FFC-300(264) சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா?3/3

வாழ்க மனித அறிவு!                                                                   வளர்க மனித அறிவு!!

lotus

FFC-300(264)

26.07.2020-ஞாயிறு

சிந்திக்கப் பழகுவதற்கு பயிற்சி அவசியமா? 3/3

 

[rev_slider home-slider-1]

 

சென்ற அறிவுக்குவிருந்தில்

1) சிந்திக்க வினாக்கள்

2) சிந்திக்க அமுதமொழிகள்

3) சிந்திக்க அறிஞர்களின் கவிகள்.

4) சிந்திக்க குரு – சீடர்உரையாடல்.

ஆகியநான்கு செய்முறைப்பயிற்சிகள் (PRACTICALS) மற்றும் அதன் நோக்கங்களைஅறிந்து கொண்டோம்.  இனி அடுத்த பயிற்சிக்குள் செல்வோம்.

5. சிந்தித்தலின்அன்றாடசுயசோதனை:

இப்பயிற்சியின் நோக்கம்:

   அவரவர்களே தங்களை சோதித்துக்கொள்ளுதலாகும்.  பயிற்சி என்றிருந்தால் அதன் முடிவில் தேர்வும், தேர்ச்சியும் இருக்க வேண்டுமல்லவா?

    நான்கு பயிற்சிகளையும் செய்து வரும்போது, தினந்தோறும் இரவில் தாங்களே சோதனை செய்து சிந்தித்தலில், தான் அடைந்துள்ள முன்னேற்றத்தை அறிந்து கொள்வதாகும்.

   அதாவது பயிற்சியின் முடிவில் சிந்தனை என்பது இயல்பாகிவிட வேண்டும்.

   எவ்வாறு உயிர் வாழ்வதற்கு தொடர்ந்து சுவாசித்தல் அவசியமாகின்றதோ, அதுபோல் சிந்தனை என்பதும் வாழ்க்கையில் அவசியமாகிவிடவேண்டும்; இயல்பாகிவிட வேண்டும்.

    சிந்தனையுடன் செயலும்,  செயலுடன் சிந்தனையும் ஒன்றுக்கொண்டு பிரியாது இணைந்திருக்க (பந்தித்து நிற்க-உறவு கொண்டிருக்க வேண்டும்). இது நல்லோர் இயல்பு என்றும், பண்பு என்றும் கூறுகிறார் சிந்தனைச் செல்வரும், மற்றவர்களையும் சிந்தனைச் செல்வர்களாக்கி, மனிதனை தெய்வ நிலைக்கு உயர்வதற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும்  சிந்தனைச் சிற்பியுமான வேதாத்திரி மகரிஷி அவர்கள். நல்லோர் இயல்பு பற்றி அவரே மொழிவதனைக் கேட்போம்.

பயண வாகனமான ரயில் வண்டிக்கு இரண்டு தண்டவாளங்கள் அவசியம்போல், வாழ்க்கை எனும் அறிவின் பயணத்திற்கு சிந்தனையும், செயலும் அவசியம். 

சிந்தனை செய்து விட்டு செயலில் இறங்காமலும் இருக்கக் கூடாது. 

செயல் செய்யும் முன்னரே சிந்தித்தும் செயல்பட வேண்டும்.  அப்போதுதான் அறிவின் திறனான நுண்மாண் நுழை புலன் வெளிப்படும்.

இவ்வாறு பழகி வர வர,  வினைகள்  நல்லவைகளாகவே இருக்கும்.  பழைய தீயவினைப்பதிவுகளும் செயலுக்கு வராமல் தடுக்கப்பட்டு, எப்போதும் பேரறிவின் அயராவிழிப்புணர்வு நிலையிலேயே இருக்கலாம்.  

எவ்வாறு தன்னை சோதித்துக் கொள்ள வேண்டும்? 

இப்பயிற்சிக்கு,  குறிப்பெடுத்துக் கொள்வதற்காக, ஒரு நாட்குறிப்பை (diary)  வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் காலையிலிருந்து இரவு படுக்கைக்குச்செல்லும்வரை நீங்கள் சிந்தித்ததை எழுதுங்கள்.  

‘ஒன்றே பலவாகியும், அந்த ஒன்றே எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்ற’ அத்வைத விஞ்ஞானத்தை அறிந்ததால், காலை உறக்கத்திலிருந்து விழித்ததிலிருந்து இரவு உறங்கும் வரை

    சந்திக்கின்ற மனிதர்கள்,

   கண்ட காட்சிகள்,

   நடந்த நிகழ்வுகள்,

  தான் செய்த செயல்கள்

ஆகிய அனைத்திலுமே ஒன்றாகிய இயற்கையை/இறையின் திருவிளையாடல்களை  காணக்கூடிய வல்லமை இருப்பதால், விழிப்புணர்வோடு சிந்திக்க முடிவதால், ஒவ்வொரு நிகழ்விலும் கண்ட உண்மைகளை எழுதி வாருங்கள்.

ஏற்கனவே அறிஞர்களின் வாயிலாக அறிந்து கொண்டதில் எது உங்களுடன் ஒத்து வருகின்றதோ அதனையும் எழுதுங்கள்.

அதுவரை அறிஞர்களின் சிந்தனைகள் அவருடையதாக இருந்து வந்தது, இன்று உங்களுடையதாகிவிடுவதை உணரலாம்.

நினைவுபடுத்தி நீங்கள் தெரிந்துகொண்டது, மற்றும் நீங்கள் சிந்தித்தது ஆகியவைகளை குறித்து வாருங்கள்.  

உலாவச் செல்லும்போதுகூட  நாட்குறிப்பை எடுத்துச்செல்லுங்கள்.

சில நேரங்களில் அரிய கருத்துக்கள் உதிக்கும்.

அவற்றைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இல்லையெனில் அக்கருத்துக்கள் மறந்து போகலாம்.

மீண்டும் நினைவிற்கு வராமல் கூட போகலாம்.

ஏன் வராமல் போகின்றது? எந்த அலைச்சுழலில் ஒரு எண்ணம் வந்ததோ, மீண்டும் அந்த அலைச்சுழல் வரும்போதுதான் அவ்வெண்ணம் மீண்டும் வரும். அது பிறருடைய எண்ணங்களாக இருந்து நம்முள்ளே நுழைந்திருக்கலாம்.  அதனை சிந்தித்து சரியாக உள்ளதா என உறுதிப்படுத்தி நம்முடையதாக்கிக் கொண்டால் அது மறந்து போகாது. சரியில்லை எனில் ஒதுக்கிவிடலாம். 

 உதாரணத்திற்கு ஒன்றிரண்டைப் பார்க்கலாம்.

  பழக்கம்: 

    பழக்கத்தை(Habits) எடுத்துக் கொள்வோம். 

    ‘ஒரு செயலின் விளைவு நல்லதல்ல’ என்று

     அறியாமலோ, (அதாவது அறியாமையில் விளைவை அறியாமலோ)

                      அல்லது

     அறிந்து அலட்சியப்படுத்தியோ

                      அல்லது

      உணர்ச்சிவயத்தாலோ,

அச்செயலை   மீண்டும் மீண்டும்  செய்து பழகிவிட்ட பிறகு, ‘அச்செயல் நல்லதல்ல’ என்று அறிவிற்கு எட்டிய பிறகு, அதிலிருந்து விலகிவிட வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான பயிற்சிகளை செய்து வரும்போது, பல இடர்பாடுகள் வருவதனைக் காண முடியும்.  திருந்த வேண்டும் என்று உளமார நினைக்கின்றவர்கள்  இச்சிரமத்திற்கு உள்ளாவர்.   

     ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒருசில வேண்டாத பழக்கங்கள்  இருக்கலாம். சிலருக்கு வேண்டாத பழக்கங்கள் நிறைய இருக்கலாம். அப்பழக்கத்தை மாற்றி அமைக்க முயற்சி செய்து வெற்றி பெறாமல் போனால் ‘இப்பழக்கத்தை நம்மால் மாற்றி அமைக்க முடியாது’ என்று  தீர்மானித்து,  தீமை தரக்கூடிய அப்பழக்கத்தை மீண்டும் தொடர ஆரம்பித்து விடுவதனைக் கண்கூடாகப் பார்க்கலாம். 

   அந்நிலையில் இருக்கும் ஒருவர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அருளியுள்ள பல்லாயிரம் அமுத மொழிகளில் ஒன்றைான ‘பழக்கத்திற்கும் விளக்கத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கின்ற சீவன் மனிதன்’ என்பதனை கண்ணுறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

     இப்போது, நாம்   தான் விடமுடியாத பழக்கத்தையும், ‘பழக்கத்தைப்’ பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.  அவ்வாறு இணைத்துப் பார்க்கும்போது தனக்கு மட்டும் அந்நிலை இல்லை, பொதுவாகவே எல்லா மனிதர்களுக்குமே அந்நிலை உள்ளது என்பதனை அறிய முடியும். 

எனவே  ‘திருந்த முடியவில்லையே’ என்கின்ற நம் தாழ்வு மனப்பான்மை நிலையைத் தள்ளி வைத்துவிட்டு,  

       மீண்டும் வேண்டாத பழக்கத்தை மாற்றி அமைப்பதற்கு,

     கைவிட்டு விட்ட பயிற்சியினை மீண்டும்   தொடர்வதற்கு உந்துகோலாக அமையும்.  

   தன்னம்பிக்கை பிறக்கும். இறுதியில் வெற்றியும் பெற முடியும். ஒன்றில் வெற்றி பெற்று விட்டால்,  மற்ற வேண்டாத பழக்கங்களை, விட்டுவிடுதலில் வெற்றி பெறுவது சுலபமாகிவிடும்.  இது எதனால் சாத்தியமாகின்றது?  சிந்திப்பதால் சாத்தியமாகின்றது.  ‘பழக்கத்தை’ பற்றி மற்றொரு அமுதமொழியின் வாயிலாகக் கவனிப்போம்.

மனிதனிடம் உள்ள ஒரு தீமை பழக்கம்”   . . .வேதாத்திரி மகரிஷி

தற்போதைய மனிதனையும், அவனிடம் இருக்க வேண்டிய மனிதத்தையும், ஆனால் நடைமுறையில் அவனிடம் காணப்படும் மனிதத்தையும் ஆராய்ந்து உதிர்த்திருக்கிறார் உலக அமைதி அறிவியல்(Science of World Peace) அருளிய வேதாத்திரி மகரிஷி அவர்கள். சமுதாயத்தின் இன்றைய நிலைக்கு காரணம் ‘மனிதனிடம் உள்ள ஒரு தீமை பழக்கம்’ என்பதுதான்.  780 கோடி மக்களைக் கொண்டதுதானே இன்றைய உலக சமுதாயம்.

    ஒழுக்கத்தில் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்று இரண்டு இருப்பதுபோல் பழக்கத்தில் நற்பழக்கம், தீயபழக்கம் என்று இரண்டு உள்ளன. தீமையைத் தருமானால் அது தீயபழக்கம். நன்மையைத் தருமானால் அது நற்பழக்கம். ‘பழக்கம்’ என்று மேற்கண்ட அமுதமொழியில் மகரிஷி அவர்கள் பொதுவாகக் கூறக்காரணம் பழக்கத்தின் வலிமையை  உணர்த்துவதற்காகவே.    

நல்வழி நடப்பதற்கு அறிவுரை வழங்கப்பட்டும்,

அதனை செவிமடுக்காமல் இருப்பது ஒரு நிலை.  

செவி மடுத்தாலும், நல்வழிக்கு திரும்புவதற்கு  பழகிய பழைய வேண்டாப் பழக்கங்கள் (பழக்கப்பதிவுகள்) தடையாக இருந்து கொண்டு அழுகணிசித்தருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் சம்பவிப்பது மற்றொரு நிலை. ஆனால் அவருக்கு அச்சம்பவங்கள் ஏற்பட்டாலும் உறுதியாக இருந்து வெற்றி பெற்றிருக்கிறார் அவர். அதனால்தான் அவரை நாம் இப்போதும் நினைவு கூர்கிறோம். 

பெற்றோர்களே முதல் ஆசிரியர்கள்:

 ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” “தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும்”

என்கின்ற ஆன்றோர் மொழிகளைக் கவனிக்க வேண்டும்.  எந்த நற்பழக்கத்தையும் இளம் வயதிலேயே பழக வேண்டும்.  இதற்கு, முதல் ஆசிரியர்களான பெற்றோர்களின் கடமை பெரும் பங்கு அளிக்கின்றது.  பிறகு ஐந்து வயதிலிருந்து  கற்பிக்கப்படும்  ஒழுக்கவியல் கட்டாயப் பாடத்தால்தான் ஒழுக்கத்தை பழக்கிவிடச்செய்து ஒழுக்கப்பழக்க அறிவினை ஏற்படுத்த முடியும்.

அமுத மொழிகள் அபயம் தருபவை:

 ‘அமுத மொழிகள் அபயம் தருபவை’ என்று அறிஞர்கள் கூறுவதனை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.  அபயம் என்றால் என்ன?  அபயம்(அ+பயம்=பயமின்மை) என்றால் அச்சமின்மை, அடைக்கலம், பாதுகாப்பு(refuge, protection) என்று பொருள். 

குருவருள் இன்றேல் திருவருள் இல்லை. ஆகவே மகான்களின் அமுத மொழிகள் அபயம் தருகின்றன என்றால் என்ன பொருள்?

மகான்களின் சன்னிதானத்தில்(அமுதமொழிகளில்)  அடைக்கலம் புகுதல் என்றாகின்றது. அடிமைப்படுத்திக் கொள்வது என்று பொருளல்ல. மகரிஷி அவர்கள் கூறும்  ‘சுயமாய் சிந்தித்தே தெளிவாய்’ என்பதற்கான   ‘information, confirmation, transformation’ ஆகிய மூன்று வழிகளைப் பின்பற்றி ஏற்றுக்கொள்வதாகும்.

அறிவு, குரு/மகான்களிடம் அடைக்கலம் புகுந்தால் என்ன பயன்?  எப்போதும், பூதஉடலோடு வாழும்போதும் சரி அல்லது பூதவுடலை நீத்தநிலையிலும் சரி, அவர்களின் சூட்சும–கண்காணிப்பு நம்மீது இருந்து கொண்டு நம்மை நற்பாதையில் வழிநடத்தும்.  நற்பாதையில் வழிநடத்துதல் என்றால்  தவறான பழக்கம்  செல்லவிடாது தடுக்கும். அதாவது எச்சரித்துக் கொண்டே இருக்கும்.  அது பாதுகாப்புதானே! அருட்காப்பு தானே!

எனவே அமுதமொழிகளை  சிந்தித்து பின்பற்ற வேண்டியது அறிவின் பயணமாகிய வாழ்வில்  அவசியம்தானே (in Journey of Consciousness)! மேலும் குரு/மகான்களின் அமுதமொழிகளில் தோய தோய, அது ‘எப்படி வாழ வேண்டுமோ அப்பாதைக்கு  மாற்றிக்கொள்வதில் ஏற்படும்  பயத்தை நீக்கி அஞ்சாமல் இருக்கவும்,  பழைய பழக்கப்பதிவால் தடங்கல்கள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றி பெறச் செய்யவும் உதவும்.

‘Fear is the Greatest Sin” என்பார்  வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

சிந்தனை பற்றி வேதாத்திரி மகரிஷி அவர்கள்:

இதுவரை இப்பூவுலகம் காணாத மாபெரும் சிந்தனாவாதியான வேதாத்திரி மகரிஷி அவர்கள் ‘சிந்தனை’ பற்றி கூறுவதனை நினைவுபடுத்திக்கொள்வோம்.  

1) சொல்லால் மட்டும் நம்பாதே, சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்.  

2) தெய்வத்தைப்போற்றி வழிபாடு செய்து வாழ்பவர் சிந்தனையும் மேற்கொண்டால் சிறந்துய்வார்.

3) இன்பத்தும் துன்பத்தும்,  இயற்கையும் கற்பனையும், சிந்தித்து அறிபவன்,  சிறப்பாகவாழ்வான்.

4) சிந்தனையுடன் செயலும், செயலுடன் சிந்தனையும் நிற்கப் பழகுதல் நற்பண்பு. 

5) சிந்தனையாளர்களின் கடமைதான் முதன்மையானது.   மற்றோரும் சிந்தனையில் உயரவேண்டுமெனில், அதற்குச் சிந்தனையாளர்கள்தான் வழிகாட்ட வேண்டும்.

மேலும் சிந்தனையின் சிறப்பை வலியுறுத்த 1985 சனவரி மாத அன்பொளி இதழில் வெளிவந்துள்ள, சென்னை தலைமை மன்றத்தில் 1984 ல் ‘சிந்தனை மூலம் சீரான வாழ்க்கை’ என்கின்ற தலைப்பில் மகரிஷி அவர்கள் ஆற்றிய உரையின்  ஒரு சிறு பகுதியினை நினைவு கூர்வோம்.

ANBOLI95-3-14-11-2017

சிந்தனை செய்வது அவசியம் தானா; அது தேவைதானா; அப்படியென்றால் எப்படி அதைச் செய்ய வேண்டும்?”  என்றால் அது மிக மிக அவசியம்; தேவை.  அளவு, முறை கண்டு வாழத் தெரிந்து கொண்டோமேயானால் உலகமே அமைதி நிலைக்கு வந்துவிடும்.  இந்த தத்துவம் கடினமானதே அல்ல.  முனைந்து பயின்றால் இயல்பாகிப்போகும்.   ஏற்கனவே உள்ள பழக்கப்பதிவுகளின் காரணமாக தொடக்கத்தில் கடினம் போலத் தோன்றும்—– மோட்டார் சைக்கிளை start செய்வதுபோல,  வண்டி ஓடத் தொடங்கிவிட்டது என்று சொன்னால் balance தானாக வந்துவிடும்.

நாம் சிந்தனை செய்து கொண்டே இருக்கும் பொழுது அந்த சிந்தனையில் தவறு வந்தால் அதைத் திருத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும்.  சிந்தனையே  இல்லாமல் வாழ்வது, மிதந்து கொண்டிருப்பதற்கு ஈடாகும்.  வெள்ளம் வந்தால் நம்மை அடித்துக்கொண்டு போகும்; அவ்வளவுதான்; நாம் எங்கே போகின்றோம் என்று தெரியாது; எதை பிடிக்க வேண்டும் என்று தெரியாது.  இந்த நிலையிலிருந்து மாறி நல்ல வெற்றிகரமான வாழ்க்கை வேண்டும் என்றால் சிந்தனை செய்ய இன்றே, இப்பொழுதே தொடங்க வேண்டும்.”

                                                               … வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

வாழ்நாளில் தனது வம்சாவளிக்கு சொத்து சேர்த்து வைப்பதுபோன்று,  ஒவ்வொருவரும் தனது அனுபவம், ஆராய்ச்சி, சிந்தனை ஆகியவற்றைக் கொண்டு  ஐம்பது அமுத மொழிகளையாவது உருவாக்கித் தருவோம்.

சிந்திப்போம்   சீர்பெறுவோம்.

வாழ்க வையகம்         வாழ்க வளமுடன்

வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு.

வாழ்க அறிவுச் செல்வம் வளர்க அறிவுச்செல்வம்.

வாழ்க திருவேதாத்திரியம்  வளர்க திருவேதாத்திரியம்.

வாழ்க அறிவுச் செல்வம்!                                           வளர்க அறிவுச் செல்வம்!!

Loading

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments