admin

Author Archives

  • FFC–208-அருளாளர்கள் உலகம் 1/?

    வாழ்க மனித அறிவு         வளர்க மனித அறிவு

    அருளாளர்கள் உலகம் 1/?

    FFC–208

    19.07.2016—செவ்வாய்

    guru_poornima

    “அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,

    அதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.”

    எல்லா  அருளாளர்களின் ஆசிகளைப் பெறுவோம்:

                 இன்று குருபூர்ணிமா தினம். எதற்காக இந்த தினம்  வருடத்தில் ஒரு நாள் கொண்டாடப்படுகின்றது?வாழையடி வாழையாக  திருக்கூட்ட மரபினில் உதிக்கின்ற  குருமார்களை வணங்கிஅருளாளர்களை நினைவுகூர்வதற்காக வருடத்தில் ஒரு நாள் குருபூர்ணிமா தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. நம்மை நல்வழி நடத்துகிற, நாம் இதுவரை அறிந்திராத இறையை நமக்குக் காட்டி அருளிய நேரிடை குருவையும், உறுதுணையாக இருக்கின்ற அனைத்து அருளாளர்கள் திருக்கூட்ட மரபினையே பணிந்து அவர்கள் அனைவரின் ஆசிகளை ஏற்றுக் கொள்வோம். குருபூர்ணிமா கொண்டாடாத மற்ற நாட்களில் என்ன செய்வது? எனவே அருளாளர்களை எப்போதும்  எவ்வாறு நினைவில் கொள்வது என்பது பற்றி சிந்திப்போம். இதே போன்று அருளாளர்களின் ஆசியும், அருளும் எல்லா ஆன்மீக சாதகர்களுக்கும் கிடைத்திட வேண்டிக்கொண்டு  இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம்.

        குருவின் பூரண ஆசியைப்  பெறுவதற்காக இந்நாள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறு குருவிடம் ஆசி பெறவேண்டும் என்பது பற்றி இன்று சிந்திக்கலாம்.  குரு எப்போதும் பாரபட்சமின்றி ஆசியினைத் தந்து கொண்டேதான் இருக்கிறார்.  எந்தவித பாகுபாடுமின்றியும் எல்லோருக்கும் ஒளிவு மறைவின்றி சமமாக ஒரே கல்வியினைத்தான் தந்து கொண்டிருக்கிறார். இது இயற்கையின்/இறையின் புனித ஏற்பாடு. ஆனால் அதனைப் பெற்றுக் கொள்ளும் அருட்பாத்திரமாகிய சீடன் எவ்வாறு பெற்றுக் கொள்ள  வேண்டும் என்பது பற்றியதுதான் இன்றைய சிந்தனை. எனவே இந்த புனித நாளிலே, சிந்தனைக்காக,  ‘அருளாளர்கள் உலகம்’ பற்றி சிந்திப்போம்.  வாழ்க வளமுடன். அருளாளர்கள் உலகம் என்று தனியாக உள்ளதா?

       அருளாளர்களை மகரிஷி அவர்கள் கூறியுள்ள முறைப்படி வணங்கி நினைவு கூர்வோம். 

       “அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,

       அதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.”   என்கிறார்  மகரிஷி அவர்கள்.

      மகரிஷி அவர்கள் அருளியுள்ள குருவணக்கப்பாடல் பற்றிய ஆய்வு:

    FFC-62 -PIC - மகான்களின் படம்

    FFC-62-PNG-குரு வணக்கம்- அறிவே-பாடல்

       மகரிஷி அவர்கள் அருளியுள்ள குருவணக்கப்பாடலில் முதலில் தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராமலிங்கர் ஆகிய அருளாளர்களை, அவர்களின் நாமங்களை செப்பி, நினைந்ததோடுமட்டுமல்லாமல், மனித இன பரிணாமத்தில்(தன்மாற்றம்) முதன் முதலில் தோன்றிய மனிதனை முதல் மனிதன் என்று சொல்வதுபோல், என்றைக்கு மனிதகுலத்தில் ஒருநாள்  முதல் மனிதர் இறையை உணர்ந்தாரோ அந்த அருளாளரிலிருந்து இன்றுவரை இறையை உணர்ந்த அனைத்து  அருளாளர்களையும் வணங்கி ஆசி பெறச் சொல்கிறார் மகரிஷி அவர்கள்.   

        தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர், இராலிங்கர் ஆகிய நான்கு அருளாளர் பெருமக்களும் மகரிஷி அவர்களுக்கு எவ்வாறு குருவாக அமைந்தனர் என்பது மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றிலிருந்தும் மற்றும் மகரிஷி அவர்களே கூறியதிலிருந்தும்  அறிய முடிகின்றது.   அந்த நான்கு குருமார்களின் பெயரோடு குருவணக்கப்பாடலை முடித்திருக்கலாம் மகரிஷி அவர்கள்.  இருப்பினும் மேலும்,

     “அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்தோர்,

       அதனை வாழ்ந்து காட்டினோர், நினைவு கூர்வாம்.” 

    ஆகிய இரண்டு வரிகளையும் சேர்த்து குருவணக்கப் பாடலை இயற்றியுள்ளார்.   அது அருட் கவிஞரின் சுதந்திரம்.  அப்படி நினைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்யாமல் இருக்க முடியவில்லை. இப்பாடல் இயற்றிய நாள் 11-08-1981 ஆகும்.  இதற்கு முன்னரே மகரிஷி அவர்கள் உலக சமுதாய சேவா சங்கத்தை தோற்றுவித்து அதன் மூலமாக மனவளக்கலையை போதிக்க ஆரம்பித்துவிட்டார்.  ஞானக்களஞ்சியத்தில் பகுதி ஒன்றில்  மூன்று குருவணக்கப்பாடல் இடம் பெற்றுள்ளன.  இப்பாடல் மூன்றாவதாக இடம் பெற்றுள்ளது.  இப்பாடலுக்கு மட்டும் இயற்றிய நாள் தெரிகின்றது. மற்ற  இரண்டு பாடல்களுக்கு  இயற்றிய நாள் தெரியவில்லை. 

        மூன்றாவது பாடல் இயற்றிய நாள் தெரிவதை, உற்று நோக்கும்போது,  அப்பாடலின் முக்கியத்துவம் உணரப்படுகின்றது.  அதாவது முதன் முதலில் மனவளக்கலையை பயிற்றுவிக்கும்போது அப்பாடல் இயற்றப்படவில்லை என்றேதான் தெரிகின்றது.  நாளடைவில் மனவளக்கலை பரவி வருகின்றபோது, இப்பாடலில் உள்ள உண்மையை மனவளக்கலை பயிற்சியாளர்களுக்கு அறிவித்து அவர்கள் எளிதாக பயிற்சியில் வெற்றி பெறவேண்டும்  எனக்கருதி இப்பாடலை அருளியுள்ளார் மகரிஷி அவர்கள்.  மகரிஷி அவர்கள் என்ன கருதினாரோ, அதனை நாமும் அறிந்து கொண்டு அவ்வரிகளின் அறிவுறுத்தலுக்கு இணங்க செயல்பட்டு,  மனவளக்கலையின் பயனை விரைவில் அடைந்திடுவோமாக!

        மகரிஷி அவர்கள் பெரும்பாலும் பாடல்களை எட்டுவரிகளில் இயற்றுவது அவருக்குள்ள பழக்கம். அவ்வாறே  முதலில் நான்கு அருளாளர்களின் நாமங்களைச் செப்புவதோடு நிறுத்திவிட்டு, அவர்களை நினைவு கூறச்செய்யும்படி பாடலை முடித்திருக்கலாம்.   ஆனால் எட்டுவரிகள் எழுதுவது பழக்கமாக உள்ளதால், ஆறுவரிகளோடு மேலும் இரண்டு வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன.  அவ்வரிகளின் பொருளென்ன?  முக்கியத்துவம் என்ன?  அதனை அறிந்து கொண்டால் அவ்வரிகளில் கூறியதை முழுமையாக செயல்படுத்த முடியும்.  

    பண்பேற்றத்திற்கு  எளிய உறுதியான வழி:

         குருவணக்கத்தில்  மற்ற அருளாளர்களின்  ஆசியினையும் பெற அவர்களையும் நினைவு கூர்வது என்பது வெறும் சம்பிரதாயமாகிவிடக்கூடாது.  உள்ளார்ந்த அன்போடு எல்லா அருளாளர்களையும் நினைத்து, ‘அவர்களது உயர்வை மதித்து, ரசித்து’, போற்றி போற்றி வணங்க வேண்டும்.  இயல்பாகவே,  பிறர் உயர்வை மதித்து, ரசித்தல் என்பது,   நாம் அதில் உயர்ந்து வருவதைக் காண்பிக்கின்றது. இதுவே இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றம் என நாம் கூறிவருகிறோம்.  எந்த ஒருகலையிலும் சிறந்து விளங்கியவர்கள் தனது வெற்றியைப்பற்றிக் குறிப்பிடும்போது, தனக்கு முந்தையவர்கள் யாராவது சிறந்து விளங்கியவரை  மாதிரியாக ‘Role Model’ வைத்துக் கொண்டதாகக் கூறுவது வழக்கம்.  அதேபோன்று இறை-உணர்-ஆன்மீகத்தில் பண்பேற்றமே அடிப்படையாக உள்ளதால், அப்பண்பேற்றத்தில் உயர்ந்து பண்பாளராக பரிணமிக்க, யாரை ‘மாதிரி புருஷராக’க் கொள்ள முடியும்?   மனவளக்கலைஞர்களுக்கு, அறிவின் இருப்பிடம்(தெய்வத்தின் இருப்பிடம்), அதாவது தெய்வத்தை கருத்தியலாகக் காண்பித்தும் செய்முறையில் அவரவர்களே தெய்வத்தை உணர்ந்து அனுபவிக்க வழிகள் காட்டிய குருதேவரான, நவயுக வியாசரான வேதாத்திரி மகரிஷி அவர்களேதான் இருக்க முடியும்.  மகரிஷி அவர்கள் பண்பேற்றம் எந்த விஞ்ஞான அடிப்படையில் அமைந்துள்ளது என்பதனைக் கண்டுபிடித்து அதனை இயல்பூக்க நியதி என்கிறார். அப்பாடலை இந்நன்னாளில் நினைவு கூர்வது சாலச் சிறந்தது,

    FFC-70-எப்பபொருளை- to post on 28-03-15

        மற்றோர் இடத்தில் உரைநடைப் பகுதியில் “தான்  உயராது, மற்றவர்களின் உயர்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது’  என்கிற பண்பேற்றத்திற்கு தொடர்பான உண்மையினைத் தெரிவிக்கின்றார் கிடைத்தற்கரிய குருவான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  இதனைத்தான், இதன் பயனை அனுபவிக்கின்ற நாம் அவர் கூறிய இயல்பூக்க நியதியின்(தேற்றம்-theorem as in Maths) கிளைத்தேற்றம்(corollary) என்று அழைக்கிறோம். பண்பேற்றத்திற்கான வழியினைக் கூறி அது இயல்பூக்க நியதி என்கிறார்.  பூர்வபுண்ணியத்தால், இறைஅருளால், பண்பேற்றம் பெற, குருவின் சேர்க்கைப் பெற்ற ஆன்ம சாதகனின்  பண்பில் ஏற்றம் பெறுவதற்கு,  மனவளக்கலையில், தற்சோதனைப் பயிற்சி இருந்தாலும், அதற்கு வலிவூட்டுவது இதனைத்தவிர வேறு வழி ஏதுமில்லை/ஏதும் தெரியவில்லை. அவ்வாறு பண்பேற்றம் பெற்று வரும்போது.  பொருள், செயல், குணம், உயிர்(ஆன்மா) ஆகிய நான்கினையும் அடிக்கடி நினைந்து வந்தால் அப்பொருளின் தன்மையாக, அறிவு பண்பில் ஏற்றம் பெற்றுவரும் பெருமையைத்தான்  இயல்பூக்க நியதியாகும் என்கிறார் மகரிஷி அவர்கள்.  அவ்வாறு, இயல்பூக்க நியதியின்படி ஒருவர் ‘தான் பண்பேற்றம் பெற்றுவருவதனை’ எவ்வாறு அவரே அறிந்து கொள்வது என்பதற்கான அளவுகோல்தான் இயல்பூக்க நியதியின் கிறைத்தேற்றம் என்பது. 

    நா சுவை அறியும் கருவி மட்டுமல்ல:

       மகரிஷி அவர்கள் கூறும் இயல்பூக்க நியதியின்படி பண்பேற்றத்தில் உயர்வு அடைந்து வரும்போது, ‘நா’ சும்மா இருக்காது.   ‘நா’, சுவைப்பதற்கு மட்டும் உருவான கருவி அல்ல. மற்ற உயிரினங்களுக்கு ‘நா’, சுவை அறியும் கருவியாக மட்டுமே இருக்கும். ஆனால் அறிவு, ஆறாம் நிலைக்கு வந்தபோது, நாவை சுவை அறியும் கருவியாக மட்டுமின்றி, சொற்களை உதிர்க்கும் கருவியாகவும் செயல்படுத்துகின்றது. ஆகவேதான் ஆன்றோர்கள் ‘நா, எப்போதும் நல்லவற்றையேப் பேச வேண்டும்’ என்று அறிவிற்கு அறிவுருத்துகின்றனர். நன்றி உணர்வை சொல்லாகத் தெரிவிக்க அறிவு நாவைத்தான் பயன்படுத்துகின்றது. எனவே அப்போது ‘நா’ சொற்களை உதிர்க்கும் நல்ல கருவியாக செயல்படுகின்றது.  

        ஆகவே, இயல்பூக்க நியதியின்படி பண்பில் உயர்வு அடைந்து வரும்போது நன்றி உணர்வைத் தெரிவிக்கும் முகத்தான், உணவை சுவைக்க நாவை கருவியாக பயன்படுத்தும் அறிவு, பண்பேற்றத்திலும், எதனை நினைத்து இயல்பூக்க நியதி தன்னிடம் செயலாகிக் கொண்டிருக்கின்றதோ, அப்பொருளின் தன்மையை, அறிவு மதிப்பதோடு நின்று விடாது, ரசிப்பதுடன், அதன் அருமை, பெருமைகளை நாவைக் கொண்டு வார்த்தைகளால் புகழ்ந்து எடுத்து இயம்பும் தன்மையுடையது அறிவு. எனவே பண்பேற்றத்தில் உயர்ந்து வரும்போது இயல்பாகவே நடைபெறுகின்ற ஒன்று இது. எனவேதான் அவ்வைத்தாய் தனது மூதுரையில் ஒர் பாடலில் “நல்லார் குணங்களுரைப்பதுவும் நன்றே” என்கிறார். நல்லார் குணங்களை எது உரைக்க முடியும். அறிவுதான் நாவைக் கருவியாகக் கொண்டு உரைக்க முடியும்?   அப்பாடலையும் இந்நன்னாளில் நினைவு கூர்வவோம்.

     அவ்வையார் இயல்பூக்க நியதிபற்றி ஏதாவது கூறியுள்ளாரா?

        அவ்வைத்தாய் தனது மூதூரையில் ஓர் பாடலில் நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே என்கிறார். அப்பாடலை நினைவுகூர்வோம்.

    moodhurai-ovvaiyar

                  சிறுவயதில் தமிழ்ப்பாடத்தில் படித்திருப்போம்.   ஆனால் அன்று மனிதனின் பண்பேற்றத்தில் உள்ள  இயல்பூக்க நியதி என்கின்ற அறிவியல் இப்பாடலில் இருக்கின்றது என்பதனை அறியவில்லை.  ஆனால் இன்று நாம் அறிகிறோம் கிடைத்தற்கரிய குருவின் தரிசனத்தால்.  இதுவன்றோ இறை-உணர்-ஆன்மீக  முன்னேற்றத்திற்கு திருப்புமுனையை தந்துள்ளது வேதாத்திரியம் என்பது.  வாழ்த்துவோம் வேதாத்திரியத்தை.  இறைவனை போற்றி போற்றி என்று வாழ்த்துவது போன்று வேதாத்திரியத்தை. வாழ்த்தி, வாழ்த்தி,  வேதாத்திரியம் மேலும் மேலும் வளர்ச்சி பெற்று உலகை உய்விக்க, நம் மௌன ஊடகமான எண்ணத்தை பயன்படுத்துவோம்.    அவ்வையார் பண்பேற்றத்திற்கு இயல்பூக்க நியதி என்று சொல்லி, அதனைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறாமல் பண்பேற்றத்திற்கான வழிகளைக் கூறியுள்ளதும், திரூமூலர், மகரிஷி அவர்கள் கூறியுள்ளதும் ஒன்றே எனத் தெரிகின்றது. உண்மையை சொல்வது என்பது யார் எப்போது சொன்னாலும் ஒன்றாகத்தானே இருக்கும்/இருக்க முடியும்!

     இறை-உணர்-சாதகனிடம் தோன்றும் சமிக்ஞை:   

         இறை-உணர்-சாதகன் பண்பேற்றம் பெற, எப்பொருளை, எக்குணத்தை, எச்செயலை, எவ்வுயிரை நினைக்க வேண்டியிருக்கும்?  நினைக்க வேண்டும்? சாட்சாத் பிரம்மமே குருவாக வந்தவரின் குணத்தையும், செயலையும் அடிக்கடி நினைந்து வருவதுதானே நியாயமும், இயல்பும்.  இந்த சமிக்ஞை ஒரு இறை-உணர்-சாதகனிடம் மேலெழுந்து தெரியுமானால், 

        “எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்

    தப்பாது குருஉயர்வு மதிப்போர் தம்மைத்

        தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்,”

    என்கின்ற வேதவாக்கின்படி அச்சாதகன் (மகரிஷி அவர்கள் கூறியுள்ளதுபோல்), இப்பிறவியிலேயே பிறவிப்பயனை எய்துவது திண்ணம் என்கிறார் மகரிஷி அவர்கள். 

         நாளை (20-07-2016—புதன்)  அருளாளர்கள் உலகம் பற்றி மேலும் சிந்திப்போம்.  

    வாழ்க அறிவுச் செல்வம்                                                         வளர்க அறிவுச் செல்வம்



    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்!

    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். அதற்கான வழிமுறையினை அறிய:  click here.

    https://www.prosperspiritually.com/category/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

    அல்லது

    நேரிடையாக உங்கள் கருத்துக்கள் பகுதிக்கு செல்ல click here

    https://www.prosperspiritually.com/contact-us/

    நன்றி!

    வாழ்க வளமுடன்!!


    Loading

  • சிந்திக்க வினாக்கள்-195

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

    18-07-2016 – திங்கள்

    தன்முனைப்பு(Ego), ‘தான், தனது’ என்கின்ற இரு எண்ணக்கோடுகளால் உண்டாகின்றது என்று மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள். ‘தான், தனது’ என்பதிலிருந்து தன்முனைப்பு உண்டாகின்றது என்று கூறியிருக்கலாம். ஆனால் ‘தான், தனது என்கின்ற எண்ணக்கோடுகளிலிருந்து தன்முனைப்பு உண்டாகின்றது’ எனக் கூறுவதால், ‘எண்ணக்கோடுகள்’ என்பதன் பொருள் என்ன? அதற்குள் ஏதாவது உட்பொருள் உண்டா?

    வாழ்க அறிவுச் செல்வம்               வளர்க அறிவுச் செல்வம்

    அறிவிப்பு  

     08-07-2016-வெள்ளி

    வாழ்க வளமுடன்.

                       செவ்வாய்க் கிழமைகளில் சத்சங்க நிகழ்வு இல்லையாயினும், வருகின்ற செவ்வாய்க்கிழமை(19-07-2016) குருபூர்ணிமா தினமாதலால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்திற்காக சத்சங்கத்தில் கூடி எல்லா அருளாளர்களின் அருளாசிகளைப் பெறுவோம்.

    வாழ்க வளமுடன்.

    www.prosperspiritually.com

    அன்பு வேண்டுகோள்

    வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்களை இணையதளத்தில் பதிவு செய்ய, ‘உங்கள் கருத்துக்கள்’ பகுதியில் பதிவு செய்யவும்.
    நன்றி,
    வாழ்க வளமுடன்

    Loading

  • FFC-207-எண்ணியது நிகழ்வதில் கருமையத்தின் பங்கு என்ன? 3/3


    வாழ்க மனித அறிவு                                                                         வளர்க மனித அறிவு

    எண்ணியது  நிகழ்வதில்  கருமையத்தின் பங்கு என்ன? 3/3

    FFC-207

                                                                                                     17-07-2016—ஞாயிறு

    திண்ணிய நெஞ்சத்தால்தான் எண்ணியதை அடையமுடியும்   

    eNNiya mudidhal_FFC-207_17-07-2016

    திண்ணிய நெஞ்சம் வேண்டும்:

        ஞானி மகாகவி பாரதியார் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    அன்னையை வேண்டுதல்

    எண்ணிய முடிதல் வேண்டும்

     நல்லவை எண்ணல் வேண்டும்;

    திண்ணிய நெஞ்சம் வேண்டும்.

     தெளிந்த நல்லறிவு வேண்டும்;

    பண்ணிய பாவமெல்லாம்

     பரிதிமுன் பனிபோல,

    நண்ணிய நின்முன் இங்கு

     நசித்திடல் வேண்டும் அன்னாய்.

                   …. மகாகவி பாரதியார்.  

    மகாகவி பாரதியாரின் இப்பாடலுக்குள்  புகுவோம்.  இப்பாடலின் பொருளை அவரிடமே கேட்டு தெரிந்து கொண்டால் என்ன அறிவோமோ அவ்வாறே அறிவதற்காக மகாகவி பாரதியாரின் அறிவாற்றலுடன் நம் அறிவாற்றலையும் இணைத்துக்கொள்வோம்.  பெரும்பாலும் இப்பாடலின் முதல் நான்கு வரிகளை மட்டுமே அநேக இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதை அறிவோம்.  கடைசி நான்கு வரிகளை  பயன்படுத்துவது என்பது அரிதாக உள்ளது.  இங்கு நாம் எல்லா வரிகளுக்குமே மகாகவி பாரதியாரிடமிருந்து, பொருளும், விளக்கமும் கேட்டறிவோம்.

        இப்பாடலில், வேண்டுதல்கள் ஐந்து போல் இருந்தாலும் நான்கு வேண்டுதல்களும்(wants),  இரண்டாவது வேண்டுதல் உறுதி மொழியாவும் உள்ளன. இதற்கும் மேலாக  ஒரு ஒப்புக் கொள்ளுதலும்(confession) உள்ளன.

    1)   எண்ணிய முடிதல் வேண்டும்.

    2)   நல்லவை எண்ணல் வேண்டும்.(இது வேண்டுதல் மட்டும் இல்லை. உறுதிமொழி கலந்த வேண்டுதலாக உள்ளது. இறைவிக்கு அளிக்கும் ‘நல்லவை எண்ணுவேன்’ என்கின்ற உறுதி மொழியை அளித்துவிட்டு, அதற்கு விழிப்போடு தான் இருக்க, இறைவி துணையாக இருக்க வேண்டும் என்கின்ற வேண்டுதலும் உள்ளது.)

    3)   திண்ணிய நெஞ்சம் வேண்டும்.(நல்லது என எண்ணியதை முடித்திட மனதிற்கு உறுதியும், தைரியமும் வேண்டும். தளரா விடாமுயற்சி வேண்டும்.)

    4)   தெளிந்த நல்லறிவு வேண்டும். (எல்லோரிடமும் அறிவு இருக்கின்றது.  ஆனால் தெளிந்த நல்லறிவு என்பது அறிவை  அறிந்தவரிடம் மட்டுமே உள்ளது. நல்லறிவு வேண்டும் என்பது சரி. நல்லதையே எண்ணுவதற்கும், நல்லதையே பேசுவதற்கும், நல்லதையே செய்வதற்கும் நல்லறிவு அவசியமாகின்றது என்பது தெரிகின்றது.  ஆனால், அதிலும் தெளிந்த என்கின்ற வார்த்தையை சோ்த்திருக்கிறார் பாரதியார்.  ஏன் எல்லாவற்றிலும் நல்லதே இருக்க வேண்டும்  என்கின்ற விளக்கமாகியத் தெளிவு வேண்டும். மனித சமுதாயத்தில் பெரும்பாலும், தெளிந்த நல்லறிவு இல்லாமையால்தான் இப்பாடலே இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது பாரதியாருக்கு.)

    5)    ஒப்புதல் அளித்தல்:— பண்ணிய பாவமெல்லாம் (அறியாமையில் குற்றவாளி உணர்ச்சி வயத்தில் குற்றம் செய்துவிட்டு, நீதி மன்றத்தில் நீதிபதியிடம்  தான் குற்றம் செய்து விட்டேன் என ஒப்புதல் வாக்குமூலம் (confession statement) கொடுப்பது போல், இறைவியின் சன்னிதானத்தில்— ‘இப்பிறவியிலும், முற்பிறவிகளிலும் பாவங்கள் செய்து விட்டேன் என்கின்ற ஒப்புதல் வாக்கு மூலம்)

    6)   நசித்திடல் வேண்டும். (செய்த பாவங்களெல்லாம் நீக்கிட வேண்டும்)

     கருத்துரை:– அதாவது ஒவ்வொரு மனிதனும் அறியாமையாலும், அலட்சியத்தாலும், உணர்ச்சிவயத்தாலும், செய்த செயல்களின் விளைவுகளாகத் தனிமனிதத் துன்பங்களும், சமுதாயத்துன்பங்களும் மல்கிவிட்டன.  அதுதான் உலகில் அமைதியின்மைக்கு காரணமாக உள்ளது.  ஆகவே ஒரு(இந்த) காலகட்டத்திலாவது, தன்னுடைய பாவங்களை உணர்ந்து, அவை நசிந்திட, இனிமேலாவது, நல்ல எண்ணங்களை எண்ணி, அவ்வாறு எண்ணுகின்ற எண்ணங்கள் நிறைவேற (உலகில்  அமைதி நிலவவேண்டும் என்பது கூட ஓர் உயர்ந்த எண்ணம்) வேண்டும் என இறைவியை வேண்டச்சொல்கிறார்.

         திருவள்ளுவர் மற்றும் ஞானி மகாகவி பாரதியார் கூறும்  வைரவரிகளையும், மகரிஷி அவர்கள் கருமையம் தூய்மையாக இருக்குமானால் எண்ணம் நிறைவேறுவது பற்றி கூறும் வைரவரிகளையும் ஒப்பிட்டால் தெரிய வருவது திருவள்ளுவர் கூறும் ‘செயல் ஆற்றுவதில் வேண்டிய உறுதி, பாரதியார் கூறும் திண்மை, ’ மகரிஷி அவர்கள் கூறும் கருமையத்தூய்மையால் கிடைக்கப் பெறுகின்றது என்பது தெரிகின்றது,  மகரிஷி அவர்கள்  “ஞானி நினைப்பது நடக்கும்.  ஞானி நடக்கக் கூடியதைத்தான் நினைப்பான்” என்பார்.  காரணம்  ஞானி கருமையத்தூய்மை அடைந்தவர்.  எல்லோருமே எண்ணுவது நிகழ வேண்டும் என நினைக்கின்றனா்.  அதற்கு கருமையத்தூய்மை அவசியம் என்பதனை உணர வேண்டும்.

         கருமையத்தூய்மை அடைந்தவரின் மனதில் தேவையற்ற எண்ணங்கள் (ஆசைகள்) இராது.  எண்ணங்கள் மிகக் குறைவாகவே  எழும். எண்ணிக்கையில் குறைவான, நியாயமான எண்ணங்கள்  இருக்கும்போது, மனஆற்றல் அழுத்தத்துடன் ஒவ்வொன்றாக முடித்திட, செயல் ஆற்றுவதற்கு  உறுதி அதிகமாக இருக்கும்.   வாழ்வின் நோக்கம் உறுதி செய்யாத நிலையில்,  தேவையற்ற எண்ணங்கள் அதிகமாக இருப்பதால்,  எல்லாவற்றையும் செய்து முடிக்கும் உறுதிக்கு வலிவு குறைந்துவிடும்.

          ஆகவே தற்சோதனைக்கு உட்படுத்தாத எண்ணங்கள், தேவையற்ற ஆசைகள், வாழ்க்கைக்கு முரணான ஆசைகள் கருமையத்தூய்மையைக் கெடுக்கும் என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

     வேதாத்திரி மகரிஷி அவர்கள் எண்ணத்தின் வலிமையைப்பற்றிக் கூறும் கவிகளைக் கவனிப்போம்.

              எண்ணத்தின் வலிமை

         “எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும்.

          எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் அமைந்திடில்.”

     

                  எண்ணத்தில் நிறைந்திடு

        “விண்ணிலும் மண்ணிலும் வியாபக மான நீ

        எண்ணத்தில் நிறைந்திடு! செய்கையில் சிறந்திடு!”

                   தீய எண்ணம்

       “உண்மையில் எதிரி உனக்கு உண்டு எனில்,

       உள்ளத்தி லெழும் ஒழுங்கற்ற எண்ணமே”.

     ஆகவே எண்ணம் நிறைவேற வேண்டுமெனில் கருமையத்தூய்மை அவசியமாகின்றது என்பதனைக் கவனிக்க வேண்டும்.  எல்லோருக்கும் தான் எண்ணுவதெல்லாம் நிறைவேற வேண்டுமென்கின்ற ஆசை இருப்பதால் கருமையத்தூய்மையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

          உயிர் ஒரு மறைபொருள்.  இருப்பினும்  உயிர் மீது எல்லோருக்குமே அக்கறை உள்ளது போல் கருமையம் மற்றும் அதனைத் தூய்மைப்படுத்துவதன் மீது அக்கறை இருக்க வேண்டும்.  உயிர்  ஒரு மறைபொருளாக இருந்து, கண்களால் பார்க்க முடியாவிட்டாலும், உயிர் இருப்பதை முழு மனதோடு ஒப்புக்கொள்கின்றான் மனிதன்.  காரணம் உயிர் பிரிவதால், மரணம் சம்பவித்து வாழ்க்கையே முடிந்து விடுவதை மற்றவர்களின்  இறப்பிலிருந்து அறிந்து கொள்கின்றான்.  இருப்பினும், மரணத்தால், உடல் வாழமுடியாமல், புலன்இன்பம் அனுபவிக்க முடியாமல் பயனற்றுப்போவதை, உடல் மீதுள்ள பற்றால் அவனால் ஏற்றுக்கொள்ள  முடிவதில்லை.  

           எனவே எளியமுறை குண்டலினியோகம் பயிலாதவர்கள்கூட, மறைபொருளான உயிர் இருப்பதை ஒப்புக் கொள்கின்றனர். யார் ஒப்புக் கொள்கிறார்களோ, இல்லையோ, உயிர் மனித உடலில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. உயிர் இருப்பதுபோல், உயிருடன் தொடர்புடைய கருமையம் அல்லது ஆன்மா (Registry of recorded events taking place while living) ஒன்று மறைபொருளாக மனிதனிடம் இருப்பதனையும் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும்.

         ஒப்புக் கொண்ட பிறகு,  பள்ளிப்படிப்பு படித்த மற்றவர்கள், தங்களின் இதயத்தை நேரிடையாகப் பார்க்க முடியாவிட்டாலும், எவ்வாறு இதயம் உடலில் இருக்கின்றது என்று நம்புவதில் உறுதியாக இருக்கின்றார்களோ, மற்றும் இதயத்தின் வடிவம், இயக்கம் பற்றிய விளக்கங்கள் அறிந்தும் இருக்கின்றார்களோ அதுபோல் கருமையம் இருப்பது பற்றியும், அதன் இயக்கம் பற்றிய தெளிவையும் பெற வேண்டும். இதுவரை, ஜீவாத்மா(மனிதன்), பரமாத்மா(கடவுள்) என்றும் ஜீவாத்மா என்றும் அழியாதது என்றும் ஆன்மிக நூல்கள் கூறியிருந்தாலும், அவை மனிதனால்-ஆறாம் அறிவால்  கருத்துருவாக புரிந்து கொள்ள முடியவில்லை.

         ஆனால், இந்த நிலையில், இறை, பரமாத்மாவாகிய தன்னைப் பற்றியும், தான் ஜீவாத்மாவான வரலாற்றையும், தான் எவ்வாறு ஆட்சியின்றி ஆளுகின்ற விதத்தையும், அதனை நவயுக வியாசர், நம் குருதேவர்  உலக சமுதாயத்திற்கு எடுத்து இயம்புகின்ற விதத்தில் விளக்கியுள்ளது. 

            அன்று வேதங்களை எல்லாம் தொகுத்து கொடுத்தவர் வேதவியாசா் எனப்படுகிறார்.  இன்று இறையின் மறைபொருள் விளக்கங்களை, தான் நேரில் பார்த்தவாறே, தன் அனுபவத்திலும், உள்ளுணர்விலும் அறிந்ததை, அதேபோன்று பிறரும் எளிதாக அறியவும், மேலும், மனிதன்  எவ்வாறு எதார்த்தமாக வாழவேண்டும் என்றும் எல்லாவற்றையும் தொகுத்து இணைத்துக் கொடுத்த  நம்அருட்தந்தை அவர்களை, நவயுக வியாசர் என்று கூறாமல்  இருக்க  முடியாதன்றோ! இது பொருத்தத்திலும் பொருத்தமன்றோ!

          ஆகவே, ‘உத்தம நண்பர்காள் உங்களுக்கும் உரியது’ என்று நமக்கெல்லாம் நம் குருதேவர் உறுதி அளித்துள்ளதால், நம் குருதேவர், எவ்வாறு கருமைய உண்மைகளை அறிந்து சமுதாயத்திற்கு கூறியுள்ளாரோ, அது போல் நாமும் கருமையத்தைப்பற்றியும், அதன் மதிப்பையும் உணர்ந்து மதித்து அதனைத் தூய்மையாக வைத்துக் கொண்டு பிறர்க்கும் எடுத்துச் சொல்வோம்.  எனவே, நாம்  அதன் இருப்பு, இயக்கம் பற்றி உறுதிப்படுத்தி, அதனைத் தூய்மை செய்வதில் அக்கறையோடு இருக்க வேண்டும்.

          கருவில் திருவுடையவர்களுக்கு   மறைபொருள் விளக்கங்கள்  அதிகமாகத் தேவையில்லை.  அறிவை அறிந்த குருநாதரின் கருணையானப் பார்வை திருவுடையவரின் மீது விழுந்தாலே  போதுமானது; திருவுடையவரிடம் மலர்வதற்காகக் காத்திருந்த ஆன்மீக மொட்டு மலர ஆரம்பித்துவிடும்.  மற்றவர்களுக்கு இயற்கையிலுள்ள மறைபொருட்களின் இரகசியங்கள் விளங்க விளங்கத்தான், தன்முனைப்பு நீங்க ஆரம்பித்து மனம் திண்மை பெறும்.  திண்மை பெற்ற மனம்தான் உறுதியுடன் வெற்றிக்கனியைப் பறிக்க முடியும்.  அதனால்தான் ‘திண்ணிய நெஞ்சம் வேண்டும்’ என்று பாரதியாரும், “எண்ணியவெல்லாம் எண்ணியபடியே யாகும்.  எண்ணத்தில் உறுதியும் (திண்மை) ஒழுங்கும் அமைந்திடில்.” என்று மகரிஷி அவர்களும் கூறுகிறார்கள்.

         கருமையத்தூய்மை என்பது ஏதோ கருமையம் சுத்தமாக இருப்பதற்காக மனிதன், செய்யும் பணி அல்ல.  மனிதனுடைய இன்ப வாழ்விற்கும் அவனுடைய  நல்வம்சாவளிக்காகவும்(good progeny as an asset to the family and society) கருமையத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மனிதனின் முத்தொழில்களையும் பதிவுகளாக ஏற்றம்(upload) செய்யும் கருமையம் ஒன்று இல்லாமல், எவ்வாறு உயிரினம் வாழ முடியும்? ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்க்கையும் கருமையத்தின் பதிவுகளையும், அதன் தரத்தையும் வைத்துதானே அமைகின்றது.

         உயிர் மீது எவ்வளவு அக்கறை உள்ளதோ, அதனைவிட அதிக அக்கறை கருமையத்தின் மீதும்,  அதன் தூய்மையைப் பராமரிப்பதிலும் இருக்க வேண்டும்.  உயிர் இருந்தால் எப்படியும் வாழ முடியும் என்பது உண்மைதான் என்றாலும், கருமையத்தூய்மை இருந்தால்தான் எண்ணிய எண்ணமும் நிறைவேறும்; ராஜவாழ்க்கையும் (liberated life)  வாழ முடியும்.  இங்கே ‘ராஜவாழ்க்கை’ என்பது சொல்லளவில் சொல்லப்படுவதல்ல. புலன்களுக்கும், மனம்போன போக்கிற்கும், அறிவு அடிமையாகி வாழாமல், எப்போதும் துன்பமிலா வாழ்வு வாழ்வதாகும். கருமையம் பற்றிய முழுமையானத் தெளிவினைப் பெறுவது அவசியமாகும்.  அதற்கு திருவேதாத்திரியத்தின் ‘கடவுளும் கருமையமும்’, ‘மனம்” ஆகிய நூல்களை மீண்டும் மீண்டும் படித்து தெளிவினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். 

         அந்நூல்களில் உள்ள உண்மைகளை மீண்டும், மீண்டும்  படிக்க, கருமையம், அதன் இருப்பு மற்றும் அதன் நீதிதவறா பணிகளான பதிதல் மற்றும் விளைவுகளை வழங்கும் நுட்ப நிகழ்வுகளை நேரிடையாக காண்பது போன்ற உணர்வு ஏற்பட்டு, நமது மனமானது கருமையத்தூய்மையின் மீது அதிக அக்கறை செலுத்தும்.  கருமையத் தூய்மைக்கேற்பவே மனித வாழ்வில் மகிழ்ச்சியும் நிறைவும் வாய்க்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

          கருமையத்தூய்மையும் எண்ணம் நிறைவேறுதலும் பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்களின் வைர வரிகள் நம்மனதில் எப்போதும் சுழன்று கொண்டே விழிப்புடன் இருக்க, அவ்வரிகளை மீண்டும் ஒரு முறை  நினைவு படுத்திக் கொண்டு இன்றைய சிந்தனையை நிறைவு செய்வோம்.

      “கருமையம் தூய்மையாக இருக்குமானால், என்ன செய்ய வேண்டும் என்பதும், என்ன செய்யக் கூடாது என்பதும் தெரியும்.  எண்ணுவதைச் செய்வதும், செய்ய முடிந்ததை, செய்யத்தக்கவாறு எண்ணுவதும் மனிதனுக்கும் இயல்பாகிவிடும்.”   வேதாத்திரி மகரிஷி அவா்கள். 

           இதுபோன்ற வாழ்வியல் உண்மைகள் அனைத்தும், மனிதனின் பள்ளிக்கல்வி—மாணவப் பருவத்திலேயே முழுமையாகச் சென்றடையச் செய்து மனிதவளத்தை பெருக்கியும், அதன் உச்சத்திற்கே உயா்த்தியும் வளமிகு மனித சமுதாயத்தை, திருவேதாத்திரியம் உருவாக்கி வருகின்றது என்றால் மிகையாகாது.  போற்றுவோம் திருவேதாத்திரியத்தை.  வாழ்த்துவோம் திருவேதாத்திரியத்தை.   வாழ்க திருவேதாத்திரியம்    வளர்க திருவேதாத்திரியம்.

         வாழ்க அறிவுச் செல்வம்                                             வளர்க அறிவுச் செல்வம்


    அறிவிப்பு  

     வாழ்க வளமுடன்.

                        செவ்வாய்க் கிழமைகளில் சத்சங்க நிகழ்வு  இல்லையாயினும், வருகின்ற செவ்வாய்க்கிழமை(19-07-2016) குருபூர்ணிமா தினமாதலால், அன்று சிறப்பு அறிவிற்கு விருந்திற்காக சத்சங்கத்தில் கூடி எல்லா அருளாளர்களின் அருளாசிகளைப் பெறுவோம். 

            அன்று அருளாளர்கள் உலகம் பற்றி சிந்திப்போம்.

    வாழ்க வளமுடன். 

    www.prosperspiritually.com


     

    Loading