இன்றைய விருந்து

  • அறிவிற்கு விருந்து 3 /3

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    அறிவிற்கு விருந்து 3 /3

    அ.வி். – 43

    04-01-2015—ஞாயிறு

     

    திருவள்ளுவரோ 133 அதிகாரங்களை அமைத்துள்ளார் என்றால் என்ன பொருள்? அந்த 133 அதிகாரத் தலைப்புகள் தெரிவிப்பவைகள் அத்தனையும் மனித சமுதாயத்திற்கு அன்றே அவசியமாக இருந்தது. இன்று அவை மிக மிக அவசியமாக உள்ளன. அந்த 133 அதிகாரங்களை கண்ணுறும்போது அவற்றில் ஏதேனும் ஒன்றாகினும் மனித சமுதாயத்திற்கு அவசியமில்லை என்று சொல்ல முடியுமா? ஒரு அதிகாரத்தில், சொல்ல வேண்டிய ஒரு வாழ்வியல் உண்மையை ஒரு குறளில் சொன்னால், அது போதாது என்று எண்ணி, மனித அறிவிற்கு தெளிவு படுத்த விரும்பிய வள்ளுவர், பத்து கோணங்களில் கூறுவதற்கு, பத்து குறட்பாக்களில் அருளியுள்ளார்.

    ஒழுக்கத்திற்கென்று தனி அதிகாரத்தை ஒதுக்கி பத்துக் குறட்பாக்களை அருளியுள்ளார். அதுபோல் அறிவைப் பற்றி பத்து பாக்களில் கூறி அறிவுடைமை அதிகாரத்தை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு திருக்குறளை அருளியதால்தான், திருவள்ளுவர் தோன்றி 1940 வருடங்கள் சென்ற பிறகும்,

    ஒரு ஆன்மாவிற்கு, திருவள்ளுவரை மானசீகக் குருவாக அமைத்து,
    “அகத்ததுதான் மெய்ப்பொருள் என்று எடுத்துக்காட்டி,
    அறிவதனை அறிவித்தார் திரு வள்ளுவர்”
    என குருவணக்கம் செய்ய வைத்து,
    அறிவை அறியச்செய்து.
    திருவள்ளுவரைப் போன்றே 1851 கவிகளை அருளச்செய்ய முடிந்தது இயற்கை அன்னையால். அந்த புண்ணிய ஆன்மாதான் பிரம்மரிஷியான, நம் தாய்தந்தை செய்த புண்ணியத்தால் நமக்கு இயற்கை ஏற்படுத்திக் கொடுத்த, அவ்வையார் கூறும் அறிவினரான வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    தனது மனிதகுல தன்மாற்ற தொழிற்சாலையில், விலங்கினப் பண்பால் மனிதகுலத்திற்கு வந்துவிட்ட பரிணாமக்கசடுகளை நீக்க, அறிஞர்கள் வழியாக அறநெறி – அறவுரைகள் இயற்கையால், வழங்கப்பட்டாலும், சமுதாயம் அதனைக் கண்டு கொள்ளவே இல்லை. எப்படி உடலுக்கு பிணி ஏற்பட்டால், மருந்தைக் கொண்டு சரி செய்து கொள்ள மனித சமுதாயம் கண்டுபிடித்துள்ளதோ, அதுபோல், பிறவிப்பிணிக்கு, இயற்கை காலங்காலமாக, அறநெறிமருந்துகளை தனது மூத்த குழந்தைகளில் ஒருசிலர் வழியாகத் தெரிவித்து வந்தாலும், மனிதசமுதாயம் அதனை கண்டு கொள்ளவில்லை. கைமேல் பலன் தரும் புலனின்பத்தை அளவு மீறியும், முறை மாறியும் அனுபவித்துக் கொண்டு துன்பத்துக்குள்ளாகின்றது. இதனைத்தான் அறிஞர்கள் எல்லோருமே புலன்மயக்கம் என்கின்றனர்.
    ‘புலன் இன்பம்’ மட்டுமே அனுபவிக்க ஆன்மா இந்த உடல் எடுக்கவில்லை. அதுதான் பிறப்பிற்கான காரணம் என்றால், ஆன்மா மீண்டும், மீண்டும் பிறவி எடுத்து வெறும் பிறப்பு–இறப்பு சுழலில்(mere cycle of birth and death) சிக்கித் துன்பக்கடலில் தத்தளிக்க வேண்டுமா?

    சலிப்பிற்கும், நடைமுறையில், அளவும், முறையும் கடைபிடிக்க முடியாமல், வருகின்ற துன்பங்களுக்குக்கும் காரணமான புலன் இன்பம் மட்டுமே அனுபவிக்கும் அற்ப நோக்கத்திற்காகவா –

    எல்லாம் வல்ல இறை ஆதிமனிதனிலிருந்து இன்று வரை,
    கடலிலுள்ள நீர்த்துளிகள் எவ்வளவு என்று கணக்கிட முடியாதோ,
    அதுபோல், பலகோடி கோடி மக்களாக வெறும் பிறப்பு – இறப்பு சுழற்சிக்காகவா தன்மாற்றம் அடைந்து வந்துள்ளது?
    இதில் என்ன ரசனை இருக்கின்றது இறைக்கு? அல்லது இருக்க முடியும்!

    இறையாகிய பேரறிவு, ஆதிநிலையில் வெளியாக இருந்தபோது இல்லாத சிறப்பினை மனித வடிவில் தன்னை அறியும்போது பெறுகின்றது. அந்த சிறப்பு என்ன? இறையாகிய பேரறிவு, ஆதிநிலையில் வெளியாக இருந்து போது, தன்னை இரசிக்க முடியாது. ஆனால் மனித வடிவில் இறை தன்னையே ரசிக்கின்றது. மனிதன் ரசிக்கும் இயற்கையின் அருமை, பெருமைகள் யாவும் இறையினுடையது தானே.
    இது எப்படி இருக்கின்றது என்றால், முகம் பார்ப்பதற்குக் கண்ணாடித் தேவைப்படுவது போல், தன்னையே ரசிக்க பேரறிவிற்கு மனித உடலும், ஆறாம் அறிவும் தேவையாய் இருந்தது. முகம் பார்க்கக் கண்ணாடி வேண்டும். அழகனோ, அழகியோ தனது அழகினை ரசிக்க கண்ணாடி வேண்டும். கண்ணாடியே இல்லாத ஊரில் பிறந்த அழகனோ, அழகியோ எவ்வாறு தன் அழகினை ரசிக்க முடியும்?

    அதுபோல், இறையும், மனிதன் இல்லாமல் தன்னை ரசிக்க முடியாது. எனவே இறைக்கும் தன் சிறப்பினையெல்லாம் அறிந்து மகிழ்வதற்கு, மனித வடிவில் கண்ணாடித் தேவைப்பட்டது.

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் இந்த சுத்த அத்வைத தத்துவத்தை நமக்குத் தெளிய வைப்பதற்கு, மனிதனை “Sophisticated GOD” என்பார். காரணம் வெட்ட வெளியில் பேரறிவிற்கு உணர்வு கிடையாது. ஆகவே பேரறிவிற்கு, மனிதனாகி இப்போது தன்னை உணர்ந்து பேரின்பம் அடைகின்ற நிலை, வெட்டவெளியாக இருந்தபோது கிடையாது. தன்னுடைய இரகசியங்களையே மனித அறிவின் மூலமாக அறிந்து மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகின்றது இறை.

    ஆனால் இப்பேறு பெற்ற மனிதன் புலன் இன்பங்களிலேயே மூழ்கி அல்லலுறுகிறான். வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஆதங்கமாகவும், வேடிக்கையாகவும் “ஏன் அசைந்தோமோ? இவ்வாறு மனிதவடிவில் துன்பங்களை அனுபவிக்க வேண்டியுள்ளதே என்று இறைவன் நினைப்பான்” என்பார். தன்னையே அறிந்து இன்பமுற ஆறாம் அறிவாக வந்த பேரறிவு, மனிதனின் அறியாமையால் துன்பத்தையே அடைகின்றது. “கல்லார் கற்றார் செயல் விளைவாய்க் காணும் இன்பதுன்பமவன்” என்று இறையைக் கூறுகிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    ஆகவே, ஆன்மா தனது பழிச்செயல் பதிவுகளை நீக்கிக் கொண்டு, மீண்டும் இப்பிறவியில் பழிச்செயல்கள் புரியாத அயரா விழிப்புடன் இருந்து, தன்னை உணர்ந்து, ஆன்ம உணர்விலேயே வாழ்ந்து, பெருவாழ்வு வாழ, மனிதன் அறிவிற்கு விருந்தை அருந்துவதற்காக செய்ய வேண்டியவைகள் என்னென்ன?

    அறிவிற்கு விருந்தை அருந்துவதற்குச் செய்ய வேண்டியவைகள்:
    1) முதலில் சரியான அறிவினரைத் தேடி அவருடன் இணைந்திருத்தல் வேண்டும்.
    2) அந்த அறிவினர் கூறும் அறநெறிகள் சரியானவையா என சுயசிந்தனையின் மூலம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவது போல்– “Information, Confirmation, Transformation” சோதித்து அறிய வேண்டும். அறிந்து, அதுபோல் நடக்க வேண்டும்.
    3) வானொலி, மற்றும் தொலைக் காட்சியின் வாயிலாக ஒலி, ஒளி பரப்பப்படும் நிகழ்சிகளான சான்றோர் சிந்தனைகளைக் கேட்க வேண்டும். செய்தித்தாளில் “அறிவோமா ஆன்மீகம்” போன்ற பகுதிகளை ஆர்வமாகப் படிக்க வேண்டும்.
    4) மகரிஷி அவர்களின் வாழ்க்கை மலர்களிலுள்ள சிந்தனை விருந்தை அன்றாடம் தவறாமல் படிக்க வேண்டும்.
    5) அறிஞா்களின் அறநூல்களைத் தினந்தோறும் ஒரு மணி நேரமாவது படிக்க வேண்டும்.
    6) சத்சங்கத்தில் நேரிடையாகக் கலந்து கொள்ள வேண்டும். வாய்ப்பில்லாதபோது அறநூல்களை தினந்தோறும் வாசிப்பதே சத்சங்கம். அறநூல்களை வாசிக்கும் போது. அதனை அருளிய அறிஞர்கள் அறிவாற்றலுடன் இணைகிறோம்.
    7) இவைகளுக்கெல்லாம் வாய்ப்பில்லாத போது, தானே சிந்திப்பதும் கூட, சிற்றறிவு பேரறிவோடு, சத்சங்கத்தில் கலந்து கொள்வதேயாகும்.
    அதாவது, கேள்வியும் அவனே. பதிலும் அவனே. ஒரு பொருள் பற்றி
    அதிக அக்கறையுடன்,
    ஆர்வத்துடன்,
    ஆழ்ந்து,
    விடாமல்,
    எப்போதும், நித்தம் நித்தம்,
    உள்ளம் சிந்திக்கும் பழக்கம் சித்தியாகிவிட்டால், கேள்வியை எழுப்புவதும் இறையே. அப்போதோ, பிறகோ விடை தருவதும் இறையேதான். உள்ளம் என்பது மனதின் மறுமுனையான தெய்வம் தானே! எனவே உள்ளம் களங்கமற்றுச் சிந்திக்க வேண்டும். களங்கமற்ற உள்ளம் சிந்திக்கின்றது என்றால் தெய்வமே சிந்திப்பது தானே? தெய்வமே சிந்தித்தால் அதுவே தனக்கு, எல்லாவற்றையும் தெரிவிக்கின்றது. தெரிவித்துக் கொள்கின்றது. இந்த உணர்வை அனுபவித்து இன்பமுற வேண்டும்.
    இதுவரை அறிவிற்கு விருந்து என்றால் என்ன, ஏன் அறிவிற்கு விருந்தாகவே உண்ண வேண்டும் எனப்பார்த்தோம். அறிவிற்கு விருந்து அருந்தும் பல வழிகளில் ஒன்று சத்சங்கமாகும். நேரிடைச் சத்சங்கத்தில் கலந்து கொள்வதற்கு இயந்திரமயமான, பரபரப்பான உலகில் சாத்தியங்கள் குறைவாக இருக்கின்றது. ஆகவே நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, www.prosperspiritually.com ஏற்படுத்தப்பட்டு, அது இணையதள சத்சங்கமாகப் பயன்பட்டு, கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ‘அறிவிற்கு விருந்து’ என்கின்ற பகுதியும், சிந்தனைப் பயிற்சி என்கின்ற பகுதியும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உலக சகோதரர்களும், சகோதரிகளும், அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    வாழ்க வளமுடன். வாழ்க www.prosperspiritually.com வளர்க www.prosperspiritually.com.

    Loading

  • அறிவிற்கு விருந்து 2 / 3

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    அறிவிற்கு விருந்து 2 / 3

    FFC – 42

    31-12-2014—புதன்

    அறிவிற்கு எவையெல்லாம் விருந்தாக இருக்க முடியும்?

     அறிவு எதனை அறிவதற்காக இந்தப் பிறவி எடுத்ததோ அதுபற்றிய உண்மை விளக்கங்கள்,
     தன்னுடைய பூா்வீகம் பற்றிய உண்மைகள்,
     வாழ்க்கையைப் பற்றிய எதார்த்தம் புரிதல்,
     துன்பமிலா இன்ப வாழ்வு வாழ்வதற்கான வழிவகைகள்,
     அதற்கு மேலும் தனது பூர்வீக சொத்தான அமைதியை அனுபவித்தல்
     பேரின்பத்தில் திளைத்தல்,
     சமுதாய அக்கறை ஏற்படுதல்,
     சலிப்பில்லா பயனுள்ள வாழ்க்கை வாழ்தல்,

    சுருங்கச் சொல்வதெனில் சிந்தனைச் செல்வத்தை அறிவின் உச்சத்திற்கு வளர்ப்பது போன்ற அறிவுப்பூர்வமான உண்மைகள் எல்லாம் அறிவிற்கு விருந்தாக இருக்கும்.

    அவ்வையார் கூறும் அறிவினர் யாராக இருக்க முடியும்? எவருடன் சேர்வதால், அறிவிற்கு தேவையான மேலே கூறப்பட்ட இனியவைகள் கிடைக்குமோ அவரை அறிவினர் ஆவர்.

    அவ்வையார் கூறும் அறிவினரான வேதாத்திரி மகரிஷி அவர்கள், ஏறக்குறைய 44 ஆண்டுகளுக்கு முன்னர் 1970 ஆம் ஆண்டு, அன்பர்களுக்கு அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற, அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை நினைவு படுத்திக் கொள்வோமே.
    அழைப்புக் கவி (1970)
    அன்பர்களே! வாரீர்!
    அறிவின் இருப்பிடம்,
    அறிந்து இன்பமுற,
    அன்பர்களே! வாரீர்!
    இன்ப நிலையதை, ஏக நிலையதை,
    அன்பு நிலையதை
    அறிந்திடலாம் இன்று.
    அன்பர்களே! வாரீர்!
    “தின்று திரிந்து உறங்கவோ பிறந்தோம்?”
    என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்.
    அன்றாட வாழ்க்கை அறிந் தனுபவிக்க
    இன்றேனும் விரைந்து எழுச்சிபெற் றுய்வீர்!
    அன்பர்களே! வாரீர்! …… வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

    ஆகவே, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அவ்வையார் “அறிவினரைச் சேர்வது இனியது” என்று கூறியதை இப்போது, இந்த நூற்றாண்டில், அறிவை அறிந்து அனுபவித்து, “அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற, அன்பர்களே வாரீர்” என உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ள வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாயிலாக இயற்கை நடத்திக் கொண்டிருக்கின்றது. வாழ்க வேதாத்திரி மகரிஷியின் அறிவாற்றல். வேதாத்திரியம் என்ன விருந்து படைக்கின்றது? ஒரு புராணக்கதையில் வரும் பாரிஜாத மரம் போன்றது வேதாத்திரியம்.

    அந்தப் புராணக்கதைக் கூறுவது: தேவலோகத்தில் பாரிஜாத மரம் உள்ளதாகவும், அம்மரத்தில் பூக்கும் பாரிஜாத மலர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் என்றும் கூறப்படுகின்றது. மகரிஷியின் அறிவாற்றல், அதாவது வேதாத்திரியம் ஒரு பாரிஜாத மலரைப் போன்றது. அப்பாரிஜாத மலரில் அறிவுத் தேன் நிரம்பி வழிகின்றது. அறிவிற்கு வேண்டிய விருந்தைத் தரும் மகரிஷியின் அறிவாற்றல். அறிவுத் தேனீக்களாகிய நாமெல்லோரும் தேனைப் பருகிக் கொண்டு தெய்வீக போதையில் உள்ளோம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கேற்ப, அவ்வறிவுத் தேனை மற்றவர்களும் பருகி ஆனந்தமடைய வழிகாட்டும் அறிவுத் தொண்டாற்றி, மகிழ்ந்து, எப்போதும் இறை அருளுக்குப் பாத்திரமாகி, அதே நேரத்தில் இப்பிறவிப் பயனை அடுத்தப் பிறவிக்கு தள்ளிப்போடாமல், இப்பிறவியிலேயே பெற்றிடுவோம்.

    அறிவிற்கு விருந்தை எவ்வாறு தயார் செய்து அருந்த வேண்டும் எனத் தோன்றும். அவ்வையார் கூறுவது போன்று மூன்றாம் நிலை இனியதைக் கொடுக்கக் கூடியதான அறிவினரைச் சேர்ந்து, நான்காம் நிலையும் இறுதியானதுமான அறிவினரைக் கனவிலும், நனவிலும் காண்பதாலும் அறிவிற்கான விருந்தை அருந்த முடியும். வயிற்றுக்கு விருந்து நாவிற்கு மிகுந்த சுவையைத் தரும். வயிற்றுப் பசியினைப் போக்கும். வயிறு, உணவிலுள்ள சாறை உடல் வளர்ச்சி்க்காக எடுத்துக் கொண்டு, சக்கையை மலமாக வெளியே அனுப்பிவிடுகின்றது. இப்படியாக வளர்ந்து வந்த உடல் மீண்டும் பஞ்ச பூதங்களாகி மறைந்து விடுகின்றது (மரணம்).

    ஆனால் அறிவிற்கு அளித்த விருந்து அப்படியாவதில்லை. உடல் அழிந்தாலும் அறிவிற்கு அளித்த விருந்து வம்சாவளி வம்சாவளியாகச் சென்று கொண்டிருக்கின்றது. எப்படி? கருமையத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிவிற்கு விருந்து அளிப்பதால், அளிக்கும் ஒவ்வொரு விருந்தும் அதற்குரிய தரமாற்றத்தை அளிக்கின்றது. அந்த தரமாற்றம் என்றுமே அழியாத ஆன்மாவாகிய கருமையத்தில் பதிவதால், அந்த கருமையத்தின் செராக்ஸ் நகலே ஒருவரின் அடுத்த வம்சாவளி என்பதால் அறிவிற்கு அளிக்கும் விருந்தால் ஏற்படும் தரஉயர்வு தன்னுடைய வம்சாவளிக்குச் சென்றடைகிறது.. இவ்வாறாகத்தான், நல்ல தரமுள்ள வம்சாவளியை உருவாக்குவதன் மூலம் மனித குலத்தை உய்யச் செய்ய முடியும். இஃதன்றி மனித குலத்தை எவ்வாறு உய்வடையச் செய்யமுடியும்? இது இயற்கையின் புனித ஏற்பாடு.
    அறிவிற்கு விருந்து தெளிவினைத் தரும். அது அறிவிற்கு ஆனந்தத்தைத் தரும். அதனால் தான் அவ்வையார் அறிவினரைச் சேர்ந்திருக்கச் சொல்கிறார். அறிவினர் என்று அவ்வை கூறுவது, அறிவையறிந்த குருவையே. அறிவையறிந்த குருவை அடைதலின் பயனை, திருமூலர் அருளிச்செய்துள்ள பாடலின் மூலம் நினைவிற்குக் கொண்டு வருவோம்.

    குரு அருளே திருவருள்
    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே. ….என்கிறார் திருமூலர்.
    ,அவ்வைத்தாய் கூறுவதனையும் நினைவு படுத்திக் கொள்வோம். அவை தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நீதிகளாக உள்ளன.
    ஆத்திச்சூடி
    1) சான்றோர் இனத்து இரு. (சான்றோர்களிடம் சேர்ந்திரு)
    2) பெரியாரைத் துணைக் கொள். (அறிவிற்சிறந்த பெரியவா்களை உனக்குத் துணையாக வைத்துக்கொள்)
    3) மேன்மக்கள் சொல் கேள். (உயர்ந்தவர்களுடைய சொல்லைக் கேட்டு நட)
    4) மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம். (பெரியவர்கள் சொன்ன வார்த்தை தேவாமிர்தம் போல் இன்பம் செய்யும்)
    மூதுரை?
    நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
    நல்லார்சொற் கேட்பதுவும் நன்றே – நல்லார்
    குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
    இணங்கி இருப்பதுவும் நன்று.
    பொருள்: நல்லாரைக் காண்பதும், அவர் சொல்லைக் கேட்பதும், அவர் குணங்களைப் பேசுவதும், அவரோடு கூடியிருப்பதுவும், நல்லறிவையும் நல்லொழுக்கத்தையும் உண்டாக்கும்.
    உலக நீதி
    “மூத்தோர் சொன்ன வார்த்தைகளை மறக்க வேண்டாம்” …..என்கிறார் உலகநாதர்.
    அடுத்த விருந்தில்,
    1) மனிதனுக்கு வேண்டிய 133 தேவைகளைப்பற்றியும்,
    2) வெறும் பிறப்பு – இறப்பு சுழற்சியை ரசிப்பதற்காகவா இறையோ அல்லது இயற்கையோ தன்மாற்றம் அடைந்து இருக்கும்.
    என்பதனையும் சிந்திப்போம்.

    04-01-2015 ஞாயிறன்று தொடர்வோம்.

    Loading

  • அறிவிற்கு விருந்து 1 / 3

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    அறிவிற்கு விருந்து 1 / 3FFC – 41

    28-12-2014—ஞாயிறு

    அறிவைப்பற்றிக் கூறவந்த திருவள்ளுவர், பொருட்பாலில் அறிவுடைமை என்கின்ற ஒர் அதிகாரத்தையே ஒதுக்கி, பத்துக் குறட்பாக்களை அருளியுள்ளார். அதிகாரத்திற்கு “அறிவு” என்று பெயர் வைத்திருக்கலாம் திருவள்ளுவர். ஆனால் அறிவுடைமை எனப் பெயர் வைத்துள்ளார். காரணத்தோடுதான் அறிவுடைமை எனப் பெயா் வைத்துள்ளார். உடைமை என்றால் செல்வம் என்று பொருள். ஆகவே அறிவுடைமை எனப் பெயர் வைத்துள்ளதால், அறிவை செல்வத்திற்கெல்லாம் மேலானச் செல்வமாகக் கருதி, அறிவை அறிவுச் செல்வமாக்கிக் கொள்ள வேண்டுகிறார் நம்மையெல்லாம்.
    அறிவைப்பற்றிக் கூற வேண்டியதையெல்லாம் ஒன்பது குறட்பாக்களில் கூறிவிட்டு நிறைவாக அறிவைப்பற்றி ஒட்டு மொத்தமாக இரத்தினச் சுருக்கமாக (to sum up) கடைசிக் குறட்பாவில் மொழிவதைக் கவனிப்போம்.
    “அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்
    என்னுடைய ரேனும் இலர்.”
    வேறொன்றும் இல்லாது இருந்தாலும் அறிவுடையவர் எல்லாம் உடையவரே ஆகிறார் என அழுத்தமாகக் கூறுகிறார். வேறு என்ன இருப்பினும், அறிவில்லாதவர், ஒன்றும் இல்லாதவர் ஆவார் என ஆதங்கத்தோடு கூறுகிறார். வாழ்க்கைக்கு வேண்டிய மற்ற எல்லா வளங்கள் இல்லாவிடினும், அறிவுவளம் இருப்பவர் எல்லாம் உடையவராகிறார் என்கிறார்; அறிவு வளமில்லாமல் வாழ்க்கைக்கு வேண்டிய மற்ற வளங்களைப் பெற்றிருப்பவரை ஒன்றும் இல்லாதவர் என்கிறார்.
    அறிவுடையவர், அறிவில்லாதவர் என்று பிரித்து, இருதரப்பினராகக் கூறியிருப்பதால் அறிவுடைய மனிதன், அறிவில்லாத மனிதன் என்று பொருளல்ல. உயிரினம் என்றாலே அறிவு உண்டு. மனித உயிரினத்திற்கு பிரத்தியேகமாக ஆறாவது அறிவு உள்ளது என மனிதன் கூறுகிறான். உண்மைதான். ஆறாவது அறிவை சரியாக, முறையாகப் பயன்படுத்தத் தெரியாது அறியாமையில் உள்ளவனுக்கு ஆறாம் அறிவு இருந்து என்ன பயன் என்று கருதிதான், அம்மனிதரை அறிவில்லாதவர் என்கிறார் அறிஞர் திருவள்ளுவர்.
    ஒரு “மனிதனை எல்லாம் உடையவர்” என்பது பற்றிய சமுதாயக் கருத்து என்ன? முதலில் வாழ்க்கைக்கு வேண்டிய செல்வவளத்திலிருந்து எல்லாவளங்களும் பெற்று, பிறகு, துன்பமிலா இன்பவாழ்வு வாழ்ந்து, எல்லோராலும் மதிக்கத்தக்க பெருவாழ்வு வாழ்பவரை, ‘எல்லாம் உடையவர்’ என்று சமுதாயம் கூறும். இஃதெல்லாம் மனிதனுக்கு எவ்வாறு, எப்போது கிட்டும்?
    பாரதி கூறும் தெளிந்த நல்லறிவைக் கொண்டுதான் அறவழியில் செல்வம் ஈட்ட முடியும்,
    பாரதி கூறும் தெளிந்த நல்லறிவைக் கொண்டுதான் துன்பமிலா இன்பவாழ்வு வாழ முடியும்,
    பாரதி கூறும் தெளிந்த நல்லறிவைக் கொண்டுதான் பெருவாழ்வு வாழமுடியும்.
    வேறு வழியில்லாமல் பேரறிவு, விலங்கினங்களாகத் தன்மாற்றம் அடைந்து வந்து, கடைசியாகத்தான், மனித இனமாக வந்துள்ளது. ஆகவே அறிவுடன் சேர்ந்து விட்ட விலங்கினப் பண்பான பரிணாமக் கசடை(animal imprint as evolutionary effluent that has come out during the process of transformation of Consciousness from fifth sense living beings to sixth sense living beings) நீக்கினால்தான் திருவள்ளுவர் கூறும் அறிவிற்கான வரையறையை(definition of consciousness) மனித அறிவால் எய்த முடியும்.
    விலங்கினங்களின் அறிவு, ஐந்து கோசங்களில், அன்னமய கோசம், மனோ மயகோசத்தைத் தவிர மற்ற கோசங்களில் இயங்கத் தேவையில்லை, அவசியமும் இல்லை. ஆனால் மனிதன் அன்னமயகோசம், மனோமயகோசம் ஆகிய இரண்டை மட்டுமே முக்கியம் எனக் கருதாமல், மற்ற கோசங்களுக்கும் அதி முக்கியத்துவம் கொடுத்து, பிராணமய கோசம், விஞ்ஞானமன கோசம், ஆனந்தமய கோசத்திற்கு உயர்ந்து வர வேண்டும். விஞ்ஞான மய கோசத்தில் அறிவு சிந்திக்கின்றது. சிந்தித்தலின் விளைவாக அடுத்த கட்டமான ஆனந்தமய கோசத்திற்கு வருகின்றது.
    ஆனந்த மயகோசத்தில்தான் ஒருமனிதர் எல்லாம் உடையவராகிறார். எல்லாம் இருந்தும் ஆனந்தம் இல்லையென்றால் என்ன பயன்? தேங்காயை உடைத்து சாப்பிடத் தெரியாத நாயிடம் தேங்காய் கிடைத்தால் என்ன செய்யும்? உருட்டிக் கொண்டேதான் இருக்கும் என்று ஆன்மீக நூல்கள் எடுத்து இயம்புகின்றன. ‘கோசம்’ என்பது ஆன்மாவின் இயக்க நிலையையும் எல்லை விரிவையும் குறிக்கும் சொல்லாகும்.
    ஆகவே அறிவு பிராணமய கோசத்திற்கு வந்து, விஞ்ஞான மயகோசத்திற்கு வருவதற்கு ஆர்வம் கொள்ள வேண்டும். அதாவது சிந்திக்க வேண்டும். சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு சிந்தனா பள்ளியில் சேர்ந்து (School of Thoughts) பண்பேற்றக் கல்வி பயில வேண்டும். அப்படி ஒரு பள்ளி உள்ளதா? உள்ளது. அதுதான் அவ்வைத்தாய் கூறும் இனியதை அனுபவிக்க அறிவினருடன் சேர்ந்திருத்தலும், மேலும்மேலும் இனியதை அனுபவிக்க, அறிவினரைக் கனவிலும் நினைவிலும் காண்பிக்க வைப்பதும் தான் அந்த சிந்தனா பள்ளி.
    மேலும் அறிவினருடன் சேர்ந்து, இனிய பயனை அனுபவிக்க, வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதுபோல், அறிவினரை மதித்து நடந்து இயற்கையின் திறனான இயல்பூக்க நியதிப்படி தரத்தில் உயரவேண்டும். அவ்வை கூறும் நான்கு இனியவைகளில் கடைசி இரண்டையும் பெற்று விட்டால் அறிவு ஆனந்தமயகோசத்திற்கு வந்து விட்டது என்று பொருள். அவ்வையார் கூறும் நான்கு இனியவைகள் என்னென்ன என்று அறிந்து கொள்வோம்.

    இனியது எது?
    இனியது கேட்கின் தனிநெடு வேலோய்!
    இனிது ! இனிது ! ஏகாந்தம் இனிது !
    அதனினும் இனிது ! ஆதியைத் தொழுதல்;
    அதனினும் இனிது ! அறிவினர்ச் சேர்தல்;
    அதனினும் இனிது ! அறிவுள்ளோரைக்
    கனவிலும் நனவிலும் காண்பது தானே ! ………அவ்வையார்.

    இதற்கெல்லாம் அறிவிற்குப் பசி வேண்டும். வயிற்றுப் பசியைப் போக்குவதற்கு உணவு தரப்படுகின்றது. உணவால் உடல் மட்டுமே வளர்கின்றது. உடல் மட்டும் வளர்ந்து பயனில்லை. அறிவும் வளர வேண்டும்.(ஆளும் வளரனும். அறிவும் வளரனும் – திரைப்படப்பாடல் வரி) அறிவு வளர்வதற்கு உணவு அவசியம். அதுவும் விருந்தாக இருக்க வேண்டும். ஏன்? விருந்து என்றால் பல உணவு வகைகள் இருக்கும். ருசி ஊட்டப்பட்டிருக்கும். நாவிற்கு மிகச்சுவையாக இருக்கும். ஆனால் தினந்தோறும் வயிற்றுக்கு விருந்து அவசியமில்லை. ஒரு காரணம், எல்லோருக்கும் தினந்தோறும் விருந்து அருந்த வசதி இருக்காது. மற்றொரு காரணம், தினந்தோறும் விருந்து அருந்தினாலும் வயிற்றுக்கு உபாதைகள் வரும். சலிப்பும் வரும்.
    அறிவிற்கு அளிக்கும் உணவு விருந்தாகவே இருக்க வேண்டும். விருந்து சாப்பிடுவதில் அறிவிற்கு சலிப்பே வராது. வயிற்றுக்கு அதிக உணவு அளித்தால் அசீரணம் வருவது போல் அறிவிற்கு விருந்து அளிப்பதில் எந்தவித கெடுதலும் வர வாய்ப்பில்லை. மாறாக அறிவு மேம்பட்டுக் கொண்டே வரும். பல்லாயிரம் பிறவிகள் தோறும் அறிவிற்கு விருந்தில்லாமல் அறிவு இளைத்து மனிதத்தில் பலவீனப்பட்டுள்ளது. ஆகவேதான் பரிணாமக்கசடான விலங்கினப் பண்பையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது மனித அறிவு.
    ஆகவே சரியான அறிவினரைச் சோ்ந்து மதித்து நடந்தால், அறிவிற்கு எப்போதும் விருந்தையே அருந்துவதில் பஞ்சம் இராது. அட்சய பாத்திரம் போல் அறிவிற்கு விருந்து தடையின்றி எந்நேரமும் கிடைத்துக் கொண்டே இருக்கும். இது நிச்சயம். அறிவினரைச் சோ்தலால் அறிவிற்கு விருந்து கிடைப்பதால் அது இனிதாகத்தானே இருக்கும். அறிவினரைச் சேர்தலால் எவ்வகையான விருந்து அறிவிற்கு கிடைக்கும்? அறிவிற்கு எதெல்லாம் விருந்தாக இருக்க முடியும் என்பதனை 31-12-2014 புதனன்று அறிவோம்.

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    Loading

  • அயரா விழிப்புணர்வு – 7 / 7

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    அயரா விழிப்புணர்வு – 7 / 7FFC – 40

    24-12-2014—புதன்

    (Constant Awareness)

    வேதாத்திரி மகரிஷி அவர்கள், தான் வள்ளலாரின் அருளைப் பெற்றதை நமக்குத் தெரிவிக்க அருளியுள்ள பாடலுடன் அயரா விழிப்பு நிலைச் சிந்தனையை நிறைவு செய்வோம்.

    வள்ளலார் அருள்(05-12-1986)

    என்றுஎன்னை இராமலிங்க வள்ளற்பெரு மானார்

    எதிர்நின்று காட்சிதந்து அருளைப் பொழிந்தாரோ

    அன்றுமுதல், உடல் உயிரோடறிவை அருட்பணிக்கே

    அர்ப்பணித்து விட்டேன்என் வினைத் தூய்மை யாச்சு.

    இன்றுஎந்தன் மனநிலையோ, வள்ளற் பெருமானார்

    எந்தச்செயல் செய்யென்று உணர்த்து வாரோ, அதுவே

    நன்றுஎனக் கொண்டவற்றை, நான்முடிக்கும் பேற்றால்

              நல்லறிஞர் பலர்எனக்கு நட்பை அளிக்கின்றார். ……அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்

             அருட்சோதி இராமலிங்க வள்ளலார், தேடி வந்து கூடுவாஞ்சேரியை அடைந்து, தன்னுடைய ஆன்மாவை, வேதாத்திரி மகரிஷி அவர்களின் உடலில் தங்க வைத்துக் கொண்டு 1953 லிருந்து பத்து ஆண்டுகள் வேதாத்திரி மகரிஷி அவர்களுக்கு வழிகாட்டி வந்தார். அப்போது மகரிஷி அவர்கள் எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவமயமாக இருந்தன என அருட்தந்தை அவா்கள் கூறுகிறார்கள். இராமலிங்க வள்ளலார், அவர் தம் சொந்த உடல் மூலம் முடிக்காமல் விட்டுவைத்த செயல்களையெல்லாம் தனது உடலை ஆட்கொண்டு முடித்தார் என எண்ணுவதாக அருட்தந்தை அவர்கள் தன்னுடைய வாழ்க்கை விளக்கம் எனும் நூலில் கூறுகிறார்,

    இந்த நிகழ்வு நடந்து முடிந்து சுமார் 33 வருடங்கள் கழித்து மேலே கூறிய கவியினை அருட்தந்தை அவர்கள் 05-12-1986 அன்று அருளியுள்ளார். 1981 ஆம் வருடம் எழுதிய “எனது வாழ்க்கை விளக்கம்” எனும் நூலில் இராமலிங்க வள்ளலார் தனக்கு அருட்பாலித்த நிகழ்ச்சியினையும் அதனால் தான் அடைந்த அருட்பயனைக் கூறியுள்ளார். இருப்பினும் ஐந்து ஆண்டுகள் கழித்து அந்நிகழ்ச்சியினைக் கவிதையாக்கி நமக்குத் தெரிவதற்காக அருளியுள்ளார். காரணம் என்ன? அன்பா்களின் சிந்தனைக்கு விட்டு விடலாம்.

    வேதாத்திரிஷி நமக்கெல்லாம் தந்தை என்றால் (அருட்தந்தை) வள்ளலார் நமக்கெல்லாம் தாத்தா தானே? அருட்தாத்தாதானே! எனவே அருட்தாத்தா – திரு அருட் பிரகாச வள்ளலார் 30-01-1874 அன்று வெள்ளியன்று இரவு 12 மணிக்கு திருக்காப்பிட்டுக் கொள்ளும் போது திருவாய் மலர்ந்தருளியதை இப்போது நினைகூர்வது பெரும் பயன் அளிக்கும்.

    “இது வரை உங்களுக்கு நேரில் சொல்லி வந்தோம். கேட்டுத் திருந்தி எழுந்து திறத்தில் திகழ்வார் ஒருவரேனும் தேறிலர். இப்போது இவ்வுடம்பில் இருக்கின்றோம். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம். எங்கெங்கு சென்றாலும் அக்கங்கு இருப்போம். திருத்திடுவோம். அஞ்ச வேண்டாம்” என்பதே அன்று திருவாய் மலர்ந்தது.

     

    ஐயப்படாது அகத்தை உணா்ந்தவரும் தெய்வமும் ஒன்றே எனத் திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் இறைவனே கூறியதுதானே வள்ளாரும் கூறியதும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதும், வேறு பல மகான்கள் கூறியதும்? ஆகவேதான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குருவணக்கப் பாடலில் மானசீக நான்கு குருமார்களின் பெயர்களை மட்டும் கூறாமல், மிகவும் அறிவுக்கூர்மை உடைய வேதாத்திரி மகரிஷி அவர்கள் மிகவும் நன்றியுணர்வுடனும், பொறுப்புணர்வுடனும், நாமும் ஐயமின்றி உணரவேண்டும் என்கின்ற அருட்கொடையுணர்வுடனும் இது வரை அறிவையறிந்த அறிஞா்களின் அறிவாற்றல்கள் துணை செய்யுமாறு வேண்டுகின்றார். இதுதானே உண்மை !

    உடலளவில் அடையாளம் கொண்டு ”அந்த மகான் சொன்னார். இந்த மகான் சொன்னார்” என்று சொல்வதைத் தவிர்த்து பேரறிவேதான் அந்த மகான் வடிவிலும், இந்தமகான் வடிவிலும் கூறியிருக்கின்றது என்று அறிந்துணரப்படவேண்டியதே ஆன்மீக உண்மை! மனிதகுலப் பரிணாமத்தில், அறிஞர்களின் அவ்வப்போது தோற்றம் என்பது முடிவில்லாத் தெய்வீகத் தொடர் ஓட்டம்(Unending Divine Relay Race)

    எனவே அருட்தாத்தா வள்ளலார் “திருத்திடுவோம் அஞ்ச வேண்டாம்.” என் ஆணித்தரமாக மொழிந்துள்ளதை எப்போது நினைவில் கொள்வோம். நாம் திருந்துவதற்காகப் பிறந்துள்ளோம். எனவே “திருத்திடுவோம் அஞ்ச வேண்டாம்.” என்கின்ற வள்ளாரின் அருட்செய்திற்கிணங்க திருந்திடுவோம் அதி விரைவில். வள்ளாலாரின் ஆன்மாவின் ஏக்கத்தையும், சமுதாய நல அக்கறையையும் கவனிக்க வேண்டும். ஐயப்படாது அகத்தை உணா்ந்தவரும் தெய்வமும் ஒன்றே எனத் திருவள்ளுவர் மொழிந்துள்ளது போல் இறைவனே கூறியதுதானே வள்ளார் கூறியதும், வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுவதும்?

     இறை வெட்டவெளியாக அறிவாக உள்ளது என்று அறிந்து விட்டு வேறு எந்த உருவக் கடவுள் வந்து நமக்கு நேரிடையாக நற்கதியை அடையச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்? கடவுள் மீது நம்பி்க்கைக் கொண்டவா்களாக இருந்துதான் நாம் இந்த இறையின் உண்மைநிலையை அறிந்து கொண்டோம். அப்படியானால் மகான்கள் கூறுவது போல் அறநெறி வாழ்க்கை வாழ்வதற்கு என்ன தயக்கம்? எது குறுக்கீடாக உள்ளது? சிந்தனை செய்வோம்.

    ”எவரொருவர் குருவை மதித்தொழுகினாலும் குரு உயர்வு தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்” என்கின்ற வேதாத்திரி மகரிஷியின் உறுதி மொழியினை

    சிரமேற்கொண்டு செயல்கள் ஆற்றுவோம்.

    திட்டமிடுவோம் பிறவிப்பயனை இப்பிறவியிலேயே அடைவதற்கு.

    இயல்பூக்க நியதியைத் தரமாற்றத்திற்குப் பயன்படுத்துவோம்.

    தடங்கல்களைச் சத்சங்கம் மூலம் சரி செய்து கொள்வோம்.

    விரைவில் இறையின் அருளுக்குப் பாத்திரமாகி, இறைஉணர்வு பெற்று நாமும் சுகம் அடைந்து மற்றவா்களுக்கும், சமுதாயத்திற்கும் பேருதவியாக இருப்போம். ‘சாதனைதான் அறநெறி’ என்று அருளியுள்ள அருட்தந்தையின் கவியுடன் சிந்தனையை நிறைவு செய்வோம்.

    சாதனையே அறநெறி(21-12-1961)
    அறநெறியைப் போதிக்கப் புதிய நூல்கள்
    அவசியமே இல்லைஇனி; மேலும் மேலும்
    அறநூல்கள் எத்தனையோ இந்நாள் மட்டும்
    அறிஞர்பலர் அளித்துள்ளார்; அவையே போதும்!
    அறம் பிறழா நெறிநின்று, மக்கள் வாழ
    அவசியமாம் பொருட்களோடு கல்வி கிட்ட,
    அறவோரே திட்டமிட்டு அமுல் செய்வீரே!
    அதன் மூலம் அறம் வளரும்; உலகம் உய்யும்.

    இவ்வுலகம் உய்ய, உலக மக்களைத் திருத்தி அறம் மலர திருவுளம் கொண்ட இது வரை வந்துள்ள அனைத்து மகான்களின் அறிவாற்றலின் துணை கொண்டு அறிவுத் தொண்டு செய்து மகிழ்வோம். அதற்கு நமக்கெல்லாம் “திருத்திடுவோம் அஞ்ச வேண்டாம்.” என்று அருளிய அருட்பிராகாச வள்ளலாரின் அருள் துணை செய்யட்டும்.

    வாழ்க மனித அறிவு வளர்க மனித அறிவு

    Loading