February 2015

Monthly Archives

  • ஏன் ‘அறிவே’  தெய்வம் எனப்படுகின்றது?

      வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     ஏன் ‘அறிவே’  தெய்வம் எனப்படுகின்றது?

    அ.வி.எண்.56 — (1/?)

     

    11-02-2015 – புதன்

     

          வாழ்க வளமுடன்.

          சுமார் பதினேழு வருடங்களுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை நினைவுபடுத்திக் கொண்டு ‘ஏன் அறிவே தெய்வம் எனப்படுகின்றது?’ என்கின்ற  சிந்தனையைத்தொடங்கலாம்.   அந்த சம்பவம்தான் இன்றைய சிந்தனைக்கான தலைப்பிற்கு காரணமாக உள்ளதால் அந்த சம்பவம் என்ன என்று அறிந்து கொள்ளலாம்.

        பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உடற் பயிற்சி கற்றுக் கொள்வதற்காக தனது தாயாருடன் மன்றத்திற்கு வந்தாள்.  வரும்போது வாசற்கதவில் ஒட்டப்பட்ட இருந்த  ‘அறிவே தெய்வம்’  என்கின்ற ‘Sticker’ அவளுடைய கண்களில் பட்டது.  எத்தனையோ அன்பர்கள் அந்த வாசகத்தை பார்த்துவிட்டுத்தான் உள்ளே வருகின்றனர்.  மற்றவர்களுக்கு எழாத ஒரு வினா இந்த பெண்ணிற்கு மட்டும் மன்றத்திற்கு வந்த முதல் நாளன்றே . எழுந்துவிட்டது?  ‘அறிவே தெய்வம்‘  என்கின்ற வாசகம் அந்தப் பெண்ணை ஈா்த்தது.  அவளது அறிவை சிந்திக்க வைத்தது.

        அந்த பெண்ணிற்கு அப்போது பதினேழே வயதுதான் என்றாலும், அவள் ஏற்கனவே சுவாமி விவேகானந்தர் மீது பக்தியும், மரியாதையும் கொண்டிருந்தாள்.  சிறுமியாக இருக்கும்போதே யாருடைய தூண்டுதல் இன்றி, தானாகவே சுவாமி விவேகானந்தரின் நூல்களை வாங்கிப் படித்திருக்கிறாள்.  ஆகவே அவள் “எல்லாமே தெய்வம்” என்கின்ற அளவிலே அத்வைதம் பற்றி அறிந்திருந்தாள். இப்போது அவள் வினவிய வினாவிற்கு வருவோம்.

     ‘எல்லாமே தெய்வம்’ என்று அத்வைதம் கூறும் போது அறிவும் தெய்வம் என்றுதானே கூறவேண்டும்,  ஏன் அறிவே தெய்வம் எனப்படுகின்றது” என்பதே அவள் தொலைபேசியில்  கேட்ட  வினா.  தெய்வமே எல்லாமாகவும் இருக்கும்போது, அறிவும் அந்த எல்லாமாக இருப்பதில் ஒன்றுதானே. அப்படியிருக்கும் போது அறி-வும்தெய்வம் என்று கூறாமல் அறி-வே தெய்வம் என அறிவை மட்டும் தனிமைப் (single out) படுத்தி ஏன் கூறப்படுகின்றது என்பது அவளுடைய வினாவின் அர்த்தம்.  இது நியாமான வினாதானே?

       இந்த வினாவிற்கான விடையை புரிந்து கொள்ள வேண்டுமெனில், வேதாத்திரிய சுத்தவெளி விஞ்ஞானம் முன்னரே தெரிந்திருக்க வேண்டும்.  அப்பெண்ணிற்கு அதெல்லாம் தெரியாது. இருப்பினும் வினா கேட்கப்பட்டுவிட்டது.  பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.  அதுவும் தொலைபேசியிலே விடை சொல்ல வேண்டும்.

          எது தெய்வமாக இருக்க முடியும் என்கின்ற காரண முடிவிற்கு (logical conclusion) வருவது எப்படி என்று சொல்லி,

          அவள் பள்ளியில் படித்த அறிவியலைக் கொண்டு  அணுவின் (chemical atom) அமைப்பை நினைவு படுத்தி,

    அந்த அணு எவ்வாறு தோன்றியிருக்கக்கூடும் என்று சொல்லி,

    அணுவிற்கு மூலம் வெளி என்று ஒருவாறு சொல்லி,

    அந்த வெளியின் தன்மைகளில் அறிவு ஒன்றாகவும்,

          அந்த ஒன்றே எல்லாவற்றிலும், அதாவது உயிரற்ற சடப்பொருட்களிலும் மற்றும் உயிருள்ள சீவன்களிலும் பிரதானமாகவும்  இருப்பதால்  அறிவே தெய்வம் எனப்படுகின்றது என விளக்கம் முப்பது நிமிடங்களில் கொடுக்கப்பட்டது.

          இருப்பினும் அந்த பெண்ணிற்கு  ‘எல்லாமே தெய்வம்’ என்பது தெரிந்து ஏற்புடையதாக இருந்தாலும், ‘எவ்வாறு எல்லாமே தெய்வம்’ எனப்படுகின்ற வேதாத்திரிய சுத்தவெளி விஞ்ஞானம் (தத்துவம்) அவளுக்குத் தெரியாத நிலையில் எந்த அளவில் அந்த விடை அவளுக்கு ஏற்புடையதாக இருந்ததோ தெரியவில்லை.  ஆனால் அப்போது அவளுக்கு விளங்காவிட்டாலும் அது பின்னர் ஒரு நாள்  விளங்கிவிடும் என்று வாழ்த்து கூறப்பட்டது.  இன்றைய அறிவிற்கு விருந்தில் அந்த வினாவிற்கான பதிலை அறிவதிலும், அப்படியொரு வினா எழுப்பிய அந்த அறிவின் சிறப்பையும் நினைந்து மகிழ்வோம்.

       வேதாத்திரிய இறைநிலை விஞ்ஞானம்   ‘வெளியே’ (Eternal Space) தெய்வம் எனக்கூறுகின்றது.  அந்த வெளி ஒன்றுமில்லாதது அல்ல.  அந்த வெளியே இறை என்றும், அது  நான்கு வளங்களைக் கொண்டது என்கின்றது வேதாத்திரியம்.

     “வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும்

    வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம்”            என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

      இந்த நான்கு வளங்களைக் கொண்ட வெளிதான் தன்னிறுக்கத்தால் நொறுங்கி துகள்களாகி, பின்னர் துகள்கள் ஒன்று சேர்ந்து விண்ணாகி, காற்றாகி, நீராகி, நெருப்பாகி, மண்ணாகியது.  பிறகு ஓரறிவிலிருந்து ஆறு அறிவு உயிரினங்களாகியுள்ளது. இவ்வாறிருக்கும்போது  எதனைத் தெய்வம்  என்று  சொல்வது?  எல்லாமே தெய்வம்.  தெய்வமேதான் எல்லாமாகவும் உள்ளது.  இப்பிரபஞ்ச மூல ஆற்றலே தெய்வம் எனலாமா? அல்லது பிரபஞ்ச மூல ஆற்றலின் நான்கு வளங்களான வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் ஆகியவை தெய்வம் என அழைப்பதா? அல்லது வெளியின் வளங்களைத் தனித்தனியாக பிரித்து தெய்வமென்பதா?

    அதாவது,

    வற்றாயிருப்பே தெய்வம் என்பதா?

    அல்லது

    பேராற்றலே தெய்வம் என்பதா?

    அல்லது

    அறிவே (பேரறிவே) தெய்வம் என்பதா?

    அல்லது

    காலமே தெய்வம் என்பதா?

    இவற்றில் எது பொருத்துமாக உள்ளது?  அறிவே தெய்வம் என்பது பொருத்தமாக இல்லையா?  பொருத்தமாக இருப்பதால் தான் அறிவே தெய்வம் எனப்படுகின்றது.  மற்ற வளங்களை நினைந்து, இறையை போற்றாமல் இல்லை.  எல்லாம் வல்ல தெய்வமது என்கிறோமே!  எல்லாம் வல்லது என்றால், அது வற்றாயிருப்பையும் பேராற்றலையும் தான் குறிக்கின்றது.    ஆதிநிலையின் வளமாக, வற்றாயிருப்பாக பேராற்றல் மட்டுமே   இருந்து, அறிவு இல்லாதிருந்தால்

    1)   இந்த பிரபஞ்சமும் உருவாகியிருக்க முடியாது.

    2)   அறிவைக் கொண்டு உணர்கின்ற உயரினங்களும் உருவாகியிருக்க முடியாது,

     

    எப்படி?

    உயிர்களுக்குச் சான்று உணர்வு. அந்த உணர்வை உணர்வது அறிவு. அப்படியிருக்கும் போது, உணா்கின்ற அறிவு, உயிர்களுக்கு எங்கிருந்து வந்திருக்க முடியும்?  உயிர்களுக்கு மூலமும் அந்த ஆதிநிலைதான். ஆகவே ஆதிநிலையில்  அறிவு இருந்ததால்தான் அதுதான் உயிர்களிடம் அறிவாக வந்துள்ளது.  எனவே ஆதிநிலையில் அறிவு இல்லாதிருந்தால் உயிர்களே உருவாகியிருக்க முடியாது என்று மேலே கூறிய இரண்டாவது கூற்று சரி.

       முதல் கூற்றான ஆதிநிலையில் அறிவு இல்லாதிருந்தால் இந்த உணா்வில்லாத இப்பிரபஞ்சம் உருவாகியிருக்க முடியாது என்பது எவ்வாறு சரியாக உள்ளது என ஐயம் இருக்கும்.  பிரபஞ்சத்திற்கு அறிவு இல்லையே!  இந்த பிரபஞ்சத்திலுள்ள கோடானுகோடி நட்சத்திரங்கள் உயிரற்ற சடப்பொருட்கள் தானே (non-living beings). அவைகளின் மூலப் பொருளுக்கு  அறிவு தேவையில்லையே.  (ஆனால் அவைகளின் உற்பத்திக்கு அறிவு தேவையாக உள்ளது.) உயிரற்ற சடப்பொருட்களுக்கு உணர்வு இல்லையே!  எனவே ஆதிநிலையில் அறிவு இல்லாமல் வற்றாயிருப்பாக பேராற்றல்மட்டும் இருந்திருந்தால்கூட உயிரற்ற சடப்பொருளான இப்பிரபஞ்சம் உருவாகியிருக்க முடியுமல்லவா?  எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள முதற்கூற்று எவ்வாறு சரி என ஐயம் வருவது நியாயம்தானே!   அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில் 15-02-2015 அன்று அறிவோம்.   தொடரும்

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 45

    வாழ்க மனித அறிவு       வளர்க மனித அறிவு

     

    09-02-2015-திங்கள்

    வாழ்க வளமுடன்,

    1) தன்முனைப்பின்(EGO) தன்மை என்ன?

     

    வாழ்க மனித அறிவு     வளா்க மனித அறிவு

    Loading

  • புகழும் உயர்புகழும் – 6 / 6

     

    வாழ்க மனித அறிவு                                                 வளர்க மனித அறிவு

    புகழும் உயர்புகழும் – 6 / 6

    அ.வி. 55

     

                                                              08-02-2015 ஞாயிறு

    ‘புகழ்’ பற்றி மகரிஷி அவர்கள் அருளியுள்ள கவிகளை நினைவு கூர்வோம்.

    ffc-55- படம்- pugazh-உயர்புகழ்
    மேலும் புகழ் பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதாவது: 

    புகழ் என்பது தன்முனைப்புக்கு போடும் தூபமில்லை.

    ஒருவரின் செயலின் நல்விளைவினால் மக்கள் கொடுக்கும் மதிப்புணர்வே புகழ்.

    சுருக்கமாக அறிந்து கொள்ள வேண்டியது:

          இறையே எல்லாமாகவும், உயிர்களாகவும், அறிவாகவும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரணமாகவும் இருக்கின்றது.  அப்படி இருக்கும்போது மனிதன் என்பவன் யார்?  அவன் உயிர் யாருடையது?  அவன் அறிவு யாருடையது?  அவன் கைகள், கால்கள் ஆகிய உறுப்புகள் யாருடையது?  இந்த எல்லா வினாக்களுக்குமே ஒரே பதில் இறையினுடையதுதான் என்பது.

         புகழ் ஏற்படும்படி மனிதன் செய்த செயல் யாரால் செய்யப்பட்டது.  அந்தச் செயலை செய்யும் சூழல் யாரால் ஏற்படுத்தப்பட்டது? அந்தச்செயல் புரிந்ததில் அவனது உடலாற்றலும், மனமும், அறிவும், ஒன்று சேர்ந்தது யாரால்?  எல்லாமே இறையினால்தானே!  இது சம்பிரதாய பதில் இல்லை.  இதுதானே உண்மை. இந்த உண்மையறிந்து விழிப்போடு இருப்பதுதானே பேரின்பம்.

        அஃதன்றி புகழ் தன்னுடையது என்று நினைத்தால் என்ன பொருள்? நினைப்பது ஒன்று, செய்வது வேறு.  தன்முனைப்புதான் மனிதனையும் இறையையும் பிரித்து வைக்கும் திரை.  தன்முனைப்பு என்கின்ற திரையை நீக்கவேண்டிய பயிற்சியில்,  புகழுக்கு ஆசைப்படுவது தன்முனைப்பு என்கின்ற திரைக்கு மேலும் மேலும் திரையை போர்த்துவதாகும்.  ஏற்கனவே விலங்கினப் பண்பான பிறர் வளம் பறித்தல் மனிதனிடம் கருமையத் தொடர்பாக நீடித்துக் கொண்டிருப்பதால் பிறருடைய புகழையும் மனிதன் அபகரிக்கத் தயங்குவதில்லை.

          புகழ் இறையுணர் நோக்கத்தையே மறைத்துவிடும். மறக்கச்செய்துவிடும்.

          புகழை விரும்புவதுபிறவியின் நோக்கத்தை உறுதியும் செய்யாது, உறுதி செய்தாலும் பிறவியின் நோக்கத்தை அடையவும் விடாது.

    புகழ் தன்முனைப்பை ஊக்குவிக்கும்

    புகழ், ‘இன்முகத்தையும், எளிமையையும்’ தனது செல்வமாக மகரிஷி அவர்கள் அனுபவித்ததை, ஒரு ஆன்மீக சாதகனைஅனுபவிக்க முடியாதபடி  செய்துவிடும்..

    புகழ் ஆன்மீகத்தின் உச்ச நிலையானத் தெளிவினை ஏற்படுத்தாது.

    புகழ் ஏகவெளியான வீடு பேற்றினை அடையவிடாது.

      பொருளையும், புலன் இன்பத்தையும் இழப்பதற்கு வேண்டுமென்றாலும்கூட தயாராக இருக்கும் மனிதன், புகழையும், செல்வாக்கையும் இழக்கத் தயாராக இருப்பதில்லை.

        மகரிஷி அவர்கள், மனிதனுக்கு வேண்டிய வளங்களில் ‘உயர்புகழை’ ஒன்றாகக் கருதி, அதனை மெய்ஞ்ஞானத்திற்கு முன்னா் நான்காவது வரிசையில் இணைத்துள்ளார்.  காரணம் என்ன?  புகழ் மனிதனுக்கு அவசியம் என்றுகருதியா சோ்த்துள்ளார்?  பிறவியின் நோக்கம் மெய்ஞ்ஞானத்தின் உச்சத்தை அடைவது.   அந்த மெய்ஞ்ஞானத்திற்கு முன்னர் உயர்புகழை இணைத்துள்ளார்,

        மனிதன் சமுதாயத்தால் வளர்க்கவும், காக்கவும் படுகிறான்.  எனவே அந்த சமுதாயம் வளமாக இருக்க வேண்டும். அப்படியானால் ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்திற்கு திருப்பி செலுத்த வேண்டிய ’கடன்’ உள்ளது.(Man has due to the society. Due to the society becomes duty).  அந்த கடன்தான் ’கடமை’ எனப்படுகின்றது. அந்த வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் என்ன புகழ் உள்ளது?  அதனை புகழ் எனக்கருதினால் அங்கே தன்முனைப்பு வந்துவிடுகின்றது.  ஆனால் மனிதன் செய்யும் கடமையினால் பயன் பெறும் மக்கள் மனம் குளிர்ந்து வாழ்த்துவது தான் உயர்புகழ் என்கிறார் மகரிஷி அவர்கள்.

       புகழ் என்பது விரும்பிப் பெறுவதோ, ஏதேனும் ஒன்றைச்செய்து பெறுவதோ என்று நினைப்பதோ அல்ல என்கிறார் மகரிஷி அவர்கள். சமுதாயத்திற்கு நன்மையான காரியங்களைச் செய்து, அதனாலே மக்களின் துன்பங்கள் நீங்கி, அந்த மக்கள் பெறும் மனநிறைவுதான் புகழ்.  மனநிறைவால் வரும் வாழ்த்தே உயர் புகழ் என்கிறார்.   உதாரணம் மகரிஷி அவர்கள் செய்துள்ள அறிவுத் தொண்டேயாகும்.

      ஆகவே மனிதனுக்கு புகழ் அவசியம் எனக்கருதி  உயர் புகழை  சங்கல்பங்களில் ஒன்றாக இணைக்கப்படவில்லை.  ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையை ஆற்ற வேண்டும் எனக்கருதி. நேரிடையாக கடமையை ஆற்றுங்கள் எனவற்புறுத்தாமல் சொன்னது தான் உயர்புகழ்.

       மகான்கள் வரலாற்றில் தெளிவடைந்து இறையை உணர்ந்த பெரியோர்கள் அனைவருமே சமுதாயத்திற்கு சேவையைச் செய்ய முடியவில்லை.   அவ்வாறே மகரிஷி அவர்கள் இறையை உணர்ந்து விட்ட நிலையிலேயே இருந்து விட்டிருந்தால் ஆன்மீகத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டிருக்காது இன்று.  கல்விநிலையங்களில் ஒழுக்கப்பழக்க அறிவையும், இயற்கைத்தத்துவ அறிவையும் கொண்டுசென்றிருக்க முடியாது.   இப்போது செய்யப்பட்டுவரும் அறிவுத்தொண்டே இல்லாமல் போயிருக்கும்.    “சிலர் இறையுணர்வால் பேரின்பம் பெறுகிறார்கள்,  வேறுசிலர் தொண்டால்  மனநிறைவு பெறுகிறார்கள்.  ஒரு சிலர்  இறையுணர்வாலும், தொண்டாலும்  மனநிறைவு பெறுகிறார்கள்” என்று கூறும் மகரிஷி, தான் இறையுணர்வாலும், தொண்டாலும் சரிசமமாக மனநிறைவு பெற்றதாகக் கூறியுள்ளார்கள். மகரிஷி அவர்கள் தான் சமுதாயத்திற்கு இயற்கையயைப்பற்றி கூறும் உண்மைகள் எல்லாம் இயற்கை தனக்கு அறிவித்தது.  எனவே அவர் அதனை சமுதாயத்திற்கு தெரிவித்து விடுவது தனது கடமையாகக் கருதினார்கள்.  இயற்கை தனக்கு தெரிவிக்கின்றது என்பதில் மனிதனுக்கு எங்கே புகழ்?

       இயற்கை தெரிவிப்பதை எடுத்துச் சொல்வதால் மக்கள் பயன் அடைவதால் வரும் மனநிறைவும், அதைக் கண்டு தான் மனநிறைவு பெறுவது தான் உயர் புகழாகும்.  ஆகவே இயற்கை சமுதாயத்திற்கு  தெரிவிக்க மகரிஷி அவர்களை ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.  எல்லோரையும் கருவியாகத் தேர்ந்தெடுப்பதில்லை.  அதற்குரிய தகுதியுடையவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றது. ஆனால் மகரிஷி அவர்கள், தன்னுடைய மாணவர்களை இயற்கை கருவியாகத் தேர்ந்தெடுக்கும் வகையிலே உருவாக்கியிருக்கிறார்கள்.  ஆகவே இன்று சமுதாயம் உள்ள நிலையில் அறிவை மேம்படுத்தக் கூடிய அறிவுத்தொண்டு மிக, மிக அவசியமாக உள்ளது.  அந்த அறிவுத் தொண்டை செய்யவல்லவர்கள் வேதாத்திரி எண்ணப்பள்ளி மாணவர்கள்(Students of Vethathiri school of thoughts)  இவர்களை  ‘இறைத் தூதுவா்கள்’ என்கிறார் மகரிஷி அவர்கள்.

       தூதுவர் என்றால் என்ன?  தூது என்றால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குச் செய்தி அறிவிக்கும் பணி.  தூதுவர் என்றால் செய்தி அறிவிக்கும் பணியைச் செய்பவர்.  அப்படியானால் இறைத்தூதர் என்பவர்,  சிந்திப்பதன் மூலம், இறையிடமிருந்து செய்திகளை வாங்கி, விளங்கி, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கிணங்க அதனை சமுதாயத்திற்கு அறிவிப்பவராவார். இதன் மூலம் அறிவுத் தொண்டாற்றி, அதனால் சமுதாயம் பயன் பெற்று வாழ்வதை கண்ணுறும் நிகழ்ச்சியே உயர்புகழுக்கான செயலாகும்.

      பாராட்டு என்கின்ற சொல்லுக்கு மகரிஷி அவர்கள் கூறும் விளக்கமாவது: ஒருவரது செயலால் பாரே (உலகமே) பயனடைந்து மகிழ்ச்சியால் ஆடி குலுங்குவதால் (பார்+ ஆடுவது = பாராட்டு) வரும் சொற்களே பாராட்டு என்பார்.

       ஆகவே இன்றைய சமுதாயச் சூழலில்  சமுதாயத்திற்கு தேவைப்படுவது அறிவுத் தொண்டு.  ஆகவே அறிவுத் தொண்டாற்ற இறைத்தூதுவர்களாக செயலாற்ற வேண்டியே மகரிஷி அவர்கள் பயிற்சி அளித்து  ‘அருள்நிதி’ என்கின்ற பட்டத்தை அளித்துள்ளார்கள்.  எனவே உயர்புகழ் என்கின்ற சங்கல்பம் நிறைவேறுவதற்கேற்றவாறு அறிவில்  நாளும், நாளும் மேம்பட்டு அறிவுத் தொண்டாற்றி இன்புற்று வாழ்வோம்.  வாழ்க வேதாத்திரியம்.  வளர்க வேதாத்திரியம். முற்றும்.

     

    *****

     

     

    Loading