admin

Author Archives

  • FFC – 147-வினா விடை 1

     

    வாழ்க மனித அறிவு                                                                                                         வளர்க மனித அறிவு

    வினா விடை 1

    FFC – 147

    23-12-2015 – புதன்

    சிந்திக்க வினாக்கள்-126
    19-11-2015 – வியாழன்

    வினா: அருள்நெறியின் உறுப்புகள் எவை?

    விடை:
    அருள் நெறியும் அறநெறியும் ஒன்றே. எப்படி? அருளைப் பெறக்கூடிய நெறி அருள்நெறி எனப்படுகின்றது. அந்த இறை அருள் எப்போது கிட்டும்? வாழ்க்கையை நெறியுடன் வாழ்ந்தால் இறை அருள் கிட்டும். அந்த நெறிதான் அறநெறி எனப்படுகின்றது, அறநெறியின் உறுப்புகள் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றுமாகும்.
    ஒழுங்காற்றலான அறிவே மனித அறிவாக இருந்தும், .ஒழுக்கமில்லாத வாழ்க்கை வாழ்ந்தால், ஒழுங்காற்றலான இறையின் அருள் எவ்வாறு கிட்டும்?
    ‘செயலுக்கான விளைவாக வருவது இறை’ என்கின்றபோது, கடமையில்லாமல்(செயல்) எவ்வாறு இறையின் அருள் கிட்டும்?
    ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்கின்றபோது ஈகையின்றி சமுதாயத்துடன் எவ்வாறு இசைந்து வாழ முடியும்? சமுதாயத்துடன் இசைந்து வாழாமலிருந்தால் இறை அருள் எவ்வாறு கிட்டும்?
    ஆகவே ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்து இறை அருளைப் பெற வல்லன. என்பதால் ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்று உறுப்புகளைக் கொண்ட அறநெறியும் அருள் நெறியும் ஒன்றே.

    சிந்திக்க அமுத மொழிகள்- 127

                                                                                                                                            20-11-2015—வெள்ளி

    இறந்தவர்களை கடல் தன்னுள் வைத்துக் கொள்வதில்லை. கரையோரம் ஒதுக்கி விடும். அதுபோல ஒழுக்கமற்றவர்களுடனான நட்பை நீங்கள் ஒதுக்கிவிடுங்கள்.
                                                                                                                                                 ….. புத்தர்
    பயிற்சி—
    1) இந்த உண்மையை, தக்க உவமானம், உவமேயத்தைக் கொண்டு கூறியுள்ளதை ரசிக்கவும். மகிழவும். வாழ்வியல் உண்மைகளை நீங்கள் புரிந்து கொண்டு உங்களுக்கே எடுத்துக்கூறவும், ஏன், மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறி விளங்க வைக்க எளிமையாக இருக்கும்.

    2) ‘பெரியாரைத் துணைக் கொள்’, ‘அறிவினரைச் சேர்ந்திருத்தல் இனிது’ என்பனவற்றை நினைவில் கொண்டு வந்து மகிழவும்.

    விடை:
    வினா-1) இந்த உண்மையை, தக்க உவமானம், உவமேயத்தைக் கொண்டு கூறியுள்ளதை ரசிக்கவும். மகிழவும். வாழ்வியல் உண்மைகளை நீங்கள் புரிந்து கொண்டு உங்களுக்கே நீங்களே எடுத்துக்கூறவும், அடுத்து, மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறி விளங்க வைக்க எளிமையாக இருக்கும்.

    திருவள்ளுவர் கூறும் ‘கூடா ஒழுக்கம்’. ‘கூடநட்பு’ பற்றியேதான் புத்தரும் எடுத்துரைக்கிறார்.. ‘ஒழுக்கமற்றவர்களுடான நட்பை ஒதுக்கி விடுங்கள்’ என்கின்ற அறிவுரையை புத்தர் உவமானம் ஏதுமின்றியே நேரிடையாகவே சொல்லியிருக்கலாம். மனித சமுதாயத்திற்கு! ஆனால் சொல்வது தெளிவாகவும், சுருக்கமாகவும்(succinctly, pointedly, without leaving any loose ends) இருப்பதற்காக நறுக்குத்தெறித்தாற்போல் ‘கடல் இறந்தவர்களை ஒதுக்கிவிடுகின்ற’ உவமானத்துடன் கூறுகிறார் புத்தர்.
    உவமானங்கள் எங்கிருந்து எடுக்கப்படுகின்றன? இயற்கையின் நிகழ்சிகளிலிருந்துதான் எடுக்கப்பட வேண்டும். வேறு எங்கிருந்து எடுக்க முடியும்? இயற்கையின் தன் இருப்பின் மூலமும், நொடிக்கு நொடி தன் நிகழ்வுகளின் மூலமும் அறிவுறுத்திக் கொண்டேதான் இருக்கின்றது. இயற்கையுடன் இணைந்திருந்தால் (attunement with Nature) இயற்கையே சிந்தனையாளர்களுக்கு ஆசானாக இருக்கும்.
    அறிஞர்கள் வாழ்வியல் கண்டுபிடிப்புகளை சமுதாயத்திற்கு இரண்டு விதமாகச் சொல்வர். ஒன்று வாழ்வியல் கண்டுபிடிப்புகளை எளிதாக விளங்க வைப்பதற்கு உவமான உவமேயங்ளை கையாள்வர். சில நேரங்களில் உவமான – உவமேயம் இல்லாமலேயே நேரிடை அறிவுரையாகவும் இருக்கலாம். அறிஞர்கள் பயன்படுத்தும் உவமான- உவமேயங்களை நாம் மதிக்கவும் வேண்டும், ரசிக்கவும் வேண்டும். கூறுகின்ற கருத்திற்கும் உவமான-உவமேயத்திற்கும் உள்ள ஒற்றுமையை(mapping) அறிய வேண்டும். மனதிற்குள்ளாகப் போற்றிப் பழக வேண்டும். ஏன் எனில் இறைத்தூதர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால், நாமும் வாழ்நாளில் பெறுகின்ற அனுபவங்களை அதுபோல் பின்வரும் சமுதாயத்திற்குச் சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும்.

    ‘தான் உயராது, மற்றவரது உயா்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது’ என்பது இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றமாக (corollary) இருப்பதால், போற்றுகின்ற பண்பு இருக்கின்றது என்றால் மற்றவரது உயா்வுநிலைபோல் நாமும் உயரவேண்டும் என்கின்ற விழைவு அந்த ஆன்மாவிற்குள் உள்ளது என்பது அறிகுறி. அது மறைந்தும் இருக்கலாம். அல்லது அது வெளிப்படையாகவும் தெரியலாம். மறைந்திருப்பதை எவ்வாறு அறிவது? ‘பிறர் உயர்வைப் போற்றி, மதித்து, ரசிக்கும் தன்மை’ நம்மிடம் இருக்குமானால் இயல்பூக்க நியதியின் கிளைத்தேற்றப்படி நாம் அந்த உயர்வுநிலைக்கு மெல்ல மெல்ல நகர்ந்து, உயா்ந்து வருகிறோம் என்று பொருள். குறிப்பாக இது குரு-சீடர் உறவில் பளிச்சிட வேண்டும்.

    நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்களிடம் அமைந்துள்ள எல்லாச்சிறப்புகளில் இந்த உவமான – உவமேயங்கள் பயன்படுத்துதலும் முக்கியமானதாகும். இல்லையெனில் ‘வெட்டவெளியே தெய்வம்’ என்று வெளிப்படையாகத் துணிந்துரைத்து லட்சோப லட்ச சீடர்களைக் ஈர்த்துக் கொண்டிருக்க முடியுமா?

    மகரிஷி அவர்களின் உவமான – உவமேயங்கள் பயன்படுத்தும் சாதுரிய-யுக்தியினை அறிந்து கொள்ள அவர் வாழ்வில் நடந்த இரண்டு சம்பவங்களை அறிவோம்.

    மகரிஷி அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வு. அமெரிக்காவில் பயிற்சியாளர்களின் வினாக்களுக்கு பதிலளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அமெரிக்க இளைஞர் ஒருவர் மகரிஷி அவர்களிடம் ஒரு வினாவினைக் கேட்டாராம். அதாவது

    “சுவாமிஜி ஏன் ஒழுக்கத்தை மிகவும் வலியுறுத்துகிறீர்களே! ஏன்” என்றாராம். அதற்கு மகரிஷி அவர்கள் பதில் வினாவினை அந்த இளைஞரிடம் கேட்டாராம். அது என்னவெனில்:- “சாலையில் மகிழுந்தை(car) ஓட்டிச் சென்று கொண்டிருக்கும்போது, சிவப்பு விளக்கு எரிந்தால் என்ன செய்வீர்கள்” என்றாராம். அதற்கு அந்த இளைஞர் என்ன சொல்லியிருப்பார்? அந்த இளைஞர் “சிவப்பு விளக்கு எரியும் போது நிற்காமல் போனால் விபத்து நேரும். எனவே மகிழுந்தை நிறுத்திவிட்டு பச்சைவிளக்கு எரியும்போது செல்வேன் ” என்றாராம். உடனே அதற்கு மகரிஷி அவர்கள் “அதுபோல்தான் வாழ்க்கையில் மனிதன் ஒழுக்கம் தவறி நடந்தால் வாழ்க்கை எனும் பயணத்தில் விபத்து ஏற்படும்” என்றாராம். அந்த விபத்துதான் துன்பங்களாக வருகின்றன. என்றாராம். மகரிஷி அவர்கள், அந்த இளைஞர் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற கருணையால், சாதுரியமாக தக்க உதாரணத்துடன் சொன்ன பதில் எவ்வளவு ஆறுதலையும், அதனால் மகிழ்ச்சியினையும் உண்டாக்கியிருக்கும்.! ஆறுதலும் மகிழ்ச்சியும் எவ்வாறு உண்டாகியிருக்கும்? ஒழுக்கம் அவ்வளவு அதிமுக்கியமானதா என்கின்ற ஐய–இருளில் இருந்த அந்த இளைஞரின் அறிவிற்கு விளக்கம் நிச்சயமாக ஒளியைத் தந்திருக்கும் என்பதால், ஐயம் தீர்ந்ததால் ஐயம் தீர்ந்த(இருள் மறைந்தது) ஆறுதலும், அதனைத் தொடா்ந்து அறிவு, ஒளியால் உயர்வை அடைந்ததால் மகிழ்ச்சியும் நிச்சயமாகக் கிடைத்திருக்கும்.

    இதே போன்று மற்றொரு நிகழ்ச்சி ஒழுக்கம் கடைபிடிப்பது பற்றி நடந்ததனை அறிவோம். இதே போன்று வேறொரு சமயத்தில் ஒழுங்குடன் இருப்பது பற்றி ஐயம் எழுந்தது பயிற்சியாளர் ஒருவருக்கு. அதற்கு அந்த பயிற்சியாளரிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்து இரண்டு சரிபாதியாகக் கிழிக்கச் சொன்னாராம் மகரிஷி அவர்கள். உடனே அந்த பயிற்சியாளர் காகிதத்தை வாங்கி இரண்டாக மடித்து மடிப்பை விரல்களால் நன்றாக தீட்டி பிறகு கிழித்தாராம். என்ன நடந்திருக்கும்? ஒன்றாக இருந்த காகிதம் சரியான நேர்கோட்டுடன் கிழிந்திருக்கும். மகரிஷி அவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்? அந்த பயிற்சியாளரிடம் “ஏன் இரண்டாக மடித்து தீட்டி கிழித்தீர்கள்? இரண்டு கைகளால் காகித்தை பிடித்து இழுத்தால் காகிதம் இரண்டாகக் கிழிந்திருக்குமே!” என வினவினாராம். அதற்கு அந்த பயிற்சியாளர் என்ன சொல்லியிருப்பார் என்று தெரிந்ததே, அப்படி மடித்து நன்கு தீட்டி கிழிக்க வில்லை என்றால் காகிதம் நோ்கோட்டில் கிழியாமல் தாறுமாறாக, வளைவுகளுடன் ஒழுங்கில்லாமல் கிழிந்திருக்கும்” என்றாராம். உடனே மகரிஷி அவர்கள் “இதுபோன்றுதான் வாழ்க்கையில் ஒழுங்கு இல்லையானால் வாழ்க்கை என்கின்ற வண்டிச்சக்கரம் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளாகும்” என்றாராம்.

    எனவே நமக்கும் உவமான-உவமேயம் கண்டு பிடிக்கும் திறன் வளர்ந்து விட்டால் அது இரண்டு விதங்களில் உதவியாக இருக்கும்.

    ஒன்று – முதலில் நமக்கு நாமே எடுத்துச் சொல்ல உதவியாக இருக்கும். இது என்ன? உதாரணமாக வாழ்க்கையில்

    ‘ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒத்துப் போக வேண்டும்(adjustment)’

    என்கின்ற அறிவுரையை எடுத்துக் கொள்வோம். ‘நான் தான் சரியாக நடந்து கொள்கிறேனே, நான் ஏன் பிறருடன் ஒத்துப் போக வேண்டும் என வினா எழலாம்.? இந்த வினாவிற்கு விடை கிடைக்கும் வரை ஒத்துப் போக மனம் இடம் தராது. அப்போது இந்த உவமான உவமேயம் கண்டுபிடிக்கும் திறனால் தக்க உவமான-உவமேயம் கண்டுபிடித்து, மனதிற்கு தெளிவினை ஏற்படுத்த முடியும். இது முதலில் நமக்கு உதவியாக இருப்பது.

    மற்றொன்று. பிறர்க்கு நாம் கண்டுபிடித்த வாழ்வியல் உண்மைகளை எடுத்துச் சொல்வதற்கு உவமான, உவமேயம் பயன்படுத்தும் திறன் உதவியாக இருக்கும். வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனவளக்கலைஞர்களை இறைத்தூதுவர்களாக்கியுள்ளார். ஆகவே மனவளக்கலைஞர்களுக்கு ஞானாசிரியராகும் பயிற்சியினைத் தந்து அருள்நிதி என்கின்ற பட்டத்தை வழங்கி வருகிறார்.

    ஆகவே இறைத்தூதுவர்களான மனவளக்கலைஞர்களுக்கு,

    அறிஞர்களின் கண்டுபிடிப்புகளை பிறர்க்கு எளிமையாக, சுருக்கமாக விளங்க வைக்கவும்,

    அதுமட்டுமன்றி, தாங்கள் தங்கள் வாழ்வில் கண்டுபிடித்த வாழ்வியல் உண்மைகளையும் பிறர்க்கு எடுத்துச் சொல்வதற்கும் உவமான-உவமேய கண்டுபிடிக்கும் திறன் பெரும் உதவியாக இருக்கும்.

    உவமான-உவமேயம் இல்லாத ‘ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒத்துப் போக வேண்டும்(adjustment)’ என்கின்ற அறிவுரையை எடுத்துக் கொள்வோம். இந்த அறிவுரைக்கு ஏற்ற உவமான-உவமேயத்தை கண்டுபிடிப்போம்.

    சாலையில் மிக கவனத்துடன் நடந்தோ அல்லது வண்டியை ஓட்டிக் கொண்டோ நம் பாதையில் செல்கிறோம். அப்போது எதிர் திசையில் ஒருவன் தாறுமாறாக வண்டியை ஒட்டிக் கொண்டு நம் பாதைக்குள் வருகிறான். அப்போது நாம் என்ன செய்வோம்? நாம் சரியாக நம் பாதையில் செல்கிறோம், அவன் தாறுமாறாக ஓட்டி நம் பாதையில் குறுக்கிட்டு வந்தால் அது அவன் தவறு என்று இருப்போமா? என்ன செய்வோம்? எதிர் திசையில் வருபவன் நம்மீது மோதி விடப்போகிறான் என்று நாம் ஒதுங்கிச் செல்வோம்,

    அதுபோல் நாம் என்னதான் நல்லவராக இருந்து(என நினைப்பதுகூட தன்முனைப்பின் வாசனையே. மனிதனாகப் பிறந்திருக்கிறோம். அதுபோல் வாழ்கிறோம் அவ்வளவுதான். இருந்தாலும் பரவாயில்லை. பண்பேற்றத்தில் ஆரம்ப கட்டத்தில் முதல்படியில் இருப்பவர் அவ்வாறு அவ்வாறு நினைப்பதில் தவறில்லை. ஆனால் பண்பேற்றப் படிகளில் ஏறி வரவர அந்த எண்ணமும் நீங்கி விடும். அயராவிழிப்புப் பயிற்சியால்) சரியாக நடந்து கொண்டிருந்தாலும் விட்டுக் கொடுத்து போவதுதான் அறிவுடைமை. இங்கு சமயோசிதமும் தேவை, நமக்கும், பிறருக்கும் துன்பம் வராத வரை, சமயோசிதத்துடன் பிறருடன் விட்டுக் கொடுத்து போவதுதான் அருள் நெறியின் அறிவுடைமை என்பதனை நாம் புரிந்து கொள்ள முடியும்.

    “விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போவதில்லை
    கெட்டுப் போகின்றவர் விட்டுக் கொடுப்பதில்லை” என்று ஒரு பழமொழி உண்டு.

    பிறவியின் நோக்கத்தினை இப்பிறவியிலேயே நிறைவேற்றிட நமக்கு திருத்தம் வேண்டும் என முடிவு செய்துவிட்டால் இயற்கையே இதுபோன்ற உவமான – உவமேயங்களைக் கூறி, அல்லது சம்பவங்களை நிகழ்த்தி அறிவுறுத்துகின்றது. இதுபோன்ற நிகழ்வுகளை உணா்வதற்கு இயற்கையுடன் இணைந்து(attunement with Nature) இருக்க வேண்டும்.

    2) வினா– ‘பெரியாரைத் துணைக் கொள்’, ‘அறிவினரைச் சேர்ந்திருத்தல் இனிது’ என்பனவற்றை நினைவில் கொண்டு வந்து மகிழவும்.

    விடை—
    ஒரு அறிஞர் கூறியுள்ள அறிவுரையைக் கண்ணுறும் போது, அதே போன்று வேறு அறிஞர்கள் கூறிய அறிவுரை நமக்குத் தெரிந்திருந்தால் அதனையும் நினைவிற்கு கொண்டு வந்து இணைத்து ரசிக்க வேண்டும். இது எப்போது சாத்தியம் என்றால் பல அறிஞர்களின் அமுத மொழிகளை அறிந்திருந்தால் சாத்தியம். ஒரு அறிஞரின் அறிவுரை இப்போதுதான் முதன் முதலில் அறியப்படுகின்றது என்றால், இதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோன்று வேறு அறிஞா்களின் அறிவுரையைக் கண்ணுறும் போது இந்த அறிவுரையை நினைவில் கொண்டு வந்து இணைத்துப் பார்த்து அந்த ஒற்றுமையை ரசிக்க வேண்டும். அப்போதுதான் அந்த அறிவுரை சரியானது என மேலும் உறுதிபடுத்த உதவியாக இருக்க முடியும்.

    உதாரணத்திற்கு, ஒழுக்கமும், பழக்கமும் எடுத்துக் கொள்ளலாம். இது பற்றி அறிஞர்களின் கூற்று என்ன? முதலில் நம் குருதேவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளதைக் கவனிப்போம்.

    ஒழுக்கத்திற்கும் பழக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கும் சீவன் மனிதன் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    இதே போன்று, இந்த உண்மையை ஒட்டி வேறு அறிஞர்கள் ஏதாவது கூறியிருக்கிறார்களா என்று பார்ப்போம். மேலைநாட்டு அறிஞர் ரூஸோ கூறுவது—

    “ஒழுக்கம் போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் நம் மனதோடு போராட வேண்டும்.” வேறு அறிஞர்கள் ஏதாவது கூறியிருக்கிறார்களா?

    ஸ்பானியப் பழமொழி. ஒன்று “முதலில் சிலந்தி வலையாக இருக்கும் பழக்கங்கள், பிறகு தோ்வடமாக மாறிவிடும் என்கின்றது.

    இவ்வாறாக ஒரே வாழ்வியல் உண்மையை பலகட்டங்களில் தெரிவிக்கும் பல அறிஞர்களின் அமுத மொழிகளை இணைத்து அமுதம் அருந்த வேண்டும். அப்போதுதான் பல பிறவிகளில் தவறவிட்ட பண்பேற்றத்தை இப்பிறவியலாவது பெற்று கடைத் தேறமுடியும்.

    சிந்திக்க அமுத மொழிகள்- 128

    21-11-2015—சனி

    எவனொருவன் ஒரு ஆன்மாவை அறிகிறானோ அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாகிறான்.

    ….. மகாவீரர்

    பயிற்சி—
    1) எல்லாவற்றையும் என்பது என்ன? திரு வேதாத்திரியம் அதற்கு உதவுகின்றது அல்லவா?
    2) இது எப்படி சாத்தியமாகின்றது?
    3) இதனை மகாவீரர் எவ்வாறு கண்டுபிடித்திருப்பார்?

    விடை:
    1) வினா– எல்லாவற்றையும் என்பது என்ன? திரு வேதாத்திரியம் அதற்கு உதவுகின்றது அல்லவா?

    விடை- எல்லாவற்றையும் என்பது இறையின் சரித்திரத்தையே அறிந்து கொள்வதுதான். அதற்கு திருவேதாத்திரியம் பெருமளவு உதவியாக இருக்கின்றது. திருவேதாத்திரியம் மனித குலத்திற்கு இறை அளித்துள்ள காலத்துக்கேற்ற வரப்பிரசாதமாகும்.

    2) பரமாத்மாவே சீவாத்மாவாக உள்ளதால் சீவாத்மாவான ஆன்மாவைப்பற்றி அறிந்துகொள்ளும்போது பரமாத்மாவின் சரித்திரத்தை அறிந்து கொள்ள முடிகின்றது

    3) மகாவீரர் மட்டுமல்ல அவருக்கு முன்னர் / பின்னர் அவதரித்த ஞானிகளெல்லாம் கண்டுபிடித்துள்ளனர்? ‘தின்றுத் திரிந்து உறங்கவா பிறந்தோம்?’ என்கின்ற வினா அவர்களைத் கடுமையாகத் துளைத்திருக்கும். ‘நாம் யார்?’ என எண்ணியிருப்பர்?’ வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என அறிய விரும்பியிருப்பர். அதன் விளைவாக ‘நான் யார்?’ என இயற்கையால்/இறையால் உணர்த்தப்பட்டார்கள்.

    வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                  வளா்க அறிவுச் செல்வம்

    முக்கிய   அறிவிப்பு

    வாழ்க வளமுடன்.

     

         அடுத்த அறிவிற்கு விருந்தில்(27-12-2015 ஞாயிறு) ‘சிந்திக்கப் பயிற்சியில்’ கேட்கப்பட்டுள்ள மேலும் சில வினாக்களுக்கு விடைகள் அளிக்கப்பட இருக்கின்றது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது. படித்துப் பயன்பெற வாழ்த்துக்கள். தாங்கள் பயன் பெற்றதை உங்கள் கருத்துக்கள் பகுதியில் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

     

    வாழ்க வளமுடன்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள்-135

    வாழ்க மனித அறிவு                             வளர்க மனித அறிவு

     

    21-12-2015 – திங்கள்

     

    திருவள்ளுவர் மனிதனுடைய உடைமைகளைக் கூறுவதற்காக எத்தனை அதிகாரங்களை
    வகுத்துள்ளார்? அவை என்னென்ன?

     

    வாழ்க அறிவுச் செல்வம்                           வளர்க அறிவுச் செல்வம்

     

    Loading

  • FFC – 146-வினைப்பதிவின் முன் இருப்பு

    வாழ்க மனித அறிவு                   வளர்க மனித அறிவு

    வினைப்பதிவின் முன் இருப்பு

    FFC – 146

    20-12-2015—ஞாயிறு

    குறிப்பு:-

                வாழ்க வளமுடன்.

            கேட்கப்பட்டுள்ள வினாவின் விடையை விரிவாக ஆராய இருப்பதால், இன்றைய சத்சங்கம் முடிவதற்கு(article has become lengthy)அதிக நேரம் ஆகலாம். அதற்காகவே விடை இரண்டு பகுதிகளாகப் பிரித்து தரப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக/ ஒருசேர படித்து முடிக்க நேரம் கிடைக்காதவர்கள் முதல் பகுதியை படித்து முடித்துவிட்டு சிறிது இடைவெளி விட்டு பிறகு நேரம் கிடைக்கும் போது படிக்கலாம். ஒருசேர படித்திட நேரம் இருக்குமானால் இடைவெளியில்லாமலும் படித்துப் பயன் பெறலாம்.

    வாழ்க வளமுடன்.

    பகுதி – 1

    வாழ்க வளமுடன்.

    இத்தலைப்பை சிந்திக்க எடுத்துக் கொண்டதற்குக் காரணம் ‘சிந்திக்க வினாக்கள் பயிற்சியில்’ கேட்கப்பட்ட ஒரு வினாவிற்கான விடையாக அமைவதற்காகவே.

    முதலில் தலைப்பின் கீழ் சிந்தனையைத் தொடர்வோம். சிந்தனையின் முடிவில் நீங்களே எந்த வினாவிற்கான விடை உள்ளது என அறிவீர்கள். வாழ்க வளமுடன்.

    ‘வினைப்பதிவே தேகம் கண்டாய்’ என்கிறார் ஓர் அறிஞர். இந்த அறிஞரின் கூற்றை நினைவில் கொண்டு இன்றைய சிந்தனையைத் தொடர்வோம்.

    தூயவெளி இறைநிலையின் தோற்றமான ஆன்மாவிற்கு எப்போது உடல் தேவையிருக்கின்றது?

    ஆன்மா தூய்மை அடையும் வரை அதற்கு உடல் தேவைப்படுகின்றது.

    அதாவது, ‘செயலுக்கு விளைவு உண்டு’ என்கின்ற இயற்கை நியதியின்படி, ஆன்மா எண்ணிய எண்ணங்களின், (அவை நிறைவேறாத ஆசைகளாகவும் – பற்றுக்களாகவும் இருக்கலாம்.) விளைவுகள் வெளிவராத பட்சத்தில்,

    அந்த விளைவை அனுபவிப்பதற்கு, ஆன்மாவிற்கு தேகம் தேவைப்படுகின்றது.

    அதுதான் பிறவித்தொடர் என்பது.

    ‘பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்’ என்பதால். புவியில் வாழும் காலத்தில், ஆன்மா தூய்மை பெற்று பற்றற்று வாழ்ந்திருந்தால் உடலைவிட்டு பிரிந்த பிறகு மீண்டும் புவிக்கு வந்து அவற்றை அனுபவிப்பதற்கு, உடல் தேவையில்லை.

    ஆகவே அறிந்து கொள்ள வேண்டியது:

    1) வினைக்கு விளைவு உண்டு.
    2) விளைவில்லாத வினை இல்லை.
    3) உடலை வைத்து வினையாற்றியதால்தான், விளைவை அனுபவிப்பதற்கு உடல் தேவைப்படுகின்றது ஆன்மாவிற்கு. அதாவது செய்த வினைக்கு விளைவு வருவதற்கு முன் உடல் மரணத்தை தழுவினால், அழியாத ஆன்மாவிற்கு உடல் தேவையுள்ளது. அதற்குத்தான் மீண்டும் மீண்டும் பிறவி.
    4) விளைவு, செய்யும் செயலின் தன்மையைப் பொருத்தது.
    5) விளைவிற்கும் வினைக்குமிடை கால நீளம், மற்றும் விளைவின் தரம் ஆகிய இரண்டும் வினையின் தன்மையைப் பொருத்தது.
    விளைவு உடனே வரவேண்டியதில்லை. அதாவது வினையை ஆற்றிய உடனே அதற்கான விளைவு வரவேண்டும் என்பதில்லை.

    உதாரணத்திற்கு சூடான பாத்திரத்தை கவனக்குறைவாக வெறும் விரல்களால் தொட்டுவிட்டால், அதற்கான விளைவு உடனே வந்துவிடும். ‘சூடான பாத்திரத்தை கவனக்குறைவால் வெறும் விரல்களால் தொட்ட பதிவை’ இருப்பாக இருந்து கொண்டு, விளைவு பிறகு வராது. விளைவு உடனே வந்துவிடும். மற்றுமொரு உதாரணம் ‘மின் கம்பியை தொட்ட வினைக்கு’ விளைவு பிறகு வராது. உடனே வந்துவிடும். எனவே வினையின் தன்மையைப் பொருத்து வினைக்கும் விளைவிற்கும் இடைப்பட்ட கால நீளம் அமையும். இப்போது தலைப்பிற்குள் செல்வோம்.
    இந்த தலைப்பு என்ன அறிவுறுத்துகின்றது? இத்தலைப்பு, குறிப்பாக வினைக்கும் விளைவிற்கும் இடைப்பட்ட கால நீளத்தைப்பற்றியதாக இருக்கும். தலைப்பு, வினை, பயன், முன் இருப்பு ஆகிய சொற்களைக் கொண்டுள்ளது.
    வினை என்றால் மனிதனுடைய செயல் என்று பொருள்.
    வினைப்பயன் என்றால் மனிதன் செய்த செயலால் வரும் விளைவே அவ்வினையின் பயன்.
    முன் இருப்பு என்றால் முன்னரே இருந்தது என்று பொருள்.
    ஏற்கனவே விளைவு வராது, ‘இருப்பாக’ இருக்கின்ற வினைப்பதிவின் பயன் என்று பொருள். விளைவு இல்லாத வினையில்லை. அதுபோல் வினை இல்லாத விளைவு இல்லை. எனவே ஏற்கனவே விளைவு வராது இருப்பாக இருக்கின்ற வினைப்பதிவின் விளைவு எப்போது வேண்டுமானாலும் வரலாம். தீடீரென தற்போது வந்துள்ள பெரும் விளைவிற்குரிய பெரும் வினை இப்போது செய்யப்படாமலும் இருக்கலாம். பெரும்பாலும் வருகின்ற விளைவுகள் நன்மையைத் தருவதாக இருந்தால் மனிதனுக்கு மகிழ்ச்சிதான்.
    ஒரு வேளை ஏற்கனவே இருப்பாக உள்ள வினைப்பதிவு பெருந்தீயப்பதிவாக இருந்து, வினை செய்யப்படும்போது விளைவு வராமல் இருந்து, இப்போது செய்யும் ஒரு சிறு தவறால், தூண்டப்பட்டு(trigger) பெருந்துன்பம் வரலாம். அப்போது மனிதன் வருத்தமடைகிறான். பெரும்பாலும் அதுபோன்ற சமயங்களில் ‘சிறு தவற்றிற்கு பெருந்துன்பம் விளைவாக வந்துவிட்டது. எனவே செயல்விளைவுத் தத்துவம் தவறு’ என்று கூறி நொந்து கொள்வதும் உண்டு.
    காரணம் முன்பு செய்த பெருந்தீய வினை கவனத்தில் இல்லாதிருப்பது,
    அல்லது அதன் தன்மை, அதனால் பாதிக்கப்பட்டவரின் துன்பநிலை ஞாபகத்தில் இல்லாது போவது
    மற்றொன்று, செய்த அவ்வினை ஞாபகத்தில் இருந்தாலும் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என தப்புக் கணக்குப் போடுவது.
    முன்னோர்களின் கருத்தொடர்தான் நாம் என்பதால், முன்னோர்கள் செய்த வினையின் விளைவாகவும் இப்போது நமக்கு வரலாம்.
    இதற்கெல்லாம் என்ன விளக்கம்?
    இதற்கெல்லாம் ‘செயல் – விளைவுத் தத்துவம்’ என்கின்ற நூலை அருளியுள்ள வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன என்று பார்ப்பதே இன்றைய அறிவிற்கு விருந்து. மகரிஷியின் தத்துவம் செயல் விளைவுத் தத்துவத்தை மிக மிக வலியுறுத்துவதாக இருப்பினும் அதனை விரிவாக எடுத்துரைக்க ‘செயல் – விளைவு தத்துவம்’ என்கின்ற தனிநூலினை 1997 ஜனவரியில் எழுதியுள்ளார். அந்நூல் 67 பக்கங்களைக் கொண்டது. எனவே அந்நூலின் முக்கியத்தை அறிந்து கொண்டு அந்நூலை மீண்டும் மீண்டும் வாசித்து தெளிவு பெறவேண்டும்.
    மகரிஷி அவர்களின் அனைத்து மூலநூல்களும் வீட்டின் அலமாரியை அலங்கரிக்க வேண்டும். மூலநூல்கள் அலங்கரிப்பதே போதுமானதாகிவிடாது. அவற்றை தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி வாசித்து தெளிவு பெற்று, அவ்வையார் கூறுவதுபோல், ‘அறிவுடையோரைக் கனவிலும் நனவிலும் காண்பது இனிதினும் இனிது’ என்பதனை சோதித்துப் பார்க்க வேண்டும்.
    எனவே இன்றைய சிந்தனையான ‘வினைப்பதிவின் முன் இருப்பு’ என்கின்ற தலைப்பிற்குள் செல்வோம். மனிதனின் எண்ணம், சொல். செயல் ஆகிய மூன்றும் அவனுடையக் கருமையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பாக உள்ளது. அவற்றிற்கான விளைவுகள் தக்க தருணத்தில் வெளிவரும். விளைவுகள் உடனேயும் வரலாம். அல்லது பிறகும் வரலாம். கால நீள அளவு செய்கின்ற வினையின் விளைவைப் பொருத்தது. இவ்வாறிருக்கும் போது சில நேரங்களில் வாழ்க்கையில் சிறு தவறு செய்யும்போது பெரும் துன்பங்கள் வரக்காண்கிறோம். அப்போது செயல்விளைவுத் தத்துவம் தவறு என நினைப்பது உண்டு. “No action will go waste. It will give appropriate result.” என்பார் மகரிஷி அவர்கள். ஆகவே செயல் விளைவுத் தத்துவம் தவறு என்பது சரியல்ல. விளைவையும் செயலையும் இணைத்துப் பார்க்க முடிவதில்லை.
    விளைவிற்கு காரணமான ஏற்கனவே செய்துள்ள வினையை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளாததே காரணம். அல்லது முன்னோர்கள் செய்த வினையாக இருந்தால் அதனை அறிய முடியாததே காரணம்.

    இப்போது வருகின்ற விளைவிற்கான வினை இந்தப்பிறவியிலேதான் நடந்திருக்க வேண்டுமென்பதில்லை. ‘மாதா, பிதா செய்தது மக்களுக்கு’ என்றிருக்கும்போது மனிதன் பெற்றோர்களின்/முன்னோர்களின் கருமையத் தொடர்புடையவன்(hereditary link) என்பதால், இப்போது மனிதன் அனுபவிக்கும் விளைவிற்கான காரணம் முன்னோர்களுடையதாகவும் இருக்கலாம். இது போன்று குறைந்த பட்சம் முன் ஏழு பிறவிகளில் செய்த வினைகளாகவும் இருக்கும். ஏற்கனவே 17-06-2015—புதனன்று ஒழுக்க வாழ்விற்கு போராட்டம் ஏன்? 7/7 என்கின்ற தலைப்பில் சிந்தித்தபோது, இந்த உண்மையினை விவர ஓட்டப்படம்(flowchart) மூலம் அறிந்திருக்கிறோம். எனினும் மீண்டும் அதனை நினைவு படுத்திக் கொள்வதற்காக அந்தப் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விரும்பினால் நீங்கள் இணையதளப் பெட்டகத்தில் உள்ள அன்று வெளிவந்த விருந்தினை இப்போதும் நீங்கள் browse செய்து அருந்தலாம்.
    சிறு தவற்றிற்கு பெருந்துன்பம் வருவது போன்று தவறாக மனிதன் நினைப்பது பற்றி நவயுக பிரம்ம ரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். இதற்கான விளக்கத்தை கவிவடிவிலும் தந்திருக்கிறார். அதனை நினைவு கூர்வோம்.

    FFC-146-பினைப்பயள் முன் இருப்பு கவி

    இப்பாடலுக்கான விளக்கத்தை அறிவோம். கடையில் பொருளை எடை போடும் போது தராசின் ஒரு தட்டில் எடைக்கல்லும், மற்றொரு தட்டில் பொருளும் வைக்கப்படுகின்றன. எவ்வளவு பொருள் வைத்தாலும் தராசின் எடைக்கல் தட்டு மட்டும் கீழே உள்ளது. கடைசியாக சிறிய அளவில் பொருளை வைக்கும்போது பொருள் தட்டு தாழ்ந்து விடுகின்றது.
    கடைசியாக சேர்க்கப்பட்ட சிறு அளவு பொருள் மட்டுமேவா காரணம் எடைக்கல்லுக்கு பொருள் சமமானதற்கு?
    இதுவரை வைக்கப்பட்ட பொருளும், இப்போது வைத்த பொருளும் சேர்ந்து அழுத்தியதுதான், பொருள் வைத்திருக்கும் தட்டு கீழே இறங்கி, எடைக்கல்லுக்கு பொருள் சமமானதற்குக் காரணம்.
    அதுபோல் ஏற்கனவே இன்றுவரை இருப்பாக இருந்து, ஆனால் விளைவு வராமல் உள்ள பெரும் தீய பதிவு, தற்போதைய சிறு தவறால் ஓங்கி, பலமாக, விளைவைத் தருகின்றது. அதனால் தான் இக்கவிக்கு தலைப்பினை ‘வினைப்பயன் முன் இருப்பு’ என்று வைத்துள்ளார். எனவே செயல் விளைவுத் தத்துவம் பொய்யாகிவிடாது என்கிறார் மகரிஷி அவர்கள்.
    ‘அரசன் அன்றே கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்’ என்பர் பெரியோர். செயலுக்கான விளைவு உடனே வர வேண்டும் என்பதில்லை.
    விளைவு, செய்யும் செயலின் தன்மையைப் பொருத்தது.
    விளைவிற்கும் வினைக்குமிடை கால நீளம், மற்றும் விளைவின் தரம் ஆகிய இரண்டும் வினையின் தன்மையைப் பொருத்தது.
    மனிதன் தன் தவற்றினைத் திருத்திக் கொள்வதற்கு அவகாசம் கொடுக்கின்றது. எச்சரிக்கின்றது இயற்கை/இறை.
    அதற்கு மேலும், தவறுகள் செய்வது தொடருமானால் உரிய நேரத்தில் விளைவு துன்பமாக வந்து விடுகின்றது.
    மேலும் கோள்களின் சஞ்சார நிலைகளும்(planetary position) மனித வாழ்வோடு தொடர்பு கொண்டு, முன் இருப்பு செயல்களின் விளைவுகளாக இன்ப-துன்பத்தை அளிக்கக் காரணமாக உள்ளதால், அந்தந்த காலம் வர வேண்டியிருப்பதால் விளைவு வருவதற்கான கால நீளம் நீடிக்கலாம். செயல் விளைவுத் தத்துவத்தை மதித்து பயன் கொள்வதற்கு அவர் அருளியுள்ள நூலை ஓரிரு முறை வாசித்துப் பயன் அடைய இச் சத்சங்கத்தில் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

    பகுதி – 2

    மேலும், பட்டினத்தாரின் வாழ்வில் நடந்த ஒரு அருட்சம்பவத்தை அறிவோம். பட்டினத்தார் துறவு பூண்டதால் ஊர் ஊராக சென்று கொண்டிருக்கும்போது. ஒரு இரவில் ஒரு கோயிலில் தங்கினார். அப்போது தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அவ்வூரின் அரண்மனையில் ராணியின் முத்துமாலை திருடு போய்விடுகிறது இதனை அறிந்த காவலாளர்கள் திருடர்களை பிடிப்பதற்கு துரத்தி ஓடி வருகின்றனர். அப்போது திருடர்கள் பட்டினத்தார் தவம் செய்து கொண்டிருந்த கோயிலில் ஒளிந்து கொள்கின்றனர். காவலர்களும் அக்கோயிலுக்குள் நுழைந்து திருடர்களைத் தேடுகின்றனர்.

    அதற்கு மேலும் தங்களிடம் அந்நகை தங்களிடம் இருந்தால் கையும் களவுமாக பிடிபடுவோம் என அஞ்சி திருடர்கள் அந்த நகையை வீசி எறிந்து விட்டு சென்று விடுகின்றனர். திருடர்களால் வீசி எறியப்பட்ட அந்த முத்துமாலை தவம் இயற்றிக் கொண்டிருந்த பட்டினத்தாரின் கழுத்தில் வந்து விழுகின்றது. தவம் முடிந்த பிறகு தன் கழுத்தில் இருந்த அந்த நகையைப் பார்த்ததும், தன்னுடைய தவத்தைப் பாராட்டி அந்த முத்து மாலை இறைவனால் அணிவிக்கப்பட்டது என நினைக்கிறார். கோயிலுக்குள் புகுந்த காவலர்கள் பட்டினத்தார் கழுத்தில் ராணியின் முத்து மாலை இருப்பதைக் கண்டு பட்டினத்தாரை கைது செய்து அரண்மனைக்கு அழைத்துச் சென்று அரசன் முன் நிறுத்துகின்றனர். அரசன் பட்டினத்தாரை திருடன் எனக்கருதி அவரை கழுமரமேற்றச்(அந்தக்காலத்தில் மரண தண்டனை அளிக்கும் ஒரு கொடூரமான முறை) சொல்கிறான்.

    அப்போது பட்டினத்தார் இறைவனிடம் சரண் அடைந்து “என்செயலாவது யாதொன்றுமில்லை” எனப்பாடுகின்றார். அப்பாடலை நினைவு கூர்வோம்.

    FFC-146- பட்டினத்தார் பாடல் என் கெபல் ஆவது ஒன்றில்லை

    இறைவனிடம் பூரணசரண் அடைகிறார். இறைவன் செயலன்றி தன் செயல் என்று ஒன்றும் இல்லை என்கிறார். அந்த நிகழ்வையே இறைவன் செயல் என உணர்ந்து கொண்டதாகக் கூறுகிறார். தான் இப்பிறவியில் ஏதும் பாவங்கள் செய்ததில்லை. முன் செய்த தீவினைதான் மீண்டும் பிறப்பதற்குக் காரணம் என்கிறார். இப்போது வந்துள்ள ‘திருடன் என்கின்ற பழி(விளைவு)’ முன் பிறவியில் செய்த பாவத்தின் விளைவாக தன்னைப் பற்றிக் கொண்டது என்கிறார்,
    உடனே கழுமரம் தீப்பற்றி எரிகின்றது. இதனைக் கண்ட அரசன் பத்திரகிரியார், பட்டினத்தாரின் தெய்வீக நிலையினை அறிந்து கொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு அவருக்கு சீடனாகிவிட்டான். அரசன் பத்திரகிரியார் பின்னாளில் ஞானியானார். ‘வினைப்பயனே தேகம் கண்டாய்’ என்கின்ற வரிகளைச் சொன்னவர் வேறுயாருமில்லை. பட்டினத்தடிகள்தான். இந்நிகழ்வினைக் கூர்ந்து நோக்கி ஆராய்ந்தால் நமக்கு இறைவனின் திருவிளையாடல்களின் உண்மைகள் தெரிய வரும்.

    பத்திரகிரியாரின் கருமையப்பதிவிற்கேற்ப, பின்னாளில் பத்திரகிரியார் ஞானியாக வேண்டும் என்பது இறையின் திருவுளம்.

    அடுத்ததாக இறைவன் பட்டினத்தாரை தடுத்தாட்கொண்டது.

    பட்டினத்தார் இறைவனிடம் சரணடைந்த விதம்

    பின் வரும் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்வதற்காகவும் ஏற்படுத்திய இறைவனின் நாடகம்.

    முன்வினைப்பயனை எடுத்துச் சொல்வதற்காக இறையாட்சி நடத்திய நாடகம்.

    திடீரென விளைவு துன்பமாக வரும்போது, ‘வினை ஏதும் இல்லாமல் விளைவு வந்துவிட்டது என சாதாரண மனிதன் ‘தெய்வத்திற்கு கண் இல்லை’ என தெய்வத்தையே நிந்திப்பது உண்டு.

    ஆனால், செயலிலே விளைவாக வருபவன் இறைவன் என்றிருக்கும் போது இறையை நெருங்கிவிட்டவர், தன்னுடைய தவறான வினையால்தான் தீமை வந்துள்ளது என தன் பொறுப்பை ஒப்புக்கொள்ளாமல் தெய்வத்தின் மீதே எவ்வாறு பழியைச் சுமத்த முடியும்?

    எனவே அப்பழியை முன்வினையின் பயனாகக் கருதுவதோடு இருந்துவிடாமல்,

    பின்வரும் சமுதாயமும் ‘முன் இருப்பு வினைப்பதிவின் விளைவு தற்போதைய வினையில்லாதது போல் வரும் விளைவு’ என்கின்ற உண்மையினை அறிந்து கொள்ள ஒர் பாடலை இயற்றியுள்ளார்.

    ஏனெனில் அருட்பாடல்கள் வற்றாத சீவநதி போன்றதாகும். எக்காலத்திலும் மனித அறிவிற்கும் விளக்கம் அளித்துக் கொண்டே இருக்கும்.
    ஆகவே ஆட்சியின்றி ஆளுகின்ற இறையாட்சியில், எங்கும் நீக்கமற அறிவாக திகழ்ந்து கொண்டிருப்பதால் எந்த ஒரு செயலும் வீண் போவதில்லை. அதற்கான விளைவு வந்தே தீரும்.
    ஆகவே யாரும் எக்காலத்திலும் எக்காரணத்தைக் கொண்டும் செயல்-விளைவுத்தத்துவம் தவறு என்று கூறிவிட முடியாது.
    நவயுக பிரம்ம ரிஷியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் முன்வினையின் இருப்பு பற்றி கூறியுள்ள விளக்கத்தை அறிந்து கொண்டோம். அவருக்கு மூத்தவரான பட்டினத்தார் அவர்களின் வாழ்க்கைச் சம்பவத்திலிருந்தும் முன் பிறவிகளில், அல்லது இப்பிறவியிலேயும் செய்துள்ள முன்வினையின் பயன் இப்போதும் வரலாம் என அறிந்து கொண்டோம். இனிமேலும் வினப்பதிவின் இருப்பின்(முன்னர் செய்தது) விளைவின் மீது ஐயம் இருக்காது. இருப்பினும் வேறு எப்படி முன்வினைப்பதிவை உறுதி செய்வது என்று பார்ப்போம்.

    அதற்கு முன்னர் ‘பூர்வபுண்ணியம்’ என்கின்ற சொல் கேள்விப்பட்டிருப்போம். எங்கே கேள்வி பட்டிருக்கிறோம்? எப்போது கேள்விப் பட்டிருக்கிறோம்.

    ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்கின்ற முதுமொழிப்படி நிகழ்வுகள் இப்போது நடை முறையில் இல்லை சமுதாயத்தில் அந்த நிகழ்வுகள் என்னென்ன? தானே அன்னையைத் தெரிந்து கொள்கின்றது குழந்தை. அன்னை குழந்தைக்குத் தந்தையை அறிமுகப்படுத்துகிறாள். இது முதல் நிகழ்வு. அதுபோல் தந்தை குருவைக் காண்பிக்க வேண்டும். இது இரண்டாவது நிகழ்வு. மூன்றாவது நிகழ்வு குரு தெய்வத்தைக் காண்பிப்பது. முதல் நிகழ்வு நடக்கின்றதே தவிர, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிகழ்வு நடப்பதில்லை சமுதாயத்தில் நெடுங்காலமாக. இந்த நிலையில் குரு கிடைப்பதை அந்த ஆன்மா செய்த பூர்வபுண்ணியம் என்கின்றனர்.
    பூர்வபுண்ணியம் இல்லாமல் அறிவை அறிந்த குரு கிடைக்கமாட்டார். அப்படியானால் அந்த பூர்வபுண்ணியம் என்பது என்ன?

    ‘பூர்வ’ என்றால் முந்திய(former, bygone) என்று பொருள். உதாரணத்திற்கு பூர்வ ஜன்மம் என்கிறோம். புண்ணியம் என்றால் நமக்குத் தெரியும். நல்ல செயல்களைச் செய்வதால் வரும் நன்மை. நல்வினையின் பயன். நல்விளைவு. இறைவனின் அருள், ஆசி என்று பொருள். ஆகவே பூர்வபுண்ணியம் என்றால் முந்திய பிறவிகளில் இந்த ஆன்மா செய்த நல்ல செயல்களினால் இறைவனின் அருளும் ஆசியும் பெற்றதனை பூர்வ புண்ணியம் என்கிறோம்.

    பிரம்ம ரிஷியான வியாசர் காலத்தில் நாம் வாழவில்லை. இருந்தாலும் நவயுக பிரம்ம ரிஷியான வேதாத்திரி மகரிஷி வாழ்ந்த காலத்தில் வாழ்கிறோம். அவரை குருவாக பெற்றது என்பது தற்செயலான நிகழ்வு அன்று. எந்த நிகழ்வும் இறையாட்சியில் தற்செயலானது இல்லை. நிகழ்வு செயலின் விளைவாக இருப்பதால் எந்த நிகழ்வும் தற்செயல் அன்று. இறைவன் திட்டமிட்டபடி அதாவது கருமையப்பதிவுகளின் படி அவ்வப்போது நிகழ்வுகள் நடக்கின்றன.

    அறிவை அறிந்த குருவை பெறுவது என்பது பூர்வபுண்ணியத்தாலன்றி வேறு ஏதும் காரணம் இருக்க முடியாது. பெற்றோர் குருவை அடையாத நிலையிலும் தானாகவே குரு கிடைப்பது என்பது பெற்றோர்கள் உள்பட நம்முன்னோர்கள் செய்துள்ள நற்காரியங்களின் விளைவாக இறைவனின் அருளாசி பெற்றமையாகும். ஆகவே பூர்வபுண்ணியம் என்பது வினைப்பயனின் முன் இருப்புதானே!

    ஜோதிடக்கலையின் வழியாகவும் முன்வினைப்பதிவு இருப்பதனை உறுதி செய்யலாம். ஜோதிடக் கலையில் ராசிக் கட்டத்தில் லக்கினத்திற்கு ஐந்தாம் இடம் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படுகின்றது. பூர்வபுண்ணிய ஸ்தானம் என்றால் என்ன? ஐந்தாம் இடம் முற் பிறவியில்(அதாவது பெற்றோர்கள் உள்பட முன்னோர்கள்) செய்துள்ள பாவ புண்ணயங்களுக்கு ஏற்ப அந்த இடம் ஒவ்வொருவருக்கும் அமையும். ஜோதிடக்கலையும் வினைப்பதிவின் முன் இருப்பை ஏற்றுக் கொள்கின்றது எனத்தெரிகின்றது.

    அந்த ஜாதகர் இன்னாருக்கு இன்ன நேரத்தில் பிறக்க வேண்டும் என விரும்பியா பிறந்தார்? அல்லவே! பெற்றோர்கள் செய்துள்ள வினைகளின் தொகுப்பாக பிறந்தார் அந்த ஜாதகர். அந்த ஜாதகர் பிறந்த நேரம், ஊர் இவைகளை வைத்து அந்த ராசிக்கட்டத்தை ஜோதிடக் கலை கணித்தது. அந்தக் கட்டத்தில் அமைந்த ஐந்தாம் இடத்தின் பலனான பூா்வபுண்ணியத்தைப் பற்றிக் கூறுகின்றது. ஆகவே அந்த ராசிக்கட்டம் கூறும் பூர்வபுண்ணியம் எங்கிருந்து வந்தது. முன்னோர்களின் செயல்களால் வந்தது அந்த பூர்வ புண்ணியம். ஆகவே பூர்வ புண்ணியம் என்பது பெற்றோர் உள்பட ஜாதகரின் முன்னோர்களின் வழியாக வந்துள்ளது. ஆகவே வினைப்பதிவின் முன் இருப்பு என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

    ‘நெருப்பு இல்லாது புகையாது’, ‘அள்ளாது குறையாது’ என்பன போல் வினையில்லாமல் விளைவு இல்லை. இச்சிந்தனையை மகரிஷியின் அவர்களின் வினை விளைவு பற்றிய கவியோடு நிறைவு செய்வோம்.

    FFC-146- விளைவு இலா வினை இலலை

    இப்போது தெரிந்திருக்கும் எந்த வினாவிற்கான விடை இச்சிந்தனையில் உள்ளது என்று.

    16-11-2015 அன்று சிந்திக்க வினாக்கள் -125 இல் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கான விடை இச்சிந்தனையில் உள்ளது. உங்கள் நினைவிற்காக அவ்வினாவினை மீண்டும் நினைவு படுத்தப்படுகின்றது.

    சிந்திக்க வினாக்கள்-125

    16-11-2015 – திங்கள்

    வினா: சிறு தவற்றிற்கு பெருந்துன்பம் விளைவாக வரும்போது ‘செயல்விளைவுத் தத்துவம் தவறு’ என்று நினைப்பவர்களுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கம் என்ன?

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                           வளா்க அறிவுச் செல்வம்

    முக்கிய அறிவிப்பு

    வாழ்க வளமுடன்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்(23-12-2015 புதன்) ‘சிந்திக்கப் பயிற்சியில்’ கேட்கப்பட்டுள்ள மேலும் சில வினாக்களுக்கு விடைகள் அளிக்கப்பட இருக்கின்றது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது. படித்துப் பயன்பெற வாழ்த்துக்கள். தாங்கள் பயன் பெற்றதை உங்கள் கருத்துக்கள் பகுதியில் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

    வாழ்க வளமுடன்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                                           வளர்க அறிவுச் செல்வம்

    Loading