இன்றைய விருந்து

  • C246-எல்லாப் புகழும் இறைக்கே! — 6/?

    வாழ்க மனித அறிவு              வளர்க மனித அறிவு

    அ.வி. C246

    23-11-2016-புதன்

    ‘எல்லாப்புகழும் இறைக்கே’ என்கின்ற தலைப்பில் சிந்தித்து வருகிறோம். இதுவரை அறிந்து கொண்டவை:

     பேரானந்தத்தின் திறவுகோல்கள் எவை,
     இயற்கையின் இரகசியம் எது
     அதனை அறிய வேண்டிய அவசியம்,
     திருவள்ளுவர் ஏன் எந்தப்பொருளானும். அதன் உண்மைப் பொருளை அறிய வேண்டும் என்று கூறுகிறார்
     இன்பத்தின் அடிப்படை உண்மை.
     ‘அளவு, முறை’ என்கின்ற இன்பம் துய்த்தலின் சாம்யம்.
     ‘எவ்வாறு வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது சரி.

    பொருள் மெய்ப்பொருள் பற்றி திருவள்ளுவா் 2044 வருடங்களுக்கு முன்னர் கூறியுள்ளதை, திருவள்ளுரை மானசீக குருவாக அமையப்பெற்ற வேதாத்திரி மகரிஷி அவர்கள் மிக எளிமையாக்கி தெளிவு படுத்தியிருப்பதை சிந்திக்க இருக்கிறோம். மகரிஷி அவர்கள் நிகழ்ச்சியும் – பொருளும் என்கின்ற தலைப்பில் அருளியுள்ள கவியினை ஆராய்வோம்.

    FFC-142-நிகழ்ச்சியும் பெ்ாருளும்.

    இப்பாடலின் பொருள் என்ன?

    1) இல்லாததே இருப்பன — இல்லாமல் இருக்கின்ற அரூபமே இருக்கின்றது. ஏனெனில் அது ஆற்றலாக இருப்பதால் அது அரூபமாக உள்ளது.. ஆனால் எல்லாத் தோற்றங்களாக தன்மாற்றம் அடைந்துள்ளது. அது என்றும் நிரந்தரமானது.

    2) இருப்பன இல்லாது போம். – தோற்றமுள்ளது இல்லாது போய்விடும். மாற்றமே நிரந்தரமானது. மனிதன் முதற்கொண்டு எல்லாமே மாற்றத்திற்குரியது. ஆண்டியும் சரி அரசனாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் முடிவு என்பதுண்டு. இல்லாமல் ஒருநாள் போய்விடுவர்.

    3) நில்லாதவை நிகழ்ச்சியாம் – நில்லாதவை என்றால் என்ன பொருள்? தோற்றங்களெல்லாம் அணுக்களால் ஆனது என்பது தெரிந்ததே. அணுக்கள் யாவும் நிற்காமல் சுழன்று கொண்டேதான் இருக்கின்றது. அவை நிற்பதில்லை. . நின்றால் அது அணுவில்லை. அது வெளியாகிவிடும். அவ்வாறு நிற்காமல் இருப்பதனை நிகழ்ச்சி என்கிறார் ஒருமை விஞ்ஞானம் தந்துள்ள மகரிஷி அவர்கள்.

    4) நின்ற மிச்சமே பொருள் — இருக்கத்தால் நொறுங்கி சுழல ஆரம்பித்த துகளின் சுழற்சி நின்று விட்டால் வெளி. அதுவே பொருள் என்கிறார்.. இந்த வெளிதான் நிரந்தரமானது. அதற்கும் ஆதியும் இல்லை. அந்தமும் இல்லை. எனவே வெளி அனாதை. எனவே தான் இறையை அனாதி என்கின்றனர் மெய்ஞ்ஞானிகள்.

    மேலும், இது பற்றி, இணையதள ஆசிரியர் எழுதியுள்ள ‘நான் யார்?’ என்கின்ற நூலில் இறைவன் ஏன் மெய்ப்பொருள் என அழைக்கப்படுகிறான்” என்கின்ற பத்தாவது அத்தியாயத்தில் விரிவாக அறியலாம்.

    ‘ஒன்றே பலவாகியது’ என்கின்ற உண்மையினை, விஞ்ஞானத்தின் துணை கொண்டு, சுத்த அத்வைத விஞ்ஞானமாக்கியுள்ளது (Pure Advaidhic Science) திருவேதாத்திரியம். திருவள்ளுவர் ‘புகழ்’ என்கின்ற அதிகாரத்தை சேர்த்து, அதிலுள்ள பத்து குறட்பாக்களின் வழியாக உயர்புகழ் பற்றி கூறியுள்ளார். 233 வது குறளைக் கவனிப்போம்.

    “ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
    பொன்றாது நிற்பதுஒன்று இல்”

    உயர்ந்த புகழைவிட, உலகத்தில் ஒப்பற்ற வேறு ஒரு பொருள் அழியாமல் நிலைத்து நிற்க வல்லது வேறொன்றும் இல்லை என்கிறார். இதற்குச் சான்று திருவள்ளுவரே ஆகும். உலகம் இருக்கும் வரை அவர் தந்த திருக்குறள் வழியாக அவரது உயர்ந்த புகழ் நிலைத்து நிற்கும். அதே போன்று அவருக்குப் பின் 19 நூற்றாண்டுகள் கழித்து அவதரித்த அவரது சீடரும் நமது குருதேவருமான வேதாத்திரி மகரிஷியின் உயர்ந்த புகழ் அவர் அருளியுள்ள வேதாத்திரிய அறிவின் ஒளிவிளக்கு வழியாக இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். அத்தகைய குருபிரான், நாமும் அந்நிலையை எய்த புகழ், உயர்புகழ் என இரண்டாகப் பிரித்து மனிதனுக்கு உயர்புகழ் அவசியம் எனக் கருதி தினசரி சங்கல்பங்களில் ஒன்றாகச் சேர்த்துள்ளார்.

    ஒன்றே பலவாகியது என்கின்ற உண்மை தெரிவிப்பது யாதெனில், ஆதியில் இருந்த ஒன்றே நாம் காணும் எல்லாத் தோற்றங்களாகவும், எல்லா உயிர்களாகவும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரணமாகவும் உள்ளது. அப்படி இருக்கும் போது, ஆதியில் இருந்த அந்த ஒன்றே தான் நாம் எல்லோருமாக உள்ளோம். ஆகவே மனிதன் செய்யும் செயல்களுக்காக (நிகழ்ச்சிகள்) வரும் புகழ் யாரைச் சார்ந்ததாக இருக்க முடியும்?
    இந்த கோணத்தில் சிந்தித்தால் புகழ் யாருக்குரியது என்று தெரிய வரும். ஆதியில் இருந்த ஒன்றேயாகிய இறைக்கே உரியது எனத் தெளிவாகின்றது. அப்படி இருக்கும் அந்த புகழுக்கு மனிதன் சொந்தம் கொண்டாடுவது எவ்வாறு பொருந்தும். எவ்வாறு நியாயமாக இருக்க முடியும்?

    மனிதனின் நற்செயல்களுக்காக வரும் விளைவாக புகழாக இருக்கும்போது, புகழ், எவ்வாறு இறைக்குரியதாகும் என ஐயம் எழலாம்.  “செயலிலே விளைவாக வருபவன் இறைவன்” என்கின்றபோது மனிதனின் நற்செயல்களுக்கு விளைவாக வரும் புகழ் யாருடையதாக இருக்கும்?” இறைவனுடையதாகத்தான் இருக்கும். இதனை உறுதிபடுத்துகின்றது ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்கின்ற புனித வாக்கும்.

    இறையின் திரு விளையாடலில் மனிதன் ஒரு கருவிதானே தவிர அவனே கா்தா இல்லை.” என்கின்றனர் இறையை சரணாகதி தத்துவத்தின் வாயிலாக உணர்ந்த மெய்ஞ்ஞானிகள். ஒன்றே பலவாகியது என்கின்ற சுத்த அத்வைத தத்துவத்தின்படியும் இறைதான் எல்லாமாகவும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரணமாகவும் உள்ளது என்கின்ற போது மனிதன் செய்யும் நற்செயல்களின் பலனான புகழும் இறைக்குத் தானே சொந்தமாக இருக்க முடியும். ‘அப்படியில்லை மனிதனுக்குத் தான் புகழ் உரித்தானது’ என்றால் மனிதன் இறையிடமிருந்து தன்னை பிரித்துக் கொள்வதாகிவிடும்.
    மனிதன் இறைக்குரிய புகழை தனது என்று சொன்னால் என்ன ஆகிவிடப் போகின்றது? இறை என்ன கோபித்துக் கொள்ளுமா? இறையின் மகன் தானே மனிதன். அதனால் ஏன் பரமபிதாவாகிய இறையின் புகழை தனது என்று சொல்வதானால் என்ன தவறு? இது போன்று ஐயங்கள் மனித மனங்களில் இருக்கும், எழும்.

    அத்வைதியாக வேண்டிய பயிற்சியில், இறைக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள தன்முனைப்புத் திரையை நீ்க்க வேண்டியது கடைசி நிலை. “தன்முனைப்பு கரைந்துபோம். காணும் தெய்வம்” என்று வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதனை நினைவில் கொள்ள வேண்டும். அத்வைதியாவதற்கு மட்டுமே தன்முனைப்பை அகற்ற வேண்டும் என்பதில்லை. தன்முனைப்பு (Ego—ஆணவம்) எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேராக இருப்பதால் வாழ்க்கையில் துன்பமிலா இன்ப வாழ்வு வாழ்வதற்கு தன்முனைப்பை அகற்றியேத் தீர வேண்டும். தன்முனைப்பு என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கின்ற அமைதி வெடிகுண்டு (Silent Bomb.) இந்த தன்முனைப்பாகிய அமைதி வெடி குண்டு அன்றாட வாழ்வில் கொள்ள வேண்டிய மனித உறவுகளில் வெடிப்பதுதான் சினம், வெறுப்பு, பொறாமை, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகியவைகளாகும். இவற்றின் அளவு அதிகமாகும் போது பஞ்சமகாபாதகங்களாக உருவெடுக்கின்றன.

    இறையினுடைய புகழை மனிதன் தனதாக்கிக்கொள்வதால் என்ன வந்து விடப்போகின்றது? என ஐயம் எழலாம். இறையே நானாகவும் எல்லாமாகவும் இருக்கின்றது எனக் கருத்தியலாக அறிந்ததை செயல்முறையில் உறுதி படுத்தும் பெருமையை விடவா இப்புவியில் வேறு புகழ் உள்ளது? ஐயனின் ஆட்சியின்றி ஆளுகின்ற ஆட்சியில் மனிதன் ஒரு கருவி மட்டும்தான். எனவே மனிதன் புகழுக்கு ஆசைப்படுவது ஒருவித மாயை. எனவேதான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் காந்த தத்துவப்பாடலில் மனத்தூய்மை என்கின்ற தலைப்பில் அருளியுள்ள கவியினை நினைவில் கொள்வோம்.

    FFC-142- போருள் புகழ் செல்வாக்கு புலனின்பம்

    28-06-1990 அன்று கலிபோர்னியா மாநிலத்தில் யக்காவேலி நகரத்தின் வன ஆசிரமத்தில் இருந்தபோது வேதாத்திரி மகரிஷி அவர்கள் எழுதியவை காந்தத் தத்துவப் பாடல்கள். பன்னிரண்டு பாடல்கள் இயற்றியுள்ளார். பன்னிரன்டு பாடல்களுக்கும் மகரிஷி அவர்களே விரிவுரையையும் எழுதியுள்ளார். இது போன்று மகரிஷி அவர்கள் உலக சமாதான நூலிலும் பாடல்களுக்கு அவரே விளக்க உரை எழுதியுள்ளார். மற்றுமொரு நூலான “அருட்பேராற்றலின் அன்புக் குரல்” எனும் நூலிலும் பாடல்களுக்கு அவரே விரிவுரை எழுதியுள்ளார்.

    உலக சமாதானம் எனும் நூலில் பாடல்களுக்கு தானே விளக்கவுரை எழுதியதற்கானக் காரணத்தை முகவுரையில் குறிப்பிடுகின்றார். பொதுவாக மெய்ஞானிகள் கவிகள் அருளியிருக்கிறார்கள். ஆனால் இது வரை கவிகள் அருளியவரே அதற்கான விளக்கவுரை எழுதியதில்லை என்றே தெரிகின்றது. பல நூற்றாண்டுகள் சென்ற பிறகுதான், பிறரால் விளக்கவுரை எழுதப்படுகின்றது. இதில் அந்த மெய்ஞ்ஞானி எந்த உள்நோக்கத்துடன் அந்தக்கவியினை எழுதினாரோ அந்த உள் நோக்கம் முழுவதும் வெளிப்பட்டுள்ளதா என்றால் சந்தேகமே. ஆனால் மகரிஷி அவர்கள் மட்டும் உலக சமாதானப் பாடல்களுக்கும், காந்தத் தத்துவப் பாடல்களுக்கும், அருட்பேராற்றலின் பாடல்களுக்கும் விளக்கவுரையும் அருளியுள்ளார்.

    உலக சமாதானம் எனும் நூலுக்கு விரிவுரை எழுதும் போது தானே விளக்கவுரை எழுதியதற்கானக் காரணத்தையும் குறிப்பிட்டுள்ளார். பாடல்களை தெளிவாக விளங்கிக் கொள்ளவும், எந்த உள்நோக்கத்திலிருந்து அந்தக் கவிகள் உதித்தன என்பதைத் தெளிவு படுத்தவும் விளக்கவுரை கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் மகரிஷி அவா்கள். காந்தத் தத்துவ நூலில் முகவுரையில் மகரிஷி அவர்கள் குறிப்பிடுவதை நினைவு கூர்வோம். “எந்த ஒரு உண்மையை நீங்கள் உணர்ந்தால் அதன் மூலம் இந்தப் பேரியக்க மண்டல இரகசியங்கள் அத்தனையும் அறிய முடியுமோ, அந்த அறிவை உங்களுக்கு இப்போது கொடுக்கப் போகிறேன்.” எனக் கூறியுள்ளார் மகரிஷி அவர்கள். எனவே இவ்வளவு முக்கியமான கவிகளுக்கும் அவரே விளக்கவுரை நல்கியுள்ளார்.

    காந்தத் தத்துவப்பாடல்கள் பன்னிரண்டில் முதல் பாடலின் தலைப்பு ‘இறையுணர்வில் எழும் பேரின்பம்’ என்பது. அதற்கு அடுத்ததாக இடம் பெற்றிருக்கும் கவியின் தலைப்பு ‘மனத்தூய்மை‘ என்பது. ஆகவே பாடலின் வரிசை என்ன உணர்த்துகின்றது? காந்த தத்துவத்தை அறிய அறிய பேரியக்க மண்டல இரகசியங்கள் அறியப்படுகின்றன. அதாவது இறையினுடைய பெருமைகளையும் புகழையும் அறிய முடிகின்றது. எனவே இது பேரின்பம் தானே! அடுத்ததாக பேரின்ப பேற்றினை அடைய மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டிய தகுதிகளைக்கூறும் ‘மனத்தூய்மை‘ என்கின்ற தலைப்பையுடைய பாடலாக இருக்கின்றது. அந்த மனத்தூய்மை என்கின்ற பாடலில் வரும் முதல் வரியினிலே ‘பொருள் புகழ் செல்வாக்கு புலன் இன்பம் நான்கிலே’ என ஆரம்பித்து அடுத்த வரிகளில்
    ‘புகுந்தழுந்தி மனித மனம் புண்ணாய் வருந்துவோர்
    இருள் நீங்கி இன்பமுற என் விளக்கம் கூறுவேன்‘ என முடிகின்றது.

    இப்பாடலுக்கு மகரிஷி அவர்களே வழங்கியுள்ள விளக்கவுரையை விரிவாக அவர் எழுதியுள்ள காந்த தத்துவம் என்கின்ற நூலினை படித்து முழுவதுமாக விளங்கிக் கொள்வது அவசியமாகும். இருப்பினும் இங்கே சுருக்கமாக அவ்விரிவுரையை அறிந்து கொள்வோம். பிறவியின் நோக்கம் அறியாததால், அறிவை இறையோடு இணைத்து விழிப்போடு அறநெறியை பழகிக் கொள்வதில்லை, பல் பிறவிகளாக கருத்தொடராக வந்துள்ள விலங்கினப் பதிவுகளாகிய பிறர் வளம் பறித்துண்டு வாழும் தன்மை பிறரிடமிருந்து பொருள், புகழ், அதிகாரம்(செல்வாக்கு) புலனின்பம், இவற்றினை கவர்ந்து கொள்ளும் ஆசையாகிப் பெருகுகின்றது.

    ஆசை பெருகுவதால்,

    1) இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்கின்ற மனநிலை பேராசையாகின்றது.
    2) அதற்கேற்ற செயல்களால் உடல் கெடுகின்றது. உள்ளம் கெடுகின்றது. மனித உறவில் இனிமை கெடுகின்றது.
    3) தன்னுடைய செயல்களைத் தொடரவும் முடியாமலும், நிறுத்தவும் முடியாமலும் தேக்கம் கொண்டு
    4) மனம் புண்ணாகி வருந்திக் கொண்டிருக்கின்றனர் மனிதர்கள் என்கிறார் மகரிஷி அவர்கள்.
    அவ்வாறு மனம் புண்பட்டு அமைதியிழந்து தவிப்போர்க்கு தனது அனுவங்களைக் கொண்ட விளக்கங்ளைக் கூறுவதாகக் கூறுகிறார் அப்பாடலின் விரிவுரையில்.

    இன்றைய சிந்தனையின் சுருக்கம்
    1) பொருள், நிகழ்ச்சி பற்றி அறியப்பட்டது.
    2) தன்முனைப்பு என்பது அமைதி வெடிகுண்டு (Silent Bomb.)
    3) பிறர் வளம் பறித்துண்டு வாழும் விலங்கினப்பண்பே பிறரிடமிருந்து பொருள், புகழ், அதிகாரம்(செல்வாக்கு) புலனின்பம், இவற்றினை கவர்ந்து கொள்ளும் ஆசையாகிப் பெருகுகின்றது.

    இதன் தொடர்ச்சியினை அடுத்த அறிவிற்கு விருந்தில்  சிந்திப்போம்.

    Loading

  • C245-எல்லாப் புகழும் இறைக்கே!  — 5/?

    வாழ்க மனித அறிவு                                                                                           வளர்க மனித அறிவு

    அ.வி. C245

                                                                           20-11-2016– ஞாயிறு      

     

    FFC-62vethathiri_mararishi

     எல்லாப்புகழும் இறைக்கே என்பதனை சிந்தித்து வருகிறோம்.avan_nee_ondraai

         அவனில்தான் நீ! உன்னில் அவன்!

                 அவன்யார்? நீயார்? பிரிவேது?

                .. …. …. …. …. …. …. …… ….. ….. ….

                .. …. …. …. …. …. …. …… ….. ….. ….

               அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்,

                அறிவு முழுமை அது முக்தி.”   

    என்கின்ற வேதாத்திரி மகரிஷி அவர்களின் அருள் மொழியின்படி “அவனில்தான் நீ! உன்னில் அவன்! அவன்யார்? நீயார்? பிரிவேது? என்றாகிவிட்ட பிறகு, எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறையில் நடக்கின்ற எல்லாப்புகழ் தருகின்ற நிகழ்வுகளுக்கும்/நிகழ்ச்சிகளுக்கும் இறைதானே காரணமாக இருக்க முடியும்.  என்று சிந்தித்து வருகிறோம்.

         இதுவரை 

    •  பேரானந்தத்தின் திறவுகோல்கள் எவை,
    • மகரிஷி அவர்கள் பேரானந்தத்தை எவ்வாறு நான்கு படிகளில் எய்தினார்,
    • வேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண், இயற்கையின் இரகசியம் எது என்றும்,
    • அதனை அறிய வேண்டிய அவசியத்தையும், 
    • திருவள்ளுவர் ஏன் எந்தப்பொருளானும். அதன் உண்மைப் பொருளை அறிய வேண்டும் என்று கூறுகிறார்,

     என்று அறிந்து கொண்டோம்.

        எந்த ஒரு பொருளானாலும், இயக்கமானாலும், தூலம், சூக்குமம், காரணம் ஆகிய மூன்றடுக்குகளைக் கொண்டிருப்பதால்,  அதில் இரகசியமான சூக்குமம், காரண நிலைகைள  அறிவதே அறிவு,  என்பதனால்  மனிதன் விரும்புகின்ற ‘இன்பத்தையே’ நம் சிந்தனைக்கு எடுத்துக் கொண்டு  ‘இன்பம் துய்த்தலில்’  உள்ள சூக்குமத்தையும் காரணத்தையும் அறிவோம்.

         இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்கின்றது வேதம்.  லட்டு சாப்பிடுகிறோம்.  லட்டிலுள்ள இனிப்பு இன்பத்தைத் தருகின்றது.  அந்த இன்பம்   எதில் இருக்கின்றது என்றால் புறப்பொருளான லட்டில் உள்ளது என்போம்.  ஆனால் வேதம், இன்பம் புறப்பொருளில் இல்லை என்பதால் லட்டு அருந்துவதால் வரும் இன்பம் லட்டில் இல்லை என்றாகின்றது. வேதாத்திரியமும் அவ்வாறே இன்பம் பற்றி வேதம் கூறும் உண்மையையே கூறுகின்றது.  ஆனால் இன்பம் – துய்த்தல் நிகழ்ச்சியில் உள்ள சூக்குமம், காரண நிலைகளை விளக்கி இன்பம் புறப்பொருட்களில் இல்லை என்கின்ற உண்மையைக் கூறுகின்றது. 

     அதாவது  லட்டு உண்பதில் எதனை இன்பமாக  அறிவு உணர்கின்றது என்று வேதாத்திரியம்கூறுகின்றது?

    லட்டு என்பது தூலமாக உள்ளது. அதில் கடலை மாவு, சர்க்கரை, நெய் ஆகியன உள்ளன.  இந்த மூன்றும் அணுக்களால் ஆனது.  அந்த அணுக்கள் இறைத்துகள்களைக் கொண்டது,  அதிலிருந்து வருவது காந்தம்.  லட்டிலிருந்து வரும் காந்த  அளவிற்கு, சீவகாந்தம் உயர்ந்து செலவாகி மாறி (conversion and consumption) இன்பமாக உணரப்படுகின்றது.  இன்பத்தின் இந்த காரண நிலையை உணர்த்தி இன்பம் என்பதில் உள்ள உட்பொருளை விளக்குகின்றது வேதாத்திரியம். 

       நாக்கு என்கின்ற புலனின் செல்கள் தாங்கும் அளவு வரை சீவகாந்தம் உயா்ந்தால் அது இன்பமாக இருக்கும்.  நாக்கு என்கின்ற புலனின் செல்கள் தாங்கும் அளவிற்கு மேல் சீவ காந்தம்  உயர்ந்தால் அது துன்பமாக இருக்கும் என்கின்றது.  எனவே இன்பமே துன்பமாக மாறுவதை அறிய முடிகின்றது.  அதனால்தான் இன்பம் துய்ப்பதில் பொருந்தா உணர்வான சலிப்பு ஏற்படுகின்றது.      

        இந்த உண்மையைக் கண்டுபிடித்ததால் இன்பம் துய்ப்பதில் ‘அளவும், முறையும்’ என்கின்ற சாம்யம் கிடைத்தது மனித குலத்திற்கு.  இது தத்துவமாக இல்லாமல், விஞ்ஞான அடிப்படையில் உள்ளது.  எனவே  ‘இன்பம் துய்த்தல்’ என்பதில் நம்முடைய சீவகாந்தத்தின் செலவே இன்பமாக உணரப்படுகின்றது.  ஆகவே இன்பம் தருகின்றது என்பதால்  இன்பத்தையே துய்த்துக் கொண்டிருக்க முடியாது.  ஏனெனில் நம்முடைய சீவ காந்தமேதான் செலவாகிக் கொண்டிருக்கின்றது.  சீவகாந்தம் அதிகம் செலவானால் அதன் இருப்பு குறைந்து விடும்.  உணவு உண்பதால் சீவகாந்த இருப்பு குறைகின்றது என்பதால் உணவே உட்கொள்ளக்கூடாதா என கேள்வி எழலாம்.  உடலுக்கு வேண்டிய சத்துப் பொருள் உணவின் மூலம்தான் கிடைக்கின்றது. எனவே போதுமான சத்து கிடைக்கும் அளவிற்கு  உணவு உண்டுதான் ஆக வேண்டும். அந்த உணவின் சுவையை உணர்வதற்காக  சீவகாந்தம் செலவாவது தவிர்க்கமுடியாது. அதனால்தான் அளவும், முறையும் காக்கப்பட வேண்டும் என்கின்ற சாம்யம் இயற்கை/இறை தந்துள்ளது.

       எனவே எந்த இயக்கத்திலும் புறமேன்மையை உணர்வதோடு மட்டுமல்லாது அதனுள்ளடங்கிய உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.  அதாவது இன்பம் துய்த்தல் என்கின்ற நிகழ்ச்சியில் புறமேன்மையான இன்பத்தை உணா்வதோடு, அதனுள்ளடங்கிய உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.  இந்த உண்மையினை அறிந்து கொண்டால்தான்  இன்பம் துய்த்தலில் பொறுப்புணர்ச்சி ஏற்படும்.   அளவு, முறை என்கின்ற சாம்யம் பின்பற்றப்படும்.  இல்லாவிடில் திருவள்ளுவர் கூறுவது போல் பிறவி துன்பப்பிறவியாகிவிடும். இன்பம் துய்த்தலிலுள்ள சூக்கும, காரண நிலைகளை அறிந்ததால் பிறர்க்கு தெரிவிக்கும் கவியான “இன்பம் துன்பம்” என்கின்ற கவி உருவாயிற்று.  அக்கவியினை நினைவு கூர்வோம்.

    இன்பம் துன்பம்

    இன்பம் துன்பம் என்பதென்ன? இவையிரண்டும்

      எங்கிருந்து தோன்றுகின்ற தென ஆராய்ந்தேன்;

    இன்பமே இயற்கையிலே எதிலும் என்றும்

      எங்கும் நிறைந்துள்ளது; அனு போகத்திற்கு

    இன்பத்தின் அளவுமுறை மாறும்போது,

      ஏற்படும்ஓர் பொருத்தமிலா உணர்ச்சியே தான்,

    இன்பத்தின் மறுபெயராம் துன்பமாயும்,

      இரண்டும் அறிவின் அலைகளாயும் கண்டேன்.

                                                                  …..   வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

        லட்டு மட்டுமல்ல, ஐாங்கிரி, குலோப்ஜாம், மைசூர்பாக்கு, அதிரசம் போன்ற எந்த இனிப்பு பதார்த்தங்களை எடுத்துக்  கொண்டாலும் புறத்தே பார்க்கும் போது அவைகள் வெவ்வேறாக உள்ளதாக தோன்றினாலும். அதற்கு காரணம் மட்டும் ஒன்றேதான். அதாவது அதில் உள்ள இனிப்பு மற்றும் சுவைக்கு காரணம், உண்பவரின் சீவகாந்தம் இனிப்பு பதார்த்தத்தில் இருந்து வரும் காந்த அலைகளின் அளவிற்கு உயர்ந்து, மாறி செலவாவதுதான்.

      உப்புமா சாப்பிடுகிறோம்.  உப்புமாவில் காரச் சுவைக்காக பச்சைமிளகாய் சேர்க்கப்படுகின்றது.  சாப்பிடும்போது பச்சை மிளகாயை கவனமாக அப்புறப்படுத்தி விட்டு  உப்புமாவை மட்டும் உண்கிறோம்.     தெரியாமல் பச்சை மிளகாய் வாய்க்குள் சென்று விட்டால் நாவிற்கு எரிச்சல் என்கின்ற பொருந்தா உணர்வு ஏற்படுகின்றது. உடனே நீர் அருந்துகிறோம்.  குழந்தைகளாக இருந்தால் சிறிது சர்க்கரையைக் கொடுத்து அந்த துன்ப உணர்விலிருந்து விடுபடச்செய்கிறோம்.  இதற்குக் காரணம் என்ன?

        உப்புமாவிற்கு காரச்சுவையை ஊட்டுவதற்கு போதுமான பச்சைமிளகாய் சேர்க்கப்படுகின்றது. பச்சைமிளகாயிலுள்ள காரச்சுவை (காந்தம்) உப்புமாவில் கலந்து போதுமான காரச்சுவையோடு உப்புமா இருக்கின்றது. அதனால் உப்புமாவை மட்டும் சாப்பிடும் போது  உப்புமாவில் கலந்துள்ள காரச்சுவை நாவிற்கு பொருத்தமாக இருந்து எரிச்சல் எடுப்பதில்லை.  ஆனால்  காரச்சுவையின் மூலமான பச்சைமிளகாயை நேரிடையாக வாய்க்குள் சென்றதால் பச்சைமிளகாயிலுள்ள காரம் அளவிற்கு(காந்தம்) சீவகாந்தம் திடீரென உயர்ந்ததால், நாவிலுள்ள அணுஅடுக்குகள் தாங்கும் அளவிற்கு மேல் சென்றதால் எரிச்சல் என்கின்ற துன்ப உணர்வு உண்டாயிற்று.

         வேதாத்திரிய மெய்ப்பொருள்-இறைஞான விளக்கம் தெளிவாகவும், சிறப்புடையதாகவும் அமைந்துள்ளது.  இதுவரை சித்தர்கள் வெட்டவெளியே தெய்வம் என கூறியிருந்தாலும், வேதாத்திரிய மெய்ப்பொருள் விளக்கம் வெட்டவெளிக்கு உள்ளடங்கியத் திறன்களையும், தரங்களையும் கூறுகின்றது.    மேன்மைக்கு காரணமான உள்ளடங்கியதைக் குறிக்கும் சொல் ‘உண்மை’ என்பதற்கிணங்க, மெய்ப்பொருளின் மேன்மைக்குக் காரணமான உள்ளடங்கிய திறன்களையும், தரங்களையும் கூறுவதால், மெய்ப்பொருள்-இறைஞானத்தை, மனவளக்கலைஞர்கள் அனுபவிக்க முடிகின்றது.

       ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது அறிஞரின்—இயற்கையின் விருப்ப – எண்ண-, வாழ்த்தாக உள்ளதால்  அதனை நிறைவேற்றுவதில் தெளிந்த ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாகும்.

        இந்த விருந்தை முடித்தவுடன்,  ஞானக்களஞ்சியம் (பகுதி இரண்டு) நூலினை எடுத்து, ‘மலர் வழியே விளங்கும் மறை பொருள் விளக்கம்-1982’ என்கின்ற 1649 வது பாடலை ஒரிருமுறை ரசித்துப்பாடி இன்புறவும்.  அறிவிற்கு சுத்தஅத்வைத விஞ்ஞானத் தெளிவு ஏற்படுவதற்கு நலம் பயக்கும்.

       மலரில் எத்தனை அணுக்கள் இருக்கும் என்று சொல்ல முடியுமா?  விஞ்ஞானத்தாலும் சொல்ல முடியாது.  எனவே மலரில் பல கோடி அணுக்கள்  இருப்பதாகக் கூறுகிறார்.  அந்த அணுக்கள் எல்லாம் மலராக ஆவதற்கு முன்னர் எங்கே இருந்தன? தனித்தனியாக தோற்றமில்லாமல் அந்தச் செடியில் இருந்திருக்கும்.  மலராகும் போது ஒழுங்காக(பண்பாய்க்கூடி) கூடி ஒரு நாடகத்தை நடத்தும் போது அவை மலராகக் காட்சி அளிக்கின்றன.   அரூபமான இறையே அணுக்களாகி, பல கோடி அணுக்கள் பண்பாய்க் கூடி தோற்றம் அளிக்கின்ற  நாடகத்தில் ஒரு கட்டம் மலருடைய தோற்றம்.

      ரோஜா, மல்லிகை, சம்பங்கி, சாமந்தி, மரிக்கொழுந்து எதுவானாலும் அவை புறத்தே வெவ்வாறகத் தோற்றமளித்தாலும், அவற்றிலிருந்து வரும்  வாசம் வெவ்வேறாக இருந்தாலும் வாசம் நுகர்வதற்கு  காரணமாக இருப்பது ஒரே நிகழ்ச்சிதான்.  அதாவது பூக்களிலிருந்து வரும் வாசமாகிய காந்த (அலைகளின்) அளவிற்கு நுகருபவரின் சீவகாந்தம் உயர்ந்து, மாறி, செலவாவதேதான் காரணம். அதிகமாக வாசத்தை நுகர்ந்தால் அதிகமான சீவகாந்தம் செலவாகும்.

       அதே போன்றுதான் மனிதன் என்கின்ற நிகழ்ச்சியும்.   அணுவின் கூட்டுப்பக்குவமாக உருவத்தை எடுத்துப் பிறக்கிறான்(ஆன்மா). அணுக்கள் பிரிந்து உருவத்தை இழந்து விடுகின்றது ஆன்மா.  அதாவது மறைகிறான்.  மனிதன் என்கின்ற பாத்திரம் முடிந்து விடுகின்றது.  அவ்வளவுதான் வாழ்க்கை.  மலர் மட்டும்நிகழ்ச்சி அல்ல.  மனிதனும் நிகழ்ச்சிதான். இதில் தன்முனைப்பிற்கு எங்கே இடமிருக்கின்றது?  புகழிற்கு எங்கே இடமிருக்கின்றது?  ஆனால் உயர்புகழிற்கு இடமும் இருக்கின்றது. தேவையும் இருக்கின்றது. அதனை  இனிவரும்  அறிவிற்கு விருந்தில்  விரிவாக பார்க்க உள்ளோம்.

         உலக மக்கள் 740 கோடி உருவங்களாக  புறத்தே  வேறுபட்டிருந்தாலும் உருவத்தின்(தூலம்) சூக்குமம், காரணம் நிலைகளில் ஒன்றாகத்தான் உள்ளோம்.  இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் உள்ள விஞ்ஞானம்.  இந்த மெய்யான விளக்கத்திற்காக வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவியினை நினைவு கூர்வோம்.

    மெய் விளக்கம்

    நானெனினும் நீஎனினும் நிறையறிவில் ஒன்றே

      நல்லுயிரில் வினைப்பதிவில் முன்பின்னாய் உள்ளோம்.

    ஊனுருவில் இன்பதுன்ப உணர்வுகளில் எல்லை

      உண்டாக்கி வரையறுத்து வேறுபடுகின்றோம்;

    ஏனெங்கே, எப்போது, எவ்வளவு, எவ்வாறு

     என்னும் வினாக்கள் ஊடே இழைந்து ஆழ்ந்து செல்ல

    வானறிவோம் உயிர்விளங்கும் வரை கடந்து நிற்கும்

      வழிதெரியும் வளம்பெறுவோம் வாழ்வு நிறைவாகும்.

          

                          — வேதாத்திரி மகரிஷி அவர்கள்.       

    இன்றைய விருந்தின் சுருக்கம்:

     1) இன்பம் புறப்பொருளில் இல்லை என்கின்ற வேதத்தின் கூற்று உண்மை என அறியப்பட்டது.             

    2) இன்பத்தின் அடிப்படை உண்மை அறியப்பட்டது. 

    3) ‘அளவு, முறை’ என்கின்ற இன்பம் துய்த்தலின் சாம்யம் கிடைத்தது.

    4) வேற்றுமையில் ஒற்றுமையில் உள்ள மெய்ஞான-விஞ்ஞானம் அறியப்பட்டது.

     

       அடுத்த அறிவிற்கு விருந்திற்காக  கூடுவோம்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                வளர்க அறிவுச் செல்வம்

     

    Loading

  • C244-எல்லாப் புகழும் இறைக்கே! –4/?

    வாழ்க மனித அறிவு                     வளர்க மனித அறிவு

    lotus                

    அ.வி. 1C244

    16-11-2016 –புதன்

    FFC-140- சுயமாஙய்ச் ச்ிந்தித்தே தெளிவாய்
    இயற்கையின்/இறையின் திட்டம் நிறைவேற, பொறுப்பையும் கடமையையும் உணர்ந்த பிறகு மகரிஷி அவர்கள் சீடர்களுக்கு கூறும் அறிவுரையைக் — Information, conformation, Transformation” கவனிக்க வேண்டும். அதாவது அவர் கூறுவதனை தகவலாக எடுத்துக் கொள்ளச் சொல்கிறார், “Doubt what I say’ என்பார். திருவள்ளுவர் அறிவுறுத்துவதுபோல் அந்த தகவல் சரிதானா, சரியில்லையா, அந்த தகவல் உண்மைதானா, என சீடர்களை உறுதிப்படுத்தச் சொல்கிறார். உறுதிப்படுத்திய பிறகு அவ்வாறு தன்னை மாற்றிக் கொள்ளச் சொல்கிறார். ஏன் இவ்வாறு சொல்கிறார்? வீடு கட்ட வேண்டும் என முடிவு செய்தாகிவிட்டது. அடுத்தது அதற்கான வரைபடத்தை(plan- Blue print) தயார் செய்து அரசிடம் approval வாங்கி வைத்துவிட்டால் போதாது. வீடு கட்டி முடிந்ததாகிவிடுமா? அந்த வரைபடம் போல் வீட்டைகட்டி அதில் குடியேற வேண்டும். அதுபோல் அவர் கூறும் தகவல்களை சரிபார்ப்பதோடு இருந்துவிடாமல் தகவல்களை சரிபார்த்த பிறகு தன்னிடம் மாற்றத்தைக் கொண்டுவந்தால்தான் பலன் ஏற்படும் என்கிறார். மாற்றத்தால்தான் பலன் ஏற்படும்.
    அவர் சிந்தித்து சொன்ன கருத்தை சீடரும் சிந்தித்தால் தனதாக்கிக் கொள்ள முடியும். அப்போதுதான் சீடரிடம் மாற்றம் வரும். ‘உடற்பயிற்சி செய்யச் சொல்கிறார். அதனால் உடற்பயிற்சி செய்கிறேன்’ என்றில்லாமல், ஏன் உடற்பயிற்சி செய்ய வேண்டும், உடற்பயிற்சி எவ்வாறு பயனளிக்கின்றது என்பதனை அறிந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
    எப்போதும் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். உண்மையை விளங்கிக் கொள்ள ஆர்வம் வேண்டும். ஏன் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்? மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிப்போம். இயற்கையின் இரகசியம் எது என்றும், அதனை அறிய வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைக்கிறார் மகரிஷி அவர்கள்.

    FFC-139-இயற்கையின் இரகசியம் எது

    மகரிஷியின் இந்த அறிவுரையை துணையாகக் கொண்டு நம் சிந்தனையைத் தொடர்வோம்.
    பேரியக்க மண்டலத்தில் இயக்கத்தை உற்று நோக்கினால், அது மூன்றடுக்கு இயக்க நிலைகளாக .இயங்கிக் கொண்டிருப்பதை அறியலாம். அவையாவன – தூலம், சூக்குமம், காரணம். தோற்றங்கள் என்றாலே அது தூல வடிவில் இருக்கும். வடிவம் இருந்தாலும் அந்த தூல வடிவமே அத்தோற்றத்தின் உண்மை நிலையாகாது. அதனால்தான் திருவள்ளுவர் எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருளின் மெய்ப்பொருளை(உண்மை நிலை) காண்பது அறிவு என்கிறார். அந்தத் தோற்றம் இயக்க நிலைதான். அந்த தோற்றத்தில் இரண்டு இரகசியங்கள் அடங்கியுள்ளன.
    . உதாரணத்திற்கு உடலை எடுத்துக் கொள்வோம். உடல் வடிவமுள்ளது. அந்த வடிவமே உடல் ஆகிவிடவில்லை. உடலே மனிதனாகிவிடமுடியாது, உடல் செல்களால் ஆனது. அந்த உடலுக்குள் உயிர் இருக்கின்றது. பஞ்ச பூதங்களில் முதல் பௌதீகப் பிரிவான விண் உடலில் சுழன்று ஓடிக்கொண்டிருக்கின்றது, அதுவே உயிர் எனப்படுகின்றது. நுண்ணியதாக இருப்பதால் அது நுண்ணுடல் எனப்படுகின்றது. உயிர் புலன்களுக்கும், கருவிகளுக்கும் எட்டாமல் சூக்கும நிலையில் உடல் முழுவதும் ஓடுவதால் இது சூக்கும உடல் எனப்படுகின்றது. சூக்கும உடலில் அமைந்துள்ள விண்களின் தற்சுழற்சியால் வெளியேறும் இறைத்துகள்களால் எழும் அலைகளால் அமைந்ததே சீவகாந்தக்களம். இது காரண உடல் எனப்படுகின்றது. உடல் என்பது தூலம், சூக்குமம், காரணம் ஆகிய மூன்றடுக்கு இயக்க நிலைகளாக உள்ளது.
    ஆகவே எந்த ஒரு இயக்கத்திலும் தூல நிலை புலன்களுக்கு தெரியும். ஆனால் சூக்குமமும், காரணமும் புலன்களுக்கு எட்டாது. இரகசியமாக இருக்கும். இந்த மூன்றும் தனித்தனியாக இயங்க முடியாது. எனவே இந்த மூன்றும் ஒன்றால் ஒன்று நிலை பெறுகின்றது, சிறப்புப் பெறுகின்றது. இந்த உண்மையை உணரும்போதுதான் மனிதனுக்கு இயற்கையின் தன்மையை அறிந்து, எந்த அளவுக்கு வாழ்க்கையைச் செம்மைப்படுத்த முடியும் என்கின்ற தெளிவு உண்டாகும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    இயற்கையின் இரகசியம் என்பதே சூக்குமம், காரணம் என்கின்ற இரண்டு நிலைகளுமாகும். இயற்கையின் இரகசியம் எந்த அளவிற்கு உணரப்படுகின்றதோ அந்த அளவுக்கு வாழ்வில் பொறுப்புணா்வு ஏற்படும் என்கிறார். அவ்வாறில்லாமல் தூலம் புலன்களுக்கு எட்டுவதால் அதன் மேன்மையிலேயே அறிவைச் செலுத்தி வந்தால் அது மயக்கத்திற்குத்தான் வழி வகுப்பதாகிவிடும் என்கிறார்.

    மனிதனுக்கும் பேரியக்க மண்டலத்திலுள்ள எல்லா சடப்பொருட்களுக்கும் உண்மை என்பதும் மேன்மை என்பதும் இயற்கையாக அமைந்துள்ள இயல்பான குணங்கள். மேன்மை புலன்களால் உணரமுடிவதால், அதனை மட்டும் அனுபவித்துவிட்டு உண்மையை அறியாமல் இருக்கக்கூடாது.
    ஆகவேதான் ‘நான் என்பது உடலல்ல, நான் என்பது, அறிவு’ என்கின்ற உண்மை தெளிவாகியதால்தான் ‘நான் யார் என்ற தத்துவமே நாமாக உள்ளோம்’ என்கின்ற உண்மை விளங்குகிறது. உலக சகோதரத்துவம் உண்மையாகின்றது. அதனால்தான் ஒவ்வொரு மனிதனும் உயிரறிவு பெறவேண்டும் என்கிறார். மகரிஷி அவர்கள்.
    மலரை எடுத்துக் கொள்வோம். மலர் தோற்றமுடையது. தோற்றம் மட்டுல்லாமல், அதற்கு வண்ணமும் உண்டு. வாசமும் உண்டு. தோற்றம் என்பது தூல நிலை. மலரின் சூக்கும நிலை என்ன? மலர் எதனால் ஆனதோ அதுதான் அதன் சூக்கும நிலை. மலர் அணுக்களால் ஆனது. அணுக்கள் மலரின் சூக்கும நிலை. மலரின் காரண நிலை எது? மலருக்கு வண்ணத்தையும் வாசத்தையும் கொடுப்பது எது? மலரிலிருந்து வரும் காந்த அலைகள். அந்த காந்த அலைகள் தான் வண்ணமிகு, வாசமிகு மலராக காட்சி அளிப்பதற்குக் காரணமாக உள்ளது. மலராக காட்சி அளிக்கும் நிகழ்ச்சிக்கு தூல நிலை, கூக்கும நிலை, காரண நிலை ஆகிய மூன்றடுக்கு இயக்கங்கள் அவசியமாகின்றன. இவ்வாறாக மலரின் இரகசிய ஆனால் உண்மை நிலையைக் கொண்டுதான் மலர் வழியே மறைபொருளை விளக்க முடிகின்றது.

    FFC-139- jமலர் வழியே விளங்கும் மறை பொருள்

    இயற்கை அழகை இரசிக்கும் எண்ணம் மிகமிக உயர்ந்துள்ளது. மலரின் உண்மை நிலையை உணராதவர்கள் மலரின் அழகை ரசிப்பதற்கும், மலரின் உண்மை நிலை அறிந்தவர்கள் மலரின் அழகை ரசிப்பதற்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. இரண்டாமவர் மலரை ரசிப்பது அவரை இறையுணர்விற்கு கொண்டு செல்லும். இதே போன்றே விடுமுறை நாட்களில் இயற்கை காட்சிகளைப் பார்ப்பதற்கு வெளியில் செல்கிறோம். இயற்கை காட்சிகளின் உண்மையை அறிந்தவர்கள் அன்று பூராவும் இறை உணர்விலேயே இருப்பர். எனவே மேன்மையை அனுபவிப்பதுபோல், உண்மையையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
    அந்த ஆர்வம் மிகுபட உண்மையை அறிந்து கொள்வதன் அவசியத்தை உணரவேண்டும், அதற்கு உண்மை என்கின்ற சொல் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்று வேதாத்திரி மகரிஷி அவா்கள் கூறும் விளக்கத்கை அறிய வேண்டும்.

    மனிதனும் சரி மற்ற சடப்பொருட்களும் இயற்கையிலிருந்துதான் உருவாகியுள்ளது. எனவே உண்மை என்பதும் மேன்மை என்பதும் மனிதனுக்கும் பேரியக்க மண்டலத்திலுள்ள எல்லா சடப்பொருட்களுக்கும் இயற்கையாக அமைந்துள்ள இயல்பான குணங்கள் என்கிறார் மகரிஷி அவர்கள். உண்மை என்பது — உள்+மை= உண்மை. உள்ளடங்கியது உட்பொருள். மேன்மை என்பது புறச்சிறப்பு. எனவே இந்த இரண்டு சொற்களில் உள்ள எழுத்துக்களான ‘உள்’, ‘மை’ ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கியது தான் உண்மை என்கின்ற சொல் என்கிறார். மேலும் அவர் கூறுவதாவது:- மேன்மை என்பது புறச்சிறப்பு. மேலாக புலன்களுக்கு எடுத்துக்காட்டுவது. புலன் உணர்வுக்கு உட்பட்ட மேன்மையிலேயே அறிவைச் செலுத்தி வந்தால் அது மயக்கத்திற்குத்தான் வழிவகுக்கும். உண்மையை அறியும்போதுதான் மேன்மையின் சிறப்பை எந்த அளவிலே, எந்த முறையிலே நாம் அனுபவிக்க முடியும் என்று தெரிந்து கொள்ளலாம் என்கிறார்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில்  இன்பம் துய்த்தலில் உள்ள உண்மையை ஆராய்வோம்.

    இன்றைய விருந்தின் சுருக்கம்:

    1) இயற்கையின் இரகசியம் எது என அறியப்பட்டது.
    2) உண்மை என்கின்ற சொல்லின் உருவாக்கம் பற்றி அறிந்தது.
    அ) அதிலிருந்து புலன் மயக்கத்திலிருந்து தெளிவு பெறுவது பற்றியும்,
    ஆ) திருவள்ளுவர் மெய்ப்பொருளை ஏன் அறிய வேண்டும் என்று சொல்கிறார் என்பது பற்றியும் அறியப்பட்டது..

    வாழ்க அறிவுச் செல்வம்                            வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • C243-எல்லாப் புகழும் இறைக்கே! –3/?

    வாழ்க மனித அறிவு                                                                 வளர்க மனித அறிவு

    lotus

    அ.வி. C243

    13-11-2016 – ஞாயிறு

    FFC-139-குரு ஸ்லோகம்  சென்ற விருந்தில், மகரிஷியின் சிந்தனாப்பள்ளியிலே மாணவா்களாக இருந்து வருபவர்களுக்கு கடமையையும் பொறுப்பையும் இறை அதிகமாக்கிவிட்டது; அப்படியானால் என்ன அர்த்தம் என வினா எழுப்பி இருந்தோம். அப்பொறுப்பும் கடமையும் என்னவென்று இன்றைய விருந்தில் அறிவோம். ஒவ்வொரு மனவளக்கலைஞரும் ஒரு இறைத்தூதுவர் என்கிறார் மகரிஷி அவர்கள். எனவே

    வேதாத்திரியத்தை தெளிவாக விளங்கிக் கொண்டு,

     விளங்கிய ஒவ்வொருவரும் விளங்கியதை நடைமுறைக்கு கொண்டு வந்து,

    “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்கின்ற இயற்கையின்/இறையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையிலே,

    சமுதாயத்திற்கு கொண்டு சோ்க்கின்ற கடமையை உணர்ந்து,

    உடலாலும், அறிவாலும், பொருளாலும், குறிப்பாக எண்ணத்தாலும் (ஏனெனில் எண்ணமே இயற்கையின் சிகரமாக இருப்பதாலும், அதனால் எண்ணம் பரிணாமத்தின் வாகனமாக இருப்பதாலும்) ஒவ்வொருவரையும் தொண்டாற்ற வைக்க இயற்கை/இறை திட்டமிட்டுள்ளதை அறிந்து அதனை நிறைவேற்ற வேண்டும்.

    “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்பது எவ்வாறு இயற்கையின்/இறையின் விருப்பம் எவ்வாறு என ஐயம் எழலாம். ஆகவே ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது எவ்வாறு இயற்கையின் எண்ணம் என்கின்ற உண்மையைத் தெரிந்து கொண்டால் இயற்கையின் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதில் மிகுந்த ஆர்வம் ஏற்படும். இயல்பாகவே மனிதன் தனக்கு தெரிந்த நல்லவற்றை பிறருக்குத் தெரிவித்து, அவர்களையும் மகிழ்வித்து, தானும் மகிழும் இயல்புடையவன். இவ்வாறாக வளர்ந்ததுதான் மொழியும், கலையும். எனினும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது எவ்வாறு இயற்கையின்/இறையின் விருப்பம் என்பதனையும் அறிந்து கொள்வோம். அவ்வாறு தெரிந்து கொண்டால்,  ‘பிறருக்குத் தெரிவிக்கும் கடமையிலும் பொறுப்பிலும்’(duties and responsibilities) தொடர் ஆர்வமும், அதிக அக்கறையும் ஏற்படும். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பது அறிஞர் திருமூலரின் விருப்பம்—எண்ணம்– வாழ்த்து. அறிஞர் என்பவர் யார்? அதாவது ஐயமின்றி அறிவை அறிந்தவர் அறிஞர். திருவள்ளுவரின் வாக்குப்படி, ஐயமின்றி அறிவை அறிந்தவரும் தெய்வமும் ஒருவரே.

    ஐயப் படாஅது அகத்து உணர்வானைத்

    தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.”                குறள் 702

    எனவே ஒர் அறிஞரின் விருப்ப—எண்ணம் என்பதும் இயற்கையின்/இறையின் எண்ணம் என்பதும் ஒன்றுதானே! குரு யார் எனக் கூறும் ஸ்லோகம் கூறுவதனையும் கவனத்தில் கொள்வோம்.

    குரு ஸ்லோகத்தில் முதல் இரண்டு வரிகள் குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே தேவன், குருவே மகேஸ்வரன் என கடவுளின் பல பெயர்களைச் சொல்லி, குரு யார் உணர்த்துகின்றது. மேலும் அழுத்தமாக சொல்வதற்கு, மூன்றாவது வரியில் ‘குரு சாட்சாத் பரப்ரம்மா’ என ஐயமின்றி உறுதிபடுத்தப்படுகின்றது. எனவே குரு நிச்சயமாக இறைவனே என்கின்றது இந்த ஸ்லோகம்.

    உலக மக்கள் அனைவரும் இன்புற்றிருப்பதனை இயற்கை/இறையினுடைய விருப்பமாக இருக்காதா? ‘எனவே யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என திருமூலர் விரும்பியதாக இருந்தாலும் அது இயற்கையினுடையத/இறையினுடையதுதானே! இயற்கை/இறை தானே திருமூலர் வழியாக சொல்லியிருக்கின்றது.

    1984 இல் மகரிஷி அவர்கள் இயற்றியுள்ள பேரின்ப களிப்பு என்கின்ற தலைப்பில் உள்ள பாடலில் பத்தாவது செய்யுளை நினைவு கூர்வோம். FFC-139- என்னுள் அவனை வைத்தேன்

    ‘இறைவனாகிப் பாடுகின்றேன்’ என்கின்ற வார்த்தைகள் அவர் இறைவனாகிவிட்டதை தெரியப்படுத்துவதற்காக அல்ல. சுத்த அத்வைதத்தால் வெளிவந்த வார்த்தைகள் அவை. அவர் இறைவனாக ஆவதற்கு முன் நடந்த நிகழ்வுகளைக் கவனிக்க வேண்டும்.—1) என்னுள் அவனை வைத்தேன்— 2) ஏற்றி வந்தேன் – 3) போற்றி வந்தேன்— 4) என்னையவனுள் இணைத்தான். சுத்த அத்வைதப்படி இந்த நான்கு நிகழ்வுகளையும் கடந்து வந்த மனிதர் தெய்வமானவர்தானே!

    மேலும் இவ்வாறாக சிந்திப்போம். எண்ணம் என்பது என்ன? எண்ணம் யாருடையது? ‘எண்ணமே இயற்கையின் சிகரம்’ என்பதால் அந்த அறிஞரின் விருப்ப—எண்ணம் என்பதும் இயற்கையின் எண்ணம்தான். இயற்கை, அறிஞரின் வாயிலாக எண்ணமாக தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிஞர் மட்டும் இயற்கை அன்னையின் குழந்தையல்ல. 740 கோடி குழந்தைகள் உள்ளன தற்போது இயற்கை அன்னைக்கு.

     எனவே

    FFC-138- தெளிவை அளிப்பதே இறையின் அருள்தானே

     ஒரு குழந்தைக்கு உணர்த்தப்பட்டது என்றால், மற்ற சகோதர-சகோதரிகளுக்கு தெரிவிக்க வேண்டியதுதானே அந்த மூத்தக்குழந்தையின் கடமையும் பொறுப்பும், நன்றி உணர்வும் ஆகின்றது?! அவ்வாறாக, மூத்தக்குழந்தையின் கடமையிலும், பொறுப்பிலும், நன்றி உணர்விலும் உருவானதுதானே நாம் நுகர்ந்து கொண்டிருக்கும் வேதாத்திரிய பாரிஜாத மலர். வேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண்(Vethathriam is spring-orifice of Wisdom).

    இயற்கையின்/இறையின் திட்டம் நிறைவேற, பொறுப்பையும் கடமையையும் உணர்ந்த பிறகு அடுத்து என்ன செய்ய வேண்டும்? அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில்  அறிவோம்.

    இன்றைய விருந்தின் சுருக்கம்

    1) மனவளக்கலைஞர்கள் இறைத்தூதுவர்கள் என்றும், அதனால் ஏற்பட்டுள்ள கடமையும், பொறுப்பும்

    2) எவ்வாறு குருவும் கடவுளும் ஒருவரே,

    3) தெளிவை அளிப்பதே இறையின் அருள்,

    4) வேதாத்திரியம் ஞானத்தின் ஊற்றுக்கண்.

    வாழ்க அறிவுச் செல்வம்                                            வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • C242-எல்லாப் புகழும் இறைக்கே! –2/?

    வாழ்க மனித அறிவு                                   வளர்க மனித அறிவு

    lotus

    C242-எல்லாப் புகழும் இறைக்கே! –2/? 

    அ.வி. C242

    09-11-2016 – புதன்

    FFC-138-குறள் எப்பொருள்

     

    இன்றைய சிந்தனையை திருவள்ளுவரின் அறிவாற்றலின் துணையுடன் துவங்குவோம்.

    குறள் 351 – விளக்கம்—இக்குறளில் பிறவி ஏன் துன்பமாக உள்ளது என்கிறார் திருவள்ளுவர்.

    மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப்பிறவி உண்டாகும் என்கிறார் திருவள்ளுவர்.

    குறள் 423 – விளக்கம்—இக்குறளில் எவ்வாறாக அறிவு இருக்க வேண்டும் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

    எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும், கேட்டவாறே எடுத்துக்கொள்ளாமல் அப்பொருளின் உண்மையானப் பொருளைக் காண்பதே அறிவாகும் என்கிறார் திருவள்ளுவர்.

    துன்பங்களுக்குக் காரணம்:

         மேற் கண்டுள்ள இரண்டு குறட்பாக்களிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது, மனிதன் படும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் பொருள், மெய்ப்பொருள் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமலிருக்கும் அறியாமையேயாகும். அறிந்தாலும் அறிந்தபோது அறிந்ததோடு சரி, அத்துடன் அறிந்தது மறக்கப்பட்டுவிடும். அறிந்தது செயலுக்கு கொண்டுவரும்போதுதான் பயன் கிட்டும். அறியாமை என்கின்ற குறைபாடு அறிவிற்கு இருந்தால் துன்பம்தான் வரும். ‘பொருள்‘, ‘மெய்ப்பொருள்‘ வித்தியாசம் எந்த அளவிற்கு அறியப்படுகின்றதோ அந்த அளவிற்கு பற்றுக்கள் நீங்கிவரும். பற்றற்றே கண்ணே பிறப்பறுக்கும். பேரானந்தத்தின் திறவுகோல்கள் இரண்டு உள்ளன.

    பேரானந்தத்தின் திறவுகோள்கள்:

    FFC-138-பேரானந்தத்தின் திறவுகோல்கள

    இது பற்றி விரிவாக ஞானக்களஞ்சியத்தில் ‘இன்பம், இன்பம், இன்பம், இன்பம்’ என்கின்ற தலைப்பில் அருளியுள்ள கவி எண். 1849 இல் அறியலாம். அக்கவியில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தான் பிறவிப்பயனை அடைந்த பேரானந்த நிலைகளை நான்கு படிகளில் கூறியுள்ளார்.

    ffc-137- இன்பம் இன்பம் இன்பம் இன்பம்

    பொதுவாக அறிவிற்கு விருந்து என்பது, பேரறிவிலிருந்து பின்னப்பட்ட (Fractioned) மனித அறிவுடன், பரிணாமக்கசடால் குறைகள் வந்து சேர்ந்து விட்டதால் குறைகள் நீங்கி மனிதஅறிவு, முழுமை அடைவதற்கு, அது அறிய வேண்டியதை, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அறிந்து விட வேண்டும். அப்போதுதான் மனித குலத்தில் இப்போதுள்ள பெருந்துயர நிலை நீங்கி நிரந்தர அமைதி ஓங்கும்.

        அப்படியானால் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும். வாழ்க்கை என்பது, ‘தான்’, ‘சமுதாயம்’, ‘இயற்கை’ ஆகிய மூன்றின் இணைப்பில் நடக்கின்றது. எனவே அறிவிற்கு விருந்தாவது இந்த மூன்றைப்பற்றிய தகவல்களும் சிந்தனைகளுமேயாகும்.

    பொருள் பொருளல்ல—காரணம்?

         மெய்ஞானத்தில் ஏன் பொருள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது? பொருள் என்பது புலன்களால் உணரப்படுவது. ஆனால், பொருட்கள் உண்மையில் பொருட்களல்ல என்கின்றது மெய்ஞானம். வேதாந்திகள் அவர்களுக்குத் தெளிவாகிய நிலையில் துணிந்து. இந்த உலகம் பொய்யானது(the world is unreal) என்று கூறுகின்றனர். காணும் உலகம் ஒரு கனவே என்கின்றனர். மாயை என்கின்றனர். இக்கூற்றை சாதாரண மனிதன் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. காண்பது எவ்வாறு பொய்யாக முடியும் என நினைக்கத்தானே தோன்றும்! ஆனால் சுத்தஅத்வைதத் தெளிவு வர வர ஏன் வேதாந்திகள் ‘உலகம் பொய்யானது’ என்று அவ்வாறு கூறுகின்றனர் என்பதும் தெரியவரும்.

    இதனை வேதாத்திரிய மெய்ஞ்ஞானமமோ அறிவுபூர்வமாக விளக்குகின்றது. வேதாத்திரியமும் ‘பொருள் பொருளல்ல’ எனக்கூறுகின்றது. ஆனால் காரணம் கூறுகின்றது.

    எந்த தோற்றமே இல்லாத ஒன்றிலிருந்து பொருள் எனப்படும் தோற்றம் உருவானதோ,
    அந்த மூலமான, தோற்றமே இல்லாத ஒன்றுதான் பொருள் என்றும்,
    அதுவே உண்மையான பொருள் என்றும் கூறுகின்றது.
    அதற்கும் வேதாத்திரியம் கூறும் காரணத்தை அறிவோம்.
    பொருள் என்பது நிகழ்ச்சிதானே தவிர அவை பொருளல்ல என்கின்றது வேதாத்திரிய மெய்ஞானம்.

    முதலில் பொருளை நிகழ்ச்சிதான் என ஏற்றுக்கொண்டால் பொருள் பொருளல்ல என்பதனையும் ஏற்றுக் கொள்ள முடியும்.

    நிகழ்ச்சி:

    பொதுவாக நிகழ்ச்சி என்பது நிகழ்வைக் குறிக்கும். நிகழ்ச்சி என்பது தொடங்கி முடிவுக்கு வரும். உதாரணத்திற்கு நாடகத்தை எடுத்துக் கொள்வோம். நாடகம் என்பது நிகழ்ச்சி. ஆரம்பித்து இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடும். அது போல் பொருள் நிகழ்ச்சி என்றால் காணப்படுகின்ற பொருள் முடிவுக்கு வந்து விடுகின்றதா? எந்தப் பொருளும் தோன்றி மறையக் கூடியதே. மாற்றமே நிலையானது என்கின்றது (Change alone is permanent) விஞ்ஞானம். அதாவது எதுவுமே இந்த பிரபஞ்சத்தில் நிரந்தரம் அல்ல. எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. எனவே மாறிக்கொண்டிருப்பதுதான் நிரந்தரமாக நடந்துகொண்டிருக்கின்றது இந்தப் பிரபஞ்சத்தில். மாறிக் கொண்டிருப்பதை நிகழ்ச்சி என்கின்ற பெயரால் கூறினால் என்ன?

    தோற்றத்திற்கு ஆரம்பம் இருப்பது போல் முடிவும் உண்டு. உதாரணத்திற்கு மலரை எடுத்துக் கொள்வோம், அது பொருளா, நிகழ்ச்சியா? மலரை நிகழ்ச்சி என்கிறார் மகரிஷி அவர்கள். பருப்பொருளாக இருக்கின்ற மலர் நிகழ்ச்சி என்றால், மலர் எங்கே நிகழ்ச்சியை ஆரம்பித்தது. அது எப்போது முடியும்? இதுபோன்ற வினாக்கள் எழலாம். அது தோற்றத்துடன் தானே இருக்கின்றது! காலையில் பூத்த மலர் மாலையில் வாடிவிடுகின்றதே! மலர்ந்தது வாடியது நிகழ்ச்சியில்லையா? மலர்ந்த போது அது தோன்றி நிகழ்ச்சியை ஆரம்பித்தது. வாடியபோது மலர் என்கின்ற நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது. வாடி, மலரானது, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சருகாகி மலரே காணாமல் போய்விடுகின்றது. பருப்பொருளாக இருந்த மலர் என்னவாயிற்று?
    மலர் பருப்பொருளாக இருக்கும்போது அணுக்களின் கூட்டாக இருந்து தோற்றத்தை அளித்துக் கொண்டிருந்தது, மலர் வாடி காய்ந்து சருகாகி மறைந்ததும் அணுக்களின் அமைப்பே கலைந்து விட்டது. நாடகம் முடிந்தவுடன் மேடையில் இருந்த நடிகர்கள் அங்கு இல்லை அவர்களெல்லாம் கலைந்து தங்களது வீட்டிற்கு சென்றுவிட்டனர். மேடை வெற்றிடமாகி விட்டது. எனவே இந்த மலர் என்கின்ற சரித்திரத்தை நாடகத்துடன் ஒப்பிட்டு, மலர் வழியே விளங்கும் மறைபொருள் என்கின்ற தலைப்பில் நான்கு அடிகளைக் கொண்ட பன்னிரண்டு செய்யுட்களை அருளியுள்ளார் மகரிஷி அவர்கள். அதில் நாம் நான்காவது செய்யுளை இங்கே நினைவிற்கு கொண்டு வருவோம்.

    மலர் வழியே விளங்கும் மறைபொருள்:

    FFC-138- பரமணுக்கள்

    48 அடிகளைக் கொண்ட இப்பாடலின் வழியாக மலருக்கும் மனிதனுக்கும் இடையே உரையாடலாக ஆக்கி மலர் தன்னுடைய சரித்திரத்தை மனிதனுக்கு கூறுவதாக அமைத்து, சுத்தஅத்வைத தத்துவ விஞ்ஞானத்தை எளிமையாக்கி குழந்தைகள் பாடுவதற்கு எளிதாகவும், சிறுவர், சிறுமியர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்படியும் இயற்கையும் இறையையும் ஒன்றே எனக் கூறுகிறார். இதைவிட வேறு எவ்வாறு அரூபமான இறை தன்னுடைய சரித்திரத்தைக் கூறமுடியும்? இதுவரை உலக ஆன்மீக வரலாற்றில் இயற்கை/இறை ஏற்படுத்தாத திருப்புமுனையை இப்போது வேதாத்திரியத்தின் வாயிலாக ஏற்படுத்தியுள்ளது.

    வருங்காலத்தில் இப்பாடலை குழந்தைகளெல்லாம் பாடிக்கொண்டிருப்பார்கள் எனக் கூறியிருக்கிறார் மகரிஷி அவர்கள். இதற்கு என்ன பொருள்? இயற்கையின்/இறையின் சரித்திரத்தை மிக எளிதாக விளங்கிக்கொள்ளும் நிலையை சமுதாயம் விரைவில் பெற்றுவிடும் என்பதுதான் பொருள். இது தானாகவே நடந்திடாது. ‘Fraction demands, Totality supplies’. ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்று கூறுவது போல் இயற்கையின் சிகரமான எண்ணத்தைக் கொண்டிருக்கும் மனிதன் அதனை பயன்படுத்த வேண்டும்.

    ஏனெனில் ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்றிருக்கும் போது மகரிஷி அவர்களைத் தரிசிக்கின்றவர்கள் அனைவருமே அவரது சிந்தனாப்பள்ளியிலே மாணவர்களாகி நீடித்தால் அந்த பொன்னாள் நிறைவேறும் காலம் அருகிவிடும். எனவே மகரிஷியின் சிந்தனாப்பள்ளியிலே மாணவா்களாக இருந்து வருபவர்களுக்கு கடமையையும் பொறுப்பையும் இறை அதிகமாக்கிவிட்டது. அப்படியானால் என்ன அர்த்தம்?

    அடுத்த அறிவிற்கு விருந்தில்  வேதாத்திரிய சிந்தனாப்பள்ளி மாணவர்களுக்குள்ள கடமையையும் பொறுப்பையும் என்னவென்று சிந்திப்போம்.

    இன்றைய விருந்தின் சுருக்கம்:

    1)   பொருள், மெய்ப்பொருள் பற்றி திருவள்ளுவர் கூறுவதனை அறிந்து கொண்டோம்.

    2)   பேரானந்தத்தின் இரண்டு திறவுகோல்கள்.

    3)   மகரிஷி அவர்கள் பேரானந்தத்தை எவ்வாறு நான்கு படிகளில் (கண்டுபிடித்தல் இரண்டு-செயல்படுத்துதல் இரண்டு)எய்தினார்.

    4)   மலர் ஒரு பொருளல்ல. நிகழ்ச்சியே! பிரபஞ்சம் எனும் மேடையில் மலர் என்கின்ற நாடகம் நடந்து கொண்டிருக்கின்றது.

    வாழ்க அறிவுச் செல்வம்                                                                         வளர்க அறிவுச் செல்வம்

    Loading