இன்றைய விருந்து

  • C256-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 7/?

    இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 7/?

    FFC – C256

     28-12-2016—புதன்

    ‘அறிவுடையோரை கனவிலும் நனவிலும் காண்பது இனிதினும் இனிது’ என்று அவ்வையார் கூறுவது போல், மகரிஷி அவர்களை, அன்றாடக் கடமையோடு கூடிய வாழ்விலும், எப்போதும் நினைவில் கொண்டு மகிழ்வது பற்றி ஆராய்ந்து வருகிறோம். இதற்காக மகரிஷி அவர்களின் இந்த ஆண்டு (28-03-2015) நினைவு தினத்திலிருந்து ‘இனிதினும் இனிது அறிவுடையோரைக் கனவிலும் நனவிலும் காண்பது’ என்கின்ற தலைப்பின் கீழ் சிந்தித்து வருகிறோம். இப்போது இச்சிந்தனையின் இறுதி கட்டத்தில் உள்ளோம். இந்த விருந்தில் மனிதப் பிறவியின் நோக்கமானப் பிறவிப்பயன் அடைவது பற்றி சிந்திக்க இருக்கிறோம்.

    நம்மோடு நேரிடையாகப் பேசும்போதும், இப்போது கவிகள் வழியாக மகரிஷி அவர்கள் பேசும் போதும், மனிதனாகப் பிறந்தவன், தான் எடுத்துள்ள மனிதப் பிறவியின் பயனான இறை உணர்வு பெறுவது சாத்தியம் என்றும், அது எவ்வாறு சாத்தியம் என்று பல இடங்களில் எடுத்துரைத்து, நம்பிக்கையையும் உறுதியையும் அளிக்கிறார். நாம் சிந்தனைக்கு எடுத்துக் கொண்டுள்ள ‘குருவின் சேர்க்கை’ என்கின்றக் கவியின் முதற் பகுதியில் இயல்பூக்க நியதியைப் பயன்படுத்தி பண்பில் ஏற்றம் பெறுவது எவ்வாறு என்பதனை சென்ற விருந்தில் ஆராய்ந்தோம். அக்கவியின் பிற்பகுதியில் அவ்வாறு பண்பேற்றம் பெற்று வருபவர், பிறவிப்பயன் எய்துவது, தப்பாது நடக்கும் என்று உறுதி அளிப்பதை இன்றைய சிந்தனைக்கு எடுத்துக் கொள்வோம்.

    அக்கவியின் பிற்பகுதி வரிகளை மீண்டும் நினைவிற்குக் கொண்டு வருவோம்.

    FFC-75-எவரோருவா குரு வழ to post on 19-4-15.png-1

    பிறவிப்பயன் நல்குவது பற்றிக் கூறுகிறார். அதற்குரிய நிபந்தனைகள் இரண்டு
    1) குருவை மதித்தல்
    2) ஒழுகுதல்

    இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஆன்மீக சாதகன் பூர்த்தி செய்யும் பட்சத்தில் அதன் பிறகு நடக்கும் நிகழ்வு பற்றிக் கூறுகிறார். அதாவது குருவினுடைய அறிவின் இருப்பிடம் அறிந்த உயர்வு, மதிப்பவரின் தரத்தை உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும் என்கிறார். தரம் உயர்ந்தால்தான் பிறவிப்பயன் தப்பாமல் கிட்டும் என்கிறார். பிறவிப்பயன் கிட்டுவதற்கான தேவைகள்(requirements)

    1) குருவை மதிக்க வேண்டும்.
    2) குரு கூறும் ஒழுக்க நெறிகளை ஆராய்ந்து, எதனையும் தளா்த்தாமல் (without any relaxation), பூரண மனத்தோடு(implicit obedience)ஏற்றுக் கொண்டு பின்பற்ற வேண்டும்.
    3) அதன் பயனாக ஆன்ம சாதகனின் தரம் உயரும்.

    இந்த மூன்று தகுதிகளைப் பெறுவதில் ஆன்ம சாதகனுக்கு என்ன சிரமங்கள் உள்ளன? அவற்றைத் தெரிந்து கொள்வதற்க முன், பிறவிப்பயன் என்றால் ‘இறைஉணர்வு பெறுவது’ என்று கருத்தியலாகத் தெரிந்திருந்தாலும் அதனை எதார்த்தமாக என்ன என்று அறிந்து கொள்வோம்.

    இந்த பரபரப்பான, விஞ்ஞான, நவீன உலகத்தில் பண்டைய முறையான குருகுலமுறை சாத்தியமில்லை என்பதால், அதனை மகரிஷி அவர்கள் முழுஅளவில் நடைமுறைப்படுத்தவில்லையாயினும்,

    மகரிஷி அவர்கள் கருவில் திருவில்லாத ஒரு சாதாரண, ஆன்மீக சாதகனுக்கும்,

    இறைஉணர்வு என்பது, தனது வாழ்க்கையின் நிகழ்வுகளில் முக்கியமானதும், சிறப்பானதும், மற்றும் இறுதியானதும் (ultimate) என ஆன்மீக சாதகனே விளங்கிக் கொண்டு,
    ஆன்மீகத்தில் வெற்றி பெறுவதற்குத் தேவையான அனைத்தையும் கூறியதோடு கூடவே,
    தான் வெற்றி பெற்ற வகையில் அனைத்து அனுபவங்களையும் சேர்த்துத் தொகுத்து,
    ஆரம்பத்திலிருந்து முடிவு வரை, மிக மிகத் தெளிவாக எல்லாக் கருத்தியல், மற்றும் செய்முறை பாடங்களையும் அருளியுள்ளார் திருவேதாத்திரியத்தில்.

    அதனை ஆராய்ச்சி செய்து, பிறகு நம்புவது, கடைபிடிப்பது என்பது ஆன்ம சாதகனின் முதற்கடமையும் பொறுப்புமாகும். இவ்வளவு கூறியுள்ள மகரிஷி அவர்கள் தனது பிறவிப்பயன் எய்துவது பற்றிய தனது அனுபவங்களை உரைநடையாகவும் கவிகள் வடிவிலும் கூறியுள்ளார். அவற்றில் ஒரு சில கவிகளைக் கவனிப்போம்.
    அதற்கு முன்னா் இணையதள ஆசிரியர் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை நினைவு படுத்திக் கொள்வோம். 40 வயதான ஒரு பெண்மணியிடம்  “உங்கள் தந்தையார் ஞானம் பெற்றால் உங்களுக்கு மகிழ்ச்சிதானா?” எனக் கேட்டதற்கு, முதலில்  “மகிழ்ச்சிதான்” என்று பதில் கூறினார். சில வினாடிகள் கழித்து, தன்னுடைய பதிலை மாற்றிக் கொண்டு விட்டார் அப்பெண்மணி. அதாவது  “தந்தையார் ஞானம் அடைவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை” எனக்கூறினார். ஏன் என வினவியதற்கு, அப்பெண்மணி,  “ஞானம் அடைந்துவிட்டால் அப்பா குடும்பத்தை விட்டு வெளியே சென்றுவிடுவார். அதனால் அப்பா ஞானம் அடைவதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை” என்றார் அப்பெண்மணி. அப்பெண்மணி, அப்போதும், இப்போதும் ஒரு வார காலத்(one week) தவச்செல்வியே. இப்போது எந்தவித ஆன்மீக பயிற்சியினையும் அவர் செய்வதில்லை. இருந்தாலும் ஆன்மீகக் கருத்துக்களை, திருவள்ளுவர் கூறுவது போல், செவி வழியாகக் கேட்டுப் பெறும் செவிச்செல்வம் சோ்க்கும் பாக்கியம் பெற்றவர் அப்பெண்மணி.
    ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்கின்ற பழமொழி போன்று, ஞானத்தைப் பற்றி இந்த மனித சமுதாயத்தின் பெரும்பான்மையோர் கொண்டுள்ள கருத்து என்ன என்பதற்கு விடை, அந்தப் பெண்மணியின் பதிலே போதுமானதாக இருக்கும்.
    ஞானத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லை. விளைவாக
    ஞானம் என்பது எட்டாக்கனி,
    தீயவைகளைத் துறக்க வேண்டும். நல்லவைகளை நாட வேண்டும். என்பதனைப் புரிந்து கொள்ளாமல், ஞானம் பெறுவதற்கு குடும்பத்தையே புறக்கணித்து துறவு மேற்கொள்ள வேண்டும் என்கின்ற தவறான புரிதல் பரவலாகப் பரவிவிட்டது.
    புலன் இன்பங்களை, அளவும், முறையுடனும் அனுபவிக்க வேண்டும் என்பதனை விடுத்து, ஞானம் பெற, புலன் இன்பங்களைத் துறக்க வேண்டும் என்கின்ற தவறானக் கருத்து பரவியுள்ளது.
    அறிவின் தெளிவு ஞானம், என்பதனை புரியாததால், ஞானம் வாழ்க்கையில் புறக்கணிக்கப்படுகின்றது. விளைவு அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற வழி தெரியாமல் அல்லலுறுகின்றது மனித சமுதாயம். இந்த அல்லல்களை நீக்கும் தொண்டினைச் செய்வதற்கே உலக சமுதாய சேவா சங்கத்தின் தோற்றம். அறிவின் தெளிவில்லாமல் செய்யும் செயல்களால், இயற்கையில் இல்லாத, பல்வேறு துன்பங்கள் மனதகுலத்தால் செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. உண்மையில், இயற்கையில் துன்பங்கள் கிடையாது. மனிதனின் தவறான செயல்களே, இன்றைய மனிதகுலம் அனுபவிக்கும் சொல்லொணாத் துன்பங்களுக்குக் காரணம். அதற்கு தீர்வுகள் கூறுகின்றது திருவேதாத்திரிய 1851 மந்திரங்கள்.
    ‘இல்லாத ஊருக்கு வழி சொல்வது போன்றதன்று ஞானம் பெறுவதற்கான வழிகள். இருக்கின்ற ஞான வாசலுக்குள் செல்வதற்கான வழிகளை திருவேதாத்திரியம் கூறுகின்றது. இந்த சமுதாயச் சூழலில், பிறவிப்பயன் என்பது என்ன என்று எதார்த்தப்புரிதல் வேண்டும்.
    தான் பிறவியின் நோக்கத்தை அறிந்ததும், பின்னர் அதனை அடைவதற்கு அவர் செய்த முயற்சியும் முடிவாக தான் அடைந்த பேரின்பத்தையும்  ஒரு கவியின் வாயிலாக, நமக்கு கூறுகிறார் மகரிஷி அவர்கள்.

    FFC-75 -பிறவி நோக்கத்தை- to post on 19-4-15

    மகரிஷி அவர்கள் தான் பேரின்ப அடைந்ததை நான்கு படிகளாக தன்னுடைய சீடர்களுக்குக் கூறுகிறார், எனவே அடுத்த அறிவிற்கு விருந்தில் இப்பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் விளக்கம் காண்போம். …. தொடரும்

    Loading

  • C255-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 6/?

    இனிதினும்  இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 6/?

    FFC – C255

     25-12-2016—ஞாயிறு

    இறைவெளியின் திறனான இயல்பூக்கம் மனிதனின் பண்பேற்றத்திற்கு எவ்வாறு உதவியாக உள்ளது?
    சென்ற விருந்தில் இறைவெளியின் இயல்பூக்கம் பற்றி ஆராய்ந்தோம். இப்போது இறைவெளியின் திறனான இயல்பூக்கம், மனிதனின் பண்பேற்றத்திற்கு (பண்பில் ஏற்றம் பெறுவது பண்பேற்றம்) எவ்வாறு உதவியாக இருக்கின்றது என்று, மகரிஷி அவர்கள் கூறுவதனை அறிய இருக்கின்றோம்.
    இயல்பூக்க நியதியால் உருவங்களின் அமைப்பிலும், அதனுடன் கூடவே குணநலங்களிலும் மாற்றங்கள் ஏற்படும் என்கின்றபோது, பேரறிவின் ஆறாம் அறிவு உயிரினத் தன்மாற்றத்தில்/பரிணாமத்தில், மனித உருவம் வந்ததோடு இயல்பூக்கப் பணி நின்றுவிட்டதாகிவிடுமா? மனித குணநலன்களில் மாற்றம் ஏற்படும் வரை இயல்பூக்கத்தின் பணி தொடர வேண்டுமே! அங்கேதான் மகரிஷி அவர்கள் கூறும் இயல்பூக்கத்தின் பயன்பாடு வருகின்றது.
    ஐயறிவு சீவன்கள் வரையில், இயல்பூக்கத்தால் உருவங்களிலும், குணநலங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. அங்கே, தன்னுடைய தன்மாற்றத் தொழிற்சாலையை, இறையேக் கவனித்துக் கொண்டது. அப்போது ஆறாம் அறிவு மனிதன் உருவாகவில்லை.
    ஆனால் இறை ஆற்றலின் மனிதகுல தன்மாற்றம்/பரிணாமம் பூர்த்தியாவதற்கு மட்டும் மனிதனுடைய பங்கும் இறையின் பங்கும் உள்ளன. இறையின் தன்மாற்றத் தொழிற்சாலையில் இறுதி கட்ட நிலையில் மனிதனும் அந்தத் தொழிற்சாலையில் பங்குதாரராகிவிட்டான். ஆகவே, முன்னாள் இந்திய ஜனாதிபதியும், தத்துவ ஞானியுமான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருப்பப்படி, இறையின் இறுதியான மனிதஇனப் பரிணாமம்(தன்மாற்றம்) பூர்த்தியாவதற்கு மனிதனின், ஆர்வம், ஒத்துழைப்பு, முயற்சி ஆகியவைகளும் அவசியமாகின்றன. அதற்கு, மனிதகுலம் பண்பேற்றம் பெற்று வாழ்வதற்கு, மகரிஷி அவர்கள் கூறும் வழி என்ன?
    எப்பொருளை எச்செயலை எக் குணத்தை
    எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
    அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
    அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும்
    இப்பெருமை இயல்பூக்க நியதி ஆகும். ………..என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்
    1) எந்த ஒரு பொருளையோ,
    2) எந்த ஒரு செயலையோ,
    3) எந்த ஒரு குணத்தையோ,
    4) எந்த ஒரு உயிரையோ
    அடிக்கடி நினைந்து வந்தால் இயல்பூக்க நியதியின்படி, அப்பொருளின் தன்மையாய் நினைப்பவரது ஆற்றல்
    1) அறிவினிலும்
    2) உடலினிலும்
    மாற்றம் பெறும் என்கிறார்.
    இவ்வாறில்லாமல் எவ்வாறு குணநலன்களில் முன்னேற்றமடைய முடியும்? குணநலன்களில் முன்னேற்றம் என்பது உளவியல் சம்பந்தப்பட்டது. குழந்தை மற்றொரு குழந்தையைப் பார்த்து கற்றுக் கொள்கின்றது. கலைகளில் தேர்ச்சி பெற்று முன்னிலையில் உள்ளவர்கள் அந்தக் கலையில் நிபுணத்துவம் பெற்று விளங்குபவர் யாரையாவது முன்மாதிரியாக (roll model) வைத்துக் கொண்டு முன்னேறுவதில்லையா?!
    அடிக்கடி என்றால் அதற்கு ஏதாவது வரையறை உண்டா? அடிக்கடி என்பதற்கு எவ்வாறு வரையறை மற்றவர் கூறமுடியும்? அடிக்கடி என்பது ஆன்மீக சாதகனின் ஆர்வம், விருப்பம், முயற்சி ஆகியவைகளைப் பொறுத்து இருக்கும். சிலருக்கு அவர்கள் விரும்பாமலேயே “அடிக்கடி“ என்பது அமைந்துவிடும். காதலிக்கும் காலத்தில் காதலர்கள் ஒருவரை ஒருவர் அடிக்கடி நினைப்பதில்லையா? அதுபோல். ஒரு பொருளோ, செயலோ, குணமோ, உயிரோ, எந்த அளவிற்கு நேசிக்கப்படுகின்றதோ அந்த அளவிற்கு இந்த ”அடிக்கடி” என்பது அமையும்.

    மேலே கூறிய, நான்காகிய
    1) எந்த ஒரு பொருளையோ,
    2) எந்த ஒரு செயலையோ,
    3) எந்த ஒரு குணத்தையோ,
    4) எந்த ஒரு உயிரையோ,

    அடிக்கடி நினைந்து வந்தால் அப்பொருளின் தன்மையாய் நினைப்பவர் உடலினிலும் அறிவினிலும் இயல்பூக்கத்தினால் மாற்றம் அடைவர் என்கிறார்.
    மனிதன், குருவிடம் வந்தமைக்கானக் காரணம் அறியாமையை நீக்கிக் கொண்டு அறிவில் மேம்பட வேண்டும். அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற வேண்டும். அறிவின் இருப்பிடம் அறிவதற்கு பயிற்சிகளோடு, ஆன்மீக சாதகன் தன் செயலில், குணத்தில் மேம்பட வேண்டும். அதற்கு எந்தப் பொருளை உணரவேண்டுமோ அந்தப் பொருளை அடிக்கடி நினைக்க வேண்டும். தான், மெய்ப்பொருளிலிருந்து வந்தவன் என்றும், மெய்ப்பொருளே தானாகவும் உள்ளது எனவும் அறிய வேண்டும் மனிதன். அதற்கு மெய்ப் பொருளை அடிக்கடி நினைந்து வரச் சொல்கிறார் மகரிஷி அவா்கள். அடுத்ததாக மெய்ப்பொருளை உணர்வதற்கு தன்னைத் தகுதி படுத்திக் கொள்வதற்கான செயல்கள் எவ்வாறு இருக்க வேண்டுமோ அதனை அடிக்கடி நினைந்து வர வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
    மெய்ப்பொருளை உணர்வதற்கு மனிதனுக்குத் தேவையானக் குணங்களை வளர்த்துக் கொள்வதற்கு அக்குணங்களை அடிக்கடி நினைந்து வரவேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்.
    இயற்கையின் ஓர் அபூர்வ நிகழ்வைக் (phenomenon) கண்டு பிடித்து மகரிஷி அவர்கள் இவ்வாறு கூறுகிறார் –
    ‘தான் உயராது – மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது; ரசிக்கவும் முடியாது’ என்கிறார் மகரிஷி அவர்கள்.
    எனவே, எந்த ஒரு செயலையும், எந்த ஒரு குணத்தையும் அடிக்கடி நினைப்பதை, மேலே கூறிய இயற்கையின் அபூர்வ நிகழ்வின் படி மனிதன் சாத்தியமாக்கிக் கொள்ள வேண்டும். அதாவது
    ஒரு விரும்பியச் செயலை, தான் செய்வதற்கான வலிமையையும், திறமையையும் பெறுவதற்கு,
    பிறர் செய்யும் அதே செயலை மதிக்கவும் வேண்டும். ரசிக்கவும் வேண்டும்.
    அடிக்கடி அதனை நினைக்க வேண்டும்.
    ‘எண்ணியது போல் ஆக முடியும்’ என்பதும் இயற்கையின் அபூர்வ நிகழ்வு (phenomenon) என்பதால்,
    விரும்பிய உயர்ந்த செயலுக்கும், குணத்திற்கும் உரியவராக வேண்டுமெனில்,
    அவற்றை அடிக்கடி நினைந்து – நினைந்து, மதித்து – மதித்து, ரசித்து – ரசித்து, போற்றிப் – போற்றி, தளரா, விடாமுயற்சியுடன் அதற்கானதைச் செய்து வரவேண்டும்.
    ஒரு வேளை இந்த அபூர்வ நிகழ்வு (phenomenon) ஒருவருக்கு, முன்னரே தெரியாதிருந்து ஆனால், அடிக்கடி ஒன்றை நினைந்து மதித்து. ரசித்து வருகிறார் என்றால், அவா் அந்த ஒன்றில் சிறந்து விளங்குவதற்கான அறிகுறி என்று அதனைக் கொள்ளலாம். இன்றிலிருந்தாவது அவா், மகரிஷி அவா்களின் கண்டுபிடித்துள்ள அபூர்வ நிகழ்வை (phenomenon) மனதில் கொண்டு செயல்கள் புரிந்து வந்தால் அவருக்கு வெற்றி அருகில் உள்ளது.
    உயா்ந்த செயலை யார் செய்ய முடியும்? உயர்க்குணம் யாருக்கு இருக்க முடியும்? மனிதனுக்குத்தான் இருக்க முடியும். அந்த முன்னுதாரணமான உயிரையும் அடிக்கடி நினைந்து வந்தால், உடலினும், அறிவினிலும் மாற்றம் காணமுடியும் என்கிறார் மகரிஷி அவர்கள். ஆகவே உயர்ந்த செயலையும், உயர்க்குணமும் உடைய மனிதர்கள் யார்? அவர்களை எவ்வாறு தேடிக் கண்டுபிடிப்பது?
    அவர்கள்தான் பேரறிவின் தன்மாற்றத்தில் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்து காட்டிய மகான்களாவர். அந்த திருக்கூட்ட மரபினில் தற்போது வந்துள்ள, நமக்குத் தெரிந்தவர், ‘திருவேதாத்திரியம்’ அருளியுள்ள நம்முடைய குருதேவரேயாவார். அது என்ன ‘திருவேதாத்திரியம்’? ‘திரு’ உடையதால், அது திருவேதாத்திரியம்.

          1991 ஆம் ஆண்டு வெளிவந்த விரிவாக்கப்பட்ட நான்காம் பதிப்பான ‘ஞானக்களஞ்சியம்’ என்கின்ற நூலுக்கு நூன்முகம் எழுதிய  டாக்டா். ஹரிவிஜயலட்சுமி துறைத்தலைவர், தமிழ்த்துறை, ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி. உடுமலைப் பேட்டை அவர்கள், சுவாமிஜி(மகரிஷி அவர்கள்)  அவர்கள் வகுத்துக் கொடுத்த  புதிய நெறியை ”திருவேதாத்திரியம்” என்று தமிழகமே போற்றுகிற நாள் விரைவில் வரும் என உள்ளப் பூரிப்புடன் கூறியுள்ளார் (ஞானக் களஞ்சியம் பகுதி -1 பக்கம் xv).  அன்னாரை மனம் குளிர்ந்து வாழ்த்தி மகிழ்கிறோம். இன்று, இறை/இயற்கை அன்னாரின் விருப்பத்தை, நிறைவேற்றும் முகத்தான்,  நம் வழியாக வேதாத்திரியத்தை, திருவேதாத்திரியம் என அழைக்க ஆரம்பித்துவிட்டது.  வேதாத்திரியத்தை திருவேதாத்திரியம் என அழைப்பதற்கான விளக்கம் பின்வருமாறு:

    ‘திரு’ என்றால் என்ன? மேன்மைக்கான அம்சம். இறைவனோடு தொடர்புடைய அல்லது மங்கலமான சொற்களுக்கு முன் இடப்படும் அடை(prefix added to Holy or Auspicious objects)- உதாரணம்: திருக்கோயில், திருவடி அதே போன்று மதிப்புத் தரும் முறையில் ஒருவரின் பெயருக்கு முன்னால் இடப்படும் அடை.

    குறள் திருக்குறள் எனப்படுகின்றது.  திருமூலர் அருளிய 3047 பாக்களும் திருமந்திரம் எனப்படுகின்றன. ஏன்? மந்திரம் என்பது என்ன? சக்தி வாய்ந்த புனித வார்த்தைகள் அல்லது ஒலிகளாகும். அவைகள் நம்பமுடியாத அளவிற்கு விந்தையை நிகழ்த்துவதற்கு வேண்டிய சக்தி வாய்ந்ததாக உள்ள ரகசிய வார்த்தை அல்லது ஒலி. ஆகவே திருமூலர் அருளியப் பாக்கள்

    மேன்மையை உடையதாலும்,
    மந்திரத்துக்குரிய சக்தியை உடையதாலும்,
    திருமூலர் அவதரித்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் வேதாத்திரியை மகானாக்கிய
    அப்பாக்களை வெறும் மந்திரம் என்று மட்டும் சொல்லாமல் திருமந்திரம் எனப்படுகின்றன.
    அதுபோல் வேதாத்திரியம் இறைவனைப் பற்றி தெளிவினும் தெளிவாக்கி, மனிதகுலத்தை மேன்மையடையச் செய்து வருவதால் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய பாக்கள், உரைநடைகள், அருளுரைகள் அனைத்தும் ‘திருவேதாத்திரியம்’ எனப்போற்றி அழைக்கப்படுகின்றது.
    ஆகவே இயல்பூக்க நியதியின்படி மனிதன் தன்முனைப்பு நீங்க குருவை அடைந்து ஆன்மீகச் சாதனை செய்து வருவதுடன், அச்சாதனையில் விரைவிலேயே வெற்றியடைய இயல்பூக்க நியதியினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    எப்பொருளுக்கு மெய்ப்பொருளையும்,
    எச்செயல், எக்குணம், எவ்வுயிர் ஆகிய மூன்றிற்கும் சேர்த்து நம் குருதேவரையே உதாரணப் புருஷராக எடுத்துக் கொள்ளலாம்.
    அதற்கு நாம் செய்ய வேண்டியது
    நம் குருதேவரின் வாழ்க்கை வரலாற்றினை அறிய வேண்டும்.
    அவர் எழுதியுள்ள வாழ்க்கை விளக்கம் என்கின்ற நூலை முழுவதுமாக பல முறை வாசித்து பயன் பெற வேண்டும்.
    வேறு பல அருளாளர்களின் வாழ்க்கை வரலாற்றினைக் கூட வாசிக்கலாம். பயன் தரும்.
    அடுத்ததாக நம்குருதேவர் அருளியுள்ள ஞானக் கவிகள் அனைத்தும் நேரிடைப் பொருளைக் கொண்ட மந்திரங்களாவதால் குறைந்த பட்சம் ஒரு முறையாவது, ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்து 1854 கவிகளையும் படித்து முடித்திடல் வேண்டும்.
    வாழ்க்கையில் திருவேதாத்திரியத்தை ஓதிடல் வேண்டும். மனதில் எப்பொழுதெல்லாம் சஞ்சலம் இருக்கின்றதோ., அப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு பக்கத்தைத் திருப்பி அதிலுள்ள பாக்களை ஓதிடுங்கள். எத்தனைப் பாக்களை ஓதிட வேண்டும் என ஐயம் எழலாம். உங்களின் அப்போதைய மனசஞ்சலம் சிறிது நேரத்தில் நீங்கிவிடும். அது வரை அப்பக்கம், அப்பக்கத்திற்கு முன்னா் அல்லது பின்னர் உள்ள பக்கங்களிலுள்ள பாக்களை ஓதுங்கள். மனம் லேசாகிவிடுவதனை உணரலாம்.

    மாணிக்க வாசகர் அருளிய திருவாசக்தின் சிறப்பைச் சொல்வதற்கு ‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பர். அந்த திருக்கூட்ட மரபினில் வந்த, முடிவில்லாத் தெய்வீகத் தொடர் ஒட்டத்தில், 1911 ஆம் ஆண்டின் அவதாரப் புருஷரான வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளிய திருவேதாத்திரியத்திற்கு உருகாதார் யார் இருக்க முடியும்?  அதனால்தான் இறை/இயற்கை, மகரிஷி அவர்கள்  வழியாக உலகமக்களுக்கு,  சேவையை வழங்க, உலக சமுதாய சேவா சங்கத்தை நிறுவியுள்து.

    கவிகளைப் படிப்பது என்பது எவ்வாறு இருக்க வேண்டும்?

    1) கவி வாசிப்பது என்பது, மூளை வரை மட்டும் செல்வது ஒருவகை. ஏனெனில் கண்கள் பார்த்து படிக்கும் போது அதற்கு மூளை உதவியாக உள்ளதால் மூளை வரை செல்லும் எனப்படுகின்றது. அதற்கு மேல் அந்தக் கவியால் ஏதும் மாற்றம் அடைவதில்லை கவியினை வாசித்தவர்.
    2) அடுத்தது மனம் வரை செல்லும். அதாவது மூளையைத் தாண்டி மனம் வரை செல்லும் கவியின் உட்பொருள். அறிவு ஓரளவு சிந்திக்க ஆரம்பிக்கின்றது என்று பொருள்.
    3) மூளை, மனம் வரை சென்றது, பின்னா், கவியின் உட்பொருளை, அறிவு மனதில் உருவகப் படுத்திப் பார்ப்பது மற்றொரு வகை. இந்த வகையில் அறிவு கவியின் உட்பொருளால் ஈர்க்கப்பட்டுள்ளது என்று பொருள். அதனால்தான் அறிவு அதனைத் தீவிரமாக சிந்திக்கின்றது.
    4) கடைசியாக கவியின் உட்பொருளாக மாற்றம் அடைந்தால்தான் கவி வாசிப்பதன் பயன் நிறைவேறும். கவியும் அந்த நபரை பொறுத்த வரையில் பயனுள்ளதாக, அமைந்ததாகவும் இருக்கும்.

    கவியினை வாசிக்கும் போது, கவி அருளிய அருளாரை நினைந்து போற்றி, அவரது அரிய பெருமைகளை தனக்குள்ளாகவே மகிழலாம். வாய்ப்பு இருந்தால் மற்றவர்களிடம் அதனைப் பற்றி பேசித் தானும் மகிழ்ந்து, மற்றவரையும் மகிழ வைக்கலாம். ஆனால், நம்முடைய கவனம் அறிவின் உயா்நிலையை அடைவதிலேயே இருக்க வேண்டும்.
    இது போன்ற மகிழ்ச்சி, அவ்வையார் கூறும் அறிவினரைச் சேர்ந்து, அவரைக் கனவிலும், நனவிலும் அடிக்கடி நினைப்பதால்தான் சாத்தியமாகின்றது. அதனால்தான் இவ்விரண்டையும் இனிதினும் இனிதாகக் கருதுகிறாள் அவ்வையார்.
    ஆகவே வேதாத்திரி மகரிஷி அவா்கள் அருளியுள்ள திருவேதாத்திரியத்திலுள்ள பத்தாவது மந்திரத்திலுள்ள யுக்தியான, இயற்கையின் இயல்பூக்கத்தை பயன்படுத்தி பண்பில் ஏற்றம் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம் என உறுதியனை ஏற்போம். அடுத்த விருந்தில், திருவேதாத்திரியத்தின் பத்தாவது மந்திரத்தின் மற்றொரு பகுதியான பிறவிப் பயனை பற்றி அறிவோம்.

    தொடரும்

    Loading

  • C254-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே!5/?

    இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே!5/?

    FFC-C254-

     

     21-12-2016—புதன்

    சென்ற அறிவிற்கு விருந்துகளில்
    ஏகாந்தம் இனிது,
    ஆதியைத் தொழுதல்,
    அறிவினரைச் சேர்தல் இனிது ஆகியவைகளை ஆராய்ந்து வருகிறோம்.

    அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பது எவ்வாறு இனிதாக இருக்க முடியும் என்றும், அந்த வரிசையில் அவ்வையார் பாடலான ‘அரிது எது?’ என்கின்ற பாடல் வழியாக அவ்வையாரின் ‘இனியது எது’ என்பதனை உறுதி படுத்தினோம்.

    அடுத்ததாக திருமூலரின் ‘குரு அருளே திருவருள்’ என்கின்ற பாடலின் வாயிலாகவும் அவ்வையாரின் ‘அறிவினரைச் சேர்தல் இனிது’ என்கின்ற கூற்று எவ்வாறு சரி எனப்பார்த்தோம்.

    இப்போது அறிவினரைச் சேர்தல் எவ்வாறு சேருபவரின் தரத்தை உயர்த்தி பிறவிப் பயனைத் தரும் என்று விஞ்ஞான ரீதியாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதை அறிய இருக்கிறோம். பிறவிப்பயனை எய்துவது இனிதினினும் இனிதுதானே! அது தானே பேரின்பம்?

    FFC-70-எப்பபொருளை- to post on 28-03-15அவ்வையார், திருமூலர், நம் குருதேவர் ஆகிய மூன்று அறிஞர்களின் கருத்தும் ஒன்றாகத் தானே உள்ளது. மூன்று அறிஞர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். அவா்கள் வற்றாத ஜீவநதிகளான கவிகளை அருளியதால்தான் இன்று நம்முடைய அறிவும், இனிவரும் சமுதாயத்தின் அறிவும் அந்நதியில் குளித்து மனத்தூய்மைப் பெற்று புத்துணர்வு பெற முடிகின்றது.

    முதலில் இயல்பூக்கம் என்கின்ற வார்த்தைக்கு பொதுவான விளக்கம் காண்போம். ‘இயல்பு’, ‘ஊக்கம்’ ஆகிய இரு சொற்கள் சேர்ந்ததுதான் ‘இயல்பூக்கம்’ என்கின்ற சொல். இயல்பு என்றால் என்ன? இயல்பு என்றால் பண்பு, தன்மை என்று பொருள். ஊக்கம் என்றால் என்ன? ஊக்கம் என்றால் உற்சாகமான தூண்டுதல், ஆதரவு, inducement, தன்முயற்சி, motivation என்று பொருள். இயல்பு, ஊக்கம் ஆகிய இரண்டு சொற்களும் சேரும்போது இயல்பூக்கம் என்பது ஏற்கனவே உள்ள பண்பு தூண்டப்பெற்று மாறுதல் அடைவது என்று பொருள்.

    இறைநிலையின் திறங்களில் இயல்பூக்கம் என்பது இரண்டாவதாக உள்ளதால், அக்கோணத்தில் இயல்பூக்கத்திற்கு விளக்கம் காண்போம். ‘தன்மாற்றம்’ என்கின்ற இறைநிலையின் முதல் திறனால், இறைநிலையே வெவ்வெறு தோற்றங்களாக மாற்றங்கள் அடைந்தாலும், அவை உருமாற்றமடைந்து வெவ்வேறாக இருப்பதற்கு காரணம் அவற்றின் குணங்களே. ஒவ்வொன்றும் பெறும் குணங்களுக்கேற்ப இயக்கச் சிறப்பு அமைகின்றது. இதுவே இயல்பூக்கமாகும்.

    இயல்பூக்க நியதியால் உருவங்களின் அமைப்பிலும், குணநலங்களில் மாற்றங்கள் ஏற்படும். காந்த ஆற்றல் இடத்திற்கேற்ப எழுச்சி பெற்று இயக்கங்களாகவும், விளைவுகளாகவும் வருவதுதான் இயல்பூக்கமாகும்.
    இறைவெளியின் இயல்பூக்கமேதான், உயிரினங்கள் ஓரறிவிலிருந்து ஆறறிவு வரை உருவாவதற்கு காரணமாக உள்ளது. முதலில் தோன்றிய தாவர உயிரினம் தன்னுடைய இயல்பூக்கத்தால், பல தாவரப் பிறவிகளை மலரச் செய்தது. இதனால் வித்துக்களை தாவர இனம் பெருக்கிக் கொண்டது. வித்துக்களில் இருந்த இயல்பூக்கம்தான் இரண்டாவது அறிவுடைய சீவனான புழுக்களாக மாறியது.

    புழுவிலிருந்து மேலும் இயல்பூக்கத்தைக் கொண்டு தனது சிறப்பால் வண்டு, ஊர்வன, பறப்பன, நடப்பன என எண்ணிலடங்காப் பிறவிகளை ஏற்படுத்திக் கொண்டது இறைநிலை/இயற்கை. இந்தப் பிரபஞ்சத்தில் ஐந்தறிவிற்குப் பிறகு, இறுதியாக வந்த உயிரினம் தான் மனிதன்.

    இப்போது இக்கவியை ஒட்டி ‘இயல்பூக்கம்’ என்பதற்குப் பொருள் காண்போம்.

    “அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும் – இப்பெருமை இயல்பூக்க நியதி ஆகும்”
    அறிவினிலும், உடலினிலும் ஏற்படும் மாற்றங்கள் எதனால் நடக்கின்றன?

    எந்த ஒரு பொருளையோ, எச்செயலையோ, எக்குணத்தையோ, எவ்வுயிரையோ ஒருவர் அடிக்கடி நினைந்து வந்தால், அப்பொருளின் தன்மையாக நினைப்பவரின் ஆற்றல் உடலினிலும், அறிவினிலும் மாற்றமடையும் என்கிறார். மேலும் இதனை ஒரு பெருமை என்றுக் கூறுகிறார் மகரிஷி அவர்கள். இது இறைநிலையின் இயல்பூக்க நியதியாகவும் கூறுகிறார். உண்மைதானே! இயல்பூக்க நியதியால்தான் ஒரறிவிலிருந்து ஆறறிவு வரை உயிரினத் தன்மாற்றம் நடைபெற்றது. ஓரறிவிலிருந்து ஐந்தறிவு தன்மாற்றத்தில் மனிதனுக்குப் பங்கு இல்லை. ஏனெனில் – ஆறாம் அறிவு (மனிதன்) அப்போது தோன்றவில்லை. ஆனால் இறைநிலையின் ஆறாம் அறிவு, மனித உருவினிலே தன்மாற்றம் அடைந்ததே தவிர அவனது குணநலன்களில் முழுவதுமாக மாற்றம் அடையவில்லை. தன்னிலை உணர்ந்தவர்களைத் தவிர, இன்னமும் முந்தைய இனமான விலங்கினப் பண்பு, மனிதனிடம் அவ்வப்போது சூழ்நிலை காரணமாக வெளிப்படுகின்றது. இதனை ஓர் அறிஞர்,

    “பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை Evolution is still incomplete” என்கிறார்.

    ஆகவே மனிதன் பண்பேற்றம் பெறுவதற்கு அவன் தான் செயல்புரிய வேண்டும். அந்த செயலினால் வருகின்ற விளைவு இயல்பூக்க நியதிப்படி நடக்கின்றது.

    இறைவெளியின் இயல்பு, ஊக்கம் பெறுவது இயல்பூக்கம். விலங்கினம், அதற்கடுத்து தற்போதுள்ள நிலை வரை வந்துள்ள மனித இனப்பண்போடு இயல்பூக்க நியதியின் பணி முடிந்துவிட்டதாக ஆகிவிடுமா? இயல்பூக்க நியதி என்ன செய்து கொண்டிருக்கின்றது? அது ஓய்வு எடுத்துக் கொண்டதா? இறைவெளிக்கு ஏது ஓய்வு? அப்படியிருக்கும்போது இறைவெளியின் தன்மையைான இயல்பூக்கத்திற்கும் ஓய்வு இருக்க முடியாது.

    மனிதகுலம் தற்போதுள்ள வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை என்பது பெரும்பாலும் விலங்கினப் பண்பையே வெளிப்படுத்திக் கொண்டிருத்தலாகும். அந்நிலை மாறுவதற்கு மனிதப்பண்பு ஏற்றம் (பண்பேற்றம்) பெற வேண்டும். அந்த பண்பேற்றம் பரிணாமத்தின்/தன்மாற்றத்தின் இறுதி கட்டம் தானே. இறுதி கட்டம் முடியாத வரை பரிணாமம் எவ்வாறு பூர்த்தியானதாகிவிடும்? உயரினப் பரிணாமத்தில் ஒரறிவிலிருந்து ஐயறிவு வரை பரிணாமம் பூா்த்தியாகிவிட்டது என்பது போல் ஆறாம் அறிவின் உயிரினப் பரிணாமம் பூர்த்தியாகிவிட்டது எனச் சொல்ல முடியுமா? ஐயறிவு உயிரினத்திற்கு வேண்டிய, ஐந்து வகை உணா்வுகளை உணா்வதற்கான ஐந்து புலன்கள் உருவாகிவிட்டன. இதற்கு மேல் ஐயறிவு சீவன்கள் அடைய வேண்டிய பரிணாம பூர்த்தி ஏதுமில்லை. ஆனால் மனித குலம் மனிதனுக்கான பண்பில் ஏற்றம் பெற வேண்டுமல்லவா? இதனைக் கருத்தில் கொண்டு தான்

    “பரிணாமம் இன்னமும் பூர்த்தியாகவில்லை Evolution is still incomplete” என்கிறார் அந்த அறிஞர்.

    இதுவரை இறை வெளியின் இயல்பூக்கம் பற்றி ஆராய்ந்தோம். பரிணாமம் ஏன் இன்னமும் பூர்த்தியாகவில்லை என்று அறிஞா் சொல்வது, எவ்வாறு சரி ஆராய்ந்து ஒப்புக் கொண்டோம். மனித குணநலங்களில் ஏற்றம் ஏற்படும் வரை, ஆறாம் அறிவு உயிரினப் பரிணாமத்தில் பூர்த்தியாகவில்லை என்பதால், இயல்பூக்கத்தின் பணி தொடர வேண்டும். ஆகவே மனிதகுலம் பண்பேற்றம் பெற்று வாழ்வதற்கு மகரிஷி அவர்கள் கூறும் வழி என்ன என்பதனை அடுத்த விருந்தில் அறிவோம். தொடரும்.

    Loading

  • C253-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 4/?

    இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 4/?

    C253-FFC 

     18-12-2016—புதன்

    சென்ற அறிவிற்கு விருந்தில் திருமூலர் கூறும் முதல் இரண்டு முறைகளில் தெளிவு பற்றி அறிந்தோம். இன்றைய அறிவிற்கு விருந்தில் மற்ற இரண்டு முறைகளில் தெளிவு பற்றி ஆராய்வோம்.

    3) தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்:

    இது எவ்வாறு சாத்தியம் என்று காண்போம். திருவள்ளுவர் கேள்விச் செல்வத்தை அறிவுறுத்துவதற்காகவே ஒரு அதிகாரத்தை ஒதுக்கியுள்ளார். அதில் முதலாவதாக இடம் பெறும் குறளைக் கவனிப்போம்.

    ” செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம்
    செல்வத்துள் எல்லாம் தலை” ….குறள் எண் 411

    “ எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும்” … குறள் எண் 416

     

    மனிதனுக்கு பல செல்வங்கள் அவசியமாகின்றது. அவற்றில் செவியால் கேட்டறியும் கேள்விச் செல்வமே தலைமையானது என்கிறார். கேட்டறிவதைச் செல்வமாகக் கருதுகிறார்.

    துன்பத்திற்குக் காரணமாக உள்ளது அறியாமைதான். எதையும் அறிந்து கொள்வதற்கு நம் உள்ளத்திற்கு இரண்டு தேவைகள் அவசியமாகின்றன. அவையான ஒன்று தேடல், மற்றொன்று ஆர்வம். தேடுபவருக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு இருக்கும். சலிப்பிருக்காது. மாறாக சுவையிருக்கும். தேடுதலில் பலபடிகள் உள்ளதால், அவற்றினை வரிசையாகக் கூறுவதென்றால் இவ்வாறாகக் கூறலாம். –

    1) பார்த்தல்,
    2) படித்தல்,
    3) கேட்டல்,
    4) தெரிந்து கொள்ளுதல்,
    5) புரிந்து கொள்ளுதல்,
    6) அறிந்து கொள்ளுதல்,
    7) தெளிவு பெறுதுல்,
    8) நிறைவு பெறுதல்.

    அறிவை உடைமையாக, அதாவது செல்வமாகக் கருதி, அறிவுடைமை என்கின்ற ஒரு அதிகாரத்தை இயற்றியவர், கேட்டறிவதனையும் செல்வமாகக் கருதுவதில் நியாம்தானே. ஆகவே திருவள்ளுவர் கூறும் அறிவுடைமை அதிகாரத்தில் உள்ள அறிவிற்கான வரையறையின்படி அறிவைத் தெளிவாக்குவதற்கு அறிவை அறிந்த குருவின் வார்த்தையை கேட்பது அவசியமாகின்றது. எனவேதான் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் என்கிறார் திருமூலர்.

    செவிச் செல்வத்தைப் பற்றி திருவள்ளுவர் கூறுவதாவது:

    1) செவிகளுக்கு உணவாகிய கேள்விச்செல்வத்தை உடையவர், பூலோகத்தில் வாழ்ந்தாலும் தேவர்களுக்கு ஒப்பாவார்.
    2) தான் கற்காவிட்டாலும், கற்றவர் கூறுவதைக் கேட்க வேண்டும்.. அது வாழ்க்கையில் தளர்ச்சி(சூழ்நிலை) ஏற்படும்போது துணை இருக்கும்.
    3) சேற்று நிலத்தில் நடந்தால் வழுக்கும். அப்போது ஊன்றுகோல் நடப்பவர்க்கு உதவுவது போல ஒழுக்கமுடையவர் வாய்ச்சொல் உதவும்.
    4) ஒருவன், சிறியதாயினும் நல்லவைகளைக் கேட்டால், அவை அவனுக்கு நிறைந்த பெருமையைத் தரும்.
    5) கேள்வி அறிவினை உடையவர்கள் பிறழ உணர்ந்த வழியும் பேதமை தரும் சொற்களைச்
    சொல்ல மாட்டார்கள்.
    6) கேள்வியால் துளைக்கப்படாத செவிகள் செவிடாம் தன்மை உள்ளன.
    7) கேள்விச்சுவை அறியாத மனிதர் இறந்தாலும், இருந்தாலும் பயன் என்ன?

    அறிவு மேம்படுவதற்கு தெளிவு அவசியமாக உள்ளதால், குருவின் திரு வார்த்தையைச் செவிமடுத்துக் கேட்டுப்பெறும் செவிச் செல்வத்தை வலியுறுத்துகிறார் திருமூலர்.

    4  தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

    குருவின் திருஉருவத்தைச் சிந்தித்தால் அறிவிற்குத் தெளிவு ஏற்படும் என்கிறார் திருமூலர். இது எவ்வாறு நடக்கின்றது? முதலில் கூறிய மூன்றையும் விட அந்த ஞானாசிரியருடைய திருஉருவை மனதில் நிறுத்தி, அவர் அருளுரைகளை எண்ணியபடியே நினைவால் தொழுவதும் அறிவிற்கு விளக்கம் தரும் எனப்படுகின்றது. தியானத்திற்கு ஒரு பொருள் தேவைப்படுகின்றது. தியானத்திற்குரிய பொருள், நமக்கு என்ன வேண்டுமோ, அதனை தன்மையாகக் கொண்டிருக்க வேண்டும். ஒரு சிலர் சிலைகளை வைத்து தியானிப்பது வழக்கம். உதாரணத்திற்கு புத்தர் சிலையை வைத்து தியானம் செய்யும் பழக்கமும் உண்டு. மனம் ஒருமைப்படும். புத்தா் கூறிய அறிவுரைகளின் தன்மையாய் தியானிப்பவர் ஆவார். அதுபோல் குருவின் திருஉருவத்தை சிந்தித்து வந்தால் குரு கூறும் தன்மைகள் சீடனுக்கு வந்து சேரும் இறை அருளைப் பெறுவதற்கு குருவருள் துணை செய்யும் என்பதால் குருவருளின் பெருமை பற்றி திருமூலர் கூறுகின்றார், அவ்வையார் மற்றும் அறிஞர் திருமூலர் ஆகிய இருவரும் கூறியது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர். இவ்விரு அருளார்களின் அறிவுரைகள் எந்த அளவிற்கு கவனிக்கப்பட்டு, நம்பப்பட்டு பயன் படுத்தப்பட்டதோ தெரியாது. ஆனால் வேதாத்திரி மகரிஷி அவர்களால் பயன்படுத்தப்பட்டது என்பது, மகரிஷி அவர்கள் இயற்றிய குருவணக்கப் பாடலில் வாயிலாகத் தெரிய வருகின்றது.

    மேலும் பஞ்சபூத தத்துவத்தைப்பற்றி கூறும் போது, வெளி மற்றும் விண்ணின் விகிதாசாரத்தை விளக்க வந்த மகரிஷி அவா்கள் அவ்வையார் கூறும் பாடலை சான்றாக எடுத்துக் கொண்டுள்ளார், ஞானக்குறளில் உள்ள சில வரிகளைக் கவனிப்போம்.

    ” பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம்
    தரம் மாறித் தோன்றும் பிறப்பு.”

    ”நிலம் ஐந்து, நீர் நான்கு, நீடங்கி மூன்று,
    உலவை இரண்டு, ஒன்று விண்”

    இதிலிருந்து என்ன தெரிகின்றது? அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து வாழ்ந்த காட்டியவர்களை நினைவுகூர்ந்ததால், அவர்களின் அறிவாற்றல் எவ்வாறு உதவியாக இருக்கின்றது என்பதனை அறிய முடிகின்றது.

    இத்தருணத்தில், கூடுதலாக விநாயகர் அகவலிருந்து அவ்வையார் கூறும் சிலவரிகளைக் கவனிப்போம்.
    ”மூலாதாரத்தின் மூண்டெழுகனலைக்
    காலாலெழுப்புங் கருத்தறிவித்தே” என்கின்ற வரிகள் மகரிஷி அவர்கள் இன்று எளிமையாக்கிக் கொடுத்துள்ள குண்டலினி யோகத்தைக் குறிப்பிடுகின்றன. காலால் என்பது மூச்சுக் காற்றினால் குண்டலினி சக்தியை மூலாதாரத்திலிருந்து உயரே கொண்டுவருவதைக் குறிப்பிடுகிறார் அவ்வையார்.

    மேலும் மகரிஷி அவர்கள் கூறும் இறைவெளியையும், அதன் தன்மாற்றத்ததைப் பற்றிக் கூறும் வரிகளைக் கவனிப்போம்.

    ” சத்தத்தினுள்ளே சதாசிவங்கக்காட்டிச்
    சித்தத்தினுள்ளே சிவலிங்கக் காட்டி
    அணுவிற்கணுவா யப்பாலுக்கப்பாலாய்ச்
    கணுமுற்றிநின்ற கரும்புள்ளேகாட்டி”

    “அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்” என்கின்ற வரி இறைவெளி அணுவிற்குள்ளும் இருக்கின்றது அதற்கு அப்பாலும், பிரபஞ்சத்தைத் தாண்டி எல்லையில்லாததாக(அப்பாலுக்கு அப்பாலாய்) உள்ளது என்கின்ற இறைவெளித்தத்துவத்தைக் கூறுகிறார், அந்த வெளியைப் பற்றி கூறவந்த அவ்வையார்,

    ” சத்தத்தினுள்ளே சதாசிவங்கக்காட்டிச்
    சித்தத்தினுள்ளே சிவலிங்கக்காட்டி” என்கிறார் அவ்வையார்.

    ஒலி எவ்வாறு வருகின்றது? காற்றிலிருந்து வருகின்றது. காற்று பஞ்சபூதங்களில் ஒன்று. பஞ்சபூதங்கள் வெளியிலிருந்து உண்டாகின. வெளி அமைதியானதால், அதனை அமைதியைக் குறிக்கின்ற ‘சிவம்’ என்கின்ற சொல்லால் குறிப்பிடுகிறார். ஒலி வருவதற்குக் காரணம் காற்று, காற்றிற்கு மூலம் வெளி. வெளி எப்போதும் சதா(எப்போதும், தொடர்ந்து), அதாவது எப்போதும் மௌனமாக உள்ளதால். சப்பதத்திற்கு மூலம் காற்று, காற்றிற்கு மூலம் பெருவெளியாகிய சதாசிவம் என்கிறார்,

    சித்தம் என்றால் மனம், அறிவு என்று பொருள். இறைவெளியே எல்லா உயிர்களிலும் அறிவாக இருக்கின்றதை ”சித்தத்தினுள்ளே சிவலிங்கக் காட்டி” என்கிறார். அவ்வையார் ஒரு ஞானப்புலவர் ஆகவேதான் ஞானக்குறள் என்கின்ற தலைப்பில் 310 குறட்பாக்களை அருளியுள்ளார்,

    அறிவினரைச் சோ்தல் இனிது, அதனினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பது என அவ்வையார் கூறியுள்ளதையே, அறிஞர் திருமூலரும் குருவின் பெருமைகளாகக் கூறியுள்ளார். அருளாளர்களின் கூற்றுக்கள் கவனிக்கப்படாமலும், நம்பப்படாமலும் இருக்கின்ற நிலையை மாற்றி, அறிவுபூர்வமாகவும், விஞ்ஞான அடிப்படையில் உள்ளது என எடுத்துக் கூறும் பட்சத்தில் அவை சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளும் நிலை விரைவில் ஏற்படும். ஆகவே அறிவினரைச் சேர்தல் எவ்வாறு சேருபவரின் தரத்தை உயர்த்தி பிறவிப் பயனைத் தரும் என்று விஞ்ஞான ரீதியாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதை அடுத்த அறிவிற்கு விருந்தில் அறிவோம்.   வாழ்க வளமுடன்.

    Loading

  • C252-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 3/?

    C252-இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதுதானே! 3/?

    C252-FFC –

    14-12-2016—புதன்

    ‘இனிதினும் இனிது அறிவினரைக் கனவிலும் நினைவிலும் காண்பதுதானே’ என்பது எவ்வாறு நடைபெறுகின்றது என ஆராய்ந்து வருகிறோம். இந்த தலைப்பைக் கொடுத்தது அவ்வையாரே என்பதால் அவர் அருளிய பாடல்கள் வழியாகவே ஆராய்ந்தோம். இருப்பினும், அறிவை அறிந்த அறிவினர், வேறு யாராவது இது பற்றிக் கூறியிருக்கின்றார்களா என்று ஆராய்ந்ததில் நம்மிடையே எழுந்தருளுபவர் அறிஞர் திருமூலர். எனவே, இப்போது அறிஞர் திருமூலர் கூறுவதையும் நினைவு கூர்வோம். அறிஞர் திருமூலர் அறிவினரைச் சேர்ந்து எவ்வகையிலெல்லாம் இனிதை அனுபவிக்க முடியும் என்று கூறுவதைக் காண்போம்.

    FFC-71-தெளிவு குருவின்- to post on 4-4-15

    இக்கவியில் திருமூலர் குருவைச் சேர்தல் தெளிவு என்கிறாரே! ஆனால் அவ்வையார் அறிவினரைச் சேர்தல் இனிதிலும் இனிது என்கின்றாரே என ஐயம் எழலாம். இந்த இரண்டு மகான்களின் கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய கடமை நமக்குள்ளது. அவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கும்போது. இரண்டு ஐயங்கள் எழலாம்.

    1) அறிவினரும் குருவும் ஒரே தன்மையானவரா? அதாவது ஒரே ஆளுமையுடையவரா?

    2) தெளிவும், இனிதினும் இனிதும் ஒன்றா?

    அறிவுடையோர், குரு ஆகிய இருவரும் ஒரே இனத்தவரா, அதாவது ஒரே தன்மையானவரா என சற்று விரிவாகப் பார்ப்போம்.

    அவ்வையார் மூன்றாவது இனிதாக அறிவினரைச் சேர்தல் என்கிறார். நான்காவது இனிதாக அறிவுடையோரைக் கனவிலும் நனவிலும் காண்பது தானே என்று ஆச்சரியத்துடன் நம்மிடமே வினவுகிறார். நாம்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். நாம் சொல்லாமல் வேறு யார் பதில் சொல்ல முடியும்? பயனாளியைத் தவிர வேறு யார் உண்மையைச் சொல்ல முடியும்?

    அறிவினர் என்பவர் யார்? அறிவுடையவரா? மனிதன் என்றாலே எல்லோரிடமேதான் அறிவு உள்ளது. அப்படியானால் எல்லோருமே அறிவினரா? இருக்க முடியாது. அறிவை அறிந்தவர், அறிவினர். ‘அறிவு’ மற்றும் ‘இனம்’ என்கின்ற இரு சொற்களும் சேர்ந்து வந்ததுதான் அறிவினர் என்கின்ற சொல். இனம் என்றால் பல வகைகளை உள்ளடக்கியப் பெரும் பிரிவு என்று பொருள். அறிவு இனர் என்றால் அறிவின் இருப்பிடம், இயக்கம், பூரணம், சிறப்பு, முழுமை ஆகியவைகளை அறிந்தவர் அறிவினர் ஆவார். அறிவை விட பெரும் பிரிவு வேறு ஏது? எனவே இனம் என்கின்ற சொல்லின் பொருளான ‘பல வகைகளை உள்ளடக்கியப் பெரும் பிரிவாகிய’ அறிவை அறிந்தவர் அறிவினர். அந்த அறிவினரைச் சோ்தல் மூன்றாவது இனிதாகக் கூறுகிறார்.

    நான்காவது இனிதைக் கூறும்போது, ‘அறிவுடையோரைக் கனவிலும் நனைவிலும் காண்பது தானே’ என்கிறார். அங்கே அறிவினர் என்கிறார். இங்கே அறிவுடையோர் என்கிறார். இவர் வேறா? அறிவினர்தான் அறிவுடையோர். எல்லோருக்கும் ஆறாம் அறிவிருந்தும், அது புலனளவிலே மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மாறாக புலன்களைக் கடந்து, அறிவு நிலையிலே அறிவை செயல்பட வைத்துக் கொண்டிருப்பவர்களே அறிவுடையராவார். புலன்களுக்கும் அப்பாலும் அறிவை செயல்படுத்துபவர்களே அறிவை உடையவர்களாகக் கருத முடியும் என்பதால் அறிவுடையோர் என்கிறார், அறிவினர் மற்றும் அறிவுடையோர் ஆகிய இருவருமே ஒருவா்தான்.

    திருமூலர் கூறுகின்ற குரு என்பவர் யார்? குரு என்கின்ற சொல்லுக்கு ஆசிரியர், ஆசான், முன்னுதாரணமாக இருப்பவர் என்று பெயர். ஆசிரியர் என்பவர் எதற்காகத் தேவைப்படுகிறார்? அறிந்து கொள்ள வேண்டியதை அறியாமல், அறியாமையில் இருக்கும் போது தேவைப்படுகிறார். எனவே குரு என்பவர் அறியாமையைப் போக்குபவர். மேலும் பண்டைய ஆன்மீக நூல்கள் குருவைப்பற்றிக் கூறுவதனைக் கவனத்தில் கொள்வோம். ‘குரு’ என்கின்ற சொல்லில் கு – ரு என்கின்ற இரண்டு எழுத்துக்கள் உள்ளன. ‘கு’ என்கின்ற சொல் அறியாமை அல்லது ஞானமடையாத அஞ்ஞான நிலையைக் குறிக்கின்றது. ‘ரு’ என்கின்ற எழுத்து, அருள் அல்லது கருணை என்கின்ற சொல்லில் வரும் இரண்டாவது எழுத்து, ஆகவே ஒருவரின் அறியாமையை எவர் ஒருவர் தனது அருளால் போக்குகின்றாரோ அவரே குரு எனப் போற்றப்படுவர்.

    மனிதனின் அடிப்படைத்தன்மையை, அதாவது சுயத்தை தெரிந்து கொள்ளாது இருக்கும் நிலையை நீக்கி, அருள்பவா் ஆன்மீகக் குருவாவார். அதாவது அறிவுநிலையில் குன்றியவரை, தனது அருளால் அறிவுநிலையில் உயர்த்துபவரை, ‘குன்றியதிலிருந்து’ என்கின்ற சொல்லிருந்து முதல் எழுத்தாகிய ‘கு’ வை எடுத்துக் கொண்டும், அருள் என்கின்ற சொல்லில் உள்ள ‘ரு’ என்கின்ற இரண்டாவது எழுத்தையும் எடுத்துக்கொண்டு ஒரே சொல்லாக்கியது தான் ‘குரு’ என்கின்ற காரணப் பெயர். குரு என்பவருக்கு விளக்கம் பார்த்தோம். குருவும் அவ்வையார் கூறும் அறிவினா்/அறிவுடையோரும் ஒருவரா என அறிய வேண்டும். குரு என்பவர் அறியாமையை நீக்குகிறார். அறிவினரோடு சோ்வதாலும் அறியாமை நீங்குகின்றது. எனவே திருமூலர் கூறும் குருவும் அவ்வையார் கூறும் அறிவினா்/அறிவுடையோரும் ஒரே தன்மையைக் கொண்டவரே (same personlity). ஆகவே முதல் ஐயத்திற்கு விளக்கம் கண்டாகிவிட்டது. இரண்டாவது ஐயமான ‘இனிதினும் இனிதும்’, ‘தெளிவும்’ ஒன்றா என்கின்ற ஐயத்தைப் போக்கிக் கொண்டால் திருமூலர் கூறும் நான்கு வழிகளில் எவ்வாறு தெளிவு கிடைக்கின்றது என அறிவோம்.
    தெளிவு என்பது அறிவு மேம்பட உதவும். அறிவை விசாலமடையச் செய்யும். அறிவுக்கு விளக்கம் கிடைக்கும். தெளிவு என்பது அறிதல், விளக்கமுறல். அறிவு தெளிந்தால்தான் நல்லறிவாக இருக்கும். தெளிந்த அறிவு பாவங்களைச் (தீயவைகளைச்) செய்யாது. எனவே சமுதாயத்தை, ‘தெளிந்த நல்லறிவு வேண்டும்’, என இறைவனை வேண்டச் சொல்கிறார் மகாகவி பாரதியார் ஒரு பாடலில்.

    தெளிவில்லாமல், பல பிறவிகளாக இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அறிவிற்கு ஒளி கிடைத்து அது அறிவொளியாகிவிட்டால், அது அவ்வையார் கூறும் இனிதினும் இனிதாகத்தானே இருக்க வேண்டும். திருமூலர் கூறும் முதல் வழி என்ன?

    1) தெளிவு குருவின் திருமேனி காண்டல்:
    இந்த வரி கூறுவதென்ன? குருவினுடைய திருமேனியைக் காண்பது தெளிவைக் கொடுக்கும் என்கிறார் அறிஞர் திருமூலர். இது எப்படி சாத்தியமாகின்றது? தெளிவு அறிவிற்குரியது. அப்படியிருக்கும்போது, அறிவிற்குரியது எப்படி திருமேனியைக் கண்டால் ஏற்படுகின்றது? அது அவருடைய அனுபவமோ?! அது அவருடைய அனுபவமாக இருந்தாலும், அது எல்லோருக்கும் பொதுவானது என்பதால்தான் அதனை பாடல் வாயிலாக சமுதாயம் பயன்பெறுவதற்காகக் கூறியுள்ளார். திருமூலர் வாழ்ந்தது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், அன்று சொன்னதை இன்று, அதனைப் பயன் பெறும் வகையில் நாம் சிந்திக்கவில்லையா? பண்டைக் காலத்தில் குருகுலக் கல்வி முறையிலே, குருவின் நடை, உடை, பாவனையிலிருந்தும் கல்வியைக் கற்றுக் கொண்டனர்.

    குரு என்பவர் அகம் தூய்மையானவர். அகத்தினை உணர்ந்தவர். எனவே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதால், குருவினது பார்வை என்பது அருள் பார்வை. அகத்தில் உள்ளதைத்தான் முகமும், உடலும் எடுத்துக் காட்டும். மேலும் உடலுக்குள்ளே இருக்கும் தூய்மையான அகம், முகம், உடல் மூலம் பிரதிபலிக்கும். நாம் பார்ப்பது அவரது உடலை என்றாலும் அவர்கண்களும் எண்ணமும் நம்மீது அருளைப் பாய்ச்சுமல்லவா? அந்த புனித நிகழ்வால் சீடனின் தெளிவில்லாத அறிவு தெளிவு பெருகின்றது. எனவே குருவின் திருமேனி காண்டல் தெளிவைத் தரும் என்கிறார் திருமூலர்.

    2) தெளிவு குருவின் திருநாமம் செப்பல்:

    இது எவ்வாறு சாத்தியமாகின்றது. திரு நாமம் என்பது குருவினுடைய பெயர். குருவின் பெயர் அவரது உடலைக் குறிக்கின்றதா? அல்லது அவரது அறிவைக் குறிக்கின்றதா? குருவின் பெயர் அவரது அறிவாற்றலைக் குறிக்கின்றது. அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டுகின்றவர் குருவாக உள்ளதால் அவரது அறிவாற்றல் முழுமை அடைந்துவிடுகின்றது. அவரது அறிவின் முழுமையைச் சொல்வதென்றால் அது ஒன்றா, இரண்டா? ஆனால் அவ்வளவையும் ஒரு சொல்லால் சொல்வது எளிது. எனவே குருவின் பெயர் என்பது அவரது அறிவின் முழுமையெல்லாம் ஒன்றடக்கிய சுருக்கிய புனிதச் சொல்(abbreviated divine word). மேலும் குருவின் பெயர் மந்திரம் போன்றது. குருவின் பெயர்கள் நாமவளி போன்றது.

    நாமவளி என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் பெயர் வரிசையாகும்(string of names of a deity for chanting). அதுபோல் குருவினுடைய பூரணத்துவத்தை அறிந்து பயனடையும் சீடன், அவரை வெவ்வேறு பெயா்களால் அழைத்து இன்பம் காண்பான். இது குருவிற்காக செய்யப்படுவதில்லை இது, சீடன் பயன்பெற வேண்டி இயற்கையில் அமைந்துள்ள யுக்தி என்றே சொல்லலாம். ஆகவே குருவின் பெயரைச் சொல்லும் போது அவருடைய அறிவின் முழுமை அவன் மனக் கண்முன்னே வந்து நிற்கும். அந்நிலை உருவானால் மெல்ல, மெல்ல சீடனின் அறிவினில் ஞானத் தெளிவு ஏற்படத்தானே செய்யும். இதனைத்தான் திருமூலர் “தெளிவு குருவின் திருநாமம் செப்பல்” என்கிறார்.
    அடுத்ததாக திருமூலர் கூறும் மூன்றாவது வழிக்குள் செல்வோம்.

    அடுத்த விருந்தில்  தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல், தெளிவு குருஉரு சிந்தித்தல் ஆகிய இரண்டைப்பற்றியும் அறிவோம். தொடரும்.

    Loading