July 2016

Monthly Archives

  • FFC-212-அருளாளர்கள் உலகம் 5/?

    வாழ்க மனித அறிவு                              வளர்க மனித அறிவு

    அருளாளர்கள் உலகம் 5/?

    அறிவிற்கு விருந்து—212

     31.07.2016—ஞாயிறு

    ஆன்மாவின் லேசான நிலை என்பது என்ன? ஆன்மா என்பது முற்பிறவிகளில் செய்த வினைகள் மற்றும் இப்பிறவியில் செய்கின்ற வினைகள் அனைத்தையும் பதிவு(RECORD) செய்துகொள்வதற்காக, இயற்கையால்/இறையால் ஏற்படுத்திக் கொண்ட ஒரு கருவி(RECORDING DEVICE). ஆன்மாவே கண்களுக்குத் தெரியாது என்கின்றபோது, அதில் பதிவுசெய்யப்பட்ட பதிவுகள் எவ்வாறு கண்களுக்குத் தெரியமுடியும்? இருந்தாலும் ஆன்மாவையோ, அதன் பதிவுகளையோ இல்லை என்றும், அது மூட நம்பிக்கை என்றோ கூறவும் முடியாது. கண்களுக்கு ஒலி/ஒளி குறுந்தட்டு(CD) தெரிகின்றது. ஆனால் அதில் உள்ள பதிவுகள் கண்களுக்கு தெரியாது. ஆனால் அதனை உரிய கருவியால்(PLAYING DEVICE) குறுந்தட்டில் உள்ள பதிவுகள் என்ன என்று அறிந்து கொள்கிறோம். நினைவு கொள்கிறோம், பார்த்து கேட்டு மகிழ்கிறோம். அதுபோன்றுதான் ஆன்மாவில் உள்ள பதிவுகளை பருஉடல்-கருவி வழியாக அறிவு அறிந்து கொள்வது என்பதுதான் வாழ்க்கையின் இன்ப-துன்பங்கள்.
    கண்களுக்குத் தெரியாது இருக்கின்ற நிலையில் ஆன்மாவின் லேசான நிலை என்பது என்ன? ஆன்மாவில் உள்ள பதிவுகளின் எண்ணிக்கை மற்றும் அதன் அழுத்தத்திற்கு ஏற்ப ஆன்மாவின் அடர்த்தி எனலாம்.
    எண்ணில் அடங்கா பல்லாயிரம் பிறவி எடுத்து வந்ததுதான் இன்றுள்ள மனிதனின் பிறவி. அப்பிறவிகளிலும், மேலும் இப்பிறவியில் அவன் எண்ணிய எண்ணங்கள், பேசிய சொற்கள், செய்த செயல்கள் ஆன்மாவில் பதிவுகளாகி இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் வாழ்வின் நோக்கத்திற்கு முரணானவைகள்தான் இருக்கும். அந்த வகையில் இறை-உணர்-சாதகர்களுக்கு இப்பதிவுகள் குறைந்தும் இறை-உணர்-வேட்பு தெரிந்தோ, அல்லது தெரியாமலேயும் இருக்கலாம். பொதுவாக நிறைவேறாத ஆசைகள் பதிவுகளாக இருக்கலாம். இதுபோன்று தேவையற்ற பதிவுகள் அதிகமாக இருப்பின் அந்த ஆன்மா கனம் அதிகமாகி புவியைவிட்டு உயரே செல்ல முடியாமல் இருக்கும். நிறைவேறாத ஆசைகளின் எண்ணிக்கை குறைந்தும், பதிவுகளின் அழுத்தம் குறைந்தும் இருந்தால் அந்த ஆன்மா லேசானதாக இருக்கும். ஆகவே பதிவுகளின் அழுத்தம் குறைந்த ஆன்மா லேசாகி புவியை விட்டு மேலே செல்லமுடிகின்றது. பதிவுகளின் அழுத்தம் அதிகமாக உள்ள ஆன்மா பளு அதிகமாகி புவியை விட்டு மேலே செல்ல முடியாது.
    வாழும் காலத்தில் மனிதன் ஏற்கனவே இப்பிறவிக்கு கருமையத் தொடர்பாகக் கொண்டு வந்த வினைப்பதிவுகள் மற்றும் இப்பிறவியில் இவன் எண்ணிய எண்ணங்கள், அதற்கேற்ற சொற்கள், செயல்கள் ஆகியவற்றிற்கேற்ப மரணத்திற்கு பிறகு புவியைவிட்டு வெவ்வேறு நிலைகளுக்குச் செல்லும். வாழ்கின்ற காலத்தில் ஆன்மாவின் நிலைகளை ஐந்தாக பிரித்துள்ளனர்.
    அன்னமய கோசம்
    மனோ மய கோசம்
    பிராணமய கோசம்
    விஞ்ஞான மயகோசம்
    ஆனந்தமய கோசம்

    வாழும் காலத்தில் இந்த ஐந்து நிலைகளில் இயங்கியதற்கு ஏற்ப மரணத்திற்கு அது நான்கு நிலைகளை அடையும். அவையாவன:
    1) சாலோக்கியம்—உலகை ஒட்டி அதன் கவர்ச்சிக்கு உட்பட்ட களம்(EARTH BOUND)
    2) சாமீப்பியம்—சூரிய களம்
    3) சாரூப்பியம்–சக்திகளம்
    4) சாயுச்யம்—இறைவெளி
    அருளாளர்கள் உலகம் என்பதனை மூன்றாவது மற்றும் நான்காவது நிலையாகக் கொள்ளலாம்.
    எனவே அருளாளர்கள் பூதவுடலை உதிர்த்த பின்னர், அவர்களது ஆன்மா அருளாளர்கள் எனப்படுகின்ற சாரூப்பியம், சாயுச்யம் ஆகிய நிலைகளுக்கு சென்றுவிடுகின்றது. அவர்களை நினைவு கூர்வது என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும்.
    அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டினோர் அனைவரையும் நினைவு கூர்வோம் என்பதனை எதற்காக என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். அருளாளர்கள் என்பவர்கள் யார்? திருவள்ளுவர் மொழிந்துள்ளபடி ஐயப்படாது அகத்தை உணர்ந்தவர்கள் தெய்வத்திற்கு சமமாகக் கொள்ள வேண்டும். இறை அரூபமாக இருக்கும்போது பின்னர் எவ்வாறு தனது குழந்தைகளுக்கு தன்னைப் பற்றி சொல்லமுடியும்? தனது சார்பாக இறைத்தூதுவர்களான அருளாளர்கள் வழியாகத்தானே சொல்ல முடியும்.
    யார் என்ன சொன்னாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கின்ற அவசியமில்லை. ஆறாம் அறிவிற்கு சிந்திக்கும் சுதந்திரமும், உரிமையும் இருக்கின்றது. எனவே அறியப்படுகின்ற அருளாளர்களின் கண்டுபிடிப்பினை, ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, தனது அனுபவத்துடன் இணைத்து, உலகில் மற்றவர்களின் அனுபவங்களோடு இணைத்து சரியாக இருக்கின்றது என்று அறிந்த பிறகே ஏற்றுக் கொள்ளலாம். இறையே அறிவாக மனிதனிடம் வீற்றிருப்பதால், தனது அறிவைக் கொண்டே உறுதிபடுத்திக் கொள்ளும் திறனை பெற்றிருப்பதால் மனிதன் உறுதிபடுத்திய பிறகு ஏற்றுக் கொண்டு பின்னர் பயன் தரும்வகையில் மாற்றத்திற்கு(transformation) வந்துவிடவேண்டும்.

    தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் என்ன தேவை?

    இன்பமாக வாழ்வது தேவை. தனிமனிதன் இன்பமாக வாழ விரும்புவது என்பது சமுதாயத்திற்கு இடையூறு செய்யாமல் வாழ்வது(LIVE NOT AT THE EXPENSE OF OTHERS). முடிந்தால் சமுதாயத்தையும் வாழ வைத்து தானும் வாழ்வது மிக மிகச்சிறப்பாகும். மகிழ்ச்சியாகும். தன்னை வாழவைக்கின்ற சமுதாயத்திற்கு திருப்பி செலுத்தும் நன்றியுமாகும். இது வரை எண்ணிலடங்கா அருளாளர்கள் வந்து சென்றுவிட்டனர். அவர்கள் கூறியுள்ள அறநெறி அறிவுரைகள் ஏராளம், ஏராளம்! அவற்றிற்கு செவிசாய்க்கவில்லை. எனவே அவற்றை சாதனைக்கு கொண்டுவர முடியவில்லை. ஆகவே வாழ்வில் சிக்கல்கள். வாழத் தெரியாது வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

    இதற்கு மேலும் அறநூல்கள் அவசியமில்லை:

    யார் இவ்வாறு கூறுவது? இவ்வாறு கூறுவது:

    மனிதஇனப் பரிணாமத்தில் அறம் தோன்றிய முதல் நாளை கண்டுபிடித்து,
    ‘அறம் என்பது ஒழுக்கம், கடமை, ஈகை என்பதே’ என்று திட்டவட்டமாக தெளிவாகச் சொல்லி
    ‘அறத்தின் மாண்புணர்ந்து அறம் ஊக்கி அறம் காக்கும் தகைமையே இறை உணர்வு’ என்று அறஉணர்வை இறைஉணர்வோடு சமப்படுத்திக் கூறிய இறைஉணர்-அறநெறியாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    இப்போது தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் தேவையானது யாதெனில் அறநூல்களில் உள்ள அறிவுறுத்தலை சாதனையாக்க வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள். சாதனையே அறநெறி என்கிறார் மகரிஷி அவர்கள்.

    அறநெறியைப்பற்றி பேசுவதுமட்டுமே பயன்தராது.

    அறிநெறியை சாதிப்பதுதான் அறநெறி மலர்ந்ததற்கு அடையாளம்.

    அறநெறி இன்னமும் மொட்டாகவே உள்ளது.
    மொட்டு மலர்ந்தால்தான் மணம் வீசமுடியுமல்லவா?
    அறநெறி நூல்களிலே இருந்து என்ன பயன்? அந்த நூலா பயன்பெறப்போகின்றது?!
    அறநெறியால் மனிதன் பயன் பெறவேண்டும். மனிதகுலம் பயன் பெற வேண்டும்.
    ஆகவே அதற்கு சாதனைதான் அவசியம்! அவசியம்!! அவசியம்!!!

    அறநெறி என்பது என்ன? ஒழுக்கத்தை முன் வைத்த நெறியாகும். ஒழுங்காற்றலாகிய பேரறிவே மனிதஅறிவாக இயங்கும்போது இயற்கை/இறை மனிதனிடம் எதிர்பார்ப்பது ஒழுக்கம் என்பது இயல்புதானே! நியாயம்தானே! சமுதாயம் என்னும் கூட்டுறவில்  தனிமனிதன் ஒருவன் ஒழுக்கத்தை மீறினால் தனிமனிதன் மட்டும் பாதிப்படைவதில்லை. சில நேரங்களில், மற்றொரு மனிதனோ, மனிதர்களோ, ஒட்டுமொத்த சமுதாயமோ கூட பாதிப்படையக்கூடும்.

    ஒழுக்கம் மீறுவது என்பது என்ன? முறையற்ற செயலே ஒழுக்கம் மீறுவது. எனவே செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு என்பது இயற்கை/இறை நீதியாக உள்ளதால் முறையற்ற செயலான ஒழுக்கம் மீறிய செயலுக்கான விளைவு துன்பமாகத்தானே இருக்கும். பொதுவாக ஒழுக்கம் என்பது மாணவர்களுக்கானது என்பதுபோல் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ஒழுக்கம் என்பது என்ன? அது செயல்வகையைச் சார்ந்ததுதானே! ஒழுக்கம் என்பது ஒரு செயல்தானே. செயல் செய்வதில் உள்ள விளைவை வைத்து, அது நன்மையைத் தருகின்றது என்றால் அச்செயல் ஒழுக்கம் எனப்படும். ஆனால் செயல் செய்வதற்கு முன்னே விளைவைக் கணித்து, செயல்படவேண்டும். எனவே ஒழுக்கம் என்பது வாழும் வரை இன்பமாக வாழ்வதற்கு எல்லோருக்குமே அவசியமானது,
    ஒழுக்கம் என்பது என்ன என்பதனை திருவேதாத்திரியம் வரையறுத்துவிட்டது. அதே போன்றே அறம் என்பது என்ன என்று சிறிதளவு கூட ஐயமின்றி வரையறுத்துவிட்டது திருவேதாத்திரியம்.
    சாதனையே அறநெறி என்று இயம்பும் மகரிஷி அவர்களின் கவியினை நினைவு கூர்வோம்.

    சாதனையே அறநெறி(21-12-1961)

    அறநெறியைப் போதிக்க புதிய நூல்கள்
    அவசியமே இல்லைஇனி; மேலும் மேலும்
    அறநூல்கள் எத்தனையோ இந்நாள் மட்டும்
    அறிஞர்பலர் அளித்துள்ளார்; அவையே போதும்!
    அறம்பிறழா நெறிநின்று, மக்கள் வாழ
    அவசியமாம் பொருட்களோடு கல்வி கிட்ட,
    அறவோரே திட்டமிட்டு அமுல் செய்வீரே!
    அதன்மூலம் அறம் வளரும்; உலகம் உய்யும்.

                                                 . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இதுவரை வந்துள்ள அறநூல்களே போதும் என்கிறார். உண்மைதானே! திருவள்ளுவர் ஒழுக்கத்தை மனிதன் தனது செல்வமாக்கிக் (உடைமை)கொள்ள அறிவுறுத்துவதற்காக பத்து கோணங்களில்(பத்து குறட்பாக்கள்) அருளி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் சமுதாயத்தில் ஒழுக்கம் முழுவதுமாக மலர்ந்துள்ளதா என்றால் என்ன பதில் சொல்வது. அவரவர்களே சொல்லட்டும். ஒழுங்காற்றலான பேரறிவே தன்மாற்றமான மனிதசமுதாயம் எனும் செடியில் அங்கொன்று இங்கொன்றுமாகத்தான் ஒழுக்கப்பூ மலர்ந்து வருகின்றது. கிளைக்கு கிளை ஒழுக்கப்பூ காணப்பட்டாலும் அது மலராமலே மொட்டாகவே இருந்து கருகிவிடுகின்றது.

    மனவளக்கலை பயனாளிகளாக நாம் மகரிஷி அவர்களுக்கு, ஏன் இறைக்கே கூற வேண்டியது ஒன்றுள்ளது. அது என்ன?

    ‘அறநூல்கள் இனிமேலும் வரவேண்டிய அவசியமில்லை’ என்பது எப்போது சொல்ல முடிந்தது/முடிகின்றது? அறத்தை சாதனைக்கு கொண்டுவரக்கூடிய

    புரிதல் கூடிய சிந்தனையையும்,
    துணிச்சலையும்,
    சமுதாய அக்கறையையும் ஊட்டுகின்ற வேதாத்திரிய அறநூல்களை தோற்றுவித்த பிறகே ‘அறநூல்கள் இனிமேலும் வரவேண்டிய அவசியமில்லை’ எனக் கூறமுடிகின்றது.

    எனவே இறைவா!

     நீயே மனிதனாக தன்மாற்றம் பெற்றுள்ளதால்,
    ஒழுங்காற்றலே உனது திருநிலையாகவும் இருப்பதால்,
    இனி உன் ஒழுங்காற்றலே மனிதகுலத்தில் ஒழுக்கமாக மலரவும்,
    ஒழுக்கத்தை முதல் அங்கமாகக் கொண்ட உன்னுடைய நெறியான அறநெறியை பரவவிட்டுவிட்டாய் வேதாத்திரியத்தின் வாயிலாக.
    என்னே உன் கருணை! வாழ்க வேதாத்திரியம்! வளர்க வேதாத்திரியம்!!

    இனி வேதாத்திரியத்தை போற்றி போற்றி வளர்ப்போம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்(03-08-2016—புதன்) ‘அருளாளர்களை எவ்வாறு நினைவு கூர்வது’ என்பது பற்றி அறிவோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                     வளர்க அறிவுச் செல்வம்

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். அதற்கான வழிமுறையினை அறிய: click here. 

    அல்லது

    நேரிடையாக உங்கள் கருத்துக்கள் பகுதிக்கு செல்ல click here
    http://www.prosperspiritually.com/contact-us/

    நன்றி,
    வாழ்க வளமுடன்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 200

    வாழ்க மனித அறிவு               வளர்க மனித அறிவு

    30-07-2016—சனி

    ‘ பேசப்போவது எல்லாவற்றையும் நன்றாக யோசி. ஆனால் யோசித்ததை எல்லாம் பேசிவிடாதே?

     ….. டெலானி.

    பயிற்சி—
    1) யோசிக்கவும் சொல்கிறார் அறிஞர் டெலானி, அதே நேரத்தில் எச்சரிக்கையையும் விடுக்கிறார். ஏன்?
    2) மனவளக்கலையின் எந்தப் பயனை வளர்க்கக் கூடியது அறிஞர் டெலானியின் இவ்வறிவுரை?

    வாழ்க அறிவுச் செல்வம்                வளா்க அறிவுச் செல்வம்

  • சிந்திக்க அமுத மொழிகள்- 199

    வாழ்க மனித அறிவு          வளர்க மனித அறிவு

                         29-07-2016—வெள்ளி

    ‘தன் குறை எது என கண்டுபிடித்தலே அறிவின் சிகரமாகும்’

    ….. இங்கிலாந்துப் பழமொழி.

    பயிற்சி—
    1) ‘இவ்வுண்மையை மகாத்மா காந்தி எவ்வாறு கூறி இருக்கிறார்?
    2) மகரிஷி அவர்கள் எவ்வாறு கூறுகிறார்?
    3) ஏன் தன்குறையை அறிவது, அறிவின் சிகரம் என்கிறது இங்கிலாந்துப் பழமொழி?
    4) அறிவு அரூபமாயிற்றே! அறிவிற்கு சிகரம் உண்டா? பழமொழி கூறும் சிகரம் எது?

    வாழ்க அறிவுச் செல்வம்                 வளா்க அறிவுச் செல்வம்