admin
Author Archives
-
-
சிந்திக்க அமுத மொழிகள் – 341-இணையதள பதிவேற்றம் – 1015
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
சிந்திக்க அமுத மொழிகள் – 341
இணையதள பதிவேற்றம் – 1015
நாள்: 23-04-2025 உ.ச.ஆண்டு: 23-04-0040
வள்ளலாரின் கடைசிச் செய்தி — உலக சமுதாயத்திற்கு
நேற்றைய (22-04-2025) சிந்தனையின் தொடர்ச்சி…
வாழ்க வளமுடன்!
சிந்தனையைத் தொடர்வோம். வள்ளலார் அவர்கள் தனது பூதல உடலின் மறைவிற்குப்(1874 ஆம் வருடம்) பிறகு நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு, அவர் சுமாா் 42 வயது இருக்கும் போது அருள்பாலித்தார். அதாவது 1953(1911+42=1953) ஆண்டில் அருள்பாலித்துள்ளார் என அறியமுடிகின்றது. அருள்பாலித்ததிலிருந்து பத்து ஆண்டு காலத்துக்குள் தான் எழுதியக் கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவமயம் என்கிறார் மகரிஷி அவர்கள். வள்ளலார் தம் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவைத்த செயல்களையெல்லாம், தனது உடலைக் கொண்டு வள்ளலார் முடித்துக் கொண்டார் என மகரிஷி அவர்கள் ‘எனது வாழ்க்கை விளக்கம்’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். வள்ளலார் பல சந்தர்ப்பங்களில் தன்னோடு இருந்து வழிகாட்டி, செயலாற்றியிருக்கிறார் என்று மகரிஷி அவர்கள் கூறுகிறார்.
மகரிஷி அவர்கள் 05-12-1986 அன்று அருளியுள்ள கவியினை இங்கே நினைவு கூர்வோம்.
வள்ளலார் அருள்(05-12-1986)
“என்று என்னை இராமலிங்க வள்ளற்பெரு மானார்
எதிர் நின்று காட்சிதந்து அருளைப் பொழிந்தாரோ
அன்றுமுதல், உடல் உயிரோடறிவை அருட்பணிக்கே
அர்ப்பணித்து விட்டேன்என் வினைத் தூய்மை யாச்சு
இன்றுஎந்தன் மனநிலையோ, வள்ளற் பெருமானார்
எந்தச்செயல் செய்யென்று உணர்த்து வாரோ, அதுவே
நன்றுஎனக் கொண்டவற்றை, நான்முடிக்கும் பேற்றால்
நல்லறிஞர் பலர் எனக்கு நட்பை அளிக்கின்றார்.” (ஞா.க.க.எண் 711)
… வேதாத்திரி மகரிஷி.
அதாவது வள்ளல் பெருமகனார் தனது பூதஉடலின் மறைவிற்குப் பிறகு சுமார் 80 வருடங்களுக்குப் பிறகு (1953-1874=79) தனது கடைசிச் செய்தியின்படி மகரிஷி அவர்களுக்கு அருள்பாலித்துள்ளார்.
இதிலிருந்து அறியவேண்டியது யாதெனில் மரணத்திற்குப் பின் உயிரின் நிலை பற்றி அறிய முடிகின்றது. மகரிஷி அவர்களின் மற்றோர் கவியினையும் நினைவு கூர்வோம்.
பேரறிஞர் வழி செல்வோம்(10.08.1981)
“அருவுருவாம் அகத்ததனை விளக்கி வாழ்வில்
அல்லல் கலைந்து அமைதிபெற்று மக்கள்உய்யக்
கருவிளக்கி மனவளத்தைப் பெருக்கிக் காக்கும்
கலையதனைக் கவி மூலம் விரித்துரைத்த
திருமூலர், வள்ளுவனார், இராம லிங்கர்
திருவருளார், மணிமொழியார், தாயு மானார்,
பெருநோக்கப் பயன்விளக்கி உலகம் உய்யப்
பேரறமாம் அருட்தொண்டில் பங்கு கொள்வோம்.”…(ஞா.க.க.எண் 13)
… வேதாத்திரி மகரிஷி.
அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய பேரறிஞர்கள் வழி சென்று அருட்தொண்டில் பங்கு கொள்வோம் என்கிறார் மகரிஷி அவர்கள். நாமும் அவ்வகையில் வள்ளல் பெருமகனார் கூறிய கடைசிச் செய்தியை நினைவில் கொள்வோம். ‘ தானே தனது செயல்களைச் சோதனை செய்து விளைவைக் கணித்து திருத்தம் பெறும் வெற்றியே அகத்தாய்வு’ என்கிறார் மகரிஷி அவர்கள். அதுபோன்று நம்மையும் திருத்திக் கொண்டு, அதே வேளையில் உலக சகோதர – மக்களையும் திருத்துவதற்கு அறிவுத்தொண்டு செய்து வாழ்வோம்.
இதுமட்டுமின்றி மேலும் சிந்தித்து செயல்பட வேண்டியதை அவரவர் நிலைக்கேற்ப அவரவர் சிந்தித்துப் பயன்பெறுவோமாக!
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!

-
சிந்திக்க அமுத மொழிகள் – 340-இணையதள பதிவேற்றம் – 1014
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
வள்ளல் பெருமகனாரின் கடைசி அமுதமொழிகள்
சிந்திக்க அமுத மொழிகள் – 340
இணையதள பதிவேற்றம் – 1014
நாள்: 22-04-2025 உ.ச.ஆண்டு: 22-04-0040
வாழ்க வளமுடன்!
இன்று, ‘சிந்திக்க’ அமுத மொழி’ பயிற்சியில் வள்ளல் பெருமகனார் உலக சமுதாயத்திற்கு விடுத்துள்ள கடைசிச்செய்தியை – அமுத மொழியை எடுத்துக்கொள்வோம். நம் இணையதள சத்சங்கம் வழக்கப்படி கேள்விகளுடன் பயிற்சியியைத் தொடங்குவோம். வாழ்க வளமுடன்!
வள்ளலாரின் கடைசி அமுதமொழியில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையுமே தனித்தனியாக எடுத்துக்கொண்டு சிந்திப்போம்.
பயிற்சி:
1) என்ன கூறிவிட்டுச் சென்றுள்ளாா் அருட்பிரகாச வள்ளலார். இதில் உள்ள முக்கியத்துவம் என்ன?
2) “இது வரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தோம்” – இந்த வாக்கியத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்ன?
3) “கேட்டு, திருந்தி, எழுச்சி பெற்று திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்” என்கிறாா். அப்படியா?
a) ‘திருந்தி’ என்பதன் பொருள் என்ன?
b) ‘எழுச்சி பெற்று’ என்பதன் பொருள் என்ன? இங்கு வள்ளலார் கூறும் ‘எழுச்சி பெற்று’ என்பதனை அவரின் அணுக்கச் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ள ‘இன்றேனும், விரைந்து எழுச்சி பெற்று’ உய்வீர் என்பதோடு இணைத்து பொருள் காண முடிகின்றதா?
c) ‘திறத்தில்’ என்பதன் பொருள் என்ன(நம்மிடம் திறன் உள்ளது என்று அடிக்கோட்டிட்டுக் காட்டுகிறாா்)?
d) ‘ஒருவரேனும் தேறிலர்(என்னே அக்கறை மனிதகுலத்தின்மீது!)’
4) “இப்போது இவ்வுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்துகொள்வோம்”. இக்கூற்றிலிருந்து நமக்குத்தெரிவிக்கும் கருத்து என்ன?
a) ‘புகுந்துகொள்வோம்’ என்றால் …. எப்படி?
5) “இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்கிருப்போம்.”? என்ன கூறுகிறார் வள்ளலார்?
6) “திருத்திவிடுவோம் அஞ்சவேண்டாம்” என்று பன்மையில் கூறியிருக்கிறார்.
a) ‘திருத்திவிடுவோம்’ என்றால் என்ன பொருள் ?
b) ‘அஞ்சவேண்டாம்’ என்றால்…???
c) பன்மையில் கூறுகிறாரே! யார் யாரையெல்லாம் சேர்த்து பன்மையில் கூறுகிறார்?
d) ஏன் அஞ்ச வேண்டாம் என்கிறார்?
7) ‘அகவினத்தார்க்குச் சாகா வரமும் ஏனையோர்க்குப் பரிபாக நிலையும்’ அளிப்போம் என்கிறார்.
a) அகவினத்தார் என்றால் யார் அவர்?
b) சாகா வரம் தருவோம் என்றால்…? யாருக்கெல்லாம் இது வரை சாகா வரம் கொடுத்துள்ளார்?
c) ‘ஏனையோர்க்கு’ என்றால் யார் அந்த ஏனையோர்கள்?
d) ‘பரிபாக நிலை’ என்றால் என்ன பொருள்?
e) வள்ளலார் கூறியதுபோல் பரிபாக நிலை சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதா? ஏற்படுத்தப்பட்டு வருகின்றதா?
8) ‘அளிப்போம்’ என்கிறார்.
a) அந்த நிலை அளித்துப் பெறுவதா?
b) அல்லது தானாகப் பெருவதா?
c) தானாகப் பெறுவதென்றால் எப்படி?
d) ‘நிலையாமை – உணர்வதையும்’ ‘பரிபாக நிலையையும்’ தொடர்பு படுத்துகிறாரா வள்ளலார்?
9) இக்கேள்விகளை வள்ளலாரின் சீடரான வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் கேட்டிருந்தால் என்ன பதில் கூறியிருப்பார் மகரிஷி அவர்கள்?
மேலேகுறிப்பிட்டுள்ள எட்டு கேள்விகளுக்குமான நம்முடைய பதில்களை மகரிஷி அவர்களின் பதில்களோடு ஒப்பிட்டுப் பாா்த்தால் நம்முடைய எல்லா பதில்களும் ஒத்துப் போகின்றதா? அல்லது ஒரு சில பதில்கள் மட்டும் ஒத்துப்போகின்றது என்றால் அவை எவை எவை? சிந்திப்போம் அன்பர்களே!
வள்ளலார் இந்த இறுதி செய்தியினை அருளிய அன்று(30-01-1874) 150 ஆண்டுகளுக்குப் பின்னர், தன் இறுதி செய்தி இவ்வாறெல்லாம் சிந்திக்கச் செய்யும் என எதிர்பாா்த்திருப்பாரா? அப்படிக் கேட்பதைவிட இவ்வாறெல்லாம் சிந்திக்க வேண்டியே இந்தச் செய்தியினை அருளியுள்ளாரா? தங்களின் பதில் என்ன? வாழ்க வளமுடன்!
நாளையும்(23-04-2025) இப்பயிற்சியினைத் தொடர்வோம்.
வாழ்க திருவேதாத்திரியம்! வளர்க திருவேதாத்திரியம்!!
வாழ்க மனித அறிவு! வளர்க மனித அறிவு!!
வாழ்க அறிவுச் செல்வம்! வளா்க அறிவுச் செல்வம்!!







Please advise where I can buy your book, Naan Yaar? Thank you
மனிதன் உணர்ச்சி வயப்படும் பொழுது அறிவு வெளியே போய்விடும் என்பது சரியே. உணர்ச்சிவயத்தில் அறிவு கீழ் நிலையில் உள்ளது. அறிவு தெளிவாக சிந்திக்க முடிவதில்லை. இராஜயோகம் என்றாலே…
[…] சு. வாசன் Submitted on 06 Oct, 2015 at 7:04 am […]
[…] நாகேஸ்வரன் Submitted on 11 Oct, 2015 at 1:35 am […]
நான்கு அடி கவிக்கு 13 சிந்தனை வினாக்களா? பிரம்மிக்க வைக்கின்றன தங்கள் பயிற்சி முறைகள். நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன். நன்றி.