வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு
அருளாளர்கள் உலகம் 1/?
FFC–208
19.07.2016—செவ்வாய்
“அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,
அதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.”
எல்லா அருளாளர்களின் ஆசிகளைப் பெறுவோம்:
இன்று குருபூர்ணிமா தினம். எதற்காக இந்த தினம் வருடத்தில் ஒரு நாள் கொண்டாடப்படுகின்றது?வாழையடி வாழையாக திருக்கூட்ட மரபினில் உதிக்கின்ற குருமார்களை வணங்கிஅருளாளர்களை நினைவுகூர்வதற்காக வருடத்தில் ஒரு நாள் குருபூர்ணிமா தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. நம்மை நல்வழி நடத்துகிற, நாம் இதுவரை அறிந்திராத இறையை நமக்குக் காட்டி அருளிய நேரிடை குருவையும், உறுதுணையாக இருக்கின்ற அனைத்து அருளாளர்கள் திருக்கூட்ட மரபினையே பணிந்து அவர்கள் அனைவரின் ஆசிகளை ஏற்றுக் கொள்வோம். குருபூர்ணிமா கொண்டாடாத மற்ற நாட்களில் என்ன செய்வது? எனவே அருளாளர்களை எப்போதும் எவ்வாறு நினைவில் கொள்வது என்பது பற்றி சிந்திப்போம். இதே போன்று அருளாளர்களின் ஆசியும், அருளும் எல்லா ஆன்மீக சாதகர்களுக்கும் கிடைத்திட வேண்டிக்கொண்டு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம்.
குருவின் பூரண ஆசியைப் பெறுவதற்காக இந்நாள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறு குருவிடம் ஆசி பெறவேண்டும் என்பது பற்றி இன்று சிந்திக்கலாம். குரு எப்போதும் பாரபட்சமின்றி ஆசியினைத் தந்து கொண்டேதான் இருக்கிறார். எந்தவித பாகுபாடுமின்றியும் எல்லோருக்கும் ஒளிவு மறைவின்றி சமமாக ஒரே கல்வியினைத்தான் தந்து கொண்டிருக்கிறார். இது இயற்கையின்/இறையின் புனித ஏற்பாடு. ஆனால் அதனைப் பெற்றுக் கொள்ளும் அருட்பாத்திரமாகிய சீடன் எவ்வாறு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றியதுதான் இன்றைய சிந்தனை. எனவே இந்த புனித நாளிலே, சிந்தனைக்காக, ‘அருளாளர்கள் உலகம்’ பற்றி சிந்திப்போம். வாழ்க வளமுடன். அருளாளர்கள் உலகம் என்று தனியாக உள்ளதா?
அருளாளர்களை மகரிஷி அவர்கள் கூறியுள்ள முறைப்படி வணங்கி நினைவு கூர்வோம்.
“அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,
அதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.” என்கிறார் மகரிஷி அவர்கள்.
மகரிஷி அவர்கள் அருளியுள்ள குருவணக்கப்பாடல் பற்றிய ஆய்வு:
மகரிஷி அவர்கள் அருளியுள்ள குருவணக்கப்பாடலில் முதலில் தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்கர் ஆகிய அருளாளர்களை, அவர்களின் நாமங்களை செப்பி, நினைந்ததோடுமட்டுமல்லாமல், மனித இன பரிணாமத்தில்(தன்மாற்றம்) முதன் முதலில் தோன்றிய மனிதனை முதல் மனிதன் என்று சொல்வதுபோல், என்றைக்கு மனிதகுலத்தில் ஒருநாள் முதல் மனிதர் இறையை உணர்ந்தாரோ அந்த அருளாளரிலிருந்து இன்றுவரை இறையை உணர்ந்த அனைத்து அருளாளர்களையும் வணங்கி ஆசி பெறச் சொல்கிறார் மகரிஷி அவர்கள்.
தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராலிங்கர் ஆகிய நான்கு அருளாளர் பெருமக்களும் மகரிஷி அவர்களுக்கு எவ்வாறு குருவாக அமைந்தனர் என்பது மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றிலிருந்தும் மற்றும் மகரிஷி அவர்களே கூறியதிலிருந்தும் அறிய முடிகின்றது. அந்த நான்கு குருமார்களின் பெயரோடு குருவணக்கப்பாடலை முடித்திருக்கலாம் மகரிஷி அவர்கள். இருப்பினும் மேலும்,
“அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,
அதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.”
ஆகிய இரண்டு வரிகளையும் சேர்த்து குருவணக்கப் பாடலை இயற்றியுள்ளார். அது அருட் கவிஞரின் சுதந்திரம். அப்படி நினைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்யாமல் இருக்க முடியவில்லை. இப்பாடல் இயற்றிய நாள் 11-08-1981 ஆகும். இதற்கு முன்னரே மகரிஷி அவர்கள் உலக சமுதாய சேவா சங்கத்தை தோற்றுவித்து அதன் மூலமாக மனவளக்கலையை போதிக்க ஆரம்பித்துவிட்டார். ஞானக்களஞ்சியத்தில் பகுதி ஒன்றில் மூன்று குருவணக்கப்பாடல் இடம் பெற்றுள்ளன. இப்பாடல் மூன்றாவதாக இடம் பெற்றுள்ளது. இப்பாடலுக்கு மட்டும் இயற்றிய நாள் தெரிகின்றது. மற்ற இரண்டு பாடல்களுக்கு இயற்றிய நாள் தெரியவில்லை.
மூன்றாவது பாடல் இயற்றிய நாள் தெரிவதை, உற்று நோக்கும்போது, அப்பாடலின் முக்கியத்துவம் உணரப்படுகின்றது. அதாவது முதன் முதலில் மனவளக்கலையை பயிற்றுவிக்கும்போது அப்பாடல் இயற்றப்படவில்லை என்றேதான் தெரிகின்றது. நாளடைவில் மனவளக்கலை பரவி வருகின்றபோது, இப்பாடலில் உள்ள உண்மையை மனவளக்கலை பயிற்சியாளர்களுக்கு அறிவித்து அவர்கள் எளிதாக பயிற்சியில் வெற்றி பெறவேண்டும் எனக்கருதி இப்பாடலை அருளியுள்ளார் மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள் என்ன கருதினாரோ, அதனை நாமும் அறிந்து கொண்டு அவ்வரிகளின் அறிவுறுத்தலுக்கு இணங்க செயல்பட்டு, மனவளக்கலையின் பயனை விரைவில் அடைந்திடுவோமாக!
மகரிஷி அவர்கள் பெரும்பாலும் பாடல்களை எட்டுவரிகளில் இயற்றுவது அவருக்குள்ள பழக்கம். அவ்வாறே முதலில் நான்கு அருளாளர்களின் நாமங்களைச் செப்புவதோடு நிறுத்திவிட்டு, அவர்களை நினைவு கூறச்செய்யும்படி பாடலை முடித்திருக்கலாம். ஆனால் எட்டுவரிகள் எழுதுவது பழக்கமாக உள்ளதால், ஆறுவரிகளோடு மேலும் இரண்டு வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவ்வரிகளின் பொருளென்ன? முக்கியத்துவம் என்ன? அதனை அறிந்து கொண்டால் அவ்வரிகளில் கூறியதை முழுமையாக செயல்படுத்த முடியும்.
பண்பேற்றத்திற்கு எளிய உறுதியான வழி:
குருவணக்கத்தில் மற்ற அருளாளர்களின் ஆசியினையும் பெற அவர்களையும் நினைவு கூர்வது என்பது வெறும் சம்பிரதாயமாகிவிடக்கூடாது. உள்ளார்ந்த அன்போடு எல்லா அருளாளர்களையும் நினைத்து, ‘அவர்களது உயர்வை மதித்து, ரசித்து’, போற்றி போற்றி வணங்க வேண்டும். இயல்பாகவே, பிறர் உயர்வை மதித்து, ரசித்தல் என்பது, நாம் அதில் உயர்ந்து வருவதைக் காண்பிக்கின்றது. இதுவே இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றம் என நாம் கூறிவருகிறோம். எந்த ஒருகலையிலும் சிறந்து விளங்கியவர்கள் தனது வெற்றியைப்பற்றிக் குறிப்பிடும்போது, தனக்கு முந்தையவர்கள் யாராவது சிறந்து விளங்கியவரை மாதிரியாக ‘Role Model’ வைத்துக் கொண்டதாகக் கூறுவது வழக்கம். அதேபோன்று இறை-உணர்-ஆன்மீகத்தில் பண்பேற்றமே அடிப்படையாக உள்ளதால், அப்பண்பேற்றத்தில் உயர்ந்து பண்பாளராக பரிணமிக்க, யாரை ‘மாதிரி புருஷராக’க் கொள்ள முடியும்? மனவளக்கலைஞர்களுக்கு, அறிவின் இருப்பிடம்(தெய்வத்தின் இருப்பிடம்), அதாவது தெய்வத்தை கருத்தியலாகக் காண்பித்தும் செய்முறையில் அவரவர்களே தெய்வத்தை உணர்ந்து அனுபவிக்க வழிகள் காட்டிய குருதேவரான, நவயுக வியாசரான வேதாத்திரி மகரிஷி அவர்களேதான் இருக்க முடியும். மகரிஷி அவர்கள் பண்பேற்றம் எந்த விஞ்ஞான அடிப்படையில் அமைந்துள்ளது என்பதனைக் கண்டுபிடித்து அதனை இயல்பூக்க நியதி என்கிறார். அப்பாடலை இந்நன்னாளில் நினைவு கூர்வது சாலச் சிறந்தது,
மற்றோர் இடத்தில் உரைநடைப் பகுதியில் “தான் உயராது, மற்றவர்களின் உயர்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது’ என்கிற பண்பேற்றத்திற்கு தொடர்பான உண்மையினைத் தெரிவிக்கின்றார் கிடைத்தற்கரிய குருவான வேதாத்திரி மகரிஷி அவர்கள். இதனைத்தான், இதன் பயனை அனுபவிக்கின்ற நாம் அவர் கூறிய இயல்பூக்க நியதியின்(தேற்றம்-theorem as in Maths) கிளைத்தேற்றம்(corollary) என்று அழைக்கிறோம். பண்பேற்றத்திற்கான வழியினைக் கூறி அது இயல்பூக்க நியதி என்கிறார். பூர்வபுண்ணியத்தால், இறைஅருளால், பண்பேற்றம் பெற, குருவின் சேர்க்கைப் பெற்ற ஆன்ம சாதகனின் பண்பில் ஏற்றம் பெறுவதற்கு, மனவளக்கலையில், தற்சோதனைப் பயிற்சி இருந்தாலும், அதற்கு வலிவூட்டுவது இதனைத்தவிர வேறு வழி ஏதுமில்லை/ஏதும் தெரியவில்லை. அவ்வாறு பண்பேற்றம் பெற்று வரும்போது. பொருள், செயல், குணம், உயிர்(ஆன்மா) ஆகிய நான்கினையும் அடிக்கடி நினைந்து வந்தால் அப்பொருளின் தன்மையாக, அறிவு பண்பில் ஏற்றம் பெற்றுவரும் பெருமையைத்தான் இயல்பூக்க நியதியாகும் என்கிறார் மகரிஷி அவர்கள். அவ்வாறு, இயல்பூக்க நியதியின்படி ஒருவர் ‘தான் பண்பேற்றம் பெற்றுவருவதனை’ எவ்வாறு அவரே அறிந்து கொள்வது என்பதற்கான அளவுகோல்தான் இயல்பூக்க நியதியின் கிறைத்தேற்றம் என்பது.
நா சுவை அறியும் கருவி மட்டுமல்ல:
மகரிஷி அவர்கள் கூறும் இயல்பூக்க நியதியின்படி பண்பேற்றத்தில் உயர்வு அடைந்து வரும்போது, ‘நா’ சும்மா இருக்காது. ‘நா’, சுவைப்பதற்கு மட்டும் உருவான கருவி அல்ல. மற்ற உயிரினங்களுக்கு ‘நா’, சுவை அறியும் கருவியாக மட்டுமே இருக்கும். ஆனால் அறிவு, ஆறாம் நிலைக்கு வந்தபோது, நாவை சுவை அறியும் கருவியாக மட்டுமின்றி, சொற்களை உதிர்க்கும் கருவியாகவும் செயல்படுத்துகின்றது. ஆகவேதான் ஆன்றோர்கள் ‘நா, எப்போதும் நல்லவற்றையேப் பேச வேண்டும்’ என்று அறிவிற்கு அறிவுருத்துகின்றனர். நன்றி உணர்வை சொல்லாகத் தெரிவிக்க அறிவு நாவைத்தான் பயன்படுத்துகின்றது. எனவே அப்போது ‘நா’ சொற்களை உதிர்க்கும் நல்ல கருவியாக செயல்படுகின்றது.
ஆகவே, இயல்பூக்க நியதியின்படி பண்பில் உயர்வு அடைந்து வரும்போது நன்றி உணர்வைத் தெரிவிக்கும் முகத்தான், உணவை சுவைக்க நாவை கருவியாக பயன்படுத்தும் அறிவு, பண்பேற்றத்திலும், எதனை நினைத்து இயல்பூக்க நியதி தன்னிடம் செயலாகிக் கொண்டிருக்கின்றதோ, அப்பொருளின் தன்மையை, அறிவு மதிப்பதோடு நின்று விடாது, ரசிப்பதுடன், அதன் அருமை, பெருமைகளை நாவைக் கொண்டு வார்த்தைகளால் புகழ்ந்து எடுத்து இயம்பும் தன்மையுடையது அறிவு. எனவே பண்பேற்றத்தில் உயர்ந்து வரும்போது இயல்பாகவே நடைபெறுகின்ற ஒன்று இது. எனவேதான் அவ்வைத்தாய் தனது மூதுரையில் ஒர் பாடலில் “நல்லார் குணங்களுரைப்பதுவும் நன்றே” என்கிறார். நல்லார் குணங்களை எது உரைக்க முடியும். அறிவுதான் நாவைக் கருவியாகக் கொண்டு உரைக்க முடியும்? அப்பாடலையும் இந்நன்னாளில் நினைவு கூர்வவோம்.
அவ்வையார் இயல்பூக்க நியதிபற்றி ஏதாவது கூறியுள்ளாரா?
அவ்வைத்தாய் தனது மூதூரையில் ஓர் பாடலில் நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே என்கிறார். அப்பாடலை நினைவுகூர்வோம்.
சிறுவயதில் தமிழ்ப்பாடத்தில் படித்திருப்போம். ஆனால் அன்று மனிதனின் பண்பேற்றத்தில் உள்ள இயல்பூக்க நியதி என்கின்ற அறிவியல் இப்பாடலில் இருக்கின்றது என்பதனை அறியவில்லை. ஆனால் இன்று நாம் அறிகிறோம் கிடைத்தற்கரிய குருவின் தரிசனத்தால். இதுவன்றோ இறை-உணர்-ஆன்மீக முன்னேற்றத்திற்கு திருப்புமுனையை தந்துள்ளது வேதாத்திரியம் என்பது. வாழ்த்துவோம் வேதாத்திரியத்தை. இறைவனை போற்றி போற்றி என்று வாழ்த்துவது போன்று வேதாத்திரியத்தை. வாழ்த்தி, வாழ்த்தி, வேதாத்திரியம் மேலும் மேலும் வளர்ச்சி பெற்று உலகை உய்விக்க, நம் மௌன ஊடகமான எண்ணத்தை பயன்படுத்துவோம். அவ்வையார் பண்பேற்றத்திற்கு இயல்பூக்க நியதி என்று சொல்லி, அதனைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறாமல் பண்பேற்றத்திற்கான வழிகளைக் கூறியுள்ளதும், திரூமூலர், மகரிஷி அவர்கள் கூறியுள்ளதும் ஒன்றே எனத் தெரிகின்றது. உண்மையை சொல்வது என்பது யார் எப்போது சொன்னாலும் ஒன்றாகத்தானே இருக்கும்/இருக்க முடியும்!
இறை-உணர்-சாதகனிடம் தோன்றும் சமிக்ஞை:
இறை-உணர்-சாதகன் பண்பேற்றம் பெற, எப்பொருளை, எக்குணத்தை, எச்செயலை, எவ்வுயிரை நினைக்க வேண்டியிருக்கும்? நினைக்க வேண்டும்? சாட்சாத் பிரம்மமே குருவாக வந்தவரின் குணத்தையும், செயலையும் அடிக்கடி நினைந்து வருவதுதானே நியாயமும், இயல்பும். இந்த சமிக்ஞை ஒரு இறை-உணர்-சாதகனிடம் மேலெழுந்து தெரியுமானால்,
“எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருஉயர்வு மதிப்போர் தம்மைத்
தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்,”
என்கின்ற வேதவாக்கின்படி அச்சாதகன் (மகரிஷி அவர்கள் கூறியுள்ளதுபோல்), இப்பிறவியிலேயே பிறவிப்பயனை எய்துவது திண்ணம் என்கிறார் மகரிஷி அவர்கள்.
நாளை (20-07-2016—புதன்) அருளாளர்கள் உலகம் பற்றி மேலும் சிந்திப்போம்.
வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச் செல்வம்
அன்பு வேண்டுகோள்
வாழ்க வளமுடன்!
உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். அதற்கான வழிமுறையினை அறிய: click here.
http://www.prosperspiritually.com/category/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
அல்லது
நேரிடையாக உங்கள் கருத்துக்கள் பகுதிக்கு செல்ல click here
http://www.prosperspiritually.com/contact-us/
நன்றி!
வாழ்க வளமுடன்!!