admin

Author Archives

  • 66-இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

    இதுவரை,  பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

    FFC- 66 (5/?)

    18-03-2015 – புதன்

    வள்ளலார் அவர்களின் ஆன்மா, மகரிஷி அவர்களின் பூதஉடலுக்குள் பிரவேசம் செய்வதற்கு முன்னரே, மகரிஷி அவர்கள் இறை உணர்வு பெற்றிருக்கலாம் எனத் தெரிவதாக ஆராய்ந்தோம். ஏன் மகரிஷி அவர்கள் இறை உணர்வு பெறுவதற்கு முன்னரே, வள்ளலார் அவர்கள், மகரிஷி அவர்களின் பூத உடலில் பிரவேசம் செய்து, இறை உணர்வு பெறுவதற்கும் உதவியிருக்கலாமே என்கின்ற ஐயம் எழலாம் என்பதோடு சென்ற அறிவிற்கு விருந்தை முடித்திருந்தோம். இப்போது அங்கிருந்து தொடர்வோம்.
    “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்று அருளாளர்களின் அருளனுபவம் தெரிவிப்பது போல், எப்போது, எந்த ஆன்மீக சாதகரை, எந்நிலையில் தடுத்தாட்கொள்ள வேண்டும் என்பது இறையின் திருவுள விருப்பம் என்பதால், வள்ளலார் அவர்களை, மகரிஷி அவர்கள் இறை உணர்வு பெற்ற பிறகு, அவரது பூதஉடலில் பிரவேசிக்கச் செய்திருக்கலாம்.
    மேலும், இறை உணர்வு பெற்று விட்டதுடன்/விடுவதுடன் பிறவியின் நோக்கம் முடிவடைந்து விட்டது ஆகாது. வள்ளுவரின் வாயிலாக, இறை விரும்பி, மொழிந்துள்ளவற்றைக் கவனத்தில் கொண்டவர்; திருவள்ளுவரை சாதுரியமாக, மானசீக குருவாக்கிக் கொண்ட மகரிஷி அவர்கள்.
    சிறு வயதிலிருந்தே மகரிஷி அவா்களிடம் எழுந்த ‘மகானாக்கும் நான்கு மகோன்னத கேள்விகளுக்கு’ (அறிவிற்கு விருந்தில் ஏற்கனவே, 18-11-2014 முதல் 25-11-2014 வரை இது பற்றி சிந்தித்து இருக்கிறோம்) விடைகள் கிடைத்தாகி விட்டன. பொருள் வறுமை, ஒழுக்க வறுமை, அறஉணர்வின் வறுமை, மொத்தத்தில் மனித நேய வறுமை(அன்பின் வறுமை) ஆகிய எல்லா வறுமைகளுக்கும் காரணமான அறிவின் வறுமையால் வாடும் இந்த மனித குலத்தினை, ‘அறிவின் இருப்பிடம் அறியும் ஆன்மீகத்தால்’ மட்டுமே உய்விக்க முடியும் எனக் கண்டறிந்தவா் மகரிஷி அவர்கள். ஆகவே, மகரிஷி அவர்கள் தன்னை உலக நலத் தொண்டனாக்கி, உலக சமுதாயத்திற்கு சேவை புரிய வேண்டும் என்ற மகோன்னத எண்ணத்திற்கு, உறுதுணையாக இருக்க பல அருளாளர்களை அனுப்பி வைத்தது இயற்கை. அந்த வகையில், மகரிஷி அவர்கள் இறைதத்துவத்தில் தெளிவினும் தெளிவு அடைந்த பின்னர், அறிவுத் தொண்டு புரிய மகரிஷி அவர்களுக்குத் தானே -உறுதுணையாக இருப்பதற்கும், இராமலிங்க வள்ளலார் அவர்களின் வழியாக வந்தது இறை.
    தேர்வு எழுதியதும் விடைத்தாள்களை திருத்தி மதிப்பெண்கள் வழங்கி, அறிவிக்கப்பட்ட தினத்தில் முடிவு(Result) தெரிவிப்பதுபோல், ‘இறை உணர்வு’ என்பது, நீண்ட நாள் பயிற்சியில், திட்டமிட்டு ஒரு நாள் நடக்கும் நிகழ்வு அன்று. அறிவிற்கு தொடர்ந்து தெளிவு ஏற்பட, ஏற்பட, ஒரு கணப்பொழுதில் (momentarily) ஏற்பட்டுவிடும்/ஏற்படக்கூடிய நிகழ்வு. இறை உணர்வு என்பது அறிவிற்கு ஏற்படவேண்டிய இறுதியான, உறுதியான தெளிவு. கல்வித் தேர்வில் தோ்ச்சி பெற்றதும், அந்தப்படிப்பு முடிந்து விடுவது போன்றதல்ல இறை உணர்வில் தேர்ச்சி பெறுவது என்பது. இறை உணர்விற்குப் பின்னர்தான், இறை உணர்வு பெற்றவரின் வாழ்க்கையே முக்கியத்துவம் பெறுகின்றது. குறள் எண் 236 ல் உள்ள ‘புகழொடு தோன்றுக’ படலமும், ‘உயா்புகழ் பெறுவதற்கான’ படலமும் ஆரம்பிக்க உள்ளது.
    இறை உணர்வு பெற்றவரின் தாய், தந்தையா் கொடுத்துள்ள கருமையப் பதிவுகளுடன், தான் இந்த பிறவியில் எண்ணி, சேர்த்து வைத்துள்ள வினைப்பதிவுகளின் படி, அவர்கள் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கிணங்க இந்த சமுதாயத்திற்கு அருள் நிறைந்த அறிவுத் தொண்டு செய்கின்ற படலம் ஆரம்பிக்கின்றது. மகரிஷி அவர்கள் இறை உணர்வு பெற்ற பிறகுதான், வள்ளலார் அவர்கள், மகரிஷி அவர்களின் பூதஉடலில் பிரவேசித்ததாகத் தெரிகின்றது. ஆகவே, இறை உணர்வு பெற்ற மகரிஷி அவர்கள், அதன் பிறகு (post enlightenment period) சமுதாயத்திற்கு இன்றியமையாத் தேவையான அறிவுத் தொண்டு ஆற்றுவதற்கு, வள்ளலார் அவர்கள் பெருமளவில் உறுதுணையாக இருந்திருக்கிறார் எனத்தெரிகின்றது.
    இறை, 1330 குறட்பாக்களின் வாயிலாக தன் விருப்பங்களையும், எண்ணங்களையும் தெரிவித்துள்ளதில், 236 ஆவது குறளில் உள்ள இறையின் விருப்பம் என்ன? அக்குறளை நினைவுக்குக் கொண்டு வருவோம்.
    “தோன்றின் புகழொடு தோன்றுக; அஃது இலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று” …. குறள் எண் 236
    இக்குறளுக்கு இரண்டுவிதங்களில் கருத்து கூறப்படுகின்றது.

    1) மக்களாய் பிறந்தவர் புகழுக்குக் காரணமான குணத்தோடு பிறக்க வேண்டும். அக்குணம் இல்லாதவர் பிறக்காமல் இருப்பதே நல்லது என்பதாகும்.
    2) ஒரு துறையில்(சபையில்) முற்பட்டுத் தோன்றுவதானால் புகழொடு தோன்ற வேண்டும். அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்கு தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.
    முதல் கருத்து — ஒரு மனிதன் பிறப்பதற்குக் காரணம் அவனன்று. பிறப்பு என்பது வினைப்பயனை அனுபவிக்கும் தொடா் நிகழ்ச்சியாகும். அதனால் தான் ஒரு மகான் “வினைப்பயனே தேகம் கண்டாய்” என்கிறார். இதே கருத்தினைக் கூறும் மகரிஷி அவர்களின் பாடலின் சில வரிகளை நினைவு கூர்வோம்.

    FFC-66-பேரின்ப-ஊற்று

    பெற்றோர்களே ஒரு மனிதன் பிறப்பதற்குக் காரணிகளாவர். அந்தப் பெற்றோர்கள் பிறப்பதற்கு அவர்களுடைய பெற்றோர்கள் காரணிகளாவர். ஆகவே பிறந்தால், புகழுக்குக் காரணமான குணத்தோடு பிறக்க வேண்டுமென்றால், அந்தப் புகழுக்குக் காரண குணத்தோடு குழந்தைப் பிறப்பதற்கு யார் காரணமாக அல்லது பொறுப்பாக இருக்க முடியும்? பிறந்த இந்தக் குழந்தையா காரணமாக இருக்க முடியும்? குழந்தையின் ‘புகழுக்குக் காரணமான குணத்திற்கு’ பெற்றோர்களின் குணம் காரணமாகின்றது. இவ்வாறிருப்பதினால், பிறந்த ஒவ்வொருவருமே ‘என் குணத்திற்குக் காரணம் என் பெற்றோர்கள் தான்’ எனச் சொல்லிக் கொண்டே, தான் திருந்துவதற்குப் பொறுப்பேற்காமல் வாழ்நாளை வாழாமல் கடத்தி விடக் கூடாது. அவ்வையார் கூறும் அரிதான மானுடப் பிறவி வீணாகிவிடுமன்றோ!
    WHO IS TO BELL THE CAT? இவ்வாறாக ஒவ்வொருவருமே ‘என் குணத்திற்குக் காரணம் என் பெற்றோர்கள்’ என சொல்லிக் கொண்டே, தன்னை இப்பிறவியிலேயேத் திருத்திக் கொள்கின்ற பொறுப்பை தட்டிக் கழித்தால் ‘யார் தான் பூனைக்கு மணி கட்டுவது?’ அதாவது, தொடா் நிகழ்ச்சியாகிய இந்த ஒரு பிறிவியிலாவது ஆன்மா, குருவை அடைந்து தன்னைத்திருத்திக் கொள்ளும் முயற்சியில் முனைப்போடு ஈடுபட்டு தன்னைத் திருத்திக் கொள்ள முற்படவேண்டாமா? மனிதன் மனிதனாக வாழவேண்டாமா? மனிதன் தன்னிடம் உள்ள தெய்வீக மொட்டை மலரச் செய்து, மணம் வீசச் செய்து, தானும் வாழ்வாங்கு வாழ்ந்து உலக சமுதாயத்தையும் உய்விக்க ஆவன எண்ண வேண்டாமா? ஆவன செய்ய வேண்டாமா?
    வினைப்பதிவுகளோடுப் பிறந்த மனிதனுக்குத் திருத்தம் வேண்டியிருப்பதால், இப்பிறவியிலேயே அவன் திருந்தவும் வேண்டும். திருந்திய பிறகு, அவ்வழியை சமுதாயத்திற்குத் தெரிவித்து, வழிகாட்டும் அறிவுத் தொண்டினையும் ஆற்ற வேண்டும். இப்படி தொண்டாற்றுபவர்களை எதிர்பார்த்தே, தோன்றினால் புகழொடு தோன்றுக என்கின்றது இறை.
    1) ‘புகழுக்குக் காரணமான’ குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்குமுன் தான் அந்தக் குணநிலையில் ஏற்றமடைவதற்கான காலமும், வாய்ப்பும் வந்துவிட்டது.
    2) அந்த குணநிலையில் இல்லாத பெற்றோர்களுக்குப், பிறந்த குழந்தை, தான் வாழும் காலத்திலேயே ‘புகழுக்குக் காரணமான குணத்தை’ப் பெறுவதற்கும் வழி பிறந்துவிட்டது.
    3) புகழுக்குக் காரணமான குணத்தை எடுத்துச் சொல்லி வழிகாட்டும், அறிவுத்தொண்டு செய்யவும் வழி பிறந்துவிட்டது.
    அதுதான் வாழ்வியல் கல்வியான மனவளக்கலையாகும்.
    குறளுக்கான இரண்டாவது கருத்தும் சரிதான். தான் பங்கேற்கும் ஒரு சபை நிகழ்ச்சியில் பங்கு கொள்ள நேர்ந்தால் அதற்குரிய சிறப்பில்லாமல் அங்கு பங்கு கொள்ளக் கூடாது என்கின்றது இரண்டாவது கருத்து. இது நியாயம் தானே? முதல் கருத்தில் கவனம் கொண்டால் இரண்டாவது கருத்திற்கே இடமில்லை.
    ‘புகழுக்குரிய குணத்தை’ இப்பிறவியில் அடைவதே இறை உணர்வாகும். பின்னர் அதற்கு இலக்கணமாக, ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதனை செயலுக்குக் கொண்டுவருவதே அறிவுத்தொண்டாகும். எனவே, இறை உணர்வு பெற்றவருக்கு, இறையின் 236 வது விருப்பத்திற்கிணங்க, இந்த சமுதாயம் உய்வதற்கான அறிவுத் தொண்டினை செய்வதற்கான படலம் காத்துக் கொண்டிருக்கின்றது.
    வள்ளலார் வாழ்ந்த காலத்தில் மகரிஷி அவர்கள் அவதரிக்கவில்லை. வள்ளலார் அவர்கள் அருட்பெருஞ்ஜோதியான (1874) பிறகுதான் 1911 ல் மகரிஷி அவர்கள் அவதரித்துள்ளார். வள்ளலார் அவர்கள் அருட்பெருஞ்ஜோதியான இடம் வடலூர். மகரிஷி அவா்கள் பிறந்து வாழ்ந்த இடம் கூடுவாஞ்சேரி. தாயுமானவர், திருவள்ளுவர், திருமூலர் ஆகியவர்களை நினைந்திருக்கிறார் மகரிஷி அவர்கள். இருப்பினும், வள்ளலார் அவர்கள் மகரிஷி அவர்களின் உடலில் தங்கி அருட்தொண்டாற்றியது வள்ளலாரின் விருப்பமாகத்தான் தெரிகின்றது.
    சுமார் 80 வருடங்களுக்குப் பிறகு, பொருத்தமான, சரியான ஆன்மாவை அடையாளங்கண்டு, முன்பின் தெரியாத மகரிஷி அவர்களின் பூதஉடலில் பிரவேசம் செய்துள்ளார். வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாவதற்கு முன்னர் இச்சமுதாயத்திற்கு உறுதிமொழிகளை இறையின் சார்பாகக் கொடுத்துள்ளார். எல்லா உடம்பிலும் புகுந்து கொண்டு, திருத்திடுவோம் என்றும், அகவினத்தாருக்குச் சாகா வரமும், ஏனையோர்க்கு பரிபாக நிலையும் அளிப்பதாக உறுதி கூறியுள்ளார். ஆகவே மகரிஷி அவர்கள் ஆற்றவேண்டிய அருட்தொண்டிற்கெல்லாம் உதவியாக இருக்கவேண்டும் என எண்ணி மகரிஷி அவர்களைத் தேடி வந்திருக்கிறார். மகரிஷி அவர்களிடம் வருவதற்கு முன்னர் இருந்த எண்பது ஆண்டுகளில் அவர் எந்தெந்த அருளாளர்களிடம் தங்கி இருந்து அருள்பாலித்தார் என்றோ அல்லது அவ்வப்போது வழிகாட்டி வந்தார் என்பதோ தெரியவில்லை. ஆனால் நாமும், இனிவரும் உலக சந்ததியெல்லாம் பயன் பெறுவதற்காக, நம்குருதேவரிடம் பத்து வருடங்கள் இருந்து அருள் பாலித்துள்ளார். அந்த பத்து ஆண்டு காலத்துக்குள், எழுதிய கட்டுரைகள், கவிகள் அனைத்தும் தத்துவ மயமாக இருந்தது என்று மகரிஷி அவர்களே கூறுகிறார்கள். வள்ளலார் அவர்கள், தான் எண்ணி, ஆனால், தன் சொந்த உடல் மூலம், முடிக்காமல் விட்டுவைத்த செயல்களையெல்லாம், மகரிஷி அவர்களின் உடல் வழியாக முடித்தார் என்று, தான் எண்ணுவதாக மகரிஷி அவர்கள் தன் வாழ்க்கை விளக்கத்தில் கூறியுள்ளார். வள்ளலார் பல சந்தர்ப்பங்களில், தன்னோடு இருந்து வழிகாட்டி செயலாற்றினார் என்று மகரிஷி அவர்களே கூறுகிறார்கள். இவ்வனுபவத்தைத் தெரிவிக்கும் பாடலை நினைவு கூர்வோம்.

    FFC-65-வள்ளலார்-என்று-15-03-2015

    மனித குலம் உய்வதற்காக செய்ய வேண்டிய தொண்டில், வள்ளலார் அவர்கள் மகரிஷி அவர்களுக்கு, பேருதவியாக இருந்திருக்கிறார். மேலும் எந்தெந்தச் செயலை செய்யச் சொன்னாரோ, அதனை நன்று எனக்கருதி செய்து முடிப்பதை பேறாகக் கருதினார் மகரிஷி அவர்கள். ஆகவே இவர் அருட்தொண்டை சிறப்பாக செய்து முடித்துக்கொண்டு வருவதை அறிந்த மற்ற நல்லறிஞர் பலர் மற்றும் கொடையாளர்கள், அவருக்கு நட்பை அளித்து உதவியிருந்ததை இப்பாடலில் கூறுகிறார் மகரிஷி அவர்கள்.
    குருவணக்கப்பாடலில் “அவ்வறிவில் ஆழ்ந்து ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்” என்று வள்ளலாரை நினைவு கூர்கிறார். அவ்வறிவு என்றால் எவ்வறிவு? பேரறிவில் ஆழ்ந்து ஆனந்தக் கவியாத்தார். மகரிஷி அவர்கள் எப்போது முதல் கவி எழுதினார் என்று தெரியவில்லை. ஆனால் மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து எனும் நூலின் மூலம், அவர் 1953 லிருந்து கவிகள் எழுத ஆரம்பித்திருக்கலாம் எனத் தெரிகின்றது. இங்கே ஓர் ஒற்றுமைத் தெரியவருகின்றது. வள்ளலார் அவர்கள், மகரிஷி அவர்களின் பூதஉடலில் பிரவேசம் செய்த ஆண்டு 1953 ஆக இருக்கலாம். வள்ளலார் அவர்கள் மகரிஷி அவர்களின் பூதஉடலில் பிரவேசித்ததிலிருந்து பத்து வருடத்துக்குள் எழுதிய கட்டுரைகள், பாடல்கள் எல்லாம் தத்துவமயம் எனக் கூறியதிலிருந்தும், ஆனந்தக் கவியாத்தார் என்று குருவணக்கப்பாடலில் கூறியுள்ளதிலிருந்தும், 1953 லிருந்து மகரிஷி அவர்கள் எழுதிய பாடல்கள் வள்ளலாரே கூறியதாகவும் கொள்ளலாம். வள்ளலார் அவா்களின் அறிவாற்றலும், மகரிஷி அவர்களின் அறிவாற்றலும் அந்த ஒரே பேராற்றலின் அம்சங்கள் தானே! ஆகவே பூதஉடலை உதிர்த்த மகான்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்கின்ற வினாவிற்கான விடை இந்நிகழ்வுகளேயாகும். இந்த நான்கு அருளாளர்களைத் தவிர, வேறு எந்த அருளாளர்களாவது மகரிஷி அவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்களா என்பதனை அடுத்த விருந்தில்(22-03-2015 ஞாயிறு) பார்ப்போம். ………தொடரும்.

    Loading

  • சிந்திக்க வினாக்கள் – 55

    வாழ்க மனித அறிவு            வளர்க மனித அறிவு

     

    16-03-2015 – திங்கள்

    வாழ்க வளமுடன்.

         வீடுபேறு என்பதனை விளக்கவும்.   

         வானவர் என்பவர் யார்?     

         ஏன் அவர் வானவர் என அழைக்கப்படுகிறார்?

     

    வாழ்க மனித அறிவு            வளா்க மனித அறிவு

    Loading

  • 65 -இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

     

    இதுவரை, பூதவுடலை உதிர்த்த மகான்களின் நிலை என்ன? என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?

    FFC- 65 (4/?)

     

    15-03-2015 – ஞாயிறு

    சென்ற அறிவிற்கு விருந்தில் அகமே மெய்ப்பொருள் என்று உறுதிப் படுத்துவதற்கு மகரிஷி அவர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கக் கூடிய குறட்பாவைப் பார்த்தோம். இப்போது மெய்ப்பொருள்தான் அறிவு என்று உறுதிப் படுத்த, உறுதுணையாக இருந்திருக்கக் கூடிய குறட்பாக்களைக் கவனிப்போம்.

    அதிகாரம் – மெய்உணர்தல்

    “எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு” …குறள் எண்.355
    அதிகாரம் – அறிவு உடைமை
    “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.” … குறள் எண். 423

    அறிவைப்பற்றிக் கூறும் இரண்டு குறட்பாக்களின்(குறள் எண். 355. 423) வழியாக அறிஞர் திருவள்ளுவரின் அறிவாற்றலுக்குள் நுழைவோம். இரண்டு குறட்பாக்களுமே அறிவிற்கான இலக்கணத்தைக் கூறுகின்றன. மேலும், ‘அறிய வேண்டியதை அறிந்தால்தான் அது அறிவு’ என்கின்ற உண்மையை, வேதாத்திரியம் உறுதியுடன் தெளிவுபடுத்துவதற்குக் காரணமாக இருந்தது. திருவள்ளுவர் இயற்றிய இவ்விரண்டு குறட்பாக்களில் படர்ந்துள்ள அவரது அறிவாற்றல், அறிவு எவ்வாறு இருக்க வேண்டும் எனக் கூறுகின்றது.

    அடுத்ததாக மெய்ப்பொருளல்லவற்றை பொருள் எனக் கொள்வதால் துன்பம்தான் ஏற்படும் என்று கூறும் குறட்பாவைக் கவனிப்போம்.

    அதிகாரம் – மெய்உணர்தல்

    பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
    மருளான்ஆம் மாணாப் பிறப்பு. … குறள் எண். 351

    வேதாத்திரியத்தின் பல சிறப்புகளில் ஒன்று ‘பொருள் நிலை, நிகழ்ச்சி நிலை’ என்கின்றக் கண்டுபிடிப்பு. இக்கண்டுபிடிப்பால், வேதாந்தத்தில் கூறப்பட்டு வந்த “இவ்வுலகம் மாயை, கானல் நீரைப் போன்றது, இவ்வுலகம் கனவு போன்றது, கனவு எவ்வாறு நிஜமில்லையோ, அதுபோல் இவ்வுலகம் பொய்யானது” என்று பாமரனுக்குப் புரியாத புதிராக, நம்பமுடியாமல் இருந்து வந்த, ஆனால் இறையுணர்வு பெறுவதற்குத் தடையாக இருந்து வந்த ‘சரியானப்புரிதல் இல்லாத நிலையை’ நீக்கி, வேதாந்தக் கூற்றிற்குச் சரியான பார்வையைக் கொடுத்து, புரியவைத்து, ஆன்மீகத்தில் இருந்து வந்த அச்சத்தை நீக்குவதற்கு, 351 வது குறட்பாவில் உள்ள அறிஞர் திருவள்ளுவரின் அறிவாற்றல், 1911 க்குப் பிறகு உதவியாக இருந்திருக்கின்றது.

    இந்த நான்கு குறட்பாக்களிலுள்ள அறிவாற்றல் மட்டுமே மகரிஷி அவர்களின் தெளிவிற்கு தெளிவு சேர்த்ததாகக் கொள்ள முடியாது. ஐம்பது குறட்பாக்களுக்கு உட்பொருள் விளக்கம் எழுதியுள்ளார் மகரிஷி அவர்கள். திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியுள்ளார்கள். ஆனால் எவ்வாறு ‘பொருள், மெய்ப்பொருள்’ என்று இரண்டு உள்ளதோ அதுபோல் திருக்குறளுக்கும் ‘பொருள், உட்பொருள்’ என இரண்டு தேவையிருப்பதால், மகரிஷி அவர்கள் உட்பொருள் விளக்கம் எழுதியுள்ளார். ‘உட்பொருள்’ என்றால் வெளிப்படையாக அல்லது மேலோட்டமாகத் தெரியாத பொருள் என்று பொருள். ஆழ்ந்து உள்ளே சென்று பொருள் அறியப்படுவதால் அது உட்பொருள் எனப்படுகின்றது.

    அந்த ஐம்பது குறட்பாக்களுக்கும் மேலோட்டமாக இல்லாமல், திருவள்ளுவர் இப்போது இருந்திருந்தால். அக்குறட்பாக்களுக்கு நேரிடையாக வாய் மொழியாக என்ன விளக்கம் கூறியிருப்பாரோ, சாக்ஷாத் அதனையே மகரிஷி அவர்கள் கூறியிருப்பதால் அதனை ‘உட்பொருள் விளக்கம்’ என்கிறார். அவர் கூறிய விளக்கம் அறிவுப்பூர்வமாக, ஏற்றுக் கொள்ளும்படி உள்ளது. ஆகவே திருவள்ளுவரின் அறிவாற்றல் மகரிஷி அவர்களுக்கு, உறுதுணையாக இருந்ததால், திருவள்ளுவரை குருவணக்கப் பாடலில் இரண்டாவதாக நினைவு கூர்கிறார்.

    அடுத்ததாக திருமந்திரம் அருளிய திருமூலரை வணங்குவோம். குருவணக்கப் பாடலில் “அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார் அறிஞர் திருமூலர்” என்று கூறி திருமூலரை வணங்குகிறார் மகரிஷி அவர்கள்.
    அறிவே தெய்வம் என்று கருத்தியலாக அறிந்து கொண்டால் மட்டும் போதுமா. மருத்துவப் படிப்பில் வெறும் கருத்தியல் பாடங்களை மட்டுமே படித்தால் போதுமா? உதாரணத்திற்கு, மருத்துவராக இருக்கும் மாணவர், இதயத்தை, படத்தின் (SKETCH) மூலமாகவோ அல்லது மாதிரி வடிவத்தின் (MODEL) மூலமாகவோ அறிந்து கொண்டால் மட்டுமே போதுமா? நேரிடையாக இதயத்தை பார்க்க வேண்டாமா? அதன் இயக்கத்தை அறிய வேண்டும். படித்ததை செய்முறை பயிற்சியின் வாயிலாக உறுதிபடுத்தி, அப்பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும்.

    அதுபோல் ‘அறிவே தெய்வம்’ என்று கருத்தியலாக அறிந்து விட்டவர், அறிவாகிய தெய்வத்தைக் கொண்டிருப்பதால், அன்றிலிருந்தே அவர் தெய்வப் பண்பு நிலைக்கு உயர்ந்து விட முடியுமா? முடியும் என்றால் ‘அறிவே தெய்வம்’ என்று அறியாததற்கு முன்பிருந்தே அவர் தெய்வப்பண்பு நிலையில் அல்லவா வாழ்ந்திருக்க வேண்டும். ஆகவே அறிவே தெய்வம் என்று கருத்தியலாக அறிந்து கொண்டாலும், அப்பயனை நடைமுறையில் அனுபவிக்க செய்முறைப் பயிற்சியில் அதனை உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் ‘அறிந்தது சிவம். மலர்ந்தது அன்பு’ என்கின்ற ஆன்றோர் மொழி செயலுக்கு வரும். இதுதான் மனிதகுலத்திற்குத் தேவையான ஒன்று.

    பேரறிவாக இருந்ததே உயிர்களாகி, கடைசியாக மனித அறிவாக வந்திருப்பதை அறிந்து கொண்டாலும், அறிந்து கொண்டதை உறுதிப்படுத்துவதற்கான, மனிதனை பண்புள்ளவனாக்க, அறிவை அறிவதற்கான செய்முறை–வழிமுறைகள் இருக்க வேண்டும்.

    கல்வித் தேர்வில், அப்பாடத்திட்டத்தில் மாணவர் என்ன தெரிந்து வைத்திருக்கிறாரோ அதனை மட்டும் கருத்தில் கொண்டு நூறு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றது. அங்கே மாணவரின் பண்பையோ ஒழுக்கத்தையோ கணக்கில் எடுத்துக் கொண்டு அப்பாடத்திற்கு மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை.

    மனவளக்கலையை ஒரு சாதனை மார்க்கமாக்கி, அதற்கான உளப்பயிற்சி முறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த முறைகள்தான் பல தவமுறைகளும், தற்சோதனையுமாகும். அதற்கான வழிகளைச் சொன்னவர் அறிஞர் திருமூலர் என்கிறார் மகரிஷி அவர்கள்.

    அறிஞர் திருமூலர், தான் இயற்றியுள்ள மூன்றாம் தந்திரத்தில் யோகத்தைப் பற்றிக் கூறியுள்ளார். இப்பாடல்களிலுள்ள அறிஞர் திருமூலரின் அறிவாற்றல், மகரிஷி அவர்கள் குண்டலினி யோகத்தை எளிய முறையில் வடிவமைக்க உதவியாக இருந்துள்ளதை நன்றியுடன், நினைந்து வணங்கி, அவரது அறிவாற்றலை குருவணக்கத்தின் போது பிரார்த்திக்கச் (INVOKE) சொல்லியிருக்கிறார்.

    அடுத்ததாக மகரிஷி அவர்கள் குருவணக்கப்பாடலில் நான்காவது அறிஞராக நினைவு கூர்வது அருட்பிரகாச வள்ளலார் அவர்கள். இது வரை கூறிய மூன்று அறிஞர் பெருமக்களும் மகரிஷி அவர்களுக்கு நேரிடையாகவோ, அதாவது, பூதஉடல் இருக்கும் போதோ, அல்லது பூதஉடலை உதிர்த்த பிறகு ஆன்மத் தொடர்பாகவோ உதவி செய்யவில்லை. அவர்கள் அருளியுள்ள பாடலில் படர்ந்துள்ள அறிவாற்றலே உதவியாக இருந்திருக்கின்றன. அதற்காகத்தானே இயற்கை, அருளாளர்களை, அருட்பாக்களை இயற்றச் செய்கின்றது. ஆனால் இவ்விரண்டிற்கும் மாறாக உள்ளது அருட்பிரகாச வள்ளலார் மகரிஷி அவர்களுக்கு உதவியது.

    அருட்பிரகாச வள்ளலார் பூத உடலை உதிர்த்த பிறகு, எண்பது வருடங்கள் சென்ற பிறகு, நேரிடையாக மகரிஷி அவர்களின் பூதஉடலுக்குள் பிரவேசம் செய்திருக்கிறார். 30-01-1874 அன்று வள்ளலார் அவர்கள் அருட் பெருஞ்ஜோதியானார். இது நடந்து (1953-1874=79) சுமார் எண்பது ஆண்டுகள் கழித்து மகரிஷி அவர்களின் பூத உடலுக்குள், மகரிஷி அவா்களின் அனுமதியுடனும், வள்ளலார் விரும்பியும் பிரவேசம் செய்துள்ளார். வள்ளலார் பத்து ஆண்டுகள் தன்னிடம் வசித்து(இருந்ததாக) வந்தார் என மகரிஷி அவர்களே கூறியுள்ளார். இந்த நிகழ்வு நடந்ததைக் கூர்ந்து கவனித்தால் வேறு பலவற்றையும் அறியலாம். மகரிஷி அவர்கள் 1953 ற்கு முன்னரே, அவரது 35 வயதிற்குள், அதாவது கி.பி. 1946 க்குள் (1911+35=1946) இறை உணர்வு பெற்று விட்டார் என அறிய முடிகின்றது.

    ஆகவே வள்ளலார் அவர்கள், மகரிஷி அவர்கள் இறை உணர்வு பெற்ற பிறகு தான்  அவர் உடலுக்குள் பிரவேசம் செய்திருக்கிறார்.  ஏன் மகரிஷி அவர்கள் இறை உணர்வு பெறுவதற்கு  முன்னர் வள்ளலார் அவர்கள், மகரிஷியின் பூதஉடலில் பிரவேசம் செய்யவில்லை என வினா எழலாம்.

    தொடரும் …18-03-2015

     

    Loading