இன்றைய விருந்து

  • 60-ஏன் ‘அறிவே தெய்வம்’ எனப்படுகின்றது?

    வாழ்க மனித அறிவு                                வளர்க மனித அறிவு

    ஏன் ‘அறிவே தெய்வம்’ எனப்படுகின்றது?அ.வி.எண்.60—(5/?)

    25-02-2015 – புதன்

    கடந்த அறிவிற்கு விருந்தில், உதாரணத்திற்கு, ஆர்சனிக் என்கின்ற அணுவை எடுத்துக் கொண்டோம். அதில், மகரிஷி அவர்கள் கூறியுள்ளது போல், அறிவு, எவ்வாறு உயிரற்ற சடப்பொருட்களில் ஒழுங்காற்றலாகத் திகழ்கின்றது என்று பார்த்தோம். இன்று, அணுவிலுள்ள துணைத்துகள்களான(sub atomic particles) புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் உருவானது எவ்வாறு என்று பார்க்க இருக்கிறோம்.

    விஞ்ஞானத்தில், புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் எவ்வாறு பிறந்தன/உருவாகின என்கின்ற விளக்கம் இல்லை. ஒரு இரசாயன அணுவில்(chemical atom) துணை அணுத்துகள்களான (subatomic particles) புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் எவ்வாறு, அமைப்போடு(pattern), துல்லியமாக(precision) ஒழுங்குடன்கோடு(regularity) இயங்கி வருகின்றன என்பதற்கு காரணமான ஆற்றல் பற்றிய விளக்கம் இல்லை.

    அணுவில் (atomic structure), குறிப்பிட்ட அமைப்பு, துல்லியம், ஒழுங்கு ஆகிய மூன்று நெறிகளுக்கு உட்பட்டு புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் தத்தம் இடத்தில் அமைந்திருப்பது என்பது ஆற்றல் இல்லாமல் இயலாது. ஆகவே இந்த மூன்று நெறிகளுக்கும்(ஒழுங்கிற்கும்) காரணமான ஆற்றலை வேதாத்திரியம் கி.பி.1911 க்குப் பிறகு ஒழுங்காற்றல் எனப் பெயரிட்டதோடு மட்டுமல்லாமல், அது அறிவு என்றும், அறிவு சடப்பொருட்களில் ஒழுங்காற்றலாய் திகழ்கின்றது என்றும் கூறியுள்ளது.

    அணுவின் துணைத்துகள் இருந்ததைக் கண்டுபிடித்தது; அதனை ஏற்றுக்கொண்டது விஞ்ஞானம். ஆனால் துணைத்துகள்கள் எவ்வாறு அமைப்பு, துல்லியம், ஒழுங்கு ஆகிய மூன்று நெறிகளுடன் அணுவில் இடம் பெற்றதற்கான காரணத்தை வினவவில்லை விஞ்ஞானம். அந்தக் காரணத்தை அறிய வேண்டிய அவசியம் விஞ்ஞானத்திற்கு இதுவரை வரவில்லை.

    ஆனால் கடவுள் என்பவர் யார்,
    அவர் ஏன் இப்பிரபஞ்சத்தைப் படைத்தார் என்கின்ற வினாவை எழுப்பி,
    அதற்குரிய விடையான, ஆதிநிலையை அறிவுப்பூர்வமாகக் கண்டுபிடித்து,
    விஞ்ஞானத்தின்படி இப்பிரபஞ்சம் தோன்றிய மூலத்தையும் உறுதி படுத்தி,

    இரண்டு மூலங்களும்(the source/state of God and the source of this universe) ஒன்றே என்று கடவுளின் உண்மை நிலையை, அறிவுப்பூர்வமாக வேதாத்திரி மகரிஷியின் வழியாகத் தெரிவிக்க விரும்பியதால், இயற்கை, அணுவில் அமைப்பு, துல்லியம், ஒழுங்கு ஆகிய நெறிகளுக்கானக் காரணத்தை மகரிஷி அவர்களுக்குத் தெரிவித்து, அது ஒழுங்காற்றலாகிய அறிவு என்று விளக்கியுள்ளது.

    ஆகவே, அறிவு சடப்பொருட்களில் ஒழுங்காற்றலாய் திகழ்கின்றது என வேதாத்திரியம் கூறுகின்றது. விஞ்ஞானம், அறிவை, பிரபஞ்ச மூலப் பொருட்களில் ஒன்றாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் வேதாத்திரிய மெய்ஞானம் அறிவை பிரபஞ்ச மூலப்பொருட்களில் பிரதானமாக எடுத்துக் கொண்டுள்ளது. எனவே, எவ்வாறு புரோட்டான்கள், நியூட்ரான்கள், எலக்ட்ரான்கள் பிறந்தன/உருவாகின என்று வேதாத்திரிய வெட்ட வெளி விஞ்ஞானம் கூறுவதனையும் இப்போது சுருக்கமாக அறிந்து கொள்வோம்.

    வெளியாகி இருப்பு நிலையில், ஆற்றல் வற்றாமல் இருப்பாக இருக்க, ஆற்றல் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருப்பதனால் அதனுள் இறுக்க ஆற்றல் மிகுந்து வெளி நொறுங்கித் துகள்களாகின(இறைத்துகள்கள்). அந்தத் துகள்கள், வெளியில் இருப்பதனால், வெளியின் சூழ்ந்தழுத்தும் ஆற்றலால் எல்லாத்திசைகளிலும்(360°) அழுத்தப்படுவதாலும் துகள்கள் தன்னையே சுற்றிக் கொள்ளும் ஆற்றலைப். பெறுகின்றன. இக்கருத்தை எடுத்துச் சொல்லும் பாடலை நினைவு கூர்வோம்.

    ”இறை வெளியே தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்
    இதன் திணிவு மடிப்பு விழச் சுழலும் நுண்விண்ணாம்;
    ………………………………………………………….”     — மகரிஷி அவர்கள்.

    இலட்சக்கணக்கான துகள்கள் வெளியின் சூழ்ந்தழுத்தத்தால், ஒன்று சேர்ந்து ஒரு கொத்தியக்கமாக(association) உருவானதுதான் விண் எனப்படுகின்ற பஞ்சபூதங்களில் முதலாவதாகும்.

    இந்த விண்ணின் தற்சுழற்சி வேகத்திற்கேற்ப(spinning speed) துகள்களை வெவ்வேறாகப் பிரித்துச் சொல்லப்படுவதுதான் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவைகள் என்கின்றது வேதாத்திரியம். இதனை விளக்குவதற்காக வேதாத்திரியம், காலத்தால், வெவ்வேறு வயதில் இருக்கக்கூடிய ஒரே மனிதனுக்கான வெவ்வேறு பெயர்களை உதாரணங்களாகக் கூறுகின்றது. அதாவது ஒரே மனிதன்னை, அவன் வயதிற்கேற்ப குழந்தை என்றும், இன்னும் வளர்ந்த பிறகு மாணவன் என்றும், இன்னும் வளர்ந்த பிறகு இளைஞன் என்றும், இன்னும் வளர்ந்த பிறகு குடும்பத்தலைவன் என்றும் பெயர் பெறுவதைப் போல் துகள்கள் எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியூட்ரான்கள் என்று அவற்றின் வயதைக் கொண்டு, அதாவது தற்சுழற்சி வேகத்தைக் கொண்டு பெயரிடப்படுகின்றன. காலம் செல்லச் செல்ல, சுழற்சிக்கு வந்த. விண்ணின் ஆரம்ப வேகம் (spinning speed— rpm or rps – revolutions per minute or second) குறைந்து கொண்டே வரும். முதலில் தோன்றிய விண்ணின் சுழற்சி வேகம் குறைவானதாகவும், பின்னர் தோன்றிய விண்ணின் சுழற்சி வேகம், முன்னர் தோன்றிய விண்ணைவிட சுழற்சி வேகம் அதிகமானதாகவும் இருக்கும். இந்த சுழற்சி வேகம் குறைந்து வந்ததுதான் விண்கள் ஒன்றை விட்டு மற்றொன்று பிரியாமல் – வேகம் குறைந்ததை வேகம் அதிகமானது சுற்றி வர ஆரம்பித்து உறவை தக்க வைத்துக் கொண்டது. அதாவது தற்சுழற்சி வேகம் குறைந்து வந்ததால்தான் விண்கள் ஒன்றுக்கொன்று உறவை வைத்துக் கொள்ள முடிந்தது. இத்தன்மைதான் பருப்பொருள் உருவானதற்கு ஏதுவாக இருந்தது. இதுபோன்ற விளக்கம் விஞ்ஞானம் தரவில்லை.

    இத்தகைய இயக்க ஒழுங்கில் தான் வெவ்வேறு வகையான 118 மூலகங்கள் (elements) உருவாகின. (மூலகங்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டவண்ணம் உள்ளது; இந்த இயக்க ஒழுங்கிற்கு காரணமான ஆற்றலை ஒழுங்காற்றல் என்கின்றது வேதாத்திரியம். இந்த இயக்க ஒழுங்கு நடைபெறுவது உயிரற்ற சடப்பொருட்களில். ஆகவேதான் உயிரற்ற சடப்பொருட்களில் இயங்கும் இந்த இயக்க ஒழங்காற்றலைத்தான் அறிவாற்றல் என்கின்றது வேதாத்திரியம். ஏன் ஒழுங்கிற்குக் காரணமான ஆற்றலை ஒழுங்காற்றல் என்றே கூறாமல், அதனை அறிலு என்கின்றது என்றால், இதே ஆற்றல்தான் பஞ்சபூத கூட்டினால் உருவான முதல் உயிரில் உணர்வாக செயல்படுவதினால் அறிவு எனப்படுகின்றது.
    மேலும் அறிவின் பணி உணர்தல் மட்டுமல்ல, அது ஒழுங்கிற்கும் காரணம் என்பதனை மறந்து விடக்கூடாது. இதனை, ஒரே தவற்றை மீண்டும் மீண்டும் செய்யும் சிறுவனை பெரியவர் “அவனுக்கு அறிவே கிடையாது” என்று கடிந்து கொள்கின்ற நிகழ்ச்சியின் வாயிலாக, ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.

    பொதுவாக, அறிவு என்றால் அதற்கு உணரும் ஆற்றலும், எண்ணும் அல்லது சிந்திக்கும் ஆற்றலும் உள்ளது என்று எல்லோரும் அறிவர். ஆனால் எல்லோரும் அதனை தெய்வம் என்று அறியார். ஆனால் அறிவுதான் தெய்வம் என்று கண்டுபிடித்து விட்டாலும், மகரிஷி அவர்கள் “உணர்ச்சியாய், சிந்தனையாய் உள்ளது மட்டுமே அறிவு” என்கின்ற உண்மையிலேயே பல நாட்களாக இருந்து வந்ததாகக் கூறுகிறார் பாடலில், அவர் அதோடு, ‘அறிவே தெய்வம் என்கின்ற’ கண்டுபிடிப்பை (சிந்தனையை) நிறுத்திக் கொள்ளவில்லை. அவர் நிறுத்திக்கொள்ளவில்லை என்பதைவிட இயற்கை அவரது சிந்தனையை நிறுத்திவிடவில்லை என்பது தான் ‘இயற்கையின் தன்மாற்ற சுத்த அத்வைத’ விஞ்ஞானத்தின் படி சரி.

    பாடலில் “மேலும் உண்மை விளங்க” என்று கூறுவதிலிருந்தே இயற்கை அவரது சிந்தனையை நிறுத்தவிடவில்லை என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. இப்பாடலோடு தொடர்புள்ள, மகரிஷிக்கு நடந்த உண்மைச் சம்பவத்தையும் இங்கே அறிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஞானி வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்ததற்கான பயனும், மகிழ்ச்சியும் இல்லாது போய்விடும்.
    திருவான்மியூர் தலைமை மன்றத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இறைவணக்கத்தில் பேரின்ப ஊற்று என்கின்ற தலைப்பில் உள்ள பாடலை மகரிஷி அவா்களின் சீடர்களான இருவர், தாயும், மகளும் சோ்ந்து இசையோடு பாடினார்கள். அப்போது மகரிஷி அவர்களுக்கு கண்களில் நீர் மல்கியது. காரணம் என்ன? இதனை அவரவர்கள் சிந்தனைக்கே விட்டுவிடலாம்.

    இருப்பினும் சத்சங்கம் என்பதால் சிறிதளவு கருத்தை இப்போது பரிமாறிக் கொள்ளலாம். பாடல் மகரிஷி அருளியது. நல்ல இசையுடன் பாடப்பட்டது. பாடலின் கருத்துடன் இசையும் சேர்ந்து கொண்டது. பாடலில், ஒரு பேருண்மையை அதாவது இறையின் உண்மை நிலையைக் கண்டுபிடித்த அனுபவத்தை இறையிடமே தெரிவித்து, நமக்கும் தெரிவிக்க விரும்பி பாடல் இயற்றியுள்ளார். அவ்வரிகளில் 7,8 ஆம் வரிகளையும், கடைசி நான்கு வரிகளையும் மீண்டும் நினைந்து இன்புறவும். இசை ஞானம் இருந்தால் நீங்களே பாடிப் பாடி பேரின்ப ஊற்றில் திளைக்கவும். அந்நிகழ்வு நடந்தேறும். அல்லது பாடலின் குறுந்தகடு இருந்தால், அதற்கான, சூழ்நிலையையும், மனநிலையையும்(mind set) ஏற்படுத்திக் கொண்டு, அப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு பேரின்பத்தில் அடிக்கடித் திளைக்கவும். தவப்பயிற்சிகளுடன் இப்பாடலை தினந்தோறும் கேட்டு வருவதோடு, அந்நிகழ்வை, மனதில் உருவகப்படுத்திக் கொண்டால், இயற்கையின்/இறையின் கருணைக்கண்கள் நம்மீது விழ ‘அவனிலே நாம் அடங்க, நம்முள்ளே அவன் விளங்க, அவனது தன்மை ஒளிர, நமதுள்ளம் தூய்மை பெறும்’

    . இறுதியாக மனிதப்பிறவியின் நோக்கம், மனம் தூய்மையை எய்துவதுதான். அப்போதுதான், விவேகானந்தர் கூறியுள்ளது போல், மனிதன் கொண்டுள்ள மிருக இயல்பு, மனித இயல்பு, தெய்வீக இயல்புகளில் மிருக இயல்பும், மனிதஇயல்பும் மறைந்து தெய்வீக இயல்பு மேலோங்கும். மகரிஷி அவர்கள், தனது ஆன்மீக வாழ்வில், பிறவியின் நோக்கத்தை அடைந்த படிகளாக நான்கினைக் கூறுவதில்(பாடல் எண் 1849- ஞானக்களஞ்சியம் பாகம்-2). இரண்டாவது படியாக மனத்தூய்மையைத்தான் குறிப்பிடுகின்றார். அதே கருத்துதான் பேரின்ப ஊற்று என்கின்ற இந்தப் பாடலின் 19வது வரியும் தெரிவிக்கின்றது.

    ஆகவே இறையுணர்வு என்பது மனம், இறைக்கு சமமாகத் தூய்மை பெற்றால்தான் சாத்தியம். “மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம்” என்று சொல்வது கூட இந்த பொருளில்தான். “அறிந்தது சிவம், மலர்ந்தது அன்பு”. அன்பு மலர்கின்ற அளவிற்கு மனம் தூய்மை பெறவேண்டும். இறையுணர்வு என்பதும், மனத்தூய்மை வேறு வேறல்ல. மகரிஷி அவர்கள் தெய்வத்திற்கு கூறும் ஒரு சாம்யத்தை நினைவு கூர்வோம்:-

    தெய்வம்= மனிதன் minus மும்மலங்கள். மும்மலங்கள்= ஆணவம்+கன்மம்+மாயை

    God = Man minus impurities.
    Impurites =Ego+ sinful imprints+maya

             பேரின்ப ஊற்று

                               ffc-60-png-1-25-2-15     

                                                                                                  

     உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும் 

                                         உனது திரு நிலையும் அறிவே என உணர்ந்தேன்.

                                                                                                                                                                              (இன்ப ஊற்றாய்)

          ffc-60 -png-2

      

    FFC-60-PNG-3 

                                                                ….வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    இப்பாடல் மகரிஷி அவா்கள் இயற்றியது. அதனைக் கேட்டு இரசிக்கின்ற மற்றவர்களுக்கு கண்களில் நீர் வரலாம் வருவதும் உண்டு. ஆனால் அந்நிகழ்ச்சியில் மற்றவர்களுக்கு இப்பாடலைக் கேட்டு கண்களில் நீர் வரவில்லை. ஆனால் பாடல் இயற்றியவருக்கே கண்களில் நீர் வழிந்தது. காரணம் என்ன? மனம் நெகிழ்தலைக் காட்டுகின்றது கண்ணீர்.
    நெகிழ்தல் என்றால் இறுக்கம் தளர்தல் என்று பொருள். அன்பு, பரிவு, இரக்கம் முதலியவற்றால் மனம் இளகுதல். பாடலில் தெரிவித்துள்ள மகரிஷியின் அனுபவம் என்றோ நடந்தது. அன்றும் இதே போன்று மனம் ‘நெகிழும் நிகழ்வு’ அவருக்கு நிச்சயமாக நடந்திருக்கும். மனம் நெகிழ்ந்த காலஅளவும்(Duration) நீடித்திருக்கும். அதனை இறைவன் ஒருவன் மட்டுமே பார்த்து ரசித்திருப்பான். அதே போன்ற அனுபவம், அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியிலும் நடந்தது. இதனால் இயற்கை நடத்திய அந்நெகிழ்தல் நிகழ்ச்சி மகரிஷியோடு முடிந்து விட்டது என்று பொருள் கொள்ளக் கூடாது. நமக்கும் அந்நெகிழ்தல் நிகழ்ச்சி இப்பாடலையோ அல்லது வேறு பாடலைக் கேட்கும் போதோ அல்லது உரைநடையை வாசிக்கும் போதோ ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இயற்கை அன்னை அன்று அந்நெகிழ்தல் நிகழ்ச்சியினை நடத்தியுள்ளாள்.

    “யாரொருவருக்கு இறைவனின் நாமத்தைக் கேட்கும்போதே கண்களில் நீர் வருகின்றதோ, அவருக்கு அது கடைசி பிறவி” என ஸ்ரீ ராமகிருஷ்ணர் கூறியுள்ளதை, அன்றைய மகரிஷி அவர்களின் நெகிழ்தல் நிகழ்ச்சியில் நேரிடையாக காணமுடிந்தது. வாழ்க மகரிஷியின் அறிவாற்றல்.
    தொடரும் அடுத்த விருந்தில்(01-03-2015 ஞாயிறு)

    Loading

  • 59-ஏன், ‘அறிவே’, ‘தெய்வம்’ எனப்படுகின்றது?

    *****
    குறிப்பு: கடந்த அறிவிற்கு விருந்தில் கடைசியாக, கூடுதலாக, பிறகு சேர்க்கப்பட்டுள்ளது. அது violet வண்ணத்தில் கடைசியாக உள்ளது. அதனை வாசித்து விட்டு இன்றைய விருந்திற்குள் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. சிரமத்திற்கு பொருத்தருள்க.

    ஏன், ‘அறிவே’, ‘தெய்வம்’ எனப்படுகின்றது?அ.வி.எண்.59—(4/?)

    22-02-2015 – ஞாயிறு

    வாழ்க மனித அறிவு                  வளர்க மனித அறிவு

     

    கடந்த அறிவிற்கு விருந்தின் தொடர்ச்சியாக இன்று ‘Entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தைக்கு மேலும் பொருள் விளங்கிக் கொண்டு, எவ்வாறு இறை ஆட்சியின்றி இப்பிரபஞ்சத்தை ஆண்டு கொண்டிருக்கின்றது என்று பார்க்க இருக்கிறோம்.
    மிகவும் பழைய ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி ‘Entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தைக்குக் கூறும் அர்த்தத்தைக் கவனிப்போம்.
    entelechy= 1) realization
    2) becoming or being of what was potential
    3) developed perfection
    4) what gives perfection
    ‘Entelechy’ என்பது
    1. வார்த்தைகளால் சொல்ல முடியாத இயற்கையின் தன்மையை,
    2. என்ன இருந்ததோ அது வெளிப்படுவதை,
    3. முன்னேற்றம் அடைந்து முழுமை அடைவதை,
    4. பூரணத்தைக் கொடுக்கக் கூடியதைக் குறிக்கின்றது.

    ‘Entelechy’ என்கின்ற வார்த்தைக்கான ஆழ்ந்த பொருளை எந்த அளவிற்கு விளங்கிக் கொண்டு, மனதில் உருவகப்படுத்த முடிகின்றதோ அந்த அளவிற்கு இறையின் தன்மாற்றத்தில் உள்ள பிரமிப்போ, ஐயமோ, திகைப்போ இல்லாது போய்விடும். விளக்கம் தெளிவாகிவிடும்.

    அறிவு மூன்று வகையில் செயல்படுகின்றது. உயிரடற்ற சட்பொருட்களில் ஒழுங்காற்றலாகவும், உயரினங்களில் உணர்தலாகவும், மூன்றாவதாக மனிதனில் தன்னையே உணர்ந்து கொள்ளக்கூடியதாகவும் செயல்படுகின்றது. இதற்கு உதாரணம் – இறையாகிய அறிவு தன்னையே அறிந்து கொள்வதற்காகவேதான் நம்முடைய இணையதள சத்சங்கத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது.

    உயிரற்ற சடப்பொருட்களில் அமைப்பு (pattern) துல்லியம் (precision), ஒழுங்கு (regularity) ஆகியவைகளுக்குக் காரணமான ஒழுங்காற்றலாகவும் (order of function),

    உயிரற்ற சடப்பொருட்களில் அமைப்பு (pattern) துல்லியம் (precision), ஒழுங்கு (regularity) ஆகியவைகளுக்குக் காரணமான ஒழுங்காற்றலாகவும் (order of function), விளங்குகிறது.

    உதாரணத்திற்கு அணு அமைப்பை (Structure of an atom) எடுத்துக் கொள்வோம். அணுவின் மையத்தில் அணுக்கரு (necleus) உள்ளது. அதனை எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன. எலக்ட்ரான்கள் தன் விருப்பம் போல் சுற்றி வருவதில்லை. எலக்ட்ரான்கள் ஒழுங்குடன் தத்தம் பாதையில்(orbit) சுற்றி வருகின்றன. முதல் பாதையில்(K), இரண்டாம் பாதையில்(L), மூன்றாம் பாதையில்(M) எவ்வளவு எலக்ட்ரான்கள் இருக்க வேண்டும் என்பது 2n² என்கின்ற சாம்யத்திற்கு (formula) உட்பட்டுத்தான் சுற்றி வருகின்றன. n என்பது பாதையின் எண். உதாரணத்திற்கு முதல் பாதைக்கு n=1, இரண்டாம் பாதைக்கு n=2, மூன்றாம் பாதைக்கு n=3. ஆகவே முதல் பாதையில் 2 (2n² = 2 x 1² =2), இரண்டாம் பாதையில் 8 மூன்றாம் பாதையில் 18ஆக இருக்கும். இந்த சாம்யத்தை அதற்கு சொல்லியது யார்?. இந்த சாம்யத்துடன் அணுவை அமைத்துக் கொள்ளும் ஒழுங்காற்றல் — தன்மையைத்தான் உயிரற்ற சடப்பொருட்களிலும் அறிவு இருக்கின்றது என்கின்றது வேதாத்திரியம்.

    “உணர்ச்சியாய்ச் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று
    உணா்ந்திருந்தேன் பல நாள்; மேலும் உண்மை விளங்க
    உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும்
    உனது திரு நிலையும் அறிவே என உணர்ந்தேன்”

    …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    சடப்பொருட்களிலும் அறிவு இருக்கின்றது, ஆனால் ஒழுங்காற்றலாய் உள்ளது என்பதனை விஞ்ஞான உதாரணத்தோடு விளங்கிக் கொள்வோம்.

    அணு எண் 33ஐக் (Atomic Number=33) கொண்ட ஆர்சனிக் என்ற தனிமத்தின் அணு அமைப்பினைக் காண்க. (அணு எண் = எலக்ட்ரான்களின் எண்ணிக்கை).

    arsenic

     

    • கடைசி பாதையில் எட்டு எலக்ட்ரான்களுக்கு மேல் இருக்காது. இதற்கு Octet rule என்று பெயர்.

    கடைசி பாதையில் எட்டு எலக்ட்ரான்கள் இருந்தால் அந்த அணு நிலைத்த(stable) அணுவாகும். உதாரணம் நியான் மற்றும் ஆர்கான்.inert gas

     

    விஞ்ஞானத்தில் உள்ள எந்த நியதிகளுக்கும் (laws) காரணம், அறிவு என்கின்ற ஒழுங்காற்றலின் கருணைதான். இதனை பாடலின் வழியாக எடுத்துச் சொல்வதை மீண்டும் நினைவிற்குக் கொண்டு இறையை நினைந்து மகிழ்வோம். அறிவு ஒழுங்காற்றலாக செயல்படும் விஞ்ஞான நியதிகளையெல்லாம், அவ்வப்போது, மனிதனின் அறிவின்(அதுவும் இயற்கையே) வழியாகத் தெரிவித்து, அதனை மனிதனுக்கு வேண்டிய வளமாக மாற்றி அனுபவிக்க வைத்தமையை ‘கருணை’ என்று சொல்லாமல் வேறு எவ்வாறு சொல்வது? இதுவும் “தனிப் பெருங்கருணை” என்று வள்ளலார் கூறுவதில் அடங்கும். இந்த கருணையைப் புரிந்து கொள்ளாமல் மனிதகுலம் இயற்கையோடு/இறையோடு போராடுவது எவ்வளவு துரதிருஷ்ட வசமானதாக உள்ளது.

    உயிர்களில் ஒழுங்காற்றலாக இருப்பதோடு உணர்தலாகவும் (cognition), அனுபவிப்பதாகவும் (expeience), பிரித்துணர்தலாகவும் (discrimination) செயல்படுகின்றது.

    மனிதனிடம் இந்த ஆறு பணிகளுக்கும் அப்பால், தன்னையே உணரக்கூடியதாகவும் (realisation) உள்ளது என்கின்றார் மகரிஷி அவர்கள். அதனால் தான் மனிதன் உயிரினங்களிலே அரிதான பிறவி என்கிறார் அவ்வையார். அறிவின் நிலையை விளக்கும் மகரிஷி அவர்களின் கவியை நினைவு கூர்வோம்.

    மெய்ப்பொருள் (19-04-1984)

    தோற்ற மெல்லாம் மெய்ப்பொருளே அவ்வதற்குள்
    தொடர்ந்து விரிந்தியங்க ஒழுங்காக ஆற்றும்
    ஆற்றலெல்லாம் அறிவாகும், அறிவின் மூலம்
    அதன்வளர்ச்சி பூரணம் ஐம்புலன் உணர்வால்
    ஏற்ற பருமன் விரைவு, காலம், தூரம்
    எண்ணி ஒத்திட்டுணர்ந்து இன்ப துன்பம்
    தோற்றத்தால் ஏற்றத்தாழ்வு இவற்றை வேறாய்,
    தெளியும் நிலை உணர்; அறிவின் நிலை விளக்கும்.
    …..வேதாத்திரி மகரிஷி அவர்கள்

    இறை எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது என்றால் அறிவு இல்லாத பொருளோ, இடமோ, அல்லது நிகழ்ச்சியோ இல்லை என்பதுதான் பொருள். தொடரும்.

    அடுத்த விருந்தில் எவ்வாறு இறை ஆட்சி யின்றி இப்பிரபஞ்சத்தை ஆண்டு கொண்டிருக்கின்றது என்பதனையும், எல்லாமே தெய்வம் என்றாலும், அவற்றில் அறிவும் ஒன்றாக இருந்தாலும், ‘அறிவே தெய்வம்’ என்பது எவ்வாறு இதமாக உள்ளது என்பதனைப் பார்ப்போம்.

    Loading

  • 58-ஏன் ‘அறிவே தெய்வம்’ எனப்படுகின்றது?

    வாழ்க மனித அறிவு           வளர்க மனித அறிவு

     ஏன் ‘அறிவே தெய்வம்’ எனப்படுகின்றது?

    அ.வி.எண்.58—(3/?)

    18-02-2015 – புதன்

     

    கடந்த அறிவிற்கு விருந்தின் தொடர்ச்சியாக, இன்று, இயற்கையின்/அறிவின் பயணத்தில் (Journey of Consciousness), அந்தந்த இடத்திற்கும், சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல் முழுமையை (perfection) அடையக்கூடியத் தன்மை இயற்கைக்கு உண்டு என்பது பற்றியும், இதனைக்குறிக்கும் ‘entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தைக்கான பொருளையும் அறிவோம்.

    அறிவே இல்லாத வற்றாயிருப்பாக, பேராற்றலாக மட்டும் வெளி இருந்திருந்தால் பிரபஞ்சமும் உயிரினங்களும் உருவானது சாத்தியமாகி இருக்குமா? பேராற்றலால் எவ்வாறு இயக்குனர் இல்லாமல் இயங்க முடியும்? இயக்குவதற்கு காரணமாக இருக்கும் ஆற்றலை என்ன என்று அழைப்பது? நாடக மேடையில் நாடகத்தை இயக்குவது யார்? இயக்குனர். இயக்குனர் என்பவர் யார்? பெயரைச் சொல்லி இன்னார் இயக்கினார் என்போம். இன்னார் என்பவர் யார்? அவர் ஒரு மனிதர். மனிதர் உடலா, உயிரா, அறிவா? இயக்குனரிடம் உள்ள அறிவுதானே அந்த நாடகத்தை இயக்குகின்றது.
    அதே போல் வற்றாயிருப்பாக உள்ள பேராற்றலின் தன்னிறுக்கத்தால் நொறுங்கி தொடர்ந்து துகள்கள் மட்டுமே உருவாகிக் கொண்டு, மேற்பார்வையில்லாமல் (இறைவெளியில் அறிவு இல்லாதிருந்தால்) இந்நிகழ்வு மட்டுமே நடந்து கொண்டிருந்தால், பஞ்சபூதங்கள் உருவாகியிருக்க முடியாது. இந்த மேற்பார்வையிடும் தன்மைதான் அறிவு எனப்படுகின்றது.

    பஞ்சபூதங்கள் உருவாகவில்லை என்றால் இன்று நாம் காணும் இப்பிரபஞ்சம் உருவாகியிருக்க முடியுமா? பஞ்சபூதங்கள் உருவாகவில்லை எனில் ஏது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய நிகழ்ச்சிகள்? நிகழ்ச்சிகள் உருவாகவில்லையெனில் அதனை உணர்வதற்கான உயிரினங்களே அவசியமில்லை. உயிரினங்களுமே தோன்றியிருக்காது. மனிதகுலமும் தோன்றியிருக்காது.

    நாமே இல்லாத நமக்கும் ஏது பிரச்சனை (இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும்) ? இறைக்கும் பிரச்சனை இருந்திருக்காது மனிதகுலத்தால். இறைக்கு பிரச்சனையே மனித குலத்தால்தான். பேரறிவாகிய இறை மனிதனிடம் ஆறறிவாகி, அது வரை தானே ஒட்டி வந்த பரிணாம வாகனத்தை, மனிதனிடம் கொடுத்து ஒட்டச் சொல்ல வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. பேரறிவு மனித வடிவத்தில் ஆறாம் அறிவாகி தன்னையே இரசிக்க வேண்டும் என எண்ணியதால் வந்த விளைவு இன்று மனித வடிவில் அல்லலுறுகின்றது. இதுதானே சுத்த அத்வைதம் என்பது?

    வெளியிலிருந்து தோன்றிய எண்ணிலடங்கா கோடானு கோடி துகள்களையெல்லாம் ஒழுங்குடன் விண்ணாக்கி, பிறகு காற்றாக்கி, நீராக்கி, நெருப்பாக்கி, மண்ணாக்கியதால்தான் பிரபஞ்சம் உருவாக முடிந்தது. இது ஏதோ ஒரு திட்டம் போட்டது போல் தோன்றுகின்றதா? திட்டம் வைத்திருந்தது என்கின்ற சொல்லுக்கு நேரான பொருள் (literal meaning) எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆனால் மனிதனைப் போல் இறைக்கு முன்னரே திட்டமிடவேண்டிய அவசியமும் இல்லை.

    திட்டமிடாமலேயே அவ்வப்போது திட்டமிட்டதுபோல் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல் முழுமையை (perfection) அடையக்கூடியத் தன்மையையுடையது இயற்கை என்பது இயற்கையின் சிறப்பிலும் சிறப்பு.

    இத்தன்மையை புரிந்து கொள்வதற்கும், வார்த்தையால் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதற்கும் ஏதேனும் வார்த்தை உள்ளதா? உள்ளது. அது ஒரு ஆங்கில வார்த்தை. அது ‘Entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தை. அந்த ஆங்கில வார்த்தையை மகரிஷி அவர்கள் எழுதிய ‘Logical solution to the problems of the society’ என்கின்ற நூலில் பயன்படுத்தியுள்ளார்.

    அந்த ஆங்கில வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ள நூலின் அந்தப்பகுதியை நினைவிற்கு கொண்டு வருவோம்.
    அந்த நூலில் 35 வது பக்கத்தில் உள்ள முதல் பத்தியிலுள்ள ஒரிரு வாக்கியங்கள் கீழே தரப்பட்டுள்ளது. அதனை வாசிப்போம்.

    “The reality of the universe is that everything is the result of Nature’s evolution. All things evolve in orderly fashion, directed by entelechy (omniscient consciousness with inner purpose) of Nature. All manifestations and, movements in the universe are subject to the unfailing laws of cause and effect. These three — evolution, entelechy, and cause and effect are the inherent character and capability of Gravity—the Unified Force–the radical first principle of the universe

                                                                                                                           …….. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    ‘Entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் – பொருளின் நிறைநிலை, பொருண்மை. ஆகும். ‘பொருளின் நிறைநிலை’ என்றால் அந்தப் பொருள் எது எது ஆக வேண்டுமோ அததற்கு வேண்டிய எல்லாம் நிறைந்துள்ள நிறைவான நிலை என்று பொருள்.

    பொருண்மை என்றால் பொருளின் தன்மை என்று பொருள்.
    ‘directed by entelechy of Nature’ என்றால் இயற்கையின் நிறைநிலைத்தன்மையின் இயக்கத்தால்’ என்று பொருளாகின்றது.
    All things evolve in orderly fashion, directed by entelechy (omniscient consciousness with inner purpose) of Nature. — எல்லாத் தோற்றங்களும் ஒழுங்குடனும், இயற்கையின் நிறைநிலைத்தன்மையின் இயக்கத்தால் தோன்றியுள்ளன.
    உருவங்களையே பார்த்துப் பார்த்துப் பழகிவிட்ட பொருளெனக் கொள்ளும் மனித அறிவிற்கு ஒன்றுமில்லாதது போல் வெளி தெரியலாம். வெளி ஒன்றுமில்லாததாக இருந்திருந்தால் நாம் காணும் இவ்வளவு தோற்றங்களும் எவ்வாறு வந்திருக்க முடியும்? இயற்கையின் தன்மை அத்தகையது.

    ஒரு தோற்றத்திற்கு மூலம், இன்னொரு தோற்றம்தான் என்பது ‘தோற்றங்கள் தோன்றிய பிறகு’ சரியாக இருக்கலாம். புலன்களுக்கு தோற்றமாகத் தென்படும் தோற்றத்திற்கு, வேறொரு தோற்றம் மூலமாக இருக்கும். ஆனால் புலன்களுக்கே தெரியாத மிக மிக நுண்ணிய துகளுக்கு மூலம் என்பது எவ்வாறு வேறொரு தோற்றப்பொருளாக இருக்க முடியும்?

    அந்த மிக மிக நுண்ணிய பொருளின் மூலம், தோற்றமில்லாத பொருளாகத்தான் இருக்க முடியும். ‘தோற்றமில்லாத, ஆனால் அது பொருள்’ என்பது வெளியாகத்தான் இருக்க முடியும். ஆகவே துகள்கள் வெளியிலிருந்துதான் தோன்றியிருக்க வேண்டும். அந்த மூலப்பொருள் வெளி என்பதால் அது ஒன்று மில்லாதது எனக் கருத முடியாது. அந்த வெளியிலிருந்துதான் நாம் காணும் இப்பிரபஞ்சமும் எல்லா உயிரினங்களும் உருவாகியுள்ளது.

    இந்த உண்மையினை தெளிவாக்கும், மகரிஷி அவர்களின் இரு கவிகளை நினைவு கூர்வது நலன் பயக்கும்.

    சூனியமே உறுதிப் பொருள் (1955)

     

         சூனியமாம் இருள் ஏதுமற்ற தென்றும்

                                                            சொல்வார்கள் புலனுணர்வின் அளவில் நின்று.     

    சூனியமே கோடானு கோடி அண்ட

                                                   சூரியன், சந்திரன் இவற்றைத் தாங்கி நிற்கும்.

                         சூனியமே வலிமை மிக்க உறுதியாய் நின்று

                                                         சொரூப கோடிகளை இறுக்கிஇயக்கு தன்றோ?

                                       சூனியத்தை, அணு நிலையைக் கொண்டாராய்ந்தே

                                                        சூட்சுமமாய் யூகித்து விளங்கிக் கொண்டேன்.

     

    வெட்டவெளியே பேராற்றல்(08-07-2001)

     வெட்டவெளி சக்தியென்பது இல்லை ஆனால்,

                          வேறுஎந்தப் பொருள் வலிது பிரபஞ் சத்தில்?

    தொட, தொடப்பட்ட இருசீவர்களுக் குள்ளே,

                                                   தொட தொட்டதாய் எண்ணும் அறிவு யாது?  வெளிதான்!

    பட்டப்பகலில் வானில் விண்மீன் தோன்றா.

                                    பார்வை இல்லார்க்கு அவை எப்போதும் காணா

    எட்டவில்லை அறிவுக்கு என்றால், அந்த

                                                                  இயற்கைத் தத்துவம்எங்கே ஒளிந்து கொள்ளும்? அறிவோம்!

                         … வேதாத்திரி மகரிஷி அவர்கள். 

     ஆதி மனிதன் தோன்றி, நாகரீகம் வளர்ந்து, தகவல் பரிமாறிக் கொள்வதற்கு மொழியை உருவாக்கி வளர்த்து,

        அந்த மொழியில், புலன்களுக்கு காணா ஒன்றினை, ‘ஒன்று மில்லாதது’ எனக்கருதி,  அதனை  ‘வெளி’ என்றும் ‘சூனியம்’ என்கின்ற இரு வார்த்தைகளால் சொல்வதற்கு ஏற்பாடு செய்து விட்ட சொற்களை வைத்துக் கொண்டு,

         இன்று அறிவு வளர்ந்து, அதனுடைய மூலத்தை அறியும் நிலையில்,

        அந்த இருவார்த்தைகளுக்கு  அப்போது வைத்தப்  அர்த்தத்தைக்(பொருளைக்) கொண்டே,

        இப்போது,  இவ்வளவு அறிந்த பிறகும், இன்னமும், ஆதிநிலையாகிய  வெளியை ‘ஒன்று மற்ற சூனியம்’ எனக் கருதி,  வெளியைத் தெய்வம் என ஏற்றுக் கொள்வதில் அவ்வப்போது, ஐயம் சிறிதளவு வந்து கொண்டிருந்தாலும் கூட,  அது அறிவு முழுமைப் பேற்றினை அடைவதற்குத்  தடையாக இருக்கும்.  ‘வெளி தெய்வம்’ என்பதனை முதலில் கருத்தியலாக தெளிவுடன் முடிவு செய்யவும்.  பிறகு ஒரு நாள் தவத்தின் பயனாக செய்முறைப் பயிற்சியிலும் அது உறுதியாகி அறிவு முழுமைப் பேற்றினை அடையும். 

    எனவே, வெளியாக இருக்கின்ற மெய்ப்பொருள், பிரபஞ்ச தோற்றங்களையெல்லாம் வெளிபடுத்தியதால் (வெளிப்படுத்து – வினைச்சொல் –emerge, reveal, become evident, come out become public) அது ‘வெளி’ என்கின்ற காரணப் பெயரையும்  பெறுகின்றது என்று ‘வெளி’ க்கு  இன்றிலிருந்து பொருள் கொள்வோம்.

       மேலே காணும்   இரு பாடல்களையும் மீண்டும் மீண்டும் நினைந்து நினைந்து, மகரிஷியின்  இறைவெளி புரிதலை உள்வாங்கி, அதே அனுபவம் பெற்று,  ‘இப்பிரபஞ்சத்திற்கும் உயிரினங்களுக்கும் மூலம்  வெளி’ என்றும், வெளியில் அறிவின் தன்மை  மேலோங்கி முதன்மையாக இருப்பதால் ‘அறிவே தெய்வம்’ என்று  உணர்வோமாக.  வாழ்க வேதாத்திரியம்.  வளர்க வேதாத்திரியம். 

                      சிந்தனையின் தலைப்பு ‘ஏன் அறிவே தெய்வம் எனப்படுகின்றது’ என்று இருப்பதால், இங்கே வெளியே தெய்வம் என்கின்ற போது  தலைப்பை விட்டு வெளியே சென்று விட்டதாக நினைக்க வேண்டாம்.  வெளி அறிவாக இருக்கின்றது.  அறிவு வெளியாக உள்ளது.  அதனால்தான் அறிவு கண்களுக்குத் தெரியாமல் உருவமற்று இருக்கின்றது. வெளி வேறு அறிவு வேறு அல்ல.  வெளியையும், அறிவையையும் பிரித்துப்பார்க்க முடியாது.     தொடரும் …

    அடுத்த அறிவிற்கு விருந்தில் ‘Entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தைக்கு மேலும் பொருள் அறிந்து, ‘ஆட்சியின்றி எவ்வாறு ஐயன் ஆட்சி செய்கிறான்’ என்பதனை அறிய இருக்கிறோம். தொடரும்…

    Loading

  • ஏன் ‘அறிவே தெய்வம்’ எனப்படுகின்றது?

     

    வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

    ஏன் ‘அறிவே தெய்வம்’ எனப்படுகின்றது?அ.வி.எண்.57—(2/?)

    15-02-2015 – ஞாயிறு

         கடந்த சிந்தனையின்  தொடர்ச்சியாக, இன்றைய விருந்தில், ஆதிநிலையில், வற்றாயிருப்பாக பேராற்றல் மட்டுமே, அறிவு இல்லாது இருந்திருந்தால், உணர்வற்ற சடமாகிய பஞ்சபூதங்களும்கூட உருவாகியிருக்க முடியாது என்கின்ற கூற்றினை எவ்வாறு சரியென பார்க்க இருக்கின்றோம்.

      விண், காற்று நீர், நெருப்பு, மண் ஆகிய பஞ்சபூதங்கள் உயிரற்ற சடப்பொருட்களாக இருந்தாலும்,  ஆதிநிலை வெளியில் ஒருவேளை(perhaps) அறிவு இல்லாமல் இருந்தால், பஞ்சபூதங்களே  உருவாகி இருக்க முடியாது. பஞ்சபூதங்கள் சடப்பொருட்கள்தான். ஆகவே அவற்றிற்கு உணர்ச்சி  இல்லைதான். உணர்ச்சி இல்லாத சடப்பொருட்களுக்கு ஏன் அறிவு  அவசியம் என்பது, ‘அறிவு என்றால் அறியக்கூடியது’ என்றுமட்டும்  பொருள் கொள்ளும் அளவிலே சரிதான். ஆனால் அறிவிற்கு வேறொரு பணியும் உள்ளது.  அது என்ன என்று அறிவோம்.

       முதல் உயிரினம் தோன்றியது பஞ்சபூதங்களின் கூட்டால்.  பஞ்சபூத கூட்டால்  உருவாகிய உயிருக்கு  எவ்வாறு ‘உயிருக்கு இலக்கணமான  உணா்தல்’ உண்டாயிற்று?  அறிவு என்கின்ற ஒன்று இல்லாமல் அந்த முதல் உயிருக்கு உணர்வு ஏற்பட்டிருக்க முடியாது.  அப்படியானால் பஞ்சபூதக் கூட்டாலாகிய உயிரின்  அறிவு  பஞ்சபூதங்களில் இருந்த  பிரிக்கமுடியாத அறிவுதான். ஆகவே வேதாத்திரிய இயற்கையியலில் – வேதாத்திரிய ஒருமையியலில் – வேதாத்திரிய இறையியலில் – வேதாத்திரிய வெட்டவெளி அறிவியலில்/விஞ்ஞானத்தில் உயிரற்ற சடப்பொருட்களிலும் அறிவு இருக்கின்றது என்பது அறிவுபூர்வமானதாக உள்ளது.

       ஆதிநிலையாகிய வெளியில் இருந்த பேரறிவுதான்,  துகளாகியபோதும் சரி, துகள்கள் தோன்றுவதற்கும், மேலும், துகள்கள் ஒன்று சேர்ந்து முதலில் விண்ணாகி பின்னர், விண் கூடிய விகிதாசாரத்திற்கேற்ப மற்ற பூதங்களான காற்று, நீர், நெருப்பு, கெட்டிப் பொருளான மண் உற்பத்திக்கும் (தோன்றியதற்கும்) காரணம்.

      பேரறிவின்  மேற்பார்வை எனும் தன்மையால், துகள்கள் ஒழுங்குடன் கூட்டு சேர்ந்து பல்வேறு அணுக்களாகி, பல்வேறு மூலகங்களாகியது.  உயிர்களில் உணர்ச்சியாகத் திகழ்வதற்கு முன்னரும் உயிரற்ற சடப்பொருட்களிலும்  அறிவின் பணி இருக்கின்றது. அறிவிற்கு உருவம் கிடையாது.  உருவம் இல்லாதது  எது?  ஆற்றலுக்கு உருவம் கிடையாது.  ஆகவே உருவமில்லாத அறிவை அறிவாற்றல்  என்றும் சொல்லலாம்.  உருவமில்லாததற்காக மட்டும் அறிவை ஆற்றல் என்று சொல்லவில்லை.  அறிவு ஆற்றலேதான்.

        பொதுவாக ஆற்றல் என்றால் என்ன?  ஆற்றல் என்றால் ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக் கூடிய சக்தி அல்லது  திறன் (Capability, ability, capacity) என்று அர்த்தம்.  ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய ஆற்றலையுடைய  அறிவாற்றல், அணுக்கள் ஒன்றுசேர்ந்து  சடப்பொருட்களாக காட்சி அளிக்கும் நிகழ்ச்சி மாறாமல், தொடர்ந்து சடப்பொருட்களாகவே காட்சியளிக்கும் நிகழ்ச்சியாக இருக்கக்  காரணமாக உள்ளதால், அறிவினை ஒழுங்காற்றல் என்கிறார் மகரிஷி அவா்கள்.

         குடும்பங்களில் நடக்கும்  நிகழ்ச்சியினைக் கொண்டு, ஒரு செயலை ஒழுங்குடன் செயல்பட அறிவுதான் காரணமாக இருக்கின்றது  என்பதனை அனுபவத்தில் உணர்ந்து அறிவை, ஒழுங்காற்றல் என்று சொல்வது எவ்வளவு  பொருத்தமாக உள்ளது என்று அறிவோம்.

        குடும்பத்தில் பெரியவர்கள், பல முறை அறிவுறுத்தியும்,  சில சிறுவர்கள் ஒரு காரியத்தை மீண்டும் மீண்டும் தவறாகவே செய்து கொண்டிருப்பர்.  பெரியவர்கள்,  “அவனுக்கு  அறிவிருந்திருந்தால் அந்தப் பணியை ஒழுங்காக செய்திருப்பான்.  அவனுக்கு அறிவு என்பதே  கிடையாது.  ஞானசூனியம்” என்று சிறுவர்களைக் கடிந்து கொள்வர்.  அறிவு இல்லாது எந்த உயிரினமும் கிடையாது. ஆகவே சிறுவனுக்கு அறிவு இருக்கின்றது.  ஆனால், சிறுவன் பணியைச் சரியாக, ஒழுங்காக செய்யவில்லை.   பணியை சரியாக, ஒழுங்காக செய்யாமைக்குக் காரணம் அவனது அறிவை  சரியாக பயன்படுத்தாததுதான். சிறுவன் பணியை ஒழுங்காக செய்யாதற்கு பெரியவர்கள், ‘அவனுக்கு அறிவு இல்லை’ என்கின்றனர். ஆகவே இங்கே நாம் கவனிக்க வேண்டியது, எந்த ஒரு இயக்கமும் ஒழுங்காக செயல்படுவதற்கு காரணமாக இருப்பது அறிவே. ஆகவே ஒழுங்கு படுத்தும் (order of function) அறிவாற்றலை ஒழுங்காற்றல்  என்கிறோம்.

       அறிவு ஒழுங்காற்றலாய் இருந்து செயல்படுகின்ற உண்மையினை – மகரிஷி அவர்கள் உணர்ந்த அனுபவத்தை அவர் கூறும் கவியின்  சில வரிகளை அறிந்து பேரின்பமடைவோம்.

                 பேரின்ப ஊற்று

            “உணர்ச்சியாய்ச் சிந்தனையாய் உள்ளதே அறிவென்று

                உணா்ந்திருந்தேன் பல நாள்; மேலும் உண்மை விளங்க

                                     உணர்ச்சிக்கு முன்னம் விண்ணில் ஒழுங்காற்றலாய் விளங்கும;

    உனது திரு நிலையும் அறிவே என உணர்ந்தேன்”

                                                                            …. வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    உயிரினங்களில் ‘உணர்வதாகவும், சிந்திப்பதாகவும் உள்ளது மட்டுமே அறிவு’ என்று  பல நாட்களாக, அறிந்து வைத்திருந்ததாகக் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.  மேலும் தொடர்ந்து சிந்திக்க சிந்திக்க உண்மை விளங்கியதாகக் கூறுகிறார்.  அதாவது, அறிவின் பயணத்தில் (journey of Consciousness), உயிரினங்களில் உணர்ச்சியாக செயல்படுவதற்கு  முன்னர் உயிரற்ற சடப்பொருட்களில் (விண்ணில்) அறிவு ஒழுங்காற்றலாக விளங்கியது எனக்கூறுகிறார்.  அறிவு, தன் பயணத்தில் உயிர்களிடம்  உணர்ச்சியாக வருவதற்கு முன்னர் உயிரற்ற சடப்பொருள்களிலும்  இருக்கின்றது.  அப்போது அறிவு ஒழுங்காற்றலாய்த் திகழ்கின்றது.

       உயிரற்ற சடப்பொருள்களில்  அறிவு ஒழுங்காற்றலாய் பணியாற்றுகின்றது.    ‘ஒழுங்காற்றல் பணி’ என்றால் என்ன?  அறிவாகிய ஆற்றல்,

       புரோட்டான், நியுட்ரான், எலக்ட்ரான் ஆகிய தொகுப்புக்களைக் கொண்டு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கின்ற  அணுவானது, தொடர்ந்து தனது அமைப்புடன்(structure) இருக்கவும், அதாவது ‘அணு’ என்கின்ற நிகழ்ச்சியினை நடத்திக் கொண்டிருக்கவும்,

       மேலும் அணுக்களின் தொகுப்பால் ஆன (association of atoms – mass) உயிரற்ற சடப்பொருட்கள் ஒழுங்கோடு,  அந்த அணுத்தொகுப்போடு, தொடர்ந்து இயங்கக் காரணமாகவும் இருக்கின்றது.

       அணு அமைப்பை எடுத்துக் கொண்டால்கூட, அமைப்பு கலையாமல் அது ஒழுங்கோடு இருப்பதற்குக் காரணம் அறிவுதான். எனவே அறிவு சடப்பொருட்களில்  ஒழுங்காற்றலாக செயல்படுகின்றது.  ஒழுங்கிற்கு காரணமாக இருக்கும் ஆற்றலை ஒழுங்காற்றல் என்று சொல்லாமல் வேறு எவ்வாறு சொல்வது?

       மலரும் மனிதனும் உரையாடும்,மறைபொருளை விளக்குகின்ற மகரிஷி அவர்களின் கவியில், ஆன்மாவை வருடிக் கொடுக்கின்ற  ஒருசில வரிகள், நம்முடைய இன்றைய சிந்தனைக்கு உதவுவதாக உள்ளன. அவற்றைக் கவனிப்போம்.

     FFC-57-malare malare-படம்

     

    ‘பண்பாய்க்கூடி’  ‘ஒவ்வோர் அளவில் கூட‘ ஆகிய சொற்றொடர்களை நினைந்து நினைந்து மகிழவும்.  பண்பாய்க்கூடி என்பதன் பொருள் என்ன?  ‘பண்பு’ என்றால் தன்மை-இயல்பு-ஒழுங்கு என்றும்,  ‘கூடி’ என்றால் சேர்ந்து என்றும் பொருள். இந்த பொருளை நினைவில் கொண்டு, ‘பண்பாய்க் கூடி ஒரு கூத்து’ என்கின்ற அந்த நிகழ்வினை மனதில் (contemplation) நினைத்துப் பார்ப்போம்.

      முதலில் துகள்கள் தோன்றின.  கூட்டமாக இருந்த துகள்கள் விண்ணாக மாறியது எவ்வாறு? துகள்கள், பிறகு, விண்கள் மற்றும் இதர பூதங்களான காற்று, நீர், நெருப்பு, மண்ணாக மாறியது ஏதோ தற்செயலான, யதேச்சையான, ஒழுங்குமுறைப்படி இல்லாமல், ஒழுங்கற்ற நிலையில் ஏற்பட்டதன்று  (not in haphazard manner—but in a disciplined manner – in a systematic manner).

        “கரம் கோர்த்தாடும் நாடகத்தோர்” என்கின்ற சொற்றொடரைக் கவனிக்கவும்.Then who is the Director to conduct the Divine Drama? மனக்கண்முன் கொண்டு வந்து மகிழுங்கள்.  (Now imagine and go to that situation and visualise the then happening and love Him – God.  Admire Him and adore Him with your own words — the real way to love Formless God and shedding one’s ego totally.)  யார் இந்த நாடகத்தை நடத்தியது.  யாருடைய இயக்கத்தில் நாடகம் நடந்தேறியது? நடந்தேறிக் கொண்டிருக்கின்றது? உங்களையே தீவிரமாகக் கேளுங்கள், உங்களுக்கே  விடை கிடைக்கும்.

        பேரியக்க மண்டலம் முழுவதும் நீக்கமற நிறைந்து எல்லா இயக்கங்களையும் திருவிளையாடலாக நிகழ்த்திக்  கொண்டிருக்கும் வியத்தகு மறைபொருளை நினைக்கும்போது  பேரின்பம் ஏற்படுவதாகக் கூறும் பாடலை இங்கே நினைவு கூர்வோம்.

                    FFC-57-inba ootru-படம்

      அறிவின் பயணத்தில்(Journey of Consciousness), அந்தந்த இடத்திற்கும், சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல்  முழுமையை (perfection) அடையக்கூடியத் தன்மை இயற்கைக்கு உண்டு என்பது  பற்றியும், இதனைக்குறிக்கும்  ‘entelechy’ என்கின்ற ஆங்கில வார்த்தைக்கான பொருளை வரும்  புதனன்று(18-02-2015-) அறிவிற்கு விருந்தில்(அறியவிருக்கிறோம்.  தொடரும்…

    Loading

  • ஏன் ‘அறிவே’  தெய்வம் எனப்படுகின்றது?

      வாழ்க மனித அறிவு                                                                                      வளர்க மனித அறிவு

     ஏன் ‘அறிவே’  தெய்வம் எனப்படுகின்றது?

    அ.வி.எண்.56 — (1/?)

     

    11-02-2015 – புதன்

     

          வாழ்க வளமுடன்.

          சுமார் பதினேழு வருடங்களுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை நினைவுபடுத்திக் கொண்டு ‘ஏன் அறிவே தெய்வம் எனப்படுகின்றது?’ என்கின்ற  சிந்தனையைத்தொடங்கலாம்.   அந்த சம்பவம்தான் இன்றைய சிந்தனைக்கான தலைப்பிற்கு காரணமாக உள்ளதால் அந்த சம்பவம் என்ன என்று அறிந்து கொள்ளலாம்.

        பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உடற் பயிற்சி கற்றுக் கொள்வதற்காக தனது தாயாருடன் மன்றத்திற்கு வந்தாள்.  வரும்போது வாசற்கதவில் ஒட்டப்பட்ட இருந்த  ‘அறிவே தெய்வம்’  என்கின்ற ‘Sticker’ அவளுடைய கண்களில் பட்டது.  எத்தனையோ அன்பர்கள் அந்த வாசகத்தை பார்த்துவிட்டுத்தான் உள்ளே வருகின்றனர்.  மற்றவர்களுக்கு எழாத ஒரு வினா இந்த பெண்ணிற்கு மட்டும் மன்றத்திற்கு வந்த முதல் நாளன்றே . எழுந்துவிட்டது?  ‘அறிவே தெய்வம்‘  என்கின்ற வாசகம் அந்தப் பெண்ணை ஈா்த்தது.  அவளது அறிவை சிந்திக்க வைத்தது.

        அந்த பெண்ணிற்கு அப்போது பதினேழே வயதுதான் என்றாலும், அவள் ஏற்கனவே சுவாமி விவேகானந்தர் மீது பக்தியும், மரியாதையும் கொண்டிருந்தாள்.  சிறுமியாக இருக்கும்போதே யாருடைய தூண்டுதல் இன்றி, தானாகவே சுவாமி விவேகானந்தரின் நூல்களை வாங்கிப் படித்திருக்கிறாள்.  ஆகவே அவள் “எல்லாமே தெய்வம்” என்கின்ற அளவிலே அத்வைதம் பற்றி அறிந்திருந்தாள். இப்போது அவள் வினவிய வினாவிற்கு வருவோம்.

     ‘எல்லாமே தெய்வம்’ என்று அத்வைதம் கூறும் போது அறிவும் தெய்வம் என்றுதானே கூறவேண்டும்,  ஏன் அறிவே தெய்வம் எனப்படுகின்றது” என்பதே அவள் தொலைபேசியில்  கேட்ட  வினா.  தெய்வமே எல்லாமாகவும் இருக்கும்போது, அறிவும் அந்த எல்லாமாக இருப்பதில் ஒன்றுதானே. அப்படியிருக்கும் போது அறி-வும்தெய்வம் என்று கூறாமல் அறி-வே தெய்வம் என அறிவை மட்டும் தனிமைப் (single out) படுத்தி ஏன் கூறப்படுகின்றது என்பது அவளுடைய வினாவின் அர்த்தம்.  இது நியாமான வினாதானே?

       இந்த வினாவிற்கான விடையை புரிந்து கொள்ள வேண்டுமெனில், வேதாத்திரிய சுத்தவெளி விஞ்ஞானம் முன்னரே தெரிந்திருக்க வேண்டும்.  அப்பெண்ணிற்கு அதெல்லாம் தெரியாது. இருப்பினும் வினா கேட்கப்பட்டுவிட்டது.  பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.  அதுவும் தொலைபேசியிலே விடை சொல்ல வேண்டும்.

          எது தெய்வமாக இருக்க முடியும் என்கின்ற காரண முடிவிற்கு (logical conclusion) வருவது எப்படி என்று சொல்லி,

          அவள் பள்ளியில் படித்த அறிவியலைக் கொண்டு  அணுவின் (chemical atom) அமைப்பை நினைவு படுத்தி,

    அந்த அணு எவ்வாறு தோன்றியிருக்கக்கூடும் என்று சொல்லி,

    அணுவிற்கு மூலம் வெளி என்று ஒருவாறு சொல்லி,

    அந்த வெளியின் தன்மைகளில் அறிவு ஒன்றாகவும்,

          அந்த ஒன்றே எல்லாவற்றிலும், அதாவது உயிரற்ற சடப்பொருட்களிலும் மற்றும் உயிருள்ள சீவன்களிலும் பிரதானமாகவும்  இருப்பதால்  அறிவே தெய்வம் எனப்படுகின்றது என விளக்கம் முப்பது நிமிடங்களில் கொடுக்கப்பட்டது.

          இருப்பினும் அந்த பெண்ணிற்கு  ‘எல்லாமே தெய்வம்’ என்பது தெரிந்து ஏற்புடையதாக இருந்தாலும், ‘எவ்வாறு எல்லாமே தெய்வம்’ எனப்படுகின்ற வேதாத்திரிய சுத்தவெளி விஞ்ஞானம் (தத்துவம்) அவளுக்குத் தெரியாத நிலையில் எந்த அளவில் அந்த விடை அவளுக்கு ஏற்புடையதாக இருந்ததோ தெரியவில்லை.  ஆனால் அப்போது அவளுக்கு விளங்காவிட்டாலும் அது பின்னர் ஒரு நாள்  விளங்கிவிடும் என்று வாழ்த்து கூறப்பட்டது.  இன்றைய அறிவிற்கு விருந்தில் அந்த வினாவிற்கான பதிலை அறிவதிலும், அப்படியொரு வினா எழுப்பிய அந்த அறிவின் சிறப்பையும் நினைந்து மகிழ்வோம்.

       வேதாத்திரிய இறைநிலை விஞ்ஞானம்   ‘வெளியே’ (Eternal Space) தெய்வம் எனக்கூறுகின்றது.  அந்த வெளி ஒன்றுமில்லாதது அல்ல.  அந்த வெளியே இறை என்றும், அது  நான்கு வளங்களைக் கொண்டது என்கின்றது வேதாத்திரியம்.

     “வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் எனும்

    வளம் நான்கும் ஒன்றிணைந்த பெருவெளியே தெய்வமாம்”            என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

      இந்த நான்கு வளங்களைக் கொண்ட வெளிதான் தன்னிறுக்கத்தால் நொறுங்கி துகள்களாகி, பின்னர் துகள்கள் ஒன்று சேர்ந்து விண்ணாகி, காற்றாகி, நீராகி, நெருப்பாகி, மண்ணாகியது.  பிறகு ஓரறிவிலிருந்து ஆறு அறிவு உயிரினங்களாகியுள்ளது. இவ்வாறிருக்கும்போது  எதனைத் தெய்வம்  என்று  சொல்வது?  எல்லாமே தெய்வம்.  தெய்வமேதான் எல்லாமாகவும் உள்ளது.  இப்பிரபஞ்ச மூல ஆற்றலே தெய்வம் எனலாமா? அல்லது பிரபஞ்ச மூல ஆற்றலின் நான்கு வளங்களான வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் ஆகியவை தெய்வம் என அழைப்பதா? அல்லது வெளியின் வளங்களைத் தனித்தனியாக பிரித்து தெய்வமென்பதா?

    அதாவது,

    வற்றாயிருப்பே தெய்வம் என்பதா?

    அல்லது

    பேராற்றலே தெய்வம் என்பதா?

    அல்லது

    அறிவே (பேரறிவே) தெய்வம் என்பதா?

    அல்லது

    காலமே தெய்வம் என்பதா?

    இவற்றில் எது பொருத்துமாக உள்ளது?  அறிவே தெய்வம் என்பது பொருத்தமாக இல்லையா?  பொருத்தமாக இருப்பதால் தான் அறிவே தெய்வம் எனப்படுகின்றது.  மற்ற வளங்களை நினைந்து, இறையை போற்றாமல் இல்லை.  எல்லாம் வல்ல தெய்வமது என்கிறோமே!  எல்லாம் வல்லது என்றால், அது வற்றாயிருப்பையும் பேராற்றலையும் தான் குறிக்கின்றது.    ஆதிநிலையின் வளமாக, வற்றாயிருப்பாக பேராற்றல் மட்டுமே   இருந்து, அறிவு இல்லாதிருந்தால்

    1)   இந்த பிரபஞ்சமும் உருவாகியிருக்க முடியாது.

    2)   அறிவைக் கொண்டு உணர்கின்ற உயரினங்களும் உருவாகியிருக்க முடியாது,

     

    எப்படி?

    உயிர்களுக்குச் சான்று உணர்வு. அந்த உணர்வை உணர்வது அறிவு. அப்படியிருக்கும் போது, உணா்கின்ற அறிவு, உயிர்களுக்கு எங்கிருந்து வந்திருக்க முடியும்?  உயிர்களுக்கு மூலமும் அந்த ஆதிநிலைதான். ஆகவே ஆதிநிலையில்  அறிவு இருந்ததால்தான் அதுதான் உயிர்களிடம் அறிவாக வந்துள்ளது.  எனவே ஆதிநிலையில் அறிவு இல்லாதிருந்தால் உயிர்களே உருவாகியிருக்க முடியாது என்று மேலே கூறிய இரண்டாவது கூற்று சரி.

       முதல் கூற்றான ஆதிநிலையில் அறிவு இல்லாதிருந்தால் இந்த உணா்வில்லாத இப்பிரபஞ்சம் உருவாகியிருக்க முடியாது என்பது எவ்வாறு சரியாக உள்ளது என ஐயம் இருக்கும்.  பிரபஞ்சத்திற்கு அறிவு இல்லையே!  இந்த பிரபஞ்சத்திலுள்ள கோடானுகோடி நட்சத்திரங்கள் உயிரற்ற சடப்பொருட்கள் தானே (non-living beings). அவைகளின் மூலப் பொருளுக்கு  அறிவு தேவையில்லையே.  (ஆனால் அவைகளின் உற்பத்திக்கு அறிவு தேவையாக உள்ளது.) உயிரற்ற சடப்பொருட்களுக்கு உணர்வு இல்லையே!  எனவே ஆதிநிலையில் அறிவு இல்லாமல் வற்றாயிருப்பாக பேராற்றல்மட்டும் இருந்திருந்தால்கூட உயிரற்ற சடப்பொருளான இப்பிரபஞ்சம் உருவாகியிருக்க முடியுமல்லவா?  எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள முதற்கூற்று எவ்வாறு சரி என ஐயம் வருவது நியாயம்தானே!   அதனை அடுத்த அறிவிற்கு விருந்தில் 15-02-2015 அன்று அறிவோம்.   தொடரும்

    Loading