ஞ்ஞானம் பெற்ற இறையின் மனிதவடிவமான குருவினுடைய வாழ்க்கை காட்டுகின்ற வழி  என்று பொருள் கூறுகிறார்.

         திருவள்ளுவர்  கடவுள் வாழ்த்தினை  முடிக்கும்போது, அருளியுள்ள

     “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

     இறைவன் அடிசேரா தார்.”           (குறள் எண் 10)

     என்கின்ற குறட்பாவில் ‘அடி சேர்ந்தார்க்கு’ என்றால் (மகரிஷி அவர்கள் தான் எழுதிய  ‘திருக்குறள் உட்பொருள் விளக்கம்’ என்கின்ற நூலில் கூறியுள்ள விளக்கத்தினைக்(பக்கம்24-28 – காணவும்.)  ‘மெய்ஞ்ஞானத்தைப் பெற்ற ஒருவருடைய  வாழ்க்கை காட்டுகின்ற வழியிலே செல்வது’ என்பதை மனம் விரிந்து  ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கமாக அமையும் என்கிறார். 

         மேலும் குருவைப்பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனை அறியலாம்.  மெய்ஞ்ஞானம் பெற்ற குருவும் ஒரு காலகட்டத்தில் பூதவுடலை உதிர்க்க வேண்டியிருக்கும்.  அதன் பின்னர் வரும் சீடர்களுக்கு, ஆறுதலான, ஆனால் நிறைவான விளக்கமாக மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிக்க வேண்டும். குருவானவர் ஓரிடத்தில் இல்லாத நேரத்தும் அல்லது அவரது காலத்திற்குப் பின்னரும் கூட குருவானவர் வழிகாட்டுவதனைப் பற்றிக் கூறுகிறார்.

    gurudevar

         குருவானவர் உருவாக்கிய வாழ்க்கை நெறி வருங்காலத் தலைமுறையினருக்கும் பயன் தரும் என்கிறார். ஞானாசிரியருடைய வாழ்க்கையும், சீடர்களுக்கு முன்மாதிரியாக அமைகின்றது என்கிறார்.  அவரது உபதேசங்கள் வழிகாட்டுவதாகவும் அமைகின்றன என்கிறார் மகரிஷி அவர்கள். 

          இவ்வாறு சொல்வதற்குச் சான்றாக விளங்கியவர் மகரிஷி அவர்களே.  எவ்வாறெனில், தாயுமானவரை, திருவள்ளுவரை, திருமூலரை, வள்ளலார் அவர்களையும் மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை அருளாளர்களையும் குருமார்களாக ஏற்றுக்கொண்டு வணங்குகிறார். (காண்க ஞானக் களஞ்சியம்- குருவணக்கம் பாடல் எண்.7)

        இப்போது தெளிவு பெறுவதற்கு இரண்டாவது வழியாகிய ‘தெளிவு குருவின் திருநாமம் செப்பல்’ என்பது எவ்வாறு என்பதனை அறிவோம்.  திருநாமம் என்றால் என்ன? திருநாமம் என்பது பெயர், மற்றும் கீர்த்தி என்றும் பொருள். கீர்த்தி என்றால் புகழ் என்று பொருள். FFC-177-NEW-குருவின் திருநாமம்3-4-16

        பக்திமார்க்கத்தில் நாமாவளி எனப்படுவது குறிப்பிட்ட தெய்வத்தின் பெயரை மீண்டும் மீண்டும் சொல்வது.  உதாரணத்திற்கு ராம நாமாவளி. நாமகீர்த்தனை நல்ல பயனைக் கொடுக்கும் என்பார்கள்.

          மனிதனுக்குள்ள எத்தனையோ உறவுகளில் குரு-சீடர் உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  இப்படியிருக்கும்போது  பெரும்பாலோருக்கு குரு-சீடா் உறவு ஏற்படாமலேயே வாழ்க்கை முடிந்து விடுகின்றது. எனவே மறுபிறவியும் தொடர்கின்றது. மற்ற உறவுகள் தானாகவே அமைந்து விடுகின்றன. பிறப்பதால் தாய், தந்தை உறவு ஏற்படுகின்றது.  உடன் பிறந்ததால் சகோதர-சகோதரி உறவுகள் ஏற்படுகின்றன.  பெற்றோர்களால் மற்ற உறவுகள் ஏற்படுகின்றன.  சமுதாயத்திற்கு வரும்போது நண்பர்கள் உறவு ஏற்படுகின்றது.  உறவில்லாமல் மனிதன் தனித்து வாழ முடியாது என்பதனை யாவரும்  அறிந்ததே.

    FFC-177-இத்தனை உறவுnew

    ‘மாதா, பிதா, குரு தெய்வம்’ என்பர் பெரியவர்கள். இக்கூற்று  என்ன உரைக்கின்றது? தாய், தந்தை, குரு ஆகிய மூவரும் தெய்வங்கள் என்கின்றது இக்கூற்று. தாய்      தாய் தந்தையைக் காட்டுகிறாள். தந்தைதான், தெய்வத்தை அறிவதற்கு வழிகள் கூறும்  குருவைக் காட்ட வேண்டும். குருவைக் காட்டிக் கொடுக்கின்ற நிகழ்வு சமுதாயத்தில் இப்போது விடுபட்ட நிலையில் 1911 ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்நிகழ்வு இயற்கையால்/இறையால் புதுப்பிக்கப்பட்டுள்ளது (AT LARGE SCALE). அந்த புதுப்பிக்கப்பட்டுள்ள நிகழ்வில் பயன்பெற்றுக் கொண்டிருக்கும்   சமுதாயத்தில், முதலாவது வரிசையில் நாம் இருக்கின்றோம். 

       எனவே பயனையும் அடைய வேண்டும். அதற்கு நன்றியுணர்வாக, அப்பயனை மற்றவர்கள் அடைவதற்கு உதவ அறிவுத் தொண்டும் செய்ய வேண்டிய பொறுப்பும் நமக்கு இயற்கை/இறை அளித்துள்ளது.

         வினைப்பயனைத் தீர்த்துக் கொள்வதற்காக, கண்களில்லாத ஆன்மா உடலெடுக்கும்போது,  உலகை பார்ப்பதற்கான  இரண்டு கண்களைத் திறப்பதற்கு தாயும், தந்தையும் காரணமாகின்றனர்.  ஆனால் மூன்றாவது கண்ணான, நெற்றிக்கண்ணான, அறிவுக்கண்ணைத் திறப்பதற்கு அறிவை அறிந்த குருவின் தரிசனம் தேவையாக உள்ளன. குரு-சீடர்  உறவு ஆன்மத் தொடர்பாகின்றது. பெற்றோர்களின் உறவும் ஆன்மத் தொடர்புதான்.  எனினும் இரத்தத் தொடர்பு உள்ளது. குரு எங்கோ இருப்பார். சீடன் எங்கோ இருப்பான்.  இருப்பினும் அவர்களை ஆன்மத் தொடர்பால் இயற்கை/இறை இணைக்கும்.  இந்திய நாட்டைக் கடந்து, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும்  அன்பர்கள், தென் இந்தியாவில் தமிழ்நாட்டில், செங்கல்பட்டில் உள்ள சிறு கிராமமான கூடுவாஞ்சேரியில் அவதரித்த வேதாத்திரி மகரிஷி அவர்களை குருவாக அடைய வில்லையா?!

          பெற்றோர்களின்  ஆன்ம தொடர்பிற்கும் குருவினுடன் ஏற்படும் ஆன்ம தொடர்பிற்கும் வித்தியாசம் உள்ளது.  பெற்றோர்களின் ஆன்மாவின் செராக்ஸ்(xerox) நகல்தான்  குழந்தைகள் என்றிருப்பதால், பெற்றோர்களின், தன்முனைப்பால் விளைந்துள்ள அறுகுணப்பதிவுகளின்  தன்மையையே  பிரதிபலிக்கும். ஆனால், குரு-சீடர் ஆன்மத் தொடர்பு, குருவின் இறை உணர்-பண்பேற்ற-உயர்வு, சீடனைத் தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை அளிக்க வல்லது.

        எனவே குரு-சீடர் உறவில், குருவின் ஆன்மாவும் சீடனின் ஆன்மாவும் தொடர்பு கொள்கின்றது.  எப்படி என்பது பின்னர் பார்ப்போம். ‘மாதா, பிதா, குரு தெய்வம்’ என்கின்ற கூற்றுப்படி பிதா, குருவை காட்டிக் கொடுப்பது என்கின்ற நிகழ்வு சமுதாயத்தில் விடுபட்டு விட்ட நிலையில் மனவளக்கலைஞர்களுக்கு வேதாத்திரி மகரிஷி அவர்களை குருவாக இயற்கை/இறை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது நம்முடைய மாதா, பிதா செய்த புண்ணியம்தான். 

          குரு-சீடர் உறவு சிறப்பு வாய்ந்தது என்றோம்.  காரணம்,

         வினைப்பயனின் காரணமாக, ஆன்மா உடலெடுத்த காரணத்தை, பயனைப் பூர்த்தி செய்கின்றது.

        பிறவிப்பயன் என்பது என்ன? 

        எதற்காக பிறவி எடுக்க வேண்டியுள்ளது ஆன்மா? 

        முன் பிறவிகளில் செய்துள்ள வினைகளின் விளைவுகளை அனுபவிக்கவும்,

        மீண்டும் பிறவி எடுக்காமல் இருக்க வேண்டிய வினைகளைச் செய்யவும் ஆன்மா பிறவி எடுக்கின்றது. 

          சுருங்கச் சொல்வதானால் ஆறாம் அறிவுடன் பிறந்த மனிதன், அதற்கு ஏற்ப பொருத்தமாக, பண்பேற்றம் பெற்று பிறவிப்பயனை அடையும் பேற்றினைப் பெற்றிடுதல் வேண்டும்.  ஆகவே,   எல்லாத் தீயவினைகளுக்கும், பாவங்களுக்கும்  மூலகாரணமான இறையை மறைத்திருக்கும் தன்முனைப்பு நீங்குகின்ற பண்பில் ஏற்றம் பெருவதற்காகவே குருவை அடைந்திருக்கிறான் சீடன்.

     guru-disciple-relation     குருவிடமிருந்து பண்பில் ஏற்றம்பெரும்  வழிகளை பயிற்சியாகவும், போதனைகளாகவும், அறிவுரைகளாகவும் கற்க வேண்டும்.  குரு-சீடா் உறவு என்பது ஆன்மத் தொடர்பு என்றோம்.  இது எப்படி என்று  இங்கே விளங்குகின்றது. குரு தான் ஏற்படுத்திக் கொண்ட  இறை உணர்வு மற்றும் அறவுணர்வுப் பண்புகள் எங்கே பதிந்துள்ளன?  அவரது ஆன்மாவில் பதிந்துள்ளன.  எனவே சீடன் அவரைப்போன்றே பண்பில் உயர வேண்டும் என்பதற்காகத்தான் இயற்கை/இறை, குரு-சீடர் உறவை ஏற்படுத்தியுள்ளது. எனவே எப்படி குழந்தையின் ஆன்மா தாய்-தந்தையரின் ஆன்ம-செராக்ஸ் நகலாக உள்ளதோ, அதுபோல் பண்பில் ஏற்றம் பெறுதவதற்கான சீடனின் ஆன்மாவும், குருவின் ஆன்ம-செராக்ஸ் நகலாக வேண்டுமென்பதால் குரு-சீடர் உறவு ஆன்ம உறவு எனப்படுகின்றது.      

         குருவினுடைய பெயரே அவருடைய இறை உணர்வு பெற்ற பண்பேற்றத்தால் மந்திரமாகி விடுகின்றது.  மந்திரம் என்பது என்பது என்ன?  மந்திரம் என்பது வழிபாட்டில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த புனித வார்த்தைகள் அல்லது ஒலிகள். மந்திரம் ஓதுவதால் எந்த நோக்கத்திற்காக அந்த மந்திரம் ஓதப்படுகின்றதோ அதன் பயனை மந்திரம் ஓதுபவர் பெறுவார். மந்திரங்களில் ஒரு சில வார்த்தைகள் பொருள் உடையதாகவும் இருக்கலாம். ஒரு சில வார்த்தைகள் குறிப்பிட்ட ஒலியை எழுப்புவதற்காகவும் இருக்கலாம். 

        ஆன்மாவாகிய குரு,  தன்னுடைய இறை உணர்வு பண்பேற்றத்தால், பெற்றப்பதிவுகளின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பே குருவினுடைய திருநாமம் என்பது. நன்கு அறியப்பட்ட  அறிஞர்களின் பெயரைச் சொல்லும்போதே அவரின் ஒட்டு மொத்த சிறப்பும் நம் கண்முன் வந்து நின்று அவரை மானசீகமாக வணங்கச் செய்கின்றது.   உதாரணத்திற்கு 2041 வருடங்களுக்கு முன்னர் திருவள்ளுவர் வாழ்ந்திருந்தாலும்,  அவரது பெயரை இப்போது சொல்லும்போதே அவர் அருளியுள்ள 133 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறள் எழுதியுள்ளது நினைவிற்கு வந்து அவருடைய, உயர்வையும் சிறப்பையும் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றது. அவருக்கு இப்போது நாம் கொடுத்துள்ள உருவம் வந்து நிற்கின்றது. எனவே குருவின் திருநாமம் என்பது அவரது   பண்புகளையும், நெறிகளையும் எடுத்துச் சொல்லும், நினைவிற்கு கொண்டு வரும் ஒரு திருச்சொல்லாக உள்ளது.

          காலங்காலமாக வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையும் குருவினுடைய தரிசனம் அறிவிற்கு  கிடைக்காமல்  இப்பிறவியில் குருவின் தரிசனம் கிடைக்கும்போது அது அறிவிற்கு தெளிவினை ஏற்படுத்துகின்றது.  ஆகவே குருவினுடைய  திருநாமமும் தெளிவினை அளிக்கின்றது என்கிறார் அறிஞர் திருமூலர்.      சீடர் குருவின் திருநாமத்தை சொல்லும் போது அவனுக்கு ஆனந்தத்தைத் தருகின்றது. 

    thelivu

        பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்  யார் ஒருவருக்கு இறைவனின் பெயரைச் சொல்லும்போதே கண்களில் நீர் வருகின்றதோ அவருக்கு இதுவே கடைசிப் பிறவி என்கிறார்.  அதேபோன்று சாட்சாத் பரப்பிரம்மமே குருவாக வந்துள்ளபடியால்,  இறைவன் பெயரைச் சொல்லும்போது கண்களில் நீர்வருவதுபோல், குருவினுடைய  திருநாமத்தைச் சொல்லும் போதோ அல்லது அவரது திருப்புகழை நினைக்கும் போதோ, எடுத்துக் கூறும்போதோ,  கண்களில் நீர்வருகிறதென்றால்,  அவருக்கும்  இதே கடைசிப் பிறவி என்றாகின்றது.  ஏனெனில் சாட்சாத் பரப்பிரம்மமே குருவாக வந்னவர் என்பதனை நினைவில் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டும். யார் ஒருவர் குருவை மதித்து ஒழுகி வாழ்ந்தாலும், குருவின் உயர்வு தப்பாமல், சீடனின் தரத்தை உயர்த்தி பிறவிப்பயனை அளிக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்.  ‘தப்பாமல்’ என உறுதி அளிப்பதனை, மனதில் இருத்திக் கொண்டு, குருவினுடைய ஆற்றலை, இயல்பூக்க நியதிப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

         ‘அருளாளர்கள்’ என்று கூறுகின்றபோதே, அதில் இன்பம் இருப்பதனை உணரவேண்டும்.       ‘அருளாளர்கள்’ என்பவர் யார்?  அறிவில் அறிவாய் நிலைத்து. அறம் வகுத்து  அதனை வாழ்ந்து காட்டியவர்களாவர்.  எனவே வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபினில் (Never Ending Divine Relay Race) வருகின்றவர்கள் அருளாளர்களாவர்.  எனவே அவர்கள் மீது கொண்ட மரியாதையாலும், மதிப்பாலும் ‘அருளாளர்கள்’ எனக் கூறும்போதே, அறிவு அவர்களை, இன்னார் இன்னார் எனத் தனித்தனியாக அறிய முடியாவிட்டாலும், அவர்களின் ஒட்டு மொத்தமான புனிதத்தன்மையும், அருள்தன்மையும்  நமது கண் முன்னே வந்து நின்று, எல்லோரையும் ஒட்டுமொத்தமாக மானசீகமாக நினைத்துக்  கொள்வதால் அறிவிற்கு ஆனந்தம் கிடைக்கின்றது.

       இதனை ஓர் நடைமுறையில் நடக்கும் சம்பவத்தின் வாயிலாக, எவ்வாறு  குருவின் திருநாமம் ஆனந்தத்தை அளிக்கின்றது என்பதனை அறிந்து கொள்வோம்.  காதலிக்கும் போது, காதலர்கள் இருவரும் ஒருவர் பெயரை மற்றொருவர் உச்சரிப்பதில் இன்பம் கொள்வர். காதலர்கள் இருவரும் நேரிடையாக சந்திக்கமுடியாதபோதும் வேறு யாராவது காதலர்களின் பெயரைச் சொன்னாலும் கூட அப்பெயரைக்கேட்ட மாத்திரத்தில் இன்பம் கொள்வர். இது ஐயுணர்வைச் சார்ந்த இன்பம்.  ஆனால் குரு-சீடர் உறவில் குருவின் திருநாமத்தைக் கேட்டாலோ, அல்லது உச்சரித்தாலோ அது ஆனந்தத்தைத் தருகின்றது.  இது மெய்யுணர்வைச் சார்ந்த இன்பம்.  மெய்யுணர்வைச் சார்ந்த இன்பம் பேரானந்தத்திற்கு கொண்டு சேர்க்கும்.  ஆனால் ஐயுணர்வைச் சார்ந்த  இன்பம் நிரந்தரமற்றது மட்டுமில்லை,  சலிப்பையும் கொடுக்கும், அளவையும்,  முறையும் கடைபிடிக்காமலிருந்தால்.  சீடர் குருவின் மேன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

    குருவின் மேன்மை

         எந்த அளவிற்கு குரு கூறும் அறிவார்ந்த விளக்கத்தால் சீடரின் அறிவிற்கு, குருவின் அளவிற்கு ஆழ்ந்த விரிந்தபுரிதல் ஏற்படுகின்றதோ, அந்த அளவிற்கு குருவிற்கும் சீடருக்கும் இடையே புனித ஈர்ப்பு(Divine attraction)  ஏற்படும்.  இதன் விளைவாக  சீடனுக்கு குருவின் மீது

           1)   எல்லையில்லாத் தெய்வீக அன்பு(unconditional Divine Love)ஏற்படும். 

           2)  உயர் மரியாதை,

           3) உயர் மதிப்பு,

           4) உண்மை நம்பிக்கை,

           5) குருவின் விளக்கத்தின் மீது அழுத்தமானப் பிடிப்பு,

          6)  அசையாது மதித்தொழுகுதல்(implicit obedience) ஏற்பட்டு,

    குருவிற்கும் சீடருக்கும் இடையே நெருக்கமான, திடமான பிணைப்பு உண்டாகும். இயல்பூக்க நியதியும், அதன் கிளைத்தேற்றமும் உறுதியாகும். எவர் ஒருவர் குருவை மதித்து ஒழுகினாலும். குருவின் உயர்வு மதிப்பவரை தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும் இயற்கை/இறை என்று மகரிஷி அவர்கள் உறுதியாகக் கூறுவதனை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.

     எனவே, அப்போது குருவின் திருநாமத்தைச் சொல்வதில் சீடருக்கு ஆனந்தம் ஏற்படுகின்றது.  அறிவிற்கு ஆனந்தம் ஏற்படுகின்றது என்றால் அறிவிற்குத் தெளிவு ஏற்படுகின்றது என்று பொருள்.

          அறிவு என்றாலே அது அறியும் திறனுடையது. அறியும் திறனுடைய அறிவு, சிந்திக்கவல்லமை உடையதாலும், ‘என்ன?’, ‘ஏன்?’, ‘எதற்கு?’ ஆகிய  வினாக்களை எழுப்பி விடைகளைக் கண்டுபிடிப்பதன் மூலமாக, அதன் இயல்பு வெளிப்படுவதால், அது அறிவிற்கு பேரானந்தம்தானே.  எனவேதான் அவ்வைத்தாய் அறிவினருடன் (குருவினுடன்) சேர்வதும், அவரைக் கனவிலும், நனவிலும் காண்பதும் இனிதினிலிலும் இனிது என்கிறார்.  

         அதாவது ஆனந்தத்தின் விளைவாக அறிவு பண்பேற்றத்தின் மீது ஆர்வமும், அக்கறையும் கொள்கின்றது என்று பொருள். எனவே குருவின் திருநாமம் மந்திரம் போல் செயல்படுவதற்கு.  அப்பெயருக்குரியவரின் அரிய, பெருமைகளை, வாழ்க்கை வரலாறுகளை, அவர் புனிதம் அடைந்த விதத்தை எந்த அளவிற்கு சீடரால் ஆழ்ந்து விரிந்து புரிந்து வைத்துக்கொள்ளப்படுகின்றதோ, அந்த அளவிற்கு அச்சீடர் குருவின் திருநாம உச்சாடனம், தெளிவினையும், ஆனந்தத்தையும் அளிக்கும். இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம்.  அடுத்த அறிவிற்கு விருந்தில்(06-04-2016 புதன்),  மூன்றாவது வழியான  ‘தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்’ என்பதனைப்பற்றிச் சிந்திப்போம்.  வாழ்க வளமுடன்.

     வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவுச் செல்வம்.

    Loading