admin

Author Archives

  • 226-பிறவிப் பயனை நல்கும்! 10/10

    வாழ்க மனித அறிவு                                                        வளர்க மனித அறிவு

    பிறவிப் பயனை நல்கும்! 10/10

    அறிவிற்கு விருந்து—226

     14-09-2016—புதன்.

    perinbapppadikalum thunaipapadikalum

    குருவை மதித்து ஒழுகல்

    வாழ்க வளமுடன்!

                      மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினத்திலிருந்து ஒன்பது விருந்துகளில் ‘பிறவிப்பயனை நல்கும்’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம்.  குருவின் சேர்க்கையால் பிறவிப்பயனை எய்தமுடியும் என்கிறார் மகரிஷி அவர்கள்.  எப்படி? பிறவிப்பயனை அடைவதற்கு, அதற்குரிய பயிற்சிகளை(தவம், தற்சோதனை) செய்து வரவேண்டும்.   பிறவிப்பயன் என்பதில் பண்பேற்றத்தில் மிக உயர்ந்தநிலையை அடைய வேண்டியிருப்பதால், சிரத்தையோடு பயிற்சிகளை செய்வதோடு எளிதாகவும், விரைவிலும் அந்த உயர்ந்த நிலையை அடைய இரண்டு சிறந்த வழிகளை 15-08-1984  அன்று ‘குருவின் சேர்க்கை’ என்கின்ற தலைப்பில் அருளியுள்ள பாடலில் தெரிவித்துள்ளார்.

         முதல் வழியான இயல்பூக்க நியதியின் பெருமையையும், அதனை எவ்வாறு பிறவிப்பயன் பெறுவதற்கான பண்பேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதனையும் நாம் ஏற்கனவே சிந்தித்திருக்கிறோம்.   இரண்டாவது வழியான ‘குருவை மதித்தொழுகல்’ பற்றி இன்று சிந்திக்க இருப்பதால்  அவ்வரிகளை மட்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்.

    குருவின் சேர்க்கை(15-08-1984)    

    FFC-75-எவரோருவா குரு வழ to post on 19-4-15.png-1

      இவ்வரிகளுக்குள் புகுவோம் சிந்தனையோடு சிந்தித்தலால்! முதலில் இவ்வரிகளில் உள்ள வார்த்தைகளை தனித்தனியாக எடுத்துக் கொண்டு உற்று நோக்குவோம்.

    1)   குரு

    2)   குருவின் சேர்க்கை

    3)   மதித்தல்

    4)   ஒழுகுதல்

    5)   தப்பாது

    6)   குருவுயர்வு

    7)   மதிப்பவரின் தரத்தை உயர்த்தி

    8)   பிறவிப்பயனை நல்கும்.

           ஒவ்வொரு வார்த்தைகளின் சூட்சுமத்தை (மேலோட்டமாகத் தெரியாத நுணுக்கம்; நுட்பம்—intricacy; subtlety)) அறிந்து கொள்வோம்.

     1)   குரு என்பவர் யார்?

      குரு என்பவர் மனிதஅறிவின் அறியாமையைப் போக்குபவர். ஏன் அறியாமையைப் போக்கிக் கொள்ள வேண்டும்?  அறியாமை என்பது என்ன? அறிவது அறிவு.  அறிவு அறியவேண்டியதை அறிய வேண்டும். அறிவு மற்ற எல்லாவற்றையும் அறிந்து கொள்வதாக இருந்துவிட்டு அது தன்னை மட்டும் அறியாதிருப்பது(நான் யார்?) அறியாமைதானே?! அது தன்னை அறியக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அறியக்கூடியதை அறியாதிருப்பது அறியாமைதானே?! அப்படியானால் அறிவிற்கு அறியாமை என்பது குறைதானே!  பொதுவாக எந்த ஒன்றிலும்  குறை இருந்தால் அதனால் வரும் பயன் எவ்வாறு  நன்மையாக  இருக்க முடியும் என்பதனை அறிவு அறியும். அப்படியிருக்கும்போது தன்னிலேயே(அறிவிலே) குறை இருந்தால் அறிவின் பயனில் எவ்வாறு நன்மை இருக்க முடியும்? நன்மையில்லை எனில் துன்பம்தான் விளையும்.  இன்றைய மனிதகுலத்தின் சிக்கல்களுக்கு காரணம்  அறிவை அறியாததுதான். எனவே எல்லா சிக்கல்களுக்கும்  அடிப்படைக் காரணமாக உள்ளது அறியாமையே.

         அறியாமையில் இருக்கும் அறிவு எவ்வாறு சிறப்பாக செயலாற்ற முடியும்? செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு. குறை உடைய அறிவு சிறப்பாக செயல் ஆற்ற முடியவில்லை எனில்  அது ஆற்றும் செயல்களினால் விளைவு துன்பமாகத்தானே இருக்குமன்றோ!  எனவே யார் இந்த  மனிதஅறிவின் அறியாமையைப் போக்க முடியும்?  ஏற்கனவே மனிதஅறிவின் இருப்பிடம் அறிந்து இன்புற்று வாழ்பவர்தான் மற்றொரு  மனிதஅறிவிற்கு வழியைக்காட்டி, அறிவின் இருப்பிடத்தைக் காண்பித்து, உணரச்செய்து அறியாமையைப் போக்க முடியும்.  எப்போதுமே இன்பம் விரும்பும் மனிதன் அறிவை(தன்னை யார் என அறியவேண்டும்) அறிந்ததால்தான்  இன்புற்று வாழ முடியும். அறிவை அறிந்து அறியைாமையைப்போக்கி அறிவை அறியச்செய்பவரே  குருவாக  அமைகிறார்.  அறியாமையைப் போக்கி வழிகாட்டுபவரே குரு எனப்படுகிறார் பயனாளிகளால்.  அப்படிப் பார்க்கும்போது 1970 ல் அழைப்பு விடுத்திருக்கிறார் ஒரு மகா புருஷர்.  அந்த அழைப்பினை என்ன என்று அறிவோம்.

    anbargale vaareer-THAI

    எனவே இந்த அழைப்பினை விடுத்துள்ள மகா புருஷர்தான் திருவேதாத்திரியம் அளித்துள்ள   வேதாத்திரி மகரிஷி அவர்கள்.   இந்த அறியாமையால் மிகுந்த சிக்கல்களுக்குள்ளாகித் தவிக்கும் மனித சமுதாயத்திற்கு விடிவெள்ளியாக திகழ இயற்கையால்/இறையால் அனுப்பப்பட்ட அவதாரமே வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

        இந்த அவதாரப்புருஷரே  குருவானவர் யார் என்பதனை சூசகமாக குருவிற்கு வரையறை கூறுகிறார் தான் இயற்றிய குருவணக்கப்பாடலின் கடைசி வரிகளில்

      ‘அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,

        அதை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வோம்.’

          குருவின் சேர்க்கை ‘அறிவின் தன்மாற்றப் பயணத்தில் பரிபக்குவ நிலையை’ அடைந்தவருக்கு தானாகவே நிகழ்கின்றது.  அப்படி கிடைத்த பேறுதான் நாம் வேதாத்திரி மகரிஷி அவர்களை குருவாக அடைந்தது.  இந்த பேற்றினை வீடுபேறாக உயர்த்த வேண்டும்.  அதற்கு  குருவை மதித்து ஒழுகினால், குருவின் உயர்வு தப்பாது நம்முடைய தரத்தை உயர்த்தி பிறவிப்பயனை நல்கும் என்கிறார் நம்முடைய குருதேவர்.  இது வரை குரு என்பவர் யார் என அறிந்து கொண்டோம்.  அடுத்ததாக குருவின் சேர்க்கை என்பது என்ன, அந்த புனித நிகழ்வு என்ன செய்கின்றது குருவை அடைந்தவரிடம் எனவும் அறிந்து கொள்வோம்.. 

     2)   குருவின் சேர்க்கை:

      சிறப்பானச் சிந்தனை மூன்று வினாக்களை அடிப்படையாகக் கொண்டது.  என்ன? ஏன்? எப்படி? (What? Why? How?) என்பதே அம்மூன்று வினாக்களுமாகும்.

        குருவின் சேர்க்கை என்றால் என்ன?  ‘சேர்க்கை’ என்றால் தெரியும்.  சேரிடம் அறிந்து சேர் என்று கருணையால் எச்சரித்து அறிவுறுத்துகின்றனர்  ஆன்றோர் பெருமக்கள்.  ஏன்?  எந்த ஒரு செயலுக்கும் விளைவு இருப்பதால் சேர்க்கை என்கின்ற செயலுக்கும் பின்னர் விளைவு உண்டு. அந்த விளைவு என்ன? யாரிடம் சேர்கின்றோமே அவரின் தன்மையும் நமக்கும் வந்து சேரும்.  இங்கே குருவிடம் சேர்க்கை என்ன விளைவை ஏற்படுத்த இருக்கின்றது?   சுருங்கச் சொல்வதென்றால் (in a nut shell) தன்முனைப்பு நீங்கவே குருவின் சேர்க்கையை இயற்கை/இறை திருவுளம் கொண்டு அவரவர்கள் கருமையப் பதிவுகளுக்கேற்ப நடத்தி வைக்கின்றது.  இதனை ஞானக்களஞ்சியம் 1586 வது பாடலில்  ‘தன்முனைப்பு நீங்கஒரு குரு அடைந்து’ என்கின்ற முதல் வரியே தெரிவிக்கின்றது. 

    guru-disciple-relation

    3) மதித்தல்:

    மதித்தல் என்றால் என்ன என்று தெரியும். இருப்பினும் அதற்கான வார்த்தை விளக்கம் காண்போம். மதி என்பதற்கு அறிவு என்று பொருள். மதித்தல் என்றால், எண்ணுதல், கருதுதல் என்று பொருள். ஒருவரை உயர்வாகக் கருதும் நிலை. எப்போது ஒருவரை உயர்வாகக் கருதும் நிலை ஏற்படும்? அவர் எந்த அளவிற்கு அறிவின் நிலையில் உயர்ந்திருந்தால் அவரை அறிவு மதிப்பதும் அதிகமாக இருக்கும். எந்த ஒன்றிலுமே அறிவு பயனடையத்தான் எண்ணும். ஆகவே அவ்வாறு பயனடைதலில் சிறப்பானதாகக்கருதப்படக் கூடியது அறிவிற்குத் தேவையான தெளிவாகும். எனவே குருவின் சேர்க்கையில், குருவை மதித்தல் என்பது குருவால் சீடருக்கு அறிவு நிலையில் ஏற்படுகின்ற உயர்வைப் பொருத்து சிறப்புற்று விளங்கும். சீடர் அறிவு நிலையில் உயர்வதற்காகத்தான் குருவை அடைகிறான். எனவே ‘உயர்வு’ மற்றும் ‘மதிப்பது’ பற்றியும் மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவில் கொள்வோம்.

    ‘தான் உயராது, மற்றவரது உயர்வை மதிக்கவும், ரசிக்கவும் முடியாது’ என்கிறார் மகரிஷி அவர்கள்.   இக்கூற்றின் உட்பொருளை அறிந்து கொள்வோம். அறிவு நிலையில் உயர்வதற்காகக் குருவை அடைகிறான் என்றால் குரு அறிவு நிலையில் உயர்ந்திருக்கிறார் என்றாகின்றது. அப்போது அந்த குரு-சீடர் உறவில் சீடர் குருவை மதிக்க வேண்டுமெனில் முதலில் குருவின் அறிவாற்றலைக் கண்டு ரசிக்க வேண்டும். ரசித்தல் இருந்தால் தானாகவே குருவை மதித்தல் ஆரம்பிக்கும். மதித்தலும், ரசித்தலும் ஒன்றிணைந்தால் சீடன் அறிவு நிலை உயர்ந்து வரும். இதைத்தான் மகரிஷி அவர்கள் ‘தான் உயராது மற்றவரது உயர்வை மதிக்கவும், ரசிக்கவும் முடியாது’ என்கிறார். குருவை மதித்தலோ, அல்லது அதன் காரணமாக மரியாதை செலுத்துவதோ குருவுடன் சேர்ந்ததன் பயன் அடைந்ததாகிவிடாது. அதனால்தான் பாடல் வரி ‘எவரொருவர் குருவை மதித்தாலும்’ என்றிராமல் ‘எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும்’ என்று அமையப்பெற்றுள்ளது. அப்படியானால் ஒழுகுதல் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும்.

    4) ஒழுகுதல்:

    ஒழுகுதல் என்றால் என்ன? ஒழுகுவது ஒழுகுதல்.  “ஒப்புர ஒழுகு” என்றும் “நேர்பட ஒழுகு” என்றும் அவ்வைத்தாய் கூறுவதனை அறிவோம். ஒழுகு என்றால் நட, நடந்துகொள் என்று பொருள். அறிவில் உயர்வது என்பது வேறொன்றுமில்லை. ஒழுங்காற்றலாய் விளங்கும் பேரறிவே மனிதஅறிவாக தன்மாற்றமடைந்து வந்துள்ளதால் மனிதஅறிவு ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவதே அறிவில் உயர்வதாகும். எனவே ஒழுக்கம் என்பது நெறியை ஒழுகி நடப்பது. நெறி என்பது ஒழுக்கத்திற்காக அமைந்துள்ள விதி. அதாவது இயற்கை விதி என்றே கொள்ளலாம். செயலுக்கு விளைவு உண்டு என்பது இயற்கை விதி.

       குருவை மதித்தொழுகல் என்பது குருவின் அறிவாற்றலை மதித்தலோடு நின்று விடாமல் அவ்வறிவாற்றல் கூறும் நெறிகளின்படி நடக்க வேண்டும். இவ்வாறு நடந்து கொண்டால் அதற்குரிய பயன் தப்பாது கிடைக்கும் என்கிறார். எனவே தப்பாது என்றால் என்ன என்று அறிவோம்.

     5) தப்பாது என்றால் தவறாமல், நிச்சயமாக என்று பொருள்.

    பாடல் வரி ‘எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும் குருவுயர்வு மதிப்போர் தம்மை’ என்று அமையாமல் ‘எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும் தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மை’ என்று அமைந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். ‘தப்பாது’ என்கின்ற சொல்லின் வாயிலாக பிறவிப்பயனை நல்கும் என்பது உறுதியாக்கப்படுகின்றது.

     6)  குருவுயர்வு:

    குருவின் உயர்வுதான் சீடனை, இயல்பூக்க நியதியின் படி சீடனை பண்பேற்றம்பெறச் செய்து பிறவிப்பயனை அடையச் செய்ய முடியம். எனவே தான் அறிஞர் திருமூலர் யாரை குருவாகக் கொள்ள வேண்டும் என்று சூசகமாக அபக்குவன் எவ்வாறு குருவைக் கொள்வான் என்று கூறுகிறார். அப்படியானால் பக்குவன் யாரை குருவாகக் கொள்ள வேண்டும் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். நடைமுறையில் யாரை குருவாக கொள்வது என்பது தெரியாமல் உள்ளது. தகுந்த குரு கிடைப்பது அவரவர் கருமையப்பதிவுகளைப் பொருத்து அமையும்.

                      அபக்குவன்

    குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

    குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்

    குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்

    குருடும் குருடும் குழி விழுமாறே.

    . . . திருமூலர்.

    பொருள்:

    குருட்டினை என்பது அறியாமை. அறியாமையைப் போக்கும் நல்லாசிரியரைத் தேடிப்போகாதஅபக்குவர்கள் அறியாமையை போக்க முடியாத ஒருவரை குருவாகக் கொண்டு அவரிடம் போவார் என்கிறார் திருமூலர். இவ்வாறாக அறிவில்லாதவரும், அறிவு புகுட்ட முடியாதவரும் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து இருப்பது குருடுக்கு வழிகாட்டக் குருடு முற்பட்டு, இருவரும் துன்பக் குழியில் விழுந்து துயருறுவதைப் போன்றதே ஆகும் என்கிறார் திருமூலர். (அபக்குவன் என்றால் பரிபக்குவம் அடையாதவன் என்று பொருள். பக்குவன் என்றால் பரிபக்குவ நிலையை அடைந்தவர் என்று பொருள்)

    7) மதிப்பவரின் தரத்தை உயர்த்தி:

    பிறவிப்பயன் அடைவது என்பது அறிவு பண்பேற்றத்தின் உச்சத்தை அடைவது என்பதால் குருவின் உயர்வு இயல்பூக்க நியதியின்படி சீடனின் தரத்தை உயர்த்தி பண்பேற்றம் பெறச் செய்து அதன் பயனாம் பிறவிப்பயனான வீடுபேற்றினை அளித்திடும்.

     8) பிறவிப்பயனை நல்கும்:

    பிறவிப்பயன் என்ன என்பது பற்றி முன்னதாகவே ஒன்பது விருந்துகளில் விரிவாக அறிந்து கொண்டோம்.

       பிறவிப்பயன் அடைவதற்காகத்தான் ஆன்மா இந்த பிறவி எடுத்துள்ளது. இதனை அறியாமல்போனால் மீண்டும் பாவப்பதிவுகளைச் சேர்த்து சேர்த்து வம்சாவளிக்கு சொத்தாகக் கொடுத்து அவர்களையும் துன்பத்திற்கு ஆளாக்கி, மீண்டும் பிறவா வரத்தினை பெறமால் இப்பிறவித் தொடரை நீட்டித்துக் கொண்டே செல்ல நேரிடும்.

       எனவே, பிறவிப்பயனின் அருமை பெருமையை உணர்ந்து கொண்டு குருவின் உயிரை, குருவின் குணத்தை, குருவின் செயலை அடிக்கடி நினைந்து நினைந்து இயல்பூக்க நியதியின்படி அறிவினில் உயர்ந்து, குருவை மதித்து ஒழுகி அடுத்த பிறவிக்கு பிறவிப்பயனை அடைவதை தள்ளிப்போடாமல், இப்பிறவியிலேயே பிறவிப்பயனை அடைவோம். உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது என உத்திரவாதம் அளித்துள்ள நம் குருதேவரின் பாதாரவிந்தங்களில் நம் ஆத்மார்த்த நன்றியைச் சமர்ப்பிப்போம். வாழ்க வளமுடன். இத்துடன் பிறவிப்பயனை நல்கும் என்கின்ற சிந்தனையை நிறைவு செய்கிறோம். அடுத்த விருந்தில் வேறொரு தலைப்பில் விருந்து அருந்துவோம்.

    guru_paadham

    வாழ்க அறிவுச் செல்வம்                       வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-210

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

     

    12-09-2016 – திங்கள்

    1.  ‘அறிவாட்சி ’  என்றால் என்ன?

    2. ‘அறிவாட்சித்தரம்’  என்றால் என்ன?

    3. இந்த  இரண்டு அருவப்பெயர்ச் சொற்களுக்கும் தொடர்பு உள்ளதா?

    4. மனிதனிடம்  ‘அறிவு ஆட்சி’ செயல் வடிவம் எடுப்பதிலும்,  ‘அறிவாட்சித்தரம்’ செயல் வடிவம் எடுப்பதிலும் எது சிறந்ததாக இருக்கும்?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                  வளர்க அறிவுச் செல்வம்


    Loading

  • 225-பிறவிப் பயனை நல்கும்! 9/?

    வாழ்க மனித அறிவு             வளர்க மனித அறிவு

    பிறவிப் பயனை நல்கும்! 9/? 

    அறிவிற்கு விருந்து—225

    11-09-2016—ஞாயிறு.

    perinbapppadikalum thunaipapadikalum

    ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’

    வாழ்க வளமுடன்.

    இன்றைய தலைப்பான ‘உறவிலே கண்ட உண்மை நிலை துறவு’ என்பதனை சிந்திப்பதற்கு உதவியாக இருப்பதில் முதல் இடம் வகிப்பது மகரிஷி அவர்கள் கூறும் அறிவுரையான ‘சுயமாய்ச் சிந்திப்பது’ என்பதால் சென்ற விருந்தில் சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும் என்று மகரிஷி அவர்கள் கூறுவதனை அறிந்து கொண்டோம். அதாவது ‘சிறப்பான சிந்தனை என்பது, சிந்தனையுடன் சிந்திப்பது’ என்று அறிந்துகொண்டோம். ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு முன்பே சிந்தித்தேதான் ஆக வேண்டும். அப்படிப்பார்த்தால் வாழ்வில் எவ்வளவு செயல்கள் செய்யப்படுகின்றன. அன்றாடம் செயல்கள் புரிந்து கொண்டேதான் இருக்கிறான் மனிதன். சிந்திக்கும் பருவம் வந்ததிலிருந்து(12 வயதிலிருந்து) இறக்கும் வரை சிந்திக்க வேண்டிய ஆயிரமாயிரம் சிந்தனைகள் இருக்கின்றன.

    மனிதன் ‘நான் எப்போதுமே சிந்தித்துதான் ஒவ்வொரு செயலையுமே செய்கிறேன்’ என்று தைரியமாகவும் உறுதியாகவும் சொல்ல முடிகிறதா? சிந்திக்காமலேயே உணர்ச்சிவயத்தில் விளைவை முன்னரே கணிக்காமல், அறியாமையில் எவ்வளவோ செயல்களை செய்து விளைவுகள் துன்பங்களாக வரும்போது துன்பமடைவதனைத்தான் கண்கூடாகப் பார்க்கின்றோமே! வாழ்நாளில் சிந்தித்து வாழவேண்டிய ஆயிரமாயிரம் சிந்தனைகளில் ஒரு சில முக்கியத்துவம் பெறுகின்றன.

    மகா சிந்தனை எது?

    அவ்வாறு முக்கியத்துவம் பெரும் சிந்தனைகளில் முதன்மை வகிப்பது பிறவிப் பயனை அறியும் சிந்தனையாகும். இதனை ஆறாவது அறிவின் மகா சிந்தனை என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஏன்? பிறவிப்பயனை உணரவைப்பதால் அது மகா சிந்தனையாகின்றது. அப்படியானால் பிறவிப்பயன் என்பது என்ன? ஏற்கனவே பிறவிப்பயன் என்ன என்று அருளாளர்கள் கூற நாம் அறிந்திருந்தாலும் இப்போது அதனை நினைவுபடுத்திக் கொள்வோம். பிறவிப்பயன் பற்றி அருளாளர்கள் கூறுவது என்ன? முன்னோர்கள் செய்துள்ள வினைப்பயனை அனுபவிக்கவே ஆன்மா பிறவி எடுத்துள்ளது. ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கிறார் ஒரு அறிஞர். அதாவது பெற்றோர்கள், அவர்களின் பெற்றோர்கள், இவ்வாறாக முன்னோர்கள் செய்துள்ள வினையின் பயனை அனுபவிக்கவே ஆன்மா இப்போது பிறவி எடுத்துள்ளதனை எப்போதும் மனிதன் நினைவில் கொண்டு இப்பிறவியில் எவ்வாறு வாழவேண்டும்? முன்னோர்கள் செய்துள்ள வினைகளுக்கேற்ப இன்பமும் துன்பமும் வரும். ஆகவே ஆன்மா இப்பிறவியில் கொண்டுவந்துள்ள தீயவினைப்பதிவுகளையும் செயலிழக்கச் செய்ய வேண்டும். மேலும், தானும் இப்பிறவியில் தீய வினைகளைச் செய்யாமல் விழிப்போடு இருந்து நல்ல செயல்களையே செய்துவர வேண்டும். இதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிறவி எடுப்பதற்குக் காரணமான தீயவினைப்பதிவுகளை செயலிழக்கச் செய்து மீண்டும் பிறவாத நிலைக்கு ஆன்மா உயர்வதே பிறவிப்பயன் என்று அறிந்துகொள்ள வேண்டும். பயிற்சியினால் தீயவினைப் பதிவுகளை செயலிழக்கச் செய்வதால் மனம் தூய்மை அடையும். தூய்மை அடைந்த மனமே இறைமனமாகி தன்னை இறையுடன் இணையச் செய்யும். மனம் தூய்மை அடைந்து இறையோடு கலப்பதே பிறவிப்பயன் ஆகும். இது யாவருக்குமே பொது. இந்த உண்மையில் நம்பிக்கை இருக்கின்றதோ இல்லையோ இந்த உண்மையின் அடிப்படையில்தான் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அமைகின்றது. உண்மையை யாரும் மாற்ற முடியாது. மறைக்கவும் முடியாது. எனவே உற்ற வயதில் மனிதன் சான்றோர்களின் அறிவுரைகளின் துணையுடன், சுயமாகவும் சிந்தனையுடன் சிந்தித்து பிறவிப்பயனை அறிய வேண்டி இருப்பதால் இச்சிந்தனையை மகா சிந்தனை என்கிறோம்.

    விழிப்பும் மயக்கமும்:

    இந்த மகா சிந்தனை, வாழ்க்கையை எவ்வாறு துன்பமில்லாமல் இன்பமாக வாழ்வது என்பதனை வாழப்பிறந்த மனிதனுக்கு தெளிவு படுத்தும். இந்த மகா சிந்தனை வெற்றி பெற்றுவிட்டால் மற்ற சிறு சிறு சிந்தனைகள் எளிதாகிவிடும். அதெப்படி? ஏனெனில் மகா சிந்தனை எப்போது வெற்றி பெறும்? சிந்தித்ததை செயலுக்கு கொண்டுவந்து பயன் அடையும்போதுதான் சிந்தித்தது வெற்றி அடைந்ததாகும். அதாவது மேலும் தெளிவாக விளங்கிக் கொள்வோம். பேரறிவு அயரா விழிப்புடையது என்பதனை அறிவோம். அந்த அயராவிழிப்புடைய பேரறிவின் சிறு துளியே மனிதனின் அறிவாக இயங்குகின்றது. ஆனால் பல்வேறு பரிணாம நிலைகளை(EVOLUTIONARY PROCESS) கடந்து வரவேண்டியுள்ளதால் மனிதஅறிவு அந்த விழிப்பு நிலையை இழந்துவிடுகின்றது. விழிப்பு நிலையை இழந்து விடுவதற்கு மற்றொரு பெயர்தான் மயக்கம். எனவே பிறவிப்பயனை அறிந்து அதனை அடைவதற்கான தளம் அமைத்துக் கொடுத்த மகா சிந்தனை வெற்றி பெறுவது என்பது மனித அறிவு மயக்க நிலையிலிருந்து மீண்டும் விழிப்பு நிலையைப் பெறுதலாகும். எப்போதும் இயற்கையில் இல்லாததை மனிதன் பெற இயாலாது. ஆகவே ஏற்கனவே இயற்கையில் பேரறிவிற்கு விழிப்பு நிலை உள்ளது. விழிப்புநிலையே பேரறிவு. விழிப்புநிலையே இறை.

    விழிப்பு நிலையும் பிறவியின் நோக்கம் அறிதலும்:

    ஏனெனில் மகா சிந்தனை வெற்றி பெறுவது என்பது அயரா விழிப்பாகிய பேரறிவின் அங்கமான மனிதஅறிவு மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலையைப் பெறுதலாகும். எனவே இருந்த விழிப்புநிலை(AWARENESS) இழக்கப்பட்ட நிலையில் மீண்டும் விழிப்பினை பெற்றுவிடும்போது அந்த விழிப்புநிலை என்பது அனிச்சையாகிவிடும். அதாவது மகா சிந்தனையில் வெற்றி பெற்ற பிறகு, அறிவு விழிப்பு நிலையிலேயே இருக்க ஆரம்பித்து விடும். வேறு விதமாக சொல்வதென்றால் விழிப்பு நிலை ஏற்பட்ட பிறகுதான் பிறவியின் நோக்கம் என்ன என்று தெளிவாகும். இன்னும் வேறுவிதமாக தெளிவாகச் சொல்வதென்றால் விழிப்புநிலை ஏற்படுவதும் பிறவியின் நோக்கம் தெளிவாவதும் ஒரே நேரத்தில் அறிவிற்கு ஏற்படும் அனுபவ சம்பவங்கள். சம்பவங்கள் என்று இரண்டாக பன்மையில் சொல்வது தெளிவான தெளிவு அல்ல. தெளிவானத் தெளிவு என்பது என்ன? சிந்தனையுடன் சிந்திப்பது போன்றதே இதுவும். தெளிவு வேறு சிந்தனை வேறா?! இல்லை. ஒன்றே. ஒரே அறிவின் நிலைகள்தானே சிந்தனையும், தெளிவும். விழிப்பு நிலை பெறுவதும், பிறவியின் நோக்கம் அறிவதும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றே. எனவே இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்படுகின்றன.

    மகா சிந்தனையால் மகா புருஷரானார்:

    இதுவரை சிந்தித்தில், மனிதனின் வாழ்நாளில் சிந்திக்கின்ற ஆயிரமாயிரம் சிந்தனைகளில், பிறவிப்பயனை அறிகின்ற சிந்தனை மகா சிந்தனை என்று முடிவு செய்துள்ளோம். அந்த மகா சிந்தனையால்தான் மகரிஷி அவர்கள் மகா புருஷனானார். பிறவியின் நோக்கத்தை அறிந்துள்ளார். அது பேரின்பப்படிகளில் முதல் படி. பிறகு அடுத்த மூன்றுபடிகளையும் கடந்து முழுமை அடைந்த அனுபவத்தை அறிவிக்கும் பாடலை சிந்தித்து வருகிறோம். ஏற்கனவே விருந்தில் இரண்டு படிகளை கடந்து வந்துவிட்டோம்.

    எனவே இப்போது பேரின்பப் படிகளில் மூன்றாவது மற்றும் நான்காவது படிகளைக் கடக்க இருக்கிறோம். ஆகவே அவற்றை நினைவு படுத்திக் கொண்டு சிந்தனையைத் தொடர்வோம்  

    ‘உறவுகளில் உண்மைநிலை உணர்ந்து ஆற்றி,

    உயர்வான துறவுநிலை உணர்ந்த போதும்,

    துறவுநிலை முடிவாகப் பெற்ற போதும்,

    துய்த்த பேரின்பம் எவ்வாறுரைப்பேன்!’                             

    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    மூன்றாவது நிலை:

    பேரின்பப்படிகளின் மூன்றாவது நிலை என்ன தெரிவிக்கின்றது? ‘உறவுகளில் உண்மைநிலை உணர்ந்து ஆற்றி, உயர்வான துறவு நிலை உணர்ந்த போது பேரின்பம் அடைந்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். இந்த நிலையை ஆய்விற்கு எடுத்துக் கொண்டு சிந்தனையுடன் சிந்திப்போம். அப்பாடல் வரிகளில் உள்ள வார்த்தைகளை எடுத்துக் கொள்வோம்.

    1) உறவுகளில் 2) உண்மைநிலை 3) உணர்ந்து 4) ஆற்றி 5) உயர்வான 6) துறவு நிலை 7) உணர்ந்த போதும். 8) உயர்வான 9) துறவுநிலை 10) உணர்ந்த போது

    உறவு என்பது என்ன?

    உறவு என்றால் சொந்தம்(RELATIONSHIP), தொடர்பு. பிணைப்பு(BONDAGE) என்று பொருள். உறவு என்பது மனிதர்களோடு உள்ள தொடர்பு மட்டுமல்ல. உயிரற்ற சடப்பொருட்களோடு ஏற்படும் தொடர்பும் உறவு என்றுதான் பொருள்.

    உண்மை நிலை என்பது என்ன?

    உண்மை என்பது மறுக்க முடியாதது. பொய் அல்லாதது, கற்பனைக்கு மாறானது, நடப்பில் உள்ளது, முறை பிறழாதது, இயல்பானது, முடிவாக இருப்பது என்று பொருட்கள் பல இருக்கின்றன. நிலை என்பது இருக்கும் தன்மை என்று பொருள். ‘உண்மை’ என்பதன் பொருளையும், ‘நிலை’ என்பதன் பொருளையும் இணைத்து ‘உண்மை நிலை’ என்பதற்கான பொருள் ஒன்றின் மறுக்க முடியாத கற்பனைக்கு மாறான நிலை. எவ்வாறு பொருள் மெய்ப்பொருள் என்று இரண்டாகக் கருதுவதுபோலவும், மெய்ப்பொருளை உண்மை என்று கூறுவதுபோலவும் உறவின் நிலையிலும் இரண்டு உள்ளன. உறவின் வெளிப்படையாகத் தெரியும் நிலை உண்மை நிலையாகாது. உறவின் உண்மை நிலை ஒன்றுள்ளது. அதுதான் துறவு. உறவிற்கு எதிர் சொல் உண்டா எனில், துறவு என்பதனை உறவின் எதிர்ச் சொல்லாகக் கருதலாம். இதனைத்தான் உறவின் உண்மை நிலை துறவு என்கிறார் மகரிஷி அவர்கள். இதுவரை, இவ்வாறு பொதுவாகவோ (உலகியலில்) அல்லது ஆன்மீகத்திலோ ‘உறவிலே கண்ட உண்மை நிலை தெளிவு’ என்கின்ற கண்டுபிடிப்பின் மூலமாக இதுவரை பற்றினைப்பற்றிய தெளிவானத் தெளிவு இல்லாதிருந்த குறையை திருவேதாத்திரியம் போக்கியுள்ளது என்று கூறுவதன் மூலம் மகிழ்ச்சியினையும், உளமார்ந்த நன்றியினையும் வேதாத்திரியத்திற்கு தெரிவித்துக் கொள்ளலாகின்றது.

    உணர்ந்து  என்றால் பொருள்  தெரியும். உணர்ந்து என்றால் ஒரு நிலையையோ தன்மையையோ மனதால் புரிந்து கொள்ளுதல் என்று பொருளாகின்றது.

    ஆற்றி என்றால் கடமையை நிறைவேற்றுதல் என்று பொருளாகின்றது. ‘உயர்வான’ என்றால் மதிப்பில் கூடுதலாக இருத்தல் என்று பொருளாகின்றது.

    ‘துறவுநிலை’ – ‘துற’ என்பதிலிருந்து வந்த வார்த்தையான ‘துறவு’ என்றால் நீக்குதல், கைவிடுதல் என்று பொருளாகின்றது. ‘துறவுநிலை’ என்பது அறமாகிய நல்லவை சேர அல்லதை நீக்கிய நிலை என்று பொருள். அதனால்தான் இல்லறம்(இல்+அறம்) என்பதுபோல் அல்லதை துறப்பதில் இல்லறத்தில் இருந்த அறம் மேலும் சிறப்புறுவதால் துறவறம் எனப்படுகின்றது. இல்லறம் அவசியம். இல்லறத்தில் அறம் காக்க நல்லதையே செய்து வர வர, அதன் பயனாகிய வீடுபேற்றினை அடையமுடியும். நல்லதையே செய்து வருவது என்பது அல்லதைத் துறந்து கொண்டு வந்தால்தான் சாத்தியமாகும். ஆகவே வீடுபேற்றைப் பெறுவதனை தடுக்கும் அல்லதை துறப்பதே துறவு ஆகும். இத்தகைய சிறப்புள்ள துறவினை பலவிதகோணங்களில் விளக்கவே திருவள்ளுவருக்கு 14 அதிகாரங்கள் தேவைப்பட்டுள்ளன.

    எனவே அறத்துப்பாலை மூன்றாகப் பிரித்து அதில் முதலில் பாயிரத்தை வைத்து, இரண்டாவதாக இல்லறவியலை வைத்து, இல்லறவியலுக்கு அடுத்ததாக துறவியலை வைத்துள்ள முக்கியத்துவத்தை அறிய வேண்டும். எனவே இல்லறமும், அதனுடன் தொடர்புடைய துறவறமும் அவசியம். இல்லறத்திலும் அறம் இருக்கின்றது. துறவறத்திலும் அறம் இருக்கின்றது. இல்லறத்தில் இருக்கின்ற அறம் மேலும் சிறப்புற துறவறம் அவசியமாகின்றது. இந்த பிறவிதான் ஆன்மாவிற்கு முதற்பிறவியன்று. பல்லாயிரம் பிறவிகள் எடுத்துள்ளது இந்த ஆன்மா. எனவே பல்லாயிரம் பிறவிகளாக இல்லறம் மட்டுமே சுகம் என்கின்ற நினைப்பில் வாழ்க்கையை நடத்திவிட்டு முறையான, சரியான துறவறத்தை புறக்கணித்துள்ளது ஆன்மா. எனவேதான் இந்த பிறவி எடுத்துள்ளது. ஆகவே வேதாத்திரியத்தை அறிந்த இந்தப்பிறவியிலாவது மீண்டும் ஒருமுறை இல்லறத்தையும் மேம்பட நடத்தி திருவள்ளுவர் மற்றும் அவரை மானசீகமாகக் கொண்ட வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் துறவறத்தை முதன் முறையாக நடத்தி இறந்து-பிறக்கும் சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். எனவே வேதாத்திரிய ஆன்மீகத்தில் ஆழ்ந்து போகப் போக ஆனந்தமே. பொதுவாக ஆன்மீக சாதகர்களுக்கேயுரிய பற்றை விடவேண்டியதில் உள்ள அச்சம் வேதாத்திரிய ஆன்மீகத்தில் கிடையாது. துறவு பற்றி தெளிவினை பல கோணங்களில் ஏற்படுத்த 14 அதிகாரங்களை ஒதுக்கியுள்ளார் திருவள்ளுவர். அதில் ஒன்று துறவிற்கென்றே ஒரு அதிகாரம் ஒதுக்கியுள்ளார்.

    மூன்றாவது பேரின்பப் படி:

    ஆக ‘உறவுகளில் உண்மைநிலை உணர்ந்து ஆற்றி உயர்வான துறவுநிலை உணர்ந்த போதும்’, என்கின்ற சொற்றொடருக்கான பொருளாவது, மனிதர்களோடு அல்லது பொருட்களோடு ஏற்படும் தொடர்பில்(உறவு) மறுக்க முடியாத கற்பனைக்கு மாறான நிலையை, தன்மையை மனத்தால் புரிந்து கொண்டு கடமையைச் செய்யும்போது மதிப்பில் உயர்ந்த துறவுநிலை உணர்ந்த போதும் என்று பொருள்.

    கடமையைச் செய்து வரும்போது என்ன நடந்தது மகரிஷி அவர்களுக்கு? துறவு நிலை விளங்கியது. அதுவும் அத்துறவு நிலை உயர்வானதாகவும் இருந்திருக்கிறது மகரிஷி அவர்களுக்கு, ஆகவே மூன்றாவது பேரின்படியில் அறிந்து கொண்டது — மனிதர்களோடு அல்லது பொருட்களோடு ஏற்படும் தொடர்பில்(உறவு) மறுக்க முடியாத கற்பனைக்கு மாறான நிலையை, தன்மையை மனத்தால் புரிந்து கொண்டு கடமையைச் செய்யும்போது உயர்வான துறவு நிலை விளங்கியது. விளங்கியபோதே அதனை அடைவதற்கான உறுதிப்பாடு அவரிடம் இருந்ததால், பேரின்பம் அப்போதே கிடைத்துவிட்டது. அந்த நிறைவில் 30-11-1991 அன்று தன் மாணவர்களுக்குத் தெரிவிக்கவே மலர்ந்ததுதான் ‘மறைபொருள் உணர்ந்த நிறைவுக் கவி.

    மறைபொருள் உணர்ந்த நிறைவுக் கவி                           (30-11-1991)

    இன்று நான் நிறைவு பெற்றேன்! இறைவா! இன்று நான் நிறைவு பெற்றேன்!

    நின்றேன் நடந்தேன்; உன்னை நினைந்து தேடியலைந்தேன்; சென்றேன் பலஇடங்கள் சிந்தனை விரிந்தபின்.

    இன்று நான் நிறைவு பெற்றேன்! இறைவா! இன்று நான் நிறைவு பெற்றேன்! …………………………………………………………………. ………………………………………………………………….                             . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    நான்காவது பேரின்பப் படி:

    அறிவு ஒன்றை உணர்ந்து விட்டதாலேயே, உணர்ந்து விட்டது முழுமையானதாகாது. உணர்ந்ததை அடையும்போதுதான் அது முழுமையாகும், பயனுமாகும். எனவே மூன்றாவது பேரின்பப்படியில் உணர்ந்த துறவு நிலையை முடிவாகப் பெற்றபோது அடைந்த பேரின்பம்தான் நான்காவதும் இறுதியுமான துறவு நிலை. அதற்குப்பிறகு இவ்வுலகில் அனுபவிக்க வேண்டியது வேறு ஒன்றுமில்லை. அவர் மனிதப்பிறவி எடுத்ததன் பயனாக இறைஅருளாலும், அருளாளர்களின் அருளாசியுடனும்,

    தானாகவும், பிறவிப்பயன் என்பது இறை உணர்வு பெறுவது என்பதனைக் கண்டுபிடித்து, பிறகு இறை உணர்வு பெற அறநெறியில் வாழ்ந்து, அத்துடன் இல்லாமல் உண்மைப்பொருளை அறிய (இறைஉணர்வு) உறவு நிலையில் உண்மை நிலை துறவு என்று அறிந்து, முடிவாக அத்துறவு நிலையினை எய்தியுள்ளார். இந்த பேரின்ப அனுபவத்தை அவரது மாணவர்களும் ஐயமறத் தெளிவாகத் தெரிந்து கொண்டு இறைஉணர்வின் மனவுருத்தோற்றத்தினை(CONCEPT) அறிந்து கொண்டு அதற்தாக பெரும் முயற்சி செய்து இப்பிறவியிலேயே இறை உணர்வு பெறுகின்ற பேற்றினை அடைய 1998 சனவரியில் இப்பாடலை (இன்பம், இன்பம், இன்பம், இன்பம்) இயற்றியுள்ளார். இறைஉணர்வு என்பதனை வேறு வழிகளில் கூறியுள்ளதை, அதாவது நான்கு பேரின்பப்படிகளின் சாரத்தை நினைவு படுத்திக் கொள்வோம். ஆறறிவுடைய மனிதன் அதற்கு ஏற்ப பொருத்தமான பேறான உண்மைப் பொருளை உணர்ந்துவிட்டால் பிறவிப்பயன் அடைந்ததாக மலரே! மலரே! எனத்துவங்கும் பாடலின் கடைசியில் கூறுகிறார். பேரின்ப ஊற்று என்கின்ற தலைப்பில் உள்ள பாடலின் கடைசியில்

    பேரின்ப ஊற்று

    உன்னிலே நானடங்க, என்னுள்ளே நீ விளங்க,

    உனது தன்மை ஒளிர, எனதுள்ளம் தூய்மை பெற்றேன்.

    இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்?

    எடுத்த மனிதப் பிறப் பெய்தியதே முழுமை. . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இதுவரை பிறவிப்பயன் நல்கும் என்பதில் பிறவிப்பயன் என்ன என்று விரிவாகப்பார்த்துவிட்டோம். இனி ‘எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும் குருஉயர்வு மதிப்பவரை தப்பாது தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்’ என்பதில் ‘குருவை எவ்வாறு மதித்து ஒழுக வேண்டும்’ என்பதனை அடுத்த விருந்தில்(14-09-2016-புதன்) நிறைவு செய்வதோடு மகரிஷி அவர்களின் ஜெயந்தி தினத்திலிருந்து(14-08-2016) ‘பிறவிப்பயன் நல்கும்’ என்கின்ற தலைப்பில் அருந்தி வருகின்ற விருந்து நிறைவு பெறும். வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்              வளர்க அறிவுச் செல்வம்.

    Loading