இன்றைய விருந்து

  • பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் – 8/?

    வாழ்க மனித அறிவு                                                         வளர்க மனித அறிவு

     FFC – 181

                                                   17-04-2016—ஞாயிறு

    வாழ்க வளமுடன்.

                      02-03-2016 லிருந்து 23-03-2016 வரை ஏழு விருந்துகளில் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் என்பது பற்றி சிந்தித்து வந்தோம்.  இன்று அதனுடைய தொடர்ச்சியினை எட்டாவது நாளாக சிந்திக்க இருக்கிறோம்.  எனவே இதுவரை சிந்தித்ததை கீழே உள்ள அட்டவணையைக் கொண்டு, சுருக்கமாக நினைவு படுத்திக் கொள்வோம்.

    gist of ffcs 168-174

           ஆறாம் அறிவின் ஏழாம் செயல்பாடான ‘தன்னிலை உணர்தல்’ என்பதனை மனித அறிவு அடைந்தேயாக வேண்டும். மனிதஇன பரிணாம – இயற்கையின் நிகழ்ச்சியில் முடிவானதாக இருப்பது ‘தன்னிலை உணர்தல்’ என்பது. எனவே இது பற்றி இன்று அறிந்து கொள்வோம்.

    அறிவின் 4, 5, 6 ஆம் நிலைகள் ஐயுணர்வைக் குறிக்கின்றன.  இந்த நிலை விலங்கினத்திற்கும் மனித இனத்திற்கும் பொது. ஆனால் விலங்கினத்திலிருந்து வந்துள்ள மனித இனத்திற்கான ஆறாம்  அறிவிற்கு என்ன பணி என ஆழ்ந்து விரிந்து சிந்தித்தால் மனிதன் ‘தன்னிலை உணரவேண்டும்’ என்பதும், அது இயற்கையின் நிகழ்வேயாதலால், அது விஞ்ஞானம் என்பதும் தெளிவாகும். ஐயுணர்வு என்பது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தை மட்டுமே உணர்வதாகும்.

         ஐயுணர்விலிருந்து, வந்த ஆறாம் அறிவுடைய மனிதனாக வந்த அறிவிற்கான பிரத்யேக உணர்வு என்னவாக இருக்கும்?

         ஐயுணர்வில் அறிவு காரணத்தை அறிய முடியாது.  உள்ளதை அப்படியே உணர வேண்டும்.

         ஆறாம் அறிவாக மலர்ச்சி பெற்ற அறிவு என்ன, ஏன், எதற்காக என்கின்ற வினா எழுப்புவதற்கான திறமையைக் கொண்ட காரணஅறிவாகின்றது(Consciousness with Logical Reasoning).

         எனவே அறிவு ஆறாம் அறிவாக மலரும்போது, தான் உணர்கின்ற அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்து நிகழ்ச்சிகளும் என்ன, ஏன் நடக்கின்றன, எவ்வாறு நடக்கின்றன, இவற்றை எல்லாம் உணர்கின்ற நான் யார்  என்கின்ற வினாவிற்கான விடையை அறிய வேண்டியது அவசியமாகின்றது.

        விடை அறியும் போது அறிவு முழுமை அடைவதே ‘தன்னிலை உணர்தல்’ ஆகின்றது.  இதனை விஞ்ஞானம் சொல்லித்தான்அறிவு  தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதாவது பிறவியின் நோக்கம் தன்னிலை உணர்தல், அறிவை அறிய வேண்டும் என்பது விஞ்ஞான நிரூபணமில்லாமலேயே காரண அறிவைக் கொண்டே உறுதியாகின்றது.  தன்னிலை உணர்தலில்  அறிவின் பயணம் முடிவுபெறுகின்றது. இயற்கையாகிய அறிவின் பயணம்(Journey of Consciousness) என்பதும் இயற்கையின் நிகழ்வுதானே!அறிவின் பயணத்தின் முடிவு தன்னிலை உணர்தல் என்கிறபோது தன்னிலை உணர்தல் என்பதும் இயற்கையின் நிகழ்ச்சியேதான்

        ஆனால் ஆங்காங்கே விரல் விட்டு எண்ணும் அளவில் ஒரு சிலரைத் தவிர, மனிதகுலம் இந்த இயற்கையின் நிகழ்வினை தடைசெய்து கொண்டல்லவா வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கின்றது!

          அப்படியானால் இயற்கைக்கு முரணாகவல்லவா வாழ்கின்றது மனித சமுதாயம்.

        அறிவின் வளர்ச்சி கடைசி கட்டத்தில் தடைபட்டு நிற்கின்றது.  

        இயற்கையில் உள்ள பல வளங்களில் சிகரமானது ‘தன்னை அறிதல்’ என்பது.

       மற்ற இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக மாற்றிக் கொண்டு, புலன்களின் திறமையை அதிகரித்துக் கொள்ளத் தெரிந்த மனித இனத்திற்கு,

      ‘தன்னை அறிதல்’ வளத்தை மட்டும் வாழ்வின் வளமாக மாற்றிக் கொண்டு வாழ்வாங்கு வாழத் தெரியவில்லை.

        இந்தநிலையினை அடைவதற்காக வாழ்த்துவதுதான் உலக நல வாழ்த்தின் நான்காவது வாழ்த்தான ‘பகுத்துணர்வில், தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பது.

    இந்த வாழ்த்துதான் உலக நல வாழ்த்திலும், உலக நல வேட்பு, உலக நல நாட்டம் ஆகியவற்றில் உள்ள  மற்றவைகளையும் நிறைவேற்றி வைக்கும்.

        ஆறாம் அறிவாகி மலர்ந்த பிறகு விலங்கினத்தில்  இருக்கின்ற பண்பான பிறர்வளம் பறித்தல் என்பது பாவமில்லாமல் இருந்தது, மனிதனாக வந்தபிறகு ‘பிறர்வளம் பறித்தல்’ பாவச்செயலாகி விடுகின்றது. ஐந்தறிவுள்ள புலி மானைக் கொன்று உணவாக உட்கொள்வதில் பிறர்வளம்  பறித்தல் அடங்கி இருந்தாலும் அது புலிக்கு பாவமில்லை. சிந்தனைத்திறன் கொண்ட ஆறாம் அறிவுடைய மனிதனுக்குத்தான் அவன் செயலின் விளைவைப் பொருத்து பாவம்(தீயொழுக்கம்). புண்ணியம்(ஒழுக்கம்) என அமைகின்றது.

        ஆதிமனிதனிலிருந்து தொடங்கிய மனித இனப்பரிணாமத்தில், ஆரம்பத்தில் விலங்கினங்களாகத் தான் வாழ்ந்திருக்கிறான்.  ஆகவே அப்போது அன்பு, கருணை என்கின்ற மனிதம் மலர்ச்சி அடையவில்லை.  இருப்பினும் ஒரு நாள் ஒரு மனிதன் பட்ட துன்பத்தை மற்றொரு மனிதன் கண்டு தன்னுணர்வுபோல் கருதி, இரக்கம் கொண்டு உதவி செய்திருப்பான்.  அன்றுதான் அறம் தோன்றிற்று என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.  ஆனால் அன்று ஆரம்பித்த ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய அறத்தின் வளர்ச்சி தொடர்ந்து  முழுமை அடையவில்லை. அதுதான் இன்று மனிதகுலத்தில் காணப்படுகின்ற அமைதியின்மைக்குக் காரணமாகின்றது.   எனவே இந்த அறவுணர்வு குன்றிய பண்பாட்டினை உயர்த்துவதற்காகவே ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை’ உயர்த்தட்டும் என்கின்ற வாழ்த்து மந்திரத்தை உலக நல வாழ்த்துப்பாவில் நான்காவது வாழ்த்தாக அமைத்துள்ளார் மகரிஷி அவர்கள்.

        எனவே ஐயுணர்விலிருந்து, ஆறாம் அறிவு, தன்னிலை உணராது பயணித்தால் பாவ வினைகள் அதிகமாகிக் கொண்டே துன்பங்கள் மல்கி வாழ்க்கை துன்பமாகிவிடுகின்றது.

         தான் துன்பப்படுவது மட்டுமன்றி, தன் வம்சாவளியையும் துன்பத்திற்கு ஆளாக்க நேரிடுகின்றது.  தன்  வம்சாவளிக்கு  அளித்துள்ள பாவங்களை(சஞ்சித கர்மா) போக்குவதோடு மட்டுமல்லாது  சஞ்சித கர்மாவால் வம்சாவளி சேர்த்துக் கொள்கின்ற பிராரப்த கர்மாவும் சேர்ந்து விடுகின்றன.  எனவே வம்சாவளிக்கு பாவங்களை போக்க வேண்டிய பளு அதிகமாகி விடுமன்றோ!?

        அறிவு ஐயுணர்வோடு நின்று விட்டால், தனது 7 ஆம் செயல்பாடான தன்னிலை உணர்தல் என்பதற்கு முயலாமல் போனால் விலங்கினப்பண்பின் வாசனையால் ஒழுக்கமின்மையும், அதன் விளைவாக பாவங்களும் சேர்ந்து கொண்டே போவதால், வாழ்க்கையில், துன்பம், இன்பம் என்கின்ற சுழற்சியிலேயே துன்பமே மிகுவதைத் தான் அனுபவிக்க நேரிடுகின்றது.   மனதின் மூன்றாம் நிலையான அமைதியினையும் நான்காம் நிலையான பேரின்பத்தையும் அனுபவிப்பது எப்போது என்பது கேள்விக்குறியாகிவிடும்.

       மேலும் ஆறாம் அறிவு தன்னிலை உணர்வதற்கு ஆசைப்படுவது என்பது ‘முடவன் கொம்புத் தேனிற்கு ஆசைப்படுவது போன்றதா என்ன? அல்லவே அல்ல.

        தன்னிலை உணர்தல் என்பது மனிதன் உடலுக்கு ஆடை அணிவது எப்படி கட்டாயமோ, அதுபோல் அறிவு தன்னிலை உணர்வது என்பது இயற்கை/இறை வைத்துள்ள கட்டாயம்.

        வளர்ச்சி அடைந்த மனிதன் ஆடை அணியாமல் போனால் அது சட்டப்படி குற்றம் ஆகின்றது.

       ஆனால் ஆறாம் அறிவு ‘தன்னிலை உணர்தலை’ முயற்சிக்காமல் போனால் மனிதனால் இயற்றப்பட்டுள்ள சட்டப்படி குற்றமாகாமல் போனாலும் இயற்கையின் நீதியின் படி குற்றம்.

         இயற்கைக்கு ‘செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு’ என்கின்ற ஒரு நீதி இருக்கும்போது ‘தன்னிலைஅறியாமல் போனால் என்பது’ இயற்கை நீதியின்படி குற்றம் என்பது, இது இயற்கையின் இரண்டாவது நீதியா? இல்லை!இயற்கைக்கு ‘செயலுக்கு ஏற்ற விளைவு உண்டு’ என்கின்ற ஒரே நீதிதான் உண்டு. ஆனால் அது எல்லாவித மனிதகுற்றங்களையும் தன்  ஒரே நீதியின் கீழ் அலசிப் பார்த்து தீர்ப்பளித்துவிடும்.

        பிறவியின் நோக்கம் தன்னிலை உணரவேண்டும் என்பது இதுவரை ஆன்மீகத்தில் விருப்பமாக (optional-choice of preference) ஆக இருந்து வந்தது  ஆனால் வேதாத்திரிய ஆன்மீகம், பயிற்சியாளர் ஒவ்வொருவருமே சுயமாகவே சிந்தித்து, தன்னிலை உணர்வதற்கான விளக்கங்களை வழங்கி வருகின்றது. இது இயற்கையின் நிகழ்வுஎனவே  கட்டாயமாக, தன்னிலை உணர்ந்தேதான் ஆக வேண்டும் என்கின்ற அவசியம் மனிதனுக்கு உண்டு  என்பதனை கூர்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

         தோற்றங்களைப் பார்க்கும் போது வடிவம்-குணம் – shape and image எடுத்துப்பார்ப்பது இயல்புதான் மனிதனுக்கு.   இருப்பினும் இயல்பு என்பதால் அதனை சரி என்று எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அறியாமை இயல்பாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா? அறியாமை இயல்பாகலாமா? இயல்பாக இருந்தாலும் அதனை மாற்றி அமைக்க வேண்டுமல்லவா?

           நாகரீகமான பண்பட்ட மனிதகுலத்தில் வேற்றுமை இருக்கலாமா? வடிவம்-குணம் – shape and image வந்துவிட்டால் அங்கே வேற்றுமை வந்துவிடுமல்லவா?! ‘ஒற்றுமை’ என்கின்ற வார்த்தையையும் மனிதகுலம்தான் கண்டுபிடித்து வைத்துள்ளது.  அந்த கண்டுபிடிப்பு எதற்கு?  வேற்றுமைக்கு எதிர்ச் சொல்தான் ஒற்றுமை.  வேற்றுமை இருக்கும்போது பயம் இருக்கும். துன்பம் அளிக்கும் எண்ணம் வரும். எனவே வேற்றுமையில் ஒற்றுமை(Unity in Diversity) காணவேண்டுமெனில் பகுத்துணர்வில் தொகுத்துணர்வும் இருக்க வேண்டும்.  எனவே வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டியது அவசியம்தானே?!

    வேற்றுமை மற்றும் ஒற்றுமை என்பதற்கான பொருள் என்ன?

       வேற்றுமை என்றால் மாறுபடும் தன்மை. வித்தியாசம் என்கின்ற பொருட்கள் உண்டு. வேற்றுமையில்  தொடர்பு இருக்காது. இணக்கம் இருக்காது.  ஒற்றுமை என்றால் கூட்டுறவு, முழுமை என்று பொருள். ஒற்றுமை என்பது கூட்டுறவு என்பதால் மனித குலத்தில் சேர்ந்திருக்கும் உறவு தானே அவசியம்.  நிறத்தால் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் மனிதர்களே என்கிற மேன்மை உணர்வு நம்மிடம் உள்ளது.  அது எங்கிருந்து வந்தது?   நிறத்தை வைத்து, பகுத்துணர்வு கருமை நிற மனிதன், வெண்மை நிற மனிதன் என வேறுபடுத்தும்.  ஆனால் தொகுத்துணர்வு யாராக இருந்தாலும் இருவருமே மனிதர்கள் என்று ஒன்றுபடுத்தும்.

        ஆகவே பகுத்துணர்வில், தொகுத்துணர்வு என்பது வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாகும்வேற்றுமையில் ஒற்றுமை காண்பது அவசியம் தானே.  வேற்றுமையில் ஒற்றுமை காண்பது மனிதகுலத்தின் உயர்ந்த பண்புதானே?

       எனவே உலகசகோதரத்துவப் (Universal Brotherhood) பண்பாடு உறுதிப்படுத்தப்படவேண்டுமெனில்  அதனை பகுத்துணர்வில் தொகுத்துணர்வு தான் ஏற்படுத்த முடியும். 

        ஒரு தாய்க்கு நான்கு குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் கருமை நிறமாகவும், இரண்டு குழந்தைகள் வெண்மை நிறமாகவும் இருப்பதால் அவள் வேற்றுமை பார்ப்பாளா?  இல்லையே.  உண்மையிலே அந்த நான்கு குழந்தைகளுக்கும் மூலம்(தாய்) ஒன்றே தான்.  அது தான் அந்தத் தாய்.  வேற்றுமையில் அன்பு ஓங்காது.  ஒற்றுமையில்தான் அன்பு ஓங்கும்.

       தன்னிலை உணர்தல் என்பது தொகுத்துணர்வாகும்.   தன்னிலை உணர்ந்தவரின்  அறிவு

       ஐயுணர்வான பகுத்துணர்வோடு, அதே நேரத்தில் எல்லாவற்றையும் தொகுத்துணர்வின் பார்வையிலேயே பார்க்கும்.

      அதாவது விழிப்புணர்வோடு செயல்படும்.

      அது மட்டுமல்ல தொகுத்துணர்வு, மனிதனை எப்போதும் குற்றமற்ற செயல்களையே செய்ய வைப்பதால்   அவனை அயரா விழிப்புணர்வோடு இருக்கச் செய்து அதன் விளைவாக பேரின்பத்தையே அனுபவிக்கச் செய்துவிடும்.

     தன்னிலை அறிதலின் நிலை அல்லது பயன்கள் என்ன?

    1)    பிரம்மத்தை உணர்ந்த நிலை.

    2)   பிரம்மத்தை உணர்ந்த நிலையில்தான்  பிரம்மமே நானாகவும், மற்றவர்களாகவும், எல்லா உயிர்களாகவும், எல்லாமாகவும் இருக்கின்றது என செய்முறையாக உணரப்பட்ட நிலை(Practical understanding). இந்த பிரம்ம ஞானியின்  அயராத நினைப்பே(அயராவிழிப்புணர்வு) ‘பகுத்துணர்வில் பகுத்துணர்வு’ என்பது.

    3)   ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்கின்ற அருள் வாக்கில் உள்ள உண்மை உறுதிப்படுத்தப்படுவதும் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வினால்’ தான்.

    4)    சுவாமி விவேகானந்தர் அன்று சிகாகோவில், ஆன்மீக உரை நடத்தும்போது, எல்லோரும் கரவொலி எழுப்பி மகிழ்ந்த புனித சொற்களான “Sisters and Brothers”  என்பது இந்த பகுத்துணர்வில் தொகுத்துணர்வினால் தான்.

    5)   சுருங்கச் சொல்லின்,  அறிவது அறிவு, அறிவு தன்னையே அறியும்போதுதான் அறிவு முழுமை அடைகின்றது.  அதுவரை அறிவு குறைவுடையதாகவே உள்ளது.

    6)   ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’தான் இயற்கையின்/இறையின் உண்மை நிலையை பிரகடனப்படுத்துகின்றது.

    7)   ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’தான் மனித அறிவு ஐயுணர்விலே மட்டுமே வாழ்ந்து வருகின்ற நிலையில் தொகுத்துணர்வைச் சேர்த்து  மனிதன் மனிதனாக வாழச் செய்கின்றது.

    8)   மேலும் உண்மை நிலை என்ன? இயற்கையே/இறையே தான் எல்லாமாகவும் தன்மாற்றம் அடைந்துள்ளது.  அதாவது எங்கும், எதுவும், எல்லாமும் இறைமயம்.  (Everything is to be visualised  in terms of Almightyஇதனை மூன்றாம் வகுப்பிற்கான  கணிதத்தின் மூலம்  விளங்கிக் கொள்ளலாம். வாருங்கள்.

    9)   Question:    Express  the sum of the following units in terms of millimetre.

                       கீழ்கண்ட அளவுகளை மில்லிமீட்டர் அளவில் மாற்றவும்.

                         14 km, 80 m, 181 cm, 101 mm.

    unity in diversity_mathematics

    Expressing 14 km, 80 m, 181 cm, 101 mm as 14081911 mm is correct and they are  one and the same. 14 km, 80 m, 181 cm, 101 mm  is none other than 14081911 mm.  இது  தான் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு என்பது. 

    இன்றைய மனிதகுலம் துன்பச்சூழலில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.  பகுத்துணர்விலேயே  மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பதால் துன்பங்கள் மல்கிவிடுகின்றன.  இந்நிலையில் உலகநல  வாழ்த்து மந்திரம் எப்படி இருக்க வேண்டும்?  மனித பண்பாடு குறைந்திருக்கும் காரணத்தாலேயே  துன்பக்கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் உலகை நலம் பெற வாழ்த்துவது என்பது ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்பதாகத்தானே இருக்க வேண்டும்?!!!  பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்’ என்கின்ற சிந்தனையை வரும் அறிவிற்கு விருந்திலும் மகாகவி பாரதியார் மற்றும் திருவள்ளுவர் அணுகுமுறையில் (20-04-2016-புதன்) தொடர்வோம்.

    வாழ்க வளமுடன்.

                வாழ்க அறிவுச் செல்வம்                                                 வளர்க அறிவுச் செல்வம்.

     

    Loading

  • FFC – 180-தெளிவு—6/6

    வாழ்க மனித அறிவு                                                              வளர்க மனித அறிவு

                                தெளிவு—6/6                                       

                                            FFC – 180                                                    

    13-04-2016—புதன். ffc-180

    வாழ்க வளமுடன்.

    தெளிந்த தெளிவு பெற, ‘தெளிவு’ என்கின்ற தலைப்பில் ஐந்து அறிவிற்கு விருந்துகளில் சிந்தித்து வருகிறோம். இன்று தெளிவு பற்றி ஆறாவது அறிவிற்கு விருந்து நடை பெற இருக்கின்றது.  இத்துடன் தெளிவு என்கின்ற அறிவிற்கு விருந்து நிறைவு பெறும். அடுத்ததாக நிறைவு பெறாமல் இருக்கும் ‘பகுத்துணர்வில் தொகுத்துணர்வு’ என்கின்ற சிந்தனையைத் தொடர்வோம் என்கின்ற செய்தியை அன்பர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்ளலாகின்றது.  இன்றைய துணைத்தலைப்பு ‘நம்குருதேவர் பெற்ற தெளிவு’.  ஐந்து விருந்துகளில் என்ன சிந்தித்திருக்கிறோம் என்பதனை நினைவு படுத்திக் கொள்வோம்.  கடந்த ஐந்து விருந்துகளில்சிந்தித்தவை நினைவில்கொண்டு வருவதற்கு கீழே உள்ள அட்டவணையைக் காணவும்.  இன்று என்ன சிந்திக்க இருக்கிறோம் என்பதும் அட்டவணையில் காணலாம். thelivu_ffc

    பொதுவாக ‘தெளிவு’ என்கின்ற சொல்லின் பொருள் என்ன?  அறிவு ஒன்றை அறிந்து/புரிந்து கொள்ளும்போது, அறிதலில்/புரிந்துகொள்ளுதலில் குழப்பமும் சந்தேகமும்  இல்லாமல் இருக்க வேண்டும். ஒன்றைப்பற்றி ஐயமற தெரிந்து கொள்ளுதல் தெளிவு. அதுமட்டுமல்லாமல்,  அந்த ஒன்றைப்பற்றி அறிந்து கொண்டதில் ஏற்படுகின்ற அறிவின் நிலையால்,  அதனை வாழ்வில் பின்பற்ற வேண்டியிருந்தால், தயக்கமின்றி செயல்படுத்துகின்ற  துணிச்சல் இருந்தால், அப்போது  அறிவிற்கு ஏற்பட்ட  நிலைதான் தெளிவு எனப்படுகின்றது.  இங்கே ஆன்மீகத்தில் தெளிவு என்பது, வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என்பது பற்றிய முடிவு எடுக்கின்ற அறிவின் பரிபக்குவ நிலையாகும்.

    தெளிவு என்பது மனதின் பத்து படிநிலைகளில் ஒன்பதாவது நிலை.   உயிரின் படர்க்கை நிலைதான் மனம்.     உயிர் படர்க்கை எய்தி மனமாக செயல்படுகின்றது.  அப்போது மனம் பத்து படிநிலைகளில் இயங்குவதைக் கவனிக்கலாம்.  அந்தப் பத்துப் படிநிலைகள் என்னென்ன?
    10 stages of mind functioning1

    ஆகவே தெளிவு என்பது  ஆராய்ச்சியின்/சிந்தனையின் விளைவாக,  அறிவிற்கு ஏற்படுகின்ற புரிதல் நிலை.  எந்த ஒன்றையும் செய்துதான் பெற வேண்டும் என்பதால், முடிவு எடுத்தால்தான் அச்செயலில் ஈடுபட முடியும்.   ‘தெளிவு’ எவ்வளவு முக்கியமானது இறை உணர் ஆன்மீகத்தில் என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.  மனிதப்பிறவியின் நோக்கம் இறை உணர்வு பெறுதல் என்று வேதாத்திரிய இறையியல் கூறுகின்றது.  அது செயல்முறைக்கு வருவதற்கு, ஆராய்ச்சி செய்து தெளிவு, பெற்று, முடிவிற்கு வந்து அதுபோல் வாழவேண்டும்.  ‘இறை உணர்வு பெறுதல்’ என்பது  வெறும் பதினோரு எழுத்துக்களைக் கொண்ட சொற்களாகவே இருந்து விடக்கூடாது.  அது செயல் முறைக்கு வரவேண்டும்.  எனவே கருத்தியலாக அறிந்ததை, ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, தெளிவு பெறவேண்டும்.

    ’மனிதப்பிறவியின் நோக்கம் இறை உணர்வு பெற வேண்டும்’ என்பதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும்.  ‘வாழ்வின் நோக்கம் இறை உணர்வு பெறுவதே’ என்கின்ற கூற்றை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும்.  மனதின் பத்துப்படி வரிசையில், கடைசி மூன்று படிகளுக்கு மனித மனம் வரவேண்டும். இல்லை எனில் மனதின் முதல் ஏழு படிகளிலேயே மனம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.  மனம்  பழக்கப்பதிவுகளிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கும்.  பழக்கம் நல்லதாக இருந்தால் பரவாயில்லை.  பழக்கம் வாழ்வின் நோக்கத்திற்கு முரணாக இருந்தால் துன்பமேதான் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

    மனம் கடைசி மூன்று படிகளான ஆராய்ச்சி, தெளிவு, முடிவிற்கு வரவில்லையானால்,   ஆறாம் அறிவின் செயல்பாடுகளில் ஏழாவதும், கடைசியுமாகிய  ‘தன்னிலை உணர்தல்’ பற்றிய சிந்தனைக்கே வராது. அப்போது அறிவின் நிலையை என்ன என்று சொல்வது? மனித இனத்தின் முந்தைய நிலையான விலங்கின நிலைதான்.  விலங்கினப் பதிவுகள்தான் ஆதிக்கம் செலுத்தும். ஆராய்ச்சிக்கு வந்தால்தான் அது மனிதநிலையாகும்.  விலங்கினப்பதிவுகளை சிறிது சிறிதாக செயலிழக்கச் செய்து மனிதப் பண்புகள் உருவாகும்.  மனிதப்பண்புகள் இல்லாமல், அதாவது பண்பேற்றம் பெறாமல் இறை உணர்வு என்பது  ஏட்டுச் சுரைக்காய் போன்றதே.

    ‘வாழ்வின் நோக்கம்,  இறை உணர்வு பெறுதலே’ என்பதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்தும்போது தெளிவு ஏற்படாதவாறு பல இடையூறுகள் ஏற்படலாம்.

    அறிவு ஏற்கனவே புலன்மயக்கத்தில் வாழ்ந்து வருவதால், அந்த மயக்கத்திலிருந்து தெளிந்து வருவதற்கு சிரமப்படும்.  புலனின்பம் துய்ப்பதில் அளவும், முறையும் பின்பற்றப்படவில்லையானால் ‘இறை உணர்வு’ என்பது செயல்முறையில் எவ்வாறு சாத்தியமாகும்?  அளவும், முறையும் பின்பற்றாத அறியாமை நிலையில், துன்பமே மிஞ்சும்.

    அறிவை அறிகின்ற அறிவுடைமையாகிய இறை உணர்வு பெறுவது என்பது அறியாமை நீங்காமல் எவ்வாறு சாத்தியமாகும்?  அறியாமை நீங்கினால் துன்பம் வராது.  அறியாமை நீங்கும்போது, ஏற்கனவே முன்வினையின் பயனாக துன்பம் வந்தாலும், அதனை எதிர்கொள்ள வேண்டியத் திறமையும், யுக்தியும் அறிவிற்கு ஏற்படும்.

    இறை உணர்விற்கு வேறு என்ன பெயர்? ஞானம் பெறுதல் என்றும் சொல்லலாம்.  ஞானம் என்பது அறிவின் தெளிவு நிலை. இது பொதுவான விளக்கம்.  சிறப்பான விளக்கம் அறிவை அறிந்த தெளிவு என்கிறார் மகரிஷி அவர்கள்.

    வாழ்வின் நோக்கம் இறை உணர்வு பெறுவதே என்பதனை அவரவர்களே உறுதி படுத்த வேண்டும்.  இதனை உறுதிபடுத்துவதில் இறை உணர் ஆன்மீக பயிற்சியாளர்களுக்கு என்ன சிரமம் உள்ளது?  இறை உணர்வு பற்றிய சரியான புரிதல் இல்லை என்பது ஒரு காரணம். எல்லாவற்றையும் துறக்க வேண்டும் என்கின்ற தவறான புரிதல் காரணம். மனிதனாகப்பிறந்தவன் மனிதனாக வாழ்தலே இறை உணர்வு பெற்ற நிலைதான்.  இறை உணர்வால் தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கு என்ன பயன்? அறம் வளரும்.  இறை உணர்வு பெற்ற தனிமனிதனால் அவனுக்கும் சரி, சமுதாயத்திற்கும் சரி நன்மையே.  அறம் வளரும்போது ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் மலர்கின்றன சமுதாயத்தில்.   இதுதானே தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்குத் தேவை.  ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றும் மலர்ந்த மனிதன் மனநிறைவோடு வாழ்வான்.  தீயவைகள் அவனை அண்டா. மனிதலட்சணத்தோடு வாழ்வான்.

    மகரிஷி அவர்கள் தெளிவினால், வாழ்வின் நோக்கம் என்ன என்று கண்டுபிடித்த போதும், முடிவாக அதனை அடைந்த பேரானந்தத்தையும் நமக்காக ‘இன்பம், இன்பம், இன்பம், இன்பம்’ என்கின்ற தலைப்பில் கூறுகிறார்.  அக்கவியிளை நினைவு கூறலாம். மகரிஷி அவர்கள் முப்பத்தைந்து வயதில் இறை உணர்வு பெற்றுவிட்டார்.  பிறகு ஐம்பது வயதிலிருந்து சமுதாயத்திற்கு முழுவதுமாக சேவை செய்ய ஆரம்பித்துவிட்டார்.  மகரிஷி அவர்கள் எப்போது கவிகள் எழுத ஆரம்பித்தார் என்று தெரியவில்லை.  இன்பம், இன்பம், இன்பம், இன்பம் என்கின்ற தலைப்பைக் கொண்ட கவி எப்போது எழுதினார் என ஞானக்களஞ்சியத்திலிருந்து தெரியவில்லை.   ஆனால் 1998 ஜனவரி மாத அன்பொளி  இதழில் வெளியாகி இருந்தது இக்கவி.   இக்கவியினை நினைவு கூர்வோம்.

    Perinbappadigal_Spiritual_ladder_reduced size

    பொருள்:  தான் பேரின்பம் அடைந்ததை நான்கு நிலைகளாகக் கூறுகிறார்.

    1)   பிறவியின் நோக்கத்தை அறிந்த போது.

    2)   நோக்கத்தை அடைய மனம் தூய்மை ஆனபோது.

    3)   உயர்வான துறவு நிலை உணர்ந்த போது

    4)   முடிவாகத் துறவுநிலை பெற்றபோது

    ஆகிய நான்கு நிலைகளிலும் பேரின்பம் அடைந்ததை எவ்வாறு உரைப்பேன் என்கிறார்.  இந்த நான்கு நிலைகளும் எதனைத் தெரிவிக்கின்றன.  மகரிஷி அவர்கள் படிப்படியாக இறை உணர்வைப் பெற்ற நிலைகளைத்தான் எடுத்துரைக்கின்றன.

    1)   ‘பிறவியின் நோக்கத்தை அறிந்த போது’ என்றுதான் கூறியுள்ளாரே தவிர, அது எது என்று பாடல் வரிகளில் கூறவில்லை.  ஒரு வேளை அவரது சிந்தனாப்பள்ளி மாணவர்களுக்கு ‘பிறவியின் நோக்கம் இறை உணர்வு பெறுவது’ என்று அவர் ஏற்கனவே கூறியிருப்பது தெரிந்ததுதானே என்பதால் கூறவில்லையோ?!   எனவே பிறவியின் நோக்கமான இறை உணர்வு பெறுவதுதான் என்று அறிந்த போது என்றே நாம் எடுத்துக் கொள்வோம்.  இந்த முதல் படியே  மகரிஷி அவர்கள் தெளிவடைந்த நிலை.  பின்னர் இரண்டாவது படியில் இறை உணர்வு என்பதனை மாற்றுக் கோணத்தில், அதாவது இறை உணர்வின் பயன்பாட்டைக் கொண்டுக் கூறுவதனை அறிய முடிகின்றது. ஏற்கனவே “அறத்தின் மாண்புணர்ந்து அறம் ஊக்கி, அறம் காக்கும் தகைமையே இறை உணர்வு” எனக் கூறியுள்ளார்.  அதனைக் கொண்டே இரண்டாவதாக என்ன செய்தார் எனக் கூறுகின்றார்.

     2)   இறை உணர்வு என்ன என்று தெளிவாகிய பிறகு பொறுப்புணர்ந்து, அறநெறியாகிய ஒழுக்கம், கடமை, ஈகை ஆகிய மூன்றிலும் விழிப்போடு இருந்து, பொறுப்புணர்ந்து செயல்களாற்றி, எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் தூய்மை ஆன போதும் பேரானந்தத்தை அடைந்தார்.  ஏனெனில் அவர் தெளிவடைந்ததால், அதற்கு என்ன முடிவு எடுக்க  வேண்டுமோ, அதனை செய்து வரும்போது, முதல் நிலையில் பெற்ற பேரானந்தம் ஆக்கத்தையும், ஊக்கத்தையும் கொடுத்து முடிவாக மனம் தூய்மை ஆனபோது இரட்டிப்பு பேரானந்தம் அடைந்துள்ளார்.

    இந்த இரண்டாவது நிலையைக் கவனிக்கும்போது இறை உணர்வு பெறுவது என்பது மனம் தூய்மை அடைதலே அன்றி வேறில்லை என்றாகின்றது.  ‘மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க  வேண்டாம்’ எனப்படுகின்றது.  மனம் தூய்மை அடைந்துவிட்டது. ஆகவே இறை உணர்வு பெற்றாகிவிட்டதா எனில் பெற்றாகிவிட்டது.  ஆனால் இல்லை. ஏனெனில் இறை உணர்வு முழுமை பெறவில்லை. அவரைப் பொருத்த வரை, அதாவது அவரே தந்துள்ள  இயற்கையியல்/இறையியல் படி, ‘இறை உணர்வு பெறுவது’ என்பதில் மூன்றாவது நிலையை அடைய வேண்டும்.

    3)    மூன்றாவது நிலை ‘உறவுகளில் உண்மை நிலை துறவு’ என்று அறிவது. அதனை  அறிந்ததை மூன்றாவது நிலையாகக் கூறுகிறார். அத்துடனும் ‘இறை உணர்வு பெறுவது’ முடிந்து விட்டதா எனில் இல்லை. நான்காவது நிலையான

    4)   முடிவாக அத்துறவு நிலையை அடைந்த போதும் அடைந்த பேரின்பத்தை எவ்வாறு உரைப்பேன் என்கிறார்.  ஆராய்ச்சி செய்ய வேண்டும்.  அதன் பயனாக தெறிவு பெறவேண்டும். தெளிவு பெற்ற பிறகு முடிவு எடுக்க வேண்டும்.  இந்த நிலையிலேயே இருந்துவிட்டால் ஆராய்ச்சியில் கண்டுபிடித்த கண்டுபிடிப்பினால் பயன் ஒன்றுமில்லை.  முடிவு எடுத்து அதற்கொப்ப செயலில் ஈடுபடவில்லையானால் அதற்கு தெளிவு என்றே சொல்ல முடியாது.

    இக்கவி அவருடைய மாணவர்களுக்காக மகா சமாதி அடைவதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர்தான்  அருளியுள்ளார்.  மனவளக்கலை பாகம் 1 முதற்பதிப்பில்(அக்டோபர் 1983) வாழ்வின் நோக்கம் பற்றி   உரைநடையாக எழுதியுள்ளார். எனினும், 14 வருடங்கள் கழித்து மேலும் தெளிவாக, மனவளக்கலை அன்பர்களுக்கு  வாழ்வின் நோக்கம் என்பதனை எதார்த்தமாக சொல்ல வேண்டும் எனக்கருதி இயற்கையே/இறையே அருளியதுதான் இன்பம், இன்பம், இன்பம், இன்பம் என்கின்ற தலைப்பைக் கொண்ட எட்டு வரிகளே  கொண்ட கவி.

     முன்பெல்லாம் தொழிற்கல்வியில் பட்டப்படிப்பு (B.E, மற்றும் MBBS) படிப்பதற்கு விண்ணப்பம் செய்வதற்கே பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சியுடன், கட்டாயம் நுழைவுத்தேர்வு(Entrance Examination)  எழுதி இருந்தால்தான் தகுதி வரும்.  அதுபோல் இறை உணர் ஆன்மீகத்திற்கு, தெளிவினால், வாழ்வின் நோக்கத்தை அவரவர்களே  கண்டுபிப்பது  அவசியமாகின்றது.  வாழ்க்கையின் எதார்த்தத்தைக் கண்டுபிடிப்பதே வாழ்வின் நோக்கம் அறிவது.

    anbargale vaareer-THAI

    என அழைப்பு விடுக்கிறார் வேதாத்தரி மகரிஷி அவர்கள்.

     இப்பாடலை உறங்கிக் கொண்டிருக்கும் மனிதனின் அறிவை, தட்டி எழுப்பி சிந்தித்து தெளிவு பெறுவதற்காகவே அருளியுள்ளார்.  ‘தின்று திரிந்து உறங்கவா பிறந்தோம்’ எனக் கூறுவதே எதார்த்த நிலையை எடுத்துக் கூறும் அதே வேளையில் தெளிவினை ஏற்படுத்துவதற்கான புனித வாசகம். ‘திரிந்து’ என்றால் நோக்கமில்லாமல் அலைவது என்று பொருள்.  `Journey of Consciousness’ என்கின்ற ஆங்கில நூலிலே மனிதப்பிறவியன் பயனை அடையவில்லை என்றால், அவனது வாழ்க்கை ‘உணவை உண்டு மலமாக்கிய இயந்திரத்திற்குச் சமம்’ என்கின்ற வரியினைக் காணமுடிகின்றது.

     இறைவணக்கப் பாடலில்

    “எல்லாம் வல்ல தெய்வமது;

      எங்கும் உள்ளது நீக்கமற;

    சொல்லால் மட்டும் நம்பாதே;

      சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்!”

    என்கிறார் மகரிஷி அவர்கள்.

     எனவே தெளிவு என்பது சிந்தித்தலிருந்து பிறப்பதுதான்.

     அரசனாக இருந்து, பட்டிணத்தடிகளை வீண்பழியின் காரணமாகத் தண்டிக்க இருந்த பத்திரகிரியார் (இறைவன் பட்டிணத்தடிகளை தடுத்தாட்கொண்டநிலை அது), அவருக்குச் சீடராக மாறியவர்.  அவர் அருளிய மெய்ஞ்ஞானப் புலம்பல்  என்னும் தலைப்பில் அருளியுள்ள பாடலை அறிவோம்.

     

    badhragiriyar_pulanbal

    ‘எப்போது பொழியும்’ என எதிர்கால வினையில்தான் கூறுகிறார். எனவே அந்த நிலையை அடையும்  முன்னரே, அடைய இருக்கும் அந்த அனுபவத்தைப் பற்றி பத்திரகிரியார் தெளிவடைந்து வந்து கொண்டிருந்ததால் கூறமுடிந்திருக்கின்றது.

       எனவே தெளிவு என்பது ஆனந்தத்தை தருகின்றது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.  ஏனெனில் அறிவு என்பது எது? அறிவதற்காகவே உள்ளது அறிவு.  அதுவும் அறிய வேண்டியதை அறிந்து விட்டால்,  அதாவது, தான் யார் என்று தெரியாத நிலையைில், தன்னையே அறியும்போது/அறிந்த தெளிவில்  அதற்கு ஆனந்தம் ஏற்படாதா என்ன?  இதனைச் சொல்வதும் அதே அறிவுதான். தெளிவினை அனுபவித்துப்பார்க்கலாமே.  வாழ்க வளமுடன்.

    guru_paadham

    28-03-2016 அன்று மகரிஷி அவர்களுக்கு  நினைவாஞ்சலி செலுத்துவதற்காக கூடினோம். அன்று திருவேதாத்திரியம் தந்துள்ள இறை உணர் ஆன்மீகத்திற்கு ‘தெளிவு’ மிக மிக அவசியம் எனக்கருதி, தெளிவு என்ற பொருளில் சிந்திக்க ஆரம்பித்தோம். இன்றோடு ஆறு விருந்துகள் முடிந்தன. ‘உத்தம நண்பர்காள் உங்கட்கும் உரியது’ என அழுத்தமாக உறுதி அளித்துள்ளதால் இப்பிறவியிலேயே தெளிவு பெற்று இறை உணர்வு பெறுவோம் என மகரிஷி அவர்களுக்கு தெரிவிக்கும் வேளையில், அவரது சூக்கும உடல் என்றென்றும் நமக்கு காப்பாகவும், வழிநடத்தியாகவும் இருக்குமாறு மகரிஷி அவர்களின் பொற்பாதங்களை வணங்குகிறோம்.  வாழ்க திருவேதாத்திரியம்வளர்க திருவேதாத்திரியம்.  அடுத்த அறிவிற்கு விருந்தில்(17-04-2016-புதன்) பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் என்கின்ற சிந்தனையைத் தொடர்வோம்.  வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                               வளர்க அறிவுச் செல்வம்

    Loading

  • FFC – 179 -தெளிவு—5/?

    வாழ்க மனித அறிவு                                                              வளர்க மனித அறிவு

    தெளிவு—5/?                                                

    FFC – 179                                                    

    10-04-2016—ஞாயிறு.

    thelivu_guru_uru_sinthiththal 

     வாழ்க வளமுடன்.

          ‘தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே’ என்பது பற்றி இன்றைய விருந்தில் சிந்திப்போம். ‘தெளிவு’ பற்றி கடந்த நான்கு  அறிவிற்கு விருந்துகளில் தெளிவு அடைந்து வருகிறோம்.  இன்று அறிஞர் திருமூலர் கூறும் நான்காவது வழியான ‘தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே’ என்பது பற்றி சிந்திக்க இருக்கிறோம்.  மீண்டும் அப்பாடலை நினைவு படுத்திக் கொள்வோம்.

     குருவருளே திருவருள்

     தெளிவு குருவின் திருமேனி காண்டல்

    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

    தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

                  . . . அறிஞர் திருமூலர்.

     ‘தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே!’: 

         இறை உணர் ஆன்மீகத்தில் சாதகர்கள் பயிற்சிகள் செய்வதோடு, கூடவே பெற வேண்டியது ‘தெளிவு’.   குரு சொல்லிக் கொடுத்து பயிற்சிகள் செய்யப்படுகின்றன. மனம் ஒத்துழைப்பு கொடுத்துவிட்டால், குரு சொல்லிக் கொடுப்பதால் பயிற்சிகள் செய்வது எளிது. ஆனால் பயிற்சியில் வெற்றியினைப் பெறுவது, அறிவு பெறுகின்ற தெளிவினைப் பொருத்தது.  தெளிவைப் பெறுவது என்பது தன்னிடமிருந்து வரவேண்டும். பிறர் சொல்லி வருவதில்லை தெளிவு.  ஆனாலும் குருவின் வலிமையான உயர்ந்த எண்ணமும், திருவார்த்தைகளும் சாதகர்களுக்குத் தெளிவினைச்சேர்க்கும். குருவினுடன் சத்சங்கம், குருவை மதித்தொழுகல், ஆன்ம நேய அன்பர்களுடன் சத்சங்கம் போன்றவைகள் தெளிவினை அடைவதற்கு பெரிதும் உதவும்.

            குருஉரு சிந்தித்தல் என்றால் என்ன?  குருவின் திருஉருவத்தை தியானித்தல் வேண்டும் என்று பொருள்.  இது, அவ்வைத்தாய் கூறியுள்ள, ‘அறிவினரைக் கனவிலும், நனவிலும் காண்பது இனிதிலும் இனிது’ என்பதனைச் சுட்டிக்காட்டுகின்றது. குருவின் திருஉருவைத் தியானித்தல் என்பது சிலைவழிபாட்டு அறிவியலின்/விஞ்ஞானத்தின் அடிப்படையில் அமைந்ததே!

        எதற்காக குருவின் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும்?  அதற்கு

          இறைவழிபாடு என்பது என்ன என்றும்,

           இறைவழிபாடு வணக்கமா, இணக்கமா என்றும்,

           இறைவழிபாட்டின் அறிவியல் என்ன என்பதனையும் அறிந்து கொள்ள வேண்டும். 

        குரு என்பவர் யார்?  அறியாமையைப் போக்குபவர் குரு.

    FFC-179-10-4-16-இறை வழிபாடு என்பது என்ன

            இறைவழிபாடு வணக்கமா, இணக்கமா என்பதனையும் தெளிவு படுத்துகிறார் மகரிஷி அவர்கள்.  அவர் கூறும் ‘இறைவழிபாடு’ இலக்கணத்தின்படி, உணர்ந்தும், ஒத்தும் நடக்கும் முறையினை  இறை இணக்கமாகவேதான் கொள்ள வேண்டும் என்கிறார் மகரிஷி அவர்கள்.

        இயற்கை/இறைக்கு இணக்கத்துடன் கூடிய இறைவணக்கம் தேவை என்கிறார் மகரிஷி அவர்கள்.

        இறைவழிபாடு  இரண்டுவிதமாக செய்யப்படுகின்றது.  ஒன்று சிலைவழிபாட்டின் மூலமாகவும், மற்றொன்று உயிர் வழிபாட்டின்(உயிர் மீது மனம் வைத்து தியானம் செய்தல்) மூலமாகவும் இறைவழிபாடு நடத்தப்படுகின்றது.  இரண்டுதரப்பினருக்குமே, தெய்வம் ஒன்றுதானே. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன் தானே‘? எனவே இருதரப்பினருக்கும் பொதுவாக உள்ள அந்த தெய்வம் எது?

         சிலைவழிபாடாக, இருந்தாலும் சரி, உயிர்வழிபாடாக இருந்தாலும் சரி என்ன நடக்கின்றது இரண்டிலும் சிலையை வணங்குபவரின்  அறிவுதானே சிலையினுடைய வடிவம் எடுக்கின்றது.  ஆலயத்தை விட்டு வீட்டிற்கு வந்தாலும், அதாவது அச்சிலையைக் காணாதபோதும்கூட அந்த சிலையை மனதில் நினைத்து வணங்க முடிகின்றதல்லவா?  மனதில் சிலையின் வடிவத்தைக் கொண்டு வருவது எது?  அறிவு, அறிவுதான் சிலை வடிவம் எடுக்கின்றது.  சிலைவணக்கம் செய்பவர் சிலையை வணங்குவதுபோல் தெரிந்தாலும், ஆழ்ந்து விரிந்து சிந்தித்தால், அவர் அவரது அறிவையேதான் வணங்குகிறார்.

     கருத்தும் கடவுளும்

    கடவுளை வணங்கும்போது,

    கருத்தினை உற்றுப்பார் நீ!

    கடவுளாய்க் கருத்தே நிற்கும்

    காட்சியாய் காண்பாய் அங்கே.

         . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

         இரண்டு தரப்பினருக்குமே தெய்வம் ஒன்றுதான் என்பதால், உயிர் மீது மனம் வைத்து வழிபாடு செய்பவருக்கு எது தெய்வமாக உள்ளது என்கின்ற வினாவிற்கும் ஒரே விடை அதே அறிவேஇது எப்படி என ஐயம் எழலாம்.  உயிர் என்பது எது? பேரறிவாகிய இறையேதான் உயிராக தன்மாற்றம் பெற்றுள்ளது.  உயிரிலிருந்து பிறந்து வெளியே மனமாகச் சென்று கொண்டிருக்கின்றது. அந்த  மனதை திருப்பி உயிர் மீதே மனம் வைத்து தியானம் செய்வதே உயிர்வழிபாடு. 

         இங்கு எப்படி அறிவு  தெய்வமாகின்றது?  மனதின் மறுமுனை தெய்வமாக இருப்பதால், புறத்தே ஓடுகின்ற மனதை திருப்பி மனதின் மறுமுனையான உயிர் பிறக்கும் இடமான உயிர்மீதே மனம்  வைத்து தியானம் செய்வது உயிர்வழிபாடு.   மனம் அற்றால்(மனோநாசம்) அறிவு.  எனவே மனம் அற்றநிலையில் அறிவு பேரறிவாகிய இறைவெளியில் கலக்கின்றது.  மனிதனின் சிற்றறிவு பேரறிவுடன் கலக்கின்றது. எனவே உயிர்வழிபாட்டிலும் மனிதன் அறிவையே வணங்குகிறான்.

          யாரும் விரும்பிப் பிறப்பதில்லை.  யாராக இருந்தாலும், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எங்கிருந்து வந்தோமோ, அங்கே, அந்த ஒரு நாள்(Date of Return Journey) வரும்போது சென்றுவிடவேண்டியதுதான். ‘எனவே இப்புவிக்கு வந்து போனதற்கு அடையாளமாக அறிகுறிகளை விட்டுச் செல்லுங்கள்’ என்கின்ற சுவாமி விவேகானந்தரின் அறிவுரை மனதில் கொண்டு செயல்படவேண்டும்.  

          இதற்கிடையில் மனம் துன்பமில்லாமல் நிறைவுடன் வாழ விரும்புகின்றது.  நிறைவுடன் வாழ்வதற்கான ஏற்பாடுகள்தான் இறைவழிபாட்டு முறைகள்.  சிலைவழிபாடு பக்திமார்க்கம் எனப்படுகின்றது.  உயிர்வழிபாடு ஞான மார்க்கம் எனப்படுகின்றது.  இறைவழிபாட்டின் நோக்கமே மனிதன் துன்பமில்லாமல், மனநிறைவுடன் வாழ்ந்திடல்தான்.  வாழ்ந்திட இறையை வணங்கிட வேண்டும்.  எனவே மனநிறைவுடன் வாழ்வதற்கு ஏழு வித சம்பத்துகள் தேவையாக உள்ளன. அவையாவன:

    1)   உருவ அமைப்பு

    2)   நிறை குணம்

    3)   அறிவின் மேன்மை

    4)   சமுதாயத் தொண்டால் பெறும் உயர்புகழ்

    5)   உடல் வலிவு

    6)   உடல் நலம்

    7)   செல்வ வளம்

    மேற்கூறிய ஏழும் மனிதன் நல்வாழ்வு வாழ்வதற்கு  அவசியமாகின்றன.

         இவற்றில் ஒன்றோ அல்லது சிலவோ குறைவாக இருக்கும் பட்சத்தில், மனிதன் தனது வலிமையை வளப்படுத்தி தொடர் விடா முயற்சியுடன் செயலாற்றி இவற்றைப் பெறுவதற்காக மனிதனுக்கு பயிற்சியளிக்கும் முறையே சிலை வணக்கமாகும் என்கிறார் இறையியலாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

       சிலையை வணங்குவதால், எவ்வாறு மேற்கூறிய பலன்கள் உண்டாகும் என ஐயம் எழலாம்.  சிலைவழிபாட்டின் விஞ்ஞானம் என்பது என்ன?

        பக்தி மார்க்கத்தில் சிலை வணக்கம் ஒரு முக்கிய பங்காற்றுகின்றது.  மனித குல வாழ்க்கைச் சரித்திரத்தில் உலகம் முழுவதும், சிலை வணக்கம் என்கின்ற தெய்வீக உணர்வு பிரிக்க முடியாத கருத்தாகத் தொடர்ந்தும், நீடித்தும் வருகின்றது என்கிறார் மகரிஷி அவர்கள்.  மனிதகுலத்திற்கு மூலமான இயற்கையின் ஆதிநிலையின்/இறை வெளியின் மூன்று திறன்களின் ஒன்று இயல்பூக்கம்.  இயற்கையின் ஆதிநிலையில்/இறை வெளியில் இயல்பாக இருந்த ஊக்கம் அதனுடைய தன்மாற்றத்தின் ஒவ்வொரு நிலைகளிலும் காரணமாக உள்ளது.  அந்த இயல்பூக்கம் என்பது, வெளியாக இருந்த இயற்கையின் ஆதிநிலை/இறைவெளி தனது மாற்றத்தில் உச்ச நிலையாக பூத்தத் திருமலரான மனித உருவத் தோற்றத்துடன் முடிந்து விடவில்லை.

         வண்ணமும் வாசமும் கொண்ட பூவே பூவில் சிறந்ததாக, மனிதனால்  கருதப்படுகின்றது. மனிதனையே தன்மாற்ற உச்சத்தில் பூத்த திருமலர் என்கிறோம்.  எனவே அத்திருமலரான மனித உருவம் வண்ணத்தையும், வாசத்தையும் வீசவேண்டியுள்ளது.  அதாவது மனித குலம் பண்பேற்றத்தில் பலபடிகளை ஏறி வரவேண்டியுள்ளது.  இதற்கும் உதவுகின்றது இயல்பூக்கம். 

        எனவே மனிதன் தனது பூர்விக தெய்வீக உணர்வுகளை வீசச்செய்வதற்கு,  பண்பில் ஏற்றம் பெறச்செய்யும்,  சிலை வணக்கம் என்கின்ற மனித அறிவின் ஆன்மீக இயல்பூக்கம், காலம், இடம், சூழ்நிலைகள் ஆகியவற்றால் கருத்திலும், செயலிலும் பல்வேறு மாற்றங்களை அடைந்து கொண்டே வருகின்றது என்கிறார் இயற்கையியல்/இறையியல் அருளியுள்ள நம்குருதேவர் அவர்கள்.

     இயற்கையின் ஆதிநிலை/இறைவெளி/அன்பாகிய வெளி  தனது மாற்றத்தில், தனது இயல்பை முழுவதுமாக ஊக்கத்துடன் வெளிப்படுத்தித்தானே ஆக வேண்டும்

    ஆதிமனிதனின் தோற்றம் சடுதிமாற்றம் என்பதுபோல், இந்த ஆன்மீக இயல்பூக்கத்தின் வெளிப்பாடே, திடீரென,  சடுதிமாற்றமாக 1911 இல் மலர்ந்ததுதான் திருவேதாத்திரியம்.

        பொதுவாக ஒரு மலர் ஒரு வாசத்தைத்தான் வீசும். ரோஜா அதற்கென உள்ள மணத்தை மட்டுமே வீசும். குண்டு மல்லி அதற்கென உரிய மணத்தை மட்டுமே வீசும். முல்லை அதற்கென உள்ள மணத்தை மட்டுமே வீசும். தாழம்பூ அதற்கென உள்ள மணத்தை வீசும். ஆனால் இந்த திருவேதாத்திரியம் என்கின்ற பாரிஜாத மலரோ பல்வேறு மணங்களான,

    1)   இயற்கை இயல்/ இறை இயல்

    2)   அமைதி இயல்

    3)   இன்பதுன்ப வியல்

    4)   பண்பேற்றவியல்

    5)   பேரின்பவியல்

    ஆகியவற்றைப் அகிலமெங்கும்  பரப்பிக் கொண்டிருப்பதனை அறிந்து உள்ளம் பூரிக்கின்றது. 

    கூடுவாஞ்சேரி எனும் சிற்றூரில் மலர்ந்த இம்மலரை உலகெங்கும் சாகுபடிச் செய்யும் கடமையை இயற்கை/இறை மனிதகுலத்திற்கு ஏற்படுத்தி நடத்தி வருகின்ற உண்மை நாடகத்தில், முதன் முதலில் பாத்திரங்கள் ஏற்று  பணியாற்ற நம் ஆன்மா, இப்பிறவியில், இந்த  உடல் எடுத்துள்ளது என்பதனை நினைக்கும்போது மனம் பூரிப்பையும், கண்களில் ஆனந்தக்கண்ணீரையும் வெளிப்படுத்தி  நிறைவடைகின்றது. வாழ்க இறைத்தூதுவர்கள். வளர்க இறைத்தூதுவர்களின் பணி.

        இன்றைய தலைப்பு, எவ்வாறு குருவின் திருஉருவை சிந்தித்தல்  தெளிவினை ஏற்படுத்தும் என்பதாக உள்ள நிலையில் இதுவரை இறைவழிபாடுபற்றி சிந்தித்து வந்தோம்.  ஏனெனில் இறைவழிபாட்டு முறைகளில் ஒன்றானது தியானம் என்பதால் இறைவழிபாட்டின் அறிவியலை அறிந்து கொண்டோம்.  இப்போது நேரிடையாக குருவின் திருஉரு சிந்தித்தல் என்பது எவ்வாறு தெளிவினைத் தரும் என்பதற்குள் பயணிப்போம்.

       சிலை வணக்கம்  மனித அறிவின் ஆன்மீக இயல்பூக்கம். காலம், இடம், சூழ்நிலைகள் ஆகியவற்றால் கருத்திலும், செயலிலும் பல்வேறு மாற்றங்களை அடைந்து கொண்டே வருகின்றது என்கிறார் மகரிஷி அவர்கள்.  எனவே இன்றைய சூழலில் மனித அறிவின் ஆன்மீக அறிவின் இயல்பூக்கத்தை பயன்படுத்தி, குருவின் திருஉருவத்தை சிந்தித்தலின் வாயிலாக தெளிவினைப் பெறுவது  என்பது அறிவியல் அடிப்படையில் உள்ளது.  தெளிவு இறை உணர் ஆன்மீகத்திற்கு மிக மிக அவசியம் என்பதால் இதனை ஆழ்ந்து விரிந்து சிந்தித்து இந்த யுக்தியினைக் கைவல்யமாக்கி்க் கொள்வோம்.  இது பற்றி மகரிஷி அவர்கள் கூறும் பாடலை நினைவு கூர்வோம்.

     குருவின் சேர்க்கை(15-08-1984)

     எப்பொருளை எச்செயலை எக் குணத்தை

      எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்

    அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்

      அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும்;

    இப்பெருமை இயல்பூக்க நியதி ஆகும்;

      எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்

    தப்பாது குருஉயர்வு மதிப்போர் தம்மைத்

      தரத்தில் உயர்த்திப் பிறவிப்பனை நல்கும்.

                    . . . வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

     பாடல் சுயவிளக்கமுடையது(self explanatory). எனினும் என்ன கூறுகிறார் மகரிஷி அவர்கள் என்பதனை ஆராய்வோம்.

       எந்த ஒரு பொருளையும், எந்த ஒரு செயலையும், எந்த ஒரு குணத்தையும், எந்த ஒரு உயிரையும் அடிக்கடி நினைந்து வந்தால், அப்பொருளின் தன்மையாய் நினைப்பவரது ஆற்றல் அறிவிலும், உடலிலும் மாற்றங்காண்கின்றது  என்கிறார்.  இதுவே இயல்பூக்க நியதி என்கிறார். அருவமாக இருந்த இயற்கையின் ஆதிநிலை/இறைவெளியின் இயல்பூக்க நியதி உருவமாக தன்மாற்றம் பெறுவதற்கு மட்டும் உதவியாக இல்லை.  இயற்கையின் ஆதிநிலை/இறைவெளியின் கடைசி தன்மாற்றம் மனிதன்.  மனிதன் என்கின்ற  இயற்கையின் ஆதிநிலையின்/இறைவெளியின் தன்மாற்றம் என்பது உருவ அளவிலே மட்டுமே நடந்துள்ளது.  மனிதஉருத் தன்மாற்றம் அறிவினிலும் மாற்றம் பெறவேண்டும்.  எனவே, இதனையே ஒரு சில அறிஞர்கள் பரிணாமம் இன்னும் பூர்த்தியாகவில்லை என்கின்றனர்.  அவர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்யவே இயல்பூக்க நியதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  இதுவரை இயல்பூக்க நியதி தானாகவே செயல்பட்டு வந்தது.  ஆனால் இப்போது மனித குலத்தில்,  நாகரீகம் தோன்றிய பிறகு, மனிதகுல தன்மாற்றத்/பரிணாமத் தொழிற்சாலையில், மனிதனும் பங்குதாரராகிவிட்டதால், இப்போது மனித இனப் பண்பேற்றத்திற்கு, மனிதன் ஆர்வத்துடன் முயற்சி செய்தால்,  இயற்கையின் இயல்பூக்க நியதி தன் கடமையைச் செய்யும். 

     இயல்பூக்க நியதி எவ்வாறு குருவின் திருஉருவை சிந்தித்தலில் பயன்பாட்டிற்கு வருகின்றது என்று பார்ப்போம்.

        அத்வைத விஞ்ஞானம் என்ன கூறுகின்றது? ஒன்றே பலவாகியது என்கின்றது.  பலவாகியதில் ஒன்றுதான் எல்லா மனிதர்களைக் கொண்ட மனிதகுலமும். ஒன்றேதான் எல்லாமனிதர்களாகியுள்ளது என்கின்றபோது எல்லோருமே ஒன்றானவர்கள், சமமானவர்கள்.   ஆனால் 720 கோடி உலக மக்களும் 720 கோடி உருவங்களைக் கொண்டதாகத்தானே உள்ளனர்.  வெவ்வேறு உருவங்களைக் கொண்டு மனிதர்கள் இருந்தாலும், ஒன்றிலிருந்து வந்தவர்கள் அனைவரும் என்பதால், எந்த ஒன்று எல்லோருக்கும் இடையே  பொதுக்காரணியாக உள்ளது? ஆன்மாதான் பொதுக்காரணியாக உள்ளது. எனவே வினைப்பதிவில் முன்பின்னாய் இருந்தாலும், அறிவு நிலையில் அனைவரும் ஒன்றே.  ஆன்மநிலையில் அனைவரும் ஒருவரே.    இது குருவிற்கு பொருந்தும்.   ஆன்மதூய்மையால்,  அறிவை அறிந்த பேற்றால், குரு  அறிவொளியாக இருக்கிறார். 

      இப்போது தியானிப்பதற்கு வருவோம்.  தியானிப்பதால் என்ன பயன்? பொதுவான பயன் என்ன?  மனம் ஒருமைப்படுகின்றது. எந்த ஒரு பொருள் மீது தியானம் செய்யப்படுகின்றதோ அப்பொருளின் தன்மையாக மாறுகின்றது மனம்.

       தியானத்திற்கு உயிரையே பொருளாகக் கொள்ளும் தியான முறையில் என்ன நடைபெறுகின்றது?  மனம் சலனமற்று அறிவாக நிற்கின்றது.  மனம் சலனமற்ற நிலையில் பேரறிவுடன் மனித அறிவு ஒன்றாகிவிடுகிறது. இயற்கையின் ஆதிநிலையோடு/இறைநிலையோடு மனித அறிவு ஒன்றாகி நிற்கும் துரியாதீத தவத்தால் பயன் என்ன?  தன்முனைப்பு கரைந்து இறைஉணரப்படுகின்றது. அன்பு வெளியில்(இயற்கையின் ஆதிநிலை/இறைவெளி) அறிவு நின்று  பழகப்பழக, சிவம்(அறிவும் இறைவெளியாகி) அறியப்பட்டு, அன்பு மலர்கின்றது.  அறிந்தது சிவம் மலர்ந்தது அன்பு என்பது இவ்வகையில் தான் நடைபெறுகின்றது.  இந்நிலையில் சீவனில் சிவனைக் காண்கிறார் அம்மாமனிதர். 

      குருவின் திருஉரு எதனை நினைவு படுத்துகின்றது சீடருக்கு?  குருவினுடைய  செயலையும். குணத்தையும் ஞாபகப்படுத்துகின்றது.  மேலும் குருவானவர் மனித வடிவில் மெய்ப்பொருளாக(இறைவனாக) உள்ளவர்.  அவரது உயிர் எத்தகையது? எல்லோரையும்போல் மனிதனாகப் பிறந்து, புனிதத்தை மீண்டும் பிரதிபலிக்கின்றது. ஆகவே எப்பொருளை, எச்செயலை, எக்குணத்தை, எவ்வுயிரை அடிக்கடி நினைத்தால், இயல்பூக்க நியதியின்படி, அப்பொருளின் தன்மையாக நினைப்பவர் ஆற்றல், அறிவினிலும், உடலினிலும் மாற்றம் காண்கின்றது என்பதற்கினங்க, நம் குருநாதரின் திருஉருவத்தை தியானிக்கும்போது, “உத்தம நண்பர்காள். உங்கட்கும் உரியது” என்கின்ற நம் குருநாதரின் உறுதி மொழிக்கேற்ப நமக்கும் உரியதாகிய இறை உணர்வு பெறுகின்ற பேறு கிட்ட அவரைப்போன்றே அறிவு நிலையில் உயர்வு அடைய முடிகின்றது.  பிறகு, யார் ஒருவர் குருவை மதித்து ஒழுகி நடந்தாலும், தப்பாது குருவின் உயர் மதிப்பவரை தரத்தில் உயர்த்தி வீடுபேற்றினை அளிக்கின்றது.

         பக்திமார்க்கத்தில் இறை சிலை வடிவில் வணங்கப்படுகின்றது. அல்லது தியானிக்கப்படுகின்றது.  ஆனால் ஞான மார்க்கத்தில் குருவிற்கு  முக்கிய இடம் தரப்படுகின்றது. குரு வணங்கப்படுகிறார்.  ‘குருவருள் இன்றேல் திருவருள் இல்லை’ எனப்படுகின்றது.  ‘குருவருளே திருவருள்’ என்கிறார் அறிஞர் திருமூலர்.  ‘குருவருளே திருவருள்’  என்கின்ற தலைப்பின் கீழ்தான், தெளிவு குருவிடமிருந்து நான்கு வழிகளில் பெற்றுக் கொள்ள வேண்டும் என பாடல் அருளியுள்ளார் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

       மேலும் அறிஞர் திருவள்ளுவரோ,

     “ஐயப் படாஅது அகத்து உணர்வானைத்

    தெய்வத்தோடு ஒப்பக் கொளல்”      குறள் எண்.   702

     சந்தேகமின்றி அகத்தை உணர்ந்தவரை தெய்வத்தோடு ஒப்பாகக் கொள்ள வேண்டும் என்கிறார்.

     மேலும் குரு ஸ்லோகம் ஒன்று சாட்சாத் குருவே பிரம்மம் என்கின்றது.  அதனை நினைவு கூர்வோம்.

     குருர்ப்ரம்மாகுருர்விஷ்ணு

    குருதேவோமஹேஸ்வரஹ

    குருசாட்சாத்பரப்ரம்மா

    தஸ்மைஸ்ரீகுரவேநமஹா.

     இந்த குரு ஸ்லோகம்  ‘குருவே சாட்சாத் பரப்பிரம்மா’ என்கின்றது.  ஞான மார்க்கத்தில் குருதான் எது தெய்வம் என உணர்த்துகிறார்.  அரூபமான பேரறிவு(தெய்வம்) தன்னை எவ்வாறு வாய்திறந்து மனிதனிடம் அறிமுகப்படுத்திக்  கொள்ள முடியும்?  அரூபமான பேரறிவு மனிதனிடம் அறிவாக உள்ளதாலும், அது தன்னையே  உணர்ந்துகொள்ளும்போது, அது தெய்வ நிலைக்கு உயர்வதாலும் அதுவே குருவடிவத்தில் மற்றவர்களுக்கு இறைத்தூவராகின்றது.  ஆகவே சுத்த அத்வைதத்தில் ‘குருவே சாட்சாத் பரப்பிரம்மமே எனப்படுகின்றது.’

       ஞான மார்க்கத்தில் உருவ வழிபாடு இல்லையாயினும்,  குருவிற்கு தெய்வத்திற்கொப்ப முக்கிய இடம் அளிக்கப்படுகின்றது.  எனவே, உருவவழிபாட்டில் கடவுள் சிலையை தியானிப்பதுபோல்(வணங்குவதுபோல்), ஞான மார்க்கத்தில் குருவின் திருஉருவத்தை தியானிப்பது தெளிவைக் கொடுக்கின்றது என்கிறார் அறிஞர் திருமூலர்.

         எனவே இன்றிலிருந்து, அறிஞர் திருமூலரின் நான்காவது வழியான “தெளிவு குருஉரு சிந்தித்தல்தானே” என்பதனை கைவல்யாமாக்கிக் கொண்டு அருட்பயனை அடைவதற்கு,

      FFC-179- பணி ஏதும் செய்யாமல்- message Box   

         நம் குருவை தியானிக்கும்போது, அவரது அன்பு உபதேச மொழிகளும், அருள்மொழிகளும், அவருடைய வாழ்க்கை முறைகளும், அவருடைய தியாக நடத்தையும், அவரது தீர்கதரிசனமும்(உலக சமாதானம்), அதற்காக அவர் கொடுத்துள்ள திட்டங்களும் நம் மனக்கண்முன் வந்து, நாம் அவரது சூக்கும உடலோடு பயணிப்பதை  உணர்ந்து பயன் பெறலாம்.

       எனவே நம்குருதேவரின் மானசீகக் குருவான அறிஞர் திருமூலரின் தெய்வ வாக்குப்படி, குருவின் மேன்மையினை நன்கு உணர்ந்து. நான்கு வழிகளிலும் தெளிவினைப்பெற்று இறை உணர்வு பெறுவோம் என்கின்ற உறுதியினை நம் குருதேவருக்கு நினைவாஞ்சலி செலுத்துகின்ற வேளையில் சமர்ப்பிப்போம்.

     வாழ்க திருவேதாத்திரியம். வளர்க திருவேதாத்திரியம். வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு.  வாழ்க அறிவுச் செல்வம்.  வளர்க அறிவுச் செல்வம்.

     இத்துடன் இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம். அடுத்த அறிவிற்கு விருந்தில்(13-04-2016—புதன்)  கடந்த ஐந்து விருந்துகளில் என்ன அருந்தினோம் என்பதனை சுருக்கமாக நினைவுபடுத்திக்கொண்டு, முடிவாக தெளிவு பற்றி ஆழ்ந்து விரிந்து சிந்தித்து, இந்த தெளிவு நம் குருதேவரின் வாழ்க்கையில் எவ்வாறு நடந்தேறியுள்ளது என்பதனை ‘நம்குருதேவர் பெற்ற தெளிவு’ என்கின்ற துணைத்தலைப்பில் அறிந்து கொண்டு, நாமும் அதேபோன்று ,   தெளிவு பெற இருக்கிறோம் என்கின்ற புனிதச் செய்தி தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.  அத்துடன் ‘தெளிவு’ என்கின்ற விருந்து நிறைவு பெறும். வாழ்க வளமுடன்.

     

    வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவுச் செல்வம்.

     

    Loading

  • FFC – 178-தெளிவு—4/?

    வாழ்க மனித அறிவு                                                              வளர்க மனித அறிவு

                     தெளிவு—4/?                     

                                                                       FFC – 178                                                    

     06-04-2016—புதன்.

    ffc-178- title

    வாழ்க வளமுடன்.

                     தெளிவு’ பற்றி கடந்த மூன்று அறிவிற்கு விருந்துகளில் தெளிவு அடைந்து வருகிறோம்.  இன்று அறிஞர் திருமூலர் கூறும் மூன்றாவது வழியான ‘தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்’ என்பது பற்றி சிந்திக்க இருக்கிறோம்.  மீண்டும் அப்பாடலை நினைவு படுத்திக் கொள்வோம்.

     குருவருளே திருவருள்

     தெளிவு குருவின் திருமேனி காண்டல்

    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

    தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே.

                                                  . . . அறிஞர் திருமூலர்.

     ‘தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்’: 

                குருவினுடைய திருமேனியும், திருநாமமும் எவ்வாறு அறிவிற்குத் தெளிவினைத் தருகின்றது என்பதனை ஐயமின்றி அறிவுப்பூர்வமாக சென்ற அறிவிற்கு விருந்துகளில் சிந்தித்தோம். இப்போது மூன்றாவது வழியான   ‘குருவினுடைய திருவார்த்தை கேட்டலும்’ தெளிவினைத் தருகின்றது என்று  அறிஞர் திருமூலர் கூறுவதனை சிந்திப்போம்.

          கேட்டல் தெளிவினைத் தருகின்றது என்றால் ‘தெளிவு’ என்பது என்ன? தெளிவு என்பது அறிவிற்கு ஏற்படுவது.  அறிவிற்கு ஏற்படுவது என்றால், அது உணர்வா? ஆம் உணர்வுதான்.  ஆனால் அது  வழக்கம்போல் புலன்கள் வழியாக ஏற்படும் உணர்வு அன்று? பின்னர் என்ன உணர்வு அது?  புலன்களின் உதவியின்றி, அறிவிற்கு ஏற்படும், முடிவான பேரானந்த நிலைக்கு இட்டுச் செல்லும் ஆனந்த உணர்வு அது.

        அப்படியானால் என்ன?!

        உணர்வதும், அறிவதும் எதுவோ அதுவே அறிவு.  அப்படியிருக்கும் போது, புலன்கள் உதவியின்றி அறிவிற்கு ஏற்படும் அந்த ஆனந்த உணர்விற்கு வேறு பெயர் ஏதேனும் உள்ளதா? உள்ளது. அதுதான் தெளிவு.

         இருப்பினும், இப்போது நேரிடையாகத் ‘தெளிவு’ என்பது என்ன என்கின்ற முடிவிற்கு வருவோம். உணர்வதும், அறிவதுமாகிய அறிவிற்கு ஏற்படும் தெளிவு என்பது, அறிவிற்கு ஏற்படும் சரியான மிகமிகத் துல்லியமான புரிதலாகும் (correct and the Most precise understanding). இதுவரை சூரிய வெளிச்சம் இருந்தும், அறியாமை என்கின்ற இருளில்வாழ்ந்து வந்ததால் , இருட்டில் இருந்த அறிவிற்கு ஏற்படும் அந்த சரியான, மிகமிகத் துல்லியமான புரிதல்  அறிவொளியை வீசுவதால், அது ஆனந்தத்தை  ஏற்படுத்தும் அறிவிற்கு.  இந்த ஆனந்தமே முடிவாக மனதின் நான்காவது நிலையான பேரானந்தத்திற்கு  இட்டுச்செல்லும்

         ‘கேட்டல்’ தெளிவினைத் தருகின்றது என்கிறார் அறிஞர் திருமூலர். கேட்டல் பற்றி வேறு அறிஞர்கள் கூறுவதென்ன என்பதனையும் அறிந்து கொள்வோம். ‘கேட்டல்’ என்பது செல்வத்தைத் தருகின்றது என்கிறார் அறிஞர் திருவள்ளுவர் .

     “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம்

    செல்வத்துள் எல்லாம் தலை“   குறள் எண். 411

         இக்குறளின் பொருள் யாவரும் அறிந்ததே.  ஒருவர் தான் பெற்றிருக்கும் செல்வங்களுள், செவியால் கேட்டு அறிந்து கொள்ளுதலே தலையாயச் செல்வமாகும். கேட்பது என்பது, செவி வழியாக நடப்பதால், கேட்டறியும் செல்வத்தை செவிச் செல்வம் என்கிறார். அறிஞர் திருமூலா்  ‘கேட்டு அறிவதனை தெளிவு’ என்கிறார்.  தெய்வப்புலவரோ ‘கேட்டு அறிவதனைச் செவிச் செல்வம்’ என்கிறார். இவ்விரு அறிஞர்களின் கூற்றுக்களை உற்று நோக்கினால், ‘கேட்பது’ என்பது பொதுக்காரணியாக உள்ளதால், ஒரு சமன்பாடு (Equation) வருகின்றது.

     அது,

    தெளிவு = செவிச்செல்வம் என்பது.

         தெளிவும், செவிச் செல்வமும் ஒன்றே என்று, சமன்பாடு (Equation) தெரிவித்தாலும், அறிவு, இன்னும் இதற்கு மேலும் தெளிவினை விரும்புகின்றது.  தெளிவாகிவிட்டால் இனிமேலும்,  மீண்டும்  ஐயம் எழாது  அறிவிற்கு.

         எனவே ‘கேட்டு அறிவதனை’, செல்வம் என்று தெய்வப்புலவர் கூறுவது எப்படி என ஐயம் எழுகின்றது அறிவிற்கு.  செல்வம் என்பது என்ன? செல்வம் என்பது பொதுவாக பொன், பொருளைக் குறிக்கும்.  செல்வம் என்பது ஒருவருக்குச் சொந்தமான மதிப்புள்ள உடைமைகளின் தொகுப்பு, சொத்து ஆகும்.

        தெய்வப்புலவர் கேட்டு அறிவதனை, சாதாரணமாக ‘செல்வம்’ என்பது என்ன என்று கூறும் அர்த்தத்தில் கூறவில்லை.  கேட்டு அறிவது என்பது செவிச்செல்வம் என்பதால் அது சாதாரணமான பருப்பொருள் செல்வமாக இருக்க முடியாது.  செவிச் செல்வம் என்பது அரூபா–ரூபச் செல்வம்.  அது அறிவிற்கு ஏற்படும் பூரணச்செல்வம்.  மற்ற செல்வங்கள்  உடல் வாழ்வதற்குத்  தேவையான உணவு, உடை, உறைவிடம் பெறுவதற்குத் தேவையானது.  ஆனால் அறிவு பேரின்பமாக வாழ்வதற்கு செல்வம் தேவையிருக்கின்றது.  அது தான் அறிவிற்கு ஏற்படவேண்டிய மிகமிகத் துல்லியமான புரிதல். எனவே அந்த மிகமிகத் துல்லியமான புரிதல் என்பதனை ‘தெளிவு’ என்கிறார் அறிஞர் திருமூலர்.

    அதனையே தெய்வப்புலவர், குருவிடம், அறிவில் சிறந்தவர்களிடம், கேட்டு அறிவதனை செல்வம் என்கிறார். அதுவும் ஒருவர் பெற்றிருக்கும் செல்வங்களில் தலையாயச் செல்வம் என்கிறார்.

     குருவிடம் கேட்டறிவது என்பது, அறிவு மேலும், மேலும் தெளிவு பெற்று கடைத்தேறுவதற்கு பேருதவியாக இருக்கும். மேலும், கடைத்தேறுவதற்கு ‘நாள் கடந்து போகின்றதே’ என்கின்ற கவலையை(anxiety), நீக்குவதால், அறிவு தனது பூர்வீகச் சொத்தான, அமைதியினை அனுபவித்து வர முடிவதால், அதனை செல்வம் என்கிறார், அதே வேளையில் ‘புதிது, புதிதாக தெரிந்து கொண்டு தெளிவு அடைந்து வருகிறோம்’ என்கின்ற மகிழ்ச்சியான மகிழ்ச்சி. மகிழ்ச்சியான மகிழ்ச்சி செல்வம்தானே?!

     கல்வியின் சிறப்பையும், பயனையும் கூறுவதற்கு

        1) ‘கல்வி’ எனும் அதிகாரத்தை வைத்துவிட்டு,

        2) அக்கல்வியினை கற்காமல் போனால் அதனால் ஏற்படும் இழப்பைக் கூறுவதற்கு ‘கல்லாமை’ என்கின்ற அதிகாரத்தை வைத்துவிட்டு

        3)  அதற்குஅடுத்ததாக ‘கேள்வி’ என்கின்ற அதிகாரத்தை வைத்துள்ளதன் நோக்கத்தை அறிவதனால்

    திருவள்ளுவர் இல்லாத காலத்திலும், திருவள்ளுவரின் அறிவாற்றலுடன் தொடர்பு கொள்கிறோம்.

          கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்று, அவ்வாறே கற்றதற்கு ஏற்ப வாழ வேண்டும் என்று (குறள் எண். 391) கூறிவிட்டு,

        அதே அதிகாரத்தில்(குறள் எண். 398)  ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறப்பிலும் உதவும் தன்மை உடையது என்கிறார்.

        முடிவில் கல்வி பற்றிக் கூறுவதனைக் கவனிப்போம்.  ஒருவனுக்கு அழிவு இல்லாத செல்வம் கல்வியே என்கிறார்.  மற்ற செல்வங்கள் செல்வங்கள் அல்ல என்கிறார்.(குறள் எண் 400)

         இவ்வளவு  முக்கியம் வாய்ந்த கல்வியினை கற்காமல் போனால் அதன் விளைவுகளை ‘கல்லாமை’ என்கின்ற அதிகாரத்தை கல்வி எனும் அதிகாரத்திற்கு அடுத்ததாக வைத்துக் கூறுகிறார்.

       கல்லாதவரை விளைவில்லாத களர் நிலத்தோடு ஒப்பிடுகிறார்(குறள் எண்.406). 

        மேலும் கற்றவரை மக்கள் என்றும்,  கல்லாதவரை விலங்கோடு ஒப்பிடுகிறார் (குறள் எண்.410).  அதோடு தன் சிந்தனையை நிறுத்திக் கொள்ள வில்லை திருவள்ளுவர்!  அவர் அறிவை அறிந்த அறிஞராயிற்றே!

          கல்வியின் பயன்பற்றிக் கூறியும், அக்கல்வியினை கல்லாமல் போனால் அதன் இழப்பையும் கூறியிருந்தாலும், இதற்கும் தீர்வினை, ‘கல்வி’, ‘கல்லாமை’ என்னும் அதிகாரங்களுக்கு அடுத்ததாக ‘கேள்வி’ என்கின்ற அதிகாரத்தை வைத்துள்ளதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதால், அறிஞர் திருமூலர் கூறும் தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல் என்பது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதனை அறிந்து இன்பமுறமுடிகின்றது.

     ‘கேள்வி’ என்கின்ற அதிகாரத்தில் முதல் குறட்பாவாகிய

     “செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்; அச்செல்வம்

    செல்வத்துள் எல்லாம் தலை”   குறள் எண். 411

     என்பதில் ஒருவருக்குச் செல்வங்கள் எல்லாவற்றிலும் செவியால், கேட்டறியும், கேள்விச் செல்வமே தலையானது என்கிறார்.  ஏன் கேள்விச் செல்வத்தை தலையான செல்வமாகக்  கருதுகிறார் என்பதற்கானகாரணத்தை அறிந்து கொள்ளவும்.

     (குறள் எண். 391, 399, 400, 410, 411, ஆகிய குறட்பாக்களை இணைத்துப்பார்த்து, ஆழ்ந்து விரிந்து சிந்தித்து, ‘தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல்’ என்பதற்கான தெளிவினைப் பெறவும்.  ‘கற்றலிற் கேட்டலே நன்று’ என்றுரைப்பதுபோல் குருவின் திருவார்த்தைக் கேட்பதில் ஆனந்தம் ஏற்படும். தொய்வில்லாமல் கேட்க விரும்பும் அறிவு.  ஆனந்தம் ஏற்படுகிறது என்றால் அது அறிவிற்குத் தெளிவினை ஏற்படுத்துகின்றது என்றுதானே பொருள்?!

    FFC-166-dheaivappulavar

    கல்வி-கேள்வி

    கற்றல் என்பது பார்ப்பது, வாசிப்பது, கேட்பது ஆகியவற்றால் சாத்தியமாகின்றது. ஒன்றைப் பார்த்து அதனைப்பற்றி  தெரிந்து கொள்ளலாம். பார்த்து முழுமையாகத் தெரிந்து கொள்வது   சாத்தியமில்லை. ஏனெனில் ஐயம் எழுந்தால் அதனைக் கேட்டுத்தான் போக்கிக் கொள்ள வேண்டும்.  அதே போல் வாசித்து கற்றலில் முழுமையாக தெரிந்து கொள்வதும் சாத்தியமில்லை.  ஐயம் எழுந்தால் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.  கேட்டு கற்றலில் ஐயங்கள் எழுந்தால் உடனே கேட்டுத்  தெரிந்து கொள்ளலாம்.  ஐயங்கள் நீங்கினால் அறிவு அதில் தெளிவு பெறுகின்றது.

    குருவானவர் அறியாமையை நீக்குபவர்.  எனவே அவருடைய உபதேசங்கள், வார்த்தைகள் அந்த அலைகளைத் தாங்கிவரும்.  எனவே அவை காதின் வழியாக சென்று கருமையத்தில் பதியும்.  குருவின் திருவார்த்தைக் கேட்கக் கேட்க தெளிவினை ஏற்படுத்தும். கற்க வேண்டியதைக் கற்று, அதற்கு ஏற்றாற்போல் வாழ்வது, ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறப்பிற்கு உதவியாக இருக்கும்.  கல்வியைவிட சிறந்த செல்வம் வேறு இல்லை என்கிறார் அறிஞர் திருவள்ளுவர்.  கற்றவரை மனிதராகவும், கல்லாதவர்களை விலங்கோடு ஒப்பிடுகிறார்.  இப்படிப்பட்ட கல்வியினை கேட்டறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    கல்வி எதற்காகத் தேவை அறிவிற்கு?

    அறிவு என்பது எது?  உணர்வது எதுவோ அதுவே அறிவு. அறியக் கூடியது எதுவோ அதுவே அறிவு.  எனவே உணர்வதும், அறிவதும் எதுவோ அது அறிவு. அறிவதற்காகவே உள்ளது அறிவு.  உணரும்போது அறிவிற்கு இன்பமோ, துன்பமோ ஏற்படுகின்றது.  அறியும்போது அறிவிற்கு என்ன ஏற்படும்? அறியும்போது அறிவிற்கு அதேபோன்று இன்பமோ, துன்பமோ ஏற்படும். 

         இன்பம், துன்பம் எப்போது ஏற்படுகின்றன?  

    புலன்கள் வழியாக, அளவு, முறையோடு அனுபவித்தால் அது இன்பமாக இருக்கும்.  இதற்கு எதிர்மறையில் அனுபவித்தால் இன்பமே துன்பமாக மாறிவிடும் என்பதனை வேதாத்திரிய இன்ப-துன்பவியல் அறிவிக்கின்றது. புலன் வழியாக அனுபவிக்கும் இன்பம் புலன்இன்பம்.

     கல்வி என்பது அறிவிற்கு செல்வமாகும்.  அச்செல்வமாகியக் கல்வி பார்த்தல், வாசித்தல், கேட்டல் ஆகியவற்றின் வழியாகக் கற்கலாம்.   பார்த்து கற்பதில் அறிவு தானாகவே அறிந்து கொள்கின்றது. வாசித்து கற்பதில், பிறர் எழுதியுள்ளதிலிருந்து கற்கின்றது. இந்த இரண்டிலுமே ஐயங்கள் எழலாம். ஐயத்தைப் போக்கிக் கொள்வதுஎப்படி?  பிறரைக் கேட்டுத்தான் அறிந்து கொள்ள முடியும். பிறரைக்கேட்டுப் பெறுவது தான்  கேள்விச்செல்வம்.

     திருமூலர், திருவள்ளுவர் வரிசையில் மற்றொரு தமிழ்ப்புலவர் கேட்டறிவதுபற்றி என்ன  கூறுகிறார் என்பதனையும் அறிந்துகொள்வோம். அத்தமிழ்ப்புலவர் பாடியுள்ள கவியினை நினைவு கூர்வோம்.

    “உணற்(கு)இனியஇன்னீர்பிறி(து)உழிஇல்என்னும்
    கிணற்(று) அகத்துத்தேரைபோல்ஆகார் – கணக்கினை
    முற்றப்பகலும்முனியா(து) இனிதோதிக்
    கற்றலிற்கேட்டலேநன்று.”                                —  மூன்றுரையரையனார்

     முதல் இரண்டு அறிஞர்களான அறிஞர் திருமூலர் மற்றும் தெய்வப்புலவர் ஆகிய இருவர்,  கூறும் முறையே தெளிவு, செல்வம் இரண்டும் ஒன்றே என்று, சமன்பாட்டின் மூலம் உறுதி படுத்திவிட்டோம்.   இப்போது மூன்றாவது அறிஞரான தமிழ்ப்புலவர் ‘கேட்பது’ பற்றியே கூறுவதனால் இவரும் அந்த இரண்டு அறிஞர்களுடன் எவ்வாறு இணைந்து கொள்கிறார் என்பதனை அறிந்துகொண்டால், அறிஞர் திருமூலர் உறுதிகூறும் ‘தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல்’ என்பது எவ்வாறு என்று தெளிவாகிவிடும்.

     பழமொழியின் பொருள்: தமிழ்ப்புலவர் மூன்றுரையரையனார்  ‘கற்றலிற்கேட்டலேநன்று’ என்று கூறுகிறார். அதாவது அறிஞர்களிடம் விருப்பத்துடன் கேட்டு அறிந்து கொள்வது கற்றலைவிட நல்லது என்கிறார்.  அதற்கு பாடலாசிரியர் எடுத்துக் கொண்ட உதாரணம் கிணற்றுக்குள் இருக்கும் தேரை.   ஆறு மீட்டர் ஆழமுள்ள  கிணற்றினுள் இருக்கும் வெளி உலகைக் காணமுடியாத தேரை தான் வசிக்கும் கிணற்றிலுள்ள உவர்ப்பில்லாத நல்ல நீர் வேறு எந்த இடங்களிலும் இல்லை என நினைக்கின்றது. 

     நூல்களை நாள் முழுவதும் வெறுப்பின்றி இனிதாகப்படித்த ஒருவர், தான் படித்ததுதான் எல்லாமே என ஒருவேளை அத்தேரையைப்போல் நினைத்துக் கொள்ளலாம் இல்லையா? இருந்தாலும், மற்றவர்கள் நம்மைவிட வேறு நல்ல கருத்தைக்களைத் தெரிந்து வைத்திருந்தால், அதனைக் கேட்பதால் நம் அறிவின் தெளிவிற்கு மேலும் தெளிவினைச் சேர்க்குமன்றோ!

    எனவே நூல்களை நாள் முழுவதும் வெறுப்பின்றி இனிதாகப்படித்து தெரிந்து கொண்டிருந்தாலும், அறிஞர்களிடம் விரும்பிக் கேட்டலே நல்லது என்பதுதான் ‘கற்றலிற் கேட்டலே இனிது’என்பதற்கான பொருள்.

       கற்றல் என்பது பார்ப்பது, நல்ல நூல்களை தானே வாசிப்பது ஆகியவற்றால் நடைபெறுவதைவிட, குருவானவர் கற்பிப்பதைக் கேட்டு அறிந்து கொள்வது சிறப்பு என்கிறார். தானே கற்பதில் தான் புரிந்து கொண்டதே எல்லாம் என்பதான முடிவுக்கு வந்துவிடலாம். இதற்கப்பால் ஒன்றுமில்லை என நினைக்கத்தோன்றும். அதற்குப்பதிலாக ஒரு ஆசிரியரிடமோ அல்லது குருவிடமோ கேட்டிருந்தால் நாம் வியக்குமளவிற்கு புரியும்படி விளக்கி இருப்பார். இதற்கானக் காரணம், ஆசிரியரோ, குருவோ, ஒரு கருத்தை வலியுறுத்தும் பல நூல்களைப் படித்திருப்பார். மேலும், இறை உணர் வாழ்வியல் அனுபவங்களைப் பெற்றிருப்பார். ஆகவே ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுத் தெளிவு கண்டவர் என்பதால், கேட்பவரையும் தெளிவடையச் செய்வதும் எளிது.

      மேலும், மேலும்  ‘Don’t delay enlightenment’ என்ற அறிவுறுத்தலின் பயனை விரைவில்அடைய, கற்றலினும் கேட்டல்தானே நன்று?

        இதுவரை மூன்று அறிஞர் பெருமக்கள் வாய்மொழியாக ‘கேட்டலின்’ பெருமையை உணர்ந்தோம். கேட்டலினால் தெளிவு எவ்வாறு பிறக்கின்றது என்பதனையும் அறிந்தோம். வரும் அறிவிற்கு விருந்தில் (10.04.2016) மகரிஷி அவர்கள் கூறும் தெளிவை அறிந்து கொண்டு இயல்பூக்க நியதியின் துணையுடன் ‘தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே’ என்கிற உறுதியான சிந்தனைக்குள் செல்வோம்.

    வாழ்க வளமுடன்.

    வாழ்க மனித அறிவு!                            வளர்க மனித அறிவு!

    Loading

  • FFC – 177-தெளிவு—3/?

    வாழ்க மனித அறிவு                                                              வளர்க மனித அறிவு

    தெளிவு—3/?                                        

    FFC – 177                                                    

     03-04-2016—ஞாயிறு

    FFC-177-NEW SUB HEADING-குருவின் திரு நாமம் செப்பல்

     வாழ்க வளமுடன்.

                      சென்ற அறிவிற்கு விருந்தில் திருமந்திரத்தில், திருமூலர்  குருவின் திருமேனியைக் காண்பது எவ்வாறு சீடருக்கு இறை உணர் ஆன்மீகத்தில்  மிகவும் அவசியமான(the first and prime most) தெளிவினை ஆறாம் அறிவு பெறுகின்றது என்பதனை விஞ்ஞானப் பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் கூறியுள்ளதை அறிந்து கொண்டோம்.  இன்று மற்ற மூன்று வழிகளில் எவ்வாறு தெளிவிற்கு தெளிவினைச் சேர்ப்பது என்பது பற்றி அறிந்து கொள்வோம்.  மீண்டும் அப்பாடலை நினைவு கூர்வோம்.

     

    thelivu_guruvin

    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்:  இது குருவின் வழியாக தெளிவு பெறுவதில் இரண்டாவதாகும்.  இதனை இப்போது எடுத்துக் கொண்டு சிந்திப்போம். குருவின் திருநாமத்தை சொல்வதால் ஆறாம் அறிவிற்குத் தெளிவு ஏற்படும் என்கிறார். இதனை அறியும்போது குருவானவர்,  அதீத  மரியாதை, மதிப்பு, சிறப்பு  உடையவர் என்றும், சாட்சாத் பரப்பிரம்மமே குருவாக வந்துள்ளதால், தெய்வத்திற்கு நிகராக வணங்கப்பட வேண்டியவர் குரு, என மிக மிகத் தெளிவாகின்றது. 

          இறை அருவமானது என உறுதியாகிவிட்டபிறகு,

         இறை தன் வம்சாவளியான மனிதகுலத்திற்கு, தன் நிலையினை எடுத்துச் சொல்வதற்கு வேறு யார் வழியாக எடுத்துச் சொல்ல முடியும்?

    அருவமாகிய இறை, மனித வடிவில், அனந்த  கோடிகளாகியதில், எந்த மனித வடிவில் தன்னையே  உணர்ந்து கொண்டு வருகின்றதோ,     அந்த மனித வடிவம் தான் குருவாகின்றது, மற்ற மனித வடிவங்களின் அறியாமையைப் போக்குவதற்கு? .  இதுதான் அத்வைதத்தில் சுத்த அத்வைதம்.

         திருவள்ளுவர் பத்தாவது குறட்பாவில் ‘இறைவன் அடி’ என்று கூறியுள்ளதற்கு, மகரிஷி அவர்கள், ‘இறைவன் அடி’ என்பதற்கு மெய்ஞ்ஞானம் பெற்ற இறையின் மனிதவடிவமான குருவினுடைய வாழ்க்கை காட்டுகின்ற வழி  என்று பொருள் கூறுகிறார்.

         திருவள்ளுவர்  கடவுள் வாழ்த்தினை  முடிக்கும்போது, அருளியுள்ள

     “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

     இறைவன் அடிசேரா தார்.”           (குறள் எண் 10)

     என்கின்ற குறட்பாவில் ‘அடி சேர்ந்தார்க்கு’ என்றால் (மகரிஷி அவர்கள் தான் எழுதிய  ‘திருக்குறள் உட்பொருள் விளக்கம்’ என்கின்ற நூலில் கூறியுள்ள விளக்கத்தினைக்(பக்கம்24-28 – காணவும்.)  ‘மெய்ஞ்ஞானத்தைப் பெற்ற ஒருவருடைய  வாழ்க்கை காட்டுகின்ற வழியிலே செல்வது’ என்பதை மனம் விரிந்து  ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கமாக அமையும் என்கிறார். 

         மேலும் குருவைப்பற்றி மகரிஷி அவர்கள் கூறுவதனை அறியலாம்.  மெய்ஞ்ஞானம் பெற்ற குருவும் ஒரு காலகட்டத்தில் பூதவுடலை உதிர்க்க வேண்டியிருக்கும்.  அதன் பின்னர் வரும் சீடர்களுக்கு, ஆறுதலான, ஆனால் நிறைவான விளக்கமாக மகரிஷி அவர்கள் கூறுவதனைக் கவனிக்க வேண்டும். குருவானவர் ஓரிடத்தில் இல்லாத நேரத்தும் அல்லது அவரது காலத்திற்குப் பின்னரும் கூட குருவானவர் வழிகாட்டுவதனைப் பற்றிக் கூறுகிறார்.

    gurudevar

         குருவானவர் உருவாக்கிய வாழ்க்கை நெறி வருங்காலத் தலைமுறையினருக்கும் பயன் தரும் என்கிறார். ஞானாசிரியருடைய வாழ்க்கையும், சீடர்களுக்கு முன்மாதிரியாக அமைகின்றது என்கிறார்.  அவரது உபதேசங்கள் வழிகாட்டுவதாகவும் அமைகின்றன என்கிறார் மகரிஷி அவர்கள். 

          இவ்வாறு சொல்வதற்குச் சான்றாக விளங்கியவர் மகரிஷி அவர்களே.  எவ்வாறெனில், தாயுமானவரை, திருவள்ளுவரை, திருமூலரை, வள்ளலார் அவர்களையும் மற்றும் அறிவில் அறிவாய் நிலைத்து அறம் வகுத்து அதனை வாழ்ந்து காட்டிய அத்துனை அருளாளர்களையும் குருமார்களாக ஏற்றுக்கொண்டு வணங்குகிறார். (காண்க ஞானக் களஞ்சியம்- குருவணக்கம் பாடல் எண்.7)

        இப்போது தெளிவு பெறுவதற்கு இரண்டாவது வழியாகிய ‘தெளிவு குருவின் திருநாமம் செப்பல்’ என்பது எவ்வாறு என்பதனை அறிவோம்.  திருநாமம் என்றால் என்ன? திருநாமம் என்பது பெயர், மற்றும் கீர்த்தி என்றும் பொருள். கீர்த்தி என்றால் புகழ் என்று பொருள். FFC-177-NEW-குருவின் திருநாமம்3-4-16

        பக்திமார்க்கத்தில் நாமாவளி எனப்படுவது குறிப்பிட்ட தெய்வத்தின் பெயரை மீண்டும் மீண்டும் சொல்வது.  உதாரணத்திற்கு ராம நாமாவளி. நாமகீர்த்தனை நல்ல பயனைக் கொடுக்கும் என்பார்கள்.

          மனிதனுக்குள்ள எத்தனையோ உறவுகளில் குரு-சீடர் உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  இப்படியிருக்கும்போது  பெரும்பாலோருக்கு குரு-சீடா் உறவு ஏற்படாமலேயே வாழ்க்கை முடிந்து விடுகின்றது. எனவே மறுபிறவியும் தொடர்கின்றது. மற்ற உறவுகள் தானாகவே அமைந்து விடுகின்றன. பிறப்பதால் தாய், தந்தை உறவு ஏற்படுகின்றது.  உடன் பிறந்ததால் சகோதர-சகோதரி உறவுகள் ஏற்படுகின்றன.  பெற்றோர்களால் மற்ற உறவுகள் ஏற்படுகின்றன.  சமுதாயத்திற்கு வரும்போது நண்பர்கள் உறவு ஏற்படுகின்றது.  உறவில்லாமல் மனிதன் தனித்து வாழ முடியாது என்பதனை யாவரும்  அறிந்ததே.

    FFC-177-இத்தனை உறவுnew

    ‘மாதா, பிதா, குரு தெய்வம்’ என்பர் பெரியவர்கள். இக்கூற்று  என்ன உரைக்கின்றது? தாய், தந்தை, குரு ஆகிய மூவரும் தெய்வங்கள் என்கின்றது இக்கூற்று. தாய்      தாய் தந்தையைக் காட்டுகிறாள். தந்தைதான், தெய்வத்தை அறிவதற்கு வழிகள் கூறும்  குருவைக் காட்ட வேண்டும். குருவைக் காட்டிக் கொடுக்கின்ற நிகழ்வு சமுதாயத்தில் இப்போது விடுபட்ட நிலையில் 1911 ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்நிகழ்வு இயற்கையால்/இறையால் புதுப்பிக்கப்பட்டுள்ளது (AT LARGE SCALE). அந்த புதுப்பிக்கப்பட்டுள்ள நிகழ்வில் பயன்பெற்றுக் கொண்டிருக்கும்   சமுதாயத்தில், முதலாவது வரிசையில் நாம் இருக்கின்றோம். 

       எனவே பயனையும் அடைய வேண்டும். அதற்கு நன்றியுணர்வாக, அப்பயனை மற்றவர்கள் அடைவதற்கு உதவ அறிவுத் தொண்டும் செய்ய வேண்டிய பொறுப்பும் நமக்கு இயற்கை/இறை அளித்துள்ளது.

         வினைப்பயனைத் தீர்த்துக் கொள்வதற்காக, கண்களில்லாத ஆன்மா உடலெடுக்கும்போது,  உலகை பார்ப்பதற்கான  இரண்டு கண்களைத் திறப்பதற்கு தாயும், தந்தையும் காரணமாகின்றனர்.  ஆனால் மூன்றாவது கண்ணான, நெற்றிக்கண்ணான, அறிவுக்கண்ணைத் திறப்பதற்கு அறிவை அறிந்த குருவின் தரிசனம் தேவையாக உள்ளன. குரு-சீடர்  உறவு ஆன்மத் தொடர்பாகின்றது. பெற்றோர்களின் உறவும் ஆன்மத் தொடர்புதான்.  எனினும் இரத்தத் தொடர்பு உள்ளது. குரு எங்கோ இருப்பார். சீடன் எங்கோ இருப்பான்.  இருப்பினும் அவர்களை ஆன்மத் தொடர்பால் இயற்கை/இறை இணைக்கும்.  இந்திய நாட்டைக் கடந்து, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும்  அன்பர்கள், தென் இந்தியாவில் தமிழ்நாட்டில், செங்கல்பட்டில் உள்ள சிறு கிராமமான கூடுவாஞ்சேரியில் அவதரித்த வேதாத்திரி மகரிஷி அவர்களை குருவாக அடைய வில்லையா?!

          பெற்றோர்களின்  ஆன்ம தொடர்பிற்கும் குருவினுடன் ஏற்படும் ஆன்ம தொடர்பிற்கும் வித்தியாசம் உள்ளது.  பெற்றோர்களின் ஆன்மாவின் செராக்ஸ்(xerox) நகல்தான்  குழந்தைகள் என்றிருப்பதால், பெற்றோர்களின், தன்முனைப்பால் விளைந்துள்ள அறுகுணப்பதிவுகளின்  தன்மையையே  பிரதிபலிக்கும். ஆனால், குரு-சீடர் ஆன்மத் தொடர்பு, குருவின் இறை உணர்-பண்பேற்ற-உயர்வு, சீடனைத் தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை அளிக்க வல்லது.

        எனவே குரு-சீடர் உறவில், குருவின் ஆன்மாவும் சீடனின் ஆன்மாவும் தொடர்பு கொள்கின்றது.  எப்படி என்பது பின்னர் பார்ப்போம். ‘மாதா, பிதா, குரு தெய்வம்’ என்கின்ற கூற்றுப்படி பிதா, குருவை காட்டிக் கொடுப்பது என்கின்ற நிகழ்வு சமுதாயத்தில் விடுபட்டு விட்ட நிலையில் மனவளக்கலைஞர்களுக்கு வேதாத்திரி மகரிஷி அவர்களை குருவாக இயற்கை/இறை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது நம்முடைய மாதா, பிதா செய்த புண்ணியம்தான். 

          குரு-சீடர் உறவு சிறப்பு வாய்ந்தது என்றோம்.  காரணம்,

         வினைப்பயனின் காரணமாக, ஆன்மா உடலெடுத்த காரணத்தை, பயனைப் பூர்த்தி செய்கின்றது.

        பிறவிப்பயன் என்பது என்ன? 

        எதற்காக பிறவி எடுக்க வேண்டியுள்ளது ஆன்மா? 

        முன் பிறவிகளில் செய்துள்ள வினைகளின் விளைவுகளை அனுபவிக்கவும்,

        மீண்டும் பிறவி எடுக்காமல் இருக்க வேண்டிய வினைகளைச் செய்யவும் ஆன்மா பிறவி எடுக்கின்றது. 

          சுருங்கச் சொல்வதானால் ஆறாம் அறிவுடன் பிறந்த மனிதன், அதற்கு ஏற்ப பொருத்தமாக, பண்பேற்றம் பெற்று பிறவிப்பயனை அடையும் பேற்றினைப் பெற்றிடுதல் வேண்டும்.  ஆகவே,   எல்லாத் தீயவினைகளுக்கும், பாவங்களுக்கும்  மூலகாரணமான இறையை மறைத்திருக்கும் தன்முனைப்பு நீங்குகின்ற பண்பில் ஏற்றம் பெருவதற்காகவே குருவை அடைந்திருக்கிறான் சீடன்.

     guru-disciple-relation     குருவிடமிருந்து பண்பில் ஏற்றம்பெரும்  வழிகளை பயிற்சியாகவும், போதனைகளாகவும், அறிவுரைகளாகவும் கற்க வேண்டும்.  குரு-சீடா் உறவு என்பது ஆன்மத் தொடர்பு என்றோம்.  இது எப்படி என்று  இங்கே விளங்குகின்றது. குரு தான் ஏற்படுத்திக் கொண்ட  இறை உணர்வு மற்றும் அறவுணர்வுப் பண்புகள் எங்கே பதிந்துள்ளன?  அவரது ஆன்மாவில் பதிந்துள்ளன.  எனவே சீடன் அவரைப்போன்றே பண்பில் உயர வேண்டும் என்பதற்காகத்தான் இயற்கை/இறை, குரு-சீடர் உறவை ஏற்படுத்தியுள்ளது. எனவே எப்படி குழந்தையின் ஆன்மா தாய்-தந்தையரின் ஆன்ம-செராக்ஸ் நகலாக உள்ளதோ, அதுபோல் பண்பில் ஏற்றம் பெறுதவதற்கான சீடனின் ஆன்மாவும், குருவின் ஆன்ம-செராக்ஸ் நகலாக வேண்டுமென்பதால் குரு-சீடர் உறவு ஆன்ம உறவு எனப்படுகின்றது.      

         குருவினுடைய பெயரே அவருடைய இறை உணர்வு பெற்ற பண்பேற்றத்தால் மந்திரமாகி விடுகின்றது.  மந்திரம் என்பது என்பது என்ன?  மந்திரம் என்பது வழிபாட்டில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த புனித வார்த்தைகள் அல்லது ஒலிகள். மந்திரம் ஓதுவதால் எந்த நோக்கத்திற்காக அந்த மந்திரம் ஓதப்படுகின்றதோ அதன் பயனை மந்திரம் ஓதுபவர் பெறுவார். மந்திரங்களில் ஒரு சில வார்த்தைகள் பொருள் உடையதாகவும் இருக்கலாம். ஒரு சில வார்த்தைகள் குறிப்பிட்ட ஒலியை எழுப்புவதற்காகவும் இருக்கலாம். 

        ஆன்மாவாகிய குரு,  தன்னுடைய இறை உணர்வு பண்பேற்றத்தால், பெற்றப்பதிவுகளின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பே குருவினுடைய திருநாமம் என்பது. நன்கு அறியப்பட்ட  அறிஞர்களின் பெயரைச் சொல்லும்போதே அவரின் ஒட்டு மொத்த சிறப்பும் நம் கண்முன் வந்து நின்று அவரை மானசீகமாக வணங்கச் செய்கின்றது.   உதாரணத்திற்கு 2041 வருடங்களுக்கு முன்னர் திருவள்ளுவர் வாழ்ந்திருந்தாலும்,  அவரது பெயரை இப்போது சொல்லும்போதே அவர் அருளியுள்ள 133 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறள் எழுதியுள்ளது நினைவிற்கு வந்து அவருடைய, உயர்வையும் சிறப்பையும் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றது. அவருக்கு இப்போது நாம் கொடுத்துள்ள உருவம் வந்து நிற்கின்றது. எனவே குருவின் திருநாமம் என்பது அவரது   பண்புகளையும், நெறிகளையும் எடுத்துச் சொல்லும், நினைவிற்கு கொண்டு வரும் ஒரு திருச்சொல்லாக உள்ளது.

          காலங்காலமாக வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையும் குருவினுடைய தரிசனம் அறிவிற்கு  கிடைக்காமல்  இப்பிறவியில் குருவின் தரிசனம் கிடைக்கும்போது அது அறிவிற்கு தெளிவினை ஏற்படுத்துகின்றது.  ஆகவே குருவினுடைய  திருநாமமும் தெளிவினை அளிக்கின்றது என்கிறார் அறிஞர் திருமூலர்.      சீடர் குருவின் திருநாமத்தை சொல்லும் போது அவனுக்கு ஆனந்தத்தைத் தருகின்றது. 

    thelivu

        பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்  யார் ஒருவருக்கு இறைவனின் பெயரைச் சொல்லும்போதே கண்களில் நீர் வருகின்றதோ அவருக்கு இதுவே கடைசிப் பிறவி என்கிறார்.  அதேபோன்று சாட்சாத் பரப்பிரம்மமே குருவாக வந்துள்ளபடியால்,  இறைவன் பெயரைச் சொல்லும்போது கண்களில் நீர்வருவதுபோல், குருவினுடைய  திருநாமத்தைச் சொல்லும் போதோ அல்லது அவரது திருப்புகழை நினைக்கும் போதோ, எடுத்துக் கூறும்போதோ,  கண்களில் நீர்வருகிறதென்றால்,  அவருக்கும்  இதே கடைசிப் பிறவி என்றாகின்றது.  ஏனெனில் சாட்சாத் பரப்பிரம்மமே குருவாக வந்னவர் என்பதனை நினைவில் வைத்துக் கொண்டு பார்க்க வேண்டும். யார் ஒருவர் குருவை மதித்து ஒழுகி வாழ்ந்தாலும், குருவின் உயர்வு தப்பாமல், சீடனின் தரத்தை உயர்த்தி பிறவிப்பயனை அளிக்கும் என்கிறார் மகரிஷி அவர்கள்.  ‘தப்பாமல்’ என உறுதி அளிப்பதனை, மனதில் இருத்திக் கொண்டு, குருவினுடைய ஆற்றலை, இயல்பூக்க நியதிப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

         ‘அருளாளர்கள்’ என்று கூறுகின்றபோதே, அதில் இன்பம் இருப்பதனை உணரவேண்டும்.       ‘அருளாளர்கள்’ என்பவர் யார்?  அறிவில் அறிவாய் நிலைத்து. அறம் வகுத்து  அதனை வாழ்ந்து காட்டியவர்களாவர்.  எனவே வாழையடி வாழையாக வருகின்ற திருக்கூட்ட மரபினில் (Never Ending Divine Relay Race) வருகின்றவர்கள் அருளாளர்களாவர்.  எனவே அவர்கள் மீது கொண்ட மரியாதையாலும், மதிப்பாலும் ‘அருளாளர்கள்’ எனக் கூறும்போதே, அறிவு அவர்களை, இன்னார் இன்னார் எனத் தனித்தனியாக அறிய முடியாவிட்டாலும், அவர்களின் ஒட்டு மொத்தமான புனிதத்தன்மையும், அருள்தன்மையும்  நமது கண் முன்னே வந்து நின்று, எல்லோரையும் ஒட்டுமொத்தமாக மானசீகமாக நினைத்துக்  கொள்வதால் அறிவிற்கு ஆனந்தம் கிடைக்கின்றது.

       இதனை ஓர் நடைமுறையில் நடக்கும் சம்பவத்தின் வாயிலாக, எவ்வாறு  குருவின் திருநாமம் ஆனந்தத்தை அளிக்கின்றது என்பதனை அறிந்து கொள்வோம்.  காதலிக்கும் போது, காதலர்கள் இருவரும் ஒருவர் பெயரை மற்றொருவர் உச்சரிப்பதில் இன்பம் கொள்வர். காதலர்கள் இருவரும் நேரிடையாக சந்திக்கமுடியாதபோதும் வேறு யாராவது காதலர்களின் பெயரைச் சொன்னாலும் கூட அப்பெயரைக்கேட்ட மாத்திரத்தில் இன்பம் கொள்வர். இது ஐயுணர்வைச் சார்ந்த இன்பம்.  ஆனால் குரு-சீடர் உறவில் குருவின் திருநாமத்தைக் கேட்டாலோ, அல்லது உச்சரித்தாலோ அது ஆனந்தத்தைத் தருகின்றது.  இது மெய்யுணர்வைச் சார்ந்த இன்பம்.  மெய்யுணர்வைச் சார்ந்த இன்பம் பேரானந்தத்திற்கு கொண்டு சேர்க்கும்.  ஆனால் ஐயுணர்வைச் சார்ந்த  இன்பம் நிரந்தரமற்றது மட்டுமில்லை,  சலிப்பையும் கொடுக்கும், அளவையும்,  முறையும் கடைபிடிக்காமலிருந்தால்.  சீடர் குருவின் மேன்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

    குருவின் மேன்மை

         எந்த அளவிற்கு குரு கூறும் அறிவார்ந்த விளக்கத்தால் சீடரின் அறிவிற்கு, குருவின் அளவிற்கு ஆழ்ந்த விரிந்தபுரிதல் ஏற்படுகின்றதோ, அந்த அளவிற்கு குருவிற்கும் சீடருக்கும் இடையே புனித ஈர்ப்பு(Divine attraction)  ஏற்படும்.  இதன் விளைவாக  சீடனுக்கு குருவின் மீது

           1)   எல்லையில்லாத் தெய்வீக அன்பு(unconditional Divine Love)ஏற்படும். 

           2)  உயர் மரியாதை,

           3) உயர் மதிப்பு,

           4) உண்மை நம்பிக்கை,

           5) குருவின் விளக்கத்தின் மீது அழுத்தமானப் பிடிப்பு,

          6)  அசையாது மதித்தொழுகுதல்(implicit obedience) ஏற்பட்டு,

    குருவிற்கும் சீடருக்கும் இடையே நெருக்கமான, திடமான பிணைப்பு உண்டாகும். இயல்பூக்க நியதியும், அதன் கிளைத்தேற்றமும் உறுதியாகும். எவர் ஒருவர் குருவை மதித்து ஒழுகினாலும். குருவின் உயர்வு மதிப்பவரை தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும் இயற்கை/இறை என்று மகரிஷி அவர்கள் உறுதியாகக் கூறுவதனை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.

     எனவே, அப்போது குருவின் திருநாமத்தைச் சொல்வதில் சீடருக்கு ஆனந்தம் ஏற்படுகின்றது.  அறிவிற்கு ஆனந்தம் ஏற்படுகின்றது என்றால் அறிவிற்குத் தெளிவு ஏற்படுகின்றது என்று பொருள்.

          அறிவு என்றாலே அது அறியும் திறனுடையது. அறியும் திறனுடைய அறிவு, சிந்திக்கவல்லமை உடையதாலும், ‘என்ன?’, ‘ஏன்?’, ‘எதற்கு?’ ஆகிய  வினாக்களை எழுப்பி விடைகளைக் கண்டுபிடிப்பதன் மூலமாக, அதன் இயல்பு வெளிப்படுவதால், அது அறிவிற்கு பேரானந்தம்தானே.  எனவேதான் அவ்வைத்தாய் அறிவினருடன் (குருவினுடன்) சேர்வதும், அவரைக் கனவிலும், நனவிலும் காண்பதும் இனிதினிலிலும் இனிது என்கிறார்.  

         அதாவது ஆனந்தத்தின் விளைவாக அறிவு பண்பேற்றத்தின் மீது ஆர்வமும், அக்கறையும் கொள்கின்றது என்று பொருள். எனவே குருவின் திருநாமம் மந்திரம் போல் செயல்படுவதற்கு.  அப்பெயருக்குரியவரின் அரிய, பெருமைகளை, வாழ்க்கை வரலாறுகளை, அவர் புனிதம் அடைந்த விதத்தை எந்த அளவிற்கு சீடரால் ஆழ்ந்து விரிந்து புரிந்து வைத்துக்கொள்ளப்படுகின்றதோ, அந்த அளவிற்கு அச்சீடர் குருவின் திருநாம உச்சாடனம், தெளிவினையும், ஆனந்தத்தையும் அளிக்கும். இன்றைய சிந்தனையை நிறைவு செய்து கொள்வோம்.  அடுத்த அறிவிற்கு விருந்தில்(06-04-2016 புதன்),  மூன்றாவது வழியான  ‘தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்’ என்பதனைப்பற்றிச் சிந்திப்போம்.  வாழ்க வளமுடன்.

     வாழ்க அறிவுச் செல்வம்                                                    வளர்க அறிவுச் செல்வம்.

    Loading