admin

Author Archives

  • ஐவகை மயக்கம் (நேற்றையத் தொடர்ச்சி)

    ஐவகை மயக்கம் (நேற்றையத் தொடர்ச்சி)

    1-FFC-NEW-8

     

     03-11-2014

    வேதங்கள் ”இன்பம் புறப்பொருளில் இல்லை” என்று கூறுகின்றது. ஆனால் எவ்வாறு இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்பதனைக் கூறவில்லை. ஆனால் இளமையிலேயே மகரிஷி அவர்களுக்குள் எழுந்த நான்கு மகோன்னத கேள்விகளில் “இன்பம் துன்பம் என்பதென்ன?“ என்கின்ற ஒரு கேள்வி அமைந்து விட்டதால் அதற்கான அறிவியல் பூர்வமான விடையைக் கண்டுபிடித்துவிட்டார்.
    உண்மையிலேயே இன்பம் துய்ப்பது என்பது மனிதனின் சொந்த ஆற்றலான சீவகாந்த ஆற்றல் செலவழிவதையே அறிவு இன்பமாக உணர்கின்றது. எனவே அந்த சீவகாந்த ஆற்றல் அதிகமாக செலவாகும் போது அந்தப் புலன்களின் செல்கள் தாங்கும் அளவைவிட மீறும் போது அதுவே பொருந்தா உணர்வாகி அறிவு அதனை துன்பமாக உணர்கின்றது. தான் சேமித்து வைத்த சீவகாந்தமும் செலவாகிவிடுகின்றது. துன்பமும் ஏற்படுகின்றது. புலன்கள் வழியாக அறிவு இன்பம் அனுபவிக்கின்றது என்றால் அப்போது தன் சொந்த சீவகாந்த ஆற்றலைச் செலவழிக்கின்றது என்று பொருள்.
    அப்படி ஒரு ‘ஐவகை மயக்கம்’ உள்ளதா உண்மையில்? இது ஒரு அச்சுறுத்தலா? வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்களால். கோழைகளால் கூறப்படும் தவறான செய்தியா? அறிஞரான திருவள்ளுவர் ஐவகை மயக்கம் பற்றி கூறியுள்ளாரே! ஆகவே, வாசுகி என்கின்ற மாதர்குல மாணிக்கத்தை வாழ்க்கைத் துணைவியாகப்; பெற்ற திருவள்ளுவரா வாழ்க்கையில் விரக்தி அடைந்தவராக இருக்க முடியும்? திருவள்ளுவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்தவரல்லர். விரக்தி அடைந்தவரா இரண்டாயிரத்து நாற்பது ஆண்டுகளாகியும் இன்னமும் நம்மிடமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
    ‘ஒரு மயக்கம்’ என்பது எப்போதாவது ஒருவருக்கு வாழ்க்கையில் நிகழ்வது. ஆனால் எல்லோருக்குமே வாழ்க்கையே மயக்கத்தில்;தான் நடக்கின்றது. அந்த மயக்கம் தான் ‘ஐவகை மயக்கம்’ என்பது. இந்த ஐவகை மயக்கத்தைதான் திருவள்ளுவரிலிருந்து, அறிவை அறிந்த எல்லா அறிஞர்கள் வரையிலும், புலன்மயக்கம் என்கின்றனர்;. புலன்கள் ஐந்து என்பதால் ஐந்து புலன்களின் வாயிலாக அறிவு மயக்கமடைந்துள்ளதால் அது ‘ஐவகை மயக்கம்’ எனப்படுகின்றது. திருவள்ளுவர் புலன்மயக்கம் பற்றி என்ன எச்சரிக்கிறார் என்பதனைப் பார்ப்போம். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தில் ஆறாவது குறளாக
    “ பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்” …….. என்று கூறுகிறார்.
    இந்த குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள உண்மையையும். அதனை ஏன் கடவுள் வாழ்த்தில் கூறியிருக்கிறார் என்பதனையும் கவனிக்;க வேண்டும். இக்குறளில் உள்ள பொறி, அவித்தான், ஒழுக்க நெறி மற்றும் நீடுவாழ்வார் ஆகிய சொற்களுக்கு பொருள் தெரிந்து கொள்ள வேண்டும். வெவ்;வேறு ஆசிரியர்கள், இக்குறளுக்குக் கூறிய பொருளை ஆய்வு செய்வோம்.
    1) “ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்;கை வாழ்வர்.” என்பது ஒருபொருள். மற்றொரு பொருள்
    2) “மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகளின் வழியாக வரும் ஐந்து ஆசைகளை அறுத்து மெய்யான ஒழுக்க நெறியில் வாழ்பவர் பிறப்பு இன்றி வாழ்வர். மூன்றாவது பொருளாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ள பொருளைப் பார்ப்போம்.
    3) இயற்கையின் ஆரம்ப(ஆதி) நிலையிலிருந்து மலர்ச்சி பெற்று, பேரியக்க மண்டலத்தில் அழுத்தமாய், ஒலியாய், ஒளியாய், சுவையாய், மணமாய், அறிவாய் அவ் இயற்கை ஆற்றலே விளைவுகளாகி இயங்குகின்ற உண்மையினை மனிதன் உணர்ந்து செயலாற்றி வாழ்ந்தால், அவன் செயலும் விளைவும் “அருள்நெறி”சார்ந்ததாக இருக்கும் என்கிறார் மகரிஷி அவா்கள்.
    ஆகவே செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு என்கின்ற இயற்கை நீதியை மதித்து நடக்கப் புலன்களை தன்வசப்படுத்த வேண்டும் அறிவு. இல்லை எனில் ஒருவனுடைய புலன்களே அவனை வசப்படுத்தும் பொறிகளாகி(traps) விடும் என்கிறார். பொறிகள் என்றால் கருவி(tool or instrument) என்றும், அகப்படுத்துவதற்கும் உதவும் சாதனம்(trap) என்றும் பொருள். உதாரணத்திற்கு எலிப்பொறி்.
    அவித்தான் என்கின்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார் திருவள்ளுவர். அவித்த தானியம் முளைக்காது. அது போல் புலன்வழி தீய பழக்கங்களில் மீண்டும் செல்லாத அளவிற்கு அறிவு முடிவு செய்து அத்தீயப் பழக்கத்தை அவித்து விடவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். புலன்களை, அறிவு தன் கட்டுப்பாட்டிற்குள் (control over senses)கொண்டு வரவில்லை என்றால் ஒழுக்க நெறி மீறப்படும் என்கிறார். ஒழுக்க நெறி மீறினால் செயல்கள் பாவச்செயல்களாகி விளைவுகள் துன்பங்களையேத் தரும்.
    ”நீடுவாழ்வார்” என்பது ஒரு மனிதரின் வாழ்நாளைக் குறிப்பதில்லை. உடல்தான் அழிந்து விடப் போகின்றதே. புலன் ஒழுக்கத்தினால் ஒரு மனிதா் செய்யும் செய்த நற்செயல்களின் நல்விளைவுகள் மனித சமுதாயத்தில் இவ்வுலகம் உள்ளளவும் நீண்டு பயன் அளித்துக் கொண்டே இருக்கும் என்கிறார்.
    ஆகவே கடவுள் மீது நம்பிக்கைக் கொண்டு கடவுள் வணக்கம் செய்பவர்களுக்கு மட்டுமே இக்குறளில்; திருவள்ளுவர் கூறிய உண்மை பொருந்துமா? கடவுள் வணக்கம் செய்யாத கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களுக்கு இது பொருந்தாதா? கடவுள் மறுப்புக் கொள்கை உடையவர்களுக்கு புலன்கள் இல்லையா? புலன் ஒழுக்கம் என்பது எல்லோருக்குமே பொருந்தும். எந்த மதத்தினருக்குப் பொருந்தும்? ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதால் எழுநூற்று இருபது கோடி உலகமக்கள் அனைவருக்குமே புலன் ஒழுக்கம் பொருந்தும்.
    *****

    Loading

  • ஐவகை மயக்கம்

    ஐவகை மயக்கம்

    1- FFC-NEW-7

    02-11-2014

    இன்றைய சிந்தனைக்கான பொருள் ‘ஐவகை மயக்கம். மயக்கம் என்றால் என்ன என்று தெரியும். மயக்கம் என்பது அறிவு தன் சுயநினைவு அற்றலாகும்;. உறவினர் யாராவது மயக்கம், அடைந்துவிட்டால் அதிர்ச்சியும் கவலையும் அடைவோம். எப்போது மயக்கம் தெளிந்து சுய நினைவிற்கு வருவார் என்கின்ற கவலை இருக்கும். அநேக நேரங்களில் மயக்கம் சீக்கிரம் தெளிந்து விடுவதும் உண்டு.

    மயக்கம் நீடித்தால் நீண்ட மயக்கத்திற்கு (coma) நோயாளி தள்ளப்பட்டுவிடுவார். இன்னும் கவலை அதிகரிக்கும். மருத்துவ சிகிச்சையின் பயனாக நீடித்த மயக்கத்திலிருந்து தெளியலாம். அல்;லது சில நேரங்களில் நீடித்த மயக்கம் தெளியாமலேயே நோயாளி படுக்கையிலேயே இருப்பார். அப்போது படுக்கைப் புண்(Bed soar) ஏற்பட்டுவிடும். பிழைப்பதும் கடினமாகிவிடும்.

    எண்ணிக்கையில் இந்த மயக்கம் ஒன்றுதான். ஒரு மயக்கமே இந்த நிலையை ஏற்படுத்துகின்றது என்றால் ஒரு மயக்கத்திற்கு மேலாக ஐவகை மயக்கம் வந்துவிட்டால் என்ன ஆகும் மனிதனின் நிலை? வந்து விட்டால் என்பதில்லை, இப்போதே ஐவகை மயக்கத்தில்தான் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என்கின்றனர் அறிவை அறிந்த அறிஞர்கள். ஐவகை மயக்கம் என்பது என்ன?

    அதுதான் ஐம்புலன் மயக்கம். ஐந்து புலன்கள் வழியாகப் பெறும் இன்பங்களில் மயங்கி, மூழ்கி அறிவு துன்பத்துக்குள்ளாகின்றது. புலன்கள் இருப்பதே இன்பத்தை அனுபவிக்கும் கருவிகள் தானே என ஐயம் எழலாம். புறப்பொருட்களிலோ அல்லது புறநிகழ்ச்சிகளிலோ இருந்து வரும் இன்பத்தை அனுபவிக்கத்தான் புலன்கள் உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனால் புலன்கள் வழியாக அனுபவிக்கும் இன்பம் அளவு மீறும்போதும், முறை மாறும் போதும் துன்பமாகிவிடுகின்றதே! அதனைக் கவனியாமல் புலன் இன்பங்களைத் துய்ப்பதில் அளவு மீறுவதிலும், முறை மாறுவதிலும் பழக்கமாகி ஒரு காலகட்டத்தில் புலன்களுக்கு அடிமையாகி விடுகிறான் மனிதன். மேலும் எந்த புலனை அதிகமாகப் பயன்படுத்துகிறானோ அந்த புலன் சீக்கிரம் பழுதடைந்து துன்பத்துக்கள்ளாக நேரிடும்.

    எனவே அளவு மீறியும் முறை மாறியும் புலன் இன்பம் துய்க்கும் மனிதனை புலன் மயக்கத்தில் இருக்கிறான் என்கின்றனர் அறிவை அறிந்த அறிஞர்கள். விளக்கம் கிடைத்தாலும் பழையப் பழக்கத்திலிருந்து விடுபட கடுமையான தளரா விடாமுயற்சி (பிரம்ம பிரயத்தனம்) செய்ய வேண்டியிருக்கும். அதில் எல்லோராலும் வெற்றி பெற முடிவதில்லை. இதனாலேயே ஆரம்பத்தில் ஆா்வமாக ஆன்மீகப் பயிற்சியினைத் தொடங்கியவர்கள் வெற்றி பெறும் வரை பயிற்சியினை தொடரமுடியமால், ஒழுக்க நெறிக்கு வரமுடியாமல் ஆன்மீகப் பயிற்சியினை விட்டு விடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

    இந்த நிலையைத் தெளிவு படுத்தி,

    •  இனிமேலாவது, தீய பழக்கங்களை புதிதாக பழகிக் கொள்ளாதிருக்க எச்சரிக்கவும்,
    • ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட தீய பழக்கங்களில் இருந்து விடுபட முயற்சிப்பதில் தொய்வு ஏற்படாமல் இருக்கவும்

    ”பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு சீவன் மனிதன்” என்கிறார் இன்ப – துன்ப அறிவியலைக் (Science of Enjoyment and Suffering) கண்டுபிடித்த வேதாத்திரி மகரிஷி அவர்கள். அதே நேரத்தில்

                           ” பல்லாயிரம் பிறவி எடுத்து ஏற்ற பழிச்சுமைப்
                                பதிவுகளை ஒரு பிறவி காலத்திலேயே மாற்றலாம்.
                             நலமடைந்து மனிதனாகி தெய்வமாக உயரலாம்
                                நல்வாய்ப்பு ஆற்றலிவை கருணையோடு இறைநிலை
                             நிலஉலகில்.மனிதருக்கு அளித்துள்ளது இயல்பென
                                நெடுங்காலத் தொடர்புடைய கருமையத் தூய்மையால்
                             பலனைடய அகத்தாய்வும் அகத்தவமும் இறையுணர்
                                பாதையிலே விழிப்புடனே வாழ்வதுதான் அவ்வழி.
                                                           ….. வேதாத்திரி மகரிஷி

    என்று இக்கவியின் வழியாக நம்பிக்கையை அளிக்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    தொடரும் நாளை…..

    Loading

  • வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும் (நேற்றையத் தொடர்ச்சி)

    வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும் (நேற்றையத்  தொடர்ச்சி)

    01-11-2014

     எண்: அ.வி.மா. 002-2-6

    வயிற்றுப் பசியும் அறிவுப் பசியும்
    இப்போது அறிவுப் பசியைப் பற்றிச் சிந்திக்க உள்ளோம். வயிற்றுப் பசி என்பது சரி. அறிவுப் பசி என்பது வார்த்தை ஜாலமா? உண்மையில் அறிவிற்குப் பசி இருக்குமா என ஐயம் எழலாம். அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது, உருவமில்லா அறிவிற்குப் பசி எவ்வாறு ஏற்பட முடியும் ஐயம் எழலாம்?

    வயிற்றுப் பசியின் போது வயிற்றில் ஏற்படும் பசியாகியத் துன்ப உணர்வை அறிவது அறிவு. அதேபோல் மற்ற உடல் உறுப்புகளில் ஏற்படும் துன்ப உணர்வுகளையும் அறிந்து கொள்ளும் அறிவு. அப்படி இருக்கும்போது தனக்கேகூட(அறிவிற்கேகூட) துன்ப உணர்வு ஏற்படுமா? பசி என்பது துன்ப உணர்வு என்பதால் அறிவுப்பசி என்பது அறிவிற்கு ஏற்படும் துன்பம் என்றுதானே பொருள்?

    அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும். வயிற்றுப் பசியில் பசி என்கின்ற துன்ப உணர்வை, உணவை உட்கொண்டு சரி செய்து கொள்கிறோம். வயிறு ஓர் உறுப்பு. உருவமுள்ளது. வயிற்றில் இரைப்பை உள்ளது. நாம் அருந்தும் உணவு இரைப்பையில் நிறைகின்றது. வயிறும் பருப்பொருள். உணவும் பருப்பொருள்(கெட்டிப் பொருளாகவோ அல்லது நீர்ப்பொருளாகவோ இருக்கும்) வகையைச் சார்ந்தது, ஆனால் அறிவோ அரூபம். அதாவது உருவமில்லாதது. அப்படி இருக்கும்போது உருவமில்லா அறிவிற்கு ஏற்படும் பசியை எவ்வகையான உணவுப் பொருளைக் கொண்டு அறிவு தனது பசியைப் போக்கிக் கொள்ள முடியும்?

    உருவத்தைக் கொண்ட வயிறு பருப்பொருள்(உருவமுள்ள) உணவைக் உட்கொண்டு பசியைப் போக்கிக் கொள்வதுபோல் அறிவு தன் பசியை போக்கிக் கொள்வதற்கு பருப்பொருள் உணவு ஏதும் கிடையாது. உருவமில்லா உணவைக் கொண்டுதான் அறிவு தன் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் சிந்தனை. இதனை சிந்தனை விருந்தும் என்றும் சொல்லலாம். அறிவு ஐம்புலன்கள் வாயிலாக புற நிகழ்ச்சிகளை உணர்கின்றது. இன்பதுன்பங்களை உணர்கின்றது. இதுமட்டுமேவா அறிவின் வேலை? இது மட்டுமே அறிவிற்கு .இன்பம் தரமுடியுமா?
    அப்படியானால் அறிவுப்பசி என்பது என்ன? அறிய வேண்டிய இறுதியானதை(அதாவது தன்னையே) அறியவேண்டும் அறிவு. உடலுக்கு ஏற்படுகின்ற இன்பதுன்ப உணர்வுகளை அறிந்து கொள்வது எதுவோ அது அறிவு. புறத்தே நடக்கின்ற நிகழ்ச்சிகளை எல்லாம் அறிகின்றது. இவற்றை எல்லாம் அறிந்து கொண்டு, இவற்றிற்கெல்லாம் மேலாக, அறிய வேண்டி இறுதியானதை அறியக் கூடியது அறிவு. அப்படியானால் அறிவு அறிய வேண்டியது எது? அறிவு தான் யார் என்றும், தன் இருப்பிடம் எது என்றும் அறிய வேண்டும். அப்போதுதான் அறிவு முழுமை பெறும். மகாகவி கூறும் தெளிந்த நல்லறிவாகும் அறிவு.
    அறிவு தனது பூர்வீகத்தை அறிய வேண்டும். இது வரை அறிவைப்பற்றிய விஞ்ஞான பூர்வமான தகவல் ஏதும் இல்லாதபோது அறிவைப்பற்றிய(Consciousness) தகவல்களை எங்கிருந்து அறிவது என்கின்ற ஐயம் எழலாம். அறிவுப்பசியைப் போக்கிட இயற்கை தயாரித்துள்ள விருந்துதுான் வேதாத்திரியம். தனக்கு எது பிரியமோ அதனை அறிவு அறிய வேண்டும். அப்போதுதான் அதற்கு பேரின்பம். இந்த நிலை அறிவிற்கு இல்லாதபோது ஏற்படுகின்ற துன்பத்தைத்தான் அறிவிற்குப் பசி உள்ளது என்கிறோம்.
    தனக்குப்(அறிவிற்கு) பிரியமானதை அறியாமல், அதற்கு வழியும் தெரியாமல், பிரியமில்லாததை உணர்வதிலேயே காலம் கடத்துவது அறிவிற்குத் துன்பம்தான். எந்த நோக்கத்திற்காக அறிவு(இந்த ஆன்மா உடல் எடுத்ததோ) இந்த உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி. அறிவிற்கு தன்னை அறிவதில் ஆசை வந்துவிட்டால் தன்னை அறிகின்ற வரை அதற்கு ஓய்வே கிடையாது. எப்போது தன்னை உணா்கின்றதோ அன்றுதான் அறிவிற்கு ஓய்வு. அன்றுதான் அறிவின் பசி முழுவதுமாகத் தீரும். அன்றுதான் அறிவிற்கு விருந்து. ஆகவே ஆறாம் அறிவுடைய மனிதன் சிந்திக்க வேண்டும். சிந்தித்தலின் வாயிலாக வாழ்வின் நோக்கத்தை தானே அறிந்து அதுபோல் வாழ்க்கை வாழ்ந்து, மற்றவர்களுக்கும் வழிகாட்டும் புண்ணியக் கடமையை ஆற்றும் போது தான் அறிவிற்குப் பசி தீரும். இப்பூமியில் வந்து பிறந்ததற்கான சுவடை விட்டுவிட்டுச் செல்லலாம். குருவின் தாள் படிந்து – வேதாத்திரி நாமம் வாழ்க.
    இன்றைய விருந்தில் அறிந்து கொண்டது என்னவென்று சுருக்கமாகப் பார்ப்போம்.

    1. எந்த நோக்கத்திற்காக அறிவு(இந்த ஆன்மா உடல் எடுத்ததோ) இந்த உடலில் அறிவாக இயங்க வந்ததோ அதனை அடைவதற்கான ஏக்கம் தான் அறிவுப்பசி.
    2. சிந்தனைதான் அறிவுப் பசியைத் தீர்க்கும்.
    3. அறிய வேண்டிய இறுதியானதை அறியாத அறியாமையால் வருவது துன்பம்..
    4. அறிவுப் பசியைத் தீர்க்க இயற்கை தயாரித்துள்ள விருந்துதுான் வேதாத்திரியம்.

    இன்றைய விருந்தில் அறிவிற்கான ஏழு சத்துக்களைப் பெற்றுள்ளோம். இதனை மீண்டும் மீண்டும் சிந்தித்து உறுதி படுத்திக் கொண்டு நினைவில் கொள்ள வேண்டும்..

    வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு.
    அறிவுவாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச்செல்வம்.

    *****

    Loading