இன்றைய விருந்து

  • புகழும் உயர்புகழும் – 2 / ?

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    புகழும் உயர்புகழும் – 2 / ?

    அ.வி. 49

    21-01-2015 புதன்

    மெய்ஞானத்தில் ஏன் பொருள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது? பொருள் என்பது புலன்களால் உணரப்படுவது. ஆனால், பொருட்கள் உண்மையில் பொருட்களல்ல என்கின்றது மெய்ஞானம். வேதாந்திகள் அவர்களுக்குத் தெளிவாகிய நிலையில் துணிந்து, இந்த உலகம் பொய்யானது (the world is unreal) என்று கூறுகின்றனர். காணும் உலகம் ஒரு கனவே என்கின்றனர். மாயை என்கின்றனர். இக்கூற்றை சாதாரண மனிதன் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. காண்பது எவ்வாறு பொய்யாக முடியும் என நினைக்கத்தானே தோன்றும்!

    இதனை வேதாத்திரிய மெய்ஞ்ஞானமோ அறிவுப்பூர்வமாக விளக்குகின்றது. வேதாத்திரியமும் ‘பொருள் பொருளல்ல’ எனக்கூறுகின்றது. ஆனால் காரணம் கூறுகின்றது. எந்த தோற்றமே இல்லாத ஒன்றிலிருந்து பொருள் எனப்படும் தோற்றம் உருவானதோ, அந்த மூலமான, தோற்றமே இல்லாத ஒன்றுதான் (வெளி-இறைவெளி-Eternal Space) பொருள் என்றும், அதுவே உண்மையான பொருள் என்றும் கூறுகின்றது. அதற்கும் வேதாத்திரியம் கூறும் காரணத்தை அறிவோம்.

    பொருள் என்பது நிகழ்ச்சிதானே தவிர அவை பொருளல்ல என்கின்றது வேதாத்திரிய மெய்ஞானம். முதலில் பொருளை நிகழ்ச்சிதான் என ஏற்றுக்கொண்டால் ‘பொருள்’, ‘பொருளல்ல’, என்பதனையும் ஏற்றுக் கொள்ள முடியும். பொதுவாக நிகழ்ச்சி என்பது நிகழ்வைக் குறிக்கும். நிகழ்ச்சி என்பது தொடங்கி முடிவுக்கு வரும். உதாரணத்திற்கு நாடகத்தை எடுத்துக் கொள்வோம். நாடகம் என்பது நிகழ்ச்சி. ஆரம்பித்து இரண்டு மணி நேரத்தில் முடிந்து விடும். அது போல் பொருள் நிகழ்ச்சி என்றால் காணப்படுகின்ற பொருள் முடிவுக்கு வந்து விடுகின்றதா?

    எந்தப் பொருளும் தோன்றி மறையக் கூடியதே. மாற்றமே நிலையானது என்கின்றது (Change alone is permanent) விஞ்ஞானம். அதாவது எதுவுமே இந்த பிரபஞ்சத்தில் நிரந்தரம் அல்ல. எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. எனவே மாறிக்கொண்டிருப்பதுதான் நிரந்தரமாக நடந்துகொண்டிருக்கின்றது இந்தப் பிரபஞ்சத்தில். மாறிக் கொண்டிருப்பதை நிகழ்ச்சி என்கின்ற பெயரால் கூறினால் என்ன? தோற்றத்திற்கு ஆரம்பம் இருப்பது போல் முடிவும் உண்டு. உதாரணத்திற்கு மலரை எடுத்துக் கொள்வோம், அது பொருளா, நிகழ்ச்சியா? மலரை நிகழ்ச்சி என்கிறார் மகரிஷி அவர்கள். பருப்பொருளாக இருக்கின்ற மலர் நிகழ்ச்சி என்றால் மலர் எங்கே நிகழ்ச்சியை ஆரம்பித்தது. அது எப்போது முடியும்? இதுபோன்ற வினாக்கள் எழலாம். அது தோற்றத்துடன் தானே இருக்கின்றது! காலையில் பூத்த மலர் மாலையில் வாடிவிடுகின்றதே! . மலர்ந்தது வாடியது நிகழ்ச்சியில்லையா? மலர்ந்த போது அது தோன்றி, நிகழ்ச்சியை ஆரம்பித்தது,. வாடியபோது மலர் என்கின்ற நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது.. வாடிய போது வாடி, மலர் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சருகாகி மலரே காணாமல் போய்விடுகின்றது. பருப்பொருளாக இருந்த மலர் என்னவாயிற்று?

    மலர் பருப்பொருளாக இருக்கும்போது அணுக்களின் கூட்டாக இருந்து தோற்றத்தை அளித்துக் கொண்டிருந்தது, மலர் வாடி காய்ந்து சருகாகி மறைந்ததும் அணுக்களின் அமைப்பே கலைந்து விட்டது. நாடகம் முடிந்தவுடன் மேடையில் இருந்த நடிகர்கள் மேடையில் இல்லை. அவர்களெல்லாம் கலைந்து தங்களது வீட்டிற்குச் சென்றுவிட்டனர். மேடை வெற்றிடமாகி விட்டது. எனவே இந்த மலர் என்கின்ற சரித்திரத்தை நாடகத்துடன் ஒப்பிட்டு மலர் வழியே விளங்கும் மறைபொருள் என்கின்ற தலைப்பில் 48 வரிகளில்  கவியினை இயற்றியுள்ளார் மகரிஷி அவர்கள். அதில் நாம் சில வரிகளை இங்கே நினைவிற்கு கொண்டு வருவோம்.

                                                                                              “பரம அணுக்கள் பலகோடி

                                                                                                        பண்பாய்க் கூடி ஒருகூத்து

                                                                                           கரம் கோர்த்தாடும் நாடகத்தோர்

      கட்டம் எந்த தோற்றமும்ஆம்”

    என்கிறார் மகரிஷி அவர்கள். 48 அடிகளைக் கொண்ட இப்பாடலின் வழியாக மலருக்கும் மனிதனுக்கும் இடையே உரையாடலாக ஆக்கி மலர் தன்னுடைய சரித்திரத்தை மனிதனுக்கு கூறுவதாக அமைத்து சுத்த அத்வைத தத்துவ விஞ்ஞானத்தை எளிமையாக்கி குழந்தைகள் பாடுவதற்கு எளிதாகவும், சிறுவர், சிறுமியர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்படியும், இயற்கையின்/இறையின் சரித்திரத்தை கூறி இயற்கையும் இறையையும் ஒன்றே எனவும் கூறுகிறார். இதைவிட வேறு எவ்வாறு எளிமையாக இறை தன்னுடைய சரித்திரத்தை மனிதன் வழியாகக் கூறமுடியும்?

    இறையின் தன்மாற்றத்தில் காலம் கனிந்து வந்துள்ளது. இறையின் குழந்தைகள்(சமுதாயம்) இறையின் தன்மாற்றத்தில் வளர்ந்து பரிபக்குவ நிலையை அடைந்துள்ளதையே இது எடுத்து இயம்புகின்றது. விஞ்ஞானம் அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது போல் மெய்ஞ்ஞானமும் வளர்ந்து வருகின்றது. விஞ்ஞானம் வேறு மெய்ஞ்ஞானம் வேறு வேறா? இல்லையே. இரண்டுமே இறையின்/இயற்கையின் பெருமையையும், புகழையும் எடுத்துக் கூறுவதுதானே.

    இதுவரை உலக ஆன்மீக வரலாற்றில் ஏற்படாத திருப்புமுனை இப்போது வேதாத்திரியத்தின் வாயிலாக இயற்கை/இறை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையே அல்ல.

    வருங்காலத்தில் இப்பாடலை குழந்தைகளெல்லாம் பாடிக்கொண்டிருப்பார்கள் எனக் கூறியிருக்கிறார் மகரிஷி அவர்கள். இதற்கு என்ன பொருள்? இயற்கையின்/இறையின் சரித்திரத்தை மிக எளிதாக விளங்கிக்கொள்ளும் நிலையை சமுதாயம் விரைவில் பெற்றுவிடும் என்பதுதான் பொருள். இது தானாகவே நடந்திடாது. ‘Fraction demands, Totality supplies’. ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்றெல்லாம் கூறுவது போல் இயற்கையின் சிகரமான எண்ணத்தைக் கொண்டிருக்கும் மனிதன் எண்ணத்தைப் பயன்படுத்த வேண்டும்.

    ஏனெனில் ‘எண்ணமே பரிணாமத்தின் வாகனம்’ என்றிருக்கும் போது மகரிஷி அவர்களின் சிந்தனாப்பள்ளியிலே மேலும், மேலும் அன்பர்கள் சேர்ந்து மாணவர்களாகி நீடித்து அறிவுத் தொண்டாற்றினால் முன்னாள் இந்திய ஜனாதிபதியும், தத்துவ ஞானியுமான டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் விரும்பியது போல் பரிணாமம் பூர்த்தியாகும், அந்த பொன்னாள் நிறைவேறும் காலம் அருகிவிடும். எனவே மகரிஷியின் சிந்தனாப்பள்ளியிலே  மாணவா்களாக இருந்து வருபவர்களுக்கு கடமையையும் பொறுப்பையும் இறை அதிகமாக்கிவிட்டது. இதற்கு என்ன பொருள்?

    வேதாத்திரியத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும், தானும் நடைமுறைக்கு கொண்டு வந்து, “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்கின்ற இயற்கை நீதியின்படி, தான் பெற்ற பயனைச் சமுதாயத்திற்கும் சோ்க்கின்ற கடமையை உணர்ந்து. உடலாலும் பொருளாலும், அறிவாலும், குறிப்பாக எண்ணத்தாலும்(இயற்கையின் சிகரம் எண்ணம்) அறிவுத்தொண்டாற்ற வேண்டும். இது இயற்கை திட்டமிட்டதாகும்.. இந்த விருந்தை முடித்தவுடன், ஞானக்களஞ்சியம் நூலை எடுத்து மேலே குறிப்பிட்டப் பாடலை ஒரிருமுறை வாசிப்பது விருந்திற்கு விருந்து சோ்க்கும்.
    மலரில் எத்தனை அணுக்கள் இருக்கும் என்று சொல்ல முடியுமா? விஞ்ஞானத்தாலும் சொல்ல முடியாது. எனவே மலரில் பல கோடி அணுக்கள் இருப்பதாகக் கூறுகிறார். அந்த அணுக்கள் எல்லாம் மலராக ஆவதற்கு முன்னர் எங்கே இருந்தன? தனித்தனியாக தோற்றமில்லாமல் அந்தச் செடியில் இருந்திருக்கும். மலராகும் போது அந்த அணுக்கள் எல்லாம், ஒழுங்காக(பண்பாய்க்கூடி) கூடி ஒருநாடகத்தை நடத்தும் போது அவை மலராகக் காட்சி அளிக்கின்றன.

    இதே போன்றுதான் எந்தத் தோற்றத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் அரூபமான இறையே அணுக்களாகி, பல கோடி அணுக்கள் பண்பாய்க் கூடி தோற்றம் அளிக்கின்றது. சுருங்கச் சொல்வதெனில் இறையின் நாடகம் இப்பிரபஞ்சத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. உலகமே ஒரு நாடக மேடை. அவ்வாறு நடக்கும் நாடகத்தில் ஒரு கட்டம்தான் மலருடைய தோற்றம். மனிதனும் அவ்வாறே நடித்து கொண்டிருக்கிறான் இறையின் இயக்கத்தில்(God is the Director of the Universe).
    மலரைப் போன்றுதான் மனிதனும். அணுவின் கூட்டுப்பக்குவமாக(கவனிக்கவும் வார்த்தையை. கவனித்து இறையின் புகழை நினைந்து மகிழவும்) உருவத்தை எடுத்து பிறக்கிறான்; அணுக்கள் பிரிந்து உருவத்தை இழந்து மறைகிறான். மனிதன் என்கின்ற நாடகம் முடிந்து விடுகின்றது. அவ்வளவுதான் வாழ்க்கை. மலர்மட்டும் நிகழ்ச்சி அல்ல. எல்லாத் தோற்றங்களும் நிகழ்ச்சிகள்தான் மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல.

    மனிதனும் நிகழ்ச்சிதான். இதில் தன்முனைப்பிற்கு எங்கே இடமிருக்கின்றது? புகழிற்கு எங்கே இடமிருக்கின்றது? ஆனால் உயர்புகழிற்கு இடமும் இருக்கின்றது. தேவையும் இருக்கின்றது. அதனை இனிவரும் பகுதியில் அறிவோம்.

    அடுத்த அறிவிற்கு விருந்தில் (25-01-2015 ஞாயிறன்று) நிகழ்ச்சி — பொருள் பற்றி இன்னும் சற்று கூடுதலாக, மகரிஷி அவர்கள் கூறுவதை அறிந்துவிட்டு புகழ்- உயா்புகழ்பற்றி விரிவாக பார்க்க உள்ளோம்.

    Loading

  • புகழும் உயர்புகழும் – 1 / ?

      

    வாழ்க மனித அறிவு                                                 வளர்க மனித அறிவு

    புகழும் உயர்புகழும் – 1 / ?

    அ.வி. 48

    18-01-2015 ஞாயிறு

       புகழ் என்பது எதனைக்குறிக்கின்ற சொல்? புகழ் என்பது பலரும் அறிந்திருக்கின்ற, பலராலும் பேசப்படுகிற நிலையைக் (fame, renown) குறிக்கும் சொல்.  பெருமை (glory, praise) என்றும் பொருள்.  புகழ் என்ற வார்தையைப்போல் உயர்புகழ் என்கின்ற வார்த்தையும் நாம் சிந்திக்க இருக்கின்றோம்.

       புகழ், உயர்புகழ் ஆகியவற்றில் எது உயா்ந்தது என்றால், எதனைச் சொல்ல முடியும்?   அதிகாரி, உயர் அதிகாரி என்கின்ற இருவரில் யார் உயர்ந்தவர் என்றால், உயர்அதிகாரி உயர்ந்தவர் என்று சொல்வோம். அதுபோல், புகழ், உயர்புகழ் ஆகியவற்றில் எது உயர்ந்தது,  என்றால் பொதுவாக, உயர்புகழ் உயர்ந்தது என்போம்.  எப்படி? ‘உயர்’ என்பது பல நிலைகளாகப் பகுக்கக்கூடியதில் மேலாக (higher in grades or in hierarchical set up) உள்ளதைக்குறிக்கும் பெயரைடைச் சொல்.  உதாரணத்திற்கு உயா்படிப்பு. அதுபோல்,  ஒன்றின் உயர்ந்த நிலையயைத் தெரிவிக்க  ‘உயர்’ என்பதனைச் சேர்த்து சொல்வது போல் ‘புகழ்’ என்கின்ற சொல்லுடன் ‘உயர்’ என்பதனைச் சேர்த்து ‘உயர்புகழ்’ எனப்படுகின்றது.

       ஆனால் புகழ், உயர்புகழ் ஆகியவற்றில் புகழ்தான் உயர்ந்தது என்கின்றது மெய்ஞானம். எப்படி? உயர்புகழ்தானே புகழைவிட உயர்ந்ததாக இருக்கமுடியும். ஏனெனில் புகழ் என்பது இறைக்குரியது.  உயா்புகழ் என்பது மனிதனுக்குரியது என்கின்றபோது ‘புகழ்’ உயர்ந்ததாகி விடுகின்றது. ஏன் இந்த குழப்ப நிலை?   அப்படியானால் இறைக்குரியது உயர்புகழ் என்றும் புகழ் என்பது மனிதனுக்குரியது  என்று ஏன் வைத்திருக்கக்கூடாது.

       ‘புகழ்’ என்கின்ற சொல், ஏற்கனவே உள்ளதை எல்லோருமே அறிவர். அதாவது, ‘உயர்புகழ்‘ எனும் சொல் உருவாக்கப்படுவதற்கு முன்னரே ‘புகழ்’ எனும் சொல் உள்ளது. ‘புகழ்’ ‘உயா்புகழ்’ ஆகிய இரு சொற்களில் முதலில் தோன்றியது புகழ் எனும் சொல். எனவே முன்னரே இருந்த ‘புகழ்’ என்கின்ற சொல், மனிதனுக்கு முன்னரே  இருக்கின்ற  இறைக்குரியதாகிவிட்டது,  ஆனால் இறைக்குரிய புகழை மனிதன் அறியாமையில் தனதாக்கிக் கொள்கிறான்.  புகழ் என்பது எப்படி இறைக்குரியதாகும்?

       பல பிறவிகளாக  அறிவு (ஆன்மா) தன் மூலத்தை மறந்திருக்கின்றது.

       தன்மூலத்தினுடனான (இறையுடனான)  பிணப்பை மீண்டும் நிரந்தர நினைப்பிற்கு கொண்டு வருவதற்காக எடுத்த  இந்தப்பிறவியிலும்,

       அறியாமையில் புகழை தனதாக்கிக் கொள்ளும்போது, அறிவு (ஆன்மா,) தன்னை இறையிடமிருந்து  பிரித்துக்கொள்ளவே செய்கின்றது.

    இறையே நாமாக இருக்கின்றது என்கின்றபோது இறைக்கு புகழை உரித்ததாகக் கூறுவதில்(மனிதன் கூறினாலும் கூறாவிட்டாலும் புகழ் இறைக்குரியதுதான்.) நாம் என்ன குறைந்து விடவாப்போகின்றோம்? யாரிடம் குறைந்துவிடப் போகிறோம்? மனிதனிடமா குறைந்து விடப்போகிறோம்?  இல்லையே.. அருட்பேராற்றலிடம் தானே குறைந்து விடப்போகிறோம்.  ‘அருட்பேராற்றல் கருணையினால் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வேன்” என்றுதானே தினமும் சங்கல்பம் செய்து வருகிறோம். புகழ் இறைக்குரியது என்று உள்ளம் அறிந்து செயல்படுவது  பேரானந்த நிலைக்கு செல்வதற்கான  திறவுகோல். சம்பிரதாயத்திற்காக புகழ் இறைக்குரியது என்று கூறப்படவில்லை.    எல்லாப் புகழும் இறைவனுக்கே என்கின்ற புனித வாசகம் ஏற்கனேவே உள்ளது.

       ஆகவே புகழ் என்கின்ற சொல் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நிலையில், வேதாத்திரியத்தில் மனிதனுக்காகவே உருவாக்கப்பட்டது ‘உயர்புகழ்’ எனும் சொல்.

       நடைமுறையில், இறைக்குரிய புகழை, அறியாமையில் மனிதன் தனது என நினைத்துக் கொண்டிருப்பதால், மனிதன் உடலளிவிலே எல்லைக் கட்டிக் கொண்டு ஆன்ம உணர்வோடு(soul consciousness) வாழ்வதைத் தவிர்த்துவிட்டு தேகாபிமானத்தோடே(body consciousnes) வாழ்கிறான். விளைவு இன்ப-துன்பக் கலவையைத்தான் அனுபவிக்கிறான்.  மனதின் மூன்றாவது மற்றும் நான்காம் படிகளான அமைதி, பேரின்ப நிலைக்கு செல்ல முடியாமல் சலிப்புள்ள வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆகவே,   காரணத்தோடுதான் (என்ன என்று பின்னர் பார்ப்போம்) மனிதனுக்கும் புகழும்  அவசியம் எனக்கருதி, ஆனால் வேறுவடிவத்தில் அவசியம் எனக்கருதி ஆன்மீக உலகில் நீங்கா இடம் பெற்றுவிட்ட வேதாத்திரி மகரிஷி அவர்கள்  ‘புகழ்’ என்கின்ற சொல்லோடு “உயா்” என்பதனைச் சேர்த்து ‘உயர்புகழ்’ என்கின்ற சொல்லை உருவாக்கியிருக்கிறார்.   காரணம், உயா்புகழை, மனிதனுக்கு அவசியமான ஐந்து வளங்களில் ஒன்றாகக் கருதி நான்காவது வளமாகச் சோ்த்து  உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வேன் என்கின்ற  சங்கல்பத்தை தினந்தோறும் தவத்தின் முடிவில் இயற்றச் சொல்லியிருக்கிறார்  வாழ்வியலாளரும், மெய்ஞானியுமான வேதாத்திரி மகரிஷி அவர்கள். மெய்ஞானத்தில் ‘மெய்ப்பொருள்’ ‘பொருள்’ என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது போல் வேதாத்திரிய மெய்ஞானத்தில் ‘புகழ்’ ‘உயர்புகழ்’ என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

       ‘புகழும் உயர்புகழும்’ என்கின்ற நம்சிந்தனையில் மெய்ப்பொருள், பொருள் ஆகிய இரண்டும் குறுக்கிட்டு விட்டதால்,  இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு இப்போது ‘பொருள்’ ‘மெய்பொருள்’ பற்றியும் சிறிதளவு சிந்தித்துவிடுவோம்.   பொருள், மெய்ப் பொருள் பற்றியத் தெளிவு மனிதனுக்கு மிக மிக அவசியம்.  ஏனெனில் மனிதன் படும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமலிருக்கும் அறியாமையேயாகும்.  அறிந்தாலும், அறிந்தபோது அறிந்ததோடு சரி,  அத்துடன் அறிந்தது மறக்கப்பட்டுவிடும்.  அறிந்தது செயலுக்கு கொண்டுவரும்போதுதான் பயன் கிட்டும்.  ‘பொருள்‘, ‘மெய்ப்பொருள்’  வித்தியாசம் எந்த  அளவிற்கு அறியப்படுகின்றதோ அந்த அளவிற்கு  பற்றுக்கள் நீங்கிவரும்.  பற்றற்றே கண்ணே பிறப்பறுக்கும்.

    பேரானந்தத்தின் திறவுகோல்கள் இரண்டு உள்ளன.

    1)  முதன்மையானது பிறவியின் நோக்கம் அறிதல்—அதனை அமுலுக்குக் கொண்டு வந்து வெற்றி பெறுதல்.

    2) இரண்டாமது  உறவு நிலையில் உண்மை நிலை அறிதல்—பிறகு அந்நிலை எய்துதலாகும்.

      இது பற்றி விரிவாக ஞானக்களஞ்சியத்தில்   ‘இன்பம், இன்பம், இன்பம், இன்பம்’ என்கின்ற தலைப்பில் அருளியுள்ள கவி எண். 1849 -ல் அறியலாம்.  அக்கவியில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தான் பிறவிப்பயனை அடைந்ததை நான்கு படிகளில் கூறியுள்ளார்,

       பொதுவாக அறிவிற்கு விருந்து என்பது,  பேரறிவிலிருந்து பின்னப்பட்ட மனித அறிவுடன், பரிணாமக்கசடால் குறைகள் வந்து சேர்ந்து விட்டதால்  குறைகள் நீங்கி மனிதஅறிவு, முழுமை அடைவதற்கு, அது  அறிய வேண்டியதை, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அறிந்து விட  வேண்டியதே.  அப்போதுதான், மனிதஅறிவில் தெளிவு பெற்றவர்களின் எண்ணிக்கை பெருகி வரும்போது மனித குலத்தில் இப்போதுள்ள பெருந்துயர நிலை நீங்கி நிரந்தர அமைதி ஓங்குவதற்கான வழிகள் பிறக்கும்.

       அப்படியானால் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும்.  வாழ்க்கை என்பது,  ‘தான்’,  ‘சமுதாயம்’,  ‘இயற்கை’ ஆகிய மூன்றின் இணைப்பில் நடக்கின்றது.  எனவே அறிவிற்கு விருந்தாவது இந்த மூன்றைப்பற்றிய தகவல்களும் சிந்தனைகளுமேயாகும்.  ஆகவே இன்றைய சிந்தனைக்கான தலைப்பு ‘புகழும் உயர்புகழும்’ என்றிருந்தாலும் ‘பொருள் மெய்பொருள்’ என்பது  இயற்கையைப் பற்றியது என்பதால் அதனைச் சற்று சிந்தித்து விட்டு தலைப்பிற்குள் செல்வோம்.  தலைப்பை விட்டு வெளியே சென்றுவிடுவதாக நினைக்க வேண்டாம்.

    புதனன்று(21-01-2015)  மெய்ஞானத்தில் ஏன் பொருள் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்று அறிந்துவிட்டு, புகழும் உயர் புகழும் என்கின்ற தலைப்பிற்குள் நேரிடையாகச் சென்றுவிடுவோம்.

     

     

     

    Loading

  • வாழ்நாளில் அறிந்து இன்பமுற வேண்டியது- 2 / 2

    வாழ்நாளில் அறிந்து இன்பமுற வேண்டியது- 2 / 2

    அ.வி. 47

    14-01-2015 புதன்

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதரித்த, நம்மிடையே அருட்தந்தையாக இருந்து உறவாடிய, இன்றும் அறிவாற்றலின் வாயிலாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்ற ‘வேதாத்திரி மகரிஷி’ அவா்கள் என்ன கூறுகிறார் என்றும் பார்ப்போம். உலக மக்களுக்கு 1970 ஆண்டு அழைப்பு விடுத்திருக்கிறார். அழைப்பு விடுத்து நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அந்த அழைப்பைப் பற்றி நமக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் இருந்த நிலையிலே, நாமெல்லோரையும் அவரிடம் கொண்டு வந்து சீடராக்கியுள்ளது இயற்கை/இறை. இது இறையின் புனித திட்டமும், ஏற்பாடும் ஆகும்.

    anbargale vaareer-Explo

    அழைப்புக் கவி

    வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஊனுடம்பு ஆலயத்தில் பத்து வருடங்கள் தங்கி, அவா் (வள்ளலார்) சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவிட்டதை முடித்துக் கொண்ட அருட்சோதி இராமலிங்க வள்ளலார் கூறியதையும் நினைவு கூர்வோம்.

    அருட் பிரகாச வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது திருவாய் மலர்ந்தது.

    “இது வரை உங்களுக்கு நேரிற் சொல்லி வந்தோம். கேட்டுத் திருந்தி எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். ……………………… இவ்வுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்குமிருப்போம். திருத்தி விடுவோம். அஞ்சவேண்டாம்.” என்றார்.
    1823 ல் அவதரித்த அருளாளர் “எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர் *.” என்றார்.
    1911ல் அவதரித்த அருளாளர் “அறிந் தனுபவிக்க இன்றேனும்.விரைந்து எழுச்சிபெற் றுய்வீர்!*” என்கிறார்.
    முதலில் அவதரித்த அருளாளர் கூறுவதை சற்று சிந்தித்து பார்ப்போம். ஒருவர் கூட தான் கூறுவதை நம்பி எழுந்து திறத்தில் திகழ்வதற்கு ஒருவர் கூட தேர்சி பெறவில்லை என்று ஆதங்கப்பட்டார்.
    எழுந்து என்றால் ‘விழித்தல்‘ என்று பொருள் கொள்ள வேண்டும்.

    திறம் என்பதற்கு பொருளாக, “மனிதனில் உறங்கிக் கொண்டிருக்கின்ற தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்துவது” என்று கொள்ள வேண்டும்.

    ‘திகழ்தல்’ என்றால் பிரகாசித்தல், பொலிவுடன் இருத்தல், சிறப்புடன் இருத்தல், விளங்குதல் என்று பொருள். விளங்குதல் என்றால் புரிதல், தெரிதல் என்று பொருள். ஆகவே “எழுந்திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர்” என்றால், மனிதனுள் உறங்கிக் கொண்டிருக்கின்ற தெய்வீக ஆற்றல் விழிப்புற்று, சிறப்புடன் அந்த தெய்வீகத்தை விளங்கச் செய்பவர் யாரும் இல்லை என்று ஆதங்கப்பட்டார். ஆனால் அத்துடன் இருந்து விடாமல், “அஞ்ச வேண்டாம்” என ஆறுதலுடனும், “அனைவரையும் திருத்தி விடுவோம்” என நம்பிக்கைடனும் சொல்கின்றார்.
    பின்னர், 1911ல் அவதரித்த அருளாளரும், “அறிந் தனுபவிக்க இன்றேனும் விரைந்து எழுச்சிபெற்றுய்வீர் !” என்று அது போன்றே கூறுகிறார்.

    “இன்றேனும் விரைந்து எழுச்சிபெற்றுய்வீர்” என்றால், ‘அறியாமையில் இது வரை மனிதனுள் உறங்கிக் கொண்டிருந்த தெய்வீக ஆற்றல் எழுச்சி பெறாமல் இருந்தது. நான் அன்புடன் அழைக்கிறேன்-இப்போதாவது விழிப்பு பெற்று உய்வீர்’ என்று கூறுவதாக பொருள்.

    1874-ல் வள்ளலார் எண்ணியது, 1953ல் (1911+42=1953) நிறைவேறியது. இராமலிங்க சுவாமிகள் எண்ணிய, மக்களைத் திருத்தி விடும் படலத்தை, இயற்கை/இறை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக, அரிய கலையாக இருந்து வந்த அகத்தவத்தை பரவலாக்கியும், மனிதனை திருத்தி, தனக்கும், தன்னால் சமுதாயத்திற்கும், நன்மையே தரத்தக்க, ஒழுக்க வாழ்வு வாழ்வதற்கு, அகத்தாய்வு பயிற்சியினையும் உருவாக்கி கல்வி நிலையங்களுக்கும் கொண்டு சென்றுள்ளது.

    “ஐயப்படாது அகத்தை உணர்ந்தவரை தெய்வத்திற்கு சமம்” என திருவள்ளுவர் மொழிந்துள்ளபடி, அகத்தை உணர்ந்த இராமலிங்க சுவாமிகள் எண்ணியது, இறையே எண்ணியதுதானே! ஆக மொத்தத்தில் அறிவை அறிந்தவர்கள் ‘இவ்வுலக மக்கள் திருந்தி உய்வதற்கு வழியே இல்லையா’ என எண்ணியதற்கிணங்க, “Fraction demands. Totality supplies” என்கின்ற தன்னுடைய நியதிப்படி, இயற்கை/இறை தன் திரு விளையாடலை வேதாத்திரியத்தின் வழியாக அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது. ஆகவே இயற்கையின் எல்லா ஆற்றல்களையும் பயன்படுத்த தெரிந்து கொண்ட மனிதகுலம் அறிவாற்றலான ஒழுங்காற்றலை பயன்படுத்த அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். மனிதன் வாழ்நாளில் அறிய வேண்டியதை அறிந்து இன்பமுற வேண்டும். அதற்காகத்தான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் பிறவியினை அளி்க்கின்றது இயற்கை. இதனை ஓர் அறிஞர் “வினைப்பயனே தேகம் கண்டாய்” என்கிறார்.
    மனிதன் அறிய வேண்டியதை எல்லாம் ‘நான் யார்?’ என்கின்ற வினாவிற்கு விடை கிடைக்கும் போது அறியப்பட்டுவிடும்.

    அவையாவன:

    1) இறை அரூபம். அளப்பரிய ஆற்றல்
    2) இறை பேராற்றலாக, தூய அறிவாக(பேரறிவாக), வற்றா இருப்பாக, காலமாகவும்(Time), இருக்கின்றது.
    3) தன்முனைப்பில்லா நான் (Egoless I ) அதாவது அறிவுடைமையுள்ள நான் கண்டுபிடிக்கப்படும். மனிதனிடமுள்ள (நானில்) உடல், உயிர், அறிவு ஆகிய மூன்றில் நானாக இருப்பது அறிவே என்றும், அதே அறிவு இறையாகும் என்றும், அறிவை அறிந்த ‘நானே’, ‘தன்முனைப்பு அற்ற நானாகும்’.
    இந்தவிளக்கத்தைப் பெறாத, பெற்று நடைமுறைக்கு கொண்டு வராத நான்கள் தன் முனைப்புள்ள நான்களாகும்.
    4) பிற மனிதர்களிடமும் உள்ள அறிவும், இறையே. 720 கோடி உலகமக்களும் வெவ்வேறு நான்கள் இல்லை. ஒரே, ஆனால், உடலளவில் தனித்தனியாகவுள்ள நான்கள். உலக மக்கள் ஒரு மாபெரும் குடும்பம். ஒவ்வொருவரும் சகோதர, சகோதரிகளே.
    5) பிற உயிர்களிடம் உள்ள (தாவரங்கள் முதல் விலங்கினங்கள் வரை) உயிரும் சரி, அறிவும் சரி இறையே. இறையே உயிர்களுக்கெல்லாம் உயிராக திகழ்கிறான்.
    6) சடப் பொருட்களிலும் அணுவாக இருப்பதும், அணுவின் இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பதும் ஒழுங்காற்றலாகிய அறிவாகிய இறையே.
    7) அத்வைதம் தெளிவாக விளங்கிவிடும். ஒன்றே எவ்வாறு பலவாறாக இருக்கின்றது, இருக்க முடியும் என்கின்ற சந்தேகமும் விளங்கிவிடும்.
    8) வாழ்வின் நோக்கம் இறை உணர்வு பெறுவதே என்பது அறியப்படும்.
    9) கோடனு கோடி நட்சத்திரங்கள் அடங்கிய பிரபஞ்சத்திற்கு அப்பால் எல்லையில்லாத அளவிற்கு விரிந்து உள்ள வெளியே (அப்பாலுக்கு அப்பாலாய்) இறையே என அறியப்படும். அது அறிவாக இருப்பதால்அது வெளியாகத் தெரிகின்றது என்கின்ற விளக்கமும் கிடைக்கப் பெறும்.
    10) ‘பிரக்ஞானம் பிரம்மம்’ ‘ அகம் பிரம்மாஸ்மி’, ‘தத்துவமஸி‘ ‘அயம் ஆத்மா பிரம்மம்‘ என்கின்ற மகா வாக்கியங்கள் விளங்கும்.
    பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல், அறிவாக உள்ள அரூபமான இறையை, மனிதன் அறிவைக் கொண்டுதான் உணர முடியும். அறிவைக் கொண்டு பேரறிவை அறியும் பேற்றினையே தமிழ் இலக்கியங்களில் வீடுபேறு எனப்படுகின்றது.
    வீட்டிற்கெல்லாம் வீடு அது. அந்த வீட்டினை அடைவது பேறாகக் கருதப்படுகின்றது. எனவே வீடு பேறு எனப்படுகின்றது.
    அறம் காத்து, பொருள் ஈட்டி, அளவு முறையோடு இன்பம் துய்த்து, வீடு பேற்றை அடைவதே மனிப்பிறவியின் நோக்கம் அல்லது பயன் என்கின்றது தமிழ் இலக்கியங்கள்.
    ஆறறிவாக வாழ்கின்ற மனிதர்களெல்லாம், அதற்கு ஏற்ப பொருத்தமாக, உண்மைப் பொருளுணா்தல் பேறு என்றும், அதுவே பிறவிப்பயனைப் பெறுவதாகும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    அடுத்த ஞாயிறு (18-01-2015) அன்று ‘புகழ்’, ‘உயா் புகழ்‘ பற்றி சிந்திப்போம்.

    Loading

  • வாழ்நாளில் அறிந்து இன்பமுற வேண்டியது-1/2

    வாழ்நாளில் அறிந்து இன்பமுற வேண்டியது-1/2

    அ.வி. 46

    வாழ்க மனித அறிவு                                                                                           வளர்க மனித அறிவு

    11-01-2015 ஞாயிறு

    வாழ்க்கை தோன்றி மறையும் ஒரு நீர்க்குமிழியைப் போன்றது. எனவே மனிதஅறிவு இக்குறுகிய காலத்தில், தான் அறிய வேண்டியதை அறிந்து கொண்டு இன்புற வேண்டும். இன்று உலக மக்கள் தொகை 720 கோடி. பத்து வருடங்களுக்கு முன்னர் உலக மக்கள் தொகை சுமார் 640 கோடி. பத்து வருடங்களில் மக்கள் தொகை 80 கோடி அதிகரித்துள்ளது. இந்த பத்து வருடங்களில் இறந்தவர்களைவிட பிறந்தவர்கள் அதிகமாக இருப்பதால் மக்கள் தொகை 80 கோடி அதிகரித்துள்ளது. ஆனால் முதல் மனிதனிலிருந்து இன்று வரை பிறந்தவர்கள் எத்தனை போ் என சொல்ல முடியுமா? புள்ளி விவரம் இல்லை. இனிமேலாவது, அப்படி ஒரு கணக்கெடுப்பு ஒரு குறிப்பிட்ட வருடத்திலிருந்து ஆரம்பிக்கலாம். கடலிலுள்ள நீரில் எவ்வளவு நீர்த்துளிகள் இருக்கும் என்று சொல்ல முடியாதோ அதுபோல்தான் முதல் மனிதனிலிருந்து இன்று வரை பிறந்துள்ள மக்கள் தொகை எண்ணிக்கையும்.

    ஒவ்வொரு ஆண்டும், பிறந்த நாள் வரும்போது மனிதனின் ஆயுட்காலம் குறைந்து கொண்டே வருகின்றது. இன்று இருப்பவர் அடுத்த 100 ஆண்டுகளில் இருக்கப் போவதில்லை. 100 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர் இன்று இல்லை.(மனிதனின் ஆயுட்காலம் 100 என எடுத்துக் கொண்டு இது சொல்லப்படுகின்றது) நின்றால் ஒரு அடி சொந்தம். படுத்தால் ஆறடி சொந்தம். இது வேதாந்தமில்லை. தத்துவமில்லை, ஒதுக்கித் தள்ளுவதற்கு. இதுதான் எதார்த்தம்.
    இயற்கையாகிய–பேராற்றலிருந்து உருவானவர்கள்தான், இத்தனை கோடானுகோடி உலக மக்களும். அதே இயற்கை ஆற்றலிருந்துதான் மனிதன், நீர்க்குமிழ் போல், மறையக்கூடிய வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா ஆற்றல்களையும் பெறுகிறான். சூரிய ஆற்றல், வெப்ப ஆற்றல், காந்த ஆற்றல், மின் ஆற்றல், எரிசக்தி ஆற்றல், இயந்திர ஆற்றல், இரசாயன ஆற்றல், இவ்வாறாக பல்வேறு ஆற்றல்-வளங்களை வாழ்வின் வளமாக மாற்றி அனுபவித்துவிட்டு ஒரு நாள் மறைகிறான். நீர்க்குமிழியான உலகியல் வாழ்க்கைக்கு வேண்டியவைகளை மட்டுமே இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்கிறான் மனிதன்.

    720 கோடி மக்கள் உலகில் வாழ்கிறார்கள் என்றால் என்ன பொருள்? 720 கோடி மக்களும் 720 கோடி தெய்வீக ஆற்றலின் கருவூலங்கள் (Treasure-House of Divine Energy). இவ்வாறாக 720 கோடி தெய்வீக ஆற்றலின் கருவூலங்களாக இருந்தும், அதனை அறியாது அறியாமையில் வாழ்கின்றது உலக சமுதாயம். இத்தகைய தெய்வீக ஆற்றலை, ஒவ்வொரு மனிதனும் கொண்டிருந்தாலும், “விஞ்ஞானத்தை நோ்வழியில் பயனாய்க் கொள்ளும் நெறி முறைகள் இணைந்த வாழ்வு மலர வேண்டும்”, என்று மகரிஷி அவா்கள் கூறுவது போல் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தெய்வீக ஆற்றலை நேர்வழியில் பயன் படுத்துகின்ற நெறிமுறைகளைக் கற்க வேண்டும். 720 கோடி தெய்வீகக் கருவூலங்களின் ஆற்றல்களும் வீணாகிக் கொண்டிருக்கின்றன. ஆகவே தான் இன்னமும் மனித குலம் தன் பூர்விக சொத்தான(hereditary wealth) அமைதியினை அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றது.

    முதல் மனிதன் தோன்றி இன்று வரை எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்திருக்கும். இன்னமும் மனித குலத்தில், தன்னுடைய பூர்வீக சொத்தான அமைதி எனும் (ஆதியில் இருப்பாக இருந்தது) ஆற்றலை மட்டும் எல்லோராலும் முழுவதுமாக அனுபவிக்க முடியவில்லை. பூர்வீக சொத்தான அமைதியை மட்டும் ‘எல்லோராலும் முழுவதுமாக’ அனுபவிக்க முடியவில்லை என்றால் வெகு சிலரே தனது பூர்வீக சொத்தான அமைதியை முழுவதுமாக அனுபவிக்கின்றனர் என்று பொருளாகின்றது. ஆம். அப்படித்தான். முழுவதுமாக என்பதால் அந்த வெகு சிலரைத்தவிர மற்றவர்களில் ஒரு சிலர் பூர்வீக சொத்தை அனுபவித்தாலும், அவர்களும் குறைவாகவேதான் பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்கின்றனர் என்றாகின்றது. ஆம். மற்றவர்களில் உள்ள அந்த வெகு சிலரும் பூர்விக சொத்தான அமைதியை அனுபவித்தாலும் அவர்களும் அறிந்து அனுபவிப்பதில்லை. அறிந்து அனுபவிக்காதலால் முழுவதுமாக அமைதியை அனுபவிக்க முடியவில்லை. குறைவாகவே தான் அனுபவிக்கின்றனர், பெரும்பாலோர் பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்காமலேயே மடிந்து விடுகின்றனர், காரணம் என்ன?

    தன் பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்கின்ற அந்தவெகு சிலரின் எண்ணிக்கையை மக்கள் தொகையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அது விரல் விட்டு எண்ணுகின்ற அளவிலேதான் இருக்கும். அவர்களால் மட்டும் எவ்வாறு தங்களது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவிக்க முடிகின்றது? எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள் அவர்கள். அவர்கள் எதார்த்த வாழ்வு வாழ்பவர்கள்.

    எதார்த்தம் என்றால் என்ன? எதார்த்தம் என்றால் உள்ளது உள்ளபடி, நடைமுறைக்கு முரண்படாதது. அப்பட்டமான உண்மை (naked truth) என்று பொருள். உள்ளதை உள்ளபடி புரிந்து கொண்டு நடைமுறைக்கு ஏற்றபடி வாழ்கின்றவர்கள் அந்த முதல் ரக வெகு சிலர். அந்த முதல் ரக வெகு சிலர் உலகநியதியையும், இயற்கையின் தன்மாற்றத்தின் சாராசாம்சத்தையும் விளங்கிக் கொண்டு வாழ்பவர்கள். கீதாசாரம் கூறும் இயற்கையியலாகிய வாழ்வியல் உண்மைகளை நினைவு கூர்வோம். .இயற்கையியலாகிய வாழ்வியல் என்பதால் எல்லோருக்குமே பொதுவானதுதானே.

          கீதா சாரம்

    FFC_46-geetha chaaram-

    சமுதாயம் இயற்கையின்/இறையின் ஆற்றல்களையும், வளங்களையும் வாழ்வின் ஆற்றலாகவும், வளமாகவும் மாற்றி வாழத் தெரிந்து கொண்டதே தவிர, இயற்கையின்/இறையின் முதன்மையான ஆற்றலான ஒழுங்காற்றலான அறிவாற்றலை பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை. இதுதான் இன்றைய, இதுவரை வந்துள்ள சமுதாயத்தின் குறை. காரணம், மனித அறிவு இதுவரை வாழ்வின் நோக்கம் விஞ்ஞான பூர்வமாக அறியவில்லை. இதனால் அறிவிற்கு மூன்று குறைபாடுகள் வந்துவிட்டன. அவையாவன அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம்.(இது பற்றி தனியாக வேறொரு சமயத்தில் விரிவாக அறிவோம்.) ஒழுங்காற்றலான அறிவாற்றலை பயன்படுத்திக்கொள்ள,

    அறிவின் இருப்பிடம் அறிய வேண்டும். அறிவு மனிதனிடம் இருக்கின்றது. ஆனால் அந்த அறிவின் இருப்பிடம் அறிய வேண்டும்.
    அறிவின் பூர்வீகம் அறிய வேண்டும். அறிவு, மனிதன் உள்பட உயிரினங்களுக்கும் எங்கிருந்து வந்தது என அறிய வேண்டும்.

    “காக்கைக் குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்கின்ற மகான் பாரதியின் கூற்று எவ்வாறு அறிவியல் உண்மையைக் கொண்டதாக உள்ளது என்று அறிய வேண்டும். அதுபோல் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்கின்ற திருமந்திரம் எவ்வாறு அறிவியலைக் கொண்டதாக உள்ளது என்றும் அறிய வேண்டும். அறிவின்
    இருப்பிடம் அறிந்து கொண்டால், ஒழுங்காற்றலான அறிவாற்றலை ஒழுக்க நெறியோடு முறையாகப் பயன்படுத்தலாம். அறிவின் இருப்பிடம் அறியும் போது, மனிதஅறிவு வாழ்நாளில், தான் அறிய வேண்டியதையெல்லாம் அறிந்துவிடும். நான் யார் என அறியப்பட்டுவிடும். அறிவு என்றாலே, அதன் இயல்பு அறிதலாகும். அவ்வாறு இருக்கும் போது, அறிய வேண்டியதான, தன்னுடைய மூலத்தை, பூர்வீகத்தை அறியாது இருந்தால் அறிவு எவ்வாறு தன் பூர்விக சொத்தை அனுபவிக்க முடியும்? நான் யார் என அறிவதால் எல்லா நன்மைகளும் வந்து சேரும். இப்போது சுவாமி சிவானந்த பரமஹம்சர் அருளியுள்ளதை நினைவு கூர்தல் நலம் பயக்கும்.

    “தன்னை உணராப்படிப்பு எதுவாயினும் பொருளற்றதே. தன்னை உணர, தன்னைத் தான் படிக்க வேண்டும். தன்னைத்தான் படிக்கும் கலையே, தன்னையறிவதே ஞானோதயம் – கைவல்யம்!! ”

    — சுவாமி சிவானந்த பரமஹம்சர்.

    மற்றொரு அறிஞரான டால்ஸ்டாய் கூறுவதையும் நினைவு கூர்வோம்.

    “எல்லாக் கலைகளையும் விட வாழ்க்கை மிக உயா்ந்தது. எந்த மனிதனின் வாழ்க்கை பூரணத்துவம் அடைகின்றதோ, அவன்தான் மிகச்சிறந்த கலைஞன் என்று கூற முடியும்”

    — டால்ஸ்டாய்.

    வரும் புதனன்று(14-01-2015) வேதாத்திரி மகரிஷி அவர்களின் மக்களுக்கு விடுத்துள்ள அழைப்புக்கவியையும், அருட்சோதி வள்ளலார் அவா்கள் திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது மொழிந்ததையும், வாழ்வில் அறிய வேண்டியவைகளையும் அறிவோம்.

    Loading