இன்றைய விருந்து

  • தன்முனைப்பில்லா நான் (Egoless I )

    தன்முனைப்பில்லா நான் (Egoless I )

    FFC-17

    13-11-2014

           தன்முனைப்பு என்பது ”Ego” என்கின்ற ஆங்கிலச் சொல்லின் பொருளாகும்(meaning). ”Edging God out” என்கின்ற வாக்கியத்தில் உள்ள மூன்று சொற்களின் (words) ‘E’, ‘G’, ‘O’ என்கின்ற முதல் எழுத்துக்களை (letters) எடுத்து உருவாக்கப்பட்ட(coined) எழுத்துதான் ”Ego” என்கின்ற எழுத்து.   இறையை (இறைவனை, God) வெளியே ஓரம் தள்ளி விடுதல் என்பதாகும். தன்முனைப்பு என்பது இறையை மறந்த நிலை. மனிதனுக்கும் இறைக்கும் உள்ள திரையே தன்முனைப்பாகும். தன்னை இறையிடமிருந்த பிரித்துக் காட்டிக் கொள்ளும் நிலை.

         எனவே இறையுணர் ஆன்மீகத்தில் இறை உணர்வு பெறுவதற்கு தன்முனைப்பு கரைய வேண்டும். ”தன்முனைப்பு கரைந்து போம், காணும் தெய்வம்” என்கின்ற வேதாத்திரி மகரிஷி அவர்களின் அருட் செய்தியினைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

         தன்முனைப்பு என்பது,   அறிவு தன் மூலத்தை மறந்து தன்னை உடலுடன் அடையாளம்(body consciousness—mistaken identity) கொண்டு முனைப்பு கொள்கின்றது. எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று இருக்கும்போது, மனிதன் புகழுக்கு ஆசைப்படுவது அல்லது ஏங்குவது அல்லது புகழ் மயக்கத்தில் இருப்பது, இறையிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்கொள்ளும் தன்முனைப்புதான் காரணம். தன்முனைப்புதான் எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேர். ஆகவே தன்முனைப்பு நீங்க அறிவு தன்னைப் பற்றி தெளிளாக விளங்கிக் கொள்ள வேண்டும்.  அதற்கு தவமும் சுயசோதனையும் அவசியம்.

         தினந்தோறும் மனிதன் ”நான்” ”எனது” என்கின்ற இரு சொற்களையும் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அப்படி இருக்கும் போது தன்முனைப்பை வெளிபடுத்துகின்ற ”நான்” ”எனது” என்கின்ற சொற்களை உபயோகிக்காமல் இருப்பது எங்கனம் சாத்தியம். என ஐயம் சாதகர்களுக்கு எழலாம். இந்த ஐயம் தீர்க்கவே இன்றைய சிந்தனை.

       தன்முனைப்பு நீக்கிக் கொண்ட ஞானியும் ”நான்” என்கின்ற சொல்லை பயன்படுத்தினாலும் ஞானி பயன் படுத்துவதற்கும் சாதாரண மனிதன் பயன் படுத்துவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது..   ஞானி என்பவர் எப்போதும் அயரா விழிப்பு நிலையில் இறையே தானுமாகவும், எல்லாமாகவும் உள்ளது என்கின்ற ஞாபகத்தில் இருப்பார். ஆனால் சாதாரண மனிதன் இவ்வுண்மையை தெரிந்திருந்தாலும் அந்நிலையை மறந்து தான் வேறு, இறை வேறு என்கின்ற உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருப்பதுதான் அந்த வித்தியாசம்.

    எனவே ஞானி பயன்படுத்துவது ”Egoless I”. சாதாரண மனிதன் பயன்படுத்துவது ”Egoist I or Egoful I” ஞானியின் ”நானை” சாதாரண மனிதன் புரிந்து கொள்ள பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அருளுவதைக் கவனிப்போம்.

       ”எரிந்து கருகிப்போன கயிறு தன் பழைய உருவத்தோடு இருந்தாலும் ஒன்றையும் கட்டுவதற்கு உதவாது. அதுபோல் பிரம்ம ஞானத்தால் எரிக்கப்பட்ட ஞானியின் அகங்காரமும்(தன்முனைப்பு) அப்படிப்பட்டதே என்கிறார் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்.

       மேலும் விவேக சூடாமணி கூறுவதையும் கவனிப்போம். நிழலைப்போல் தொடர்ந்து தேகம்(உடல்) வந்து கொண்டிருந்தாலும் ”நான்” என்னுடையது” என்கின்ற எண்ணமில்லாமை சீவன் ”முக்தனுடைய அடையாளம்” என்கிறது. நாளை சந்திப்போம்.

                           வாழ்க மனித அறிவு. வளர்க மனித அறிவு.

    வாழ்க அறிவுச் செல்வம். வளர்க அறிவுச் செல்வம்.

    Loading

  • தன்குறைகளை அறிவதே ஞானமா? (நேற்றையைத் தொடர்ச்சி) 2/2

    தன்குறைகளை அறிவதே ஞானமா? (நேற்றையைத் தொடர்ச்சி) 2/2

    FFC – 16

    12-11-2014

    வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஞானம் என்பதற்கு, பொதுவான மற்றும் சிறப்பான விளக்கம் தருகிறார்.
    ஞானத்திற்கான பொதுவான வார்த்தை விளக்கம் தெளிவு என்கிறார் மகரிஷி அவர்கள்.
    சிறப்பான விளக்கம் அறிவையறிந்த தெளிவு என்கிறார்
    அறிவின் இருப்பிடத்தை அறிந்து இன்புற்ற மகரிஷி அவர்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கிணங்க, அவ்வின்பத்தை அனுபவிக்க அன்பர்களையெல்லாம் அழைப்பதைக் கவனிப்போம்.
    அழைப்புக் கவி

    anbargale vaareer-THAI

    ஞானம் என்கின்ற சொல்லிற்குத் பொதுவான அர்த்தம் தெளிவு. தெளிவு என்பது யாருக்கு? எந்த ஒன்றைப் பற்றியும் அறிந்து கொள்வதில், குழப்பம், சந்தேகம் இன்றி அந்த ஒன்றைப் பற்றி அனைத்தையும் அறிந்த அறிவின் நிலை தான் தெளிவு. உதாரணத்திற்கு சிறந்த வழக்குரைஞரை சட்ட ஞானமுடையவர் என்கிறோம். சிறந்த பாடகரை இசை ஞானம் உள்ளவர் என்கிறோம். எந்தத் துறையில் சிறந்து விளங்குகிறாரோ அந்தத்துறையில் ஞானமுடையவர் என்கிறோம். பணியின் நிமித்தமாக மனிதர்கள் வெவ்வேறுத்துறையில் இருந்தாலும் எல்லோருமே வாழப் பிறந்தவர்கள். ஆகவே சிறப்பாக வாழ்வதற்கு ஞானம் வேண்டும். அதனை வாழ்க்கை ஞானம் எனலாம். வாழ்வது ஒரு கலை.
    எதற்காகப் பிறந்தோம்?
    கடைசியாக எங்கே செல்ல இருக்கிறோம்?
    ஏன் துன்பம் வருகின்றது?
    வந்த துன்பத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?
    துன்பமில்லாமல் வாழ முடியாதா?
    ஆகிய வினாக்களுக்குத் தெளிவான விடைகள் தேவை.
    பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்டக் காலத்தில் துன்பமில்லாமல் இன்பமாக வாழ்ந்து பூர்வீகச்சொத்தான அமைதியை அனுபவிக்க அறிவிற்கு வேண்டியத் தெளிவுதான் வாழ்க்கை ஞானம் எனலாம்.
    அதற்கு, “நான் நான்“ எனக்கூறிக்கொண்டிருக்கும் அறிவு தனது இருப்பிடத்தை, அதாவது தனது மூலத்தை அறிந்து கொள்ள வேண்டும். மீண்டும் தன் மூலத்தோடு இணைத்துக் கொண்டால் இன்புறலாம், பூர்வீகச் சொத்தான அமைதியை அனுபவிக்கலாம். அறிவு தன்னை அறிந்து கொள்ளும்போது தெளிவு கிடைக்கின்றது. அந்தத் தெளிவினை ஞானம் என்கிறார் மகரிஷி அவர்கள். அந்நிலை எய்திய அறிவு முழுமை பெற்ற அறிவாகின்றது.
    அறிவு தன்னை அறிந்து கொள்ளும் தெளிவினால் வாழ்க்கையின் எதார்த்தத்தை அறிந்து வாழ முற்படுவான் மனிதன். நிலையாமையை அறிந்து கொள்வதும் ஞானம் தான். மனிதன் இப்போது தன்னிடம் உள்ள குற்றங்குறைகளை அப்படியே வைத்துக் கொண்டு ஞானம் பெற முடியாது. தெளிவாகிய ஞானம் பெறுவதற்குப் பல பிறவிகளாகத் தன்னிடம் பழக்கத்தால் ஏற்பட்டுள்ள குறைகளை அறிய வேண்டும். அந்த குறைகளை அறியும் நிலைக்கு வந்த மனிதன் தன்னை திருத்திக் கொண்டு வாழ முற்படுவான். மனிதனிடம் உள்ள குறைகள் என்னென்ன? தீய எண்ணங்கள், தேவையில்லாத ஆசைகள், சினங் கொள்வது, கவலையுறுதல் மற்றும் தான் யார் என உணராமை ஆகியவைகளாகும்.
    பொதுவாக, ஞானவானைத் தவிர, தன்முனைப்பு இல்லாத மனிதர்கள் கிடையாது. ஆகவே தன் குறையை அக்கறையோடு எடுத்துப் பிறர் சொன்னாலும் அதனை தன்முனைப்பு கொண்ட மனம் ஏற்க மறுக்கும். சரி தானாகவாவது குறைகளைக் கண்டுபிடிக்குமா அறிவு என்றால்
    அங்கே இரண்டு காரணிகள் குறுக்கிடுகின்றன .
    ஒன்று பரிணாமக் கசடுகளால் வந்த அறிவின் குறைபாடு. அந்த ஒன்றும் மீண்டும் மூன்றாக பரிணமிக்கின்றது. அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயம் ஆகியன.
    அறியாமை இருந்தால் தன் குறையை எப்போதுமே கண்டுபிடிக்க இயலாது. குறைகள் இருந்தால் அங்கே அதன் விளைவுகள் துன்பங்கள்தான். அறியாமலோ அல்லது அறிந்தோ செய்தாலும் இரண்டிற்கு அதற்குரிய விளைவுகள் உண்டு. சூடான பாத்திரத்தை, அறியாது குழந்தை தொட்டாலும் சரி அல்லது தாய் தொட்டாலும் விளைவு சுடும். விளைவைத் தெரிந்தோ அல்லது தெரியாது செய்தாலும் செயலுக்கேற்ற விளைவு நிச்சயம் உண்டு. அங்கே தாய் சூடானப் பாத்திரத்தைக் குழந்தை தொடாதவாறு எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும். தாயின் கவனக்குறைவு அல்லது அலட்சியம் தான் குழந்தை சூடான பாத்திரத்தை தொட்டு சூட்டினால் வந்த புண்ணை அனுபவிக்கின்றது. குழந்தையும் அனுபவிக்கின்றது. தாய் அதைவிட அதிகமான துன்பம் அனுபவிக்கிறாள். விளைவை அறிந்து செயல் செய்தாலும்(கற்றார்) அல்லது விளைவை அறியாது(கல்லார்) செயல் செய்தாலும் விளைவு உண்டு என்பதனை ஒரு கவியில் மகரிஷி அவர்கள் கூறும் வரிகளை நினைவில் கொள்வோம்.

    “கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
    காணும் இன்ப துன்பமவன் ” . . . . . என்கிறார் மகரிஷி அவர்கள்.

    மற்றொரு காரணி தனக்குத் தானே தன்முனைப்பு. அதாவது தன்னுடைய குறைகள் தனக்குத் தெரிய வந்தாலும் அதனைத் தானே ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனம். இது அநேகருடைய வாழ்க்கையில் அன்றாட நிகழ்வாகவே இருக்கலாம். மனமே குற்றவாளி. மனமே வழக்குரைஞர், மனமே நீதிபதி. மூன்று வேடங்கள் எடுக்க வேண்டியுள்ளது மனம். ஆகவே மனம் உறுதியாக இருந்து மனம் போன போக்கெல்லாம் போகமலிருக்க வேண்டும். எனவேதான் பாரதியார் திண்ணிய(உறுதியான) நெஞ்சம் வேண்டும் என இறைவியைக் கேட்கச் சொல்கிறார். இந்நிலையில் மனிதன் தன் குறைகளை அறிவது என்பது ஞான வாயில் எனலாம். அதனால் தான் மனவளக்கலையில், ஞானக்கோயிலுக்கான முதல் படியாகத் தன்குறைகளைத் தானே அறிந்து கொண்டு திருத்திக் கொள்ளும் தற்சோதனை எனும் பயிற்சி அகத்தவத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    தன்னிடமுள்ளக் குறைகளை அறிவது ஞானபீடத்திற்கு செல்லும் வாசல். ஆகவேதான் மகாத்மா காந்தி குறைகளை அறிவதே ஞானம் என்கிறார். தன்னுடைய குறைகளை அறிபவன் தன்னைத் திருத்திக்கொள்ள முயற்சி எடுத்துள்ளான். அவ்வாறு முடிவு எடுத்தவன் தன்னை தினந்தோறும் பல்வகைகளிலும் திருத்திக் கொள்வதற்கு, அறிவினரைச் சேர்ந்தும், அவர்களை கனவிலும். நனவிலும் கண்டும், அறிவின் மேம்பாட்டிற்கு அறிவினரின் அறநூல்களைச் சிரத்தையுடன் படிப்பதும், சத்சங்கத்தில் கலந்து கொள்வதில் இன்பம் இருப்பதை அறிந்து சத்சங்கத்தில் கலந்து கொண்டும் ஞானத்தைப் பெறுக்கி ஞானபீடத்தை அடைவான்.
    மனிதனின் செயல்களுக்கு ஏற்ற விளைவுகளை தருவது இயற்கையின் நியதியாக உள்ளதால், மனிதன் இதனைக் கவனத்தில் கொண்டு நல்ல விளைவுகளையே விரும்பும் மனிதன் தன் குறைகளை அறிந்து கொண்டு தன்னைத் திருத்திக் கொண்டு ஞானஒளியில் தானும் பிரகாசித்து, தான் வாழும் சமுதாயத்தையும் பிரகாசிக்க வைப்பதற்கு எல்லாம் வல்ல இறையருளும் அறிவில் அறிவாய் நிலைத்து அறத்தை வகுத்து அவ்வாறே வாழ்ந்து காட்டியவர்களின் அறிவாற்றலும் துணை நிற்குமாக. முற்றும். வாழ்க வளமுடன்.
    வாழ்க மனித அறிவு. வளா்க மனித அறிவு. வாழ்க அறிவுச்செல்வம். வளர் அறிவுச் செல்வம்

     

    Loading

  • தன்குறைகளை அறிவதே ஞானமா? 1 / 2

     

    தன்குறைகளை அறிவதே ஞானமா? 1 / 2வாழ்க மனித அறிவு                                                                                     வளர்க மனித அறிவு

    1

    FFC – 15

     

                                                                                 11-11-2014

          தன்னிடம் உள்ள குறைகளை அறிந்து கொள்வதே ஞானம் என்கிறார் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள். குறைகளை அறிந்து கொள்வதே ஞானமா? தன் குறைகளைத் தானே அறிபவன் அத்துடன் சும்மா இருந்து விடுவதில்லை. ஏனெனில், வள்ளுவர் கூறுவதுபோல் சான்றோர்களின் அணிகலான நாணம் அவனிடமும் உள்ளதால் தன்னைத் திருத்திக் கொள்ள முயல்வான், தன்குறைகளை அறிந்து கொண்டு தன்னை திருத்திக் கொள்ளும் போதுதான் அவன் தன் குறைகளை அறிந்தவன் ஆகிறான். அவனே தான் பின்னர் சான்றோனாகிறான். ஞானியாகிறான்..

         தன்குறைகளை அறிந்து கொள்பவன், எந்த அளவிற்கு ஆழ்ந்து தீவிரமாகத் தன்னை திருத்திக் கொள்ள முயல்கின்றானோ அதற்கேற்ப திருந்துகின்ற சூழலும் வாய்ப்பும் ஏற்படும். அறிவினர்ச் சேர்க்கையும் உண்டாகும். தன்குறைகள் தனக்கே தெரிய ஆரம்பிப்பதும், தன்னைத் திருத்திக் கொள்ள முயற்சிப்பதுமே அறிவிற்கு ஏற்படுகின்ற தெளிவினால்தான் சாத்தியமாகின்றது. இயற்கையே ஆதிநிலையில் பேரறிவாக இருந்தது,   மனித அறிவாக தன்னையே உணர்ந்து கொண்டு மகிழ்வதற்காக மலர்ந்துள்ளது.

         ஆனால் தனது பயணத்தில் பரிணாமக் கசடுகளைச்(பரிணாமக் கசடுகள் பற்றித் தனித்தலைப்பில் வேறோரு நாள் அறிவிற்கு விருந்து படைப்போம்.) சுமந்து கொண்டு வந்துவிட்டது மனித அறிவு. அந்த பரிணாமக் கசடுகள்தான் மனிதனிடம் குற்றங்குறைகளாக உள்ளன. ”எது எதுவாக இருந்தாலும் அது அதுவாக இல்லையோ அதுதான் மனம் என்கின்ற ஆதங்கப் புதிரை இன்னமும் கொண்டதாகவே உள்ளது மனித மனம்.

       ஆகவே மனிதனுக்கு தன் குறையை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொள்ளும் ஆர்வம் வந்து விட்டால் எல்லாம் வல்ல இயற்கையே திருந்துகின்ற சூழலையும், நிகழ்ச்சிகளையும் ஏற்படுத்துகின்றது. அந்த இயற்கையின் ஏற்பாடுதான் — அவ்வையார் கூறும் அறிவினரின் அல்லது தன்னை உணர்ந்த குருவின் சேர்க்கையும், பிறகு அறிவினரைக் கனவிலும் நனவிலும் காண்பதில் இன்பம் கண்டு பிறவிப் பயனை இப்பிறவியிலேயே அடைதலும்.

        பொதுவாக ஞானம் தேடுவதை யாரும் விரும்புவதில்லை. ஏனெனில் ஞானம் தேடி ஞானியாகிவிட்டால் குடும்பத்தை விட்டு வெளியேறிவிடவேண்டும் என்கின்ற தவறானக் கருத்து நிலவி வருகின்றது. ஞானம், தேடிப் பெறுவதன்று. அறிவு தனக்கு ஏற்படுத்திக் கொள்கின்ற முழுமையானத் தெளிவே ஞானம். அறிவு மேலும் மேலும் தெளிவு அடையும்போது, அறிவின் குறைகள் படிப்படியாக நீங்குதல் ஏற்படும். எனவே ஞானம் என்பது குறைகள் நீங்கிய அறிவின் நிலை என்றுதானே பொருளாகின்றது. ஞானம் என்பது அறிவின் ஒளியாகும். எப்படி? இருட்டில் இருக்கும் அறிவிற்கு ஞானம் ஒளியைத் தருகின்றது. அறிவொளியே ஞானம்.

        ஞானம் என்கின்ற சொல்லின் பொருளென்ன?

    o    ஞானம் என்பது அனைத்தும் அறிந்த நிலை,

    o    முழுமையான அறிவு என்பதனைக் குறிக்கின்றது.

    அனைத்தும் அறிந்த நிலை என்றால் அறிவிற்கு குழப்பம், சந்தேகம் முதலியவை நீங்கி ஏற்படும் துலக்கம் என்று பொருள். அதாவது ஞானம் எனில் தெளிவு என்று பொருள்.

    முழுமையான அறிவு என்றால் அறியாமை, அலட்சியம், உணர்ச்சி வயம் ஆகிய குறைகள் நீங்கிய நிலை. மனித அறிவு ஞானம் ஏற்படுவதற்கு முன்னர் குறைவுடைய அறிவாக இருக்கின்றது. ஆதலால்தான் மனவளக்கலையின் இறுதிப்பயன் அறிவின் முழுமைப் பேறு என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள். ஞானம் என்பது பற்றி   மகா கவி பாரதியார், மற்றும் அவருக்கு இளையவரான வேதாத்திரி மகரிஷி அவா்கள் ஞானம் பற்றிக் கூறுவதையும் பார்ப்போம்.

       மகா கவி பாரதியார் தெளிந்த நல்லறிவை ஞானம் என்கிறார். தெய்வப்பாடல்கள் வரிசையில், ஒருபாடலில்         “தெளிந்த நல்லறிவு வேண்டும்“ என தெய்வத்தை வேண்டச் சொல்கிறார்.   அப்பாடலை நினைவுபடுத்திக் கொள்வோம்.

                                           அன்னையை வேண்டுதல்

                                           ”எண்ணிய முடிதல் வேண்டும்

                                               நல்லவை எண்ணல் வேண்டும்;

                                            திண்ணிய நெஞ்சம் வேண்டும்;

                                              தெளிந்தநல் லறிவு வேண்டும்;

                                            பண்ணிய பாவ மெல்லாம்

                                              பரிதிமுன் பனிபோல,

                                            நண்ணிய நின்முன் இங்கு

                                              நசித்திடல் வேண்டும் அன்னாய்.” , , , , , மகா கவி பாரதியார்.

     எதற்காகத் தெளிந்த நல்லறிவை கேட்கச் சொல்கிறார் மகா கவி? பாவங்களை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே ”என்னுடைய பாவங்களைப் போக்கிட வேண்டும்” என இறையை மீண்டும் மீண்டும் வேண்டுவது என்பது அறி்வின் மடமையன்றோ. செய்த பாவத்திற்கான பாதிப்புகள் தனக்கும் சமுதாயத்திற்கும் வந்து கொண்டே இருக்குமல்லவா? பாவங்கள் செய்யாத தெளிந்த நிலைக்கு அறிவு உயர்ந்து விட்டால் பாவத்தின் விளைவுகளான தீமைகள் தனக்கும் சமுதாயத்திற்கும் நிகழாமல் இருக்கு மல்லவ?. பாவங்கள் செய்யாத நிலைக்கு உயர்ந்த அறிவு நல்லறிவுதானே. நல்லறிவில் தெளிவும் சேர்ந்து விட்டால் எவ்வளவு நலன் பயப்பதாக இருக்கும். எனவே தெளிந்த நல்லறிவை வேண்டச் சொல்கிறார் மகா கவி.

    நல்லவை எண்ணாததற்கு முன், தீயவைகளை எண்ணியபோது தான், பாவங்கள் வந்து சேர்ந்துள்ளன என்று அறிந்து கொள்வதற்கும், இனிமேல் நல்லவைகளையே எண்ண வேண்டும் என்று விரும்புவதற்கும், ஏற்கனவே செய்துள்ளப் பாவங்கள் நீங்க வேண்டும் என இறைவியை வேண்டுவது என்பது அறிவு தெளிந்தால்தான் சாத்தியமாகும். அந்த அறிவுத் தெளிதல் ஏற்பட்டு விட்டால் கெட்ட அறிவு நல்லறிவாக மாறிவிடும். தெளிதல் ஏற்பட்ட நல்லறிவுதான் தெளிந்த நல்லறிவு எனப்படும்.       அதாவது தன்னிடமுள்ள குறைகளை அறிந்து கொள்வதற்கு தெளிந்த நல்லறிவு வேண்டும். அதனால்தான் தெளிந்த நல்லறிவை இறைவியிடம் வேண்டச் சொல்கிறார் பாரதியார். அடுத்ததாக வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஞானம் பற்றிக் கூறுவதனைச் சிந்தி்ப்போம். அவ்விருந்தை நாளை அருந்துவோம்.

                                                                                    . . . . .  நாளைத் தொடரும்

    Loading

  • ஆன்ம அலங்காரம் 3/3

    ஆன்ம அலங்காரம் 3/3

    வாழ்க மனித அறிவு                                                                  வளர்க மனித அறிவு

    நாள் – 10-11-2014

    ஆன்ம அலங்காரத்தை செயலுக்கு கொண்டு வரும் போது அலங்காரத்தின் நோக்கமான மகிழ்ச்சி வாழ்வில் நிறைவேறும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது ஆன்றோர் மொழி. அகத்தின் அழகு என்பது எதனைக் குறிக்கின்றது. அகம் என்றோலோ உள்ளே இருப்பது என்று பொருள். உள்ளே இருப்பதை எதனைக் குறிக்கின்றது? ஆன்மாவைத்தான் குறிக்கின்றது. ஆன்ம தூய்மைக்கு ஏற்பத்தான் உள்ளமும் இருக்கும் அந்த உள்ளத்தின் அழகு எப்படியோ அதுபோல்தான் முகமும். அதனால்தான், யாருடைய குழந்தையாக இருந்தாலும் எல்லோருக்கும் பிடிக்கின்றது. குழந்தையின் உள்ளம் களங்கமில்லாதது. எனவே அந்த அழகு முகத்தில் தெரிகின்றது.

    ஆன்ம அலங்காரம் என்பது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துவதாகும். கோயிலில் கடவுள் சிலைக்குக்குச் செய்யும் அலங்காரம்கூட மறுநாள் கலைக்கப்பட்டுவிடும். ஆனால் ஆன்மா அலங்காரத்தில் ஒவ்வொரு நாளும் செய்யப்படும் அலங்காரம் கலையாமல் மேலும் மேலும் ஆன்மாவிற்கு அழகைக் கூட்டிக் கொண்டே இருக்கும். ஆன்மா தூய்மை அடைந்து கொண்டே இருக்கும்.

    ஆன்ம அலங்காரம் என்பது ஏற்கனவே பதிந்துள்ள பாவப்பதிவுகள் செயலற்றுப் போக, பாவப்பதிவுகளைப் போக்கும் வழிகளான பிராயச்சித்தம், மேல்பதிவு செய்தல், பாவப்பதிவுகளை முறிவு அல்லது சமன் செய்தல் ஆகியவற்றின் மூலம் ஆன்மாவைத் தூய்மைப் படுத்தி அலங்கரிக்க முடியும். ஆன்ம அலங்காரமே தான் ஆன்மதூய்மை, மனத்தூய்மை என்பது. அப்படி இருக்க ஏன் புதிதாக ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரைச் சேர்க்க வேண்டும்.

    மெய்ஞானமும் விஞ்ஞானமும் இன்னும் முழுமையாக இணைக்கப்படவில்லை. விஞ்ஞானத்தில் மறை பொருள் இல்லை. ஆதலால் ஒன்றைப் பற்றித் தெரிவிக்க போதிய மொழி வளம் இருக்கின்றது. ஆனால் மெய்ஞானத்தில் ஒன்றைப் பற்றித் தெரிவிப்பது என்பது அவரது சொந்த அனுபவத்தைக் கொண்டுதான் சொல்ல வேண்டியுள்ளது. அப்போது தன் அனுபவத்தை பிறருக்குத் தெரிவிக்க உவமையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளது. சரியான சொற்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கின்றது. அப்போது மொழிவளம் தேவைப் படுகின்றது.

    ஒரு மொழிக்கு புதிய புதிய சொற்களையோ அல்லது சொற்றொடர்களையோ உருவாக்கித் தரும் போது அந்த மொழியின் வளம் அதிகமாகும். அந்த வகையில் தமிழ் மொழிக்கு, குறிப்பாக ஆன்மீகத் தமிழில் மறை பொருட்களைப் பற்றியப் புரிதலை தெளிவாக ஏற்படுத்துவதற்கு, கருமையம், உயிரறிவு, காந்தத் தன்மாற்றம் தன்னிருக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல், சீவகாந்தம், தெய்வீக நீதி மன்றம், உயிரின் படர்க்கை நிலை போன்ற சொற்களையும், சொற்றொடா்களையும் வேதாத்திரியம் தந்துள்ளது.

    இறை உணர் ஆன்மீகத்தில் மறைபொருள் கருத்துக்களைத் தெளிவாகத் தெரிவிக்க புதிய புதிய சொற்கள் தேவைப்படுகின்றன. (That is to say, more vocabulary is needed in spiritual language ) அந்த வகையிலே ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரைச் சேர்த்துக் கொள்வோம்.

    இச்சமுதாயத்தில் வறண்டு போன அறனை வலியுறுத்த வந்த, பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவதரித்த வேதாத்திரி மகரிஷியின் மனாசீக குருவான முதல் நூற்றாண்டில் அவதரித்த திருவள்ளுவர் கூறும்

    ”மனத்துக்கண் மாசிலன் ஆதல்; அனைத்து அறன்;
    ஆகுல நீர பிற.”
    என்கின்ற மனத்தூய்மையைப் பெற ஆன்மாவை அலங்காரம் செய்து அழகு பார்ப்போம்.    இத்துடன் ஆன்ம அலங்காரம் முற்றும்.

    வாழ்க மனித அறிவு,  வளர்க மனித அறிவு.
    வாழ்க அறிவுச் செல்வம். வளா்க அறிவுச் செல்வம்.

    * * * *

    வாழ்க அறிவுச் செல்வம்                                                      வளா்க அறிவுச் செல்வம்

    Loading

  • ஆன்ம அலங்காரம் 2/3

    ஆன்ம அலங்காரம் 2/3

    வாழ்க மனித அறிவு                                                                          வளர்க மனித அறிவு

                          நாள் – 09-11-2014                              

         ஆன்மாவைப் பற்றி அறிந்து கொள்வோம். ஒருவரைப் பற்றி எடுத்துரைக்கும்போது ’அவர் நல்ல மனிதர்’ என்று சொல்வோம். இன்னும் அவரது நற்குணங்களை உண்மையாகப் போற்றிச் சொல்வதற்கு ’அவர் ஒரு நல்ல ஆத்மா/ஆன்மா’ என்பது வழக்கம். இக்கூற்றில் முதலாவதாக ”அவர் ஆன்மா” என்கின்ற ஒன்று உறுதி படுத்தப்படுகின்றது. அவரை நல்ல மனிதர் என்பதனை எதை வைத்துச் சொல்கிறோம்? அவரது நற்குணங்கள் மற்றும் பண்புகளை வைத்து அவரை நல்ல மனிதர் என்கிறோம். அவரது நற்குணங்கள் அவரது ஆன்மாவில் பதிந்து அவரது ஆன்மாவை அலங்கரித்திருக்கின்றது. அந்த ஆன்ம அலங்காரத்தால்தான், அழகின் இலக்கணமான, மனிதனுக்கேற்ற குணங்கள், மனிதனுக்குத் தகுதியானத் தன்மை, மற்றும் ஒழுக்க முறை ஆகியவைகள் அவரிடமிருந்து வெளிப்படுவதால் அவருடைய ஆன்மா அழகுருகின்றது. எனவேதான் அந்த நல்லவரை நல்ல ஆத்மா/ஆன்மா என்கிறோம்.

        ஆத்மா/ஆன்மா என்பது என்ன? இதற்கு முதலில் உயிர் என்பது என்ன என்று அறிந்து கெள்ள வேண்டும். உயிரை இதுவரை யாரும் பார்த்ததில்லை. ஆனால் உயிரை உணர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இறைஉணர் அல்லது ஆன்ம உணர் ஆன்மீகத்தில், உயிர் மேல் மனம் வைத்து அகத்தவ வழிபாட்டை மேற்கொள்பவா்கள் உயிரை உணர்ந்திருக்கிறார்கள். ஆன்மாவை அறியமுடியாத ஆன்மிகம் ஆன்மிகமாகுமா? வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மிகத்தின் நோக்கம், மனிதன் உயிரறிவைப் பெறுதலேயாகும். அதாவது ஆன்மாவைத் தெரிந்து கொள்ளுதலாகும். உயிரின் மூலம், அதன்நிலை, உயிரின் முடிவு, அதன் முக்கியத்துவம் ஆகியவைகளைத் தெரிந்து கொள்வது உயிரறிவாகும். ஆன்மாவிற்கும் உயிருக்கும் தொடர்பு ஏதேனும் உள்ளதா என்றால் உள்ளது என்பதுதான் பதில்.

        உயிர் என்றாலே கண்களுக்குத் தெரியாத ஒன்று. கண்களால் பார்க்க முடியாத நுண்ணிய பொருள்தான் உயிர். உயிர் அணுதரிசினியாலும்(microscope) பார்க்க முடியாது, உயிரை எவ்வாறு ஆற்றல் என்று சொல்ல முடியும்? உடல் ஒர் இயந்திரம். பொதுவாக எந்த இயந்திரமும் இயங்குவதற்கு ஆற்றல் தேவையிருப்பது போல் உடலாகிய இயந்திரம் இயங்குவதற்கும் ஆற்றல் தேவை. அந்த காந்த ஆற்றலைக் கொடுப்பது உயிர்தான்.

        எவ்வாறு உயிர் காந்த ஆற்றலைத் தருகின்றது. எவ்வாறு என்பதனை பிரிதொரு சமயத்தில் பார்ப்போம். அந்த காந்த ஆற்றல் சீவனுடைய  உடலில் இருப்பதால் சீவகாந்தம் எனப்படுகின்றது. சீவ காந்த ஆற்றல் தான் உடலியக்கத்திற்கு ஆற்றலாகச் செலவழிக்கப்படுகின்றது.  இரத்தம் உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தாலும் அதற்கு இதயம் மையமாக இருப்பது போன்று, சீவகாந்தம் உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தாலும் அது ஒரு மையத்தைக் கொண்டிருக்கும். அங்கு சீவ காந்தம் அடர்த்தியாக இருக்கும். அந்த அடர்த்தி பெற்ற சீவகாந்தம் தான் ஆன்மா என்பது.   இதன் சிறப்பபைப் பார்ப்போம்.

         இப்பிரபஞ்சத்தில் அலை இயக்கம் நடந்து கொண்டே இருக்கின்றது. இயற்கையின் திறன்களில் பதிதல்(recording) என்னும் நிகழ்வு மிகவும் சிறப்பானது. இந்த பதிதல் திறன் மட்டும் இல்லாதிருந்தால் உயரினப் பரிணாமமே ஏற்பட்டிருக்காது. ஒன்றிலிருந்து தரம் மாற்றம் ஏற்படுவதே இந்த பதிதல் நிகழ்ச்சியால்தான். இதனைப்பற்றி வேறொரு சமயத்தில் சிந்திப்போம். பதிதலுக்கு ஒர் ஊடகம்(medium) தேவை. அந்த ஊடகம் தான் காந்தம். இயற்கையாக நடக்கும் பதிதல் நிகழ்ச்சிக்கும் சரி அல்லது மனிதனால் செயற்கையாக நடக்கின்ற பதிதல் நிகழ்ச்சிக்கும் சரி காந்தம் தான் ஊடகமாக இருக்கின்றது. உதாரணத்திற்கு, ஒலி-ஒளி நாடாவில்(video tape) பிளாஸ்டிக் நாடாவில் காந்தப் பூச்சு (magnetic coating) தான் உள்ளது. இப்பிரபஞ்சத்தில் எது நடந்தாலும் பதிதல் இல்லாமல் இல்லை.

       ஆகவே இயற்கை மனிதனில் நடக்கும் எண்ணம், சொல். செயல் ஆகிய முத்தொழிலையும் பதிவு செய்யும் ஒரு மறை காந்த குறுந்தகடுதான் இந்த ஆன்மா. அது என்ன மறை காந்த குறுந்ததகடு? அது கண்களுக்குப் புலப்படாது மறைந்துள்ளதால் அதற்கு மறை என்கின்ற அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது. மனிதன் பதிவு செய்யும் குறுந்தகட்டில் உள்ளதை அவன் விரும்பும் போது அதனை அதற்குரிய சாதனத்தின்(deck) வழியாக பதிவு செய்ததை பார்க்கலாம் அல்லது கேட்கலாம்.

       ஆன்மாவாகிய மறை குறுந்தகட்டில் உள்ள பதிவுகள் அவ்வப்போது எண்ணங்களாகவும் வருகின்றன. அதே சமயத்தில் செயல்விளைவு விஞ்ஞானத்தின் படி ஆன்ம — குறுந்தகட்டில் உள்ள பதிவுகளின் படி, எங்கும் பேரறிவு இருப்பதால் அவ்வப்போது விளைவுகளையும் கொடுக்கும். பதிவுகளின் தன்மை மற்றும் தரத்தைப் பொருத்து விளைவுகள் நல்லதாகவும் இருக்கலாம். அல்லது தீயதாகவும் இருக்கலாம். இந்த ஆன்ம – குறுந்தகட்டில் உள்ள பதிவுகள் தான் தன்னுடைய வம்சாவளி ஆன்ம – குறுந்தகட்டிலும் பதிகின்றது. ஆகவே நல்வாழ்வு வாழ்வதற்கு ஆன்மதூய்மை அவசியமாகின்றது. ஆகவேதான் வம்சாவளியின் ஆன்மா பெற்றோர்களின் செராக்ஸ் நகல் எனப்படுகின்றது. அதாவது குழந்தைகள், பெற்றோர்களின் செராக்ஸ் நகல் என்கிறார் வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

        இந்த ஆன்மாவின் விளக்கத்தை வைத்து ஓரளவிற்கு ஆன்மா அலங்காரம் என்பது என்ன என்று யூகிக்க முடிகின்றதல்லவா? ஆன்ம அலங்காரம் என்பது ஆன்ம தூய்மை என்கின்ற சொற்றொடராலும் அழைக்கப்படுகின்றது என்பது தெரிய வருகின்றது. அப்படி இருக்கும் போது ஆன்ம தூய்மையை ஏன் ஆன்ம அலங்காரம் என்கின்ற சொற்றொடரால் அழைக்க வேண்டும். தூய்மை என்பது சாதாரணமாக எல்லோருக்கும்              தெரிந்த ஒன்று. . ஆனால் அலங்காரம் என்கின்ற சொல் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் தெரிவிக்கின்றது. இது ஒரு catchy phrase.   இந்த சொற்றொடர் ஆரம்பத்திலேயே, அதாவது கேட்பதற்கே இதமாக உள்ளது. அதாவது அச் சொற்றொடரே அலங்காரச் சொற்றொடராக உள்ளது.

                                                                        சிந்தனையை நாளைத் தொடர்வோம்   . . . . .

     

     

                                                                                                                

     

    Loading